வே. நி. சூரியா

வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை – மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா

இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்குமோ.. கூகுள் மொழிபெயர்ப்பின் கைங்கர்யமோ. இப்படியான இத்தனை கேள்விகளையும் சில்லறை அவநம்பிக்கைகளையும் தாண்டித்தான் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. இப்பின்னணியில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கருவிகள் ஆகின்றன. ஒன்று, உள்ளுணர்வு. பிறிதொன்று பிற மொழி அறிவு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மிக மோசமான தமிழ்மொழிபெயர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அப்படியே வளைவுப்பாதையில் சென்று ஆங்கில புத்தகத்தையே தேர்வுசெய்து என்னை காப்பாற்றிக் கொள்வதுண்டு. நமக்கு தெரியாத மொழியிலிருந்து மொழியாக்கம் எனும்பட்சத்தில் உள்ளுணர்வுதான் வழிநடத்துநர். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அம்மொழியாக்கம் குறித்த என் மதிப்பீடு. எனக்கு மலையாளம் தெரியாது என்ற எல்லைக்குள் நின்றுகொண்டே குளச்சல் மு. யூசுப் அவர்கள் மொழிபெயர்த்த மீஸான் கற்கள் நாவலை ஒரு நல்ல உள்ளுணர்வுடன் வாசித்தேன். ஏற்கனவே அவருடைய மொழிபெயர்ப்பில் பஷீரினுடைய படைப்புகளை வாசித்திருந்தேன். இலக்கியச் சுத்தமானமொழி, பிரதேச மொழி என அந்தந்த படைப்புகளுக்கு ஏற்றவாறு அவரால் ஒரு சட்டையை கழற்றி புதுசட்டை அணிந்துகொள்வது போல ஒரு நடையை சுவீகரித்துக் கொள்ளயியல்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் தொனியை அவரால் அப்படியே கடத்த இயல்கிறது. இந்த தொனியை மொழிபெயர்ப்பது என்பதுதான் தமிழில் எழுதப்பட்டது என்றெண்ண வைக்கும் ஒரு சரளமான அசல்த்தன்மையை நாவலுக்கு போர்த்துகிறது என்றே நினைக்கிறேன். மேலும் கசிந்துருகச்செய்யும் வரிகளை உக்கிரம் கொப்பளிக்கும் வரிகளாக மொழிபெயர்த்துவிடுகிற அபாயம் பெருகிவிட்ட தற்கால மொழிபெயர்ப்புச் சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டும் முக்கியமான பண்புகள்.

ஒற்றைவரியில் சொல்ல முயன்றால் மீஸான் கற்கள், ஒரு அந்த கால இஸ்லாமிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் வாழ்க்கையையும் அதன் வீழ்ச்சியையும் சித்தரிக்கும் நாவல். புனத்தில் குஞ்ஞப்துல்லா அப்படியே நம் முன் ஒரு கதையை தூக்கிவீசுகிறார். அவர் அந்த கதையில் யாருடைய தரப்பையும் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, முன்பு இது இப்படி இருந்தது ஆனால் இன்று பாருங்கள் இது இப்படி மாறிவிட்டது என்று சொல்கிறார். காலத்தால் சிறுசிறுக துருவேறி பொடிப் பொடியாக மாறிவிட்ட உடைக்கயியலாத இரும்புத்துண்டத்தை போன்ற வாழ்க்கையே அவருடைய விசாரணையின் மையம். விசாரணை அறிக்கையில் இறுதி முடிவு எனும் இடத்தை பெரும்பாலும் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். மீஸான் கற்கள் நிறைந்த பள்ளிவாசல், அப்பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் எரமுள்ளான், அந்த பள்ளிவாசலையொட்டிய அறக்கல் இல்லம், கருணை மற்றும் குரூரத்தின் விநோதமான கலவையுடன் குறுநில மன்னர் போல அந்த அறக்கல் இல்லத்தில் வசித்துவரும் கான்பகதூர் பூக்கோயா தங்ஙள், அவருடைய மனைவி ஆற்றபீவி, அவருடைய மகள் பூக்குஞ்ஞி, பூக்கோயா தங்களின் பணியாளர்கள், பூக்கோயா தங்ஙளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் நீலியின் மகன் குஞ்ஞாலி, பாடகனான பட்டாளம் இபுறாகி இவர்கள் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். கூடவே மரணமும் கட்டுக்கடங்காத இச்சையும் ஒரு கதாபாத்திரம் போல இந்நாவலில் அலைகிறது.

பூக்கோயா தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் மானுட உருவம். கருணை, இச்சை, அதிகாரம் என்ற முக்கோணத்திற்குள் அலையும் முன்தீர்மானிக்க முடியாத குணாம்சங்களின் தொகுப்பாகவே நாவலில் அவருடைய கதாபாத்திரம் வெளிப்படுகிறது. தனது குதிரையில் ஏறி மீனவக் குடிசையில் அத்துமீறுவது அவருடைய ஒரு முகம் என்றால் ஊரில் காலாரா வந்து மக்கள் அவதிப்படும்போது அதற்கு முன்னால் வந்து நிற்பது அவருடைய இன்னொரு முகம். கான்பகதூர் பூக்கோயா தங்ஙள் தன் இச்சையை பொருட்டு குத்தி வீழ்த்தபடும்போது நாவல் தன்னுடைய இன்னொரு வீச்சை அடையத் தொடங்குகிறது. அதிகாரம் இருக்ககையில் அதை பயிற்சி செய்ய ஆள் இல்லாதபோது உண்டாகும் வெற்றிடம் அந்த அதிகாரத்தையே விழுங்க முயல்வதும் இன்னொரு ஆளை தேடுவதுமான காட்சி ஒன்று நாவலிலிருந்து எழுந்துவருகிறது. அறக்கல் இல்லம் மண்ணில் புதைக்கப்பட்ட சவத்தை போல உருகுலையத் தொடங்குகிறது. தற்கொலை, மரை கழறல், விட்டு வெளியேறுதல் என அறக்கல் இல்லத்து மாந்தர்கள் சரிந்துவீழ்கிறார்கள்.

ஏதோ முடிந்தால்தான் ஏதோ தொடங்கும் என்பதுபோல, ஒருகட்டத்தில் நாவலின் பாத்திரங்கள் இறந்துபோகிறார்கள் அல்லது அதற்கு நிகரான நிலையை அடைகிறார்கள். காமம் மரணத்தின் முகமூடியை அணிந்துகொள்கிறது. மரணம் காமத்தின் முகமூடியை பதிலுக்கு அணிந்துகொள்கிறது. சிலசமயம் காமமும் மரணமும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன நாவலில். வடக்கு மலபார் முஸ்லீம்களின் வாழ்வியல் நாவலெங்கும் விவரிக்கப்படுகிறது. அவர்களது பழக்கவழக்கங்கள், தொன்மங்கள், கல்வி முறை என அனைத்தும் நாவலின் வாயிலாக ஒரு இயங்கும் சித்திரமாக எழுந்துவருகிறது. இந்நாவலில் வருகிற ஜின்களை குறித்த பகுதி கனவுத்தன்மையை உண்டாக்கிச்செல்கிறது. நாவலின் சாரத்தை தொகுத்துக்கொள்ள முயலும்போது இப்படி ஒரு உருவகம் மனதில் தோன்றுகிறது. எல்லா சன்னல்களும் திறந்திருக்கும் நிறைய ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம். அதை இயக்குமிடத்தில் இச்சையையும் அதிகாரத்தையும் உடல் பாகமாக கொண்ட மனிதர். வாகனம் புறப்படுகிறது. இறுதியில் மரணம் எனும் நிறுத்தத்தில் வாகனம் பழுதடைந்து நிற்கிறது. அதை வருங்காலம் வெறித்துப் பார்த்துபடி கடந்துசெல்கிறது. இன்னொருவிதமாக கூற முயன்றால், வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை என்று கூட சொல்லலாம். இது வெறும் வீழ்தல் அல்ல, ஒளியின் வருகையையும் தீர்க்கதரினசமாக தன்னுள் பொதிந்து வைத்திருக்கம் ஒரு வீழ்ச்சி.

ஏராளமான கதாபாத்திரங்கள். எக்கச்சக்கமான தருணங்கள். கிராமத்து வாழ்க்கையின் அப்பாவித்தனங்கள். அதன் உன்மத்தங்கள். சகலத்தையும் பாரபட்சமின்றி கேலியுடன் அணுகும் ஒரு நவீனத்துவ குரல். ஒரு எடைமிகுந்த காலத்தின் கடைசி மூச்சிரைப்பு சப்தம் என இந்நாவல் ஒரு பரந்த பரிணாமத்துடன் பூரணித்து நிற்கிறது. இந்நாவலை மிகச் சிறந்த முறையில் தொய்வில்லாமல் மொழியாக்கம் செய்து தந்திருக்கும் குளச்சல் மூ யூசுப் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்

மீஸான் கற்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா

காலச்சுவடு வெளியீடு

நல்ல விபத்து!: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா

வே. நி. சூரியா

இன்று இறப்பது அவ்வளவு விசேசம்

1

வீடுதிரும்ப நேரமானதால்
எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது
என்னை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்ட அப்பா
போனவருடம் நடந்த சாலைவிபத்தில்
ஏதோ நீ அடிபட்டதாகச் சொன்னார்கள்
சரி இங்கேயே இரு
எதற்கும் வெளியே சென்று
உன்னைத் தேடிவிட்டு வருகிறேன் என
பதைபதைக்கக் கிளம்பிப்போனார்
அவர் கூறுவது
உண்மையாகவும் இருக்கலாமென
நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்

2

வெகுநாளைக்குப் பின்பு
சாலையில் நல்ல விபத்து
சிறிய லாரிதான்
லேசாக நசுக்கியதற்கே
அனைத்தும் நொறுங்கிப்போய்
அடையாளம் தெரியாதளவு சிதைந்திருந்தது
போனவருடம் இறந்துபோன
நண்பனை ஒப்பிடும்போது
இதெல்லாம் சாதாரணம்
நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்
இறந்துபோதலோ
என் நண்பா
பேசாமல் நீயும் இன்றே இறந்திருக்கலாம்.

-பெரு. விஷ்ணுகுமார்

(ழ என்ற பாதையில் நடப்பவன்- மணல்வீடு வெளியீடு)

                            •••

இன்று இறப்பது அவ்வளவு விசேசம் என்ற தலைப்பிலேயே கவிதை தொடங்கிவிடுகிறது. வாழ்க்கையை தவறவிடுவது விசேசமா? இன்று ஏன் இறக்கவேண்டும்? இப்படியாக எண்ணங்கள் விடாப்பிடியாய் தலைக்குள் குதிக்கத் தொடங்குகின்றன. தெளிவாக  சொல்லப்போனால்,  தலைப்பை அபத்தம் என்று சுட்டலாம். வாசிப்பவனை இன்று சாக அழைக்கிறது. வாசகன் அந்த சிக்கலுக்குள் செல்லாமல் கவிதைக்குள் நுழைந்தால் அங்கு தொடர் கவிதைகள் என்று கூறத்தக்க இரண்டு நிகழ்வுகள் மொழியில் சொல்லிக்காட்டப்படுகின்றன.  குடும்ப அமைப்புகளில், நிலவும் அதீத பாதுகாப்புணர்வு அது கொடுக்கிற பதற்றம். அப்பதற்றத்திலிருந்து உருவாகிற  நம்பிக்கையின்மை.   மீண்டும் அங்கிருந்து பிரவாகமெடுக்கிற நம்பிக்கையின்மையின் மீதான நம்பிக்கையின்மை. சற்று யோசித்துப்பார்த்தால், இன்றைய குடும்ப அமைப்புகளில் இந்த அதீத பாதுகாப்புணர்வு தேசிய கீதத்தைப் போல தினசரி  இசைக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அப்போது ஒரு இரும்பு கம்பியைப் போல நின்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. குடும்ப அமைப்பை உதறி சென்ற தலைமுறை இன்று கதையாகவும் நினைவின் மியுசியத்தில் வைக்கப்படும் காட்சிப் பொருளாகவும் ஆகியிருக்கின்றனர். மேற்கண்ட கவிதை இச்சிக்கலை மிக நன்றாகவே எதிர்கொள்கிறது. தன் மகன் கண்ணெதிரே இருக்கிறானென்று தெரிந்தும் “இரு எதற்கும் உன்னை தேடிவிட்டு வருகிறேன்” என பதைபதைக்க கிளம்பும் அப்பா இருக்கிறார்.  அவருக்கு துணையாக தன்னைத்தானே தேடிச் செல்லும் மகனும் இருக்கிறான். இந்த இரண்டு தேசங்களையும் வகுத்துச்செல்லும்  எல்லைக்கோடு போல இன்றைய நவீன வாழ்வின் செறிவூட்டப்பட்ட அபத்தம் இருக்கிறது. இந்த அபத்தம் எங்கிருந்து உருவானது?

இரண்டாவது கவிதையும் ஒரு அபத்த தருணத்தை எதிர்கொள்கிறது. “நல்ல விபத்து” என்ற சொற்சேர்க்கையை அதன் மையம் என்று சொல்லலாம்.  எதிரெதிரான சொற்களை உருக்கி இணைத்தல். கவிதையிலிருக்கும் ஒவ்வொரு வரியையும் நான், மனிதர்கள் கால்கடுக்க நிற்கும் நீண்ட நெடிய வரிசை என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஒவ்வொரு சொல்லும் ஒரு நபர். வரியிலிருக்கும் சொற்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் இருக்கக்கூடாது. சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் அவை ஏதோ ஏழெட்டு ஜென்மமாய் இணைபிரியாத காதலர்களாக வாழ்ந்ததுபோல இணைந்தேயிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இன்னும், சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் உங்கள் மூக்கில் ஒரு குத்து விட்டதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். போகட்டும்.  நல்ல*விபத்து என்ற சொல்லை பார்க்கையில் மாற்றி மாற்றி துப்பாக்கியை நெற்றியை நோக்கி நீட்டிக்கொள்ளும் நண்பர்கள் மனதில் காட்சியாக தெரிகின்றனர். இரு அகால மரணங்கள் ஒப்பிடப்படுகின்றன. மரணங்களை ஒப்பிடமுடியுமா? பீஷ்மரின் சாவும் துரியோதனனின் சாவும் ஒன்றா? இவன் அவனைவிட நன்றாக இறந்தான் என்பது எப்படி தொனிக்கிறது? அபத்தம்தான். பொதுப்புத்தியில் மனிதநேயமற்ற பார்வை என்றுகூட கூறலாம். தாஸ்தாவெஸ்கியின் நிலவறை மனிதன் சொல்வதுபோல “உலகம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும், நான் என்னுடைய தேநீரை பருகவேண்டும்” என்ற தனிநபர்வாதத்தின் குரல்தான். ஆனால் இக்கவிதையில் கடைசி இரண்டு வரிகளில், அபத்தத்தை பற்றிக்கொண்டவாறு வெளிச்சத்தை மீட்டுக்கொள்வது நடக்கிறது. அதுதான் இக்கவிதை உணர்த்த விழைகிற செய்தியென்று நினைக்கிறேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அபத்தத்தை கைவிளக்காக பிடித்துக்கொண்டு கூட போய்விடலாம் என்பதுதான் அது. ஒருவேளை அப்படி போகும்போது வழியில் பாதாளம் ஏதும் குறட்டைவிட்டபடி தூங்கிக்கொண்டிருக்குமோ?

புதையல் – வே. நி. சூர்யா கவிதை

வே. நி. சூரியா

யாரால் உறுதியாய்க் கூறமுடியும்
யாரும் யாரைவிட்டும் போகவில்லையென
துயிலுக்கும் விழிப்பிற்குமிடையே
நீந்திச் செல்கின்றன காரன்னப் பறவைகள்
புனல்மேனியெங்கும் நீலப்பிரகாசப் பிரதிபலிப்பு
இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது உதயகாலம்
வல்லோனின் மோதிரத்திலிருக்கும் ரத்தினமென
ஜொலிக்கக் காத்திருக்கிறது விடிவெள்ளி
சப்தமின்றி நம்மெல்லாரின் சொப்பனத்திலும் மெதுவாக
ஒட்டப்படுகிறது ஒரு காணவில்லை சுவரொட்டி
பொழுது புலர்ந்துவிட்டாலோ
ஒரு ஆழப்புதைக்கப்பட்ட புதையலை
வேட்டையாடுபவனைப் போல
நாம் நம்மை தேடிச் சென்றாக வேண்டும்
அருமை வாசகரே, நீங்கள் தயாரா?

மஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை

வே. நி. சூரியா

என்ன பறவையென்று தெரியவில்லை
இருள் மேனி அந்தி வண்ண விழிகள்
மாலையிலிருந்து அப்படியே உட்கார்ந்திருக்கிறது
வானத்தை மறந்துவிட்டதா
இல்லை தானொரு பறவையென்பதையே மறந்துவிட்டதா
நள்ளென்ற யாமத்தில் மனசு கேட்கவில்லை
மொட்டைமாடிக்கு சென்றேன்
அப்போதுகூட அது
பறவைநிலைக்கு திரும்பியிருக்கவில்லை
நெருங்கிச் சென்று
மெல்ல கையில் தூக்கி பறக்கவிட்டேன்
பறக்கப் பறக்க மீண்டும்
அதேயிடத்திற்கே
வந்துகொண்டிருந்தது அந்தப் பறவை
நானும் நிறுத்தவில்லை

நினைவுநாள் – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

1

செடிகள் யாவும்
கூச்சலிட்டிருந்தபோது
நீ வந்தாய்
பிரமையோ நிஜமோயென
அனுமானிக்க முடியாதபடிக்கு
உன்னை என்ன செய்வதென்றே
தெரியவில்லை
இந்த இரவு காமத்தையும்
வரையப்பட்ட காமம்
மீண்டும் இரவையும் வரைகிறது
எதிலும் வண்ணமில்லை
வெளியை நிறைக்கிறது இருட்டு
மரணம் பிரிவா என்ன
கரையானால் அரிக்கப்பட்ட சின்னஞ்சிறிய சாக்கு
இந்நெடிய இன்மைக்கு பிறகு
உன்னிடம்
எது கூடியிருக்கிறதோ இல்லையோ
புதிர்த்தன்மை கூடியிருக்கிறது
பெய்கிற மழை எண்ணங்களை நனைக்கிறது
அதை எங்கு உலர்த்துவது
மண்டைக்குள் புழுங்கிய நாற்றமடிக்கிறது
இப்பொழுது தோன்றுகிறது
என் வெற்றுப் பீடிகைகள்
சகட்டுமேனிக்கு
உன்னை ஏமாற்றியிருக்கக்கூடும்

2

தனிமையின் நிவாரணியே
என் குற்றவுணர்ச்சியின் கிணறே
உதிரும் சிற்றிலையும்
உன்னை
ஞாபகப்படுத்திவிடுகிறது
உடலுக்குள்ளிருக்கும் பூரான்கள்
துடிகொண்டு
அலைகின்றன அங்கும் இங்கும்
மூளைக்கும் இதயத்திற்குமான
பாலத்தில் கனரகவாகனங்கள்
கடந்தகாலத்தை ஏற்றிக்கொண்டு
தாறுமாறாக திரிகின்றன
நடுக்கம் ஏன் துருப்பிடித்த ஏக்கத்துடன்
பேசிக்கொண்டிருக்கிறது இப்போது
சன்னதிகளில் காமம் ஏன்
இப்படி கரைபுரண்டோடுகிறது
இந்த வாழ்க்கையே உனக்கான காணிக்கைதான்
இருப்பு இன்மை என்பதெல்லாம் கட்டுக்கதையென
சொல்லத்தான் வந்தாயோ
வில்லென இவ்வுடலைப்பிடி
நினைவின் நாணிலேற்றிவிடு வாழ்வை
அதோ அந்த நட்சத்திரத்திற்கு குறிவை
தவறினாலும் பிசகில்லை தேவி
ஞாபகம் என்ன ஒற்றையிலை மரத்தின் நிழலோ
இல்லை இலையற்ற மரத்தின் துயரமோ

3

இருந்தாலும்
காலம் இப்படி
அரிக்கப்பட்டிருக்கக்கூடாது
சீரழிவு அச்சுறுத்துகிறது
வழித்துணையாக வந்திருக்கலாம் நீ
இப்படி சுக்குநூறாய்
உடைந்திருக்க நேர்ந்திருக்காது
சீழ்நதியும் வற்றியிருக்கும்
எந்த அறிவும் எனக்கு உதவவில்லை
இந்த அறிவை தீவைத்து எரிக்கமுடியுமா
அதற்கொரு வழியுண்டா
மனதை தோண்டத் தோண்ட
காதலின் எலும்புக்கூடுகளை
கண்டெடுக்கும் துயரத்தை
என்னவென்று சொல்வேன்
பிரமைகளை கத்தரித்து
எடுக்கப்பார்க்கின்றது காலம்
உன்னை குறித்த பிரமைகளை
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
ஏழு மலை ஏழுகடல் தாண்டியிருக்கும்
என் இன்னொரு உடலின் நிலவறைக்குள்
வெளியே காவலுக்கு பணித்திருக்கிறேன் பூரான்களை
இனி விசனப்பட வேண்டாம்

4

இச்சையின் நெளியும்
சாலைகளினூடாக
எங்கெங்கோ செல்லும் நம் ஊழ்வினையை
எப்படி விபத்துக்குள்ளாக அனுமதித்தோம்
உன் வெறிபிடித்த வெற்றிடத்தை
எதையெதையோ
இட்டு நிரப்ப முயற்சித்தேன் இதுகாறும்
அத்தனையும் தங்கள் தோல்வியை
விடியும் முன்னதாகவே
சொல்லிச்சென்றுவிட்டன
உன்னை இவ்வளவு தனியாக
விட்டுச் சென்றிருக்கக்கூடாது
வெளவால்களும் இருட்டும்
மோதிப்பறக்கும் குகைவிழிகளையோ
நன்மையும் தீமையும்
சறுக்கிவிளையாடும் பின்னங்கழுத்தையோ
விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது
குறைந்தப்பட்சம் கடலோரங்களில்
கொடும்புயலாய் கனக்கும்
உன் குரலையாவது வாங்கிவந்திருக்கவேண்டும்
பிரம்மாண்ட எலும்புத்துண்டொன்று
வானில் மிதக்கிறது இப்பொழுது
சன்னலை சாத்திவிடவா
இந்த இரவின் சிற்பம் தள்ளாட
எதிரொலிக்கிறது உன் வளையோசை
உன் மாயையை எதிர்கொள்ள இயலுமோ
இன்னது இன்னதென விதிக்கும்
உன் உள்மனதை அறியமுடியுமோ
இந்நாளில் இப்படி
வந்துநிற்கும் உன்னை
என்ன செய்வதென்றே தெரியவில்லை