எஸ்.ஜெயஸ்ரீ

சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை

வீரபாகு முதலியார் குளித்து முடித்து கிணற்றங்கரையிலிருந்து இடுப்பில் ஈரத் துண்டோடு தோட்டத்துப் பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். உள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கூடம் அளவுக்கு இருக்கும் அறையின்( அது அறை அல்ல. ஒரு பெரிய கூடம்தான். ஒரு மூலையில் மாட்டுத் தீவனம் மூட்டை;. ஒரு பக்கம் பெரிய வென்னீர்த்தவலை வைத்து விடுவது மாதிரி முக்கூட்டி அடுப்பு’ இன்னொரு மூலையில் பாத்திரங்கள் என்னவோ பறத்தினாற்போல வைக்கப்பட்டிருந்தது). மேலோரம் உயர்த்தி கட்டியிருக்கும் கொடியிலிருந்து நேற்றுத் தோய்த்துக் காயப் போட்டிருக்கும் வேட்டியை ஒரு கம்பினால் ஏதோ தொரட்டிக் கம்பினால் மாங்காய் பறிப்பது போல எடுத்தார். வெள்ளாவி வைத்தது போல, தும்பைப் பூப் போல வெண்ணிறமாக இருந்த வேட்டியை எடுத்து உதறி இடுப்பில் சுற்றிக் கொண்டு இடது கையை வேட்டிக்குள் நுழைத்து ஈரத் துண்டினை உருவி எடுத்தார். மீண்டும் கிணற்றடிக்குப் போய் பிழிந்து வைத்த வேட்டியோடு, இந்தத் துண்டினையும் ஒரு அலசு அலசி எடுத்து வந்தார். வேட்டியைக் கொசுவி மீண்டும் அதே கொடியில் பறித்த மாங்காயை வைப்பது போல கையில் இருந்த கழியினாலேயே விரித்து விரித்து காயப் போட்டார். கையை கொஞ்ச நேரம் உயர்த்தி வைத்துக் கொண்டே இருந்ததில் தோள்பட்டையும், மணிக்கட்டுப் பக்கமும் வலித்தது. தலையைத் தூக்கியே வைத்திருந்தது, மீண்டும் தலை அதன் இடைத்திற்கு வந்தவுடன் ஒரு மாதிரி கிர் ரென்று சுற்றியது. மெதுவாக சுவற்றைப் பிடித்தாவாறு அந்த பெரிய தொட்டிகிட்டைத் தாண்டி, நிலா முற்றத்தைத் தாண்டி, கூடத்திற்கு வந்தார்.

கூடத்திற்குள் அடியெடுத்து வைத்தார் அவர். வலது பக்கம் திரும்பி சுவாமி அலமாரி முன் நின்று, இரண்டு கைகளையும் தூக்கி ஒரு கும்பிடு போட்டு, கண் மூடி நின்றார். எண்பத்தைந்து வயதுக்கும் மூப்பு தெரியாத தேகக் கட்டு. விபூதிக் கப்பரையில் இருந்து விபூதி எடுத்து, பஞ்சபாத்திரத்திலிருந்து கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும், இரண்டு கைகளிலும், நெஞ்சின் குறுக்கேயும் பட்டைகளை போட்டுக் கொண்டார். ஆழி மழைக் கண்ணனாய் கறுத்த உடம்பில், காய்ந்தவுடன் விபூதிப் பட்டைகள் பளிச்செனத் தெரிந்தன.. இது மாலையில் அவர் முகம் கழுவுவது வரை அப்படியே இருக்கும். மூன்று தோப்புக்கரணம் போட்டார்; இரண்டு ஊதுபத்தியை எடுத்து ஏற்றி, ” ஐந்து கரத்தனை” சொல்லி முடிக்கும்போது ஊதுபத்தியை எல்லாப் படங்களையும் சுற்றி, ”ஓம்” என்று எழுதுவது போல் சுற்றி முடித்து ஊதுபத்தி ஸ்டேண்ட்டில் குத்தினார். இவர் போட்ட ஊதுபத்தி “ஓம்” வளையத்தில் அப்படியே மயிலோடு முருகன் வந்து நின்ற மாதிரி இருந்தது. ”துதிப்போர்க்கு வல்வினை போம்” என்று கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தார். அப்புறம், “ பால் நினைந்தூட்டும்” ஆரம்பிப்பார். அது முடித்து, “கலையாத கல்வியும்” தொடர்ந்தது.. அதைத் தொடர்ந்து “ ஒருமையுடன் உனது திருவடி நினைக்கினற உத்தமர் தன் உறவு வேண்டும்” எனத் தொடர்ந்தார். இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டே, ஏற்கனவே மருமகள் செங்கமலம் பறித்து வைத்திருந்த அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களை ஒவ்வொரு படத்திற்கும் வைத்து முடித்தார். கடைசியில், நெருக்கித் தொடுத்திருக்கும், முல்லைச் சரத்தை எடுத்து, தங்க ஃப்ரேம் போட்ட சதுரத்திற்குள் மங்கலமாய்ச் சிரிக்கும் மங்கலட்சுமி படத்திற்குச் சாற்றினார். கண்ணில் நீர் துளிர்த்தது. “என்ன இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டேயேடி பாவி மனுஷி” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். அவ்வளவுதான், பூஜை முடிந்தது.

மாமனாரின் “ஒருமையுடன்” காதில் விழுந்தவுடனேயே செங்கமலம் சிற்றுண்டியைத் தயாராக கூடத்தில் இருக்கும் உணவு மேசையில் கொண்டு வைத்து விடுவாள். நாற்காலியை பின்னுக்கு இழுக்கும் சத்தம் வந்தவுடன், அவள் வந்து அவருக்குப் பரிமாறுவாள். மூன்று இட்டிலிகளோ, இரண்டு தோசைகளோ சாப்பிட்டு, தொண்டைக்கு இதமாக சின்னச் செம்பில் வென்னீர் குடித்து விட்டு, அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு, வெளித்திண்ணையில் வந்து இரண்டு பக்கமும், கையை நன்றாக ஊன்றிக் கொள்ள வசதியாக இருக்கும் மர நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் வந்து உட்கார்ந்தால் மணி 9.25.

முதலியார் திண்ணையில் வந்து உட்காருவார். செய்தித்தாளைப் பார்ப்பார். நடு நடுவே தலையை நிமிர்த்தி சாலையில் போவோர் வருவோரையும் பார்த்துக் கொள்வார். அவர்கள் வீடு, கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி போகும் பிரதான சாலையில் உள்ளது. இரண்டு நகருங்களுக்குமிடையே வழி நெடுக அழகான பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள் நிறைந்த கிராமங்கள். வியாபாரிகள், நரிமேட்டு ஜோஸ்யர்களைப் பார்க்கச் செல்பவர்கள், பாலூர் பண்ணைக்கு விதையோ, மரக் கன்றுகளோ வாங்கச் செல்பவர்கள், காய்கறிகள் அப்படியே புதிதாகக் கிடைக்கிறதே என்று வாங்க வருபவர்கள், அலுவலகம் செல்பவர்கள், அக்கம் பக்கத்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவ மாணவிகள் என எப்போதும் சாலை சுறுசுறுப்பாகவே இருக்கும். அதனால், வீரபாகு முதலியாருக்கு நேரம் போவதே தெரியாது.

அன்று வீரபாகு முதலியார் திண்ணையில் வந்து அமர்ந்து நிமிரும்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஆணும், பெண்ணும் போனதைப் பார்த்தார். அந்தப் பெண், வழக்கமாக முன்னால் உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஆணின் தோளையோ, தொடையையோ பிடித்துக் கொள்ளவில்லை. என்னவோ, பேருந்தில் உட்கார்ந்து செல்பவள் மாதிரி, மடியில் கைப்பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தன் வீட்டு வாசலை அந்த வண்டி கடக்கும் அந்த ஒரு நிமிடத்தில் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவருக்குக் கண்கள் மலர்ந்தன. ”ஐயோ….அப்படியே மங்கா மாதிரியே இருக்கா” என்று நினைத்துக் கொண்டார். இன்னொரு தரம் பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போது வண்டி அவர் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அதன் பின், முதலியாருக்கு செய்திகளில் மனம் செல்லவில்லை.

மங்கலட்சுமி போய்ச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஓடியே விட்டன. ”யாராரோ என்கேர்ந்தெல்லாமோ திருக்கடையூர் வந்து அறுபது, எண்பதும் செஞ்சிக்கிட்டுப் போறாங்க; இந்தா நம்ப இவ்வளவு கிட்ட இருந்துக்கிட்டு செஞ்சுக்காட்டா எப்படி” என்று சிதம்பரத்தில் இருக்கும் மச்சினிதான் எண்பதாம் கல்யாணம் செய்து கொள்ளத் தூண்டினாள். அறுபதாம் கல்யாணம் செய்து கொண்டார்கள்தான். அப்போது அலுவலக நண்பர்கள் தூண்டுதலினால் செய்து கொண்டார். அவருக்கென்னவோ அதிலெல்லாம் ரொம்ப ஈடுபாடு இல்லை. மங்காதான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாள் அவளுக்கு எப்போதும் குழந்தைகள் மாதிரி மகிழ்ச்சிதான். தன்னிடம் அவள் அதிகமாகக் கோபப் பட்டது கூட இல்லை. தான் எது சொன்னாலும் முதலில் ஒப்புக் கொள்வாள். அதில் அவளுக்கு வேறு யோசனை இருந்தால் அதைப் பக்குவமாக, அப்புறம்தான் சொல்வாள். அவளுக்கு எதுவும் தெரியாத மாதிரி இருக்கும். ஆனால், அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். அது மாதிரி, மனுஷாளுடன் பழக அவளை மதிரி முடியாது. வாசலில் வரும் பூக்காரியிடமும் சரி, அக்கம் பக்கம் வீடுகளிலும் சரி, தன் வீட்டு சொந்தம், அவள் வீட்டு சொந்தமாகட்டும், நண்பர்களாகட்டும் யாருடனும் அவளுக்குப் பகையில்லை. எப்பப் பார்த்தாலும் “மனுஷா வேணும் காலத்துக்கும். பணம் வரும், போகும், மனுஷாள் கிடைப்பாங்களா”: என்று சொல்லிக் கொண்டே .யிருப்பாள் அது மாதிரி எந்த விசேஷங்களூக்கு யார் வீட்டுக்குப் போனாலும் சரி, உடனே, அது என்னவோ தன் வீட்டு விசேஷம் மாதிரி ஒன்றி விடுவாள். அவளே பந்தி பரிமாறுவாள். அவர்கள் வீட்டுக்கு என்ன உறவு முறையோ அதை வைத்தே இவளும் அவர்களை விளிப்பாள். அந்தக் குடும்பத்தினர் யாரும் இவளை மறக்க முடியாதபடிச் செய்து விடுவாள்.

தான் கூட அவள் என்னவோ அதீதமாக நடந்து கொள்கிறாளோ எனப் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால். அவள் இறந்து போய், கடந்து விட்ட இந்த ஐந்து வருஷத்தில், யார் வீட்டு விசேஷங்களூக்குப் போனாலும், அவர்கள் மங்காவை ஞாபகப்படுத்துவது இருக்கட்டும், இவருக்கே மங்கா இல்லாத அந்த விசேஷ வீடு வெறிச் சென இருப்பது மாதிரி இருக்கும்.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே இப்படி யோசனைகளில் மூழ்கிப் போனவரின் கண்ணோரம் கசிந்திருந்தது. வாசலில் எரிவாயு உருளை கொண்டு வருபவர்களின் வண்டிச் சத்தமும், உருளைகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டும், உருண்டு கொண்டும் வருகிற ஓசையும், “சார்…கேஸ்” என்ற குரலும்தான் அவரது நினைவுகளை அறுத்தன. வீட்டினுள்ளே திரும்பிப் பார்த்தார். அதற்குள் மருமகளே கையில் பதிவேட்டுப் புத்தகத்துடன் வந்து விட்டாள். உருளையை உருட்டி உள்ளே வைத்து விட்டு அதை வைத்தவன் வெளியேறிப் போனான். வீரபாகுவும் எழுந்து உள்ளே சென்றார். தன்னுடைய அறையில் போய் ஈசிசேரில் சாய்ந்து கொண்டார். அங்கும் மங்கா புகைப்படத்தில் சிரித்தாள். என்னவோ, இன்று காலை, அந்த இருசக்கர வாகனத்தில் கடந்து போன அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்காவின் நினைவு அதிகமாகத் தோன்றுகிறது. மருமகளுக்கு வேலைகள் ஆகி விட்டன போலும். தொலைக்காட்சியில் அவள் தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டாள். மகன் சாப்பிட வர இரண்டு மணி ஆகும்.

மங்காவுக்கும் தனக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். ஏதோ தூரத்து சொந்தம். வீரபாகுவுக்கு இரண்டு அக்காக்கள் மூன்று தங்கைகள். எல்லோர்க்கும் இவர் செல்ல சகோதரன். பாலூரில் தாத்தா பார்த்திருந்த விதைப்பாடு கொஞ்சமும், ஒரு வீடும் இருந்தது. அப்பா, பாலூர் காய்கறிப் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இரண்டு அக்காவுக்கும், ஒரு தங்கைக்கும் திருமணம் முடித்த பிறகு இறந்து போனார். மற்ற இரண்டு தங்கைகளின் திருமணத்தை இவர்தான் செய்து முடித்தார். அப்பா இறந்துபோனவுடன், இவருக்கும் அந்தப் பண்ணையிலேயே வேலை கிடைத்தது. வயதும் முப்பத்தந்தை நெருங்கியது. அப்போதுதான் பெரிய அக்கா மூலமாக கடலூர் கரும்புப்பண்ணையில் வேலை பார்க்கும் தண்டபாணி என்வருக்கு பெண் இருக்கும் விஷயம் தெரிய வந்தது. மங்காவின் கரம் பிடித்தார். பாலூர் வாசம். வந்த கொஞ்ச நாட்களிலேயே மங்கா இந்த வீட்டு நடைமுறைகளைத் தெரிந்து கொண்டதோடு, வயல், விதைப்பாடு பற்றியும் தெரிந்து கொண்டாள். பண்ணை அலுவலக வேலைகளோடு, வீரபாகுவும் வீட்டு விதைப்பாடு வேலைகளையும் கவனித்துக் கொண்டார். மங்கா வந்த நேரமோ என்னவோ, தொட்டதெல்லாம் துலங்கிற்று. கொய்யா போட்டாலும், நிலக்கடலை போட்டாலும், மிளகாய் போட்டாலும் எல்லாம் நல்ல விளைச்சல் கொடுத்தன. மங்கா பக்குவமாக சொந்தக் காரர்களுக்கும் அள்ளிக் கொடுத்தாள். தன் குடும்பத்துக்கும் லாபம் வருவது மாதிரி பொருட்களை நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்தாள்.

தெருவில் யாரோ மாடு விரட்டிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. வளையல் விற்பவர் “ கண்ணாடி வளையல்” “கண்ணாடி வளையல்” என்று விட்டு விட்டு ராகமாகச் சொல்லியபடியே தள்ளு வண்டியை உருட்டும் சத்தம் கேட்டது. கண்ணை மூடிக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்த வீரபாகு கண்ணைத் திறந்து பார்த்தார். கடிகாரம் சரியாக பனிரெண்டு மணியைக் காட்டியது. கடிகாரத்தின், “சிக்’ “சிக்” என்ற சத்தம் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மருமகள் செங்கமலம் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சமையற்கட்டுக்குப் போயிருப்பாள் போல. அருகிலிருக்கும் மேசை மீதிருந்த செம்பிலிருந்து அதன் மூடி விலக்கி, பக்கதிலிருந்த தம்ளரில் விட்டுத் தண்ணீர் குடித்தார்.

மூடி வைத்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்துத்தான் வெற்றிவேல் பிறந்தான். அதற்குள் எத்தனை பேச்சுகள், சந்தேகங்கள். எல்லாவற்றையும் மங்கா சகித்துக் கொண்டாள். தான் தளர்ந்த போது கூட “எப்பவும் நல்லதையே நினைங்க..நடக்கும், நடக்கும்னு நாம்ப நினைக்க நினைக்கத்தான் நல்லது நடக்கும். நம்ப எண்ணங்களுக்கு அப்பிடி ஒரு வலிமை இருக்கு தெரியுமா” அப்படினு சமாதானப்படுத்துவா. அவ எவ்ள நல்லவ. எதிலுமே அவளுக்குக் குத்தம் கண்டுபிடிக்கத் தெரியாது. யாரையும் கெட்டவங்கனு அவ ஒரு நாளும் சொன்னது கிடையாது. யார் என்ன சொன்னாலும்” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி” அப்படினு சொல்லிடுவா. மீண்டும் வீரபாகு முதலியாருக்கு ரொம்ப அழுகையாக வந்தது. “ஏண்டி….மங்கா…என்ன விட்டுட்டுப் போன” என்று மனதிற்குள் நினைத்து கண்ணீர் சொரிந்தார். குளிச்சிட்டு வந்த ஈரம் காயறதுக்குள்ள காபியக் குடிச்சுட்டு, ஊஞ்சல்ல உட்கார்ந்தவ அப்படியே போயிட்டியே…மகராசி….ஒரு வார்த்தை என்கிட்ட பேசலையே…. ஈசி சேரில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்கா நினைவு அதிகமாக வருகிறது. அவள் முகம் அப்படியே மங்கா முகம் மாதிரியே இருந்தது. அவள் எங்கிருந்து எங்கு போகிறாள்? மீண்டும் இந்த வழி வருவாளா? அப்படியே அங்கு தங்குபவளா? இல்லாவிட்டால், நெல்லிக்குப்பம் வழியாக மீண்டும் கடலூர் சென்று விடுவாளா? மீண்டும் அவளைப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

வெற்றிவேல் பிறந்தபோது இங்கு பாலூரிலேயே இருந்தோம். அவனைப் படிக்க வைக்க வேண்டும் எனும்போது, கடலூர்தான் சரிப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மஞ்சக்குப்பத்தில் வீடு பார்த்து, மங்காவும், வெற்றிவேலும் அங்கிருப்பது என்றும், தான் மட்டும் வாரத்திற்கு இருமுறை கடலூர் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மங்கா புளிக் குழம்பு, பொடிகள், இட்டிலி மாவு எல்லாம் செய்து தருவாள். வீரபாகு பாலூருக்கும், கடலூருக்கும் அலைந்து கொண்டிருந்தார். வெற்றிவேல் நன்றாகப் படித்தான். அவன் விவசாயம் சார்ந்தே வளர்ந்ததால் அதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றான். முடித்து விட்டு வந்தவுடன் அவன் கிராமத்திலிருந்து விவசாயம் பார்க்கப் போவதாக தீர்மானமாகச் சொல்லி விட்டான். படித்த படிப்பையும், அனுபவத்தையும் இணைத்தான். விவசாயம் பெருக்கினான். உரக்கடை வைத்தான். திருமாணிக்குழியிலிருந்து திருவதிகை வரை விதைப்பாடு வைத்திருக்கும் அத்தனை ரெட்டியார்களும் இவனிடம் வந்து ஆலோசனை கேட்டார்கள். செழித்தார்கள். வீரபாகுவுக்கும், மங்கலட்சுமிக்கும் அளவிட முடியாத சந்தோஷம். அவனுக்கு புவனகிரியிலிருந்து பெண் எடுத்தார்கள். அவர்களுக்குத் தங்களைப் போல தாமதமாகாமல் திருமணம் முடிந்த அடுத்த வருடமே ராஜா பிறந்தான். இப்போது அவன் சென்னையில் கல்லூரியில் படிக்கிறான்.

வீரபாகு எழுந்து தோட்டத்துப் பக்கம் போய் சிறுநீர் கழித்து வந்தார். சமையற்கட்டைத் தாண்டும்போது செங்கமலம் அப்பளம் பொரிக்கும் வாசனை வந்தது. இப்போது செங்கமலம் இவரைச் சாப்பிடக் கூப்பிடுவாள். வெற்றிக்கு அவன் வரும் வரை தானும் காத்துக் கொண்டிருந்தால் கோபம் வரும்.” ஏம்ப்பா சாப்பிடாம இருக்கீங்க. நான் வர முன்னப்பின்ன ஆகும். நீங்க அது வரயிலும் சாப்பிடாம இருக்க முடியுமா” என்று கேட்பான். செங்கமலத்திடம் அப்பாவிற்கு வேளையோடு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அதனால், வீரபாகு, தான் மட்டும் முன்னாலேயே சாப்பிட்டு விடுவார். சாப்பிட்டு, மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாரானால், ஒரு தூக்கம் போடுவார். அப்புறம் நாலு மணி வாக்கில்தான் எழுந்திருப்பார். அதிகம் பேசவே மாட்டார்.

அன்று மதிய உறக்கத்திலும் கனவு வந்தது. மங்காதான். பைக்கில் இருவரும் உல்லாசமாக பாலூரிலிருந்து கடலூர் கடற்கரை வரை போகிறார்கள். கடற்கரையில் மணலில் அம்ர்கிறார்கள். மங்கா அலையில் கால் நனைக்க வேண்டும் என்று அழைக்கிறாள். இவருக்கோ அது பிடிக்காது. பிடிக்காது என்றால் கால் எல்லாம் நனைந்து, மீண்டும் மணல் ஒட்டிக் கொள்ளுமே என என்னவோ ஒரு விருப்பமின்மை. மங்கா குழந்தை மாதிரி புடவையை முட்டி வரை தூக்கிக் கொண்டு அலையில் நிற்கிறாள். மொத்தப் பல்லும் தெரியும்படி சிரித்தபடியே களிக்கிறாள். மீண்டும் கரைக்கு வந்து தன்னோடு ஒட்டி உட்கார்ந்து கொண்டு, பேசுகிறாள். என்ன சொல்கிறாள்?

’ இப்டியே நம்ப ரெண்டு பேரும் கடசி வரக்கும் சந்தோசமா இருக்கணும்.நீங்க என் கூடவே இருக்கணும்ங்க கடசி வரைக்கும்.”

“சீ…என்ன பேச்சு இது. நம்ப ரெண்டு பேரும் ஜாலியா பைக்குல பீச்சுக்கு வந்திருக்கோம். என்ன பேசற நீ? அவள் கையைப் பிடித்துக் கொண்டார். மல்லிகைப் பூ விற்கும் சிறுமி ஒருத்தி பக்கத்தில் வந்தாள். அவளிடம் இரண்டு முழம் தேவணாம்பட்டினம் மல்லி வாங்கிக் கொடுத்தார். அப்பா…என்ன மணம்….மூச்சை இழுத்தார். மல்லிகை வாசனை. அடித்தது. கண்ணை விழித்துப் பார்த்தார். வாசலில் செங்கமலம் பூ வாங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. வெற்றி வந்து சாப்பிட்டுச் சென்று விட்டான் போல. மணியை பார்த்தார். 4 30 என்று காட்டியது. எழுந்து, தோட்டத்துப் பக்கம் போய் வந்தார். செங்கமலம் தேநீரும், ஒரு தட்டில் கொஞ்சம் ஓமப் பொடியும் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிட்டு, காலையில் படிக்க விட்ட செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வாசலில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். மாலை நேர சம்சா, பஜ்ஜி வியாபாரங்கள், பூக்காரிகள், பள்ளி விட்டு பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக வீடு திரும்பும் மாணவர்கள்.

ஹா….காலையில் பண்ருட்டி போன அந்தப் பெண்…அதோ…அவர்கள் வண்டி வந்து விட்டது. அவள் முக தரிசனம்…ஒரு விநாடி இருக்குமா..ஒரு நிமிஷம் இருக்குமா…பளிச்….மின்னல் போல மறைந்து போனாள். மனசுக்குள் உற்சாகம் பெருக்கெடுத்து வந்தது. கொஞ்ச நேரம் நடக்கலாம் போல இருந்தது. மெல்ல கடை வீதி வரை நடந்து விட்டுத் திரும்பினார். அன்று நல்ல உறக்கம் வந்தது.

மறு நாள்…… இன்று அவள் வருவாளா எனக் காத்திருக்க ஆரம்பித்தார். சரியாக 9 30க்கு வாசலில் வந்து அமர்ந்தார். அவள் வந்தாள். மாலையும் அவள் திரும்பினாள். ஒரு நிமிட தரிசனம்தான்.மனசெல்லாம் பொங்கியது. இரண்டு மாதங்களாக வீரபாகு உற்சாகத்தில் மிதந்தார். செங்கமலம், வெற்றிவேலிடம் ஒரு நாள் சொன்னாள் .” மாமா இப்ப ரெண்டு மாசமா ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி இருக்கு. நல்ல சாப்புடறாங்க” .

வீரபாகுவுக்குக் காலையில் ஒன்பது மணியாகி விட்டால், இப்போது அவள் சுந்தரவாண்டி தாண்டியிருப்பாளா, வானமாதேவி வந்திருப்பாளா, என்று மனசு அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மாலையிலோ திருவதிகை தாண்டியிருப்பாளா, நரிமேடு வந்திருப்பாளா, எழுமெடு வந்திருப்பாளா என் மனம் தவிக்க ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்க ஆரம்பித்தார். மழை வரும் மாதிரி இருந்த ஒரு நாளில், அடடா…அவள் நனையாமல் இருக்க வேண்டுமே என கவலைப்பட்டார். மாலையில் மழை வந்து விட்டால், அவர்கள் நம் வீட்டுத் திண்ணையில் ஒதுங்க நேர்ந்தால், அவர்களுக்கு செங்கமலத்தை காபி தரச் சொல்ல வேண்டும். அவள் முகத்தை அருகிருந்து பார்க்க வேண்டும்.

இரண்டு மாதமாக போகும்போதும், வரும்போதும் பார்க்கிறாரே தவிர அவளைப்பார்த்து ஒரு புன்னகை கூடப் பூத்தது கிடையாது. ஆனால், அந்தச் சனிக்கிழமை மாலை அவள் தன் வீட்டைக் கடக்கும்போது அவளைப் பார்த்து சிரித்தார். அவளும் சிரித்துக் கையசைத்தாள். அவருக்கு மனசெல்லாம் சந்தோஷம் பொங்கிப் பிரவகித்தது.

அன்று இரவு மகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவளைப் பற்றிச் சொன்னார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள்தான் என்றும், எனவே ஞாயிறு வர மாட்டார்கள் எனவும், திங்கள் கிழமை மாலை அவர்கள் தங்கள் வீட்டைக் கடக்கும்போது அவர்களை நிறுத்தி, கொய்யாப் பழமும், கடலைக்காயும் தர வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்.

ஞாயிறு காலை செய்தித்தாள் பார்த்த பிறகு, தன் அறையில் போய் ஈசி சேரில் சாய்ந்து கொண்டவர் கண்ணை மூடியிருந்தார். ஒரு முறை மங்கலட்சுமியின் படத்தை கண் விழித்துப் பார்த்தார். மங்கலட்சுமி, நேற்று அவள் கையசைத்தது போல் அசைத்த மாதிரி இருந்தது. செங்கமலம், மாமனார் சாப்பிட உள்ளே வரவில்லையே எனப் பார்த்தாள். அவர் அறையில் போய் கூப்பிட்டு வரச் சென்றாள்.

திங்கள் கிழமை அவனும். அவளும் வந்து கொண்டிருந்தார்கள். பாலூர் கடை வீதியில் பெரிய தட்டி வைத்திருந்தது. அவள் பார்த்தாள். அதில் வீரபாகு பட்டை பட்டையாக திருநீறு பூசிய வடிவில் சிரித்திருந்தார். ” ஐயோ…இந்தப் பெரியவரா? “ சனிக்கிழமை கூட பார்த்தோமே” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். கடைவீதி தாண்டி, வீரபாகு வீடு நெருங்கும்போது, போடப்பட்டிருந்த ஷாமியானாவும், கிடந்த நீல நாற்காலிகளும், மரண வீட்டின் லட்சணங்களைச் சொன்னது. ஒரு கறுப்பு நாய் குறுக்கே வந்தது. வண்டியின் ஒலிப்பான் சத்தம் கேட்டு திண்ணையில் நீர்மாலைக்கு மண்குடம் தூக்கி நின்றிருந்த வெற்றிவேல் பார்வையைத் திருப்பினான். அதில் உட்கார்ந்திருந்த பெண் அவன் அம்மா மங்கலட்சுமியின் சாயலில் இருந்தாள்.

அது வரை அழாமல் இறுக்கமாய் இருந்தவன் அழ ஆரம்பித்தான்.

சிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

புள்ளில் தொடங்கி புள்ளில் முடியும் ஒரு சிறுகதைத்தொகுப்பு ரமேஷ் கல்யாண் அவர்களின் ”திசையறியாப் புள்” தொகுப்பு. ஊரில் ஓர் காணியில்லை; உறவு மற்றொருவரில்லை என்ற ஆழ்வாருக்கு பரமனின் பத்ம பாதமே தன் துணை என்ற தெளிவு இருந்தது. ஆனால், எத் திசையில் செல்வது என்ற எவ்விதத் திட்டமும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல், தன் சிறகுகளையும் இழந்த நிலையில் ஒரு பறவை என்ன செய்யும்? ரமேஷ் கல்யாணின் தொகுப்பில் முதலில் இடம் பெற்றிருக்கும் விடுதலை கதையில் வரும் சிறகுகள் வெட்டப்பட்ட (ஜோசியம் சொல்லும்) கிளியும், தொகுப்பின் கடைசிக் கதையில் வரும் சிறுமியும் அடுத்து என்ன செய்வது எனத் திசை தெரியாது தவிக்கும் திசையறியாப் புட்கள்தான். பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டிருக்கும்போது அவை தங்கள் வாழ்வாதாரத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மனிதன் தனக்காக இழுத்து வந்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது பயன்படுத்திக் கொண்டு, வேண்டாமெனும்போது கை விட்டு விடும்போது, அவை தங்கள் பழைய வாழ்க்கையையும் வாழ முடியாமல், குறைப்பட்டுப்போன அவற்றுக்கு ஓர் ஆதரவையும் தேடிக் கொள்ள முடியாமல் செல்லும் திசை தெரியாமல் அபலை நிலையில் நிற்கின்றன.

மனிதன் ஒரு சமூக விலங்கு. ஒருவரை மற்றவர் சார்ந்த வாழ்க்கை வாழவே பழகியிருக்கிறான். சொந்தம், பந்தம், பாசம், அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்னும் சிறகுகளால் ஆன பறவையாயிருக்கிறான். இந்தச் சிறகுகள் வெட்டப்படும்போது அவனும் வாழ்க்கையில் திசை தெரியாமல்தான் தவிக்கிறான்.

முதல் கதையில் வரும் கிளியைத் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அழைத்து வந்த சோதிடன், பால் பழம் கொடுத்து வளர்க்கிறான். தன்னுடைய மகனைத் தான் இழக்கப் போகிறோம் என்பதைத் தன்னால் கணிக்க முடியாத வருத்தமோ, கிளி மீது ஆசையாக இருந்த தன் மகனே இறந்து விட்டான், இனிமேல் இந்தக் கிளி எதற்கு என்ற வெறுப்போ, தன் மகன் ஒரு தீ விபத்தில் மரணித்தவுடன், இந்தக் கிளியைக் கொண்டு போய் அத்துவானத்தில் விட்டு விட்டு வந்து விடுகிறான். தன் மகன் செய்து வந்த முறுக்கு வியாபாரத்தைத் தொடர விரும்புகிறான். கிளியின் மீது அவன் காட்டிய அன்பு எங்கே போனது? சோதிடத் தொழிலையே விட்டு விட்டால் கூட, அந்தக் கிளி அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகக் கூடாதா? என்ற கேள்விகள் வாசிப்பவர் மனதில் ஒரு பரிதாப உணர்ச்சியை உருவாக்குகிறது. அந்தக் கிளி திசையும் தெரியாமல், தான் செல்ல வேண்டிய இடமும் தெரியாமல், தவித்து நிற்கிறது.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசிக் கதையில் பள்ளிச் சிறுமி ஒருத்தி, பள்ளியில் ஒரு கல்வி உதவி பெறுவதற்காக நேர்காணல் செய்யப் படுகிறாள். அந்த உதவித் தொகை தாயில்லாப் பெண் குழந்தைகளுக்கே கிடைக்கும். இவள் தந்தையுடன் இருக்கிறாள். அவளது தாய், அவர்களுடன் இல்லாமல், வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டு விட்டாள். இந்தச் சிறுமியிடம் அவள் தந்தை, தாயை இழந்தவள் என்று சொல்லச் சொல்கிறான். ஆனால், அந்தச் சிறுமி, புரியாமால் தவித்து, தன் தாய் இருக்கிறாள் என்றே சொல்கிறாள். இந்தச் சிறுமிக்கு அந்த உதவி கிடைக்குமா கிடைக்காதா? என்பது பொருட்டல்ல. தாயன்புக்கு ஏங்கும் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு தன் தாய் தங்களுடன் ஏன் இல்லாமல் போனாள் என்றோ, தன் தாய்க்கும், தந்தைக்கும் இடையேயான பிணக்கு பற்றியோ என எதுவுமே தெரியாத நிலையில், தாய் இருக்கிறாள் என்றே சொல்லத் தெரிகிறது.. அந்தப் பிஞ்சு மனது என்ன செய்வது என தவித்து நிற்கிறது. முதலில் அனாதரவாக விடப்பட்ட கிளியும், இந்தச் சிறுமியும் ஒரே மாதிரியான நிலைமையில் நம் முன் வந்து பரிதாபமாக நிற்கிறார்கள்.

காற்றின் விதைகள், ந்யூரான் கொலைகள் இரண்டு கதைகளும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையேயான அன்பு, பாசம், அனுசரணை எல்லாமான மெல்லிய சிறகுகள் பணம், பொருள், சொத்து, சுகம் இவற்றால் சிதைக்கப்படுகிறது.. இந்தக் கதைகளில், பிள்ளைகள்,வளர்ந்து முன்னேறி, தமக்கென ஒரு வாழ்க்கை கிடைத்த பிறகு, தம் பெற்றோர் தமக்காக பட்ட கஷ்டங்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கிய அத்துணை பேறுகளையும் மறந்து அவர்களிடமிருந்து தமக்கு வர வேண்டிய பொருள் சார்ந்த பயனையே எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதே போல. பெற்றோரின் எதிர்பார்ப்பு எப்படி பிள்ளைகளின் வாழ்க்கை சிதைய காரணமாகிறது என்பதை ”சாலமிகுத்து “ கதை பேசுகிறது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்றும், அதற்காக மட்டுமே பதற்றமாகவே இருக்க வேண்டியதில்லை என்றும், மதிப்பெண்கள் குறைந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்றெல்லாம் நம்பிக்கை கொடுக்க வேண்டிய பெற்றோரே, பிள்ளைகளை மதிப்பெண், மதிப்பெண் என்று ஓட விட்டு, மனச் சிதைவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும், மனிதன் வாழ்வில் உயர்வதற்குமே கல்வி என்பது மதிப்பெண்வயமான கல்வியாக மாறி, மகிழ்ச்சியாகக் கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் மனங்களின் ஆனந்தச் சிறகுகள் சிதைக்கப்பட்டு மதிப்பெண் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது.

மனித குலத்தின் ஒரு பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேலடுக்கைத் திறந்து விட்டால், அதற்கும் கீழே எத்தனை பேர் எத்தனையோ காலமாக ஒடுக்கப்பட்டு எழும்ப முடியாமல் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பது புரியும். இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கு ஒரு யானை பலம் தேவையாய்த்தானிருக்கிறது. ஒசூரை அடுத்த பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல் சக்கரங்கள் காணப்படுவதை வைத்து புனைவாக தேரோட்டத் திருவிழா நடக்கும் கதை ஒரு விரிவினைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

. இப்படிக் குறிப்பிடும்படியாக பல கதைகள் இருப்பது மகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. அதோடு, பல கதைகளில் ஆசிரியர் கையாளும் உதாரணங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

பிரமிடுகளின் படிக்கல் போல நிறைய அட்டைகள் ( விடுதலை )

வானிலிருந்து விழும் மழை மணிச்சரங்கள் ( அபேதம் )

சாமானியர்களின் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பட்டறிவுகளின்

தேய்வுக்கும், அற்புதங்களின் மீதான நம்பிக்கைக்கும் உள்ள இனங்காணவியலா இடைவெளி பெர்முடா முக்கோணம் போன்றதுதான். ( நெனப்பு )

பொசுங்கியபலாக்கொட்டைகள் போன்ற மங்கலான வறண்ட கண்கள் ( எரிகற்கள்)

ஒழுகும் மெழுகு போல கனத்த பேச்சற்ற மௌனம் ( எரிகற்கள்)

வாழைப்பழத்தை வெட்டும்போது கசியும் மௌனம் ( வுல்லன் பூக்கள் )

கல்லுப் பிள்ளையார் கதையில் மனிதம் என்பது மதம் கடந்தது என்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். கடைசி வரிகள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. மற்றப்படி, தொகுப்பிலுள்ள 17 கதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ரமேஷ் கல்யாண் அவர்கள் முதல் சிறுகதைத் தொகுப்பில் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதை அழகான முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்தார் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

—————————————

( திசையறியாப் புள் – ஆசிரியர்: ரமேஷ் கல்யாண் – பவித்ரா பதிப்பகம் – வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை )

நாதோபாசனை எனும் தவம் -ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் இதயநாதம் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் தலையானவரும், தன்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகளினால், ராம பக்தி ஒன்றையே தன் வாழ்வாகக் கொண்டிருந்தவர் தியாகராஜ சுவாமிகள் அவர்கள். நூற்றாண்டுகளாக இன்றளவும் அவர் தெய்வத்திற்கு சமமாகப் போற்றப்படுபவர். வருடந்தோறும், அவர் இறைவனின் திருவடிகளை அடைந்த பகுள பஞ்சமி அவருடைய ஆராதனை விழாவாகக் கொண்டாடப் படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த இசை விழாவில் பங்கேற்க அகில உலகத்திலிருந்தும் கர்நாடக இசைக் கலைஞர்கள், இசை விற்பன்னர்கள், தங்கள் கற்றுக் கொண்ட இசையின் வடிவை, குரல்வழியாகவோ, இசைக் கருவிகள் வழியாகவோ இவர் சன்னதியில் வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் இந்த சமர்ப்பணத்தைத் தங்கள் கடமையாகவே கருதுகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு இரண்டு கீர்த்தனைகளாவது பாடி விட வேண்டும் என நினைக்கிறார்கள். பரத நாட்டியக் கலைஞர்கள், சிதம்பரம் நடராஜர் சன்னதியில் அரங்கேற்றம் செய்து விட வேண்டும் என நினைப்பது போல, நாட்டியாஞ்சாலியில் பங்கேற்று விட வேண்டும் என ஆசைப்படுவது போல கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள், தியாகராஜ ஆராதனை விழாவில் ஒரே ஒரு கீர்த்தனையாவது பாடி விட வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். பகுள பஞ்சமி அன்று பாடப்படும் அவரது பஞ்சரத்ன கீர்த்தனைக் குழுவில் இடம் பெற்றோ, இடம் பெறாமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டோ பாடுவதை அந்த மகானுக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறார்கள். இதன் மூலம், அவர்கள் சங்கீதத்தோடு, அதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட தியாகராஜ சுவாமிகளை வணங்குவதாக நிம்மதியடைகிறார்கள். தியாகராஜர் இப்படி வணங்கப்படுவதற்கான காரணம் அவர் தன் வாணாள் முழுவதும், சங்கீதத்தின் மூலம் தன்னுடைய ராம பக்தியைச் செலுத்தி வந்தார். அவருக்கு அதைத் தவிர வேறொன்றும் நினைவில்லை இந்த வாழ்வில். ராம பக்தியையே தன் மூச்சாகக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்ம விசாரங்கள் முழுவதும் ராமனை நோக்கியே கீர்த்தனைகளாக வெளிப்பட்டன.

பக்தியை, அதன் வெளிப்பாட்டை சங்கீதத்தின் மூலம் ஓர் உபாசனையாகச் செய்தவர். அவருடைய “ சங்கீத ஞானமு பக்தி விநா “ என்ற கீர்த்தனையில், சமர்ப்பணமற்ற வெறும் சங்கீத அறிவால் மட்டும் இறைவன் சரணத்தை அடைய முடியுமா மனமே என்று தன் மனதைக் கேட்டுக் கொள்கிறார். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆறு உட்பகைவர்களை வெல்வதற்கு இந்த சங்கீத சமர்ப்பணத்தைத் தவிர தனக்கு வேறு ஒன்றும் உபாயம் தோன்றவில்லை என ராமனிடம் முறையிடுகிறார். அவரது நாடி நரம்புகள் முழுவதுமே ராம பக்தியும், சமர்ப்பண உணர்வுமே நிறைந்திருந்தது.

இராமாயணத்தில் வரும் சபரி, ராமனுக்காகக் காத்திருப்பதையே தன் தவமாக மேற்கொண்டவள். வெறும் காட்டுவாசிப் பெண்ணாக சரியாகப் பேசவும் அறியாமல் இருந்தவள், மதங்க முனிவருக்கு சிறிய கைங்கர்யங்கள் செய்ததால், அவரிடமிருந்து ராம நாமத்தை உபதேசமாகப் பெற்றவள், பனிரெண்டு ஆண்டுகள் ராம நாமத்தை மட்டுமே உபாசித்தவள். ராமனின் தரிசனம் பெற்ற பிறகு, அவள் முக்தியடைவதற்காக குடிலில் அமர்ந்து கொள்கிறாள். அவள் உடல் உருக்குலைந்து வெறும் எலும்புக்கூடு மட்டும் இருக்கிறது. அந்தக் கூட்டினை எங்கு தொட்டாலும், அது ராம நாமத்தை ஒலித்தது என்று புராணங்கள் சொல்கின்றன. சபரியின் இந்த ராம பக்தியும், தியாகராஜரின் ராம பக்தியும் ஒன்றேதான். சபரியுடையது ராம ஜெபம்; தியாகராஜருடையது ராம கீர்த்தனைகள். இரண்டிலும் இருந்தது உபாசனை.

சங்கீதத்தை ஒரு யோகம் போல, உபாசனையாக ஏற்றுக் கொண்டு, எவ்வித சமரசமும் அற்று தன் வாழ்வையே சங்கீதத்திற்கு அர்ப்பணம் செய்து கொண்ட ஒரு வித்வான் பற்றிய நாவலாக, 1952 ல் ந. சிதம்பர சுப்ரமண்யன் அவர்களால் எழுதப்பட்டது “ இதயநாதம் “ . கிட்டுவுக்கு சங்கீதப் பித்து. ஆனால், அவன் தந்தை இதே சங்கீதப்பித்தாக இருந்ததால், வாழ்க்கையையே தொலைத்ததால், தாய்க்கு இவனுடைய சங்கீத ஆர்வம் எரிச்சல்படுத்துகிறது. கணவன் போலவே இவனும் வாழ்க்கை இழந்து விடுவான் என அச்சம் கொள்கிறாள். அவனை வேதம் பயில அனுப்ப முடிவு செய்கிறாள். இதை அறிந்த கொண்ட கிட்டு வீட்டை விட்டு அம்மாவுக்குத் தெரியாமல் வெளியேறி விடுகிறான். பதின்வயது தொடக்கத்தில் இருக்கும் அவன், எப்படியோ கணேச சாஸ்திரிகள் கையில் அகப்படுகிறான். அவனுடைய பிறவி சங்கீத ஞானம் அவரைக் கவர்கிறது. அவனை சபேசய்யர் என்கிற மகா வித்வானிடம் கொண்டு போய் விடுகிறார். குருகுல வாசம் போன்று அவன் அவர் விட்டீலேயே தங்கி சங்கீதம் பயில்கிறான். அவருடைய மகன் மாகாதேவனும் அவன் கூடவே சங்கீதம் கற்றுக் கொள்கிறான். ஆனாலும், கிட்டுவின் ஞானத்தை அவனால் எட்ட முடியவில்லை. சபேசய்யரின் மனைவியும் கிட்டுவிடம் தன் மகனிடம் காட்டும் வாஞ்சையைக் காட்டுகிறாள். இருவருக்கும் அவர்களே பூணூல்கல்யாணம் செய்து வைக்கிறார்கள். சபேசய்யர் தன் இறுதிக் காலத்தில், கிட்டுவையே தன்னுடைய இசை வாரிசாக அறிவிக்கிறார். கிட்டு, குருகுலத்தில், இசையோடு, வாழ்க்கைக் கல்வியையும் பயில்கின்றான். எந்த நிலையிலும், சங்கீதத்தை உபாசனையாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதையும், வாழ்க்கை ஒழுக்கங்களையும் தன் குருவிடமிருந்தே சுவீகரித்துக் கொள்கிறான்.

கிட்டு வளர்ந்து, நீலாவைக் கரம் பிடித்து, கிருஷ்ண பாகவதராக இசையுலக ஜாம்பவனாகக் கொடி கட்டிப் பறக்கிறார். அப்போது கூட, கச்சேரிக்குப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தன் சங்கீதத்தை ஒரு நாதோபசனையாகக் கடைப்பிடிக்கிறார். தாயைத் தேடித் தன் சொந்த ஊருக்குப் போகிறார். தாய் இறந்த செய்தி கிடைக்கிறது. கரம் பிடித்த மனைவியோ சங்கீத ரசனையற்று, பொருள் வயப் பட்ட வாழ்க்கையை எதிர்பர்க்கிறாள். அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. சங்கீதத்தைத் தன்னை மாதிரியே உபாசிக்கும் பண்பு உள்ளவர்க்கே பயிற்றுவிக்கிறார். அப்படி, அவரிடம்தான் சங்கீதம் பயில வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் அவரை அணுகும் பொதுமகள் குலத்து பாலாம்பாள் அவரிடம் வந்து சேர்கிறாள். அவளுடைய அபார சங்கீதத் திறமை அவரை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. மாறி மாறி அவள் இவர் வீட்டுக்கு வருவதும், அவள் இவர் வீட்டுக்கு வருவதுமாக சங்கீதம் வளர்கிறது. ஊரில் பலர் தவறாகப் பேசினாலும், கிருஷ்ண பாகவதர் கலங்கவில்லை. பாலாம்பாள் ஒரு நாள் தன் மனநிலை தடுமாறி, அவர் மேல் தனக்கு இருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்துகிறாள். அதில் சிக்கிக் கொள்ளாமல் வெளி வருகிறார் கிருஷ்ண பாகவதர். அவரைச் சரியாகப் புரிந்து கொண்டது கந்தசாமி பாகவதர் மட்டும்தான். அவர், கிருஷ்ண பாகவதரை அந்த அதிர்ச்சியான மன நிலையிலிருந்து மீட்டு ஆற்றுப் படுத்துகிறார்.

அந்த ஊரின் பஜனை மடக் கட்டடத்தைச் சரி செய்வதற்காக, நிதி திரட்டுவதற்கு தன் கச்சேரி பயன்படட்டும் என்று கிருஷ்ணனேதான் உபாயம் சொல்கிறார், ஆனால், அந்தக் கச்சேரியைச் செய்ய முடியாமல், அவருக்கு, காய்ச்சல் வந்து தொண்டை கட்டிப் போகிறது. தான் பொருளுக்காக கச்சேரி செய்ய எத்தனித்ததால்தான், தனக்கு இப்படி ஆகி விட்டது என்று மனம் வருந்துகிறார். அப்போது, கந்தசாமி பாகவதர் அவரை சமாதானப்படுத்தி

இசை என்பது வெறும் காதுகளிலும், குரலிலும் மட்டுமில்லை. மௌனத்தின் வழியே இறைவனை நினைந்து இதயத்திலிருந்து எழும் நாதம் கொண்டு உபாசனை செய்யலாம் என்று சொல்கிறார். கிருஷ்ண பாகவதர் தன் இதய நாதத்தில் அமிழ்ந்து லயிக்க ஆரம்பிக்கிறார்.

நாவல் ஒரு சிறிய நீரோடை போல தெளிவாக அமைதியாக ஓடுகிறது. சங்கீதம் என்றில்லை, ஒருவர் வாழ்க்கையில் தன்னுடைய விருப்பம், அல்லது நோக்கம் அல்லது லட்சியம் என்று எதுவோ ஒன்றைப் பயணமாக ஏற்றுக் கொண்டால், அந்தப் பயணத்தின் இலக்கை அடைவதில் உறுதி வேண்டும். தடங்கல்கள் வந்தால் அவற்றை எதிர்கொண்டு, சமாளித்து, வெற்றி கொண்டு முன்னேற வேண்டும். கிருஷ்ண பாகவதர் கிட்டுவாக, தன் தாயையே துறக்கிறான். அடுத்தது, நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதையும் துறக்கிறான்; பண ஆசையும் துறக்கிறான். பெண்ணாசை அவரை உலுக்க பாலாம்பாள் எனும் வடிவெடுத்து வருகிறது. அதையும் வெற்றி கொள்கிறார். இத்தனை தடைகளையும் கடந்ததால்தான், கிருஷ்ண பாகவதரால், மௌனத்தின் மொழி கொண்டும். தன் இதயத்துள்ளே இருக்கும் இசை என்னும் இறைவனை உபாசனை செய்ய முடிகிறது.

இராமாயணத்தில், சுந்தரகாண்டத்தில், ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கையில் சென்று சீதாதேவியைப் பார்ப்பதற்கு வரும் தடைகளை அவர் எதிர்கொள்வதை, இதிகாசத்தின் பகுதியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒவ்வொருவர் அவருடைய இலட்சியத்தை அடைய வரும் தடைகளை, இடைஞ்சல்களை வெல்லும் ஒரு செயல் என எடுத்துக் கொண்டால், அதன் தளம், அதையும் தாண்டி விரிவடைகிறது.

இதயநாதம் நாவலையும், ந. சிதம்பர சுப்ரமண்யன் நாம் இப்படி விரித்துப் பார்க்க முடிகிற விதத்தில் படைத்திருக்கிறார். பணம் புகழ் ஆசைகளையும், உணர்வுப் போராட்டங்களையும் வெற்றி கொண்டு நிற்கும்போதுதான் கலைஞன் அதில் முழுமையடைகிறான். முழுமையின் வடிவம் மௌனத்தில் வந்து நிற்கிறது. மௌனம் ஞானத்தின் உச்சம். இந்த உச்சமே உள்ளத்தின் உபாசனையாகிறது. இந்த நிலையை அடைவதற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை ஒரு முனிவரின் தவத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லை. அத்தகைய வாழ்க்கைக்கு, சபேசய்யர் போல ஒரு குருவும், கந்தசாமிபாகவதர் போல ஒரு ஆத்மார்த்தமான ஒரு நண்பரும் கிடைத்து விட்டால் இலட்சியவாதிகளின் உபாசனைகள், தவங்கள் எல்லாம் நிச்சயம் கைகூடும்.

சங்கீதக் காரர்கள் என்றாலே வெற்றிலை, பாக்கு, ஜவ்வாது, மது, பெண்கள் தொடர்பு என்று இருந்த காலக் கட்டத்தில் இலட்சியத்திற்காக வாழ்ந்த ஒரு இசைக் கலைஞரின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டியிருக்கிறார் ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்கள். அவரே முன்னுரையில், சங்கீதப் பரம்பரையில் வந்தாலும், அவர் சங்கீதம் கற்றவரில்லை; வாசனை மட்டுமே தெரிந்தவர் என்று குறிப்பிடுகிறார். அதனால்தானோ என்னவோ, அவர், வாழ்க்கையை மட்டுமே எழுதியிருக்கிறார். சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலாக இருந்தாலும், பாடல்கள் பற்றிய விவரணைகள் எதுவும் இல்லை. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது, கிருஷ்ண பாகவதருடைய தம்பூராவின் நாதம் வாசிப்பவர் மனதிலும் ஒலிக்கத் துவங்குகிறது,

ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்களின் நூற்றாண்டு வெளியீடாக 2012 ல் சந்தியா பதிபகத்தார் இந்த நாவலை பதிப்புத்துள்ளனர். கோவை சிறுவாணி வாசகர் மையத்தினர் இதனை வெளியுட்டுள்ளனர், சிறந்த அச்சாக்கம், நாவலை தடையின்றி வாசிக்கத் தூண்டுகிறது.

சக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

தேர் என்றவுடன் அனைவருக்குமே ஒரு திருவிழா கொண்டாடும் குதூகலம் எப்படியோ ஒட்டிக் கொண்டு விடுகிறது. எந்தக் கோவிலோ, எந்த ஊரோ, தேரோட்டம் என்றாலே அது ஒரு மகிழ்ச்சி பொங்கும் விஷயம்தான். ஒரு கோவிலின் திருவிழா பத்து நாட்கள் என்றால், பத்தாவது நாள் தேர்த்திருவிழாதான். இந்தப் பத்தாவது நாளை நோக்கியே மொத்தத் திருவிழாவின் மகிழ்ச்சியும் கரை புரண்டோடும். தேர் அழகழகான வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, வாழையும், கமுகும் கட்டப்பட்டு, சுற்றிலும் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, அசைந்து வருவதே ஒரு அழகுதான். ஊத்துக்காடு வெங்குடுசுப்பையர், கண்ணனை, ‘ஆடாது அசங்காது வா கண்ணா” என்று அழைக்கும், பாடல் ஒலிப்பது போலவே ஒரு தேர் அசைந்து வருவது இருக்கும். தேரோட்டம் ஏன் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது??. கோவிலுக்குப் போக முடியாமல் இருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், கை கால் முடியாதவர்களுக்கும், கோவிலுக்குச் சென்று இறைவனைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் நிறைய இறைவனையே நினைத்து ஏங்குபவர்களுக்கும், அவர்களுடைய ஆசையைத் தீர்த்து வைப்பதற்காகவே இறைவன் தேரில் ஏறித் தெருவில் வருகிறான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால். ஒரு தேரை உருவாக்கி அதைத் தெருவில் ஓட வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அந்தத் தேரை வடிவமைப்பதிலிருந்து, அதனை அலங்கரித்துத் தெருவில் ஓட வைப்பது வரை அத்தனைக்கும் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள். இறைவன், எளியோரைக் காண ஓடோடி வருகிறேன் என்றாலும், மனிதர்களாகிய நாம் பிடித்துக் கொண்டு தொங்குவது மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட தேவையற்ற சம்பிரதாயங்கள் தானே? ஆனால், காலம் காலமாக கட்டமைப்பவர்கள் மேலோர் என்றும், மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுபவர்களாகவும், முன்னவர் ஆண்டைகளாகவும், பின்னவர் அடிமைகளாகவும் கருதப்படுகிறார்கள்.

இந்த மேலோர், கீழோர் என்பது பணம், பொருள் என்ற அடிப்படையிலும், சாதி, மதம் என்ற அடிப்படையிலும் அமைந்து விடுகிறது. கற்சிலை வடிப்பவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அதே சிலை கருவறைக்குள் இருக்கும்போது பூசை செய்பவன் மேலோனாகவே இருக்க வேண்டும். கோயிலையும், கருவறையையும் கட்டுபவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அந்தக் கருவறைக்குள் செல்லும் உரிமை மோலோனுக்கே உண்டு. இந்தப் பாகுபாடு காலம் காலமாக இன்னும் கூட வழக்கொழியாமல் இருந்துதானே வருகிறது???

தரமனிட்டி என்ற வடகன்னட கிராமத்தில் பாண்டுரங்கர் கோவிலில் வெகு காலமாக ஓடாத தேரை ஓட வைக்க நரபலி கொடுக்க வேண்டும் சாஸ்திரம் கற்றவர்கள் ராஜா ராணியிடம் தெரிவிக்கின்றனர். அந்தத் தேர் கல் சக்கரங்களாலானது. நரபலி கொடுக்க சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினரிலிருந்து ஒருத்தரைக் (ஆணோ, பெண்ணோ, குழந்தையோ) கொண்டு வரும்படி ராஜா கட்டளையிடுகிறார். இந்தச் செய்தி மக்கள் மத்தியில் கசிந்து, சேரி ஜனங்கள் இரவோடிரவாக ஊரையே காலி செய்து கொண்டு போய் விடுகிறார்கள். ஆளே கிடைக்காமல் இருக்கும்போது, ஆள் பிடித்து வர வேண்டிய பொறுப்பிலுள்ள கணக்குப் பிள்ளையின் மனைவி கோவிலுக்குப் போகிறாள். அங்கு கோவிலின் ஓரத்தில் தன் கர்ப்பிணி மனைவியோடும், ஆறேழு குழந்தைகளோடும், பசியோடு உட்கார்ந்திருக்கிறான் தோல்பாவை கூத்து நடத்தும் ஒருவன். அவனுக்கு, சோளம், அரிசி எல்லாம் மூட்டை, மூட்டையாக தருவதாக ஆசை காட்டி, அவர்களுடைய ஒரு குழந்தையை, தேருக்கு பலியிடத் தர வேண்டும் என்று கேட்கிறாள். தந்தை ஒத்துக் கொள்கிறான்; தாய் ஒத்துக் கொள்ளவில்லை. எப்படியோ ஒத்துக் கொள்ள வைக்கப் படுகிறாள். தேரோட்டத்தன்று குழந்தை தேர்க் காலில் பலியடப் படுகிறான். அதற்கு ஈடாக, ராஜா, அவனுடைய குடும்பத்திற்கு, கள்ளிக்குத்தி என்ற கிராமத்தில் நிலமும், வீடும் எல்லாம் ஒதுக்கித் தருகிறான். பத்திரம் எழுத்தி தந்து விடுகிறான். இது நடந்து முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ரத்த சேவை என்ற பெயரில், அந்த வம்சத்துக் குடும்பத்தில், மூத்த பையன், தேரோட்டம் தொடங்குமுன், அந்த கல் தேர்ச்சக்கரத்தில் தலையை முட்டிக் கொண்டு, அந்த ரத்தத்தில், தேர்ச்சக்கரத்தில் திலகமிட வேண்டும் என்ற வழக்கம் கொண்டு வரப்படுகிறது. முதல் தலைமுறையில், பதினைந்து நாட்கள் விரதமிருந்து, பல கோயில்களுக்கு யாத்திரையாகச் சென்று, சரியாக தேரோட்டத்திற்கு முதல் நாள் அந்த கிராமத்தில் சென்று தங்கி, அடுத்த நாள், ரத்த சேவையை ஆற்றி, பொருளீட்டி வருவது என்ற வழக்கம் நடக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளில், இந்த வழக்கம், கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து விடுகிறது. இவர்களும் அதை கடனே என்று செய்கிறார்கள். அவர்களும், அதை புனித சேவையாகக் கருதி பொருள் தருவதில்லை. நான்காவது தலைமுறையில் வரும், தேவப்பா பற்றியதாக நாவல் விரிகிறது.

தேவப்பா, இந்த தொன்மைப் பழக்க வழக்கங்களை விடுத்து, மனிதர்களை நேசிப்பதையும், சமூகத்திற்குச் சேவை செய்வதையும் இறைப்பணியாக எடுத்துக் கொண்டான் என்பதை நாவல் மறைமுகமாகக் கூறி முடிவடைகிறது.

பிறப்பாலேயே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று அடையாளப்படுத்தும் வழக்கம் இன்றளவும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஒரு தேரும், கிராமமும், கோவிலும் பற்றிச் சொல்வது போல இருந்தாலும், சமூகத்தில் உள்ள பாகுபாட்டையும்,, கருத்துருவாக்கத்தையும் நாவல் பேசுவதை வாசகனால் உணர முடிகிறது.

நூற்றியைம்பதாவது தேரோட்டத்தின்போது நடைபெறும் கொந்தலிகர் கதை மூலமாக ரத்தசேவை ஆரம்பித்த கதை விவரிக்கப்படுகிறது. எடுத்தவுடனே, அவர்கள் தேரின் அடுக்குகளை விவரிக்கிறார்கள்.ஒருபுறம், பரிணாம வளர்ச்சியின் அடுக்குகள் போல் அவை இருக்கின்றன. மறுபுறம், உச்சியில் ஒரு பிரிவினர் உட்கார்வதற்கு, கீழே இத்தனை பேர் அமுங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தேர் நகர்வதற்கு நரபலி வேண்டும் எனும் போது, மேல் சாதியினர் என்று சொல்லக் கூடியவர் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, அறியாமையினாலும், வறுமையினாலும் வாடும் கீழ்சாதியைச் சேர்ந்த கூத்து நடத்துபவனைப் பயன்படுத்திக் கொள்வது மேல் சாதியினரின் கயமைத்தனத்தைக் காட்டுகிறது.

ஒரு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் என்பவர், தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற அறிவும் அற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய அறியாமையையும், அவர்களோடு அவர்களின் வறுமையையும் சேர்த்தே பயன்படுத்திக் கொண்டது மேல் சாதி. வயிற்றை நிரப்பி, வஞ்சகமாக ஏமாற்றி வந்தது. காலம் மாற மாற, அவர்களிடம் விழிப்புணர்வு தோன்றியபோது, அவர்களை வேறு விதமாக ஏமாற்றுகிறது.. தவறான அரசியல் செய்வதற்கும், அவர்கள் நேரடியாகச் செய்யாத தவற்றின் பழி ஏற்பதற்கும் அவர்களப் பயன்படுத்திக் கொள்கிறது. தேவப்பா குடும்பத்திற்கு நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட நிலத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கிறது மேல்சாதி என்று சொல்லக் கூடிய கௌடர் குடும்பம். அதோடு, இறந்து போன குமரப்பாவின் மனைவியையும் தான் பெண்டாள அடிமைபடுத்தி கொள்கிறது. தொடர்ந்து இப்படி கீழ் சாதியினரை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் அவர்களின் ரத்த வேவை என்ற கட்டுக்களை மீறிக் கொண்டு ஒருவன் அந்தச் சாதியிலிருந்து வெளி வருவது கட்டுடைத்தலின் குறியீடாகும். அவன் தனக்குப் பிடித்தமான சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் இவை போன்ற செயல்கள் உயர்ந்த குலத்தில் பிறந்தோர்க்கு மட்டுமே சொந்தமானது என்பது போன்ற தோற்றத்தை உடைக்கிறான். காந்தியின் வார்தா ஆசிரமத்தில் போய் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான்..

அதே போல, நாவலில் இன்னொரு அழகான சித்திரமும் வரையப்பட்டிருக்கிறது. உயர்ந்தோர் எனச் சமுதாயத்தில் மதிக்கப்படும் கௌடர் பிறன் மனைவியையும், சொத்துக்களையும் வஞ்சகமாகச் சேர்த்து வைத்துக் கொள்கிறான். கோவில் நகைகளையும் கூட கொள்ளையடிக்கிறான். ஆனால், சமூகத்தில் கீழ்சாதி என்றும், தவறான பழக்கங்கள் கொண்டவன் என்றும் ஒதுக்கப்படும், தேவப்பா ஹோலிப் பண்டிகையில் நீர் ஊற்றுவதற்கு என்று நேர்ந்து விடப்பட்டிருக்கும் குலத்தைச் சேர்ந்த கைம்பெண்ணை, அவளுடைய இரண்டு குழந்தைகளோடு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏற்றுக் கொள்கிறான். தாலி கட்டித் திருமணம் செய்து கொள்ளாமலும், உடலால் கூடவே இல்லாமலும் கூட மனதளவில் மனைவியாக ஏற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். மனம் சார்ந்த உறவே முக்கியம் என்று கடிதம் மூலம் தெரிவிக்கிறான். இந்த இடத்தில் சமுதாயத்தில் உயர்ந்தோர் யார், தாழ்ந்தோர் யார் என்ற கேள்வி வாசகன் மனதில் தோன்றுகிறது.

தரமனிட்டி கிராமத்தில் வாழும், சோமப்பா எனும் பெரியவர், தான் ஜைன மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், பாண்டுரங்கர் கோயிலின் மீதும், அந்தக் கிராம நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும், அவர் சார்ந்த மதத்தினைச் சொல்லிச் சொல்லி அவமானப்படுத்தப்படுகிறார். இறுதியில், திருட்டுப் பழிக்காகவும் காவல் நிலையம் சென்று, தங்கள் மத வழக்கப்படி, சல்லேகண விரதமிருந்து உயிர் விட ஆயத்தமாகிறார்.

அன்பு, ஒற்றுமை, கருணை எல்லாவற்றையும் விட சாதி, மதம், பொருள், இவற்றை முன் நிறுத்தும் பொருள் வயமான ஒரு வட்டத்துக்குள் சுற்றி வருவதையே இந்தச் சமுதாயத்தில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்தக் கதையின் பின்னிணைப்பாக, ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்த தேவப்பாவின் குழந்தையைப் பலியிடுவதற்காக தேர்க்காலில் வைக்கும்போது, அந்த பாண்டுரங்கனே கருடனில் பறந்து வந்து, அந்தக் குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு போனானாம் என்று.

இந்த உயிர்த்தியாகம், பற்றுதலின்மையின் ஒரு வடிவமாகும். கபீர்தாசர், அதிதிகளுக்கு அமுது படைக்க வேண்டித் திருடப் போனபோது, கடைச் சொந்தக்காரன் கையில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக, தன் புதல்வனின் தலையை வெட்டி விடுகிறான். திருநீலகண்டர், ஈசன், பிள்ளைக்கறி கேட்டான் என்பதற்காக பாலகனாகிய தன் மகன் சீராளனை வெட்டி அமுது படைக்கிறான். இந்த இடங்களிலெல்லாம், இறைவன், அவர்களுடைய பற்றின்மையையும், பக்தியையும் சோதிக்கவே இப்படிச் செய்கிறான். நெஞ்சத்தில் தூய்மையாக இருந்து கொண்டு, துர்புத்திகள் இல்லாமல் இருப்பதே இறைத்தனமையை அடையும் மார்க்கம் என்பதை அகங்காரமும், ஆணவமும் கொண்டு பாகுபாட்டில் திளைக்கும் மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை என்பதையும் நாவல் பேசுகிறது என்பதை வாசகனால் உணர முடியும். சக்கரங்கள் உருண்டோடாமல், கலசம் தாங்கிய தேர் எப்படி ஓட முடியும்? தேர் என்பது வெறும் அடுக்குகளும் கலசமும் மட்டுமன்று. சக்கரங்கள் மண்ணில் அழுந்தி விடாமல் ஓட வேண்டும். ஓடினால்தானே தேரோட்டம்; நின்றால் அது வெறும் நிலைத்தேர். இது ஒரு படிமமாக இந்த நாவலில் அமைந்திருப்பது சிறப்பு.

ஏதோ ஒரு நாட்டுப்புறக் கதை போலத் தோன்றினாலும், இந்த நாவல், மிக நுட்பமாக, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் பேசுகிறது. மிகவும் சுவாரசியமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொந்தலிகர் சொல்லும் கதை வடிவில் சொல்லப்பட்டிருப்பது, நம் தமிழ் நாட்டின் வில்லுப் பாட்டு போல இருக்கிறது. அதன் பிறகும் கதை விவரணை, வாசகனைக் கட்டிப் போடுகிறது. ஏதோ கர்நாடாகவின் ஒரு கிராமத்துக்குப் போய் வந்த மாதிரி ஒரு உணர்வைப் பெற முடிந்தது.

ஒரு நாட்டுப் புறக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாவலைப் புனைந்திருக்கும் கன்னட எழுத்தாளர் ராகவேந்திர பாடீல் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். மொழிபெயர்ப்பு என்று தோன்றா வண்ணம் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல், தங்கு தடையில்லாத மொழிபெயர்ப்பாகச் செய்திருக்கும் பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். 2003 ல், கன்னடத்தில் வெளிவந்துள்ள இந்த நாவல், 2011 ல் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கூட அதிகமாக ஒன்றும் மாறிவிடவில்லை என்ற மனத் தாங்கலோடு புத்தகத்தைக் கீழே வைக்க வேண்டியிருக்கிறது.

வெள்ளைக் கூகைகளின் அடக்கஸ்தலம். – சோ.தர்மனின் ‘பதிமூணாவது மையவாடி’ நாவல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் சமீபத்திய நாவல், “ பதிமூணாவது மையவாடி”. அட்டைப்படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே, நாவலின் உள்ளடக்கம் புரிந்து விடுவது போல இருக்கிறது. ஒரு கிராமத்து பாலகன், சிறுவனாக தன் கிராமத்தை விட்டு, படிப்பதற்காக வெளியூருக்குச் செல்கிறான். கருத்தமுத்து என்ற அந்தப் பையன் வழியாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சில நிறுவனத் தில்லுமுல்லுகளை எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் தர்மன் எடுத்து வைக்கிறார்.

கிறித்தவ மதம் நம் நாட்டில் பரவத் தொடங்கியது கல்வி வழியாகவும், வயிற்றுப் பசி போக்கும் உணவு வழியாகவும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும், தெரிந்த விஷயம். பள்ளிகளுக்கு ஃபாதர் ஸ்கூல், “சிஸ்டர் ஸ்கூல்” என்றே பெயர் வைத்து பாமர மக்களால் அழைக்கப்பட்டது. ஆனால், இவற்றின் வழியே அந்த மதமும் பரப்பப் பட்டது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள் என இன்றளவும் நம்பப்படுகிறது. இதற்குக் காரணம், துறவு பூண்டு, வெள்ளை உடை அணிந்து, இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இந்த ஃபாதர்களும், சிஸ்டர்களும் என்ற எண்ணம், பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. கிறித்துவத் துறவறம் என்றால் வெண்மையும், இந்துத் துறவறம் என்றால் காவியும் என்று காலம் காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அன்பும், கருணையும், நேர்மையும், உண்மையும், சத்தியமும் குடிகொண்டிருக்க வேண்டிய, இந்த உடைகளுக்குள் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களில் ஒரு பகுதியினர் உண்மையில் அப்படியில்லை என்பதை தர்மன் இந்த நாவலின் மூலம் சொல்கிறார்.

முக்கியமாக துறவறம் மேற்கொண்டவர்கள் வெல்ல வேண்டிய காமத்தை வெல்ல முடியாமல், ஆனால், வெளியில் முற்றும் துறந்தவர்கள் போலவும், புனிதர்களாகவும் காட்டிக் கொள்வதில் போலிப் பெருமையைக் கொண்டார்களாக இருக்கிறார்கள். கடவுளுக்கு நெருக்கமானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு நம்ப வைக்கிறார்கள். இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை எடுத்துக் கொண்டு பேசியிருந்தாலும், இது மதங்களையும், அவற்றைப் போற்றுவதையும் கார்ப்போரேட் நிறுவனங்களாக ஆக்கிகியிருக்கும் எல்லா சாமியார்களுக்கும் பொதுவானது என்றே சொல்லலாம். எதன் மேலும் ஆசையற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டே மண், பெண், பொன் என்ற எந்த ஆசையையுமே துறவாமல் எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டே, ஊருக்கு உபதேசம் செய்பவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

காமம் துறப்பது துறவறம் எனப்படுகிறது. இந்த இடத்தில் காமம் என்பது வெறும் உடற்பசி என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், காமத்தைத் துறத்தல் என்பது எல்லாப் பற்றுக்களின் மீதுமான ஆசையைத் துறப்பதுதான். உணவின் மீதான விருப்புக்களைக் கூடத் துறக்க முடியாதவர்களால் எப்படி மற்ற காமங்களிலிருந்து விடுபட முடியும்? நாவலில், துறவறம் பூண்டு கன்னியாஸ்திரிகளாக இருப்பவர்களால் வித விதமாகச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. பசி, தாகம் போன்றே உடற்பசியும் ஒரு மனிதத் தேவைதான். ஆனால், இதைத் துறந்து விட்டேன் என்று கூறிக் கொண்டு, கள்ளத்தனமாகவும், மூடி மறைத்தும் உறவு கொள்வதும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் நாவல் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது.

இன்று பல மடங்கள், பீடங்கள் சம்பந்தமாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. யாரோ உண்மையாய் இருக்க விரும்பும் ஒருவர் மூலம், உள்ளே நடக்கின்ற தில்லு முல்லுகள், தவறான செயல்முறைகள், ஒழுக்கச் சீர்கேடுகள் எல்லாம் வெளியே வருகின்றன. ஆனால், அதன் பிறகு, அப்படி வெளிக் கொணர்பவர்களின் கதி என்ன ஆகிறது என்று பார்க்கிறோம். இந்த உண்மையை, நாவல் பேசுகிறது. ரேஷ்மா சிஸ்டர், ரீட்டா சிஸ்டரின் வாழ்க்கை உண்மையை, அவர் குழந்தை பெற்று விட்டுத்தான், சிஸ்டராக வலம் வருகிறாள் என்பதைச் சொல்ல வருகிறாள் என்றவுடனே, பைத்தியமாக சித்தரிக்கப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டு, சாவை எட்டும்படியே செய்யப்படுகிறாள். அது போல், மடத்தின் கணக்கு வழக்குகளைத் தட்டிக் கேட்கும் ஃபாதரும், பெண் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கும் ஃபாதர் பற்றிய உண்மையை வெளியே சொல்ல வரும் ஃபாதரும் கொல்லப்படுகிறார்கள். துறவறம் பூணுகிறவர்கள், தாங்கள் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவதோடு, தாங்கள் காமத்திலிருந்து விலகியவர்கள் என்றும் இந்த உலகத்தின் முன் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.

காமம் என்பதுதான் மனிதனை ஆட்டி வைக்கும் பெரிய பேய். இதை மிகச் சாதாரணமாக, இது ஒரு விதத் தேவை என எடுத்துக் கொள்ளும்போது பெரிய விஷயமாகத் தோன்றுவதேயில்லை. தாகமெடுக்கும்போது தண்ணீர் அருந்துகிறோம். பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உடம்புக்குத் தேவையான காமமும் அப்படி ஒன்றே என்பதைத் துறவறம் ஊணாமாலே சாதாரண மனிதர்களால் உணர முடிகிறது. இதற்கும் நாவலில் சில பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் தர்மன். அரியான் சுடுகாட்டில் பிணங்களை எரிப்பவனாக இருந்தாலும், மனித நேயத்தோடு செயல்படுகிறான். மஞ்சக்குருவி என்ற பொதுமகளை அங்கு தன் விருப்பத்திற்கு துய்ப்பவர்களை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயம், ஒரு இளைஞர் கும்பல், ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி கல்லறை மையத்தில் வைத்து வண்புணர முயலும்போது போராடி அதைத் தடுக்கிறான்.

அதே போல, நாவலில் ஜெஸ்ஸியின் காமம், கருத்தமுத்துவிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் மிக ஆச்சர்யத்துக்குரியது. அவள் ஏற்கனவே ஒரு ஆடவனுடன் உடன்போகி ஏமாந்து திரும்பி வந்தவள். பெருகுகின்ற அவளுடைய காமம், கருத்தமுத்துவை, அவனுக்கு விபரம் தெரியாத பதின்பருவத்திலிருந்து உபயோகப்படுத்திக் கொள்கிறது. அதன் பிறகு அவளுக்குத் திருமணம் ஆன பிறகும் கூட அவள் கருத்தமுத்துவிடம் ஆசையுடன் கூடிய காமத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால், இதில் அவளுக்குத் தயக்கமும் இல்லை; குற்ற உணர்வும் இல்லை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். கருத்தமுத்துவும் இந்த காமத்தால் பீடிக்கப்பட்டவனாக இல்லை. அப்படியே அதற்கு அலைபவனாகவும் இல்லை. முரணாக, அவனுக்கு ஏஞ்சல் சிஸ்டரைப் பிடிக்கிறது. அவளும் தன் மனம் கருத்தமுத்துவிடம் ஈடுபடுவதை உணர்ந்து தன் துறவு நிலையிலிருந்து சாதாரணப் பெண்ணாக வந்து இணைகிறாள். காமம் மறைத்து ஒளித்து வைக்கப்படும்போது அது மேலும் மேலும் பொய்களுக்கும், ஏமாற்றுகளுக்கும் இட்டுச் செல்கிறது. அதனாலேயே, காமத்தை மனதிற்குள் பெரிய பாரமாக எடுத்துக் கொள்ளாத ஜெஸ்ஸிக்கு, தன் தாய், தந்தையை விடுத்து, மடத்து ஃபாதருடன் உறவு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலின் கடைசியில் கடற்கரை ஓரத்தில் ஒரு பறவை வருகிறது. ஏஞ்சல் சிஸ்டர்தான் அதனை வெள்ளைக் கூகை என்று அடையாளம் கண்டு சொல்கிறாள். அவள் அந்தப் பறவை பற்றிச் சொல்லும் வார்த்தைகள்: “அத ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்லுடா, ராத்திரியானாத்தான் அதால பறக்க முடியும். இப்ப வெளில வந்தா பறக்க முடியாது, எதுலயாவது மோதிச்செத்திடும், இல்லனா மத்த பறவைங்க எல்லாம் சேர்ந்து கொத்திக் கொன்னுடும்”

இது ஒரு விதத்தில் வெள்ளை உடை அணிந்து பகலில் பைபிளும் கையுமாய் அலைந்து கொண்டு, எப்போதும் பரம மண்டல பிதாவையே நினைத்துக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு மற்றவர்களோடு சாதாரணமாக ஒட்டி விடாமல் கண்ணையும் கருத்தையும் காமத்தையும் மறைத்துக் கொண்டு இரவுப் பறவைகளாய் அலையும் கன்னியாஸ்தீரிகளுக்கும், ஃபாதர் எனப்படும் சாமியார்களுக்கும் பொருத்தமாகவே உள்ளது.

நாவல் நடைபெறும் முக்கிய இடம், இடுகாடுகளின் வரிசை பனிரெண்டு முடிந்து பதிமூணாவதாக பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்த ஃபாதர்கள் மடமாக இருக்கிறது. அதிலிருந்து தனியே கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. ஆசை பாசங்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு வாழ்வது கூட பிணத்திற்குச் சமம் என்பதாலோ அல்லது இந்த மடங்களே கூட தங்கள் பொய்மைகளுக்கு ஒத்து வராத சிஸ்டர், ஃபாதர்களை ஒழித்துக் கட்டி சமாதி கட்டுவதாலோ இந்த நாவலுக்கு பதிமூணாவது மைய வாடி என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

கிறித்தவ மதத்தில் பதிமூன்று என்ற எண் ஒரு ராசியற்ற எண் என்று கருதப்படுகிறது. ஏசு கிறிஸ்துவை அவருடைய கடைசி உணவு மேசையில் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவருடைய பனிரெண்டு முக்கிய சீடர்களோடு, பதின்மூன்றாவதாக சேர்ந்து கொண்டவன். தூக்குக் கயிற்றில் பதின்மூன்று சுருக்குக் கண்ணிகள் இருக்கும் என்பது கூட இந்த நாவலின் தலைப்புக்குப் பொருந்துவதாக இருக்கிறது. மதத்தின் அடையாளங்களோடு, அதனைத் தாங்கிப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு தூக்கித் தோளில் சுமப்பவருக்கு அதுவே சுருக்குக் கயிறாகவும் மாறும் என்பதனை நாவல் உணர்த்துவதாகவே சொல்லலாம்.

திடீரென முளைத்து பிரபலமாகும் ஆலயம் பற்றிப் பேசுகிறது. அதில் திரளும் மக்கள் கூட்டத்தோடு, புரளும் பணம் பற்றி பேசுகிறது. இது பொதுவாக எல்லா மததிற்கும் பொருத்திப் பார்க்கலாம். அதனால், அந்த கோவிலை நிர்வகிப்பவருக்குள்ளும் எழும் மனக் கசப்புகள் இவை எல்லாம் ஒரு பொதுவான ”தெய்வப் பெயர் சொல்லி கார்ப்பொரேட்டுகள்” என்ற வகையில் அடங்கும். சில நல்லவர்களும் இருப்பதை ஆங்காங்கே காட்டிச் செல்லும் நாவல் நடு நடுவே சலிப்புத் தட்டத்தான் செய்கிறது. கதையோட்டத்தோடு இல்லாமல், வலிந்து மரக்கால் பாண்டியன் என்ற பாத்திரம் திணிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் பற்றி பேச வைக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய விவாதங்கள் தேவையில்லாமல், பாத்திரம் பேசாமல், ஆசிரியர் இடைப் புகுந்து பேசுவது போல் இருக்கிறது. கருத்தமுத்து கிராமத்திலிருந்து வந்த பிறகு, அவனுடைய பெற்றோருக்கும் அவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியோ, அவனுடைய ஆருயிர் நண்பணுடனான உறவு பற்றியோ பேசவேயில்லை.

கொஞ்சம் சலிப்பூட்டினாலும், அடைபட்டிருக்கும் ஒரு பகுதியினரின் வெளியில் தெரியாத மற்றொரு வாழ்க்கை பற்றிய சித்திரத்தைத் தீட்டிக் காட்டுவதில் நாவல் வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதற்காக நாவலாசிரியரைப் பாராட்டலாம். சிறந்த முறையில் அச்சிட்டிருக்கும் அடையாளம் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

(பதிமூனாவது மையவாடி, நாவல்,சோ.தர்மன், விலை:ரூ.320/- அடையாளம் பதிப்பகம்)