ஏடாதி
1.
திறந்திருக்கும் வாசல்
சுழட்டிப் பெய்யும் மழை
கட்டற்ற வெளியில்
கட்டியணைக்கும் இருள்
யானைக் காதின்
மடல் அது போல
வீசும் காற்றில்
வருடும் மேனியில்
முளைவிடும் வித்துக்கள்
வேர்களை ஆழ ஊன்றுகிறது
ஒத்த வீட்டின்
மேவிய குழிமேட்டில்…
2.
எத்தனிக்கும்
களைந்த மதியத்தில்
இளைப்பாறும் கனத்தில்
கிணத்து மேட்டில்
கீற்றசைக்கும் தென்னை
விரித்துகாயும்
அவள் நரையை
அள்ளி வருடியது
புற்றிலிருந்து
தப்பிவந்து
அசந்துறங்கும்
நடைஎறும்பாய்
முற்றிலும் துறவு பூண்ட
புத்தனைப் போல
ஆழ்ந்துறங்குகிறாள்
ஆளாங்குளத்தி
3.
இடையபட்டியில்
கிடையமர்த்தியவனுக்கு
உடைந்தது மண்டை
அடைக்கலம் கேட்டதனால்…
ஒரே வழித்தட பேருந்து
இனம் பிரித்தது
மகளிருக்காக மட்டுமென்று…
சாக்கடையிலும் கூட
தனியாக ஓடியது
மேலத்தெருவும் கீழத்தெருவும்…
பாவம் என்ன செய்தது
குடிசை வீடு
உறங்கும் நெடிய இரவில்
பற்ற வைத்தது
சிறகில்லாத மின்மினி…
4.
கதவு திறக்கையில்
தலை தட்டும்
மிளகாய் கொத்தும்
வேம்புக் கரித்துண்டும்
நிதம் தூவுகிறது அட்சதை….
துவைத்து போட்ட
அம்மாவின் நூற்சேலை
உறங்குகிறது அலமாரியில்
நீள் நாட்களாக
அணைத்துப் போர்த்தினேன்
அம்மாவின் கதகதப்பு
ஒட்டிக் கொண்டது
5.
வெட்டிவைத்த வாழைத்தார்
ஊதிப் பழுக்கிறது
மூடிய உழவர் சந்தையால்…
நிரம்பி வழிகிறது
கழணித் தண்ணீர்
சந்தைக்குப் போகும் வத்துபால்மாடு…
நடைஎறும்பின் வழியே
நானும் சென்றேன்
பக்கத்தில் புற்று…
நேற்று மேய்ந்த ஆடு
வத்தலாய் காய்கிறது இன்று
ஊர் பொங்கல்…
Like this:
Like Loading...