முருகன் சுந்தரபாண்டியன்
நிறைய கதவுகள் உடைய அறையில்
எழ முடியாது இருக்கிறேன்
மாற்று இல்லா பொருளாகி
எது கிடத்துகிறது என்னை?
ஒவ்வொரு வாசல் வழியாகவும்
நுழைந்து பார்த்ததும்
நுழைந்ததும்
ஞாபகத்தில் புகைப்படங்களாக
ஏன் தெரிகிறது
அறையில்
ஏன் காற்று குறைகிறது
எல்லாவற்றுக்கும்
ஒரு சன்னலை செய்பவன்
எங்கு தொலைந்தான்
காணாத அறையை கண்டது போல
பாய்ந்த கால்கள்
எங்கு தேங்கி நிற்கின்றன
திறந்த கண்களை மூடி
மூடிய கண்களை திறந்து
விழுந்தமர்கிறேன்
ஒரு இலையை போல
எல்லாவற்றுக்குமான
வெளியை சுவாசிக்கிறேன்
என் இதயத்தை
மெதுவாக முத்தமிடுகிறேன்
எனக்கு தெரிந்தவரைக்கும் சொல்கிறேன்
பல நேரங்களில்
அசைந்து கொண்டிருப்பது நாய் வாலல்ல, ஒளி தான்.