– பாஸ்டன் பாலா-
சு வேணுகோபாலைக் குறித்து இணையம் என்ன சொல்கிறது? எந்தப் புத்தகங்களை விமர்சித்து இருக்கிறார்கள்? எந்தச் சிறுகதைகளை சிலாகித்துப் பேசுகிறார்கள்? ஒரு தொகுப்பு.
மேலே சுட்டி மழைக்குள் செல்வதற்கு சில முன்குறிப்புகள்:
அ) இங்கே முழுப் பதிவும் தரவில்லை. சில வரிகள் மட்டுமே மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆ) தொடர்புடைய பதிவுகளை ஒரு சேரக் கொடுத்திருக்கிறேன்; சில இடங்களில் விமர்சகரைக் கொண்டு தொகுத்திருக்கிறேன்.
இ) இது முழுமையானத் தொகுப்பு அல்ல. உங்கள் கண்ணில் பட்டதையும், விடுபட்டதையும் மறுமொழியில் சொல்லவும்.
ஈ) அச்சு ஊடகங்களில் கிடைக்கும் விஷயங்களை, புகைப்படமாகக் கொடுத்தால், தட்டச்சுவேன்.
உ) ஃபேஸ்புக் போன்ற தேட இயலா இடங்களில் கிடைக்கும் மதிப்புரைகளைக் கொடுத்தால் தன்யனாவேன்.
உரல்களில் தொலைவதற்கு முன் உரிமைதுறப்பு:
ஜெயமோகனின் நாவல்களை, முன்னுரை வாசிக்காமல் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதை ‘காடு’ முன்னுரை வாசித்தபிறகு அறிந்தே இருந்தேன். இருப்பினும் இணையத்தில், திண்ணையில் சு. வேணுகோபால் எழுதிய ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் மூலமாகவே எனக்கு இவர் அறிமுகம் ஆனார்.
சு.வேணுகோபாலின் படைப்புகள்
குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று, இலக்கிய உலகத்தில் நுழைந்திருக்கிறார்.
1. நுண்வெளி கிரகணங்கள் (நாவல்) – 1997
2. பூமிக்குள் ஓடுகிறது நதி (சிறுகதைகள்) – 2000
3. களவு போகும் புரவிகள் (சிறுகதைகள்) – 2001
4. கூந்தப்பனை (சிறுகதைகள்) – 2001
5. வெண்ணிலை (சிறுகதைகள்) – 2006
6. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்) – 2006
7. பால்கனிகள்
8. ஆட்டம்
9. நிலம் எனும் நல்லாள்
வலையில் கிடைக்கும் படைப்புகள்
i) தீராக்குறை – புதிய காற்று – பிப்ரவரி 2006
ii) உயிர்ச்சுனை – புதிய காற்று – பிப்ரவரி 2006
க. மோகனரங்கன்
வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதை மாந்தர்கள் இலட்சிய உருவகங்கள் அல்ல. பலவீனங்களும் குறைகளும் பேதங்களும் நிறைந்த சராசரி மனிதர்களே. தங்களுடைய அத்தனை போதாமைகளுக்கு நடுவிலும் ஏதோ ஒரு தருணத்தில், அவர்கள் அடைகிற, அடைய முயலுகிற மேன்மையைப் பற்றியதாகவே வேணுகோபாலின் அக்கறை எப்போதும் இருக்கிறது. தவிரவும், மனிதனின் அகந்தை பூரணமடையாவண்ணம் ஏதோ ஒரு விதத்தில் அவனைக் குறுகச் செய்து வேடிக்கை பார்க்கும் வாழ்வின் புதிர்த்தன்மைகள் பற்றிய ஒருவித முதிர்ந்த அணுகலும் இவரது எழுத்துக்களில் பளிச்சிடக் காண்கிறோம்.
வெண்ணிலை புத்தகம் – சிறுகதைத் தொகுப்பு: பின்னட்டை குறிப்புகளில் இருந்து
சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றை பின்புலமாக கொண்டவை இக்கதைகள். வாழ்க்கையின் கொதிநிலைத் தருணங்களை விரிவான சித்தரிப்புகளுடன் உளவியல் நுட்பத்துடன் விவரிக்கின்றன. பேரிலக்கியவாதிகளிடமிருந்தே மனோதத்துவ அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களுக்கான மூல விதையைப் பெறுகிறார்கள். உளவியல் வகைப்படுத்த இயலாது திகைத்து நி்ற்கும் புதிர்களிலிருந்தே தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்குவதை இயல்பாகக் கொண்டிருக்கிறார் வேணுகோபால்.
அர்ப்பணிப்பு
நவீன இலக்கியம் கற்பித்த எனது ஆசான்
முனைவர் டி. சாமுவேல் சுதானந்தாவிற்கு
மிருணா
சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம் 14 சிறுகதைகளின் தொகுப்பு.
கதைகளின் மொழி நடை மண் வாசனையோடு, இயல்பாக உள்ளது. இறுக்கமாகவும் உள்ளது. தீராக்குறை கதையில் மட்டும் dramatic monologue எனும் ஒருவர் பேச்சில் சூழல் சொல்லப்படும், எதிராளியின் பேச்சு ஊகிக்கப்படும் உத்தி கையாளப் பட்டுள்ளது. கதையின் மனிதர்கள் சூழலின் வெம்மையிலிருந்து தப்பிக்க பெரும்பாலும் நனவுரு கற்பனையில் (fantasy) மூழ்குகிறார்கள். கிடந்த கோலம் கதை கந்தர்வனின் இரண்டாம் ஷிப்ட் கதையை நினைவுறுத்துகிறது தவிர்க்க இயலாமல். கூரு கெட்டவன் கதைப்பிரதியில் தாஸ்தொவ்ஸ்கியின் இடியட் மின்னி மறைகிறான்.
இந்த கதைகள் அனைத்துக்கும் மாறாக அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள் கதை உள்ளது. அது உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் முதியவள் ஒருவள் சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக அவளுக்கே உரிய ரகசியத்தோடு…
– சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல்
கும்க்கி
ஒரு துளி துயரம் மற்றும் வெண்ணிலை இரண்டிலும் ஒரே கதைகள் இடம்பெற்றுள்ளன. வெண்ணிலை நவ.2006. யுனைட்டட் ரைட்டர்ஸ்.மொத்தம் 23சிறுகதைகள்.
ஒரு துளி துயரம் மே.2008. மொத்தம் 15 சிறுகதைகள். வெண்ணிலையில் இருப்பதிலிருந்து 13 சிறுகதைகளையும் மேற்கொண்டு 3 சிறுகதைகளையும் தொகுத்து தமிழினி 2008ல் வெளியிட்டுள்ளார்கள்.
கதைகள் வாசிப்பென்பது எப்போதும் உள்ளுக்குள் ஓடும் மவுன காட்சிகளாய் தத்தம் அனுபவம் சார்ந்து மனம் ஒப்பிட்டுக்கொண்டேயிருக்கும். அந்த வகையில் பாசாங்கற்ற எளிய மனிதர்களின் அத்தனை சுகதுக்கங்களும் சு.வேணுகோபாலின் எழுத்துக்களில்… துயரங்கள் நிரம்பிய வாழ்வு தரும் அயற்சி சொல்லி மாளாது போலிருக்கிறது.
– ஜூலை 20, 2012

அகநாழிகை பொன். வாசுதேவன்
படைப்பு மனநிலை என்பதே சுயவதைதான். வலியிருக்கிறவர்களால் மட்டுமே ஆகச்சிறந்த படைப்புகளை வெளிக் கொணர முடிகிறது. சந்தோஷத்தை வாசிக்கிறதுக்கும் வலியைப் பற்றி வாசிப்பதுக்குமான மனநிலை வெவ்வேறானது. இதில் வாழ்வின் வலிகளைப் பற்றி வாசிப்பதும், அத்துயரத்தினுள்ளாழ்ந்து போவதுமே எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. வாழ்க்கையின் குரூரமானப் பக்கங்களை துயர மனநிலையிலான எழுத்துகள்தான் சரியான முறையில் வெளிப்படுத்துகின்றன.
துயரையும் துயர்க்காரணங்களையும் நுட்பமான முறையில் விவரிப்பவை சு.வேணுகோபாலின் படைப்புகள். நிராதரவான நிலை, கையறு தருணம் என நம் அன்றாட வாழ்வின் பல்வேறு கட்டங்களில், உறவுகளிலும், பழகும் மனிதர்களிடமும், பிரியம் கொள்கிறவர்களிடமும் காண நேர்கிற போலித்தனம், சுயநலம் போன்றவற்றை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தைச் சொல்லி நமக்குள்ளாக அதே உணர்வுகளைக் கடத்துகிறார் சு.வேணுகோபால்.
குமுதம் – ஏர் இந்தியா போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘நுண்வெளிக் கிரகணங்கள்‘ நாவலை வாசித்த அதிர்வுகள் அடங்குவதற்கு பல நாட்களாகியது. அப்பொழுதே ‘புதிய பார்வை‘ அலுவலகத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன். தனித்துவமான எழுத்து நடை அவருடையது. ‘கூந்தப்பனை‘ நுட்பமான பாலியல் அகச்சிக்கல்களை துலக்கும்படியான எழுத்துவகை. அவ்வகை எழுத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பு.
– மே 2013
ஜெயமோகன்
திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் விருதுகள் இவ்வருடம் சிறுகதைக்கு சு.வேணுகோபால் எழுதிய ‘வெண்ணிலை‘ தொகுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரம் பெறுமானமுள்ள விருது இவை.
‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.
– பெப்ரவரி 18, 2009
சு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது
இந்த வருடத்தைய பாரதிய பாஷா பரிஷத் விருது சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
– December 22, 2011
ராஜகாந்தன்
தொண்ணூறுகளின் இறுதியில் வெளிவந்த அவருடைய நுண்வெளி கிரகணங்கள் நாவலை வாசித்தபோது நாவல் குறித்த மதிப்புரை அல்லது விமர்சனங்களை சிறுபத்திரிகைகளில் தேடினேன். தி.சு. நடராஜன் நிகழில் எழுதியிருந்ததைத்தவிர வேறு எதையும் குறிப்பிடும்படியாக காணமுடியவில்லை. ஒரு முக்கிய படைப்பாளி போதிய அளவிற்கு கவனப்படுத்தப்படாமல் விடப்பட்டது வருத்தம் அளித்தது.
– December 8, 2009
ஜெயமோகன் திறனாய்வு
சு.வேணுகோபாலின் மண்-1
தன் நுட்பம்மிக்க வாழ்க்கைச் சித்தரிப்பு காரணமாகவே வேணுகோபால் சமகால இளம் தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆகிறார்.
அவரது புனைவுலகுக்குள் நுழையும் வாசகன் அவரது அபாரமான யதார்த்த உலகின் விரிவையும் நுட்பங்களையும் கண்டு அதில் ஆழ்ந்து போவான். மனிதர்களின் உயிர்ப்போராட்டத்தின் வேகத்தையும் வலியையும் இத்தனை உக்கிரமாக நேரடியாகச் சொன்ன சமகாலத்துப் படைப்பாளி பிறிதெவரும் இல்லை என்றே சொல்லலாம். உப்பு கசியும் ஊயிர்நிலம்போன்றது அவரது புனைவுவெளி.
இக்கதைகளுக்கு முன்னுதாரணமான கதைகள் என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய கதைகள்தான். அப்பட்டமான யதார்த்தத்தைச் சொன்னபடி காமத்தின் நுண்ணிய அக இயக்கங்களுக்குள் சென்ற படைப்புகள் அவை.
புற உலகம் மீது இந்த அளவுக்கு அபாரமான கவனிப்புள்ள தமிழ்க்கதைசொல்லிகள் மிக அபூர்வம். தமிழில் இவ்விஷயத்தில் சு வேணுகோபாலுக்கு முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பாளி என்று அசோகமித்திரனையே குறிப்பிட முடியும்.
நீளமான கதையாகிய புத்துயிர்ப்பு ஒருவகையில் வேணுகோபாலின் கூந்தப்பனை கதைக்கு சமானமானது. உச்சகட்டத்து கவித்துவத்தாலேயே தன்னை நிகழ்த்தும் இக்கதையே வேணுகோபாலின் ஆகச்சிறந்த படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இருபது கதைகளில் ஒன்றாகவும், புதிய தலைமுறையில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த ஐந்து கதைகளில் ஒன்றாகவும் இதை நான் கூறுவேன். என்னுடைய பரிந்துரையின் பேரில் இக்கதை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதி
வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதல்ல. விவசாயியினுடையது. தமிழின் முக்கியமான கலைஞனாக அவரை நிலைநாட்டுவதே இந்த அம்சம்தான். அவர் எப்போதுமே கதைக்களனை வருணிப்பதில்லை, ஒரு விவசாயி அளிக்கும் நேரடி அறிக்கையை அளிக்கிறார். அவர் அளிக்கும் தகவல்கள் எப்போதுமே விவசாயியால் கண்டடையப்படுபவை. ஒருமுறை பேருந்தில்செல்லும்போது ஒரு வரண்ட ஏரியைக் கடந்துசென்றோம். நாந் அந்த ஏரியின் வெடித்த சருமத்தை முதுமையின் சருமம் போல ஒரு மாபெரும் சிலந்தி வலைபோல எண்ணிக்கொண்டேன். அந்த வலைநடுவே ஒரு மாடுமேய்க்கும் பெண் மாட்டிக்கொண்டிருப்பவள் போல அமர்ந்திருந்தாள்.
ஆனால் என்னருகே அமர்ந்திருந்த விவசாயி தனக்குள்ளாக ‘எளவு முள்ளுமுல்லா காஞ்சு போச்சு” என்றார். அப்போதுதான் ஏரிக்கரை அருகே நின்ற கருவேலங்களும் காய்ந்திருப்பதைக் கண்டேன். நான் கண்டதைவிட பெரிய வரட்சியை அவர் கண்டிருக்கிறார் என உணர்ந்தேன். சுமார் நூறடி ஆழத்தில்கூட நீரில்லை என்பதை அந்த மரம் அவருக்குக் காட்டிவிட்டிருந்தது! இதுதான் எழுத்தாளனின் பார்வைக்கும் விவசாயியின் பார்வைக்கும் இடையே உள்ள வேறுபாடு.
ச.முத்துவேல்
மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.
…
அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும், மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது.
– http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html
கூந்தப்பனை
சு.வேணுகோபால் தன் கதையில் ஆண்மை இல்லாத ஒருவனின் அவலத்தைச் சித்தரிக்கிறார். காமத்தின் இயலாமை என்ற மானுடச் சிக்கலை இத்தனை தீவிரமாக வெளிப்படுத்திய கதைகள் குறைவே.
தன்னை பயனற்றவனாக பொருளற்றவனாக உணர்கிறான்.
அப்பயணத்தில் ஒரு தனித்த மணல்தேரிமீது அவன் ஒரு கூந்தப்பனையை காண்கிறான். அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்ததாக தோன்றுகிறது. அந்த மேட்டில் ஓர் ஊற்று சுரப்பதையும் காணநேர்கிறது. கதையின் உச்சம் அது.
– ஜெயமோகன்
மு.கஸ்தூரி
மாற்றுவெளி: ஜூன் 2012
சு.வேணுகோபால் மூன்று சிறுகதை தொகுப்புகளில் 58 சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான பூமிக்குள் ஓடுகிறது நதியில் 18 சிறுகதைகள் உள்ளன. களவு போகும் புரவிகள் தொகுப்பிலுள்ள 17 சிறுகதைகளில் 9 கதைகள் சிறுபத்திரிக்கைளில் வெளிவந்துள்ளன.
இவருடைய கதைகள் பெரும்பாலும் பெண்களின் வாழ்வியல், ஆண்-பெண் உறவுமுறை, குழந்தை மனங்களின் வெளி, விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.
பூமிக்குள் ஓடுகிறது நதி பள்ளர், தேவர் சமூகத்தில் நிலவும் சாதியக் கலவரங்களை முன்னிறுத்தி நகர்கிறது.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
‘இறகுகள் சிலிர்த்து தலை கொணங்கிய செம்பூத்தைக் கட்டுக்காப்பில் போட்டுவிட்டு வெந்த புல்வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத் தொடங்கிவிட்ட காலம் தெரிந்தது. ஓடைக்கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா “ஹிரோசிமாவில் அணுகுண்டை மேலிருந்து போட்டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடிதான் போடணுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சுன்னு தோணுது” என்றார். கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொறுங்கிப் போனது நைனா சொன்னதும். பாதச்சுவட்டில் நெமுறும் குறுமணல் ஓசையோடு ஓடையில் நடக்கலானோம். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது.’
என்று முடிக்கும் போது சங்கொலியின் மெய்ப்பாடு அத்தனை வேதனை விரசம் வாழ்வின் தோல்வி, நீரின் கேடு என்று வந்த வேலை முடிந்த எக்காளமாய் நம் சினத்தில் சூல் கொள்கிறது.
– நவம்பர் 11, 2014
இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.
– நவம்பர் 13, 2014
“தங்கம், பொட்ட குட்டிய யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு….”
…………
கிராமங்களில் பொட்டைக் குட்டிகளை புற்றில் விடுவதுண்டு. …
……………………
பின்கதவைத் திறந்தவுடன் காலால் சட்டென எத்திவிட்டான். குட்டி கரணமடித்து விழுந்து வீச்சென கத்தியது. சட்டென எழுந்து வண்டிக்குப் பின்னாக ஓடி வர முயன்றது, பூமிகாவுக்கு செத்துப்போய் விடலாமெனக் குமுறியது மனசு. வரவர பின் தங்கிப் போகும் குட்டியைப் பார்த்துப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாள். “எங்கயாவது கோயில்ல விடு மாமா. பசிக்கு அது என்ன பண்ணும்? பாவம் மாமா. அதுக்கு யாருமில்ல. பயப்படும் மாமா” உதடுகள் கோணி தழுதழுத்தது.
……………….
பூம்மிகாவை அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை…..
“அம்மா நான் ஒங்கூடயே இருக்கேம்மா. என்னைய தொலச்சிடாதம்மா”
:”பூமிகா எங் கண்ணுல்ல… நீ அம்மா செல்லந்தான்… என்னாச்சு உனக்கு… அழக்கூடாது” வாரியெடுத்தாள்.
“சொல்லுமா, என்னைய எங்கயாவது தள்ளிவிட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா”
– நவம்பர் 14, 2014
ஒருவருக்கு உண்மையிலேயே சிறுகதை என்றால் என்ன என்ற வேட்கை ஏற்படுமேயானால் அவர் உதாரணம் ஒன்றின் மூலம் தெரிந்து கொள்வது வசதி என்று கருதினால், அவர் எங்கும் அலைய வேண்டாம். ரவீந்திரநாத தாகூர் எழுதிய ‘ஆசாபங்கம்’ படித்தால் போதும். பாரதியார் மொழிபெயர்த்து இந்தத் தலைப்புதான் கொடுத்திருக்கிறார். சாஹித்ய அகாடமி தமிழ், ரவீந்திரர் கதைத் திரட்டு இல் ’துராசை’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு வந்தி்ருக்கிறது. எவ்வளவு ஆழமும், கௌரவமும் மிக்க எழுத்து ரவீந்திரருடையது என்பது படித்தால்தான் தெரியும். இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் இவ்வண்ணம் ஆழமும், கௌரவமும் திகழச் சிறுகதைகள் யாத்திருப்பவர் சு வேணுகோபால்
– மே 5, 2015
இரு குறுநாவல்கள் – பால்கனிகள், இழைகள், இரண்டும் சேர்ந்த நூல். இரண்டிலும் அவர் எடுத்துக்கொண்டு புதினமாக்கியிருக்கும் பொருள் மிகவும் உருக்கும் சமுதாய அவலங்கள். ட்ரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலியல் பிறவியர் குறித்த மிக நுட்பமான துயர வாழ்க்கையைப் பற்றிய கவனத்தை ‘பால்கனிகள்’ என்பதில் தருகிறார்.
– ஜூலை 21, 2015

ராதாகிருஷ்ணன்
இவர் கதையில் வரும் சிறுவர்சிறுமிகளின் உலகம் நம்மையும் அவர்களோடு அலையும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது. எவ்வளவு அற்புதமான குழந்தைகள், தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் ஊருக்கு வரும் தாத்தாவிற்கு உணவு கொண்டு வரும் சிறுமி, தன் தந்தை தன் ஹாஸ்டலில் காண வரும் போது அப்பாவின் கசங்கிய சட்டையினை கண்டு நான் வேலைக்கு போனதும் உனக்கு சட்டை வாங்கித்தருகிறேன் என்று சொல்வது …., இந்நூலில் வரும் சிறுவர் சிறுமியரை காணும் போது இவர்களை சுயநலம் உடையவர்களாகவும் வெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றும் நம் சமூகசூழல் மீது கோபம் வருகிறது .
குதிரை மசால் தாத்தா எனும் சிறுகதை ஊர் ஊராக சென்று மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு முதியவரை பற்றி பேசும் கதை. இந்த தொகுப்பிலேயே விரிவான சித்திரங்களுடன் மிகுந்த வாஞ்சையோடு படைக்க பட்ட பாத்திரம் இதுதான்.
இன்னொரு கதை நிரூபணம்,இந்த கதை எனக்கு மிக பிடித்த கதைகளில் ஒன்று ,நடைமுறையில் கிருத்துவம் எவ்வளவு தூரம் கிறிஸ்துவிடம் இருந்து விலகிவிட்டதையும், ஒரு சிறுவன் இதையெல்லாம் விட்டு தன் குழந்தை மனதால் தன் செயலால் கிறிஸ்து சொல்லும் குணத்தினை தன் இயைல்பிலேயே பெற்றிருக்கிறான் என்பதையும் சொல்லும் கதை இது
– 29 ஆகஸ்ட், 2012
பா.சேரலாதன்
இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் எனக்குத் தெரியாத பல பேரோடு இவரை ஒப்பிட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு சிறுகதையும் மனதில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, நம்மை உருக்குலைத்துப் போட்டுவிடுகிறது. சுஜாதாவிடம் நான் கண்ட அதே Climax Punch, இவரிடமும் இருக்கிறது. ஆனால் இருவரின் நடை மற்றும் கதைக்கரு ஆகியவை முற்றிலுமாக வேறுபட்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு, “மீதமிருக்கும் கோதும் காற்று” எனும் ஒரு சிறுகதை. 6 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதை, “சுகிர்தா” எனும் “சுப்பம்மாள்” என்ற ஒரு விலைமாதுவின் ஓர் இரவை விளக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இது போன்ற கருக்களை சுஜாதாவிடம் படித்ததாக ஞாபகம் இல்லை.
– களவு போகும் புரவிகள்
மு. இளநங்கை
சு.வேணுகோபாலின் சிறுகதைகளின் ஊடாகப் பயணிக்கும்போது எதிர்படும் விடயங்கள் சமூகத்தோடு நேரடி தொடர்பு கொண்டவையாகவும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளின் பதிவுகளாகவும் அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
– முனைவர்பட்ட ஆய்வாளர்
சரவணன் – சாரதி
இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது.
– களவு போகும் புரவிகள்
ஜ்யோவ்ராம் சுந்தர்
ஜே பி சாணக்யாவின் ஒரு கதை : ஊரில் இருக்கும் சிறிய உணவுக் கடையில் வேலை செய்வான் ஒருவன் (சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து வேலை செய்து கொண்டிருப்பான்). அந்த ஊரில் வசிக்கும் குழந்தை குட்டிகள் உள்ள ஒரு பெண்மணியோடு அவனுக்குத் தொடுப்பு ஏற்பட்டுவிடும். அவள் கணவன் அந்தப் பெண்மணியைப் போட்டு அடிப்பான். ஆனாலும் உறவு தொடர்ந்து கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் அவன் நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வான். அவன் வீட்டாருக்குத் தரப் படவேண்டிய இழப்பீட்டு தொகை அது இதுவென்று கதை போகும். (கதையின் தலைப்பு ஞாபகமில்லை, தேடிப் பார்க்கணும்).
ஏன் இது என்கிறீர்களா?
போதனைக் கதைகளிலிருந்து இலக்கியத்திற்கு அல்லது சு வேணுகோபாலிலிருந்து ஜே பி சாணக்யாவுக்கு என்ற தலைப்பில் ஒரு குறிப்பு எழுதலாமென கை பரபரக்கிறது.
– ஏப்ரல் 26, 2014
எப்படித் தன் விந்தின்மூலம் ஒரு வாரிசை உருவாக்க முடியாதவன், இயற்கையின் வழி ஒரு சமூகத்தையே மகிழ்விக்கிறான் என்ற கதையாக இந்தப் பிரதியை நான் படித்தேன்.
போதனை இல்லை, வெற்றுப் பிரகடனங்கள் இல்லை, ஆனால் உயிர்ப்பு இருக்கிறது.
ஐ லவ் யூ வேணுகோபால்!
அபாயச் சங்கு குறுநாவலில் ஒவ்வொரு முடிச்சிலும் அவர் எழுதிய வரிகள் பிடித்திருந்தன. ஒட்டுமொத்தமாகப் பிடிக்கவில்லை. முதல் கதையில் இருந்த கிறிஸ்துவ வெறுப்பும் சங்கடமாயிருந்தது.
– ஏப்ரல் 29, 2014
அண்ணாகண்ணன்
தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. 02.02.2014 அன்று முகநூலில் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் பக்கத்தில், அவர், டீக்கடை குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டியில் மூன்று நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றதாகவும் அதன் முடிவுகளையும் அறிவித்திருந்தார்.
இணையத்தில் தேடியபோது, அந்தரவெளிகள் குழுமத்தில் 18.08.2010 அன்று மின்னல் வெளியிட்டஇந்த அறிவிப்பு, தென்பட்டது:
அந்தரவெளிகள் குழுமத்தின் முதலாமாண்டு விமர்சனப் போட்டிக்கான புத்தகமாக இந்த ஆண்டு சு.வேணுகோபாலின், “ஒரு துளி துயரம்” எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில், இந்த ஒரே நூலை மட்டும் விமர்சிக்குமாறு கேட்டுள்ளார்கள். நுழைவுக் கட்டணமாக ரூ.50 பெற்றுள்ளார்கள்.
– புத்தக மதிப்புரை போட்டி
பத்மஜா நாராயணன்
கதையின் நாயகன் கடைசில் தனக்குத் தானே உணர்ந்து கொள்வது போல் “ஓடுவதில் இல்லை வெற்றி தோல்வி. ஓடாமல் நிற்பது தான் தோல்வி ” ஆம் ஆட்டம் நிற்கையில் அனைத்தும் நின்று போய் விடுகின்றன. சு. வேணுகோபாலின் பரம வாசகி நான். அவரின் ஆட்டம் படித்து முடித்த பின் கலையும் மேகங்களென இம்சிக்கும் எண்ணங்களை சிறைபிடிக்கும் முயற்சி இது.
– மே 9, 2014
உஷாதீபன்
ஒழுங்காப் படிப்பியா? இல்ல ஒன் அப்பனைப் போல ரவுடியா இருக்கப் போறியா? என்று வயிற்றெரிச்சலில் பையனை அப்போதும் மொத்துகிறாள். வேதனையில் கதறுகிறாள். அன்று ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குப் போகணும் என்கிற அவசரத்தில் கிண்டி வைத்திருந்த தக்காளி சாதத்தை அவன் வாயில் தின்னு தின்னு என்று திணிக்கிறாள்.
கிளம்புகையில் உண்டியலில் போட என்று பத்து ரூபாயை அவன் சட்டைப் பையில் வைக்கிறாள். அடிகளையும், திட்டுகளையும் வாங்கியபடி எபி அம்மா பின்னால் ஓடுகிறான். செல்லும் வழியில் அவன் ஏற்கனவே படித்து, தற்போது மூடப்பட்டுள்ள பள்ளி வருகிறது.
நல்ல ஸ்கூலுதானம்மா இது. இங்க படிச்சா நா ஃபஸ்ட் ராங்க் வாங்குவேன்லம்மா…என்னைய அடிக்க மாட்டேல்லம்மா….முத்தந்தானம்மா கொடுப்பே…. –மழலையாய் கெஞ்சுகிறான் தாயிடம்.
ஆமாண்டா எஞ்செல்லம் என்று தாயும் அவனின் அழகுப் பேச்சில் கரைகிறாள்.
எதிர் சுவரில் சாக்கடை மேட்டில் ஒரு பிச்சைக்காரன். கை ஏந்தியவாறே. இடுப்பிற்குக் கீழ் ஆடையின்றி, உறுப்புக்கள் விகாரமாகத் தெரிய, அழுக்கேறி வற்றிப்போய்க் கிடக்கிறான். அவனையே குனிந்து நின்றமேனிக்கு அப்படியே பார்த்துக் கொண்யடிருக்கிறான் எபி. இந்தத் தாத்தாவுக்கு யாரேனும் உதவி செய்வார்களா? என்று அவன் மனம் எண்ணுகிறது. தூரத்திலேயே பலரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
அந்தத் தாத்தாவப் பார்த்தா பாவமா இருக்கும்மா… என்கிறான் அம்மாவிடம்.
அட, எழவெடுத்தவனே பேசாம வா…என்கிறாள் தாய். தேவாலயத்தில் குழுப்பாடல் கேட்கிறது. உள்ளே நுழைந்து கண்மூடி மண்டியிட்டு ஜெபிப்பதில் ஈடுபடுகிறாள். எபி ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரன் இருக்குமிடத்தை அடைகிறான். நின்று வேதனையோடு பார்க்கிறான். அவன் மனதை என்னவோ செய்கிறது காணும் காட்சி. கடைக்கு ஓடி பிஸ்கட் வாங்குகிறான். திரும்பி வந்து அதை அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்கிறான்.
பிச்சைக்காரன் Jesus Christ never fails to feed his followers…என்கிறான் ஆங்கிலத்தில்.. He lives with children என்று அவன் வாய் முனகுகிறது. எபிக்குப் புரியவில்லை. அம்மா ஜெபத்தை முடித்துத் தேடினால்? என்று திரும்புகையில் கோயில் உண்டியலில் காசு போட்டாயிற்று என்று சொல்லிவிடலாமா என்ற யோசனை வருகிறது எபிக்கு.
– 15 ஜனவரி 2012
யாழிசை லேகா
“அபாய சங்கு“, தோல்வியின் பிடியில் தொடர்ந்து உழலும் நாயகனின் குழப்ப நிறைந்த மனவோட்டங்களை நேர்த்தியாகவும் வெகு அழுத்தமாகவும் பகிர்கின்றது இக்கதை.காதல்,காமம்,வேலையில்லா தாழ்வுணர்ச்சி,ஏமாற்றங்கள் என மொத்தமாய் தலைமீதேரும் சங்கடங்கள் நெருக்கடியாய் மாறி விபரீத முடிவிற்கு நாயகனை தள்ளுகின்றன.வேலை தேடும் பொழுதுகளின் தனிமை துயரம் கொடூரமானது என்பதை உணர்த்தும் வண்ணதாசனின் “பறப்பதற்கு முன்பு கொஞ்சம் புழுக்களாக” என்னும் சிறுகதையை நினைவூட்டியது
– பெப்ரவரி 16, 2010
மல்லிகார்ஜுனன்
உயிர்ச்சுனை: கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.
இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது
– 26 நவம்பர் 2012
கமலி பன்னீர்செல்வம் சுவாமிநாதன்
சதீஷ் தங்கி இருக்கும் விடுதியில் அவனுடன் பேசி கொண்டு இருக்கும் அந்த கிழவன் கேரக்டர் செம. சந்தோசம் பற்றி அவர் கேரக்டர் வாயிலாக ஆசிரியர் சொல்லும் அத்தனையும் படு யதார்த்தம்.
“சாவு என்பது பேரமைதி” இறந்தகால இயக்கத்திற்கும் எதிர்கால இயக்கத்திற்கும் இடையில் கிடக்கும் ஓய்வே சாவு விழிக்காதிருந்தால் நினைவுகளின் சாவு, நான் இறந்தபின்னும் உலகம் இயங்குகிறது என்ற வரிகள் அழகு.
’அவரவர் நிலையில் நிற்கும்போது வாழ்க்கை வைத்திருக்கும் சிக்கல்கள் உண்மையாக இருக்கின்றன. அந்த சிக்கல்களில் பயமும் சுயகௌரவங்களும் உள்ளுக்குள் கண் விழித்திருக்கின்றன.’
– 26 நவம்பர் 2014
ராஜ சுந்தர ராஜன்
“ஆட்டம்” நாவலில் ஒரு அக்கா கதை வருகிறது.
கதைசொல்லலில் ஆனால் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நினைப்புகளுக்குமாக ஒரு கபடி ஆட்டம் இருக்கும்.
இடையே, ||செங்குன்றம் ஏற இந்த நதி வழி போன கண்ணகி…|| என்று தொடங்கி, ||… நெருப்புள் தீமை தங்காது. கபடம் தப்பி விடாது. உண்மையே சுடர். உண்மையே சுடரும். தெய்வத்தின் சன்னதியில் எவளும் கண்ணகிதான். சரி தவறு, நிறை குறை, கற்பு கறை எதுவும் பெண்ணிற்கில்லை. அவள் தாய். அவ்வளவுதான். தாயிடம் பிறந்து தாயாகியவள்.|| என்று முடியும் ஒரு பத்தி உண்டு. (பக். 97)
– பெப்ரவரி 20, 2014
சு. வேணுகோபால் பேச்சு
“காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து சிறு சர்ச்சை எழுந்துள்ளது. படைப்பாளியைவிட, அவர் படைத்துள்ள படைப்பையும், அவருடைய 10 ஆண்டு கால உழைப்பையும்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபோன்று சர்ச்சைகளை எழுப்புவர்கள், தாங்கள் கூறும் நூலுடன் இந்த நாவலை ஒப்பிட்டு ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். அவ்வாறு விவாதத்துக்கு வருபவர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த விருது மூலம் சு. வெங்கடேசனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் உடனடியாக அவரிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றார்.
– ஜனவரி 5, 2012
பசி பற்றிய படைப்புகள்தான் நாஞ்சில் நாடனின் பெரும்பாலான படைப்புகளின் கருவாக இருக்கும். எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி இருக்கும் செறிவுதான் அவரது படைப்புகளை நகர்த்திச் செல்கின்றன. கண்ணீர்க் குரலும், வேதனைக் குரலும் நாவல்களில் மிகுந்திருக்கின்றன. எல்லாவற்றையும் பயணம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை நாஞ்சில் நாடனிடம் இருந்து புரிந்து கொள்ளலாம். மரபைச் சரியாகக் கைக்கொள்ளும் திறனும் அவரிடம்தான் வாய்த்திருக்கிறது என்றார் அவர்.
– மார்ச் 14, 2011
கண்மணி குணசேகரன்
சு. வேணுகோபால் எழுதிய ‘நிலமெனும் நல்லாள்’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். நிலத்தை, பயிர்ப் பச்சைகளை, குடும்ப உறவுகளை விட்டுவிட்டு, மனைவியின் வீட்டில் வாழ நேரும் ஒருவனின் கதையே இந்த நாவல். அந்தக் குடும்பத்தோடு அவனால் இணைந்து வாழ முடியாத மன உளைச்சல்கள், தோல்விகள், போராட்டங்களென அவனது அவல வாழ்வைச் சொல்லும் இந்த நாவல் என்னைக் கலங்கடித்தது.
– ஏப்ரல் 11, 2015
செல்வேந்திரன்
ஆட்டம்: இச்சைகளின் பெரும் கபடி: விளையாட்டிற்குத்தான் விதிகள் உண்டு. மானுட இச்சைகளுக்கு இல்லை. காலை வாறி விட கைகோர்த்து காத்திருக்கும் காமத்தின் மாய அரணைத் தாண்டி உப்புக்கோட்டைத் தொட்டுத் திரும்புவது சாமான்யம் அல்ல.
எந்த கதாபாத்திரத்தின் மீதும் கோபம் கொள்ள முடியாத கையறு நிலைதான் வாசகனுக்கு. வாழ்வின் விசித்திரங்களுக்குக் காரணமே கிடையாது. எல்லோரும் சூழலின் கைதிகளே.
நாவலெங்கும் ஒரு நாய் தன் குட்டிகளைத் தேடி காடு மேடேங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது. அப்போதுதான் ஈன்ற குட்டிகளை யாரோ ஒரு குட்டி கூட விடாமல் தூக்கிச் சென்றிருப்பர். நாவலெங்கும் கிளைபரப்பியிருக்கிற தாய்மையின் பரிதவிப்பை இந்த நாய் ஊமைவலியாக வாசகனுக்குக் கடத்துகிறது.
“அவரவருக்குத் தெரிந்த விதத்தில் ஆடுகின்றனர்; தெரியாமல் ஆடித் தெரிந்தும் கொள்கின்றனர். ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம்!” எனும் வரிகளோடு அந்த அத்தியாயம் முடிகிறது.
– மே 9, 2014
அரசன் சே
“திசையெல்லாம் நெருஞ்சி”. தலைப்பே கவிதை பேசியமையால் தான் இந்நூலை வாங்கினேன். சமீபத்தில் நான் வாங்கியப் புத்தகங்களில் சிறந்தது என்று இந்நூலைச் சொல்வேன். இந்நூலை வாசிக்க ஐந்து மணிநேரம் போதுமென்று நினைக்கிறேன், நான் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். இந்நூலில் மூன்று கதைகள் அடங்கியிருக்கிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை தாங்கியிருக்கின்றன. கொஞ்சம் பிசகி இருந்தாலும் “இரட்சணியம்” கதை பிட்டுக் கதைகள் வரிசையில் அடங்கிவிடும் அபாயமிருந்தும் நேர்த்தியாக எழுதியிருப்பது.
– டிசம்பர் 4, 2014
ஆட்டம்: தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும் சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர்.
சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது, இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!
– ஜூலை 2015

குங்குமம்
மலையும், மலைசூழ் நிலமுமான தேனிக்கு அருகில், சில்ல மரத்துப்பட்டி என்ற பசுங்கிராமத்தில் தலையில் முண்டாசும், கைகளில் காங்கேயம் காளைகளுமாக உலவித் திரிகிறார் வேணுகோபால். பேச்சில் தேனிக்கே உரித்தான வெள்ளந்தித்தனம்.
‘‘எல்லாம் அப்பா சுருள்வேலோட சம்பாத்தியம். ராப்பகல் பார்க்காத உழைப்பால 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்தினவர். அவருக்கு இளைப்புத் தொல்லை இருந்துச்சு. ‘நல்ல சீமைச்சரக்கா வாங்கி தினமும் ரெண்டு கிளாஸ் அடிச்சின்னா சரியாயிரும்’னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்காரு. கிளாஸைத் தொட்டவரு, சாராயம் அவரைக் குடிக்கிற வரைக்கும் விடலே. இன்னைக்கு இலக்கிய சந்திப்புகள்ல தண்ணி அடிக்க நிர்ப்பந்திக்கிறவங்ககிட்ட, ‘எனக்கும் சேத்து எங்க அப்பாவே குடிச்சிட்டார்’னு சொல்லி நான் தவிர்க்கிறதுண்டு.
ரொம்ப சீக்கிரமே அப்பா எங்களை விட்டுப் போயிட்டார். அப்புறம் எல்லாம் அம்மா பொன்னுத்தாயிதான். சிறந்த நிர்வாகி. படிச்சதென்னவோ அஞ்சாவதுதான். பண்ணையில வேலை செய்யிற 50 பேரோட கணக்கு வழக்கை மனனமா போட்டுச் சொல்லும். மொத்தம் நாங்க 5 புள்ளைங்க. நான் கடைக்குட்டி.
மாடு இல்லைன்னா விவசாயம் இல்லை. விவசாயத்துக்கு உகந்தது காங்கேயம் காளைகள்தான். இப்போதானே மின்சார மோட்டார் எல்லாம். அந்தக்காலத்துல கமலையிலதான் மாடு கட்டி தண்ணி இறைக்கணும். ஒரு கொழுவுல 500 லிட்டர் தண்ணி எடுக்கலாம். அப்படி கிணத்துல இருந்து எடுக்கிறதுக்கு ஓங்குதாங்கான மாடுக வேணும். உழும்போது கலப்பைக்கு மேல ஒரு கல்லை வச்சு, அதுக்கு மேல ரெண்டு பேரை நிக்க வச்சு உழுவாங்க. ஆழ உழுதாத்தான் விளைச்சல் பிடிக்கும். அதுக்கெல்லாம் காங்கேயம் காளைதான் சரிப்பட்டு வரும். விவசாயத்துக்காக வாங்குனாலும் அப்பாவுக்கு மாடுகமேல பிள்ளைப்பாசம். வதைச்சு வேலைவாங்க மாட்டாரு. மாட்டோட மொழியும் கூட அவருக்கு அத்துப்படி.
அப்பாவைப் பாத்துத்தான் விவசாயத்து மேலயும், மாடுக மேலயும் எனக்கு ஆசை வந்துச்சு. காலையில 6 மணிக்கு எழுந்திரிச்சு, ஆடு, மாட்டை ஓட்டிக்கிட்டு மேய்ச்சலுக்குக் கிளம்பிருவேன். 8 மணி வரைக்கும் மேய்ச்சுட்டு வந்து பள்ளிக்கூடம் போவேன். அதுக்கு ‘பனிமேய்ச்சல்’னு பேரு. சாயந்திரம் வந்ததும் கொட்டத்துக்குத்தான் போவேன். ஆடு, மாட்டை மேய விட்டுட்டு, வரப்புல உக்காந்து படிப்பேன். முப்பதுக்கும் மேல பண்ணையாட்கள் இருந்தாலும், அவங்களோட சேந்து நானும் களை வெட்டுவேன். தண்ணி வெட்டி விடுவேன். தாட்டு சுமப்பேன். நிலக் கடலை, பருத்தி, கோவில்பட்டி சோளம், மஞ்சள்னு எக்காலமும் காடு பச்சைமேனியாக் கிடக்கும்.
பள்ளிக்காலங்கள்லயே கண்ணதாசன் பாடல்கள் மேல மோகம் வந்திருச்சு. எப்படி இந்த மனுஷனால இவ்வளவு பாடல்கள் எழுதமுடியுதுன்னு வியந்துபோவேன். பாடல்களோட பொருள் புரியத் தொடங்கினபிறகு, ரகசியமா எனக்குள்ள ஒரு ஆசை அரும்புச்சு. ‘நானும் கண்ணதாசனாகணும்’..!
கல்லூரிக்குப் போனதும் தமிழ் இலக்கியம்தான் படிப்பேன்னு அடம்புடிச்சு சேந்துட்டேன். என் தேடலுக்குத் தகுந்த களமா கல்லூரி இருந்துச்சு. ஒரு லட்சம் புத்தகங்கள் அடங்கின மிகப்பெரிய நூலகம் அமெரிக்கன் கல்லூரியில இருக்கு. கண்ணதாசன் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிச்சேன். ஒருமுறை கல்லூரி இலக்கிய விழாவுக்கு ஜெயகாந்தன் வந்தார். அவரைக் கேள்விகளால திணறடிக்கணுங்கிற ஆர்வத்துல நூலகமே கதியாக் கிடந்து படிச்சேன். நிகழ்ச்சி நாள் வந்துச்சு. கம்பீரமா, ஒரு மத யானை மாதிரி வந்து உக்காந்தார் ஜெயகாந்தன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்வி கேக்குறாங்க. எல்லா கேள்விகளையும் எதிர்கொண்டு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்றார். ‘புதுசா என்ன எழுதப்போறீங்க’ன்னு ஒரு பெண் கேள்வி கேட்டுச்சு. ‘இதுவரைக்கும் நான் எழுதுன எல்லாத்தையும் படிச்சிட்டியா..?’ன்னு எதிர்க்கேள்வி கேட்டார். அந்த மிரட்சியில, தொண்டையோட என் கேள்விகள் நின்னுபோச்சு. ஆனா அப்போ இன்னொரு ரகசிய ஆசை உருவாச்சு. ‘நாம ஜெயகாந்தனா ஆகணும்’..!
எம்.ஃபில் முடிச்சேன். என் நண்பர்கள்ல சில பேர் சினிமாவுக்குப் போனாங்க. சில பேர் கல்லூரி வேலைக்குப் போனாங்க. நான் விவசாயம் செய்யப் போயிட்டேன். என் அப்பா 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்துனார்; 45 ஏக்கரா மாத்தணும்ங்கிறது என் திட்டம். கோவணத்தைக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல இறங்கிட்டேன். காங்கேயம் காளைகளோட வாழத் தொடங்குனேன். ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டுன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடுச்சு.
– வெ.நீலகண்டன்

பின் குறிப்பு
இந்தத் தேடலின் போது பல பதிவுகளை படித்து முடித்தவுடன் தோன்றியவை:
1. பலர் அப்பட்டமாக காப்பி அடிக்கிறார்கள். குறிப்பாக திண்ணை, கீற்று போன்ற இணைய சஞ்சிகைகளில் வெளியான சில – ஒரே பிரதியை மீண்டும் பிரதி எடுத்தவை. சில பத்திகள் ஜெயமோகனிடம் இருந்து, சில பத்திகள் வெட்டி ஒட்டியவை என்று முழுக்க முழுக்க சுட்டவை. இந்த மாதிரி கட்டுரைகள் எம்.ஃபில்., முனைவர் பட்டம் பெற உதவுகின்றன. எத்தனை இடங்களில் உங்கள் கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதை நிரூபிக்கவும், கனமான இதழ்களில் தங்களுடைய ஆய்வு வெளியாகி இருக்கிறது என்பதற்காகவும் இந்த இதழ்கள் பயன்படுகின்றன.
2. பல விமர்சனங்களில் கதை சுருக்கத்தைச் சொல்லி, முடிவைச் சொல்லி தங்கள் விமர்சனத்தை, புத்தக அறிமுகத்தை முன்வைத்தார்கள்.
3. கால ஓட்டத்தில் சு வேணுகோபாலின் இடம் என்ன? தமிழகத்தின் எந்த நிலப்பரப்பை, எந்த காலகட்டத்தை, எவ்விதச் சூழலை அவருடைய படைப்புகள் அடையாளம் காட்டுகின்றன? அவருடைய படைப்புகளை காலவரிசைப் படி படித்தால், நிகழும் புனைவாக்க மாற்றங்கள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகளை நான் வாசிக்கவில்லை.
பாலா
பாஸ்டன்
—-
Like this:
Like Loading...