ஷ்யாமளா கோபு
“பாலா…..பாலாமணி……….பாலா” குடிசையின் வாசலில் நின்று குரல் கொடுத்தாள் மல்லிகா. உள்ளேயிருந்து ஒரு சிறு அசைவும் வரவில்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். கயிற்றுக் கட்டிலில் தலைமாடு கால்மாடாகப் படுத்திருந்தார்கள் பாலாவும் நிஷாவும். தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது உஷா. மீண்டும் குரல் கொடுத்தாள் மல்லிகா. “பாலா”
“ம்.” என்று எழுந்தவள் எதிரே மல்லிகா நிற்பதைக் கண்டதும் அவசர அவசரமாக எழுந்து அருகில் கிடந்த மகளையும் எழுப்பியவாறே “அம்மா, வாங்கம்மா” என்றாள்.
“என்ன பாலா, நல்ல தூக்கம் போல. எழுப்பி விட்டு விட்டேனா?”
“அப்படி எல்லாம் இல்லம்மா. இந்த புயலில் மூணு நாளா அலமலந்து போய் கிடக்கிறோம். ஏன்னா புயலு, காத்து…அதோ அங்கப் பாருங்க” அவள் காட்டிய திசையில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஐயோ பாவமே என்று இருந்தது. குடிசையின் மேற்கூரை பாதி காணாமல் போயிருந்தது. பின்பக்க சுவரும் இடிந்து தரை மட்டமாகி இருந்தது.
“என்ன பாலா இது?” என்று திடுக்கிட்டவள் ரொம்ப கோராமையா இருக்கே?”என்றாள்.
“இருக்கிற சொச்ச கூரையும் இடிந்து தலையில் விழுந்துடுமோன்னு பயந்துக் கிட்டு ராவெல்லாம் தூங்காமல் கிடந்தோம் அம்மா. இப்பத் தான் காலையிலே இருந்து காத்து இல்லாமல் அப்பப்போ கொஞ்சம் சிலுசிலுன்னு தூறிக்கிட்டு இருக்கவே சித்த நேரம் படுக்கலாம்னு படுத்தோம். நல்ல அலுப்பு. பசி வேற. கண் அசந்துட்டோம்” என்றவள் “வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்டாள்.
“நீங்க எல்லாம் புயலில் சிக்கிக்கிட்டு கிடப்பீங்க. அதனால் தான் ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர மாத்திரை வாங்க வரவில்லைன்னு தெரிஞ்சி கையோட மாத்திரையைக் கொண்டாந்திருக்கேன் பாலா”
“உக்காருங்கம்மா” சொன்னவள் கட்டிலில் கிடந்த துணிகளை அப்புறப்படுத்தி அவள் அமர இடம் ஒதுக்கிக் கொடுத்தாள். அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் தன் கைப்பையில் இருந்து மாத்திரையை எடுத்து பாலாவின் கையில் கொடுத்தாள்.
“இதுல கொஞ்சம் சாப்பாடு இருக்கு. நான் வீட்ல செஞ்சி எடுத்துக் கிட்டு வந்திருக்கேன். இதோ கொஞ்சம் அரிசியும் இருக்கு. ஒரு வாரத்துக்கு தாங்கும். அதுக்குள்ள நீங்களே சமாளிச்சிர மாட்டீங்களா?”
“மேடம், சோத்துக்கு வழியில்லாமல் நாதியத்துப் போய் நான் நிப்பது இது ரெண்டாவது தடவை. முதல் முறையும் நீங்க தான் உதவினிங்க. இதோ இப்பவும் நீங்க தான் ஆபத்துல காப்பாத்துற கடவுளா கண் முன் வந்து நிக்கறீங்க”
கைக் கூப்பித் தொழுது நின்றவளை கரம் பற்றி “இதற்கு எனக்கு சம்பளம் தராங்க பாலா” உணர்ச்சி வசப்பட்டு கிடந்தவளை லகுவாக்குவதற்காக சிரித்தாள் .
“மாத்திரைக் கொடுப்பதற்குத் தானே சம்பளம். இந்த அரிசிக்கும் சாப்பாட்டுக்குமா சம்பளம் தராங்க” கொண்டையை முடிந்துக் கொண்டு அடுப்பருகே கிடந்த ஒன்றிரண்டு நனைந்த சுள்ளிகளை தட்டி தட்டி அடுப்பில் திணித்து விளக்கில் கிடந்த மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்தாள்.
“என்ன பண்ணப் போறே?”
“கொஞ்சம் கட்டங்காப்பி போடுறேன் மேடம். எங்களுக்கும் சேர்த்து தான்”
“சரி” என்று ஒப்புக் கொண்டவள் “பாலா உனக்கு ஒரு விஷயம் சொல்லணும். அதுக்குத் தான் முக்கியமா நான் வந்ததே”
ஈர சுள்ளியினால் புகையத் தொடங்கியிருந்த அடுப்பை ஊதாங்குழளால் ஊதியவள் நிமிர்ந்து கண்ணில் அடித்த புகைக்கு ஒரு கண்ணை மூடியவாறு என்ன என்பதைப் போலப் பார்த்தாள்.
“உன்னோட வழக்கு வர வெள்ளிக்கிழமைக்கு வருது இல்ல. ஞாபகம் இருக்கா?”
“அதுக்குத் தானே உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கிறேன்”
“போன வாரம் வக்கீலய்யாவை வேற ஒரு விஷயமா பார்க்கப் போயிருந்தேன். எல்லா பேப்பர்ஸ்ம் தயாரா இருக்கு. நாம் மருத்துவமனையில் கேட்டிருந்தவைகள் கிடைத்து விட்டது. அதனால் முழு நம்பிக்கை இருக்காம். உன் கேஸ் நல்லபடியா முடிஞ்சிரும்னு சொல்ல சொன்னார்”
“கடவுள் உங்களை மாதிரி மனித உருவத்தில தான் வந்து நம்மை காப்பாத்தி கரை சேர்ப்பாருன்னு படிச்சிருக்கேன் மேடம்”
“ரொம்ப பேசறே நீ” விளையாட்டாக ஒரு விரலை பத்திரம் காட்டினாள்.
“உணமையைத் தான் பேசறேன்” சிரித்தாள் பாலா.
பாலாமணியின் கணவன் ரங்கசாமி பக்கத்து ஊரில் ஓரளவிற்கு நிலம் நீச்சென்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். நாமக்கல்லில் லாரி புக்கிங் ஆபிஸ் வைத்து கொண்டு தொழில் செய்து வந்தான். அவனுடைய அக்கா இங்கேயே அரசு ஆசிரியையாக நல்ல வழமையாகவே வாழ்ந்து வந்தாள். பாலாவின் குடும்பம் ஓரளவிற்கு நடுத்தர குடும்பம். வலுவில் வந்து பெண் கேட்ட ரங்கசாமியின் பெற்றோரின் தன்மையும் பண்பாடும் எதையும் யோசிக்காமல் அவர்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதிக்க வைத்தது.
இப்போது புதிதாகப் பிறந்ததும் பெண்ணாக பிறந்து விட்டது என்று ரங்கசாமிக்கும் அவன் தாய்க்கும் நிரம்பவே ஆதங்கம். ஜாடைமாடையாக ஏசத் தான் செய்வார்கள். ஆனால் ரங்கசாமி பாலாவை நகை நட்டு கார் என்று நல்ல வசதியாகவும் ஆசையாகவும் வைத்திருக்கவே ஆண் குழந்தை இல்லையே என்ற ஆதங்கத்தில் மாமியார் ஏசுவதை பாலா பொருட்படுத்தவில்லை.
எல்லாமே நல்லபடியாகவே சென்று விட்டால் தெய்வத்தை மனிதன் மறந்து விடுவான் இல்லையா! ரங்கசாமி நோய்வாய்ப்பட்டான். அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆட்கொல்லி நோயான ஹ.அய்.வி முற்றி இன்று எய்ட்ஸ் என்று வந்து நின்றது. அவளுக்கும் குழந்தைகளுக்கும் பரிசோதிக்க வேண்டியது கட்டாயம் என்ற போது கூட விவரம் அறியாதவளாக சம்மதித்தவளுக்கு தலையில் இடி இறங்கியது. அவளுக்கும் அவளுடைய இரு குழந்தைகளுக்கும் நோயின் தன்மை இருப்பதாக பரிசோதனை முடிவு சொன்ன போது உலகமே இருண்டு போனது.
“எல்லாம் உன்னால் தானே?” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் பாலா.
“அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” சட்டையை நீவியவன் ரொம்பவும் இறுமாப்புடன் கேட்டான்.
“கல்யாணத்திற்கு முன்பே உனக்கு வியாதி இருப்பது தெரியும் தானே. வீணில் என்னை ஏன் பழி வாங்கினாய்? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்?”
“என் நிலைமை தெரிந்து வழக்கமாக வரும் பெண்கள் வர மறுத்து விட்டார்கள். கல்யாணம் என்று செய்து கொண்டு விட்டால் இந்த வம்பே இல்லை. யார் பின்னாலேயும் தொங்க வேண்டாம் பார்”
“உன் அக்கா மகளை கட்டியிருந்திருக்கலாமே”
“என்னைப் பற்றி நன்கு தெரிந்தும் அவள் மகளை எனக்கு கொடுப்பாளா அவள்?”
”நான் உன்னைக் கட்டிய பாவத்திற்கு எனக்கு இது தேவை தான். நம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்”
“எனக்குன்னு ஒரு புள்ளைப் பொறக்கலைன்னா அப்புறம் இந்த உலகம் என்னைப் பொட்டைப்பய என்று சொல்லாதா?”
“அதுக்கு இன்னொன்னும் எதுக்கு பெத்தே?”
“ஏய் என்னமோ நான் தான் கேட்டது போல பேசறே?”
“நீ தானே ஆம்புளை புள்ளை வேணும்னு கேட்டு கேட்டு நச்சரிச்சே”
“நான் என்ன உன்ன மாதிரி அன்னக்காவடியா? எத்தனை சொத்து சுகம் இருக்கு. அத்தனைக்கும் ஒரு வாரிசு வேண்டாமா?”
“ஏன் பெத்து வெச்சிருக்கியே ஒரு புள்ளை. அது போதாதா? அதோட நிறுத்தி இருக்கலாம் இல்ல. இப்ப இன்னொன்னு பெத்து அதுவும் உன்னை மாதிரி சீக்கில சாகப் போவுது” நெஞ்சு வெடித்து அழுதாள்.
“அறிவு இருக்கா உனக்கு? எவன் வீட்டுக்கோ போகப் போறது எனக்கு வாரிசா? ஆம்புள்ளைப் புள்ளையப் பெத்துக் கொடுக்க வக்கில்லாதவ பேசற பேச்சைப் பாரு”
அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தவர்கள் அவன் உயிரோடு இருக்கும் வரை பாலாவை அம்மா தாயே மகாலட்சுமி பொறுமையில் பூமாதா என்றெல்லாம் கொண்டாடினார்கள். ஏனெனில் அவன் அருகில் இருந்து பாடுபார்க்க வேறு யாரால் முடியும்?
இழுத்துக் கொண்டு கிடந்தவன் ஒருவழியாக கண்ணை மூடிய போது தன் வாழ்க்கை அஸ்தமித்துப் போனதைப் போல நிராசையுடன் கிடந்தாள் பாலா. ஆசையுடன் அருமையாக வைத்திருந்தவன் இறந்து போனானே என்று இறந்தவனுக்காக அழுவதா அன்றி தெரிந்தே தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் நோயைக் கொடுத்து சீரழித்து விட்டானே என்று கசந்து கொள்வதா என்று புரியவில்லை அவளுக்கு.
இனி தன் எதிர்காலம் என்னாகும் என்பது அவளுக்குப் புரிந்தது. தனக்கு வந்திருப்பதும் ஆளைக் கொள்ளும் ஆள்கொல்லி நோய். இதில் தான் தப்பிக்கவே முடியாது. ஆனால் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? வாழ வேண்டிய வயதில் நோயுடன் போராடத் தான் அவர்களுக்கு பலம் இருக்குமா? ஏன் பலம் இருக்காது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் பாலா. இந்த உலகமும் உறவினர்களும் உடன் இருந்தால் நோயுடன் போராடி வென்று நீண்ட நாட்கள் நம் மகள்கள் வாழ முடியும் என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது அடுத்து அடுத்து இடிகள்.
கைக் குழந்தையுடனும் இடுப்பில் மூன்று வயது பெண் குழந்தையுடனும் நின்றவளை குற்றம் சாட்டியது ரங்கசாமியின் குடும்பம்.
“உன்னால் தான். நீ தான் எங்கேயோ தறிக்கெட்டுப் போய் வியாதியை இழுத்துக் கொண்டு வந்து அவனுக்கும் கொடுத்து விட்டாய்”
“உங்கள் மகன் யோக்கியதை தெரிந்தும் நாக்கில நரம்பில்லாமல் பேசாதீர்கள்” ஆங்காரப்பட்டவளிடம் “ஆண்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள். ஆனால் அதனால் எல்லாம் நோய் வந்து விடுமா என்ன? அவன் லோடு லாரி விஷயமா வெளியே தெருவுல போயிருக்கும் போது நீ என்ன செஞ்சியோ? இப்போ உனக்கும் வந்து உன் பிள்ளைகளுக்கும் வந்திருக்கு”
“என் பிள்ளைகளா? உங்கள் பையனோட பிள்ளைகளம்மா”
“அப்படின்னு நெனப்புடன் வந்து விடாதே. அசிங்கப்பட்டுப் போயிடுவே” மாமியார் வெஞ்சினத்து உரைத்தாள்.
கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாள் நாத்தனார். ”ஏதோ அவன் காலம் முடிஞ்சிப் போச்சு. அவன் போட்ட நகை எல்லாம் கழட்டிக் கொடுத்துட்டுப் போ. நான் பத்திரமா வெச்சிருக்கேன். நாளை பின்னே மகள்களுக்கு கல்யாணம் காட்சின்னு வந்தா நாங்க தானே செய்யனும்”
“நகையை தரணுமா?”
“உங்க அப்பன் வீட்ல இருந்தா போட்டுக்கிட்டு வந்தே?” ஈவு இறக்கம் இல்லாமல் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியுடன் நகைகளையும் சேர்த்துக் கழட்டிக் கொண்டாள் அவள்.
பாலாவைப் பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் எட்டியே நின்றார்கள். “அப்பா என்னப்பா இப்படி பண்றாங்க” என்று அழுது கொண்டே அருகில் சென்றவளை எட்டியே நின்று “பாப்பா என்ன பண்றது? உன் விதி. வேறு என்ன சொல்ல?” என்று ஒதுங்கிக் கொண்டார் அவர்.
“நானா அப்பா ஆசைப்பட்டுக் கட்டிக் கிட்டேன்?”
“நான் தான் கட்டி வெச்சேன். அதுக்கு இப்ப என்ன பண்றது?”
“என்னை இப்படி கஷ்டப்பட விடுவீங்களா அப்பா?” கேவி அழுதாள்.
“அவரு நல்லா வெச்சிருந்த போது நீ தானே அனுபவிச்சே. இப்பயும் நீ தானே அனுபவிக்கனும்”
“அப்பா வீட்டுக்கு வரேன்ப்பா. வேறே நான் எங்கே போறது?”
“அம்மா கொஞ்சம் யோசித்துப் பேசு. வீட்ல இன்னும் பிள்ளைங்க இருக்காங்க. அவுங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு நடக்கணும். உன் விவரம் கேள்விப்பட்டால் அப்புறம் என்ன ஆகும்னு கொஞ்சம் யோசித்துப் பேசும்மா”
“என்னம்மா யோசிக்கணும்?”
“உன் மாமியார் இந்த ஊர் பூரா உன் மேலே பழியை சொல்வாளே”
“அதை நீங்க நம்பறீங்களா?”
“எங்க வீட்ல இருந்தவரைக்கும் உன்னை ஒரு அப்பழுக்கு சொல்ல முடியுமா?”
“அப்படின்னா இப்போ சொல்லுவீங்களா?”
மொத்த குடும்பமும் மௌனமாக நின்றது. இடிந்து போனாள் என்ற வார்த்தை மிகவும் சாதாரணம். தனிமையில் கிடந்து அழுது கரைந்தாள். மனம் எதை எதையோ யோசித்துக் கிடந்தது.
நம் நடத்தையில் சந்தேகப்பட்டு இவர்கள் நம்மை பழி சொல்லவில்லை. மாறாக நம்மைத் தவிர்ப்பதற்காக நம் நடத்தையை வீணில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படித் தேவையோ அதைப் போல இந்த உலகை திருப்புகின்ற சுக்கான்கள் இவர்கள். இவர்கள் சொல்லுவதால் நான் அப்படி ஆகி விட மாட்டேன்.
அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை. கைப்பிள்ளை அழுகையில் கதறியது. அதன் அழுகுரல் நெஞ்சை வரட்டியது. வயிற்றைக் காந்தியது. கையில் இருக்கும் கொஞ்சம் பணத்திற்கு பால்டாயிலை வாங்கி வந்தாள். பாலில் கலந்து குழந்தைகளுக்கும் தனக்கும் குடிக்க டம்ளரில் ஊற்றினாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள். அது அவளும் அவள் குழந்தைகளும் இனி இந்த உலகில் வாழப் போகிற வாழ்க்கைக்கான கதவு திறப்பாக இருந்தது.
மருத்துவமனையில் இவர்களைப் பதிவு செய்திருந்ததினால் இன்று போல் அன்றும் மல்லிகா இவளை தேடி வந்தாள். அவர்களின் நிலை அறிந்தாள். தனக்குத் தெரிந்த பண்ணையில் பாலாவையும் நிஷாவையும் சேர்த்து விட்டு கைக்குழந்தையை வேறு அமைப்பில் சேர்த்து விட்டாள். கைப் பிள்ளைக்காக பகலில் மாரில் பால் சுரக்கும். இரவுகளில் படுக்கையில் நிஷாவை அரவணைத்துப் படுத்திருக்கையில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
காலம் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் மருத்துவமனையில் மல்லிகா பாலாவிடம் துருதுருவென்று அங்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைக் காட்டி, “இது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டாள்.
ஆளை இடித்து தள்ளும் பெருங் கூட்டத்திலும் பெற்றவளுக்குத் தன் பிள்ளையை தெரியாதா? தன் வாழ்நாள் காலத்தில் இனி ஒருமுறை பார்க்கவே பார்க்க முடியாது என்று மனதின் ஆழத்தில் போட்டு மூடி வைத்திருந்த ஏக்கத்தையும் துக்கங்கத்தையும் மீறி தன் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள்ளே அலையடிக்கும் அந்த உணர்வுகள் தான் புரியாதா?
கண்கள் கசியத் தொடங்கியிருக்கவே மல்லிகா அவளை அணைத்துக் கொண்டாள். “உனக்கு வேண்டுமானால் நான் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு உன் மகளை பெற்றுத் தரட்டுமா பாலா. இப்போது தான் நீ ஓரளவிற்குத் தேறி விட்டாயே. சொல். கேட்கட்டுமா?”
“ஊஹூம்”
“ஏன்?” ஆச்சரியப்பட்டுப் போனவளை பார்த்து சன்னமாக முறுவலித்தாள் பாலா.மனம் கசந்து நைந்த அந்த முகத்தைப் பார்த்து மல்லிக்காவிற்கு மனம் கனத்துப் போனது.
“வேண்டாம் மேடம். எனக்கு எப்போது சாவு மணி அடிக்குமோ தெரியாது. என்னை நம்பி ஏற்கனவே நிஷா இருக்கிறாள். அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு கொண்டு கரை சேர்த்து விட்டால் போதும். அங்கே நல்லபடியாக வளரும் அந்த குழந்தையை வீணில் நான் கொண்டு போய் அலைகழிப்பானேன்?”
“நிஷாவை என்ன செய்வாய்?”
“மாத்திரை மருந்தை சரியாக கொடுத்து நல்ல ஆகாரம் கொடுத்து பார்த்துக் கொண்டால் நல்லபடியாகவே வாழ்வாள். நல்ல படிப்பு கொடுக்கணும். உங்களை மாதிரி நல்ல உத்தியோகத்திற்குப் போகணும். நாளை பின்னே அவள் நிலை அறிந்து எவனாவது அவளுக்கு வாழ்க்கைத் துணைக் கிடைத்தால் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்கட்டும்”
“இத்தனையும் சின்னதற்கும் கிடைக்கும் தானே பாலா”
“கண்டிப்பாக. அதனால் தான் அந்த குழந்தை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறேன்”
“நீ நிஷாவுக்கு சொன்ன அத்தனையும் உஷாவுக்கும் கிடைக்கும். ஆனால் அம்மா அக்கா என்று குடும்பம் கிடைக்குமா?”
“அது இருக்கிற நாள் வரை நல்லபடியா இருக்கட்டும் மேடம். என்னோடு வந்து அரை வயிற்றுக்கும் கால்வயிற்றுக்கும் அல்லல் பட வேண்டாம்”
“உனக்கு என்று குடும்பம் இல்லையா பாலா?”
“இருந்தது”
“இப்போது?”
“இல்லை”
“ஏன்?”
“ஏன் என்றால்?” சொன்னாள். ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் சொன்னாள். அவள் கதைக் கேட்டு மனம் கனத்து போனது மல்லிகாவிற்கு.
வட்டமிடும் வல்லூறுகளும், சுற்றி வரும் ஓநாய்களும், கொத்தி தின்று விடப் பார்த்த பருந்துகளும், நோட்டமிடும் நரிகளும், நூல்விடும் பசு தோல் போர்த்திய புலிகளும் என்று ஒரு வனவிலங்கு கூட்டத்திற்கிடையே வாழ நேர்ந்த போதும், மல்லிகா பண்ணையின் முதாலாளி அவர்கள் குடும்பம் வீட்டு உரிமையாளர் என்று மனிதர்களும் அவளை சுற்றி வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். அவர்களின் உதவியாலும் மனிதாபிமானத்தினாலும் அவள் தன்னை பாதுகாத்து தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
வீட்டிற்கு வந்த பாலாவிற்கு தன் மகள் உஷா கண் முன்னே இருந்து மறையவேயில்லை. மல்லிகா கேட்டதைப் போல தன் மகளுக்கு அம்மா அக்கா என்று குடும்பம் வேண்டுமே. எதிர்காலத்தில் நிஷாவிற்கும் ஒரு துணை வேண்டும். ஒருவருக்கு ஒருவர் என்று அக்கா தங்கை இருவரும் வாழும் போது வாழ்க்கை கொஞ்சம் இலகுவாகத் தானே இருக்கும். தன்னைப் போல தனியாளாக கஷ்டப்பட வேண்டியிருக்காதே. இப்போது கஷ்டப்பட்டு பண்ணையில் உழைப்பதைப் போல இன்னும் கொஞ்சம் கஷ்டம் பாராமல் உழைத்தால் இருவருக்குமே கஞ்சி ஊற்றலாம். அரசு பள்ளி இருக்கிறது. அரசின் இலவச ரேசன் இருக்கிறது. உலகில் இன்னும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். எல்லாருமேவா ரங்கசாமியைப் போலும் அவன் குடும்பத்தினரைப் போலும் இருந்து விடுவார்கள்? அவ்வளவு ஏன் தன் குடும்பத்தினரைப் போல நம்மை நிர்கதியாக விட்டு விடப் போகிறார்கள்?
உஷாவை கேட்டு அமைப்பில் விண்ணப்பித்து அவளை பாலாவிடம் சேர்த்தாள் மல்லிகா. என்.ஜி.ஓவின் உதவியால் வக்கீல் மூலம் ரங்கசாமியின் குடும்பத்தினரிடம் சொத்தைக் கேட்டு நோட்டிஸ் அனுப்பினாள்.
நாத்தனார் தேடிக் கொண்டு வந்து முகத்தில் அறைந்தாள். ”புருஷனே போய்ட்டான். இன்னும் சொத்திற்கு அலைகிறாய்?”
“நான் உன் தம்பிக்குத் தானே இந்த பிள்ளைகளைப் பெத்தேன். அதற்கான அங்கீகாரம் இது. நீ எனக்கு இடும் பிச்சை இல்லை உன் சொத்து”
“வா வா கோர்டில் அசிங்கப்பட்டு நிக்கப் போறே?”
“எதுக்கு?”
“நீ எங்கேயோ போய் சீக்கை வாங்கி வந்து என் தம்பி தலையில் கட்டி விட்டே?”
“இந்த கதைக்கு பயந்த பாலா இல்லை நான். உன் கதையை நீ கோர்டில் சொல். என் கதையை நான் சொல்கிறேன்”
இதோடு போயிற்றா இத்தகையப் பேச்சுக்கள்? எங்கெங்கோ சுற்றி அவள் காதுக்கே வந்தது. சோர்ந்து போய் விடவில்லை. ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு உண்டான சோதனையைத் தவிர வேறு என்ன பெரிதாக நமக்கு வந்து விடப் போகிறது? அடுத்தவன் மனையிலும் கற்புநிலைக் காத்துக் கொண்ட சீதையை தீக்குளிக்க வைத்த உலகம் அல்லவா இது. அதுவும் ஆனானப்பட்ட அவதார புருஷனான ராமனே கூட இதற்கு விதிவிலக்கல்லவே!. மனம் தளரவில்லை. இத்தகைய ஏச்சு பேச்சுக்களுக்கு பதில் சொல்லவும் இல்லை. நம்மை நிரூபிக்கக் கிளம்பினால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. மேலும் நிருபிக்கும் அளவிற்கு அவர்கள் நமக்கு யார்? கணவனே ஆனாலும் நம்மை அவனுக்கு நிருபித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நான் அக்கினியைப் போல சுத்தமானவள் என்று எனக்குத் தெரிந்தால் போதும். அதை தவிர்த்து உபயோகமான வேலையைப் பார்ப்போம் என்று மனம் திடப்பட்டாள்.
நீதிமன்றத்தில் தன் இரு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பாலாவை, காரில் வந்து இறங்கிய ரங்கசாமியின் குடும்பத்தினர் கம்பளிப் பூச்சியை பார்ப்பது போல அருவெறுப்புடன் பார்த்து விட்டு கடந்து சென்றார்கள்.
அவர்களுடைய வக்கீலின் பிரதான வாதமே பாலாவிற்கு ரங்கசாமியை அல்லாது மற்ற பிற ஆண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவளால் தான் ரங்கசாமிக்கு நோய் வந்தது என்பது தான். கிட்டத்தட்ட இரு குழந்தைகளுமே ரங்கசாமியின் பிள்ளைகளல்ல. அதனால் பாலாவிற்கும் குழந்தைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க இயலாது என்பது தான்.
பாலாவின் வக்கீல், ரங்கசாமிக்கு நாமக்கல்லில் ஹ.அய்.வி கிளினிக்கில் பதிவு செய்திருந்த பதிவேட்டின் நகலில் உள்ள தேதியையும் மருத்துவ பதிவேட்டின் நகலையும் காட்டி ரங்கசாமிக்கு பாலாவை திருமணம் முடிக்கும் முன்பே நோய் இருந்தது என்று நிருபித்தாகி விட்டது. மனிதாபிமானம் மிக்க நீதிபதிக்குப் புரிந்து விட்டது இந்த வழக்கின் போக்கு.
கடவுள் கை விடவில்லை. கண் திறந்தும் பார்த்தார் போலும். தெளிவான தீர்ப்பை நீதிபதி வாசித்தார். “ஆகையினால் ரங்கசாமியியன் மனைவி பாலாமணிக்கும் அவர்களுடைய இரு பெண் குழந்தைகளான நிஷா உஷாவிற்கும் ரங்கசாமியின் பரம்பரை சொத்துக்களில் ஆறில் மூன்று பங்கை இப்போதே கொடுத்து விட வேண்டும். ரங்கசாமியின் பெற்றோரின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய ரெண்டு பங்கையும் அந்த பிள்ளைகளுக்கே கொடுக்க கட்டளையிடுகிறேன்”
“ஆங். என் சொத்தை கொடுக்க மாட்டேன். அதுவும் ஆம்பிள்ளைப் புள்ளையாக இருந்தால் கூட போனா போவட்டும்ன்னு யோசிப்பேன். போயும் போயும் பொட்டைப் புள்ளைங்களுக்கு என் சொத்தைக் கொடுக்க மாட்டேன்” கிரீச்சிட்டாள் மாமியார்.
தீர்ப்பை சொல்லி விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்த நீதிபதி “அம்மா இன்னும் நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க? ஆம்புளை பொம்பிளைன்னு பேசிக்கிட்டு” என்று கடிந்து கொண்டு விட்டு அங்கே இருந்த உதவியாளரிடம் சொன்னார். ”அவுங்க கிராமம் இருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி ஆய்வாளரை இந்த பெண்ணிற்கு சொத்தைப் பிரித்து தரும் வரை உடன் இருந்து பாதுகாப்பு தரும்படி மனிதாபிமானத்துடன் உதவும்படி நான் பெர்சனலாக தகவல் சொன்னேன் என்று சொல்”
“ஆங்” என்று ஆங்காரப்பட்ட மாமியாருக்கு புரைக்கேறி கண்கள் கலங்கி மாரை அடைப்பதைப் போல ஆகவும் அருகில் இருந்த நிஷா தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து “பாட்டி கொஞ்சம் தண்ணீ குடிங்க” என்று வாயில் ஊற்றினாள். அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் இறந்து போன மகனை அவளில் கண்டு நெஞ்சம் விம்மியது. மாமியாரின் வலது கரம் நிஷாவை அணைத்துப் பிடித்திருந்தது.
“உனக்கு கொஞ்சம் வேச்சிக்கம்மா.எல்லா தண்ணியையும் பாட்டிக்கே கொடுத்துடாதே” என்றார் தாத்தா.
“பரவாயில்லை தாத்தா. நான் அங்கே போய் தண்ணி தொட்டியில் பிடிச்சிக்குவேன். பாட்டி நீங்க இன்னும் கொஞ்சம் குடிங்க” என்று மீத நீரையும் பாட்டியின் வாயில் ஊற்றினாள். தாத்தாவின் வலது கரம் நிஷாவின் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தது.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பாலாவிற்கு வானம் பிரகாசமாக இருந்தது அவள் எதிர் வரும் வாழ்க்கையைப் போல.
Like this:
Like Loading...