விஜய் விக்கி

நேசக்கரங்கள்

விஜய் விக்கி

மொபைலை எடுத்து செல்பி எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையின் கடைசி செல்பி அது, பொய்யான சிரிப்பு பொங்கி வழிந்தது. அவசரமாக பேஸ்புக்கில் அப்டேட் செய்தேன். அநேகமாக ஐம்பது லைக்குகள் விழக்கூடும். நாளைக்கு என் இறப்பை பகிரப் போகும் நண்பர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த நினைவுப்பரிசு இது. “நேத்துதான் பிக்சர் அப்டேட் பண்ணிருந்தான். அழகா சிரிச்சபடி போஸ் கொடுத்திருக்கான் பாரு. ச்ச, இப்டி முடிவெடுத்திட்டானே” என பொருமிக்கொண்டு ஒரு “ஆர்.ஐ.பி” ஸ்டேட்டஸ் போடக்கூடும்.

பர்ஸ்க்குள் புதைந்திருந்த ஆதார் அட்டையை எடுத்து சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டேன். ஒருவேளை மாடியிலிருந்து கீழே குதித்து, முகம் சிதைந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டால் இந்த ஆதார் அட்டை ஒரு அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டும். “அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை” என ஏதோ ஒரு டீக்கடை வாசலில் செய்தியாக மனம் ஒப்பவில்லை.

வாழ்வதில்தான் முறையான திட்டமிடல் இல்லாமல் தோற்றுவிட்டேன், இந்த இறப்பிலாவது எல்லாம் முறையாக நடக்கட்டும்.

இனி இருக்கும் பொழுது எனக்கான விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள. மெல்ல நடந்து அருகிலுள்ள செட்டிநாடு ஹோட்டலை அடைந்தேன்.

வாயிலில் அடுக்கப்பட்டிருக்கும் மெனு புகைப்படங்களை பார்த்தே பலநாட்கள், நாவினில் எச்சில் ஊறியதுண்டு. உள்ளே சென்று அமர்ந்து, விலைப்பட்டியலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இதுநாள் வரை கண்களால் ரசித்த அத்தனை பதார்த்தங்களையும் ஆர்டர் செய்தேன். உணவுப்பட்டியலை எழுதிக்கொண்ட வெய்ட்டர், சற்று விசித்திரமாக பார்த்துவிட்டு நகர்ந்து சென்றார்.

பறவை, நடப்பன, ஊர்வன, நீர் வாழ்வன என ஒரு உயிருக்கும் ஈவு இரக்கம் பார்க்கவில்லை. பிரியாணியின் வாசனை, நாசிக்குள் நுழைந்து சிறுகுடலை ஊடுருவிக்கொண்டிருந்தது. ஆசையோடு அள்ளி ஒரு வாய் வைத்தேன். நாவின் சுவை மொட்டுகளில் பட்டபோது, அப்படியொரு சிலிர்ப்பை உணரமுடிந்தது. ரசித்து ருசித்து மென்று விழுங்கியபோது, “இதுதான் உன் கடைசி சாப்பாடு!” என்று மனம் நினைவூட்டியது. சட்டென உடலுக்குள் ஒரு மாற்றம், இரைப்பைக்குள் எக்கச்சக்கமாய்ச் சுரந்த அமிலங்கள். உடல் முழுக்க வியர்த்து, தொண்டைக்குழியை அடைந்த முதல் வாய் அதற்கு கீழே செல்ல மறுத்து ஸ்தம்பித்து இடைநின்றது. பதற்றம் உச்சந்தலைக்குள் ஊசியாய் குத்த, வாயிலிருக்கும் உணவை சிரமப்பட்டு விழுங்கினேன். மூச்சு இறைத்தது. இதற்குமேல் சாப்பிட மனம் ஒப்பவில்லை. மேசையில் அடுக்கப்பட்டிருந்த உணவுகளை ஏக்கத்தோடு ஏறிட்டபடியே, கைகழுவ சென்றுவிட்டேன்.

“என்ன சார் சாப்பாடு ஏதும் சரியில்லையா?” குற்ற உணர்வோடு குரல் தணித்து வினவினான் ஊழியன்.

“இல்லப்பா. கொஞ்சம் உடம்பு சரியில்ல.”

“வேணும்னா பார்சல் பண்ணிடவா?”

“இல்ல. பரவால்ல. பில் கொடுங்க, போதும்!” சற்று ஆசுவாசமாக அமர்ந்துகொண்டேன். குவளையில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டேன். ஏனோ அழவேண்டும் போல இருக்கிறது. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தேன். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சக மனிதர்கள். என் அழுகை அந்த இடத்துச் சூழலின் ரம்மியத்தை கெடுத்துவிடக்கூடும். எச்சிலோடு என் அழுகையையும் சேர்த்தே விழுங்கிக்கொண்டு அங்கிருந்து எழுந்துவிட்டேன்.

பில்லை கையில் கொடுத்துவிட்டு, ஒருவித கழிவிரக்கத்தோடு என்னை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஊழியன். முகம் அறியாத, முன்பின் தெரியாத சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கத்தினை இப்படி அதிசயமான சிலரிடம் மட்டும்தான் பார்க்க முடிகிறது.

எண்ணூற்று நாற்பது ரூபாய் மொத்தம். ஆயிரம் ரூபாய் தாளினை எடுத்து வைத்தேன். “சேஞ்ச் வேணாம்!” என அங்கிருந்து கடந்து சென்றேன்.

அந்திவெயில் நெற்றியை சுளீறிட்டது. உணவகத்திலிருந்து வெளியே வந்ததும், கால் போன போக்கில் நடக்கத்தொடங்கினேன். எங்கே போவது? ஒரு யோசனையும் இல்லை. நினைவு முழுக்க நெருங்கிக்கொண்டிருக்கும் பத்து மணியை ஒட்டியே ஓடிக்கொண்டிருந்தது.

“பீச் போறியா சார்?” ஷேர் ஆட்டோ ஒன்று நகர்ந்தபடியே வினவிக்கொண்டு வந்தது.

கடற்கரை. அதுவும் தோதான இடம்தான். பலதரப்பட்ட மனிதர்களை, பரபரப்பற்ற சூழலில் எதிர்கொள்வது அத்துனை அலாதியான அனுபவம்தான். ஏறிக்கொண்டேன்.

கண்ணகி சிலையருகே இறங்கிக்கொண்டேன். யாருக்காகவோ நீதி கேட்க இன்னமும் கையில் சிலம்போடு காத்துக்கொண்டிருக்கிறாள் அந்த கற்புக்கரசி. ஆற்றாமையோடு அவளை கடந்து கடற்கரை மணலில் கால் பதித்து நடக்கத்தொடங்கினேன். உப்புக்காற்று முகத்தில் படிந்து பிசுபிசுப்பாகியது. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கப்போகிறேன்? இருக்கப்போகும் ஒருசில மணிகளையும் இப்படி நடந்தே கடப்பதாய் உத்தேசமா? அதிகமாய் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு மையத்தில் அமர்ந்தேன். மணலில் பந்து எறிந்து விளையாடும் குழந்தைகள், அதிதீவிரமாக விரல்களை வருடிக்கொண்டே கதைத்துக்கொண்டிருக்கும் காதலர்கள், ‘இருட்டத்தொடங்கிவிட்டதே, இன்னும் போனியாகவில்லையே,” என ஏக்கத்தோடு ‘கடலை, கடலை’ என கதறிக்கொண்டிருக்கும் பதின்வயது இளைஞன். இந்த உலகத்தில் வேடிக்கை பார்த்திடத்தான் எத்தனை எத்தனை ரசனை நிரம்பிய விஷயங்கள்.  அதோ அங்கு கையில் ஏதோ குச்சியோடு என்னை நோக்கிவரும் மஞ்சள் அப்பிய பெண்மணி கூட ரசிக்கத்தக்கவள்தான்.

என் எதிரே சம்மணமிட்டு அமர்ந்தபோதுதான், அந்த ரசனையையும் தாண்டி அவளுக்குள் ஒரு செயற்கையான தெய்வீக ஒப்பனை அப்பிக்கொண்டிருப்பதை கவனித்தேன். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிலான குங்குமப்பொட்டும், “ரேகை ஜோசியம் பாக்குறியா சார்?” என்ற கொச்சைத்தமிழும் முரண்கள் நிறைந்த அழகாகத்தான் தெரிகிறது.

வழக்கம்போல ‘’வேண்டாம்!’ என மறுக்க மனமில்லை. நம்பிக்கைக்காக இல்லையென்றாலும், ஓரிரு நிமிடங்கள் மரண பயத்திலிருந்து சற்று விலகி பொழுதுபோக்கலாம் என்கிற நப்பாசை.

“சூரிய ரேகை, சுக்கிரன் ரேகை, புதன் ரேகையல்லாம் பின்னிபினைஞ்சு திக்குக்கு ஒண்ணா கெடக்கு சாமி. இன்னதுதான் கஷ்டமுன்னு இல்லாம, இருக்குறதெல்லாம் சிக்கலா நெறஞ்சிருக்கு. ஆயுள் ரேகை அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு சாமி”

படாரென கையை இழுத்துக்கொண்டேன். இதென்ன மாயாஜாலம்? அப்படியே நேரில் பார்த்ததைப்போல பட்டவர்த்தனமாக சொல்கிறாளே!.

“ஒன்னும் பயப்பட வேணாம் சாமி. கெரகம்னு ஒன்னு இருந்தா, பரிகாரம்னு ஒன்னும் இருக்கும். நெறைஞ்ச பவுர்ணமி நாளுல, காளி கோயில்ல வெளக்கேத்தி, நாலு சுமங்கலி பொண்ணுகளுக்கு தானம் பண்ணு சாமி. உன்னப்புடிச்ச கெரகமெல்லாம் விலகும்!” கண்களை மூடிக்கொண்டு ஒருவித மந்திரக்குரலில் சொல்கிறாள்.

மனதிற்குள் படாரென ஒரு ‘ப்ளாஷ்’. ஒருவேளை இவள் சொல்வதைப்போல செய்து பார்க்கலாமா? மனது காளி கோவிலை நோக்கி பயணிக்கத்தொடங்கியது. இதென்ன முட்டாள்த்தனம்? சாவின் விளிம்பில் நின்றுகொண்டு, மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுப்பதேன்? அவசரமாக அப்பெண்ணின் கையில் ஒரு நூறு ரூபாய் தாளினை திணித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். வாழும்போதுதான் எடுத்த முடிவுகள் அத்தனையும் குழப்பங்களின் உச்சம் என்றால், இறப்பிலும் அந்த தெளிவை இழக்க விரும்பவில்லை.

பொங்கிவரும் கடல் அலைகளில் கால் பதித்தவாறே நடக்கத்தொடங்கினேன். குதூகலமாக தண்ணீரினில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களை பார்த்தபோது பால்ய நினைவுகள் அரும்பத்தொடங்கின. பசும்பொன் போன்ற பொய்மை கலக்காத சிரிப்புகள் அவை. முந்தையநாள் அப்பாவிடம் வாங்கிய அடியின் சுவடும் இல்லாது, மறுநாள் எழுதப்போகும் தேர்வு பற்றிய பதற்றமும் இல்லாது, அந்த நிமிடங்களை ரசித்து வாழ்ந்த காலங்கள் அவை. அத்தகைய ஜென் நிலையை இப்போதெல்லாம் யோசித்துப்பார்த்திடவே முடியவில்லை. சுற்றிலும் பாம்புகள் சீறிக்கொண்டிருக்க, பறந்துவரும் பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு பெயர்தான் ஜென் நிலையா? ஒருபுறம் அது முட்டாள்த்தனமாக தெரிந்தாலும், மறுபுறம் வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தகைய வித்தையை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

 “சார். உங்களைத்தான்.” யாரோ பின்னாலிருந்து அழைக்கிறார்கள். திரும்பிப்பார்த்தேன், இளம்பெண் ஒருத்தி. வெகுநேரமாக என்னை அழைத்திருக்கக்கூடும், நான் ஒருவழியாய் திரும்பிப்பார்த்துவிட்டதன் மனநிறைவு அவள் கண்களுக்குள்.

“சொல்லுங்க.” திரும்பினேன்.

“டைம் என்ன சார்?”

“எட்டு ஆகப்போகுது.”

“தாங்க்ஸ்” சிரித்துக்கொண்டே சொன்னாள். அப்போதுதான் அவளை கொஞ்சம் உற்று நோக்கினேன். சிவப்பு ஜிகினா சேலை, தலை நிரம்பிய மல்லிகை, உதட்டை மீறிய லிப்ஸ்டிக் ஒப்பனை. எதையும் கவனிக்காததை போல அவசரமாக கடலை நோக்கி திரும்பிவிட்டேன். அவள் இன்னும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள், மெல்ல என்னருகே நகர்ந்து வருகிறாள். இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தடுமாறியபடிதான் நின்றேன்.

“பக்கத்துல ரூம் இருக்கு, ஆயிரம் ரூபாய்தான் சார்.” காதருகே கிசுகிசுத்தாள். பதற்றத்தில் வியர்த்து வழியத்தொடங்கியது. சட்டைப்பைக்குள் இருக்கும் ரூபாய்களை தேற்றி எப்படியும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடமுடியும்தான்.

அந்த தருணத்தில் மனதிற்கு இதமான ஒரு அனுசரணை தேவைப்படுகிறதுதான். பற்றி எரிந்துகொண்டிருக்கும் வைக்கோல்போரில் அள்ளி வீசவேண்டிய தண்ணீரைப்போல.

அவள் பின்னே நடக்கத் தொடங்கினேன். நான்கைந்து சந்துபொந்துகளை கடந்து, நாய்களின் ஊளைச்சத்தம் மங்கியிருந்த அந்த அழுக்கு படிந்த மாடிப்படிகளில் ஏறினோம். சற்றே சிதிலமடைந்துபோன ஒரு அறைக்குள் நுழைந்தபோது, மரண பயத்தையும் மீறிய ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

விளக்கை போட்டுவிட்டு, கதவில் உள்தாழ்ப்பாளையும் போட்டுவிட்டாள். அருகிலிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை ‘ஆன்’ செய்துவிட்டு, அதன் சத்தத்தை அதிகப்படுத்தினாள். கட்டிலில் சிதறிக்கிடந்த துணிகளை ஓரமாக அள்ளிவைத்துவிட்டு, என்னெதிரே செயற்கை சிரிப்புடன் வந்து நிற்கிறாள்.

‘நான் ரெடி, இனிமே நீதான் தொடங்கணும்!’ வார்த்தைகளில் அல்லாது, மெளனமாக உணரவைத்தாள். ஆனால் நான் எப்படி தொடங்குவது? முன்பின் அனுபவம் இருந்திருந்தால்கூட யோசிக்காமல் தொடங்கியிருப்பேன். நான் யோசித்துக்கொண்டிருப்பதன் உள்ளர்த்தம் உணர்ந்தவள் போல, என் சட்டை பொத்தான்களை அவளே கழற்றத் தொடங்கினாள். தன் சேலையையும் விலக்கிவிட்டு, என் வலதுகையை எடுத்து அவள் தோள் மீது வைத்தாள். கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை போல செய்துகொண்டிருக்கிறாள். இதற்குமேலும் மௌனசாமியாராய் நின்றிருந்தால், என் ஆண்மையின் மீதல்லவா சந்தேகம் கொண்டுவிடுவாள்.

அவளை வாரி அணைத்து உடைகளை களையத்தொடங்கினேன். அரை மயக்கத்தில் உச்சந்தலைக்குள் உணர்வுகள் கொப்பளிப்பதை உணர்ந்தேன். இப்படியும்கூட ஒருவித இன்பம் உடலுக்குள் ஏற்படுமா என்று எண்ணம் தோன்றிய மறுநொடியே எங்கிருந்தோ ஒருவித கவலை என்னையும் மீறி பீறிட்டு வழிந்தது. இன்னும் சில நிமிடங்களில் எழுதப்போகும் எனக்கான மரண சாசனம் பற்றியதான கவலை அது.

சாகப்போகும் தருணத்திலும் பாவக்கணக்கினை அதிகமாக்கிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. சட்டென விலகிக்கொண்டேன். வேகமாய் சட்டையை அணிந்துகொண்டு உடையினை சரிசெய்துகொண்டேன். விசித்திரமாக என்னை ஏறிட்டுப்பார்த்தவள், என்னை மேற்கொண்டு “என்ன? ஏன்?” என கேட்பதற்குள், அங்கிருந்து அவசரமாக வெளியேறினேன். நான் படிகளில் கீழே இறங்கியபோது, அவள் வாசல் வரை வந்து என்னை அதிசயமாக வெறித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் வேகமாய் அவள் கண்களை விட்டு மறைந்தேன்.

ஆள் அரவமற்ற அந்த அரைகுறை கட்டிடத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதரை மணிகடந்திருந்தது. எதிர்பார்த்ததை போலவே மனித நடமாட்டம் எதுவுமில்லாது, என் இறப்பை ஏற்றுக்கொள்ளும்விதமாய் தயாராக நிற்கிறது அந்த கட்டிடம். லிப்ட் எதுவும் இல்லை, அத்தனை மாடிகளையும் ஏறித்தான் கடக்கவேண்டும். கிடுகிடுவென படிகளில் தாவியேறினேன்.

மூச்சிரைக்க பதினான்காவது மாடியை அடைந்தபோது, இதயம் இடியென இடித்துக்கொண்டிருந்தது. வியர்வை உடலை குளிப்பாட்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததால், படிகளில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். நேரம் பத்தை தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது. அலைபேசியை எடுத்து அனிச்சையாகவே அம்மாவின் எண்ணுக்கு அழைத்தது எனது விரல்கள்.

“என்னப்பா?. நல்லாருக்கியா?”

“இருக்கேன்மா..”

“சாப்டியா?..”

“ஹ்ம்ம் சாப்ட்டேன்.” வழக்கமாக இந்த பேச்சோடு அழைப்பினை துண்டித்துவிடும் நான், இன்று ஏனோ அமைதியாக காத்திருப்பது அம்மாவுக்கு சற்று விசித்திரமாக தெரிந்திருக்கக்கூடும்.

“எதுவும் பிரச்சினையாப்பா?. பணம் காசு எதுவும் வேணுமா?”

“அதல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ நல்லா இருக்கியா?. உடம்ப பார்த்துக்கோ, நேரா நேரத்துக்கு சாப்பிடு.”

ஓரிரு வினாடிகள் மௌனத்துக்கு பிறகு, “என்னய்யா உடம்பு கிடம்பு சரியில்லையா?” கேள்விக்குறியோடு சந்தேகக்கணையும் சேர்ந்தே வந்தது.

அவசரமாக அழைப்பை துண்டித்தேன்.

யோசிக்கவெல்லாம் மனதிற்கு அவகாசம் கொடுத்திடாமல் சட்டென எழுந்து, மாடியின் விளிம்பில் நின்று கீழே எட்டிப்பார்த்தேன்.. வெகு அரிதாகவே வாகன போக்குவரத்து தென்படுகிறது. குறைவுயிராய் கிடக்கையில், அனுதாபத்தோடு ஆம்புலன்ஸ்’ஐ அணுகும் நிதானம் அங்கு தென்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தது.

சரி குதித்துவிடலாம் என்கிற தீர்மானத்தோடு இன்னும் விளிம்பினை நோக்கி நகர்ந்து வந்தேன். கால் கிடுகிடுத்தது, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அமிலமாய் எரியத்தொடங்கியது. அழுகை என்னையும் மீறி. ததும்பி வழிந்தது.

எவன் சொன்னது தற்கொலை என்பது கோழைத்தனம் என்று?  இதோ. இந்த நிமிடத்தில் இங்கிருந்து நான் குதிப்பதற்கு ஒரு அனாயச துணிச்சல் வேண்டும். வாழ்வதற்கான துணிச்சலை காட்டிலும், சிலபல கிலோக்கள் கூடுதல் துணிச்சல் அவசியம்.

ஆறு முறை எத்தனித்தும் இன்னும் குதித்திட முடியாமல் தடுமாறி நிற்கிறேன். கடவுளே, என்ன இது சோதனை? இவ்வளவு நேரமாய் மனதை சாவிற்கு ஆயத்தப்படுத்தியிருந்தும், கடைசி புள்ளியில் இப்படி தடுமாறுகிறதே. கண்களை மூடி, மூச்சினை உள்வாங்கி, இதுவரை பட்ட கஷ்டங்களிலேயே உச்சபட்ச கவலையை மனதில் நிலை நிறுத்தினேன். கால் இடறுகிறது. ஐயோ.

தடுமாறிவிட்டேன். காற்றில் மிதக்கிறேன், உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதை போல உணர்கிறேன். இன்னும் சில கணப்பொழுதில் தரையில் மோதி சிதறப்போகிறேன். இடையில் ஏதோ கேபிள் ஒயரில் சிக்கிக் கொள்கிறேன். அதுவும் அறுந்து விழுகிறேன்.

“ஐயோ.. யாரோ கீழ விழுந்துட்டாங்க” குரல் எங்கிருந்தோ ஒலிக்க, நினைவு மெல்ல அஸ்தமித்தது.

கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பீப் சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நினைவு தத்தித்தடுமாறி மெல்ல சிதறியபடியே மீண்டது.

மூக்கிலும், வாயிலும் ஏதோ குழாய்கள் சொருகப்பட்டு, பலவண்ண ஒயர்கள் உடல் முழுக்க இணைக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறேன். ஐசியூ’வில்தான் இருக்கிறேன் போலும், மருந்து நெடி சுவாசத்தோடு கலந்துவிட்டது. எப்படி பிழைத்தேன்? அந்த பாழாய்ப்போன கேபிள் ஒயரில் சிக்கியிருக்கக்கூடாது, இப்படி குற்றுயிராய் கிடக்கவைத்துவிட்டது.

கண் பார்வை அரைகுறை தெளிவோடுதான் தெரிகிறது. இப்போதுதான் உணர்வுகளும் மெல்ல மேலெழுகிறது. உடல் முழுக்க வலி தெறிக்கிறது அழக்கூட திராணியற்றுக் கிடக்கிறேன். வாயில் சொருகியிருக்கும் குழாய், குமட்டிக்கொண்டு வருகிறது. எல்லாவற்றையும் பிய்த்து எறிந்துவிட்டு எழுந்து ஓடவேண்டும் போல தோன்றுகிறது.

மங்கலான பார்வையில் என் கட்டிலருகே வெகுநேரமாக நின்றுகொண்டிருக்கும் ஒரு உருவத்தை அப்போதுதான் கவனிக்கிறேன் அம்மா.. அம்மாவேதான்.. சேலையின் முனையில் வாய்பொத்தி அழுதுகொண்டு நிற்கிறாள். உணர்வற்ற என் கால்களை ஒரு கையால் பிடித்தபடி நிற்கிறாள்.

செவிலிப்பெண் ஒருத்திவந்து, அழுதுகொண்டிருக்கும் அம்மாவை கண்டிக்கிறாள். அங்கிருந்து வெளியேற்ற முற்படுகிறாள். விடாப்பிடியாக அங்கு நின்றபடி நகர மறுக்கிறாள் அம்மா ஐயோ.. நான் இறந்துபோனால், என் கஷ்டங்களையும் சேர்த்து அம்மாவின் தலையிலல்லவா சுமைகளாக ஏற்றிவிடுவேன். துடித்துப்போய்விடுவாளே. பெற்ற பிள்ளையின் இறப்பை, எதிர்கொண்டு வாழும் கொடும் சூழலை நினைத்தாலே குலைநடுங்குகிறது. எழுந்துசென்று அவள் கண்களை துடைத்துவிட்டு அழவேண்டும் போல இருக்கிறது. உயிர் வாழும் வரையில் வாழ்வது மட்டும்தான் சுமையாக தெரிந்தது, மரணத்தின் விளிம்பில் நிற்கும்போதுதான் வாழ்விற்கு பின்னால் நடப்பவற்றை யோசிக்க மனம் தூண்டுகிறது.

ஐயோ நான் சாகக்கூடாது. எப்படியாவது உயிர்பிழைத்து, வாழவேண்டும் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து குணமாகிவிடவேண்டும். ஐயோ.. என்ன இது? கண் பார்வை மெல்ல மங்கிக்கொண்டு வருகிறது.

மூச்சுவிட அதிகம் சிரமமாக இருக்கிறது.. நினைவுகள் முன்னும் பின்னுமாய் தடுமாறுகிறது.

ஏதோ அவசர பீப் சத்தம் ஒன்று விடாமல் ஒலிக்க, என்னை நோக்கி வேகமாய் ஓடிவருகிறார்கள் செவிலிப்பெண்கள்யாரோ ஒரு மருத்துவர் என் நெஞ்சின்மீது கைகளை வைத்து அழுத்துகிறார், என்னைச் சுற்றி எத்தனை பேர், என்னைப் பற்றும் கரங்கள் எத்தனை. அவசரமாக பல ஊசிகள் ஏற்றப்படுகின்றன.

கடவுளே.. எவ்வளவுபெரிய பிழையை செய்துவிட்டேன், எப்படியாவது இதிலிருந்து மீளவேண்டும் நான் சாகக்கூடாது…  நான் சாகக்கூடாது…

 

சிவப்புக்கிளி

விஜய் விக்கி

காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள் சிதறியபடியே உள்ளத்தினை பரபரக்கச்செய்துகொண்டிருக்கிறது.. ஏற்றுமதி நிறுவனத்துக்கு அனுப்பவேண்டிய ஒப்பந்தப்படிவம் கிடப்பிலேயே போடப்பட்டிருப்பதற்கு மேலாளரிடம் ஒரு குட்டும் வாங்கியாகிவிட்டது.. இன்றைய நாள் இதைவிட மோசமாகிவிட முடியாது என்கிற தீர்க்கமான முடிவிற்கு வருமளவு எல்லாம் எரிச்சல்மயம்.. ஏதோ ஒரு கடுகடுப்பு மனதினுள் உறுத்திக்கொண்டே இருக்கிறது, பொறிக்குள் சிக்கிய எலியாக மனம் பதைபதைக்கிறது…

அலுவலகத்திலிருந்து படியிறங்கி, அருகிலுள்ள பெட்டிக்கடையை அடைந்தேன்.. வழக்கமான பரிச்சயப் புன்னகையுடன் கிங்க்ஸ் சிகரெட்டை எடுத்து கண்ணாடி குடுவையின் மீது வைத்தார் அண்ணாச்சி.. அதனை அவசரமாக பற்றவைத்தபடி அருகிலிருந்த திட்டினில் அமர்ந்தேன்.. ஒன்றிரண்டு புகைத்தலுக்கு பிறகு பதற்றம் சற்று தணிந்திருப்பதாக உணர்ந்தேன்..

கவினை அடித்திருக்கக்கூடாது!.. ஐந்து வயது குழந்தைக்கு என்ன உலக ஞானம் தெரிந்திருக்கப்போகிறது?… முட்டாள்த்தனமாக கன்னத்தில் ஒரு அறை, முதுகினில் இரண்டு அடிகள்… வலியால் துடித்து அழுதுவிட்டான்.. அப்படி அடிக்கும் அளவிற்கு என்ன தவறுசெய்துவிட்டான்?..

அவனுடைய டிராயிங் புத்தகத்தில் வரையப்பட்டிருந்த கிளிக்கு சிவப்பு வண்ணம் தீட்டியதற்குத்தான் அவ்வளவு அடிகளும், அதனை தொடர்ந்து என்னுடைய முழுநாள் புலம்பல்களும்..

“கிளிக்கு வேற கலர்ல பெயின்ட் பண்ணதுக்காக யாராச்சும் குழந்தைய போட்டு அடிப்பாங்களா?” அலுவலக பார்க்கிங்கில், சகா சற்று ஆற்றாமையுடன் வினவினார்…

“என்னப்பா பண்றது!… அந்த நிமிஷம் அது தப்புன்னு பட்டுச்சு.. கிளி பச்சை கலர்லதான் இருக்கும்னு ஒரு அடிப்படை அறிவுகூட இல்லையேன்னு சட்டுன்னு ஒரு கோபம், யோசிக்காம அடிச்சுட்டேன்..”

“சரி விடு.. வீட்டுக்கு போனதும் சமாதானப்படுத்திடு வெங்கட்.. இல்லைன்னா, உன்மேல லேசா அவனுக்கு வெறுப்பு படிஞ்சிடும்.. நாளடைவுல அதுவே அப்பா பையனுக்கு இடைல ஒரு விரிசல உண்டாக்கிடும்..”

தன் பங்கிற்கு சகாவும் மேலதிகமாய் குழப்புகிறார்.. இன்னும் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தால், கவினுடனான சண்டையை பாகப்பிரிவினை அளவுக்கு கற்பனை செய்துவிடுவார்… அவசரமாக அந்த கற்பனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்பொருட்டு, உறுமிக்கொண்டிருந்த பைக்கை ஸ்டார்ட் செய்து சர்ரென கிளம்பிவிட்டேன்..

இந்நேரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்திருப்பான் கவின்… எங்காவது வெளியே அழைத்துச்செல்ல வேண்டும்… அவனுக்கு பிடித்தமான ப்ளாக் கரண்ட்  ஐஸ் க்ரீமும், பென்டன் பொம்மையுமே கவினை சமாதானப்படுத்த போதுமான விஷயங்கள்தான்!..

கோபமோ சந்தோஷமோ, குழந்தைகளை பொருத்தவரைக்கும் அந்தந்த தருணங்களை சார்ந்தவை மட்டுமே… நம்மைப்போல கோபங்களை மனதிலே சுமந்துகொண்டு, பழிதீர்க்க வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்குகள் கிடையாது!..

மனதினுள் கவினின் சிரித்த முகம் பிம்பமாய் தோன்றி, எனது குற்ற உணர்ச்சியை மேலும் அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறது.. கிளியின் வண்ணம் என்னவாக இருந்தால் எனக்கென்ன?.. நிஜத்தில் கவினை அடித்ததற்கு அதுதான் காரணமா? என்றால், என் மனமே கூட அதனை ஒப்புக்கொள்ள தடுமாறும், வெட்கித்தலை குனியும்.. கிளிக்கு ஏன் அவன் சிகப்பு, மஞ்சள் என வண்ணங்கள் தீட்டனும்?… சட்டென விதவிதமான வண்ணங்களை பார்த்ததும் மனதிற்குள் ஒரு பகீர் உணர்வு.. சற்றும் மனம் நிதானித்திடாமல், அடிக்கத்துணிந்துவிட்டேன்…

எனக்கொன்றும் வண்ணங்களின் மீது போபியா இல்லை… கிட்டத்தட்ட ஒருவார காலமாகவே மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயம், அதன் க்ரிட்டிக்கல் அளவீட்டினை தாண்டியபோது வெடித்து சிதறிய எண்ணக்குவியல்களின் விளைவுதான் கிளியை காரணமாக பிடித்துக்கொண்டு, என் செல்ல மகனை அடித்துவிட்டேன்… வண்ணங்களின் மீதான வெறுப்பும் அப்போதுதான் அரும்பியது..

கடந்த வாரத்தில் ஒருநாள், வழக்கமாக நாளிதழ்களை புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் ஜனனி அந்த பேச்சினை சாவகாசமாக தொடங்கினாள்… இல்லை, நான்தான் எப்படியோ ஹரியைப்பற்றிய பேச்சினை தொடங்கி ஒரு பூகம்பத்தின் வரவுக்கு பூக்கோலமிட்டேன்…

“எங்க போனான் ஹரி?.. ஆள பார்த்தே நாலஞ்சு நாள் ஆகுதுல்ல… இந்நேரம் இருந்திருந்தா நூறு ‘மாமா’ போட்டு, ஆயிரம் விஷயங்கள பேசிருப்பான்…” சிரித்தபடியே கலவரத்துக்கு தொடக்கப்புள்ளி வைத்தேன்…

“உங்க காதுக்கு இன்னும் அந்த விஷயம் வந்து சேரலையா?..” தக்காளியை பக்குவமாக நறுக்கிக்கொண்டிருந்தாள் ஜனனி..

“எந்த விஷயம்?” ஆர்வமானேன்..

“ஹரியைப்பத்தி.. நம்ம அப்பார்ட்மென்ட் முழுக்க பேசிப்பேசி ஓஞ்சு போன விஷயமாச்சே.. செகரட்டரி பாலு சார் சொல்லிருப்பார்னு நெனச்சேனே?”

“யாரும் எதுவும் சொல்லல ஜனு.. யாரையும் நான் பார்க்கவும் இல்ல… நீ புதிர்போடாம விஷயத்த சொல்லு” சற்று கடுகடுத்தேன்.. ஜனனிக்கு எப்போதும் தலையை சுற்றி மூக்கைத்தொட்டு பேசுவதுதான் வழக்கம்.. ஆர்வமாய் ஏதோ ஒரு தகவலுக்கு காத்திருக்க, அவளோ திருச்சி வழியாய் திண்டுக்கல் வந்துதான் கதையை சொல்லி முடிப்பாள்…

“நம்ம ஹரி ஹோமோசெக்சுவலாம்.”

“என்னது?”

“ஹ்ம்ம்… ஆமாங்க… அந்த பசங்களுக்கு பசங்க மேலயே ஈர்ப்பு வரும்ல.. அதான்..” நிமிர்ந்து பார்த்து சொல்லிவிட்டு, மீண்டும் வெங்காயம் நறுக்கத்தொடங்கினாள்.. நான்தான் வழிதவறிய மான், சிங்கத்தின் குகைக்குள் சிக்கிக்கொண்டதைப் போல திகைத்து நிற்கிறேன்.. ஓரிரு வினாடிகள் நிசப்தத்துக்கு பிறகு நானே தொடர்ந்தேன்…

“அவன் அப்டின்னு யார் சொன்னது?”

“ஹரி அம்மாதான்… அழுது புலம்புனாங்க”

“அப்புறம் என்ன பண்ணாங்க?”

“ரெண்டு நாள் ரொம்ப தீவிரமா அவன்கிட்ட பேசிருக்காங்க… அவன் ரொம்ப தெளிவா தன்னோட ஈர்ப்பை பத்தி சொல்லிட்டானாம்… பதினேழு வயசு பையனுக்கு, தன்னைப்பத்தி புரியாதா என்ன?… அதனால அவங்க அப்பா சரின்னு ஏத்துகிட்டார்….” எப்படி ஜனனியால் இவ்வளவு இயல்பாக பேசமுடிகிறது… அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம்கூட பதற்றம் தெரியவில்லை.. எப்படி?..

“அந்தம்மாவுக்கு இதில கஷ்டம் இல்லையா?”

“இல்லாம இருக்குமா?.. இப்பவும் புலம்பிக்கிட்டுதான் இருக்காங்க.. மெல்ல சகஜமாகிடுவாங்கன்னு நெனைக்குறேன்.. இனி புலம்புறதால அவன் மாறவாப்போறான்!…” சிரிக்கிறாள்..

“இதில என்ன சிரிப்பு ஜனனி உனக்கு?.. கொஞ்சம் கூட பதறலையா?… நாம அமெரிக்காவுல ஒன்னும் இல்ல, நமக்குன்னு கலாச்சாரம்னு ஒன்னு இருக்கு… எதுவும் புரியாம அவங்க ஏத்துகிட்டாங்கன்னா நாளைக்கு அக்கம்பக்கத்துல இருக்குற நமக்கு சங்கடமா இருக்காதா?” சமூக அக்கறை என்னை மீறி வெளியில் கசியத்தொடங்கியது..

“இதுல சங்கடப்பட என்ன இருக்கு?… அமெரிக்காவோ ஆண்டிப்பட்டியோ, மனுஷங்க எல்லாம் ஒண்ணுதாங்க.. எல்லாரும் வாயாலதான் சாப்பிடுறோம், காலாலதான் நடக்குறோம்… பெத்த பையன் மேல அவங்களுக்கு இருக்காத அக்கறையா நமக்கு இருக்கப்போகுது?.. நீங்க ஏன் சும்மா குதிக்குறீங்க?ன்னுதான் தெரியல…” சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து சட்னி தாளிக்கத்தொடங்கிவிட்டாள்..

எண்ணெயில் வெங்காயத்தை வதக்கும்போதே, என்னைப்பற்றி ஏதோ முனுமுனுத்துக்கொண்டிருக்கிறாள்.. என்ன பேசுகிறாள்? என ஆராய்ந்து சண்டைபிடிக்க அது தருணமாக தோன்றவில்லை.. என் மனம் முழுவதும் ஹரியைப்பற்றிய நினைவுகளே சுழன்றுகொண்டிருந்தது..

சிறுவயது முதலாகவே எங்கள் வீட்டின் ஒரு பிள்ளைபோல வளர்ந்தவன்.. ஜனனியோடு மணம் முடித்து இந்த புது குடியிருப்புக்கு வந்தபிறகு, ‘அக்கா, மாமா’ என பாசத்தோடு பல பொழுதுகளை இங்கேயே கழித்தவன்.. என்றைக்குமே அவனை ‘பக்கத்து வீட்டுப்பையன்!’ என்ற எண்ணத்தில் பார்த்ததே இல்லை.. ஹரிக்கு பிடித்த சப்பாத்திதான் எங்கள் வீட்டின் பெரும்பாலான நாட்களின் ப்ரேக் பாஸ்ட்.. கவின் பிறந்தபிறகும் கூட, மூத்த மகனைப்போல அத்தனை சலுகைகளும் ஹரிக்கு கொடுக்கப்பட்டுத்தான் வந்தது..

கவினும் கூட “ஹரி அண்ணா!” என்றால் உயிரையே விடுவான்..

பலநாட்கள், “அப்பா, நான் ஹரி அண்ணன் வீட்ல தூங்கிக்கறேன்!” என பதிலுக்காக காத்திராமல் கவின் ஓடிய ஓட்டங்கள் கண்முன் தோன்றி மறைந்தது..

மனம் பதைபதைத்தது.. நாக்கு வறண்டு, தொண்டை கமறியது.. பைக்கினை சாலை ஓரமாக நிறுத்தி சில நிமிடங்கள் ஆசுவாசமடைந்தேன்…

மொபைலை எடுத்து ஜனனியை அழைத்தேன்.. “கவின் வந்துட்டானா?” நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்..

“ஹ்ம்ம்.. இப்போதான் வந்தான்… லேசா காய்ச்சல் அடிக்குற மாதிரி இருக்கு, பெட்ல படுத்திருக்கான்.. நீங்க அடிச்சதுல கன்னமெல்லாம் சிவந்து போயிருக்கு!” அவசரமாக அழைப்பை துண்டித்தேன்… மீண்டும் பேயறைந்ததை போல ஒரு பதற்றம்.. உள்ளங்கையினை விரித்துப்பார்த்தேன்.. சற்று கடினமான தோல், கண்டிப்பாக குழந்தையால் அந்த வலியை தாங்கியிருக்க முடியாதுதான்.. என் மீதே எனக்கு கோபம் கொப்புளித்தது.. விரல்களை மடக்கி பைக்கின் மீது வேகமாய் ஒரு அடி.. விரல்களின் முட்டியில் வலி சுளீரிட்டது.. இப்படித்தானே வலித்திருக்கும் கவினுக்கும்…

ஆனால், எத்தனை முறை கவினிடம் சொல்வது? கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவே இல்லையே .. “இனிமே ஹரி வீட்டுக்கு போகவேணாம் தம்பி…”

“ஏன்பா போகக்கூடாது?”

“அது ஒரு ப்ராப்ளம்ப்பா… உனக்கு சொன்னா புரியாது..”

“சொல்லுங்கப்பா.. புரியுதா இல்லையான்னு அப்புறம் சொல்றேன்..”

“எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது… ஒழுங்கா நான் சொல்றத கேளு, இனி அவங்க வீட்டுக்கு போகாத!” பாசமாய், பக்குவமாய், கெஞ்சி, கடிந்து, அதட்டி என பலவகைகளிலும் சொல்லிப்பார்த்து சலித்துவிட்டேன்… பக்குவமாய் சொல்லும்போது மட்டும், “சரிப்பா” என தலை அசைப்பவன், அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்துதான் வெளியே வருவான்…

ஜனனியிடமும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன், ஆனால் அவளும் கொஞ்சம் கூட என் மனநிலையை புரிந்துகொள்ளவில்லை…

“ஹரி கே’ங்குறதுக்காக கவின் அங்க விளையாட போகக்கூடாதுன்னு சொல்றது என்னங்க நியாயம்… ஹரி நமக்கு இன்னிக்கு நேத்தா பழக்கம்?… அவனும் நம்ம புள்ள மாதிரிதானேங்க.. இதுக்காகவல்லாம் அவனை நாம ஒதுக்குறது தப்புங்க!” கடவுளே!… இவள் பார்த்த பாலச்சந்தர் படங்கள்தான் இப்படி பேசவைக்கிறது… நிதர்சனத்தை ஏற்கவே முற்படவில்லை..

எனக்குள் உண்டான பயத்தை எப்படி இவர்களிடம் தெளியவைப்பது?… நிஜத்தில், என்னுடைய பயம் பற்றி என்னாலே கூட முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.. ஆனால், ஹரி வளர்கின்ற சூழலில் வளர்ந்தால், கண்டிப்பாக கவின் தவறான பாதையில் பயணிக்க நேருமோ? என்றுதான் மனம் அதிகம் பரபரத்தது…

நாளைக்கே, “அப்பா, நானும் கே தான்பா” என கவின் என் முன்னால் வந்து நின்றுவிட்டால், என்னால் அந்த சூழலை எப்படி சமாளிக்க முடியும்?.. அதற்கு இன்னொரு படி மேலே போய், கவினை தவறாக அவன் பயன்படுத்திக்கொண்டால் என்னாவது?… நினைக்கும்போதே இதயம் ஒருமுறை நின்று துடித்தது..  இப்படி ஒருவார காலம் யோசித்துத் தடுமாறி, அதன் விளைவுகளிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை… அவசரமாக அந்த நினைவுகளை லாக் அவுட் செய்துவிட்டு, பைக்கை மீண்டும் செலுத்தினேன்..

ஒருவேளை என் சிந்தனைகள்தான் தவறானவையா? அல்லது ஜனனிக்கு உலகம் இன்னும் புரியவில்லையா?.. ஹரியைப்பற்றிய பேச்சை எடுத்தபோதெல்லாம் அவள் கொஞ்சமும் சலனப்படவே இல்லை.. மாறாக பலநேரங்களில், சாக்ரட்டிஸ் முதல் டிம் குக் வரைக்கும் முற்போக்கு மேதைகளை வாதத்திற்கு துணைக்கு அழைத்துக்கொள்கிறாள்.. பேஸ்புக் புரட்சி பதிவுகளுக்கும் நிதர்சன வாழ்க்கைக்கும் இடையே இருக்கின்ற தூரம் மெர்க்குரிக்கும் ப்ளூட்டோவுக்குமான இடைவெளியின் அளவென்று அவளுக்கு புரியவில்லை..

பேஸ்புக் டிபி’யில் வானவில் படத்தை சேர்ப்பது ஒன்றும் புரட்சிகர சித்தாந்தம் இல்லை என்ற உண்மையும் அவள் அறியவில்லை.. ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் திருமணம் நடக்கவேண்டும், அதுதான் இயற்கையானதும் கூட என்பதை ஏற்று வாழ்வதுதான் நிதர்சனம்.. அது மூடத்தனமாக, அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்தாக இருந்தாலும், சகித்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம் என்கிற பொதுப்படைத்தன்மை அவளுக்கு இல்லாமல் போனது ஆபத்தானது…

அதற்காக நானும் ஒன்றும் பிற்போக்குவாதியென நினைத்திட வேண்டாம்.. வாரத்தில் ஒருநாள் சமைப்பது, வீட்டு வேலைகளை பகிர்வது, சாதி பேதம் பார்த்திடாமல் பழகுவது என்று இந்த உலகம் முற்போக்குவாதியென ஏற்றுக்கொள்ளும் அத்தனை தகுதிகளும் பெற்றிருப்பவன்தான்… அண்மையில் கூட சுவாதி படுகொலையை கண்டித்து, பெண்ணுரிமைக்கு ஆதரவாக ஆறு பத்திகளில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்…

அதற்காக நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே!.. உலகின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் சாமானியன்தான்!..

அன்றொருநாள் அப்படித்தான்… வழக்கமான ஒரு பார்ட்டி… குடியிருப்புவாசிகள் ஒன்றாக குடித்து மகிழ, ஏதேனும் ஒரு காரணம் வழக்கமாய் உருவாக்கப்பட்டிருக்கும்… இரவு முழுக்க குடித்துவிட்டு, ஊர் வம்பை இழுத்துக்கொண்டு, வழக்கமாக ஏதேனும் ஒரு சண்டையில் முடியும் அப்படிப்பட்ட பார்ட்டியின் மூலம் கிடைப்பது இரண்டே விஷயங்கள் மட்டும்தான்.. ஒன்று ஜனனியிடம் அன்றைய பொழுது முழுவதும் வாங்கிக்கட்டும் திட்டு, மற்றொன்று காலையில் கண்விழிக்க முடியாத அளவிற்கான ‘ஹாங் ஓவர்’ தலைவலி.. “இல்ல சார்… நான் வரல.. காலைல கொஞ்சம் ஆபிஸ் வர்க் இருக்கு, பார்க்கணும்!” முதலில் கறாராய் மறுக்கத்தான் செய்தேன்…

“நாளைக்கு சண்டே தான சார்… என்ன வேலை இருந்திடப்போகுது?… எல்லாரும் வர்றாங்க… இப்டி பார்ட்டியே அத்தி பூத்த மாதிரிதான் நம்ம அப்பார்ட்மென்ட்ல நடக்குது, இதல்லாம் மிஸ் பண்ணிடாதிங்க சார்” செகரட்டரி பாலு விடுவதாக இல்லை… அநேகமாக எல்லோரிடமும், “எல்லாரும் வர்றாங்க, நீங்க மிஸ் பண்ணிடாதிங்க!” என்ற வசனத்தைத்தான் இம்மி பிசகாமல் சொல்லியிருப்பார்..

“வேணாம் சார்… ஏற்கனவே எனக்கு நாக்குல சனி, வந்து எதுனாச்சும் சிக்கல் வந்துட்டா வீட்டுக்குள்ள நுழையமுடியாது!”

“என்ன சார் இதல்லாம்?… நான் இருக்கப்போ என்ன பயம் உங்களுக்கு?… தைரியமா வாங்க… உங்க பேவரைட் பாலன்ட்டைன்’ஸ் ஸ்காட்ச் அரேஞ் பண்ணிருக்கேன்.. உங்களுக்காகவே ஸ்பெஷலா பாரின்லேந்து வரவச்சேன்!”

இறுதியாக வேறுவழியின்றி ஒப்புக்கொண்டேன்… பாலுவின் வற்புறுத்தலுக்காக இல்லை, பாலண்டைன் ஸ்காட்ச்’க்காக… உதட்டில் வைத்து ஒரு சிப், அது தொண்டைக்குள் நுழைந்து இரைப்பையை அடைவதற்குள் வரும் அந்த மன்மத கிறக்கம் சொல்லி மாளாது…. அவ்வளவு காஸ்ட்லியான சரக்கு, எப்போதாவது இப்படி ஓசியில் கிடைத்தால்தான் உண்டு… சூழ்ந்து நின்ற சிக்கல்களை, அந்த மதுவின் மயக்கம் மறைத்துவிட்டது…

ஆனால், நான் எதிர்பார்த்தபடியே அங்கு சிக்கல் ஹரியின் அப்பாவின் ரூபத்தில் என் எதிரே ஒரு வைன் க்ளாசுடன் வந்து அமர்ந்தது.. ஹரியைப்பற்றிய பேச்சை எடுக்கவே கூடாது என்று மனதினை பாஸ்வர்ட் போட்டு அடைத்துவைத்திருந்தாலும், அதனை அன்லாக் செய்துகொண்டு வெளியே கொட்டியது வார்த்தைகள்..

“எப்டி சார் உங்களால ஹரியோட ஓரியன்டேஷன அக்சப்ட் பண்ணிக்க முடிஞ்சுது?” சமூக நீதி காத்திட திமிறி எழுந்தது எனது உள்ளம்..

“ஏன்னா அது அவனோட ஓரியன்டேஷன் சார்… அதை ஏத்துக்க, மறுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?” சகஜமாக பதில் சொல்கிறார்… அநேகமாக பலரிடத்திலும் இந்த கேள்வியை அவர் எதிர்கொண்டதன் விளைவே, இவ்வளவு சரளமான பதிலென்று தோன்றுகிறது…

“உங்க பையன்னு நீங்க ஏத்துக்கறது கூட ஒரு நியாயம் இருக்கு சார்… அதை நாங்க ஏன் சகிச்சுக்கனும்?” அருகிலிருந்த பாலு சமாதானப்படுத்த முயன்றும், என் பேச்சு இடைநில்லாமல் ஓடியது..

“நீங்க சகிச்சுக்க முடியாத அளவுக்கு என்ன நடந்திடுச்சு?”

“சார், இந்த அப்பார்ட்மென்ட்ல நீங்க மட்டுமில்ல… எத்தனையோ குடும்பங்கள், அதில நிறைய பசங்க இருக்காங்க… அவங்க மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு?… பேசாம இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு போய்டுங்க… இல்லைன்னா, எதாச்சும் பேசி உங்க பையனோட ஈர்ப்பை மாத்திக்க வையுங்க!” கடகடவென பேசி முடித்து சற்று ஆசுவாசமானேன்… அத்தனை நாட்களின் மனச்சுமையை இறக்கிவைத்து விட்டதாக ஒரு உணர்வு… ஹரி அப்பா பதிலெதுவும் பேசவில்லை… ஒருவேளை குற்ற உணர்ச்சியால் வாயடைத்து போய்விட்டாரோ? நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்… அப்படி உணர்ச்சியல்லாம் அந்த முகத்தில் இல்லை, மெலிதான ஒரு அலட்சியம் மட்டும் தொக்கி நிற்கிறது… எனக்கோ கோபம் சுர்ரென தலைக்கு ஏறியது…

“என்ன சார் பதிலே காணும்?… எதாச்சும் பேசுங்க!” இப்போதும் பதில் பேசாமல், அருகிலிருந்த ரம் பாட்டிலை திறந்து என் கிளாசில் ஊற்றத்தொடங்கினார்… அவசரமாக அதனை தடுத்து, க்லாசினை நகர்த்திக்கொண்டேன்…

“என்ன சார் பண்றீங்க?.. போதைல உங்க க்ளாஸ்ல ஊத்துறதுக்கு பதிலா, என்னோடதுல ஊத்துறீங்க?”

“உங்களுக்குத்தான் வெங்கட் ஊத்துறேன்…”

“சார்… நான் ஸ்காட்ச் மட்டும்தான் குடிப்பேன்… மத்த பிரான்ட் பிடிக்காது, இது தெரிஞ்சும் வம்பிழுக்கன்னு இதை செய்றீங்களா?” கோபம் குபுக்கென்று கொட்டியது…

“ஹ ஹா… சார், சாதாரண குடிக்குற விஷயத்துல உங்க பிராண்டை மாத்திக்க முடியாத நீங்க, என் பையனோட ஈர்ப்பை போற போக்குல மாத்திக்க சொல்றது எவ்ளோ முட்டாள்த்தனம்னு தெரியலையா?… அவனோட ஈர்ப்பு அவன் பிறப்புலையே தீர்மானிக்கப்பட்டது சார், அதை மாத்திக்க சொல்ல உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கே கூட ரைட்ஸ் இல்ல… இன்னும் சொல்லனும்னா, அதை அந்த கடவுள் நெனச்சாலும் மாத்திட முடியாது… அந்த சயின்ஸ் உங்களுக்கு தெரியும், அதோட நியாயங்கள் உங்களுக்கும் புரியும்… ஆனா அதல்லாம் ஏத்துக்க மட்டும் முடியாதுல்ல?… இப்போ சொல்றேன் சார், நாங்க இங்கதான் இருப்போம்… உங்களுக்கு இஷ்டம் இல்லன்னா நீங்க வீட்டை காலி பண்ணிக்கோங்க… கே பையன் இருக்குற குடும்பத்துக்கு வீடு கெடையாதுன்னு நம்ம அப்பார்ட்மென்ட் ரூல்ஸ் எதுவும் இல்ல… பிள்ளைகள மனுஷங்களா பாருங்க சார், அவங்க ஓரியன்டேஷேன வச்சு அவங்க மேல பாகுபாடு பார்ககாதிங்க!” என்னென்னவோ பேசிவிட்டார்… பதில்தான் எனக்கு பேசமுடியவில்லை… தடுமாறி நின்றேன்… சற்று திமிறினேன், கோபமாக க்ளாசை தட்டிவிட்டேன், பாலு சமாதானப்படுத்தினார்… எல்லோரையும் உதாசினப்படுத்தி, ஒன்றிரண்டு அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை மட்டும் கொட்டிவிட்டு, அங்கிருந்து வெளியேறினேன்…

அந்த நாளை இன்றும் மறக்கமுடியவில்லை… உலகத்தில் நான் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக ஒரு மேலெழுந்தவாரியான உணர்வு அன்று அரும்பியது… அவ்வப்போது சக குடியிருப்புவாசிகள் என்னை தனியே சந்திக்கும்போது மட்டும், என்னை தேற்றிட முயல்வார்கள்..

“அவரு லாயர் சார்… நாம எதாச்சும் பேசினா, அதுக்கு எதுனாச்சும் லா பாய்ன்ட் பேசுவார்னுதான் அன்னிக்கு அமைதியா இருந்தேன்.. மற்றபடி அன்னிக்கு நீங்க பேசின அத்தனை வார்த்தைகளும் சத்தியமான உண்மை சார்..” பாலுவே கூட தன் இயலாமையை ஒருமுறை கொட்டிவிட்டார்… ‘இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன், எனக்கும் ஒருநாள் சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்!… அன்றைக்கு அனுமன் வாலில் வைத்த நெருப்பாக, மொத்தமாக பஸ்பம் ஆக்கிவிடுகிறேன்!’ மனதிற்குள் கருகிக்கொண்டேன்…

படபடவென திடீர் மழை கொட்டத்தொடங்கியது… அவசரமாக ஒரு சாலையோர கடையினருகே பைக்கை நிறுத்திவிட்டு, சற்றே நீண்டிருந்த கடையின் வாயிற் கூரையில் ஒதுங்கிக்கொண்டேன்.. நினைவுகளை சுழலவிட்டிருந்ததில் மனம் மெலிதாய் அசதியுற்றிருந்தது… ஆவசுவாசமாக்க ஒரு கிங்க்ஸ் இருந்தால் தேவலாம்… கடைக்குள் கண்களை துழாவச்செய்தேன்… பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்தன சிகரெட்டுகள்…

ஒன்றை வாங்கி பற்றவைத்தபடி சாலையை வெறித்துக்கொண்டிருந்தேன்… வானம் கருத்திடக்கூட இல்லை, திடீர் மழை அது.. வெப்பசலனத்தால் இருக்கக்கூடும்.. இத்தகைய எதிர்ப்பார்த்திடாத மழை, திடீர் பரபரப்பை உண்டாக்கிவிடுகிறது… புத்தகப்பையை தலையில் மறைத்துக்கொண்டு ஓடும் குழந்தைகள், சேலையின் முந்தானைக்குள் பொம்மைகளை காபந்து செய்துகொண்டு ஓடும் பொம்மை விற்பவள், அலட்சியமாக நடந்துகொண்டிருக்கும் மனநலம் பாதித்தவன்… புயலும், மழையும் கூட இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றும் செய்துவிடுவதில்லை.. ஒருவகையில் கண்முன்னே நடக்கும் அசிங்கத்தினை, கண்டுகொள்ளாது கடந்துசெல்லும் இந்த உலகமும் கூட மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதோ என்னவோ…

அன்றொருநாள் இப்படித்தான் மழைபெய்துகொண்டிருந்தது.. சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி நிற்க, தத்தித்தடுமாறி வீட்டினை அடைந்தபோது நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது.. ஜனனி பதைபதைப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. தொப்பலாக நனைந்து வந்து சேர்ந்ததில், அவள் கண்களில் நிம்மதி பெருமூச்சு… துண்டால் தலையை துவட்டிவிட்டு, மாற்றிக்கொள்ள உடைகளையும் எடுத்துத்தந்தாள்… சாப்பிட இட்லியை எடுத்துவைத்து, நான் வரும்வரை சட்னியை ஊற்றிடாமல் காத்திருந்தாள்.. சற்றே அசதியுடன் இருக்கையில் அமர்ந்து, சாப்பிடத்தொடங்கினேன்…

“கவின் சாப்டானா?”

“அவன் ஹரி வீட்லயே சாப்டானாம்…”

“அவங்க வீட்டுக்கு இன்னும் போறத நிறுத்தலையா அவன்?… சொல்றதையே கேட்க மாட்றான்… சாப்ட்டு எப்போ வந்தான் வீட்டுக்கு?” கடிந்துகொண்டேன்…

“இன்னும் வரல… அங்கயே தூங்கிட்டான்… மழை பெய்றதால நானும் கூட்டிட்டு வரல..”

“அறிவில்லையா உனக்கு?… இங்கருந்து அவங்க வீட்டுக்கு போறதுல ஒரு பத்து அடி மழைல நனையுற அளவுக்கு இருக்குமா?… போய் கூட்டிட்டு வர்றதுல என்ன கரைஞ்சா போய்டுவ?…” சட்டென எழுந்து கைகளை கழுவிவிட்டு, விருட்டென ஹரியின் வீட்டுக்கு விரைந்தேன்…

அழைப்பு மணியை விடாமல் அடிக்க, பதற்றத்தோடு கதவை திறந்தார் ஹரியின் அம்மா…

“என்ன சார் இந்த நேரத்துல?” அநேகமாய் நள்ளிரவை தொட்டிருக்கும் நேரம்…

“கவின்…”

“தூங்குறான்… எழுந்ததும் காலைல கூட்டிட்டு வரேனே…”

“இல்ல… நான் இப்பவே கூட்டிட்டு போறேன்..” விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்து, அறைகளை துழாவினேன்.. ஹரியின் அம்மா படுத்திருந்த அறையில்தான் கவின் படுத்திருக்கிறான்… நல்லவேளையாய் ஹரி வேறு அறைக்குள் படுத்திருக்கிறான், மனம் மெலிதாய் இலகுவானது.. கொஞ்சமும் தாமதிக்காமல் அவனை தோளில் எடுத்து போட்டுக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினேன்…

“சார், குடையாவது எடுத்திட்டுப்போங்க… மழை மேல பட்டு எழுந்திடப்போறான்!” குடையோடு பின்னே நகர்ந்துவந்த அப்பெண்மணியை ஒரு புழுவைப்போல கடந்து வீட்டை நோக்கி விரைந்தேன்…

அந்த இரவெல்லாம் உறக்கமே இல்லை… கவினை எப்படி மாற்றுவது?.. ஹரியுடனான இவன் பழக்கத்தை எப்படி தடுத்து நிறுத்துவது?.. குறைந்தபட்சம் என் மனநிலை ஜனனிக்கு புரிந்தாலாவது இந்த சிக்கல்களிலிருந்து வெளிவர முடியும்.. அவளோ புரட்சிப்போராட்டவாதியாக அல்லவா பேசுகிறாள்.. ஒருவழியாய் தூங்கிப்போனேன்…

வீட்டின் அழைப்புமணி அடிக்கும் சத்தத்தில்தான் கண் விழித்தேன்… வெகுநேரமாய் மணி அடித்துக்கொண்டிருக்கிறது… ஜனனி குளித்துக்கொண்டிருக்கிறாள் போலும்.. கண்களை சிரமப்பட்டு விழித்தேன்.. அருகில் கவின் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான்…

வேகமாய் எழுந்து, உடைகளை சரிசெய்தவாறு கதவை திறந்தேன்.. முகம் முழுக்க புன்னகையோடு ஹரி நின்றுகொண்டிருக்கிறான்…

“ஹாய் மாமா… குட் மார்னிங்…” சிரிக்கிறான்…

“ஹ்ம்ம்… என்ன?” பிடிகொடுக்காத பதில்…

கையில் வைத்திருந்த கலர் பென்சில், ஸ்கேல், பேனா என பொருட்களை என் கைக்குள் திணித்தான்… “இன்னிக்கு ஸ்கூல்ல கேட்டாங்கன்னு கவின் சொன்னான், அதான் நேத்து நைட் வாங்கிட்டு வந்தேன்… கொடுத்திடுங்க…”

“ஹ்ம்ம் சரி…” இப்போதுவரைக்கும் அவனை வீட்டிற்குள் அழைக்காததன் வித்தியாசத்தை ஹரி உணர்ந்திருக்கக்கூடும்… வழக்கமான நாட்களில் இந்நேரம் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருக்க வேண்டியவன், இன்றைக்கு அலட்சியப்படுத்தும் பதில்களை எதிர்கொண்டு வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறான்…

“கவின் எங்க?.. தூங்குறானா?” இடைவெளிக்குள் எட்டிப்பார்த்தான்…

“இல்ல… டென்னிஸ் ப்ராக்டிஸ் போயிருக்கான்…”

“ஹ ஹா… நைட் பேய்ஞ்ச மழைல போட்டிங் கிளாஸ் மட்டும்தான் மாமா போகமுடியும்…” சிரிக்கிறான்…

அடுத்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் தடுமாறிக்கொண்டிருக்க, அறைக்குள்லிருந்து தூக்கம் கலைத்து வெளியே ஓடிவந்தான் கவின்..

“ஹரி அண்ணா… நான் சொன்ன திங்க்ஸ்லாம் வாங்கியாச்சா?… எங்க ஷார்ப்னர் காணும்?” உரிமையோடு வினவிக்கொண்டிருக்கிறான் என் மகன்.. தலையை கவிழ்த்துக்கொண்டேன்… கவினோடு சிரித்து பேசிவிட்டு, “போயிட்டு வரேன் மாமா” கொஞ்சமும் சலனமின்றி என்னை கடந்து சென்றான் ஹரி…

குடித்துக்கொண்டிருந்த சிகரெட் என் விரல்களை சுட்டு, திடுக்கிட்டு நிதானிக்கச்செய்தது…

மழை குறைந்துவிட்டது… அடுத்த மழையில் சிக்கிக்கொள்வதற்குள் வீட்டை அடைந்துவிடவேண்டும்.. வேகமாய் பைக்கை உதைத்து, வீட்டை நோக்கி விரைந்தேன்… நான் நினைத்தது போலவே குடியிருப்பின் வாகன நிறுத்தத்தை அடைவதற்கும், மறுமழை பொழிவதற்கும் சரியாக இருந்தது..

மழை நிற்பதற்கு எப்படியும் ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும் போல… கவினோடு சற்று விளையாடிவிட்டு, இரவு உணவுக்கு மூவரும் ஒன்றாக ரெஸ்டாரண்ட் போகலாம்.. ஜனனியும் வெகுநாட்களாகவே கேட்டுக்கொண்டிருந்தும், என் சோம்பேறித்தனத்தால் தட்டிக்கழிந்து போன விஷயம்… ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, தாயையும் மகனையும் சமாதானப்படுத்திவிடலாம்… மனதிற்குள் சாணக்கியனாய் கணக்குகளை போட்டவாறே லிப்ட்டின் பொத்தானை அழுத்தி, அது வரும்வரை காத்துக்கொண்டிருந்தேன்…

லிப்டில் ஏறி, நான்கு என்ற எண்ணை அழுத்தியதற்கும், அதனுள் ஹரி நுழைவதற்கும் சரியாக இருந்தது.. விதி அவ்வப்போது இப்படி அலாரம் வைத்து ஆப்பு வைப்பதுண்டு… அவன் உள்ளே நுழைந்ததும், கதவும் அதன் பங்கிற்கு மூடிக்கொண்டது…

ஒரு எரிச்சல், கோபம், வெறுப்பு, அருவருப்பு என எல்லாம் கலந்த பார்வையில் அவனை ஏறிட்டேன்… அவனோ இயல்பாய் சிரித்தபடி, “பாலு அங்கிள் வீட்டுக்கு போறேன்… பைப் ரிப்பேர் பண்ண ஆள் வரச்சொல்லனும்…” அவனாகவே பேச்சை தொடங்கினான்…

பதிலெதுவும் பேசாமல் கடந்து சென்ற இரண்டாவது மாடியை கவனித்துக்கொண்டிருந்தேன்…

“ஏன் மாமா இப்டி வியர்த்து நிற்குறீங்க?… லிப்ட்ல பேன் ஓடியும் இப்டி ஸ்வெட் ஆகுது… என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல…”

“என்னை பார்த்து பயமா மாமா?.. பயம் என்மேல மட்டும் இல்ல போலயே, ரெயின்போ கலர்சை பார்த்தாக்கூட மூக்குக்கு மேல கோபம் வருதாமே!” நான்காவது தளம் வந்துவிட்டாலும், அவனுடைய கேள்வி என்னை அங்கிருந்து வெளியேறவிடாமல் தடுத்தது… பதில் பேசாமல் சென்றுவிட்டால், அவனுக்கு பயந்ததாகவல்லவா ஆகிவிடும்… ஈகோ அதனை சகிக்க மறுத்து அப்படியே நின்றேன்…

“ஏன் மாமா என் மேல இவ்ளோ வெறுப்பு?.. நான் கே’ங்குறதாலயா?…”

“எதுவும் என்கிட்ட கேட்காத.. என்னைய நிம்மதியா விடு ஹரி” எரிச்சல் மேலிட்டது..

“இல்ல மாமா… இப்போ கேட்கலைன்னா, எப்பவுமே உங்களுக்கு புரியவைக்க முடியாது!”

“நீ சொல்லி புரிஞ்சுக்கர்ற அளவுக்கு நான் இல்ல…”

“உண்மைதான் மாமா… என்னோட வலியை, உங்ககிட்ட சொல்லத்தான் முடியும்.. உணரவைக்க முடியாது.. குறைஞ்சபட்சம் என்ன சொல்றேன்னு கேட்கலாம்ல” பதிலுக்காக என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்… நான் பதில் சொல்லாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருந்தேன்…

ஹரியே தொடர்ந்தான் “கே’ன்னா எல்லா ஆம்பளைங்க கூடவும் படுப்பாங்கன்னு நெனச்சுட்டிங்களா?… அப்டி இல்ல, கவின் என் தம்பிதான்னு எப்டி மாமா உங்களுக்கு புரியவைக்க முடியும்?.. கஷ்டமா இருக்கு மாமா…” அவன் கண்கள் கலங்கியிருந்தது… என் மனம் அதிகம் படபடத்தது… ஆனால், பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை… சற்று தயங்கியபடியே நின்றேன்…

“ஒரு உண்மை தெரியுமா மாமா உங்களுக்கு?… கிளிகள் பச்சைக்கலர்ல மட்டும் இருக்குறதில்ல… பஞ்சவர்ணக்கிளிக்கு அஞ்சு கலர்ஸ் கூட இருக்குமாம்!”

ஹரியே லிப்டின் கதவை திறந்து வெளியேறினான்… என்னை கடப்பதற்கு முன்பு, திரும்பிப்பார்த்து, “நல்லவேளை மாமா… நான் கேயா பிறந்ததுலையும் ஒரு நல்லது நடந்திருக்கு… ஒருவேளை நான் ஸ்ட்ரைட்டா இருந்திருந்தா அக்காவ சந்தேகப்பட்டிருப்பிங்கல்ல?” சொல்லிவிட்டு வேகமாய் நடந்துசென்றுவிட்டான்…