கட்டுரை

தாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை

அன்று ஞாயிறு. காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். கம்பிவேலிக்கு அப்பால் இரண்டு ஆள் உயரத்துக்கு புதரென மண்டியிருந்த செடிகொடிகளின் மீது படர்ந்து நீண்டிருக்கும் பெயர் தெரியாத கொடியில் மேலும் கீழும் பூத்திருக்கும் ஊதாநிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் ஏதோ திருவிழாவுக்குக் கட்டிய சிறுவிளக்குத் தோரணமென அந்தப் பூவரிசை நீண்டிருந்தது.

புதரையொட்டி கன்னங்கரிய எருமையொன்று அப்போது வந்து நின்றது. இவ்வளவு காலையிலேயே மேய வந்துவிட்டதே என ஆச்சரியமாக இருந்தது. அது தரையில் பச்சைப்பசேலென வளர்ந்திருந்த புல்லை தேடித்தேடி மேய்ந்தது. வளைந்த கொம்பு. பெரிய கண்கள். கழுத்தில் மணி தொங்கியது. புல்லுக்காக தலையை அசைக்கும் போதெல்லாம் மணியோசை எழுந்தது. எங்கோ உரசிக்கொண்டதாலோ அல்லது ஏதோ கூர்மையான கழியோ, கிளையோ முதுகில் விழுந்து தோல் கிழிந்து கன்றியிருந்தது.

அப்போதுதான் ஒரு காக்கை பறந்துவந்து அதன் கொம்புகளுக்கிடையில் உட்கார்ந்தது. முதலில் எருமை அதைப் பொருட்படுத்தவில்லை. மெல்ல மெல்ல கொம்பிலிருந்து கழுத்தை நோக்கி நகர்ந்த காக்கை, பிறகு முதுகுத்தண்டின் மீது நடந்துசென்று முதுகிலிருந்த கையகல புண்ணுக்கு அருகில் சென்று நின்றது. ஒருகணம் எருமையின் முதுகில் குனிந்து அலகால் கொத்துவதும், மறுகணமே தலையைச் சாய்த்து நடைபாதையை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தது காக்கை. அதுவரை அமைதி காத்த எருமை, புண்ணில் காக்கையின் அலகு பட்டதும் வாலைச் சுழற்றி அது அமர்ந்திருந்த திசையில் விசிறியது. சரேலென பறந்து தப்பித்து விலகிய காக்கை காற்றிலேயே ஒரு சுற்று வட்டமடித்துவிட்டு மறுபடியும் எருமையின் முதுகில் வந்து உட்கார்ந்தது.

அக்கணத்தில் என்னைக் கடந்து சென்ற ஒரு சிறுவன், அதே காட்சியைச் சுட்டிக்காட்டி, தனக்கு அருகில் நடந்துவந்த பெரியவரிடம் “அங்க பாருங்க தாத்தா, அந்த காக்கா எருமைய வம்புக்கு இழுக்குது” என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் பக்கமாகத் திரும்பினேன்.

“அதனாலதான் வால சுத்திசுத்தி வெரட்டியடிக்குது” என்றார் தாத்தா. அதற்குள் அவரும் வேலிக்கருகில் நடைபெறும் எருமை காக்கை சீண்டலைப் பார்த்துவிட்டார்.

“என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜென்டில்மேன் தாத்தா” என்றான் சிறுவன்.

அதைக் கேட்டதும் பெஞ்சிலிருந்து எழுந்து நின்றுவிட்டேன். ஒரு கணம் என் உடல் சிலிர்த்தது. அப்படி மதிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அவனுக்குள் தெய்வம்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் குரலும் சொற்களும் மண்ணுக்குரியவையே அல்ல என்று நினைத்தபடி அக்கணமே அச்சிறுவனைப் பின்தொடர்ந்தேன். அவன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்லும் சொற்களையெல்லாம் கேட்கவேண்டும் என்பதுபோலவும் தோன்றியது. ஏதோ நடைப்பயிற்சி செய்பவன் என்னும் தோற்றம் காட்டியபடி அவர்கள் சொற்கள் காதில் விழும் அளவுக்கு நெருக்கமாகவே நடக்கத் தொடங்கினேன்.

“இடியே இடிஞ்சி உழுந்தாலும் எருமைகிட்ட அவசரமே இருக்காது தாத்தா. ஒரு நிமிஷம் கூட நிதானத்தை கைவிடாது. அடிச்சி பிடிச்சி ஓடாது. எல்லாமே தனக்குத்தான் கெடைக்கணும்னு அலையாது. பொறுமை. எப்பவுமே பொறுமை. அதான் அதுங் குணம். அதுக்காகத்தான் அது ஜென்டில்மேன்.”

அவன் ஆர்வத்தோடு அடுக்கிக்கொண்டே சென்றான்.

”எல்லா அனிமெல்ஸ்ங்களயும் விட்டுட்டு எருமையை மட்டும் ஜெண்டில்மேன்னு ஏன் சொல்ற?” என்று தாத்தா கேட்டார்.

“எத்தன கார்ட்டூன் சேனல், போகோலாம் பாக்கறேன். எல்லாம் எனக்குத் தெரியும் தாத்தா?” என்று வேகமாகச் சொன்னான் சிறுவன்.

“அதான், என்ன தெரியும் சொல்லு”

“சிங்கம் சண்டைபோடும். புலி சண்டை போடும். யானை சண்டை போடும். நரி, கரடி, மான் கூட சண்டை போடும். மாடுகள்ல எருது கூட சண்டைபோடும். எல்லாத்தயும் நான் பாத்திருக்கேன். ஆனா எருமை சண்டை போட்டு நான் எங்கயும் பார்த்ததே இல்ல. அதனாலதான் அது நூறு பர்செண்ட் ஜென்டில்மேன்”

“சண்ட போடாததெல்லாம் ஜென்டில்மேன் ஆயிடுமா?”

“ஆமாம். அது மட்டுமில்ல. அது ரொம்ப சாது. எப்பவும் அமைதியாவே இருக்கும். ஆர்ப்பாட்டம் பண்ணாது. யாருக்கும் கெடுதல் செய்யாது. முட்டாது. மொறைக்காது. பின்னாலயே விரட்டிகினு வராது. உண்மையான ஜென்டில்மேன்.”

பெரியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்தார். “நைஸ். நல்ல நல்ல பாய்ண்ட்லாம் சொல்றியே. விட்டா ஒரு கட்டுரையே எழுதிடுவ போலிருக்கே” என்றார்.

“நெஜமாவே ஒரு கட்டுரை ஸ்கூல்ல எழுதினேன் தாத்தா. ஒருநாள் மிஸ் உங்களுக்குப் பிடிச்ச டொமஸ்டிக் அனிமல பத்தி ஒரு கட்டுரை எழுதுங்கன்னு சொன்னாங்க. நான் அப்பதான் எருமைய பத்தி எழுதனேன். ஆனா மிஸ் எனக்கு குட் போடவே இல்ல. எல்லாரும் ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, கன்னுக்குட்டின்னு எழுதியிருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் குட் போட்டாங்க. எனக்கு வெறும் ரைட் மார்க். அவ்ளோதான். என்னடா இப்படி எருமைய பத்தி எழுதியிருக்கியேன்னு சிரிச்சிட்டு போய்ட்டாங்க. அப்பா கூட அன்னைக்கு நான் சொன்னத கேட்டுட்டு என்ன பாத்து ஷேம் ஷேம்னு சொன்னாரு. அப்ப நீங்க ஊருல இருந்திங்க. இங்க வரல.”

“போனா போறாங்க உடு. அவுங்களுக்கெல்லாம் எருமைய பத்தியும் ஒன்னும் தெரியல. உன்ன பத்தியும் ஒன்னும் தெரியல. உனக்குத்தான் அதனுடைய அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சிருக்குது. நீ ரொம்ப ரொம்ப வெரிகுட் பாய். நானா இருந்தா உனக்கு டபுள் குட் போட்டிருப்பேன்.”

அச்சிறுவனுக்கு அருகில் சென்று அவன் விரல்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்போல இருந்தது. ஆயினும் என் குறுக்கீடு அவர்களுடைய இயல்பான எண்ண ஓட்டங்களைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சினேன். அவனைப் பார்த்தால் ஏழு அல்லது எட்டு வயதுதான் மதிப்பிடத் தோன்றியது. அவன் குரலில் இன்னும் மழலை கேட்டது.

ஒரு திருப்பத்தில் நாலைந்து மழைமரங்கள் அருகருகே நின்றிருந்தன. செக்கச்செவேலன மலர்ந்த மலர்களும் பச்சை இலைகளும் கிளைமுழுக்க அடர்ந்திருந்த கோலம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவற்றின் கிளைகளில் அங்கங்கே வெண்ணிறப் பூக்கள் பூத்துத் தொங்குவதுபோல கொக்குகள் அமர்ந்திருந்தன. இன்னொரு கூட்டம் கழுத்தை முன்னோக்கி நீட்டியபடி இறக்கையை விரித்து வானத்தில் வட்டமிட்டது.

தாத்தா அவனுக்கு அந்தக் கொக்குக்கூட்டத்தைக் காட்டினார். சிறுவன் அதைப் பார்த்துவிட்டு கைதட்டிக் குதித்தான்.

“தாத்தா, ஒய்ட் அண்ட் ஒய்ட் யூனிஃபார்ம்ல ஸ்கூல் பிள்ளைங்க ஓடி விளையாடற மாதிரி இருக்குது.”

கொக்குவட்டத்தில் பதிந்த கண்களை அவனால் விலக்கவே முடியவில்லை. பரவசத்தோடு “வெள்ளைத் தாள கட்டுகட்டா கிழிச்சி விசிறினா பறந்து போவுமே, அது மாதிரி இருக்குது” என்றான். உடனே அடுத்து “பட்டம் விடற போட்டியில எல்லாப் பட்டங்களும் வெள்ளையாவே பறந்தா எப்படி இருக்கும், அப்படி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவனுக்கு அதைப்பற்றி சொல்லி மாளவில்லை. மீண்டும் “முதுவுல வெள்ளையா துணிமூட்டைய தூக்கிவச்சிகினு வெளியூருக்கு போற கூட்டம் மாதிரி இருக்குது” என்றான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டு “ஆமா ஆமா” என்று தாத்தாவும் தலையசைத்தார்.

”இவ்ளோ கொக்குங்களும் இந்த மரத்துலயே இருக்குமா தாத்தா?”

“ஆமா”

“எல்லாமே இங்க கூடு கட்டியிருக்குமா?”

“ஆமா”

“கூட்டுல முட்டை போட்டு வச்சிருக்குமா?”

“ஆமா”

“கொக்கு மீனத்தான சாப்புடும்? எல்லா கொக்குங்களுக்கும் இந்த கொளத்துல மீன் இருக்குமா?”

“மீன மட்டும்தான் சாப்புடும்னு சொல்லமுடியாது. சின்னச்சின்ன பூச்சிகளயும் புழுக்களயும் கூட புடிச்சி சாப்புடும்.”

“கொக்குகளுக்கு கால்கள் ஏன் ஸ்கேல் மாதிரி நீளமா இருக்குது?”

“அதுவா, அது கொளத்தோரமா ஏரிகரையோரமா தண்ணியில, சேத்துல எல்லாம் நடக்கணுமில்லையா, அப்ப அதனுடைய கால் குட்டையா இருந்தா மாட்டிக்கும். நீளமா இருந்தாதான் நடக்கறதுக்கும் மீனயும் பூச்சியயும் தேடி கொத்தி தின்னறதுக்கும் வசதியா இருக்கும்.”

”குட்டி கொக்கு கூட மீன கொத்தி தின்னுமா தாத்தா?”

”குட்டிகளுக்கு அம்மா கொக்கே எடுத்தும் போயி ஊட்டிவிடும்”

“குருவி மாதிரியா?”

“ஆமா”

“நீங்க குட்டி கொக்குகள பாத்திருக்கியா தாத்தா?”

“ம்.”

“எப்ப?”

“உன்ன மாதிரி சின்ன பையனா இருந்த சமயத்துல”

அவன் ஒருகணம் சந்தேகம் படிந்த பார்வையோடு அவரை நோக்கினான்.

“நீங்க அப்ப எங்க இருந்திங்க?”

“நான் எங்க கிராமத்துல மூனாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு பெரிய ஏரி உண்டு. அங்க நெறய கொக்குகள்லாம் வரும். நாங்க சின்ன பிள்ளைகள்லாம் சேர்ந்து ஏரிக்கரையிலதான் விளையாடுவம். அந்த சமயத்துல பாத்திருக்கேன்.”

“ஐ. நல்ல கதைமாதிரி இருக்குது. சொல்லுங்க தாத்தா. குட்டி கொக்குகள்லாம் அப்ப அங்க வருமா?”

கொக்குக்கூட்டத்தின் மீது பதிந்திருந்த பார்வையை விலக்கி தாத்தாவின் கையைப் பற்றி கெஞ்சினான் அவன். தாத்தா புன்னகைத்தபடி “சொல்றேன். சொல்றேன். குதிக்காம ரோட்ட பாத்து நடந்துவா” என்றார். சிறுவன் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

“நாங்க பத்து பன்னெண்டு பேரு ஒரே வயசுக்காரங்களா இருந்தோம். எல்லாரும் ஒரே செட். ஒன்னாதான் பள்ளிக்கூடம் போவோம். ஒன்னாதான் விளையாடுவோம். ஒன்னாதான் ஏரியில குளிப்போம். ஒருநாள் கரையோரமா நாங்க குளிச்சிட்டிருந்த நேரத்துலதான் கொக்குகள் கூட்டமா வந்தத பாத்தம். வெள்ளைவெளேர்னு ராக்கெட் மாதிரி சுத்தி சுத்தி வட்டம் போட்டுதுங்க. மொதல்ல பெரிய வட்டம். அப்பறமா சின்ன வட்டம். மறுபடியும் பெரிய வட்டம். நாங்க எல்லாருமே கரையில வந்து நின்னுகிட்டு கைய தட்டி ஓன்னு சத்தம் போட்டம்.”

“அம்பது கொக்கு இருக்குமா?”

“நூறு கூட இருக்கும். அப்படியே ஏரோப்ளேன் எறங்கறமாதிரி ஒன்னொன்னும் சைங்னு கீழ தாழ்ந்து வந்து பாறைகள் மேல வந்து ஒக்காந்துதுங்க.”

“அதுல குட்டி கொக்குங்க இருந்ததா?”

”ம். ரெண்டு குட்டி கொக்குங்க”

“அதுங்களும் பறக்கறத பாத்தீங்களா?”

“ம். பக்கத்துல போய் பாக்கலாம்னு நாங்க அதுங்கிட்ட சத்தம் போட்டுகிட்டே ஓடினோம். கொக்குகள் எங்கள பாத்துட்டு பயத்துல எழுந்து பறந்து போய்டுச்சிங்க.”

“ஐயையோ, அப்பறம்?”

“ரொம்ப தூரம்லாம் போவலை. பக்கத்துலதான் ஒரு வயல் இருந்தது. கம்பு, தினை, எள்ளுலாம் வெளஞ்ச வயல். எல்லா கொக்குகளும் அங்க போய் எறங்கிடுச்சிங்க. நாங்களும் விடாம அதும் பின்னாலயே ஓடினோம். திடீர்னு ஒரு கொக்கு கூட கண்ணுக்கு தெரியவே இல்ல. திடீர்னு எல்லாமே மறஞ்சிட்டுதுங்க. நாங்க திகைச்சிபோய் அங்கயே நின்னு திருதிருனு முழிச்சிட்டிருந்தம். திடீர்னு அம்புவிட்ட மாதிரி எல்லா கொக்குகளும் வயலுக்குள்ளேர்ந்து மேல பறந்துபோச்சிங்க. நாங்க உடனே ஓன்னு சத்தம் போட்டோம். ரெண்டு மூனு வட்டம் மேலயே அடிச்சிட்டு மறுபடியும் எல்லா கொக்குகளும் கீழ எறங்கிச்சிங்க. கீழ எறங்கனதுமே கண்ணுக்குத் தெரியாம மறஞ்சிடும். மறுபடியும் சத்தம் போட்டா படபடன்னு றெக்கைய அடிச்சிகிட்டு பறந்து போவும்.”

“ஐ, நல்லா இருக்குதே இந்த விளையாட்டு.”

“கிட்ட போய் பாக்கணும்ங்கற ஆசையில நாங்க எல்லாருமே சத்தமில்லாம அடிமேல அடிவச்சி வயலுக்குள்ள தலைய தாழ்த்திகிட்டு போனோம். ஒரு கட்டத்துல கொக்கு உக்காந்திருக்கறதுலாம் நல்லா தெரிஞ்சிது. ஒரு அம்மா கொக்குகிட்ட ரெண்டு குட்டி கொக்கு. ரெண்டும் அம்மா கொக்கு கால சுத்திசுத்தி வந்திச்சிங்க. பாக்கறதுக்கு கோழி குஞ்சுங்க சுத்தி வருமே, அந்த மாதிரிதான் இருந்திச்சி.”

“ரொம்ப பக்கத்துல போயிட்டிங்களா?”

“ரொம்ப பக்கத்துல போனா பயந்து பறந்துடுமில்லயா? அதனால் கொஞ்சம் மறைவா தள்ளி உக்காந்துகினு அதுங்களயே பாத்து ரசிச்சிகிட்டு உக்காந்துட்டம். அந்த நேரம் பாத்து எனக்குப் பின்னால நின்னுட்டிருந்த ஒரு பையன் சட்டுனு ஒரு கல்ல எடுத்து ஒரு குட்டி கொக்க குறி பாத்து அடிச்சிட்டான்.”

“ஐயையோ, அப்பறம்?”

“குட்டிக்கு தலையில சரியான அடி. அப்படியே கீழ சுருண்டு உழுந்துட்டுது. உடனே எல்லா கொக்குங்கள்ளாம் பட்டுனு எழுந்து சத்தம் போட்டுகினே பறந்துடுச்சிங்க. அம்மா கொக்கும் இன்னொரு குட்டி கொக்கும் கூட பறந்துட்டுதுங்க. கீழ உழுந்த குட்டி கொக்கு பறந்து வரும்ன்னு அதுங்க ரொம்ப நேரம் சுத்திசுத்தி வந்ததுங்க. ஆனா அது எழுந்திருக்கவே இல்ல. இனிமே வராதுன்னு தெரிஞ்சதும் அதுங்க ரொம்ப தூரம் பறந்து போய்ட்டுதுங்க. நாங்க எல்லாரும் குட்டி கொக்கு கிட்ட ஓடிபோய் தூக்கி நிக்க வச்சம். தலை வளைஞ்சி கீழ சாஞ்சிட்டுது. எனக்கு கைகால்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது. குட்டி கொக்க மடியில போட்டு தட்டி கொடுத்து பார்த்தேன். தடவி கொடுத்து பார்த்தேன். துணிய தண்ணியில நனச்சி எடுத்தாந்து மூஞ்சியில தெளிச்சிகூட பார்த்தேன். மூச்சுபேச்சு இல்லாமயே கெடந்தது அது. ஓன்னு அழுதுட்டேன் நான்.”

“செத்துட்டுதா? ஐயோ பாவம்.”

“அன்னைலேர்ந்து எந்த பறவையா இருந்தாலும் சரி, தள்ளி நின்னு பாக்கறதோடு நிறுத்திக்கணும்ன்னு முடிவு செஞ்சிட்டேன். அதனுடைய உலகத்துக்குள்ள நாம் போகக்கூடாது.”

“ஏன் அந்த ஃப்ரண்ட் கல்லால அடிச்சாரு?”

“வேணும்ன்னு அடிக்கல. ஏதோ வேகத்துல விளையாட்டா அடிச்சிட்டான்.”

சிறுவனின் கவனம் மறுபடியும் கொக்குகள் மீது பதிந்தது. அவை வட்டமிட்டு பறப்பதைப் பார்த்தபோது அவன் தன்னையறியாமலேயே கைகளை இறகுகள்போல விரித்தான்.

“நமக்கும் பறக்கத் தெரிந்தா ரொம்ப நல்லா இருக்கும், இல்ல தாத்தா?”

“மனிதர்களும் ஒரு காலத்துல பறவையா பறந்து திரிஞ்சவங்கதான். இப்ப மாறிட்டாங்க”

“உண்மையாவா? குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு எங்க மிஸ் சொன்னாங்க.”

“அதுக்கு முன்னால பறவையா இருந்து, குரங்கா மாறி, அப்பறமா மனிதனா மாறிட்டான்.”

“அது ஏன் அப்படி? பறவையா இருக்க மனிதனுக்கு புடிக்கலையா?”

“இந்த கைகள் இருக்குதே, அதுதான் மொதல்ல றெக்கயா இருந்தது. உழைச்சி வேலை செய்யணும்ங்கறதுக்காக றெக்கை கையா மாறிட்டுது. உழைப்பால அவன் பணம் சேத்தான். நிலம் வாங்கனான். ஊடு கட்டனான். வேலைக்கு போயி பெரிய ஆளாய்ட்டான். பறவைகள் அப்படி இல்லையே. அதுங்களுக்கு கொத்தி தின்ன என்ன கெடைக்குதோ, அதுவே போதும். அதனால அது இன்னும் பறந்துகிட்டே இருக்குது.”

”குட்டி கொக்குகள்லாம் பறக்கறதுக்கு எப்படி கத்துக்கும் தாத்தா?”

“அம்மா கொக்கு சொல்லிக்கொடுக்கும்.”

“அதான் எப்படி சொல்லிக்கொடுக்கும்ன்னு கேக்கறேன்.”

“றெக்க முளைக்கிற வரைக்கும் குட்டி கொக்குக்கு அம்மா கொக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துகிட்டே இருக்கும். அது வளரவளர கொஞ்சம்கொஞ்சமா றெக்க வந்துடும். பசியும் அதிகமாயிடும். அம்மா கொக்கு கொண்டுவந்து கொடுக்கிற சாப்பாடு பத்தாது. அதுவா தேடி சாப்படவேண்டிய நிலைமை உண்டாய்டும். அப்ப அம்மா கொக்கு குட்டி கொக்குக்கு முன்னால றெக்கய அடிச்சி அடிச்சி காட்டும். பறந்து வா பறந்து வான்னு சொல்லும். மொதல்ல குட்டிக்கு உடம்பு நடுங்கும். மெதுவா றெக்கய விரிச்சி அடிச்சி காத்துல எம்பிஎம்பித் தாவும். ரெண்டு மூனு தரம் உழும். எழுந்திருக்கும். அப்பறம் தேடி போனாதான் சாப்பாடுன்னு புரிஞ்சிடும். சட்டுனு ஒரு நிமிஷத்துல காத்து மேல அதுக்கு ஒரு புடிமானம் வந்துடும். வானத்துல பறக்கற ருசி எப்படிப்பட்டதுன்னு அதும் மூளையில பதிஞ்சிடும். அதுக்கப்புறம் அதனால றெக்கையை மடிக்கமுடியாது.”

தாத்தா சொல்லிமுடிக்கும் வரை அவனும் ஒரு குட்டி கொக்குபோல கைகளை இறக்கைபோல மடித்தும் விரித்தும் பறக்கும் கனவுடன் நடந்துவந்தான்.

”இந்த கொக்குகளுக்கெல்லாம் இங்க மரத்துல கூடு இருக்குமா தாத்தா?” என்று உடனே அவன் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டான்.

“நிச்சயமா இருக்கும்.”

“எங்க இருக்குது தாத்தா, ஒன்னு கூட எனக்குத் தெரியலயே.”

“இரு காட்டறேன்” என்றபடி தாத்தா நின்றுவிட்டு அண்ணாந்து மரங்களில் கிளைகிளையாகத் தேடினார். சிறுவனும் கண்போன போக்கில் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி இருந்தான்.

அதற்குள் தாத்தா ஒரு கூட்டின் இருப்பிடத்தைக் கண்டுவிட்டிருந்தார். உற்சாகத்தோடு சிறுவனுக்கு அருகில் குனிந்து விரலை நீட்டி கூட்டைக் காட்டினார். அவன் கண்கள் மலர்ந்தன. “ஒரு பேஸ்கெட் மாதிரி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவன் கன்னங்களில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் அவர்.

“அது சரி தாத்தா, அது கொக்கு கூடுதான்னு எப்படி உறுதியா சொல்லமுடியும்? காக்கா கூட மரத்துலதான கூடு கட்டுது?” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினான். அவர் அவன் கன்னத்தில் மீண்டும் தட்டிக்கொடுத்தார்.

“நீ சொன்ன இல்ல, கூடு பேஸ்கெட் மாதிரி இருக்குதுன்னு. காக்கா கூடு சின்ன பேஸ்கெட் மாதிரி இருக்கும். கொக்கு கூடு பெரிய பேஸ்கெட் மாதிரி இருக்கும். அதான் வித்தியாசம்.”

”சரி சரி” என்று தலையசைத்தான் சிறுவன். குனிந்து துள்ளலோடு நடக்கத் தொடங்கியதுமே ”இப்ப கொக்கு கூட்டுல முட்டை இருக்குமா தாத்தா?” என்று கேள்வியைத் தொடங்கினான். “தெரியலயே ராஜா” என்று தாத்தா புன்னகையோடு உதட்டைப் பிதுக்கினார்.

அதற்குள் நாங்கள் வட்டப்பாதையை முழுமை செய்திருந்தோம். மீண்டும் அந்த ஊதாப்பூக்கள் பூத்திருக்கும் வேலி. சிமென்ட் பெஞ்ச். அந்த எருமை பொறுமையாக இன்னும் மேய்ந்துகொண்டிருந்தது.

“தாத்தா, நம்ம ஜென்டில்மேன் இன்னும் அங்கயே நின்னுட்டிருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சுட்டிக் காட்டினான் சிறுவன். ”அட, ஆமாம். நின்ன எடத்துலயே நிதானமா புல் சாப்படறாரு” என்றார் தாத்தா.

“ஒரே ஒரு வித்தியாசம் தாத்தா. அப்ப அதும் முதுகு மேல காக்கா உக்காந்திட்டிருந்தது. இப்ப ஒரு கொக்கு வந்து உக்காந்திருக்குது”

இருவரும் அதை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டினார்கள்.

“நாம செல் எடுத்தாந்திருந்தா இப்ப ஒரு போட்டோ எடுத்திருக்கலாம். என் ஃப்ரண்ட்ஸ்ங்களுக்குலாம் வாட்ஸப்ல அனுப்ப வசதியா இருந்திருக்கும்.”

“அடுத்த சண்டே வரும்போது எடுத்தாரலாம். எருமையும் கொக்கும் இங்கதான இருக்கும். அப்ப எடுத்துக்கலாம்”

“தாத்தா, ஒரு விஷயம் கவனிச்சிங்களா? கொக்குகூட எருமை முதுவுல என்னமோ அலகால கொத்திகிட்டே இருக்குது. ஆனா காக்கா கொத்தன சமயத்துல மட்டும் வால சொழட்டி சொழட்டி வெரட்டியடிச்சிதே அந்த எருமை. இப்ப ஒன்னுமே செய்யாம அமைதியா இருக்குது பாருங்க.”

“ரெண்டு கொத்தலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்குது.” என்று சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் தாத்தா.

“அப்படியா? என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலயே, என்ன வித்தியாசம்?”

“காக்கா எருமையுடைய புண்ணுல குத்திக்குத்தி ரணமாக்குது. புண்ணுல தெரியற சதய கொத்தி கொத்தி அது சாப்புடுது. அந்த வேதனையில காக்கைய விரட்டுது எருமை. ஆனா கொக்கு அப்படி இல்ல, எருமை தோல்ல ஒட்டியிருக்கும் உண்ணிகளயும் பூச்சிகளயும் கொத்தி சாப்புடுது. அது எருமையுடைய வேதனைய குறைக்குது. சுத்தப்படுத்துது. அதனால அமைதியா இருக்குது.”

“ஓ, அப்ப எருமையும் ஜென்டில்மேன். கொக்கும் ஜென்டில்மேன்.”

“ஆமா” என்று தலையசைத்தார் தாத்தா. “ஆனா இது சாதாரண கொக்கு இல்ல, மாடுமேய்ச்சான் கொக்கு.”

ஒரு புதுமையான பெயரைக் கேட்டதுபோல விழிவிரிய பெரியவரைப் பார்த்தபடி நின்றுவிட்டான் சிறுவன். “ரொம்ப தூரத்துலேர்ந்து எருமை முதுகுல கொக்க பாக்கறவங்களுக்கு கொக்குதான் மாடு மேய்ச்சிட்டு போறமாதிரி இருக்கும். அதனால அந்தப் பேரு” என்றார் தாத்தா.

“ரொம்ப பொருத்தமான பேர் தாத்தா.”

“பேசிட்டே நடந்ததுல ஒரு ரவுண்ட் முடிஞ்சதே தெரியல. இப்ப என்ன, வீட்டுக்குப் போவலாமா, ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாமா?”

கொஞ்சம் கூட காத்திருக்காமல் “ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்று பதில் சொன்னான் சிறுவன். ”இன்னைக்கு நாலு, அஞ்சி ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்றபடி கையிலிருந்த விரல்களையெல்லாம் ஒவ்வொன்றாக பிரித்து விடுவித்தான்.

அவர்களுடைய முடிவை அறிந்து, அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ஒரே கணத்தில் என் மனம் மாறிவிட்டது. சிறுவனுடைய ஒவ்வொரு சொல்லும் எனக்குள் புகுந்து என்னென்னமோ செய்துவிட்டது. அவன் கன்னத்தைத் தொட்டு ஒருமுறை தட்டிக் கிள்ளவேண்டும் போல இருந்தது. மெதுவாக “எக்ஸ்க்யூஸ் மி” என்று அழைத்து அவர்களை நிறுத்தினேன். அந்த அழைப்பு தமக்கானதுதானா என்பதுபோல அவர்கள் இருவரும் சந்தேகத்தோடும் ஆச்சரியத்தோடும் திரும்பி என்னைப் பார்த்தார்கள்.

துரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை

தொடர்ந்து இணையத்திலும், கிண்டிலிலும், படித்துக்கொண்டிருந்ததன் சலிப்பு, மறைய. ஒரு அச்சுப்பிரதி படிக்க தோன்றியது. அவ்வகையில் சமீபத்தில் படித்த புத்தகம் பா .கண்மணி அவர்கள் எழுதிய ”இடபம் ” நாவல்.

இந்த நாவல் பெங்களூரு பின்னணியில் நடைபெறும் ஒரு பெண்ணின், வாழ்வும் ,சலிப்பும், தற்காலிக விடுதலைகளும் என ஒரு எளிய கதை. எனினும் சொல்லப்பட்ட களம், பொதுவாக யாரும் தொடாத, பங்குச்சந்தை எனும் கடலில் நீந்தும் அன்றாடம் காய்ச்சிகளுக்கான அல்லாடல்.

ஒரு சமநிலையான மனிதனுக்கு, ஒரு நாளில் பன்னிரண்டாயிரம் முறையும், சற்று வாழ்வியல் பிரச்சனைகள் சூழ்ந்த மனிதனுக்கு, நாற்பத்தி இரண்டாயிரம், முறையும் எண்ணங்கள் வருவதாக நவீன உளவியல் சொல்கிறது . யோசிக்கையில் , இத்தனை ஆயிரம் எண்ணங்கள் கொண்ட மனம் , நிதானமாக ,மெதுவாக என எதையாவது ”உணர்ந்து” இருக்குமா? என்பதே சந்தேகம் தான் . மேலும் இந்த நூற்றாண்டின் மனித மனம் என்பது ”துரிதம் ” [ SPEED /QUICK/FAST ] என்கிற கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது.

எண்பதுகளில் ஒருவர், மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார் எனில் , அதை எழுதும் பொழுதே , அதற்கான பதில் கிடைக்க ,இருபது நாள் ஆகும் என்கிற பிரக்ஞயை, கொண்டிருந்தார் .எனவே அடுத்த நாள் அவருடைய மனம் எந்த பரபரப்பையும் அடைவதில்லை. ஆனால் இன்று, அனுப்பிய குறுஞ்செய்தி மறுமுனையில் , திறக்கப்பட்டு விட்டது. என்கிற ”டபுள் டிக் ” சமிக்கை வந்தவுடனேயே , மனம் பதில் தேடி பரபரக்கிறது.

இந்த நாவலின் மனிதர்கள் அனைவரும் இந்த ” துரிதம் ” எனும் சரட்டில் கட்டப்பட்டு கதை முழுவதும் அலைகிறார்கள் . அதில் ஒருத்தி தான் நாயகி . உத்தேசமான நாற்பது வயதை நெருங்கிய முதிர்கன்னி. தனியாக வீடெடுத்து தங்கி, பொங்கி , தின்று வாழும், முற்போக்கான , அல்லது சுதந்திரமான என்கிற ” தான்”எனும் உலகில் வாழ்பவள் .முற்போக்கு , சுயசிந்தனை என தனது வாழ்வை நினைத்தது போல அமைத்துக்கொண்டதால், மகிழ்ச்சிக்கு பதிலாக , கசப்பை, புகாரை , குறைகளை மட்டுமே காணும் பூதக்கண்ணாடி யை எப்போதும் மாட்டிக்கொண்டு திரிபவள். எனவே பண்டிகைகள் கசக்கிறது. குழந்தைகள் எரிச்சலை தருகிறார்கள் , அடுத்தவர் கொண்டாட்டம் ”குறையுள்ளது” என குத்திக்காட்ட முடிகிறது. எனினும் இந்த ஒட்டுமொத்த தீமைகளால் ஆன உலகை ”சுய சம்பாத்தியம்” எனும் பணத்தால் வென்று மேலேறிட முடியும் என்கிற மாபெரும் நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் அவளால் தள்ள முடிகிறது.
அப்படி நாட்களை தள்ளிச்செல்வது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்பதால் , சற்று குடியும் அதற்கான நியாயங்களை , சிலப்பல உடல் சார்ந்த மீறல்களை, பணத்தை கையாடல் செய்வது வரை அனைத்தையும் அவ்வப்போது நியாயம் கற்பித்துக்கொண்டே செல்ல முடிகிறது .
‘ஒழுக்கமற்ற வாழ்வில் ஒருபோதும் மனநிறைவும் நிம்மதியும் சாத்தியமில்லை”- என்பது உலக இலக்கிய ஜாம்பவானின் வரிகள். எத்தனை உன்னதமானவை. என்பதை இந்த நாயகியின் அல்லது இன்றைய சிறிய அளவிலேனும் ஒழுக்கமற்ற ஒருவருடைய வாழ்வை, அவர்கள் அடிக்கடி சென்று சேரும் இருளை, காணும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

பங்குச்சந்தை பற்றிய அவதானிப்புகள் , வர்ணனைகள் , உள்ளூற நடக்கும் வர்த்தக விளையாட்டுகள் என அனைத்தும் , ஒருவரை இந்த துறை நோக்கி இலகுவாக இழுக்கும், மிகக்கச்சிதமானவை. பங்குச்சந்தையின் சாதக பாதகங்கள் மிகவிரிவாக, அதே நேரத்தில் அடிப்படைகள் ஒரு சாமானியருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருப்பது,
பா .கண்மணியின் பங்கு சந்தை சார்ந்த அறிவுப்பரப்புக்கு ஒரு சான்று. அல்லது அதற்கான மெனக்கெடல் நாவல் முழுவதும் தெரிகிறது . மிக அளவாக எழுதியிருப்பது தான் அதன் தனித்தன்மையும். ”புட் ஆப்ஷன்” – ”கால் ஆப்ஷன்” போன்ற பங்கு வர்த்தக செயல்பாடுகள் குறித்து இன்னும் சிலபக்கங்கள் கூடுதலாக எழுதி இருந்தால் கூட, இது ஒரு ”அள்ள அள்ள பணம் ” எனும் புத்தகம் போல மாறியிருக்கும்.

கதை நாயகி ”பணம் ” எனும் ஒற்றை புள்ளி நோக்கி ஒவ்வொரு நாளும் பாய்ந்தும், மாய்ந்தும், ஓடியும் , சாடியும், திரியும் ஒரு யட்சி. ஒருநாள் அவள் அதை வென்று விடுகிறாள். அன்றுமுதல் அவள் வேறு மனுஷி, புது வீடு ,புது வாழ்வு என அனைத்தையும், அடைந்துவிட்ட திருப்தியில், அடுத்த நாள் முதல் அவள் நடவடிக்கையில் ரசனையில் ,கண்டடைவது என்னவோ மேலும் குற்றமும் , குறையும் , எரிச்சலும், சலிப்பும் உள்ள அன்றாடத்தைத்தான்.
நமது ஆழ்மனதின் மீது மரபிற்கு எவ்வளவு பெரிய ஆளுமை உள்ளது என்பதற்கு. பெரும் செல்வம் , பணம் போன்ற விஷயங்களை சித்தர் பாடல்கள் முதல் மரபு இலக்கியம் வரை எப்படி விலக்கி வைக்கின்றன என்பதற்கு குபேரனின் உருவம் அவன் பயம் என பல்வேறு படிமங்களை சொல்லலாம் .
நாயகியின்” கனவு காட்சிகள்” மூலம் மிகச்சரியாக இந்த இடத்தை சென்று தொட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பு , நாயகி நாள்முழுவதும் லட்சங்களில் , கோடிகளில் பணமதிப்பை , கைபேசி திரையிலும் , கணினி திரையிலும் , வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியிலும், பார்த்தவண்ணம் இருக்கிறாள் . அவளுக்கு ஒருபோதும் பணமோ , செல்வமோ கனவில் வருவதில்லை , இருண்ட குகையும் , சுருள் சுருளென இறங்கிச்செல்லும் கிணறும் , நாகமும் என,
இருள் கவிழும் கனவுகள். அதை வெல்லவே மேலும் அவளுக்கு ”பக்கார்டியும்” , குறுகிய கால உறவும் தேவையாய் இருக்கிறது. இதை வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் கதை என்று எடுத்துக்கொள்ளலாம் . அந்த நாணயத்தின் பின் பக்கமோ, மொத்த வாழ்வின் மீதும் கொண்ட சலிப்பு,ஒவ்வாமை , வெறுப்பு என்கிற களிம்பு பூசிய செல்லாக்காசு.

எழுபதுகளின் பின்பகுதியில் , எண்பதுகளிலும் பிறந்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று,வேறு வாழ்க்கை அமைத்துக்கொண்டு , அல்லது திக்கி திணறி வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு மாபெரும் திரளுக்கு முன்னால், இந்த இரண்டில் எந்த திசையிலும் செல்லாமல் நின்று கொண்டிருக்கிறாள் நாயகி. ”திருமணமே சுத்த பொய்” , ”கொடுமையான வாழ்க்கை” , என ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லும் நாயகிக்க்கும். அல்லது புரட்சிகர சிந்தனை கொண்டோருக்கும் , இரண்டு வாழ்விலும் இல்லாமல் முட்டுச்சந்தில் நிற்போருக்கும் தெரியவில்லை , மனித திரளுக்கு, ”திருமணம்” தவிர வேறு நல்ல திட்டமும், சாத்தியமும் இப்போதைக்கு இல்லை. என. இருப்பதாக நம்பி அலைந்து திரிபவள் இந்த நாயகி.
பங்கு சந்தையில் ”இடபம்” {bull market} என்பது ஏறுமுகம் என்றும் ”கரடி”{ bear market} எனும் உருவகம் இறங்கு முகம் என்பதும் நாம் அறிந்தது.

இந்த நாவல், வாழ்வில் கரடியாக, ஒவ்வொரு இழப்பாக சந்தித்துக்கொண்டிருக்கும் நாயகியின் ஒரேயொரு ”இடபம்” எனும் ஏறுமுகம் குறித்து சொல்லும் இன்றைய மனிதரின் கதை . வெவ்வேறு இழப்புகளுக்கு மத்தியில் ஒரே ஒரு காளைத்துள்ளல்.

இடபம்
எதிர் வெளியீடு – http://www.ethirveliyedu.in
விலை 220ரூபாய்

டால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை

நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லிவைத்தேன். ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.

அவருடைய சுயசரிதை தமிழில் வெளிவந்திருக்கிறது என்னும் உறுதியான தகவலே என்னுடைய தேடலின் வேகத்தை இன்னும் அதிகமாக்கியது. மற்றொரு நண்பர் வழியாக அந்தச் சுயசரிதையின் பெயர் ‘அரசியல் நினைவு அலைகள்’ என்பதும் அது அறுபதுகளில் தினமணி சுடரில் தொடராக வெளிவந்தது என்பதும் தெரியவந்தது. இன்னொரு நண்பர் அந்தப் புத்தகத்தை கோவையைச் சேர்ந்த மெர்க்குரி புத்தகநிலையம் வெளியிட்டதாக தன் நினைவிலிருந்து சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் புத்தகத்தை நெருங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. கடைசியில் சர்வோதயம் பேசுகிறது இதழின் ஆசிரியரான திரு.நடராஜன் காந்திய அருங்காட்சியக நூலகத்திலிருந்து அப்புத்தகத்தை எனக்காகத் தேடி எடுத்து அனுப்பிவைத்தார்.

ஒரே அமர்வில் அந்தச் சுயசரிதையைப் படித்துமுடித்தேன். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்த பிறகே ஆக்கூர் அனந்தாச்சாரி அந்தத் தொடரை எழுதியிருக்கிறார். உயிர் பிரிவதற்கு முன்னால் தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதிமுடித்துவிட வேண்டும் என்று பதற்றமுடன் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அவர் அஞ்சியபடியே விதி அவரை மரணத்தில் தள்ளிவிட்டது. தொடரில் எழுதிய பகுதிகள் நூல்வடிவம் பெறும் முன்பேயே அவர் மறைந்துவிட்டார்.

அந்த நூலின் வழியாக ஆக்கூர் அனந்தாச்சாரியார் மேலும் சில நூல்களை எழுதியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக டால்ஸ்டாய் சரிதம். அத்தகவல் எனக்கு ஆர்வமூட்டியது. மீண்டும் திரு.நடராஜன் அவர்களைத் தொடர்புகொண்டு அப்புத்தகத்தைப் பெற்று படித்துமுடித்தேன். திரு.வி.க முன்னுரையோடு அப்புத்தகம் 1934இல் வெளிவந்தது. டால்ஸ்டாய் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் இது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் கூட அந்தப் புத்தகம் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

வழக்கமாக பிறப்பு முதல் இறப்புவரை வரிசையாக வாழ்க்கை நிகழ்ச்சிகளை அடுக்கிச் சொல்லும் விதத்தில் டால்ஸ்டாய் வாழ்க்கையை ஆக்கூரார் எழுதவில்லை. மாறாக, டால்ஸ்டாய் இந்த உலகத்துக்கு ஏன் முக்கியமானவர் என்னும் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலாக தான் தெரிந்துவைத்திருக்கும் தகவல்களைத் தொகுத்து இந்த 92 பக்க நூலை அவர் எழுதியிருக்கிறார். அதுவே இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. காந்தியடிகளை ஈர்த்த மிகமுக்கியமான உலக ஆளுமை டால்ஸ்டாய். காந்திய நினைவுகளுடன் டால்ஸ்டாயை அணுகும்போது ஆக்கூரார் சில புதிய வெளிச்சங்களைக் கண்டறிகிறார். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, தகவல்களைத் தேடித் தொகுத்துவைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஆக்கூரார்.

இரண்டு வயதில் தாயையும் ஆறு வயதில் தந்தையையும் இழந்து அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தவர் டால்ஸ்டாய். கல்லூரியில் சட்டப்படிப்பைப் படித்துவிட்டு தேர்வெழுதாமலேயே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ராணுவத்தில் சேர்ந்தாலும், யுத்தகளத்தில் நிகழும் மரணங்களை நேரில் கண்டு மனம் சோர்ந்து, வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். நெப்போலியன் உருவாக்கிய போரினால் விளைந்த அழிவுகளையும் மரணங்களையும் பற்றி நேரடி அனுபவங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். அது ஒரே சமயத்தில் அவருக்கு பாராட்டுகளையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது.

அப்போது நாட்டில் நிலவி வந்த கல்விமுறையை டால்ஸ்டாய் வெறுத்தார். விளையாட்டுக்கும் படைப்பூக்கத்துக்கும் இடமில்லாத கல்விமுறையால் பயனில்லை என்று நீண்ட விளக்கங்களுடன் பல கட்டுரைகளை எழுதினார். பிறகு அவரே ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, அவரே ஆசிரியராகவும் இருந்து நடத்திக் காட்டினார். அந்தப் பள்ளியில் குழந்தைகள் புத்தகங்களையும் நோட்டுகளையும் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு நாளும் விளையாட்டுகளுடன்தான் பள்ளி தொடங்குகிறது. அதற்குப் பிறகு ஆசிரியரே எல்லோருக்கும் தேவையான புத்தகங்களோடு வகுப்பறைக்கு வந்து ஆளுக்கொன்றை எடுத்துக் கொடுப்பார். அப்புறம் பாடங்கள் கதையைப்போல சொல்லப்படும். விளையாட்டில் காட்டிய உற்சாகத்தைப் போலவே பிள்ளைகள் பாடத்திலும் உற்சாகத்தைச் செலுத்துவார்கள். தினமும் நான்கு பாடங்கள் நடக்கும். இறுதியாக புத்தகங்களையெல்லாம் ஆசிரியரே திரும்ப வாங்கிக்கொள்வார். மீண்டும் விளையாட்டு தொடங்கிவிடும். பிள்ளைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் கதைப்புத்தகங்களையும் டால்ஸ்டாயே எழுதினார். ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் வசித்த அவருடைய மாவட்டத்தில் பல இடையூறுகளுக்கிடையில் 21 பள்ளிகளை உருவாக்கி வெற்றிகரமான முறையில் நடத்திவந்தார் டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் பிள்ளைகளும் இதே பள்ளியில் படித்து, வளர்ந்தபின்பு இதே பள்ளியில் வேலை செய்தனர்.

ஒருமுறை டால்ஸ்டாய் வீட்டில் இல்லாத சமயத்தில் காவல்துறையினர் நுழைந்து சோதனையிட்டனர். கடப்பாரையினால் தரையை இடித்துத் தகர்த்தனர். பெட்டிப்பேழைகளை உடைத்தனர். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் கைப்பற்றிக் கிழித்து வீசினர். டால்ஸ்டாய் பற்றியும் அவருடைய பள்ளி பற்றியும் தவறான எண்ணத்தை பொதுமக்கள் மனத்தில் விதைக்கவேண்டும் என நினைத்து செயல்பட்டனர். இறுதியாக வீட்டிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றது காவல்துறை. வீட்டுக்குத் திரும்பிவந்த டால்ஸ்டாய் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து அரசருக்கு விரிவாக ஒரு கடிதமெழுதி, நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கப்போவதாக தெரிவித்தார். கடிதத்தைப் படித்த அரசர் உடனடியாக டால்ஸ்டாய்க்கு வருத்தம் தெரிவித்து பதில் எழுதி கவர்னர் வழியாக அனுப்பிவைத்தார். அந்தப் பதிலால் தற்காலிகமாக தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டார் டால்ஸ்டாய்.

அவர் மீது கொண்ட சினம் தணியாத காவல்துறை அவரை எப்படியாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து சிறையில் தள்ள தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது. ஒருநாள் டால்ஸ்டாய்க்குச் சொந்தமான பண்ணையைச் சேர்ந்த காளையொன்று ஒருவரை தன் கொம்பால் குத்திக் கொன்றுவிட்டது. டால்ஸ்டாயின் பராமரிப்புமுறை சரியில்லாததாலேயே இந்த மரணம் நிகழ்ந்தது என அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுத்தது காவல்துறை. ஏராளமான குறுக்கு விசாரணைகள். அவமதிப்புகள். நல்ல வேளையாக குற்றத்தை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

ஒரு மருத்துவரின் மகளான சோபியாவை 1862இல் டால்ஸ்டாய் மணந்துகொண்டார். அப்போது அவருக்கு 34 வயது. சோபியாவின் வயது 18. இருவருக்கும் பதின்மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிறுவயதிலேயே ஐந்து குழந்தைகள் மரணமடைந்துவிட, எட்டு பேர் மட்டுமே எஞ்சினர்.

ஒரு பிரபுவுக்குரிய வசதிகள் இருந்தாலும் டால்ஸ்டாய் எளிய வாழ்க்கையையே எப்போதும் விரும்பினார். அவர் மனம் எளிய உணவையும் எளிய உடைகளையும் மட்டுமே நாடியது. குடியானவர்களுடன் நெருங்கிப் பழகினார். பயணத்தின்போது மூன்றாவது வகுப்பிலேயே பயணம் செய்வது அவர் வழக்கம். தினமும் எட்டு மைல்கள் தொலைவு நடக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. இளமைக்காலத்தில் புலால் உண்பவராகவும் புகை பிடிப்பவராகவும் வேட்டையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருந்தாலும், பிற்காலத்தில் அப்பழக்கங்களை அவர் துறந்துவிட்டார். தொடக்கத்தில் தேவாலயத்துக்கே செல்வதில்லை என எடுத்த சபதத்தை விலக்கி தினமும் மாலை வேளையில் தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். உலகில் எவருமே தமக்கு பகைவர்கள் இருக்கக்கூடாது என அவர் மனம் விரும்பியது. ஆகவே, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு சண்டையிட்டு அன்றுமுதல் பேசாமல் இருந்த துர்கனேவ் என்னும் நண்பருக்கு கடிதம் எழுதி வரவழைத்து நட்பைப் புதுப்பித்துக்கொண்டார்.

ஒருநாள் அவருடைய பண்ணையில் ஒரு வேலைக்காரன் பொய் சொல்லி அவரிடம் அகப்பட்டுக்கொள்கிறான். பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் அவன் மீது சினம் கொள்கிறார். அவனுக்கு சாட்டையடி கொடுக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார். அவன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் மனம் மாறிவிடுகிறது. அவன் மீது இரக்கம் கொள்கிறார். உடனடியாக தண்டனையை நிறுத்துமாறு வேறொரு ஆளிடம் சொல்லி அனுப்புகிறார். ஆனால் அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. அதைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்துவிடும் டால்ஸ்டாய் அவனை வரவழைத்து அவனிடம் மன்னிப்பு கேட்கிறார். அவனுக்கு அரை பவுன் பரிசாக கொடுத்தனுப்புகிறார்.

தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் உயர்தட்டைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் ஒன்றாகத் திரட்டி பாடுபடத் தூண்டினார் டால்ஸ்டாய். அது நல்ல பலனைக் கொடுத்தது. எண்ணற்றோர் தத்தம் பகுதிகளில் தொழிலாளிகளுக்காக அல்லும்பகலும் உழைத்து அரசாங்கத்தின் சீற்றத்துக்கு ஆளாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிலர் நாடு கடத்தப்பட்டனர். சிலர் தூக்குதண்டனைக்கு ஆளானார்கள். அதன் பிறகே டால்ஸ்டாய் ஊட்டிய புத்துணர்ச்சி மக்களிடையில் தீயெனப் பரவியது. சீற்றத்தில் பொங்கியெழுந்த மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்குவதை அவர் விரும்பவில்லை. அவ்வழி தவறானது என்று வற்புறுத்தினார். அகிம்சை வழியில் சமதர்மக் கொள்கையைப் பரப்பவேண்டுமென அவர் விரும்பினார். கொல்லாமை, பிறர் மனை கயவாமை, ஆணையிடாமை, தீங்கு செய்யாமை, பகைவரிடம் வெறுப்பு கொள்ளாமை என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்க்கை நடத்தி வந்தார். 1880 வாக்கில் அவர் நாடறிந்த ஞானியாக உயர்ந்துவிட்டார்.

1881இல் பீட்டர்ஸ்பர்க்கில் ஜார் மன்னரின் தந்தையான இரண்டாவது அலெக்ஸாந்தரை யாரோ கொலை செய்துவிட்டனர். அது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யபட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும் டால்ஸ்டாய் ஜார் அரசருக்குக் கடிதமெழுதினார். கொலை செய்யும் வன்முறை வழியை தான் ஆதரிக்கவில்லை என்றும் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்டு அவர்கள் எண்ணிக்கையை குறைப்பதால் மட்டும் புரட்சியை அடக்கிவிடமுடியாது என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் டால்ஸ்டாய். ஆனால் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்ட பிறகே அக்கடிதத்துக்கு ஜார் மன்னர் பதில் எழுதினார்.

அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை டால்ஸ்டாய் முன்னெடுப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று அரசரிடம் கேட்டுக்கொண்டனர். அரசரோ டால்ஸ்டாயை எக்காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக் கூடாது என்றும் தேவையின்றி அவரைக் கைது செய்து அவரை பெரிய வீரராக உருமாற்றிவிடக்கூடாது என்றும் கறாரான குரலில் தெரிவித்தார்.

திடீரென நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். பட்டினியில் உயிர்துறந்தனர். உடனே ஏழைக்குடியானவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கும் பொருட்டு 246 உணவுக்கூடங்களை உருவாக்க டால்ஸ்டாய் ஏற்பாடு செய்தார். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருமே பஞ்ச நிவாரண வேலையில் ஈடுபட்டனர்.

1900 முதல் அடிக்கடி பொதுமக்கள் கைது செய்யப்படுவதும் காரணமின்றி தண்டிக்கப்படுவதும் நடைபெறத் தொடங்கியது. ‘இன்னும் அமைதியாக இருக்கவேண்டுமா?’ என்ற தலைப்பில் 1908இல் டால்ஸ்டாய் ஒரு விரிவான கட்டுரையை எழுதினார். அரசாங்கத்தின் கட்டளையை மீறி சில பத்திரிகைகள் இக்கட்டுரையை முழு அளவிலும் சில பத்திரிகைகள் அரைகுறையாகவும் வெளியிட்டன. பல பத்திரிகையாசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டிலுள்ள எந்த அமைப்பும் சங்கமும் பள்ளியும் நகரசபையும் டால்ஸ்டாயிடம் எவ்விதமான மரியாதையையும் காட்டக் கூடாது என்று அரசு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் டால்ஸ்டாய் மனம் தளராது தொடர்ச்சியாக அரசருக்கு சர்வாதிகாரத்தினாலும் கிறித்துவ வைதிகத்தாலும் நாட்டுக்கு ஒருபயனும் விளையாது என்பதை பலமுறை தம் கடிதங்கள் வழியாக தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

பாமர மக்கள் வாழுமிடத்தில் தாமும் வாழ விரும்பி, அத்தகைய இடம் எங்காகிலும் வாடகைக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் இறுதிக்காலத்தில் அலைந்தார். அது தொடர்பாக ரோஸ்டோலோன் என்னும் இடத்துக்குச் செல்ல 6.11.1910 அன்று ரயிலில் தன் மகளுடன் புறப்பட்டார். அப்போது அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. காய்ச்சல் காரணமாக உடல் அனலாகக் கொதித்தது. அவருடைய பெட்டியில் பயணம் செய்த ஒரு மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு, அவர் பயணத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று சொல்லி அடுத்து வந்த அஸ்டாபோவா என்னும் கிராமத்து நிலையத்தில் இறக்கிவிட்டார். ஸ்டேஷன் மாஸ்டர் உதவியுடன் மருத்துவர் வரவழைக்கப்பட்டார். டால்ஸ்டாயின் மகள் தன் தமையனுக்கு தந்தி அனுப்பினாள். அடுத்த நாள் காலையில் டால்ஸ்டாயின் மனைவியும் அவர் மகனும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாமலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

டால்ஸ்டாய் இறந்ததும் அவருடைய ஏராளமான சொத்தின் பெரும்பகுதி அவர் எழுதிவைத்த உயிலின்படி குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு வீடும் சில ஏக்கர் நிலங்களும் மட்டுமே எஞ்சின. ரஷ்யாவில் பொதுவுடைமைக் கிளர்ச்சி தொடங்கிய சமயத்தில் டால்ஸ்டாயின் வேலைக்காரர்கள் அவருடைய வீட்டையும் குடும்பத்தினரையும் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றிக் கொடுத்தனர். இன்று அவருடைய வீடு பொருட்காட்சியகமாக இருந்து வருகிறது. அவருடைய படிப்பறை அவர் விட்டுச்சென்ற நிலையிலேயே பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவருடைய புத்தக அடுக்கில் புத்தரின் வாழ்க்கை வரலாறும் காந்தியடிகள் பற்றி எழுதப்பட்ட ஒரு நூலும் இருக்கின்றன.

வைதிகக் கிறித்துவமதத்தின் விளைவுகளையும் தேவாலயத்தின் நடவடிக்கைகளையும் டால்ஸ்டாய் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விமர்சித்து கட்டுரைகள் எழுதிவந்தார். அதன் பொருட்டு, அவரைக் கொல்லப் போவதாக பல அச்சுறுத்துல் கடிதங்கள் வந்தபோது கூட டால்ஸ்டாய் தம் விமர்சனங்களை நிறுத்தவில்லை. இதனால் வெறுப்படைந்த தலைமை மதகுரு 22.02.1901 அன்று அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்கும் ஆணையைப் பிறப்பித்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் அவர் உலகத்தலைவர்கள் அனைவரோடும் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். இந்தியாவில் உள்ள சில முக்கிய சங்கங்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. சென்னை தாம்ஸன் அச்சுக்கூட்த்திலிருந்து வெளிவந்த ஆர்யா பத்திரிகைக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். அவர் எழுதிய ‘இந்தியனின் கடமை’ கட்டுரை துண்டுப்பிரசுரமாக அக்காலத்தில் வெளியிடப்பட்டு அக்காலத்தில் எண்ணற்றோரால் வாசிக்கப்பட்டது.

காந்தியடிகள் அப்போது தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். அப்போதே அவர் டால்ஸ்டாயின் செயல்பாடுகளை அறிந்துவைத்திருந்தார். கடிதங்கள் வழியாக இருவரும் உரையாடி கருத்துகளைப் பரிமாற்றிக்கொண்டனர். டால்ஸ்டாயின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் 1904இல் டர்பனுக்கு அருகில் பீனிக்ஸில் உருவாக்கிய ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர் சூட்டினார். டால்ஸ்டாய் இறக்கும் வரை காந்தியடிகள் அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போரின் புதுமையால் ஈர்க்கப்பட்டிருந்தார் டால்ஸ்டாய். உலக வரலாற்றிலேயே சிறந்ததொரு போர்முறை என சத்தியாகிரக வழிமுறையை அவர் மனம்திறந்து பாராட்டினார்.

ஆக்கூரார் எழுதியிருப்பது டால்ஸ்டாயின் சுயசரிதை மட்டுமல்ல. காந்தியப்பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மதிப்பிட்டு நமக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார் என்பதைக் கண்டு நிறுவும் ஒரு முயற்சி என்றே சொல்லவேண்டும். காந்தியடிகளின் மதிப்பில் உயர்ந்த ஒருவரை நம் மக்களுக்கு உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற அவருடைய வேட்கை வணக்கத்துக்குரியது. இன்றளவும் கூட டால்ஸ்டாயின் இலக்கியமுகம் மட்டுமே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுவரும் சூழலில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் முன்னேற்றம் சார்ந்த டால்ஸ்டாயின் போர்முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்கூர் அனந்தாச்சாரியாரின் முயற்சி போறுதலுக்குரியது.

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும்

சென்ற ஆகஸ்ட் மாத மத்தியில், சேர்த்து வைத்திருந்த சில குட்டி வேலைகளைச் செய்ய வீட்டிற்கு ப்ளம்பர் வந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்தது ஒரு வருடம் முன்னர். அழுக்கு உடையுடன் கொரோனா முகமூடிக்குள் அசைந்த அவரது தாடையை ஊகித்தவாறு, “பார்த்து ஒரு வருடமிருக்கும், இருந்தும் உங்கள் புன்னகை இன்னும் நினைவிருக்கிறது” என்ற சொல்ல நினைத்து, “அதே புன்னகை!“ என்று மட்டும் சொன்னேன்.

அவர் தாடையை நன்கு அசைத்தவாறே, ”ஆனால் அப்போது நாம் சந்தித்த உலகம் வேறு; அந்த உலகத்தில், யாரையாவது சந்திக்கும்போது கைகுலுக்கும் வழக்கமிருந்தது,” என்றார்.

ஆம், இரு உலகங்களுக்கு இடையில் கைகுலுக்க முடியாத அழுத்தமான கோடு இன்றிருக்கிறது.

கோட்டிற்கு இந்தப்பக்க உலகில் கட்டாயத்தின் பேரில் நிறைய வழக்கங்களை எதிர் கொள்ள வேண்டியாகிறது. அதே சமயம் நேர்மறை பழக்கங்களும் இல்லாமல் இல்லை.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, நான் வாழும் லண்டனிற்கு கிழக்கில் முப்பது மைல்கள் தள்ளி இருக்கும் இந்த நகரத்தில் வசிக்கும் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணங்கள் ஆரம்பித்திருக்கிறேன்.

உண்மையில் அவர்கள் கடந்த ஒரு வருடமாகவே குழுவாக ஒவ்வொரு சனிக்கிழமை காலைதோறும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்கள், நான் சமீபத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்.

நாங்கள் ஆங்காங்கே குழு குழுவாகச் சேர்ந்து கொண்டு நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரு பெரிய நீர் தேக்கத்தை (Hanningfield) ஒரு சுற்று வருவோம். தோராயமாக முப்பது மைல்கள். சில சமயங்களில் சில நண்பர்கள் இன்னொரு சுற்றும் சென்று வருவதுண்டு.

நான் வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி The Endeavour எனும் பப்பிற்கு வெளியே காத்திருக்கும் ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நகரத்தின் இன்னொரு மூலைக்கு சைக்கிளை விட்டு, நான்கு மைல்கள் தொலைவில் Blue Lion எனும் பப்பில் காத்திருக்கும் மற்ற குழு நண்பர்களுடன் இணைந்து கொண்ட பின் நகரத்திற்கு வெளியே செல்லும் ஒற்றைப் பாதையில் சீராகச் செல்வோம். பின்னர் The Three Compasses எனும் பப்பிற்கு வரும்போது எட்டு அல்லது பத்து மைல்கள் கடந்திருப்போம். அதன் பின் The Old windmill …இப்படியாக சிறு கிராமங்களை தொட்டுச் செல்லும் வழியெங்கும் மதுபான விடுதிகளே எங்களது மைல்கற்கள்.

இப்படியாக காலை 7 மணி வாக்கில் அவரவர் இருப்பிடங்களிலிருந்து ஓரிருவராக சேர்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பயணம் மெல்ல நகரத்தை விட்டு வெளியே ஒற்றை கிராம பாதையை நோக்கி நகரும். வழியில் ஓரிடத்தில் A12 எனும் மோட்டார் பாதையை நாங்கள் ஓர் குறுகிய பாலத்தின் வழியாக கடப்போம். பாலத்தின் அடியில்,இரு வழிப்பாதைகள் கொண்ட மோட்டார் சாலை. இம்மாதிரியான A சாலைகளில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சராசரி வேகம் 70 மைல்கள்.

கிராம ஒற்றை வரிசைப் பாதையில், சுற்றிலும் வேனிற்கால வண்டுகளையும் பூச்சிகளின் ரீங்காரங்களையும் மட்டும் கேட்டபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு போகையில் இந்த மோட்டார் பாதையின் இரைச்சல் தூர அருவிச்சத்தம் போல் மெல்லியதாய் கேட்க ஆரம்பிக்கும். மோட்டார் பாதையை நெருங்க நெருங்க அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் இரைச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். அருவி கண்களில் படாது. ஆனால் அருகில் பெரும் உற்சாக அருவியை உணர முடியும். திடுமென ஒரு திருப்பத்தில் சிறு பாலத்தைக் கடக்கும்போது A12 எனும் அருவி நமக்கு கீழே உற்சாகமாக கண்களில் படும்.

பாலத்தைக் கடந்து போகையில் அருவியின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்து தூரத்து இடி போல் மறைந்துவிடும்

பின் ஒடுங்கி குழைந்து வயல்களின் நடுவில் பெரிய அளவு வரப்பு போன்ற பாதையில் எங்கள் பயணம் போகும்.

வாழ்க்கை மாதிரி இந்தப் பாதையும். சீராக ஒரே நேர் நிலையில் இருப்பதில்லை. போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சரசரவென இறக்கம் இறங்கும். மிதிக்கத் தேவையில்லாமல் ஆகஸ்ட் காலை தாராள வெயிலும் காற்றும் முகத்தில் உற்சாகமாக அடிக்க ஆசுவாசமாக பக்கவாட்டில் பார்க்க ஆரம்பிக்கும்போது இறக்கம் சட்டென வலது புறத்தில் திரும்பும். திரும்பும் இடத்தில் கள்ளமாக இருக்கும் சிறு கற்களை கவனமாக கவனித்து தவிர்த்து திரும்பினால் பாதை பெரும் மேடாக நம் முன் நின்று சிரிக்கும். கியர்களை மாற்றி, வேகம் குறைந்து மூச்சிறைத்து மேட்டிற்கு பழகிக்கொண்டிருக்கும்போது மறுபடியும் இறக்கம் சிரித்துக்கொண்டே எதிர்படும்.

மேடுகள் நினைவிருப்பது போல் இறக்கங்கள் நினைவிலிருப்பதில்லை.

ஆகஸ்ட் இறுதி வாரங்களில் அறுவடை முடிந்திருந்த வயல்களில் நடுவில் மொத்தமாக குவித்து சுருட்டப்பட்ட வைக்கோற் பொதிகள் அமைதியாக அமர்ந்திருந்தன. பொதிகள் எனில் சாலை போடும் இயந்திரங்களின் உருளை அளவிற்கு சுருட்டப்பட்ட பொதிகள். பின் வந்த வாரங்களில் அவை வயல்களிலிருந்து அகற்றப்பட்டு பாதையோரத்தில் இருக்கும் பண்ணை முற்றங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டேன்.

 


ஒரு L வடிவ பாதை திருப்பத்தில் கருப்பு பெர்ரிகள் கொத்து கொத்தாக காலை ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சைக்கிளை உடனே நிறுத்த முடியாது, திரும்ப வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டே திரும்பினால் கருப்பு பெர்ரிகளும் மஞ்சள் நிற பெர்ரிகள் மீண்டும் தென்பட்டன…மீண்டும்…

மொத்தப் பாதை முழுவதும் இருமருங்கிலும் பெர்ரிச்செடிகள் ஏராளமாக வந்து கொண்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் ஒரு மலையேறு பயணத்தில் வழிகாட்டி, பிரிட்டன் காட்டுப் பகுதியில் காணக்கூடிய பெர்ரிச்செடிகளில் ஏழுவகை மனிதர் உண்ணக்கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பாதையில் அந்த வகையான பெர்ரிகள் ஏராளமாக தென்பட்டன. நீல நிற பில்பெர்ரிகள், மஞ்சள் நிற பெர்ரிகள் (Rowan), சிவப்பு பெர்ரிகள் (Cloudberry, Crowberry, Cranberry) போன்ற பல வகையான பெர்ரிகள் தென்பட்டாலும் கருப்பு பெர்ரிகள் பொதுவாக சுவை மிகுந்தவை. இருபது மைல்கள் கொண்ட பாதையில் எங்கு சைக்கிளை நிறுத்தினாலும் கைக்கெட்டும் தூரத்தில், முட்களோடு இப்பெர்ரிகள் முது வேனிற்காலத்தில் ஆரவாரித்தன.

 


நானும் சக நண்பரும் ஓரிரு நிமிடங்களில் பெரிய பீங்கான் குப்பியில் நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு கருப்பு பெர்ரிகளைப் பறித்துவிட்டோம். பின்னர் செப்டம்பர் வாரங்களிலும் நிறைய பறிக்கக் கிடைத்தது.

திரும்ப வீட்டிற்கு வந்து நன்கு கழுவி விட்டு அவ்வப்போது கொறிக்க வைத்துக் கொள்வேன்.

இந்தியாவில் வாழும்போது பனம் பழம் அல்லது இலந்தை அல்லது வேறு பழங்கள் பறித்து தின்னல் போன்ற கிராம வாழ்க்கைக்கான அனுபவம் அமையவில்லை. மேட்டில் சைக்கிளை மிதிக்கையில், வழியெங்கும் பெர்ரிகளைப் பார்த்துக்கொண்டே வருகையில் அவற்றை நினைத்துக்கொண்டே வந்தேன்.

ஆனால், வழியில் பண்ணைகளை கடக்கும்போது ஓரிரு முறை சேவல்கள் கூவும் ஒலி கேட்டோம், குதூகளித்தோம்!

வழியில் அவ்வப்போது பெரும் பண்ணை வீடுகள் படும். பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். இல்லாவிட்டாலும் நானே வித்தியாசப்படுத்திக் கொள்வேன்.  ESK house எனும் எசக்கியின் இல்லம் எனக்கு ஓர் குறிப்பிட்ட மைல்கல்.

நீர்த்தேக்கத்தை (402  ஹெக்டர் பரப்பளவு) சுற்றி வரும் பாதையில் ஓரிடத்தில் நீர் தேக்கத்தின் கரையில் எதிர்படும் பாலத்தில் பயணத்தை நிறுத்தி இளைப்பாறுவது வழக்கம். ஒரு முறை வாழைப்பழத்தை உரித்துக்கொண்டே பாலத்தை ஒட்டிய கம்பிகள் வைத்த சுவற்றின் நானும் இன்னொரு நண்பரும் சாய்ந்து கொண்டு நீர்த்தேக்கத்தைப் பார்த்தோம். கரையின் ஓரத்தில் வரிசையாக அமர்ந்திருந்த கருப்பு கழுத்து வாத்துகள் சப்தங்கள் எழுப்பிக்கொண்டே ஒரு சேரப் பறந்து நீர்த்தேக்கத்தினுள் சென்று மீண்டும் அமர்ந்தன. ஓர் நீள கறுத்த மணி மாலை உரத்த சப்தங்களுடன் பறந்து போவதைப் போன்று இருந்தது.

அவைகளுக்கு எதிரே இன்னும் சற்று உயரத்தில் பெரு கொக்குகள் பெரும் V வடிவில் சப்தத்துடன் பறந்து கடந்து சென்றன

சட்டென சென்ற சனிக்கிழமை விஷ்ணுபுர நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி உரையாடல் நினைவிற்கு வந்தது.

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு

இயற்கையைப் பற்றி, கவனித்தலைப் பற்றி எழுத எப்படி ஆர்வம் ஏற்பட்டது எனும் கேள்விக்கு, 1967, ஒரு டிசம்பர் அதிகாலை 5:30 மணியளவில் திருச்சிக்கு அருகிலுள்ள ஓர் ஏரியில் பறவைகளைக் காண அமர்ந்திருந்த போது பனி மூட்டத்தினுள் பெரு வாத்துக்கூட்டம் (Bar headed goose) ஒன்று சப்தங்களுடன் வந்தமர்ந்த தருணம் அபார அனுபவமாக இருந்தது என்றும் அதைப் பற்றி எழுதிய அனுபவமே தனக்கு மேலும் எழுத தூண்டுதலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பெரு வாத்துகள் வானில் மிக அதிக உயரங்களில் பறக்கக்கூடியவை – 7,000 மீட்டர்களுக்கும் மேல் (23,000ft) உயரத்தில் காணப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.

டென்சிங், எட்மண்ட் ஹிலாரி குழுவின் ஒருவரான ஜார்ஜ், இப்பறவைகள் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஓர்அதிகாலையில் ஏரியின் அருகில் இப்பெரும் வாத்துகளை கண்ட சந்தர்ப்பம் எத்தகைய அபார மனக்கிளர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர முடிந்தது.

இந்த கருப்பு கழுத்து வாத்துகளுடன் வேறு ஏராளமான வாத்துகளும் கொக்குகளும் சிறு குருவிகளும், மேக்பைகளும் நீர் த்தேக்கப் பரப்பில் உலவிக்கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. அவைகளுக்கேயான தனி பிரபஞ்ச உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.

கறுப்பு கழுத்து வாத்து என நான் குறிப்பிட்டிருந்தாலும் அவை வாத்து என்பதற்கான என் மனபிம்பத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்தன. மொபைல் போன் காமிரா கண்களின் வழி கவனித்தபோது அவற்றின் சிறு கண்கள் மோதிரத்தில் பொதிந்த பவழங்கள் போலிருந்தன – வீட்டிற்கு திரும்ப வந்து இணையத்தில் தேடியபோது அவை black necked Grebe எனப்படும் வாத்து வகை என அறிந்தேன்.

கொஞ்சம் ஆர்வம் கொண்டு கவனித்தாலே போதும், நம்மால் இது போல் நம்முடன் இருக்கும் ஆனால் நாம் உணரா இன்னொரு உலகை சற்றேயாயினும் கண்டுகொள்ள இயலும். காலின் இல்போர்ட் எனும் ஆங்கிலேய வனப் பாதுகாவலர் கானுறை வாழ்க்கையைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்-

இயற்கையை/கானுலகை கவனிக்கும் வழக்கம் உங்களை நிதானப்படுத்தும்; ஆச்சரியப்படுத்தும், வாழ்க்கை எனும் இப்பெரிய விஷயத்தை உங்களுக்கு அடையாளம் காட்டும், உங்களின் சிறிய, ஆனால் மிக முக்கிய பங்கைப் பற்றி யோசிக்கவைக்கும், என்று.

நம் இலக்கியங்களில் இயற்கையைப் பற்றிய விலங்குகள் பறவைகள் பற்றிய சித்திரங்கள் திகைக்க வைக்கும் அளவிற்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இளம் வயதில், பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு சுட்ட குருவியின் கழுத்து வித்தியாசமாக, மஞ்சளாக இருப்பதைக் கவனித்து அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து வாழ்க்கையே பறவையியலாக மாறிப்போன சலீம் அலியின் கதையை நாம் அறிவோம்.

நம் அனைவருக்கும் ஒரே வழி இல்லைதான். ஆனால் அனைவரின் வழியெங்கும் பல வகையான பெர்ரிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு தருணத்தில், திருப்பத்தில் கவனித்துவிட்டால் போதும்…

***

இப்படியாப்பட்ட ஓர் சனிக்கிழமை மதியத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து போனில் தகவல் வந்தது. எங்கள் வீட்டு தோட்டத்திலிருந்து செடிகள் அவரது தோட்டத்தில் படருகின்றன. வெட்டுவதில் ஆட்சேபணை உண்டா என்று கேட்டு. இல்லை என்று சொல்லிவிட்டேன். மாலை அவர் ஒரு தகவலும் படமும் அனுப்பியிருந்தார். “உங்கள் தோட்டத்திலிருந்து கரும் பெர்ரி செடிகளும் எங்களது தோட்டத்தில் படர்ந்திருக்கின்றன. அருமையான சுவை..!”

கா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை

எழுத்தாளர் கா. சிவாவின் முதல் தொகுப்பு ‘விரிசல்’ மொத்தம் பதிமூன்று கதைகளை கொண்டுள்ளது. முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். எழுத்தாளர் தனக்கான வெளிப்பாட்டு முறையை கண்டுகொள்ளும்வரை செய்நேர்த்தி மற்றும் மொழியில் சில தத்தளிப்புகள் இருப்பது இயல்பானது. அவ்வகையில் கா. சிவாவின் இத்தொகுப்பு நம்பிக்கையளிக்கும் வருகை என தயங்காமல் சொல்லலாம்.

 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இருமை’ சிவாவின் படைப்புலகின் ஆதார இயல்பை சுட்டிக்காட்டுவது. நாவல் தன்மை கொண்ட, தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. உற்சாகமாக சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் வேலனிடம் அவன் மணக்க விரும்பிய பெண்ணுக்கு ஒரு வாரத்தில் திருமணம் என கதைசொல்லி சங்கரன் போட்டுடைக்கிறான். “அனைவரையும் காணப்போகும் எதிர்பார்ப்பின் மகிழ்வில் கிறக்கமாக நடந்து வந்தவன் அமர்வதற்கு முன் இதை சொன்னதற்கு அவனின் கந்தர்வ புன்னகையை பொறுக்க முடியாத என்னுள்ளிருந்த கொடு அரக்கனே காரணம்.” என எழுதுகிறார். இந்த பலூனில் ஊசிக்குத்தும் சின்னத்தனம் பல கதைகளில் வெளிப்படுகிறது. வேலன் குடும்பத்திற்காக உழைத்த லட்சிய இளைஞன். சங்கரனுக்கு எப்போதும் அவன் மீது லேசான எரிச்சலும் பொறாமையும் உண்டு. இதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு செல்லும் சங்கரன் வேலன் தன் குடும்பத்தை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு ஒரு சேரிப்பகுதியில் வாழ்வதாக கேள்விப்பட்டு சந்திக்க செல்கிறான். வாழ்வின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு வந்த கதையை வேலன் சொல்கிறான். வெற்று கவுரவத்தால் வேலனின் வாழ்வை தன் குடும்பத்தினர் அழித்து விட்டதாக புகார் சொல்கிறான். “எதிரிகளை பழிவாங்கனும்னா வாழ்ந்து காட்டணும். உடனிருக்கிறவங்கள பழி வாங்கனும்னா அழிச்சுதான் காட்டணும்.” என சொல்கிறான். தன்னை அழித்துக் கொள்வதன் வழியாக குடும்பத்தை பழித்தீர்ப்பதாக எண்ணிக் கொள்கிறான். “ஊஞ்சல் ரெண்டு பக்கமும் மாறி மாறி ஆடணுங்கிறதுதான் அதோட அமைப்பு. ஒரே பக்கமா ரொம்ப தூரம் வந்துச்சுன்னா எதிர்பக்கமும் அதே தூரம் போகணும்ல,” என்றொரு வரி கதையின் மையத்தை சுட்டுகிறது. ஒருவகையில் சிவாவின் கதைகளின் மையமென இந்த வரியையே சொல்ல முடியும். உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையிலான ஊசல். ‘அவரவர் இடம்’ சாலியும், ‘விரிசல்’ சங்கரனும், ‘நிறைவு’ கலாவும் ‘சுமத்தல்’ லக்ஷ்மி டீச்சரும் ஒருமுனை என்றால் ‘இழத்தல்’, ‘நண்பனாக’ ‘பந்தயம்’ போன்ற கதைகள் மறுமுனை.

சிவாவின் மொழி நேரடியானது. காட்சிப்பூர்வமானது. கம்மாய்கள், மழுவய்யனார் கோவில், வயல்காடுகள், கோவில் திருவிழாக்கள், புளிய மரங்கள் என யாவும் காட்சி அனுபவங்கள் அளிக்கின்றன. காட்சிகள் அரிதாகவே கவித்துவமாகவோ அல்லது படிமங்களாகவோ விரிகின்றன. ‘இருமை’ கதையில் தனது இரு துருவங்களுக்கு இடையிலான அலைச்சலை பற்றி வேலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘பசும் பொன்னிற வேப்பம் காய்களை உண்ணும் காக்கைகள் தோலுக்குள் இருக்கும் சதைப் பகுதியை சப்பிவிட்டு கொட்டைகளை நழுவ விடுவதை’ வேலன் கவனிப்பது ஒரு நல்ல குறியீடு.‌ அவசியமானதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை தவிர்த்துவிடலாம். எதற்கு உனக்கு இந்த ஊசலாட்டம் என கேட்பது போலிருந்தது. ‘பரிசு’ கதையில் ‘காலை வெயில் போலத்தான் இப்போதும் படர்ந்துள்ளது. ஆனால் காலையில் தோன்றும் மகிழ்வு இப்போது இல்லை. ஒளி நீடிக்கும் என்ற நம்பிக்கையினால் உண்டாகும் மகிழ்வு அது. மறையப் போகிறதே என்பதுதான் மனதில் சுமையாக ஏறி மென்சோகத்தை மாலையில் உண்டாக்குகிறது.’ இந்த வரிகளும் ஒருவகையில் சிவாவின் ஆதார கவலையை சுட்டுவதாக கொள்ள முடியும். ஒளி மறையப் போகிறதே எனும் பதட்டம். அல்லது எப்படியும் மறைந்துவிடும் எனும் அவநம்பிக்கை.

 

தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான விரிசல் இதே பார்வையின் நீட்சியை கொண்டிருக்கிறது. பழுதற்ற பரப்பின் மீது சிறு விரிசல் தென்பட்டால் கூட மனம் அந்த விரிசலை நோக்கியே குவியும். அதை பூதாகரமாக்கும். எங்கும் எதிலும் நாம் விரிசலையே தேடுகிறோம், அதையே கண்டுகொள்கிறோம். சங்கர் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறான். ஒரு விடுமுறை நாளில் உணவகத்திற்கு அவசர ஆர்டர் வருகிறது. தயங்கினாலும் ஒப்புக்கொண்டு அவனும் அவனுடைய உதவியாளன் சுப்புவுமாக சமைத்து கொண்டு போய் கொடுக்கிறார்கள். முன்பணமாக கொஞ்சம் பெற்றுக்கொண்டு மீதியை உங்களுக்கு உணவு திருப்தியாக இருந்தால் கொடுங்கள் என சொல்லிவிடுகிறான். சங்கர் சமைக்கும் முறை விவரிக்கப்படுகிறது. ‘உள்ளே செல்லும்போதிருக்கும் சங்கர் அல்ல, சமைப்பவன். சமைக்கும்போது வேறொரு தனியுலகில் இருப்பவன்.’ கவனம் சிதறாத முழு ஈடுபாட்டுடன் சமைக்கிறான். மறுநாள் மீதி பணத்தையும் பாத்திரங்களையும் பெற செல்பவர்களுக்கு அவமானம் காத்திருக்கிறது. தி. ஜானகிராமன் – நாஞ்சில்நாடன் கதையுலகை சேர்ந்த கதை. தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. அகங்காரச் சிறுமையும் அதை மீறி எழும் அகவிரிவையும் பேசுகிறது. ‘ஆனா என் நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்துச்சு மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால அறமும் தோக்குற காலம் வந்திடிச்சு போல,’ என சங்கர் சொல்வது தான் நன்மையின் மீதான அவநம்பிக்கையாக வெவ்வேறு கதைகளில் பரிணாமம் கொள்கிறது.

‘அவரவருக்கான இடம்’ இந்த நன்மையின் மீதான வெறுப்பை சொல்லும் மற்றுமொரு நல்ல கதை. சாலி தன் போக்கில் சரியாக நடந்துகொள்கிறாள். அப்படி சரியாக நடக்கும் பெண் பிறருக்கு பெரும் தொந்திரவாக ஆகிறாள். காரணமற்று வெறுக்கப்படுகிறாள். அவள் வீழ்வதற்காக ஊர் மொத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. நிமிர்வின் மீதான பொது வெறுப்பை எப்படி புரிந்து கொள்வது? எனது நண்பன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தான். மொத்த அலுவலகத்திலும் பணம் வாங்காத ஒரே ஆள் அவன்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு குடைச்சல். அவர்களுள் ஒருவன் இல்லை, தனித்தவன் என்பதே சிக்கல். இப்படிப்பட்டவர்கள் அளிக்கும் மன தொந்திரவு என்பது நம்மை பற்றிய சுய மதிப்பீட்டை குலைப்பது. நேர்மையின்மைக்கும் தீமைக்கும் சந்தர்ப்பத்தை குற்றம் சாட்டி தப்பித்துக் கொண்டிருக்கும்போது அதற்கு நேர்மாறாக அதே சூழலில் ஒருவர் வாழ்ந்து காட்டுவது சமநிலையை சீர்குலைப்பது. நமது கீழ்மையை நமக்கு உணர்த்துபவர்கள் பெரும் பாதுகாப்பின்மையை அளிக்கிறார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில், ஒன்று அவர்கள் சமூக போக்குடன் இயைந்து சராசரிகளுள் ஒருவராக ஆக வேண்டும். அப்போது அனைவரும் ஆசுவாசம் கொள்வார்கள். அல்லது அவர்களை மண்ணிற்கு மனமிரங்கி வந்த கடவுளாக்கிவிட வேண்டும். அப்போது அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் மனித யத்தனங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ செயலாக, லீலையாக ஆகிவிடும். இக்கதையில் சாலி கடவுளாக்கப்படுகிறாள். இந்த இரண்டு எதிர்வினைகளுக்கு அப்பால் மனிதர்களை அவரவர் இடத்தில் வைத்து நோக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே சிக்கல். கதை இறுதியை ஒரு பெரும் தாவல் வழியாக வந்தடைகிறார். நாட்டார் தெய்வங்கள் உருவாகும் வரலாறு புரிந்தவர்களால் கதையின் தாவலை புரிந்துகொள்ள முடியும்.

சாலி பதின்ம வயதில் கோபமும் ஆங்காரமும் கொண்ட சாமானிய பெண்ணாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் ஒருமுறை அவளுடைய சின்னாத்தா வசைபாடியதை பரணிலிருக்கும் சிறிய திறப்பின் வழியாக பார்த்தபோது வார்த்தைகள் கேட்காத ஊமைப்படம் போல இருந்ததை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு ஏற்படுகிறது. அப்போது மின்னல் வெட்டென வெறுப்பை விலக்கி நோக்கும்போது எல்லாமே வேடிக்கையாக தெரிவதை கண்டடைகிறாள். வேலன் காக்கைகள் வேப்பம்பழத்தை உண்ணுவதை காணும்போது ஏற்படாமல் போன மின்னல் சாலிக்கு ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு இடையிலான வேறுபாடும் கூட. ‘நிறைவு’ கதையிலும் காரணமற்று பொழியப்படும் அன்பு உண்டாக்கும் எரிச்சலும் பொறாமையும் ஒரு முக்கிய சரடாக வருகின்றன. இதில் சித்தரிக்கப்படும் கலா எனக்கு தனிப்பட்ட முறையில் வானவன் மாதேவியை நினைவுபடுத்தினார். ஒவ்வொருவரின் மனத்திலும் இனிமையாக மட்டுமே தங்கிவிட வேண்டும் என எத்தனிக்கும் ஆன்மாக்கள். கல்பற்றாவின் சுமித்ராவை போல். ஆனால் சாலியை போல் தான் கலாவிற்கும் அவளுடைய மேன்மை மரணத்திற்கு பின்பே அங்கீகரிக்கப்படுகிறது.

‘கண்ணாடியின் மிளிர்வு’ தொகுப்பின் முதல் கதை. சலிப்பற்ற நன்நம்பிக்கையாளர்களின் மீதான நல்லதொரு பகடிக்கதையாக வாசிக்க முடியும். அத்தை மகளின் கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக கதைசொல்லி தன் அம்மாவுடன் துக்கம் விசாரிக்க செல்கிறான். அவனுடைய கதை, அத்தை மகளை அவனுக்கு திருமணம் செய்விக்க இருந்த திட்டம் நிறைவேறாத கதை என பலவும் சொல்லப்படுகிறது. மலர்கொடி அத்தை எல்லாவற்றிலும் நேர்மறைத்தன்மையை பார்க்கும் கண் உடையவர். உற்சாகம் குன்றாத, சோர்வடையாத ஆளுமை. குறையிலும் நிறை காணும் நன்நம்பிக்கையாளர். சிறிய வீடாக இருந்தால் பராமரிப்பது எளிது என்பவர். மூத்த மகன் காதல் திருமணம் செய்துகொண்டபோது பெண் தேடும் வேலை மிச்சம் என்றவர். மருமகனின் மரணத்தை எப்படி நேர்மறையாக சொல்வார் எனும் குறுகுறுப்புடன் செல்கிறான் கதைசொல்லி. அவன் எதிர்பார்ப்பு அம்முறையும் ஈடேறியது.

‘நண்பனாக’ நட்பின் மேல்பூச்சுக்கு அடியில் இருக்கும் பொறாமையை சொல்லும் கதை. கதைசொல்லியும் அவனது நண்பன் கண்ணனும் பெண் கேட்டு செல்கிறார்கள். கண்ணன் பொன்னழகை விரும்புகிறான். அவள் இவனை நேசிக்கிறாளா இல்லையா என தெரியாததால் நேராக பொன்னழகின் அம்மாவிடமே பெண் கேட்டுச்செல்லலாம் என தீர்மானிக்கிறார்கள். பொன்னழகை கண்ணன் திருமணம் செய்துகொள்ள முக்கிய காரணம் அவனுடைய நடையற்று போன அம்மாவை அவள் நன்கு கவனித்துக் கொள்வாள் என்பதுதான். ஏனெனில் வளர்ச்சி குன்றிய அக்காவை பொன்னழகு பராமரிப்பதை கவனித்திருக்கிறான். ஆனால் அவன் கவனிக்காத ஒன்றை கதைசொல்லி கவனித்திருக்கிறான். “புன்னகையுடனே உள் நுழைந்தவள் உள்ளே அமர்ந்திருந்த அவள் சகோதரியை பார்த்தபோது அவள் முகத்தில் ஏற்பட்ட அலுப்பா வெறுப்பா அல்லது சலிப்பாக என பகுத்தறியவியலா ஓர் உணர்வுடனான அம்முகம்.” கண்ணன் கதைசொல்லியிடம் அவன் முன்னர் செய்வித்த பள்ளி நண்பனின் திருமணத்தை நினைவுகூர்ந்து விசாரிக்கிறான். அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இறுக்கமாக நடப்பவன் அந்த நண்பனின் அம்மா கண்ணீருடன் தன் மகன் வாழ்வு சிக்கலானதற்கு அவன்தான் காரணம் என சொன்னது நினைவுக்கு வருகிறது. வீட்டை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நண்பனாகயிருப்பவன் எப்போதும் நண்பனின் நலத்தை மட்டுமே நாடுபவனாகவே இருக்கு வேண்டியதில்லை. சில நேரங்களில் சாதாரண எளிய மனிதனாகவும் இருக்கலாம் பெரிய பிழையில்லை என்று என் மனதிற்கு சொல்லியபடி இன்று எண்ணியபடியே எல்லாம் நடந்ததால் நிம்மதியுடன் நடந்தேன்.” ஒரு தளத்தில் இது பொறாமையை சொல்லும் கதையாகவும் மற்றொரு தளத்தில் இன்னொரு நண்பனின் வாழ்க்கைக்கு குற்றவாளியாக்கப்பட்டவன் எனும் முறையில் பொறுப்பிலிருந்து விடுபட்ட நிம்மதியின் கதையாகவும் தென்படுகிறது.

‘இழந்தது’ இதுவும் இரண்டு நண்பர்களின் கதைதான். நண்பனின் துரோகம் வழியாக நட்பை இழக்கும் கதை. சம்பத் பிரபா என இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகிறார்கள். மூன்றாவது நண்பனான தேவாவை அவர்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளவில்லை. தொழிலில் சேர்த்துக் கொள்ளாத நண்பனுடனான கணக்கை உரிய சமயத்தில் தீர்க்கிறான். ‘நிம்மதி’ கதையில் கணவரும் மனைவியுமாக மனைவியை காதலித்தவர் வீட்டுக்கு செல்கிறார்கள். இறுதி திருப்பத்தை நம்பி எழுதப்பட்ட கதை.

சிவாவின் பல கதைகளில் கதை இறுதியில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. அவ்வகையில் செவ்வியல் சிறுகதை வடிவத்தையே பெரும்பாலான கதைகளிலும் கைக்கொள்ள முயல்கிறார். கணவர் தன் சொந்தத்தில் ஒரு பெண்ணை காதலித்தவர். காதலித்தவர்களுக்கு தங்கள் இணை திருமணமாகி சென்ற இடத்தில் நன்றாக வாழ்கிறார்களா என எப்போதும் ஒரு அச்சமும் குழப்பமும் இருக்கும். அதை நீக்கினாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இதை மனைவியை காதலித்த (ஆனால் அவர் பதிலுக்கு காதலிக்காக என்று நம்பப்படும்) ராமகிருஷ்ணனுக்கு உணர்த்தவே கணவன் சட்டென அந்த முடிவை எடுக்கிறார். ராமகிருஷ்ணனுக்கு நிம்மதி ஏற்படுத்த சென்று மனைவியின் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம். இம்மூன்று கதைகளிலும் சிவா மானுட உறவுகளின் பூச்சுக்களையும் போலித்தனங்களையும் அடையாளம் காட்டுகிறார். இவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகின் நீட்சி என்றொரு எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக அவருடைய ‘தோழிகள்’ இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு இடையே ஊடாடும் அன்பும் வன்மமும் பதிவான கதை.

தொகுப்பில் மூன்று கதைகள் சற்றே அமானுடத்தன்மை கொண்டவை என சொல்லலாம். ‘கள்ளம் களைதல்’ இந்த தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் கதைசொல்லி அல்லது கதை நாயகனின் பெயர் சங்கராகவே உள்ளது.‌ சங்கர்களில் தொடர்ச்சியும் தனித்துவமும் உள்ளன. எங்கள் பகுதிகளில் ஏழூர் செவ்வா என்பது ஒரு முக்கியமான திருவிழா. அதன் பின்புலத்தில் ஊர் வழக்கங்களை அறியாத ஆனால் ஊரைச் சேர்ந்த சங்கருக்கு நண்பன் குமார் விளக்குவது தான் கதைவடிவம். சிவாவால் இவ்வாறு ஒன்றை சீரிய முறையில் விளக்க முடிகிறது. உதாரணமாக ‘இழந்தது’ கதை வாசித்து ஒருவர் சீட்டு கம்பெனியில் எப்படி ஏமாற்றலாம் என தெரிந்து கொள்ள முடியும். கதையில் ஊர் புள்ளிகளுக்கு காழாஞ்சி கொடுப்பதற்கு முன் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. கந்தன் தன்னுடைய மனைவியின் கையை பாலன் பிடித்து இழுத்ததாக பிராது கொடுக்கிறான். இதற்கு பின்பான பாத்திர சித்தரிப்புகள், விவரணைகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. இரு தரப்பிற்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என உணரச்செய்யும் சாதுர்யம் வெளிப்படும். சங்கருக்கு ஊர் வழக்கங்களை விளக்கிச்சொல்லும் குமார் வழியாக கதையின் பிற சாத்தியங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. “கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது.‌ ஒரு வருசத்துக்கு அப்புறம் வந்து அவன் கையப்பிடிச்சான் இவன் அங்க தடவுனான்னு சொல்றது” என சொல்கிறான்‌. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நேரில் பார்த்த ஒரு சாட்சி பாலனின் குற்றத்தை உறுதி செய்தபோது குமார் மீண்டும் கிசுகிசுப்பான குரலில் “அதானே பார்த்தேன் விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னு” என்கிறான். மேல்தளத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கும்போதே அடியில் வேறொன்று ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சிவா. பாலனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையிலான உறவு பேசப்படுகிறது. அவர் மீது “நல்லதை மட்டுமே போதிப்பதினால் வந்த வெறுப்பு” இது சிவாவின் பாத்திர வார்ப்புகளில் ஒரு தொடர்ச்சி. அபாரமான அமானுட தருணத்தில் கதை நிறைவுறுகிறது. ஒரு சுவாரசியமான ஆவணத்தன்மையுடன் பயனிக்கும் கதை அதன் இறுதி வெளிப்பாட்டின் காரணமாக வேறொரு மெய்யியல் தளத்தை அடைகிறது.

‘பந்தயம்’ கதையும் அமானுட முடிவு கொண்ட கதைதான். கருக்கிருட்டில் அவனுடைய அக்கா வராததால் புளியம்பழம் பொறுக்க தனியாக செல்கிறான் சிறுவன் ராமன். சிறு சுழல் காற்று வீசியதும் அவனுக்கு கடந்த மாதம் அவனுடன் பந்தயம் போட்டு கண்மாய்க்குள்ளிருந்து தாமரை கொட்டையை எடுக்க சென்று கொடியில் சிக்கி செத்துப்போன சுந்தரத்தின் நினைவு வருகிறது. அது அவனுடைய ஆவி என்று அஞ்சுகிறான். சுந்தரத்தின் மரணத்திற்கு அவன்தான் காரணம் எனும் குற்ற உணர்வு அவனுக்கு. ஏதோ ஒன்று தன்னை தொடர்வதாக அஞ்சி வேகவேகமாக பிள்ளையார் கோவில் திண்ணையை நோக்கி, அங்கே சிலர் உறங்குவார்கள் என்பதால் ஓடுகிறான். ஒன்றுக்கு கழிக்கச் செல்லும் காவக்காரரின் ஓசைகளோடு அவனை தொடர்ந்த சுழலின் ஓசையையும் கேட்கிறான். அவர் கீழே விழும் ஓசையும் பிறகு அவரை தூக்கி செல்வதையும் உடலை தூக்கி செல்வதையும் ஓசைகளாக உணர்கிறான். விடிந்தபின் கதைசொல்லி ஆசுவாசமடைந்து எழுந்து செல்கிறான். ஏன்? தனக்கு நிகழ வேண்டியது காவக்காரருக்கு நிகழ்ந்து விட்டது என்பதாலா? தான் எஞ்சியிருப்பதாலா? திறந்த முடிவு கொண்ட கதை. ஒரு பேய்க் கதையாகவோ மனப்பிராந்தியை சொல்லும் கதையாகவோ வாசிக்க முடியும்.

சில கதைகளில் புலப்படும் அதீத திறந்த தன்மை ஒரு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. ‘விளையாட்டாய்’ கதைசொல்லி சிறுவயதில் விளையாட்டாய் உறவினனும் பால்ய நண்பனுமான சீனியை கிணற்றில் தள்ளிவிட்டதும் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் வழியில் மகனை பாம்பு கடிப்பதும் இணை வைக்கப்படுகிறது. இந்த இணைவைப்பு ஒரு அகவயமான தொடர்புறுத்தல் மட்டுமே. எனினும் இந்த தொடர்பில் மெல்லிய மிஸ்டிக்தன்மை உள்ளது. சாமி பாம்பு வடிவத்தில் வரும் என நேற்று யாராவது சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன் எனும் ஒரு வரி அளிக்கும் சித்திரம். இக்கதைகளில் நாட்டார்கூறுகள் வலுவாக தென்படுகின்றன.

 

தொகுப்பின் சற்றே பலவீனமான கதைகள் என ‘சுமத்தல்’ ‘பரிசு’ ஆகிய கதைகளை சொல்லலாம். இரண்டுமே பள்ளிகால நினைவேக்க கதைகள். ‘சுமத்தல்’ கதையில் நினைவுகூரலாக மட்டும் எஞ்சிவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொண்டு வரலாறு பாடம் எடுத்த லட்சுமி டீச்சர் வாழ்க்கையும் வரலாற்று ஆளுமையான ராணி லட்சுமி பாயும் இணை வைக்கப்படுகிறார்கள். வெளிப்புற மிடுக்குக்கு உள்ளே மருகும் சாமானிய பெண் இருப்பதை கண்டு கொள்கிறான் கதைசொல்லி. ஆனால் அதை வெளிப்படுத்தாததற்கு டீச்சர் அவனுக்கு நன்றி தெரிவிக்கிறாள். பிள்ளைகள் பிறந்தாலும் பிறக்காமல் இருந்தாலும் என் இருநிலையிலும் கூடும் சுமையை சொல்கிறது. ‘பரிசு’ இறுதி முடிச்சு கொண்டு காலம்காலமாக பெண்களின் உள்ள கிடக்கை சொல்ல முயல்கிறது.

வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன.

பெரும்பாலான கதைகள் ‘பதாகை’ இணைய இதழில் வெளியானவை. ‘பதாகை’ வழியாக மற்றுமொரு எழுத்தாளர் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. சிவாவின் கதைகளின் நிலப்பரப்பு நான் வாழும் செட்டிநாடு – அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. செவலாங்குடியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது சென்னையில் அரசு பணியில் உள்ளார். 45 வயதில் இலக்கிய உலகிற்குள் எழுத்தாளராக அறிமுகமாகிறார். எழுத்தாளர் கா. சிவாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதாகை சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் எழுதிவரும் திறமையான புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பதிப்பிக்கும் வாசகசாலைக்கும் வாழ்த்துக்கள்.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடி

29.9.20