காலாண்டிதழ்

தக்காளி போற்றுதும்

பாப்லோ நெரூதா

தமிழில்: செந்தில்நாதன்

செந்தில்நாதன் தமிழாக்க கவிதை புகைப்படம்

சாலையெங்கும்
தக்காளிகள்,
கோடை,
மதியம்,
வெயில்
தக்காளியின்
இரண்டு
கோளங்களாய்ப்
பிளந்து
சாலையில்
சாறாய்
வழிந்தோடுகிறது.
டிசம்பரில்
காட்டுத்தீயாய்ப் பரவும்
தக்காளி
அடுப்பங்கரைகள் மீது
படையெடுத்து,
மதிய உணவில் ஊடுருவி,
மர அலமாரிகளில்
கண்ணாடிக்கோப்பைகள்,
வெண்ணெய்க் கிண்ணிகள்,
நீலநிற உப்புச் சாடிகள் நடுவே,
அமைதியாய்
அமர்கிறது.
அதற்கென்று
தனித்துவமான ஒளியும்,
அணைத்துச் செல்லும் அதிகாரமும் உண்டு.
துரதிர்ஷ்டவசமாக நாம் அதைக்
கொல்ல வேண்டும்:
அதன் உயிர்ச் சதைக்குள்
கத்தியைச்
செருக வேண்டும்,
செந்நிற
இதயம் அது,
நித்தம் புதிதாய்ப் பிறக்கும்
சூரியன்,
செறிவாக,
துவண்டு போகாது,
சிலே நாட்டின்
சாலடுகளில்,
படிகம் போன்ற வெங்காயத்தை
மகிழ்ச்சியாய் மணமுடிக்கும்.
அதைக் கொண்டாட
ஆலிவ் பழத்தின்
ஆதாரமான
எண்ணெய்,
அரைக் கோளங்களின்
மீது
தன்னையே ஊற்றிக்கொள்கிறது,
குறுமிளகுகள்
நறுமணத்தைச்
சேர்க்கின்றன,
உப்பு தன் ஈர்ப்பை;
இது ஒரு நளினமான
திருமணம்,
பார்ஸ்லி
சிறு பதாகைகளை
உயர்த்துகிறது,
உருளைக்கிழங்குகள்
துடிப்போடு கொதிக்கின்றன,
அந்த வறுவல்
வாசம்
கதவைத்
தட்டி,
நேரமாயிற்று!
வா! என்றழைக்கிறது.
மேசைக்குப்
போனால்
உச்சிக் கோடையில்
தக்காளி,
உலக நாயகன்,
மீண்டும்மீண்டும்
தோன்றி
வளமூட்டும் நட்சத்திரம்,
தன் வளைவுகளை,
தன் நாளங்களை,
புகழ்பெற்ற தன் முழுமையை,
வனப்பை,
நமக்குக் காட்டி,
விதையில்லாமல்
தொலியில்லாமல்
செதிலோ, தண்டோ இல்லாமல்
தன் செந்தீ வண்ண
யெளவனம் முழுவதையும்
கொடையாய்த்
தாரை வார்க்கிறது.

Ode to Tomatoes – Pablo Neruda

A.S.Kline ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டது
புகைப்படம் Anoosrini – Instagram

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்

அம்பை


ambai_nanjil_spl_issue

என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் வந்திருக்கலாம். நாஞ்சில்நாடன் மும்பாய்க்கு 1972இல் வந்தார். நான் 1978இல்தான் வந்தேன். ஆனால் அதற்கு முன்பே அவரைப் படித்திருந்தேன். மும்பாய் வந்ததும் அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. ஊருக்குப்போய் வரும்போது தேங்காய்களும் கருப்பட்டியும் சகோதரிக்குச் சீர் கொண்டு வருவதுபோல் கொண்டுவருவார். தன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானபோது என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, “அத்தை சீர் செய்ய வந்துவிடுங்கள்” என்று உரிமையுடன் உத்தரவிடும் வகையில் உள்ள நட்பு அது. இலக்கிய உலகில் எனக்கு உள்ள எல்லா நட்புகளும் போல இதுவும் இலக்கியமும், வாசிப்பும், விவாதங்ளும் விமர்சனமும் கூடிய நட்புதான். நான் வேற்று மாநிலத்தில் வளர்ந்து அங்கு தமிழ் கற்றவள். அதனால் நாஞ்சில்நாடனிடம் மொழி குறித்தும், தற்கால இலக்கியம் குறித்தும் நிறையப் பேசியிருக்கிறேன். மிதவையிலிருந்து எட்டுத் திக்கும் மதயானை வரை அவர் கையெழுத்திட்டு, கைப்பட எனக்குத் தந்தவைதாம். இப்போது அவரது எழுத்துகள் குறித்து எழுத அமரும்போது அந்த மும்பாய் நாட்களையும் பிறகு கோவை வந்தபோது சில சமயம் சந்தித்துப் பேசியதையும் நினைத்துக்கொள்கிறேன். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுத்து பற்றி நான் எழுதவேண்டிய சரியான காலகட்டம் இதுதான் என்று தோன்றுகிறது. அவர் கடந்து வந்த வாழ்க்கை மற்றும் எழுத்துப் பாதையும் அவர் தற்சமயம் நிற்கும் மைல்கல்லும் எனக்கு மிகத் தெளிவாகப் புலப்படும் கட்டம் இது.

 

nanjil_nadan_spl_issueஹிந்தியில் “மீட்டீ சூரி” (இனிப்பான கத்தி!) என்று சொல்வதுபோல் அவர் எழுத்தில் என்னைத் தொடர்ந்து ஈர்ப்பவை குறித்து ஆரம்பித்து, பிறகு மற்ற விஷயங்களுக்குப் போக விரும்புகிறேன். நாஞ்சில் நாட்டு மனிதர்களை அவரைப்போல வேறு யாரும் வெளியே கொண்டுவரவில்லை என்று ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் வண்ணதாசன் கூறியிருப்பார். வண்ணதாசன் இதுவரை யாரைக் குறித்தும் ஒரு கடுஞ்சொல் கூறாதவர், எல்லோரையும் ஆகாயத்தில் தூக்கி வைப்பவர் என்றாலும் நாஞ்சில்நாடனைப் பொறுத்தவரை அவர் கூறியிருப்பது உண்மைதான். 1975இல் எழுதிய ”விரதம்” கதையில் வரும் சின்னத்தம்பியா பிள்ளையிலிருந்து 2003இல் எழுதிய “வனம்” கதையில் வரும் ஓட்டுனர் வரை அவர் நம் முன் வைக்கும் பலதரப்பட்ட நாஞ்சில்நாட்டு மக்கள் ஒரு பிரதேசத்தின் வட்டத்தினுள் இருந்தாலும் அந்த வட்டத்திலிருந்து எழும்பி மனித வாழ்க்கையையும் அதில் இருந்த, இருக்கும் அழகுகளையும் அவலங்களையும் குறிக்கும் குறியீட்டுப் பிரதிநிதிகளாகிவிடுகிறார்கள். அவர்கள் அப்படி ஆவதற்குக் காரணம் அவர்கள் கதைகளின் பாத்திரங்களாவதனால் மட்டுமல்ல. அவர்களைத் தன் மொழியால் நாஞ்சில்நாடன் வரையும் விதத்தால்தான்.

விரதம்” கதையில் சின்னத்தம்பியா பிள்ளை குளித்துக்கொண்டிருக்கிறார். அதை இப்படிச் சொல்கிறார்:

“துவைத்துப் பிழியப்பட்டிருந்த பள்ளியாடி புளியிலைக் கரை வேட்டி, கல் மீது பாம்புப் புணைபோலப் படுத்துக் கிடந்தது. மாடு குளிப்பாட்டும் பையன்கள் தேய்த்துத் தேய்த்துப் பசுமையாகிவிட்டிருந்த வைக்கோல் கத்தையால் கை, கால், உடம்பு எங்கும் நன்றாகத் தேய்த்தார். ஐம்பது ஆண்டுகளாக இதே பழக்கம். பங்குனி, சித்திரை வெயிலிலும் ஆனி, ஆடிச்சாரலிலும் அடிபட்டு, உரம் பெற்று, காய்ந்து சுருக்கம் விழுந்துவிட்ட உடம்புக்கு, வைக்கோல் கத்தையானால் என்ன? தேங்காய்ச் சவுரியானால்தான் என்ன?

இடுப்பளவு ஆழத்தில் நின்று அரையில் கட்டியிருந்த ஈரிழைத் துவர்த்தை முறுக்கிப் பிழிந்து, முதுகின் பின் பக்கம் வடம் போலப் பிடித்துக்கொண்டு, அழுத்தமாக முதுகைத் தேய்த்தார். அதையே மீண்டும் அரையில் கட்டிக்கொண்டு ஆனந்தமாக நீராடலானார்.”

சின்னத்தம்பியாபிள்ளையின் மொத்த உருவமும் கண்முன் வருவது மட்டுமல்ல, அந்தக் காட்சியும் கண்முன் விரிகிறது. புளியிலைக் கரை வேட்டி, துவைத்துப் பிழியப்பட்டு பாம்புப் புணைபோல அது கிடக்கும் விதம், அவர் முதுகு தேய்த்துக்கொள்வது, அந்தக் குளியலின் ஆனந்தம் எல்லாவற்றையுமே நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. இதற்குப்பின் அந்த ஆற்றை விவரிப்பார். அது அகண்ட காவிரி இல்லை. ஆனால் அதற்கென்று சில குணங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கூறும்போது அந்தக் கிராமமும், அதன் வாழ்க்கை முறையும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. பிறகு கதையின் போக்கில் நாமும் ஆற்றின்போக்கில் போவதுபோல் இழுபட்டபடி போகிறோம். “சூடேறிவிடாத சலசலக்கும் தண்ணீரின் இதம்” கொண்ட அந்த ஆற்றைப்போலவே கதையும் நம்மைத் தொடுகிறது.

மென்மையும் எள்ளலும் எகத்தாளமும் நகைச்சுவையும் கூடிய மொழி நாஞ்சில்நாடனுடையது. மனித இயல்புகளைச் சற்றே எட்டி நின்று பார்த்து வியந்து சிரிக்கும், மனம் நெகிழ்ந்தும் உடைந்தும் நம்பிக்கை கொள்ளும், நம்பிக்கை இழக்கும் பார்வை. அதற்கேற்ற மொழி. “சில வைராக்கியங்கள்” கதையில் வரும் “ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல” என்று பட்டினத்தடிகளைப் பாடிவிட்டு சூட்டோடு பரமசிவம் பிள்ளை இட்லி சாப்பிடுவதை அவருக்கே உரிய எள்ளல் தொனியில் நாஞ்சில்நாடன் விவரிக்கிறார்:

“நுனி வாழை இலையில், ஆவி பறக்க ஐந்தாறு இட்லிகளையாவது வைத்து ஓரத்தில் இரண்டு மூன்று கரண்டி மிளகாய்ப் பொடியை வைத்து அவர் அதை விரலால் குழிக்க, நல்லெண்ணெயை அதன் மீது சரித்தாள் மனைவி.

பரமசிவம் பிள்ளை சாப்பிட ஆரம்பித்தார். உள்ளே போய்க்கொண்டிருந்த இட்லிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், “ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல” என்று சற்று முன் பாடியவர், இது ஒன்றைத்தான் சதம் என்று எண்ணுகிறாரோ என்று தோன்றும்.”

கதை பரமசிவம் பிள்ளை சாதியை விடாமல் பற்றியிருப்பது பற்றிய கதை. ஆனால் கதைக்கான பின்னணியை அமைத்தடி போகிறார் நாஞ்சில்நாடன். பொதுவெளியில் ஒரு நோக்கையும் தன் வாழ்க்கையில் ஒரு நோக்கையும் வைத்திருக்கும் நபர் அவர். பட்டினத்தடிகளின் பாடலுக்கும் அவர் சுவைத்துச் சாப்பிடும் விதத்துக்கும் சம்பந்தமில்லாதது போலவே அவர் அரசியலுக்கும் அவர் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.

பல மாதங்களாக எண்ணெய் காணாத முடியும் உடம்பும் உள்ள ஒருவர் செய்யும் எண்ணெய்க்குளியலும் உண்டு “விலக்கும் விதியும்” கதையில்:

“மரத்து நிழலில் சுகமாக அமர்ந்த பரமக்கண்ணு எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தான். கால்கள், கைகள், தொடை, முதுகு என்று தப்பளம் தட்டினான். காது, மூக்கு, நகங்கள், தொப்புள் எல்லாம் தொட்டுத் தொட்டு வைத்தான். உடலெல்லாம் நசநசவென்று பிசுக்கு. தலையில் இருந்து நெற்றிக்கு வடிந்து புருவப்பந்தியைத் தாண்டி கன்களில் கசிந்தது. வயிற்றில் கோடு போட்டால் வரிவரியாய்த் தடம் விழுந்தது. அழுக்கு கரைந்து மேலெல்லாம் ஒரு மொலுமொலுப்பு. யாரோ தொட்டுக் கூச்சங் காட்டுவதுபோல். அரைமணி நேரம் ஆயிற்று. இவ்வளவு ஊறியது போதும். அவன் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தான்.”

பிறகு எண்ணெய்க்குளியலை அவர் அனுபவிப்பதைக் கூறுகிறார் அவருக்கே உரிய மொழியில்:

”கண்ணிலே ஆவி பறக்கு…கொதிக்க சோத்திலே இருந்து பறக்க மாரி குபுகுபுண்ணு… சவம் எத்தனை மாசச் சூடு? சீக்காப் பொடியைப் போட்டு அரங்கத் தேச்சாலும் பிசுக்கு போல்லே… மேலெல்லாம் பாம்புச் சட்டை போல உரிஞ்சு கெடந்தது இப்பம் பளபளண்ணுல்லா வெட்டுகு? ஈணப்போற எருமை மாரி ஒரு மினுக்கம். சும்மையா பாண்டிக்காரம்லாம் சனி தறுனாலும் எண்ணக்குளி தவறாம இருக்கான்…என்ன சொகமாக இருக்குங்கேன்? பரமசிவன் குளித்துக் கரையேறினான்.”

ஈணப் போகும் எருமைக்கு மினுமினுப்பு இருக்கும் என்பது ஒரு தகவல்தான். ஆனால் அது பரமசிவன் போன்ற விவசாய உழைப்பாளியின் எண்ண ஓட்டங்களிலிருந்து வருவதுதான் கதையில் அது சரியாகப் பொருத்தப்படும் இடம்.

பரமசிவனுக்கும் சுவை கூடிய உணவைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. அவை கடையில் கிடைப்பது அல்ல. ஒரு பெண்ணின் கையால் செய்யப்படும் உணவு:

“…மூதி கொளம்பு வச்சுண்ணா என்னா மணக்கும்! சாணிகெணக்க சளசளன்னு கையெல்லாம் அப்பும், அந்த மாரி வருமாங்கும்? பேசுகேரே நீரும்! உமிக்காந்தல்லே வெறும் அயிலைக் கருவாட்டைச் சுட்டு வச்சாப் போருமே… மணம் பிய்க்காது?…ஒரு கும்பா கஞ்சியை உப்புப் போடாம குடிக்கலாம்… மரச்சீனிக் கெளங்குக்கறி வச்சாண்ணா அது ஒரு மணம்… நெய்யும் தயிரும் அதுக்கு வால்லே கெட்டி அடிக்கணும்…”

சாணி மாதிரி சளசளவென்று கையை அப்பும் என்ற உவமையைக் குழம்புக்காக வேறு யாரால் சொல்ல முடியும் மாட்டுடனும் சாணியுடனும் நிதம் வாழ்க்கை நடத்துபவனைத் தவிர?

நல்ல வசதியாக இருப்பவர்கள் (அவர்கள் வசதியானவர்கள் என்பதைக் குறிக்க அவர்கள் வயல் குறித்த விவரங்களை அல்லது அகன்ற, பெரிய வீடுகளை, சாப்பிடும் சாப்பாட்டை விவரமாகக் கூறுவார் நாஞ்சில்நாடன்) செய்யும் ஏய்ப்புகளை, அதிகாரங்களை, கபடங்களை, அதற்குப் பணிந்துபோகும் கிராமத்தினரின் வாழ்க்கையை, அவர்கள் எதிர்ப்புகளை, மீறல்களை அதனால் விளையும் சங்கடங்களை, மன முறிவுகளை, சோகங்களைப் பல கதைகளில் கூறுகிறார் நாஞ்சில்நாடன். எல்லோருமே மண்ணில் உறுதியாகப் பாதங்களைப் பதித்தவர்கள். அதன் மொழியை உறுதியாகப் பற்றியிருப்பவர்கள். சிலர் பெருவயிற்றுக்காரர்கள்; சிலர் பசித்தவர்கள். சிலர் உழைப்பவர்கள்; சிலர் உழைப்பை அனுபவிப்பவர்கள். சவம், மூதி தாயோளி என்றுதான் கொஞ்சலும் வசவும். எண்ணையை அரக்கித் தலையில் தேய்த்து, ஆற்றங்கரையில் குளிப்பதுதான் இந்த வாழ்க்கையில் உள்ள டாம்பீகம். கிராமத்தில் திருமணம் நடந்தால் நல்ல சாப்பாடு சாப்பிட ஏங்கும் மக்கள். அதிலும் சுயமரியாதையை விட்டுவிட முடியாத நபர்கள் சிலர் பட்டினியாகவே விலகிவிடும் நிலைமை. மனவளர்ச்சியற்றவர்களையும், தாயற்ற பிள்ளைகளையும் அரவணைத்துப் போகும் உலகம். அதே சமயம் சாதியும் அதை ஒட்டிய திமிரும் மடமையும் வன்முறையும் உள்ள உலகம். சாதிக்கேற்ப வாகனத்தில் வரும் கடவுள்களும் குழந்தைகள் விளையாட்டில் வெறும் தாச்சியாக இருந்துவிடும் கடவுள்களும் உள்ள உலகம்.

இந்த உலகத்து விவரங்களை பட்டியலாக்கியபடி கதைகளை எழுதிவிடலாம்தான். அது மிகவும் எளிதானது. ஆனால் நாஞ்சில்நாடன் அதைச் செய்வதில்லை. இடையிடையே சில வரிகள் விழுந்து கதைக்குச் சுருதி கூட்டுகின்றன சில சமயம்; கோடை காலத்து மழைத் துளிகள்போல் தண்மையைப் பரப்புகின்றன சில சமயம். உதாரணங்களாகச் சில வரிகளைக் கூறலாம்:

“…ஆட்கள் நடந்து நடந்து வரப்பின் மத்தியில் பாம்பு அடித்துப் போட்டது போன்று நேரான வழித்தடம் உண்டாகி இருந்தது” (”உபாதை”)
“நொந்த வாழைப்பழமாய் மண் பிதுங்கியது…” (”உடைப்பு”)
“பூச்சி விழுந்த எருமைக் கன்றுக்குட்டியின் வயிறுபோல் இலுப்பை மரக்கரை இளைத்திருந்தது.” (”உடைப்பு”)
”(எருமையின்) நான்கு காம்புகளும் பலாப்பிஞ்சுகள் போல் தெறித்திருந்தன.” (”சுரப்பு”)

நகர்ப்புறத்துக் கதைகள், குறிப்பிட்டுச் சொன்னால் மும்பாய் வாழ்க்கை பற்றிய கதைகளையும் எழுதியிருக்கிறார் நாஞ்சில்நாடன். மும்பாய் நகரத்தில் உறவுகள் அமையும் விதம் குறித்து, மும்பாய் நகரத்தின் போக்கு குறித்து எனப் பலக் கதைகள். கீழே மண்ணில் கொட்டும் பாலைக் கையில் அள்ளி நடைபாதையில் வாழும் குழந்தைக்கு ஊட்டும் மும்பாய் நகரம். இங்கும் குடிசைகள் உண்டு. ஆனால் அவை எப்படிப்பட்ட குடிசைகள் என்று நாஞ்சில்நாடன் விவரிக்கிறார்:

…”குடிசைகள் என்றால் கிராமத்துக் குடிசைகள்போல், சுற்றி மண்சுவரும் ஒரு கதவு நிலையும் இரண்டு சன்னல்களும் மேலே தென்னையோலை, பனையோலை அல்லது புற்கட்டுக்களால் கூரை, சாணமிட்டு மெழுகிய பசுந்தரை, முன்னால் முற்றம், ஒரு வாழைக் குப்பம், இரண்டு கத்தரி, வெண்டை, ஒரு புடலை, ஒரு பாகல் அல்லது அவரைப் பந்தல், ஒரு ஆடு, பசு மாடு, கலப்பை, நுகம், உழவுமாடுகள், நெல்குத்தும் கல் உரல், தோசைக்கும் மாட்டுக்கு பருத்திக் கொட்டையும் அரைக்கும் ஆட்டுரல், அது பதிந்த திண்ணை, மாட்டுக்குத் தண்ணீர் காட்ட கல்தொட்டி, உரக்குண்டு, சுவர் மூலையில் கூரையில் இருந்து தொங்கும் துடைக்கயிற்றுச் சுருள், உமிக்கரிப் பட்டை, கோழிக்கூடு… இந்தக் குடிசைகள் அந்த வகைத்தன அல்ல.” (”ஒரு காலைக் காட்சி”)

மற்ற நகரங்களைப் பற்றிய கதைகளும் உண்டு. அவை உருவாக்கும் கூச்சல்கள், குமுறல்கள், அவைகளில் அமையும் பயணங்கள் பற்றிய கதைகள். பாதைகளைப் பிணைக்க முயன்று மனங்களைப் பிரித்துவிடும் பயணங்களை உருவாக்கும் நகரங்கள். செயற்கை முறையில் பசுவைக் கருத்தரிக்க வைக்கும் பசு வதை செய்யும் நகரங்கள். இவற்றில் “வனம்” என் மனத்துக்கு மிக நெருங்கிய ஒன்று. தரமற்ற சொற்களால் எல்லோரையும் கடிந்துகொண்டு வண்டியை ஓட்டும் ஓட்டுனர் ஒருவர் வேகமாக ஓட்டும் பேருந்தின் பாதையின் குறுக்கே “சுசீந்திரம் தாணுமாலையன் தேர் வடம் போல்” ஒரு பாம்பு. மிக மெதுவாக, பரபரப்பின்றிப் பாதையைக் கடக்கும் பாம்பை—அது கர்ப்பிணிப் பாம்பாக இருக்கலாம்; இரையெடுத்த நிறைவயிற்றுப் பாம்பாகவும் இருக்கலாம்—கடுப்பு மிகுந்த ஓட்டுனர் ஏற்றிக் கொன்றுவிடுவார் என்று மனம் பதைக்கும்போது, “போ மோளே பெட்டெந்து” என்கிறார் ஓட்டுனர் கியரில் கை வைத்தபடியே. குரலில் கனிவு கசிகிறது. மனிதர்களும் மிருகங்களும் சந்திக்கும் இடம் வனம். அங்கு அவைகளுக்குத்தான் முதல் மரியாதை.

தாயை அறியா தந்தை அற்ற, ஆச்சியும் பாட்டாவும் வளர்க்கும் கல்வி கற்ற இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் வறுமை, கல்வி கற்ற பின்பும் வேலைக்காக அலையும் படலத்தைக் கூறுவது என்பிலதனை வெயில் காயும். கிராம வாழ்க்கையிலும் தன் ஆச்சி பாட்டாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் ஒரு பையன் படிப்பில் வல்லவனாக இருந்தாலும் வறுமையால் ஆளுமையற்றவனாக உணர்வது, தன்னை நினைத்துக் கழிவிரக்கம் கொள்வது இவற்றைக் கூறுவது. இதில் நாஞ்சில்நாடனின் வழக்கமான தெள்ளிய நடையும் துல்லியமான பார்வையும் இருப்பது பல இடங்களில் தெரிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் அதில் வரும் அனுபவங்களும் அவற்றைக் கூறும் மொழியும்:

“குளம் நீலமாகப் பூத்திருந்தது. கண்கண்ணான நீலம். எண்ணெய் தடவிய பச்சை இலைகள் போக்கு வெயிலில் பளபளத்தன. ஊடே ஊடே ஆம்பல் கொடிகள். ஆம்பலின் வட்டமான இலைகள். ஓரங்கள் பல்பல்லாக, மரமறுக்கும் வாள்போல, கூட்டம் கூட்டமாய் நுள்ளிக்காய் கொடிகள், நிமிர்ந்திருந்த இலைகளில் பச்சை. காற்றில் புரண்டிருந்த இலைகளில் தவிடு. குளத்தின் ஓரத்திலோங்கி உயர்ந்திருந்த கொங்காணிக் கோரைப்புற்கள். ஊடே உகளும் கெண்டைகள்….” (பக்கம்.36)

”…வேப்பமர நிழலில் கொஞ்ச நேரம் இளைப்பாறுகையில், மனம் காற்றில் அலையும். காய்ந்த சருகு போல ஏறும். இரங்கும். ஒல்கும். ஒசியும். அசையும். மிதக்கும்.” (பக்கம் 59)

உகளும், ஒல்கும், ஒசியும் இவை மிகவும் அபூர்வமாக உபயோகத்தில் வரும் வினைச்சொற்கள். அவற்றை மிகவும் சரியாகப் பயன்படுத்தும்போது மனத்தில் ஒருவித உவகை மூள்கிறது. படித்தபின் மிகுந்த நிறைவைத் தரும் நாவல்களில் ஒன்று என்பிலதனை வெயில் காயும். படைப்பாளி மும்பாய் வந்து ஏழாண்டுகள் ஆன பின்னும் கிராமத்து இளைஞன் ஒருவனின் நிலையை, அவன் உணர்வுகளுடன் ஒன்றிக் கூறும் நாவல்.

கிராமத்து ஆண் ஒருவன் வயிற்றுப் பிழைப்புக்காக நகரம் ஒன்றுக்குப் போகும்போது அவன் அடையும் உளைச்சல், பொருந்த முடியாமல் அவன் அந்நியப்பட்டு நிற்கும் நிலை, கிராமம் குறித்த அவன் ஏக்கங்கள் இவற்றை 135 பக்கங்களில் கூறும் நாவல் மிதவை. இதில் நாஞ்சில்நாடனின் நோக்கும் கதையை நிகழ்த்தும் விதமும் சற்றே வேறுவகையாக மாறிப்போகிறது. “பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியதுபோல” பெரியப்பாவை நம்புகிறான் சண்முகம், என்ற நாஞ்சில்நாடன் பாணி உவமைகளுடன் ஆரம்பிக்கும் நாவல் பிறகு வேறு திசையில் போகிறது. வாசகசாலையில் பல பத்திரிகைகள். அன்றைக்கான பேப்பர் பனிரெண்டரை மனிக்குத்தான் வரும். பதினோரு மணியளவில் போனால் அதிகம் ஆட்கள் இருக்க மாட்டார்கள். தினத்தந்தி ரொம்பக் கசங்கி கூழாக இருக்கும். ஒரு மாதிரி கசங்கலோடு தினமலர். தினமணி மாத்திரம் “புதுக்கருக்கு அழியாத பெண்போல.” படித்துக்கொண்டே போகும்போது கண்களை முட்டுகிறது உவமை. ”தினத்தந்தியை எடுத்து முன்னால் விரித்து வைத்துக்கொண்டு அதில் வெளியாகி இருக்கும் சினிமா நடிகையின் முலை தடவி கிளர்ச்சியுறலாம்.” என்று போகிறது இன்னொரு வரி. (பக்கம் 7) என்பிலதனை வெயில் காயும் நாவலில் தனக்குப் பாலுணர்வு ஏற்பட்ட விதத்தை அதை ஒட்டிய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறான் சுடலையாண்டி. அது அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன், வியப்பு உணர்வுடன் ஆனால் எந்த வகையிலும் நம்மை உறுத்தாத வகையில் சொல்லப்படுகிறது. ஓர் இளைஞன் படத்திலுள்ள சினிமா நடிகையின் மார்பைத் தொட்டுக் கிளர்ச்சியுறுவது ஒன்றும் நடக்காத விஷயமில்லை. அது ஆபாசமுமில்லை. அது யதார்த்தம்தான். முலை என்ற சொல்லும் தவறானது அல்ல. பெண் உடலின் ஒரு பாகத்தைக் குறிப்பதுதான். ஆனால் இங்கு அது வலிந்து புகுத்தப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முன்பொரு கதையில் பெண்ணின் மார்பை பால்மடு என்று கூறுவார். சினிமா நடிகைகளுக்கு இருப்பது பால்மடு இல்லை போலும்!

கிராமத்திலும் காமத்தைக் கிளறும், உடல் உறவைத் தரும், யாசிக்கும் பெண்கள் உண்டு. அவர்களின் கட்டான உடலைப் பற்றியும் இளம்பெண்கள் வயதுக்கு வரும்போது ஒளிரும் உடலைப் பற்றியும் கூட குறிப்புகள் உண்டு கதைகளில். ஆனால் கிராமத்தை விட்டு வெளியே வரும், பயணம் செய்யும் அல்லது படித்த நகர்ப்புறப் பெண்களை நாஞ்சில்நாடனுக்குப் பிடிப்பதில்லை ஏனோ. மேலும் நகரத்துக்குப் போக முடிவு எடுத்த உடனேயே அந்தப் படித்த இளைஞனின் மொழி மாறிவிடுகிறது. ரயிலில் செல்லும்போது கீழே பார்க்கும் வறண்ட வைகை அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சாதாரண அதிர்ச்சி இல்லை:

”பெரிய அதிர்ச்சியாக இருந்தது வைகையைப் பார்க்க. கிழட்டுத் தேவிடியாளைப் பார்ப்பதுபோல். கால்களில் நீர், வெடிப்பு, முகத்தில் வீக்கம், காய்ந்து அடர்ந்த உதடுகள், பூழை திரண்ட கண்கள், சரும ரோகம், தோல் பாய்ந்த முலைகள், ஒருவித வீச்சமுடன் இருக்கும் இருக்கும் கிழட்டுத் தேவிடியாளைப் பார்ப்பது போல் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது வைகையைப் பார்க்க….” (பக்கம் 20)

அவன் மனத்தில் இருந்ததெல்லாம் சிலப்பதிகார வைகையும் சில வரலாற்று நாவல்களில் வரும் வைகையாக இருந்தாலும் சிதைந்தும் வரண்டும் போன ஆறு ஒன்று குலைக்கப்பட்ட பெண்ணின் உடலாய்த் தெரிவதில் உள்ள வன்முறை என்னையும் அதிர்ச்சியடைய வைத்தது. அது ஒரு வயதான, அழகை எல்லாம் இழந்த, சுருக்கங்கள் உள்ள, கவனிக்கப்படாத முதிய பெண்ணுடலாக இருந்திருக்கலாம். அதில் அந்தப் பெண் உடலுக்குத் தரும் மரியாதை இருக்கிறது. ஆனால் தேவிடியாள் என்று கூறும் உவமையில் ஒரு சரித்திர இகழ்ச்சியும் மானபங்கமும் இருக்கிறது.

இதனுடன் நிற்பதில்லை இந்த வேலையில்லா இளைஞன். ரயிலில் கீழே படுத்திருக்கும் ஏழு வயதுப் பெண்ணின் தாயாரை அவன் பார்க்கிறான். அவள் மார்ச்சேலை விலகியிருக்கிறது. ”அந்த அம்மாளின் முழங்காலை யதேச்சையாய் படுவதுபோல், பெருவிரலால்” தொடுகிறான். பிறகு “முழங்காலின் குதிரை முகத்தை மெதுவாகத் தடவத்” தொடங்குகிறான். கால் விரலிடுக்கில் புடவையைப் பற்றி இன்னும் கொஞ்சம் தூக்கலாமா என்று தோன்றுகிறது அவனுக்கு. பயமாக இருக்கிறது. ஆனாலும் சிறிது நேரம் தொடர்கிறான். அதன்பின் ”முலை முகடுகளை” வெறித்துப் பார்த்துவிட்டு கழிவறையை நோக்கிப் போகிறான். அவனுக்கு இன்னும் வேறு எதுவோ தேவையாக இருக்கிறது. (பக்கம் 21-22)

ரயில் பல இடங்களை கடக்கிறது. பலவித பெண்களும் ஆண்களும் கண்ணில் படுகிறார்கள். தார்பாய்ச்சி கட்டிய புடவை உடுத்திய பெண்கள் வந்ததும் அவன் மனத்தில் உதிக்கும் முதல் கேள்வி இவர்கள் ஒன்றுக்கு எப்படிப் போவார்கள் என்பதுதான். (பக்கம் 40)

மும்பாய் வாழ்க்கை எளிதாக இல்லை அவனுக்கு. எதிர்நீச்சல் போட்டு, வேலையொன்றை அடைந்து, மனம் தளர்ந்து சில சமயம் மனம் உடைந்து, உடல் வேட்கையைத் தீர்த்துக்கொண்டு, கடனை வாங்கி மீண்டும் ஊர் செல்லும்போது எல்லாவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் அவன் திரும்புவது அவன் வீட்டை நோக்கி, அவன் மண்ணை நோக்கி. இந்த மகிழ்ச்சியும் கவலையும் கலந்த தருணத்தை நோக்கி அவன் வரும்வரை உள்ள வாழ்க்கையின் சிக்கல்களை அலங்காரமில்லாத சொற்களில், மௌனங்களைப் பிணைத்துக் கூறுகிறார் நாஞ்சில்நாடன். இந்தப் பகுதியிலுள்ள லகானிட்ட மொழிதான் மிதவை நாவலின் வெற்றி.

நாஞ்சில்நாடனின் சதுரங்கக் குதிரை நாவல் அவரது நாவல் முயற்சிகளிலேயே மிகவும் கவனத்துடன் அமைக்கப்பட்ட, பிசிறுகள் இல்லாத ஒரு முயற்சி. சதுரங்கத்தில் குதிரைதான் மிகவும் வித்தியாசமாக நகர்த்தக்கூடிய காய். நகர்த்தப்படும்போது அது இரண்டு இடங்கள் கிடை நிலையிலும் ஓர் இடம் செங்குத்தாகவும் அல்லது இரு இடங்கள் செங்குத்தாகவும் ஓர் இடம் கிடை நிலையிலும் நகர்த்தப்படலாம். மற்ற காய்களைப்போல் அல்லாமல் குதிரை மற்ற காய்களைத் “தாண்டிக் குதித்து” தன் இலக்கை எட்ட முடியும். சதுரங்கப் பலகையின் நடுவில் இருந்தால்தான் குதிரை வெற்றிகரமாகச் செயல்படமுடியும். ஓரத்தில் இருந்தால் அதை வீழ்த்துவது எளிது. சதுரங்கக் குதிரை நாவலின் மையப் பாத்திரமும் சதுரங்கப் பலகையின் இயக்கம் அதிகம் உள்ள மையத்தில் வைக்கப்படாததால் விளிம்புகளில் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு சதுரங்கக் காய்தான். பலவகைகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் எதுவுமே அதிகத் தாக்கத்தைத் தராத செயல்பாடுகள். மும்பாய் வந்து பல ஆண்டுகளாக இருந்து அங்கேயே நிலைத்துவிட்ட, கிராமத்தில் நெருங்கிய பாசமுள்ள உறவினர்கள் என்று கூறிக்கொள்ள ஒருவரும் இல்லாத, திருமணமாகாத, நாற்பத்தைந்து வயதான, எந்தக் குறிப்பிட்ட இலக்கும் இல்லாத, எதிலும் ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும், அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் முற்றிலும் அந்நியப்பட்டுப்போன ஒரு நபரின் கதை.

சுற்றிலும் உள்ள பல ஆண்களை அவரவர் தறுவாயில் வைத்து அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் புரிந்துகொள்ளும் இந்த மையப் பாத்திரத்துக்கு அடிமனத்தில் சில கசப்புகள் மட்டும் தீராமலே இருக்கின்றன. அதில் முக்கியமானது பெண்கள் குறித்த சில அபிப்பிராயங்களும் இன்னும் பொதுவான சில முற்சாய்வுகளும். ஒரு தெருவின் சதுக்கத்தில் இருபத்திரண்டு ஆண்டுகளாய் கையில் பூண்கட்டிய பிரம்பும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய், வயதாகிவிட்டதால் தற்போதுள்ள வழுக்கைத் தலையுடன், “ஓம் க்ரீம் ரீம்” என்று பிரார்த்தித்தபடி உலாத்திக்கொண்டு இருப்பவரை அடி வயிற்றுக்குக் கீழே குத்து விடத் தோன்றுகிறது நாராயணனுக்கு ஆரம்ப காலத்தில். மிடுக்குக் குலைந்து, குரல் க்ஷீணித்துவிட்ட அவரிடம் பிறகு அனுதாபம் பிறந்தாலும் மனத்தில் அவரைப் பற்றிய கேள்விகள்: அவர் யார், திருமணவானவரா தனியரா, மழை பொழிந்தால் எங்கு போய் இந்த ஓங்காரம் செய்வார் போன்ற சாதாரணக் கேள்விகள் மட்டுமல்ல; அவர் பூணூல் மாற்றிக்கொள்கிறாரா என்ற கேள்வியும் கூடத்தான். (பக்கம் 2) அந்த விவரம் நாராயணனுக்கு ஏன் அவசியமாகப் படுகிறது என்பதற்கு எந்த விளக்கமுமில்லை. அதேபோல் ஔரங்காபாதில் ஒரு மிகச் சாதாரண ஓட்டல் ஒன்றில் கழிப்பறைகளுக்கு அடுத்து இருந்த அறையில் இரவைக் கழிக்கும்போது, கழிப்பறையிலிருந்து நாற்றம் அறையை எட்டுகிறது. அதை “வீர மராத்தியரின் மூத்திர வாடை” (பக்கம் 178) என்று நாராயணன் நினைக்கிறான். வீரத் தமிழர்களின் மூத்திரத்தில் பன்னீர் மணமா வீசுகிறது? நாஞ்சில்நாடனின் வழக்கமான ரசிக்கக்கூடிய எள்ளல் தொனியை இங்கு ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது.

வேலை செய்யும், வேறு மாதிரி உடை உடுக்கும் பெண்களை நாஞ்சில்நாடனுக்குப் பிடிக்காது என்பது இந்த நாவலிலும் உறுதியாகிறது. நாராயணன் வேலை செய்யும் கம்பனியில் டெலிஃபோன் ஆபரேட்டராக இருப்பவள் ஜாய்ஸ். ஐம்பத்தேழு வயதுப் பெண்மணி. அலுவலகத்துகு வந்ததும் அவள் பாத்ரூம் நோக்கிப் போவாள். “ஒன்றுக்குப் போவாளாக இருக்கும்” என்று நினைப்பான் நாராயணன். (பக்கம் 7) ஒரு பெண் பாத்ரூமை நோக்கிப் போவது வேறு எதற்காக இருக்க முடியும்? மேலும் அது என்ன அப்படிப் பெரிய குற்றமா என்ன? அது எல்லாம் இல்லை. அவள் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. ஐம்பத்தேழு வயதிலும் ஃபிராக் போடுபவள். அது மட்டுமல்ல. இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறப்போகும் பான்வாலாவுடன் உற்சாகமாகச் சினிமா பார்ப்பவள். நாராயணனால் எப்படி அவள் பாத்ரூம் நோக்கிப் போவதைக் குறித்துக் கீழ்த்தரமாக நினைக்காமல் இருக்க முடியும்? ஐம்பத்தேழு வயதுப் பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்ற முன்தீர்மானங்கள் உள்ள நபராயிற்றே அவன்?

எட்டுத் திக்கும் மதயானை வெகுவாகப் பாராட்டப்பட்ட நாவல். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல விருதுகளைப் பெற்ற நாவல். ஆனால் அது வியாபார சினிமாவின் சினிமாத்தனம் உள்ள ஒரு திரைக்கதையாகவே எனக்குப் பட்டது. மையப் பாத்திரமான பூலிங்கம் கல்லூரிப் படிப்பை முடிக்காத, எந்தவித அதிகச் சிறப்புகளும் இல்லாத ஓர் இளைஞன். எதிர்மறை கதாநாயகனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உள்ளவன். பலவித நாடகத்தன்மை வாய்ந்த திருப்பங்களுடன் அவன் வாழ்க்கை ஓடுகிறது. மும்பாயின் கடத்தல் கும்பலுடன் வாழ்க்கை நிலைக்கிறது. கிட்டத்தட்ட இன்னொரு நாயகன். பிறகு எந்தப் பெண்ணுக்காக அவன் காரணமின்றி அடிபட்டானோ அதே பெண் ஆண்மை இல்லாத கணவனுடன் அவனைச் சந்தித்துப் பின் அவன் அவளை மீட்டுத் தன்னுடன் வாழ அழைத்துப் போவதுடன் முடிகிறது. பூலிங்கம் ஓடும் எல்லா இடங்களிலும் அவனுக்குப் பெண் துணை கிடைக்கிறது. உணவிடுபவர்கள் கிடைக்கிறார்கள். ஒரு வயதான, தார்ப்பாய்ச்சி கட்டிய பெண்மணி அவனுக்கு உணவிடும்போது அவள் கிழட்டு எல்லம்மன் போலத் தெரிகிறாள். “உலகத்துக்கு அமுது படைத்துக் களைத்த கிராமத்துத் தேவதையின் மூப்புக் கனன்ற முகம்” அவளுக்கு. (பக்கம் 91) நல்ல வேளை அவள் ஃபிராக் போட்ட ஆங்கிலோ இந்தியப் பெண்மணி இல்லை.

பூலிங்கத்துக்கு இடையிடையே தமிழ் இலக்கிய மேற்கோள்கள் தோன்றியபடி இருக்கின்றன. அவனிடம் அன்பு காட்டும் கோமதி என்ற பெண் சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும்போது ”முந்தை இருந்து நட்டார் கொடுப்பின் நஞ்சும் உண்பார்” என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.(பக்கம் 116) பின்னொரு கட்டத்தில் அவள் கண்களில் நீர் மல்கும்போது, “புரந்தார் கண் நீர்மல்க” என்ற வரிகள் மனத்தில் வருகின்றன.(பக்கம் 122) இரண்டுமே நல்ல வரிகள்தாம். ஆனால் பூலிங்கத்துக்கு அத்தகைய வரிகள் நினைவுக்கு வருவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் கதையில் இல்லை.

பூலிங்கமே பட்டினியாக இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வருவான். இப்போது எந்த இலக்கிய வரிகளும் பூலிங்கத்துக்கு நினைவுக்கு வராது. ஆனால் ஒரு கொச்சையான பழமொழி அடிநாக்கில் உறுத்தும். “பெருமாள் முஷ்டியில் முயக்கம் செய்தாராம். பூசாரி பெண்குறி வரம் கேட்டாராம்.” (பக்கம் 138) இரண்டு நாட்கள் பட்டினியாக இருக்கும்போது கூட இத்தகைய பழமொழிகள்தாம் நினைவுக்கு வரும் போலும். அலைக்கழிக்கப்படும், விரட்டப்படும் ஒருவனுக்கு யோக்கியமாக இருப்பது குறித்து சிந்தனை எழும். கூடவே தோன்றும் இன்னொரு பழமொழி: “பத்தினிப் பெண்குறி பிரதேசம் போயிற்றாம். ஐம்பத்தாறு தேசத்து ஆண் குறிகளும் எதிர் நின்று அழைத்தனவாம்.” (பக்கம் 158)

கும்பமுனிக் கதைகளையும் மேற்கூறிய சில நோக்குப் பிறழ்வுகளையும் நான் ஏற்காது போனாலும் நாஞ்சில்நாடனின் எழுத்தை நான் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். அவர் கதை உலகம் பரந்த ஆணுலகம் ஒன்றை விரிப்பது. இதில் மனத்தைத் தொடும் பல பெண்களும் உண்டு. கிராமத்திலிருந்து நகரம் வரை இதில் வரும் பலதரப்பட்ட ஆண்கள் உருவச் சித்திரங்கள் போல் உருவாக்கப்படுகிறார்கள். தத்ரூபமான உருவச் சித்திரங்கள். கிராமத்துப் பெண்களின் உருவச் சித்திரங்களும் அவ்வாறே உள்ளன. ஆனால் நகர்ப்புறப் பெண்களை உருவாக்கும்போது இந்தச் சித்திரங்களின் கோடுகள் கோணலாகிவிடுகின்றன. நாஞ்சில்நாடனின் எழுத்து அற்புதமான கிராமம், அற்பமான நகரம் என்ற இருமைகளை உருவாக்காமல் இருப்பதுதான் இவர் எழுத்தின் ஈர்ப்பு. மிகவும் எளிமையாக்கப்பட்ட முறையில் வாழ்க்கையை எழுதாமல் சிக்கல்களாகவே முறுக்கப்பட்ட மனித வாழ்க்கையின் ஊடே புகுந்து அதில் உள்ள நயங்களையும் கொச்சைத்தன்மைகளையும் கூறக்கூடிய வெகு சில எழுத்தாளர்களில் ஒருவர் நாஞ்சில்நாடன்.

தன் எழுத்துக்கு சரியான அங்கீகாரம் கிட்டவில்லை என்ற குறை நாஞ்சில் நாடனுக்கு இருந்தது. பொதுச்சொத்து என்பதால் படைப்பு மரியாதை இழந்துபோகிறது என்கிறார் எட்டுத் திக்கும் மதயானையின் முன்னுரையில். ”அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவளமணிப் பூண்கள், பரிவட்டம்…” என்று கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஒரு நிகழ்வுக்கு பல எழுத்தாளர்களுடன் நானும் போனபோது நாஞ்சில்நாடனும் வந்திருந்தார். அங்கு பேசியபோதும் தனக்கு சாகித்திய அகாடமி விருது தராதது குறித்து கோபமாகவும் எள்ளலாகவும் பேசினார். தற்சமயம் அவருக்கு அந்த விருதும் வந்துவிட்டது. வேறு பல அங்கீகாரங்களும் வந்துவிட்டன. தமிழ் சினிமா உலகில் அவர் எழுத்தும் உழைப்பும் இனி வெகுவாகப் பயன்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். அது இன்னும் ஓர் உற்சாகமான கட்டமாக அமையலாம் அவரைப் பொறுத்தவரை.

நாஞ்சில்நாடன் மும்பாயில் இருந்தபோது என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருந்தார். சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கூறினேன். அன்றைக்கு பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் மொளகூட்டல் என்று கூறும் கூட்டு மாத்திரம்தான் சமைத்திருந்தேன். தேங்காய் இல்லாததால் பொடி போட்டுச் செய்திருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் “நல்லா இருந்ததா?” என்று கேட்டேன். “இது என்ன சொன்னீங்க? கூட்டா? இது பிடிக்கலை” என்றார். “அப்புறம்?” என்றேன். கூட்டு மட்டும்தான் செய்திருந்ததால் என்ன சொல்வது என்று தெரியாமல், “தயிர் நல்லா இருந்தது” என்றார். மனத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் அந்த வெள்ளந்தியான நாஞ்சில்நாடனை, நான் வெகு பத்திரமாக என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன் அவர் எப்போதாவது தேடினால் திருப்பித் தர.

 

நாஞ்சிலின் நறும்புனல்

சுனில் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueமூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் அடிப்படை பயிற்சியற்றவன். எனவே, அவருடைய கம்ப ராமாயான உரையை முழுவதுமாக உள்வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 

 
ஐம்பது அறுபது பேர் இணைந்திருக்கும் கூடுகையில் பிற அனைவரும் அவருடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் உரையாட தகுதியற்றவனாக என்னை மட்டும் கற்பிதம் செய்துகொண்டேன் (என்னைத் தவிர பிற அனைவருமே அவரை வாசித்தவர்கள், அதனாலேயே இயல்பாக உரையாடுகிறார்கள் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கை). மேலும், நாஞ்சில் எளிதில் அறச்சீற்றம் கொள்பவர் எனும் மனப்பதிவு வேறு இருந்ததால், அவரை வாசிக்கவில்லை என்பது பாதுகாப்பான சமாதானமாகவும் இருந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போதாவது ஒழுங்காக வாசித்துவிட்டு உரையாட வேண்டும் என உறுதி பூண்டவனாய், சம்பிரதாய வணக்கங்களுக்கு அப்பால் எதுவுமே உரையாடாமல் புறப்பட்டுவிட்டேன்.  
 
அடுத்த கூட்டத்திற்குதான் இன்னும் காலமிருக்கிறதே என்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே காரைக்குடி புத்தககண்காட்சி சிறப்பு விருந்தினராக நாஞ்சில் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பில் அவர் பெயர் பார்த்தவுடன் மனம் பரபரக்க, நண்பர்களிடமிருந்து அவருடைய எண்ணைப் பெற்று அழைத்தேன். ஆச்சரியமாக, நான் எப்படியோ அவருடைய நினைவில் இருந்தேன். முன்அனுமதி பெற்று, அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். மிக இயல்பாக அரசியல், இலக்கியம், பயணம், அனுபவம் என உரையாடத் துவங்கினார். அந்த இரண்டாம் சந்திப்பிற்கு பின்னர் கம்பன் விழா, எனது திருமணம் என இந்த மூன்று நான்கு ஆண்டுகளில் குறைந்தது பத்து முறைகளாவது அவரைச் சந்தித்திருக்கிறேன்.
 
நாஞ்சிலுக்கு அபார உணவு ரசனை உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். நாஞ்சில் நாட்டு உணவு வகைகளைப் பற்றி பேசும் அவருடைய கட்டுரைகள் மட்டுமின்றி அவருடைய புனைவுகளிலும் அவை வெளிப்படும். மும்பை சேரியில் கிடைக்கும் வடா பாவ் துவங்கி நாஞ்சில் நாட்டு தீயல்கள் வரை உணவின் வாசனையை நாம் அவரது எழுத்தில் உணர முடியும். ஒருமுறை, செட்டிநாடு பலகார கடைக்கு ஒரு நாள் மாலை சென்றோம். அதற்கடுத்த முறையிலிருந்து மதிய உணவை தவிர்த்து நேராக மாலை பலகாரம்தான். ஒவ்வொருமுறை இங்கு வந்துவிட்டு ஊர் திரும்பும்போதும் அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து சீப்பு சீடை, முறுக்கு போன்ற செட்டிநாட்டு தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு போவார். ‘செட்டிநாட்டு சாப்பாடக் காட்டிலும் நாஞ்சில் நாட்டு சாப்பாடு பிரமாதமா இருக்கும், ஆனா பாருங்க, எப்படியோ வியாபாரம் பாக்க போன இடத்துல பிரபலமாகிட்டாங்க… செட்டிநாடுன்னு போட்டு கேரளாகாரங்ககூட ஹோட்டல் நடத்துறாங்க’, என்பார். 
 
மறைந்த தமிழறிஞர் பா.நமசிவாயம் மீது நாஞ்சிலுக்கு பெருமதிப்பு உண்டு. அவர் காரைக்குடிக்கு வரும்போதெல்லாம் அங்கு சென்றுவருவோம். நாளுக்கொரு முறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் எண்பது வயதிற்கு மேலான நமசிவாயம் அவர்கள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க,  நாஞ்சில் அவருடன் உரையாடக் கேட்பது அபாரமான அனுபவம். 
 
நாஞ்சில் காரைக்குடி கம்பன் கழகத்திற்காக கம்பனின் அம்பறாதூணி எனும் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவை விரித்து நூலாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மிக முக்கியமான சொல்லாய்வு நூல் அது. ஒவ்வொரு சொல்லாகப் பகுத்து நுணுக்கி அதன் அத்தனை சாத்தியங்களையும் ஆராயும்போது மொழியின் வீச்சை உணர்ந்துகொள்ள முடியும். பொதுவாக, குருடர்கள் துழாவிய வேழமாகத்தான் நாம் மொழியை உணர்ந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.
 
தமிழ் மெல்லச் செத்துவிடுமோ எனும் அச்சம் அவருக்குண்டு. ‘மொழி சுருங்கிகிட்டு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு கிடக்கு’ என்பதே அவருடைய தலையாய கவலை. மேடைகளிலும், நேர்ப்பெச்சிலும் அவர் இந்த அச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு நவீன எழுத்தாளனாக மரபிலக்கியங்களில் அவர் எதை தேடுகிறார் என்பதற்கான விடை இதிலுண்டு. வழக்கொழிந்த சில சொற்களை தன் வாழ்நாளில் மீண்டும் கவனப்படுத்தி நிலைநிறுத்துவதை தனது கடமை எனக் கருதுகிறாரோ என்றுகூட எண்ணுவதுண்டு. 
 
உணர்ச்சி மிகுந்த ஆளுமை என்றாலும் அவர் நேருக்கு நேராக எவரையும் நோகடித்து நான் கண்டதில்லை. ஆனால் மேடைகளில் அவரை இருக்கையில் இருத்திவிட்டு கும்பமுனி உரையாற்றும் தருணங்களும் உண்டு. ‘நானும் எத்தனையோ மேடைகள்ல பேசிட்டேன். ஆனா இன்னிக்கும் எனக்கு கொஞ்சம் கலக்கம் உண்டு’, என்று சொல்லியிருக்கிறார். ஆம், மேடைப் பேச்சுக்கு முன்பான அரைமணிநேரம் கொஞ்சம் நிலையிழந்து காணப்படுவார். ஆனால் அது தன்னம்பிக்கை குறைப்பாட்டால் விளைந்ததல்ல என்பதையும் நான் நன்கறிவேன். திட்டமிட்ட தலைப்புகளில் தயாரித்த உரைகளைத் தவிர்த்து பிறவற்றுக்கு அவர் சென்றுவிடும் தருணங்களுமுண்டு. மேடையில் அமரச்செய்து அவருடைய பொறுமையைச் சோதித்த காரைக்குடி புத்தக கண்காட்சியில் நாற்பது நிமிடங்களுக்கு மேல் எவ்வித தயாரிப்புமின்றி மிகக் கூர்மையாய்ச் சீண்டும் உரையை ஆற்றி முடித்தார். 
    
நாஞ்சில் அபாரமான உரையாடல்காரர். அவருடைய புனைவுகளை வாசித்திருந்தாலும், ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் அவரிடம் அவைகளைப் பற்றி பேசியதில்லை. தன் படைப்புகள் குறித்து நேரடியாகப் பேசுவதில் அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் எப்போதும் உண்டு. உரையாடல் அது காட்டும் வாழ்க்கைக்கும், அது சார்ந்த வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடம்பெயர்ந்து விடும். 
 
நாஞ்சில் தனது பணி நிமித்தமாக நாடெங்கும் பயணித்திருக்கிறார். கூடவே ஒவ்வொரு ஊரின் உணவு சிறப்புகளைப் பற்றியும் கச்சிதமாகச் சொல்வார். அவர் இங்கு வந்திருந்தபோது அவர் பணியாற்றிய பரதேசி திரைப்படத்தை ஒருநாள் இரவு சென்று பார்த்தோம். அப்போது தன் சினிமா அனுபவங்களை அவ்வப்போது சொல்லி வந்தார். ‘அந்த டான்ஸ் மாஸ்டர் பன்ன பாதிரியார் ரோல் நான் பண்ணியிருக்க வேண்டியது… பாலாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். இந்த டான்செல்லாம் நான் ஆடியிருந்தா?… நெனைச்சே பார்க்க முடியல”, எனச் சொல்லி சிரித்தார்.
 
ஒருமுறை உறவினர் ஒருவரின் திருமணம் நின்றுபோன கதையை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்கள் சிவந்து நீர்த்துளிகள் உருண்டோடின. ‘என்ன சார்?’ “பாவமுள்ள’ என்று சொல்லிவிட்டு வேறேதும் பேசவில்லை. சக மனிதர்களின் மீது அவருக்கு இருக்கும் பரிவு, அதுவே நாஞ்சிலின் உலகம். நெடுந்தூர பேருந்து பயணங்களில் மூத்திரத்தை அடக்கும் சர்க்கரை நோயாளிகளுக்காகவும், பெண்களுக்காகவும் அவரால் கவலைகொள்ள முடிகிறது. அசோகமித்திரனை எண்ணும்போதும் எனக்கு இதே உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் வெளிப்பாட்டின் அளவில் இருவரும் வேறானவர்கள். 
 
ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி அவர் மீது ஒரு தந்தைக்குரிய நேசம் எனக்குண்டு. எனது திருமணம், சகோதரனின் திருமணம் ஆகியவற்றில் முழுமையாக பங்கெடுத்து ஆசியளித்தவர். இவ்வகையான உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் அவற்றுக்குரிய இடமுண்டு என்றுதான் நினைக்கிறேன். இது இலக்கிய மதிப்பீடோ விமர்சனமோ அல்ல, அந்தரங்கமான ஒரு நினைவோடை மட்டுமே. இத்தகைய ஆளுமையின் அண்மை வாழ்வின் கணங்களை ஏதோ ஒருவகையில் செறிவாக்குகிறது. அவ்வகையில் எழுத்திலும், அணுக்கத்திலும் அளித்த எல்லாவற்றிற்கும் பிரியத்துக்குரிய நாஞ்சிலுக்கு நன்றிகள்.     

‘குரு’ முனி!

தமிழ்மகன்

nanjil_nadan_spl_issueதீதும் நன்றும், நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை, சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர்.

தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த ஆச்சர்யம் உண்டு. ஒவ்வொரு கதையிலும் தொனிக்கும் அறச் சீற்றம் அவற்றைப் படிக்கும் எனக்குள்ளும் அந்தச் சீற்றத்தை உருவாக்கும். ஒரு எழுத்தின் ஆகச் சிறந்த பாதிப்பு அதுவாகத்தானே இருக்க முடியும்?

அந்தக் கோபாவேசம்தான் அவர். அதனாலேயே சொல்ல வருகிற எதையும் உள்ளது உள்ளபடி தெள்ளத் தெளிவாகத் தன் படைப்புகளில் சொல்கிறார். கதையின் முடிவை… கதைக்கான  தீர்வை ஆசிரியன் சொல்ல வேண்டியது இல்லை என ஓர் இலக்கிய போக்கு உண்டு. தீர்வைச் சொல்லாமல் மழுப்புவது என்ன இலக்கியம் என்ற இன்னொரு போக்கும்கூட உண்டு. சோப்பு அழுக்கைப் போக்குவதற்கா, சோப்பு சோப்புக்காகவா என்றெல்லாம் பேசி ஓய்ந்தாகிவிட்டது. அந்த சோப்பு போடுகிற வேலை எல்லாம் நாஞ்சில் நாடனிடம் இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு வகை இவருடைய எழுத்து.

நாஞ்சில் நாடன் எழுத்துகளில் கிட்டத் தட்ட தீர்வு நெருங்கிவந்துவிடும். இன்னும் ஒரு வரி சொன்னால், ‘ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்றோ ‘ஆகவே நேர்மையாக இருக்க வேண்டும்’ என்றோ சொல்ல வேண்டிய வரி ஒன்று இருக்கும். அந்த இடம் வந்ததும் நாஞ்சில் நாடன் தன் படைப்பின் கடைசி வரியை மிச்சம் பிடிப்பார். ஒளிவு மறைவு இல்லாத இலக்கியம் என்று இவருடைய எழுத்துக்களைச் சொல்வேன். தலைகீழ் விகிதங்களாகட்டும், மிதவை ஆகட்டும் வாழ்வை அப்பட்டமாக எடுத்து நம் கண் முன் வைப்பவை. அதில் நாஞ்சிலாருக்கு ஒரு தயக்கமும் இருந்ததில்லை.

அவருடைய கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் கரு ஒன்றுதான். உணவைப் பற்றி எழுதினாலும் ஒழுக்கத்தைப் பற்றி எழுதினாலும் ஏதோ ஒரு புள்ளியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ உருமாறும். இரண்டுக்குமே அவர் முதலில் பழந்தமிழ் இலக்கியத் தரவுகளை தயார் செய்கிறார். சமூக ஆய்வுகள் தரும் விளக்கங்களைத் தருகிறார். கதையோ, கட்டுரையோ இரண்டுக்குமே அவர் ஈடுபாடுகாட்டும் செய்நேர்த்தி அல்லது செய் பாணி எனக்கு ஒன்றுபோலவே இருக்கும்.

ஒரு படைப்பின் வகை எப்படி எந்த இடத்தில் திசை மாறுகிறது என்பது அசாத்தியமானது. அவர் ஓட்டுப் பொறுக்கிகளைப் பற்றி எழுதினால் கட்டுரை, ஓட்டுப் போட வேண்டிய ஒருவனின் பெயரில் ஏற்படும் குழப்பத்தை நுட்பமாக படம்பிடிக்கும்போது அது தரமான சிறுகதை (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)ஆகிறது. அவர் நாஞ்சில் நாட்டு உணவு பற்றி எழுதினால் கட்டுரை. அதை (இடலாக்குடி ராசா) ஆக்குவது அவருடைய எழுத்தின் ஜாலம்.

ஒரு சில பால் பாயின்ட் பேனா இரண்டு நிறங்களில் எழுதும். அதன் தலையை ஒரு முறை அழுத்தினால் அது நீல நிறத்தில் எழுதும். இன்னொரு முறை அழுத்தினால் சிவப்பு நிறத்தில் எழுதும். அப்படி ஏதோ ஒரு ஜாலம்தான் எனக்கு நாஞ்சில் நாடன் எழுத்துகளில் தெரிகிறது.

அரசியல், இலக்கியம் சினிமா என பல துறைகளிலும் அவருடைய அறிவு தனித்துவப் பார்வையுடன் இருக்கும்.

எனக்கு அவரை அவருடைய ‘மிதவை’ முதல் பதிப்பு வந்த நாளில் இருந்து தெரியும். அவருக்கு என்னை நான் எழுதிய ‘வெட்டுப்புலி’யில் இருந்து தெரியும்.

என் நாவலை அவர் சென்னை புத்தகச் சந்தையில் வாங்கியதாகச் சொன்னார். அதைப் படித்துவிட்டு, உயிர்மை பதிப்பகத்தில் என்னுடைய எண்ணைப் பெற்று என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். உயிர்மையில் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். நானே அவரிடம் பேசினேன். மிகவும் மகிழ்ந்தார். சில நிமிடங்கள்தான் பேசினார் என்றாலும் எனக்கு கல்வெட்டு போல பதிந்தது. ‘இது பத்திரிகையாளர் ஒருவர் எழுதிய கதை என்பதால் அன்று புத்தகச் சந்தையில் நான் வாங்கிய நூல்களில் கடைசியாகத்தான் இதைப் படித்தேன். மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. நான் நூல்களை படித்தவுடன் யாருக்காவது படிக்கக் கொடுத்துவிடுவேன். சில நூல்களை மட்டும் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். வெட்டுப்புலி அத்தகைய நூல்களில் ஒன்று.’

அன்றுதான் நான் இலக்கிய ஏணியில் அடுத்தப்படியில் ஏறியதாக நினைத்தேன். நான் மிகவும் நேசிக்கும் ஓர் எழுத்தாளர் என்னை யார் என்றே அறிமுகம் இல்லாமல் என் நூலை வாங்கி வாசித்திருக்கிறார் என்ற பெருமை சூழ்ந்தது. உடனே இன்னொரு நாவலை எழுத வேண்டும் என்று ஆவேசம் ஏற்படுத்தும் பாராட்டு அது. இளம் எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்துப் பாராட்டும் அவருடைய குணம், பாராட்டுக்குரியது.

நான் எந்த எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்த்தவன் இல்லை. நான் பணியாற்றும் பத்திரிகைகளுக்காக ஏற்பட்ட பழக்கம்தான் பெரும்பாலும். ஏனோ… அப்படி ஒரு தயக்கம். தினமணியில் பணியாற்றும்போது சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பா, ஜெயமோகன், கோபி கிருஷ்ணன் என பலர் வருவார்கள். ஒரு வணக்கம் சொல்வதோடு என் அறிமுகம் நின்றுவிடும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது எனத் தோன்றும். பேசுவதன் மூலம் நம்முடைய அறியாமையை வெளிப்படுத்திவிடுவோமோ என நினைப்பேன். பேசுவதன் மூலம் நமக்கு அவர்களைப் பிடிக்காமல் போய்விடுமோ எனவும்கூட நினைத்ததுண்டு. அது வாத்தியாரிடம் பையன் காட்டும் வினோதமான அச்ச உணர்வுதான்.

ஓர் இலக்கிய விழாவுக்காக நாகர்கோவில் சென்றிருந்தபோது ஜெயமோகனைச் சந்திக்கச் சென்றதுதான் என் சுய முயற்சியினால் நடந்தது. அந்தச் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் தமிழ் வளர்த்த பல அறிஞர்களைப் பற்றிச் சொன்னார். ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஆக, நாஞ்சில் நாடனுடன் நானும் அதற்கு மேல் பெரிதாக எதுவும் பேசியதில்லை. விகடன் மாணவர் பயிற்சி திட்டத்துக்காக, மாணவர்களிடம் பேசுவதற்கு அவரை அழைக்கச் சொன்னார்கள். அழைத்தேன். அந்தப் பொறுப்பை ஏற்று செய்யும்போது அவர் வர வேண்டிய தேதி, ரயில் டிக்கெட், தங்கும் அறை சம்பந்தமாகப் பேசினேன்.

ஏனோ அந்தக் குறுமுனி தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து பிடிசாபம் எனச் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கம் இருக்கிறது. எழுத்துலகில் எனக்கு யாரும் குரு இல்லை… அப்படி யாரையாவது அடையாளம் காட்ட வேண்டுமானால் இவரையும் சேர்த்து 100 பேரையாவது காட்ட வேண்டியிருக்கும்.

என்னுடைய அந்த 100 வாத்தியார்களுக்குமே நான் அவர்களின் சீடன் எனத் தெரியாது.

மைசூரில் கும்பமுனி

சோழகக்கொண்டல்

nanjil_nadan_spl_issueபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை சேர்ந்தது. என்னோடு பசியைப் பகிர்ந்து கொள்வதற்கு ராகவன் சில மாதங்கள் தங்கி இருந்தான்.

அவனும் சென்ற பிறகு பசியின் சுயராஜ்யம்தான், ஒன்றும் பிரச்சினையில்லை. சில்க் இன்ஸ்டிடூடில் சம்பளமில்லாத கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை. கூடிய சீக்கிரத்தில் அதே வேலையை ஐயாயிரம் சம்பளத்துக்கு தருவதாக உறுதி சொன்னார்கள்.  ஜூனில் தீசிஸ் சமிட், வைவா எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்குப் போய் நான்கே நாட்கள். எங்கிருந்தோ அம்மா அறுநூறு ருபாய் பணம் புரட்டி கொடுத்தார்கள். இப்போது ஆகஸ்ட் இறுதி,  சாப்பாட்டிலிருந்து சப்பாத்திக்கு இறங்கி, ராகி களி உருண்டையும் கீரை சாம்பாரும் என்றானது இரண்டு மாதம் வரை நீடித்தது. பொருளாதாரம் அதற்கும் இடம் கொடுக்காததால் மாற்று வழி கண்டுபிக்க வேண்டியதாயிற்று. வழியும் இருந்தது.

ஸ்ரிராம்புரா சில்க் இன்ஸ்டிடுட் ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி குதித்தால் குடகு ரோட்டில் இருநூறடி தூரத்தில் மங்களூர் பேக்கரி. ஒரு பெரிய பாக்கெட் பிரெட்டும் கால் லிட்டர் தயிரும் பதினைந்து ரூபாய். இரண்டு நாட்களுக்கான உணவு அதுதான். வாரச்செலவு நாப்பத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை பேக்கரி திறப்பதில்லை என்பதால் மனம் பசியை நினைவுகூர்வதில்லை. சில வாரங்களில் இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள்கூட வருவதுண்டு. சும்மா சொல்லக்கூடாது ஃப்ளுரைடு தண்ணீர்தான் ஆனாலும் அற்புதமான சுவை.

எந்த சூழ்நிலையிலும் செலவு செய்துவிடக் கூடாது என்று பாஸ்போர்ட் வாங்குவதற்காக தபால் ஆபீசில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயோடு திருச்சிக்கு சென்ற கனவுப்பயணம் அடுத்தது. திருச்சி மரக்கடையில் போய் இறங்கும்போதே மணி காலை ஒன்பதரையைத்  தாண்டி இருந்தது. சாலையின் எதிர்புறத்தில்தான் பாஸ்போர்ட் ஆபீஸ். கையில் ஃபயிலோடும் இன் பண்ணிய சட்டையோடும் என்னப் பார்த்த ஒரு நீல கட்டம்போட்ட லுங்கி கட்டிய நடு வயதுக்காரர் கேட்டார்.

“என்ன தம்பீ பாஸ்போர்ட் அப்ளிகேசனா?”

“ஆமாண்ணே”  நான்.

“ஆபீஸ் பத்து மணிக்கிதான் தெறக்கும். எல்லா டாகுமெண்டும் இருக்கா?”

“இருக்குண்ணே”.

“மூணு ஐடி ப்ரூப் ரெண்டு செட்டு அட்டெஸ்ட்டு காப்பியும் வேணுமே”

எனக்கு குப்பென்று வேர்த்தது. கையில் காசும் இல்லாத வேலையும் இல்லாத ஒரு ஜனநாயக இந்தியாவின் குடிமகன் மூன்று ஐடி ப்ரூஃப்களுக்கு எங்கே போவான்? எனக்கு வேர்க்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவர்  போலச் சொன்னார்.

“கவலைப்படாதே தம்பீ! இங்கதான் நம்ம வக்கீல் ஒருத்தர் இருக்கார். டாகுமெண்ட் ஒன்னு கம்மியா இருந்தாலும் பிரச்சினையில்லை, அவரே சப்போர்டிங் டாகுமெண்ட் ரெடிபண்ணி, பேப்பர்லாம் சரிபார்த்து அட்டேஸ்டேசன் போட்டு குடுத்திடுவார்” என்றார்.

எனக்கு நம்பிக்கையில்லை. உள்ளே எதுவுமே சொல்லாமல் வாங்கிக் கொள்வார்கள் என்று அவர் சொன்னதை கேட்டதும் இந்தியக்  குடியரசின் உள்குத்து நிர்வாகங்களை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.  ஆனால் அவர் அடுத்த பாணத்தையும் தயாராக வைத்திருந்தார்.

“அம்பது ரூபாதான் தம்பி பீசு”.

சுதந்திரத்தை அனுபவிக்கும் சுயநல தலைமுறையின் சொட்டு ரத்தமாவது எனக்குள்ளும் இருக்குமல்லவா? சரி போய்த்தான் பார்போமே. இன்னொரு ஐடியோடு வருவது இன்றைக்கு சாத்தியமில்லை. ஐம்பது ருபாய் தானே.

சேர்ந்தார்போல் இருக்கும் இரண்டு மூன்று மரக்கடைகளுக்கு பின்புறத்தில் ஒரு நுண்சந்து, இருப்பதே தெரியவில்லை. நடை வண்டிகள் நான்கைந்து தரையில் சக்கரம் ஊன்றியபடியும் தலைகுப்புற கவிழ்த்தும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. கிழக்கிலிருந்து நுழைந்தால் வலதுபக்கம் மூன்றாவது கடை. பச்சைநிற நைலான் பேப்பர் விரித்த இரும்பு மேசைக்கு பின்னால் வெள்ளை சட்டைபோட்ட கருப்பான ஆள். உடம்பு தடிமன் இல்லாவிட்டாலும் தொப்பை இருந்தது. நான்கைந்து மர ஸ்டூல்கள், எல்லாம் நிரம்பி இருந்தன. சனிமூலையில் ஒரு வெள்ளை மானிட்டர் கொண்ட கம்ப்யூட்டர். உடம்பின் எல்லா பக்கங்களிலும் ஊக்கு சொருகி சேலைகட்டிய இளம்பெண் ஒருத்தி மூங்கில் பிளாச்சு மாதிரி தட்டையான உடம்போடு உட்கார்ந்து அவசரமாக எதையோ ‘தட் தட்’ என்று டைப் அடித்துக்கொண்டிருந்தாள்.

நீலகட்டம் லுங்கி வணக்கம் வைத்ததிலேயே தெரிந்தது வெள்ளை சட்டைதான் வக்கீல் என்று. இல்லையென்றாலும் கண்டுபிடிப்பதொன்றும் அத்தனை கடினமாயிருந்திருக்காது.

“டாகுமென்ட்ஸ் குடுங்க” என்ற வெள்ளை சட்டை அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை. நீல லுங்கி எப்போது போனார் என்றே தெரியவில்லை. மளமளவென்று வேலை மும்முரமாக நடந்தேறியது.

கிரீன் டிம்மி தாளில் ஒரு பக்கத்திற்கு பத்திர எழுத்தில் எதையோ எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட்டார்.  இரண்டுபக்க பிரிண்ட் அவுட் பேப்பரை கொண்டுவந்து நீட்டினாள் அந்த கம்பியூட்டர் ஒல்லிப்பெண். எனக்காகத்தான் இவ்வளவு நேரமாக டைப் அடித்துக்கொண்டிருந்தாளா? நான் வந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காதே. ரெடிமேட் டாகுமென்ட் தானே பெயரை மட்டும் மாற்ற எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது.

எல்லாம் முடிந்து பின் பன்னி கொடுத்தாள். ஐம்பது ரூபாயை நீட்டினேன்.

“இன்னும் இருநூறு ரூபாய் குடுங்க” என்றாள்.

“அம்பது ரூபா தானே பீஸ்னு சொன்னாங்க? ”  கோபம் கண்களை மறைத்தது எனக்கு. யார் கேட்டது இந்த சேவையை?

“அவர் பீஸ் அம்பதுதான் சார், கிரீன் டிம்மி, ஸ்டாம்ப், டைப்பிங் சார்ஜ் எல்லாம் இருக்குல்ல?” என்றாள். முறைத்தபடியே நின்றிருந்தேன்.

“அவர்கிட்ட பேசிக்கிங்க சார்” என்று சொல்லிவிட்டு பணத்தை டேபிளில் வைத்துவிட்டு மறுபடியும் அவள் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏம்ப்பா காலையிலேயே பிரச்சினை பண்ற?” வெள்ளை சட்டை.

“வேலை முடிஞ்சா பத்தாதா தம்பி? ரொம்ப கணக்கு பாக்குற” எனக்கு பின்னால் ஒரு சிவப்பு ஜரிகை கரை வெள்ளை வேட்டி.

சிலீரென்று கூசியது உடல். கொள்ளையடிப்பது நீங்கள் குற்ற உணர்ச்சி எனக்கு. பேசிப் பயனில்லை. பணத்தை வைத்து விட்டு வெளியே வந்து எதிர்புறம் இருந்த பாஸ்போர்ட் ஆபீஸ் வளாகதிற்குள் நுழைந்தேன். யாருமே இல்லை   வெறிச்சோடிக்  கிடந்தது.

“இப்போ ஆபீஸ் இங்கே இல்லை தம்பி உறையூருக்கு மாத்திட்டாங்க”  என்றபடி ஒரு ஆட்டோகாரர் நின்றிருந்தார்.

இதை இவ்வளவு நேரமா யாருமே சொல்லலையே. உறையூர் பாஸ்போர்ட் ஆபீஸ் வந்து சேர்ந்தபோது மணி பத்தேகால் ஆகிவிட்டிருந்தது.  அந்த வக்கீல் சர்டிபிகேட்டுக்கு எந்த பொருளும் இல்லை.

எண்ணூறு ரூபாய்தான் மிச்சமிருந்தது, இதைக்கொண்டு மீண்டும் அப்ளிகேசன் போடுவது இப்போதைக்கு சாத்தியமல்ல. சத்திரம் போய் பஸ் பிடித்தால் எப்படியும் மூன்று மணிக்குள் வீட்டிற்கு போய்விடலாம். மனம் ஏனோ சம்மதிக்கவில்லை. அம்மா மறுபடியும் யாரிடமாவது கடன் வாங்குவார்கள். திரும்பி மைசூர் போய்ச்சேரவே எப்படியும் இருநூறு காலியாகிவிடும். கொஞ்சநாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்தான். சாப்பிட்டு பழகிவிட்டால் பிறகு பிரட்டுக்கு திரும்புவது எப்படி? யோசனையிலேயே நடந்ததில் தில்லைநகர் வந்துவிட்டது. தில்லைநகர் என்றதும்  மக்கள் மன்றம் ஞாபகம் வந்தது. புத்தகக் கண்காட்சி இருக்குமே என்று ஒரு சபலம். ஒவ்வொருமுறை அங்கே போகும்போதும் வேடிக்கை பார்ப்பதற்கான பொருளாதாரம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

முப்பதடி நடந்ததும் மஞ்சள் போர்டுகள் கண்ணில் பட்டன. புத்தகக் கண்காட்சிதான். பொருளியல் கணக்குகள் எல்லாம் மூளையில் இருந்து ஒரு புகைமூட்டம் போல கலைந்துவிட்டது. எந்த யோசனையும் இல்லை. ஆடிப் பஞ்சத்து நாய் அடுக்களையில் நுழைந்தமாதிரி பட்டென்று பாய்ந்து விட்டேன். ‘இந்தியா காந்திக்குப் பிறகு’ இரண்டு பாகங்கள், ஒரு ஜே கிருஷ்ணமூர்த்தி. எத்தனையோ புத்தகக் கண்காட்சிகளில் எடுத்து எடுத்து தடவி புரட்டிப் பார்த்து வைத்துவிட்டுப்போன நாஞ்சில்நாடன் கதைகள் தன்னிச்சையாக ஏறி அமர்ந்திருந்தது கைகளில். இருளடைந்த கண்களோடு புத்தக அடுக்கை நெஞ்சில் தாங்கியபடி நான் நடந்துவந்த காட்சி எத்தனை பரிதாபகரமாக இருந்திருக்க வேண்டும் என்பது, அந்தக் கடையின் விற்பனையாளர் என்னைப் பார்த்த பார்வை நினைவுக்கு வரும்போதெல்லாம் தோன்றுகிறது. வெளியே வந்ததும் எதிரிலேயே புரோட்டாக்கடை. இனி எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் பரவாயில்லையென்று புகுந்துவிட்டேன்.

*****

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டும் வரையிலும் பதைபதைப்பாகவே இருந்தது, திருச்சிவரை வந்துவிட்டு வீட்டிற்கு போகவில்லையே என்று.  பஸ்ஸில் வரும்போதே புத்தகத்தை புரட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் பஸ் பயணத்தில் படிப்பதில்லை என்பதால் எடுத்து எடுத்து பார்த்தபடியே இருந்தேன். பயணக்களைப்பு, தூக்கம் எனக்கு முன்னாலேயே அறைக்கு வந்து காத்திருந்திருந்தது. எங்கிருந்தோ விழுவதுபோல கனவு, திடுக்கிட்டு எழுகையில் நன்றாக விடிந்துவிட்டது. ஏழு மணி இருக்கும். இன்ஸ்டிடூட் வாசலிலேயே இருக்கும் கண்ணன் நாயர் கடையில் மூன்று சப்பாத்திகள் ஒரு சாயா. ஆபீஸ்க்கு போனால் பார்வை எதிலுமே ஒட்டவில்லை. வெளியே லேசாக மழை தூற ஆரம்பித்தது. நாஞ்சில்நாட்டு சாரல் மனதில் வட்டமடித்துக்கொண்டே இருந்தது. நேற்று பெய்த மழையில் ட்ரான்ஸ்பார்மர் புகைந்து கரண்ட் கட். கம்ப்யூட்டர் இயங்க வழியில்லை. கிளம்பி வந்துவிட்டேன். படுக்கை மேலேயே இருந்தது நாஞ்சில்நாடன் கதைகள்.

அவரைப் பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருந்தாலும், அவர் எழுத்து இது வரையிலும் ஒரு தூரத்து கனவு மட்டுமே. முசிறி நூலகத்தில் ஏதோ பருவ இதழில் ஒரு கதை படித்ததாய் ஞாபகம், எதுவும் உறுதியாய் நினைவில்லை. புத்தகத்தைத் திறந்தேன் ‘விரதம்’ முதல் கதை. சிரித்துக்கொண்டேன். கிளம்பும்போது ஆபீசில் யாரோ கேட்டார்கள்,

“என்ன ஸ்பெசல் ஃபூட் இன்னைக்கு?”

“நத்திங் ஸ்பெசல்”. எதுவுமே இல்லாததன் சிறப்பை எப்படித்தான்  சொல்வது? சில வைராக்கியங்களையும் எச்சமும் படிக்கையில் சிரித்துக்கொண்டேதான் இருந்தேன்.  ஆனால் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது. ‘உப்பு’ கதைக்குள் வருவதற்குள்ளாகவே நாஞ்சில் மொழி இயல்பாக கரைந்துவிட்டது எனக்குள். பழையாற்றங்கரையிலிருந்து பொன்னாற்றங்கரைக்கு அரூபமாக எழும் ஒரு வரப்பில் தெற்கு நோக்கித் தனியே நடக்கிறேன். எங்கோ நீர் சுருண்டு விழும் ஓசை கேட்கிறது. ஜன்னலுக்கு வெளியே கவனிப்பாரின்றி பெய்யும் மழையிலிருந்து எழுந்துவந்து அறையை நிறைக்கிறது சொக்கன் கொறிக்கும் வருகடலையின் வாசனை.

மைசூருக்குத் திரும்பி வந்து ஒருவாரம் வரை கையில் பணம் தாக்குபிடித்தது. பிரட்டும் தயிரும் இப்போது சிரமமாயிருக்கவில்லை. முகம் சுளிக்காமல் பசியைப் பகிர்ந்துகொள்ள புத்தகங்களை விடவும் வேறு துணை அமையாது. பசியின் கொடுக்குகள் பக்கங்கள் தோறும் வந்து கொட்டியபடியே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் புறக்கணிப்பு, உணவைத் தொடர்ந்தபடியே இருக்கும் அவமானங்கள்.  நாஞ்சிலார் உணவையோ பந்தியையோ பற்றி விவரிக்க ஆரம்பித்தாலே மனம் கிடந்து துடிக்கிறது, என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு. பசியை பகிர்ந்து தருவதில் அப்படி என்னதான் ஆனந்தமோ இவருக்கு என்று சமயத்தில் கோபமாகக்கூட வரும்.

“அவசரகால நிவாரணமாக செப்பனிடப்பட வேண்டிய ஒட்டிய வயிறுகள்” என்கிறார் ‘இருள்கள் நிழல்களல்ல’ கதையில். பண்டாரத்தோடு நானும் பந்தியையே வெறித்தபடிதான் உட்கார்ந்திருந்தேன். பிசைந்து கொடுக்கும் பிண்டம் கூட வந்து சேரவில்லை எனக்கு. படிக்கும்தோறும் பசியும் துக்கமும்  ஏறியபடியே இருக்கிறது, ஆனாலும் நிறுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு இரண்டேனும். கன்னடமும் தெரியாது வெளியில் எங்கே போவதென்ற இலக்கும் தோன்றவில்லை. இன்றைக்கு நாளைக்கென வேலை உறுதியாவதும் இழுத்தபடியே இருக்கிறது. இந்த வாரம் விடுமுறையும் காரணமாக சேர்ந்து ஞாயிறு வியாழன் அன்றே தொடங்கிவிட்டது. தொடர்ந்து ஐந்தாவது ஞாயிறு இன்று.

நூற்றைம்பது ஏக்கர் அளவுக்கு பெரிய எஸ்டேட் கேம்பஸ்தான். ஆனாலும் பட்டுப்பூச்சிக்கு உணவாகப் போடும் மல்பரி தவிர வேறு எதுவும் இல்லை.  சில இடங்களில் இருந்த கொய்யா சப்போட்டா மரங்களிலும் பிஞ்சும் இல்லாமல் பழமும்  இல்லாமல் நடு காய்கள். கடிக்கவும் முடியவில்லை ஒரே துவர்ப்பு. முதிர்ந்த மல்பரி மரங்களில் கருஞ்சிவப்பு நிறத்தில் சடை சடையாய் பழங்கள். இதை சாப்பிடலாமா என்று யோசனை, நிச்சயம் விஷமாக இருக்காது. ஒரு நம்பிக்கையில் பறித்து சப்பி இழுத்தேன். புளிப்பும் இனிப்பும் கலந்த ருசி, மயிர் கூசியது. நாஞ்சில்நாடன் கதைகளை மட்டும் இன்றைக்கு படிக்கச்கூடாது என்று உறுதியாக இருந்தேன். எச்சில் விழுங்கும்போது தொண்டையில் ஒரே வலி. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சும்மா இருக்க முடியவில்லை. விலாவில் சுண்டி இழுப்பது போன்ற வலி பசியின் சத்தம் வெளியே கேட்டது. கல்பெஞ்சில் பக்கத்திலிருந்த புத்தகம் காற்றில் படபடத்தது. கும்பமுனி சிரிப்பது போல இருந்தது. நான் இடலாக்குடி ராசாவும் இல்லை எனக்காக கண்ணீர் வடிக்கிற சித்தியும் யாரும் இங்கில்லை என்று சீறினேன். முகம் வாடிப்போயிற்று அவருக்கு.

“சரி பாட்டா, கோச்சுக்காத” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை பிரித்தேன். மனம் ஆயிரம் வழிகளில் உணவுக்கான திட்டங்களில் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. அரைமயக்கத்திலும் இரவு நெடுநேரம் தூக்கத்துகாக போராடிகொண்டிருந்தேன். சட்டென்று சாமுண்டீஸ்வரி கோயில் ஞாபகம் வந்தது. மைசூருக்கு வந்த புதிதில் அங்கே போயிருந்தபோது அன்னதான மண்டபம்  பார்த்திருக்கிறேன். உடம்பில் ஒரு புது பலம் வந்தது வயிறு நிறைந்தது போன்ற உணர்வு.

காலை ஏழுமணிக்கெல்லாம் குளித்து கிளம்பியாயிற்று. சாமுண்டீஸ்வரி கோயில் இருக்கும் சாமுண்டிமலை மைசூருக்கு வெளியே கிழக்கில், நான் இருக்கும் ஸ்ரிராம்புரா புறநகர் மேற்கு. எப்படியும் பத்துபன்னிரண்டு கிலோமீட்டர்கள் இருக்கும். ட்ராவல் பேக்கை கொட்டி உலுக்கியதில் தேறியது மூன்றுரூபாய் சில்லறை மட்டுமே. இரண்டு பஸ் ஏறவேண்டும் எப்படியும் பதினாறுரூபாய் தேவை. தோராயமாக கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மைசூரில் எங்கிருந்து பார்த்தாலும் மலை தெரியும், வழிதவறிட வாய்ப்பில்லை. நடக்க முடியாமல் கால்கள் பின்ன ஆரம்பித்தது, வழியெங்கும் கடைகளில் வாழைத்தார்கள் தொங்கின. மூன்று ரூபாய்க்கு கிடைக்குமா என்பதுதான் சந்தேகமாக இருந்தது. காசு போதவில்லை என்று அதிகம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற தயக்கம். தொடர்ந்து அவமானத்திற்கான அத்தனை வாக்கியங்களையும் மனம் நாஞ்சில் கதைகளில் இருந்து அசைபோட்டு, இது நடக்குமோ அது நடக்குமோ என்று எல்லா திசைகளும் பார்த்தப்படியே இருந்தது. மனமெங்கும் ஒருவித குறுகுறுப்பும் குற்ற உணர்ச்சியும் இருந்துக்கொண்டே இருந்ததால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

படியேறும் வழியில் நந்திப்பாறையில் கரும்புசாறு விற்றுக்கொண்டிருந்தார்கள். ‘விடுவிடு’வென நிற்காமல் படிகளில் தாவிக்கொண்டிருந்தேன். மலை உச்சிக்குப் போய் சேர்கையில் பத்துமணி இருக்கும். சுமாரான கூட்டம். அன்னதான மண்டபத்தை கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. ஆனாலும் அன்னதானம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.  தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நான்கைந்து சன்யாசிகள் மண்டப வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. ஓரளவுக்கு நிம்மதி. ஒருவேளை அது அவர்கள் வாடிக்கையாக தங்கும்  இடமோ என்று மீண்டும் ஒரு சந்தேகம். மண்டபத்தூணில் சிவப்பு எழுத்துக்களில் அறிவிப்பு, தினமும் பன்னிரண்டு மணிக்கு அன்னதானம் என்று. சமையல் வாசனையும் காற்றில் வந்தது. நிம்மதி. சன்யாசிகளும் மற்றவரும் உட்கார்ந்திருப்பதில் ஒரு வரிசை இருப்பதை தாமதமாகத்தான் கவனித்தேன். அதற்குள் ஒரு முப்பதுபேர் பேர் எனக்குமுன் வரிசையில் கூடிவிட்டார்கள்.

பன்னிரண்டுமணிக்கு மண்டப வாசல் திறக்கும்போது இருநூறுபேக்கு மேல் சேர்ந்துவிட்டிருந்தார்கள். மலைப்பாதை நந்திபாறைக்கு இறங்கும் இடம் வரையிலும் வரிசை நீண்டு நின்றது. எண்பதுபேர் வரை உட்காரும் ஹால். நான்கு வரிசைகளில் மடக்கி உட்காரவைத்து அகலமான எவர்சில்வர் தட்டு போடப்பட்டது. ஒரே நேரத்தில் நான்குபேர் சமயலறையிலிருந்து மூக்கன்களோடு சரேலென்று வெளியே வந்தார்கள். வந்தது கண்டேன் இட்டது கேட்டேன், அத்தனை வேகம். அச்சுவெல்லமும் தேங்காய்த் துருவலும் போட்ட பருப்பு பாயசம். சூடு பொறுக்க முடியவில்லை தொட்டுத் தொட்டு சப்பிப்பார்த்தேன். மீண்டும் மூக்கன்கள் வெளியே வருவது தெரிந்ததும்  தட்டோடு எடுத்து குடித்துவிட்டேன். குடல்வரை கொதித்தது. அவர்கள் சாப்பாட்டை வெட்டி வீசிய வேகத்தைப் பார்க்கையில் என்தட்டில் ஏதாவது விழுமா என்பது சந்தேகமாக இருந்தது. கொஞ்சம் விழுந்தது, பின்னாலேயே வந்தது இனிக்கும் சாம்பார். வயிறு கிழிபடுவதுபோல வலித்தது சாப்பிட முடியவில்லை. கண்கள் துரு உதிர்ந்து பிதுங்கித் திறப்பதுபோல இருந்தது.

வெளியே வந்ததும் நடக்க முடியவில்லை. பொங்கி வழியும் வேர்வை, கால்கள் சில்லிட்டன. மலைப்பாதையின் பக்கவாட்டு சுவற்றில் நல்ல நிழல். நீட்டிபடுத்ததும் ஒரு ஐந்து நிமிடத்தில் எல்லாம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. இன்னும் ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும், வயிறு காலியாயிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மண்டப வாசலைப் பார்த்தேன் ஒரு பத்துபேர் இருக்கும், அடுத்த பந்திக்காக நின்று கொண்டிருந்தார்கள்.  கடைசி ஆளாகப் போய் நின்றேன்.

“சவத்துக்கு இன்னும் பசி அடங்கலையோ?” என்ற குரல் கேட்டது முதுகுக்குப் பின்னால்.