1. குலசாமியின் ஆங்கிலப் பிதற்றல்கள்
“A great age of literature, is perhaps always a great age of translations; or follows it“
-Ezra Pound, 1917
கல்லூரி நாட்களில் ஆங்கிலத்துறையின் சேகரத்திலிருந்து தட்டச்சுப்பிரதியாக வாசித்திருந்த யஷ்வந்த்ராவ், பூசாரி, கிழவி, தாழ்ந்த கோயில் ஆகிய கவிதைகள் மெல்லிய கோட்டுருவம் போல நினைவில் இருந்தன. ஜெஜூரியின் கவிதைகள் பற்றி ஒரு ஆங்கிலப் பேராசிரியர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் வாசித்தநினைவு. ஆனால் சமீபத்தில் மீண்டும் வாசிக்கும் வரை இக்கவிதைகளை விடவும் கொலாட்கரின் பெயரை என் நினைவில் நிறுத்தியிருந்தது ஏதோவொரு ஆங்கில இதழிலோ நாளேட்டிலோ பார்த்திருந்த அவரின் புகைப்படம் என்பது ஆச்சரியம்.
பிரியமானதொரு பாசப்பிராணியைப்போல கணிசமான இடத்தை உரிமையுடன் எடுத்துக்கொண்டு, நான்கு மணிக்கும் சற்று தாண்டி விட்ட நேரத்தை காட்டிக்கொண்டிருக்கும் புராதன இங்கிலாந்தை நினைவுறுத்தும் பாணியிலான சுவர்க்கடிகாரம். தனக்கு இணக்கமான ஒன்றில் ஆழமான சந்தேகத்தை கண்டறிந்தபின் அதன் காரணத்தை பரிசீலனை செய்பவரைப்போல, ஏதோ ஒரு காரணத்தால் அதை வெளிப்படுத்த முன்வரமுடியாதவரைப் போல, கைகளை கோர்த்துக் கொண்டும், தயக்கமான பார்வையுடனும், கரிய ஆடையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேநீர் கோப்பைகள் சூழ்ந்த மேசையில் அவர் அமந்திருக்கும் படம்.
மேற்கத்திய பாணியின் நவீனம், கறாறான துல்லியம், எதற்கும் விட்டுக்கொடுக்காத சமரசமின்மை, அப்படி ஒரு கொள்கை நிலைப்பாட்டையும், அப்படி ஒரு கொள்கை நிலைப்பாட்டிற்கான அவசியத்தையும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் எளிமை. ஒருவகையில் அந்த கடிகாரத்தையே ஒரு குறீயீடாக்கி இதைப் போன்றதுதான் தன் ஆளுமை என எதிர்காலத்துக்கு நினைவுறுத்த அவர் எண்ணியிருப்பாரோ, என்று நினைக்கத் தூண்டும்படியான படம். மும்பை காலா கோடாவின் வேசைட்இன் உணவகத்தில் 1995ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்று பிறிதொரு நாளில் அறிய நேர்ந்தது.
இந்தியர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள் புனைய ஆரம்பித்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. என்றாலும் இந்திய ஆங்கிலக் கவிதைகளின் வடிவங்கள் தமிழில் அநேகமாக இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்று நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் கூட அதை தமிழ்க்கவிதைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிற அல்லது ஆதிக்கம் செலுத்திய ஒரு படைப்பாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. வேற்று மொழிப்படைப்புகளுள் குறிப்பிடும்படி தேர்ச்சியுடைய என் தலைமுறை வாசகர்களுள் பெரும்பாலானோர் கீதாஞ்சலியை வாசித்வர்கள் அல்ல என்பது மட்டுமல்ல. ஷேக்ஸ்பியர், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, ராபர்ட் பிரவ்னிங் ஸில்வியா பிளாத் அளவுக்குக்கூட சமகால தமிழ் இலக்கிய உலகுக்குள் தாகூர் பிரபலமாகாதது, வாசிக்கப்படாதது ஏன் என்பதும் ஆய்வுக்குரியது (கீதாஞ்சலியின் இலக்கிய இடம் என்ன என்பது அதனளவில் வேறொரு தனி விவாதம்).
இந்நிலையில், மராத்திய கவிஞர் கொலாட்கர் பற்றி தமிழில் எழுதப்பட்டது மிகவும் சொற்பமே என்பது ஆச்சரியமான விஷயமல்ல. பனிவிழும் டிசம்பர் மாலை ஒன்றில், தில்லியின் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் சந்தித்தது பற்றி கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள கட்டுரை, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டுமணிநேர சந்திப்பை மையமாகக் கொண்டு கெளரி ராம்நாரயணன் எழுதிய கருப்புக் குதிரை நாடகம் பார்த்ததைப்பற்றி இரா. முருகன் திண்ணையில் எழுதியதுமான கட்டுரை. என் ஒட்டு மொத்த வாசிப்பிற்கு எட்டியவரை தமிழில் கிடைப்பவை, இவை மட்டுமே.
ஒப்பீனியன் லிட்டரரி குவார்ட்டரியில் 1954 ஆம் ஆண்டு வெளியாகி பரவலாக கவனம் பெற்றது ஜெஜூரி. மரபுக்கவிதையின் சம்பிரதாயமான அலங்காரங்களை நிராகரித்தும், விரித்துச் சொல்லும்படி சிறப்பான ரகசியங்கள் ஏதுமற்றும், நேரடியான நடையில் எழுதப்பட்ட வெளிப்படையான கவிதைகள் என்ற அடிப்படையிலும், ஆங்கில உலகில் பரவலாக விவாதிக்கபட்ட படைப்பு என்றவகையிலும், இவைகளைப்பற்றி புதிதாக சொல்ல அநேகமாக ஏதுமில்லை. எஸ். கே. தேசாய், அக்சய் தோத், ரவீந்ர கிம்பஹ்னே, எம்.கே. நாயக், பாலச்சந்ர நெமெடே, சுபங்கி ராய்கர், அம்ரஜீட் நாயக், பூர்ணிமா, பார்த்தசாரதி தொடங்கி புரூஸ் கிங், எம்மா பேர்ட், அஞ்சலி நெர்லேகர், லெட்டிஷியா ஜெக்கினி வரையிலான ஆய்வாளர்கள் பலரும் எழுதியுள்ள விவாதங்கள் ஜெஜுரியின் அளவை ஒப்பிட பல மடங்குகள் அதிகம், என்பதேகூட இதன் ஆகிருதிக்கு ஒரு சான்று.
சில முன்முடிவுகளோடுதான் இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். வழமை போல அடிக்குறிப்புகள், பின் இணைப்புகள், நூற்பட்டியல்கள் ஆகியவை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவற்றுள் முக்கியமானது. பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொலாட்கரின் சுற்றத்துடன் தங்கியிருந்து உரையாடி அவரின் ஒட்டுமொத்த கவிதைகள், கடிதங்கள், நாட்குறிப்புகள், கைப்பிரதிகள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து லெட்டிஷியா ஜக்கீனி எழுதிய நவீனத்துவத்தை வரலாற்றுப்படுத்துதல், அருண் கொலாட்கரும் இந்தியாவின் இலக்கிய நவீனத்துவமும் (Bloomsbury publishers, London), சுபாங்கி ராய்க்கர் தொகுத்த ஜெஜூரி– விமர்சனமும் பார்வைகளும் (Prachet Publications, Pune) ஆகிய இருநூல்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
2. அறுவை மேசையில் மல்லாந்திருக்கும் கவிஞன்
தான் பிறந்து வளர்ந்த மண், சூழல், அதன் கடவுள், கோயில், வைதீகங்கள், சம்பிரதாயமான சடங்குகள் இவற்றிலிருந்து விலகி அந்நியமாகி நிற்பது கொலாட்கரின் குரல். தன்னுடையதை எட்டுக்கை அம்மன் குடிகொண்டுள்ள தாழ்ந்த கோயிலின் பூசாரிக்கு கையளித்துவிட்டபடியால் தன் சகோதரர் மகரந்திடம் தீப்பெட்டியை இரவல் வாங்கிக்கொண்டு, கோயிலுக்கு வெளியே சென்று சார்மினார் சிகரெட்டை பற்ற வைப்பது போல இயல்பானது இந்த விலகல். புனிதப் பயணமாக, பிரார்த்தனை செய்பவராக அல்லாமல் சும்மா சுற்றிப் பார்ப்பவராக தன்னை நிறுத்திக்கொள்ளும் கவிஞர், காட்சிகளையும் நிகழ்வுகளையும் ஒரு எளிய அவதானமாக ஏற்றுக்கொண்டு, அனுபவமிக்க பயணியைப்போல நிதானத்துடன் புன்னகைத்தபடி கடந்துசெல்கிறார்.
தர்க்கம், பகுத்தறிவு ஆகிய விசைகளின் வழி இயங்கும் இதன் கவித்துவம் அதன் இயல்பான கருவிகளாக பூடகமான அங்கதம், சற்று கசப்பேறிய வெளிப்படையான கேலி, நுட்ப வர்ணனைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கையில் தீவிரமான பகுத்தறிவுவையும், நாத்திக வாதத்தையும் முன்னெடுப்பது போன்ற தொனி தென்பட்டாலும் இக்கவிதைகளை ஆழமாக புரிந்துகொள்ள, இவற்றை எழுதிய காலகட்டத்தில் இதன் கவிஞன் எதிர்கொண்டிருந்த இருத்தலியல் நெருக்கடிகளையும் கொந்தளிப்பான வாழ்க்கையின் பின்ணணியையும் அறிந்துகொள்வது அவசியமானது.
தன் தந்தையாரின் எதிர்ப்புக்கும் வருத்தத்திற்கும் எதிராக ஜெ.ஜெ ஓவியக்கல்லூரியின் படிப்பை கைவிட்டு தன் ஓவியத் திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து, கலைக்காக வாழ்க்கையை தழுவும் பொஹீமிய லட்சியவாதத்துடன் வாழ்க்கை நடத்த முயன்ற கொலாட்கர், நவீன ஓவியங்களுக்கு ஆதரவாளர்களோ சந்தையோ இல்லாத நிலையில் வாழ்வாதாரத்தின் தேவைகளை ஈடுகட்ட முடியாமல் 1953ஆம் ஆண்டு வாக்கில் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளானார். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட வீடுகளிலும் வாடகைக்கு எடுத்த ஒற்றை அறைகளிலும் அவர் அரைப்பட்டினியில் நாள்களைக் கடத்திக்கொண்டிருந்த காலம் அது.
பெரும்பாலும் மும்பையின் புறநகர் பகுதிகளில் வாழ்ந்தாலும் இரண்டு ஆண்டுகள் சென்னையிலும் குடியிருந்தார். அலுவலக பணியாளனாகவும், தந்தி அலுவலக உதவியாளராகவும், மரத்தாலான விளையாட்டு சமான்கள், களிமண் பத்திரங்களுக்கு வண்ணம் தீட்டுபவராகவும் பல்வேறு சிறிய உத்தியோகங்களை ஏற்றுக் கொள்பவராகவும் இருந்தார். பழைய செய்தித்தாள்களை சேகரித்து விற்று அதை வைத்து திரையரங்குகளுக்கு செல்வதே அவரின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. இந்திலையில் மும்பையை விட்டு வெளியேறி அம்பாதாஸ் என்ற ஓவிய நண்பருடன் மேற்கு மகாராஷ்டிராவில் அலைந்து திரிந்து இரண்டு மாத நடைப்பயணம் மேற்கொண்டு தன் தனிவாழ்க்கையை மையமாக்கி அவர் எழுதிய பயணக்கவிதைகளுள் ஒன்றான,
கல்யாண் நக்குவதற்கு
ஒரு வெல்லக்கட்டி கொடுத்தது
அருவி கொண்ட பெயரில்லா
கிராமம் ஒன்று
என் போர்வையை வாங்கிக்கொண்டு
வெறும் தண்ணீரில் விருந்தளித்தது
பின் அரசிலை படிந்த பற்களோடு
நாசிக் வந்தடைந்து
ரொட்டியும் கொத்துக்கறியும் வாங்க
என் துக்காராமை விற்று விட்டேன்.
-(வந்ததும் போனதும், துக்காராம்)
மற்றும் மேற்கத்திய இசை கற்றுக்கொண்டு அவரே இயற்றிப் பாடிய ’நான் ஒரு ஏழை, ஏழையின் ஊரிலிருந்து வருகிறேன்’ என்ற ஆங்கிலப்பாடல், ஆகியவற்றின் வழி கவியின் ஆளுமையை கற்பனை செய்ய முயலும்போது, இங்கிலாந்தை நினைவுறுத்தும் பாணியிலான கடிகரத்தின் முன் அமர்ந்திருக்கும் கொலட்கரின் உருவத்துடன், ஏதோ ஒரு துயரச் சம்பவத்தின் கசப்பை எண்ணிக்கொண்டு, அதற்கு பொறுப்பாளியாக எதிரே நிற்பவரை அடையாளங்கண்டு விட்டது போன்ற பார்வையுடன் புராதான கட்டிடம் ஒன்றின் உயரத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரமாதித்யனின் சாயலும் படிந்துவிட, ஒரு வகையில் எனக்கும் என் குலதெய்வத்திற்குமான வழக்கு என்ற தலைப்பு கூட இத்தொகுதிக்கு பொருந்துகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
கூடவே, விக்கிரமாதித்யனின் கீழ்க்கண்ட வரிகளும் நினைவுக்கு வருகின்றன:
மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்.
***
பள்ளியில் ஆங்கிலம் கற்றாலும் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் மராத்தி மட்டுமே பேசி வளர்ந்து பதினாறு வயதுக்கு மேல் தான் முறையாக ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார் கொலாட்கர். ஆகவே அதற்கு முந்தைய இளம் பிராயத்தில் அவர் வாசிப்பின் பின்புலம் எவ்விதமாக இருந்திருக்கும் என்றறிய நான் ஆர்வம் கொண்டதுண்டு.
பணி நிமித்தமாக இங்கிலாந்து சென்று திரும்பும்போது தன் தகப்பனார் தாத்யா கொலாட்கர் கொண்டு வந்திருந்த புத்தகங்களுள், ஆக்ஸ்போர்ட் நவீனக்கவிதைகள் தொகுப்பை (The Oxford Book of Modern Verse) குறிப்பிடும் கொலாட்கர் இப்படிச்சொல்கிறார்.
அவ்வப்போது அப்பாவின் அலமாரியில் இருந்து எடுத்து தூசுதட்டி மீண்டும் அலமாரியில் வைக்கும் பல புத்தகங்களுள் ஒன்றாக அது இருந்தது. ஏறக்குறைய வீட்டிலிருந்த கடவுள் விக்கிரங்களுக்கு நடக்கும் சடங்கைப்போன்றது அது. எனக்கு மிகவும் பிடித்தமான அப்புத்தகம் பிறகு வழிபடும் புத்தகமாகவும் ஆனது. அதில் W.H. ஆடன், W.B. யேட்ஸ், T.S. எலியட், G.M. ஹாப்கின்ஸ் ஆகியோரின் கவிதைகள் இருந்தன. அதெல்லாம் கவிதைகள் என்பதே எனக்குத் தெரியாது. ஆனால் அவை விஷம் போன்றவை. நான் பார்தவற்றிலேயே ஒரு பக்கத்திற்கு மிகச்சில சொற்களே அச்சிடப்பட்ட புத்தகம் அது மட்டுந்தான். ஆகவே அச்சொற்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கவேண்டும் என்பது எனக்கே கூட (அந்த வயதில்) தெரிந்திருந்தது.
மராத்தியிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதியதுடன் எழுபதுகளின் மேற்கத்திய ராக் அன் ரோல் வகை இசையின் மீதும் பீட்டில்ஸ், எல்விஸ் பிரஸ்லி ஆகியோரின் இசையில் விருப்பம் கொண்டவராகவும் ஆகி ஏறக்குறைய பாப் டிலனையோ அல்லது பிரான்ங்க் ஸாப்பாவையோ ஒத்த தோற்றம் கொண்டவராக மாறியிருந்தார். 1977 ஆம் ஆண்டில் டெபோனாயர் பத்திரிக்கையில் அவரை பேட்டி கண்ட டேரில் டி‘ மாண்டெ கொலாட்கரைப்பற்றி கூறுகையில்: பரட்டை தலையுடனும் முரட்டு கோட்டுடனும் வந்திருந்த அவரைப்பார்க்க பத்திரிகையில் வந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த புரட்சியாளரைப்போல இருந்தார். அவரை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் நிறுவிக்கொண்ட கவிஞர் என்று சொல்வது சிரமம். நீளமான தாடியுடனும் தொங்கு மீசையிலும் பார்க்க கலிபோர்னியாவின் ஒரு லூசுத்தனமான நடுவயது ஹிப்பியைபோல இருந்தது –என்கிறார்.
விளம்பரத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்றாலும் மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவது பற்றி அவருக்கு இருக்கும் அசௌகர்யமும், சம்பிரதாயமான கூடுகைகள், அரங்கங்கள் மீது அவருக்கிருந்த விலக்கமும் அவர் கவிதையின் குரலுக்கு நெருக்கமானவை. 1989ஆம் ஆண்டு போபாலில் நடந்த உலக கவிதை விழாவில் ஆங்கில கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான டேனியல் வெய்ஸ்பாரின் வேண்டுகோளை நிராகரித்து, இலக்கியம் பற்றி பேசவிரும்பாத தன் இயலாமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபின், கவிதைக்கு குறிப்புகள் அறிமுகம் அல்லது எவ்வகையான விளக்கமும் தர மறுத்து, ‘என் வேலை எழுதுவது மட்டுமே, பூசி மெழுகுவது அல்ல’ என்றார். கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து, மேலும் இரண்டு கவிதைகள் வாசிக்கிறேன் அல்லது வேறு யாரையாவது பதிலளிக்க சொல்கிறேன் என்று எதிர்வினையாற்றினார். எனக்குத்தெரிந்த ஒரே பதில் சொல்லும் முறை கவிதை எழுதுவது மட்டுமே. என்னைப்போன்ற எதையும் சொல்ல மறுப்பவர்கள் தேவைப்படும் கருத்தரங்குகள் எங்காவது நிச்சயம் இருக்கும், என்று தன் நாட்குறிப்பிலும் எழுதுகிறார்.
அவரின் தனிவாழ்க்கையின் பின்ணனியில் வைத்துப்பார்த்தால் ’என் மண்ணை விட்டு வெளியேறியவன், நான் தேசமில்லா குடிமகன்’ என்ற துக்காராமில் வரும் வரிகளையே அவரின் சுயபிரகடனமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அந்நியமாதலை பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளில் மிகுந்து வரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோ ஆவேசமோ, வலியோ வேதனையோ ஆற்றாமையோ துயரமோ காணக்கிடைப்பதில்லை என்பது இக்கவிதைகளை தனிப்படுத்திக் காட்டுவது. பிற்காலத்தில் மும்பையின் உயர் நடுத்தரவகுப்பு வாழ்க்கையில் இருந்தபோதும் தொலைபேசி கூட வைத்துக்கொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்ட தனிமை விரும்பி என்று அவரைப்பற்றி வாசித்தபோது ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. இக்கவிதைகளில் ஊடாடி நிற்கும் கதைசொல்லியின் மனநிலை அதுதானே?
***
கிழவி என்ற தலைப்பிலான கீழ்க்கண்ட கவிதையையே இத்தொகுதியில் ஓடும் இழையோடும் உணர்வு நிலையின் மைய ஊற்றாக சொல்லலாம்.
கிழவியொருத்தி
உங்கள் சட்டையை பிடித்துக்கொண்டு
கூடவே வருகிறாள்.
ஐம்பது பைசா கொடுத்தால்
குதிரைலாட கோயிலுக்கு
கூட்டிப்போவேன் என்கிறாள்.
நீங்கள் ஏற்கனவே பார்த்ததுதான்
என்றாலும்
இடறிக்கொண்டு
பிடியை இறுக்கி
கூடவே வருகிறாள்.
கேலிக்கூத்தை நிறுத்த
அவளை எதிர்கொள்ளுகையில்,
என்னைப் போன்ற கிழவியொருத்தி, இந்தப்பாழும் மலைக்காட்டில், வேறு என்னதான் செய்யமுடியும்? என்று வயதாகி கிழவியானது மட்டும்தான் தன் பிரச்சினை, என்பதைப்போல அவள் கேட்கும் இடம் நுட்பமானது. இந்தக் கேள்வியை பின் தொடர்ந்து செல்வது படைப்பாளியின் மனோதர்மத்தை புரிந்து கொள்ள அவசியமானது.
அவள் கிழவியாக இல்லாமல் இருந்தபோது முரளி என அழைக்கப்படும் கோயிலின் தேவதாசியாகவும் விபச்சாரியாகவும் இருந்திருப்பதற்கான முகாந்திரத்தை யூகித்து, அவளை இது போல நிலைக்கு ஆளாக்கி கைவிட்டுவிட்ட சமூக ஏற்புடமைகள், ஆச்சாரங்கள், புராதான நம்பிக்கைளுக்கு எதிராக வெகுண்டெழும் கவிஞன், ஏதோ ஒரு வகையில் தன்னையும் குற்றவாளியாக உணரரும் கணத்தின் இயலாமையில் கிழவியின் கேள்விக்கு பதிலளிக்க திராணியில்லதவனாக நிற்கிறான். பெற்றோர்களால் கந்தோபாவின் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆணாக இருந்திருந்தால், ’புலி’ என்றழைக்கப்பட்டு (வாக்யா எனும் சொல்லுக்கு மராத்தியில் அப்படியும் ஒரு பொருள் உண்டு) கந்தோபாவின் வழிபாட்டுக்கு அத்தியாவசியமான மஞ்சள்பொடியை புலித்தோலால் செய்யப்பட்ட பையில் வைத்துக்கொண்டு கோயிலுக்காக எண்ணெயை யாசகம் கேட்டுக்கொண்டிருந்திருப்பான்.
அவள் முகத்தில் தோன்றி
நரம்புகளைத் தாண்டி
உடலெங்கும் ஓடும்
விரிசல்களை பார்க்கையில்
மலைகள் சரிகின்றன
கோயில்கள் சரிகின்றன
வானமே இறங்கி வருகிறது
தனித்து நிற்கும் கூனியின்
உடையாத உறுதியில்
கண்ணாடித் தட்டைப்போல
கலகலத்து
இறுதியில்
அவள் கையில் வைக்கப்படும்
ஒரு சிறு நாணயமாக
சுருங்கி விடுகிறீர்கள்.
என்ற காட்சியில் கிழவியின் தட்டில் கையளிக்கப்படும் சிறு நாணயமாக சுருங்கிவிடுவது கவிஞன் மட்டுமல்ல. கிழவியின் நிலைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமான சமூக ஏற்புடமைகள், ஆச்சாரங்கள், புராதான நம்பிக்கைகள் ஆகியவையும்தான் என்பதை புரிந்துகொண்டால், இதன் கையறு நிலையில் கவிஞன் கொள்ளும் ஆற்றாமையையும் அதை வெளிப்படுத்த அவன் கண்டடையும் அங்கதத்தையும் நுண்ணிய கசப்பையும் புரிந்துகொள்ள முடியும். ஜெஜூரியின் வைதீகங்கள் மீது கவிஞனுள் ஏற்பட்ட கசப்பு நையாண்டியாக மாறி, கோயிலை விட்டு, ஜெஜூரி நகரையும் தாண்டி ரயில் நிலையத்துக்கு வந்த பின்னும் நீடித்து,
புனிதப் பாத்திரங்களைக் கழுவும்
திருப்பணிக்கு திரும்புகிறான்
கோப்பை தட்டுக்களை கழுவுதல்
இவற்றுடன் தொடர்புடைய
இன்ன பிற சடங்குகளை
தொடர்ந்தபடி.
கடிகாரத்தின் முன்
ஒரு கிடா வெட்டலாம்
தண்டவாளத்தின் மேல்
தேங்காய் உடைக்கலாம்
கைகாட்டிக்கு சேவலின் இரத்தம் படைக்கலாம்
ஸ்டேஷன் மாஸ்டருக்கு பாலாபிஷேகமும்
முன்பதிவு செய்யும்
குமாஸ்தாவுக்கு
தங்கத்தில் ஒரு ரயில் சிலையும் தர
சத்தியம் செய்யலாம்
என்று தேநீர் நிலையத்து கத்துக்குட்டியையும் ரயில் நிலையத்தையும் வர்ணிக்கும்போது கூட அவனுள் எஞ்சி நின்று விடுவதையும் காணலாம். சிதிலமடைந்த கோயில், சரிந்த கூரையின் கருவூலம், வண்டல் மண்ணை மட்டுமே கொண்ட நீர்த்தேக்கம், நீரின்றி வரண்ட குடிநீர்க் குழாய், இளம் வயதில் கந்தோபாவின் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டு வயதுவந்தபின் விபச்சாரியாக மாறும் கோயிலின் பெண் தாசிகள் (முர்ளி) யாசகர்களாக மாறும் ஆண் சேவகர்கள் (வாக்யா), என பாடுபொருள்கள் எல்லாவற்றின் மீதும் வலைபோல பின்னி இக்கைவிதைகள் அனைத்தையும் கோர்க்கும் நுண்ணிய இழையாகவும் செயல்படுவது கவிஞனின் இந்த நுண்ணிய கசப்புதான். கடந்து, ஞானயோகியாக நின்று சடங்குகளையும் வழிபாடுகளையும் சற்று எகத்தாளத்துடன் பார்க்கும் முதிர்ந்த ஒரு வேதாந்தியின் கேலியும் கூடத்தான் அது.
பலவித எண்ணங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு ஆயாசத்துடனும் குழப்பத்துடனும் கனவில் நடப்பதைப்போல கோயிலை விட்டு வெளியேறி வரும்போது மரபான நம்பிக்கைக்கும் முற்போக்கு எண்ணங்களுக்கும் இடையில் அகப்பட்டு நிற்கும் நிலையை,
ஜெஜூரி ஒருபுறம்
ரயில் நிலையம் மறுபுறம்
வழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்
கனவில் இருப்பது போல.
செய்வதறியாது
நிற்க வேண்டியதுதான்.
இருபுறமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின்
என்கிறார். இருபக்கமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின், ஏற்கவும் இழக்கவும் முடியாமல், அசையாமல் நிற்கும் முள்ளாகி என கவிஞர் இங்கு குறிப்பிடுவது உண்மையில் எது? அவர் குறிப்பிடும் இரு தட்டுகள் என்னென்ன? ஒரு தேங்காய், பாக்கெட்டில் பூசாரி ஒருவரின் முகவரி அட்டை, மற்றும் தலைக்குள் இடிக்கும் சில கேள்விகளுடனும் நிற்கும் ஊசலாட்டத்தை, குழப்பத்தை அஞ்சித்தான், ரயில் நிலையம் வரும் வழியில் தானியம் எடுத்த அலகுடன் கோழிகளும் சேவல்களும் ஆடும் நடனத்தை பார்த்துக்கொண்டு நிற்கும்படி கவிஞனின் மனம் தன்னைத்தானே மடை மாற்றிக் கொள்கிறதா?
உறுமிக்கொண்டு சரியும் சாலை, பூனையைப்போல/ புன்னகைத்து/ யாத்ரீகனை/ உயிரோடு உண்ணும் பற்களுடன், ஆகிய வரிகளில் இடம் மாறிய வர்ணனையாக சுட்டப்பெறும் பேருந்தையும் பூசாரியையும் போலவே, கண்ணாடியின் ஜோடியில் பிளக்கப்பட்ட முகம் என்ற வரியில் குறிப்பிடப்படும் பிளவு கவிஞரின் தத்துவ நிலைப்பாட்டின் பிளவும்தான் என்றும், இரண்டு தலைகொண்ட நிலைய அதிகாரி, கடவுள் எது/ கல் எது/ என்று பிரிக்கும் கோடு/ மிகவும் மெல்லியது –ஆகிய பிரயோகங்கள் இடம் மாறிய வர்ணனைகள் என்றும் ஏன் சொல்லக்கூடாது?
மேற்கத்திய நாகரிகத்தின் வழி சிந்திக்கின்ற ஆனால் நாத்திகன் என்று முற்றிலும் வரையறுத்துவிட முடியாத முற்போக்கு நகரவாசியின் மனநிலைக்கும், பாரம்பரியமான மரபின் நம்பிக்கைக்கும் இடையேயான உரையாடலாகவும் இத்தொகுதியை கூற இயலும். பக்திக்கும் பகுத்தறிவுக்கும் இடையே கறுப்பு வெள்ளை என அறுதியிட்டு வரையறுத்து சொல்ல முடியாதபடிக்கு இருந்திருக்க முடியும் என்றுதான் கவிஞரின் மனநிலையை சொல்லத் தோன்றுகிறது. இந்தியன் லிட்டரரி ரிவ்யூ நேர்முகத்தின் போது (1978) நீங்கள் கடவுளை நம்புபவரா? என்ற கேள்விக்கு, நான் அந்தக்கேள்வியை எனக்குள் கேட்டுக்கொள்வதில்லை. கடவுள் நம்பிக்கை பற்றி இந்தப்பக்கமோ அந்தப்பக்கமோ நிலைப்பாடு எடுக்க வேண்டியதன் கட்டாயம் எனக்கு இல்லை, என்ற கவிஞரின் பதிலுமே கூட இக்கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பது.
3. படிகத்தின் நீரோட்டம்
”கவிதை வாசிப்பது என்பது கண்களால் கேட்பது;
கவிதை கேட்பது என்பது காதுகளால் காண்பது” (ஆக்டோவியா பாஸ், 1967)
முன்னோடிக் கவிஞரான பி, மார்த்தேக்கர் போலவே மராத்தியின் முக்கியமானவராக கருதப்படுபவர் கொலாட்கர். ஆனால் அதுவரையிலான அவரின் மராத்தியக் கவிதைகள் அப்படியொன்றும் பிரமாதமானவை அல்ல. டி.எஸ். எலியட்டுக்கு பாழ் நிலத்தைப்போல கொலாட்கருக்கு ஜெஜுரி, என்று வைத்துக்கொண்டால் பாழ் நிலத்தின் முந்தைய கவிதைகளின் காணமுடியும் அதன் சாத்தியத்தைப்போல கொலாட்கரின் மராத்தியக் கவிதைகளிலும் ஜெஜூரியின் சாத்தியங்களை காண முடியும் என்று எஸ். கே தேசாய் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
முதல் முறையாக கொலாட்கர் ஜெஜுரிக்கு சென்து 1963 ஆம் ஆண்டில், தன் நண்பரும் மராட்டிய நாவலாசிரியருமான மனோகர் ஓக், சகோதரர் மகரந்த கொலாட்கர் ஆகியோருடன். இவர்கள் இருவரின் பெயர்களிலும் தலா ஒரு கவிதையும் இத்தொகுப்பில் இடம்பெறுகிறது. என்றாலும் நூலின் மையமாக இருப்பது கொலாட்கரின் எண்ன ஓட்டம் மட்டுமே. நிகழும் இடத்தின் அடிப்படையில் இக்கவிதைகளை கீழ்க்கண்டவாறு வகுக்கலாம்.
- ஜெஜூரி நோக்கிய பயணமும், சென்றடைதலும் (கவிதைகள் எண் 1 &2 ),
- கார்ஹே பதார் என்ற 10 ஆம் நூற்றாண்டு பழமையான மையக்கோயில், தாழ்ந்த கோயில், குதிரைலாட கோயில் ஆகியவற்றை காணுதல் (கவிதைகள் எண் 3 – 13),
- மலைப்பாதையின் வழியே 3 கி.மீ தொலைவு நடந்து கீழிறங்கிச் சென்று பெஷாவாக்கள் கட்டிய நீர்த்தேக்கத்தை தாண்டி 11ஆம் நூற்றாண்டு கோயிலை காணுதல் (கவிதைகள் எண் 14 – 23),
- வளாகத்திலேயே இளைய 14, 15 ஆம் நூற்றாண்டு நிர்மாணிக்கப்பட்ட இன்னொரு கோயிலையும் அருள்மிகு யஷ்வந்த்ராவ் குடிகொண்டுள்ள சுற்றுப்பிரகாரத்தையும் பார்வையிடல் (கவிதை எண் 24 – 28),
- இன்னும் கீழிறங்கி மலையின் அடிவாரத்தில் உள்ள ஜெஜூரி நகர் அடைந்து அதன் வழி செல்லல் (கவிதை எண் 29 -30),
- ஜெஜூரி நகரை விட்டு வெளியேறி ஊர்க்கோடியில் உள்ள புகைவண்டி நிலையத்தை அடைதல் (கவிதை எண் 31),
- ரயில் நிலையத்து அனுபவங்கள் (கவிதைகள் 32 -36) –என,
தார்ப்பாய் மடல்கள் கீழிறக்கப்பட்ட மாநில போக்குவரத்துக்கழக பேருந்தில் அதிகாலையில் ஜெஜூரிக்கு புறப்படுவது முதல் மாலையில் ரயில் நிலையத்தை அடைவது வரையிலான அனுபவங்கள் பயணத்தின் வரிசைக் கிரமத்திலேயே கவிதைகளாக வருகின்றன.
ஒரு சிற்பக் கூடத்தில்
மைல்கல் ஒன்று
வான் பார்த்துக் காட்டிற்று
நாற்பதென்று – என்று ஞானக்கூத்தனைப் போல
அது வாசல்படி அல்ல
பக்கவாட்டில் கிடக்கும் தூண்.
ஆம் தூண்தான் அது.
என தன் இருப்பை பொருத்தமற்ற சூழலின் குறியீடாய்கண்டு எதிர்காலமில்லை, இறந்த காலத்துடன், இணைப்பு ஏதுமில்லை, இஃதொரு, நிகழ்காலச் சிலேடை என்று பட்டாம்பூச்சியில் வருவதைப்போல கடந்த காலத்திலிருந்தும் அதன் அறிவிலிருந்தும் முற்றிலுமாக விடுவித்துக்கொண்டு, ஒரு துளி மஞ்சள்அவ்வளவுதான் என்று சொல்லும்படி தன் இருப்பை எளிமையாக்கி குறுக்கிக்கொண்டு நேரடியாகவும் வெளிப்படையாகவும் உரையாடுபவை இக்கவிதைகள். (ஒன்றைப்புரிந்துகொள்ள அதனுடன் வாழ வேண்டும், உற்றுநோக்கவேண்டும், கற்றுக்கொள்ளுதல் என்பது நுண்மையாக உணர்தல். கடந்தகாலத்திலிருந்து நீள்வதைப்போல ஏற்கனவே ஒரு கருத்து இருக்கும் நிலையில் ஒன்றை நுண்மையாக உணரமுடியாது –என்ற கிருஷ்ணமூர்த்தியின் பிரகடனத்திற்கு கட்டுப்பட்டது போல இக்கவிதைகள் அமைந்துள்ளன என்ற அவதானம் ஏற்கனவே சொல்லப்பட்ட ஒன்று).
எந்நிலையிலும் மனிதனா அல்லது கடவுளின் அவதாரமா என்பதை மட்டும் கண்டு அறியும் அளவுக்கு வலது விழியை மட்டும் திறந்துபார்க்கும் முதிர்ந்த அலட்டிக்கொள்ளாத நிதானம், அது வாசல்படி அல்ல, பக்கவாட்டில் கிடக்கும் தூண், ஆம் தூண்தான் அது என்று சொல்ல முடிகிற தன்னம்பிக்கை.
ஒரே நேரத்தில் ஞானியையும் பாமரனைபோல, எவேறெதுவும் இல்லை நூற்றாண்டு கால வண்டல் தவிர –என்று சொல்ல முடிகிற சொற்சிக்கனம், மதிய வெய்யிலில் ஆதரவற்று நிற்கும் எலும்புக்கூடு போல மெலிந்த கிழவியை வெய்யில் நேரத்தில் சந்திக்க நேர்ந்ததை, கண்களுக்கு பதில் துப்பாக்கியால் சுட்டது போன்ற குழிகள் என்றும், (சாலையோரத்தில் நிற்கையில்) சாலையின் குழியில் முட்டி மோதி லொடலொடத்து உறுமியபின் கண்களில் நீல வண்ணத்தை பாய்ச்சிக்கொண்டு தாண்டிச்சென்ற பேருந்து என்றும், வார்த்தைகளில் புகைப்படமெடுக்கும் காட்சித்தன்மையின் துல்லியம்.
இடிந்த ஆஞ்சநேயரின் கோயிலில் தன்குட்டிகளுடன் வாழ முடிவெடுத்துவிட்ட தெருநாய்; தன் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்ட கருப்பு நிறக் காதுகள் கொண்ட அதன் நாய்க்குட்டி, திரிசூலத்தின் நீண்ட நடுப்பிளவில் சுருண்ட வாலை நிமிர்த்திக்கொண்டு பொங்கி வழியும் கருநிறக் குருதி போல இறங்கி வரும் கோவில் எலி, கொடிய மலைகளை தன் சிறகுகளுக்குள் கொண்டு வினாடியைப்போல இரட்டித்து தன்னுடலையே கீலாக்கி நிகழ்காலச் சிலேடையாக மூடித்திறக்கும் வண்ணத்துப் பூச்சி; கோயில் போல தோற்றமளிக்கும் மாட்டுத்தொழுவத்தில் அகன்ற கண்கள் கொண்டு திரும்பிப் பார்க்கும் கன்றுக்குட்டி; இவைகளின் வழி வழிந்தோடும் வாழ்க்கை, அதன் உயிர்த்துடிப்பின் நேர்த்தியை மிகக்குறைந்த சொற்களின் வழி வடிக்க முடிந்த நேர்த்தியின் எளிமை.
பீயுருட்டி வண்டும், தன் குட்டிகளுடன் உள்ள தெருநாயும் வாழிடமாக ஏற்றுக்கொண்ட வழிபாட்டுக்கு வழியில்லாத இடம்தான் என்றாலும் இங்கே கடவுள் குடியிருக்கவில்லை என்று சொல்ல முடியாதல்லவா? என்று அத்வைத நோக்கில் சமாதானம் கொள்கிற வேதாந்தியின் மனநிலை.
நீ யாராக இருந்தாலும் சரி பெண்/ பிராமின், சலவைக்காரன், அல்லது/ என்னவாக இருந்தாலும்/ வித்தியாசம் ஏதுமில்லை, என்று இன்னொரு கவிதையில் சொல்வதைப்போல. பூசாரியையும் பூசாரியின் மகனையும், பீயுருட்டிவண்டையும், கோயில் எலியையும் ரயில் நிலைய நாயையும், சோளக்கொல்லையில் தானியம் எடுத்த அலகுடன் தன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்கும் சேவலையும் கோழியையும், கோயிலின் கன்றுக்குட்டியையும் கந்தோபநாதருக்கு சற்றும் குறையாத சமத்துவத்துடன் வைத்துப்பார்க்க முடிகிற சமத்துவத்தின் விரிவு, போன்ற அம்சங்களை இத்தொகுதியின் முக்கியமான ஓட்டங்களாக கூறலாம்.
தமிழில் நவீனத்து கவிதைகளை உருவாக்கிய முன்னோர்களான க.நா.சு, ஞானக்கூத்தன் ஆகியோரின் கவிதைகளுடன் ஜெஜூரியை ஒப்புமைப்படுத்தி நவீனத்துவ கவிதையின் அடிப்படைக் கூறுகள் என்று கூறும்படியான ஆதாரமான ஒருமைகளை ஆராய்ந்தால்,
உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
இப்போது அவன்
ஆடுவது
குண்டுக் கொசு விரட்ட (க.நா.சு)
மதுரை மீனாஷியின்
கன்னிமை கழியும் போது
அகத்தியன் மேற்கே வருவான் (க.நா.சு)
நீலநிறக் குதிரையில்
பள்ளத்தாக்கை
ஒரே குதியில் தாண்டிக் குதித்தார்
கந்தோப நாதர் (குதிரைலாடக் கோயில்)
வாகனம் தூக்கிக் கொண்டு
தீவட்டி பிடித்துக்கொண்டு
வாத்தியம் இசைத்துக்கொண்டு
பலூன்கள் விற்றுக்கொண்டு
தெருக்காரர் ஊர்வலத்தில்
இருப்பதால் நஷ்டப்பட்டார்
எங்களூர் அரங்கநாதர் (ஞானக்கூத்தன்)
நெருக்கியடித்துக் கொண்டு
அடுக்கடுக்காக அலமாரி முழுக்க
நிறைந்திருக்கிறார்கள்
தங்கநிறக் கடவுளர்கள்
வெட்டப்பட்ட தலையங்கங்கள்
நித்திய வாலிப வாக்குறுதிகளின்
பின்னால் இருந்தபடி
எட்டிப்பார்க்கிறார்கள்
பங்குச்சந்தை நிலவர
பத்திகளுக்கு அப்பாலும்
பார்க்கலாம் நீங்கள்
தங்கநிற கடவுளர்களை (அலமாரி, கொலாட்கர்)
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர் (ஞானக்கூத்தன்)
என்று தனிமனிதனை, அவன் நம்பிக்கைகளை, ஆளுமையை மட்டுமல்ல. ஒரு சமூகத்தின் வழிபாட்டு மையமாக வீற்றுள்ள இறையையுமே நகையாடி கேலிப்பொருளாக்குதல்,
நாலு தலைக்காரன்
அற்புத நாக்குக்காரன்
நாலு தலைக்குள்ளும்
நாக்குகள் நான்கிருக்கும்
நாக்குகள் ஒன்றுக்குள்ளே
நல்லதாய்ப் பூவிருக்கும் (ஞானக்கூத்தன்)
ஒருவீட்டின் மூலையை
இடவலமாய் மாற்றிச்சென்று
தன் தடத்தில்
அசையாமல் நின்றபின்
விருட்டென
ஏறிச்செல்கிறது
மேல்நோக்கி.
சுவரோடு ஒட்டி நின்று
இரட்டித்து
மீண்டும் முறுக்கித் திரும்பி
நிறுத்தத்திற்கு வருகிறது
திடீரென. (நீர் வழங்கல், கொலாட்கர்)
என்று வரைபடத்தைப்போல காட்சி நுட்பத்தின் சித்திரத்தை நிறுவுதல்,
மூ
ணு
வ
ரி
சை
க்யூ
நிற்க (க.நா.சு)
(ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே)
தொடர்ந்து பி
ளந்து தொ
டர்ந்து வா
ளாலறுத்
துத் துண்
டுதுண்
டுதுண்
டுதுண்
டாக்கிக் கி
ளைமு
றித்துப் பூ
சிதறி இ
லை சிதறி (ஞானக்கூத்தன்)
என்று சொற்களால் விவரிக்க முயன்று, அவை சுட்டும் அர்த்தங்களின் நிறைவின்மையில் தூண்டல் பெற்று, மொழியின் ஆதார விதிகளையும் தாண்டிச்சென்று, சொற்களின் பூத உடலிலும் காட்சியின் ஒழுங்கின்மையை ஏற்றிவைத்து விடுதல் (இந்த உத்தி பிற்பாடு, படியில் இறங்கினாள், றங்கினாள், ங்கினாள், கினாள், னாள், ள் –என்று வணிக இதழ்களுக்கும் வந்து சேர்ந்தது).
ஒரு காலத்தில் குரங்குகள் நம்மைப் போலவே
பேசின என்று நம்பப் படுகின்றது. (ஞானக்கூத்தன்)
ஜெஜூரியின் கற்கள்
திராட்சையைப்போல இனியவை
என்ற சைதன்யா
ஒரு கல்லை
தன் வாயிலிட்டு
கடவுள்களாக
உமிழ்ந்தான். (சைதன்யா, கொலாட்கர்)
‘அப்படியா, அதிர்ச்சியான செய்தி!
ஏன் முன்பே சொல்லவில்லைஎன்னிடம்?
தயாராகுங்கள் விருந்துக்கு.
அந்த காவல் நாய்க்கு
ஞாபகம் இருக்கும்படி
பாடம் கற்பிக்கிறேன் நான்’
என்றார் புலிராஜா. (அஜாமிலனுன் புலிகளும், கொலாட்கர்)
என்று கற்பனையில் மட்டுமே நடக்க முடிகிற சம்பவங்களை பயன்படுத்தி மிகுபுனைவாக்கி காட்டல், என்று பல பொதுமையான கூறுமுறைகளை வரிசைப்படுத்தலாம் என்றாலும் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு –என்று காலத்தால் கொலாட்கருக்கும் முந்திய மூதாதையின் நவீனக்கவிதை உதாரணம் தமிழில் உண்டு.
4. பிரக்ஞையின் பூதக்கண்ணாடி
பாடுபொருளிலிருந்து முடிந்தவரை தன்னை விலக்கி, உணர்வெழுச்சியின் வெள்ளத்தில் இறங்கிவிடாமல் கரையில் தன்னை நிறுத்திக்கொண்டு, கூர்மைப்படுத்தி பெருக்கிக்கொண்ட பிரக்ஞையின் பூதக்கண்ணாடி வழி ஒரு ஆய்வாளனின் நிதானத்தோடு பாடுபொருளை அணுகும்போது கைவசப்படும் படைப்பில் நவீனத்துவத்தின் (Modernism) கூறுகள் மேலோங்குகின்றன. புறவயம், நேரடித்தன்மை, கறாறான வடிவ நேர்த்தி, வெளிப்படைத்தன்மை, ஆகியவற்றை ஆகப்பெரும் சாத்தியங்காளக்கொண்டு இயங்குவது இதன் அழகியல். தன்னை எழுத்திலிருந்து துண்டித்துக்கொண்ட மனநிலையின் தொடர்பின்மை, பிரக்ஞையை முழுதுமாக எரியவிட்டு அதன் ஒளியில் எண்ணங்களின் ஓட்டத்தை நேர்த்தியாக கோர்த்துக்கொள்ளும் கவனம் ஆகியவை இதன் இயங்கு விசைகள்.
பகட்டான ஒலியமைவுகள், ஆடம்பரமான ஆபரணங்கள் தரித்து கம்பீரமாக அரங்கேறி நிற்கும் விக்டோரிய பழங்கவிதைகளுக்கு பழகிய ஆங்கில வாசகர், நவீனக்கவிதையின் வீச்சும் சுவையும் பரிச்சயமில்லாத நிலையில், சம்பிரதாயமான அலங்காரங்களை முற்றாக துறந்துவிட்டு பேச்சுவழக்கின் உரைநடைக்கு அருகில் வரும் எளிமையின் உருவமாகி, எவ்வித ஆரவாரமுமின்றி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கிழட்டுத் துறவியைப்போன்ற இத்தொகுதிக்குள் நேரடியாக வந்துசேரும்போது, இவை உண்மையிலேயே கவிதைதானா? என்று அதிர்ச்சியடைவதும், இவ்வரிகளை கவிதையக்குவது எது? என்று தடுமாற்றம் கொள்வதும் சாத்தியமே.
நேர்மாறாக, தன் கவிதைகளை எவ்வளவு தூரம் தீர்மானமானவை, முழுமையானவை, மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கொலாட்கர் கருதினார் என்பது ஆச்சரியமளிப்பது. கவிதையில் சமரசங்கள் செய்யவேண்டி வருமோ என அஞ்சி உயிரோடிருந்தவரையிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலை பிரசுரம், பெங்குயின் பிரசுரம் போன்ற பெரும் நிறுவனங்களிடமிருந்து தேடி வந்த வாய்ப்புகளை முற்றாக மறுத்திருக்கிறார்.
ஜெஜூரியை ஆங்கிலத்தில் வெளியிட்ட கொலாட்கரின் நெருங்கிய நண்பரும் பதிப்பாளருமாரான அசோக் ஷஹானேயின் கிளியரிங் ஹவுஸ் பதிப்பகம் அதை மாராத்தியில் வெளியிட்டது 2010ஆம் ஆண்டில். தாய் மொழியாக இல்லாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதுவது, தன்னை தன் எழுத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொள்ளும் விலகலை எளிமைப்படுத்துவதுடன் புறவயத்தன்மை கூடிவரும் இயல்பான லாவகத்தையும் கையளிக்கிறது என்பதால் இதைப்போன்ற ஒரு தொகுதியை எழுத அவர் ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தது இயல்பானதே. ஆனால், மராத்தியக்கவிஞரின் இந்நூலை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட 30ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது ஆச்சரியமே.
எளிமை, குறும்புத்தனம், உணர்ச்சியை அதிகம் வெளிக்காட்டாமை என அமித் செளதுரி வர்ணிக்கும் கொலாட்கரின் ஆளுமையையே அவரின் கவிதைகளுக்கும் பொருத்தி சொல்லமுடியும். ஒவ்வொரு கவிதையிலும் இழையோடும் துடுக்குத்தனமான வர்ணணைகளும் வஞ்சப்புகழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிக்காட்டாத சித்தரிப்புகளும் புகைப்படமெடுப்பது போல காட்சியை நம் கண்முன் நிறுத்துகின்றன. முறையாக ஓவியம் பயின்று விருதுகள் பெற்ற தொழில்முறை வரைபட கலைஞராகவும் ஓவியராகவும் பணியாற்றிய கொலாட்கரின் பின்புலம் இந்த நுண்மையின் தெளிவை அடைவதற்கு உதவியிருக்குமா? வாழ்க்கையிலிருந்து விலகி தன்மீது சுமத்திகொண்ட அந்நியத்தன்மை, தன் சமூகத்தின் கருத்தியலில் இருந்து துண்டித்துக்கொண்டு தன்னை வெளியேற்றிக்கொண்ட மனநிலை, ஆகியவையே கூட நவீனத்துவத்தின் அழகியல் சாய்வுள்ள நிலைகள்தானே. இம்மனநிலை, இத்தொகுதியை எழுத தேவைப்பட்ட அழகியலை அவருக்கும் இயல்பாக கைவரப்பெறும் ஒன்றாக ஆக்கியிருக்குமா?
இக்கவிதைகளில் சாத்தியமாகியிருக்கும் காட்சி அனுபத்தின் நேர்த்தியையும் கவிஞரின் பின்னணியையும் பற்றி யோசிக்கையில் வாசகருக்குள் இக்கேள்விகள் எழுவது இயல்பானதே.
***
சமூக ஏற்புகளை எள்ளி நகையாடி, அவை தாங்கி நிற்கும் வரலாற்றையும் நம்பிக்கைகளையும் புறக்கணித்து நிராகரித்து, பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு எதிராக நிற்கும் சொரணையின்மையே இதன் பெரும் குறைபாடு என இலக்கிய ஆய்வாளர்கள் சிலரை எண்ணச்செய்வது ஜெஜுரியின் இன்னொரு முகம்.
1976ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்கப்பட்ட இத்தொகுதி கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. கோலாப்பூரில் பிறந்து மராத்தி மொழி கற்ற மராத்திய கவிஞர் எதற்காக ஆங்கிலத்தில் எழுதவேண்டும்? என்று மராத்தியின் முன்ணனி எழுத்தாளரான பாலச்சந்த்ர நிமாடே அன்றே கோபத்துடன் எழுதினார். அயல் மொழியில் நிற்க வேண்டும் என்பதற்காக தாய் மண்ணின் நிதர்சனங்களை துறந்து விட்டதாக கொலாட்கர் குற்றம் சாட்டப்பட்டார். “கொலாட்கரின் ஜெஜூரியில் இருப்பதும் இதைப்போன்ற மூடத்தனமே. மும்பையிலிருந்து வார விடுமுறையில் வரும் சுற்றுலாப்பயணியைப்போல், ஏழை யாத்ரீகர்கள், பிச்சைக்காரர்கள், பூசாரிகள் மற்றும் கோயிலின் சந்தோஷமாகத் திரியும் குழந்தைகள் அனைவர் மீதும் கருணையின்றி, ஒரு பாறையை சுரண்டினாலும் புராணம் கிளம்பும் என்று எழுதுகிறார். எல்லாவற்றையும் பாறைகளில் சேமித்து வைப்பதைப்போலத்தான் புராதான கலாச்சாரம் அவர் பயன்படுத்தும் ஆங்கிலத்தையும் சேமித்து வைக்கிறது. ஜெஜூரியின் யாத்ரீகம் ஒன்றும் ஜுகூ கடற்கரையின் மது விருந்தைப்போல கேவலமானதல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். மராத்தியில் இதைப்போன்ற கீழ்த்தரமான சொல்லாடல்களை காணமுடியாது. ஏனென்றால் மாராத்திய மொழியில் சேகரமாகிய வரலாறு கந்தோபாவின் யாத்ரீகர்ளை புகழ மட்டுமே செய்கிறது.
மொழியியல் உணர்வுக்கு அடிப்படையாகவும் அதன் ஸ்திரத்தன்மைக்கு ஆதாரமாகவும் இருப்பது கலாச்சார உணர்வு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் அவர்களின் முதல் கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்டவர்கள் அல்ல, அதைவிடவும் குறைவாகவே அவர்களின் முதல் மொழியால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் மொழியியல் கலாச்சார தொடர்புறுத்தல்களை குறையுள்ளதாக்குகிறது. அந்நிய மொழியை புனைவு எழுத்துக்கு பயன்படுத்தும்போது நம் கலாச்சார குறையை இன்னும் கீழிறக்குகிறோம். இதைப்போன்ற எழுத்துமுறை ஆங்கில உலகிற்கு இந்தியத்தன்மையை சேர்க்குமா என்பதே ஐயத்திற்குரியது, “-என்று பாலச்சந்ர நிமாடேயை மையமாகக்கொள்வது ஜெஜூரியின் மீதான விமர்சனத்தின் முதலாவது கோணம்.
வைதீகங்களுக்கும் பண்டைய நம்பிக்கைகளுக்கும் சமூக ஏற்புக்களுக்கும் எதிராக நிலைப்பாடு எடுத்துக்கொண்ட கொலாட்கரின் குரலை, ’முற்போக்கின் அறிவார்ந்த வாதம் மற்றும் சந்தேகம் ஆகியவற்றின் விசைகளால் மழுங்கடிக்கப்பட்ட, மரபின் மரபார்ந்த கலாச்சாரத்தின் வேர்களை காணத்தவறிய கவிஞனின் இயலாமை’ என்று அக்ஷய் தோத் வர்ணிப்பதுபோல வகைப்படுத்திக் கொள்வது அதன் ஒரு தரப்பு.
ஆங்கிலம் நம் மரபை திரிபடையச்செய்துவிட்டது. ஆனால் ஆங்கிலம் நம் மரபை நாமே காணவும் வழி செய்துள்ளது. ஆங்கிலமே நம் மறுபக்கம். அதன் வழியாக நுழைந்து நாம் மீண்டும் நம் மரபுக்கே வந்துவிட்டோம் என்ற ஏ.கே. ராமானுஜனின் வரிகளின் வழியாகச் செல்வது, அதன் இரண்டாவது கோணம்.
ஜெஜூரியின் இலக்கிய இடம் நிலைகொள்வது இந்த இருவேறு கோணங்களும் சந்திக்கும் நுட்பமானதொரு புள்ளியில். கொலாட்கரின் மொழியில் சொல்வதானால், தீர்க்கதரிசனங்களைப் போல் நீளும் தண்டவாளங்கள் சந்திப்பதுபோலத் தோன்றும் அடிவானத்தின் ஒரு புள்ளியில்.