வெ. சுரேஷ்

போகப் புத்தகம்

வெ. சுரேஷ்

   

கோவை தியாகு நூல் நிலையத்தில் நடக்கும் எங்கள் வழக்கமான வார இறுதிச் சந்திப்பின்போது, தமிழின் இன்றைய பிரபல எழுத்தாளர் குறித்த ஒரு பேச்சில் நண்பர் ஒன்று சொன்னார். அந்த எழுத்தாளர் தன் வாழ்க்கை அனுபவங்கள் என்று குறிப்பிடும் சம்பவங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், அவருக்கு குறைந்தபட்சம் இரு நூறு வயதாவது இருக்க வேண்டும் என்றார் அவர். நான் வேறொரு பிரபல எழுத்தாளரின் பெயரைச் சொல்லி அவருக்கும் இது பொருந்துமே, என்றேன். மற்ற நண்பர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால், பின்னர் அந்த அரட்டை மனநிலையிலிருந்து விடுபட்டு சற்றே நிதானமாக அதைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்தது. வெவ்வேறு வாழ்க்கைகளை தன் வாழ்வாகக் காணச் செய்வதில்தான் எழுத்தாளன் வெற்றி பெறுகிறான். புனைவிலோ, அல்லது கட்டுரையிலோகூட இடம் பெறும் அனுபவங்கள் எல்லாமே எழுதியவனுக்குரியதாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லைதான். எழுத்தாளன் ஒரு அனுபவத்தை விவரிக்கும்போது, அங்கு நேரடி அனுபவம் பேசுகிறது, ஒரு வகையில் அந்த அனுபவம் அவனுடையதுதான் என்று வாசகனை நம்ப வைப்பதில்தான் புனைவுக்கலையின் வெற்றி இருக்கிறது (அந்த அனுபவங்களில் பிறர் ஏற்கும் பாத்திரங்கள் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அதன் நம்பகத்தன்மை குறித்த கருத்து வேறுபாடு எழலாம்). யாருக்கோ, எங்கோ, எப்போதோ நிகழ்ந்ததை, தன்னுடையதாக மாற்றி, அதை வாசிக்கும் ஒருவரை, அவருடையதாக உணர வைப்பதே புனைவெழுத்தாளனின் வெற்றி..

முதலில் கேட்ட கேள்விதான் – இத்தனை அனுபவங்களை எழுதுகிறாரே, இதெல்லாம் உண்மையாக இருந்தால் இவருக்கு எத்தனை வயதிருக்கும்?- இப்போது போகன் சங்கர் எழுதி வெளிவந்திருக்கும், அல்லது அவர் முகநூல் மற்றும் தனது வலைத்தளத்தில் என்று முன்னரே எழுதியவற்றை தொகுத்து வெளிவந்திருக்கும், ‘போகப் புத்தகம்‘ நூலை வாசிக்கும்போது மனதில் தோன்றுகிறது. அதற்கான அதே பதிலையும் தொடர்ந்து சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது – எழுத்தில் காணப்படும் ‘நான்’, எழுதியவனின் ‘நான்’ இரண்டும் வெவ்வேறு; இவற்றை ஒன்றாய்க் காணும் தோற்றப்பிழை, வாசிப்பின்பத்தை முன்னிட்டு வாசகன் எழுத்தாளனுக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகை.

பின்னர் வரும் கேள்விகள்- இது என்ன மாதிரியான நூல்? சிறுகதைத் தொகுப்பா? அல்லது அனுபவக் குறிப்புகளா? போகனே தன்னிடமும் அதற்கு விடை இல்லை, என்று முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார். புனைவம்சம் மேலோங்கியிருக்கும் அனுபவங்கள், அல்லது அச்சு அசல் அனுபவங்கள் போல் தோன்றும் புனைகதைகள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம், ஒரு வசதிக்காக.

எப்படியாயினும், அவரது சிறுகதைத் தொகுப்பான ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படும் அதே அனுபவத்தை, வெவ்வேறு அளவில், இந்த நூலும் தருகிறது என்பதில் ஐயமில்லை. இதில் மொத்தம் 106 கதைகள்/ குறிப்புகள் உள்ளன. அனைத்துமே அவருக்கும் நமக்கும் நன்கு அறிமுகமான கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையில், அதிகபட்சம் திருநெல்வேலி அல்லது மதுரை வரை நடைபெறும் கதைகள். அவற்றில் நிச்சயம் பாதிக்குப் பாதி, நம்முள் உடனடியாக ஒரு பாதிப்பை உண்டாக்குகின்றன.

இந்தக் கதைகளை தோராயமாக ஒரு நான்கு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம்- 1.காதல், காதல் தோல்வி, முறை மீறிய உறவுகளால் வரும் சிக்கல்கள். 2. யதார்த்த வாழ்வின் மிக அருகிலேயே அல்லது அதன் இணையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும், யதார்த்தத்தை மீறிய அமானுஷ்ய அனுபவங்களால் நிரம்பிய வாழ்க்கை; ஜோதிடம், ஆவிகள், மத நம்பிக்கைகளின் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை பற்றியது. 3. வாழ்வின் மிகக் கொடுமையான சூழலிலும் அடியோடு நைந்து கிடக்கும் நிலையிலும் எல்லா வகையிலும் கைவிடப்பட்டவர்களும்கூட, தங்களைப் போன்ற பிற மனிதர்கள் அல்லது தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்த கதைகள் 4. நோய்வாய்ப்பட்ட நிலை உருவாக்கக்கூடிய தீவிர மற்றும் நகைச்சுவை கலந்த அனுபவங்கள். இவைகூடவே காரணமே இன்றி அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய அபத்தங்கள் நிறைந்த நிகழ்வுகள். சில கதைகளை மேலே சொன்ன எல்லாம் கலந்தது என்றும் சொல்ல முடியும்.

இந்தக் கதைகளில் பெரும்பாலானவை நம்மைத் தொடுவதற்கும் நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பவை, போகனின் நடை, கூரிய அங்கதம், ஒரு கசந்த நகைச்சுவை உணர்வு (Wry Humour) பல சமயங்களில், ஜெயமோகனும் சுஜாதாவும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க இயலவில்லை.

‘பொருட்காட்சி’, ‘அசல் ராஜா’, ‘குரூரம்’, ‘சந்திர பிரபை’, ‘அமரன்’, ‘நெருப்பு’, ‘அப்பாக்களின் நாட்கள்’, ‘நீல வெளிச்சம்’, ‘பண்டிகை’, போன்ற கதைகள் உருவாக்கும் பெரும் அழுத்தத்தை உடனடியாக சமனப்படுத்தும், ‘இலக்கியக் கூட்டம்’, ‘comically yours’, ‘ஒரு கர்நாடக இசையும் தமிழ் மனமும்’, ‘வசிய மை’, ‘ஆன்லைன் ஷாப்பிங்’, ‘இரண்டு டாக்டர்கள்‘, ஆகிய நகைச்சுவை கதைகள் என்று கலந்து கட்டி சுவாரசியமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்தப் புத்தகம்.

தமிழ்ப் புத்தகங்களுக்கான பின்னட்டை blurbகள் பல சமயங்களில் புத்தகத்தை பற்றிய மிகை மதிப்பீடுகளாகவும், அதைவிட சிக்கலானவையாகவுமே அமைந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்த புத்தகத்தின் blurb மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளதை சொல்லியே ஆகவேண்டும்.

ஒரு முறை சுஜாதா தமிழ்வாணன் பற்றி எழுதும்போது ஒரே சமயத்தில் வள்ளலாராகவும் ப்ரூஸ் லீயாகவும் தோன்றியவர் என்று குறிப்பிட்டார். அது போல போகனைப் பற்றி அல்லது இந்த நூலில் வரும் “நான்” பற்றிச் சொன்னால், ஒரே சமயம் தேவதாஸ் ஆகவும் கோகுலத்துக் கிருஷ்ணாகவும் தோற்றம் அளிக்கிறார் எனலாம். அவ்வப்போது எம்ஜியார்கூட (மிகப் பெரும்பாலும் பெண்களே இவரை நாடுகிறார்கள். இவர் அவர்களை அல்ல). இவை, என்னடா ஒரேயடியாக அலட்டிக் கொள்கிறாரே என்று தோன்றாமலிருப்பதற்கு முக்கிய காரணம், போகனிடம் உள்ள சுய எள்ளல். என்றாலும், இந்த இரு எல்லைகளின் வசீகரம் அவரது இந்தக் கதைகளுக்கு அலுப்புத் தட்டாத ஒரு சுவாரசியத்தை அளிப்பது உண்மைதான்.

‘லைட் ரீடிங்’ என்று வகைமைப்படுத்தக்கூடிய இத்தொகுப்பில் போகன் கணிசமான இடங்களில் வெறும் சுவாரசியத்தைத் தாண்டி ஆழங்களைத் தொடவும் செய்கிறார்தான். ஆனால் பின்னது அதிகம் அமையும் படைப்புகளை நோக்கி அவர் முன்னேறுவதை முன்னது தடுத்து விடக்கூடாதே என்ற கவலை இந்தப் புத்தகத்தை முடிக்கும்போது தோன்றாமலில்லை.இதுகூட அவரது வெற்றிதான் என்று சொல்லலாமா?

ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள்

வெ. சுரேஷ்

orr-10085_interview_0000

கடந்த ஆறு ஆண்டுகளாக, அநேகமாக நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவையே எழுதி வந்திருந்த நிலையில் (சில பொது கட்டுரைகளும் உண்டு), திடீரென்று ஒருநாள், ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டு, பதிமூன்று வாரங்கள் அவர் எழுதிய ஒரு சிறுகதை குறித்து ஒவ்வொரு வாரமும் எழுத முடியுமா என்று கேட்டார் நண்பர் நட்பாஸ். அப்படி எழுதி பழக்கமில்லை என்பதால் முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, எழுதி விடலாம் என்று முடிவு செய்தபின் எந்த எழுத்தாளருடைய கதைகள் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. உடனடியாக எனக்கு ஆதவனின் சிறுகதைகள்தான் என்று தோன்றிவிட்டது.

வேறு எந்த எழுத்தாளருடைய எழுத்துக்களைவிடவும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தவை ஆதவனின் எழுத்துக்கள்தான். என் சஞ்சலங்கள், சந்தேகங்கள், ஊகங்கள், கேள்விகள், முடிவுகள் அனைத்தையும் ஆதவனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு அளவில் கொண்டிருந்தார்கள். தன்னைப் பற்றி ஆதவன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார்- “ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்று விட்டால் என்றால், யாரைத் திட்டுவது என்பதில் பலருக்கு சந்தேகமேயில்லை. ஆனால், எனக்கு அப்படியில்லை” .இந்த மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதே போல, அறிவுப்பூர்வமான விவாதங்களும் தர்க்கப்பூர்வமான பார்வைகளும் எந்த அளவுக்கு தன்னைக் கவர்கிறதோ அதே அளவுக்கு உணர்வுச் சுழிப்புகளும், எளிதில் வரையறுத்துவிட முடியாத நியாயங்கள் பற்றிய தடுமாற்றங்களும் தனக்கு உண்டு என்கிறார் ஆதவன். அது எனக்கும் அப்படித்தான்.

அடுத்த கவலை எந்தெந்தக் கதைகள் என்பது பற்றி. என்னிடமே ஆதவனின் 5 சிறுகதைத் தொகுப்புகள் இருந்தாலும், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், ஆர்.வெங்கடேஷ் அவர்கள் தொகுத்த ‘ஆதவன் சிறுகதைகள்,’ புத்தகத்திலிருந்தே கதைகளை தெரிவு செய்தேன், ஒரே புரட்டலில் அத்தனையையும் பார்க்கும் ஒரு சௌகரியத்துக்காக. மேலும், அதில் உள்ள ஆர். வெங்கடேஷ் அவர்களின் முன்னுரையும் முக்கியமான ஒன்று.

கதைகளைப் பொறுத்தவரை ஒரு பாதகமான விஷயம், ஆதவனின் கதைகளில் மிகச் சிலவற்றைத் தவிர பிற கதைகள் வலையேற்றப்படவில்லை என்பதுவே. அதனால் நான் தேர்ந்தெடுத்த கதைகளைப் புத்தகங்களன்றி வேறு எங்கும் படிக்க முடியாது என்பது ஒரு இழப்புதான். இருந்தாலும், இவற்றைப் படிப்பவர்கள், புத்தகங்களை வாங்க இது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கட்டுமே என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. ஆனால், கிழக்கு வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 60 கதைகள் இருந்தாலும், “இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பில் உள்ள கதைகள், விடுபட்டுள்ளன என்பதையும் இப்போதுதான் கண்டுபிடித்தேன் இதில் ஒரு முக்கியமான விடுபடல் , “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் ” கதை. ஆதவனின் சிறந்த கதைகளில் ஒன்று அது..

அவரது சிறுகதைகளில் மிகப் பிரபலமானவை என்றால் நானறிந்து, ‘முதலில் இரவு வரும்’, மற்றும் ‘ஓர் பழைய கிழவரும் புதிய உலகமும்’ தான். ஆகவே இந்த இரண்டு கதைகளை சேர்க்கவில்லை. எழுத்தாளர்களை பற்றியது என்பதால் முதல் கதையாக, புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதையை தேர்ந்தெடுத்தேன். அதற்குப்பின் தானாகவே ஓரு வரிசை உருவாகி வந்துவிட்டது.

பொதுவாக ஆதவனின் எழுத்துக்களை நகர்ப்புற எழுத்து என்று வகைப்படுத்தல் தமிழக விமர்சகர்களிடம். உண்டு. இந்த ஒரு சொற்றொடர், அவரது விரிந்த படைப்புலகத்துக்கு நியாயம் செய்வதது அல்ல. அதிகமும் நகரத்து, பெருநகரத்து மனிதர்கள் குறித்தே எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அதில் அவர் எடுத்துக் கொண்ட பிரச்னைகள் பலதரப்பட்டவை. 70களின் மிக முக்கிய பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், அடையாளச் சிக்கல்,தனி யார் நிறுவனங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாத சோஷலிச யுகத்தின் உச்ச காலகட்டத்தின் அரசு வேலைகள் தரும் அலுப்பு, பெண்கள் குறித்த குறுகுறுப்பு, காதலின் ஆர்வம், காதல் திருமணத்தில் முடிவதின் நிறைவின்மை, மணவாழ்க்கையின் விரிசல்கள், பொதுவாகவே வாழ்வின் மீதான அதிருப்தி, நண்பர்களிடையேயான பரஸ்பர போட்டி பொறாமை, இன்னொருவரிடம் அனுசரித்துப் போக முடியாத குணங்கள், தனி மனிதன் தன் மிக நெருங்கிய மனிதர்களிடையேகூட வேடங்கள் புனைய வேண்டிய அவசியம் ஏற்படுத்தும் தருணங்கள், பெண்களின் பிரத்தியேகப் பிரச்சைனைகளை பரிவுடன் அணுகும் கதைகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அம்சத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு கதைகளாவது தேர்ந்தெடுக்கலாம்.

இந்த தொடரில் நான் சேர்க்காத காதல், திருமணம், அதன் நிறைவு அல்லது நிறைவின்மை ஆகியவற்றைப்பற்றி பேசும் ஒரு சிறுகதை வரிசையினைக்கூட தனியே தர முடியும். அவை இப்படி அமையக் கூடும், “ சிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல், நிழல்கள், கால் வலி, காதலொருவனைக் கைப்பிடித்தே, புகைச்சல்கள், நூறாவது இரவு, சினிமா முடிந்தபோது” என்று தொடங்கி தனியே எழுதலாம்., தவிர, ‘புறா, இந்த மரம் சாட்சியாக, நானும் இவர்களும்,அப்பர் பர்த், போன்ற இன்னும் சில கதைகள் குறித்தும்,எழுத ஆவலாகத்தான் இருந்தது.பிறிதொரு சமயம் பார்ப்போம்.

இந்தியா சோஷலிச சாம்ராஜ்யமாக இருந்த காலத்தின் உச்சத்தில் அன்றைய காலகட்டத்து இளைஞர்களின் அபிலாஷைகளை, தடுமாற்றங்களை, உளக் கொந்தளிப்புகளை உள்ளவாறே சித்தரித்த ஆதவன், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தின் மிக துவக்கத்திலேயே மறைந்துவிட்டார். திறந்த அமைப்பின் பொருளாதார தாராளமயமாக்கலும், உலகமயமாக்கமும், அது தந்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளும் சவால்களும், வித்தியாசங்கள் மழுங்கடிக்கப்பட்டு ஒற்றை தரப்படியாக்குதலும் கொண்ட இந்தக் காலகட்டத்து இளைஞர்களை ஆதவன், எந்த வகையில் தன் கலையில் கொண்டு வந்திருப்பார் என்ற ஆர்வமூட்டும் வினாவுக்கு நாம் விடை காணவே முடியாத வகையில், காலம் அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது.

இத்தொடரில் பேசப்பட்ட சிறுகதைகள்:

புதுமைப்பித்தனின் துரோகம் 

அகந்தை 

சிரிப்பு 

அந்தி 

கார்த்திக் 

‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

இன்டர்வியூ

தில்லி அண்ணா

லேடி 

ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

சின்ன ஜெயா 

கருப்பு அம்பா கதை 

அகதிகள் 

oOo

ஒளிப்பட உதவி – Archive.org

ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம்

தொடர்ந்து பதின்மூன்று வாரங்களாக ஆதவனின் சிறுகதைகள் சில குறித்து வெ. சுரேஷ் சிறு குறிப்புகள் எழுதி வந்தார். அந்தத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆதவனின் புகழ் பெற்ற சிறுகதைகள் சில, கூடுதல் கவனத்துக்குரிய சிறுகதைகள் சில என்ற இந்த அறிமுகங்கள், நகர்ப்புற மத்திய வர்க்கத்தினர் வாழ்வு குறித்த கதைகள் என்ற எல்லைக்குள் ஆதவனைக் குறுக்குவதைக் கேள்விக்குட்படுத்துகின்றன- களம் அவ்வாறிருந்தாலும் ஆதவன் பேச எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பலவகைப்பட்டவை.

1. “லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?”- புதுமைப்பித்தனின் துரோகம் 

2. “ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? ” – அகந்தை 

3. “எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம் அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.” – சிரிப்பு 

4. “முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில் படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின் நிழல் இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது.” – அந்தி 

5. “மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.” – கார்த்திக் 

6. “தன்மை ஒருமையில் விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது.” – ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

7. “80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு… வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை” – இன்டர்வியூ

8. “அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார்.” – தில்லி அண்ணா

9. “தலைப்பு சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம்” – லேடி 

10. “கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.” – ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

11. “ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். ” – சின்ன ஜெயா 

12. “பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்க தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. அதே சமயம், மற்றொரு கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது” – கருப்பு அம்பா கதை 

13. “வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? .” – அகதிகள் 

சிறுகதைகளை கவனப்படுத்தும் வரிசையில் அடுத்த தொடர் விரைவில் துவங்குகிறது.

ஆதவனின் ‘அகதிகள்’

வெ. சுரேஷ்

அண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். அவளது கணவர், வேறு ஊரில். மகள்களுக்கு வியப்போடு வருத்தமும், “இவங்க ஏம்ப்பா இங்க இந்த வீட்ல வந்து இருக்காங்க? எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும்? எங்களுக்கு அவங்களப் பாத்தா பாவமா இருக்குப்பா,” என்று புலம்பித் தீர்த்து விட்டார்கள். “உங்க அம்மாலேர்ந்து அநேக பெண்களுக்கும் இதுதாண்டா நம்ம நாட்டுல வாழ்க்கை,” என்று சொல்வதற்குள், “நானும் அப்படித்தான் இருந்தேன். நாளைக்கு உங்களுக்கும் அப்படித்தான்,” என்று மனைவி பளிச்சென்று கூறினார். உண்மைதானே?

ஆனால், மனைவி நம் வீட்டுக்கு வந்து வாழத்  துவங்கும்போது, இதை அவ்வளவாக நினைக்காத மனம், நாளை என் மகள்களுக்கும் அப்படித்தானே என்று எண்ணும்போது துணுக்குறத்தான் செய்கிறது. இதை அசை போட்டபடி இருந்தபோது, ஆதவனின் ‘அகதிகள்’ எனும் சிறுகதைக்குத் தாவியது மனது.

அதுவும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் உருவாக்கும்  மனநிலை பற்றிய கதைதான். இருவேறு பாரம்பரியங்கள், மரபுகள்   பின்னணிகள் கொண்டவர்களிடையேயான உறவுகள் பற்றிய கதை. இரு நண்பர்களுக்கிடையே அகதிகள் குறித்தான உரையாடலில் துவங்குகிறது, பிறகு வன்முறை, மனிதர்கள் திடீரென்று தம் சக மனிதர்களை பகைமையும் குரோதமும் கொண்டு பார்ப்பதையும், வெட்டிக் கொன்று விடுவதையும் குறித்துப் பேச்சு தொடர்கிறது. இந்த வேறுபாடுகள், இதனால் கிளர்ந்தெழும் துவேஷ உணர்வுகள் பற்றியும் பேச்சு வரும்போது, கதை சொல்லியின் நண்பர், தமிழரின் தொன்மையான நாகரிகம், மொழி முதலானவற்றின் மீதான, சிங்களரின் தாழ்வுணர்ச்சியும் பொறாமையுமே அவர்களின் துவேஷ உணர்வுக்கும் இலங்கைப்   பிரச்னைக்கும் மூல காரணமென்கிறார்.

விவாதத்தின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி, வேண்டிய அளவுக்கு குரோதமும் பகைமை உணர்வுகளும் நம் வீடுகளிலேயே உள்ளது என்று சொல்லி, அன்பல்ல, வெறுப்புதான் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. பொறாமை, துவேஷம் இதெல்லாம்தான் மனிதர்களுக்கு இயல்பாக வருகிறது, இதற்கு நீர் பெரிய விளக்கங்கள் தரத் தேவையில்லை, என்று சொல்லி  விவாதத்தை முடிக்கிறார். பின் வீடு திரும்பும் கதைசொல்லியின் மனதில் தொடரும் எண்ணவோட்டங்களே மீதி கதையாக விரிகிறது.

வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள, அதிகம் பேசாத மனிதர்களை, அச்சு மரபுக்கு உரியவர்கள் என்றும், வாசிப்பில்  அதிகம் நாட்டமில்லாத, ஆனால் பேசுவதிலும், சிந்தனையைவிட செயல் புரிவதில் அதிக நாட்டம் உள்ளவர்களை பேச்சு மரபைச் சார்ந்தவர்களென்றும், மக்கள் மரபு ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இக்கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஆண்கள் இருவரும் அச்சு மரபுக்காரர்களாக இருக்கிறார்கள், பெண்களில் கதைசொல்லியின் தாயார், நிச்சயமாக பேச்சு மரபுக்காரர்- பஜனை, கதாகாலட்சேபம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்ட அவருக்கு பேசப் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் தன் வீட்டு ஆண்கள், இரு அச்சு மரபுக்காரர்களுக்கிடையில், எப்போதும் அந்நியமாய் உணர்பவர்.

இந்த நிலையில், கதைசொல்லியின் மனைவியாக வருபவர், எந்த மரபென்று எளிதாகப் பிரிக்க முடியாத இயல்புடையவர்- படிக்கப் பிடிக்கும், அதைவிட பேசப் பிடிக்கும். இந்த அச்சு மரபுக்காரர்களின் இறுக்கமும் முசுட்டுத்தனமும் நிறைந்த வீட்டில் மருமகளின் வருகை நிச்சயம் இன்னொரு பேச்சுமரபுக்காரரான அந்தத் தாய்க்கு பலம் சேர்த்திருக்க வேண்டும், அவரை மகிழ்ச்சியடைய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அது அப்படி நிகழ்வதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டு இருப்பவரைக் கண்டு மட்டுமா வெறுப்பு முளை  விடுகிறது? தன் மருமகளின் கலகலப்பும் தன் இயல்பில் அவர்  உறுதியாக இருக்கும் நிலையும் இவரிடத்தில் அன்பை அல்ல, ஒரூ பாதுகாப்பின்மையையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

வாய் திறவாமல் ‘பதவிசாக’ இருக்கும் பக்கத்து வீட்டு மருமகள்களே இப்போது அவரைக் கவர்கிறார்கள். இப்போது அவர் முன்பைவிட அதிகமாக கோவிலுக்குப் போகிறார். தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, தனக்கு என்று ஒரு கௌரவம் தேடிக் கொள்ள, வாழ்நாளெல்லாம் அச்சு மரபைத் துரத்திக் கொண்டிருந்த அந்தத் தாய் அதற்கு பதில் தன்  மருமகளைப் போல்,  தன் இயல்பிலேயே ஸ்திரமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். தன்னிடம் உள்ள திறனில் நம்பிக்கையுடன் இருக்கும் மருமகளின் குணத்தைக்  காணும்போது எரிச்சலடைகிறாள். வேறெதையும் துரத்தாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும் ஒரு கோபம், எரிச்சல் வரத்தானே செய்கிறது? பல சமயங்களில் சாத்வீகமும் பொறுமையும்கூட பகைமை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள வேறுபாடுகள் அத்தனைக்கும் மனமே காரணமாகிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் தனி எனப் பிரிந்திருக்கும், தனக்குரிய வீட்டுக்கு வெளியே ஆதரவு தேடும், இந்த உலகமே ஒரு பெரும் அகதி முகாம் என்றும் சில சமயம் தோன்றாமலில்லை.

ஆதவன், பேச்சு மரபு, அச்சு மரபு என்று பேசுவது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்வதற்கு அல்ல. தளம் இலக்கியச் சிற்றிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கி. ராஜநாராயணன், எல்லா மொழிகளையும் ஒலிப்பான்கள் (phonetic script) கொண்டு எழுதும்போது அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது, என்கிறார். ஒலிகளுக்கு இடையே பிரிவினையில்லை என்பதால் ஒலிப்பான்களை பொது எழுத்துருக்களாக பரிந்துரைக்கவும் செய்கிறார். மொழியைச் செவிப்பதற்கும் கண் கொண்டு காண்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கி.ரா. மிக நுட்பமாக உணர்ந்திருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். பேச்சு மரபு, நேரடியானது, ஊடகமற்றது- unmediated என்று சொல்லப்படுகிறது. அச்சு மரபில் ஒலியின் தூல வடிவம் ஒரு ஊடகமாய் குறுக்கிடுகிறது. பேச்சு மரபைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத வகையில் அச்சு மரபில் உள்ளவர்களுக்கு மொழி ஒரு கருவியாகிறது. மனம் மொழியடுக்குகளின் வழி தன்னைத் தொகுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் அச்சு மரபினரின் மனம் மொழியால் அமையும் கருத்துகளின் கருவி நிலையில் இயங்கவும் செய்கிறது. ‘அகதி’ கதையின் துயரம், பேச்சு மரபுக்கு உரியவளாக இருந்தாலும் கதைசொல்லியின் தாய், தன் மருமகள் அச்சு மரபுக்கு உரியவராய் இருப்பதாலேயே அவரிடமிருந்து விலகிப் போகிறார்.

சிறு வயதில் தான் கண்ட பாகிஸ்தானிய அகதிகளைப் பற்றிய நினைவுகளில் துவங்கும் சிறுகதை, பின்னர் ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த எண்ணங்கள் என்று சென்று இன்னும் நெருக்கமாக கதைசொல்லி தன் வீட்டில் உள்ள நிலையை அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுவதில் முடிகிறது. தனி மனித சக்திகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு துயரத்தின் முன் நாம் என்னதான் செய்ய முடியும்? புறச் சூழல் பற்றி கோபப்படலாம், கவலைப்படலாம், தீர்வுகளைத் தேடலாம். ஆனால் நாம் செய்யக்கூடியது என்னவோ, முதலில் நம்முடன் இருப்பவர்களின் துயரை உணர்வதுதான்.

I saw the first refugees…. But even then I did not suspect when I looked at these fugitives that I ought to perceive in their pale faces, as in a mirror, my own life and that we all,  we all would become victims of the lust for power of this one man“, என்று எழுதுகிறார் Stephen Zweig, நாஜிக்காலத்தின் துவக்க அகதிகளைத் தான் எதிர்கொண்டது குறித்து, பல ஆண்டுகள் கழித்து. ஆதவன் பேரழிவு என்று சொல்லத்தக்க துயரங்கள் இல்லாத சாதாரண மத்திய வர்க்க வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவராலும், தில்லி அகதிகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும்போது, அவர்களின் வெளிறிய முகங்களில் ஒரு கண்ணாடி போல் நம் வாழ்வைப் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தையும் கடந்த இந்தப் புரிந்துணர்வுதான் ஆதவனைத் தனித்து காட்டுகிறது.

ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

90களின் மத்தியில் பாலகுமாரன்  ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய   படைப்புகளை வைத்து  அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.

வாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.

பகலெல்லாம் தன்  பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன்  மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.

கதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விரிகிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ்  சாக்லேட்  கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு,  நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.

சங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா? பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா? சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை  முழுமை அடைகிறது.

அவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.

Alvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு  வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு   கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.