பேருந்திலிருந்து இறங்கும் போதே லேசான குளிர் இருந்தது. பழகிய குளிர் தான். பழகிப் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சட்டென்று உடல் கண்டு கொண்டு பழக்கப்பட்டு விடும் குளிர் . எப்போதும் வந்து இறங்கியதும் குளிருடன் சேர்த்துத் துளிர்க்கத் துவங்கும் அப்போதைய விடுமுறை நாட்களுக்கான சந்தோஷச் சுரப்பு மட்டும் இல்லை. பையைத் தோளில் சரியாக மாட்டிக் கொண்டு நடக்கத் துவங்கினேன்.
பிரதான சாலையிலிருந்து பிரியும் பாதையில் நுழைந்தவுடன் திடுக்கென்று பிரம்மாண்டமாய் முளைத்திருந்த புதுக் கல்லூரியின் கட்டிடம் கண்களைக் குத்தியது.கல்லூரியின் பெயர்ப்பலகையை இருளில் சற்றே சிரமப்பட்டுப் படித்தபடிக் கடந்தேன்.
முதல் நாள் இரவு ரம்யாவின் முறைப்புகளைச் சமாளித்து அலுவலக வேலையை வீட்டில் வந்தும் தொடர்ந்து கொண்டிருந்த போதே தலைவலி துவங்கி விட்டது. வேலையை முடித்து விட்டுப் பத்தரைக்குப் படுக்கும் போது தலைவலி உச்சத்தை அடைந்து விட்டிருந்தது. படுத்தவுடன் குழந்தை காலைத் தூக்கி மேலே போட்டது அந்த நொடியில் எரிச்சலைத் தந்தது. “ப்ச்” என்று பலமான உச்சுக் கொட்டலுடன் சற்றே வேகமாகக் குழந்தையின் காலைத் தட்டி விட்டதை ரம்யா பார்த்து விட்டாள்.
அவள் தூங்கவில்லை என்பதே அப்போது தான் தெரிந்தது. நெருப்பைப் போல் பார்வையை உமிழ்ந்தவளைச் சமாதானம் செய்ய வார்த்தைகளைத் தேடிச் சேர்க்கையில் தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்து சேர்ந்தது.
துக்க வீடுகளுக்குப் போவது என்பது எப்போதுமே என் இயல்புக்கு ஒவ்வாததாய்த் தான் இருந்திருக்கிறது..அவ்வாறான இடங்களின் பெரும்பான்மை உரையாடல்களான துக்க விசாரிப்புகள் பொதுவாகவே அதிகபட்சம் மூன்று நான்கு கேள்விகளுக்குள் முடிந்து போகிறவை. சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே பலப்பல முறைகள் சொல்லிச் சலித்த பதில்களையே மீண்டும் மீண்டும் சொல்ல வைப்பவை.
மாமாவின் துக்க வீடு எப்படி இருக்குமென்று மனதில் காட்சியாய்க் கொண்டு வர முயன்று தோற்றேன். மழுங்கலான சித்திரமாய் தீபராணியின் முகம் மட்டும் மேலெழுந்து வந்து நடை சற்றே வேகம் குறைந்தது.கூடவே மாமா வீட்டின் பின்புறமும் வேலியொட்டி இருந்த அந்தத் துவைக்கும் கல்லும் , வேலி தாண்டி சற்றே வளைந்து நீண்டு அடர் காட்டுக்குள் சென்று முடியும் ஒற்றையடிப் பாதையும் பனி படர்ந்த் கண்ணாடியில் சற்றே தெளிவுற்று மீண்டும் கலங்கும் பிம்பம் போல் நினைவில் நெருடின.
———
“என்னா தீப்சு… துக்கத்துக்கு போனவங்க நைட் வர மாட்டாங்க போல தெரியுது. இன்னிக்கு நைட் சாப்புட என்னா பண்ணலாம்? நான் வேணா டவுனுக்கு போய் புரோட்டா வாங்கிட்டு வரட்டுமா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கிடைக்கிறதே கொஞ்ச நேரம். அதையும் வேஸ்ட் பண்ணிகிட்டு” என்று முணுமுணுத்தது என் காதில் விழுந்தாலும் “ என்னா தீப்சு? என்ன சொன்ன?” என்றேன். உடல் லேசாக அதிர்ந்து கொண்டிருந்தது.
“வீட்லயே மாவு இருக்குது தோச போட்டு சாப்டுக்கலாம்னு சொன்னேண்டா” என்று சத்தமாகச் சொன்னவள், வேறு பக்கம் திரும்பி “ எப்பப் பாத்தாலும் சாப்பாட்டுலயே கண்ணு” என்று முணுமுணுத்ததும் காதில் விழுந்தது.
அந்த இரவில் என்ன பேசினோம் எப்படி நேரத்தைத் தின்றோம் என்பது எதுவும் ஞாபகமிருக்கா விட்டாலும் அந்த இரவு மட்டும் நினைவில் என்றென்றைக்குமான தடமாய்ப் பதிந்து போனது.
———–
கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு வலது முனை திரும்பும் போது சிறிய டீக்கடை ஒன்று திறந்திருந்தது கண்ணில் பட்டது. பேருந்தின் கடைசி இருக்கையில் மூட முடியாத ஜன்னல் ஒரு பக்கமும் மேலேயே சாய்ந்து விழுந்த முதியவர் மறுபக்கமுமென அமைந்ததால் பறிபோன தூக்கத்தின் விளைவாய்க் கண்ணோரங்களில் படர்ந்திருந்த எரிச்சலுக்குத் தேநீர் சற்றே இதமாய் இருக்குமென்று தோன்றியது.
கடைக்கு நடந்து ஒரு தேநீர் சொல்லி விட்டுச் சோம்பல் முறித்தேன்.. மேலும் இருவர் வந்து டீ சொல்லி விட்டு பென்ச்சில் அமர்ந்து கொண்டனர். துக்கத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தனர். கையில் பையோடு நான் வந்திருப்பது கண்டு துக்க வீட்டுக்குப் போகிறேனென்பதைப் புரிந்து , கண்களால் அமைதியாய் ஆமோதித்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர்.
——-
“கீழ போவல? எல்லாரும் போயிட்டாங்க.”
“நீ போவல”?
“நீயும் வாயேன் போவலாம்”
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். கொசு அதிகமா இருக்கு. நீ கீழ போ தீப்சு”
“ஒனக்கு மட்டும் கொசு கடிக்காதா?”
முதன் முதலில் கல்லூரி இரண்டாமாண்டு முடிவில் ஊருக்கு வந்திருந்த போது தீபராணி என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் அதுவரை இல்லாத பல மாற்றங்கள் தென்பட்டதை உணர்ந்ததும் உடல் முழுவதும் எங்கெங்கோ குளிர்ந்தது நினைவில் நிரடியது.தீபராணி அப்போது கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாள்.
——
“சார் டீ” என்ற குரல் கலைத்தது. தேநீரின் வெப்பம் மட்டுமே அதைக் குடிக்கத் தூண்டுவதாய் இருந்தது.துக்க வீட்டுக்கு போகையில் தேநீர் குடிப்பது கூட ஏனோ வினோதக் குற்றவுணர்ச்சியாய் இருந்தது.
மெல்லக் குடித்து முடித்து விட்டுக் குளத்தின் இடது முனை நோக்கி நடக்கத் துவங்கினேன். இடது முனை தாண்டி வலப் பக்கம் பிரியும் சாலையில் இறங்கினால் இரு பக்கமும் அடர் மரங்கள் . அதைத் தாண்டினால் தான் ஊர் துவங்குமிடம் வரும்.அந்த இடத்தைக் கடக்கும் போது கறுப்புப் பட்டை இடப்பட்டு அதன் நடுவே மஞ்சள் வட்டத்தினுள் 19 என்று எழுதப்பட்ட கொன்றை மரத்தைக் கண்கள் தேடின.
——-
“என்னா தீப்சு பயங்கர ஜாலியா இருக்காப்ல இருக்கு?”
“அப்டியா தெரிது?” நான் சாதாரணமா தான் இருக்குறேன்”
“அய்ய. சும்மா சொல்லாத. உன்னை எனக்கு தெரியாது?”
“அது….”
“ந்தா… சும்மா சொல்லு”
“பிஜி சக்ஸஸ்புல்லா முடிச்சிருவேன்னு செம்ம நம்பிக்கையா இருக்கேண்டா”
“அதான் தெரியுமே… நீ தான் செரியான படிப்ஸாச்சே. அதுக்கெதுக்கு நீ இவ்ளோ உணர்ச்சிவசப்படுற?”
“கேம்பஸ்ல ப்ளேஸ்மெண்ட் கிடைச்சிருக்குடா”
சட்டென்று அமைதியானேன்.
“பாத்தியா. இதை சொன்னா உனக்கு கடுப்பாவும்னு தான் சொல்லல. “
“சேச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்ல.”
“சாரிடா” என்று கூறியபடி தோளில் கை வைத்தவள் சட்டென்று கையை உயர்த்தித் தலையைக் கோதினாள். அவள் கைகளிலிருந்த சீயக்காயும் அஸ்வினி தேங்காய் எண்ணெயும் கலந்த மணம் நாசியில் ஏறிக் கமறியது.
———
புரையேறிச் சட்டென்று தலையை உலுக்கி நிகழுக்கு வந்த போது அடர் தோப்பைத் தாண்டி வாய்க்கால் பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தேன். எதிரில் யாரோ சைக்கிளில் வருவது தெரிந்தது. மாமா வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருப்பவர். அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் அவர் சைக்கிளில் மேடேறி மூச்சு வாங்க வருவதைப் பார்க்கும் போது ஏனோ அவர் பெயர் சங்கரனாக இருக்கக் கூடுமென்று தோன்றியது.
என்னைப் பார்த்ததும் சைக்கிளிலிருந்து இறங்கினார். ” மணி மருமவன் தான நீயி?” என்றார் சந்தேகத்துடன்.ஆமாம் என்று தலையாட்டியவுடன் முகத்தில் துக்கம் தேங்க “ஹ்ம்ம்.. என்னவோ போ. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். சரி நான் ஒரு வேலையாப் போயிட்டு இருக்கேன்” என்றவர் “போயிட்டு வந்துடறேன்” என்பதைக் கண்ணாலேயே சொல்லி விட்டுச் சைக்கிளை நகர்த்திக் கொண்டு போனார்.
————-
சென்னைக்கு வேலைக்காக வந்தவள், அலுவலகத் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கி விட்டாள். முதல் சில நாட்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது, பின் படிப்படியாய்க் குறைந்து நின்று போனது ஒரு கட்டத்தில். தூரத்து ஊரில் இருந்த போது இருந்த நெருக்கமும் வாத்சல்யமும், நினைத்தவுடன் சென்று பார்க்கும் தொலைவில் சென்னையிலேயே இருந்தும் சிறுகச் சிறுகக் குறைந்து போய் கிட்டத் தட்ட நின்று போனது ஆச்சரியமாய் இருந்தது.
வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் நீந்திப் போராடி இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள ஏதேதோ போராட்டங்கள் செய்து கொண்டிருந்த சமயத்தில் தீபராணியை வெகு நாட்கள் கழித்து ஒரு திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது..
“எப்படி இருக்கே தீப்சு”?
“நல்லாருக்கேண்டா. நீ எப்படி இருக்கே?”
“நல்லாருக்கேன்”
“
“பேசியே ரொம்ப நாளாச்சில்ல தீப்சு?”
“ஆமாடா. நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவள் கேள்வியை முடிக்கும் முன் அவள் கைப்பேசி அழைத்தது. தொடுதிரையைப் பார்த்ததும் தானாய் முகத்தில் படர்ந்த புன்னகையைச் சட்டென்று மறைத்துக் கொண்டு கண்களாலேயே எனக்கு விடை கொடுத்து விட்டு நகர்ந்தாள்.அதற்கு மேல் நிகழாமல் அந்த உரையாடல் அங்கேயே முற்றுப் பெற்றது எனக்குக் குழப்பமாய் இருந்தது.
அதற்கு முன் வரை அவள் பேச்சிலிருந்த லேசான குறும்புத்தனம் காணாமல் போயிருந்தது. அவள் பார்வையிலிருந்த அன்னியோன்னியம் காணாமல் போயிருந்தது.ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி அவளிடம் புதிதாகத் தென்படத் துவங்கியிருந்த பக்குவமும் கண்ணியம் கலந்த கம்பீரமும் பிரமிப்பைக் கூட்டியது. கிளம்பும் போது அவளைத் தேடிப் பார்த்துக் காணாமல் சொல்லிக் கொள்ளாமலே தான் கிளம்பினேன்.
———–
மாமா வீட்டின் தெருவுக்குப் போகும் பிரதான சாலையிலிருந்த அந்தத் திரையரங்கம் எந்த வித மாறுதல்களுமற்று அப்படியே இருந்தது. இரும்புக்குருவி என்று தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் ஓடிக் கொண்டிருந்தது.
அப்பாவிடம் நானும் மாமாவிடம் தீபாவும் அவள் அக்காவும் அடம் பிடித்து, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ராட்சதப் பட்டாம்பூச்சியொன்றைப் பற்றிய படத்தைத் தனியே போய்ப் பார்த்ததும், படம் முழுவதும் அருகில் அமர்ந்திருந்த தீபா, “அய்யோ… எவ்ளோஎ பெருசுல்ல அந்த பூச்சி? யப்பா எப்புடி அந்த பொண்ணு அது மேல உக்காந்து போவுதுல்ல?” என்று வெகு இயல்பாய்த் தொட்டுத் தொட்டுப் பேசியபடி இருந்ததும், படம் முடிந்து வீட்டுக்குப் போகையில் சுற்றிலும் தெரு நாய்கள் நின்று குரைக்க, என் பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாய் அவர்களுக்காக நடித்ததும் கண் முன் வந்து போனது.
———-
“யேய் தீப்சு….எப்டி இருக்க?” சங்கடமாய்ப் புன்னகைத்தேன். அவளுக்கும் அதே சங்கடம் இருந்தது கண்களில் புலப்பட்டது. “ நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க?”
“நான் நல்லாருக்கேன்” என்றபடியே தீபராணியை ஒட்டி நின்றிருந்தவரை ஏறிட்டேன். புரிந்தவளாக , “ இது ப்ரதீப். என் கலீக்” என்று அறிமுகப்படுத்தினாள். அதைச் சொல்லும் போது அவள் கண்கள் மெல்லத் தாழ்ந்தன. சூழ்நிலையைச் சகஜமாக்கும் பொருட்டு ப்ரதீப்பைப் பார்த்து வலிந்து சிரித்து “ நான் தீபாவோட கஸின்”என்று கூறிவிட்டு “எந்த ஸ்க்ரீன்? என்றேன்
கையிலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்து “ஸ்க்ரீன் 5 “என்றதும் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது. “எனக்கு ஸ்க்ரீன் 9. சரி தீபா. எனக்கு டைமாயிடுச்சு. அப்புறம் பார்ப்போம்” என்று நகர்ந்தேன்.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் காரணமே இல்லாமல் நண்பர்களிடம் சண்டை போட்டுக் கொண்டும் அம்மாவிடம் போனில் எரிந்து விழுந்து கொண்டும் ஏன் ஒரு விதமான சிடுசிடுப்பில் இருக்கிறேன் என்று புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.
———–
மாமா வீட்டுத் தெருவை அடைந்து விட்டிருந்தேன். தெரு முனையிலிருந்தே ஷாமியானாப் பந்தலும் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளும் தெரிந்தன. அங்கிருந்தே நான் வருவதைப் பார்த்து விட்ட வயதான சிலர், அவர்கள் நினைக்கும் ஆள் தானா நான் என உறுதி செய்து கொள்ள , அருகில் செல்லும் வரை என்னையே உற்றுப் பார்ப்பது தெரிந்தது.
அந்தக் கூட்டத்தில் தெரிந்த உறவுக்கார முகம் ஏதேனும் தெரிகிறதா என்று தேடினேன். அப்பா இருப்பாரென்று நினைத்தேன். காணவில்லை. ஏதேனும் வேலையாய் இருப்பார். யோசனைகளோடு நடந்து வீட்டு வாசலை அடைந்தேன்.
ஏனோ உள்ளே போகாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நான் அமர்வதற்காகவே காத்திருந்தது போல் , முகம் மட்டும் நினைவில் இருந்த, பெயர் நினைவிலில்லாத, சற்றே தூரத்து உறவினர்கள் இரண்டு பேர் வந்து என்னருகில் அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுக்கத் துவங்கினர்.
ஒரு வகையில் அது ஆசுவாசமாய் இருந்தது. உள்ளே போய் மாமாவை, தீபராணியைப் பார்ப்பதை இன்னும் சில மணித்துளிகள் தள்ளிப் போடும் பலவீனமான முயற்சி. ஆச்சரியமாய் என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என் வீட்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் ரம்யாவைப் பற்றியும் நிஜமான அக்கறையுடன் விசாரித்துக் கொண்டிருந்தனர்.அப்பா சொல்லியிருக்கக் கூடும்.
உரையாடலின் நடுவே யதேச்சையாக விழுந்த தீபராணியின் பெயர் கவனத்துக்கு வந்ததும் மீண்டும் நினைவுகள் நழுவின. தீபராணி தன் காதலை வீட்டில் சொன்ன போது பெரும் பிரச்னை வெடித்தது. மாமாவும் அத்தையும் தினந்தோறும் சண்டை போட்டார்கள். அவள் கொஞ்சமும் மசியவில்லை. அவள் பிடித்த பிடியில் ஸ்திரமாக நின்றாள். கடைசியில் அத்தையும் மாமாவும் தான் இறங்கி வரும்படி ஆயிற்று.
“எப்படிடா இருக்கே?”
“நல்லா இருக்கேன் தீபா”
“எல்லாம் கேள்விபட்டிருப்பேன்னு நினைக்கிறேன்”
“கேள்விப்பட்டேன் தீபா. கங்கிராட்ஸ்.”
“நேர்ல வந்து கூப்பிடலையேன்னு நினைச்சுக்காத. இதையே பர்சனல் இன்வைட்டா எடுத்துக்கோ. கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுடா” என்றாள்.
“கண்டிப்பா” என்றேன்.
போகவில்லை.தீபராணியின் திருமணத்துக்குப் பின் அவளுடனான தொடர்பு இன்னமுமே குறைந்து போனது.
வேலையிலும் தீபராணிக்குப் பின்னான சிறு சிறு ஈர்ப்புகளையும் தாண்டி, வீட்டில் பெண் பார்க்கச் சொல்லி அதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியிருந்த சமயம் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு நாள் தீபராணியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
“எப்படிடா இருக்கே? வேலையெல்லாம் எப்படி போகுது?பொண்ணு பாக்கறதா சொன்னாங்க அத்தை. டிலே ஆகுதுன்னு கவலைப்பட்டுக்காதே.எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஐம் பைன். நீ எப்படி இருக்க தீபா? ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு?”
“எல்லாரும் நல்லாருக்கோம். அது சரி அதென்னடா தீபா தீபான்னு? தீப்ஸ்னு எப்போவும் போல கூப்பிடு”
இப்படியாக எங்களுக்கிடையேயான சம்பாஷனைகள் ஒரு மரியாதையான இடைவெளியில் மீண்டும் தொடர்ந்தன. ஆனால் எங்களுக்கிடையேயான உரையாடலில் சர்வ நிச்சயமாய் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். இடைக்காலங்களில் காணாமல் ஆகியிருந்த பால்யத்தின் பரிவும் வாத்சல்யமும் அக்கறையும் நிச்சயம் அவள் குரலில் கலந்திருந்தது. அதன் கூடவே அவளது கம்பீரமும் முதிர்ச்சியும் சேர்ந்து வேறு ஒரு பரிமாணத்தில் தீபா தெரிந்தாள்.
——
“சொல்லு தீப்சு எப்படி இருக்க? ப்ரதீப் எப்படி இருக்காரு?”
“எல்லாம் நல்லாருக்கோம். உன் பேஸ்புக் போஸ்ட் பாத்துட்டு தான் கால் பண்ணேன்.”
“எந்த போஸ்ட்டு?”
“பிக் பேங் தியரி தான் இருக்கறதுலயே சிறந்த ஷோன்னு போட்டு வெச்சிருக்க? போன வாட்டி நாம பேசும் போது ப்ரண்ட்ஸ் தான் பெஸ்ட்டுன்னு சொன்ன?”
“ரெண்டும் தான். காரணமிருக்கு.”
உரையாடல் டி வி நிகழ்ச்சிகளைப் பற்றித் தொடர்ந்து நட்பையும் நண்பர்களையும் பற்றிப் பேசி, ஊரைத் தொட்டு, தோப்புகள், வாய்க்கால்கள் என்று நீண்டு பால்ய நாட்களில் வந்து நின்று உறைந்து போன காலத்தைக் கண்ணாடி வழி பார்ப்பது போன்ற பிரமையைத் தந்தது.
———-
மின்விசிறிக் காற்றில் அலைந்தாடும் மயிர்த்துணுக்கு போல் அடி மனதின் ஏதோ ஒரு இழையில் சுழன்றபடி இருந்த இனம் புரியாத ஒரு ஏக்கம் ரம்யாவைப் பெண் பார்த்துச் சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் அவளுடனான உரையாடல்களின் போது இன்னும் வலுவாகி, திருமணத்தின் போது உச்சக்கட்டத்தை அடைந்து பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு உடல் சுகமில்லையோவெனப் பதறி விசாரிக்குமளவுக்குப் போனதும் சுதாரித்துக் கொண்டேன்.
———-
சட்டென்று தோளில் கை விழுந்ததும் நினைவிலிருந்து நிகழுக்கு வந்தேன். அப்பா நின்றிருந்தார். ” நீ எப்படா வந்த?” என்றார். கேட்கும் தொனியிலேயே “உள்ள வராம் இங்க என்ன பண்ணிட்டிருக்க” என்ற கேள்வி ஒலித்தது. கண்ணாலேயே உள்ளே போகுமாறு சைகை காட்டி விட்டு விலகிப் போனார்.
இதற்கு மேலும் தவிர்க்க முடியாது என்று எழுந்தேன். வாசல் படிகளிலும் உறவினர் கூட்டம் நிறைந்திருந்தது. ‘ அந்தப் புள்ள தான் பாவம். அழுவறதுக்கு கூட நேரமில்லாம சுத்தி சுத்தி வேலை பாக்குது. ஒரு சொட்டுத் தண்ணியில்லையே கண்ணுல பாவம்.” என்று இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர்கள் தீபராணியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அடி வயிறு லேசாகக் கலங்கியது. மெல்லப் படியேறி உள்ளே நுழையும் போதே லேசான அழுகைச் சத்தம் காற்றில் கலந்திருந்தது. இரவிலிருந்தே அழுது கொண்டிருப்பதால், அழுகையின் சப்தம் தணிந்து, விசும்பல்களும் பெருமூச்சுகளும் கூடச் சில கிசுகிச்சுப்பான உரையாடல்களும் கூடக் காதில் விழுந்தன.
மாமா குளிர் பெட்டிக்குள் இருந்தார். குளிர் பெட்டியின் தலைமாட்டில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி அணைக்கப் பட்டிருந்தது.அருகே அத்தையும் தீபராணியின் அக்காவும் அமர்ந்திருந்தனர்.
மாமாவின் முகத்தை ஓரிரு நொடிகள் பார்த்தவன், குற்ற உணார்ச்சி உந்தித் தள்ள சுற்றிலும் பார்த்து தீபராணியைத் தேடினேன். அவளைக் காணவில்லை. மீண்டும் மாமா முகத்தைப் பார்க்கத் துவங்கினேன்.
உள்ளறை வாசலில் சலனம் தெரியவே நிமிர்ந்து பார்த்தேன் தீபராணி நின்றிருந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். இரவு முழுதும் தூங்காததால், கண்கள் களைப்புற்றுச் சிவந்திருந்தன. புறங்கையால் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டே மெல்லக் குளிர் பெட்டியின் அருகே வந்தவள், “வா” என்பது போல் என்னைப் பார்த்துத் தலையசைத்தாள்.
பதிலுக்கு லேசாகத் தலையசைத்தேன். சில நொடிகள் குனிந்து மாமாவின் முகத்தைப் பார்த்தவள் நிமிர்ந்தாள். கண்களில் நீர் நிறைந்திருந்தது. நாசி விடைத்துக் கொண்டிருந்தது.
மதகுகளைத் திறந்ததும் அடித்துச் சுழற்றும் அணை நீர் போல் சட்டென்று என் மேல் சாய்ந்தவள் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். அவள் கண்ணீரும் எச்சிலும் சட்டையை நனைத்தன. உள்ளுக்குள் ஏதோ உடைந்து போக, மெல்லக் கைகளை உயர்த்தி, அவள் முதுகைச் சுற்றி அணைத்தேன். மெல்லத் தடவிக் கொடுத்தேன். சீயக்காயும் அஸ்வினி தேங்காயெண்ணெயின் மணமும் நினைவினின்றும் புகை போல் எழுந்து நாசியை ஆக்கிரமித்தது.
அவள் அழுகை நீடித்த நிமிடங்கள் நகராமல் நிற்பது போல் தோன்றியது மெல்ல மெல்ல என் கண்களிலும் நீர் நிறைந்து மறைத்தது.அழுகையின் வீரியம் சற்றே குறைந்தாற் போலிருந்தது. மெல்ல அவளை விலக்கினேன். கண்களோடு சேர்த்துக் கன்னங்களை அழுந்தத் துடைத்தேன். அவள் தலை மேல் மெல்லக் கை வைத்து அழுத்தினேன்.
பின்திரும்பிப்பார்க்காமல்வெளியேவந்தேன். சட்டை முழுவதும்வியர்த்துநனைந்திருந்தது. அதில்தீபராணியின்வியர்வையும்இருந்தது. தேநீர்குடித்தால்தேவலாம்போலிருந்தது. மெல்லப் படியிறங்கிக் குளத்துத்திருப்பத்தின்தேநீர்க்கடையைநோக்கிநடக்கத்துவங்கினேன். தெருமுனையைத்திரும்பும்போதுயாரோபின்னாலிருந்துஅழைப்பதுபோல்இருந்தது. திரும்பிப்பார்க்கவில்லை.