ராதாகிருஷ்ணன்

தெளிவு

ராதாகிருஷ்ணன்

இன்று சனிக்கிழமை, எல்லா பிள்ளைகளுக்கும் விடுமுறை நாள், ஆனால் ராஜுவுக்கு மட்டும் வேலை நாள், அவன் அப்பா விடுமுறை நாட்களில் அவனை workshop இழுத்துக் கொண்டு போய் விடுவார், அப்பாவிற்கு வேலை என்பது டிங்கர் என சொல்லப்படும் வாகனங்களில் இரும்பு சார்ந்த பகுதிகளை சரிசெய்யும், அதாவது அடிப்பட்டால் அதை ஒடுக்கு நீக்கி மீண்டும் பழைய வடிவம் கொண்டு வரும் வேலை, உடைந்த பகுதிகளை கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஒட்ட வைக்கும் வேலை, மொத்தக்காக வாகனங்களில் கட்டமைப்புகளில் வரும் பழுதுகளை சரிசெய்யும் பணி என்று சொல்லலாம்.

ராஜுவின் அப்பா லாரி டிங்கர், லாரிகளில் மட்டுமே பார்க்கும் அனுபவம் கொண்டவர், ஒன்று இரண்டல்ல, இருபத்தைந்து வருட பணி அனுபவம் கொண்டவர். அவர் பணிபுரியும் இந்த லாரி பேட்டைக்கு 10 வயதில் அண்ணனுக்கு துணையாக வந்து சேர்ந்தவர், அன்றிலிருந்து இப்போது வரை இங்குதான் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அண்ணனிடம் சம்பளம் சேர்த்தி கேட்கவும் அவர் தனியாக நீயே வெளியே போய் ஆரம்பித்துக் கொள் என்று சொல்லி கழட்டி விட பிறகு கிருஷ்ணன் அண்ணன் மெக்கானிக் ஷாப்பில் கொஞ்சம் இடம் பிடித்து அமர்ந்தவர், இப்போதுவரை தொடர்கிறார், ஹெல்ப்ர் வேலைக்கு ஆட்கள் வைத்து கொண்டால் சம்பளம் கொடுத்து சமாளிக்க முடியாது என்பதால் அவரே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார், அதனாலேயே விடுமுறை நாட்களில் ராஜுவை உடனழைத்து கொள்கிறார், சிலசமயம் அப்பா மதிய உணவிற்கு சாயங்காலம் வந்து அப்படியே ராஜுவையும் அழைத்து கொண்டு போய் விடுவார். இன்றும் அவ்வாறுதான் அழைத்து செல்ல காத்திருந்தார்.

ராஜுவுக்கு அப்பாவுடன் போவது என்பது பிடிக்கும் பிடிக்காது இரண்டும் சேர்ந்துதான். அவனுக்கு பெரிதாக எல்லாம் வேலை இருக்காது, ஸ்பானர் எடுத்து தருவது, வெல்டிங் செய்ய கம்பி எடுத்து தருவது, கடைக்கு போய் டீ வாங்கி வருவது மாதிரியான சில்லறை வேலைகள்தான், சிலசமயம் மட்டும் ஏதாவது அசையாமல் இருப்பதற்காகவோ, தாங்கி பிடிப்பதற்காகவோ பிடிக்க சொல்வார், வெல்டிங் சமயத்தில் ஆடாமல் இருக்க வேண்டும், ஆடினால் வெல்டிங் சரியாக வைக்க முடியாது. இது போன்றவைகள் மட்டுமே ராஜுக்கு வேலைகள், எப்போதாவது அப்பா ராஜுவை வெல்டிங் நாசில் கொடுத்து வெல்டிங் வைத்து பழக கொடுப்பார், அப்படி கொடுத்து கொடுத்து ஓரளவு வெல்டிங் வைக்கவும் ராஜு கற்று கொண்டான்.

ராஜு பரத்தம் பிடித்தவன், பார்த்த எல்லாமே வாங்கி சாப்பிட வேண்டும் அவனுக்கு, அப்பாவுடன் வரும்போது கேட்டதல்லாம் கிடைக்கும், இப்போது 8 வகுப்பு வந்துவிட்டதால் கொஞ்சம் கேட்கும் விரும்பும் விஷயங்கள் குறைவாகி விட்டன, இளநி பார்த்தான், அப்பாவிடம் அப்போது பணம் இருந்தால் அடம் பிடித்து வாங்கி விடுவான், டீ சமயங்களில் இரண்டு போண்டாக்கள் அவன் வாய்க்குள் போய் விடும். வெங்காய போண்டா, உருளை கிழங்கு போண்டா இரண்டிலும் ஒன்றை தூக்கி விடுவான். பிறகு பரோட்டா அப்பா பணம் ஏதும் வசூல் வந்தால் வாங்கி தருவார், கூட ஆம்லெட்டும். இதெல்லாம் நல்ல விஷயங்கள் தான். ராஜுவுக்கு கெட்ட விஷயங்களும் கூட கிடைக்கும், எதாவது கஸ்டமர் கூட சண்டை என்றால், கஸ்டமரிடம் காட்ட வேண்டிய கோபத்தை அவனிடம் காட்டுவார், சாங்காலம் போவதற்குள் எப்படியாவது ஒன்றிரண்டு அடி விழுந்து விடும். இனிமேல் வரவே கூடாது, கூப்பிட்டால் வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்று திட்டமெல்லாம் போடுவான், ஆனால் அது எல்லாம் கொஞ்ச நேரம்தான், அப்பா கோபம் மறைந்ததும் டீ கடைக்கு கூட்டி போய் போனதும் ராஜு எல்லாவற்றையும் மறந்து விடுவான். ராஜுக்கு அப்பாவிடம் பிடிக்காத குணங்கள் சில இருந்தது, அதில் ஒன்று அப்பா வேலைக்கான பணத்தை மிக அதிகமாக சொல்வது, அப்பா கேட்கும் தொகை அதிகமானது என்று எண்ணுவான், அப்பா இந்த விஷயத்தில் ஏமாற்றுகாரர் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. இன்று அதில் ஒரு இடி விழுந்தது அவனுக்கு.

வழக்கம் போல நான் வரவில்லை என்று காலையில் அப்பாவிடம் போராடினான், அம்மாவிடமும் சென்று கெஞ்சினான், அவனுக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், தெரு பிள்ளைகள் எல்லாம் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது அவன் மட்டும் அப்பாவுடன் சென்று கொண்டிருப்பான். அப்பாவுடன் கூட சென்று கொண்டிருப்பதை இவனது தெரு நண்பர்கள் அணிவகுப்பு நடை என்று கிண்டல் செய்வார்கள், வீட்டின் தெரு முடியும் வரை அவனுக்கு விளையாட முடியாத ஏக்கத்துடன் இருப்பான், தெரு தாண்டி விட்டால் பிறகு பார்க்கும் விஷயங்களில் அவன் கவனம் போய் விடும், ஒவ்வொன்றும் என்ன என்ன என்று கேட்டு அப்பாவை கொன்று எடுப்பான். இன்றும் அப்படியே கேட்டபடி வேடிக்கை பார்த்தபடி லாரி பேட்டை நோக்கி அப்பாவுடன் சென்று கொண்டிருந்தான்.

லாரி பேட்டையை லாரி தொழுவம் என்று சொல்லலாம், எப்படியும் நூறு லாரிகளுக்கு மேல் இருக்கும், அதிகமும் தமிழ்நாடு, கேரளா ரெஜிஸ்டரேசன் லாரிகள், மிக சிலவை மட்டும் வேறு மாநிலங்களாக இருக்கும். லாரி புக்கிங் ஆபிஸ்கள் இங்கு மிகுதி, அதனால் உருவான இடம் இது, கூடவே லாரி பழுது பார்க்கும் workshop களும் ஏகப்பட்டது இருந்தன, வரிசையாக இருபுறமும் workshop ம் புக்கிங் ஆபிஸ்களும் மாறி மாறி இருக்கும், ஆனால் எதுவும் சாலையின் மையத்தில் இருந்து பார்த்தால் தெரியாது லாரிகள் மறித்து மறித்து நின்றியிருக்கும், வண்டி ரிவெர்ஸ் எடுக்க லாரி பின்னால் நின்று லாரி கிளீனர் போடும் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டிருக்கும். கிளீனரை கிளி என்றும் விளிக்கும் வழக்கம் இங்கு உண்டு.

ராஜு அப்பாவுடன் கூட நடந்து கொண்டே வண்டியின் முகப்பின் மேலிருக்கும் பெயர்ப்பலகையில் இருக்கும் ஒவ்வொரு பெயரையும் படித்து கொண்டு வருவான், சரியா என்று அப்பாவிடம் கேட்டு சரி செய்து கொள்வான், அப்பா பள்ளிக்கு 3வரைதான் போயிருக்கிறார் என்றாலும் அவருக்கு தமிழ், மழையாளம், ஆங்கிலம் எழுத படிக்க வரும், அப்பா எப்படி இதை கற்று கொண்டார் என்ற ஆச்சிரியம் ராஜுவுக்கு எப்போதும் உண்டு.

நடந்து இருவரும் அவர்களின் workshop வந்து சேர்ந்தனர், அப்பா டூல்ஸ் பெட்டியை நீக்கி ஊதுபத்தி பற்ற வைத்தார், அது சந்தன நிற கெட்டியான ஊதுபத்திகள், நின்று எரியும், அந்த வாசம் ராஜுவுக்கு பிடிக்கும், அப்பா வெல்டிங் கேஸ் உருளை செட்டை நகர்த்தி முன்னே எல்லோரும் பார்க்கும் படியாக வைத்தார், எப்போதும் யாராவது காத்திருப்பார்கள், இன்று கஸ்டமர் யாரும் அப்படி காணாததால் அப்பா முகத்தில் கொஞ்சம் கவலை தெரிந்தது. அப்பா அருகில் இருந்த லாரி பெயிண்ட்ர் அருகில் போய் அமர்ந்து அவரோட பேச ஆரம்பித்து விட்டார், ராஜுவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிறகு அவனும் பெயிண்ட்ர் அருகில் போய் நின்று அவர் பெயர்ப்பலகை வரைந்து கொண்டிருந்ததை பார்த்தான். மயில் என பாதி எழுதி இருந்தார் ஆங்கிலத்தில், அடுத்து வாகனம் என்று வரும் என்று ராஜு அறிவான், ஏனெனில் இந்த workshop ல் வரும் பாதி லாரிகள் மயில்வாகனம் டிரான்ஸ்போர்ட்டுடையதுதான்.

கொஞ்சம் நேரம் போயிருக்கும், பனியன் போட்டு லுங்கி கட்டி சீவாத தலை கொண்ட ஒரு இளைஞன் வந்தான், டிங்கர் யாரு என்று அங்கிருந்த மெக்கானிக் கோபால் அண்ணனிடம் கேட்டான், கோபால் அண்ணன் திரும்பி அப்பாவை கைகாட்டும் முன்னரே அவர் அங்கு வந்து நின்று விட்டிருந்தார். அப்பா ” என்ன” என்று கேட்டார். அந்த இளைஞன் “சைலன்சர் கட்டாகிடுச்சு, வாங்க ” என்றான். அப்பாவும் அவனும் முன்னே நடந்தார்கள், அவர்களோடு ராஜு ஓடிப்போய் சேர்ந்து கொண்டான்.

10 வண்டிகள் காட்டிய லாரி நின்றிருந்தது, அவன் கிளீனர், அங்கே டிரைவர் காக்கி சட்டை போட்டு லுங்கி கட்டி கொண்டு நின்றிருந்தார். அப்பாவை பார்த்ததும் “குட்டப்ப அண்ணா, சைலன்சர் கட்டாகிடுச்சு, வண்டி புக்கிங் ஆகிடுச்சு, சீக்கிரம் கிளம்பனும், கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி கொடுங்க” என்றான். அப்பா பெயரை டிரைவர் சொன்னபோது ராஜு ஆச்சிரியப்படவில்லை, ஒருமுறை கேரளாவில் ஒரு கல்யாணத்திற்காக அம்மா, அப்பா, அவன், அக்கா எல்லாம் சாலையில் சென்றிருந்தபோது, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த லாரி இவர்களை தாண்டியதும் நின்று, அப்பாவை பெயர் சொல்லி டிரைவர் அழைத்து பேசி மகிழ்ந்தான், கோவை வழியாக செல்லும் எந்த லாரியும் உக்கடம் லாரி பேட்டை வரும் நீண்ட நாள் டிரைவராக இருந்தால் அப்பாவை அந்த டிரைவருக்கு தெரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் உணர்ந்த ராஜுக்கு அப்பாவை தெரிந்த நபர்கள் லாரி பேட்டையில் பார்க்கும் சூழல் என்பது சாதாரண விஷயமாகதான் இருந்தது.

அப்பா குனிந்து லாரிக்கு அடியில் போய் பார்த்தார், சைலன்சரின் உடைந்த பகுதியை தட்டி பார்த்தார், பிறகு வெளியே வந்தார், ” பெருசா கட் ஆகி இருக்கு, பீஸ் வைக்கணும் 400 ரூபா ஆகும்” என்றார். டிரைவர் ”இது ஜாஸ்தி 200 ரூபாவே அதிகம்” என்றான், அப்பா “இப்ப கேஸ், கார்பைடு என்ன விலை விக்குது னு தெரியுமா, நல்லா பண்ணித்தரேன், 400 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “குட்டபண்ணா, 300 ரூபா தரேன், சீக்கிரம் முடிச்சு கொடுங்க” என்றான். அப்பா “சரி, முதல் போணி 350 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “சரி சீக்கிரம் பண்ணுங்க” என்றார். அப்பா உற்சாகமாக வெல்டிங் gas உருளை செட்டை எடுத்து கொண்டு வர போனார். ராஜுவுக்கு அப்பா கேட்ட தொகை அதிகம் என்று தோன்றியது, 20 நிமிடத்தில் முடியும் வேலைக்கு இவ்வளவு கேட்பது அதிகம் என்று நினைத்தான்,100-150 ரூபாய் தான் சரியான தொகை என்று எண்ணினான், ஆனால் அதெல்லாம் மறைந்து அப்பாவிற்கு பணம் கிடைக்க போகும் சந்தோசம் அவனுக்குள் தொற்றி கொண்டு அவனும் உற்சாகமானான்.

இருவரும் வெல்டிங் சாதனங்களை நகர்த்தி கொண்டு லாரி பக்கம் வந்தார்கள், அப்பா வெல்டிங் சிலிண்டர், கார்பைடு போடும் டேங்க் எல்லாம் சேர்த்து ஒரு பலகை தொட்டியில் வைத்து அதன் கீழ் நான்கு இரும்பு உருளையும் மாட்டி இருந்தார், எங்கு வேண்டுமானாலும் தள்ளி கொண்டு போக முடியும்.

வண்டி பக்கம் வந்தவுடன் வேகமாக நாசிலை பிரித்து சைலன்சரின் உடைந்த பகுதி பக்கம் கொண்டு சென்றார், அந்த நாசில் சிலிண்டர் உருளை மற்றும் கார்பைடு டேங்க் உடன் ரப்பர் குழாய் வழியாக இணைக்கப்பட்டிருந்தது, நாசில் தேவைக்கேற்ப டூல்ஸ் வெளியிடும் கருவி அப்படி வெளிவரும் gas உயர் அழுத்த தீயாக ஆகி வெல்டிங் அடிக்க வெல்டிங் கம்பியை உருக்கி கொடுக்கும், கூடவே வெல்டிங் பகுதியை வெப்பமாக்கும், அப்படி வெப்பமாக்கப்பட்ட பகுதியில் உருகிய கம்பி இரும்பு படர்ந்து உடைந்த அல்லது இணைக்க வேண்டிய பகுதியை இணைக்கும். வரிசையாக போட்டு வைத்து வருவது போல இப்படி இணைத்து கொண்டு இணைக்க வேண்டிய பகுதியை இணைப்பார்கள், வெல்டிங் முடிந்த பிறகு அந்த அந்த இடத்தில் இரயில் பூச்சி ஒட்டிக்கொண்டிருப்பதை போல இணைப்பு பகுதியில் வெல்டிங் இருக்கும்.

அப்படி இணைக்க லாரிக்கு அடியில் போனார், நாசிலை தீப்பெட்டி திறந்து பற்ற வைத்தார், அதற்கு முன்பே, லாரிக்கு அடியில் போகும் முன்பே gas சிலிண்டரை திறந்து தேவையாக gas நாசிலுக்கு வர திறந்து வைத்திருந்தார். சரியாக நாசில் பற்றிக் கொள்ளவில்லை போல, வெளியே வந்தார், கார்பைடு டேங்க்கை  ஆட்டிப் பார்த்தார், பிறகு தன்னையே நொந்து கொண்டவர் போல முகம் வைத்து கொண்டு, “கார்பைடு முடிந்துச்சு” என்றார், பிறகு ட்ரைவரை நோக்கி “கார்பைடு கல்லு மட்டும் வாங்கிட்டு வந்துடறேன், ஒரு 200 கொடுங்க” என்றார். ட்ரைவரின் முகத்தில் கோபம் தெரிந்தது “கார்பைடு கூட வாங்கி வைக்காம என்னத்த தொழில் பண்றீங்க” என்று கடிந்தான், பிறகு புலம்பியவாறே பாக்கெட்டில் கையை விட்டு 100 ரூபாய் நோட்டு இரண்டு எடுத்து கொடுத்தார், அப்பா ஆர்வமாக வாங்கி ராஜுவை நோக்கி “இங்கயே இருடா, இப்ப வந்துடறேன் ” என்றார்.

ராஜுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது, கார்பைடு டூல்ஸ் பெட்டிக்குள் அப்பா எப்போதுமே குறைந்தது 2 கிலோ வைத்திருப்பார், இன்றும் பெட்டிக்குள் இருந்ததை அவன் பார்த்தான், அப்பா ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்று உள்ளுக்குள் பொருமினான், ஏன் இவ்வளவு பணத்திற்கு பறக்கிறார் என்று கோபம் கொண்டான். இந்த அங்கலாய்ப்பு அப்பாவுக்குள் எப்போது வடிந்து தொலையுமோ என்று நொந்து கொண்டான், அப்பாவை மிக மோசமான நபராக எண்ணினான். அப்பா 10 நிமிடத்தில் கார்பைடு பொட்டணமோடு வந்தார், அவசர அவசரமாக கார்பைடு மாற்றினார், பிறகு வண்டிக்கு அடியில் போனார், நாசில் அழுத்த நீலநிற தீயை வேகமாக தந்து கொண்டிருந்தது, அப்பா வெல்டிங் செய்யும்போது அவர் மனம் முழுதும் அதிலேயே இருக்கும், அவருக்கு வெல்டிங் வைப்பது ஒருவகை தியானம் போல, முடித்து கொண்டு வெளியே வந்தார், நாசில் இருந்த ரப்பர் குழாயை சுற்றி கார்பைடு டேங்க் மீது வைத்தார், பிறகு டிரைவரை பார்த்தார், “முடிஞ்சது” என்றார். டிரைவர் “குட்டப்பண்ணா, பில்லு கொடுங்க, டிரைவர் நம்ப மாட்டாரு இவ்வளவு பணம் ஆச்சுன்னு” என்றான், அப்பா கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி வெல்டிங் செட்டை நகர்த்தி workshop கொண்டு போனார், ராஜுவும் சேர்ந்து தள்ளினான், அப்பா டூல்ஸ் பெட்டிக்கு அருகில் இருந்த பில் புக்கை எடுத்து பில் எழுதினார்,அந்த பில்லில் மேலே கே பி குட்டப்பன் டிங்கர் ஒர்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது, ராஜு அதை காணும் போதெல்லாம் படித்து பார்ப்பான். அப்பா பில் போட மட்டுமே எழுத வாய்ப்பு கொண்டவர் என்பதால் ஆசையாக எழுதி முடித்தார். பின் வண்டி நோக்கி நடந்தார், ராஜுவும் கூடவே போனான்.

அப்பா அதிர்ச்சியில் உறைந்தார், அங்கு வெல்டிங் பணி செய்த லாரியைக் காணவில்லை, அப்பா சுற்றி சுற்றி தேடினார், வண்டியை காண முடியவில்லை. அப்பா “தாயோளிக, தேவிடியா மவ,” என்று காணாமல் போன வண்டியின் டிரைவரை திட்டி கொண்டிருந்தார். ராஜுவுக்கு டிரைவர் பணம் தராமல் ஏமாற்றி போனதை விட எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் வண்டியோடு காணாமல் போனார்கள் என்று ஆச்சிரியம் கொண்டான். பிறகு அவனும் டிரைவரை மனதிற்குள் திட்டினான். பிறகு சற்று நேரம் கழித்து இருவரும் டீ கடை சென்றனர், அப்பா “கார்பைடுக்கு பணம் வாங்காம போயிருந்தா எல்லா காசும் போயிருக்கும்” என்றார்.

நிலம்

ராதாகிருஷ்ணன்

வீடு முன்பு யாரையும் காணவில்லை, உள்ளே பேசும் குரல்கள் கேட்டன, தன்னை இன்னும் யாரும் பார்க்காதது தருமனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, மெதுவாக வீடு இருக்கும் பாதையில் நகர்ந்து வீடு பின்புறம் இருக்கும் தென்னந்தோப்பை நோக்கி சென்றான்.தூரத்திலேயே வாய்க்காலில் தண்ணி போகாமல் இருப்பதால் உருவான வெடிப்புகள் தெரிந்தன, மரங்களிலும் பசுமை குறைந்து காய தொடங்கி இருந்தது. தருமன் தன்னையே நொந்து கொண்டான், வேகமாக போய் மோட்டாரை ஆன் செய்தான், தொட்டியில் நீர் விழ ஆரம்பித்ததது, தொட்டியின் உட்சுவர்களில் இருந்த பாசனம் வெயிலில் கருகியிருந்தன, அவையெல்லாம் நீருக்குள் மூழ்க, தொட்டி நிறைந்து தண்ணீர் வெளியேறி வாய்க்காலுக்குள் விழுந்து ஓடியது, வாய்க்கால்களில் சென்று ஒவ்வொரு தென்னையின் அடியில் வெட்டிவைத்த வட்டங்களில் சுற்றி நிறைத்து நீர் சென்று கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான். விடியற்காலை முதற்கொண்டு மனதினுள் உருண்டு கொண்டிருந்த அவஸ்தை போன நிம்மதியை உணர்ந்தான். தொட்டியில் இருந்து நீர் எடுத்து முகம் கழுவினான், சட்னென மறந்து போன ஞாபகம் மீண்டும் நுழைந்து பயம் கொண்டு வீட்டை நோக்கினான், யாரையும் காண வில்லை, யாரும் இன்னும் வெளியே வராதது அவனுக்கு சற்று ஆச்சிரியம் அளித்தது, எதிர்பார்ததது இன்னும் நடக்காததை அவன் உணர்ந்து கொண்ட போது, அவனுக்குள் தானாக பதட்டம் உருவானது, சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மோட்டாரை ஆப் செய்ய சென்றான், பட்டனை அழுத்தும் போது சிலர் ஓடிவருவது போன்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான், முருகனும் சில ஆட்களும் கட்டைகளுடன் தன்னை அடிப்பதற்காக வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

மூன்று நாள் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சுருண்டு படுத்து கிடந்தான், கற்பகம் அவன் விழித்திருந்த எந்நேரமும் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள், ஆனால் அவன் மனம் அந்த ஐந்து நிமிடங்களுக்குள் உழன்று கொண்டிருந்தது. முருகன்தான் முதலில் அடித்தான், “பேசிக்கலாம், அடிக்காதிங்க” என்று சொல்ல சொல்ல நான்கு பேரும் மாறிமாறி அடித்ததை அந்த ஒவ்வொரு அடிகளையும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தான், அடித்தாளாமல் கீழே விழுந்த போது மீண்டும் அடித்ததை, முதுகில், பின்பக்கத்தில் எல்லாம் அவர்கள் குரூரமாக மிதித்ததை நினைவு கூர்ந்தான், கடைசியில் அவர்கள் போகும்போது முருகன் ” இனி உள்ள வந்த பிணமாதான் போவ ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இன்னொருவன் வந்து முகத்தில் மிதித்தான், முருகன் அப்போது அவனைத்தடுத்து “விடுறா, செத்தற போறான் ” என்றான், தருமனின் கை அனிச்சையாக முகத்தை தடவி பார்த்தது, வலது பக்கம் கண்களை சுற்றி இருந்த இடங்கள் வீங்கி இருந்தன, அதை கைகளில் அழுத்தி தொட்டபோது வலி தெறிப்பதை உணர்ந்தான், பிறகு கண்களை மூடி கொண்டான், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான், கற்பகம் முன்பு அழ கூடாது என்று எண்ணினான்,பின் முடியாமல் திரும்பி படுத்து கொண்டான்.

காவல் நிலையம் முன்பு யாரையும் காணவில்லை, தர்மன் இதை எதிர்பார்த்ததுதான், எதற்கும் வாசலில் நின்று எட்டி உள்ளே எட்டி பார்த்தான், ஒரு போலீஸ்காரர் மட்டும் இருக்கையில் அமர்ந்து ஏதோ தாள்களை புரட்டி கொண்டிருந்தார், இவன் வந்ததை காணாமல் அவர் தாளிலேயே மூழ்கி இருந்தார், தர்மன் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்றிருந்த பைக் நோக்கி சென்று, அதில் சாய்ந்து நின்றுகொண்டான். உடலில் இன்னும் அடியின வலிகள் இருந்தன, செல்பேசியை எடுத்து நேரம் பார்த்தான். சரியாக 10 மணிக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள், மணி பத்து ஆகி இருந்தது. தனக்குள் சலித்து கொண்டான் “எப்ப வருவானோ ” என்று புலம்பி கொண்டான். தருமன் இப்படி இங்கு வருவது ஏழாவது முறை, முதலில் கேஸ் கொடுத்தது இவன்தான், ஆனால் இப்போது சப் இன்ஸ்பெக்டர் இவனை குற்றவாளி போல நடத்துகிறார். தன் பெரியப்பாவை திட்டி கொண்டான், அவர் பேச்சை கேட்டதுதான் இவனின் இப்போதைய எல்லா நிலைக்கும் காரணம்.

திருப்பூரில் தினமும் 15 மணிநேரத்திற்கு மேல் உழைத்து 10 ஆண்டுகளாக சேர்த்தி வைத்த பணம், சொந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்வதுதான் இவன் வாழ்நாள் ஆசை, அம்மாவும் அப்பாவும் விவசாய கூலிகள், இவன் பத்தாவது படிக்கும் சமயத்தில் ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்து இருவரும் அடுத்தடுத்த நாளில் இறந்து போனார்கள், இவன் ஒருவன் மட்டுமே பையன், தருமனை பெரியப்பாதான் வீட்டில் வைத்து பார்த்து கொண்டார், +2 பிறகு படிக்க பிடிக்காமல் ஊரில் இருப்பவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு போவதை பார்த்து அவர்களோடு சேர்ந்து கொண்டான், திருப்பூரில் வேலை தந்த கம்பனியே இருக்க இடமும் கொடுத்தது, அருகில் மெஸ்ஸில் கணக்கு வைத்து சாப்பிட்டுக்கொண்டான், பிறகு வேலை சூழலில் கிடைத்த நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி கொண்டான், பிறகு ஊருக்கு வருவது குறைந்தது, விசேஷ நாட்களில் மட்டும் வந்து சென்றான். பிறகு ஒரு பைக் முழு தொகை கொடுத்து கடனில்லாமல் வாங்கினான், அதிலேயே ஊருக்கு வந்தான், ஊரில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றினான். அதெல்லாம் இப்போது தர்மனுக்கு கவலைகள், பயங்கள் அற்ற பொற்காலம் என்று தோன்றியது, அந்த நாட்களை எண்ணி ஏங்கினான். ஐந்து வருடம் முன்பு பெரியப்பா அழைத்து பொண்ணு பார்த்திருக்கேன் என்று சொன்னபோது தருமனுக்கு தரையில் கால்கள் இல்லை, அறை நண்பர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டாடினான், அன்றிலிருந்து சரியாக 50 நாட்களுக்குள் திருமணம் முடிந்து விட்டது, கற்பகத்தை முதலில் அவன் பார்த்த போது விளையாட்டு பிள்ளை போல இருக்கிறாள் என்றெண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டான், இந்த நிலப்பிரச்சனை வந்து தருமன் இப்படி ஆனபிறகு, அவன் சித்தமெல்லாம் செத்து போய் நடைப்பிணமான பிறகு அவள் சொல்வதை மட்டுமே வேத வாக்கு போல செய்தான், அவள் மட்டுமே அவனுக்கு இவ்வுலகில் இருக்கும் ஒரே துணை. அவள் இல்லையென்றால் எப்போதோ தற்கொலை செத்திருப்பான் .

திருமணம் நிகழ்ந்து நன்றாக போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வு திசை மாறியது இந்த நிலம் வாங்கிய பிறகுதான், பெரியப்பா “மோட்டார் இருக்கற நல்ல தண்ணியுள்ள இடம்டா, பூரா தென்னை நின்னு கிடக்கு, முன்னாடி ஒரு ஓட்டு வீடும் இருக்கு, வீடு நல்ல அம்சமா இருக்கு, 8 லட்சம் னு சொல்றாங்க, நான் கொஞ்சம் பணம் தரேன், உன் பணமும் இருக்கு, மிச்சம் கடன் வாங்கலாம், பத்தலனா என் நில பத்திரத்தை கூட தாரேன், வாங்கிடலாம்டா ” என்றான். “உன் விருப்பம் பெரியப்பா, நீ எப்ப சொல்றயோ அப்ப அங்க வரேன் “என்றான். கிரயம் செய்யும் நாள் அன்றுதான் காலையில் போய் நிலத்தை பார்த்தான், கற்பகம் மகிழ்ச்சியில் புரண்டாள், கல்யாண சேலை உடுத்தி இருந்தாள், காலையிலேயே lகோவிலுக்கு என்னையும் கூட்டி கொண்டு போய் வந்தாள்.

நிலத்திற்கு உள்ளே நடந்து போய் பார்த்தான், தென்னைகள் எல்லாமே குழை தள்ளி இருந்தன, பெரிய தண்ணி தொட்டி, வாய்க்காலில் போன நீரை சற்று கையில் எடுத்து கண்களில் ஒற்றி கொண்டான், அம்மாவையும் அப்பாவையும் நினைத்து கொண்டான், கண்களில் நீர் திரண்டது, ” அம்மா ” என்று சொல்லி கொண்டான். கிரயம் முடிந்து அன்று இரவு பெரியப்பா வீட்டிலேயே தங்கினான், இவன் மீது பெரியம்மாவுக்கு மிகுந்த பிரியம் உண்டு, இரவு விருந்துணவு உண்டு கட்டியில் சாய்ந்து படுத்து கொண்டான், அம்மா நினைவு மட்டுமே அவன் மனதில் இருந்தது ” அம்மா நான் நிலம் வாங்கிட்டேன் மா, அப்பா ” என்று மனதிற்குள் அரற்றி கொண்டிருந்தான். பெரியப்பாவின் ஓசை கேட்டு திரும்பி பார்த்து எழுந்து அமர்ந்தான். பெரியப்பா அருகில் அமர்ந்து கொண்டார், ” நிலத்தை பாத்துக்கணும், என்ன பண்ணலாம் ” என்றான். இவனும் அது பற்றி யோசித்திருந்தான், இன்றைய அலைச்சலில் மறந்து விட்டான். ” ஆம பெரியப்பா, நானும் மறந்துட்டேன் என்ன பண்ணலாம் ” என்றான், ” மகனே, ஆள்வச்சு பார்த்தா, நாம கண்காணிக்கணும், காய் போடற சமயத்தில் இங்க இருக்கணும், உன் பொழப்பு கெட்டு போயிடும், ஒரு இரண்டு வருஷம் குத்தகைக்கு விடுவோம், கடனை அடைப்போம், பிறகு திருப்பூர் வேலை விட்டு இங்க வந்துடு, இதுல வர காசே நமக்கு போதும் ” என்றார், தருமனுக்கு இது நல்ல யோசனையாக பட்டது. பிறகு திருப்பூர் போய் விட்டான். ஒரு வாரத்திற்குள்ளாக பெரியப்பா போனில் அழைத்து ” குத்தகைக்கு ஆள் கிடைச்சுட்டாங்க, மாடசாமி மகன் முருகன் தான் எடுக்க இருக்கான், கிளம்பி வா “என்றார் தருமன் முருகனின் முகத்தை ஞாபக படுத்தி பார்த்தான், மங்கலாகத்தான் ஞாபகம் வந்தது, இவன் 5 படிக்கும் போது அவன் அதே பள்ளியில் 10 வகுப்பு படித்தவன், பிறகு படிக்காமல் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு விவசாயத்திலேயே இறங்கியவன், அதிகமாக பேச மாட்டான், பல வருடம் முன்பு அவனை தருமன் அவனை பார்த்தது, பிறகு தருமன் ஊருக்கு வரும்போதெல்லாம் அவனை பார்த்ததே இல்லை. அன்றிரவே ஊருக்கு கிளம்பி விட்டான்.

காலையில் பெரியப்பா வீட்டிற்கு முருகன் தன் அப்பாவுடன் வந்திருந்தான், கூட இன்னொரு ஊர்காரரும் வந்திருந்தார், பெரியப்பா இரண்டு ஊர் காரரை கூட்டி வந்திருந்தார், அதில் ஒருத்தர் ஊர்நாட்டாமை. அவரை பார்த்தவுடன் தருமன் வணங்கினான் , ” நல்லா இரு தம்பி ” என்றான். பிறகு அவர்தான் பேச தொடங்கினார் ” இரண்டு வருஷ குத்தகை, முடிச்சு கொடுக்கும் போது இப்ப எப்படி இருக்கோ அது போலவே இருக்கனும் ” என்றான், முருகன் சரி சென்று ஆமோதித்து கொண்டு பெரியப்பாவிடம் குத்தகைப் பணத்தை கொடுத்தான், அவர் தருமனை வாங்க சொன்னார், தருமன் வாங்கி பெரியப்பாவிடமே கொடுத்தான்.

இந்த இரண்டு வருடங்களிலும் மாதம் ஒருமுறை வந்து நிலத்தை பார்த்து போவான், முருகன் அந்த ஓட்டு வீட்டில் வந்து தங்கி கொண்டான், இவன் வந்தால் அருகில் பார்க்க நேர்ந்தால் ஓரிரு வார்த்தை பேசுவான். அவன் மனைவி லேசாக புன்னகைப்பாள், அவ்வளவுதான். தருமன் வந்தால் தண்ணித்தொட்டி பக்கம் போய் அந்த திண்டில் மேல் அமர்ந்து கொள்வான், பிறகு ஒவ்வொரு மரமாக போய் நின்று பார்த்து கொண்டிருப்பான், அப்படி பார்த்து கொண்டிருப்பது அவனுக்கு சலிக்கவே சலிக்காது, பிறகு இருட்டாக துவங்கும் போது மனமில்லாமல் கிளம்புவான்

இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட கடன்களை அடைத்து விட்டான், சொந்த ஊருக்கே வரும் ஆயத்தங்களில் இருந்தான். குத்தகை முடிந்த நாள் அன்று பெரியப்பா ஊருக்கு வந்து பெரியப்பா வீட்டில் இருந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான், இருட்ட தொடங்கியும் அவன் வரவில்லை, தருமன் மனம் எதிர்பார்த்து சோர்ந்திருந்தது, பெரிப்பா ” விடு, காலைல நாமளே போயிடுவோம் ” என்றான். அன்று இரவு தருமனுக்கு உறக்கமே வரவில்லை, இரண்டு மணிக்கு தூக்கம் வந்து 5 மணிக்குள் எழுந்து கொண்டான், காத்திருந்து 9 மணிக்கு பெரியப்பாவையும் அழைத்து நிலத்திற்கு போய் சேர்ந்தான், முருகன் வாய்க்காலை சீர் படுத்தி கொண்டிருந்தான், பார்க்கவும் மண்வெட்டியை கீழே போட்டு அருகில் வந்தான். “சொல்லுங்க என்ன விஷயம்” என்றான், தருமனுக்கு அதை கேட்க மனம் தூக்கிவாரி போட்டது. பெரியப்பா ” என்ன தம்பி, குத்தகை காலம் முடிஞ்சது தெரியாதா ” என்றார். அவன் அவரை பார்க்காமல் தருமனை நோக்கி ” இது என் நிலம், வேணும்னா கொஞ்சம் பணம் தாரேன், எனக்கு எழுதி கொடுத்துடு, மத்தபடி நீ எழுதி தராட்டியும் இது என் நிலம்தான், எவனை வேணும்னாலும் கூட்டி வா பாத்துக்கலாம் ” என்றான். தருமனுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது ” இது நான் கஷ்டப்பட்டு வாங்கினதுங்க” என்றான், முருகன் அவனை பார்க்காமல் “வேலை கிடக்கு, கிளம்புங்க “என்றான், பிறகு போகும் போது ” இங்க வர வேலை வச்சுக்காதீங்க ” என்றான். பெரியப்பா தருமனை நோக்கி ” இவன்கிட்ட எதுக்கு பேசிட்டு, வா நாட்டாமைட்ட போவோம், இவன் தன்னால வழிக்கு வருவான் ” என்றார்.

பஞ்சாயத்தில் எல்லோரும் வந்தும் முருகன் மட்டும் நேரம் கழித்து அப்பா மாடசாமியை கூட்டி கொண்டு வந்தான், அவன் எதுவுமே பேச வில்லை, நாட்டாமை ” நாளைக்கு அவன் நிலத்துல இருக்க கூடாது ” என்றார், முருகன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தான், நாட்டாமை ” மாடசாமி உனக்கும் சேர்த்திதான் சொல்றேன், புரிஞ்சுதா ” என்றார், மாடசாமி ” சரிங்க ” என்றார். அன்று சற்று நிம்மதியாக தூங்கினான் தருமன். காலையில் போய் பார்த்தபோது முருகன் போகாமல் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தான், தருமன் நேராக நாட்டாமையை போய் பார்த்தான் ” தம்பி, இப்பல்லாம் எவனுமே பஞ்சாயத்தை மதிக்கறதில்லை, நீ போலீஸ் ஸ்டேசன் போ, அப்பத்தான் இதுக்கு முடிவு கிடைக்கும் “என்றார், தருமன் நடுங்கினான், போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் அவன் போனதே இல்லை, “அய்யா உங்களை எல்லாம் நம்பித்தானே கொடுத்தேன் ” என்றான். நாட்டாமை ஏதும் சொல்லாமல் வருத்தம் வெளிப்படுத்தும் முகம் கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போதே பெரியப்பாவையும் இன்னொரு ஊர் பெரியவரையும் அழைத்து கொண்டு ஸ்டேஷன் போனான், சப் இன்ஸ்பெக்டர் இருந்தார், தன் பிரச்சனைகளை சொன்னான், கேட்டு கொண்டவர் முருகனின் அலைபேசி எண் வாங்கி அழைத்து அவனை வர வைத்தார். அவன் மட்டும் வந்தான், தருமனை பார்த்து முறைத்தான்.

சப் இன்ஸ்பெக்டர் முருகனை ” நிலம் யார் பேருலடா இருக்கு ” என்கிறார், அவன் ” அவன் பேருலதாங்க இருக்கு, ஆனா எனக்கு விக்கறேன் னு சொல்லித்தான் கொடுத்தாங்க, பணம் நிறைய கொடுத்திருக்கேன், இப்ப எழுதி கொடுக்க சொன்னா காலி பண்ணுனு சொல்றாங்க ” என்றான், தருமன் அதை கேட்டு திடுக்கிட்டு தடுமாறினான், சப் இன்ஸ்பெக்டரை நோக்கி ” பொய் சொல்றாருங்க, எங்க ஊர்ல எல்லோருக்குமே தெரியும் என் நிலம் அதுனு, நான் குத்தகைக்குத்தான் கொடுத்திருக்கேன்னு, பஞ்சாயத்துல கூட இவரை வெளிய போக சொன்னாங்க, போக மாட்டேங்கிறாரு ” என்றான், சொல்ல சொல்ல அவனுக்கு அழுகை வந்தது. பிறகு பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் ஓடி கடைசியில் சப் இன்ஸ்பெக்டர் முருகனை நோக்கி ” தோப்புல நீ இனி போக கூடாது, வீட்டை ஒரு வாரத்தில் காலி பண்ணி கொடுத்தடனும் ” என்றார். பேச்சுவார்த்தை முடிந்து ஸ்டேஷன் விட்டு எல்லோரும் வெளியே வந்தார்கள், பிரச்னை தீர்ந்தது என்று தருமன் நினைத்தான்.

முருகன் ஒரு மாதமாகியும் காலி செய்ய வில்லை, தோப்பையும் பராமரிப்பதை விட்டிருந்தான், நிலத்திற்கு போனால் சண்டை நிகழும் என்று நினைத்து தருமனும் போகாமல் இருந்தான். ஸ்டேஷன் மட்டும் போய் ” இன்னும் காலி செய்யவில்லை ” என்பதை புகார் சொல்லி கொண்டிருந்தான், ஆரம்பத்தில் சப் இன்ஸ்பெக்டர் இவனுக்கு கொடுத்த மரியாதை நாளாக நாளாக குறைந்திருந்தது, தருமனை காரணம் இல்லாமல் திட்டவெல்லாம் ஆரம்பித்திருந்தார், பெரியப்பா ” முருகன் காசு ஏதாவது கொடுத்து சரி கட்டியிருப்பாண்டா ” என்று தருமனிடம் சொன்னபோது தருமன் நொறுங்கி போனான்.

இரவு தூக்கம் என்பதே இல்லாமல் ஆகி விட்டிருந்தது, திருப்பூர் வேலைக்கு போய் இரு மாதங்களாகி இருந்தது, கற்பகத்திடம் இதையெல்லாம் அவன் முழுதும் சொல்லவில்லை, காலி செய்ய அவகாசம் கேட்கிறார்கள் ” என்று மட்டும் சொன்னான், பெரியப்பாவிடமும் சொல்லி பெரியம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தான் , ஆனால் சில நாட்களிலேயே கற்பகத்திற்கு அருகிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து விட்டது, “நான் போய் கேட்கிறேன்” என்று அழுது தருமனிடம் சண்டை செய்தாள்,தருமன் “நான் பார்த்து கொள்கிறேன், நீ உள்ள வராதே ” என்று தீர்மானமாக சொல்லி விட்டான். பிறகு தினமும் அவன் வீட்டிற்கு வரும் போது அவள் விசாரித்து புலம்புவதும் அவன் சாக்குபோக்கு சொல்லி கடந்துவதுமாக நொந்து கொண்டிருந்தான்

ஒருநாள் நிலத்தை கடந்து செல்லும்போது நீர் பாய்ச்சல் இன்றி தென்னைகள் காய்ந்து கிடப்பதை பார்த்து சென்றான், அன்றிரவு உண்ணவே அவனால் முடியவில்லை. துளி கூட தூக்கம் வரவில்லை, வெளியே திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான், விடிவதை பார்த்து கொண்டிருந்தான், ஆட்கள் நடமாடும் வரை பார்த்து கொண்டிருந்தான், பிறகு நிலம் நோக்கி நடந்தான், முன்பிருந்த வீடு கடந்து மோட்டரை இயக்கி நீர் பாய்ச்சினான், மருத்துவமனையில் கிடந்தான்.
……

சப் இன்ஸ்பெக்டர் புல்லட்டில் வந்து ஸ்டேசனின் வாசலில் இருந்த தகர கூரையின் கீழ் வண்டியை நிறுத்தினார். அனிச்சையாக திரும்புவதை போல திரும்பி தருமனை பார்த்தார். பிறகு படியேறி உள்ளே தன் இருக்கை நோக்கி சென்றார். சொல்லிவைத்தாற் போல சற்று நேரத்திலேயே ஒரு வாடகை டாட்டா இண்டிகா கார் வந்து ஸ்டேஷன் வாசலில் நின்றது, முருகன் இறங்கினான், அவனோடு 7-8 பேர் இறங்கினர், எல்லோரும் கட்டுமஸ்தாக கட்சி கரைவேஸ்டி கட்டி கடாமாடுகள் போல இருந்தார்கள், எல்லோரும் திரும்பி தருமனை விறைப்பாக பார்த்து பின் திரும்பி கொண்டார்கள், பிறகு உள்ளே சென்றார்கள். சற்று நேரம் கழித்து தருமன் உள்ளே போனான், எல்லோரும் இருக்கைகளில் அமர்ந்து இருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரிடம் வேடிக்கை சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள், சப் இன்ஸ்பெக்டரும் சிரித்து கொண்டிருந்தார், நான் உள்ளே சென்றதும் அந்த சிரிப்புகள் நின்றன. தருமன் அமர அங்கு இருக்கை ஏதும் இருக்க வில்லை. சப் இன்ஸ்பெக்டர் முன்பு வந்து நின்றான். அவர் நிதானமாக ” தம்பி, நீ நிலத்தை இவருக்கு எழுதி கொடுத்துட்டு, பணம் வாங்கிக்க, நான் கொடுக்க சொல்லி இருக்கேன், இப்படித்தான் இந்த பிரச்னை தீரும், இல்லாம கோர்ட்டுக்கேசு னு போனா கூட ஒன்னும் தீராது ” என்றார். தருமன் மனதிற்குள் என்ன ஆனாலும் அழ கூடாது, கெஞ்ச கூடாது என்று எண்ணி கொண்டான், பிறகு ” அது என் நிலம்ங்க, அத நான் யாருக்கும் தர முடியாது ” என்றான் தெளிவாக. இருக்கையில் இருந்த சிலர் தருமனை அடிக்க பாய்வதை போல எழுந்தார்கள், சப் இன்ஸ்பெக்டர் அவர்களை ” உட்காருங்க ” என்று சொல்லி அமர வைத்தார். தருமன் நிதானமும் தெளிவும் கொண்டு மேலும் பேசினான் ” என் நிலத்துக்கு போனா என்னை அடிக்கறாங்க, நீங்க ஒரு தீர்வு சொல்லலைனா நான் கலெக்டர் ஆபிஸ் போவேன், எனக்கு என் வேணும், அத யாருக்கும் விற்க மாட்டேன் ” என்றான். சொல்லி முடிப்பதற்குள்ளாக சப் இன்ஸ்பெக்டர் தருமனை அறைந்தார். தருமன் தன் சொல்லில் பின் வாங்க மாட்டேன் என்பது போல அடியை பொருட்படுத்தாமல் சப் இன்ஸ்பெக்டரை பார்த்தான். சப் இன்ஸ்பெக்டர் ” இது ஆவறதில்ல, நீ கிளம்பு ” என்றார், தருமன் ஏதும் சொல்லாமல் வெளியேறினான்.

வீடு வந்தான், கற்பகம் அவனை கண்டு என்ன நடந்திருக்கும் என்று யூகித்து ” நான் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்ங்க “என்றாள், ” நாம திருப்பூர் போகலாம், நிலம் நம்ம பேர்லதான இருக்கு , யாரும் ஒன்னும் பண்ணிட முடியாது, போயிடுவோம், பிறகு பொறுத்து பார்த்து வந்து இங்க வருவோம் ” என்றாள், தருமனுக்கும் அது சரியாக பட்டது, இந்த பிரச்சனைகளால் மனம் நொந்து படுத்த படுக்கையான பெரியப்பாவை அவர் அறையில் போய் பார்த்தான், ” நான் திருப்பூர் போறேன், நிலம் எங்கயும் போகாது, பிறகு பார்த்துக்கலாம் ” என்றான், பெரிப்பா அருகில் வர சொல்லி அவன் தலை மீது கைவைத்து கண்ணீருடன் ” என்னை மன்னிச்சுருடா ” என்றான், ” விடுப்பா, நீ என்ன பண்ணுவ, என் தலைவிதி இப்படி இருக்கணும்னு ” என்றான், l, பிறகு அழுகை வரவும் எழுந்து வெளியே வந்து விட்டான்.

கிளம்பும் போது வாசலில் வந்து பெரியம்மா வழியனுப்பினாள் ” புள்ளைய பார்த்து கூட்டிப்போ, உண்டான பிறகு ரொம்ப கவனமா இருக்கனும் “என்றாள், அவன் கற்பகத்தை திரும்பி பார்த்தான், அவள் நாணி தலை கவிழ்ந்தாள், “ஏன் சொல்லல” என்றான், ” போம்போது சொல்லலாம்னு நினைச்சேன் ” என்றாள்.

இரண்டு மாதங்கள் போயிருக்கும், பெரியம்மா தருமனுக்கு அழைத்து அவசர குரலில் படபடப்புடன் ” முருகன் செத்துட்டாண்டா, யாரோ அவனை குத்திட்டாங்களாமா ” என்றாள். அன்று தருமன்  எப்போதும் அருந்துவதை விட இருமடங்கு குடித்தான். எப்போது வீட்டிற்கு வந்தான், தூங்கினான் என்பதே ஞாபகம் இல்லை, விடியற்காலை எழுந்த போதுதான் ஓரளவு போதை தெளிந்து அமர்ந்தான், மனம் நிம்மதி கொண்டிருப்பதை, சாந்தமாக இருப்பதை புன்னகை கொண்டிருப்பதை உணர்ந்தான், சட்டெனெ ஒரு எண்ணம் அவனுக்கு வந்தது, ஊருக்கு சென்று அவன் உடலை பார்க்க வேண்டும் என்று, கற்பகத்திடம் கூட சொல்லாமல் பைக்கிலேயே ஊருக்கு சென்றான். பெரியம்மா அவனை ஆச்சிர்யத்துடன் பார்த்தாள், அவன் பெரியம்மாவிடன் எதுவும் பேசாமல் நேராக துக்க வீடு சென்றான். போஸ்ட் மார்ட்டம் என்பதால் வீட்டிற்கு கொண்டுவராமல் நேராக எரிக்க கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னதை கேட்டு அங்கு சென்றான், எல்லாம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் . ஒவ்வொருவராக இவனை கடந்து சென்று கொண்டிருந்தனர், யாரும் இவனுடன் பேச வில்லை. முருகனின் அப்பா வந்து கொண்டிருந்தார், இவனை சற்று தொலைவிலேயே பார்த்து விட்டார். நேராக அவனை நோக்கி தளர்ந்த நடையுடன் வந்தார், ” தம்பி உன் நிலத்தை நீயே எடுத்துக்க, ” என்றார், தருமன் ஒன்றும் சொல்லாமல்நின்று கொண்டிருந்தான், மாடசாமி மீண்டும் ” நான் முன்னாடியே அவன்கிட்ட சொன்னேன், அவ என் பேச்சை கேட்கல, அது உன் நிலம், அத எடுத்துக்க ” என்றார்.

வேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

“இனியும் சுதாகரிக்காம இருந்தோம்னா அப்பறம் மொத்தமும் இல்லாம போயிடும்,” சந்திரானந்தாசாமி இப்படி சொன்னதும் கூடமே அதிர்ச்சி அடைந்தது . பெரியவர் அதிர்ச்சியும் துக்கமும் கலந்தவராக அவரைப் பார்த்தார், மேலும் முதுமையின் சலிப்பும் பெரியவரின் முகத்தினில் இருந்தது. எல்லாவற்றையும் துறந்து துறவியானவர் இப்போது இதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கிறார் போல தோன்றியது .

கூடத்தின் நிசப்தம் பெரியவரின் குரலுக்காக கலைய காத்திருந்தது . மெல்ல இருமி, அசைந்து,  “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற” என்றார் . சந்திரானந்தாசாமி, “சுற்று வேலி போடுவோம்,  கண்காணிப்போம்,” என்றார். சந்திரானந்தசாமி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவர் உடல்மொழி வழியாக புரிந்து கொள்ளவே முடியாது. எதையும் வெற்று பார்வைகள் வழியாகவே அணுகுவார் .

பெரியவர், “சரி, ஏற்பாடு செய்,” என்றார், பிறகு எழுந்து அவரது அறை நோக்கி நடந்தார், அருகில் இருந்த இளம் சந்நியாசி அவர் பின்னாலேயே சென்றான் . கூட்டத்திலிருந்த பிற சாமிகளும் ஒவ்வொருவராக நகர்ந்து வெளியேறினார்கள் , நானும் சந்திரானந்தா சாமியும் மட்டும் நின்றிருந்தோம். நான் அவரிடம், “ஒரு வேளை திருட்டு க்கு காரணமானவங்க உள்ளவுள்ளவங்களா இருந்தா?” என்றேன் . சந்திரானந்தா சாமி என் தோளில் தட்டியபடி, “அப்ப உள்ளேயும் கண்காணிப்போம்,” என்றார் . அதைக் கேட்டவுடன் மனதில் ஒருவித புது பதற்றம் குடியேறி கொண்டது.

முதலில் சின்ன சின்ன பொருட்கள் காணாமல் போனது. கைமறதியாக வேறு எங்காவது வைத்து காணாமல் போனதாக சொல்கிறார்கள் எண்ணிக் கொண்டிருந்தோம் . தீபம் காட்ட பயன்படும் செம்பாலான தட்டு காணாமல் போனபோதுதான் திருட்டு நடப்பதை உணர்ந்தோம், சந்திரானந்தசாமிதான் ஆரம்பத்திலேயே உணர்ந்து சொன்னவர் . தொடர்ந்து எல்லோரும் கவனமாக இருந்தும் பொருட்கள் திருடு போவது நிற்கவில்லை . பிறகு சந்திரானந்தாசாமி பெரியவரிடம் முறையிட்டு வேலியிட வேண்டும் எனும் தன் யோசனையை வெற்றிகரமாக ஏற்க வைத்தார் .

எங்கள் ஆசிரமம் 15 ஏக்கர் அளவு விரிந்த ஒன்று, பிரார்த்தனைக் கூடம்தான் இங்கு இருப்பதில் பெரிய கட்டிடம், ஓடு கொண்டு கூரை வேயப்பட்ட கட்டிடம் இது, அதில் வலது மூலையில் இருந்த ஓய்வு அறையில் பெரியவர் தங்கியிருந்தார். பிற சந்யாசிகள் , வெளியாட்கள் தங்க தனித்தனி கட்டிடங்கள் இருந்தன, நான் சமையல் கூடத்திலேயே படுத்துக் கொள்வேன். நான் சமையல்காரனாக இங்கு வந்து சேரவில்லை , வீட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடி வந்தவன் , தற்செயலாக இங்கு வந்து சேர்ந்து எடுபிடி வேலைகள் ஆரம்பித்து இந்த பதினைந்து வருட வளர்ச்சியில் சமையல் பொறுப்பாளன் இடத்திற்கு வந்துள்ளேன் . ஆசிரமத்தில் நடக்கும் திருட்டுகள் பற்றி ஆர்வம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்து கொண்டிருந்தேன் ,பிறகு சமையலறையில் இருந்த செம்பு போசி காணாமல் போனபின் சாதாரண ஆர்வம் பதற்றமாக மாறி திருட்டைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது . மொத்த ஆசிரமமும் கடவுளை மறந்து திருட்டை மட்டுமே பேசிக் கொண்டிருந்தது .

தற்காலிகமாக இரும்புக் கம்பி முள்வேலி போட்டுக்கொள்ளவும் பிறகு அதை மதில்சுவர்களாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு வேலை துவங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன . சந்திரானந்தாசாமி இதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார, இவரைப் பொருத்தவரை ஏதாவது தீவிரம் எப்போதும் இருக்க வேண்டும் , இவரால் சும்மா இருக்க முடியாது, வேறு எதுவுமே கிடைக்கவில்லையெனில் விறகு வெட்டித் தருகிறேன் என்று சொல்லி வந்து நின்று விடுவார், உடல் சும்மா இருக்கக் கூடாது, ஏதாவது பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார், இவர் பிரார்த்தனை செய்தோ , தியானம் ஏதேனும் செய்தோ நான் பார்த்ததே இல்லை , பெரியவரை கண் நோக்கி பேசக் கூடிய தைரியம் இங்கு இவர் ஒருவருக்கே உண்டு. வேலி அமைக்கும் திட்டத்தில் என்னை இழுத்து போட்டுக் கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார், எனக்கும் இந்த மாற்றம் ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.

எங்கள் ஆசிரமம் வஞ்சிபாளையம் ஊர் எல்லையில் மலையடிவாரத்தில் இருந்தது, எங்கள் ஆசிரமம் தாண்டிப் போகக் கூடியவர்கள் ஆடு மேய்ப்பவர்களும், சீமார் புல் எடுக்கச் செல்பவர்களும்தான். இந்த பக்கம் புதிதாக யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள் எங்கள் ஆசிரமத்திற்கு வருபவர்கள்தான். பாதுகாப்பு தேவைப்படாத இடத்தில் ஆசிரமம் இருந்தது என்று சொல்லலாம். இப்போது 3 மாதமாக நடக்கும் இந்த திருட்டுகள் ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் அதிர்ச்சியானதாகவும் புதிதானதாகவும் இருந்தது, ஒருவகையில் உறக்கத்தில் இருந்து கொண்டிருந்த ஆசிரமத்தை இந்நிகழ்வுகள் விழிப்படையச் செய்து விட்டது.

வேலி அமைக்க ஒரு மேஸ்திரி, பணியாட்கள் 9 பேர், என ஒரு குழு வந்து ஆசிரமத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டது , 8 அடி தூரத்திற்கு ஒரு கல்லுக்கால் என வைத்து இரும்பு முள்வேலிக்  கம்பிகள் சுற்றி வேகமாக வேலை செய்து கொண்டிருந்தனர், இதில் கம்பிகளை வரிசை முறையில் சீராக இழுப்பதுதான் கொஞ்சம் கடினமான பணி, அதற்காகவென ஒரு குறுக்கு கட்டை வைத்து இறுக்கி இழுக்கும் ஒரு யுக்தியை பயன்படுத்தினார்கள், மொத்தம் ஐந்து நாட்களுக்குள் வேலி போட்டு முடித்து விட்டார்கள். ஆச்சரியமாக, வேலி அமைக்க முதல் கல்லுக்கால் போட துவங்கியதிலிருந்தது இப்போது வரை எந்த பொருளும் திருடு போகவில்லை, ஒவ்வொரு நாளும் எல்லோரும் எதிர்பார்த்து ஏமாறுவதாக நாட்கள் போனது.

சந்திரானந்தாசாமி வெற்றிப் பெருமிதத்துடன் ஆசிரமத்தில் வளைய வந்துகொண்டிருந்தார் . ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணம் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது , வேலி ஒரு கூண்டு போல சிறைபடுத்தி விட்டது என. வேலி போட்ட மறுநாளே சந்திரானந்தாசாமி பக்கத்தில் இருந்த கிராமத்திற்கு போய் ஒரு வயசாளியை கூட்டி வந்து வாசலில் காவலாளியை போல அமர்த்தி விட்டார், அந்த காவலாளி உள்ளே வருபவர்களையும் வெளியே செல்பவர்களையும் திருடனை போலவே பாவித்து அனுப்பிக் கொண்டிருந்தார். ஆசிரம சூழலே சிறைசாலை மாதிரி ஆகிவிட்டது போல உணர்ந்தேன் , என் உணர்வு சந்திரானந்தா சாமி தவிர பிறர் எல்லாருடைய முகத்திலும் பிரதிப்பலிப்பதை உணர்ந்தேன் .

சந்திரானந்தாசாமியிடம் இதை எப்படி சொல்வது என தவித்தேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி காவலாளியை நீக்க எண்ணி சமயம் பார்த்து காத்திருந்தேன். அதிசயமாக அவர் எந்த வேலையும் செய்யாமல் வேப்ப மரம் அருகில் இருந்த கல்லாலான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது போய் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது. அருகில் சென்று நின்றபோது என்ன என்பது போல பார்த்தார் .

ஆசிரம சூழலே மாறிடுச்சு சாமி”

“ஏன் திருட்டு நடக்கலைனா …”

நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன். அவர் அருகில் அமரச் சொன்னார்.

“கந்தா , இந்த ஆசிரமம் உனக்கும் எனக்குமோ இல்ல உள்ள இருக்கற பெரியவருக்கோ மட்டுமே சொந்தமானதுல்ல, இனி இங்க வரப் போகிற எல்லாருக்கும் சொந்தமானது, அதுக்கு இந்த ஆசிரமம் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம்…”

“மத்தவனுக்கு பயந்து நாம கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி தோணுது சாமி”

மெல்ல புன்னகைத்தவர் என்னில் இருந்து பார்வையைத் திருப்பி தூரத்தில் இருந்த வேலியைப் பார்த்தார். “கந்தா , இன்னைக்கு பொருள் திருடு போகுதுன்னா நாளைக்கு நிலமும் திருடு போகும்னு அர்த்தம் ”

அதீதமாக எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றியது, பதில் சொல்லாமல் அவரை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன் .

“இங்க இருந்து காணாம போன ஒவ்வொரு பொருளும் வெளிய பாக்குறேன் , அவனுகளோடதா …”

நான் உண்மையா என்பது போல பார்த்தேன், ஆனால் இவர் முன்பெல்லாம் பகலில் ஊர்களில் சுற்றி திரிவார் , சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் ஆசிரமம் வருவார், இந்த திருட்டு பிரச்சனைக்கு பிறகே அவர் ஆசிரமத்தில் பகலிலும் இருந்தார் .

“கந்தா , எந்த பொருளும் யாருக்கும் உரிமையானதில்லை , ஆனா அப்படி எல்லோரும் நினைக்கும்போது மட்டும்தான் அது சரி, மத்தவங்க ஒவ்வொன்னுக்கும் உரிமை கொண்டாடும்போது நாம எல்லாம் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தா பிறகு நமக்கு பயன்படுத்தக்கூட ஏதும் இல்லாம போயிடும் ”

“இது வெத்து பயம் சாமி”

“நம்ம ஆசிரமத்துக்குனு சொந்தமா கொஞ்சம் நிலம் வெளியில இருந்தது, இப்ப அது நம்ம கைல இல்ல…”

எனக்கு விஷயம் லேசாக புரிபட ஆரம்பித்தது.

“பெரியவர் இதெல்லாம் கண்டுக்க மாட்டாரா” என்றேன்.

“அவர் இதையெல்லாம் ஏன் கண்டுக்கணும் , அவரோடது சமயப் பணி, அதை அவர் செய்யட்டும், நான் இதை செய்யறேன், அவ்வளவுதான்”

“சாமி , நான் இதுவரை இங்க உணர்ந்தது ஒன்னுதான், ஆசிரமம் இங்க வர யாரையும் பிரிச்சு பார்க்காம வரவேற்கும், சாப்பாடு போடும், நான் இங்க வர ஆளு பசியோட இருக்கானான்னு மட்டுமும்தான் பார்ப்பேன், அவனுக்கு சாப்பாடு போடறதுதான் என் வேலை, அவன் திருடனோ, நல்லவனோ அது எனக்கு தேவையில்லை, பெரியவர் என்னைச் செய்ய சொன்ன வேலையும் இதுதான் ”

சந்திரானந்தாசாமி பிரியமாக முதுகில் தட்டினார், பிறகு ஏதும் சொல்லாமல் ஆசிரமம் பின்பு தெரியும் மலைகளை பார்த்தபடி இருந்தார், கிளம்பலாம் என எண்ணினேன், எழும்போது அவர் பேசத் தொடங்கினார் .

“நானும் அப்படி பிரிச்சுப் பாக்கறவன் கிடையாது, உண்மைல எவன் எப்ப திருடினான் னுகூட தெரியும், திருடற சமயத்தில் அதை பார்த்தும் பார்க்காத மாதிரியெல்லாம் இருந்திருக்கேன். மக்கள் இயல்புங்கிறதை உண்மைல எவ்வளவு யோசிச்சாலும் வகுத்து சொல்லிட முடியாது. அப்பறம் எல்லா மக்களும் ஆன்மிகம் நோக்கி திரும்பணும்னும் , நல்லவர்கள் ஆகணும்னெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் முட்டாள்தனம் , தேடல் உள்ளவனுக்கு ஒரு இடம் வேணும், அதுக்காக இந்த ஆசிரமம் எப்போதும் இருக்கணும்னு நினைக்கிறேன் . இது எப்போதும் இருக்கணும்னுனா இது பாதுக்காக்கப்படனும் ,அதை நான் செய்ய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்”

“சாமி , பெரியவரை கவனிச்ச வரை அவருக்கு பேதமில்ல, இந்த ஆசிரமம் மக்கள்கிட்ட இருந்து தள்ளி இருக்கக்கூடாது னு நினைக்கிறார், இந்த பாதுகாப்பு நெருங்க விடாம தள்ளி வைக்குதுன்னு தோணுது ”

“இப்படி விலகி இருக்கறது நல்லது, அது மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும்,” என்று சொல்லிச் சிரித்தார், மேலும், “உண்மையான ஆர்வம், மதிப்பு வரும்போதுதான் உருவாகும்,”  என்றார் . ராபட் பிராஸ்ட் எழுதின ஒரு கவிதை இருக்கு , “வேலியை விரும்பாத ஒன்று”னு ஆரம்பிக்கும், எனக்கும் அந்தக் கவிதையோட மனநிலை பிடிக்கும், ஆனா அயலனுக்கும் நம்மைப் போல அபகரிக்க விரும்பாத மனநிலை இருக்கற போதுதான் இந்த வேலியே வேண்டாங்கற மனநிலை சாத்தியம், அப்படியில்லாம நாம மட்டும் அந்த மனநிலையில் இருந்தா இழப்பு நமக்குத்தான் ”

“இது எதிர்மனநிலைனு தோணுது,” சொல்லும்போது என்னை மீறி என்னில் புன்னகை வெளிப்பட்டது.

“இல்ல , இதுதான் யதார்த்தம், மனுஷன் ஒன்னுல இருந்து அடுத்ததுக்கு தாவ பார்க்கற குணம் உள்ளவன், இன்னும் இன்னும்கிறதுதான் அவன் இயல்பான குணம், அதுதான் அவனை நகர்த்தற விசை, அவன் அப்படிதான் இருப்பான், தற்காலிகமா வேணும்னா நீதி நேர்மைனு சொல்லி மட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான் முடியும் ”

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிரார்த்தனை கட்டடத்தில் சிறிய பரபரப்பு தோன்றியது, இருவரும் பேசுவதை அப்படியே விட்டு கூடம் நோக்கி நடந்தோம். பெரியவர் உடன் இருந்து சேவகம் செய்யும் அந்த இளம் சந்நியாசி எங்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தவன், ” பெரியவர் வெளிய பயணம் போக விரும்பறார், உங்ககிட்ட ஏற்பாடு செய்ய சொன்னார்”

சந்திரானந்தாசாமி, “எங்க, பக்கத்துலயா?” என்றார்.

“இல்ல வடக்கே, திரும்ப வருவாருனு தோணல, உங்ககிட்ட இதைப் பத்தி பேசதான் உங்களை அழைத்து வர சொன்னாருனு தோணுது ”

சந்திரானந்தா திரும்பி வேலியைப் பார்த்தார் , எனக்கு இனி இவர்தான் இந்த ஆசிரமத்தின் பெரியவர் என்று தோன்றியது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

பொதுபுத்தி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

வாசலில் நுழையும்போதே அந்தப் பெண் இன்னும் போகாமல் உள்ளே இருப்பது தெரிந்தது, தயங்கி வெளியேவே நின்று விட்டேன். உள்ளே ராஜன் அண்ணனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் ஆசுவாசம் அளித்தது, அவர் சூழலை சமாளிப்பார் என்பது கொஞ்சம் தைரியம் அளித்தது, இருந்தாலும் உள்ளே சென்று அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க தைரியமில்லை, வெளியேவே பைக்கின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். உள்ளிருந்து டீ வாங்க வெளியே வந்த சாம், “ஏனே இங்கயே நின்னுட்டீங்க, எல்லாரும் உள்ள இருக்காங்க போங்க,” என்றான், சாமின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே ஜன்னல் பக்கம் இருந்த அங்குராஜ் அண்ணா திரும்பி பார்த்தார், ” உள்ள வாடா ” என்றார், தப்பிக்க வழியின்றி உள்ளே சென்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன், அந்தப் பெண்ணைப் பார்க்க சங்கடப்பட்டு தலை தூக்காமல் அமர்ந்திருந்தேன்.

சங்க அலுவலகம் வரத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, 18 வயதில் அங்குராஜ் அண்ணா வழியாகத்தான் உள்ளே வந்தேன், வந்த புதிதில் இங்கேயே பலியாக கிடப்பேன், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வேன், சங்கம் என் பலத்தை பன்மடங்கு பெருக்கியதாக எண்ணினேன், எந்த அநீதியையும் சங்கம் வழியாக எதிர்த்து வெல்ல முடியும் என்று நம்பினேன், ஆனால் நாளாக நாளாக யதார்த்தம் புரிந்தது, பிறகு ஆர்வம் குறைய ஆரம்பித்தது, எனினும் பழக்கம் காரணமாக தினமும் காலையில் இங்கு வந்துவிட்டுத்தான் பிறகு எங்கும் செல்வேன், வேலைகள் ஏதும் இல்லாத சமயங்களில் இங்குதான் இருப்பேன், இன்று இந்த ஊரில் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு பரிச்சயமான ஒருவர் இருப்பதற்கு காரணம் இந்த சங்கம்தான். அனைத்து நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் வாங்கிவிடுவார்கள், இந்த இதழ் வாசிப்புகள் வழியாகத்தான் எனக்கு புத்தக வாசிப்பு பழக்கம் உருவானது.

சங்கத்தில் சேர்ந்த காலங்களில் எல்லாவற்றிற்க்கும் என் கருத்துக்களை சொல்வேன், நல்ல கருத்துக்கள் என பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கும், ஆனால் முடிவுகள் என வரும்பொழுது அது மேலிருந்து வரும் முடிவுகளாகவோ அல்லது அதிகாரம் கொண்டவர்களின் செயலாகவோ இருப்பதை உணர்ந்த பிறகு கருத்துக்கள் வைத்து வாதிடுவது தன்னாலேயே குறைந்தது. கருத்துக்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பதுதான் நான் இங்கு பயின்ற முதற் பாடம். பெரும்பாலும் சாதாரண வேலைகளை பெரிய பணி என்று சொல்லி ஒப்படைப்பார்கள், சாதாரண வேலைகள் என்பது அலைச்சல் வேலைகள் மற்றும் எடுபிடி பணிகள், ஆனால் எனக்கு இந்த வகை வேலைகளில் இயல்பாகவே ஆர்வம் இருந்ததனால் இவற்றினையெல்லாம் சந்தோசமாகவே செய்வேன், இந்த வேலைகள் வழியாக எல்லோருடனும் பழகவும் அவர்களை அறியவும் முடிந்தது, இந்தப் பழக்கம் வழியாகத்தான் ராஜன் அண்ணா எனக்கு வழிகாட்டியாக, ஆசிரியனாக கிடைத்தார்.

பல நேரம் என் குரல் எடுபடாமல் போகும்பொழுது ராஜன் அண்ணாதான் தேற்றுவார், “எதுவும் ஒரே நாளில் மாறிடாது, உனக்கு மாற்றம் கொண்டு வர விருப்பம்னா அதை, அதன் பலன்களை மற்றவர்களுக்கு புரிய வைக்கணும், விழிப்பு மட்டும்தான் மாற்றத்தை உருவாக்கும்,” என்பார். இப்பொழுதெல்லாம் எதற்கும் வருத்தப்படுவதும் எதையும் பொருட்படுத்துவதும் இல்லை, மாறாக கொஞ்சம் உற்சாகம் கொண்டு இயங்குகிறேன், காரணம் இங்கு எனக்கு ஜுனியர்கள் வந்து விட்டதுதான்! அந்த வகையில் சாம் அப்படியே என் நகல்.

நேற்று இரவு சாம் அழைத்து ஒரு பெண் வந்து அழுது கொண்டு நின்றிருக்கிறாள் என்று சொன்னவுடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு விரைவாக வந்து பார்த்தேன். மிக ஒல்லியாக இருந்தாள், நீளமான முகம், கழுத்தில் தங்கநிறம் மங்கிய பித்தளை செயின் சுற்றிலும் தேமல் இருந்தது, முடி எல்லாம் எண்ணை படாமல் செம்பட்டை நிறம் கொள்ளத் துவங்கியிருந்தது, மலிவான சேலை உடுத்தியிருந்தாள், பிளாஸ்டிக் செருப்பு அணிந்திருந்தாள், அருகில் சிறு பெண் ஒருவள் நின்றிருந்தாள், அப்படியே இந்தப் பெண்ணின் சிறு வடிவம், நிறம் மங்கிய, அழுக்கானதைப் போல தெரிந்த கவுன் அணிந்திருந்தாள், காலில் செருப்பு இல்லாமல் இருந்தது. அருகில் சாம் மட்டும் நின்றிருந்தான், அவன் முகத்தில் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது தெரியாத குழப்பத்தை காண முடிந்தது. என்னைப் பார்த்ததும் “அக்கா, பயப்படாதீங்க, வந்துட்டாங்க,” என்றான். அவள் திரும்பி என்னைப் பார்த்து அழுதபடி கை கூப்பினாள்.

அவளிடம் காணப்பட்ட பய உணர்வு எனக்கு மனதிற்குள் நடுக்கத்தை அளித்தது. “அழாதீங்கம்மா, என்னனு சொல்லுங்க,” என்றேன், திரும்பி சாமை நோக்கி, “ராஜன் அண்ணாக்கு தகவல் சொல்லு,” என்று பணித்தேன், அவன், “கூப்பிட்டேன், உங்களைக் கூப்பிட்டு பேசச் சொன்னாரு, ” என்றான், மனதிற்குள் திக்கென்று ஆகி விட்டது, நான்தான் இனி பொறுப்பு, இந்தச் சிக்கலை என் தலையில் கட்டி விட்டார்கள், காலையில் சாவகாசமாக வந்து என்னிடம் விசாரிப்பார்கள் என்பதை எண்ணும்போதே எரிச்சலாக வந்தது.

“என்னன்னு சொல்லுமா,” என்றேன். அவள், “வீட்டைப் பிடுங்கிட்டாங்க, எங்கள வீட்டுல இருந்து வெளிய போகச் சொல்லிட்டாங்க,” என்றாள், அவளால் சீராகப் பேச முடியவில்லை, பேசப்பேச அவளின் அழுகையும் பயமும் அதிகமாகியது. “வீட்டுக்காரர் எங்கே?” என்றேன், “அவரு பயந்து ஓடிப் போயிட்டாரு,” என்றாள், எனக்கு அவன் மீது கோபமாக வந்தது.

“அவங்ககிட்ட கடன் வாங்கியிருந்தோம் , அவங்க காசுக்கு பதிலா வீட்டை மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க”

“வீட்டுக்காரர் என்ன தொழில்ங்க?”

“சலூன் வச்சுருந்தோம், அப்பறம் இவரு சரியா நடத்தாம அது போயிடுச்சு”

வலுவில்லாத சாதியினர் இந்த பெண் என்பது உறைத்தது, வீடு திரும்ப கிடைப்பது கடினம் என நினைத்துக் கொண்டேன்.

ஏதோ தோன்றி அவளிடம், “வீட்டுக்காரரு குடிப்பாரா?” என்றேன், அவள் தயங்கி, “குடிப்பாருங்க,” என்றாள், பின் அவளாகவே, “அதனாலதாங்க தொழில் போயி கடனாளி ஆனோம்,” என்றாள்.

“வீட்டுக்காரர் எங்க இருப்பார்னு ஏதாவது தெரியுமா?”

“தெரியலீங்க, அவர இவங்க அடிச்சாங்க, அடிச்சுதான் எழுதி வாங்கினாங்க, இரண்டு நாளா அழுதுட்டே இருந்தாரு, இனி என்ன பண்ணப் போறேன்னு தெரியலையேன்னு சொல்லி என்கிட்ட அழுதுட்டே இருந்தாரு”

“எப்ப போனாரு?”

“இன்னைக்கு காலி பண்ணச் சொல்லி கெடு கொடுத்திருந்தாங்க, நேத்து நைட்டு தூங்காம அழுதுட்டு இருந்தவர்ட்ட, “நாம காலுல விழுவோம் கேட்பாங்க”ன்னு சொன்னேன், அவரு, “இல்லைடி” னு சொல்லி அழுத்துட்டுருந்தாரு, “விடிஞ்சு ஏதாவது செய்வோம்ங்க”னு சொல்லி தூங்க வச்சேன், காலைல பாயில அவரு இல்ல, சுத்தி எங்க தேடியும் காணோம்”

“பணம் கொடுத்தவங்க யாரு?”

“அவங்கள முன்னாடி பழக்கம் இல்லைங்க, அவங்க பத்து ஆளுகளுக்கு மேல கூட்டிட்டு வந்து, “வீட்டை எங்களுக்கு எழுதி கொடுத்துட்டாரு, கிளம்பு” னு சொன்னாங்க, அவங்களைப் பார்க்கவே பயமாயிருந்தது, வெளிய வந்துட்டேன்”

“ஸ்டேஷன் போனீங்களா”

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை, திரும்பவும் கேட்டபோது, “பயமா இருக்குங்க” என்றாள்.

சாம் இடையில் புகுந்து, “ஷீலா அக்காதான் இங்க அனுப்பி விட்டுருக்காங்க, அவங்ககூட வேலை செய்யறவங்களாம் இவங்க”

அந்தப் பெண்ணை நோக்கி, “உங்களுக்கு இங்க சொந்தக்காரங்க இருக்காங்களா?” என்றேன்.

“இல்லைங்க”

சாமை நோக்கி, “ஷீலா அக்காட்ட கூப்பிட்டு அவங்க வீட்டுல தங்க வை,” என்று சொல்லி பெண்ணை நோக்கி, “கவலைப்படாதமா, வீட்டுக்காரரை கண்டுபிடிச்சிடலாம், எல்லாம் சரியாகிடும், கவலப்படாத,” என்றேன்.

சாமை அழைத்து 500 கொடுத்து, “சாப்பாடு இவங்களுக்கு வாங்கிக் கொடு, நாளைக்கும் இவங்ககூடயே இரு,” என்றேன்.

பிறகு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், நெடுநேரம் தூங்க முடியாமல் தவிப்பாக இருந்தது, அந்தப் பெண்கூட இருந்த சிறுமியின் முகம் கண்ணுக்குளேயே நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடியும் நேரத்தில்தான் தூக்கம் வந்தது.

 

“ஏன்டா லேட்டு” என்று ராஜன் அண்ணா கேட்டபோது முகம் தூக்கி அவரைப் பார்த்தேன், அவர் முகத்தில் துக்கமோ சந்தோஷமோ எதுவுமே வெளிப்படாது, அவர் சிரித்தே இத்தனை வருடங்களில் பார்த்ததில்லை, அதிசயமாக முகம் எப்பவாவது புன்னகைக்கும். ராஜன் அண்ணா முழுநேர சங்கப் பணியாளராக இருக்கிறார், காலையில் பத்து மணிக்கு அலுவலகம் வருவார், மதியம் 3 மணிக்குச் செல்பவர் திரும்ப மறுநாள் காலைதான் வருவார், மதியத்திற்கு மேல் லைப்ரேரியில் அல்லது அவர் அறையில் அல்லது ஸ்டார் பேக்கரி வாசலில் இருக்கும் நீள் மர பெஞ்சில் இருப்பார். மிக அவசரம் என்று இருந்தால் மட்டுமே வருவார், வெள்ளை வேட்டி சட்டை எப்போதும் சுத்தமானதாக இருக்கும், மர விளிம்பு கொண்ட கண் கண்ணாடி அவரை பேராசிரியர் போல எண்ண வைக்கும், நல்ல உறுதியான பழைய சைக்கிள், அதில்தான் எங்கும் போவார், நான் ஸ்கூட்டி அல்லது மொபெட் வாங்கச் சொல்லி பலமுறை கெஞ்சியிருக்கிறேன், அவர் பொருட்படுத்தியதே இல்லை.

அந்த பெண் கொடுத்த நிலத்தின் நகல் பத்திரத்தை பக்கங்கள் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தார். பிறகு கண் கண்ணாடியை மேசையின் மீது வைத்து அந்த பெண்ணை பார்த்தார். “குழந்தை பேர் என்னமா?” என்றார்.

“கிருத்திகாங்க” என்றாள், அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு இருந்ததை இப்போதுதான் கவனித்தேன், இரவு அவளைப் பார்த்தபோது தற்கொலை செய்து விடுவாளோ என பயந்தேன், இப்போது அவளில் இருந்த சிறு தெளிவு ஆச்சரியம் தந்தது.

ராஜன் அண்ணா நிதானமாக, “உன் சொந்த ஊர் எது, அம்மா அப்பா இருக்காங்களா?”

“துறையூர்ங்க, அப்பா இல்ல, அம்மாவும் தம்பியும் மட்டும்தான், அவங்ககிட்ட இதை சொன்னா பயந்திடுவாங்க”

“வேற யாராவது சொந்தத்துல பெரியவங்க இருக்காங்களா?”

“இருக்காங்க”

“சரி ஒன்னு செய்யு, ஊருக்கு கிளம்பு, இப்ப கிளம்பினா சாயிங்காலத்துக்குள்ள போயிடலாம், இரண்டு நாள் கழிச்சு வீட்டுல சொல்லி பெரியவங்கள கூட்டிட்டு இங்க வா, பேசிக்கலாம்”

“வீட்டுக்காரர்…”

“அவரு எங்கயும் போயிருக்க மாட்டாரு, இங்க வந்தார்னா நாங்க உனக்கு தகவல் சொல்றோம்”

அவள் மேலும் ஒன்றும் சொல்லவில்லை, ராஜன் அண்ணா சட்டையின் பைக்குள் இருந்து நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார், “செலவுக்கு வச்சுக்கம்மா”.

அவள் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள், ராஜன் அண்ணா ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்யாதவர் என்பது ஞாபகம் வந்தது.

ராஜன் அண்ணா சாமை அழைத்து பஸ் ஏற்றி விட்டு வருமாறு பணித்தார்.

அறையில் சிறிது நேரம் யாரும் பேசவில்லை.

மெதுவாக அங்குராஜ் அண்ணா அசைந்தபோதே அவர் பேசப் போகிறார் என்பது தெரிந்தது, “இனி வீட்டை இந்த பொண்ணு மறந்திட வேண்டியதுதான்,” என்றார், நான் ஏற்கனவே அதை உணர்ந்திருந்தாலும் இவர் சொல்லும்போது இவர் மேல் வெறுப்பு வந்தது.

“ஆனா வீட்டை பிடுங்கவுள்ள செஞ்சிருக்காங்க, நாம போயி பேசி இந்த பொண்ணுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்கணும்,” என்றேன்.

“நடக்கற காரியம் சொல்லுடா,” என்றார்.

“இந்த ஏமாற்று வேலையை கண்டுக்காம இருக்க சொல்றீங்களா?” என்றேன்.

அவர் சிரித்து, “சரி, நீ போய் கேளு,” என்றார்.

நான் மேற்கொண்டு அவரைப் பார்க்காமல் திரும்பி ராஜன் அண்ணாவை நோக்கினேன், அவர் மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

“அண்ணா, நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீங்களா?” என்றேன், அவரைப் பார்த்து, ஏறிட்டு என்னைப் பார்த்தவர் ஏதும் சொல்லாமல் திரும்பவும் மேசையை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்தார். எனக்கு உள்ளுக்குள் விரக்தி தோன்றி பிறகு அதை அப்படியே விட்டு கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தேன், அங்குராஜ் அண்ணா, “அப்ப நான் பிறகு வரேன்,” என்று சொல்லிக் கிளம்பினார்.

ராஜன் அண்ணாவும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். அவர் மேஜையை ஒழுங்குபடுத்தும் வேலையை எல்லாம் முடித்து, இருக்கையின் பின்பக்கம் சாய்ந்து உடலைத் தளர்வாக்கி பின் நிதானமாக பேச தொடங்கினார். “டே வெறும் நியாயத்தை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது, நாம காந்தி இல்ல, காந்திக்கு இருக்கற ஆன்மபலம், காந்தியவாதிகள்கிட்ட இருக்கற ஆன்மபலம் என்பதெல்லாம் இயல்புலயே ஒரு சிலர்க்கு இருக்கக்கூடிய விஷயங்கள், நீ நானெல்லாம் சாதாரண மனுஷங்க, சாதாரண மனுஷன் என்ன பண்ண முடியுமோ அதைத்தான் நம்மால பண்ண முடியும்”.

நான் பதில் ஏதும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன், அவரில் இருந்த நிதானம் எரிச்சல் கொடுத்தது.

“அந்த நிலத்தை பிடுங்கனவனுகளுக்கு போலீஸ் உட்பட எல்லா இடத்திலும் ஆள் பலம் இருக்கும், என்ன மோதினாலும் கஷ்டம், எழுதி வாங்கிட்டானுக, சட்டம் அவங்க பக்கம்தான் பேசும்”

” ஆனா நியாயம் இந்த பொண்ணுகிட்ட இல்ல இருக்கு”

“வெறும் நியாயத்தை வச்சுட்டு என்ன பண்ண, அதை நிலைநிறுத்த பலம் வேணும், இவ ஊருல இருந்து ஆட்களை கூட்டிட்டு வந்தா நாம இவளுக்கு உதவலாம், அதும் நேரடியா இல்ல “.

நான் பதில் ஏதும் சொல்லாமல் கவனிப்பது போல பாவனை செய்தேன், அவர் பேசும்போது இடையில் பிறர் பேசினால் மேற்கொண்டு பேசுவதை நிறுத்தி அமைதியாகி விடுவார்.

“நாம இதைச் சார்ந்து ஏதாவது பண்ணனும்னு நினைச்சா பொதுபுத்தியில இதைப் பற்றின விழிப்பை உருவாக்க முயற்சி பண்ணலாம், அதுதான் ஏதாவது பலனை கொடுக்கும்”

நான் என்ன என்பது போல முகத்தை வைத்து கொண்டேன்.

“பொதுவா நிலம் வைத்திருந்து இரண்டு மூணு தலைமுறை தாண்டினவங்களுக்கு இந்த புத்தி இருக்காது, நிலம் இல்லாதவன், நிலம் வாங்க நினைக்கறவன், புதுசா சம்பாத்தியம் பெறவன் எல்லாத்துக்கும் இந்த அபகரிப்பு புத்தி இருக்கும், இதைச் சரி செய்யறது ரொம்ப கஷ்டம், ஒன்னு மட்டும்தான் பண்ண முடியும், சமூக ஒழுக்க விதியில் இதை தீவிரமா வலியுறுத்தலாம். சமூகத்துல பொது ஒழுக்கம் என்பதே கண்காணிப்புக்கு பயந்து உருவாகிற ஒன்னுதான், கண்காணிப்பு மட்டும்தான் இவனுகள கட்டுப்பாட்டுல வைக்கும். இப்படி திருடறவங்களை சமூகத்தில் விலக்குவது மாதிரியான மனநிலை உருவாக்கணும், அதாவது நேர்மை மனநிலையை மதிப்பானதாவும், ஏமாற்றுத்தனத்தை சில்லறத்தனமாவும் பொதுபுத்தில உருவாக்கறது, இது மாதிரியான விஷயங்களதான் நம்ம சங்கம் செயல்பாடுகளா முன்னெடுக்கணும் .”

யதார்த்தம் பற்றிச் சொல்ல வாயெடுத்து பின் எதிர்மறையாக சொல்லவேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன். அவர் தனக்குள்ளேயே பேசுவதைப் போல தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “இதெல்லாம்விட ஒன்னு இருக்கு, ஒரு கூட்டம்கிறது ஓரளவுக்கு மேல இருக்கக் கூடாது, அப்படி அதிகமாகிடுச்சுனா ஆதிக்கம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, ஓரளவுக்கு மேல எந்த கூட்டமும் உடையனும், சமூகத்தோட மிகப் பெரிய எதிரியே இந்த கும்பல் மனோபாவம்தான், கும்பலா தன்னை உணர்ந்தாங்கன்னா பிறகு அவனுகளுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் ஆக்கிடுவானுக, அந்த மனநிலை என்பது பிறகு அவங்ககிட்ட இருந்து மறையவே மறையாது”

சரி என்பதைப் போல ஆமோதித்தேன், பிறகு ஏதோ தோன்றி, “ஒற்றுமையே தப்புனு சொல்ல வரீங்களா?” என்றேன்.

“தான் பிறன்னு பிரிக்காத எந்த ஒற்றுமையும் நல்லதுதான், ஆனா நடைமுறைல மனுசங்க பிறப்பு சார்ந்த ஒற்றுமைக்குள்ளதான் போவாங்க, நாம அதை உடைக்கணும்,” என்றார்.

“இது ஆகற காரியமா?”

“எதுவும் கிளை பிரிந்து தனித்தனியா பிரிவுகளாக ஆகும், அதுதான் இயல்பு, அதை தடுக்கற விஷயங்களை உடைத்தால் போதும்”

பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது. பிறகு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தோம், இடையிடையே இப்படி நடந்து விடுவதுண்டு, பேச்சின் இடையே உருவாகும் மவுனம் அப்படியே விரிசலாகி உரையாடல் அப்படியே நின்றுவிடுவது என. அவர் பேசினதையே மறந்து தனக்குள் மூழ்கி விட்டிருந்தார். நான் வெறுமனே அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன், நாளாக நாளாக அழகாகிக் கொண்டே வருகிறார் என்று தோன்றியது, முடி நரைகூட லட்சணமாக, பொருந்தி அமைவதைப் போல இருந்தது.

அவர் இப்படி அமைதியாகி சிந்தனையில் மூழ்கினார் என்றால் அருகிலிருப்பவர்களைக்கூட மறந்து விடுவார். தொந்தரவு தர வேண்டாம் என்று நினைத்து வெளியே எழுந்து செல்ல நினைத்தேன், டீ குடிக்க வேண்டும் என தோன்றியது. அவரிடம் ஏதும் சொல்லாமல் வெளியே வந்தேன்.

அலுவலகத்தின் நேர் எதிரில்தான் பேக்கரி, இது எங்களுக்கு இரண்டாவது அலுவலகம் போல, அங்கு இல்லையெனில் இங்கு இருப்போம். பேக்கிரியின் முன் திண்ணையில் அங்குராஜ் அண்ணா பேப்பர் படித்து கொண்டிருந்தார். “நீங்க இன்னும் கிளம்பலையா?” என்றேன், அவர் என்னைப் பார்த்தவுடன் பேப்பரை மடித்து கீழே வைத்தார், அவர் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். அவர் கிண்டலாகச் சிரித்தபடி, “என்ன சொல்றார் உங்க குரு?” என்றார்.

“உங்க தலைமைல கொடி பிடிச்சு ஒரு போராட்டம் நடத்த சொன்னாப்புல!” என்றேன் சிரித்து.

சிரித்தவர், “பரவாலயே, நான் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுவாருனுல்ல நினைச்சேன்!”

நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன் .

” டே , நான் இந்த திருப்பூர் வந்து 20 வருஷம் மேல ஆயிடுச்சு, இது போல பல சம்பவங்களைப் பார்த்துட்டேன், பொண்ணுக கொஞ்ச நாள்ல தெளிவாயிடுங்க, அடுத்தது என்னனு போயிடும்ங்க, ஆனா ஆண்கள் மரை களண்டவனுக போல ஆயிடுவானுக, குடி ஒன்னுதான் மீட்பு, அதுவும் குடிக்கற சமயத்துலதான்.”

“இப்படி ஏமாத்தறவனுகளுக்கு ஒன்னும் ஆகறது இல்லையா?”

அவர் சிரித்து, “அப்படி ஆனதே நான் பார்த்ததில்லை, நல்லாத்தான் இருக்கானுங்க”.

இதை பற்றி பேசுவதை விட்டு விடலாம் என எண்ணி ” டீ சொல்லவா?” எனக் கேட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தேன்.

அவர் திடீரென ஞாபகம் வந்ததைப் போல, “டே, ராஜன் அண்ணா அந்தப் பொண்ணுக்கு ஏன் அவ்வளவு பணம் கொடுத்தாரு தெரியுமா?” என்றார், அவர் முகத்தில் சுவாரஸ்யம் சொல்லப் போகும் ஆர்வம் இருந்தது, அதைக் கேட்ட ஒருசில கணத்திற்குள் என் மனம் சொடுக்கி என்னென்னவெல்லாமோ யோசிக்கத் துவங்கி விட்டது, பிறகு மனமே தீர்வு கண்டு, ‘ அவர் நல்லவர்’ என்று சொல்லியது. அங்குராஜ் அண்ணனிடம், “ஏன்?” என்று கேட்டேன்.

“ராஜன் அண்ணா சொத்தையும் இப்படித்தான் பிடுங்கனானுக, பிறகுதான் ஊரை விட்டு ஓடி இங்க வந்து சேர்ந்தாரு, வந்து இருபது வருசமாச்சு, இப்ப வரை அவரு ஊருக்கு போனதில்ல,” என்றார். எனக்கு அப்போது அந்தப் பெண்ணும் கூட இருந்த சிறுமியும் மனதில் வந்து சென்றார்கள்.

நிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

முதல் பார்வையிலேயே என்னை வெளியாள் எனக் கண்டுகொண்டு விட்டது. கண நேரத்தில் சுறுசுறுப்பாகி எழுந்து பாயும் தோரணையில் நின்று கத்த ஆரம்பித்துவிட்டது, பல முறை இவைகளிடம் சிக்கி கடிபட்டு தெறித்து ஓடி கற்றுக்கொண்ட ஞானமான அப்படியே அந்த இடத்திலேயே நகராது சிலையாகி நிற்கும் யுக்தியை கடைபிடித்தேன், ஆனாலும் இவைகளைக் கண்டால் உள்ளுக்குள் உருவாகும் நடுக்கம் எவ்வளவு அனுபவம் பெற்றாலும் மறைய மாட்டேன் என்கிறது. விடாமல் கத்திக் கொண்டிருந்தாலும் அது நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. நகராததைக் கண்டு இது கடிக்கின்ற ரகமல்ல என்று என் அனுபவ மனம் உணர்ந்து கொண்டதும் தன்னியல்பாகவே உடலிலிருந்த படபடப்பு குறைந்து நிம்மதி உண்டானது, சிறிது நேரத்திலேயே அதுவும் தன்னுடைய வேடத்தை நான் கண்டு கொண்டு விட்டதை உணர்ந்து அதை அப்படியே உதிர்த்து அமைதியானது, பிறகு ஒன்றும் நடக்காத பாவனையில் பழையபடி முன்னங்கால்களை நீட்டி அமர்ந்து கொண்டது, ஆனாலும் பார்வையை அது என்னிலிருந்து விலக்கவில்லை.

நாய் என்ன ரகமென்று சரியாகக் கண்டறிய முடியவில்லை, காதுகள் மேல்தூக்கி விடைத்திருந்தன, பளபளப்பான கரிய நிறம், காக்கிநிற கழுத்துப்பட்டை இறுகி நல்ல கொழுகொழுவென இருந்தது, இந்த தெருவின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம், சுகவாசி என்று எண்ணி கொண்டேன். பிறகு நாயை அப்படியே விட்டுவிட்டு தெருவில் கவனம் சென்றது, முதல் பார்வையிலேயே வசதியானவர்கள் குடியிருக்கும் சூழலுக்குரிய அழுக்கில்லாத சுத்தமானச் சூழலை உணர முடிந்தது, நல்ல பழுதில்லாத 20அடி தார்ச்சாலை, அதிகாலை பெய்திருந்த மழை காரணமாக தன் சுயநிறமான ஜொலிக்கும் அடர்கருப்பினை திரும்பப் பெற்று புதிது போல காட்சியளித்தது. வீடுகள் அளவான சுற்றுச்சுவருடன் கிட்டத்தட்ட ஒருபோலவே காட்சி அளித்தன. வீடுகளின் முன்பு பாதுகாப்புத் தடுப்பு கொண்ட பூக்களைச் சொரியும் அலங்காரச் செடிகளும், குட்டையான சிறு பூமரங்களும் இருந்தன, மேலும் இவையெல்லாம் அசல் வசதியானவர்களின் இயல்பிற்குரிய சுற்றுச்சுவர்க்கு வெளியே சாலையினை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டவைகளாக இருந்தன.

பாதையில் மனித நடமாட்டமே இல்லை, வீடுகளின் முகப்புகளிலும்கூட, அதற்கு பதிலாக இங்கிருக்கும் மனிதர்களின் இருப்பை, தோரணையை, மன இயல்பை மாறா வடிவம் கொண்ட வீடுகள் பறைசாற்றிக் கொண்டிருந்தன, வாய் மூடி,முகம் திருப்பி, முதுகு காட்டி என. இருப்பினும் ஒவ்வொன்றும் தான் அமைதியான இயல்பு கொண்டதைச் சொல்லியபடி இருந்தன. வீடுகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க இந்த இயல்புள்ளேயேகூட சிறுசிறு வித்தியாசங்கள் தெரிந்தன, வெளித் தோற்றத்தின் நிறங்கள் வெண்மையின் வெவ்வேறு கலவைகளில் இருந்தன, இந்த வீடுகளை அமைதியானவையாக தோன்றச் செய்வதே இந்த வெண்மை நிறம்தான் என்று தோன்றியது.

திருப்பூரில் இப்படி அமைதியான பகுதிகள் மிக அபூர்வம், 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகருக்கு வந்த புதிதில் இங்கிருந்த பரபரப்புச் சூழல் கடுமையான மனவிலக்கத்தைக் கொடுத்தது, திடீர் பணவரவால் வீங்கிய நகர் இது, குண்டும் குழியுமான நெரிசலான சாலையில் ஆடி கார் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் பரபரத்துக் கொண்டிருக்கும், டீக்கடை, டிபன் கடை, அதைவிட பிராந்திக்கடை, எப்போதும் திருவிழா போல கூட்டமிருக்கும், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கும் அவசரத்திலேயே எல்லோரும் ஓடி கொண்டிருப்பார்கள், துரித ஸ்கலிதம் போல. ஆனால் சமீப காலங்களில் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, பணவரவு குறைகிறதா அல்லது அனுபவ முதிர்ச்சியா என்றறிய முடியவில்லை, அல்லது இரண்டும் காரணமாக இருக்கலாம்.

பரபரப்பு இல்லாத இந்தச் சாலை என் சொந்த ஊரை ஞாபகப்படுத்தியது. அப்படியே ஊர் ஞாபகங்களில் மனம் அலைந்தது. அமைதியான குளத்தில் சிறுமீன் மேல் வந்து எட்டிப் பார்ப்பதைப் போல எதிரில் ஒரு கேட் திறந்து அதில் நடுத்தர வயது பெண்ணுருவம் என்னைப் பார்த்து பின் பார்க்காததை போல பாவித்து கேட்டை சாத்தி மறைந்தது கற்பனையில் உலவிக் கொண்டிருந்த என் மனதை கலைத்து கவனத்தை மீண்டும் சாலையின் மீது கொண்டுவந்து நிறுத்தியது, மீண்டும் வீடுகளின் அமைப்பை பார்த்து கொண்டிருந்தேன், சட்டெனத் தோன்றியது இங்கிருக்கும் வீடுகள், அவற்றின் சுவர்கள், கதவுகள், படிகள் எல்லாமே சதுரம் மற்றும் செவ்வகங்களின் வெவ்வேறு அளவுகள் என, அதுதான் எல்லாவற்றையும் ஒருபோல காண்பிக்கும் சீர்மையை தருகின்றது என்று, ஓட்டு வீடுகள் இல்லாமல் ஆனதும் முக்கோணங்களும், சாய்வுக் கோணங்களும் வீடுகளின் புற அமைப்பிற்கு தேவையில்லாமல் ஆகிவிட்டன. அதுவும் இந்தத் தெருவின் கட்டிட அமைப்புகளில் முகப்பு அலங்காரங்கள் இல்லாதது இவற்றிற்கு ஒரு மேட்டிமைத் தன்மையை அளித்தது, வெண்ணிறத் துணிகளை போல. நின்றிருந்த சில மணி நேரங்களிலேயே இடம் மிக பிடித்ததாகி விட்டது, இங்கு வீடு கிடைத்தால் கோதை மகிழ்ந்து பரவசமடைவாள் என்பதை யோசிக்கவே குதூகலமாக இருந்தது.

நேற்றிரவு தமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன், கோதை வாசலில் சுஸ்மியை மடியில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள், பைக்கை நிறுத்தியபடி, “ஏன் வெளியவே உட்கார்ந்திருக்கற, பனி பெய்து,உள்ள போக வேண்டியதுதான,” என்று சொல்லியபடி அவள் அருகில் சென்றபோதுதான் அவள் முகம் அழுது வீங்கியிருந்ததைக் கண்டேன்.

“என்னாச்சு,” என்று கேட்கத் துவங்கும்போதே பதில் சொல்லாமல் எழுந்து தூக்கத்திலிருந்த குழந்தையை மார்பில் போட்டு உள்ளே சென்றாள், குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு நாளைக்கும் இந்த வீட்டில் இருந்தேன்னா நான் செத்துடுவேன் என்றாள், அவள் முகத்தைப் பார்க்கத் தயங்கி வேறு பக்கம் திருப்பி, “சரிம்மா, தூங்கு போ,” என்று சொல்லியபடி என்னிலிருந்த பதட்டத்தை மறைக்க ஏதாவது செய்ய வேண்டி உடைகள் மாற்றத் துவங்கினேன், அவள் குழந்தை மீது கைவைத்தபடி ஒரு பக்கமாக படுத்துக் கொண்டாள், கட்டப்படாமல் விரிந்திருந்த முடி முகத்தைப் பாதி மறைத்திருந்தது, இடைவெளியில் கண்கள் கலங்கி நீர் பெருகுவதைக் காண முடிந்தது, ஒன்றும் சொல்லாமல் அருகில் அவள் நோக்கித் திரும்பாமல் படுத்து கொண்டேன், நீண்ட நேரம் விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

ருமல் வந்த காசநோயாளியின் சத்தத்துடன் ஒரு புராதன மொபெட் மெதுவான வேகத்தில் என்னை நோக்கி வருவது தெரிந்தது, வீடு ப்ரோக்கர் லிங்கமூர்த்தியாகதான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன், இதுவரை நேரில் பார்த்ததில்லை, கொஞ்சம் பழுப்படைந்த வெண்மை நிறம்கொண்ட வேட்டிச் சட்டையில் வந்து நின்றார், முன்வழுக்கைத் தலை, கம்பீரமான உடல், பெரிய மீசையின் அதீத பளபளப்பு தான் சாயம் பூசி கொண்டதை அறிவித்தபடி இருந்ததைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது, வேட்டியின் கரையில் அவர் இன்னொரு பகுதி தொழிலாக அரசியல் வேலையும் செய்கிறார் என்பதும் தெரிந்தது, அறிமுகப்படலம் இல்லாமலேயே, ”தம்பி,கொஞ்சம் லேட்டாகிடுச்சு, இந்த வீடுதான் வாங்க,” என்றழைத்தபடி செயற்கையான பரபரப்புடன் முன்னால் நடந்தார், நாய் முன் நின்ற அதே வீடுதான், நான் பின்தொடர்ந்து வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்து பின் நாயை நோக்கி, ”இது கடிக்காது வாங்க,” என்றார், நாய் இப்போது என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்த தோரணை கொண்டிருந்த மாதிரி தோன்றியது.

கேட்டின் ஓரத்தில் இருந்த அலாரத்தை தேடிக் கண்டடைந்து அழுத்தினார், சத்தம் கேட்டு ஒரு முதியவர் நடந்து வருவது கேட்டின் இடைவெளியில் தெரிந்தது, துளி பரபரப்பின்றி பொன்நகையை கையாள்வது போன்ற கவனத்துடன் மெதுவாக கேட்டினை திறந்தார், அவரிடம், ”முனுசாமி, பெரியவர் இருக்காரா!” எனக் கேட்டு பதில் வாங்க முற்படாமலேயே உள்ளே நடந்தார், முனுசாமி என்னைப் பார்த்து, ”வீடு பாக்கவா, உள்ள போங்க,” என்று சொல்லியபடி கேட்டை அதே இயல்புடன் சாத்தினார், எங்களைப் பார்த்தபோது அவரில் இருந்த புன்னகை பிறகு கதவை சாத்தும் பொழுதும், பின் நடந்து செல்லும் பொழுதும் இருந்தது.

பெரிய வீடு, முன்வாசலுக்கு வெளியே நேர்த்தியான மூங்கில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன, வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில்களைப் பார்த்தபோது பாடம் செய்யப்பட்ட இறந்த உடல்கள் என்ற பதம் ஞாபகம் வந்து அதை வலுக்கட்டாயமாக மனதிலிருந்து நீக்கினேன். லிங்கமூர்த்தி அதில் அமரச் சொல்லி தானும் அமர்ந்து கொண்டார், உட்கார தயக்கம் உண்டாகி பின் அமர்ந்து கொண்டேன், வரவேற்பு மேசையில் தினமலர் பிரிக்கப்படாமல் இருந்தது. லிங்கமூர்த்தியின் உடலில் ஒவ்வொரு கணமும் ஏதாவது ஒரு உடலசைவு வெளிப்பட்டு கொண்டே இருந்தது, முகத்தை என் பக்கமாக திருப்பி இரகசிய குரலில், “தம்பி அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷனை கொடுத்துடுங்க,” என்றார், அவர் மீது எரிச்சலும் அதேசமயம் பிரியமும் கலந்து வந்தது, காலையில் போனில் அழைத்து இன்னைக்கே வீடு வேண்டும் என்று மன்றாடிக் கேட்டபோது, “தம்பி, சாமான் சட்டியெல்லாம் தூக்கிட்டே வந்துடுங்க, வீடு ரெடியா இருக்கு,” என்று இவர் சொன்னபோது மொத்த பாரமும் அந்த நொடியிலேயே நீங்கியதைப் போல் உணர்ந்தேன்.

உள்ளே இருந்து 70 மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெளியே வந்தார், முண்டா பனியனும், வெள்ளை வேட்டியுமாக. ஒட்ட வெட்டிய தலையில் புதிதாக முளைத்திருந்த வெண் நாற்றுகள் போன்று முடிகள் இருந்தன, கழுத்து வரை வெண் மார்புமுடிகள் பரவியிருந்தன, காதுகளின் ஓரங்களில்கூட நாற்றுகள் நட்டுவைத்ததை போல சில வெண்முடிகள் இருந்தன. லிங்கமூர்த்தி அவரை பார்த்ததும் எழுந்து நின்றதை பார்த்து நானும் எழுந்து நின்றேன், ”என்னடா இந்தப் பக்கம் ஆளை காணோம்,” என்று அவர் கேட்டதற்கு லிங்கமூர்த்தி பதில் சொல்லாமல் குழைந்து சிரித்தார்.

“இந்த தம்பிதாங்க” என்று என்னைக் காட்டினார், நான் பாதி எழுந்து வணக்கம் தெரிவிப்பது மாதிரி ஒரு செய்கையை செய்தேன். அவர் உட்காரச் சொல்லிச் செய்து எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டார், முதல் வார்த்தையிலேயே ,”தம்பி என்னாளுக,” என்றார் சாதாரணமாக.

நான் அவர் சொல்வது புரியாததை போல பாவனை காட்டினேன், பிறகு அதெல்லாம் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, ”ஆசாரிங்க” என்றேன்.

“மர ஆசாரியா”

“இல்லைங்க, இரும்பு ஆசாரி”

“இல்ல, சும்மாதா கேட்டேன், என்ன பண்றீங்க”

“பிரின்டிங் காண்ட்ராக்ட்ங்க”

அவருக்கு பேசும் ஆர்வம் வந்ததை அவருடலும், முகமும் காட்டியது, ஆனால் அருகிலிருந்த லிங்கமூர்த்தியின் முகத்தில் சுணக்கம் தெரிந்தது.

“தம்பி, இந்த ஏரியாவே முன்னாடி எங்களோடதுதான், முன்னாடி பஸ் போற ரோடுல இருந்து பின்னாடி இருக்கற பி டி காலனி வரைக்கும், பி டி காலனிகூட அந்த காலத்துல எங்க பெரியவங்க வெளியிலிருந்து விவசாயக் கூலிகளா வந்தவங்களுக்கு தங்கறதுக்கு தானமா கொடுத்த நிலம்தான், அது மொத்தம் 5 ஏக்கர், இப்ப அங்க சென்ட் 9 லட்சம் போவுது”

நான் ஆர்வமாக கேட்பதைப் போல பாவனை செய்தேன், லிங்கமூர்த்தி பாதி எழுந்து நின்று, ”அப்ப வீட்டை பாக்களாங்களா,“ என்றார், பெரியவர் அவரைப் பொருட்படுத்தவே இல்லை, லிங்கமூர்த்தி ஏமாற்றமாகி என்னை திரும்பிப் பார்த்தபின் பழையபடி அமர்ந்து கொண்டார், ஏதோ வாய்க்குள் முணுமுணுப்பது தெரிந்தது.

“கடைசியா இந்த வீதி என்னோட பாகமா வந்துச்சு, நா பிளாட் போட்டு வித்துட்டேன், இப்ப ஐயோனு இருக்கு, வித்ததுக்கு இப்ப 10 மடங்கு விலை கூடி போச்சு”

“முன்னாடி விவசாயம்களா…”

“தம்பி அது காசை விடற பொழப்பு, ஆனா இப்பவும் மனசு அத விட மாட்டேன்கிது, இப்பக்கூட இரண்டு நாட்டுமாடு பின்னாடி கிடக்கு, தினம் 1.5 லிட்டர்தான் கறக்குது, நா ஜெர்சிதான் வாங்கச் சொன்னேன், நாட்டுமாடு வச்சாதான் கவுரவம்னு பையன் திட்டிவிட்டு இத வாங்கிக் கொடுத்தான்”

“பையன் என்ன செய்யறார்ங்க”

“பனியன் தொழில்தான், முன்ன நிறைய பணம் நாசம் பண்ணிட்டான், பிறகு மறுபடியும் கொஞ்சம் நிலம் வித்துக் கொடுத்து பணம் போட்டு, இப்ப நல்லா போகுது, முன்ன நிக்கறது அவனோட இரண்டு கார்ல ஒன்னுதான், இப்பதான் வாங்கினான், ஒரு காரை ரெண்டு வருஷம் கூட வைக்க மாட்டேன்றான், அதுக்குள்ள மாத்தி வேறொன்ன வாங்கிடறான்”

திரும்பி காரைப் பார்த்தேன், தான் பென்ஸ் என்பதை ஒவ்வொரு பாகத்திலும் சொல்லியபடி நின்றிருந்தது, அதன் வெண்ணிறம் ஏனோ வெள்ளைக்காரியை ஞாபகப்படுத்தியது.

லிங்கமூர்த்தி கடுப்பாகி இப்போது எழுந்தே நின்று விட்டார், பின் இடைபுகுந்து, ”அய்யா நேரமாச்சுங்க,” என்றார்.

பெரியவர் புதிதாக யாரையோ பார்ப்பதைப் போல லிங்கமூர்த்தியைப் பார்த்து பிறகு, ”சரி போய்ப் பாரு, திறந்துதான் இருக்கு, டே முனுசாமி…” என்று அழைத்தார்.

அடுத்த இரண்டு நொடிகளில் முனுசாமி அங்கு வந்து நின்றது ஆச்சிரியமாக இருந்தது, அதே மாறாத குழந்தைமை புன்னகை.

“போய் காட்டிக் கொடு, போடா”

“சரிங்க”

மூவரும் பின்பக்கம் நடந்தோம், பெரியவர் மறைந்ததும் லிங்கமூர்த்தி கோபத்துடன், ஆனால் சத்தமில்லாமல் என்னிடம் கத்தினார், ”வீடு பாக்க வந்தியா, அரட்டையடிக்க வந்தியா?” நான் பதிலேதும் சொல்லவில்லை, திரும்பி முனுசாமியைப் பார்த்தேன், அவர் சிரித்தார்.

வீடு நான் எதிர்பார்த்ததை விட பெரிதாகவும் அழகாகவும் இருந்தது, மெல்ல உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஆரம்பித்தது. லிங்கமூர்த்தியிடம், ”வாடகை எவ்வளோ சொல்றாங்கண்ணே” என்றேன்.

“16 ஆயிரம்”

தொண்டை விக்கித்துக் கொண்டதை போல் உணர்ந்தேன், அட்வான்ஸ் பற்றி அவரிடம் கேட்காமலேயே மனதிற்குள் கணக்கிட்டேன், என்னால் திரட்ட முடியாத தொகை.

திரும்ப வெளிவந்தபோது பெரியவர் அங்கேயே அமர்ந்திருந்தார். “தம்பி வீடு பிடிச்சதா” என்றார் ஆர்வமாக.

“பிடிச்சதுங்க, வீட்டுல பேசிட்டு லிங்கம் அண்ணன்கிட்ட சொல்லிடறேங்க”

நான் சொல்வதிலேயே நான் வரமாட்டேன் என்பதை அவர் யூகித்துக் கொண்டதை அவர் முகம் காட்டியது.

“இரண்டு நாள்ல வந்துடுறேங்க,” சொல்லும்போதே இது சாத்தியப்படாது என மனதிற்குள் எண்ணம் வந்து போனது. கேட்டருகில் வந்தபோது முனுசாமி புன்னகையுடன் விடை கொடுத்தார்.

வெளியே வந்ததும் லிங்கமூர்த்தி, ”சரி தம்பி, யோசிச்சு சொல்லுங்க, வந்த பிறகு வாடகை ஜாஸ்தின்னெல்லாம் திணறக் கூடாது, முடியும்னா சொல்லுங்க,” என்றபடி மொபட்டுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினார். பின் அந்தச் செயலை நிறுத்தி ஏதோ யோசித்து, ”தம்பி இவனுங்களுக்கு இது பரம்பர சொத்து, தொழில்ல நொடிஞ்சாங்கன்னா ஒரு துண்டு எடுத்து வித்தா போதும்,மீண்டுடுவானுக, நிலம்கிறது என்னனு நினைக்கற, தங்கப் புதையல் அது,” என்றார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.

” நீயும் நானும் இப்படி தெருத்தெருவா அலைஞ்சாதான் காசு, காலம் பூரா அலஞ்சாலும் ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாது”

“அண்ணே, அது அவங்க அதிர்ஷ்டம், முந்தின தலைமுறைக சம்பாதிச்சுக் கொடுத்ததை அவங்க அனுபவிக்கறாங்க, நமக்கு அந்த கொடுப்பின இல்ல, அவ்வளவுதான்”

” மண்ணாங்கட்டி, இது சம்பாதிச்சு வந்த சொத்தில்ல, முன்னாடி அவங்க பாட்டபூட்டனுக பிடிச்செடுத்த நிலம் இது, அவ்வளவுதான், முதல்ல அவங்க வச்சுருந்ததால அவங்களோடதாகிடுச்சு, பின்னாடி வந்தவன் எல்லாம் நிலம் இல்லாம ஆகிட்டானுக, இதான் நிஜம்”

பதில் சொன்னால் பேச்சை வளர்ப்பார் என எண்ணி வெறுமனே கேட்பதை போல முகத்தை வைத்து கொண்டேன்.

“தம்பி, இவங்க முன்ன விவசாயத்துக்காக சும்மா கிடந்த நிலத்தை பிடிச்செடுத்தாங்க, அப்படியே அவங்களோடதாக்கிட்டாங்க, இப்ப இந்த பனியன் தொழில் இங்கு வந்து நிலத்தை பொன்னு விலைக்கு ஏத்திடுச்சு, இவனுக கஷ்டப்படாமையே பணக்காரங்க ஆகிட்டாங்க, அவ்வளவுதான், தம்பி ஒன்னு மட்டும், எவனுக்கும் தன் தேவைக்கு மீறி இருக்கற நிலம் அவனொடதில்ல,” பேச்சில் பொங்கி உணர்ச்சியில் மேலேறியவர் சொல்லி முடித்ததும் அமைதியாகி நிதானமானார்.

பிறகு, ”சரி தம்பி, மறுபடியும் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷன் கொடுத்துடுங்க, அலைய வச்சுடாதீங்க”

எனக்கு உடனே கோதையின் அவளுக்கு மிக பிரியமான தங்க முறுக்குச் சங்கலி ஞாபகம் வந்தது, அது பத்தாது என்று தோன்றியவுடனே மாமனார் சுஸ்மிக்கு போட்ட மெல்லிய வளையலும் ஞாபகம் வந்தது.

லிங்கமூர்த்தி, ”தம்பி ஊர்ல சொந்தமா வய வீடு ஏதும் இருக்குங்களா?” என்று கேட்டபோதுதான் புத்தி கணக்கிடலிலிருந்து வெளியேறி மீண்டது.

“இல்லைண்ணா, இருந்தது எல்லாம் போச்சு, இனிதான் வாங்கணும்”

“தம்பி, நமக்குன்னு ஒரு இடம் இல்லைன்னா வேர் இல்லைன்னு அர்த்தம், இப்படி வருசத்துக்கு ஒரு முறை, ஆறு மாசத்துக்கு ஒருமுறை தெருத்தெருவா தேடி அலைஞ்சுட்டு இருக்கணும், முதல்ல சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கி போடுங்க, பிறகு அங்க தன்னால அதுல வீடு கட்டிட முடியும், நிலம்கிறது நமக்கான சொத்து இல்ல, நமக்கு பிள்ளைகளுக்கு, பிள்ளையோட பிள்ளைகளுக்கு நாம கொடுக்கற நிம்மதி, உள்ள பார்த்தீங்கள கிழவனை, என்ன திமிரா, ஒரு கவலையுமில்லாம இருக்கான்னு?” பிறகு முகபாவத்தில் லேசான புன்னகையுடன் விடைபெற்றுக் கிளம்பினார்.

பைக் எடுத்துக் கிளம்பும் கிளம்பும்போது திடீரென ஞாபகம் வந்து அந்த நாயைத் தேடினேன், அங்கு முன்பு இருந்த இடத்தில் காணவில்லை, திரும்பிப் பார்த்தபோது எதிர் இடத்தில் இருந்தது, நிழல் காரணமாக இடம் மாறி இருக்கிறது, என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றது, ஆச்சரியமாக குரைக்காமல் வாலாட்டியது, பைக்கிலிருந்து இறங்கிச் சென்று அதன் புறங்கழுத்தை தடவிக் கொடுத்தேன்.