லாவண்யா சுந்தரராஜன்

அரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்

  1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்ததைப் போலவே தான் எனக்கும் அமைந்தது. தனிமையே முதலில் என்னை வாசிப்புக்குள் இழுத்துச்சென்றது. பிறகு இடதுசாரி இயக்கத் தோழர்களின் வழி சரியான வாசிப்புக்குள் திசைத்திருப்பப்பட்டேன். முதலில் ரஷ்ய இலக்கியங்களும் பிறகு, தமிழின் நவீன இலக்கியமும் பரிச்சயம் ஆனது. தொடர்ந்து கிடைத்த நண்பர்களே இலக்கிய வழிக்காட்டிகளாக உள்ளனர். அதில் ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப, அரசியலுக்கேற்பப் படைப்புகளைப் பரிந்துரைப்பார்கள். அதிலிருந்து எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். வாசிப்பின் ஆரம்பத்திலேயே எழுத வேண்டும் என்ற ஊந்துதல் வந்துவிட்டது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை. புதுச்சேரியில் இருக்கும் போதே சில சிறுகதைகளும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் புதுச்சேரியிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த புதுவைப்பாமரன் மற்றும் புதுவை பாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தது. அதற்கு பிறகு அதை தொடர முடியவில்லை. பிறகு வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகே மீண்டும் எழுத ஆரம்பத்தேன். மலைகள், பதாகை, சொல்வனம், உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே ஆகிய இனைய இதழ்களில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தது. இதில் பதாகை பாஸ்கர் அவர்கள் வழிகாட்டுதல் மிக முக்கியமானது.

  1. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள் அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

வாசிக்கும் போது எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. படைப்பை அனுபவிக்கவே விரும்புகிறேன். அவ்வாறு அனுபவத்தை தராத படைப்புகளிடமிருந்து விலகிவிடுகிறேன். ஆனால், தற்போது வாசிக்கும் பழக்கத்தில் சிறிது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொருவரும் மொழியை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று ஆராய்கிறேன். நுட்பமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்வது என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.

  1. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது முதல் தொகுப்பை வெளியிடும் போது இருந்த மனநிலை, அந்தத் தொகுப்பு வெளியான சிறிது காலத்திற்குள்ளாகவே மாறத்தொடங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அத்தொகுப்பின் என்னுரையில் நான் எதார்த்தவாத்ததின் தேவையைப் பற்றியும் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தின் பற்றியும் கூறியிருப்பேன். ஆனால், அதன் பின் என் சிந்தனை முழுக்க கோட்பாடுகள், மாய எதார்த்தம் என மாறத்தொடங்கியது. கதைச் சொல்லலில் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இதற்கு முக்கிய காரணம் வாசிப்பில் நான் மேற்கொண்ட சில மாற்றங்களைச் சொல்லலாம். அதன் பிறகே என் புனைவுலக மனிதர்கள் நிறம் மாறத்துவங்கினார்கள். என் முதல் தொகுப்பிற்கு பிறகு வந்த கதைகளில் இதைக் காணலாம். வடிவத்தில் சில மாற்றங்களை நான் மேற்கொண்டிருந்தாலும் எப்போதும் என் கதைகளில் எளிய அடித்தட்டு மனிதர்களைப் பற்றியே தொடர்ந்துப் பேசி வருகிறேன். மேலும், நான் இருக்கும் ஐ.டி. மற்றும் பிபிஓ துறைப் பற்றியும் அவ்வபோதுக் கதைகளை எழுதி வருகிறேன். ஆனால், எனது சொந்த ஊரானப் புதுச்சேரியைப் பற்றியே அதிகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

  1. உங்கள் வாசிப்பில் அயல் இலக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள். நமது இலக்கியத்துக்கும் அயல் இலக்கியத்துக்கும் இருக்கும் வேறுபாடு எப்படியிருக்கிறது?

முக்கியமாக இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்கு சமகாலத்தைப் பற்றிய உணர்வு இல்லையோ என்றே தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் கதைகளை நினைவுகளில் இருந்தே படைக்கிறார்கள். அவ்வாறு படைக்கப்படும் கதை பத்திலிருந்து இருவது வருடங்கள் பிந்தையதாகவே இருக்கிறது. ஆனால், அயல் இலக்கியங்களில் தற்காலத்தைப் பற்றி அதிகம் கவனம் கொள்ளபடுவதாகத் தோன்றுகிறது. தலைமுறைகளின் மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், பண்பாடு, கலாச்சார மாற்றங்கள் என அதிகம் அங்கேப் பதிவுச் செய்யப்படுகிறது. ஆனால், இங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டக் கலாச்சார மாற்றங்களை நாம் இன்னும் சரியாக பதிவு செய்ய ஆரம்பிக்கவில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகான குடும்பங்களின் அமைப்பு எவ்வாறு சிதைந்திருக்கிறது, ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், மேலும் பெண்களின் உலகம் எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என எதைப் பற்றியும் நாம் அதிகம் யோசித்ததாகத் தெரியவில்லை.

  1. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் எதனை பற்றி எழுதுவீங்க?

நிச்சயம் இருக்கிறது. வரலாற்றின் மீது எனக்கு அளவில்லாத ஆர்வமுண்டு. சொல்லப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் சொல்லப்படாமலேயே, ஆராயப்படாமலேயே இருக்கின்றது என்ற வருத்தம் எனக்கு உண்டு. நிச்சயம் வரலாற்றுத் தொடர்பான அப்புனைவுகளை எழுதுவேன்.

  1. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

எனக்கு முன்னோடிகள் நிலையானவர்களாக இல்லை. முதலில் ராஜேந்திர சோழன் இருந்தார். பிறகு அசோகமித்ரன், பிறகு பஷீர் என காலத்திற்கும் வாசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது வாசிப்பின் வழி என்னை மேம்படித்திக்கொள்வதாகவே கருதுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கூறு பிடித்துள்ளது. எதையும் புறந்தள்ள முடியவில்லை.

  1. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

எனக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. டிஜிட்டல் பெயிண்டிங், போட்டோ மேனுபிசோஷனிலும் அதிகம் ஆர்வம் உண்டு. கதைகளில் விவரிப்பத்தை விட இதில் என்னால் கூடுதலாக காட்சிப்படுத்த முடிகிறது. இதுவே தான் வேலையாகவும் இருப்பதால் கூடுதலான நேரம் ஒதுக்க வேண்டும் என்ற சிரமும் இல்லை.

  1. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதர்க்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

நான் எழுதியதை நானே வாசிப்பது தான் மிகவும் சவாலானது. பிறர் எழுதியதை வாசிக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, ஆச்சரியங்கள் எதுவும் நம் சொந்தப் படைப்பை வாசிக்கும் போது இருக்காது. அதனால் பலருடையப் படைப்புகளில், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்திருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது” என்றக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அது எளிதானதல்ல.

  1. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

நான் அதிகம் பயணம் செய்யக்கூடியவன் அல்ல. அடுத்த நாவலுக்கு அவ்வாறு ஒருப் பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.

  1. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே முதல் தொகுப்பு வெளிவந்தது. எனக்குத் தெரிந்தப் பலரின் கருத்து நான் அவரசப்பட்டுவிட்டேன் என்பதாகவே இருந்தது. ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. நான் எந்த ஒரு மோசமானக் கதையையும் எழுதவில்லை. இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமுண்டு. ஆனால் அப்போது எனக்கு உதவ இலக்கிய நண்பர்கள் யாருமில்லை. அக்கதைகள் தவறான கைகளுக்கு எடிட் செய்ய சென்றுவிட்டது. ஆனாலும் அக்கதைகள் எனக்கு ஒரு சில விமர்சனங்களைத் தவிர்த்து நல்ல பெயரையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தகுதியற்றவர்கள் எடிட் செய்யும் போது நல்லக் கதைகளும் காணாமல்தான் போகும்.

  1. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

பலக் கதைகளில் அதை சொல்லியிருக்கிறேன். குறிப்பாக “மெளனம் களையட்டும்” கதை.

  1. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

பெரிதாக ஒன்றும் இதுவரை வரவில்லை. என்னை யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் இங்கிருக்கும் குழு மனப்பான்மை. என்னை திட்டுவதாலும், பாராட்டுவதாலும் விமர்சிப்பதாலும் யாருக்கும் எந்த நல்லதும் நடந்துவிட போவதில்லை. என்னால் யாரும் கவனத்திற்குள்ளாவப் போவதுமில்லை. அனைத்தும் தேவையைப் பொருத்தே நடப்பதால், நான் இன்னும் எவருடையத் தேவைப் பட்டியளுக்குள்ளும் வரவில்லை.

  1. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

ஒன்றே ஒன்று தான். இச்சமூகத்தைப் புரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முரண்பாடுகள் நிறைந்த இச்சமூகம் எப்படி இவ்வாறு ஒற்றுமையாக இயங்குகிறது. அதற்கு ஆதாரப்புள்ளி என்ன என்பதைக் கண்டடையவேத் தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறேன்.

  1. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா?

தை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

நிச்சயம் முக்கியமானது தான். என்னைப் பொருத்தவரைத் தொடர்ந்து கவனத்துடன் வாசிப்பதும், திரும்பத் திரும்ப எழுதிப்பார்ப்பதும் தான் மேம்படுத்த சிறந்த வழி. நான் அதைத்தான் செய்கிறேன்.

  1. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

அனைத்தையும் எனக்குப் பிடித்தே எழுதினேன். ஆனால் பதிலடி என்றக் கதையை எழுதியிருக்க வேண்டாமே என்ற எண்ணம் இப்போது இருக்கிறது. அது, இந்தச் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று என்னும் போதுத் தவறான ஒரு விஷயத்தை இச்சமூகத்திற்குச் சொல்லிவிட்டோமோ என்றுத் தோன்றுகிறது. அக்கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்தது துரதிஷ்டமானது.

  1. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

நிறைய உண்டு. உதாரணமாக சமீபத்தில் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஜப்பானிய நாவலை வாசித்தேன். அதை முன்பே வாசித்திருந்தால் பாரிஸை இன்னும் வேறு தளத்திற்கு உயர்த்தியிருக்க முடியும் என்றுத் தோன்றியது.

  1. உங்கள் படைப்புலத்தின் ஆதார மனநிலை என்ன?

இயலாமை. இச்சமூகத்தில் பெருங்கூட்டம் ஒன்று இம்மனநிலையிலேயே இயங்குகிறது. நடுத்தர மக்களின் ஆதார மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது. தங்களின் இயலாமையை மறைக்கவே தான் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களின் இயலாமையை தான் பன்னாட்டு நிறுவனங்கள் காசாக்குகிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டாக்குகிறார்கள். எதையும் எதிர்த்து கேட்கவிடாமல் ஒடுக்கப்படுகிறார்கள். சுரண்டுபவன் தைரியமாக சுரண்டுகிறான்.

  1. பெரும்பாலான கதைகளில் சிறுவர்கள் கதைமாந்தராகவும் அல்லது சிறு வயதில் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா அல்லது இன்னும் பால்யத்தை விட்டு வெளியேறாமல் இருக்கிறதா உங்கள் படைப்பு மனம்?

இருக்கலாம். இவை அனைத்தும் என் ஆரம்ப கதைகள் தான். அதனால் ஒருவேளை அப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் முதல் தொகுப்பிற்கு பிறகு வெளியான எந்தக் கதையும் அப்படியானதல்ல.

  1. பெண் கதைமாந்தாரின் கதைகளை(விடிவிப்பு, நகரிசொல்லும் போதும் பெண்களின் நுட்ப உணர்வுதளங்களை எழுத முடியாமல் போவதற்கு என்ன காரணமென்று உங்களால் யூகிக்க முடிகிறதா

தெரியவில்லை.

  1. நிழல் தேடும் பறவைகள் சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் பெண்ணாக மாறிப்போன தனது அப்பாவை கூடவே இருக்கச் சொல்லும் காட்சியை நினைவூட்டுகிறது, அதை போல உங்கள் படைப்பை ஒருபகுதியை பிற கலைவடிவிலோ அல்லது பிறர் படைப்பிலோ கண்டிருக்கின்றீர்களா? அப்படி கண்டறியும் போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?

இதே கேள்வி பலமுறை கேட்கபட்டுவிட்டது. நிழல் தேடும் பறவைகள் கதையை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதினேன். அது புதுவைப் பாமரன் என்ற இதழில் வெளிவந்தது. அப்பொது அதை ஒரு குறுங்கதையாக மாற்றம் என்றத் தலைப்பில் எழுதியிருந்தேன். மீண்டும் அதை விரிவாக இந்த தலைப்பில் எழுதினேன். அக்கதைக்கூட படம் வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்பே பதாகையில் வெளிவந்தது. திரைப்படங்களில் இவ்வாறு எடுத்தால்வது இப்போது சகஜமான ஒன்று தான். சர்வசாதாரணமாக அவர்கள் அதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். எனது அமிலம் என்ற சிறுகதை வாசகசாலை இனைய இதழில் வெளிவந்தது. அதை ஒரு நண்பர் நாளைய இயக்குனருக்காக என்னுடம் அனுமதி பெற்று குறும்படமாக்கினார். ஆனால் அதை அப்படியே ஒரு பிரபல படத்தில் ஒரு காட்சியாக்கிவிட்டனர்.

  1. சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் அவளது திருமண வாழ்வை பாதிக்கும் என்ற பல்வேறு ஆய்வுகளும் அதை மையம் கொண்ட புனைவுகளும் வந்திருக்கும் நிலையில் உங்களது மௌனம் கலையட்டும் ஒரு சிறுவனுக்கு நடக்கும் வன்கொடுமையை பதிவு செய்கிறது. அவனது உளசிக்கல்களை பேசுகிறது, இந்த கதையின் கருவை நீங்கள் புனைவாக்கும் போது உங்களுக்கிருந்த சவால்கள் என்னென்ன?

உண்மையில் இது எனக்கு நடந்த ஒரு விஷயம் தான். இதை பகிரங்கமாக வெளிபடுத்த தயங்கவில்லை. நிச்சயம் இது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றே இதைக் கதையாக்கினேன். ஆனால் ஒவ்வொன்றையுன் நினைவுக்கூர்ந்து எழுதுவது தான் மிகக் கடினமானதாக இருந்தது. மீண்டு வந்த ஒரு கிணற்றுக்குள் மறுபடியும் குதிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் குதித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

  1. பிணந்தின்னிகள், பதிலடி போன்ற கதைகளில் நீங்கள் பூடகமாக பதிய விரும்புவது சாதிய ஏற்றத்தாழ்வுகளையா

நிச்சயமாக. சாதிய கொடுமைகளால் தலித் மக்கள் மட்டுமே பாதிக்கபடுவதாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மை என்றாலும் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் உள்ளவர்களார் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். பிணந்தின்னிகளில், பொருளாதார ரீதியில் எவ்வித உதவியும் செய்ய முன்வராத சொந்த சாதியினர், அடுத்தவர்களின் திருமண விஷயத்தில் தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதும், மற்ற சாதியினரைக் கொல்லத்துணிவதும் எவ்வகையில் நியாயம் என்று இதுவரை தெரியவில்லை.

  1. மைதானம் இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது நகரமயத்தின் சீரழிவையா அல்லது பருவமாற்றம், வெப்பமாதல் போன்ற பயங்கரத்தையா அல்லது அது மாபெரும் ஏரி புனைவு மட்டுமா?

அரசியலற்ற படைப்பை எப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதாவது ஒருவகையில் சிறு அரசியலையாவதுத் தொட்டுவிடவே எப்போதும் முயல்வேன். சில சமயம் வித்தியாசமான கதைகள் அமையும் போது அதை சமரசம் செய்து கொள்வேன். மைதானம் கதை உலகமையமாக்களால், பன்னாட்டு நிருவனங்களால் கிராமங்களின் நீர் வளம் எவ்வாறு இல்லாமல் போய்விட்டது என்பதையே சொல்ல விரும்பினேன்.

  1. குப்பைகள் போன்ற சில கதைகளில் கதை வடிவத்தில் புதுமையை முயற்சி செய்திருக்கின்றீர்கள் நீங்கள் கதைக்காக வடிவத்தை தேர்தெடுப்பீர்களா அல்லது இந்த வடிவில் எழுத வேண்டுமென்று முடிவு செய்து விட்டு கதை களத்தை, கருவை யோசிப்பீர்களா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இரண்டுமே நடக்கிறது. குப்பைகள் கதையைப் பொருத்தவரை முதலில் கதை தான் உருவானது. அதை நேர்க்கோட்டில் தான் எழுதினேன். அது எனக்கு திருப்தி தராததால் இரண்டு முறை மாற்றி எழுதினேன். பிறகே இவ்வடிவம் உருவானது. வடிவத்தை முதலில் தீர்மானித்தும் கதைகள் எழுதியுள்ளேன். ஆனால் அவை எதுவும் பதிலடி தொகுப்பில் இடம்பெறவில்லை. அடுத்தத் தொகுப்பில் வாரும்.

  1. மாயப்படகு இது நீங்கள் பனிரெண்டாம் வகுப்பில் எழுதியது என்று உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது அதை மறு ஆக்கம் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தத்தற்கு உங்களால் அந்த பதின்வயதுக்கு திரும்பி சென்று எழுத முடியாதென்று நினைத்தது காரணமா

கண்டிப்பாக. என்னால் மீண்டும் அந்த வயதுக்குரிய மனநிலைக்குச் செல்ல முடியாது. வேலையினால் ஏற்படும் மன அழுத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். சராசரியான ஒரு மனிதனுக்குரிய மனநிலையே இல்லாத போதுப் பதின்பருவ மனநிலைக்குச் செல்வது நிச்சயமாக இயலாதக் காரியம். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

  1. பாரீஸ் குறுநாவலில் பிரெஞ்ச் குடியுரிமைக்காக பெண்ணுக்கு பணம் கொடுத்து மணந்து கொண்டு பாரீஸ் போகின்றார்கள் என்பது கதைகளம் அந்த மனபோக்கு இப்போதும் இருக்கிறதா? பாரீஸ் குடியுரிமை கொண்ட பெண்ணை மணப்பதன் மூலம் பாரீஸுக்கு குடியேறி அங்கேயே தங்கிவிடும் பழக்கம் நிஜத்தில் இருக்கிறதா ? அதே போல அதில் குடியுரிமையுள்ள ஆண்களை மணந்து குடியுரிமை பெற பெண்கள் பெரிதாக விரும்பதில்லை என்பதில் ஏதேனும் உளவியல் காரணங்கள் உண்டா?

பாரிஸுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இருபாலரிலும் இருக்கிறாகள். ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டால், பெண்கள் இரண்டாம் தாரமாக செல்ல தயங்குவதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது குறைந்துள்ளது. அதற்குக் காரணம், கட்டாயமாக பிரெஞ்ச் மொழி தெரிந்திருக்க வேண்டும், பிரான்ஸ் அரசின் பொருளாதார நிலை, அவர்கள் புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சில கட்டுப்பாடுகள் எனப் பிரான்ஸ்க்குச் செல்வது தற்போது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால் இன்றும் அவ்வாறு நடக்கத்தான் செய்கிறது.

  1. பாரீஸ் நாவலிலும், சில சிறுகதைகளிலும் கதை களமான பாண்டிச்சேரியும் அதன் போதை வஸ்துகளும் நாவலில், சிறுகதையில் உபயோகபடுத்தியிருக்கும் கதைமாந்தர் சிலரின் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும்படி அமைந்திருப்பதற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா?

இந்த கேள்வி சற்று வருத்தமளிக்கிறது. மனிதர்கள் பல நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். மிக மேல்தட்டு நிலை முதல் மிக மிக கீழ் தட்டு நிலைவரை வாழும் மனிதர்களின் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் மிக அதிக அளவில் வித்தியாசம் இருக்கும். நீங்கள் கேட்டும் கேள்வி கீழ்தட்டு மக்கள் அதிக அளவில் கெட்ட வார்த்தகள் பேசுவது போலவும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் அதிக போதை மற்றும் குடிக்கு அடிமையானர்கள் போலவும் சொல்ல வருகறீர்கள் என்றுத் தோன்றுகிறது. உண்மையில் பாண்டிச்சேரிக்கு அதிகமாக குடிக்க வெளி மாநிலத்திலிருந்து தான் வருகிறார்கள். உழைப்பால் ஏற்படும் உடல் வலி மற்றும் மன அழுத்ததிற்காக குடிக்கும் கீழ்தட்டு மக்களை விட வெறும் போதைக்காக குடிக்கு மேல் தட்டு மக்கள் அதிகம். பப்களில் பயன்படுத்தப்படும் போதை வஸ்துகளை கீழ்தட்டு மக்கள் பார்த்தே இருக்கமாட்டார்கள். ஃபக் எனும் ஆங்கில வார்த்தை எந்த வகையில் காதுக்கு இனிமையான வார்த்தை என தெரியவில்லை.

அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்

அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.

மாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.

பதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின்  தனிச்சிறப்பு

புதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டும் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம்  பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.

வாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.  

தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அந்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறதுகதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது

விடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.

நகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்

புயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுகளை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

மைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிதுஇதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.

குப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணிஎன்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.

இவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.

கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.

 

காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.

கதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

ஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.

படைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.

நிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்

அறிமுக எழுத்தாளர் நாகபிரகாஷ் எழுதிய எரி என்ற சிறுகதை தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. யாவரும் பதிப்பகம் 2019 வெளியீடு. இந்த சிறுகதைகளை வாசிக்கும் போது முன்னுரையில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தலைப்பையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. இந்த சிறுகதைகள் பால்யத்தின்/பதின்பருவத்தின் துயர் சித்திரங்கள். குடும்பச்சுழல் பொருட்டு சிறுவயதிலேயே ஏதேனும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கதைமாந்தர்களில் வாழ்க்கையை மையமாக கொண்ட பல சிறுகதைகள் இந்த தொகுப்பில் வாசித்து பல நாட்கள் இந்த தொகுப்பிலிருந்து வெளியேற இயலாமல் தடுமாறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போது உணர்ச்சிவசப் படாமல் வெறும் புனைவாக விலகி நின்று வாசிக்க இந்த கதைகள் இடம் தரவில்லை.

என் வீடு என்ற கதையில் கதைசொல்லி மீண்டும் மீண்டும் தேடத் தொடங்குவது தனது வீடு என்ற ஒரு வடிவத்தை. அவனுடைய தேடலில் அடுத்த படி அன்னையின் அருகாமை கலந்த வெம்மை. குளிர்ந்த இரவுகளில் சுருண்டு கொள்ள நினைப்பவனுக்கு அந்த வெம்மை அன்னையின் புடவைக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த கடந்த காலத்தின் நினைவாக உபயோகமில்லாமலும் ஒரு ஸ்வெட்டர் வாங்க நினைக்கிறான். அன்னையின் அரவணைப்பில் அவளருகிலிருப்பது பிள்ளைக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். இது ஒவ்வொரு குழந்தையின் உரிமையல்லவா குடும்ப சுமையை ஏற்க அந்த வெம்மை இழக்கும் பாலகனுக்கு இந்த சமூகம் என்ன பெரிதாய் தந்துவிட முடியும்?

கூப்பன் இந்த கதையிலும் இயல்பான இரண்டு சிறுவர்கள். இருவரின் உலகமும் மிக எளியது. அவர்கள் பாவனைகள், இன்பங்கள் எளியது. குடும்ப சூழல் பொருட்டு பொருள் ஈட்ட பட்டறைகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் இயல்பாகவே தமக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இயல்பாகவே ஒருவர் மேல் மற்றொருவர் அன்பாலும் அக்கரையாலும் பிணைகின்றனர். தினப்படி வேலையில் குடும்பத்துக்கு தேவையான சம்பளம் கிடைக்காத போது அவர்கள் வருமானம் ஈட்ட வேறு வழிகளை தேடத் தொடங்குகின்றார்கள். அது மிக இயல்பாக வெளிப்படும் அருமையான கதை. ஆனால் பள்ளிக்கூட பையை சுமக்க வேண்டிய கையால் துறு பிடித்த இரும்புப் பிசிறுகளை அள்ளிப் போட்டுவிட்டு கையில் கசியும் ரத்தக்காயங்களை சித்திரமாக்கியிருக்கும் வரிகளை படிக்கும் போது அய்யோ இந்த பையன் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வானா அப்படி போடவில்லையென்றால் என்ன ஆகும் என்று அது புனைவென்பதையும் மீறி தோன்றும் தருணமே இந்த கதையின் வெற்றி என்று நினைக்கிறேன். இது போன்ற தரிசனங்கள் இவர் கதைகளில் பல இடங்களில் நிகழ்கிறது.

சுவருக்கு அப்பால் சிறுகதை மிக அடர்த்தியான கதை. இந்த கதையிலும் கதைசொல்லிக்கு தேடல் இருக்கிறது. அந்த தேடல் ஆன்மீகத்துக்குள் என்ற புரிதலோடு இருந்த அவனுக்குள் நிகழும் மாற்றமே கதை. அந்த கதையை அவர் கதையாக்கிய விதம் கதையுள் நாமும் பயணிக்கும் நம்பதன்மையை கொடுக்கிறது. கதைசொல்லி பதின்பருவத்து இளைஞன் போல சித்தரிக்கபடுகிறது. ஆனால் அவனுக்கு சக பிரம்மச்சாரிகளிடம் பழக தயக்கமிருக்கிறது. வெளியிலிருந்து அவன் இருக்குமிடம் வரும் சிறுவர்களுடன் பழகுவதை விரும்புகிறான். இன்னொரு கதைமாந்தரிடம் தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு சிறுவன் நட்பு பாராட்டப்படுவதாக, அவர் அதை விரும்புவதாக அல்லது அதுவே வசதியானது என்ற சித்தரிப்பு வருகிறது. இருவருமே ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் உளவியலை கதையோட்டத்தோடு நமக்கு புரியவைக்கிறார் சிறுகதையாசிரியர். ஆகவே தான் இவ்விருவராலும் சம அந்தஸ்துள்ள நபர்களுடன் எளிதாக உறவாட முடிவதில்லை. தேடலும், தாழ்வுமனப்பான்மையும் கதைசொல்லியை எதிலும் நிலையற்று தடுமாறவிடுகிறது. மிக முக்கியமான கதை.

நோக்கு கதையில் வரும் ஒரு கதைமாந்தாரான பஸிரா, அவள் முன் முறை தனியாக பயணித்து வரும்போது அவளுக்குள் உருவாகும் உணர்வு கதையின் உச்சமாகிறது. இந்த கதையில் இருக்கும் பல கதைபாத்திரங்கள், உரையாடல்களை கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கினாலும், பஸிரா போன்ற பெண்ணின் மனநிலையை மிக நுட்பமாக பேசியதில் இந்த கதை முக்கியமானதாகிறது. கதையுள் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் வீடு, நடைமுறை எல்லாமும் எப்படியிருக்குமென்று மிக நுட்பமாக விளக்கி இருப்பதும், கதை நிகழும் காலத்தை சொல்ல தற்காலத்து கைபேசி செயலிகளை குறிப்பிட்டு எழுதியிருப்பது மிக கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம். இந்த காலத்திலும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண் தனியாக பேருந்தில் பணிப்பது ஒரு சாகச செயல் என்பது போன்ற கதையமைப்பு வியக்கதக்கது. ஆனால் தொகுப்பின் பலவீனமான கதைகளில் இதுவும் ஒன்று.

அட்டை துப்புரவு தொழிலாளியின் எளிய வாழ்க்கை. அடையாளம் என்பது எல்லோரும் ஒருவித லட்சியம். அதுவும் மறுக்கப்பட்டு, மிக போராடி பின்னர் பெறும் அடையாளம் நிச்சயமாய் பித்துமனநிலையை தரும் போதை. அந்த மனநிலையை அப்படியே அழகாய் கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாகபிரகாஷ் இந்த கதையின் மூலம் மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறுகிறார். இந்த கதையில் சொல்லிக் கொண்டிருக்கும் கதையொன்று உள்ளே மறைத்து வைத்திருக்கும் கதை இன்னொன்று, உறவுகளில் கயமை, தன் தகுதியை உணர்ந்திருக்கும் கதைசொல்லி ஒருவேளை அவன் தன்னைத் தானே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்கின்றானோ என்று கூட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக சிறுகதையின் கச்சித வடிவத்தோடு எழுதி இருக்கும் இந்த கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

கோதைமங்கலம் நாகபிரகாஷ் கதைகளில் இன்னொரு பரிமாணம், தோற்றத்தில் கொஞ்சம் பருமனான அழகு என்பது பால்ய காலத்திலும் இல்லாத ஒரு இளைஞன், சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்குள், தனது இழந்த காதலை நினைத்து அந்த நினைவுகளை எங்காவது அனாதை போல விட்டுவிட்டு போக வேண்டும் என்று துடிக்கும் சராசரி இளைஞன். அவனால் அந்த நினைவுகளில் கிளறும் விதம் வந்து சேரும் இலச்சினை பயணிக்கும் பேருந்திலேயே விட்டுவிட்டு கிளம்ப மட்டுமே முடிகிறது, வேண்டாத நினைவு தானே என்ற போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாத ஒன்று அதை வீசியெறிய ஏன் மனம் வருவதில்லை ஏன் இந்த தெளிவின்மை, இந்த தெளிவின்மையே அகசிக்கல் அனைத்திருக்குமான திறவுகோல். ஒரு பேருந்து பயணம் முடிவதற்குள் கதைசொல்லிக்குள் நடக்கும் மன போராட்டங்கள் அவை சொல்லப்பட்ட விதம் இதனை கச்சிதமான கதையாக காட்டியிருக்கிறது.

அடுத்த கதை சகடம், இந்த கதையில் அப்பாவின் கதையொன்று, மகனின் கதை ஒன்று, இரண்டும் இணைத்து பின்னும் கதை இன்னொன்று. இந்த வடிவயுத்தியை பலர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான கதையில் வரும் கதைசொல்லிகள் சிறுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அப்பா கொஞ்சம் பொறுப்பினை திறந்தவராக அல்லது எந்த வேலையிலும் நிலைக்க முடியாத, பணம் சேர்க்க திறமையற்றவராக இருக்கிறார். இது ஒருவித டெம்பிலேட் மனநிலையை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மேலும் இவர் கதையில் சொல்லும் கதை, சொல்லப்பட்ட கதைக்கிடையே மறைபொருளாக உணர்த்தபடும் கதை வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரஸ்யாமாக்குகிறது. இதுவே நாகபிரகாஷ் பெரும்பாலான கதைகளில் கையாளும் உத்தியாகும். இது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டினாலும் பல இடங்களில் கதையின் உள்முடிச்சிகளில் சிக்கி சிலசமயம் கதையிலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்புகளை உள்ளடக்கியே இருக்கின்றன.

எரி நுட்பமான விஷயங்கள் பல பின்னப்பட்ட பலகதைகளை உள்ளடக்கிய கதை, கூட்டத்தில் வளர்மதியை தேடும் ஒருவரி ஒரு காதல் கதையை சொல்ல வந்து சொல்லாமலோ, சொல்ல முடியாமலோ விக்கித்து நிற்கிறது அல்லது நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த வரிக்கு நகர்ந்து விடுகிறது. திருவிழா காட்சிகளும், நிஜ மாந்தர்கள் கடவுளர்களாக வலம் வரும் சித்தரிப்புகளும் வாசிக்க மிக சுவாரஸ்யமானது. பலரும் இது போன்ற காட்சிகளையும் வண்டி வேடிக்கை என்ற ஒரு செயல்பாட்டையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்கால திருவிழாக்களில் அம்மன் அலங்கலரமாய் டிராக்டர் வண்டிகளில் வருவதை கண்டிருக்கிறேன். ஆனால் நிஜ மாந்தரகள் வேடமணிந்து வலம் வருவதை எங்கும் கண்டதில்லை. மேலும் கதைசொல்லி வழக்கமாக பாட்டி வீட்டுக்கு வரும் போது நல்ல சாப்பாடு கிடைக்கும், போகும் போது கைநிறைய பலகாரம் எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு கனவில் பழைய சோறு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் உதாசீனம் செய்வதாக கதைசொல்லி மனதுக்குள் உணர்வதால் வருகிற கனவா? இந்த காட்சிகள் வாசகர் தனக்கான பலகதைகளை உருவாக்கிக் கொள்ள வகைசெய்யும் வண்ணமிருக்கின்றன. அதன் பிறகு மனதுக்குள் திருவிழாவிற்கு கதைசொல்லியின் அன்னை ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடல் வாதையும், வறுமையும் சிறு சிறு சித்தரிப்புகளிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில் கதைசொல்லியின் உடல் சூடு கண்ணை எரிப்பதற்கும், பாட்டியின் பெருமூச்சுக்கும் இருக்கும் இணைப்பை அவ்வளவு எளிதாக தரிச்சித்து விட முடியாத அழமான கதை.

பவித்ரா இந்த கதையும் பல நுண்கதைகளால் நெய்யப்பட்ட கதை, கதையின் மையப் பிரச்சனையான பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தையின் மென் மனநிலை, ஆனால் இது மட்டுமே கதையில்லை, கதைசொல்லியின் மனைவிக்கும் கதைசொல்லிக்கு இருக்கும் உறவுசிக்கலை பூடகமாய் சொல்லும் கதை. கதைசொல்லியின் மனைவி ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு, கதைசொல்லி பாதுகாக்கும் புத்தகங்களை இடம் மாற்றி வைப்பதற்கும், மகளிடம் கதைசொல்லி நாம மட்டும் வேறு எங்காவது போயிடலாமா என்று கேட்பதற்கும் இருக்கும் இணைப்பை மறுமுறை இந்த கதையை வாசிக்கும் போதே புரியும். எளிய உறவுசிக்கில் இடையே சிறு பெண் குழந்தை தனது தாய் தன்னைக்குமிடையே பின்னப்படும் இடைவெளியை விளக்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் சித்தரிப்பு அழகான இடம். ஆனால் இந்த கதையின் குவிமையம் வெறும் உறவு சிக்கல் என்று திசையில் மட்டுமின்றி குழந்தையின் உளவியலை கையாண்டிருந்தால் வேறு ஒருதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய கதை.

நாகபிரகாஷ் கதைகளில் சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர் படைப்புகளில் யாரும் எவர் மீதும் சலிப்பையும், வெறுப்பையும் சுமத்தும் எந்த பதிவுகளுமில்லை. அடித்து துன்புறுத்தும் வன்முறைகள் இல்லை. அறியாமை, வறுமை, குடும்ப அமைப்பு என்ற கடமை என்ற பெயரால் செல்லும் பல்வேறு வன்முறைகளில் பொருட்டு பாதிக்கப்பட்ட மாந்தர்களின் கதைகள் இவை என்று சொல்லலாம். நாகபிரகாஷின் கதைகள் அதிக வாசிப்பு கவனத்தை கோருபவை. அதனால் எளிய வாசகர்கள் இந்த கதைகள் சென்றடைவது மிகவும் சிரமம். இவரது மொழியை கதை சொல்லும் முறையை இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்தி வரும்காலங்களில் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன். அவரது முதல் தொகுப்பான எரி பரவலான வாசிப்பைப் பெற்று அதிகம் பேசப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்

1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

சிறுவயதிலே வாசிப்பதற்கான ஊக்கம் கொண்டிருந்தேன். சூழ்நிலையும் அமைந்தது.
அம்மா கதைகள் சொல்லித் தீரும்போது புதியவை வாசித்ததும் சொல்கிறேன், அதுவரைக்கும் காத்திரு என்பாள். அப்போது ஏன் காத்திருப்பது நாமே படித்து அம்மாவுக்கும் கதை சொல்வோம் என்று தோன்றும். அப்படி எழுத்துக்கூட்டி சிறுவர் இதழ்கள் வாசிக்கத் தொடங்கினேன்.

அதன் பிறகு இரண்டு அரசு நூலகங்கள் எனக்கு தங்களது புத்தகங்களால் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி உதவியிருக்கின்றன. வீட்டில் வாசிக்கிற பழக்கம் இருந்தமையால் என் வாசிப்புக்கு ஆதரவு இருந்தது.

எழுதவேண்டும் என்கிற ஆசை கழுகைப்போல பறக்க வேண்டும் ஆசைப்படக்கூடிய வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. சிறு கவிதைகளையே எழுதித் தொடங்கினேன்.

இணையம் குறிப்பாக முகநூல் எனக்கு இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அறிமுகம் செய்து கொள்வதற்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கும் உதவியது. மனிதர்களின் மேன்மை கீழ்மைகள் குறித்துப் புரிந்து கொள்ளும் களமாக அதற்கும் மேலாக என்னைச் சுற்றி நடப்பவற்றை தெரிந்து கொள்வதற்கு அதுவே உதவுகிறது.

அப்படியே சாத்தியப்பட்ட போது இலக்கியக் கூட்டங்களுக்கு போகத் தொடங்கினேன்.

2. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள்? அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

எனக்கு எதையேனும் ஒரு படைப்பிலிருந்து கற்றுக் கொண்டேனா என்கிற கேள்வி இதுவரை வந்ததில்லை. எனக்கு ஒவ்வொரு நூலும் ஒரு அனுபவமாகவே அமைகிறது. அதன் அனுபவத்தில் திளைத்திருக்கிறேன். அதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். ஆவேசம் வந்தது போலப் பக்கங்களைப் புரட்டி வாசித்துத் தள்ளுகிறவன் அல்ல நான். எனக்கு ஒவ்வொரு பக்கமும் அதன் வார்த்தைகளும் முக்கியம். அதற்கான நேரம் எடுத்தே நான் வாசிக்கிறேன்.

பெரும்பாலும் வாசிக்கும்போது எந்த சிந்தனையும் வருவதில்லை. தேவையானால் முடித்ததும் ஒரு பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து சிந்திப்பதும் குறிப்பு எழுதிக் கொள்வதும் உண்டு.  ஆனால், அவை பிறருக்காக எழுதப்படுவதில்லை. எனவே கூறுமுறையைப் பற்றிய கவலை வேண்டாம். ஒருங்கிணைப்புக்கான அவசியம் இல்லை.

ஒரு கட்டுரை எழுதவேண்டும் அல்லது ஒரு எழுத்தாளனாக நான் பிறரிடம் கூறுவதற்காக சிந்திக்கிறேன் எனும் கட்டம் வரும்போது இது சிக்கல். எனவே அதற்காக மீண்டும் புறவயமாக கூற்றுகளையும் சிந்தனைகளையும் தொகுக்கும் பணியைச் செய்கிறேன். அது என் இயல்புக்கு மிகப்பெரிய பளு. ஆனால் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் புனைவு எழுதுவதை நான் மிகவும் விரும்புகிறேன். என்னையறியாமல் அதில் ஒருங்கிணைவு உருவாவதும் உணர்வுகள் முயங்கி வெறொன்றாக மாறுவதும் நடக்க வேண்டும். அதற்காக நான் ஒரு கதையை எழுதும் முன்னர் தயாராகி இருக்கவேண்டும். கதை தயாராக வேண்டும். அதற்காக என்ன செய்கிறேன் என்பது மட்டுமே என் கையில் இருக்கிறது. அப்படியே எழுதி முடிக்கிறேனா என்பது முழுமையாக என்னிடத்தில் இல்லை. அதற்கான முயற்சியை செய்ய வேண்டியது. அது மட்டுமே என்னால் ஆகும்.

3. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இதுவரை இவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டதில்லை. அந்தந்த தருணங்களில் எனக்கு எதை எழுதுவதற்கான உந்துதல் பிறக்கிறதோ, அதையே எழுதினேன். அப்படியே கதைகளை முழுமையாக உருவாக்கிக் கொண்டும் எழுதியதில்லை.

ஆனால் தொகுப்புக்காக எல்லாவற்றையும் மீண்டும் படித்தபோது, கண்டு கொள்ளப்படாதவர்களை அல்லது பொதுவான மனநிலைகளிலிருந்து விலகிய குழந்தைமையையே எழுதியிருக்கிறேன் என்று புரிகிறது.

என் வாழ்கையின் அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி எழுதக்கூடாது என்கிற தெளிவு எனக்கு சில வருடங்களாகவே உண்டு. சில கதைகளில் என் போன்ற சாயல் கொண்ட பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறேன், அதற்காக அது என்னுடைய அனுபவம் ஆகிவிடாது.  மேலும் என் எழுத்து அவசர வாசிப்புக்கானது அல்ல.

பொருள் மயக்கம் அழகியலாக மட்டும் இல்லாது குறைபாடாக ஆகிற இடத்தில் வாசிப்பில் இடறும். அப்படி இடறாமல் வாசிக்கப் பழகினால் எல்லாமே நல்லவையே. மொழிச் சீர்மையும் கருத்துரைத்தலும் அணிகளும் மட்டுமே இலக்கியம் என்று கருதியது எப்படி மொழிக்கு தீமையாக அமைந்ததோ, அப்படியே மொழியைக் கண்டு கொள்ளாமல் இலக்கியம் படைப்பதும். அதை மனதில் வைத்துதான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.

4. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் என்ன எழுதுவீர்கள்?
தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இது கிடையாது. இப்போதைக்கு புனைவு எழுத்தாளனாக என்னை மேம்படுத்திக் கொள்வதிலேயே கவனம் எல்லாம்.

5. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

புதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரன். என்னுடைய குறைந்த வாசிப்பில் இதில் பஷீரையும் சேர்க்க முடியும். புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை அவர் எழுதிய வகைமைகள் மட்டுமல்லாது நேரடித் தன்மையும் கூர்மையான மொழியும் அங்கதமும் எவருக்கும் ஆதர்சமாக அமையும். அசோகமித்திரன் முற்றிலும் வேறுபட்டவர். அங்கதம் அமைதியுடன் வெளிப்படும் எழுத்து அசோகமித்திரனுடையது. எத்தனை தீவிரமான விஷயத்தையும் எளிய விஷயமாக எழுதிச் சென்றுவிடுவார்.

ஏன் பஷீரைக் குறிப்பிடுகிறேன் எனில்,  இவர்கள் இருவரின் இயல்புகளும் இடத்திற்கேற்ப செயல்பட்டு எதற்கும் பொறுப்பேற்காத ஒருவரின் மனநிலையும் சேர்ந்தால் அதுவே பஷீரின் இயல்பு என்று தோன்றுகிறது. இந்த மொத்த வாழ்கையின் பொருளின்மையை இருண்மையை சொல்லிக் கொண்டே செல்வது. அதே நேரம் அவ்வப்போது ஒளி இதுதான் என்று காட்டிவிடுவது. அந்த ஒளிக்காகவே பஷீரை எனக்குப் பிடித்திருக்கிறது.

இவர்கள் என்னை அதிகமாக பாதிக்கிறார்கள்.

6. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

அவ்வப்போது பயணம் செய்கிறேன். எண்ணூறு ரூபாய் சீனக் கைபேசி ஒன்றை வைத்திருந்த காலம் முதல் இன்று வரை செல்கிற இடங்களையும் நிகழ்வுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறேன். அவற்றில் நல்ல புகைப்படங்களாக அமைந்துவிடுபவை நிறையவே உண்டு.

பெரும்பாலும் போகும் இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தவிர்த்து பொதுவெளியில் பகிர்வதில்லை. என்னிடம் புகைப்படங்களை அப்படியே சேமிப்பதற்கான வாய்ப்பு இல்லாதிருந்ததால் நல்ல கைபேசியில் எடுத்தாலுமே அளவில் குறைத்து மேகச் சேமிப்பக சேவைகளில் சேமித்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நிராகரித்து அழித்தவை போக ஏறக்குறைய மூவாயிரம் புகைப்படங்கள் உண்டு.

எனக்கு தற்படம் எடுப்பதில் ஆர்வமில்லை. புகைப்படங்களுக்கு சிரிக்கவும் வராது. அதே என் நல்ல புகைப்படங்கள் இதுவரை சிலவே என்னிடம் உள்ளது. அவைகூட தேறாது என்று புத்தகத்தின் பின்னட்டைக்காக ஜீவ கரிகாலன் சில நாட்கள் தேடியும் காத்திருந்தும் இறுதியில் புகைப்படம் இல்லாமலேயே கொண்டு வந்தார். மற்றபடி, நாற்பதோ ஐம்பதோ ஆயிரங்கள் செலவு செய்து காமிரா வாங்கி எடுத்துக் கொண்டு அலைவதல் ஆர்வமில்லை.

7. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

எழுதுவது தொடர்பான எண்ணங்கள் இல்லாமல் என்னால்  எவரை வாசிக்க முடிகிறது என்று யோசிக்கிறேன். வெகு சிலரின் சில படைப்புகளை மட்டுமே அப்படி ஒரு தடங்கலுடன், அதிலிருக்கிற தவறுகளை உணர்ந்தபடி வாசிக்கிறேன். அதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று அப்போது மட்டுமே சிந்திக்கிறேன்.

அது தவிர, வாசிக்கையில் நான் ஒரு சராசரி வாசகன் மட்டுமே.

8. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

அப்படி பயணம் கோரும்படி இன்னும் எதுவும் எழுதவில்லை.

ஆனால், நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக வருடம் ஒருமுறையாவது ஒருவாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஹைதராபாத்தும், இந்த முறை கொல்கத்தாவும் சென்று ஒன்றரை இரண்டு மாதம் தங்கி வேலை செய்தபடியே வார இறுதியில் சுற்றிப் பார்த்தேன். அலுவலகத்தில் அதற்கான சுதந்திரம் தருகிறார்கள். இப்போது டெல்லி போயிருக்க வேண்டியது, கொரோனா காரணமாக எல்லா முன்பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.

என் மனதை வெளியுலகம் நோக்கித் திருப்புவதும் புரிதல்களை உண்டாக்கிக் கொள்வதும் பயணம் மூலமாக மட்டுமே.

Vagabond என்கிற சொல் பயணிக்கிறவரை குறிப்பது. ஒன்றும் இல்லாமல் நீங்கள் எங்கும் பயணிக்கலாம். உண்பதும் உறங்குவதும் என உங்களின் தேவை எத்தனை சிறியது, அதை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது எங்கு போனாலும் சாத்தியம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்களின் கதைகள் என்னை ஏங்க வைத்திருக்கின்றன.

முழு vagabond ஆக இல்லாவிட்டாலும் நினைத்தபோது கிளம்பிப் போகிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள், என்ன நம்மால் முடியாது. எனக்கு ஒரு தினம் முன்னதாகவாவது அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், அந்த நேரம் கையிருப்பில் ஏதாவது இருக்கவும் வேண்டும். எனவே தனியாகச செல்வதே எனக்கு நல்லது, முடிந்தவரை பயணிக்கிறேன்.

9. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

வெகு நாளைய கனவு. இப்போது வந்ததற்கும் நான் மட்டுமே காரணம் அல்ல.

எழுதிய வரிசையிலேயே தொகுப்பில் கொடுத்திருக்கிறேன். எந்த வகையில் மாற்றத்துக்கு என் எழுத்து உட்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான பதிவாகவும் அது இருக்கட்டும் என்கிற எண்ணம்.

அதன் வடிவமைப்பிலிருந்து அச்சு வரை எனக்கு நிறைவளிக்கிறதா என்று பார்த்துப் பார்த்து ஜீவ கரிகாலன் வெளியிடிருக்கிறார்.

அடுத்து என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்காக உழன்று கொண்டிருக்கிறேன்.

10. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

அப்படி நிறைய இருக்கலாம். நினைவில் எப்போதும் வைத்திருப்பதில்லை.

வெகு சில நிகழ்வுகளை மட்டும் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

11. உங்கள் படைப்பினை நீங்கள் எப்படி உருவாக்குகின்றீர்கள், ஒரே அமர்வில் அது முடியுமா, நீங்கள் அதை எப்படியெல்லாம் செழுமையாக்குகின்றீர்கள்?

சில கதைகள் ஏதாவது நிகழ்வோ செய்தியோ என்னை பாதிப்பதால், ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் எழுதப்பட்டவை. சில கதைகள் கனவில் வந்தவை. ஆனால், எழுதியது கனவில் வந்ததிலிருந்து முற்றிலும வெறொன்றாக இருப்பதும் உண்டு.

முன்னர் கையால் எழுதி பின்னர் தட்டச்சு செய்யும் போது மேம்படுத்திக் கொண்டிருந்தேன். அதை சிறிது காலத்துக்குப் பிறகு வாசித்து, இடறலாக ஏதாவது தோன்றினால் திருத்திப் பகிர்வது. இப்போது அதே முறையில் கணினியில் நேரடியாக எழுதுகிறேன்.

ஒரே அமர்வில் இதுவரை எழுதியதில்லை. குறைந்தது மூன்று நான்கு அமர்வுகள். உட்கார்ந்தால் குறைந்தது இருபத்தைந்து நிமிடம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒலிப்பான் வைத்துக் கொள்வேன். அப்படி சில தினங்கள் தொடர்ந்து எழுதியே ஒரு கதையை முடிக்க முடியும். அப்படி நேரம் குறித்துக் கொள்ளாது அமர்ந்தால் பல காரணங்களால் பயமும் கவனச் சிதறலும் ஏற்படுகிறது.

ஒரு நாள் எழுதிவிட்டு மறுநாள் தொடரும்போது ஏற்கெனவே எழுதியவற்றை வாசித்து எழுதிய போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று யோசிப்பேன். அதன் பிறகு தொடர்ந்து சிந்தித்தபடியே நேரம் வைத்துக் கொண்டு ஒன்றிரண்டு வாக்கியங்கள் எழுதி அழிப்பேன். எப்படியோ ஒரு தொடர்ச்சி உருவாகிவிடும்.

12. இலக்கியத்தின் அடிப்படையாக இருப்பது எது?

நல்ல கேள்வி. ஆனால் பதில் சொல்லும் அளவு நான் முதிரவில்லை.

13. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான் உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

எந்த முறையான விமர்சனத்தையும் ஆக்கப்பூர்வமான மனநிலையிலேயே எதிர்கொள்கிறேன்.

சிறு வயதிலிருந்தே எனக்கு என்ன தெரியாது என்பதையும், என் தகுதி என்ன என்பதையும் எனக்குள்ளாக வகுத்துக் கொள்வது என் வழக்கம். எனவே  எங்கும் எதற்கும் சமீப காலம் வரை சுருங்கிப் போனதில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன். ஒவ்வொரு தினமும் சற்றேனும் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். அதற்காக திறந்த மனதுடனேயே வாழ்கிறேன்.

அதே நேரம் தூக்கிப் பிடிக்கப் படுவதாலேயே எவரையும் கிழித்துத் தொங்கவிடமுடிகிற தன்னம்பிக்கை விமர்சகர்களின் அருட்கரங்களை அஞ்சாமை பேதைமை.

15. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

என்னை. என் நிறைவை.

15. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா? அதை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

என் மூத்தவர்கள் சொன்னது – தொடக்க காலத்தில் எழுதிக் கடப்பதன் வழியே இன்னும் படைப்பூக்கம் கொள்ள முடியும் என்று. அதற்கு முயல்கிறேன். ஆனால் ஒன்று புரிகிறது, கட்டுரை எழுதுவது வேறு ஏதாவது – something to be presented – என்கிற வகையில் எழுதும் போது கொஞ்சமே எழுத முடிகிறது. இந்த பதிலை நான் தட்டச்சு செய்யும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக எடுத்துக் கொள்கிறேன்.

எனவே எழுத்துப் பயிற்சி என்று வரும்போது எதையாவது எழுதித் தள்ளியபடி இருக்கலாம். அதை பிறர் நலன் கருதியாவது என்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது கதையாகவே கனிந்திருப்பதாக தோன்றினால், ஒருவேளை திருத்தம் செய்த பிறகு பிரசுரிக்கலாம். இப்படியே நான் உணர்கிறேன்.

இலக்கிய வாசிப்பு எழுத்து என்று இருக்கும்போது மொழியறிவுக்கு என்று நேரம் ஒதுக்குதல் சிரமம் என்றே உணர்கிறேன். எழுத்தாளனாக இருந்தாலும் தனித்தன்மைக்கு காரணமாக இருக்கக்கூடிய வேறு ஆர்வங்களும் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் மொழியாளுமை அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மரபாக நாம் மொழியை கற்றிருக்காத போது. அதற்கான அவதானிப்புகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கிறேன்.

16. சங்க இலக்கியம் பக்தி இலக்கியத்தின் மீதான உங்கள் ஆர்வம் எவ்விதமானது? அது உங்களை படைப்புகளை பாதித்திருக்கிறதா?

இந்த மொழியின் சொத்து என்கிற வகையில் அதை தூர இருந்து அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொள்கிறேன். சங்க இலக்கியத்தைக் காட்டிலும் பக்தி இலக்கியத்தை இன்னும் நெருங்கிப் போகிறேன். ஆனால் அவற்றில் ஊறித் திளைப்பவனில்லை. அத்தனை புலமை இல்லை. கொஞ்சமே கொஞ்சம் வாசிக்கிறவன்.

கவிதைகள் எழுதிய காலத்தில் சில காதல் கவிதைகளை பக்தி இலக்கிய தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால், பிறகு கீதாஞ்சலி படித்ததும் நவீன பக்திக் கவிதைகளின் வயது நூறு என்று புரிந்தது. அதன் தென்னிந்திய வேர்களை அப்போதே என்னால் உணர முடியாவிட்டாலும் பின்னர் அந்த புரிதலை வந்தடைந்தேன்.

அப்படிப் பார்த்தால், என் மனநிலைக்கே இவற்றின் தாக்கம் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கலாம்.

17. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

எழுதியவற்றை விடவும் எழுதி முழுமையடையாதவற்றிலேயே என்னைக் கவர்ந்த கருக்கள் நிறைய ஒளிந்திருக்கின்றன. அவற்றையும் அதனினும் சிறந்தவற்றையும் எழுத வேண்டும் என்கிற விழைவிலேயே இன்னும் எழுத முனைகிறேன்.

எழுதி வெளியானவற்றில் அட்டை, கூப்பன், சுவருக்கு அப்பால் எனக்கு மிகவும் நிறைவளித்தவை.

18. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

இதுவரை இப்படி நினைத்ததில்லை.

19.உங்கள் படைப்புலகத்தின் ஆதார மனநிலை என்ன?

ஒவ்வொன்றிலும் எனக்கு ஏதேனும் கண்டடையவோ, வேறு விளக்கம் சொல்லவோ, கேள்வியோ இருக்கிறதா?

20. உங்கள் பெரும்பாலான கதைகளில் பால்யம் மாறாத சிறுவனோ (அ) இளைஞனோ பணியிடத்திலோ, பிற இடத்திலோ சதா பயந்தலைவது போல சித்தரிக்கப்பட்டிருப்பது ஏதேச்சையானதா ?

அப்படி பயப்படாதவர்களும் என் கதைகளில் உண்டு. ஏனோ, அப்படியானவர்களை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய இயல்பு காரணமாக இருக்கலாம். அல்லது, இப்படியானவர்களை இலக்கியத்தில் நான் அதிகம் வாசித்திருக்காதது காரணமாக இருக்கலாம்.

ஒரு கதாபாத்திரத்தின் எல்லா இயல்புகளையும் இலக்கியம் ஆராயப் புகுகிறது. குறிப்பாக, தீமைகளையும் அழுக்குகளையும். அதன் மூலமே எல்லாவற்றையும் ஆராய முடிகிறது. உண்மைக்கு நெருக்கமாக அது மட்டுமே நிற்குமா என்கிற கேள்வி எனக்கு உண்டு.

அவன் என்ன அவ்வளவு யோக்கியனா என்று ஒருவரின் நல்லியல்பை அனுபவப்படும்போது நம் மனதின் ஏதோ ஒரு ஓரம் நினைக்கிறது, குறிப்பாக நம் ஆணவம் சீண்டப்படும்போது. உடனே சுவர் மறைவில் அவன் என்ன செய்யக்கூடும் என்று ஊகிக்கிறோம். அவன் சிந்தனை எப்படி இருக்கும் என்று அதற்கு ஒரு வக்கிரத்தை கோணலை கற்பிக்கிறோம். அதுவே இயல்பாக நம்மை உணர வைக்கிறது.

அப்படி இல்லாதவன் ஒருவன் என்றால் நாம் நம்ப மறுக்கிறோம். அவன் கோணல்கள் இல்லாதவன் இல்லை, அதை மீறி வெறொன்றே அவன் இயல்பாக வெளிப்படுகிறது. அதை என்ன என்று புரிந்து கொள்ள முயல்கிறேன். அதை குழந்தைமை என்று சுருக்கலாம். அதன் நுண்ணிய வேறுபாடுகளை என்னால் எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.

21. உங்களது ஒன்று மேற்பட்ட கதையில் ரயில் நிலையத்தில் கழிக்கும் இரவின் பதிவுகள் வருகின்றன. அது வீட்டு விட்டு வெளியேறி குடும்பத்தின் பொருட்டோ(என் வீடு) அல்லது வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் குடும்ப தலைவன் பொருட்டோ(பவித்ரா) இரவை கழிக்க உங்கள் கதாபாத்திரங்கள் ரயில் நிலையங்களை தேர்தெடுக்க ஏதேனும் பிரத்தியோக காரணம் உண்டா?

இந்த கேள்வியை மின்னஞ்சல் வந்ததும் படித்தபோது கயா ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தேன்.
சுவரோரம் திண்ணை போன்ற அமைப்பை தவிர, அது பெரிய அறை மட்டுமே. சுமார் நூறு குடும்பங்கள் சேலையோ போர்வையோ போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வசதியான குடும்பங்களும் உண்டு. ஒரு புத்த பிக்குக் குழு. அவர்களுடன் வந்த ஒருவர், சைக்கிளில் தூரம் பயணித்துப் போகிறவர் போலிருக்கிறது. கேரியரில் கட்டப்பட்ட மூட்டையுடன் சைக்கிளையும் கொண்டுவந்து ஒரு மூலையில் நிறுத்திவிட்டு அருகிலேயே கொசுவலை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார்.

இவர்களை என் சிறுவயதிலிருந்து நான் பார்க்கிறேன். அவர்களில் ஒருவனாக காதாபாத்திரம் அமையும் போது என்னால் என்ன செய்ய முடியும்? பவித்ரா கதையில் வரும் கணவன் அந்த இரவு உறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? விடியும்வரை எங்காவது சென்று அமர வேண்டும். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வந்தவர் அங்கேயே திரும்பிப் போகிறார்.  மேலும் அவர் அதிகம் பயணிக்கிறவர்.

22. கூப்பன் சிறுகதையில் கதையில் கார்த்தியும், ரகுவும் மிக இயல்பான சிறுவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே வீட்டுக்கு சம்பாதித்து தர வேண்டிய கட்டாயமிருக்கின்றன. அது அவர்களுக்கு வேறு விதமான ஆவேசத்தையோ, திமிரையோ, சலிப்பையோ அல்லது எந்த விதமான எதிர்மறை உணர்வுகளையுமோ தருவதில்லையா அந்த உணர்வுகளை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர் எட்டாம் வகுப்போடு வேலைக்குப் போகத் தொடங்கினார். அவர் நின்றதால், அவருடைய நண்பரும் பள்ளிக்கு போக விரும்பவில்லை. அவர்களைப் பார்த்து இன்னும் சிலர் நின்றார்கள். வேலைக்குச் சேர்ந்தார்கள். மேலும் சிலரின் பெற்றோர் அவர்களைக் காட்டி ‘பார் எப்படி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போகிறார்கள், பார்’ என்றார்கள்.  இங்கே பள்ளிக்குப் போவது இயல்பானதா இல்லை வேலைக்குப் போவதா? அந்த வட்டாரத்தில் எது இயல்போ, பெரும்பான்மையோ அதை நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அது அந்த சூழலில் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது.

அப்படி இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் கார்த்தியும் ரகுவுமே முற்றிலும் எதிரெதிரானவர்கள். உதாரணமாக அப்படி ஆவேசம், திமிர், சலிப்பு சற்றேனும் அதே கதையில் வெளிப்படுகிறது. அதை விவரித்துச் சென்றுவிடுகிறேன், வளர்க்கவில்லை அவ்வளவே.

23. சுவருக்கு அப்பால் சிறுகதை நீங்கள் எழுதிய கதைகளில் மிக அடர்த்தியான கதை. இந்த கதைக்கான களம் எப்படி உருவானது. அதில் மிருதங்கம் வாசிக்கும் நுட்பங்களை பற்றிய குறிப்புகளை அனுபவித்து எழுதியிருப்பீகள் உங்கள் இசையின் மீதான ஆர்வம் சார்ந்து கொஞ்சம் சொல்லுங்கள்.

குருகுலக் கல்வி என்ற பெயரில் எப்படி குழந்தைகள் வதைக்கப் படுகிறார்கள் என்று செய்திகளில் வாசித்ததே அக்கதைக்கான ஊக்கம். எனக்கும் அப்படியான கல்வி மேல் ஆர்வம் இருந்தது. ஒரு நல்ல ஆசிரியரின் குருவின் மாணவனாக இருந்து கற்க வேண்டும் என்பது இப்போது வரைக்கும் இருக்கும் என் கனவு. ஆனால், அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

அது தொடர்பான என் புரிதலையே அந்தக் கதையை எழுதி அடைந்தேன்.

எனக்கு மிருதங்கம் கற்றுக் கொள்ள சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் எங்கும் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இசையறிவு ஒன்றும் கிடையாது. அவ்வப்போது செவ்வியல் இசையும் பிற பொழுதெல்லாம் வேறு எந்த நல்ல இசைத் தொகுப்பையும் கேட்பேன், அவ்வளவே. இளையராஜாவை எல்லாவற்றுக்கும் மேலாக ரசிப்பவன், குறிப்பாக அவரது ஆல்பங்கள்.

24. சுவருக்கு அப்பால் சிறுகதையில் கதைசொல்லியும் மற்றொரு கதாபாத்திரம் கிருஷ்ணதாஸ் இருவருமே தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமில்லாத நபர்களுடனேயே நட்புடன் இருப்பது போல ஒரு பதிவு இருக்கிறது உதாரணத்துக்கு கிட்டத்தட்ட பதின்வயதை கடந்த கதைசொல்லிக்கும், கிருஷ்ணதாஸ், பிரபு, ஹரி இவர்களுடன் உருவாகும் உலகம் விஷயம் விசித்திரமான, இதன் பின்னால் இயங்கும் உளவியல் என்னவென்று நினைத்து நீங்கள் இப்படியொரு அமைத்தீர்கள்?

அதில் கதைசொல்லி தேடலும் கேள்விகளும் கொண்ட ஒருவன். அவனுக்கு குழந்தைகளோடு இருப்பதில் ஏதோ நிறைவு கிடைக்கிறது. வேறு எவருடனும் ஒட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன். கிருஷ்ணதாஸ் தானே ஒரு குழந்தை போன்றவர், சிந்திக்கும் திறனற்றவர் என்பதாக கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பவர். அவரிடம் நெருங்கிப் போவது ஒரு சிறுவனே தவிர, அவர் கிடையாது. அவரை தவிர்ப்பவர்களிலும் சிறுவர்கள் உண்டு. இதையெல்லாம் ஏன் எதற்கு என, கதைசொல்லி கவனிக்கிறான்.

இவர்களின் நட்பு, நிகழ்வுகள் மற்றும் ஏற்படும் புரிதல்களால் கதைசொல்லி என்ன கண்டடைகிறான் என்பதே கதை.

25. நோக்கு கதையில் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள். கதையின் கரு வலுவானது ஆனால் சொல்முறையை நீங்கள் ஏன் இவ்வளவு சிக்கலாக்கினீர்கள்? உங்களுடைய பெரும்பாலான கதையின் வாசகர் அதிகம் கவனம் செலுத்தி வாசிக்கும்படி அமைத்திருப்பது ஒரு உத்தியா?

தொடக்க காலக் கதை அது. அந்தக் கதைக்குள் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்ல முயன்றதால் அப்படி இருக்கலாம்.

என்னுடைய எழுத்து ஏன் அப்படி கவனமான வாசிப்பு கோருகிறது என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. பொழுது போக்காகவும் கவனக்குறைவாகவும் வாசிப்பதற்கு முடியாது என்பதே என்னுடைய புரிதல். வேண்டுமென்றோ மொழியைச் சிக்கலாக்கவோ, திருகவோ நான் செய்வதில்லை. அதே போல பெரிய குறைபாடுகள் என் மொழிப் பயன்பாட்டில் இல்லை என்று நம்புகிறேன், அறியாது இருப்பவற்றையும் மேம்படுத்திக் கொள்ள பார்த்தபடியே இருக்கிறேன்.

மேலும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டியவை அல்லவா?

26. அட்டை என்ற கதையின் மையம் அடையாள அட்டை ஒரு அந்தஸ்து என்பது போன்ற உளவியலா, அது மட்டுமில்லை என்ற பதிவுகளும் இருக்கின்றன. இந்த கதை சார்ந்த அதன் உள்ளடக்குகளை பேச முடியுமா?

அந்த வாழ்கையில் ஒரு தருணத்தை அந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன். மையப் பாத்திரத்தின் ஏங்கங்களையும் நினைவுகளையும். அது தவிர பிற வாசகனுக்கான தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கட்டும்.

27. கோதை மங்கலம் கதை சொல்லி தற்கால உடல் அடையாளம், பள்ளி பருவத்து விபரங்கள் இரண்டிலுமே கதைசொல்லி தான் மிக சாதாரணமானவன் தன்னை யாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை என்றொரு உளவியல் இயங்கிக் கொண்டிருக்க என்ன காரணம்?

அவன் அப்படியானவன் என்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.

28. உங்கள் கதைகளில் கதைமாந்தர்கள் கிளைகதை சொல்பவர்களாக அமைகின்றார்கள். உதாரணத்துக்கு சகடம் கதையில் வரும் சிறுவன் தனது யோகா பயிற்சிகள் சார்ந்த விபரணைகள், எரியில் வரும் சிறுவன் வண்டி வேடிக்கையின் வரும் கடவுளர் சார்ந்த வர்ணனைகள். இவை கதைக்குள் உள்ளடுக்குகளை ஏற்படுத்த உத்தி போல நீங்கள் பயன்படுத்தியிருகின்றீர்களா?

அது கதையின் ஒரு பகுதி, தேவை என்ற புரிதலால் தனக்கான இடம் கொண்டிருக்கிறது.

29. பவித்ரா  கதையில் பெண் குழந்தைக்கு தனது தாயிடம் உண்டாகும் மனசிக்கலை பேசியிருக்கின்றீர்கள். அதை தொடராமல் அதனை உறவு சிக்கலாக மாற்றியமைத்தற்கு காரணமெதுவும் உண்டா?

அப்படியான ஒரு சம்பவம் உடனே ஆழ்மனதில் சிக்கலாக மாறாது. அது ஒரு தொடக்கம். எனவே இருவருக்கும் பொதுவான ஒரு அதிர்ச்சியாக, என்ன செய்வது என்று சிந்திக்க வைப்பதாக அது இருக்கிறது. இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. காலப்போக்கிலேயே அது சிக்கலான ஒன்றாக மாறும். அந்த தருணத்தையே கதை விவரிக்கிறது.

யூனிபார்ம் – லாவண்யா சுந்தரராஜன் சிறுகதை

லாவண்யா சுந்தரராஜன் 

“சேது சித்தப்பா செத்துப் போயிட்டாராம் ஊருக்குக் கிளம்பணும்ன்னு அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, வாடி போலாம்”

2-ஏ வில் படிக்கும் பானு இரண்டாம் வகுப்பு பி பிரிவுக்கு வந்து மாலாவைக் கூப்பிட்டாள்

“அய்… ஊருக்காடி, ஜாலியா விளையாடலாம் இல்ல? சேது மாமாவா செத்துப் போயிட்டாங்க? தெரியாம சொல்லாத, தலைல வெள்ளயா முடி இருக்கவங்கதானே? சாமி கிட்ட போவாங்க?”

“தெர்லடி, அம்மா சீக்கிரம் கிளம்பணும்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க. வேகமா வா”

மாலாவுக்கு வேகமா நடக்க வராது. எப்போதும் எதையாவது பராக்கு பார்த்துக் கொண்டு மெதுவாகத்தான் நடப்பாள். பானு வேகமாக வீட்டுக்குப் போய்விட்டாள். பானு வீட்டுக்கு மாலா, போய்ச் சேர்ந்த நேரத்தில் அவள் ஜட்டியோடு நின்று கொண்டிருந்தாள் கையில் பால் டம்ளர் இருந்தது. அதை வேக வேகமாக குடித்துக் கொண்டிருந்தவள், மாலா வருவதைப் பார்த்து டம்ளரைப் பின் பக்கம் மறைந்தாள்.

“அய், சேம் சேம்”

“போடீ!! நான் யுனிபார்ம் மாத்தறேன்”

“அத்த எனக்கு பால்” என்றாள் மாலா.

“பால் தீர்ந்து போச்சு. உனக்கு வாளப்பளம் தரேன் அது தான் உனக்கு பிடிக்குமே. பளம் உனக்கு மட்டும் தான் பானுவுக்கு இல்லை”

மாலா பையை மேசை மீது வைக்கத் திரும்பிய போது “ஸ்ஸ் ஆ ஆ” என்று பானு முனகுவது கேட்டு திரும்பிப் பார்த்தாள், பானு தன் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏன்னடி ஆச்சு?”

“தெர்லடி வலிக்கிறது போல இருந்துச்சி.”

உள்ளே போயிருந்த அத்தை ஒரு சின்ன வாழைப்பழத்தை கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது செல்வம் அங்கு வந்து சேர்ந்தான்.

“ஏ உம்மான மூஞ்சி, எங்கடி இங்க வந்த உங்க வீட்டுக்கு போ” என்றான்.

பையை எடுத்துக் கொண்டு கிளம்ப இருந்தவளை, “மாலா, உங்க அம்மா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போயிட்டு இங்கேயே வந்துடுறேன்னு சொன்னாங்க. நீ இரு மாலா, அவன் கிடக்கிறான்” என்றாள் அத்தை.

செல்வமும் யூனிபார்மை கழற்றிவிட்டு வேறு கலர் உடுப்பு மாற்றிக் கொண்டான். அத்தை செல்வத்தை உள்ளறைக்கு அழைத்தாள். செல்வம் கையில் டம்ளரோடு வந்தான். மாலா ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பள்ளிக்கூடத்தில் இருந்திருந்தால் அவளுக்குப் பிடித்த உடைந்த கோதுமை உப்புமா கிடைத்திருக்கும். அம்மா அடிப்பாங்க என்று தெரிந்தும் திருட்டுத்தனமாக அதை வாங்கிச் சாப்பிடுவாள். இப்போது மாலாவுக்குப் பசிப்பது போலிருந்தது.

“செல்வம் உள்ள போய்க் குடி, டம்ளரை வெளக்கற இடத்தில் வைச்சிடு”

“இரும்மா குடிச்சிட்டுப் போறேன்”

பால் மேல் உதட்டில் மெல்லிய வெள்ளைக் கோடாக பதிந்தது. “அத்த பால் தீர்ந்து போச்சுன்னு சொன்னீங்க” என்றாள் மாலா.

“போன்னு சொல்றேன்ல” என்ற மெல்லிய குரலில் செல்வத்தை மிரட்டினாள் அத்தை.

“அத்தை நீங்க ஏன் மெதுவாவே பேசறீங்க, அம்மால்லாம் கோவம் வந்தா சத்தமா பேசறாங்க”

சன்னமாகச் சிரித்தாள் அத்தை. “அது பவுடர் பால் மாலுக் குட்டி, நல்லா இருக்காது கசக்கும், அவன் உன்ன வம்பிழுத்தான்ல அதான் அவனுக்கு கசக்கட்டும்ன்னு தந்தேன்”

“ஓ அப்படியா நல்லா வேணும் அவனுக்கு”

ஏதோ வேலை செய்ய அத்தை உள்ளே போய்விட செல்வம், பானு, மாலா மூவரும் ஒளிந்து பிடித்து விளையாட முடிவு எடுத்தார்கள்.

“சாட் பூட் திரி”

“எப்போதும் நானே கண்டுபிடிக்குணுமா?” சிணுங்கினாள் மாலா.

“கண்டு பிடிச்சா பிடி, இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் வேற விளையாடறோம்” என்றான் செல்வம். கோபித்துக் கொண்டு மாலா போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள். பானுவும், செல்வமும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஊருக்குப் போனால் இப்படி இல்லை எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம். செல்வம் பண்ணும் அட்டசாகத்துகு எல்லாம் சேது மாமா அடி போடுவார். முழுப் பரிட்சை லீவுக்கு அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் ஊருக்கு போவோம். அத்தை வீட்டிலேயும் எல்லோரும் வருவாங்க. சித்தி வீட்டிலிருந்தும் வருவாங்க. நாங்க எல்லாரோடும் அங்கே ஏழு கல் பாண்டி, பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாடுவோம். சேது மாமா தான் ஒவ்வொரு முறையும் ஒரு புது விளையாட்டை சொல்லித் தருவாங்க. போன லீவில் அவர் நிறைய புளியாங்கொட்டையைப் பரப்பி வைத்து, வாயால் சேது மாமா ஊதிக் காட்டினார் பத்து பன்னென்டு புளியாங்கொட்டை டான்ஸ் ஆடறது மாதிரி ஓடி அங்கொன்னும் இங்கொன்னுமாக, பாக்க அளகா இருந்துச்சு, அப்பறம் அதை எல்லாம் மறுபடி ஒன்னா வைச்சிட்டு இப்படி ஒவ்வொருத்தரும் ஊதுங்க, யார் அதிகம் புளியாங்கொட்டை சேருதோ அவங்க ஜெயிச்சவங்கன்னு சொன்னார். நாங்க எல்லாரும் ஜோரா விளையாடினோம். செம கலாட்டா. அப்ப பார்த்து அந்த பக்கமா பெரிய மாமா வந்ததாரு, ஓடி போய் சேது மாமா புது வெளயாட்டு சொன்னாரு மாமான்னு சொல்லிட்டே கட்டி பிடிச்சேன். அவரு ஏதோ தேளு கடிச்ச மாதிரி கைய உதரிக்கிட்டு முஞ்சிய கோவமா வைச்சிச்சி கிட்டு உள்ள போயிட்டாரு. இதுவே சேது மாமான்னா தூக்கி தலைமேல சுத்துவாரு. அப்படி தான் முன்ன ஒரு முறை சுத்தின போது சரியா தாத்தா “பிள்ளய தல மேல தூக்கி சுத்தாத குடலேறிக்கும்ன்னு எத்தன வாட்டி சொல்றது. இப்படி சின்ன பிள்ளகளோட எப்போது பாரு ஒரே ஆட்டம், வெல வெட்டிக்கு போவலன்னாலும் வீட்டுல மூட்ட ஏத்தா இறக்க ஒட்டடை அடிக்கன்னு வேல பாக்கலாமே. படிப்பு முடிஞ்சிட்டா துர மாறி இருக்கனுமா?” என்ற போது சேது மாமா கொஞ்ச நேரம் சோகமா உட்கார்ந்து இருந்தாரு. தாத்தா அம்மாவுக்கு அப்பா தானே அதான் இப்படி எப்போப் பாரு திட்டிகிட்டே இருக்காரு. “சேது மாமா நீ செல்வத்தோட அம்மாச்சி வீட்டுல பொறந்திருக்கலாம் அத்த மாறி அவங்க அப்பா கூட மெல்ல பேசுவாங்க, கோவமா திட்டவே மாட்டாருன்னு நினைக்கிறேன்னு” சொன்னதும் உடனே சிரிச்சிட்டே “பெரியவங்கன்னா அப்படி தான் குட்டி இருப்பாங்க. அவங்க திட்டறதெல்லாம் நல்லதுக்கு” சொன்னாரு. “அய் மாமா சிரிச்சிட்டாரு பாரு பானு, பன்னீர் மாமாவ நான் சிரிக்க வைச்சிட்டேன்” என்று சொன்னதும், சேது மாமா மறுபடியும் தட்ட மாலை சுற்றினதும் எனக்கு கிறுகிறுன்னு வந்துட்டுட்டது.

அம்மாயி வீடு ரொம்ப பெரியது, ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெரு வரையிலும் நெடுக இருக்கும் வீடு. அம்மா கிட்ட மாலா அடிக்கடி கேட்பா ஏம்மா அம்மாயி வீடு இவ்வளவு பெரிசா இருக்குன்னு. நெல் காய வைக்க, வெங்காயம், மிளகாய் மூட்டை எல்லாம் அடிக்க வசதியா அப்படி நெட்டுக்க கட்டி இருக்காங்கன்னு சொல்லுவாங்க அம்மா. கிழக்கு வாசல் இருக்கும் தெருவுக்கும் மண் வாசலுக்கும் நடுவுல பெரிய மேடு இருக்கும். கருங்கல்லு, வெள்ளை கல்லுன்னு அங்கங்க கல்லு கிடக்கும். நாங்க சாயுங்காலம் கல்லா மண்ணா விளையாட அது தான் இடம். கொஞ்சம் உள்ள தகரம் போட்ட தாழ்வாரத்தில நாலஞ்சி மாடு இருக்கும். எல்லாம் பசு மாடு. மாட்டுக்கு தண்ணி வைக்கத் தொட்டி இருக்கும். லட்சுமியும் மத்த மாடுங்க எல்லாம் எதையாவது மென்றுகிட்டே நிக்கும். அப்படி நிறைய நேரம் மென்னு தின்னா தான் நானும் நல்லா பெரிய பொண்ணா ஆவேன்னு அம்மா சொல்லுவாங்க. இந்த புறம் உச்சா போற இடம், குளிக்கிற இடம் இருக்கும். கக்கூஸுக்கு காலைல வாரிக்கு தான் போகனும்.

மண் வாசல் ஓரமா வடக்கால சின்ன இடத்தில் வேப்பமரம், கொஞ்சம் பூச்செடி எல்லாம் இருக்கும். நாலைஞ்சி குண்டு மல்லி தான் பூக்கும். அதுக்கு நானும் பானுவும் சண்டை போட்டுக்குவோம். அக்கா சத்தம் போடாமா பறிச்சி வச்சிச்சிப்பா. எங்களுக்கு எப்பவும் கனகாம்பரம் தான் கிடைக்கும். அத்த வந்து உங்களுக்குத் தான் அதிகம் பூன்னு எங்க இரண்டு பேரையும் அழாம இருக்க சொல்லுவாங்க. அம்மா தோசை ஊத்தி போடும் போது எல்லா பிள்ளைகளும் அங்கே உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு இடம் இருக்கும். சிலமுறை சோறு பிசைஞ்சிட்டு வந்து வாசலில் வைச்சி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுப்பாங்க அப்ப செல்வம் லபக் லபக்னு தின்னுட்டு முன்ன முன்னக் கைய நீட்டுவான். அத்த சண்டை போட்டா ஓடிப் போய் செவுத்துல முட்டிக்குவான். அம்மா அவனுக்கு எப்போதும் அதிகம் சப்போர்ட் பண்ணுவாங்க. வளர்ற பிள்ள திங்கட்டும்பாங்க. ஆனா அவன் என் கையிலிருந்து பிடுக்கிப்பான். அதைக் கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவன் தங்கிச்சிய மட்டும் நல்லா பார்த்துக்குவான். என் அக்கா அப்படி இல்ல, என் கூட சண்டை போடறா. அம்மாகிட்ட கோள் மூட்டி அடி வாங்கி வைக்கிறா. நினைக்க நினைக்க அழுகையா வரும். சேது மாமா மட்டும் தான் உம்முன்னு இருக்கக் கூடாது. சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்லி கிச்சி கிச்சி மூட்டுவாங்க.

அது வடக்கு வாசல் வரை ஒரே ரூமாட்டாம் இருக்கும். வடக்கு வாசலைத் தாண்டினதும் வெளில முல்லப்பூ பந்தல் இருக்கும். நிறைய முல்லை பூக்கும். ஏணி வச்சி ஏறி செல்வமும், பன்னீரும் பூப்பறிச்சித் தருவாங்க. அம்மா, அத்தை எல்லாம் சேர்ந்து சாயுங்காலம் முழுக்கக் கட்டி எல்லோருக்கும் வச்சி உடுவாங்க. அம்மா ரொம்ப நெருக்கமாக் கட்டுவாங்க. அவங்கிட்ட நைஸ் பண்ணி பானுவும், அக்காவும் வாங்கி வச்சிப்பாங்க. எனக்கு எப்போதும் அத்தை கட்டின லொட லொட பூ தான் கிடைக்கும். வாங்கி வச்சிக் கிட்டு கொஞ்ச நேரம் உம்முன்னு இருப்பேன். ஆனா எல்லாரும் ஓடிப் பிடிச்சி விளையாடும் போது போய் விளையாட சேர்ந்துக்குவேன்.

காலையில எல்லா பிள்ளைகளும் எந்திரிச்சி வாரிக்குப் போவோம். லீவுக்கு போகும்போது எப்போவுமே வாரில தண்ணி இருக்காது. எப்பவாவது ஐய்யாத்தில் தண்ணி வந்தா வாரிலையும் வரும்ன்னு சேது மாமா சொல்லுவாரு. ஒரே ஒரு தபா வாரியில் தண்ணி நிறைய வந்துச்சி அப்ப அது பாக்க காவேரி மாதிரி இருந்துச்சி சொன்னாரு. ஆனா நான் ஒரு வாட்டி கூட வாரில தண்ணி வந்து பார்த்தது இல்லை. வாரிக்கும் வீட்டிக்கும் நடுப்புற பெரிய புளியாமரம் இருக்கும். சேது மாமா பிள்ளைங்களை அதில் கிளையப் பிடிச்சி ஆடச் சொல்லி ஒரு விளையாட்டு சொல்லிக் குடுத்தாங்க ஒரு முறை. அப்படி ஆடிக் கீழ விழுந்து பன்னீர் ஒரு டைம் கைய ஒடச்சிக்கிட்டான் அன்னிக்கு சேது மாமாவுக்கு செம திட்டு. அதுக்கு அப்பறம் யாரும் தாத்தாக்கு தெரிஞ்சி புளியங்கிளையில் ஆட மாட்டோம். தாத்தா தோட்டத்துக்கு போயிருக்காங்கன்னா ஒரே குதியாட்டம் போட்டு கிளையிலும் தொங்குவோம். கிளை எட்டாத பிள்ளைங்களை மாமா தான் தூக்கி விடுவாரு. என்ன ஒரு முறை தூக்கி கிளைய பிடிச்சி ஆடச் சொன்னப்பா ஒரே கத்தா கத்திட்டேன். கை வேற எரிஞ்சது. சிவப்பாயிடுச்சி. ஒரே அழுகை. அப்பறம் மாமா தும்பப் பூவில மோதிரம் செய்து போட்டுவிட்டா ரொம்ப நேரம் புதுசா வைச்சிருக்கானு என்னைச் சொல்லுவாரு. எல்லோரும் சீக்கிரம் பிச்சிப் போட்டுடுவாங்க. பானுவுக்குப் பத்து நிமிஷம் கூட போட்டு இருக்க துப்பு இருக்காது. என்னோடதையும் பிக்க பாப்பா தடிச்சி. பூவரச மரத்து பீப்பி கூட செய்து ஊதிக் காட்டுவாங்க. செல்வத்துக்குக் கூட ஊத வராது. நான் ஊதிடுவேன். கற்பூர புத்தின்னு சொல்லுவாரு. ரொம்ப நல்ல மாமா.

யோசித்துக் கொண்டிருந்த மாலா கொஞ்ச நேரத்தில் எழுந்து அவர்களோடு சேர்ந்து ஓடி ஆரம்பித்தாள். உடனே செல்வம் ஏதோ கிண்டல் செய்ய பானு அவளைப் பார்த்துச் சிரித்தாள். இவங்களை மாதிரி இல்லை சேது மாமா அவர்தான் ரொம்ப நல்லவர் என்று நினைத்தாள்.

“ஏய் பேசமா ஒரு இடத்தில் உட்காருங்க, இப்ப ஊருக்குக் கிளம்பணும், ஓடி பிடிக்கிறேன்னு எதையும் தள்ளி கிள்ளி விட்டீங்க, அடிதான்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மாலாவின் அம்மா.

“இவ்வளவு நேரம் சும்மா இருந்தா இல்ல, இப்போ நான் இன்னும் ட்ரஸ் கூட மாத்தலன்னு அழுவா பாரேன்” என்று செல்வம் சொல்லி முடிக்கும் முன்னேயே மாலா “அம்மா நான் இன்னும் யூனிபார்ம் கூட மாத்தல” என்று சிணுங்கி அழத் தொடங்கியதும், செல்வமும், பானுவும் கொலென்று சிரித்தார்கள்.

“இதுக்கு தான் உனக்கு அத்த கசக்கிற பால் குடுத்தாங்க வெவ்வெவ்வே”

“கசக்கிற பாலா” என்று ஒரு வினாடி யோசித்த மாலாவின் அம்மா “சரி அழகு காட்டினது போதும் இங்க வா ட்ரஸ் கொண்டு வந்திருக்கேன், வா மாத்தி விடறேன்” என்று பேச்சை மாற்றினாள்.

“ஹும் இங்கே வேணாம், நம்ம வீட்டுக்கு போனால் இவங்க ’சேம் சேம்’ சொல்லுவாங்க,” என்று அடம் பிடித்தாள் மாலா.

சின்னதாய் ஒரு அடி போட்டு சட்டை, அரைப்பாவாடையை வலுக்கட்டாயமாகக் கழற்றினாள் அம்மா. குனிந்து குனிந்து கைகளை மடக்கி வித விதமாய் ஆட்டம் காட்டினாள். அம்மாவை விட்டுக் கொஞ்சம் தூரம் ஓடப்பார்த்தாள். அம்மாவுக்கு கோவம் வந்து ஒரு சாத்து சாத்தினாள். இருந்தாலும் மாலா யூனிபார்மை கழற்ற விடவில்லை.

“அண்ணி அந்த சூட்டுக்கோலைக் கொண்டாங்க இன்னிக்கி ஒரு இளுப்பு இளுத்தாத்தான் சரிப்படும்” என்றாள்.

மாலா பயந்துபோய் நின்ற ஒரு நிமிடத்தில் யூனிபார்மை பிடித்து இழுத்துக் கழற்றினாள் பானு. யூனிபார்ம் கிழிந்துபோனது. அவ்வளவுதான் ஜட்டியோடு ஒரேடியாக அழ ஆரம்பித்தவளைப் பார்த்து செல்வமும் பானுவும் ஷேம் ஷேம் என்றார்கள். அம்மா யூனிபாரம் கிழிந்ததைக் கவனிக்காமல் சுருட்டி எடுத்து கூடைப்பையில் திணித்தார். வேறு சட்டையை போட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினார்கள்.

அம்மாவும் அத்தையும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். செல்வமும் பானுவும் பஸ்ஸிலும் ஓயாது எதையாவது விளையாடினார்கள். யூனிபார்ம் கிழிந்து போனதை நினைத்து ஒரே கவலையாக இருந்தது மாலாவுக்கு. அவளால் செல்வம், பானுவோடு விளையாட முடியவில்லை. முன்பொரு முறை சிலேட் உடைந்து போனபோதும் காட்டாமல் வைத்திருந்தற்கு கிடைத்த அடியை நினைத்து ரொம்ப பயமாக இருந்தது.

“ஊருக்குப் போயிட்டு சுருக்க வரணும், காலாண்டு நெருங்குதுல்ல, மாலா அப்பா மஞ்சுவை பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்காரு. அதான் சுருக்க வரணும்.”

“ஆமாக்கா வீட்ல போட்டது போட்டபடி இருக்கு. இந்த சேது ஆனா இப்படி பண்ணி இருக்கக் கூடாது, சும்மா வேல வெட்டியில்ல, என்னன்னு கேட்டதுக்கு இப்படியா ?”

“என்னவோ போ அய்யாவுக்கு அவன் ஒரு பாடாத்தான் இருந்தான். அய்யாவும், அண்ணனும் சும்மா இருக்காம ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. அவனுக்கு இரண்டு வருஷம் கழிஞ்சா நேரம் சரியாடும், பெரிய உத்தியோகம் கிடைக்கும் வடுகப்பட்டி வள்ளுவ ஜோசியர் சொன்னதாக மாலா அப்பா சொன்னாங்க. அதுக்குள்ள இப்படி அநியாயம் பண்ணி அண்ணா பேருல தீராத பழியாக்கிட்டுப் போயிட்டான்”

சேது மாமா என்ன பண்ணி இருக்கக் கூடாது, பெரிய மாமா மேல் என்ன பழியாகும் அம்மாவும் அத்தையும் பேசுவது ஒன்றும் விளங்காமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் மாலா. சேது மாமாவை ஏன் தாத்தா எப்போது பார்த்தாலும் திட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நினைப்பாள். பெரிய மாமாவும் சேது மாமாவை திட்டிட்டாங்களோ. அதுக்கு சேது மாமா என்ன பண்ணி இருப்பாங்க?

பஸ் நின்றது. ரோட்டிலிருந்து வீட்டுக்கு கொஞ்ச தூரம்தான். மாலா வேகமாக நடக்க மாட்டாள் என்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு மாலா அம்மாவும் அத்தையும் வேகவேகமாக நடந்தார்கள்.

“அக்கா அவள இறக்கி விடுங்க இல்லாட்டா பானுவும் அடம் பண்ணப் போற என்னால தூக்க முடியாது”

பானு மிடுக்காக “என்னை ஒன்ணும் தூக்க வேண்டாம் நானே நடப்பேன், அவ சோமாசி. அவளை தூக்கிக்கங்க ’சேம் சேம்’ என்றாள்” பானுவைப் பார்த்து

“அம்மா இறக்கி விடுங்க அம்மா நான் வேகமா வரேன்” என்று கெஞ்சினாள் மாலா.

மாலாவை இறக்கிவிட்டு இன்னும் கதைகள் பேசிக்கொண்டே வந்தார்கள் அம்மாவும் அத்தையும்.வீட்டுக்கு பக்கத்தில் வந்ததும், ஸ்விட்ச் போட்டது போல அம்மாவும் அத்தையும் அழ ஆரம்பித்தார்கள் மாலாவுக்குச் சிரிப்பாக வந்தது. “பாவி ராஜா இப்படிப் பண்ணுவியா” என சன்னமாக அத்தையும், “அய்யோ கண்ணு இப்படிப் பண்ணிட்டியேடா, பூ வைச்சி பொட்டு வைச்சி கல்யாண கோலம் பாக்காம இப்படி போயிட்டியே” என்று சத்தமாக அம்மாவும் அழுததும் மாலா எதுவும் புரியாமல் அம்மாவையும் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீடு நிறைய இவ்வளவு கூட்டம் அவள் ஒருநாளும் பார்த்தது இல்லை. கிழக்கு வாசல் வழி உள்ளே நுழைந்த போது சிமெண்ட் திண்ணையை ஒட்டி இருக்கும் ஓடு போட்ட திண்ணையில் நடுவில் ஒரு சேரில் சேது மாமாவை மாலை போட்டு உட்கார வைத்திருந்தார்கள். நெற்றியில் பெரிய பொட்டு. தலையைச் சுற்றி தாவங்கட்டை வரை ஒரு வெள்ளைத் துணி கட்டப்பட்டு இருந்தது. கையைச் சேரோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். “மாமா கைய ஏன் அப்படி கட்டிப் போட்டாங்க, இவ்வளவு பேரை பார்த்து பயந்து ஓடிடுவாங்கன்ணு கட்டிப் போட்டாங்களோ” என்று நினைத்தாள் மாலா. ஊதுபத்தி மணந்து கொண்டிருந்தது. “ஏன் ஊதுபத்தி திண்ணைல வைச்சி இருக்காங்க, எடுத்துட்டு போய் பூஜையில் வைச்சிட்டு வரலாம்” என்று யோசித்தாள். மேலே மாடத்தில் விளக்கு வேறு எரிந்து கொண்டிருந்தது. தேங்காய் உடைத்து வைத்திருந்தது எல்லாம் பார்த்து பூஜை அறையை திண்ணைக்கு மாத்திட்டாங்கம்மா என்று அம்மாவிடம் சொல்ல ஓடினாள். உள்ளே பக்கத்து வீட்டுப் பாட்டியோடு அம்மா ஏதோ ஜாடையாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் மீண்டும் குழப்பமாக இருந்தது. அந்தப் பாட்டியும் அம்மாவும் வெளிய அழுதுட்டுல இருந்தாங்க, எப்படி அழுகை நின்னுச்சி?

புளியாங்கொட்டைகள் பரப்பியிருந்த மூலை கண்ணுக்குப் பட அங்கே சென்றாள். கூட்டமெல்லாம் கலைந்ததும் எல்லா பிள்ளைகளும் சேர்ந்து புளியாங்கொட்டை ஊதி விளையாடலாம் என்று நினைத்தாள். சேது மாமாவைக் கூப்பிட்டு அது பற்றி பேசலாம் என்று நினைத்து திண்ணைக்கு போனாள். சேது மாமாவின் பக்கத்தில் போய் கையை தொட்டு பார்த்தாள் மாலா. ஐஸ் போல சில்லுன்னு இருந்தது மாமாவின் கை.

“மாமா புளியாங்கொட்டை ஊதி விளையாடலாமா நீங்க எந்திரிச்சி வந்ததும்”

இதைக் கேட்டதும் அவளை இழுத்து கட்டிக் கொண்டு அழுதாள் பெரிய அத்தை. பெரிய மாமா துண்டை வாயில் பொத்திக் கொண்டு அழுதபடி அவர்களைப் பார்த்தார். ராஜி, பன்னீர், எப்போதும் வராத சின்னாம்மா பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். பெரியவங்க எல்லோரும் ஏன் இப்படி அழறாங்க என்று ஒரே குழப்பமாக இருந்தது மாலாவுக்கு, அத்தை அருகில் பானு கூட அழுது கொண்டிருந்தாள். அடிக்கடி அம்மா சொல்லுவாங்களே “பானுவ பாரு எவ்வளவு சமத்தா இருக்கா, தண்டகழுத மாதிரி திரியற நீ, அவள பார்த்து கத்துக்க” நானும் அழனுமோ. கண்கள் மூடியிருந்த சேது மாமாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இந்தப்பக்கம் திரும்பினாள். தூரத்தில் தெரிந்த கூடைப்பையில் அவளுடைய யூனிபார்ம் தெரிந்தது. யூனிபார்ம் கிழிந்து போனது அம்மாவுக்குத் தெரிந்தால்… அவள் உதடு பிதுங்கி முகம் கோணியது. கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.