குறுங்கதை

இங்கேயே இருந்திருக்கலாம்

பத்மகுமாரி 

“ச்சுஸ்ஸ்” என்ற சப்தம் அம்மா முன் அறையில் வரும்பொழுதே கேட்டிருக்கிறது. அம்மா தினமும் இறைவனின் முகத்தில் தான் விழிப்பாள். கேட்டால் அது பல வருட பழக்கம் என்பாள். எத்தனை வருடம் என்று அம்மாவும் சொன்னதில்லை, எனக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் என் பெயரை நான் விவரமாக சொல்ல தெரிந்து கொண்ட நாட்களிலிருந்து அம்மா இப்படி செய்வதாக தான் எனக்கும் ஞாபகம்.

அன்றும் அப்படிதான் செய்திருக்கிறாள். கட்டிலில் இருந்து எழுந்தவுடன் கண்களை சரியாக திறந்தும் திறவாமலும் சுவரில் தடவி அறையின் விளக்கை ஒரு விநாடி எரியவிட்டு, எதிர் சுவரில் மாட்டியிருந்த ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்திருக்கிறாள். அந்த படம் எங்கள் படுக்கையறை சுவற்றில் ஏழு ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மின்விசிறி முழு வேகத்தில் சுற்றும் பொழுதுகளில் லேசாக அங்குமிங்கும் அசையும்.  முதன்முறையாக அந்த படத்தை வாங்கி கொண்டு வந்து மாட்டியது நான்தான்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாதுலா’ அம்மா சந்தேகமாக கேட்டாள்.

‘அப்படிலாம் ஒன்னுமில்ல’ சொல்லிக் கொண்டே நான் அடுக்களைக்கு தண்ணீர் குடிக்க போய்விட்டேன்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாது ராதா அம்மா. சாமி குத்தம் ஆயிரும்’ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அம்மா கேட்க எதிர் வீட்டு அகிலா அத்தை சொன்னது இது.

ஆனால் அந்த படத்தை இடம் மாற்றக் கூடாது என்று நான் மனதில் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எனக்கு தெரியாது. காரணத்தோடு தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைதானே.

‘சாமி தூணுலயும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என்றால் பெட்ரூம் சுவற்றிலும் இருக்குந்தான? அப்புறம் தனியா படமா மாட்டுறதுனால என்ன குத்தம் வந்திரும்? ‘ அம்மா பிடிவாதமாக அந்த படத்தை கழற்ற சொல்லியிருந்தால் இந்த பதிலை சொல்லி அம்மாவிடம் வாதாடி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அகிலா அத்தை சொன்ன பதிலுக்கு ‘ம்ம்’ கொட்டிய அம்மா, வாசலில் இருந்து வீட்டிற்குள் வந்தபிறகு அந்த படத்தை இடம் மாற்றவுமில்லை, இடம் மாற்ற வேண்டும் என்று என்னிடம் சொல்லவும் இல்லை. அம்மா மனதில் என்ன நினைத்துக் கொண்டாள், ஏன் அதை இடம் மாற்றவில்லை என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அம்மா படத்தை இடம் மாற்ற சொல்லாமல் விட்டதே போதும் என்ற எண்ணத்தில் நானும் அதன்பிறகு அதைப்பற்றி மேலும் பேசாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

படுக்கையில் இருந்து எழுந்து பூஜை அறை வரையிலும்,பாதி கண்ணை திறந்தும் திறவாமலும் போய் சாமி படங்களை பார்க்கும் அம்மா         ‘ராதா கிருஷ்ணர்’ படம் வந்த அடுத்த நாளிலிருந்து முதலில் அந்த படத்தை பார்த்துவிட்டு முழுக் கண்களை திறந்தபடி பூஜை அறைக்கு சென்று சாமி படங்களை பார்க்க ஆரம்பித்து இருந்தாள். கடந்த ஏழு வருடங்களாக இந்த முறை மாறியதே இல்லை.

**************

“ச்ஸ்வு” சப்தம் கேட்டு அம்மா வேகமாக பூஜை அறையில் வந்து பார்த்தபொழுது அந்த ‘மூஞ்சி எலி’ பூஜை அறையின் கீழ் வரிசையில் அன்னபூரணி சிலை முன் வைத்திருந்த அரிசியை கொரித்துக் கொண்டு இருந்திருக்கிறது. அம்மா பக்கத்தில் சென்று “ச்சூ…ச்சூ” என்று விரட்டியத்திற்கும் கூட கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், அப்படியே அரிசியை கொரித்த படி இருந்ததாம். அம்மா அதனோடு போராட பயந்து கொண்டு வாக்கிங் போயிருந்த அப்பா வந்தபிறகு அப்பாவிடம் சொல்லி அதை விரட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு முன்வாசல் தெளித்து கோலம் போட சென்றிருக்கிறாள்.

அப்பா திரும்புவதற்கு முன்பே எழுந்து வந்திருந்த என்னிடம் அம்மா இதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ‘மூஞ்சி எலி’ அடுக்களையில் ஓடிக்கொண்டிருந்த சலனம் எங்கள் இருவருக்கும் தெளிவாக கேட்டது. அது எப்பொழுது பூஜை அறையிலிருந்து அடுக்களைக்கு இடம் பெயர்ந்திருந்தது என்பது அந்த அன்னபூரணிக்கே வெளிச்சம்.

இருவரும் அடுக்களையில் சலனம் வரும் திசையில் அதனை தேட ஆரம்பித்திருந்தோம். ‘எப்படி இது உள்ள வந்ததுனே தெரில. எப்படி இத விரட்ட போறோமோ’ அம்மா அலுத்துக் கொண்டாள்.

‘போகாட்டா விடும்மா. அது பாட்டுக்கு சுத்திகிட்டு போகட்டும். நம்மளதான் ஒன்னும் செய்யலேலா’ இது என்னுடைய பதில்

‘ம்ம்….அது சரி…. அதுபோக்குல சுற்றி குட்டி போட்டு குடும்பம் பெருக்கி வீட்ட நாசம் பண்ணட்டும் சொல்றியா’ அம்மா என்னை முறைத்தபடி கேட்டாள்.

அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நான் அதை விரட்ட, அது அடுக்களை வலது முக்கில் குவித்துப் போட்டிருந்த தேங்காய் குவியலுக்குள் மறைந்துக் கொண்டது. அங்கிருந்து எப்படியோ கஷ்டப்பட்டு விரட்ட அடுக்களையின் மறு முக்கில் வைத்திருந்த காலி சிலிண்டர் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டது.

‘எம்மா, எங்க ஓடுதுனு பாத்துக்கோ’ என்றபடியே காலி சிலிண்டரை இடது கையால் ஒருபக்கமாக சுழற்றி தூக்கி பார்த்தபோது அது அந்த சுவர் முக்கில் இல்லை. ‘எங்க போச்சு பாத்தியாம்மா?’ நான் கேட்டதற்கு, அது அங்க இருந்து வெளிவரவில்லை என்று அம்மா சொன்னாள்.

‘அது எப்பிடி.. இங்கேயும் இல்ல…. மாயமாவா போகும். எங்கேயோ எஸ்கேப் ஆயிருச்சு பாரு… உன்ன கரெக்டா பாரு சொன்னம்ல’ அம்மாவை கடிந்து‌ கொண்டேன்.

அதன்பிறகு வாக்கிங்கில் இருந்து திரும்பி வந்த அப்பாவிடம் சொல்லி வீடு முழுவதும் தேடியும் அந்த ‘மூஞ்சி எலி’ அகப்படவில்லை.

‘அது நீங்க விரட்டினதுல பயந்து வெளிய ஓடிருக்கும்.நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க’ என்று முடித்துவிட்டு அப்பா அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து அடுக்களையில் துர்நாற்றம் அடிக்க, நானும் அம்மாவும் சுற்றி தேட ஆரம்பித்தோம். அதற்கு விடையாக செத்துப்போன மூஞ்சி எலியை காலி சிலிண்டர் அடியிலிருந்து கண்டெடுத்தோம். அன்று சிலிண்டரை ஒரு பக்கமாக தூக்கி பார்த்து போது இல்லாத மூஞ்சி எலி  எப்படி பிணமாக அங்கு மறுபடி வந்தது என்று எங்களுக்கு விளங்கவில்லை.

அம்மாவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் மெளனமாக பார்த்துக் கொண்டோம். இந்த மூஞ்சி எலி இங்கேயே சுற்றி குட்டி போட்டு குடும்பம் கூட பெருக்கியிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அம்மா அதன் பிணத்தை மிகுந்த மரியாதையோடு அப்புறப்படுத்தினாள். இப்பொழுதெல்லாம் ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்ததோடு பூஜை அறைக்கு செல்லாமலேயே அம்மா வாளி எடுத்துக் கொண்டு வாசல் தெளிக்கச் சென்று விடுகிறாள்.

 

புத்தகன்

 

தேஜூசிவன்

 

குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா

மொபைல் பாடியது.

“என்ன ராம், எப்டி இருக்கே?”

“அது இருக்கட்டும் ரகு. அந்தப் பையன் ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறான்.”

“எந்தப் பையன்?”

“கிறிஸ்டோஃபர்.”

“ஓ.. உனக்கு விஷயம் தெரியாதா?’

“என்ன?”

“அவன் அப்பா திடீர்னு தீ பிடிச்சு எரிஞ்சுட்டார்.”

“வாட்?”

“ஆமாம். முந்தா நாள் நைட்.  எப்டின்னே தெரில.”

“என்னாச்சு அவருக்கு?”

”எய்ட்டி பெர்செண்ட் பர்ன். நேத்தைக்கு நைட் இறந்துட்டார்.”

”ஓ… மை காட்”.

“என்ன ராம்?”

“அவன உடனே இங்க வரச் சொல்லணுமே.”

“ இப்ப எப்டி அவனால உடனே வர முடியும். அப்படி என்ன உயிர் போற அவசரம்?”

“உயிரு போறதுக்குள்ற வரச் சொல்.”

“என்ன உளர்றே?”

“ஆமாம். எல்லாத்துக்கும் நீ தான் காரணம்.”

”புரியல ராம், என்ன விஷயம்?”

“அவன் ஒரு புத்தகம் என்கிட்ட கொடுத்தானே.”

“ம்… எதோ உலோகத் தகடுல செய்யப் பட்ட புத்தகம். அவனோட அப்பா எங்கிருந்தோ எடுத்துட்டு வந்ததா சொன்னான். ஏதோ புரியாத எழுத்துக்கள் இருந்ததுன்னு கேட்டான். ”

“அந்த புத்தகம் ஒரு மரணப் புத்தகம்.”

“என்ன சொல்றே?”

“ஆமாம்.. அது பாளி மொழியில் எழுதப்பட்ட புத்தகம்.”

“பாலி?”

“நோ. பாளி. ”

“சரி. உன்னால படிக்க முடிஞ்சுதா? அப்டி என்ன எழுதியிருந்தது அதுல?”

“ 29ம் புத்தர் அவதரிப்பார். அவர் விரல் பட்டதும் இந்தப் புத்தகம் ஒளிர்ந்து உயிர் பெற்று எழும்னு இருந்தது.”

“என்ன?”

“நமக்கெல்லாம் தெரிஞ்ச சித்தார்த்தன் என்கிற கெளதம புத்தர் 28வது புத்தர்.”

“ஓ.”

“சரி இருக்கட்டும். அதுக்கு இப்ப என்ன?”

“மத்தவங்க கை பட்டா அவர்கள் ஐந்து நாட்களுக்குள் இறந்து விடுவார்கள். இன்று அந்த புத்தகத்தை நான் வாங்கி ரெண்டாவது நாள்.”

“அப்ப கிறிஸ்டோஃபரோட அப்பா…”

“ஆமாம். ”

“சே… சே… இது ஒரு கோயின்சிடெண்ஸ்.”

“இல்ல… எனக்கு அப்டி தோணலை. அடுத்து கிறிஸ்டோஃபர்.”

“உடனே அந்த புக்கை தூக்கி குப்பைத் தொட்டில வீசியெறி…”

“அப்பவே எறிஞ்சுட்டேன். சரி, எதுக்கும் அவன்கிட்ட பேசிப் பாரு.”

“வை. அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

ரிங் போய்க்கொண்டே இருந்தது.

“கிறிஸ்டோஃபர்.”

“யார் சார் நீங்க?”

“ரகுராமன். .. நீங்க?”

”அவனோட அண்ணன். உங்களுக்கு விஷயம் தெரியாதா?”

“தெரியும். அவரோட அப்பா இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்.”

“அது நேத்தைக்கு. இன்னைக்கு கிரிஸ்டோஃபரும் போய்ட்டான். மாஸிவ் அட்டாக்.”
ரகுராமனுக்கு பயத்தில் நடுங்கியது.

வனரோஜா அவனைக் கை நீட்டி அழைத்தாள்.

மாரி முறைத்துக் கொண்டே வந்தான்.

“இன்னைக்கு திங்கக்கிழமை. லோடு நெறய இருக்கும். என்னால இத தள்ள முடியலை. இன்னைக்கு என்கூட வாயேன்.”

“இந்த குப்பை வண்டி நாறும். நா வர்ல.”

“நீ ஒழுங்கா காசு கொடுத்தா நான் ஏன் இதப் புடிச்சு தள்றேன்.”

“ஒழுங்கா காசு கொடுத்துட்டா நீ உடனே  பத்து மாசத்துல புள்ளய பெத்துக் கொடுத்துடுவியாக்கும்..”

சட்டென உடைந்து அழுதாள்.

“சரி.. சரி.. ஒண்ணும் சொல்லலை. கவலப் படாதே. நம்ப கருப்பன் நம்பள கை விடமாட்டான். கொடு நான் தள்றேன் ரோஜா.”

ஆற்றில் இருகரை தொட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

“இந்தக் கரைல எப்டி தினமும் இந்த வண்டியைத் தள்ளிட்டு போறே ரோஜா?”

“என்ன பண்றது. நல்ல ரோட்டோட போனா சுத்திட்டு போவணும். இது குறுக்கு வழி.”

குப்பைக் கிடங்கில் நாற்றமடிக்கும் சிறு சிறு குன்றுகள்.

”என்னா இந்த வண்டியைத் தள்ளவே முடியல.”

”நல்லா தம் கட்டி தள்ளு. நேத்து மழை பெஞ்சுதுல்ல அதான்.”

வண்டியைச் சாய்க்கும் போது  அது சரிந்து விழுந்தது.

வனரோஜா குனிந்து எடுத்தாள்.

கம்பியில் கோர்க்கப் பட்ட உலோகத் தகடுகள்.

“என்னய்யா இது?”

வாங்கிப் பார்த்தான்.

“புத்தகம் மாதிரி இருக்கு.”

‘ஆமாம். யாராச்சும் தகரத்துல புத்தகம் செய்வாங்களா?”

“அடி லூசு. இது தகரமில்லே. வேற ஏதோ ஒண்ணு. நம்ப பாய் கிட்ட கொடுத்தா சொல்வார்.”

“சரி எடுத்துக்கோ. ஒனக்கு குடிக்க காசு கிடச்சுடுச்சு.”

திரெளபதி அம்மன் படித்துறை அருகில் வரும் போது ஏதோ சப்தம் கேட்டது.

வனரோஜா அவன் கை தொட்டாள்.

“தே… என்னமோ சப்தம் கேக்குதுல்ல…”

நின்றார்கள்.

“ஆமா.”

தேடினார்கள்.

மெலிதான குழந்தை அழுகுரல்.

அவள் தடதடவென படிக்கட்டுகளில் இறங்கினாள்.

தண்ணீரைத் தொட்டுக் கொண்டிருந்த படிக்கட்டில் ஒரு பிரம்புக் கூடை.

அதில் அந்தக் குழந்தை கால்களை உதைத்துக் கொண்டிருந்தது.

“அடிபாதகத்தி.”

அவள் கூவினாள்.

அவன் அவள் வாய் பொத்தினான்.

குழந்தையை அள்ளித் தூக்கினாள்.

அவன் அதட்டினான்.

”ஏய்.. என்னாது? கீழ போடு..”

“புள்ள..”

“தொடாத.. யாருதோ இது.தெரிஞ்சா நமக்கு பிரச்னையாய்டும்.”

“வேண்டான்னு தானே இத இங்க போட்டுருக்கா பாவி. நம்ப எடுத்துக்குவோம்.”

ஏய், என்னா?”

“கூவாத. நம்ப கருப்பன் சாமி கொடுத்தது.”

“வேண்டாம் ரோஜா. வம்பாய்டும்.. “

“அட இத பாரு. எப்டி சிரிக்குது.. யாராவது வந்து கேட்டா கொடுத்துடுவோம்.”

”ஆமா.. போலீசு வந்து தான் கேக்கும்.”

“யோவ். இத நாம வச்சுக்குவோம்.”

மாரி சுற்று முற்றும் பார்த்தான்.

யாருமில்லை.

“கிட்டக்க வா. மறச்சுட்டு போய்டலாம்.”

குழந்தையுடன் அருகில் வந்தாள்.

நெருங்கும் போது குழந்தையின் கை அந்தப் புத்தகத்தின் மீது பட்டது.

வானில் ஓர் இடி.

தீப்பிடித்தது போல் அந்தப் புத்தகம் ஒளிர ஆரம்பித்தது.

”ரோஜா இங்க பாரு.”

பயத்தில் கண்கள் விரிந்தன.

குழந்தை அவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரித்தது.

“அத… அத… ஆத்துல தூக்கி எறி.”

 

கை உயர்த்தி அந்தப் புத்தகத்தை தூக்கி எறிந்தான்.

மிகச் சரியாக ஆற்றின் மையத்தில் விழுந்து ப்ளக் எனும் சப்தத்துடன் மூழ்க ஆரம்பித்தது.

“வா ஓடிடலாம்.”

வலதுபுறத் தோளில் குழந்தையை மாற்றிக் கொண்டாள்.

அவர்கள் வேகமாக ஓட ஆரம்பித்தார்கள்.

குழந்தை அவள் பின்னங்கழுத்தின் வழியாக நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டே வந்தது.

ஆற்றின் மையத்தில் சின்னதாக ஒரு சுழல் மேலெழும்பியது.

நீரிலிருந்து அந்தப் புத்தகம் சரேலென வெளி கிளம்பியது.

அதன் இரு உலோகப் பக்கங்களும் இரு சிறகுகளென விரிந்தன. விர்ர்ரெனும் சப்தத்துடன் அந்தப் புத்தகம் மேலுயர்ந்தது.

லேசாக காற்றிலாடி ஓர் அறுந்த பட்டம் போல் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது.

 

‘நான் எப்போ சாவேன்?’ – தேடன்

தேடன்

‘நான் எப்போ சாவேன்?’ என்று அடிக்கடி கேட்பாள் அவள், லீலா. அவளுக்கு வாழ்வின் மீது அவ்வளவு வெறுப்பு என்பதை விட சாவின் மீது ஏதோ பிரியம் என்றே சொல்லலாம். ஏனேனில் அவள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக ஒன்றுமில்லை.

லீலாவிடம் எதற்காக நீ இப்படி கேட்கிறாய் என்றால் ‘எனக்கு லைஃப் ல ஒரு திருப்தி வரவேயில்ல‌. கடவுள் கிட்ட போயிட்டா நானும் சந்தோஷமா இருப்பேன்ல. அதுல தான் எதோ நிறைவு இருக்க மாதிரி தோணுது. இங்க வாழறது எதுக்குனே தெரியல.’ என்று நீட்டி முழக்கி தத்துவம் பேசுவாள். அதில் உண்மையிருந்தாலும் சாவை பற்றியே யோசிப்பது ஒரு நோய் என்பதை அவள் அறியவில்லை.

லீலாவின் வீட்டின் அருகே ஒரு சிறுமிக்கு திடீரென புற்றுநோய் என்று தெரியவந்தது. அவளுக்கு அந்த சிறுமியோடு சிறிது நாள் பழக்கமே என்றாலும் லீலாவோடு அந்த சிறுமி மிக நெருங்கி விட்டிருந்தாள். சிறுமிக்கு புற்றுநோய் என்று தெரியவந்தது முதல் லீலாவுக்கு தூக்கமே வரவில்லை. கண்களை மூடினாலும் திறந்தாலும் அந்த சிறுமி கீமோதெரபியால் முடி கொட்டி மெலிந்து சோர்ந்து விட்டிருந்தவள், ஆட்டோவில் இருந்து இறங்கி வருகையில் மூச்சை இழுத்து இழுத்து விட்டபடி லீலாவை பார்த்து சிரித்த அந்த தருணமே ஓடிக்கொண்டேயிருந்தது. எப்படியும் அந்த சிறுமி இன்னும் சில மாதத்தில் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டனர்.

லீலா அந்த சிறுமியை பார்க்கும் தைரியம் அற்றவளாய் இருந்தாள். அந்த சிறுமியை எல்லோரும் வந்து பார்த்து விட்டு சென்றனர். லீலாவின் வீட்டிலிருந்தும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர். லீலாவிடம் ‘கடைசியா பாத்துடு. உன்னதான் அவ கேட்டா. அப்பறம் பாக்கமுடயலனு வருத்த பட்டு ப்ரயோசனம் இல்ல’ என்று அம்மா சொன்னாள். லீலாவால் அந்த சிறுமியை பார்க்க போகும் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாது அழத் தொடங்கிவிட்டாள். அழுகை நின்றதும் திரும்ப அந்த சிறுமியின் நினைவு வர அவளுக்குள் செய்வதறியா கோபம் பொங்கியது.

மறுநாள் லீலா கண்விழித்து பார்க்கையில் அவள் முன் அந்த சிறுமி நிற்கிறாள். ஓடியாடி சிரித்து குதித்த அந்த சிறுமி மெலிந்து நொடிந்து மூச்சு விட சிரமப்பட்டு மொட்டை தலையோடு அவள் முன் நிற்கிறாள். லீலா வின் கண்களோடு சிறுமியின் கண்கள் மோதுகின்றன. எல்லாமே சூன்யமானது அந்த சிறுமி கண்களில் தெரிந்த சிரிப்பால்.

லீலாவிடம் ‘நான் எப்போ சாவேன்க்கா,’ என்கிறது அந்த மழலை மாறாத குரல். லீலாவின் உடலெங்கும் ஆயிரமாயிரம் அதிர்வலைகள். அந்த கேள்வி, தான் கேட்கும் அதே கேள்வி. மீண்டும் மீண்டும் கேட்கிறாள் அந்த சிறுமி அதே கேள்வியை.

‘நான் எப்போ க்கா சாவேன் சொல்லுக்கா’ அதே மழலை குரல் துக்கத்தின் சாயலில் உள்ளிறங்கி ஒலிக்கிறது.

லீலாவின் குரல் வரவேயில்லை அவள் உதடுகள் செய்வதறியாது மேலும் கீழும் அசைந்தன. என்ன சொல்வது, என்ன சொல்லி என்னவாகப் போகிறது. சாவு நிம்மதி தான் ஆனால் பிரிவு கொடியது; வாழ்க்கையின் மிக பெரும் வன்முறை. அதற்கு மேல் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அந்த சிறுமி சிரித்து கொண்டே நின்றிருந்தாள்.

‘அய்யோ,’ என்று ஒரு பெருங்கூச்சல் அந்த சிறுமியின் வீட்டிலிருந்து. லீலா தூக்கத்திலிருந்து விழிக்க லீலாவின் அம்மா சொன்னாள் ‘குழந்த போயிட்டா’.

குறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்

காலத்துகள் 

‘நீ பேசறது உன் எழுத்தை விட கொஞ்சம் பெட்டரா இருக்கும், மாஸ்க்கால மூடிட்டு பேசினா அதுவும் ஒண்ணும் புரியாத மாதிரி ஆயிடுது’ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. பெருந்தொற்று காலத்திலும், இலக்கியம் குறித்தும்,  நான் எழுதவதைப் பற்றியும் அவருடன் உரையாடுவதை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவர் வீட்டிற்கு வந்த காரணம் இலக்கியம் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாக நான் எதையும் புதிதாக எழுதவில்லை. ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று சொல்ல முடியாது. நான் எழுத்தாளனா என்ற தன் சந்தேகத்தை வெளிப்படையாக முற்றுப்புள்ளி கேட்பார், நான் அதை உள்ளூர என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. இன்று மீண்டும் எழுதத் தோன்றியது.

‘இப்ப சரியா இருக்கா ஸார்’

‘ஏன்யா கத்தற, போன்ல பேசும் போது தான் சில பேர்  இப்படி சத்தம்  போடுவாங்க, நீ எதுத்தாப்ல தான ஒக்காந்திருக்க’

‘சாரி ஸார். ஒரு சின்ன குழப்பம், அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்’

‘..’

‘ரொம்ப நாளைக்குப்பறம் இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன் ஸார்’

‘..’ ‘எதுக்கு’ என்று பெரியவர் வெளிப்படையாக கேட்காதது, நல்ல ஆரம்பம், அவர் மனநிலை மாறுவதற்கு சொல்லி விட வேண்டும்.

‘முதல் வரி  எழுதினேன் ஸார், நான் சொல்றது நம்ப முடியாத மாதிரி இருக்கும், அந்த நொடி போன் வந்தது ஸார். அதுக்கப்பறம் நாள் முழுக்க  கிட்டத்தட்ட மூணு நாலு மணி நேரம் போன்லையே இருந்திருக்கேன். தொடர்ச்சியா கால்ஸ். பர்ஸ்ட் லைனுக்கு பிறகு எதையுமே எழுத முடியலை’

‘என்ன அந்த வரி’

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம்.’

குட். நான் கூட நீ என்னமோ ‘இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ், இட் வாஸ் தி வர்ஸ்ட் ஆப் டைம்ஸ்’ மாதிரி ஏதோ எழுதிட்டியோன்னு நினைச்சுட்டேன். ‘

‘அந்த வரி என்னவாயிருந்த என்ன ஸார், கண்டின்யு பண்ண முடியலையே’

‘சரி, இப்ப  என் கிட்ட வந்து பேசிட்டிருக்கிறதுக்கு தொடர்ந்து எழுதியிருக்கலாமே. நானும் ஈவ்னிங்கை உருப்படியா ஸ்பெண்ட் பண்ணிருப்பேன்’ பெரியவரின் இத்தகைய பேச்சுக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

‘நாள் பூரா அடுத்து எழுத முடியாம போனது தான் எனக்கு குழப்பமா இருக்கு ஸார். இதுல ஏதாவது குறியீடா இருக்குமோ?’

‘குறியீடு எங்க திடீர்னு வருது’

‘இலக்கிய கடவுள்கள் இந்தக் கதையை நீ எழுத வேண்டாம்னு சொல்றாங்களோ’

‘சிம்பாலிக்கா சொல்றாங்களோன்னு கேக்கற? இங்க சிம்பாலிக் யூஸ் பண்ற இடத்தில், குறியீடு பொருந்துமா?’

‘..’

‘குறியீடுலாம், நல்ல மொழி வளம், சிந்தனை உள்ளவங்க உபயோகிக்கிற வார்த்தை. நீ நேரடியா எழுதறேன் பேர்வழின்னு அதையே கந்தரகோலம்  பண்ற ஆளு, உனக்கு எதுக்கு’

‘சரி, குறியீடு வேண்டாம். சகுனம்னு வெச்சுக்குங்க. கதையை ஆரம்பிக்கும் போதே தடங்கல் வருதே, இலக்கிய தெய்வங்கள் தரும் கெட்ட சகுனமா எடுத்துக்கலாமா’

‘உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா’

‘எனக்கு பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸார் , ஆனா பயமாயிருக்கே’

‘அதானே, ஓரு ரைட்டர் நேம் ட்ராப்பிங் பண்ணாம, அவரை க்வோட் பண்ணாம  பத்து நிமிஷம் கூட உன்னால பேச முடியாதே’

‘பேய், பிசாசு குறித்த தன்னுடைய நம்பிக்கை பற்றி இப்படி ஓரு ரைட்டர் சொன்னார்னோ, அவரை பெயரையோ நான்  குறிப்பிடலையே ஸார், நீங்க தான் இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்ன்னு இன்னொருத்தரை க்வோட் செஞ்சீங்க’

‘ஆனா அவர் தன் நம்பிக்கை குறித்து குறிப்பிட்டதையே தானே நீயும் சொன்ன’

‘நானும் அவர் மரபுல வந்தவன்னு….’  சொல்ல வந்ததை நிறுத்தினேன்

‘…’

பெரியவர் எதுவும் பேசவில்லையென்றாலும் , பல வருடங்களாக அவரிடம் இலக்கிய வசவு வாங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அவருடைய  மனவோட்டம்  புரிந்தது. இலக்கிய முன்னோடிகளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர் முற்றுப்புள்ளி, அதனாலேயே சாதாரணமாக ஏதாவது கூறினாலும், அவர்களை அது சிறுமைப்படுத்துவதாக  எண்ணிக்கொண்டு பொரிந்து தள்ளிவிடுவார். அதற்கு இடம் தரக் கூடாது.

‘நான் சொன்னதை நீங்க எப்பவும் போல விபரீதமாக புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஸார். அவர் மரபுல வந்தவன்னு, என் எழுத்தின் தரத்தை வெச்சோ, என்னை அவருடன் ஒப்பிட்டோ  சொல்லலை, அமானுஷ்யம் குறித்த அவர் நம்பிக்கை வழி வரேன்னு தான் சொல்றேன்.’

பெரியவரின் இறுக்கம் இளகியது.

‘குறியீடு, சகுனம் பத்திலாம் நீ கவலைப் படாத. நான் பல வருஷமா  உன்கிட்ட நேரடியாவே மூர்க்கத்தனமா  உன் எழுத்து மோசம்னு சொல்லிட்டு வரேன், அதையே நீ கண்டுக்காம எழுத்திட்டிருக்க. ஸோ நீ எழுத ஆரம்பிக்கும் போது, பூனையென்ன, புலி, பாம்பை நடுல சகுனமா விட்டால்  கூட நீ  மாறப் போறதில்லைன்னு  லிடரரி காட்ஸுக்கு  தெரியாதா என்ன. நீ வழக்கம் போல, எப்பவும் கொட்டற எழுத்துக்  குப்பையை கொட்டு’

‘ ‘ப’னாக்கு ‘ப’னான்னு நீங்க பாம்பு, புலின்னு சொல்லியிருந்தாக் கூட, எனக்கு அதுலயும் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ஸார். பாம்புகள் மேல் எனக்கிருக்கிற சரிசமான ஈர்ப்பும், பீதியும் பற்றியும், என் கனவுகளில் அவை அடிக்கடி வருவதும் உங்களுக்கு தெரியும். இன்னிக்கு எழுத ஆரம்பிச்ச கதையுடன் சர்ப்பம், எழுத்து, இரண்டையும் இணைக்கும் உளவியல் சிக்கல்னு இன்னொரு புனைவும் எழுதிடலாம்னு நினைக்கிறேன் ஸார். முடிஞ்சா இன்றைய தடங்கல்களையே கூட கதையா மாத்திடலாம். மூன்று புனைவுகள். வாட் டூ யு திங்க்?’

‘..’

‘ஸார்’

‘என்னை ஏன் கேக்கற’

‘என் ஐடியா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…’

‘நீ எப்படியும் எழுதத் தான் போற. ஒரேயடியா மூன்று கதைகளை நான் படிச்சுத் தொலைக்கணும். அதனால வரும் பாதிப்பை தடுக்க ஏதாவது தடுப்பூசியை இலக்கிய கடவுள்கள் தருவாங்களா, அவங்க கிட்டகூட உன் எழுத்திலிருந்து காப்பாற்றும் மருந்து இருக்காதே’

 

பிற முற்றுப்புள்ளி கதைகள்

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

குற்றமும் தண்டனையும் – காலத்துகள் சிறுகதை

முடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை

காலத்துகள்

போர்-பி வகுப்பறையில் ஹீமேன் தொலைக்காட்சி தொடரின் நேற்றைய அத்தியாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனை, மேரி மார்க்கெட் மிஸ் அருகில் அழைக்கிறார். மேரி மார்க்கரெட் என்பதை மேரி மார்க்கெட் என்று அழைப்பதில்தான் பயல்களுக்கு குஷி. உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு கையை நீட்டி விரல் முட்டியில் ஸ்கேலால் அடிவாங்கிவிட்டு தன் இருக்கைக்குச் செல்ல முயல்பவனை நிறுத்தி, ‘கோ தேர் அண்ட் ஸிட்,’ என்கிறார் மார்க்கெட் மிஸ். ‘மிஸ் மிஸ்’ என்று கெஞ்சுபவன் அவர் முன்னால் மீண்டும் கையை நீட்டுகிறான். பின்னாலிலிருந்து பயல்களின் கிண்டல் சிரிப்பொலி. ‘கோ தேர்’ என்று கையை ஓங்கிக் கொண்டு மிஸ் வர தளர்ந்த நடையில் அந்த பெஞ்ச்சிற்குச் சென்று அமர்கிறான்.

மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்ச்சின் இடது முனையில் இவன், அடுத்து சந்திரா, அதற்கடுத்து ப்ரியா. வகுப்பு நடக்கையில் பேசி மாட்டிக் கொண்டால் பெண்கள் அருகில் அமர வைக்கப்படுவது அவ்வப்போது தரப்படும் தண்டனைதான். இனி அடுத்த பீரியட் முழுதும் பயல்கள் கிண்டல் செய்து படுத்தி எடுப்பார்கள். யாராவது ஒருவன் மனமிரங்கி ஆட்காட்டி விரலை வளைத்து, நடு விரலை அதனுடன் இணைத்து இவன்த் தோளை தொட்டு பழம் விடும் வரை ‘ஏய் கிட்டக்க வராத’, ‘தொடாத’ தான். மார்க்கெட் மிஸ் இன்னும் இரண்டு மூன்று முறைகூட அடித்திருக்கலாம்.

முடிந்தவரை சந்திராவிடமிருது தள்ளி இருப்பதற்காக பெஞ்ச் முனையில் அமர முயன்றாலும், இரண்டு பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய இடத்தில் இடைவெளி என்பது சாத்தியம் இல்லை. நேரே போர்ட்டை மட்டுமே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான், மிஸ் ஏதோ சொல்கிறார். அடுத்த பீரியடிற்குப் பிறகு லஞ்ச் டைம். அதற்குள் பயல்களைச் சரிகட்டி விடவேண்டும். இதவரை நுகர்திராத மணமொன்றை உணர்பவன் தலை தாழ்த்தி சந்திராவைப் பார்க்கிறான். அவள் உடலிலிருந்தோ, பள்ளிச் சீருடையிலிருந்தோதான் அந்த வாசம் வருகிறது. வீட்டில் பண்டிகை நாட்களில்போது சாமி படங்களுக்கு மாட்டப்படும் பூச்சரங்கள் அடுத்த நாள் எடுக்கப்படும்போது ஒவ்வாமையையும், கிளர்ச்சியையும் ஒரு சேரத் தரும் மணத்தை போன்ற அடர்த்தியான வாசம். ஒரே ஒரு முறை அத்தர் தெளித்துக் கொண்டபோது நுகர்ந்த மணமும் இப்படித்தான் இருந்ததோ?

மீண்டும் அவள் பக்கம் திரும்புகிறான். வகுப்பில் இருக்கும் பெரும்பாலான பயல்களைவிட உயரம், உறுதியான உடல்வாகு சந்திராவிற்கு. உடலை அசைத்துக் கொள்கிறான், மனமும் நிலையழிகிறது. இடது கால் முழுதும் பெஞ்சிற்கு வெளியே இருக்குமாறு விலகுபவன் மீண்டும் அதை உள்ளிழுத்துக் கொள்கிறான். அடுத்த தன்னிச்சையான உடலசைவில் அவனுடைய உடலின் வலது பாகம் சந்திராவின் இடது பாகத்தை தொடுகிறது. இன்னும் நெருங்கி அவனைச் சூழும் அவளின் அடர்மணம். ஸ்கர்ட்டைத் துளைத்து வரும் அவள் கால்களின் வெப்பம், ஷார்ட்ஸ் அணிந்த இவன் தொடையைச் சுடுகிறது. வலது காலை மட்டும் சற்று நகர்த்த இருவரின் தொடைப் பகுதிகள் சமநிலையில் இணைகின்றன. சந்திரா, மார்க்கெட் மிஸ் சொல்வதை நோட்டில் குறித்துக் கொண்டிருக்கிறாள். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறான். ‘போர்-ஏ’ க்ளாஸ் பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஓடுகிறார்கள். முதல் முறையாக பார்ப்பது போல் உள்ளது. பார்வையை விலக்குகிறான். அவஸ்தை. இது தவறில்லையா? ‘அவர் பாதர் இன் ஹெவன்’. மூச்சை உள்ளிழுத்து சந்திராவின் மணத்தை உடல் முழுதும் நிரப்புகிறான்.

oOo

ட்வெல்வ்-பியில் சதாசிவம் ஸார் வழக்கம் போல் கீச்சுக் குரலில் ஆங்கில பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக திரும்புவது போல் உமா அமர்ந்திருக்கும் பக்கம் பார்க்கிறான். ஜூலை மாத மதியம் மூன்றரை மணி வெயில் ஜன்னல் வழியாக பெண்கள் பகுதியை நிரப்பியிருக்கிறது. உமாவின் கன்னத்தில் வியர்வை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்குள் ‘எதேச்சையாக’ பார்ப்பதற்கான நேரம் முடிந்த உணர்வு ஏற்பட ஸார் பக்கம் திரும்புகிறான். இனி சிறிது நேரம் கழித்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் எதேச்சை. எண்ணை வழியும் முகத்திலும் உமா துலக்கமாகத்தான் இருக்கிறாள். அவளுக்குப் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும், சற்றே சதைப்பற்றான உதடுகளையுடைய மீராவிற்கு ஒருபோதும் வியர்க்காது போல.

பெண்கள் வரிசையில் கடைசி பெஞ்ச்சில் சந்திரா. இத்தனை வருடங்கள் இவனுடன்தான் படித்து வருகிறாள் என்றாலும் கண்ணில் படுவதென்பதோ இது போல் எதேச்சையாக எப்போதேனும்தான். தினமும் அட்டென்டென்ஸ் எடுக்கப்படும்போதுகூட அவள் மனதில் பதிவதில்லை. பெண்களுக்கு அருகில் அமர வைக்கப்படும் தண்டனையை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்தியாயிற்று. பயல்கள் அதற்கு அடுத்தான வகுப்புக்களில் அதை தண்டனையாக பாவிக்க மாட்டார்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்திருக்கிறார்கள். பி.டி. பீரியட்டில் ஷார்ட்ஸ் அணிந்து பங்கேற்பதும் ஐந்தாவதுடன் முடிந்தாயிற்று.

சந்திராவிற்கு அன்று இவன் அவளருகில் அமர்ந்திருந்தது நினைவில் இருக்குமா? அன்று அனுபவித்த அவஸ்தையான கிளர்ச்சியை சந்துருவுடன்கூட பகிர்ந்து கொண்டதில்லை. ஆறாவது படிக்கும் போது தான் உமாவின் இருப்பை உணர ஆரம்பித்தான், பின் மீரா, கடந்த இரு வருடங்களாக அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் சுந்தரி அக்கா பற்றி குற்றவுணர்வு ஏற்படுத்தும் எண்ணங்கள். ஆனால் அந்த அரை மணி நேரத்திற்குப் பின் ஒரு முறைகூட சந்திராவிடம் ஈர்ப்பு ஏன் ஏற்பட்டதில்லை என்பதை புரிந்து கொள்ள முயன்று, அது இயலாமல் தலையசைத்துக் கொள்கிறான்.

oOo

நிச்சயதார்த்தம் முடிந்தபின் வனிதாவுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறான். காரின் பின்னிருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருக்க, அவளுடன் ஒட்டியபடி மெல்லிய குரலில் உரையாடல். ‘நிவியா’ உபயோகிக்கிறாள். அசையும்போது அவள் உடுத்தியிருக்கும் பட்டுப் புடவையின் சரசரப்பில் உடல் கிளர்கிறது. யாரையும் முத்தமிட்டதுகூட கிடையாது, இன்னொருவரின் எச்சில் ருசி, மணம் எப்படி இருக்கும். வாட ஆரம்பித்திருக்கும், வனிதா சூடியிருக்கும், பூச்சரத்தின் மணம். வண்டி குலுங்க வனிதாவின் உடல் இவன் மீது சாய தொடைகள் ஒட்டுகின்றன. உமாவின் வியர்வை வழிந்த முகத்திலும், மீராவின் சதைப்பற்றான உதடுகளிலும், காரக் குழம்பு கிண்ணத்தை நீட்டும் சுந்தரி அக்காவிடமிருந்து வரும் பூண்டு, மசாலா பொடிகளின் மணத்திலும், இப்போது வனிதாவின் ‘நிவியா’ வாசத்திலும், தன் இருப்பை உணர்த்தியபடி இருக்கும் சந்திராவின் மணம். இதுவரையிலான பாலுணர்வுத் தருணங்களின் ஒவ்வொரு கணத்துடனும் பிணைந்திருக்கும், இனியும் பிணைந்திருக்கப்போகும், போர்-பியின் அந்தச் சில முடிவிலி நிமிடங்களை தன்னுள் நிகழ்த்திப் பார்ப்பவன், சந்திரா மீது இறுதி வரை எந்த ஈர்ப்பும் உருவாகாததின் முரண்நகையைப் புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சி எப்போதும் போல் தோல்வியடைகிறது. “என்ன சிரிக்கறீங்க?” என்று வனிதா கேட்பதற்கு பதில் சொல்லாமல் தலையசைத்துவிட்டு, கார் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி, “அப்ஸர்ட்” என்று முணுமுணுத்துக் கொள்கிறான்.