பேயோன்

எதற்காக எழுதுகிறேன்? – பேயோன்

பேயோன்

எழுத ஒரு விஷயம், ஒரு ‘பொறி’, தோன்றும்போது எப்படி எழுதாமல் இருக்க முடியும்? ஆனால் இந்த primal உந்துதலைத் தாண்டி வேறு சில காரணங்கள் இருப்பது தவிர்க்க இயலாதது.

நான் என்னுடைய அறிவார்த்தத் திருப்திக்காக எழுதுகிறேன், என்னைப் போன்ற ரசனையைக் கொண்ட, நான் கவனிக்கும் அதே வேடிக்கையான விஷயங்களை அதே பார்வையில் பார்க்கும் படிப்பாளர்களுடன் என் ரசனையைப் பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன். சில (பல) படைப்புகள் அநேகமாக எனக்கு மட்டுமே ஈர்ப்பவை. உதாரணமாக, ‘இன்றைய செய்தித்தாள்’ – ஒரு அர்த்தமும் மேலான நோக்கமும் இல்லாத கதை இது. ஆனால் என் படைப்புகளில் எனக்குப் பிடித்தவை என்று பட்டியலிட்டால் முதலில் இதைத்தான் குறிப்பிடுவேன்.

ஆகவே நான் அடிப்படையில் என் திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். அதுதான் இயல்பானது என்று நினைக்கிறேன். மற்றவர்களைக் கவரும் தொழிலில் இல்லாத பட்சத்தில், நமது அறிவுத் திறனால் மற்றவர்களை அசத்த வேண்டியிராத பட்சத்தில், நம்முடைய திருப்திக்காகத்தானே எழுத முடியும்? சுயதிருப்தி, ரசனைப் பகிர்வு ஆகியவை என்னுடைய இலக்குகள்.

நான் எழுதுவது முதலில் எனக்குத் திருப்தியளிக்க வேண்டும். எழுதுவது எனக்கு அந்தரங்கமான ஒரு விஷயம். பலருக்கும் அப்படி இருக்கலாம். என் விஷயத்தில் ஏன் அப்படி என்றால், நான் எப்போதோ படித்த புத்தகங்களைத்தான் என் தூரிகையால் மீட்டுருவாக்க விரும்புகிறேன். ரஷ்ய இலக்கியம், கலை, இரண்டாம் உலகப் போர், 50களில் 60களில் எழுதப்பட்ட அகிலன், கல்கி, நா. பார்த்தசாரதி நாவல்கள், ராஜேஷ்குமார் நாவல்கள், அபத்த இலக்கியம் போன்ற பழைய வாசிப்பில் தங்கிவிட்ட விஷயங்களைத்தான் நான் வேறு வடிவங்களில் எழுதுகிறேன்.

சமீபகாலமாக மார்வெல்-DC காமிக்ஸ், அவற்றின் திரைத் தழுவல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். ‘ஒமேகா செயல்திட்டம்’ நான் விரும்பி எழுதிய கதை. அதில் வரும் குறிப்புகள் யாருக்கும் புரிய வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரிந்தாலும் நான் எழுதியே ஆக வேண்டிய நிலை. அது தொடராகவும் நீளலாம். இது எனக்காக எழுதியது. எனக்கு மட்டுமே புரிந்தால்கூடப் பரவாயில்லை. நான் அங்கீகாரத்திற்காக எழுதுவதில்லை. வந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் என் நோக்கம், எழுத வேண்டியதை எழுதுவது. இன்னொரு எடுத்துக்காட்டு, ‘விஷ ஊசி’. இது இரண்டாம் உலகப் போரின்போது நடக்கும் உளவுக் கதை. இதுவும் தொடரும்.

எழுதுவது எனக்கு ரொம்பப் பர்சனலான விஷயம் என்பதை இதை இன்னும் படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு விளக்க விரும்புகிறேன். ‘பெரும்பாலும் குறுங்கவிதைகள்’ தொகுப்பில் வரும் ‘குவியல்’, ‘இன்றைக்குக் காலையில்’ ஆகிய கவிதைகள் முறையே ஞானக்கூத்தன், ஆனந்த் ஆகியோர் கவிதைகளின் மறுவாசிப்பு மற்றும் பகடி.

ஞானக்கூத்தன் கவிதை:

சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது.

என் கவிதை:

குவியல்

தனிக்கல் அது சரியும் வரை
சூளைச் செங்கல் குவியலிலே.

ஆனந்தின் கவிதை:

சற்றைக்கு முன்

சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்து கொண்டிருந்த
பறவை
எங்கே?
அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்டிருக்கிறது.

என் கவிதை:

இன்றைக்குக் காலையில்

இன்றைக்குக் காலையில் பார்த்தபோதுகூட
நன்றாக இருந்த மனிதர் எங்கே?
அவர் இன்றைக்குக் காலையில்
நன்றாக இருக்கிறார்.

நான் skits எழுதுபவன். கதை, கவிதை என எதுவாக இருந்தாலும் அது ஓர் elaborate joke-ஆக அல்லது practical joke-ஆக வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஒரு படைப்பு வெற்றியா தோல்வியா அல்லது ‘புரமோட்டட் வித் வார்னிங்’-ஆ என்பதை நான்தான் தீர்மானிக்கிறேன். இந்த ஸ்கிட்களுக்கும் நெடும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கும் தேவையான சிந்தனைகள் எனக்கு இருக்கின்றன, பார்ப்பதில்/படிப்பதில்/கவனிப்பதில் கிடைக்கின்றன. இவற்றின் சிற்பி என்கிற முறையில் இவற்றை ‘வடிப்பதை’த் தவிர வேறு வழியில்லை என்பதால் எழுதுகிறேன்.

ஆகவே, நான் ‘வெறும்’ நகைச்சுவை எழுத்தாளன் என்பதையும் மீறி எனது அறிவுப்பூர்வமான மனநிறைவுக்காகவும் என் படைப்புகளுக்கு மிகையாக விளக்கமளித்து உயர்த்திப் பிடிக்காமல் சரியாகப் புரிந்துகொள்ளும் அந்த ஆறேழு படிப்பாளர்களுக்காகவும் எழுதுகிறேன். 🙂

oOo

(தமிழில் ஒன்பது புத்தகங்களை எழுதியிருக்கும் முதல் மற்றும் ஒரே கற்பனைப் பாத்திரம். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதும் முழுநேர எழுத்தாளர், பத்தியாளர், ஓவியர். 1967இல் பிறந்த இவர், ஒரு மனைவிக்கும் மகனுக்கும் சொந்தக்காரர். எழுத்துத் துறையில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்.)

இருத்தலியன்

பேயோன்

குறுகிய தெருவில் அகன்ற மனிதன்
மெல்ல வழிமறித்துச் செல்கிறான்
‘ஹலோ!’ எனக் கோபித்து உசுப்பத்
தடுக்கிறதென் உள்ளார்ந்த நாகரிகம்
‘கொஞ்சம் வழி விடு’ எனச் சொல்ல
விடுவதில்லை அறிவுஜீவிக் கையாலாகாத்தனம்
‘அப்படி என்ன அவசரம்?’
என்று அவன் கேட்டுவிட்டால்
என்ன பதில் சொல்லப்போகிறேன்?
யாருடைய அனர்த்தம் பெரிது?
(என எப்படி நிரூபிப்பானேன்?)
பிறகு நான் உணர்கிறேன்:
இதுதான் என் வாழ்க்கை
எது நடக்க வேண்டுமோ
அதுதான் நடந்துகொண்டிருக்கிறது
அவன் உருட்டும் பாறையைவிட
முக்கியமல்ல நானுருட்டுவது.
குறுகிய தெருவின் அகன்ற மனிதனிடம்
மனதிற்குள் சொல்கிறேன்:
நண்பா, நம் பாறைகளின் அளவு
ஒன்றே எனினும் உன்
முக்கியத்துவங்களுக்கு முன்
நான் சுருங்கிப்போகிறேன், வாழ்த்துகள்.

2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல். (more…)