- இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?
பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்ததைப் போலவே தான் எனக்கும் அமைந்தது. தனிமையே முதலில் என்னை வாசிப்புக்குள் இழுத்துச்சென்றது. பிறகு இடதுசாரி இயக்கத் தோழர்களின் வழி சரியான வாசிப்புக்குள் திசைத்திருப்பப்பட்டேன். முதலில் ரஷ்ய இலக்கியங்களும் பிறகு, தமிழின் நவீன இலக்கியமும் பரிச்சயம் ஆனது. தொடர்ந்து கிடைத்த நண்பர்களே இலக்கிய வழிக்காட்டிகளாக உள்ளனர். அதில் ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப, அரசியலுக்கேற்பப் படைப்புகளைப் பரிந்துரைப்பார்கள். அதிலிருந்து எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். வாசிப்பின் ஆரம்பத்திலேயே எழுத வேண்டும் என்ற ஊந்துதல் வந்துவிட்டது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை. புதுச்சேரியில் இருக்கும் போதே சில சிறுகதைகளும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் புதுச்சேரியிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த புதுவைப்பாமரன் மற்றும் புதுவை பாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தது. அதற்கு பிறகு அதை தொடர முடியவில்லை. பிறகு வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகே மீண்டும் எழுத ஆரம்பத்தேன். மலைகள், பதாகை, சொல்வனம், உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே ஆகிய இனைய இதழ்களில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தது. இதில் பதாகை பாஸ்கர் அவர்கள் வழிகாட்டுதல் மிக முக்கியமானது.
- வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள் அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?
வாசிக்கும் போது எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. படைப்பை அனுபவிக்கவே விரும்புகிறேன். அவ்வாறு அனுபவத்தை தராத படைப்புகளிடமிருந்து விலகிவிடுகிறேன். ஆனால், தற்போது வாசிக்கும் பழக்கத்தில் சிறிது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொருவரும் மொழியை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று ஆராய்கிறேன். நுட்பமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்வது என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.
- உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
எனது முதல் தொகுப்பை வெளியிடும் போது இருந்த மனநிலை, அந்தத் தொகுப்பு வெளியான சிறிது காலத்திற்குள்ளாகவே மாறத்தொடங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அத்தொகுப்பின் என்னுரையில் நான் எதார்த்தவாத்ததின் தேவையைப் பற்றியும் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தின் பற்றியும் கூறியிருப்பேன். ஆனால், அதன் பின் என் சிந்தனை முழுக்க கோட்பாடுகள், மாய எதார்த்தம் என மாறத்தொடங்கியது. கதைச் சொல்லலில் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இதற்கு முக்கிய காரணம் வாசிப்பில் நான் மேற்கொண்ட சில மாற்றங்களைச் சொல்லலாம். அதன் பிறகே என் புனைவுலக மனிதர்கள் நிறம் மாறத்துவங்கினார்கள். என் முதல் தொகுப்பிற்கு பிறகு வந்த கதைகளில் இதைக் காணலாம். வடிவத்தில் சில மாற்றங்களை நான் மேற்கொண்டிருந்தாலும் எப்போதும் என் கதைகளில் எளிய அடித்தட்டு மனிதர்களைப் பற்றியே தொடர்ந்துப் பேசி வருகிறேன். மேலும், நான் இருக்கும் ஐ.டி. மற்றும் பிபிஓ துறைப் பற்றியும் அவ்வபோதுக் கதைகளை எழுதி வருகிறேன். ஆனால், எனது சொந்த ஊரானப் புதுச்சேரியைப் பற்றியே அதிகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
- உங்கள் வாசிப்பில் அயல் இலக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள். நமது இலக்கியத்துக்கும் அயல் இலக்கியத்துக்கும் இருக்கும் வேறுபாடு எப்படியிருக்கிறது?
முக்கியமாக இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்கு சமகாலத்தைப் பற்றிய உணர்வு இல்லையோ என்றே தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் கதைகளை நினைவுகளில் இருந்தே படைக்கிறார்கள். அவ்வாறு படைக்கப்படும் கதை பத்திலிருந்து இருவது வருடங்கள் பிந்தையதாகவே இருக்கிறது. ஆனால், அயல் இலக்கியங்களில் தற்காலத்தைப் பற்றி அதிகம் கவனம் கொள்ளபடுவதாகத் தோன்றுகிறது. தலைமுறைகளின் மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், பண்பாடு, கலாச்சார மாற்றங்கள் என அதிகம் அங்கேப் பதிவுச் செய்யப்படுகிறது. ஆனால், இங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டக் கலாச்சார மாற்றங்களை நாம் இன்னும் சரியாக பதிவு செய்ய ஆரம்பிக்கவில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகான குடும்பங்களின் அமைப்பு எவ்வாறு சிதைந்திருக்கிறது, ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், மேலும் பெண்களின் உலகம் எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என எதைப் பற்றியும் நாம் அதிகம் யோசித்ததாகத் தெரியவில்லை.
- புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் எதனை பற்றி எழுதுவீங்க?
நிச்சயம் இருக்கிறது. வரலாற்றின் மீது எனக்கு அளவில்லாத ஆர்வமுண்டு. சொல்லப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் சொல்லப்படாமலேயே, ஆராயப்படாமலேயே இருக்கின்றது என்ற வருத்தம் எனக்கு உண்டு. நிச்சயம் வரலாற்றுத் தொடர்பான அப்புனைவுகளை எழுதுவேன்.
- உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?
எனக்கு முன்னோடிகள் நிலையானவர்களாக இல்லை. முதலில் ராஜேந்திர சோழன் இருந்தார். பிறகு அசோகமித்ரன், பிறகு பஷீர் என காலத்திற்கும் வாசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது வாசிப்பின் வழி என்னை மேம்படித்திக்கொள்வதாகவே கருதுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கூறு பிடித்துள்ளது. எதையும் புறந்தள்ள முடியவில்லை.
- எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?
எனக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. டிஜிட்டல் பெயிண்டிங், போட்டோ மேனுபிசோஷனிலும் அதிகம் ஆர்வம் உண்டு. கதைகளில் விவரிப்பத்தை விட இதில் என்னால் கூடுதலாக காட்சிப்படுத்த முடிகிறது. இதுவே தான் வேலையாகவும் இருப்பதால் கூடுதலான நேரம் ஒதுக்க வேண்டும் என்ற சிரமும் இல்லை.
- பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதர்க்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?
நான் எழுதியதை நானே வாசிப்பது தான் மிகவும் சவாலானது. பிறர் எழுதியதை வாசிக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, ஆச்சரியங்கள் எதுவும் நம் சொந்தப் படைப்பை வாசிக்கும் போது இருக்காது. அதனால் பலருடையப் படைப்புகளில், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்திருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது” என்றக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அது எளிதானதல்ல.
- உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?
நான் அதிகம் பயணம் செய்யக்கூடியவன் அல்ல. அடுத்த நாவலுக்கு அவ்வாறு ஒருப் பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.
- உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?
எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே முதல் தொகுப்பு வெளிவந்தது. எனக்குத் தெரிந்தப் பலரின் கருத்து நான் அவரசப்பட்டுவிட்டேன் என்பதாகவே இருந்தது. ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. நான் எந்த ஒரு மோசமானக் கதையையும் எழுதவில்லை. இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமுண்டு. ஆனால் அப்போது எனக்கு உதவ இலக்கிய நண்பர்கள் யாருமில்லை. அக்கதைகள் தவறான கைகளுக்கு எடிட் செய்ய சென்றுவிட்டது. ஆனாலும் அக்கதைகள் எனக்கு ஒரு சில விமர்சனங்களைத் தவிர்த்து நல்ல பெயரையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தகுதியற்றவர்கள் எடிட் செய்யும் போது நல்லக் கதைகளும் காணாமல்தான் போகும்.
- இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?
பலக் கதைகளில் அதை சொல்லியிருக்கிறேன். குறிப்பாக “மெளனம் களையட்டும்” கதை.
- உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?
பெரிதாக ஒன்றும் இதுவரை வரவில்லை. என்னை யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் இங்கிருக்கும் குழு மனப்பான்மை. என்னை திட்டுவதாலும், பாராட்டுவதாலும் விமர்சிப்பதாலும் யாருக்கும் எந்த நல்லதும் நடந்துவிட போவதில்லை. என்னால் யாரும் கவனத்திற்குள்ளாவப் போவதுமில்லை. அனைத்தும் தேவையைப் பொருத்தே நடப்பதால், நான் இன்னும் எவருடையத் தேவைப் பட்டியளுக்குள்ளும் வரவில்லை.
- எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?
ஒன்றே ஒன்று தான். இச்சமூகத்தைப் புரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முரண்பாடுகள் நிறைந்த இச்சமூகம் எப்படி இவ்வாறு ஒற்றுமையாக இயங்குகிறது. அதற்கு ஆதாரப்புள்ளி என்ன என்பதைக் கண்டடையவேத் தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறேன்.
- எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா?
தை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?
நிச்சயம் முக்கியமானது தான். என்னைப் பொருத்தவரைத் தொடர்ந்து கவனத்துடன் வாசிப்பதும், திரும்பத் திரும்ப எழுதிப்பார்ப்பதும் தான் மேம்படுத்த சிறந்த வழி. நான் அதைத்தான் செய்கிறேன்.
- உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?
அனைத்தையும் எனக்குப் பிடித்தே எழுதினேன். ஆனால் பதிலடி என்றக் கதையை எழுதியிருக்க வேண்டாமே என்ற எண்ணம் இப்போது இருக்கிறது. அது, இந்தச் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று என்னும் போதுத் தவறான ஒரு விஷயத்தை இச்சமூகத்திற்குச் சொல்லிவிட்டோமோ என்றுத் தோன்றுகிறது. அக்கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்தது துரதிஷ்டமானது.
- யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?
நிறைய உண்டு. உதாரணமாக சமீபத்தில் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஜப்பானிய நாவலை வாசித்தேன். அதை முன்பே வாசித்திருந்தால் பாரிஸை இன்னும் வேறு தளத்திற்கு உயர்த்தியிருக்க முடியும் என்றுத் தோன்றியது.
- உங்கள் படைப்புலத்தின் ஆதார மனநிலை என்ன?
இயலாமை. இச்சமூகத்தில் பெருங்கூட்டம் ஒன்று இம்மனநிலையிலேயே இயங்குகிறது. நடுத்தர மக்களின் ஆதார மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது. தங்களின் இயலாமையை மறைக்கவே தான் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களின் இயலாமையை தான் பன்னாட்டு நிறுவனங்கள் காசாக்குகிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டாக்குகிறார்கள். எதையும் எதிர்த்து கேட்கவிடாமல் ஒடுக்கப்படுகிறார்கள். சுரண்டுபவன் தைரியமாக சுரண்டுகிறான்.
- பெரும்பாலான கதைகளில் சிறுவர்கள் கதைமாந்தராகவும் அல்லது சிறு வயதில் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா அல்லது இன்னும் பால்யத்தை விட்டு வெளியேறாமல் இருக்கிறதா உங்கள் படைப்பு மனம்?
இருக்கலாம். இவை அனைத்தும் என் ஆரம்ப கதைகள் தான். அதனால் ஒருவேளை அப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் முதல் தொகுப்பிற்கு பிறகு வெளியான எந்தக் கதையும் அப்படியானதல்ல.
- பெண் கதைமாந்தாரின் கதைகளை(விடிவிப்பு, நகரி) சொல்லும் போதும் பெண்களின் நுட்ப உணர்வுதளங்களை எழுத முடியாமல் போவதற்கு என்ன காரணமென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
தெரியவில்லை.
- நிழல் தேடும் பறவைகள் சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் பெண்ணாக மாறிப்போன தனது அப்பாவை கூடவே இருக்கச் சொல்லும் காட்சியை நினைவூட்டுகிறது, அதை போல உங்கள் படைப்பை ஒருபகுதியை பிற கலைவடிவிலோ அல்லது பிறர் படைப்பிலோ கண்டிருக்கின்றீர்களா? அப்படி கண்டறியும் போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?
இதே கேள்வி பலமுறை கேட்கபட்டுவிட்டது. நிழல் தேடும் பறவைகள் கதையை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதினேன். அது புதுவைப் பாமரன் என்ற இதழில் வெளிவந்தது. அப்பொது அதை ஒரு குறுங்கதையாக மாற்றம் என்றத் தலைப்பில் எழுதியிருந்தேன். மீண்டும் அதை விரிவாக இந்த தலைப்பில் எழுதினேன். அக்கதைக்கூட படம் வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்பே பதாகையில் வெளிவந்தது. திரைப்படங்களில் இவ்வாறு எடுத்தால்வது இப்போது சகஜமான ஒன்று தான். சர்வசாதாரணமாக அவர்கள் அதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். எனது அமிலம் என்ற சிறுகதை வாசகசாலை இனைய இதழில் வெளிவந்தது. அதை ஒரு நண்பர் நாளைய இயக்குனருக்காக என்னுடம் அனுமதி பெற்று குறும்படமாக்கினார். ஆனால் அதை அப்படியே ஒரு பிரபல படத்தில் ஒரு காட்சியாக்கிவிட்டனர்.
- சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் அவளது திருமண வாழ்வை பாதிக்கும் என்ற பல்வேறு ஆய்வுகளும் அதை மையம் கொண்ட புனைவுகளும் வந்திருக்கும் நிலையில் உங்களது மௌனம் கலையட்டும் ஒரு சிறுவனுக்கு நடக்கும் வன்கொடுமையை பதிவு செய்கிறது. அவனது உளசிக்கல்களை பேசுகிறது, இந்த கதையின் கருவை நீங்கள் புனைவாக்கும் போது உங்களுக்கிருந்த சவால்கள் என்னென்ன?
உண்மையில் இது எனக்கு நடந்த ஒரு விஷயம் தான். இதை பகிரங்கமாக வெளிபடுத்த தயங்கவில்லை. நிச்சயம் இது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றே இதைக் கதையாக்கினேன். ஆனால் ஒவ்வொன்றையுன் நினைவுக்கூர்ந்து எழுதுவது தான் மிகக் கடினமானதாக இருந்தது. மீண்டு வந்த ஒரு கிணற்றுக்குள் மறுபடியும் குதிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் குதித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
- பிணந்தின்னிகள், பதிலடி போன்ற கதைகளில் நீங்கள் பூடகமாக பதிய விரும்புவது சாதிய ஏற்றத்தாழ்வுகளையா?
நிச்சயமாக. சாதிய கொடுமைகளால் தலித் மக்கள் மட்டுமே பாதிக்கபடுவதாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மை என்றாலும் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் உள்ளவர்களார் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். பிணந்தின்னிகளில், பொருளாதார ரீதியில் எவ்வித உதவியும் செய்ய முன்வராத சொந்த சாதியினர், அடுத்தவர்களின் திருமண விஷயத்தில் தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதும், மற்ற சாதியினரைக் கொல்லத்துணிவதும் எவ்வகையில் நியாயம் என்று இதுவரை தெரியவில்லை.
- மைதானம் இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது நகரமயத்தின் சீரழிவையா அல்லது பருவமாற்றம், வெப்பமாதல் போன்ற பயங்கரத்தையா அல்லது அது மாபெரும் ஏரி புனைவு மட்டுமா?
அரசியலற்ற படைப்பை எப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதாவது ஒருவகையில் சிறு அரசியலையாவதுத் தொட்டுவிடவே எப்போதும் முயல்வேன். சில சமயம் வித்தியாசமான கதைகள் அமையும் போது அதை சமரசம் செய்து கொள்வேன். மைதானம் கதை உலகமையமாக்களால், பன்னாட்டு நிருவனங்களால் கிராமங்களின் நீர் வளம் எவ்வாறு இல்லாமல் போய்விட்டது என்பதையே சொல்ல விரும்பினேன்.
- குப்பைகள் போன்ற சில கதைகளில் கதை வடிவத்தில் புதுமையை முயற்சி செய்திருக்கின்றீர்கள் நீங்கள் கதைக்காக வடிவத்தை தேர்தெடுப்பீர்களா அல்லது இந்த வடிவில் எழுத வேண்டுமென்று முடிவு செய்து விட்டு கதை களத்தை, கருவை யோசிப்பீர்களா?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இரண்டுமே நடக்கிறது. குப்பைகள் கதையைப் பொருத்தவரை முதலில் கதை தான் உருவானது. அதை நேர்க்கோட்டில் தான் எழுதினேன். அது எனக்கு திருப்தி தராததால் இரண்டு முறை மாற்றி எழுதினேன். பிறகே இவ்வடிவம் உருவானது. வடிவத்தை முதலில் தீர்மானித்தும் கதைகள் எழுதியுள்ளேன். ஆனால் அவை எதுவும் பதிலடி தொகுப்பில் இடம்பெறவில்லை. அடுத்தத் தொகுப்பில் வாரும்.
- மாயப்படகு இது நீங்கள் பனிரெண்டாம் வகுப்பில் எழுதியது என்று உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது அதை மறு ஆக்கம் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தத்தற்கு உங்களால் அந்த பதின்வயதுக்கு திரும்பி சென்று எழுத முடியாதென்று நினைத்தது காரணமா?
கண்டிப்பாக. என்னால் மீண்டும் அந்த வயதுக்குரிய மனநிலைக்குச் செல்ல முடியாது. வேலையினால் ஏற்படும் மன அழுத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். சராசரியான ஒரு மனிதனுக்குரிய மனநிலையே இல்லாத போதுப் பதின்பருவ மனநிலைக்குச் செல்வது நிச்சயமாக இயலாதக் காரியம். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
- பாரீஸ் குறுநாவலில் பிரெஞ்ச் குடியுரிமைக்காக பெண்ணுக்கு பணம் கொடுத்து மணந்து கொண்டு பாரீஸ் போகின்றார்கள் என்பது கதைகளம் அந்த மனபோக்கு இப்போதும் இருக்கிறதா? பாரீஸ் குடியுரிமை கொண்ட பெண்ணை மணப்பதன் மூலம் பாரீஸுக்கு குடியேறி அங்கேயே தங்கிவிடும் பழக்கம் நிஜத்தில் இருக்கிறதா ? அதே போல அதில் குடியுரிமையுள்ள ஆண்களை மணந்து குடியுரிமை பெற பெண்கள் பெரிதாக விரும்பதில்லை என்பதில் ஏதேனும் உளவியல் காரணங்கள் உண்டா?
பாரிஸுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இருபாலரிலும் இருக்கிறாகள். ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டால், பெண்கள் இரண்டாம் தாரமாக செல்ல தயங்குவதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது குறைந்துள்ளது. அதற்குக் காரணம், கட்டாயமாக பிரெஞ்ச் மொழி தெரிந்திருக்க வேண்டும், பிரான்ஸ் அரசின் பொருளாதார நிலை, அவர்கள் புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சில கட்டுப்பாடுகள் எனப் பிரான்ஸ்க்குச் செல்வது தற்போது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால் இன்றும் அவ்வாறு நடக்கத்தான் செய்கிறது.
- பாரீஸ் நாவலிலும், சில சிறுகதைகளிலும் கதை களமான பாண்டிச்சேரியும் அதன் போதை வஸ்துகளும் நாவலில், சிறுகதையில் உபயோகபடுத்தியிருக்கும் கதைமாந்தர் சிலரின் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும்படி அமைந்திருப்பதற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா?
இந்த கேள்வி சற்று வருத்தமளிக்கிறது. மனிதர்கள் பல நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். மிக மேல்தட்டு நிலை முதல் மிக மிக கீழ் தட்டு நிலைவரை வாழும் மனிதர்களின் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் மிக அதிக அளவில் வித்தியாசம் இருக்கும். நீங்கள் கேட்டும் கேள்வி கீழ்தட்டு மக்கள் அதிக அளவில் கெட்ட வார்த்தகள் பேசுவது போலவும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் அதிக போதை மற்றும் குடிக்கு அடிமையானர்கள் போலவும் சொல்ல வருகறீர்கள் என்றுத் தோன்றுகிறது. உண்மையில் பாண்டிச்சேரிக்கு அதிகமாக குடிக்க வெளி மாநிலத்திலிருந்து தான் வருகிறார்கள். உழைப்பால் ஏற்படும் உடல் வலி மற்றும் மன அழுத்ததிற்காக குடிக்கும் கீழ்தட்டு மக்களை விட வெறும் போதைக்காக குடிக்கு மேல் தட்டு மக்கள் அதிகம். பப்களில் பயன்படுத்தப்படும் போதை வஸ்துகளை கீழ்தட்டு மக்கள் பார்த்தே இருக்கமாட்டார்கள். ஃபக் எனும் ஆங்கில வார்த்தை எந்த வகையில் காதுக்கு இனிமையான வார்த்தை என தெரியவில்லை.