ஹேமந்த் குமார்

சாய்ந்திருப்பதெல்லாம் மாயத்தோள்கள்

ஹேமந்த் குமார்

தொட்டிலுக்குப் பதிலாக
நான் உறங்கிய படுக்கை,
என் தாயின் தோள்;
ஆறுதலாக கட்டித் தழுவியது,
என் தந்தையின் தோள்

பெற்றோரிடம் கூறாமுடியா
சொற்களை பெற்றுக்கொண்டது,
என் சகோதர சகோதரியின் தோள்;
இரத்த சொந்தம் இல்லாவிட்டாலும்
நெஞ்சம் நிறைய தஞ்சமளித்தது,
நண்பரின் அன்புத் தோள்

தன் உடலெனும் கட்டிலில்
என்னை சுமந்த தலையணை,
என் காதலியின் தோள்;
வாழ்க்கை முழுவதும்
குடும்ப வருத்தங்களை சுமக்கிறது,
என் மனைவியின் தோள்
வரும் மரணத்தின் தோளுக்கு முன்பு
நான் சாய்ந்திருப்பதெல்லாம்,
வெறும் மாயத்தோள்கள்.

 

 

உருமாற்றம்

ஹேமந்த் குமார் 

நான் பிச்சையெடுக்காத
தெருக்களே இல்லை
கையில் திருவோடு எடுத்து
கால் வலிக்க நடக்கிறேன்
பசிப்பிணியால் துடிக்கிறேன்
ஹோட்டலுக்கு வெளியே நின்று
காதுகளில் உணவருந்தி
மனதின் வயிற்றை நிரப்புகிறேன்
‘கருவாடு, மீன், கோழி’
என்ற சொற்களை
காதில் கேட்கும் போதெல்லாம்
நான் ஒரு பூனையாக
உருமாறுகிறேன்
என் பற்கள்
கூர்மையடைகின்றன
மூக்கு இரத்த வாடையை
நுகர்கிறது
கண்கள் வெண்மையடைந்து
என் மென்மையான மீசை
முறுக்கு கம்பிகளைப் போல்
நீண்டு நிற்கிறது
வயிற்றில் பசி மட்டுமே
குடியிருக்கிறது
உடலில் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றன
நகங்கள் தோலிலிருந்து
முளைத்து வளர்கின்றன
எனக்கு பிச்சையிடாதவர்களை
கடித்து குதற காத்திருக்கிறேன்
வால் மட்டும்தான் இல்லை
முழுமையடையாத மனிதப்பூனை.

என்றும் எம் மக்கள்

ஹேமந்த் குமார் 

இவ்வுலகை இரசிக்கப்
பிறந்தவன் நான்
என் உலகில் கலவரங்கள்
ஒழிவதற்கே – நான்
மானுடம் பாடி மகிழ்கிறேன்

நீ ஆணா பெண்ணா
அவசியமில்லை
உன் சாதியும் மதமும்
அடையாளமில்லை

நீ ஏழையா பணக்காரனா
பாகுபாடில்லை
உன் மொழியும் நாடும்
பிரிவுகளில்லை

நீ மனிதனா மிருகமா
யோசிக்கவில்லை
உன் நிறமும் குணமும்
இணைந்தவையில்லை

நீயும் நானும்
ஒன்றெனக் கண்டேன்
வயிறும் பசியும்
இருக்கும் எவரும்
எம் மக்கள் என்றெண்ணம்
கொண்டேன்