யாத்ரீகன்

கை நழுவிய இராணி

கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

queen-missed

உண்மையில் இந்த கதையை நான் எழுதவில்லை. செந்தூரன்தான் எழுதினார். இரண்டாயிரத்து ஒன்பதில் இந்தக் கதையைப் பற்றி முதன்முதலாக நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது அவர் பத்திரிகையெல்லாம் நடத்திக் கொண்டு தீவிரமான செயல்பாட்டில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்தபடி எடிட்டிங் பார்த்துக் கொள்ள, சென்னையில் பத்திரிகை பணிகள் நடந்து கொண்டிருந்தன. அச்சு உலகில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற மாதாந்திரி பத்திரிகை அது..

‘கதையெல்லாம் நூறு பேரு எழுதறான்…. நீ வேற ஏதாச்சும் கட்டுரை எழுதேன். இங்க நடந்திட்டிருக்கிற செஸ் டோர்னமெண்ட் பத்தி ஒரு ஃபீச்சர் பண்றோம். நீயும் செஸ் பத்தி எழுதேன்’ என்றார். சொன்னது போல ஃபிலடெல்ஃபியாவில் நடந்த CCA டோர்னமெண்ட்டை முன் வைத்து பிரமாதமான கட்டுரைகள் எல்லாம் வந்திருந்தன. கேடா காம்ஸ்கியோட ஒரு நேர்முகம், தமிழகத்தின் லேட்டஸ்ட் கிராண்ட் மாஸ்டர் டி. சந்தோஷ் பற்றி அவருடைய அப்பா எழுதின கட்டுரை, வீடில்லாமல் ஃபிலடெல்ஃபியா ரூஸ்வெல்ட் பார்க்கில் வாழ்க்கை நடத்தும் செஸ் மாஸ்டர் டாம் மர்ஃபி பற்றி ஒரு கட்டுரை என்று பலதும் வந்திருந்தன. (more…)

சிண்ட்ரெல்லா கொலைவழக்கு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

Cinderella

இன்னும் பத்து நிமிஷத்தில் சில்க்போர்டு பாலம் வந்துவிடும். இந்த நடுஜாமத்தில் மடிவாலா பக்கம் ஏதாவது டீக்கடை திறந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் போது வண்டியோட்டிக் கொண்டிருந்த கம்பார் மைக்கை திருப்புகிறார். சற்று கரகர பின்னணியில் ஒரு குரல் ‘கமின்…. கமின்… கண்ட்ரோல் ரூம் கமின்…. ஹொய்சளா பேட்ரோல் செவண்டீன் ரிப்போர்ட்டிங்… இல்லி கொலை ஆரிட்டிட்டு. காரு உளகே ஒந்து லேடி டெத்…’ என்று செய்தி சொல்கிறது. ஏதோ சாலைவிபத்து பற்றி தகவல் என்று நினைத்தால் கொலை என்ற வார்த்தை, காரில் உள்ள எல்லோரையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. உங்களுடைய அடுத்த ஒரு மணி நேர அனுபவங்களும், இன்னும் மூன்று மாதத்திற்காகவது ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று மீடியாக்களில் அதகளபடப்போகிறது பாருங்கள்.

பின் சீட்டில் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஏடிஜிபி ராகவேந்திரா முல்குந்த் இன்னும் நான்கு வருடங்களில் சிட்டி கமிஷனராக ஆகிவிடுவார். அவருக்கு தொந்தரவு வேண்டாமே என்று கம்பார் அவசரமாக மைக்கை அணைக்க போக, முழுவதுமாக விழித்துக்கொண்ட ஏடிஜிபி அவர் தோளைத் தொட்டு, அணைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்கில் வந்த செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்.

பன்னர்கட்டா ரோடில், மீனாட்சி கோவில் பக்கம் அநாமத்தாக சாலையோரத்தில் கார் ஒன்று நிற்கிறதாம். காரை ஓட்டி வந்த பெண், டிரைவர் சீட்டில் இறந்து கிடக்கிறாராம். வழிப்பறிக் கொள்ளையோடு கொலையாக இருக்கலாம் என்கிறார். மைக்கில் பேசுபவரின் மொழி ஹூப்ளி வட்டாரவழக்கு போல் உங்களுக்கு தெரிகிறது. போலிஸ் வேலை என்று வந்துவிட்டால் எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஆனால் ரொம்பவும் மெனக்கெடாதீர்கள். இந்தக்கதையின் முக்கியமான துப்பு துலக்கப் போகும் பாத்திரம் என்றாலும், நீங்கள் யூனிஃபார்ம் போலிஸ் இல்லை. ஏடிஜிபி ஆபிஸ் கிளார்க்தான். ஏடிஜிபியோடு கேம்ப் போய்விட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். (more…)

அம்மாவின் பதில்கள்

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

ammavin_answers

‘ஏன் ஃபோனை ஃபோனை பாத்திட்டிருக்க? நந்தினிகிட்டேந்து கால் வந்திருக்கா?’ என்றாள் அம்மா.

அந்த நிமிடம்வரை நந்தினி இருபத்து மூன்று மெசேஜ்கள் அனுப்பியிருந்தாள். “எட்டரைக்கு ரேகா வந்தாள்”. “நாங்கள் சிவாஜிநகர் போகிறோம்.” “சஃபீனா பிளாசாவில் சேல் போட்டிருக்கிறார்கள்.” “கமர்ஷியல் தெரு வுட்டீஸ்ஸில் சாம்பார் வடை. சாப்பிடுகிறோம்…”.

அவன் அம்மாவை சந்திக்க கிளம்பும் போதெல்லாம் நந்தினியின் போக்கு இப்படி ஆகிவிடுகிறது. அவன் ஒன்றும் அடிக்கடி அம்மாவை சந்திக்கப் போவதில்லை. வருடத்திற்கொரு முறையாவது அம்மாவை பார்த்து விட வேண்டும். அதுவும் தீபாவளி சமயம் என்றால் பொறுக்க முடியாமல் கிளம்பிவிடுவான். நந்தினி அவன் கூட வரமாட்டாள். ஆனால் இப்படித்தான், கூடவே இருப்பது போல குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டே இருப்பாள்.

‘என்னடா, தீபாவளி வந்திட்டுதே, இன்னும் அம்மா நினப்பு வரலயே இவருக்குன்னு நினச்சிட்டிருந்தேன். இன்னிக்கு கிளம்பியாச்சா? இந்தவாட்டி எங்க… ரேஸ்கோர்ஸா, இல்ல ஓபராயா? உங்கம்மாதான் பெரிய செலிப்ரிட்டியாச்சே. அதான் கேட்டேன். இன்னிக்கு ரேகா வேற வர்றேன்னு சொல்லியிருக்கா. நீங்க அம்மாவைப் பாக்கப் ஓடறத சொன்னா சிரிப்பா சிரிக்கப் போறா. இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்…. இவ்ளோ பாசமா இருக்கற அம்மா உங்கள எத்தனவாட்டி நினச்சுப் பாத்திருக்காங்க? இல்ல கூப்பிட்டுத்தான் பேசியிருக்காங்களா? அன்னிக்கு ஏதோ டீவி ஷோல கூட வந்தாங்களே…. பிரேக்ஃபாஸ்ட் புரோகிராம்ல. பெரிய பெரும பீத்த கலயம் மாதிரி. ஒருவார்த்த எம்பையன்னு உங்களப் பத்தி சொன்ன மாதிரியே தெரில. இந்தக் கடைய பெருசாக்கறோம். இத்தன ஃப்ராஞ்சைஸ் கூட்டப்போறோம்… டிஸ்கவுண்டு என்ன….. டார்கெட்டு என்ன… அவார்டு என்ன… இப்படியே ஒரே தம்பட்டம்தான். குடும்பம்னு ஒருவார்த்த… ஒருவார்த்த கூட பேசல தெரியுமா?’

தோசைகளுக்கும், க்ரீன் டீக்கும் இடையே வரிசையாக கேள்விகளை கொட்டிக் கொண்டே இருந்தாள். அவன் என்ன பதில் சொல்லிவிட முடியும்? என்ன சொன்னால்தான் நந்தினி திருப்தியடைவாள்?

அவளோ அவளுடைய தோழி ரேகாவோ என்றில்லை. அவன் அறிந்த, சந்தித்த, சந்திக்கப் போகும் யாராக இருந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் அவன் அம்மாவைப் பற்றிய பேச்சு வந்ததும், இந்தக் கேள்விகள் வெவ்வேறு வடிவத்தில் வந்து விழும்.

‘யாரு? கல்யாணி சாரங்கனா? உங்க அம்மாவா….?’ என்று முதலில் புருவத்தை தூக்குவார்கள். ‘ஓ, நீங்க ஃபர்ஸ்ட் மேரேஜ் புள்ளயா… அதான், ஜே எஸ் எங்கயும் பையனப் பத்தி சொன்னதேயில்லன்னு நினச்சேன். உங்க அப்பா இன்னும் இருக்காரா சார்? என்ன செய்யறார் இப்ப?’

குறுகுறுவென ஊரும் பார்வைகள். குடையும் நோக்குகள். எல்லா கேள்விகளுக்கும் பின்னாலும், பதில்களை எதிர்பார்க்காத ஏளனச் சிரிப்பு ஒன்று தெறித்து மறையும்.

‘என்ன பிரச்னைன்னு முறிச்சுகிட்டு போனாங்களாம்? குடும்பம்னா நாலும் இருக்கறதுதான். எங்க தாத்தா பேரலடிக் அட்டாக் வந்து கிடயா கிடந்தார். அப்பக் கூட பாட்டிய தேவ்டியா முண்டன்னுதான் திட்டுவாரு. தூக்கிப் போட்டுட்டா போனாங்க. முழுசாப் போற வரைக்கும் மூணரை வருசம் வச்சிருந்து பாத்து, மூத்திரம் பீயெல்லாம் துடச்சுப் போட்டுட்டுத்தான் இருந்தாங்க. விட்டுக் கொடுத்து வாழ முடியலன்னா அப்புறம் கல்யாணம் எதுக்கு, குழந்த குட்டிங்க எதுக்கு’

அம்மாவைப் பற்றி பேசும்போதெல்லாம் நந்தினியின் குரலில் ஆங்காரம் ஏறிக் கொண்டே போகும். அவள் கோபம் அம்மாவின் மேலா, அல்லது அம்மாவின் இடத்தில் அவள் இல்லாமல் போனதாலா என்று சமயத்தில் அவனுக்கு சந்தேகம் ஏற்படும். இதோ அடுத்த மெசேஜ் வந்துவிட்டது.

‘சாப்பாடு ஆச்சா?’

அம்மாவும் அதையேத்தான் கேட்டாள். ‘ஃபுட் கோர்ட் போகலாமாடா? எங்காவது நல்ல சாலட் கிடைச்சா போதும்’

அப்போதுதான் Scary World என்னும் ‘திகில் உலகை’ விட்டு வெளியே வந்திருந்தார்கள். இரண்டு அடுக்குகளில் ஏகப்பட்ட திகில் அனுபவங்களை ‘செட்டப்பாக’ உள்ளடக்கியிருந்த இடம். இருட்டு அறைகளில் முகத்துக்கு நேரே வௌவால்கள் வந்து தொங்கின. வெற்று முகமூடிகள் விஷ்க் விஷ்க் என காற்றில் அலைந்தன. ஒரு பெரிய எலும்புக்கூடு படுத்திருந்த நிலையில் இருந்து ஆடிக்கொண்டே எழுந்து நின்றது. அந்த சூழலின் திகிலை விட, உள்ளே சென்ற கூட்டத்தினரின் கூச்சல்தான் அதிக திகிலை உண்டாக்கியது. அவனும் கூட ஒன்றிரெண்டு முறை க்ரீச்சிட்டபடி அம்மாவின் தோளைப் பற்றி ஒண்டிக் கொண்டான். மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கும்போது பாய்ந்து வந்து வாளை நீட்டியபடி நின்ற குள்ளனைப் பார்த்ததும் அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அம்மா மட்டும் எப்போதும் போல அதே தைரியத்துடன் இருந்தாள். வெளியே வந்தபோது எல்லாரும் சந்தேகமில்லாமல் வியர்த்திருந்தார்கள். அம்மா மட்டும் அதே மங்காத புன்னகையுடன் சாப்பிட கிளம்பிவிட்டாள். ‘சப்வே போறோம் சாப்பிட’ என்று நந்தினிக்கு டெக்ஸ்ட் அனுப்பிவிட்டு அவனும் அம்மாவை தொடர்ந்தான்.

‘சுவாதி மேரேஜெல்லாம் எப்படிரா நடந்தது? நீ அனுப்பின ஃபோட்டோல்லாம் பாத்தேன். சின்னசின்னதா பாத்த பசங்கள்லாம் எப்படி வளந்திட்டாங்க… நிறய பேர் பேரே தெரியல. அவளுக்கு இது தலை தீபாவளில்ல. நீங்கள்லாம் மெட்ராஸ் போறீங்களாடா?’

அம்மா கேட்டுக்கொண்டே முள்கரண்டியால் லாகவமாக காய்கறிகளை குத்தி சாப்பிடத்தொடங்கினாள். இந்த ஆகஸ்டில்தான் சுவாதியின் திருமணம் முடிந்தது. ஞானபிரகாசம் மாமாவின் செல்வாக்கும், படாடோபமும், ரிசப்ஷன் மெனுவிலிருந்து, திருமணத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள் வரையிலும் பளிச்சென தெரிந்தது. கல்யாணியின் பையன் என்றளவில் அவனை பல உறவினருக்கும் தெரிந்திருந்தது. மாமா வெகு நெகிழ்ச்சியாக அவனை வரவேற்று கட்டித் தழுவிக்கொண்டார். இவ்வளவு பெரிய உறவு பெருங்கூட்டத்தை துறந்துதான் அப்பாவும் அம்மாவும் பெங்களூருக்கு புகலிடம் தேடி போனார்களா அந்த காலத்தில் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

‘சொந்தம் பந்தம்னு ஒரு பய வேணாம் கல்யாணி. உனக்கும் எனக்கும் இனி எல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்கதான். இங்கதான் எல்லாம்’

என்று நெகிழ்ச்சியோடு அம்மாவின் முகம்பார்த்து அப்பா சொல்லிக் கொண்டிருந்த பொழுதுகள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. இரவு உணவிற்குப் பின்னர் அப்பா எப்பொழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில்தான் பேசிக் கொண்டிருப்பார். கைவிட்ட சொந்தங்கள், கடன் தொல்லைகள், எதிர்கால கனவுகள் எல்லாம் அப்பொழுதுதான் அவர் முன் விரிந்து நிற்கும். அப்பாவின் நட்புவட்டம் சிறியதாகத்தான் இருந்தது பிச்சமூர்த்தி, குரியகோஸ், கணேசலிங்கம், சூரி வேறு பெயர்கள் நினைவிலில்லை. ஜேஎஸ்ஸின் ஆதரவுதான் மிகப் பெரியது.

அப்பொழுது ஜேஎஸ் சிவாஜிநகர்ப் பக்கம் சின்னதாக க்ளினிக் வைத்திருந்தார். பக்கத்திலேயே, போலிஸ் குவார்டர்ஸ் பின்புறம் ‘கல்யாணி மெடிக்கல்ஸ்’ கடை இருந்தது. அம்மாவின் பி ஃபார்மா படிப்பும் சர்டிபிஃபேக்டும் வைத்து அப்பா தொடங்கிய கடை. மருந்துக் கடையின் பெயர் போட்டு அப்பா அடித்துக் கொடுத்த ப்ரிஸ்கிரிப்ஷன் பேடுகளில்தான் ஜேஎஸ் தொடர்ந்து மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பா சரியான வெகுளி. ஆனால், நல்ல உழைப்பாளி. ஞாயிறு மட்டும்தான் மாலை ஐந்து மணிக்கு கடையடைப்பார். அதுவும் சில சமயம் நண்பர்கள் யாராவது அரசியல் வம்புகளை அலச வந்துவிட்டால் ஆறு, ஆறரை ஆகிவிடும். மற்ற நாட்களில் இரவு பத்து பத்தரை ஆகிவிடும். கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் கதம்பா ஓட்டலில் காரட் அல்வாவோ, வெஜிடபிள் போண்டாவோ வாங்கிக் கொண்டு வருவார். அவ்வளவு நேரத்திற்கு மிச்சம் இருந்தால் தேங்காய் போளி இருக்கும். அம்மாவிற்கு இருந்த விரிந்த பார்வையும் தன்னம்பிக்கையும் அப்பாவிடம் கிடையாது. அதுதான் அவர்களுக்குள் அத்தனை ஈர்ப்பும் காதலும் தோற்றுவித்ததோ என்னமோ. அப்பா சாய்ந்து கொள்ள, இளைப்பாற, அணைத்துக் கொள்ள என்று எப்பொழுது அம்மா இருந்தாள்.

அன்றைய நாட்கள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. நெளி வளையலும், கல்தோடும், பிச்சிப்பூவும், பின்னங்கழுத்தில் தீற்றலான பவுடர் பூச்சுமாக, சீட்டியடித்துக் கொண்டே கண்ணாடியில் பார்த்து அலங்கரித்துக் கொள்ளும் அம்மா. இப்போது அவள் பார்வை, பேச்சு, தோரணை எல்லாம் மாறியிருந்தது. பெரிய மனிதர்களுக்கான கம்பீரம் வந்து சேர்ந்து கொண்டு விட்டது. கண்ணாடியில் முகம் பார்த்து பவுடர் ஒற்றிக்கொண்டே, தன்னையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்ததும் கண்சிமிட்டி சிரிப்பாள். அந்த சிரிப்பு மட்டும் அப்படியேதான் இருந்தது. அந்த சிரிப்புக்கு முன்னால், எப்போதும் இறுகிய பாறையாக இருக்கும் அப்பா, நெகிழ்ந்து உருகிவிடுவார்.

ஜே எஸ் கிளினிக் இப்போது பெரிய ஜே எஸ் ஹாஸ்பிடலஸ் சங்கிலியாக உருவாகி விட்டிருந்தது. சாந்தி நகர் ஹாக்கி ஸ்டேடியம் பக்கம் இருக்கும் நான்கு மாடி கட்டிடத்தில் ஹெட் ஆபீஸ் எல்லாம் கொண்டு வந்துவிட்டார்கள். மூன்றாம் தளம் முழுவதும் அம்மாவின் ராஜ்யம்தான். சீஃப் ஆப்பரேட்டிங் ஆபிசர்.

‘மேடம் மீட்டிங்க்ல இருக்காங்க. நீங்க வந்தா உள்ள அனுப்ப சொன்னாங்க’ என்ற பவ்யமான உபசரிப்புகளுக்கு மத்தியில் அம்மாவின் ஆளுமையின் பரிமாணம் வெகுவாக மாறியிருந்தது. இது வேறு கல்யாணி.

நந்தினியிடமிருந்து முப்பத்தி ஏழாவது மெசேஜாக ‘அம்மாவோட கொஞ்சி முடிச்சாச்சா? சீக்கிரம் கிளம்பி வா’ என்று வந்தது.

‘அதுக்குள்ள போகனுமா என்ன? வெங்கடப்பா காலரில எக்ஸிபிஷன் இருக்காம்டா. நீயும் கூட வாயேன். சின்னதா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என்றாள் அம்மா. அதே சிரிப்பு.

இதோ கருடா மாலில் இருந்து அரைக்கிலோமீட்டரில் ரெசிடென்ஸி ரோடு. அங்கிருந்து இருபது நிமிடத்தில் நடந்தே போய்விடலாம். அம்மா கார் டிரைவருக்கு போன் செய்து நேரே ஆர்ட் கேலரிக்கு வரச் சொல்லிவிட்டாள். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனைகள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, சாலைகள் எங்கும் மக்கள் கூட்டம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா நிறைய பேசிக் கொண்டும் அவன் நிறையக் கேட்டுக் கொண்டும் நடந்தார்கள். வழியில் சர்ச் ஸ்ட்ரீட் சாலையோரக் கடையில், கறுப்பு புட்டாக்கள் போட்ட வெள்ளை ஸ்கார்ஃப் ஒன்று அம்மா வாங்கினாள். அவன் காசு கொடுக்க முன்வந்தபோது பார்வையாலே கடிந்து கொண்டு அவளே காசு கொடுத்தாள். சுற்றுப்புற கொண்டாட்டங்களை விட அம்மாவின் அண்மைதான் அவனுக்கு தீபாவளியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

எத்தனையோ விதவிதமான தீபாவளிகளைப் பார்த்தாகிவிட்டது. சற்றே பெரிய சைஸில், மொடமொடப்பான புதுச்சட்டையை அணிந்து கொண்டு அப்பாவோடு அணுகுண்டுகளை சேர்த்து வைத்து வெடித்த தீபாவளி அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. சேவியர் பள்ளியின் மிஸஸ் பிரகாசம் அப்பாவிடம் தரச்சொல்லி கொடுத்துவிட்ட டிசியோடு சாம்ராஜ்பேட்டை அரசுப் பள்ளியில் அவன் சேர்ந்த்தும் ஒரு தீபாவளி சமயம்தான். கணேசலிங்கம் மாமாவின் மோட்டார் பைக்கை வித்து மொசறு ரங்காவின் கந்துவட்டி கடனைத் தீர்த்ததும், அதனால் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ளாமல் கழித்த தீபாவளி ஒன்றும் உண்டு. மழை நசநசத்துக் கொண்டிருந்த தீபாவளி ஒன்றில் அப்பாவால் நன்பகல்வரை எழுந்திருக்க முடியாமல் போனது. நழுவிப் போகும் கனவுகளை துரத்திப் பிடிக்க முடியாமல், அப்பா குடிக்க ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. முதல்நாள் இரவு முழுவதும் மொடாக்குடி.

‘எல்லாத்துக்கும் நாந்தான் காரணமா?’ அம்மா இடுப்பில் கைவைத்துக் கொண்டு கேட்க, குரோதத்ததுடன் அப்பா அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பண்டிகை நாளும் ஏதோ ஒரு தீபாவளியாக இருந்திருக்கும். அந்த சபிக்கப்பட்ட தீபாவளிக்கு அப்புறம் எந்த தீபாவளியும் அவனுக்கு நினைவில்லாமல் போனது. அன்றுதான் அம்மா வீட்டைவிட்டு வெளியே போய்விட்டிருந்தாள். அதற்கு முதல் நாள்தான் ஞானப்பிரகாசம் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். பட்டுப்போன உறவுகள் மீண்டும் துளிர்க்க தொடங்கிய காலம். அம்மா படபடத்தபடி காற்றில் நடனமாடும் வண்ணத்துப்பூச்சி போல சிறகடித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் குடிபோதை தளும்பிய மனதில் அப்பாவுக்கு கழிவிரக்கம்தான் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

‘அதாரு… அந்த பொம்பளப் போலீசு ஒருத்தி… அவ பேரு என்னா? இரட்டை லத்திய வச்சு தோ… இங்க குண்டிலயே போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினாளே. இவன் சொல்லித்தானே அடிச்சா. உனக்கு எல்லாம் மறந்து போச்சுல்ல’. வீட்டுக்குத் தெரியாமல் அப்பாவும் அம்மாவும் காதலித்துக் கொண்டிருந்த காலத்தில், அவர்களை அடக்கி வைக்க கையாளப்பட்ட உத்திகளில் ஒன்றுதான் அந்த போலிஸ் தடியடி. மாமா, அம்மாவிற்கு கொஞ்சம் சுற்றி வளைத்த உறவு என்றாலும், செல்வாக்கு அதிகமானவர். போலிசும் கொடுத்த காசுக்கு அதிகமாகவே அப்பாவை போட்டு தாளித்து எடுத்துவிட்டனர். நினைவுகள் தொலைந்துபோனாலும் தழும்புகள் அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடுகின்றன.

மாமா வந்துவிட்டுப் போன தீபாவளிக்கு முதல் நாள். அன்றிரவு, சிறுநீர் முட்டியதால் அரைதூக்கத்தில், படுக்கையில் இருந்து எழுந்த அவன் பாத்ரூம் போக அறைவாயிலுக்கு வந்தபோது அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. முதலில் அவனுக்கு, கூடத்தில் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அம்மாவைத்தான் பார்க்க முடிந்தது. அப்பா எதிரில் உட்கார்ந்திருக்க வேண்டும். நடுவில் இருந்த மேஜையில் மாமா கொண்டு வந்த ஆரஞ்சு வண்ண ஸ்வீட் பெட்டி இருந்தது. அதுதான் அப்பாவின் நரம்பை நசித்து சீண்டிக்கொண்டிருந்தது போல. அந்த ஸ்வீட் பெட்டியை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டோ, அல்லது அன்றைக்கு செய்திருந்த மீன் குழம்பை சாப்பாடு தட்டோடு சுவரில் விசிறியடித்தோ, காண்பாரற்று படம் காட்டிக் கொண்டிருந்த டிவியை உடைத்தோ, அப்பா கொஞ்சம் ஆசுவாசமடைந்திருக்கலாம். போஸ்டல் கவர் கிழிக்கும் மொண்ணை கத்தியை எடுத்து அம்மாவைக் குத்திக் கூட இருக்கலாம். அவரே அந்த கீறலுக்கெல்லாம் மருந்துப் போட்டு ப்ளாஸ்திரி ஒட்டிவிட்டு விசிறியால் விசிறிவிட்டு சிசுருஷைகள் செய்திருப்பாரா இருக்கும். ஆனால் தொண்டையில் சிக்கிய முள்ளை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல், கமறி கமறி இருமும் அவஸ்தையில் கத்திக் கொண்டிருந்தார்.

‘நினச்சேன். டென்ஷன் ஆவீங்கன்னு நினச்சேன். மாமா வந்துவிட்டுப் போனதையே சொல்லியிருக்க கூடாது’

‘சொல்லாதே. எனக்கு எதுவும் தெரிய வேணாம். நான் எப்பவும் போல முட்டாளாவே இருந்திடறேன். எப்படியெல்லாம் நான் அவமானப்பட்டேன்னு உனக்கு மறந்து போச்சு.’ அப்பா அரற்ற ஆரம்பித்திருந்தார்.

‘எப்பவும் இப்படித்தான் தேவையில்லாம கத்திட்டிருக்கீங்க. நரகமாயிட்டிருக்கு என் வாழ்க்கை’

‘எனக்கு வாயிருக்கு. கத்தறேன். உம்புள்ள மாதிரி நானென்ன ஊன பரம்பரையா? ‘ அப்பா டீப்பாயை விட்ட ஒரே எத்தில், வண்ணமயமான இனிப்புகள் பறந்து விழ ஆரஞ்சுப் பெட்டி தெறித்து தூரப்போய் விழுந்தது.

‘ஊமைக்குஞ்ச பாக்க ஊமயன் ஓடி வன்ட்டானாம். அதுக்கு நாமல்லாம் சுவீட்டு சாப்பிடனுமாம்.’

அம்மா அப்போதுதான் அறைவாயில் கால்மாற்றி கால்மாற்றி நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அம்மாவைப் போல அவனும் பயந்து போயிருந்தான். அடக்கமாட்டாமல் சிறுநீர் பெருகி ஓட, கூடவே அப்பாவின் புலம்பலும் ‘ஊன பரம்பரைல நான் பொறக்கல… எனக்கும் வாயடைச்சுப் போகல’ கூடமெங்கும் வழிந்தோடிப் போனது.

மறுநாள் அம்மா இல்லாத வீட்டில்தான் அவர்கள் விழித்தார்கள். ஊரெல்லாம் தீபாவளி கொண்டாட்டமாக இருக்க, அப்பாவுக்கு இரவு என்ன நடந்தது என்பது கூட நினைவில் இல்லை.

‘என்னதான் சண்டையா இருக்கட்டும். அதுக்காக எட்டுவயசுப் புள்ளய தவிக்க விட்டுட்டு போற அளவுக்கு உம்பொண்டாட்டிக்கு திமிரு கூடாதுடா’என்றார் கணேசலிங்கம் மாமா. அதற்கப்புறம் அவன் கேட்டதெல்லாம் அம்மாவைப் பற்றிய வசைகளும் மோசமான விமர்சனங்களும்தான். ‘குடும்பப் பொண்ணுக்கு இத்தன ஆங்காரம் ஆகாதுடா’. கோர்ட் கஸ்டடி, விவாகரத்து என்று எல்லாவற்றிலும் அம்மா ஓரணியிலும், மற்ற எல்லோரும் வேறு அணி.

‘அந்த டாக்டர் என்னமோ டக்-னு வேல போட்டுக் கொடுத்திட்டான்னு நினக்காத. இதில என்னமோ முன்னமேயே மேட்டர் நடந்திருக்கு. இந்த திமிரெல்லாம் குடும்பத்துக்கு ஆவாது’ என்று புதுப்புது காரணங்கள், உண்மைப் போன்ற விவரணையுடன் முழு உருவகம் பெற்று உலவ ஆரம்பித்தன. குழந்தையை விட்டுவிட்டால் அம்மாவின் டிகிரியில் ரெஜிஸ்டர் ஆகியிருக்கும் கடையும் போய்விடும் என்பதால் அப்பாவின் உறவுகள் சாமர்த்தியமாக காய் நகர்த்தி கஸ்டடியை அப்பாவிற்கு சாதகமாக வாங்கிவிட்டார். அம்மா அதை எதிர்பார்த்திருந்தாள் என்றாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை. வதந்திகளுக்கு மேலும் மதிப்பு கொடுக்க வேண்டாம் என சும்மாயிருந்து விட்டாளாக இருக்கும்.

பிறகு அப்பாவின் உலகம் முழுவதும் அவருடைய நண்பர்களும், குழந்தையாக இருந்த அவனும் என சுருங்கிப்போனது. அம்மாவின் புகைப்படங்கள், புடவை, நகை, சீப்பு, ஸ்டிக்கர் பொட்டு என்று எதுவுமே இல்லாமல் மொத்தமாக ஒழித்துப் போட்டுவிட்டார். ஆனால் அவர் அம்மாவைத்தான் எல்லா இடங்களிலும் பார்த்துக் கொண்டேயிருந்தார் என்று அவனுக்குத் தோன்றியது. அவனிடம் தங்கிப் போன ஒரே படமும், அம்மா ஜேஎஸ்ஸை திருமணம் செய்துகொண்டபோது பத்திரிகையில் வெளிவந்த படம்தான்.

‘இங்க பார் எட்வர்ட் முன்ச்சோட ஸ்க்ரீம் பத்தில்லாம் Hand-outs போட்டிருக்காங்க. அந்தப் படத்த மொதமொதல்ல பாத்தப்ப வீடு முழுசும் அதை மாட்டி வைக்கனும்னு நினச்சேன்’ காதைப் பொத்திக் கொண்டு அம்மா சொன்னாள்.

இன்னொரு ஜியாமெட்ரிகல் அப்ஸ்ட்ராக்‌ஷன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நந்தினியிடமிருந்து நாற்பத்தைந்தாவது டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது. ‘நான் வீட்டுக்கு வந்தாச்சு. நீ எப்போ வர்ற’

மிக அருகே ‘அட் யுர் சர்வீஸ் மேடம்’ என்று குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினால், அம்மாவின் அருகில் புன்சிரிப்போடு நின்றிருந்தார் ஜேஎஸ்.

‘நீங்களா? முத்துகிருஷ்ணன் வரலயா? அவனத்தானே காரெடுத்துகிட்டு வரச் சொன்னேன்’ என்றவளை அமைதிபடுத்தும் வகையில் மெலிதாக அணைத்துக் கொண்டவர் ‘உனக்காக வருவது என்பது என் பாக்கியம் டியர்’ என்றார். அம்மா சிரித்தாள்.

அம்மா வீட்டைவிட்டு கிளம்பிப் போன தீபாவளிதான் ஜேஎஸ் மருத்துவமனைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த தீபாவளி. அவருக்கிருந்த மருத்துவமனை தொடர் கனவுக்கு உயிர்வந்ததற்கு பலவகையிலும் அம்மா ஒரு காரணம்.

‘டைவர்ஸ் ஆர்டர் வந்த ரெண்டே மாசத்தில் கல்யாணம் பண்ணனும்னு என்ன அவசரம்னேன்? பங்காளிங்க செத்துப் போனாக்கூட தீட்டு, தெளிப்புன்னு ஆறுமாசமாவது வெயிட் பண்ண மாட்டாங்க.’ நந்தினியின் கேள்விகளுக்கு அவன் என்னவென்று பதில் சொல்ல.

ஸ்டேண்டட்டின் இரண்டு மீள் உருவாக்கப்பட்ட ஓவியங்களை விலைபேசிவிட்டு ஜே எஸ்ஸும் அம்மாவும் கிளம்பினார்கள்.

‘நந்தினிக்கு என் அன்பை சொல்’ என்றாள் அம்மா. அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் சொல்லிவிடலாம்தான் என்று நினைத்துக் கொண்டான். கேலரியின் வாயிலைக் கடக்கும்போது கைப்பையில் எதையோ சோதித்துக் கொண்டிருந்தவள் திரும்பி அவனை ஒருமுறை பார்த்து சிரித்தாள். கையைக் காட்டி கூப்பிட்டால் அவனும் அப்படியே போயிருப்பான்.

அந்த சபிக்கப்பட்ட தீபாவளியின்போது நனைந்த நிஜாருடன் அவன் இருந்தபோது அம்மா கூப்பிட்டது அவன் நினைவுக்கு வந்தது. அன்று அவன் போகவில்லை. சோபாவில் சரிந்திருந்த அப்பாவிடம் ஒண்டிக் கொண்டு நின்றுவிட்டான். ஒருவேளை அன்று அம்மாவோடு அவன் கிளம்பிப்போயிருந்தால் இன்று நந்தினியின் இத்தனை கேள்விகளுக்கும் அவனே விடையாகி போயிருப்பான். இனி அடுத்த தீபாவளிவரை நந்தினியின் கேள்விகளும் அம்மாவின் தரப்பிற்காக அவன் சொல்லாத விடைகளும் அவனோடுதான் இருக்கும்.

பியாரி பாபு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியங்கள்: யாத்ரீகன்

Reflection

‘இதுதான் காந்தி கணக்குல எழுதறது’ என்று சொல்லி சிரித்தான் செல்லா.

‘இனியும் இந்த கணக்கு முடிக்கிற பஞ்சாயத்தெல்லாம் நீயே பார்த்துக் கொள் செல்லா. என்னால் இந்த கடைசிநிமிட பிரஷர்களை சமாளிக்கவே முடிவதில்லை’ வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு தெருமுக்கு டெலியிலிருந்து (Deli) வாங்கி வந்திருந்த பீட்சாவை சாப்பிட்டுக் கொண்டே, டயட் சோடவைக் குடித்துக் கொண்டே, நடுநடுவே புலம்பிக் கொண்டிருந்தார், ரீத்து சுக்லா.

வயதானவர். அடுத்த மாதத்தோடு ரிடயர்மெண்ட் ஆகிறது. இன்னமும் மாதாந்திர அக்கவுண்டிங்கை முடிக்க படாதபாடு படுகிறார். இந்த முறை, சரியாக வெள்ளிக்கிழமை கணக்கை முடிக்க வேண்டும். அந்நேரம் பார்த்து எட்டே முக்காலுக்கு வந்து சேர்ந்த ஃபைலில் தகராறு. அசெட் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் இன்னொரு வயதான அம்மணி டாலியாகாத கணக்கு ஃபைலை அனுப்பிவிட்டு வீட்டிற்கு போய்விட்டார். இன்னும் அரைமணிநேரத்தில் பேட்ச்சை லெட்ஜரில் ஏற்றித்தள்ள வேண்டும்.

‘என்ன செய்வது செல்லா. இனி பார்பராவை தேட முடியாது. பேட்ச் ஓடுவதற்குள் இந்த கணக்கை சரி செய்ய முடியாதா’ என்று இறைஞ்சினார், சிறிய வித்தியாசம்தான். ஏழு செண்ட்டுகள். அவசர அவசரமாக ஈஆர்பி-யின் புறவாசல் வழியாக ஏழு செண்ட்களை சேர்த்து கணக்கை நேர் செய்து, அதற்கு வேண்டிய SOX ஒப்புதல்களுக்கான சாங்கியங்களை முடித்துவிட்டு ரீத்து அம்மையாரைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி சிரித்தான்.

‘ஓக்கே மிஸ்டர் காந்தி. கார் வரை கொஞ்சம் துணைக்கு வாயேன். அடுத்த மாதத்திலிருந்து இந்த சொத்து பராமரிப்பு கணக்கு, டாக்ஸ் கணக்கு எல்லாம் நீ ஒருத்தனாக ஜமாய்’ என்று கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ரீத்து அம்மையார்.

அவனுடைய முழுப்பெயர் செல்லமுத்து காந்தி. இந்தியாவில் இருந்தவரை சி. காந்தி. இங்கே வந்ததும் செல்லமாக ‘செல்லா காந்தி’யாகி விட்டான்.
ரீத்து அம்மையாரை அனுப்பிவிட்டு, வழியில் பியர் கெக் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு போய் வாரயிறுதியை கொண்டாட திட்டம் போட்டது அவருக்கு எப்படி தெரிந்ததோ…

‘நாளைக்காலை ஒரு சின்ன ஹெல்ப் செய்கிறாயா செல்லா? இங்கே நமது கோவில் கம்யூனிட்டி ஹாலில் பியாரிபாபுவின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. ரவீந்திரனுக்கு ஏதோ அவசர வேலையாக நியூயார்க் போக வேண்டுமாம். நீதான் கொஞ்சம் போய் பியாரிபாபுவைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்’ என்றார்.

‘நாளைக்கு என்ன விசேஷம்?’ என்று செல்லா கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டார் அவர்.

‘உனக்கு எப்படி காந்தி என்று பெயர் வைத்தார்கள்?’ என்று சற்று கோபமாகவேக் கேட்டார் ரீத்து அம்மையார்.

‘நேற்று காந்தி ஜெயந்தி இல்லையா. அதற்குதான் நாளை சனிக்கிழமையன்று, பியாரி பாபுவின் பிரசங்கம். வீட்டிற்குப் போய் பாபுவின் அட்ரஸை அனுப்பி வைக்கிறேன். குவேக்கர் டவுன் இங்கிருந்து ஒன்றரை மணி நேரம்தான். பார்த்துக் கூட்டிக் கொண்டு வா. மிகவும் வயசானவர்’ என்று சொல்லி செல்லாவின் வாரயிறுதி திட்டங்கள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்து விட்டு காரில் ஏறிப் போய்விட்டார்.

உண்மையில் செல்லமுத்து என்பது அவனுடைய அப்பா பெயர்தான். பொதுப்பணித்துறை காண்டிராக்ட் விவகாரம் ஒன்றில் வெட்டுக்குத்து கேஸாகி, அவன் பிறந்த வருடம்தான் அப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பாகியிருந்தது. இதே போல ஒரு வியாழக்கிழமையில் வந்த காந்தி ஜெயந்தியன்றுதான் அவனுக்கு பெயர் சூட்டுவிழா வைத்திருந்தார்கள். அவனுடைய அப்பத்தா நெகிழ்ச்சியோடு ‘காந்தின்னு பெயர் வைங்க தலைவரே’ என்று எடுத்துக் கொடுக்க நகராட்சி சேர்மன் இருநூற்றியொன்று ரூபாய் பணமும், கழுத்தில் ஒரு சங்கிலியும் போட்டு அவனுக்கு காந்தி என்று பெயர் சூட்டியிருந்தார். ஊரில் இருந்தவரைக்கும் அந்தப் பெயர் அவனுக்கு விசேஷ கவனத்தையும், வேண்டாத தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லூரிக்காலத்தில் ஹாஸ்டல் நண்பன் மார்த்தாண்டனின் காதலுக்கு ஆதரவாக இறங்கியபோது போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் பஞ்சாயத்து போய்விட்டது. பெண்ணின் தகப்பனார் பெரிய மில் அதிபருக்கு உறவு என்பதால் போலிஸில் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்.

‘காந்தின்னு பேர வச்சிகிட்டு… காலித்தனம் பண்ணுது பாரு மூதேவி…’ என்று சொல்லி சொல்லியே அந்த கான்ஸ்டபிள் மிதித்தார்.

இங்கே ஜேஸ்டன்வில்லுக்கு வந்தபோது அவனுடைய முழுப்பெயரான செல்லமுத்து காந்தி பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

‘சள்ள….மத்து.. கேண்டி… நீங்கள் இந்தியரா? த லேண்ட் ஆஃப் மகாத்மா?’ என்றுக் கேட்டுவிட்டு சற்றுநேரம் இமைக்காமல் பார்ப்பார்கள்.

முதன்முதலாக ரீத்து சுக்லா அம்மையாரை இன்டர்வ்யூவில் பார்த்தபோது, ‘உன் பெயர் ஒன்றே போதும். வேறெதுவும் எனக்கு தெரிய வேண்டாம்’ என்று சொல்லி வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார். ஆயிற்று இரண்டு ஆண்டுகள். அடுத்த மாதம் அவர் ரிடயர்மெண்ட்டுக்கு அப்புறம் அந்தப் பணியிடம் அவனுக்குத்தான் நியாயமாக வந்து சேரவேண்டும். சொல்லமுடியாது. முழுமையாக நடக்கும்வரை அவர் மனம்கோணாமல் நடந்து கொள்வது என்றுதான், அந்த சனிக்கிழமை காலை விரைவாக குவேக்கர் டவுனுக்கு சவாரி விட்டான்.

ஒரே பெயரில் இருந்த குறுக்குத்தெரு நெடுக்குத்தெரு குழப்பங்களை எல்லாம் தாண்டி சரியான வீட்டு எண்ணை கண்டுபிடித்து விட்டாலும், அப்பிரதேசத்தின் ஐரோப்பியத்ன்மை அவனை சற்று குழம்பச் செய்தது. இங்கே யார் பியாரி பாபு என்று இருக்கப் போகிறார்கள்.

காலிங் பெல் அடித்ததும், கதவைத் திறந்து வந்தவர் நிச்சயம் இந்தியர் இல்லை.
இவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்ததுமே அவர், ‘ஜேஸ்டன்வில்லிருந்து வருகிறீர்களா? உள்ளே வாருங்கள். ஜார்ஜ் தயாராகவே இருக்கிறார்’ என்றார்.

‘இல்லை, நான் பியாரி பாபு என்பவரைத் தேடி…’ என்று அவன் குழறலாய் சொன்னது அவர் காதுகளில் சரியாக விழவில்லை. வீட்டிற்குள் திரும்பி ‘ஜார்ஜ்… ஜார்ஜ்… அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்றார்.

பிறகு அவன் பக்கம் திரும்பி,

‘தூங்கியிருப்பாரா இருக்கும். இப்போதெல்லாம் அடிக்கடி தூங்கிவிடுகிறார். சர்க்கரை அதிகமாகிவிட்டது.‘ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

மாடிப்படியின் முடிவில் வலதுபக்க அறையில் நீண்ட சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்த நெடிதுயர்ந்த உருவத்தின் அருகே போய், தோளை அசைத்து ‘ஜார்ஜ், ஜார்ஜ்… கிளம்பு. ஜேஸ்டன்வில்லிருந்து வந்திருக்கிறார் பார்’ என்று அழைத்தார்.

சுவர் முழுவதும் பலவகைப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜையில் அடுக்கிவைக்கப்பட்ட பேப்பர் கட்டுகள் எல்லாம் பழைய வாசனையுடன் மியூசியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. செல்லா படங்களில் இருந்த முகங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான். உயரமான ஆங்கிலேயருடன், ஷெர்வானி உடையில் இந்தியர் ஒருவர் கைகுலுக்கும் படத்தின் அருகே வந்தபோது பின்னாலிலிருந்து அவர் குரல் கேட்டது.

‘இரு நாடுகளின் சுதந்திர போராட்ட சிற்பிகள் இவர்கள். அடையாளம் தெரிகிறதா?’ என்றார்.

திரும்பிப் பார்த்தால், சாய்வுநாற்காலியில் இருந்த மனிதர்தான் எழுந்து அவனுக்கு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்.

‘நான் ஜார்ஜ் அலெக்ஸாண்டர். அது என் அங்கிள் ஹொரேஸ் அலெக்ஸாண்டர். காந்தியின் முதன்மை சீடர். உலக அரங்கில் காந்தியை முன்னிறுத்திய குவேக்கர்களின் (quaker) பிரதிநிதி. அருகிலிருப்பவர் தீபக் வோரா. இந்திய அரசாங்கத்தின் பத்மவிபூஷன் விருதை அளிக்க வந்தபோது எடுக்கப்பட்ட படம். மிஸ்டர் வோராதான் இன்றைக்கு தெற்கு சூடானின் விடுதலைக்கு முக்கிய காரணகர்த்தா. எப்பேர்ப்பட்ட மனிதர்கள் பாருங்கள்’ என்றார். அப்பொழுதுதான் கவனித்தான் ஜார்ஜ் கைகுலுக்க கரங்களை நீட்டிக் கொண்டு நின்றிருந்தார்.

‘நான் செல்லா காந்தி. ஜேஸ்டன்வில் விழாவிற்கு உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்’

அவன் பெயரைக் கேட்டதும் புருவத்தை தூக்கி ‘காந்தி…? ‘ என்று கேள்விக்குறியோடு பார்த்தார்.

‘என் அப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காந்தியின் கட்சி…. அந்த அபிமானத்தால் எனக்கு காந்தி என்றுப் பெயரிட்டார்’ என்றான் அசட்டு சிரிப்போடு. பெயர்சூட்டு விழாவின் பின்னணி நாடகங்கள் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ.

‘ஓ! காந்தியைப் பையனாக பெற்றது அவருடைய பாக்கியம்’ என்று அவன் கையைப் பிடித்து குலுக்கினார்.

‘ஆனால், காந்தியின் பையனாக இருப்பதுதான் கஷ்டம். என் அங்கிளுக்கு பையன் இருந்திருந்தால் அவனை காந்தி என்றுதான் பெயரிட்டிருப்பாரா இருக்கும்’என்றார்.

பிறகு பக்கத்திலிருந்த அம்மணி பக்கம் திரும்பி ‘மெலீசா, நான் கிளம்புகிறேன். இரவு உணவுக்கு காத்திருக்க வேண்டாம்’ என்றார்.

‘சரி! இன்று காலை கூட ஜேக் ஃபோன் செய்தான். டிசம்பரில் ஒரு லாட் கொண்டு வருகிறார்களாம். நீ எதற்கும் ஒருமுறை யோசிக்கலாம் என்கிறான் அவன்’ என்றார் மெலீசா.

‘ஓ! அந்த ஜேக் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. அவனை நம்பும் நீ ஓர் ஏமாளி’என்றார்.

‘இந்த பிடிவாதம்தான் புரிய மாட்டேன் என்கிறது. அவன் கேட்பது போல் ஒருமுறை அந்த பெட்டியை திறந்துதான் காட்டிவிடேன். அரிய பழம் பொருட்களை இப்படியா கவனிப்பாரன்றி போட்டு வைப்பது. அப்புறம் யாருக்கும் பலனளிக்காமல் போய்விடும் ஜார்ஜ். நாசமாக்காதே’ என்று அலுத்துக் கொண்டார் மெலீசா.

‘இங்கே பார். இன்னும் இரண்டு வருடங்களில் (மார்பின் இடதுபுறத்தை தட்டியபடி) இந்த வால்வு காலாவதியாகிவிடும். அப்புறம் மொத்தமாக என்னையே கொண்டு போய் ஏலத்தில் விட்டுவிடுங்கள். இப்போது ஆளை விடுங்கள்’ என்றார். பிறகு செல்லாவை பார்த்து மென்மையாக தலையாட்டிவிட்டு, தொப்பியை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டார்.

மெலீசா கவனித்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய அறையைப் பூட்டி சாவியைப் பையில் போட்டுக் கொண்டார்.

‘புதையலை காக்கும் பூதம் போல இருக்கிறாய் ஜார்ஜ்’ என்றார் மெலீசா. பிறகு செல்லாவிடம் ஒரு சிறிய கைப்பையைக் கொடுத்துவிட்டு,

‘இது ஜார்ஜின் மருந்து பை. அவருக்கு என்ன வேளைக்கு என்ன சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தெரியும். ஆனால் சாப்பிடத்தான் மறந்துவிடுவார். முக்கியமாக சாப்பிடுவதற்கு முன்னால் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள சொல்லுங்கள்’ என்றார். இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்கிற ஆயாசம் அவர் குரலில் இருந்தது.

செல்லாவின் சிறிய காரில் ஜார்ஜ் சற்று முடக்கிக் கொண்டுத்தான் உட்கார வேண்டியிருந்தது. அவ்வளவு அருகில், தெரிந்த முதுமையையும் மீறி, அவரிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
சம்பிரதாயமாக,

‘இந்த நாள் உங்களுக்கு இனிமையாக இருக்கும் என நம்புகிறேன். எங்கள் ஊருக்கு நீங்கள் வருகை புரிவதற்கு மிகவும் நன்றி’என சொல்லி வைத்தான்.

‘இரண்டு பை-பாஸ்கள் ஆகி மூன்று ஸ்டண்டுகளும் (stent), ஒரு செயற்கை இருதயவால்வுமாக நடமாடிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ்தான் பையா. இந்தக் கிழவனை நினைவில் வைத்திருந்து அழைக்கும் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். மிஸஸ் சுக்லா நலமாக இருக்கிறாரா?’

‘ஓ! மிக நன்றாக இருக்கிறார். அவர்தான் பியாரிபாபு-வைக் கூட்டிக் கொண்டு வா என்றார். நான் இப்படி ஒரு கோராபாபுவை எதிர்பார்க்கவில்லை’ அதிகபிரசங்கித்தனமாக உளறிவிட்டோமோ என்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.

வாய்விட்டு சிரித்தவர் ‘எல்லாம் இந்த ஜேக் வெய்ன் செய்த வேலை. அவன்தான் அங்கிள் ஹொரேசுக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பற்றி அநியாயத்திற்கு செய்திகளை பரப்பிவிட்டு இப்படியொரு பெயர் வந்துவிட்டது. அப்படித்தான் இந்த ‘காந்தி கதா’ நிகழ்ச்சியும் வளர்ந்துவிட்டது. எங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட்டத்தைப் பொறுத்தவரை பாபு என்றால் அது எப்போதும் மிஸ்டர். காந்திதான்’ என்றார்.

‘அதென்ன ஃப்ரெண்ட்ஸ் கூட்டம்?’ என்றான்.

‘உனக்கு குவேக்கர்களை பற்றி எதுவும் தெரியாதா? உன்னைச் சொல்லி குற்றமில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு தங்கள் நாட்டின் சுதந்திர வரலாறு பற்றி அறியப்படாத பக்கங்களில் ஒன்றுதான் காந்திக்கும் ஃப்ரெண்ட்ஸ்க்குமான பந்தம். இந்தியா போன்றதொரு கலாச்சார பிளவுகள் கொண்ட நாடு சுதந்திரத்திற்கு தயாரானதா என்ற மேலையுலகினரின் சந்தேகத்தைப் போக்க பெரும் முனைப்பு கொண்டு பங்காற்றியது குவேக்கர்களின் இயக்கம்தான். முக்கியமாக அங்கிள் ஹொரேஸ்தான் காந்தியின் முக்கிய சீடராக தன்னை அமைத்துக் கொண்டு, ஆங்கிலேய அரசிற்கு அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்த படாதபாடு பட்டார். ‘
அவனை சிலநொடிகள் உற்றுப் பார்த்தவர், சற்று சுரத்திழந்த குரலில் ‘ஜேக் சொன்னது போல இந்த காலத்திற்கு இதெல்லாம் மறந்து போன வரலாறு’ என்றார்.

‘ஜேக் யார்?’ என்றான் செல்லா.

‘ஹ…’ மெலிதாக கைகளை புறந்தள்ளுவது போல உதறியவர் ‘அவன் கிடக்கிறான் தந்திரக்காரன். அவனைப் போன்ற பிசினெஸ்மேனுக்கு எல்லாமே காசுதான். அங்கிள் ஹொரேஸுக்கு காந்தி எழுதிய கடிதங்களை எல்லாம் என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று ஆறு வருடங்களாக கனவு கண்டு கொண்டிருக்கிறான். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவு மிகவும் அற்புதமானதொன்று. காந்தியின் அந்தரங்க நண்பர்களில் ஒருவர் அங்கிள் ஹொரேஸ். உனக்குத் தெரியுமா? காந்தி தன்னுடைய வாழ்நாளின் பெரும் இலட்சியமாக கனவு கண்டு கொண்டிருந்த இந்திய சுயராஜ்யம் நனவான போது, அவர் தன்னுடைய அரசியல் சீடர்கள் யாருக்கும் எட்டாத இடத்தில் இருந்தார். இந்திய சுதந்திரம் என்பது வெறும் அரசியல் நிகழ்வாக அவர் பார்க்கவில்லை. அக்காலத்திற்கு தன்னுடைய மிகப் பெரும் பொறுப்பென கலவரங்கள் நடந்த பகுதிகளில்தான் பயனம் செய்தார். அன்று பாபுஜியோடு கல்கத்தாவில் இருந்த ஒரே சீடர் அங்கிள் ஹொரேஸ்தான்’

அங்கிளைப் பற்றி பேசும்போதெல்லாம் ஜார்ஜுடைய குரலில் மெலிதாக இழைந்தோடும் பெருமையின் சாயல் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

‘எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அப்பொழுது எனக்கு பத்து வயசுதான். அன்று அதிகாலையில் நான் உறங்கிக் கொண்டிருந்த மேல்தள அறையிலிருந்து இயற்கை உந்துதலுக்காக வெளியே வந்தேன். மகா அவசரம். அப்பொழுதுதான், அந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி நடந்தது. திறந்திருந்த சாளரம் அருகே அதன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் பாபுஜி. அதிகாலை வெயில் நீண்டு அவர் மேல் படர்ந்திருக்க, ஜன்னலுக்கு வெளியே ஒரு கொடிக்கம்பத்தில் இந்திய மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அவர் அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அசாதாரண அமைதி. இந்தப்பக்கம் அங்கிள் ஹொரேஸ். அப்போது வங்காளத்தில் நடந்துகொண்டிருந்த கலவரங்கள் பற்றி உனக்கு தெரியும்தானே. அப்படியான ஒரு நெருக்கடி காலத்தில் காந்தியின் இருப்புதான் அங்கே அவர்களுக்கு மிகப் பெரும் கொண்டாட்டம். நான் நடந்து வந்து கொண்டிருந்த அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்த பாபு, என்னை இருகைகள் நீட்டி அழைத்து, மேலே தூக்கி, ஜன்னலுக்கு வெளியே அந்த காட்சியை சுட்டிக் காட்டினார். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்ததால், அவஸ்தையில் நெளிந்தபடி அவர் பிடியில் இருந்து கீழே இறங்கிவிட்டேன்.” என்றார்.

“இன்னமும் சிறிது நேரம், அந்த கைகளில் இருந்திருக்கலாம். வெகுகாலத்திற்கு என் மனதில் உறைந்து போன தருணங்கள் அவை. அதற்குத்தான் அந்த அவஸ்தை உண்டாயிற்றோ என்னவோ. எவ்வளவு பெரிய சரித்திரத்தின் மகத்தான தருணங்கள் இந்த சாதாரணனின் நினைவில் உறைந்து போய்விட்டன பார்’ உணர்வு மேலீட்டால் ஏற்பட்ட சோர்வால் சற்று பின்தள்ளி சாய்ந்து கொண்டார். சில நொடிகளில் அப்படியே தூங்கியும் போய்விட்டார்.

கம்யூனிட்டி ஹாலுக்கு வந்து சேர்ந்தபோது செல்லா எதிர்பார்த்ததற்கு மேல் கூட்டம் இருந்தது. வெளிவாயிலேயே ரீத்துவின் கணவர் ராஜீவ் சுக்லாவும் இன்னபிற கமிட்டி உறுப்பினர்களும் பெரும் மரியாதையுடனும் புல்லரிப்புடனும் ஜார்ஜை வரவேற்றனர்.
ரீத்து அம்மையார் அவனிடம் மலர்ந்த முகத்துடன்,

‘நீதான் அவர் கூடவே இருந்து, கவனித்துக்கொண்டு, அவரை வீட்டிற்கு கொண்டுபோய் விட வேண்டும். அவரொரு பொக்கிஷம். காந்தியை நேரில் பார்த்த புண்ணியாத்மா. இவரைப் பார்ப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும்’ என்றார்.

அருகில் நின்ற ஜெகதீஷ் மேனன் ‘நிஜமாகவே பொக்கிஷம்தான். அவர் மாமாவின் பழைய பெட்டி ஒன்று அந்த காலத்திலேயே தொலைந்து விட்டதாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளிலேயே. எங்கோ பூட்டிக் கிடந்த மரைன் லாக்கரில் ஒன்றில் இத்தனை காலமும் கிடந்திருக்கிறது. இப்போது ஹொரேஸ் காலமாகிவிட்டதால், அந்த பெட்டி பியாரி பாபுவிடம்தான் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார்கள். ஜேஸ்டன்வில் ஹெரால்டில், பெட்டியின் போட்டோவை எல்லாம் சேர்த்து செய்தி போட்டிருந்தார்களே’.

உடன் ராமகிருஷ்ணன், ‘அதில்தான் காந்தி தன் கையால் நெய்த கதர் தொப்பியெல்லாம் இருக்கிறதாமே. அவர் ஹொரேசுக்கு கொடுத்த பரிசாம்’ என்றார்.

மேனன், ‘அட, பாபுஜியின் உயில் ட்ராஃப்ட், லெட்டர்ஸ் என நிறைய ஹொரேஸ் சேகரித்திருந்தாராம். இந்திய தேசத்து பறவைகள் பற்றி அரிய குறிப்புகள், புத்தகங்கள் என நிறைய. ஏலத்தில் போட்டால் அரை மில்லியனுக்கு பக்கமாக போகும்.’ என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.

ரீத்து சுக்லா அந்த சம்பாஷனையை விரும்பவில்லை என்பது அவருடைய முகக்குறிப்பிலிருந்து தெரிந்ததால் செல்லா அதற்குமேல் அதைப் பற்றி கேட்கவில்லை.

‘காந்திஜி எப்போதும் மோகன்தாஸ் என்றோ, பாபு என்றோதான் தன் கடிதங்களில் கையெழுத்திடுவார். ஹொரேசுக்கு எழுதிய சில கடிதங்களில் பியாரி பாபு என்று கையெழுத்திடுவாராம். ஹொரேஸுக்கு கிட்டத்தட்ட ஹரிலால் காந்தியின் வயதுதான். அவர்களின் உறவு தந்தை-மகன் உறவு போன்றது காந்தியின் கையெழுத்துக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா’ நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார் மேனன்.

மேனனின் அதி விகசிப்பு, காந்தியை மலிவாக மதிப்பிடுவதிலேயே சுற்றிக் கொண்டிருப்பதை விரும்பாத ரீத்து அம்மையாரின் வேதனையை உணர்ந்தவனாக செல்லா, மேனனை இடைமறித்து,

‘புரோகிராம் எப்போது தொடங்கும் மேடம்? அவருக்கு மருந்தெல்லாம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்தனுப்பியிருக்கிறார்கள்’. என்றான்.

‘ஆ! இதோ ஒரு அரைமணியில் ஆரம்பிச்சிட வேண்டியதுதான். ஒரு சின்ன ஃபேன்ஸி டிரெஸ் நிகழ்ச்சி. அப்புறம் சில குழந்தைகள் டான்ஸ் புரோகிராம். அப்புறம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு பாபுவோட புரோகிராம் தொடங்கிட வேண்டியதுதான்’. என்றார்.

இதோ அதோவென ஜார்ஜ்ஜின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக பிடித்தது.

பெரியவர் கம்பீரமாக மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார். பத்து வயதில், அவர் முதன்முதலாக அங்கிள் ஹொரேஸோடு பெர்மிங்காமிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்டது. சேவாகிரம ஆசிரமத்தில் பாபுஜியின் தினப்படி நடவடிக்கைகள், இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்காக காந்தி லண்டன் போனது, அங்கே அவருடைய பொதுஜன தொடர்பாளராக ஹொரேஸ் பணியாற்றியது. வைஸ்ராய் இர்வினோடான உறவு சீர்பட ஹொரேஸ் மேற்கொண்ட உத்திகள் என்று வரிசையாக பேசிக் கொண்டே வந்தார். அந்த வயதிலும் அவருடைய குரலின் அழுத்தம் குறையாமல் கோவையான சொற்பொழிவு. காந்திஜியின் ஆசிரமத்தில் அவர் இருந்த அனுபவங்களை பல்வேறு துணுக்குகளாக சொல்லிக் கொண்டு வந்தார். காந்தியின் ஆசிரம வாழ்க்கை முறைப் பற்றி நிறைய குட்டி குட்டி கதைகள் சொன்னார். காந்தியின் அரசியல் பயணத்தை, அதன் நிகழ்வுகளை வரிசை கிரமமாக அவர் பிரவாகமாக சொல்லி முடிக்க, கூட்டம் ஆரவாரத்துடன் கைதட்டியது.
முத்தாய்ப்பாக,

‘உங்களைப் போன்ற இன்றைய சந்ததியினர் காந்தியைப் பற்றி ஆர்வம் காட்டுவது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. நம்முடைய பாபுஜியின் நீண்ட நிழல் நம் எல்லோர் மேலும் கவிழ்ந்திருக்கிறது. இது இன்னமும் பல தலைமுறைகள் கடந்து நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். இந்த பழுதடைந்த இருதயத்தின் எண்ணப்படும் நாட்களில் ஒன்றிரெண்டையாவது அதிகப்படுத்தும் அளவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதோ இன்றைக்கு ஓர் இளைய காந்தியை நேரடியாக சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்’ சைகையால் செல்லாவை மேடைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பாராத செல்லா வியர்த்துப்போய் படபடப்புடன் அவர் அருகில் சென்றான்.

‘ஏதோ ஓர் அபிமானத்திலோ, அதிர்ஷ்டத்தாலோ இவரும் காந்திய மரபின் ஒரு துணுக்காக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்காகவே இந்த இளைய காந்தியை வாழ்த்த வேண்டும். காந்தியத்தின் பிரதிபலிப்பை நாம் தொடர்ந்து அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல உறுதி எடுப்போம்’என்று சொல்ல கட்டுண்டது போல் கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் பெரும் கரவொலியுடன் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது.

மாலை விருந்து முழுவதும் பெரியவரை சுற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய காந்தி அனுபவங்களை விட மீண்டும் கிடைத்த ஹொரேசின் பெட்டியைப் பற்றித்தான் அதிகம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் குவேக்கர் டவுனுக்கு செல்லும்போது இருந்த தயக்க மனநிலை மாறிப்போய் மிகுந்த மன எழுச்சியோடு இருந்தான் செல்லா. ஜார்ஜ் அவனை ‘இளைய காந்தி’ என்று அழைத்தது அவனை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்தது. குவேக்கர் டவுனுக்கு திரும்பும் வழியில்,

‘அஹ்! இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னமும் ஓரிரெண்டு செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்ன கொடுத்து வைத்திருக்கிறதோ’ கார் ஜன்னலுக்கு வெளியில் கவிந்து கொண்டு வரும் இருளைப் பார்த்தபடி சொன்னார் ஜார்ஜ்.

‘ஏன் இப்படி! இன்றுதானே உற்சாகத்தில் ஆயுள் நீடிப்பதாக பேசினீர்கள். இப்பொழுது என்ன சோர்வு? இன்னும் பல நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள் பியாரி பாபுஜி!’ என்றான்.

ஜார்ஜின் வீட்டை அடைந்தபோது அந்தி சாய்ந்து இருட்டிக் கொண்டிருந்தது.
காலையில் பார்த்த அதே தோற்றத்துடனே மெலீசா அம்மையார் இருந்தார். ஜார்ஜ் அவனை காப்பி அருந்திவிட்டு போகுமாறு வேண்டிக் கொண்டார்.

‘பாபுஜி! அந்த பிரசித்தி பெற்ற பெட்டியை ஒருமுறையேனும் நான் பார்க்க முடியுமா? காந்திஜி கையால் நெய்த குல்லாய் கூட அதில் இருக்கிறது என்று சொல்கிறார்களே’ சமையலறையில் இருக்கும் மெலீசாவின் காதுகளில் விழுந்துவிடாமல் சன்னமாகக் கேட்டான்.

‘குல்லாயா? இன்னும் என்னவெல்லாம் அந்தப் பெட்டியில் இருக்கிறதாம்?’ சிரித்துக் கொண்டே கேட்டார் ஜார்ஜ்.

‘காந்தியின் உயிலின் முதல் வரைவு இருக்கிறது என்கிறார்கள். அவ்வளவு முக்கியமான ஆவணங்கள் எல்லாம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். பணத்திற்காக சொல்லவில்லை நான்…’ செல்லா மென்று விழுங்கினான்.

‘ஹஹா! நீ சொல்வதைப் பார்த்தால் எப்படியும் நான் அசந்த சமயமாகப் பார்த்து அந்தப் பெட்டியை உடைத்து திறந்து மெலீசாவிடம் கொடுத்துவிடுவாய் என்று நினைக்கிறேன்.’ என்று சொல்லி சிரித்தார்.

‘நீங்கள்தான் சொல்லுங்களேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது’ அடங்காத ஆர்வத்துடன் கேட்டான் செல்லா.

‘ஓரளவுக்கு தெரியும். அங்கிள் ஹொரேஸ் தொலைந்து போன லக்கேஜ் பற்றி அப்பொழுதே புகார் கொடுத்து வைத்திருந்தார். காந்தி சம்பந்தமான டாக்குமெண்டுகளையும், மற்றும் இந்தியாவில் சேகரித்திருந்த ஆர்னிதாலஜி (Ornithology) குறிப்புகளையும் பெட்டியில் வைத்திருந்ததாக விவரமாக எழுதியிருக்கிறார். மத்தபடி காந்தி நெய்த குல்லாய் எல்லாம் அந்த ஏலக் கடைக்காரன் ஜேக் பயல் கிளப்பிவிட்டிருக்கிறானா இருக்கும்’ என்றார்.

‘அதனால் என்ன பாபுஜி! திறந்து பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது’ என்றான்.

சற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தார் ஜார்ஜ். அவன் கழுத்தை சுற்றி கையால் வளைத்து முகத்துக்கு அருகே இழுத்து,

‘ஆனால், மிஸ்டர். இளைய காந்தி, அங்கிள் ஹொரேஸின் லக்கேஜில் தொலைந்து போனது, இரண்டு பெட்டிகள் என்றும் குறித்து வைத்திருக்கிறார். மற்றொரு பெட்டியில் வெறும் சட்டை பேண்ட்டு சூட்டுகள் மட்டும்தான். இப்போது கிடைத்திருப்பது எந்தப் பெட்டி என்று யாருக்கும் தெரியாது. ஜேக் போன்ற ஆசாமிகள் அது பொக்கிஷப் பெட்டி என வெகுவாக பரப்பி விட்டிருக்கிறார்கள். பேராசைக்காரர்கள்’ என்றார்.

சிரித்துக் கொண்டேதான் அவர் சொன்னார். ஆனால், அப்போது அவர் கண்களில் மின்னி மறைந்த உணர்ச்சியை செல்லாவால் வகைமைபடுத்த இயலவில்லை.

‘அதனால் என்ன பாபுஜி. திறந்து பார்த்தால் அது பொக்கிஷ பெட்டியா, பழந்துணி பெட்டியா எனத் தெரிந்து விடப் போகிறது. அதை ஏன் செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்…’ எனக் கேட்கும்போதுதான் அவனுக்கு சுரீரென உறைத்தது, ஜார்ஜ் தன் காலம் முடியும்வரை அந்தப் பெட்டியை திறக்க யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று.

அதற்குள் மெலீசா அம்மையார் ஹாலுக்குள் பிரவேசித்து செல்லாவிடம் காப்பி கோப்பையை கொடுத்தார். மேற்கொண்டு வேறெதுவும் பேசாமல் காப்பியை குடித்தவன் குட்நைட் என்றுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். அவன் கிளம்பும்போது ‘இளைய காந்திக்கு, அன்புடன் பியாரிபாபு’ என்று எழுதி, கையெழுத்திட்ட ‘காந்தி கதா’ புத்தகம் ஒன்றை அவனுக்கு பரிசளித்தார் ஜார்ஜ் அலெஸாண்டர்.

செல்லா வீடு திரும்பியதும் ஊருக்கு போன் செய்து, ‘நாந்தான், காந்தி பேசறேன். சும்மாத்தான். நாளாச்சுல்ல’ என்றான். அவனை காந்தி என்று இன்னும் நான்கைந்து முறை சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

linesep

பியாரிபாபு காந்தியைப் பற்றி சொன்ன சில கதைகள்:-

Trigger

சிரமத்தில் ஒருமுறை ஐரோப்பிய பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தபோது, பிரசித்திப்பெற்ற பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் அவர் அவமானப்பட்ட நிகழ்ச்சி பற்றி பேச்சு வந்தது. ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதும் காந்தியின் மனசில் சொல்லொண்ணா பயம் நிலவியதாம். அங்கிருந்த ஓய்வு அறைக்கு போவதற்குக் கூட அவருக்கு பயமாக இருந்தது. அங்கேயும் வெள்ளையர் யாரேனும் இருந்து ‘சாமி’களை (அக்கால தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை குறிக்கும் ரேசிஸ்ட் சொல்) வெளியே துரத்த சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று. இத்தனைக்கும் அவர் சட்டம் பயின்று பெரிய சட்ட நிறுவனத்தின் பொறுப்பான பதவியில் இருக்கிறவர். ‘அந்த ஓய்வறையின் கதவுகள் வரைக்கும் நான் நடந்து சென்ற தூரம்தான் என்னை இன்னமும் நடத்தி சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.

Leads the wayருமுறை பாபுஜி முன்னால் ஒரு பிரச்னை வந்தது. ஆசிரமத்தில் நூல் நூற்க வரும் சிறுவர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு சோதிப்பார் பாபுஜி. நன்றாக பதில் சொல்பவர்களை விட தட்டுதடுமாறி பதில் சொல்பவர்களையே அதிகம் குறிப்பிட்டு பாராட்டுவார். இதனால் குழப்பமடைந்த சில சிறுவர்கள் அவரிடமே இதைப் பற்றி கேட்டனர். அவரும் அதற்கு பதிலாக ‘நான் உங்களில் யார் புத்திசாலி என்று ஒப்பிட்டு அளக்க இந்தக் கேள்விகளை கேட்கவில்லை. ஒரு புத்திசாலி தன்னை ஒரு முட்டாளோடு ஒப்பிட்டு பெருமை அடைவதால் அவனுடைய ஆணவம் கூடி, அறிவுத்திறன் மழுங்கிவிடும். அது அவனுக்கு அழிவையேத் தரும். தொடர்ந்து முயற்சி செய்து தன்னை மேம்படுத்திக் கொள்ள விழைபவர்களை ஊக்குவிக்கவே இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.” என்றார். அவர் விளக்கத்தைக் கேட்ட சிறுவர்கள் தங்களிடையே போட்டி மனப்பான்மையை கைவிட்டு சமத்துவம் பேணத் தொடங்கினர்.

Punctuality
காந்தி தன்னுடைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்வது சமயத்தில் வேடிக்கையாக இருக்கும். அதிக சோர்வுற்ற சமயங்களில் உடனடியாக தூங்கப் போய்விடுவார். ஓரிரு நிமிடங்களில் மீண்டும் விழித்தெழுந்து வேலைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். சமயத்தில் தூக்கத்தில் கூட சில வேலைகளை முடித்து விட வேண்டும் என்று திட்டமிடுவார். தூங்கிக் கொண்டிருக்கும்போதே (மற்றொருவரால்) முகச்சவரம் செய்துகொண்டு விட வேண்டும் என்பது அதில் ஒன்று. சில நிமிடங்களே தூங்குகிறார். அதையும் கெடுக்க வேண்டாமே என்று நினைக்கும் ஆசிரமவாசிகளிடம் ‘நான் இப்படியாக இருக்கும்வரை இயல்பாக இருக்கிறேன் என்று பொருள். எப்போது நீண்ட நேரம் உறங்குகிறேனோ, அப்பொழுது என் அந்திமம் தொடங்கி விட்டது என்று பொருள்’ என்றார். ஆனால் இறக்கும்வரை அவர் ஒரு சக்தி கேந்திரமாகத்தான் இருந்தார்.

Inspiration
சிரமக் கூடத்தில் பாபுஜியின் சொற்பொழிவைப் கேட்க வந்த விவசாயி ஒருவர் தன் மகளையும் தூக்கிக் கொண்டு வந்தார். குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்த காலத்தில் மேல்சட்டை இல்லாமல் பாபுஜி இருப்பதைப் பார்த்த அந்தக் குழந்தை மறுநாள் ஒரு சட்டையோடு பாபுஜியைப் பார்க்க வந்துவிட்டது. பாபுஜிக்காக அந்த குழந்தையின் அம்மா தைத்துக் கொடுத்த சட்டையாம் அது. குழந்தையின் குதூகலத்தையும் அந்த விவசாயக் குடும்பத்தின் அன்பையும் பாபுஜி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று ஆசிரமவாசிகளுக்கு பெரிய கேள்விக்குறி. காந்திஜி அந்தக் குழந்தையிடம் அவர் அம்மாவுக்கு தன்னுடைய நன்றியை சொல்லிவிட்டு, என்னுடைய நாற்பது கோடி சகோதரர்களுக்கும் அவரால் சட்டை தைத்து கொடுக்க முடியும் என்றால் இந்த சட்டையை ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்போடு சொன்னார். சிறு குழந்தையின் எளிமையான மனதை, தன் அன்பால் பொதுநல சிந்தனைபால் திருப்பிவிட்டார்.

 

அடுத்த வாரிசு

–  கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

தியாகராஜனிடமிருந்து ஃபோன் வந்ததுமே சரவணனுக்கு வயிற்றில் முடிச்சுகள் தோன்ற ஆரம்பித்தன. நெற்றியோரமாக வியர்க்க தொடங்கியது. ஆங்க்ஸிட்டி அட்டாக் வருவதற்கான எல்லா அறிகுறிகளையும் உணர ஆரம்பித்தான். அபாயம் நேரப்போகிறது என்பதிற்கான உடலின் இயல்பான எதிர்வினையாக படபடப்பு கூடி மூச்சு சீரில்லாமல் வெளி வரத் தொடங்கியது. அதற்காக ஃபோனை எடுக்காமலும் இருக்க முடியாது. கண்ணிவெடிகளிடையே காலை வைப்பது போல ஜாக்கிரதையாக ஃபோனை எடுத்தான்.

‘சனிக்கிழமையும் அதுவுமா, ஒரு பேச்சிலர் எம்புட்டு நேரம்யா தூங்குவ’ என்று ஃபோனில் ஆரம்பித்தார் தியாகராஜன்.

நானெங்கே தூங்கினேன், சொல்லப்போனால் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து பேக்-டு-பேக்காக இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாக விச்ராந்தியாக பொழுது போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்ல நினைத்து சொல்லாமல் மென்று விழுங்கியபடி ‘ம்ம்… சொல்லுங்க சார்’ என்று மட்டும் சொன்னான். சரவணன் எந்த பதில் சொன்னாலும் அதை நுனிபிடித்துக் கொண்டு பேச்சை திருகிக் கொண்டு போய் விடும் சாமர்த்தியம் தியாகராஜனுக்கு உண்டு. அவர் கண்களில் எப்போதும் ஒரு தராசுக் கட்டி தொங்கவிட்டிருப்பார். இல்லை அப்படியொரு தராசு இருப்பது போல சரவணனுக்குப் படும்.

‘என்னத்த நொள்றது? டெம்பிளுக்கு புறப்பட்டு வாய்யா. ஆர்கனைசிங் கமிட்டின்னு பேரெல்லாம் போட்டு மெயில் அனுப்பினோம்ல. எம்புட்டு வேலை இருக்கு’ சரவணன் பதில் சொல்லுமுன்னர் ஃபோன் வைக்கப்பட்டு விட்டது.

தியாகராஜன் எப்போதும் இப்படித்தான். அவர் நட்புடன் பேசுகிறார் என்று அவன் நம்ப யத்தனிப்பதற்குள், அவருடைய காரியவாதி முகம் முன்னால் வந்து மறைத்துவிடும்.

‘எள்ளுதான் எண்ணெய் புண்ணாக்குக்கு காயனும், எலிப்புழுக்கை என்னாத்துக்கு சார் கூட காயனும்’ என்று தோன்றியது அவனுக்கு. அதை அவர் ஃபோன்காலை துண்டிப்பதற்கு முன்னர் கேட்டிருக்கவேண்டும். Anxiety அதிகமானாலே இப்படித்தான். (more…)