வெங்கடேஷ் சீனிவாசகம்

கோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்

இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” 

எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை?

இலக்கியம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு பதிலாய் இருக்கும், ”கோவேறு கழுதைகள்” வாசித்து முடித்த, கோடைக்காற்று வீசும் இக் கென்யப் பின்னிரவில், நெகிழ்ந்து உணர்வு வசப்பட்டுக் கிடக்கும் இம்மனநிலையை எப்படி விவரிப்பது?. 4500 கிலோமீட்டர்களுக்கு அப்பால், கடல்தாண்டி இருக்கும், ஓர் ஆப்பிரிக்க நாட்டில், எழுதி இருபத்தைந்து வருடங்களுக்குப் பின், வாசித்து முடித்த ஒரு படைப்பு மனதை இந்த அளவிற்குப் பாதித்து, வசியம் செய்து, பரவசப்படுத்தி, வளர்ந்த கிராமத்தின் பதின்ம நினைவுகளையெல்லாம் தொட்டெடுத்து மீட்டி, மனம் நிறைத்து, பின்னிரவில் தூக்கம் மறக்க வைத்து, மங்கிய நிலவொளியில், கிளைகள் அசையும் மரங்களினூடே இப்படி நடக்க வைக்கிறதென்றால்…”இலக்கியம்” எனும் பேராற்றல் முன் வணங்கி நிற்கத்தான் முடிகிறது.

ஆரோக்கிய நிகேதனம்” படித்து முடித்த இரவிலும், “பிஞ்சர்” பார்த்த இரவிலும், “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” படித்து முடித்த இரவிலும் இப்படித்தான், பண்ணையின் பசுங்குடில்களுக்கு நடுவே சூரிய சக்தி விளக்குகளின் வெளிச்சத்தில் இலக்கில்லாமல் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்தேன். ஆரோக்கியத்தின் வாழ்வு இலக்கியத்தில் பதியப்பட்டு, சாகாவரம் பெற்றுவிட்டது. அவர் வாழ்வு மட்டுமல்ல, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வியல், எழுத்தாணி கொண்டு பொறிக்கப்பட்டு விட்டது. இலக்கியம் இதற்குத்தானே?. ராச்சோறு எடுக்கும் ஆரோக்கியத்தின் “சாமி, உங்க வண்ணாத்தி மவ வந்திருக்கேன் சாமி” என்ற வீட்டுவாசல் குரல், என் கிராமத்து நண்பன் ஆறுமுகம் வீட்டுவாசலில் எண்பதுகளில் கேட்ட அக்கம்மாவின் “அக்கம்மா வந்திருக்கேன்சோறு போடுங்க தாயி…” குரலை துல்லியமாக காதுகளில் ஒலிக்கவைத்தது. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின், அக்கம்மாவின் அக்குரல் இந்த நள்ளிரவில் மனதில் மேலெழுந்து வந்து கண்களில் நீர் துளிர்க்க வைக்கிறது.

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அக்கம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பம். தெப்பக் குளத்தின் தெற்குப்புறம் கடைசியில் இருந்த காலனியில் பின்பக்கமாயிருந்தது அவர்கள் வீடு. மண்வீட்டின் முன் கருவேல மரத்தில் கழுதை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ராச்சோறு எடுப்பதற்கு அக்கம்மாவோ, அவர் கணவனோ, சிலநாட்கள் அவர் பெண் பூரணமோ முன்னிரவில் வீடு வீடாகச் செல்வார்கள். பூரணத்திற்கு என்னைவிட ஐந்தாறு வயது அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னிரவு நேரத்தில், தெப்பக்குள சுற்றுச்சுவற்றில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சில நாட்களில், துவைத்த துணிகளை வீடுகளில் கொடுப்பதற்காக, பெரிய மூட்டையை தலைமேல் தூக்கிக் கொண்டு அக்கம்மாவுடன் செல்லும் பூரணத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் சாயங்காலம் சென்னம்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வரும்போது, தெப்பத்தின் கிழக்கு மூலையில் ஆலமரத்தடியில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தில், சைக்கிளை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, பக்கத்தில் கூட்டத்தினருகே சென்று எட்டிப்பார்த்தேன். பஞ்சாயத்து போர்டு பிரெஸிடண்டோடு இன்னும் மூன்று நான்கு பெரியவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். இடுப்பில் துண்டோடு பூரணத்தின் அப்பா கைகூப்பி முதுகு வளைத்து நின்றிருந்தார். பக்கத்தில் அக்கம்மாவும், பூரணமும் தலைகுனிந்து கண்ணீரோடு நின்றிருந்தார்கள். பெரியப்பாவும், மாமாவும் தனியே மடக்கு சேரில் உட்கார்ந்திருந்தார்கள். காலனிப் பையன் ஒருவன் சட்டையில்லாமல் கிழிந்து போன பனியனோடும், இடுப்பில் துண்டோடும் எல்லோர் காலிலும் விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. “இருபது ரூபா ஜாஸ்திங்க சாமி, தயவு பண்ணணும்” அந்தப் பையன் மறுபடியும் ஒரு பெரியவரின் காலில் விழுந்து கும்பிட்டான். ”நீ பண்ண தப்புக்கு இருபது ரூபா கம்மிடா” என்றார் ஒருவர். என்னைப் பார்த்துவிட்ட சீனி மாமா, முறைத்து வீட்டிற்குப் போகச்சொல்லி சைகை காட்டினார். நான் நகர்ந்து போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். வீடு வரும்வரைக்கும், பூரணத்தின் கண்ணீர் நிரம்பிய அந்தக் கண்கள்தான் மனதில் நின்றிருந்தது.    

பத்து/பனிரெண்டு வயதில் நான் பார்த்து, ஆழ் மனத்திற்குச் சென்று மறைந்து போன அக்குடும்பத்தை, இந்த நாற்பத்தாறு வயதில், “கோவேறு கழுதைகள்” ரத்தமும், சதையுமாய் கண்முன் கொண்டுவந்தது. அக்கம்மாவும், ஆரோக்கியமும் வேறுவேறல்ல. படிக்கும்போது அக்கம்மாவும் இப்படித்தானே வாழ்ந்திருப்பார் என்று யோசித்து யோசித்து மனம், நெடுகிலும் நெகிழ்ந்துகொண்டேயிருந்தது. இப்போது பூரணம் எங்கிருக்கிறாரோ, என்ன செய்துகொண்டிருக்கிறாரோபெருமூச்சுடன் அவருக்காக பிரார்த்தித்துக்கொண்டேன்.

உருட்டுக் கட்டையாட்டம் இருக்கிற இந்த உடம்பாலதான் ஊருல எல்லார்கிட்டயும் எனக்குச் சண்டை வருது. கீழ்ச் சாதின்னு கூடப் பார்க்காமக் கடிக்க வரானுங்க. மீசை நரைச்ச கெயவன்கூட எங்கிட்டக் கேலி பேசுறான். கோவமா வருது. என் அடி வவுத்தையே பாக்குறாங்க. நா இனிமே துணி எடுக்கப் போகல”  மேரியின் அழுகைக் குரல் மனதை என்னவோ செய்கிறது. எது நடந்துவிடக் கூடாது என்று மேரி பயந்துகொண்டிருந்தாளோ, அச்சம்பவம் நடந்த அத்தருணம்சடையனிடம் மாட்டிய மேரியின் கெஞ்சும் குரல்மனதை அறுப்பது

வாண்டாம் சாமி…”

தப்பு சாமி…”

நல்லதில்ல சாமி…”

மானம் மருவாத பூடும் சாமி…”

தெருவுல தல்காட்ட முடியாது சாமி…”

குடும்பம் அயிஞ்சுபூடும் சாமி…”

வண்ணாத்தி சாமி…”

வாக்கப்படப் போறவ சாமி…”

சாதிக் குத்தமாயிடும் சாமி…”

உசுரப் போக்கிப்பேன் சாமி…”

உங்களுக்குக் காலுக்குக் கும்பிடுறேனய்யா…”

உங்களுக்கு மவளாப் பொறக்கறனய்யா…” 

மேலே வாசிப்பைத் தொடரமுடியாமல் கலங்கடித்த இடம் அது.

மேல்நாரியப்பனூர் அந்தோணியார் கோவிலுக்குப் போவதிலிருந்து துவங்கும் நாவல், அம்மக்களின் வாழ்வை அச்சு அசலாய் அத்தனை இயல்பாய் அக்கிராமத்தின் எல்லாப் பின்னணியோடும் கண்முன் விரிக்கிறது. கிராமத்தின் எழவு வீட்டின் காரியங்கள், அறுவடைக் காலம், களம் தூற்றும் நிகழ்வுகள், ஊர்ச் சோறு எடுப்பது சம்பந்தமாக ஆரோக்கியத்திற்கும் சகாயத்திற்கும் நடக்கும் சண்டைகள், தெரசா, திரவியராஜ் குடும்பம், திரவியம்மேரியின் கல்யாணம், திரவியராஜின் மரணம், பெரியானின் வாழ்க்கை, தைப் பொங்கலில் கிராமத்தின் முகம், மேரிக்கும் ராணிக்கும் இடையிலான நட்பு, குடுகுடுப்பைக்காரனின் இரவு வாக்கு, மாரியம்மன் கோவில் திருவிழா, ஆடு, மாடு, பன்றித் தலைகளுக்கு நடக்கும் பஞ்சாயத்து, ஊர்ச்சோறு எடுக்கும்போது ஆரோக்கியத்தின் அனுபவங்கள், கிராமத்தில் தேர்தலின் முகம், அந்த மழை, வளரும் பெரியானின் பேத்தி, கிராமத்தில் நடக்கும் பிரசவம், ஆரோக்கியம் நீக்கும் பால்கட்டு

நாவல் படித்து முடித்தபோது, என் கிராமத்தில் மறுபடி வாழ்ந்து வெளியில் வந்ததுபோல் இருந்தது.

இந்து தமிழ் திசையில் வெளியான, அரவிந்தன் எடுத்த இமையத்தின் பேட்டியை, “கோவேறு கழுதைகள்” படித்துமுடித்த அந்த இரவில்தான் வாசித்தேன். ஒரு நள்ளிரவில் தான் கேட்ட ஆரோக்கியத்தின் அழுகுரல்தான், “கோவேறு கழுதைகள்” நாவலை உருவாக்கியது என்று சொல்லியிருந்தார். அந்த நள்ளிரவின் அடர்ந்த இருட்டில் சாதாரணமாய் கரைந்து போயிருந்திருக்கக் கூடிய ஓர் ஒட்டுமொத்த வாழ்வின் அழுகுரலை அழுத்தமாய் பதிவு செய்ததற்காக இமையத்தை கட்டிக்கொள்கிறேன். பேட்டியில் செடல் எனும் தெருக்கூத்தாடும் அழகான பெண் குறித்து சொல்லும்போது

ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமிஎன்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது”  

என்று குறிப்பிடுகிறார். இந்த ஒரு வரியே என் மனதை நிரப்பப் போதுமானதாய் இருந்தது. செடல், எங்கள் கிராமத்தின் ”வெள்ளையம்மா”வாக இருக்கலாம். மனம் இப்போதே பரபரக்கிறது. வரும் நாட்கள் செடலுடன்தான்.

அன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன். எனக்கடுத்து இரண்டிரண்டு வருட வித்தியாசங்களில் இரண்டு தம்பிகள். அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். தங்கை பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர். அம்மாவின் அம்மாவை நாங்கள் அத்தை என்று கூப்பிடலாம் என்றாலும், நாங்கள் பாட்டி என்றுதான் கூப்பிட்டோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பனிரெண்டு/பதினான்கு வருடங்கள் வயது வித்தியாசம். அம்மாவிற்கு திருமணம் ஆகும்போது, அம்மாவிற்கு வயது பதினைந்து. அம்மாவின் பதினாறாம் வயதில் நான் பிறந்தேன். கோவை வேளாண் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் தங்கியிருந்தேன். ஒருமுறை அம்மா பார்க்கவந்து, விடுதியின் விருந்தினர் தங்கும் அறையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். உடன் படிக்கும் நண்பிகள் ரேணுகா, நிர்மலா, சுகுணா-வை அறைக்கு கூட்டிச்சென்று அம்மாவிற்கு அறிமுகப்படுத்தியபோது, “வெங்கடேஷ் அம்மாவா நீங்க?; அக்கா மாதிரி இருக்கீங்க!” என்று அவர்கள் வியந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.

அப்பா மிகவும் நல்லவர். எங்கள் மேலும், அம்மா மேலும் மிகப்பிரியம். ஓடைப்பட்டியிலும், களரிக்குடியிலும், புளியம்பட்டியிலும் “சீனி வாத்தியார்” என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பெரும் மதிப்பு. எல்லோருக்கும் உதவுவார். ஊரின் கடைசியிலிருக்கும் காலனியிலும் நெருக்கமான நண்பர்களிருந்தார்கள். பக்கத்து ஊர், திருமங்கலம் விருதுநகர் சாலையிலிருக்கும், கள்ளிக்குடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷ்னில், பள்ளியில், கடைவீதியில்…எல்லோருமே நட்புதான். அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. குடி. அம்மா சொல்லி சொல்லி பார்த்தார்கள். அவர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் அம்மா அழுவார்கள். அம்மா அழும் நேரங்களிலெல்லாம் குடியை விட்டு விடுவதாக சொல்வார். குடியை அவர் கடைசி வரை விடவில்லை. விபரமறியா என் நான்கைந்து வயதுகளில், என் மனதில் பதிந்துபோன அந்தச் சித்திரம் இன்னும் என்னால் நினைவிலிருந்து அழிக்கமுடியாது… – அப்பா குடித்துவிட்டு வரும் நாட்களில், மச்சு வீட்டுக்குள் சென்று, கொடியில் தொங்கும் துணிக்ளுக்கிடையில், முகம் புதைத்து விம்மி அழும் அம்மா.

அப்பா ஈரல் பாதிப்பில், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் எங்களை விட்டுப் பிரிந்தபோது, அம்மாவுக்கு வயது இருபத்தாறு. அம்மா திருமணத்திற்கு முன் ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அப்பா மறைவிற்குப் பின், அம்மா பத்தாம் வகுப்பு தனியாக வெளியிலிருந்து படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, அப்பா-வின் அரசு வேலையினால், செங்கப்படை பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்கள். அம்மாவிற்கு உதவியாக, எங்களையும் பார்த்துக் கொள்வதற்கு, தாத்தாவும் பாட்டியும் களரிக்குடியிலிருந்து மாறி எங்களுடன் ஓடைப்பட்டியில் தங்கிக்கொண்டார்கள்.

அந்த பதினோரு வயதில், எனக்கு அப்பாவின் மறைவின் வெற்றிடம், பெரிதும் உறைக்காதவாறு அம்மா பார்த்துக் கொண்டார்கள். அப்பா இறந்தபிறகு எங்கள் மூவரையும் படிக்க வைத்து வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்கள்…சொற்களால் விளக்க முடியாதவை. அப்போதிருந்த வயதில் எனக்கு உறைக்கவில்லை. அப்பா இறந்து, அடுத்த பதினாலு வருடங்களில் அம்மா தொண்டை புற்று நோயினால் 1997-ல் இறந்தார்கள். அப்போது எனக்கு வயது 25. அம்மாவின் மறைவு எனக்கு பேரிடியாய் மனதைத் தாக்கியது. அந்த வெற்றிடத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கடந்த பதினான்கு வருடங்கள் அவர்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் முற்றாகத் துடைத்து அவர்களை நன்கு வைத்திருக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அம்மாவிற்காக ஒரு துரும்பளவில் கூட ஒன்றுமே செய்யவில்லையே என்ற சுய வெறுப்பும், பச்சாதாபமுமே மனதை அறுத்து கொன்று கொண்டிருந்தது. அப்பா இல்லாத அம்மாவின் அந்த வாழ்க்கையை நினைக்கும்பொழுதெல்லாம், தொண்டை அடைக்கும்; மனது நிலையில்லாமல் தவிக்கும்.

லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை ஓசூரில் இருந்தபோது ஒருநாள் பின்னிரவில் வீட்டில் படித்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் இயலும் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் மழை பெய்து ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தது.

நான்கு தலைமுறைகள் கொண்ட கூட்டுக் குடும்பம். நான்காவது பையனுக்கு திருமணம் ஆகிறது. சாந்தி முகூர்த்தத்தை, நல்ல நேரம் கணித்து தை மாதத்திற்கு தள்ளி வைக்கிறார்கள். தீபாவளி வருகிறது. வேலை விஷயமாய் அவசரமாய் அழைப்பு வரவே கிளம்பிப் போகிறான் நான்காம் பையன். தலை தீபாவளிக்கு, வீட்டில் இல்லாத கணவனுக்கு கடிதம் எழுதுகிறாள் ஜெகதா. சிறுகதை முழுதுமே, ஜெகதா எழுதும் கடிதம்தான்.

சிறுகதையின் ஒவ்வொரு வார்த்தையும், வரியும் இத்தனை அன்பில் தோய்த்து எடுத்ததாய் இருக்க முடியுமா?. என் ஆச்சர்யங்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. கூட்டுக் குடும்பத்தின் நிகழ்வுகளை ஜெகதா கடிதத்தில் எழுதுகிறாள். அம்மாவைப் பற்றி (கணவனின் அம்மா), மற்றவர்களைப் பற்றி…அம்மா தன் கால் பிடித்து மருதாணி வைத்தபோது தான் அழுததைப் பற்றி…தன் அப்பா தெருவில் போகும் வயதானவர்களைக் கண்டால், கைகூப்பி நமஸ்கரிப்பது பற்றி…கணவனின் அண்ணன், குடும்பத்தின் இரண்டாம் பையன் ஒரு தீபாவளியன்று பட்டாசுக் கடைக்குச் சென்று, விபத்தில் இறந்த விஷயம் தனக்குத் தெரியவந்தது பற்றி…

தலை தீபாவளிக்கு, அம்மா வந்து கூப்பிட்டும், தான் இங்கேயே இருந்துவிடுவதாக சொல்லிவிடுகிறாள் ஜெகதா. அம்மாவிற்கும் ஜெகதா இங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமும். தீபாவளிக்கு இரண்டு/மூன்று நாட்கள் முன்னதாகவே பட்சணங்கள் தயாராகிறது.
தீபாவளியன்று, மூன்றாவது மாடியில் இருக்கும் கொள்ளுப்பாட்டியை கீழிறக்கி கூட்டிவந்து குளிக்கவைத்து, ஹாலில் இருத்தி, குடும்பத்தில் எல்லோரும் ஆசி வாங்குகிறார்கள்.

குட்டிப் பையன் சேகர், ”வீல்” என்று அலறி கத்திக்கொண்டே ஓடி வருகிறான். அம்மா அடித்துவிட்டதாய் சொல்கிறான். சேகர், பாட்டி செல்லம். விபத்தில் இறந்துபோன இரண்டாமவனின் பையன். கணவர் இறக்கும்போது, சேகர் காந்திமதியின் வயிற்றில் மூன்று மாதம். கோபத்துடன் அம்மா காந்திமதி அறைக்குப் போகிறாள். காந்தி விரித்த தலையுடன் ரேழி ஜன்னலில் உட்கார்ந்திருக்கிறாள். ஜெகதாவிடம், மற்றொரு மன்னி “காந்திக்கு வெறி பிடித்துவிட்டது” என்று காதில் கிசுகிசுக்கிறாள். கணவன் இறந்ததிலிருந்தே, காந்திக்கு ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை இம்மாதிரி ஆகிவிடுவதாக சொல்கிறாள்.

லா.ச.ரா-வின் வார்த்தைகளில்…

“அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது.

“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு – குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”

“நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”

காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.

“அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”

”பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!” பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.

“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”

அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.

“நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”

மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?””

என் மனம் ஒரு கணம் உறைந்துபோனது இங்குதான். அம்மாவின் உருவமும், அம்மாவின் அந்த பதினான்கு வருட வாழ்க்கையும், தத்தளிப்புகளும், துயரங்களும் மனக் கண் முன் நிழற்படங்களாய் வந்துபோயின. எனக்கு அப்பா போனதும், என் தாத்தா, பாட்டிக்கு மருமகன் போனதும், அம்மாவிற்கு கணவன் போனதும் ஒன்றாகுமா?. மனம் நினைவு திரும்பியதும் பெரும் கேவல் எழுந்தது. மல்லிகாவும், இயலும் விழித்துக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து கதவு திறந்து வெளியில் வந்தேன். இன்னும் தூறிக் கொண்டுதான் இருந்தது. இரண்டு தெரு தள்ளி,ரோடு தாண்டியிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் ஒன்று கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது. இறங்கி தெருவில் மழையில் நின்றேன். வாய்விட்டு அழ வேண்டும்போலிருந்தது. அழுது கரைத்துவிட்டு, வீட்டினுள் வந்து தலை துவட்டிவிட்டு, மறுபடி புத்தகத்தை எடுக்கும்போது, இயல் தூக்கத்தில் புரளும் கொலுசோசை கேட்டது. எழுந்து சென்று, படுக்கையறையில், இரவு விளக்கு வெளிச்சத்தில் இயலைப் பார்த்தபோது, குட்டியாய் இடதுபக்கம் திரும்பி படுத்திருந்தது. மெலிதாய் விரல்களைப் பிடித்துக்கொண்டேன். மெத்தென்றிருந்தது.

“அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின”

பேரன்பின் அணைப்பு. தழுவல். அன்பு ஒரு ஒட்டுவாரொட்டிதான். பேரன்பின் கணம் நிகழும்போது அதைத் தாங்கும் சக்தி உங்களுக்கிருக்கிறதா?…

லா.ச.ரா எனும் பேரன்பிற்கு என் தாழ் பணிந்த நமஸ்காரங்கள்.

யூக வெளியின் நிலைமாந்தர் – வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

 

கிராமத்தில் தலைக்கு குளித்தவிட்டு, நுனி ஈரம் சொட்டும் விரித்த கூந்தலை ஒருபுறம் தலை சாய்த்து தொங்கவிட்டு, மொட்டை மாடியிலோ, வீட்டு வெளியிலோ தலை துவட்டும்/ மைகோதியினால் நீவி உலர்த்திக் கொண்டிருக்கும் அக்காக்களைப் பார்ப்பது அந்தச் சின்ன வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் (இப்போதும் பிடிக்கும் என்று உண்மையை எழுதி வைக்கலாமா?).

இந்திரஜித்தின் “விரித்த கூந்தல்” அந்தச் சிறுபிராயத்து கிராமத்து நினைவுகளின் அலைகளை உண்டாக்கியது. எதிர் வரிசையின் ராஜி அக்கா, அடுத்த தெருவின் பாக்கியம் அக்கா, பெரியப்பா வீட்டில் அமுதா அக்கா… சென்னம்பட்டி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் உடன்படித்த மாமா பெண் (மாமா பள்ளியில் தமிழ் வாத்தியார்) விஜயராணி… இன்னும் பலரை நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து மேலெழுப்பியது. விஜயராணியை திருமணத்திற்குப் பிறகு ஒருமுறை கிராமத்திற்குச் சென்றபோது சந்தித்த அந்த நாள் இன்னும் பசுமையாய் நினைவில் எழுந்தது. வெள்ளிக்கிழமை, ஊர் எல்லையிலிருக்கும் நொண்டிக் கருப்பண்ணசாமி கோவிலுக்குச் செல்லும்போது மந்தையில் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்துவிட்டு ”அட… வெங்கடேஷா… எப்ப வந்த… என்னத் தெரியுதா?” என்று வாய் நிறையச் சிரிப்புடன் கேட்டது. எனக்கு உண்மையில் அடையாளம் தெரியவில்லை; நல்லவேளை, பாட்டி உள்ளிருந்து வந்து “வாம்மா… விஜயராணி… உள்ள வா” என்று அழைக்க வீட்டுக்குள் சென்று, பழைய பள்ளிக் கதைகள் பேசிக் கொண்டிருந்தோம். ராணி கழுத்து நிறைய நகைகள் போட்டிருந்தது. பள்ளி நாட்களில் எனக்குப் பிடித்த ராணியின் தெற்றுப்பல் இப்போது காணவில்லை. தலைமுடியை விரித்துவிட்டு, நுனியில் சிறுமுடிச்சிட்டு, மல்லிகைப்பூ வைத்திருந்தது. ராணியின் அப்பாதான் எனக்கு பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டிகளுக்கு கட்டுரை எழுதித் தருவார். பேச்சினிடையே விரித்த கூந்தலை எடுத்து முன்னால் விட்டுக்கொண்டது. பேச்சு முழுவதிலும் விரித்த கூந்தலின் நுனியை விரல்களால் பின்னிக் கொண்டேயிருந்தது.

”இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது” – இந்திரஜித்தின் “விரித்த கூந்தல்” சிறுகதையின் ஆரம்ப முதல் வரி, என்னை ஆச்சர்யப்படுத்தி உள்ளிழுத்தது. கதைசொல்லி நண்பனோடு அருவிக்குச் செல்கிறான். விரித்த கூந்தலோடு அத்தனை பெண்களை பார்க்க, அவன் மனது தொந்தரவடைகிறது. விரித்த கூந்தல் அவன் மனதில் ஏனோ பெண்ணின் சினத்தின்/ பிடிவாதத்தின் குறியீடாக பதிந்து போயிருக்கிறது. அவன் சொந்த வாழ்வின் சில நிகழ்வுகளும் நினைவுகளும் அதற்கு வலுச் சேர்த்திருக்கின்றன. ”பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்துத் தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள்கூட ஒரு தடவை ”நீங்கள் என்னிடம் சிக்கிவிட்டீர்கள்” என்ற தன்னிச்சையாக கூறியிருந்தாள்“.

”நவீன இலக்கியத்தின் முக்கியமான அழகியல்மரபான இயல்புவாதத்தின் அடிப்படை அலகான “சுருக்கவாதம்” கையாண்ட எழுத்தாளர்களின் வரிசையில் வரக்கூடியவர் இந்திரஜித்,” என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். கதையில் நண்பன் நினைப்பது-”நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப்படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூகவெளியில் தன்னை வந்து அழைத்துச் செல்வதாக தோன்றியது.” . நண்பரைப் போலவே கதைசொல்லியின் வரிகள் முதல்முறை வாசித்தபோது எனக்கும் புரிந்தும் புரியாதது போலவே தோன்றியது. இரண்டாம் வாசிப்பில்தான் ஓரளவிற்கு புரிந்தது.

”அவளின் கைவிரல்களும், கால்களும், கழுத்தும், முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் மிகவும் அழகானவை. அவள் மெலிந்திருந்ததைக் கண்டு, அதை அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான். அந்தச் சந்தர்ப்பத்தின் தொடர்ச்சியான ஒரு நிகழ்வில்தான் அவள் முதன்முதலாக மணவாழ்க்கை பற்றி அறிவதாக கூறியிருந்தாள். அன்று இரவில், இன்றுதான் தனக்கு முதன்முதலாக மணமானதாகக் கூறினாள். அவளுக்கும் அவளின் கணவனுக்கும் இடையே உள்ள தாம்பத்ய உறவு அவளின் பிடிவாதத்தினால் இவ்விதமாகவே இருந்தது”.

”அவளின் மண வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல் தன்னுடைய பிடிவாதத்தால் அவள் தன் மண வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டாள்“ – என்று நண்பனிடம் சொல்கிறான்.

இயல்பான காமத்தை காலந்தோறும் விதம்விதமாய் இலக்கியம் பதிவு செய்துகொண்டுதானிருக்கிறது. காதலும், அழகின் தரிசன மனவெழுச்சியும் எந்த மென்புள்ளியில்/ கோட்டிற்கு அப்பால், காமத்தைத் தொடுகிறது என்பது இன்னும் பலரும் அறியாத புதிராகத்தானிருக்கிறது.

ஒரே ஒருவர் மட்டுமே நிற்கமுடியும் சிறிய அருவியில் பெண்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து நனைந்து வெளியேறுகிறார்கள். ”விழும் நீரினூடே தெரியும் முகங்கள் தூய்மையடைந்து மின்னிக் கொண்டிருந்தன” – கதைசொல்லியின் இந்த வரி அவன் மனநிலையை பிரதிபலிப்பதாய் தோன்றுகிறது.

எனக்கு இந்த வரியைப் படித்ததும் வசந்தா அத்தைதான் ஞாபகம் வந்தார். வசந்தா அத்தையை எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் கிராமத்தின் ஒரு பணக்கார வீட்டு குடும்பத்தின், மூன்று ஆண்களுக்கு நடுவில் பிறந்த செல்லப் பெண். கிராமத்தில் முதல் டிவி அவர்கள் வீட்டில்தான் வாங்கினார்கள். வசந்தா அத்தை ஏனோ கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கள்ளிக்குடி பள்ளியில் தையல் டீச்சராக வேலை பார்த்தார். நான் எட்டாம் வகுப்பு முடித்து, திருமங்கலம் பி.கே.என் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கு விடுதியில் சேர்ந்தபோது, விடுதிக்குச் செல்லுமுன் முந்தைய நாள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றிருந்தேன். அந்த நாள்… தலைக்கு குளித்துவிட்டு, கூந்தலை விரித்துப் போட்டு வாசலில் உட்கார்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் சென்று விஷயம் சொன்னதும் என்னைக் கைபிடித்து பூஜை அறைக்கு கூட்டிப்போய் நெற்றியில் விபூதி பூசி, கையில் பணம் தந்து, “நல்லாப் படிக்கணும்” என்று ஆசீர்வதித்தார்கள். புது இடத்திற்கு போவதாலோ, முதன்முதலாய் வீட்டை விட்டு பிரிந்திருக்கப் போவதாலோ, என்னவோ தெரியவில்லை, அந்தச் சூழ்நிலையில் வசந்தா அத்தையின் சாமி படங்கள் நிறைந்த அந்த பூஜை அறையில் எனக்கு அழுகை வந்தது.

கதை முழுதும் படிக்கும்போது, விரித்த கூந்தல் மனதில் வந்துகொண்டேதானிருந்தது (கதைசொல்லி உணர்வதைப் போலவே). விரித்த கூந்தல்கள் நின்று கொண்டிருக்கின்றன; உட்கார்ந்திருக்கின்றன; நடந்துகொண்டிருக்கின்றன. ”வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரிந்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர்“. விரித்த கூந்தல் அவன் ஆழ்மனதில் அவனறியாமல் பதிந்துபோயிருக்கிறது. விரித்த கூந்தல், திரௌபதியினால்தான் தன் மனதை தொந்தரவு செய்வதாகவும், வேறு நாட்டவருக்கு இது ஒன்றும் செய்யப்போவதில்லை என்றும் ஆசுவாசம் கொள்கிறான். ஆனால் இறுதியில் அருவியிலிருந்து திரும்பும்போது, ரோட்டில் முன்பு பார்த்த மனநிலை சரியில்லாத அலங்கோலமான ஆடைகள் அணிந்த இளம்பெண் தேருக்கு எதிர்ப்புறம் திருமண மண்டபத்திலிருந்து வரும் நாதஸ்வர இசைக்கு திருமண மேடையில் அமரும் மணப்பெண்ணைப் போல அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு அவன் மனதில் மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.

அ.ராமசாமி எழுதியதுபோல், இனிமேல் அருவிக்குச் செல்லும் சமயங்களிலெல்லாம், இந்திரஜித்தின் “விரித்த கூந்தலு”ம் சேர்ந்தே வரும் என்றுதான் நினைக்கிறேன்.

நம் வீட்டு மனிதர்கள் – வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” வாசிப்பனுபவம். -வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

நான் பிலோமி அக்காவைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். அல்லது, பிலோமி அக்காவைப் போன்ற வேறொரு அக்காவை. முட்டத்தில், என் பதின்ம வயதுகளில். அப்பா கூடப் பிறந்த அத்தை, அப்போது முட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராயிருந்தார். மருத்துவமனை அருகிலேயே வீடு. பள்ளி விடுமுறைகளில் சில வாரங்கள் முட்டத்தில் அத்தையின் குட்டிக் குழந்தைகள் சாய், வித்யாவுடன் விளையாட்டுகளில் கழியும்.

வீட்டிற்கு முன்னால் ஒரு மரமல்லி இருந்தது. எப்போதும் மல்லிகள் மரத்தினடியில் சிதறிக் கிடக்கும். ஒரு விடுமுறையில், சாய், வித்யாவுடன் சிறிய மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் மீன் கூடையுடன் ஒரு அக்கா வாசலுக்கு வந்து நின்று “டாக்டரம்மா” என்று அத்தையைக் கூப்பிட்டார். திரும்பி எங்களைப் பார்த்து சிரித்தார். அத்தை உள்ளிருந்து வந்து, அந்த அக்காவை பேர் சொல்லி கூப்பிட்டு “வந்துட்டியா? உள்ள வா” என்று கூப்பிட்டுப் போனார். அக்கா அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் போல; சாயிக்கும், வித்யாவிற்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. நானும், சாய், வித்யாவும் மீன்களை வேடிக்கை பார்க்க உள்ளே ஓடினோம். “இது விஜயன்; அண்ணன் பையன். லீவுக்கு வந்துருக்கான்” என்று என்னைக்காட்டி சொன்னார் அத்தை. அக்கா கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தார்.

எனக்கு இப்போது முட்டம் நிகழ்வுகள் பெரும்பாலும் கலங்கலாய்த்தான் நினைவிலிருக்கின்றன (ஒருவேளை ஜெனிஃபர் டீச்சரும் கண்ணில் விழுந்திருப்பார்களோ!). அத்தையும், மாமாவும்கூட வெகுநாட்கள் முட்டத்திலில்லை. அத்தை அங்கிருந்து வெள்ளலூருக்கும், நத்தத்திற்கும், அலங்காநல்லூருக்கும் வேலை மாற்றலாகிக் கொண்டிருந்ததால், என் விடுமுறை நாட்களும் அங்கங்கு மாறிக்கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் எந்தப் புத்தகம் படித்தாலும் மனது பின்னோக்கித் திரும்பி, நினைவுகளில் மூழ்கி, வாசிக்கப்படும் வாழ்வுடன் நோஸ்டால்ஜியாவையும் பின்னிவிடுகிறது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் வெளியிட்டிருந்த பாமயனின் அபுனைவு நூலான “வேளாண்மையின் விடுதலை” படிக்கும்போதுகூட, மனம் தாத்தாவின் வேளாண்மை கொழித்த கிராமத்து வீட்டிலேயே இருந்தது. கமலையும், மாடுகளும், வேர்க்கடலைக் குவியலும் மனதை நிரப்பித் தளும்பின.

நெய்தலின் நான் படித்த முதல் புத்தகம் குரூஸின் “ஆழி சூழ் உலகு”. அவ்வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமாய் அறிமுகப்படுத்தியிருந்தது. “கடல்புரத்தில்” குறுநாவல்தான்; ஆனால் அந்த மனிதர்கள், அவர்களின் உலகம், அவர்களின் குணம், அவர்களின் பேச்சு… அச்சு அசலானதாய், நானே அருகிலிருந்து பார்ப்பதைப் போலிருந்தது; அதனால்தான் பிலோமி அக்காவைப் பார்த்திருப்பேனோ என்ற பிரமையுண்டானது. இப்புனைவு ஆரம்பமும், முடிவுமில்லாதது; ஆம் அவ்வாழ்வின், அம்மனிதர்களின் ஒரு குறுக்குவெட்டு, 112 பக்கங்களில். சாரத்தைப் பிழிந்து கொடுத்தது மாதிரி; பெரும் புனைவாக விரித்தெடுக்க எல்லாச் சாத்தியங்களும் கொண்ட நறுக்கான, செறிவான குறுநாவல். முன்னுரையில் வண்ணநிலவன் சொன்னதுபோல், ஓரத்தில் ஒதுங்கி நின்று, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய கலைஞனின் மொழி. எழுத்தாளன் அவ்வாழ்க்கையினூடே பார்வையாளனாக மட்டுமே இருக்கிறான்; கிஞ்சித்தும் ”தன்”-னை வெளிக்காட்டிக் கொள்ளாமல். பெரும் ஆசுவாசம். ஆனால் ஒட்டுமொத்தப் புனைவின் வழியே எழுத்தாளனின் அகம் வெளிப்பட்டு விடுகிறது.

ஒரு விமர்சனம் படித்தேன்; இக்குறுநாவலில் எல்லோருமே அதீத நல்லவர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதனாலேயே செயற்கையாகத் தெரிகிறதென்று. என்னுள் புன்னகை எழுந்தது. என்னவொரு மனநிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம்! நல்லது ஏதும் கண்ணில் பட்டால், அல்லது நல்லதாகவே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், ”ஏதோ சரியில்லை” என்று நமக்குத் தோன்றுகிறது; கூடவே ஒரு ஐயமும் இது மிகுகற்பனை கொண்ட மெலோடிராமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. எனக்கென்னவோ படிக்கும்போது இந்நாவல் மிகுகற்பனையாகவே தெரியவில்லை. நாடகத்தனமாயும் உணரவில்லை.

*

வல்லத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு தன்னுடன் வந்து இருக்குமாறு செபஸ்தி, அப்பச்சி குரூஸிடம் சொல்கிறான்; அவனுக்கு அந்தப் பணம் வேண்டும், சாயபுவுடன் சேர்ந்து சைக்கிள் கடை வைக்க; குரூஸ் உயிரே போனாலும் மணப்பாட்டைவிட்டு வரமாட்டேன் என்கிறார். செபஸ்தியின் அம்மை மரியம்மைக்கு மகனுடன் செல்ல விருப்பம்தான். மரியம்மைக்கும் வாத்திக்கும் ஸ்நேகம்; அது குரூஸிற்கும் தெரியும்தான். செபஸ்தியின் தங்கை பிலோமிக்கு சாமிதாஸின் மேல் காதல்; சாமிதாஸூம் பிலோமியை விரும்புகிறான்.

பக்கத்து வீட்டில் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக்; அவனின் நோயாளி மனைவி கேதரின். ஐஸக்கிற்கு கேதரினை அடித்து விரட்டிவிட்டு, பிலோமியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை.

பிலோமியின் அண்ணன் செபஸ்தியை காதலித்தாலும், உவரியூர் மாப்பிள்ளைக்கு வல்லத்துடன் வாக்கப்படும், பிலோமியின் நெருங்கிய ஸ்நேகிதி ரஞ்சி. ரஞ்சியின் மேல் மிகுந்த நேசம் வைத்திருக்கும் ரஞ்சியின் கொழுந்தன்.

குரூஸின் வல்லத்தில் உடன்வரும் சிலுவை. சிலுவைக்கும் பிலோமியின் மேல் ஒரு கண் உண்டு. சிலுவையின் மனைவி இன்னாசி.

குரூஸின் குடும்பத்திற்கு உதவும், குரூஸின் மீன்களை வாங்கிக்கொள்ளும், பிலோமியுடன் சகஜமாய்ப் பேசும் தரகனார்.

லாஞ்சிக்காரர்களுக்கும், வல்லத்துக்காரர்களுக்குமான பகைமையும், உரசல்களும். பாதிரியாருக்குப் பிரியமான ரோசாரியாவும் லாஞ்சி ஓட்டுகிறான். பிலோமியும் சாமிதாஸூம் ஒருநாள் உடலால் இணைகிறார்கள்.

மணப்பாட்டின் ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது, கள் குடித்த மரியம்மை தூக்கக் கலக்கத்தில் வீட்டுப்படியில் தவறி விழுந்து இறந்து போகிறாள். குரூஸ் நடைபிணமாகிறான். காரியங்கள் முடிந்து செபஸ்தியின் மனைவி போகும்போது பிலோமியிடம், “இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்,” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

ஐஸக்கிற்கும், ரோசாரியாவிற்கும் சண்டை வருகிறது. ரோசாரியாவின் மனைவிக்கும், பாதிரியாருக்கும் தொடர்பிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் ஐஸக்கின் லாஞ்சியில் தீப்பிடிக்க, ரோசாரியாதான் வைத்திருப்பான் என்று கோபத்தில் கள்ளுக்கடையில் ரோசாரியாவைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான் ஐஸக். ஐஸக்கிற்கு பைத்தியம் பிடிக்கிறது.

நாட்கள் நகர்கின்றன. பிலோமிக்கும், மரியம்மையின் வாத்திக்கும் இடையே நட்புண்டாகிறது. மணப்பாட்டில் அறுப்பின் பண்டிகை வருகிறது. ஊர் விழாக்கோலம் பூணுகிறது. குரூஸ் வல்லத்தையும், வீட்டையும் விற்க முடிவு செய்கிறான். வல்லம் பிரிவதை தாங்கமுடியாமல் மனம் பேதலித்து குழந்தையாகி விடுகிறான்.

*

நான் நெகிழ்ந்த இடங்கள் பல.

பிலோமிக்கு தாத்தா தாசையாவை ரொம்பப் பிடிக்கும்; தாத்தா இறப்பதற்கு முந்தைய டிசம்பரில் கிறிஸ்துமஸ் கோயிலுக்குக் கடைசியாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்து வருகிறார். வரும்போதே அடிக்கொருதரம் “பிலோமிக் குட்டிக்கி தாத்தாவால் கஸ்டமில்லையே?” என்கிறார். “அதெல்லாங் கிடையாது தாத்தா” பிலோமி பதில் சொன்னதும் “நீ மவராசியா இருப்பே…” என்கிறார் தாத்தா.

*

”பிலோமி உள் நடைப்படியில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மடியில் செபஸ்தியுடைய இரண்டு பையன்களும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பிரியமான அத்தையை விட்டுப்போகக் கொஞ்சங்கூட மனசில்லை.

“லே கீழ இறங்கி உட்கார்ந்தா என்ன? அவ பாவம், நோஞ்ச ஒடம்புக்காரி…” என்று செபஸ்தி அதட்டல் போட்டான்.”

*

”கிறிஸ்துமஸூடன் பனியும் வந்துவிடுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழகைத் தருவதே இந்தப் பனிதான். பனியினூடே கிறிஸ்துமஸ் ஆராதனைக்குப் போகிறதும், பனியைப் பிளந்துகொண்டு கேட்கிற கோயில் மணியோசையும் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

இரவு பதினொன்றரை மணிக்கு எல்லோரும் ஆராதனைக்குப் புறப்பட்டார்கள். கோயிலில் குலசேகரப்பட்டினத்திலிருந்து வந்திருந்த ரேடியோ, கிறிஸ்தவ கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது லேசாகக் கேட்டது. தெருவில் போகும் அந்தப் பிள்ளைகளுக்குள் யார் பிலோமியுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு போவது என்பதில் சிறு சச்சரவு மூண்டது. அமலோற்பவத்துடைய புருஷன் தன் பிள்ளைகளைப் பார்த்து சத்தம் போட்டான். அதிலே ஆசிர் மட்டும் அரைகுறை மனசுடன் தன் அப்பச்சியுடைய கையைப் பிடித்துக்கொண்டான். மெர்ஸி கேட்கவில்லை. அவள் பிலோமியுடைய கையைத்தான் பிடிப்பேன் என்றாள்.”

*

சாய்-ம், வித்யாவும் இப்போது டாக்டர்களாகி விட்டார்கள். மரமல்லி எனக்குப் பிடித்த மரமாகி விட்டது. மரமல்லியும், கீழே மண் தரையில் சிதறிக் கிடக்கும் நீண்ட வெண்பூக்களும், அந்தக்காட்சி அப்படியே மனதில் பதிந்துவிட்டது. பத்து வயதில் பிடித்துப்போன மரமல்லிகளின் வாசம் இப்போதும் மனதில். அதன்பின் பள்ளி முடித்து, தோட்டக்கலை இளங்கலையில் சேர்ந்தபோதும், அந்த நான்கு வருடங்களில் நிறைய பூமரங்கள் அறிமுகம் ஆனாலும், பிடித்த பூமரமாக மரமல்லியே இருந்தது.

பிலோமி அக்காவுடன் பயணிக்கையில் மனது மேல் கொண்டு வந்த இன்னொருவர் ஓடைப்பட்டியில் சின்னக் குடிசையில் கடை வைத்திருந்த காமாட்சி பாட்டி. காமாட்சி பாட்டி தடிமனான கண்ணாடி போட்டிருப்பார்; காதுகளில் கனமான தண்டட்டி. அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் இருந்தேன். உணவில் கருவாட்டின் மணத்துக்கும், சுவைக்கும் பழகி எந்த சாப்பாடாயிருந்தாலும் தட்டில் ஒரு கருவாட்டு துண்டிருந்தால் மனம் சந்தோஷம் கொள்ளும். அப்பாவிற்கும் கருவாடு பிடிக்கும். காய்கறி ஏதும் சமைக்காதபோது, அம்மா பாட்டி கடையில் கருவாட்டு துண்டுகள் வாங்கிவரச் சொல்லுவார். ஊரிலேயே காமாட்சி பாட்டி கடையில் மட்டும்தான் கருவாடு கிடைக்கும். எங்கள் கிராமத்து வீட்டிலேயே, வீட்டினுள் கொடியில், பண்டிகைக்கு எடுத்த இறைச்சியின் மிச்சங்கள், உப்புக்கண்டமாய் காய்ந்துகொண்டிருக்கும். அம்மா அதைப் பண்ணித் தருகிறேன் என்றாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாட்டி கடைக்குத்தான் ஓடுவேன்.

முன்னுரையில் வண்ணநிலவன் “மனம் உய்ய வேண்டும்; அதற்குத்தான் இலக்கியம்” என்கிறார். கடல்புரத்தில் எல்லோரும் முழுமையான அன்பும், கோபமும் ஒருங்கே கொண்ட மனிதர்களாயிருக்கிறார்கள்; செபஸ்தி அப்பாவின் மீது அன்பாகவும் இருக்கிறான்; கோபப்படவும் செய்கிறான். குரூஸிற்கு, மரியம்மையின் மேல் வெறுப்பும் இருக்கிறது; அன்பும் இருக்கிறது. பிலோமிக்கு, சாமிதாஸின் மேல் அன்பு துளியும் குறையவில்லை, அவன் பிரிந்தபோதிலும்.

*

பிலோமியைப் பார்க்க வீட்டிற்கு வருகிறான் சாமிதாஸ். இன்னும் சில நாட்களில் அவனுக்கு திருமணம் உவரியூர் பெண்ணுடன்.

”அவன் மெதுவாகக் குனிந்துகொண்டே வீட்டினுள் வந்தான். அந்தக் கால்களுக்கு அந்த வீட்டினுள் நுழைய அதற்குள் எப்படி இவ்வளவு தயக்கம் வந்தது.

“சும்மா உள்ளே வாங்க. இது அசல் மனுஷர் வூடு இல்ல. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை.

“பிலோமிக்கு நா பண்ணியிருக்க பாவத்துக்கு ஆண்டவர் என்னயத் தண்டிக்காம வுடமாட்டார்”

அவள் மௌனித்திருந்தாள். மீண்டும் அவனே பேசினான்.

“நீ என்னய மன்னிக்கணும்…எனக்கு மாப்பு தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளச்செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சு. அதான் வந்தேன். நீயும் கண்டிஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரொம்ப நெனச்சுக்கிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

“ம்…”

பிலோமி சிரித்தாள்.

“என்ன சிரிக்கா? வருவியா?”

“வாரேன்…” என்று சிரிப்பினூடே சொன்னாள் .”

அந்தச் சிரிப்பின் முதிர்ச்சியையும், அன்பின் தளும்பலையும் அடைந்துவிட்டால் இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடாதா என்ன?

இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.

‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.

அம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா?” என்கிறாள்.

“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.

“ஜமுனா, “சரிம்மா” என்றாள்.

““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி? இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”

“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா? அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா? இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””

மேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.

இது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.

வாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா?” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா?” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.

ஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.

’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…

”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா? பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”

நான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார்த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.

பொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா?…

oOo

நகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.

ஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்?; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ?

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அக்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.

​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா?​” (வண்ணதாசன்)