கட்டுரை

அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’

த. நரேஸ் நியூட்டன்

இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம்சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.

தை மாதம் 1ஆம் திகதி 1939ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தின் பெயர் பெற்ற மாவட்டமாகிய மாத்தளையில் பிறந்தார். இவர் மாத்தளை விஜயா கல்லூரியிலும் கிறீஸ்தவ தேவாலய கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது கலைப் பயணத்தை 1958ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் இறுதிக்காலம் வரை அப்பயணத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தார். இதே ஆண்டில் இவர் முதன் முதலில் எழுதிய நாடகம் ‘தீர்ப்பு’ என்பதாகும். இவர் கிறீஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி பயின்ற அவரது இளமைக்காலத்திலேயே பல நாடகங்களை எழுதி அவற்றின் பொருட்டு பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு காலப்பகுதியில் மலையக மக்களின் மூத்த பரம்பரையினர் அநேகமாக கல்வியறிவு கிடைக்காத தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்களாக பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். கல்வியறிவு குறைவானவர்கள் என்பது மட்டுமன்றி பிராந்திய ரீதியான மற்றும் சமூக ரீதியான பாகுபாடுகளுக்கும் இவர்கள் பெரியளவில் முகம் கொடுத்தார்கள். தங்கள் மத்தியில் இருந்த கல்விசார் குறைபாட்டை தாங்களே நிவர்த்தி செய்ய எத்தனித்து பலர் கல்வி  பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு கல்வியறிவு பெற்றுக் கொண்டவர்களுள் அனேகமானவர்கள் தமது குடும்ப வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு வேலைவாய்ப்புக்களை தேடி இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்த சம்பவங்களும் உண்டு. இவர்களுள் சிலர் தாம் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் மாற்றம் கருதி தாம் வாழ்ந்த பிரதேசத்திலேயே  தங்கி சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். சமூக பாகுபாடுகளுக்கு முகம்கொடுத்த இவர்களுள் சிலர் அதை சவாலாக எடுத்து தாம் சார்ந்த தோட்டங்களின் பெயர்களை தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக வைத்துக்கொண்டு கம்பீரமாக தலை நிமிர்ந்து வலம் வந்த பல ஆளுமைகளை நாம் காணலாம். அவர்களை போன்றோர் அநேகமாக தெரிவு செய்த துறை தான் கலை இலக்கிய துறை. கலை இலக்கியத் துறையில் தமது பங்களிப்பை நிறைவாக செலுத்த முற்பட்டவர்களுக்குள் பெர்குறிப்பிடக்கூடிய ஒருவர் தான் மாத்தளை கார்த்திகேசு. இவர் தனது ஊரின் பெயரையும் தனது பெயரோடு இணைத்துக்கொண்டே கலையுலகில் கால்தடம் பதித்து பிரபலமானார். இதனாலேயே இவரது பெயர் மாத்தளை கார்த்திகேசு என வழங்கப்படலாயிற்று.

‘அவள் ஒரு ஜீவநதி’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 1980ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இந்த திரைப்படத்தை கலைஞர் மாத்தளை கார்த்திகேசுவே திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்காக இவர் பாடல்கள் சிலவற்றையும் எழுதியதோடு தந்தை பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அப்படியிருந்தபோதும் அவர் மனம் சோர்ந்துபோகாது தொடர்ந்தும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் 25ற்கும் அதிகமான மேடை நாடகங்களை எழுதி அந்த நாடகங்களை தானே முன் நின்று வழிநடத்தி இயக்கி மேடையேற்றினார். இவரது நாடகங்களில் ‘களங்கம்’, ‘போராட்டம்’ மற்றும் ‘ஒரு சக்கரம் சுழல்கிறது’ போற்ற நாடகங்கள் முறையே 1974, 1975 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மேடையேற்றப்பட்டு தேசிய நாடக விழாவில் அநேகரின் பாராட்டைப் பெற்றதோடு பரிசும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபல்யப்படுத்திய நாடகமென்றால் அது மிகையாகாது. இந்த நாடகம் யாழ் நகரில் உலகத் தமிழாராட்சி மாநாடு நடைபெற்றபோது தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரினதும் மற்றும் மாநாட்டில் பங்குபற்றிய பல முக்கியமான இலங்கை மற்றும் இந்திய பிரமுகர்களினதும் முன்நிலையில் மேடையேற்றப்பட்டு அநேகரின் பாராட்டைப்பெற்றமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்த நாடகத்தை நேரடியாக பார்வையிட்டுக்கொண்டிருந்த காலம்சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பாராட்டை நேரடியாக பெற்றதோடு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பாராட்டையும் பெற்றது. இந்த நாடகம் 15 தடவைகளுக்கு மேல் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு சாதனை புரிந்தது.

திரைப்படத்துறையில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் இவர் சலிப்படைந்து போகமல் அடுத்த கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பக்கம் தனது நாட்டத்தை காட்டத்தொடங்கினார். அதன் பயனாக ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் பின்னர் பெயர் மாற்றப்பட்டு ‘காலங்கள்’ என்ற பெயரில் மலைய மக்களின் வாழ்க்கை பின்புலங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டு இலங்கை தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளி பரப்பப்பட்டதோடு இலங்கையின் முதலாவது தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர் என்ற பெருமையையும் பெற்றது. இவர் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பொருட்டு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை மட்டுமன்றி மலையகத்தின் மிகப்பிரபலமான ‘காமன்கூத்து’ எனப்படும் மலையக மக்களின் வழக்கமான முறைமையிலமைந்த நாட்டுக்கூத்தையும் தாமே முன்வந்து தயாரித்து வழங்கினார். இவை மட்டுமன்றி ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தொலைக்காட்சி நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஒளிபரப்பப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியால் நாடாத்தப்பட்ட நாடக விழா ஒன்றில் ‘காலங்கள் அழிவதில்லை’ நாடகத்தினை மேடையேற்றி சிறந்த நாடகம், சிறந்த நாடக ஆசிரியர் மற்றும் சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கான பரிசையும் தனதாக்கிக்கொண்டார்.

இதைப்போலவே இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட ஒரு போட்டியில் இவர் எழுதிய ‘சுட்டும் சுடர்கள்’ என்ற திரைப்படக்கதை பிரதிக்கு இரண்டாவது பரிசைத் தட்டிக்கொண்டமை இவரது கலைப்பயணத்தில் இவர் தாண்டிய மற்றொரு மைல்கல்லாகும். இந்தப் போட்டியில் முதலாவது பரிசை பி. விக்கினேஸ்வரன் அவர்களும் மூன்றாவது பரிசை கே. கே. மதிவாணனும் பெற்றுக்கொண்டனர்.

கலைப்பணிக்காக பல அர்பணிப்புக்களுடன் அயராது உழைத்த இவரது உழைப்பை கவனத்தில் எடுத்த இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு 1993ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் இவருக்கு ‘கலா ஜோதி’ என்ற விருதை வழங்கி கெரவித்தது.

இவரது படைப்பாகிய ‘வழி பிறந்தது’ என்ற நாவல் தமிழகத்தின் இளவழகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை மலையக மக்களின் வாழ்வியல் முறைமைகள், கலாசாரம் மற்றும் பண்பாடு முதலியவற்றை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் முதல் முதலில் இந்த வெளியீட்டகத்தினால் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இலங்கை மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையையும் அவர்களது பிரச்சனைகளையும் உணர்சியோடு தீவிரமாக எடுத்துக் கூறும் படைப்பு ‘வழிபிறந்தது’ நாவல் என வல்லிக்கண்ணன் தனது அணிந்துரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மலையகத்திலிருந்து ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புகளையும் விட இது மிகவும் வித்தியாசமாக யோசித்து புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரிக்கிறார்.

மாத்தளை கார்த்திகேசு அவர்கள் இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் பற்றி ஆரம்ப காலங்களிலேயே ஆழமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அந்தக்கருத்து ஆழமானதென்பதற்கும் அப்பால் உண்மைத் தன்மைகொண்ட ஒரு தீர்க்கதரிசனம் மிகுந்த கருத்தாக தற்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் எமக்க புலப்படும். அதனை இங்கு காலத்தின் தேவையாகக்கருதி குறிப்பிடுகிறேன். “நம் நாட்டில் தொலைக்காட்சி நாடகங்கள் வளர வேண்டுமானால் வெளி நாட்டிலிருந்து தொலைக்காட்சி நாடகங்கள் தருவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்க ஏற்பட்ட நிலைதான் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் ஏற்படும்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இக்கருத்து எவ்வளவு தூரம் நிதர்சனமானது என்பது இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்ற தொலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது புலப்படும். இந்நிறுவனங்களால் ஒளிபரப்பப்படுகின்ற நிகழ்ச்சிகளில் அநேகமானவை இரவல் தாயின் பிரசவங்களாகவே இருப்பது கவலையளிப்பது மட்டுமன்றி இலங்கைக் கலைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.

இவர் மலையக எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகவும் இலங்கை கவின் கலைகள் மன்றத்தின் தலைவராகவும் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் நாடக குழு உறுப்பினராகவும் செயற்பட்டமை இவரது தலைமைத்துவ ஆளுமையை வெளி உலகிற்கு புடம்போட்டு காட்டுகிறது. தமிழ்க் கதைஞர் வட்டத்திலும் அங்கத்துவம் வகித்து சிறந்த கதைகளை தேர்வுசெய்வதில் தனது பூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர் கடந்த பத்து வருடங்களாக ‘தகவம்’ இலக்கிய அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மலையகத்தின் நூல் திரட்டு ஆவணப்படுத்தல் செயற்பாட்டுக்கு மாத்தளையில் அமைந்திருந்த தனது நூலகத்தையும் அக்குழுவினருக்கு பயன்பாட்டுக்கு கொடுத்து பரிபூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அண்மையில் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் முகப்பை இவரது புகைப்படமே அலங்கரித்திருந்ததோடு அவர் பற்றிய ஒரு கட்டுரையை திரு. மு. நித்தியானந்தன் அவர்கள் ‘மாத்தளையின் ஜீவநதி’ என்ற தலைப்பில் இந்த சஞ்சிகையில் விரிவாக எழுதியிருந்தார்.

இவர் கொழும்பில் ஜம்பட்டா வீதி, கொச்சிக்கடையில் தனது வசிப்பிடத்தைக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய படைப்புலகத்திற்கு குறிப்பாக மலையக இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் ஆதர்சமாகவும் திகழ்ந்த ‘மாத்தளையின் ஜீவநதி’ மாத்தளை கார்த்திகேசு கடந்த ஆவணி 6ம் திகதி 2021 அன்று தனது பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார். இவர் மறைவுக்கு சிலநாட்களுக்கு முன்புதான் ‘ஞானம்’ சஞ்சிகையில் இவரைப்பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தமை குறிப்பிடப்படக்கூடியது. இந்த கட்டுரையை இவர் படித்திருந்தால் இவர் ஆற்றிய கலைப்பணிக்கு கிடைத்த மிகப்பெரும் சான்றாகக் கருதி ஆத்ம திருப்தியடைந்திருப்பார் என்றால் அது மிகையாகாது.

புனலாடல்

வளவ. துரையன்

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் நீர்நிலைகளில் குளித்து ஆடுவது என்பது மிகவும் விருப்பமான ஒன்றாகும். இதற்குப் பால்வேறுபாடும் கிடையாது. குளம், ஆறு, கடல் போன்றவற்றில் நீராடுவது அவர்களுக்கு ஒரு விளையாட்டாகும். அதனால் இதை நீர் விளையாட்டு என்றும் அழைப்பர். இலக்கியங்கள் இதைப் புனலாடல் என்றழைக்கின்றன. சுனையாடல் என்றும் இதைக் கூறுவார்கள்.

ஆண்டாள் தம் திருப்பாவையில், “நீராடப் போதுவீர்” “மார்கழி நீராட” “குள்ளக் குளிர்ந்து நீராடாதே” :மார்கழி நீராடுவான்” என்றெல்லாம் நீராடுதலைக் காட்டுவார். சிலப்பதிகாரம் கடலில் சென்று நீராடுவதைக் கடலாடு காதை எனும் பகுதியில் காட்டும்.

ஐங்குறு நூறு நூலில் தலைவனும் தலைவியும் நீராடும் செய்திகளைக் காட்டும் புனலாட்டுப் பத்து என்னும் பகுதியே உள்ளது. இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் புனலாட்டையே கூறுகின்றன.

ஒரு தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் சென்று ஒழுகி வந்தான். அப்பரத்தையுடன் அவன் புனலாடுகிறான். அதைத் தலைவி கேள்விப்படுகிறாள். அவளுக்கு மட்டுமன்று; அச்செய்தி ஊருக்கே தெரிந்து போகிறது. அதனால் எல்லாருமே அது குறித்துப் பேசுகின்றனர்.

சிலநாள்கள் கழித்து அவன் தலைவியிடம் மீண்டு வருகிறான். அப்பொழுது அவனிடம் அவன் பரத்தையரோடு சேர்ந்து புனலாடியது பற்றிக் கேட்கிறாள். “தலைவ! நீர் அழகிய தொடியும், வளையும் அணிந்த பரத்தையரோடு நீராடினீரே” என்கிறாள். அவனோ இல்லவே இல்லயென மறுக்கிறான். அதற்குத் தலைவி, “நேற்று கூட நீர் நீராடியது ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரும் அதுபற்றிப் பேசுகின்றனர். சூரியனின் ஒளியை எவற்றாலும் மறைக்க இயலுமோ? அது போல நீ கூறும் பொய்மொழிகளால் நீர் நீராடியதை மறைக்க முடியாது” என்று மறுமொழி கூறுகிறாள்.

ஊராரின் அலர் தூற்றலுக்கு ஞாயிற்றின் ஒளியை உவமையாக காட்டலும் பரத்தையைக் கூடத் தலைவி அழகாக வருணிப்பதும் இப்பாடலில் குறிப்பிடத்தக்கவையாகும். இது ஐங்குறுநூறு புனலாட்டுப்பத்தின் முதல் பாடலாகும்

”சூதுஆர் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்றது ஒளியே”

புனலாட்டுப் பத்தின் நான்காம் பாடல் தலைவி புனலாடியதைப் பற்றிப் பெருமையாகத் தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. பெண்களும் ஆண்களைப் போல நீர்நிலைகளின் கரைகளில் வளர்ந்துள்ள மரங்களில் ஏறி அங்கிருந்து நீர்நிலையில் குதித்து நீராடினர் என இப்பாடல் காட்டுகிறது.

அழகான தலைவி அவள்; பொன்னாலான நகைகள் அணிந்திருக்கிறாள். அந்த நகைகளுடனேயே நீராடுகிறாள். அந்த நீர்நிலையின் கரையில் உயரமான மருதமரம் இருக்கிறது. தலைவி அந்த மருத மரத்தில் ஏறி அதன் உச்சியிலிருந்து நீரில் பாய்ந்து நீராடினாள். அவள் அணிந்துள்ள நகைகள் ஒளி வீசுகின்றன.அப்படி அவள் பாயும்போது அவள் கூந்தல் பறக்கிறது. அது வானத்திலிருந்து கீழே இறங்கும் மயிலின் தோகை போன்று அழகாக இருந்தது எனத் தலைவன் வருணித்துக் கூறுகிறான்.

மகளிர் கூந்தலை, “மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்ன இவள், ஒலிமென் கூந்தல்” என்று மயிலின் தோகைக்கு உவமையாகக் குறுந்தொகை [225]யும் காட்டுகிறது. இது புனலாட்டுப்பத்தின் நான்காம் பாடலாகும்.

”விசும்புஇழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறுங் கதுப்பே”

தலைவியுடன் அவன் புனலாடினான் எனக் கேள்விப்பட்ட அவனுடைய காதற்பரத்தை அவனிடம் ஊடல் கொண்டாள். பிற்பாடு புதுப்புனல் வந்தது. இப்பொழுது அவனுடன் அதில் ஆட ஆசை எழுந்தது. அவள் அவனை அழைக்கிறாள். “தலைவனே! நீ என்னுடன் புனலாட வருக; என் தோளைத் தெப்பமாகக் கருதி ஆடுவதற்கு உடன் வருக; இதோ இந்தப் புதுப்புனல் எப்படி வருகிறது தெரியுமா? விரைந்து செல்லக்கூடைய குதிரைகளை உடைய சோழ மன்னன் கிள்ளியின் யானைப் படை எப்படிப் பகைவரின் மதிலை அழிக்க விரைந்து செல்லுமோ அது போல இது வருகிறது. நீ ஆட வருக” என்றழைக்கிறாள்.

அகத்துறையில் நீராடும்போது கூட மன்னனது குதிரை மற்றும் யானையின் வீரத்தை உவமையாகக் காட்டும் புறச்செய்தியைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது புனலாட்டுப்பத்தின் எட்டாவது பாடலாகும்.

”கதிர்இலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறைஅழி புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புணையே.

இவ்வாறு அகத்துறையில் நீர்விளையாட்டான புனலாடல் பெரும்பங்கு வகித்துள்ளது என்பதை இலக்கியம் வழி நாம் உணர முடிகிறது.

நடந்தாய் வாழி காவேரி

பானுமதி ந 

 

“தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே விரைத்தெழுந்து அடங்குகின்றன தன்மைபோல்
நின் உள்ளே பிறந்து இறந்து நிற்கவும் திரிபவும்
நின் உள்ளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே”.

இது திருமழிசை ஆழ்வார் கடவுளைப் பார்த்து பாடிய பாடல்; இது மிகவும் பொருத்தமாக காவிரிக்கும் அமைகிறது.

நீரின்றி அமையாது இவ்வுலகு;. நதி இன்றி அமையாது நம் வாழ்க்கை அந்த நதியை போற்றி நால்வர் அடங்கிய ஒரு நண்பர் குழு பயணித்ததை நடந்தாய் வாழி காவேரி என்று அருமையான பயண நூலாக சிட்டி – ஜானகிராமன் வழங்கியிருக்கிறார்கள்.
.
நதியின் பயணம் என்பது ஒரு நாட்டின் நாகரீகத்தின் பயணம். அதன் புராதனங்களின்தொகுப்பு, அந்த மக்களின் பண்பாடு, அவர்களின் கலை இலக்கியத் தேர்ச்சி. நிலவளம் நீர் வளத்தைச் சார்ந்தது. வானிலிருந்து பெய்யும் மழையும், மலைகளில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து, குறுக்கிடும் பாறைகளைக் குடைந்து ,மண்ணைச் செழிப்பாக்கி, மானுடம் உயரும் கலைகளைப் பிறக்க வைத்து உன்னதம் தரும் நதிகளும் பொக்கிஷங்கள் தான்.
.
இந்தப் பயண நூல் ஒரு அழகான ராகமாலிகையாக அமைந்திருக்கிறது. அனேகமாக இதில் சொல்லப்படாத செய்திகள் இல்லை என்றே தோன்றுகிறது. அவள் உற்பத்தியாகும் இடம் ,அவள் சலசலக்கும் இடம், அவள் அமைதி காக்கும் இடம், அவள் துளிகளாக, நீர்த் திவிலைகளாக, ஆர்ப்பாட்ட மிக அருவியாக, அகண்ட காவிரியாக, அஞ்சி நடக்கும் அழகாக, கடலைச் சேரும் அன்பாக காட்டப்படுகிறாள். அதில் இணைந்து வருவது சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் காட்டப்படும் காவிரியின் வர்ணனை, அவளின் இரு கரைகளிலும் வாழ்ந்த முனிவர்கள், சாதுக்கள், ஞானிகள் வாக்கேயக்காரர்கள், பாடலாசிரியர்கள், இசை வல்லுநர்கள், ஓவியம், சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபட்டவர்கள், அமைக்கப்பட்ட பெருங்கோயில்கள், சிறு கோயில்கள், ஆண்ட மன்னர்கள், வாழ்ந்த பொதுமக்கள், பசுமைபூர்த்தியாய் அலையாடும் கழனிகள், ஓடங்கள், பரிசல்கள் ,முகத்துவாரங்கள், கால்வாய்கள் ,வெண்மணல் படுகை ,பறவைகள் என்று வந்து கொண்டே இருக்கின்றது .இதில் எதை எடுத்துக் கொள்ள முடியும் எதை விட முடியும்? ஒரு இனிப்பு எந்தப் பகுதியில் இனிப்பாக இருக்கிறது என்று யார் சொல்வது? அனைத்துமே சுவைமிகுந்த சாறு நிறைந்த வரலாறு புதைந்த செய்திகள் .இதில் நண்பர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் ,ஆவலாதிகள், கோபதாபங்கள் சந்தோஷங்கள் அனைத்தும் நாம் அவர்களுடனேயே பயணிப்பது போல திறமையான எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள். அத்தனை இசை மயமாக, சொல் வளம் மிக்க எழுத்தாக இந்த இரட்டையர் இதைப் படைத்து இருக்கின்றனர். மிக அழகான ஓவியங்கள், புகைப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இவர்கள் செல்லும் வழியில் எல்லாம் எதிர்பாராதவிதமாக நண்பர்களும் ஊர் வாசி களும் சந்தித்து உதவுவதை என்னவென்று சொல்வது? இப்படி ஒரு பயணத்தில் நம்மால் மனதால் தான் இணைய முடியும்
.
முதல் அத்தியாயம்- ஆவேசம்- நான் கம்பீரநாட்டை என்பேன். கம்பீரநாட்டையில் மல்லாரி வாசித்து, ஊர்வலம் வரும் தெய்வங்களின் அழகு மிளிர்கிறது. பூவர் சோலை மயிலாட புரிந்து குயில்கள் இசைபாட காமர் மாலை அருகு அசைய நடந்த காவிரியை, நடையிலேயே பார்க்கும் ஆசை இந்தக் குழுவினருக்கு. கோவலன் கண்ணகி நடந்த பாதையில் புகாரில் இருந்து மதுரை வரை நடக்க வேண்டும் என்பது இலக்கியத் தரமிக்க ஒரு தாகம். முதலில் கர்நாடகா பகுதிகளுக்குத்தான் செல்கிறர்கள்.

கொள்ளேகால்- அதிலிருந்து புறப்பட்டு சிவசமுத்திரம் வந்ததை இவர்கள் சொல்வதைக் கேளுங்கள். காமனைக் கண்ணால் எரித்த சிவபெருமானின் சினத்தின் உருவாக விளங்கி கோபக்கனல் தெறிக்கும் வகையில் நீர்த்திவலைகள் தெறிக்கும் அற்புதக் காட்சி சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி .காவிரி இரு கிளைகளாகப் பிரிந்து வளைந்து பார் சுக்கி, ககன சுக்கி என்று இரு பெரும் நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து பாய்ந்து மீண்டும் ஒன்று கூடுகிறாள். பிரம்மாண்ட பாறைகளுக்கிடையே குதித்து விளையாடி நுரைத்துப் பாய்ந்து குலுங்கச் சிரித்து விளையாடும் இவள் நாட்டை அன்றி வேறு யார்? துறவு மேற்கொள்வதற்கு, தனிமையில் ஆனந்தம் அடைவதற்கு ,பரோபகார சிந்தனை ஒரு தடையல்ல என்று ஒரு கதையில் சொன்ன தி.ஜா அத்தகைய ஒருவரை நேரிலும்சந்திக்கிறார்.

அத்தியாயம் 2 அமைதி- பூபாளம் என்று சொல்லலாமா? இங்கே நதி முகம், திருமுக்கூடல், கபினி, தலைக்காடு, ஸ்ரீரங்கப்பட்டினம், சோமநாதபுரம் அகஸ்தீஸ்வரர் ஆலயம், அழகிய மஞ்சள் மாலை என்று எதைச் சொல்ல எதை விட? சோமநாத புரத்தில் சென்னகேசவர் ஆலயம் இவர்களுடைய வர்ணனையில் நவரங்க மண்டபத்தோடு கண்முன்னே எழுகிறது. இதில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காலரா ஊசிக்கு இவர்கள் பயந்து காரில் பறந்தது நல்ல நகைச்சுவை.

அத்தியாயம் 3 அடக்கம் சாரமதி அடங்குவாள், அடக்குவாள் விஸ்வரூபமும் எடுப்பாள் .கிருஷ்ணராஜ சாகர் அப்படித்தான். காவேரி அணைக்குள் கட்டுப்படுகிறாள். மீண்டும் எழுகிறாள் பாய்ந்து பறக்கிறாள் .மின் சக்திக்கும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆன ஆதாரம்.மெர்க்காரா சென்ற அனுபவம் நமக்கு கிலி தரக்கூடியது. சித்தாப்பூரில் கடந்த அந்தச் சாலை! மலைச்சாலை …காப்பித் தோட்டங்களும், பலா மரங்களும், தேக்கு மரங்களும், மலைச்சரிவு வயல்களும், மலையிலும், மரத்திலும், வீட்டிலும் தேனீக்கள் மனிதனுக்காகத் தேன் சேர்க்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அழகும்.. இதை முற்றிலும் உணர அந்த சாலையில் பிறகு அவர்கள் சந்தித்த இடர்களையும் நூலில் படிக்க வேண்டும்.

அத்தியாயம்-4 -அழகு- ஹம்சத்வனி அழகல்லவா மலையில் சுழல்கின்ற பாதை.? யானைக்கூட்டம் கூட வரலாம். அவர்கள் பார்க்கும் இயற்கை காட்சி எவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது!. ‘ஜன்னல் கண்ணாடி வழியாக நிலவு தெரிந்தது .இடையிடையே சிறுசிறு புட்களின் ஒலி கேட்டது. மண்ணெண்ணெய் விளக்கின் வெள்ளை சுடர் சுவற்றில் ஆடியது; நிழல்கள் ,காடு, மலை, தனிமை ,காட்டு விலங்கு பற்றிய உணர்வு இவர்களுக்கு ருட்யார்ட் கிப்ளிங்கின் கதைகள் நினைவுக்கு வந்ததாம். காவிரி ஒரு சுனையில் சிறியவளாகப் பிறக்கிறாள், அம்சத்தின் ஒலியைப் போல. டிவி குண்டப்பா அவர்கள் குடகை வர்ணித்து பாடிய பாடலையும் சேக்கிழாரையும் இங்கே காட்டுகிறார்கள் .அசல் குடகு மக்களைப் பார்ப்பதற்காகச் சென்றவர்கள் அழகான திருமணத்தையும் பார்க்கிறார்கள். நல்ல விருந்து சாப்பிட முடியாமல் இவர்களது சைவ உணவு முறை தடுத்து விடுகிறது. ஸ்ரீரங்கலா என்ற இடத்தில் காவிரியின் சுயரூபத்தைப் பார்க்கிறார்கள். அதுவரை வடக்கு நோக்கி வந்த நதியின் திருப்பம் கிழக்கை நோக்கி ஏற்படுகிறது .
அது தமிழகத்தில் பாயும் காவிரியை நினைவு படுத்துகிறது.

அத்தியாயம் 5 அணிநடை- இது காம்போதி தான். குளிர்ந்த காற்று, உயரமான பாலத்தின் கீழ் காவிரி சலசலத்து ராமநாதன் ஆலயத்தின் முதுகை தழுவிக் கொண்டு ஓடி வருகிறாள் .வெள்ளி நீர் கூட்டம், நதி, கோயில், இயற்கை வனப்பு, ஓசைகள் அற்ற பெருவெளி எல்லாம் சேர்ந்து முந்தைய காலம் ஒன்றிற்கு திரும்பிப் போன மயக்கத்தை கொடுக்கிறது. இந்த ராமநாதபுரம் கர்நாடகத்தில் உள்ளது இந்தியாவின் மொத்த கிராம அமைதியையும் இங்கே காணலாம் என்று இந்த இரட்டையர்கள் கூறுகிறார்கள் இப்பயணத்தில் இவர்கள் சந்திக்கும் ஒரு சிறுவன் ,அவன் குணாதிசயம் மிகவும் சுவாரஸ்யமானது.

அத்தியாயம் ஆறு ஆடு தாண்டும் பகாரி என்ற ஹிந்துஸ்தானி ராகம் நினைவில் வருகிறது ஆதிகாலத்து மலைவாழ் மக்களின் ராகம் இன்று வரை நிலவி வருகிறது அப்படித்தான் செட்டியாரைச் சந்திக்கிறார்கள். கந்தா மரம் என்ற மரத்திலிருந்து அருமையான நறுமணம் வருகிறது அது முல்லையா மல்லியா? இயற்கையின் நறுமணம், வேறென்ன சொல்ல? ஹன்னடு சக்கரா அது பத்து முறை சுற்றியதோ, 12 முறையோ ஆனால் பாறைகளில் தாவிக்குதித்து ஏறி இறங்கி தனிமையில் அனுபவித்திருக்கிறார்கள் .மேகதாட்டு இன்றும் நம்மை வாட்டி எடுக்கும் மேகதாட்டு. பாறைகள் சில இடங்களில் லேசான நீலம், லேசான சிகப்பு, சில இடங்களில் யானையின் உள்ளங்காலை மேல் நோக்கி நிறுத்தி வைத்தது போல வர்ணம், என்ன ஒரு வர்ணனை.!காவிரி இரு சுவர்களுக்கு இடையே ஆழத்தில் ஓடுகிறாள் அங்கே. ஆர்க்காவதி சங்கமம் அழகுக்கென்று என்று காவிரி தேர்ந்தெடுத்த இடமாம் மனிதர்களை விட ஒரு சீமைக்கு தனி அடையாளம் மாடுகள் தான் தருகின்றனவாம்..

அத்தியாயம் ஏழு-புகை தரும் புனல்-தோடி ஆரம்பத்தில் கனகா ,சுஜோதி என்ற நதிகளையும் பின்னர் ஹேமாவதி ,லட்சுமண தீர்த்தம்,கபினி ,சிம்சா ,லோக பாவனி ,சுவர்ணவதி போன்ற நதிகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மைசூர் ராஜ்யத்தை செழிக்கச் செய்து விட்டு காவிரி தமிழ்நாட்டை நோக்கி விரைகிறாள் .அவளை ஒகேனக்கலில் பார்க்கும் ஆவலை சுமந்துகொண்டு இவர்கள் வருகிறார்கள். ஒரு சந்தைக்காட்சியை பென்னாகரத்தில் கண்டு மனம் மயங்குகிறார்கள் .வளம் குறிக்கும் பொருள் வகைகள், ஏக்கமும் வேட்கையும் துடிக்காத மகிழ்ச்சி நிறைந்த பேச்சுக்குரல் அவர்களுக்கு மனித சமுதாயத்தின் இன்னும் விட்டுவிடாத அந்த சந்தைக் கலாச்சாரத்தை மனக்கண்முன் கொண்டு வருகிறது. குற்றாலத்தின் அழகு இல்லை ஆனால் வனப்பு மிகுந்த அமைதியான ஒகேனக்கல் இவர்களைக் கவர்கிறது.நதி ஒடும் இடங்களிலெல்லாம் பல புராணக் கதைகள். பல இடங்களில் அகத்தியருக்கு ஆலயங்கள் .ஒவ்வொரு நதிக்கரையின் அருகிலும் ராமாயணம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள். யாகம் செய்த முனிவர்கள் மற்ற மக்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்று ஒகேனக்கலில் ஆடி பதினெட்டிலும் ஐப்பசி முழு நிலவன்றும் குளித்தால் புண்ணியம் என்று மக்களை ஈர்த்து இருக்கிறார்கள். இங்கே பரிசலில் பயணித்ததும்,மன்னார்குடி மாமி பரிமாறிய நல் உணவும் கள்ளிச் சொட்டு காப்பியும் நம் நாவிலும் நீர் ஊறச் செய்கின்றன.

அத்தியாயம் எட்டு பொன்னி வளம். கல்யாணி இந்த ராக ஆலாபனையில் இன்னும் இன்னும் என்று கேட்கத் தோன்றிக்கொண்டே இருக்கும் அதைப்போல அதுவரை சென்ற இடங்களில் பார்க்கத் தவறிய இடங்களைப் பற்றி இவர்களுக்குள் சிறு வாக்குவாதங்கள் ,பேச்சுக்கள். ஸ்ரீரங்கத் திட்டு பார்க்காததில், பறவைகளைத் தவற விட்டதில், ஒருவருக்கு மனக்குறை. சேர்வராயன் மலைகளில் மஞ்சவாடி கணவாயில் உற்பத்தியாகும் சிற்றாறு திருமணிமுத்தாறு. இது சேலத்தில் பாய்கிறது. இந்தத் திருமணி முத்தாறில் கோதுமை வடிவத்தில் அதை விட ஆறு மடங்கு அளவிலான பெரிய முத்து கிடைத்திருக்கிறது .அதை சிவன் கோயில் அம்மனுக்கு அணியாகத் தந்திருப்பதாக புராணக் கதை நிலவுகிறது. இவர்கள் சென்னைக்குத் திரும்பி நண்பர் சீனிவாசன் நலமாக இருப்பதை பார்த்ததும் நிம்மதி அடைகிறார்கள் கல்யாணி மங்கல ராகம் அல்லவா?

அத்தியாயம் 9 புதுப் புகார் -அசாவேரி ‘ஸாரி வெதலின இ காவேரி ஜொ டரே’ இந்த அருமையான அசாவேரி நிச்சயமாக தி ஜா தான் பாடி இருக்கக்கூடும். காவிரியின் வனப்பை அழகை, வர்ணனை செய்து, அவள் பஞ்சநதீஸ்வரரைப் பார்க்க வரும் அழகை, தியாகராஜ சுவாமிகள் பாடவேண்டும், அதை இவர்களின் எழுத்தில் தேனாய் பருகவேண்டும். காவிரிப்பூம்பட்டினத்தில் சாயா வனத்தில், பச்சையும் வனப்புமாக, கண்ணுக்கு உகந்த காட்டின் அடர்த்தியாக இவர்கள் நம்மை புகார் துறைமுகத்திற்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலையைப் பார்த்து அதை ஒழுங்காக நல்ல ஸ்தபதியை வைத்து செய்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறார்கள். சம்பந்தர் பாடிய பாடல் மிகப் பொருத்தமாக இங்கே கையாளப்படுகிறது . கடற்கரையும் மீனவர்களின் உடற்கட்டும் அந்த அழகிய தமிழ் பேச்சும் கலாசாகரத்தை மிகவும் கவர்ந்து விட அவர் வரைந்து தள்ளுகிறார்.. இவர்கள் நினைவில் தமிழக வரலாறு. அரசர்கள், கவிஞர்கள் ,பாடலாசிரியர்கள் ,ஞானிகள், நாயன்மார்கள் ,ஆழ்வார்கள் ,ஆதீனங்கள் ,நூல் நிலையங்கள் எல்லாம் ஒருங்கே எழுந்து நம்மையும் சுற்றி வளைக்கின்றன. புத்த விகாரத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.. மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை மீது தீக்ஷிதர் பாடிய நவாவரண கீர்த்தனை, வள்ளலார் கோயில் ,கோபால கிருஷ்ண பாரதியின் பாடல், மீனவப் பெண்ணை பார்த்து கண்ணகியை நினைவு கூறல்; மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்று ஐந்தாண்டுகள் கழித்து திரும்புவதற்குள் புகார் நகரம் கடலில் மூழ்கி விட்டதால் இந்த அத்தியாயத்தை கடக்கவே மனம் வரவில்லை
.
அத்தியாயம் 10 கொள்ளிடம் தாண்டி -வசந்தா. வரலாறு சம அந்தஸ்துள்ள இருவரையும் நினைவு கூர்ந்தாலும் நம் மனம் ஒருவர் சற்று குறைவாக நினைவில் வருகிறாரோ என்று அயர்கிறது. ஆம் ராஜராஜனை ராஜாதி ராஜனாகக் கொண்டாடுகிறோம். கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் மறதி அடுக்குகளில் போய் ஒளிந்து கொண்டு விட்டான். செயற்கையாக ஏரியை உருவாக்கிய மாபெரும் மன்னன். கொள்ளிடத்தின் குறுக்கே கீழணை கட்டப்பட்டபோது இந்த கோவிலின் மதிலை உடைத்து கற்களை எடுத்து அணையை அமைத்திருக்கிறார்கள். வரலாற்றில் நமக்கு இருக்கும் ஆர்வம் அவ்வளவுதான்! இந்தக் கட்டுரையை ஊன்றிப் படிக்க வேண்டும் :ஓரிடத்தில் சொல்கிறார்கள் தஞ்சை பெரிய கோவில் ஆண் அம்சத்துடன் இருந்தால், கங்கை கொண்ட சோழபுரம் பெண் அம்சத்தோடு விளங்குகிறது. உட்புற அமைப்பு அத்தனை எழிலாக அமைந்துள்ளது.

அத்தியாயம் 11 இசைவெள்ளம் -சண்முகப்பிரியா. நமக்கெல்லாம் கஞ்சனூர் நெசவைப் பற்றி தெரியுமா? ஹரதத்த சிவாச்சாரியார் ,திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், விகடகவி ராமஸ்வாமி சாஸ்திரி ,சதாசிவ பிரம்மேந்திரர் இவர்களையெல்லாம் பற்றிப் படிக்கும்போது புல்லரிக்கிறது. சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி புதுக்கோட்டையில் ஒரு வரலாறு பேசப்படுகிறது. சமஸ்தானம் வறட்சிக்கு உட்பட்ட போது அன்றைய அரசர் இவரை பக்தியுடன் அணுகி பஞ்சத்தைப் போக்க வழி கேட்கிறார். மலை வரை கோயிலான திருக்கோகர்ணத்திற்கு சுவாமிகள் எழுந்தருளுகிறார். தூங்கா விளக்காக பிரகதாம்பாள் சன்னதியில் ஒன்றை ஏற்றச் சொல்கிறார்.. பஞ்சம் நீங்கி சுபிக்ஷம் வருகிறது. கோவிந்த தீக்ஷதர் மகாமக குளத்தைச் சுற்றி 16 அழகிய மண்டபங்கள் கட்டி உள்ள செய்தி, நாகேஸ்வரன் கோயில் ,உமையாள்புரம், திருவையாறு ,திருப்பழனம் ,வேங்கட மகி யாரை சொல்ல, யாரை விட?

அத்தியாயம் 12 கழனி நாடு-அமிர்தவர்ஷினி. கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை நம்முடைய தமிழர்களின் அபாரமான திறமைக்கு பெரிய எடுத்துக்காட்டு. கண்ணம்பாடி அணையும் மேட்டூர் அணையும் தடுத்து நிறுத்தி பின்னர் அனுமதிக்கும் அளவை மட்டும் கொண்டு ஓடிவரும் காவேரியின் தோற்றத்தை இப்போது காண்கையில் கரிகாலன் கட்டிய போது எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை. திருச்சியில் அகண்ட காவிரியாகப் பாய்ந்து ஸ்ரீரங்கத்தை நெருங்கும் போது தன்னிடம் இருந்து பிரிந்த கொள்ளிடத்துடன் காவிரி ஸ்ரீரங்கத்தைத் தாண்டி மீண்டும் இணைகிறாள். இப்பகுதியில் காவிரி நீர்ப் பாசனத்திற்காக எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ரெகுலேட்டர் வைப்பது, வெண்ணாறு, வெட்டாறு, தண்ணீர் வடிகால் அமைப்புகள் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார்கள்…. திரு ராஜகோபால் இப்பகுதியில் விவரிக்கும் காவிரி வெள்ளப்பெருக்கு தத்துரூபமாக கண்முன்னே எழுகிறது.

அத்தியாயம் 13 ஆர் இரண்டும்- நீலாம்பரி. சங்க நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காவிரியைப் பற்றி காணப்படும் குறிப்புகளை அலசி ஆராய்கிறார் ஒரு நண்பர். திருச்சி மலைக்கோட்டை, அதன் மேலே ஏறிப் பார்த்த காவிரியின் அழகு, ஊரின் அமைப்பு, சமயபுரம் மாரியம்மன் கோயில் அற்புதம் ,மாத்ரு பூதேஸ்வரர் கோயில், அங்கே சந்தித்த சடகோபன், அவரிடம் இருந்த மணிஐயர் ரெக்கார்டுகள், அந்த சங்கீத ஞானம், திருப்பராய்த்துறை விஜயம் ,அங்கே நடைபெறும் தொழில், மாணவர் ஒழுக்கம் ,அமைதி, ஸ்ரீரங்கத்து கோயில் சிறப்பு, திருவானைக்காவில் உருகி உருகி இவர்கள் எழுதிய விதம் அனைத்தும் நம்மை அசைத்து விடுகிறது. நம்மையும் அறியாமல் ஒரு ஆழ் மயக்கத்திற்கு சென்று விடுகிறோம்.

அத்தியாயம் 14 அகண்டம்- சங்கராபரணம். பெருக மணியைத் தாண்டி இவர்கள் சந்திக்கும் அகண்ட காவிரி,. முக்கொம்பு திட்டு, அதன் வனப்பு, மீண்டும் காண கலாதரன் பற்றிய பேச்சு, கோபாலகிருஷ்ண பாரதி சோக ரசமான முகாரியில், கோப ரசத்தை ஏற்றிப் பாடிய பாடல், அலை அலையாக அதைப் பாடிய அழகு, மத்யம கால நடையில் ரத்னாசல பாடல். கடலைக் காண இயலாமல் அமராவதி காவிரி உடனேயே கலந்துவிடுகிறதாம்!
.

அத்தியாயம் 15 காணிக்கை- தன்யாசி. அமராவதி காவிரி சங்கமம் இயற்கையாகவே அமைந்த எல்லைப் பிரதேசம் கரூர். சேரராட்சியில் ஒரு முக்கிய நிலையமாக விளங்கிய ஊர். தென்னகத்தில் எங்கெங்கோ தொலைவில் எல்லாம் குழுமியும், தொடர்ச்சியாகவும், தனிப்பட்டும் நின்று காவல் புரியும் மலைகளுக்கிடையே உற்பத்தியாகும் நதிகளில் பல காவிரியைத் தேடியே விரைந்து வரும் ரகசியத்தை அமராவதி இவர்களிடம் சொன்னாளாம். நெரூராரின் சன்னதியை இவர்கள் வர்ணித்த விதம் நெகிழ வைக்கிறது. இவர்களின் இசை ஆர்வம், அகஸ்தியரை சங்கீத யோகிகளுக்கு ஒரு படி கீழே காட்டப் பார்க்கிறது. கொடுமுடி என்றதும் ஒரு கம்பீர கந்தர்வ குரல் நம் மனச் செவியில் ஒலிக்கும் . அந்த ஊரில் எது அழகு -கோவிலா, காவேரியா, பரிசல்களா?. ஒரு இடம் சிந்திக்க வைக்கிறது- நம்முடைய ரிஷிகள் ஆராய்ச்சிக்காரர்களாக, விஞ்ஞானிகளாக, காடழித்து நாடாக்கியவர்களாக, புவியியல் அறிஞர்களாக, அறிவே தெய்வம் என்று நினைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி சான்றையும் காட்டுகிறார்கள் இவர்கள். இயற்கைப் பொருளுக்கு மாற்றாக செயற்கை இரட்டை காண முனைந்தவர் விசுவாமித்திரர் ;.அகஸ்தியர் புது நிலம் காண முனைந்தவர். நாம் நம்முடைய வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்
.
அத்தியாயம் 16 நிறைவு- மத்தியமாவதி. ஹரித்வாரில் சமவெளியில் இறங்கிய பிறகு, கட் முக்தேஸ்வர் போன்ற இடங்களில் கங்கையைப் பார்த்தால் புகளூர் பாலத்திலிருந்து காவிரியை பார்ப்பது போல் இருக்குமாம். பவானியில் சங்கமேஸ்வரர் கோயில், ஜமுக்காளம் இவர்களை ஈர்த்து வசப்படுத்துகிறது.. ஆனால் பாவம், கார் ரிப்பேர் ஆனதால் பஸ்ஸில் மேட்டூர் போய் வருகிறார்கள். கணவாய் போன்ற இடைவெளியில் மேட்டூர் அணை அமைக்கப்பட்டிருக்கிறது. மேட்டூரிலிருந்து பவானி திரும்பியவர்கள் சும்மா இருக்கலாம் அல்லவா? ஒரு சினிமா பார்ப்பதற்குப் போய்விட்டு தலைவலியுடன் இடைவேளை நேரத்தில் விடுதிக்கு திரும்பி விடுகிறார்கள்.. மீண்டும் ஒரு அழகான இலக்கிய சர்ச்சை- சுடர் இலை நெடு வேல் நெடுவேள் குன்றம் வேறு எங்கு இருக்கிறது என்று கேட்டது ஜானகிராமனாகத்தான் இருக்கும். ஆனால் ஆராய்ச்சி நண்பர் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு திருச்செங்கோடு அல்ல சுருளிமலை ஆகத்தான் இருக்கும் என்று தன் தரப்பை நிறுவுகிறார்.

அத்தியாயம் 17 ஆலாபனை -ஹிந்தோளம். ஜோடர்பாளையம் போகிறார்கள் பனை மரத்தை வெட்டி குறுக்கே போடப்பட்ட பாதை .இவர்களுக்கு கூழாங்கல் பொறுக்கும் ஆசை வந்துவிட்டது. மிக மிக நயமான வடிவு கொண்ட கற்கள் . பொறுக்கிய பிறகு அனைத்தையும் ஆற்றிலேயே போட்டுவிடுகிறார்கள். கரும்பு பூக்களின் வெண் பட்டுக்கொண்டைகளைப் பார்த்துக்கொண்டே, சிலிர்த்துக்கொண்டே ஒருபயணம் திருஈங்கோய்மலை மிக அருமையான வர்ணனை. அகத்தியர் ஈயாக வடிவெடுத்து சிவனை சுற்றிப் பாடி பரவசப்பட்ட அருமையான இடம்.

அத்தியாயம் 18 பல்லவி -ஆனந்தபைரவி. ஆற்றுக்கு அக்கரையில் தொலைவில் ரத்தனகிரி, இடது பக்கம் அடிவானத்தில் திருச்சி மலைக்கோட்டை, வலது பக்கத்தில் கொல்லி மலைக் குவியல்கள்,. வைரக் கற்கள் பதித்த ஆபரணம் போல் காலை இளவெயிலில் காவேரி ஜொலிக்கிறாள். குணசீலத்தைத் தவிர்த்து விடுகிறார்கள். வரகூரின் கிருஷ்ண பக்தியை அபாரமாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு கிளை நதியோடும் போய் பார்க்க வேண்டுமென்றால் நாயன்மாராக, ஆழ்வாராக,, பண்டாரமாக அல்லது ஹிப்பியாகவாவது இருக்க வேண்டுமாம்!. இங்கே ஒரு அருமையான ஓடப் பாடல் ஒரு பாட்டி பாடுகிறார் எனக்கு மரப்பசு நாவலில் கல்யாணக் கச்சேரி செய்த கோபாலி நினைவிற்கு வந்து விட்டார்.

சென்னை வரும்காவிரியைப் பற்றியும் காவிரி நீர் பங்கீடு பற்றியும் இந்த நூலுக்காக தகவல்கள் எடுத்துக்கொண்ட நூல்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள்.

நதியின் சிறப்பை ,அதன்வழி நடந்ததை சொல்லும் நூலில், வரலாறும் இசை யும் , தமிழும், நம்முடனே பயணிக்கின்றன.. நினைந்து நினைந்து உருகி உருகி உடன் பயணிக்க வேண்டிய அற்புத நூல்.

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்து குடகு மலை கனி வயிற்றில் கருவாகி, தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி, ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எனும் பெயரால், நீண்ட வரலாறாய், வண்ணம் பாடி ஒரு வளர் தென்றல் தாலாட்டு, கண்ணம்பாடி அணை கடந்து, ஆடு தாண்டும் காவிரிப் பேர் பெற்று, அகண்ட காவிரியாய் பின் நடந்து, கல்லணையில், கொள்ளிடத்தில், காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டை தாயாகிக் காப்பவள். அவள் கங்கையில் புனிதமாய காவிரி அல்லவா?

காம மறுப்பு: மூன்றாம் பாலினமும் வன்முறையின் உச்சமும் (சு.வேணுகோபாலின் பால்கனிகள் நாவலை முன்வைத்து)

முனைவர் ம இராமச்சந்திரன்

‘காமக் கடல்மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்’ (குறள் 1164)

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இங்கு வாழ்வதற்கான முழு உரிமை உண்டு. காமத்தாலும் காதலாலும் பின்னிப் பிணைந்த வாழ்க்கையில் மறுக்கப்படும் காமத்தாலும் ஒதுக்கப்படும் காதலாலும் வாழ்வியல் சிக்கல்கள் தோன்றுகின்றன. வாழ்வியல் சிக்கலும் போராட்டமும் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமானதாக இருக்கலாம், ஒரு மனிதனுக்கும் ஒரு குடும்பத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு மனிதனுக்கும் ஒரு சமூகத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு பாலித்திற்கும் இன்னொரு பாலினத்திற்குமானதாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் காமத்தாலும் காதலாலும் சிக்குண்டு அல்லாடும் இவ்வாழ்க்கைச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் மூன்றாம் பாலினமாகப் பிறந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் காமம் சார்ந்த உளவியல் சிக்கல்களையும் சமூகச் சிக்கல்களையும் கேள்விக்குள்ளாக்கும் நாவல் பால்கனிகள். இந்நாவலை சு.வேணுகோபால் எழுதியுள்ளார். இதனைத் தமிழினி அதிகப் பிழையோடு வெளியிட்டுள்ளது.

இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை உற்றுநோக்கும் சூழலில் பால்கனிகள் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் இன்றளவும் இந்திய, தமிழ்ச் சமூகத்தை வந்தடையவில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்ற எண்ணமோ அல்லது பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடியவர்கள் என்ற எண்ணமோ அல்லது இழி பிறவிகள் என்ற எண்ணமோதான் மேலோங்கி நிற்கிறது.

பிறந்து வளர்ந்த குடும்பமே ஒதுக்கித்தள்ளுதல், ஆண் பெண், சார்ந்து பழகிக்கொள்ளும் நடைமுறையில் ஒவ்வாமை, கேலி, கிண்டல், அதிகார மீறல் என்ற சமூகக் கொடுமைகள், தனக்கான பாலியல் சுதந்திரத்தைப் பெறமுடியாமல் தவிக்கும் நிலை. வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, பொது இடங்களில் அருவருப்பான பார்வை, பாலியல் சீண்டல்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் அதிகம். இதன் விளைவு சமூகத்தைச் சீண்டும் நாகரிகத்தை உடைக்கும், மதிப்பீடுகளைச் சின்னாபின்னப்படுத்தும் நடத்தை சார் எதிர்வினைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படிபட்ட பாதிப்புகளுக்கு உள்ளான ஒருவன் கிட்ணன்.

இந்நாவலின் கதை கம்பம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் நகர்ந்து செல்கிறது. இந்த நகர்வுகள் அனைத்தும் கிட்ணனின் வாழ்க்கைச் சிக்கலின் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளன. நாவல் முழுவதும் பெண்களுக்குப் பிடித்தமானவனாக வலம் வருகின்ற கிட்ணன் பிறகு பெண்ணாக மாறும்போதும் அவர்களின் எண்ணத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. திவ்யாவின் மூலமாகக் கதை சொல்லப்படுகிறது. கிட்ணன் சிறுவயதில் மற்றவர்களோடு விளையாடும்போது எந்தப் பாலின வேறுபாடும் இல்லாமல் இருந்து வருகிறான். சற்று வளர்ந்த பிறகு வேட்டிக் கட்டிக்கொள்ளும்போதும் நடந்துவரும் போதும் அவனிடம் பெண் சாயல் வந்துவிடுகிறது. வீட்டில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் கேளி செய்தாலும் அவனுக்கு தான் ஒரு பெண் என்ற உணர்வு வரவில்லை. மற்றவர்களும் கேலி செய்தார்களே அன்றி அவனைப் பெண்ணாக எண்ணவில்லை.

ஊரில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு இவனும் கலந்துகொண்டு ஆடிய ஆட்டமும் பெண் உடையும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. மோகினி என்று அழைக்கும் அளவுக்கு இவனின் பெண் சாயல் வளர்ச்சிநிலைக் கண்டது. சமையல் செய்வதில் மிகவும் நேர்த்தியை கையாழுவதும் பெண்களுக்குத் தெரிந்த சமையல் சாகசங்கள் அவனிடம் இருப்பதும் அவனது குடும்ப உறவான பெண்களுக்கு இவன் மேல் அக்கறையும் பற்றும் ஏற்பட்டுவிட்டது. இவனின் அம்மா உடல் நலிவால் படுக்கையில் கிடந்தபோது அவருக்கு அனைத்து உதவிகளையும் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து செய்து வந்தான். அம்மாவின் மறைவு அவனுள் இருக்கும் பெண்மையை உணரச்செய்தது.

அவனோடு படித்த நண்பனும் ஊரில் உள்ள விடலைகளின் சீண்டலும் உறங்கிக்கிடந்த பெண்மையை உசுப்பிவிட்டன. தான் ஆணல்ல பெண் என்பதை காமச் சீண்டலின் மூலம் உணர்ந்து கொண்டான் கிட்ணன். ஊராரின் ஏச்சுக்கும் உடன்பிறந்த அண்ணன் அடிக்கும் அப்பாவின் புறக்கணிப்புக்கும் வடிகாலாய் திவ்யா விளங்கினாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு காமத்தின் பெரும்பேயும் சமூகத்தின் வன்கொடுமையும் அவனை ஊரைவிட்டு ஓடச் செய்தன. ஓடியக்கால்களும் உழன்ற மனமும் அவனை அவளாக்கியது. யாருக்கும் பயந்து வாழவேண்டியதில்லை. அவன் அவளாகச் சுதந்திரமாகச் சுற்றித் திரியத் தொடங்கினான்.

அண்ணன் மகனுக்கு மொட்டை அடிக்க போகிறார்கள் என்பதைக் கேட்டு சொந்த ஊருக்குப் பெண்ணாக வந்தான் கிட்ணன். அவனைக் கண்டு ஊரே வியந்துபோனது. ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. பெண்களின் கருணையும் அவர்களின் கேலியும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறிப்போனது. அவனது அண்ணன் சுதாகர் அநாகரிக வார்த்தைகளைப் பேசி அடிக்க வந்தான். ஊரார் அவனை விலக்கிவிட்டனர். பிறந்து வளர்ந்து பேசி பழகிய குடும்பம் ஒதுக்கி தள்ளுவதைக் கண்டு கண்கலங்கி தனித்து நின்றான் கிட்ணன். அவனது அப்பாவும் அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தன்னைத் தேடி தனது இனத்தைத் தேடிப் பயணப்பட்டான் கிட்ணன்.

மதுரையில் திவ்யாவின் வீட்டிற்கு அடிப்பட்ட காயங்களோடு ஒருநாள் வந்தான். அவனைக் கண்டு பிறப்பின் இடர்பாடுகளை உணரத் தொடங்கினாள் திவ்யா. மறுநாள் வீட்டில் கிட்ணனைக் காணோம். அவளது சேலை , உள்ளாடை, செருப்பு, நகைகள் காணாமல் போயிருந்தன. மற்றவர்களாக இருந்தால் ஊருக்குத் தகவல் கொடுத்துச் சண்டைப் போடுவார்கள். ஆனால் சிறுவயது முதல் தம்பி என்று உடன் விளையாடியவன் அவளோடு மனதளவில் கலந்து விட்டவன் கிட்ணன். அவனுக்கும் ஒரே ஆறுதல் அவனது அம்மா. அவள் இறந்தபிறகு திவ்யா அக்காதான். அன்று சென்றவன் பிறகு அவனைப்பற்றிய எந்தத் தகவலும் வரவில்லை அவளுக்கு என்று கூறுவதை விட அவளைத் தவிர வேறு யாரும் அவனைப் பற்றி நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

தனது அண்ணனிடம் சொத்தில் தனக்குச் சேரவேண்டிய பங்கைத் தரவேண்டும் என்று கூறியபோது அவனது அண்ணனும் அப்பாவும் அவனை அடித்துத் துரத்தி விடுகின்றனர். ஊரார் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இங்கே மூன்றாம் பாலினத்தவருக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கில்லை என்பதும் அவர்கள் மனிதனாகப் பார்க்கப்படுவதில்லை என்பதும் சமூகக் கொடுமை. அதைவிட அவனை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவலம் கொடூரமானது. இந்த உலகிற்கு அவனைக் கொண்டுவந்த பெற்றோரே ஏற்க மறுக்கும்போது இந்தச் சமூகம் எப்படி அவனை ஏற்றுக்கொள்ளும். இது யார் செய்த தவறு? கிட்ணனா? பெற்றோரா? சமூகத்தில் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் மனிதர்களாக மூன்றாம் பாலினத்தவர் நடத்தப்படுவது மாற்றப்பட வேண்டிய சமூகத் கொடுமைகளில் ஒன்று.

திவ்யா பணியாற்றும் வங்கி நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை வருகிறாள். அங்குக் கிட்ணன் திவ்யாவை அடையாளம் கண்டு அவளிடம் பேசும்போது வியந்துபோகிறாள். என்றாலும் தன்னையும் மற்றவர்கள் பாலியல் சிண்டலுக்கு ஆளாக்கிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வு ஏற்படுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் கிட்ணன் அமைதி சாந்தம் கொண்டவனாக இருக்கிறான். சுடிதார் போட்டு இயல்பான பெண்ணாகத் தோற்றம் தருகிறான். சற்று உற்று நோக்கினால் மட்டும் அவன் மூன்றாம் பாலினம் என்று தெரியவரும் என்பதால் சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.

அவனோடு உறவாடியபோது தனது தோழி பார்கவியிடம் எனது தம்பி என்று கூற அதற்கு ‘இல்ல அக்கா நான் அவங்களுக்குத் தங்கச்சி’ என்று மறுக்கும் இடம் தனது அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் மனம் வெளிப்படுவதைக் காணலாம். மீண்டும் மாலையில் சந்திக்கும் திவ்யா கிட்ணனுக்குக் குழந்தை இருப்பதைக் கண்டு வியந்து போகிறாள். அவன் வசிக்கும் வீடு மூன்றாம் பாலினத்தவர்கள் கூட்டமாக அங்கு வாழ்கின்ற பகுதியாக இருக்கிறது. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்து வருவதைக் கூறும் கிட்ணன் தனது மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்று கூறும்போது புறக்கணிப்பின் வலி வெளிப்படுகிறது.

ஹோட்டல் முதலாளி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பாலியல் தொல்லைக்கொடுப்பதைச் சகித்துக்கொண்டு வாழ்வதாகக் கிட்ணன் கூறும்போது சமூகத்தின் அவலம் புலப்படுகிறது. வேறு இடத்திற்குச் சென்றாலும் அங்கும் இவனைவிட மோசமான ஆள் இருக்கலாம். என்பதால் இங்கேயே தனது மகனுக்காக வேலை செய்து வருவதாக க் கூறும் கிட்ணன் மூன்றாம் பாலினமாகப் பிறந்ததற்காகப் படுகின்ற துன்பங்கள், அவமானங்கள், தொல்லைகள் போன்றவை திவ்யாவின் கண்முன் வந்து போகின்றன. திவ்யா தனது பர்சில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்துக் குழந்தை கையில் வைக்கும்போது கிட்ணன் அழுது விடுகிறான். முதல் சொந்த உறவு ‘நீ தான் என் பிள்ளைக்குக் காசு கொடுத்திருக்க’ என்று அவன் பூரித்துப்போகும் நிலை உறவுக்காக ஏங்கும் தனிமையின் திக்கற்ற சூழலை வெளிப்படுத்துகிறது. பார்கவி ரயில்வே ஸ்டேசனில் குழந்தையைக் கொஞ்சி பணம் கொடுக்கும்போது வாங்கிக்கொள்ள கண்டிப்பாக மறுத்துவிடும் கிட்ணன் இச்சமூகத்தில் வாழவேண்டிய, அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டிய எலும்பும் சதையும் மனமும் கொண்ட சக உயிர் என்பதை ஒவ்வொருவரும் உணரும் தருணம் இது. அவனல்ல அவளாக வாழ்வதற்கு ஒரு சமூகம் எப்போது தயாராகிறதோ அப்போது இந்தச் சமூகம் நாகரிக எல்லைகளைத் தொடலாம்.

 

எம். கோபாலகிருஷ்ணனின் ‘வால்வெள்ளி’: தன்னைக் கண்டடைதலும் வாழ்தலின் யதார்த்தமும் -முனைவர் ம இராமச்சந்திரன்

முனைவர் ம இராமச்சந்திரன்

“கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய குறுநாவல் ‘வால்வெள்ளி’. இது சமூக வாழ்க்கையில் மனிதர்களின் நடத்தைமுறையும் காமமும் வினையாற்றும் சூழ்நிலையைக் களமாகக் கொண்டது. தன்னில் தொலைந்துபோன பாதியின் எச்சங்களைத் தேடிய பயணத்தில் கண்டடையப்படும் அனுபவம் நாவலின் மையமாக விளங்குகிறது. எந்தச் சமூக மதிப்பீடுகளும் அவனால் அல்லது அவளால் ஏற்றுக்கொள்ளப்படும்ம்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிகின்றன. எளிய நிலையற்ற வாழ்க்கைச் சூழலில் நின்று நிதானித்து எவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் புறந்தள்ளவும் முடிவதில்லை.

மனம் தனது பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டும் செயல்பாடுகளாக நகர்ந்து செல்கிறது கதை. நடுத்தர வயதில் உள்ளுக்குள் இருக்கும் காமம் தன்னை இனம் காணும்போது அனைத்து முறைமைகளும் பொருளற்றுப் போவதே இதன் அடிநாதம். “அன்றைய பகல் நேரத்தில் நான் என்னைக் கண்டு கொண்டேன். அதுவரை நான் அறிந்திராத ரம்மியங்களையும் வலிகளையும் எனக்கு அறிமுகப்படுத்தினாய்.” பெண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு ஆணும் ஆண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு பெண்ணும் வெளிப்படுத்தும்போது ஏற்படும் காந்த ஈர்ப்பு இயற்கையானது என்பதும் அனுபவிக்கப்பட வேண்டியது என்பதும் நாவலால் உணர்த்தப்படுகிறது. யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அனைத்தும் அனைவருக்குமான புரிதலோடு கடந்து செல்கிறது கதை.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பேராசிரியரின் மனைவி தனது கணவனைக் காண வரும் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளனிடம் தன்னைக் கண்டடையும் பேற்றை நாவலாசிரியர் வாசகனுக்கும் உணர்த்தி விடுகிறார்.

“உன்னை நன்கறிந்த நானும்
என்னை நன்கறிந்த நீயும்
இதற்கு முன்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை
ஆனால் உன் வாசனை எனக்கு வெகு பரிச்சயம்”

என்ற கவிதை வரிகள் இயற்கையின் உன்னதங்களை உன்னிப்பாகக் காணும் அவனுக்கு அவளின் இருப்பும் இயல்பும் அவனை உணரச் செய்யும் தருணங்களும் வியப்பானவை. அனைத்து அறங்களையும் தாண்டி அவர்கள் செய்யும் களவும் புணர்ச்சியும் அவர்களை நிலை தடுமாற செய்தாலும் அவர்களின் சுய இருத்தலும் சுயத் தேவையும் பூரணமாக அமைவதால் அவர்களின் பிரிதலும் இயல்பாக அமைந்து விடுவதைக் காண முடிகிறது.

பேராசிரியரின் மனைவி, இரு குழந்தைகளுக்குத் தாய், சமூகத்தில் மதிக்கப்படும் நிலை இவற்றையெல்லாம் கடந்து அவளின் உடலும் மனமும் விரும்புவது ஆணின் அன்பான கனிவான புரிதல்கள் சொல்லாடல்கள் மட்டுமே என்பதை உணர்த்தினாலும் சமூக மதிப்பீடுகள் அவளில் வினையாற்றும் வலிமைமிகு உணர்ச்சிகளை நாவலாசிரியர் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. அவளது மனப்போராட்டங்கள், தவிப்புகள், சுய அறங்கள் அனைத்தையும் தாண்டி அவனது அருகாமை அவளை அவளாக்குகிறது. தன்னை இழந்து அவளைக் கண்டடையும் அதே வேளையில் அவனும் அவளைத் தன்னுள் கண்டடைந்த மாண்பின் ஊடாகக் கடந்து செல்கிறது நாவல்.

பெண்களின் சுதந்திர வெளிகள் பெரும் மதிப்புள்ளவை. ஆனால் பணமதிப்பற்றவை. சிறு பார்வை, சிறு காத்திருப்பு, உதட்டின் வழி சிறு அங்கீகரிப்பு, அவனின் ஊடாக அவளைக் கண்டடைதல் போன்ற எதிர்பார்ப்பு எத்தனை காலம் வாழ்ந்தாலும் இவை நிரப்பப்பட வேண்டிய கோடிட்ட இடங்களாகவே இருக்கின்றன. நிரப்பப்படும் சூழல் ஏற்படும்போது அதனைப் பெறுவதற்கான அனைத்து எத்தனிப்புகளையும் மனம் அவளையும் மீறி வினையாற்றிச் செல்கிறது.

இருவரின் மனம் உடல் சார்ந்த ஏற்புகளுக்குப்பின் எட்டிப்பார்க்கும் மீதி வாழ்க்கை முடிவற்ற பாதையைப் போல நீண்டுள்ளது. கடும் தவயோகியும் தானடைந்த ஆனந்தம் நிமிடங்களில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் அந்த நிமிடங்கள் மீண்டும் வருவதும் நிச்சயமற்ற தனது தவ வாழ்க்கையில் பயணிப்பது போல அவளது வாழ்க்கை பயணப்படுகிறது.

“நம் தொடுகைகளில் அந்நியமில்லை.
நம் தழுவல்களில் தடுமாற்றம் இல்லை.
நம் முத்தங்களில் ஒத்திகைகள் ஏதுமில்லை.
சர்வ நிச்சயமாய்.
சர்வ சுதந்திரமாய்.
ஒருவருக்கொருவர் படையலானோம்.
பரிபூரணமானோம்”.

யாரும் அறிந்திராத ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கை அனுபவங்கள் என்றென்றும் அவர்களுடன் சென்று விடுகின்றன. குழந்தைகளோடு உறவாடினாலும் கணவனோடு இரவுகள் இதமானாலும் விழித்திருக்கும் நினைவுகள் அவர்களுக்கானது. உன்னதமானது. இவர்களின் உன்னத உறவு புகைப்படங்களில் பதிந்த சில பதிவுகளுடன் நகர்ந்து செல்கிறது. ஏதோவொரு தேசத்தில் இயற்கையின் அழகை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவனது இருத்தலும் அனைத்து எதிர்பார்ப்பும் அர்த்தமற்ற பேரன்பு மேலிட இன்றைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள முயலும் அவளின் இருத்தலும் எப்போதும் நேர்ந்து விடுவதில்லை.

“மற்ற படங்களையும் கடிதத்தையும் நான் புடவைகளுக்கு நடுவில் ஒளித்து விட்டேன். எல்லாவற்றையும் அவரிடம் காட்டும் துணிச்சல் இல்லை என்னிடம் அப்போது.” ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அலமாரியில் மறைத்து வைக்க ஏதேனும் சில பொருட்கள் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. கண்ணில் பட்டாலும் அவற்றை திறந்து பார்க்க, அறிந்துகொள்ள மனம் விரும்புவதில்லை. இதனை “உன் படங்கள் வெளியான சஞ்சிகைகளை வேண்டுமென்றே என் கண்ணில் படும்படி போட்டு வைத்தார். கானுயிர் புகைப்படப் போட்டியொன்றில் உனக்குப் பரிசு கிடைத்த செய்தி பிரசுரிக்கப்பட்ட இதழைக் கொண்டு வந்து என்னிடம் காட்டியபோது நான் எரிந்து விழுந்ததில் சற்றே திடுக்கிட்டுப் போனார்,” என்ற வரிகள் இவளின் அந்தரங்கம் அறியப்பட்டுவிட்ட உண்மையாக மாறியதும் இதனை அவளது மனம் ஏற்க மறுப்பதின் வெளிப்பாடாக அவளது கோபம் வெளிப்படுவதுமாகக் கதை நகர்ந்து செல்கிறது. அவரவர் மனம் அவரவர் அந்தரங்கம் அவரவர் வாழ்வியல் பொக்கிஷங்களாகவும் இருக்கலாம். விகாரங்களாகவும் இருக்கலாம். அவரவர் வாழ்க்கை அவர்களுடன் மரணத்தைப் போல எடுத்துக் கொள்ளவோ அல்லது கொடுத்துச் செல்லவோ முடியாது.

தனது வாழ்க்கை, கணவன், குழந்தைகள், குடும்பம் என்ற சூழலில் இயங்குவதை ஏற்றுக்கொண்ட அவளது மனம் அவனுக்கான வாழ்க்கைச் சித்திரத்தைத் தானே கட்டமைக்க எண்ணுகிறது. “என்னிடம் கண்ட பரவசங்களைத் தரும் இன்னொரு பெண்ணை நீ கண்டடைவது ஒன்றும் சிரமமானது அல்ல. விரைவில் அப்படியொருத்தியைக் கண்டடையும்போது நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அவளுக்கான கனவுகளை அறிந்து கொண்டு முடிந்த மட்டும் அவற்றுக்கு மரியாதை செய்வதுதான். என்னில் கண்ட ஏதோ ஒன்றை அவளிடமும் உன்னால் கண்டடைய முடியும்,” என்பதன் மூலம் அவனுக்கான வாழ்வியல் வெளியைச் சற்று ஏமாற்ற உணர்வோடும் அதேவேளையில் அங்கீகரித்தலோடும் பெண்ணுணர்வு வெளிப்பட்டு நிற்கின்றது. காலை சூரியன் மலர்களை, பறவைகளை, விலங்குகளைப் புதுப்பிப்பது போல ஓடிக் கொண்டிருக்கிறது மனித நதி வால்வெள்ளியாக.

எம்.கோபாலகிருஷ்ணன், வால்வெள்ளி, குறுநாவல், 2018, தமிழினி பதிப்பகம், சென்னை-51.