கோகுல் பிரசாத்

சருகுகள் – அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

கோகுல் பிரசாத்

16 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிச் சிறுகதையான ‘அமெரிக்கக்காரி’யில் லான்ஹங் மதியிடம் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என சொல்லிக் கொண்டே இருக்கிறான். அ முத்துலிங்கத்தின் தலையாய நோக்கமும் வாசகரை ஆச்சரியப்படுத்துவது தான். இலகுவான மனநிலையில் பக்கங்களை அனாயசமாக புரட்டிக் கொண்டே செல்லலாம். மொழியைத் திருகித் திருகி எழுதுவதில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் வாசகரை பரிசோதனை எலியாக்கி பலி கொடுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கதைகளை ஞாபக இடுக்குகளில் சுமந்தலைந்து கொண்டு திரிய வேண்டிய அவசியமேதும் ஏற்படப் போவதில்லை. வாசிக்க வாசிக்கவே கழன்று கொண்டு காணாமல் போய்விடும் அற்பக் கதைகள். வேண்டாத பொருளை தொலைத்து விட்டு அழிச்சட்டியம் பண்ணும் சமர்த்துப் பிள்ளைகளும் இருநூறு ஆண்டுகள் வாழப் போகிறவர்களும் கட்டுரை எழுதுவதாக ஒப்புக் கொண்டவர்களும் இரண்டாவது முறை வாசித்துக் கொள்வார்கள்.

இவை கட்டுரை, சிறுகதை, முன்னுரை, அனுபவம் போன்ற வகை மாதிரிகளுக்குள் அடங்க மறுக்கிற வரையறைகளுக்குள் விழுந்து விடாத அபாரமான தனித்துவம் கொண்டவை. ஒரே சமயத்தில் நாட்குறிப்பு போலவும் தகவல் களஞ்சியம் போலவும் எண்ணச் செய்யும் மாயாஜால விளையாட்டை நிகழ்த்தி முகமூடிகளை கழற்றி மாற்றி அணிந்து வாசகரை திக்குமுக்காட வைக்கின்றன. Genre லேபிள்களை மாற்றி மாற்றி ஓட்டினாலும் அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன். எட்ட நின்று வேடிக்கை பார்த்தவாறே சம்பவங்களை வெறுமனே சொல்லிச் செல்லும் இவரது பாணியில் போதாமைகள் பூதாகரமாகத் தென்படுகின்றன. ஓர் இலக்கிய ஆக்கத்திற்குத் தேவைப்படும் நுணுக்கமான அவதானிப்புகளும் நுட்பமான விவரணைகளும் இவற்றில் இல்லை. ஓர் அந்நிய நிலத்திற்குள் முதன்முறை அலையும் மனிதனைக் கூட அந்த மண்ணையும் மாந்தரையும் கூர்ந்து கவனிக்க ஆசிரியர் அனுமதிக்க மறுக்கிறார். நைரோபி வீதி ஆள் அரவமற்று இருந்தது என்கிறார். இப்படிச் ‘சொல்வதற்கு’ கதைக் களத்தை எமக்கு பரிச்சயமான மண்ணிலேயே அமைத்திருக்கலாம். அரவமற்று ‘எப்படி’ இருந்தது என்பது முக்கியமற்றதாக ஆகிவிடும் பொழுது நைரோபி என்பது ‘ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் கதைகள்’ எனப் பீற்றிக் கொள்வதற்கான அசட்டுக்காரணம் மட்டுமே என்றாகி விடுகிறது.

மனித உணர்வுகள் வெளிப்படுவதற்கான அடிப்படை முகாந்திரத்தை எத்தனை முறை துழாவித் துழாவி தேடினாலும் கண்டடைய முடிவதில்லை. கதை நிகழ்புலங்களும் மனித முகங்களும் மாறுகின்றன. ஆனால் எல்லோரும் நம் பொதுப்புத்தியில் சிறைப்பட்டிருக்கும் பிம்பங்களின் ‘மாதிரிகளாக’வே (Samples) இருக்கிறார்கள். ‘எருமை மாடு மேலே மழை பெய்ஞ்சா எனக்கென்ன’ மாதிரி உப்புச் சப்பில்லாமல் வாழ்வை கடக்கிறார்கள். ஏனெனில் அத்தனை நபர்களையும் கண்காணித்தபடி நமக்கு கதை சொல்வது கிட்டப் பார்வை குறைபாடு உடைய ஒரே ஆள். இந்தக் கதை சொல்லும் முறையில் இவரால் இவ்வளவு தான் இயலும் போல. முப்பரிணாமமோ பஞ்சபரிணாமமோ எதிர்பார்க்கவில்லை. தட்டையாக இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாகி விடுகிறது என்கிறேன். எல்லாப் பெண்களின் இடைப் பிரதேசம் கூட, எந்த நாட்டுப் பெண்களானாலும் சரி எந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களானாலும் சரி, மறைக்கப்படாமல் இருக்கிறது. இடைப் பகுதியின் நிறம் ஒருத்திக்கு பழுத்த பரு நிறத்திலும் இன்னொருத்திக்கு மண்புழு நிறத்திலும் இருப்பது மட்டும் ஆறுதல். அப்புறம் போனால் போகிறது என்று ஓரிரு இடங்களில் ஒன்றிரண்டு தடவைகள் கழுத்துப் பள்ளத்திற்கும் பன்றி இறைச்சியைப் போன்ற தொடைகளுக்கும் போய் வருகிறார். இந்தக் கதைகளை ‘முந்தி எழுதியது’ போலலல்லாத கதைகள் என முன்னுரையில் அ முத்துலிங்கம் குறிப்பிட்டாலும் ஒரே தொகுப்பிலேயே சில குறிப்பிட்ட விஷயங்கள் பல கதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதை கவனிக்க மறந்து விட்டிருக்கிறார். நினைவூட்ட வேண்டியது எம் கடமை.

வாசகர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து இரசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலோ ஓ ஹென்றி திருப்பம் வைக்கிறேன் பேர்வழி என்றோ ‘அவள் இன்னும் 118 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’, ‘மேலும் 21 வருடங்கள் பிடித்தன’ என சில கதைகளை முடிக்கிறார். (லூசியா & உடனே திரும்ப வேண்டும்). தன்னுடைய கதைகளில் இடம்பெறும் பழங்காலத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 14 வயது தான் இருக்க வேண்டும் என தனக்குத் தானே விதித்துக் கொண்டிருப்பார் போல. (லூசியா & புகைக்கண்ணர்களின் தேசம்). ஒரு வயது கூடியிருந்தாலோ குறைந்தாலோ என்ன குறை ஏற்பட்டுவிடப் போகிறது எனப் புரியவில்லை. பின் ஏதோவொரு வருடத்தை குறிப்பிட்டு ‘அந்த ஆண்டில் இதே போல நடந்தது என நினைத்துக் கொண்டேன்’ என பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார். இரண்டும் வெவ்வேறு தனித்தனிக் கதைகள் என்றாலும் பதினாறாம் நூற்றாண்டில் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்ட ரோபர்ட் நொக்சிற்கும் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் கதையை வேறொரு நிலப்பகுதியில் விவரிக்கும் கதை சொல்லிக்கும் சொல்லி வைத்தாற் போல 1611ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட பைபிள் தான் கிடைக்கிறது. (லூசியா & பத்தாவது கட்டளை). ரோபர்ட்டிடம் இருந்து பல கைகள் மாறி பல நூற்றாண்டுகள் கடந்து இடையே ஏழு கதைகளை வேறு தாண்டி கதை சொல்லியிடம் அதே பைபிளை எவரோ எவருக்கோ எழுதிய கள்ளக்காதல் கடிதத்துடன் காலம் சேர்ப்பித்ததை வாசக இடைவெளிகள் எனக் கருதி நாம் நிரப்ப வேண்டுமா போன்ற குழப்பங்களுக்கு வாசகர்கள் தங்களை ஒப்புவித்துவிடக் கூடாது.

‘பரிமளத்திற்கு 33 வயதிருக்கும் என்பதை ஒருவரும் சொல்லவே முடியாது’ என எவரும் கணிக்க முடியாத பரிமளத்தின் வயதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ஆசிரியரால் ‘பரிமளத்தின் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்’ எனத் தோராயமாகத் தான் குறிப்பிட முடிகிறது.(மன்மதன்) ‘விவரமான ஆள் தான்’ என நினைத்துக் கொண்டேன். (அ.மு.பாதிப்பு!) இதற்காவது ஆண்களின் சார்பாக ஒரு பொது மன்னிப்பை வழங்கி விடலாம். வேட்டை நாய் சிறுகதை சம்பந்தமே இல்லாமல் தொடங்கி இலக்கற்று திரிந்து மற்றுமொரு ‘நினைத்துக் கொண்டான்’ இல் முடிகிறது. இந்த ‘வேட்டை நாய்’ என்பது குறியீடாக இருக்கும் பட்சத்தில் விபரீதமான முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது. ஒரு கட்டிப்பிடி சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை தழுவி  எழுதப்பட்ட பத்தாவது கட்டளை எனும் கதை மாதிரி ஒன்று சுந்தர ராமசாமியின் ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ போல பசப்பலாகி விடுமோ என பயந்து கொண்டிருந்தேன். பயந்ததை விட மோசமாக பிசுபிசுத்து விட்டது. கதையின் இறுதித் திருகலில் வாசகருக்கு உண்டாக வேண்டிய நம்பகத்தன்மை குறித்து ஆசிரியர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ‘இதெல்லாம் தனக்கு நேரவில்லை’ என திசை மாற்றுவது வடுவூர் துரைசாமி காலத்து டெக்னிக் ஐயா.

கதைகள் நெடுக Gimmicks-களுக்கு பஞ்சமே இல்லை. தான் வாசிக்க நேர்ந்த அறிவியல் தகவல்களை மையமாக வைத்து அவற்றை சுற்றி கதை பண்ணிவிடுவது ராஜேஷ்குமாரின் வழக்கம். அ முத்துலிங்கமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாரே என அங்கலாய்ப்பாக இருக்கிறது. எலிஸபெத் மகாராணி பதவி ஏற்றது, எல்லைக்கோடுகளுக்கு இடையே நிலவும் நேர வித்தியாசம் போன்று தகவல் துணுக்குகளாக வாசித்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கக் கூடியவற்றை நம்பி பல கதைகளை சமைத்திருக்கிறார். அவற்றை அந்தக் கதைகளில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டால் எஞ்சுவது எதுவுமில்லை. ‘கொடிக்கயிற்றில் மறந்து போய்விட்ட கடைசி உடுப்பு போல’ என சிற்சில இடங்களில் திடுக்கிட வைக்கிறார். சில இடங்களில் மென்னகையும் கையளவு சொற்களிலேயே முழுமையாக திரண்டெழும் ஒரு சில கதாபாத்திரங்களின் சித்திரமும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு போதுமானது அல்ல. அ முத்துலிங்கத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் போல ‘முன்பு எப்படியெல்லாம் நன்றாக எழுதியிருக்கிறார்’ என வாசகர்கள் நினைத்துப் பெருமூச்செறிய வேண்டியது தான்.

 

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம்

வெளியீடு : காலச்சுவடு.

 

ஷோபா சக்தியின் ‘எழுச்சி’

கோகுல் பிரசாத்

சமீபத்தில்,’உங்கள் வேலை குறித்து சலிப்பாக உணர்கிறீர்களா? இப்படியும் உலகில் சில மோசமான வேலைகள் உண்டு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நுனிப்புல் மேய்ந்தேன். அடுத்தவர் அக்குளை முகர்வதை எல்லாம் வேலை பட்டியலில் பார்க்கத்  திகிலாக இருந்தது. அவற்றுள் வணிக வளாகங்களில் ஆட்களை தடவி சோதனை செய்யும் பணியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கையுறைகளை அணிந்தபடி நம்மை நோக்கி பணிவாக வணக்கம் சொல்லி, பாக்கெட்டுகளில் உள்ள சாவிகளை அழுத்தமாக பிடித்து அவை சாவிகள் தான் என உறுதி செய்து கொண்டு ஏனைய பாகங்களை உறுத்தாத மிதமான ஸ்பரிசத்தில் தடவி உள்ளே அனுமதிப்பார்கள். முதலில் சொல்லப்படும் வணக்கம் என்பது அவர்கள் நம் உடலை பரிசோதிப்பதற்கான அனுமதியும் மன்னிப்பும் கலந்த பாவனையில் இருக்கும்.

தமிழ்ச்சூழலில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அநேகமாக இல்லை. கதையின் மையம் இதுவல்ல எனும் போதிலும் ஷோபா சக்தியின் ‘எழுச்சி‘ சிறுகதையில் ஒரு மெல்லிய சித்திரம் உண்டு. இந்தக் கதையில் பாரீஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் அகதி ஒருவன் சென்னைக்குச் செல்ல விமான நிலையம் வருவான். அங்கே அவனை வலுக்கட்டாயமாக உடற்பரிசோதனைக்கு உள்ளாக்குவார்கள். இவனது பேய்த்தனமான முக பாவங்களில் சந்தேகம் கொள்ளும் அதிகாரிகள் நிர்வாண சோதனைக்கும் உட்படுத்துவார்கள். விதைப்பைகளை அழுத்தியதில் தீராத வலி ஏற்பட்டு தனக்குள் சுருங்கிப் போவான்.

அவன் இலங்கையில் வாழ்ந்தபோது ஒரு தகராறில் துப்பாக்கியின் பின்பாகத்தால் இவனது விதைப்பைகளை அடித்திருப்பார்கள். மாங்கொட்டை அளவுக்கு அவை வீங்கிப் பெருத்து மரண அவஸ்தைகளை அப்போது அனுபவித்திருப்பான். அதன் பிறகுதான் தீர்மானமெடுத்து பாரீஸ் வந்திருப்பான். சென்னை விமான நிலையத்திலும் சோதனை செய்வார்கள். இதனால் பழைய சம்பவங்கள் நினைவில் வலியுடன் கிளர்ந்தெழுந்து உள்ளுக்குள் மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே இருப்பான். உளவியல் ரீதியான மன அழுத்தங்கள் கூடிக் கொண்டே இருக்கும். அவனது மனம் விதைக் கொட்டைகளையும் சோதனையையுமே சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். பதினைந்து நாட்கள் மனைவியுடன் உல்லாசமாக கழிந்ததில் இவற்றை தற்காலிகமாக மறந்திருப்பான். விடுமுறை தினங்கள் தீர்ந்தபின், மறுபடியும் விமான நிலையம். மீண்டும் சோதனைகள். அவமானமும் ஆற்றாமையும் நொதித்துத் தளும்பும். பாரீஸில் அவனுக்கு அதிர்ச்சிகரமான மாற்றம் காத்திருக்கிறது.

அவன் பணிபுரியும் தொழிற்சாலையின் வாசலில் அவன் வயதையொத்த நபர் அமர்ந்திருப்பார். பணியாளர்கள் புகுந்து வரவேண்டிய இரும்புக் கூண்டு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த நபர் தொழிலாளர்களின் உடலை தழுவி சோதனை செய்வார். இதற்கு முன் இந்தத் தொழிற்சாலையில் இப்படிப்பட்ட வழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. இதில் இருந்து தப்பிப்பதற்காக இவன் மூன்று நாட்கள் தொழிற்சாலையின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைவான். பின்னர் காமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனை செய்வதற்கான அவசியங்கள் குறித்து பாடம் எடுக்கப்பட்டு முன் வாசல் வழியாக நுழையும்படி உத்தரவிடப்படுவான். ‘இது மனித உரிமை மீறல்’ போன்ற கோஷங்கள் நிர்வாகத்திடம் எடுபடாது.

அடுத்த நாள், உள்ளாடை அணியாமல் வருவான். சோதனை செய்பவர் கைகள் இவனது மார்பு வயிறு தொடை என பயணித்து அடிவயிற்றில் திடுக்கிட்டு தயங்கிப் பின்வாங்கும். இவன் ஒரு வெற்றிச் சிரிப்புடன் உள்ளே நுழைவான். மறுநாளும் இதே கதை தான். அடுத்தடுத்த தினங்களில் இவனைக் கண்டாலே சோதனை ஏதுமின்றி அனுமதித்து விடுவார். இதுவும் காமெரா மூலம் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சோதனையாளர் தனது சிக்கல்களை சொல்வார். இவனோ, ‘சோதனை செய்வது வேண்டுமானால் தொழிற்சாலை விதியாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டும் என எந்த நாட்டு சட்டத்திலும் இல்லை’ என மிதப்பாகத் திரிவான். இது குறித்து சட்ட வல்லுனர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு சோதனையாளனை மாற்றுவது என முடிவு செய்து ஒரு கிழவனை பணியில் அமர்த்துவார்கள்.

‘ஆண்டவனே வந்தாலும் சோதிக்காமல் விட மாட்டேன்’ என அவர் வீராப்பாக சூளுரைப்பார். விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் பாதாம் கொட்டைகளாக தின்று, தன்னை சோதனை செய்யும் போது பிறப்புறுப்பை விறைப்புடன் வைத்துக் கொள்வான். ஒருவன் மட்டும் சோதனை செய்யப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படும் இரகசியத்தை அறிந்து கொள்ளும் அரேபியத் தொழிலாளர்களும் இவனைப் பின்பற்றி உள்ளாடை அணியாமல் வேலைக்கு வருவார்கள். அந்தக் கிழவர் எத்தனை பிறப்புறுப்புகளைத்தான் தடவுவார்? தனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் கடவுளை திட்டி விட்டு அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிடுவார்.

இந்த எழுச்சி மெல்ல மெல்ல மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவி, ‘நாம மட்டும் இளிச்சவாயங்களா?’ என அவர்களும் உள்ளாடைகள் எதுவும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவார்கள். நாட்டின் பாதுகாப்பா மனிதனின் அடிப்படை உரிமையா என்ற தலைப்பில் இது ஒரு தேசிய விவாதமாக வளர்ந்து, இக்கட்டாய பரிசோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும்.

தமிழில் எழுதப்பட்ட சிறந்த பகடிக் கதைகளுள் ஒன்றாக இதைக் கருதுகிறேன். ஷோபா சக்தியின் இலகுவான மொழி கேலியின் அத்தனை நுட்பங்களுடனும் தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. கதையின் தலைப்பு உட்பட திருப்பித் தலைகீழாக்கப்பட்ட சம்பவங்களை வேறொரு தளத்தில் வாசகர்கள் பொருத்திப் பார்க்கலாம். ஆழ் நினைவில் புதைந்துவிட்ட துர்கனவு அசந்தர்ப்பமான சூழலில் அதற்காகவே காத்திருந்தது போல வெடித்துக் கிளம்புகிறது. தாழ்வுணர்ச்சியினால் வீழ்ந்து கொண்டே இருக்கும் மனம் பாலுறவின் லயிப்பில் மட்டும் அதனை மறந்து விடும் சூட்சமம் ஒரு புன்னகையுடன் துலங்குகிறது. ஓயாத மனம் ஆசுவாசம் கொள்கிறது. சிக்கலின் முடிச்சுகளை அவிழ்த்து மீறிச் செல்ல கிட்டிய வாய்ப்பும் பறிபோன பின்னர் அவன் வேலைக்குத் திரும்புவதில்லை.

தொகுப்பு : கண்டி வீரன் 

வெளியீடு : கறுப்புப் பிரதிகள்.

மீதமிருக்கும் கோதும் காற்று: ஒரு பார்வை

கோகுல் பிரசாத்

வாடிக்கையாளர் எவரும் வராத பாலியல் தொழிலாளியின் நாள் ஒன்றினை மையமாகக் கொண்டு ஓர் இடதுசாரி எழுத்தாளர் கதை புனைகிறார். வழக்கம் போல வேசிகள் வாழ்வு மீது பச்சாதாபம் கொண்டு தன்னை மாபெரும் மனிதாபிமானியாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் முனைப்புள்ள சித்தரிப்பு. வாடிக்கையாளர் கிடைக்காத அந்தக் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும்தான் கதையின் மையக் கதாபாத்திரம் வலியும் வேதனையுமின்றி நிம்மதியாக உறங்கியதாக முடிகிறது அக்கதை. இதனை வாசித்த சு. வேணுகோபால் அந்த எழுத்தாளரிடம், ‘நீங்க ஒரு பழக்கடை வச்சிருக்கீங்க. அன்னிக்கு யாரும் பழம் வாங்க வரல. அதனால கடைக்காரன் நிம்மதியா தூங்கினான்னு எழுத முடியுமா?’ என அந்தக் கதையை மறுத்து தனது பார்வையை முன்வைத்து எழுதியதே ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்ற சிறுகதை. இது அவர் எழுதிய கதைகளுள் முக்கியமானது.

இலக்கியம் என்பது வாழ்வை ‘காட்சிப்படுத்துதல்’ (portray) அல்ல. அது வாழ்வைத் துழாவி கண்டறிதலில் (discover) முகிழ்க்கிறது. கண்டறிந்த உண்மைகளை உணர்வுகளின் வழி கடத்துவதே சு. வேணுகோபாலுக்கு போதுமானதாக இருக்கிறது. சம்பவங்களின் தொகுப்பாக அல்லாமல் அவை இறுதியில் விட்டுச் சென்ற உணர்ச்சிகளின் தடயங்களை பின்தொடர்ந்தே இவரது கதைகளை நினைவு கூர்கிறேன். இவரது பெரும்பாலான கதைகளில் மையக் கதைமாந்தர்களின் புறத் தோற்றமோ அக வெளிப்பாடுகளோ மேலதிகமாக சித்தரிக்கப்படுவதில்லை. மாறாக மற்றவர்/ மற்றவை மீது தாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் ஊடாகவே அவர்கள் மேலெழுந்து வருகிறார்கள். பிறர் மீதான நம் பார்வைகளே நாம் யாரென பிறர்க்கு அடையாளம் காட்டுபவை.

சுகிர்தாவின் தினப்பொழுதுகள் ஏனைய பாலியல் தொழிலாளிகளிடமிருந்து மாறுபட்டதல்ல. ஆனால் திட்டமிட்டு கட்டமைக்கப்படாத சம்பவங்கள் இழுத்துச் செல்லும் திசைகள் தோறும் கதை வளைகிறது. இது வாழ்வு பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. திணிக்கப்பட்ட தத்துவ மேற்பூச்சுகள் ஏதுமில்லை. அதனாலேயே வரையறுக்கப்பட்ட எல்லைகள் குறித்த கவலையின்றி தன்போக்கில் திரிகிறது. அலைந்து திரிந்து வடிகட்டப்படாத எண்ணங்களைச் சிதறடிக்கிறது. மனிதர்கள் மீதான அவநம்பிக்கையில் துவங்கி மனிதத்தின் பேருருக் கொண்டு அமைகிறது. வெவ்வேறு அடர் நிறங்களின் வண்ணக் கலவைகள் குழைந்து வேகமெடுத்த தீற்றல்களின் சமரசமற்ற மோதல்களில் ஒரு ஓவியம் முழுமை கொள்வதைப் போல.

சுகிர்தாவின் வேடங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. அழகான வாடிக்கையாளனின் வயிற்றை அணைத்துக் கொள்ள பிரியமிருக்கிறது. கசப்பை விழுங்கி எரிச்சல் காந்தும் தருணத்திலும் தன் மார்புகளை குலுக்கி அந்தக் கேலிக்கூத்தில் தானும் அமிழ்ந்து போக அவளுக்கு ஆட்சேபனை கிடையாது. சக தொழில் போட்டியாளரான ரோகிணிக்கு தான் சளைத்தவளில்லை என நிரூபிக்கக் கிடைத்த ஒரு தருணத்தை தவறவிடலாகாதே! அலங்கோலமாகக் கிடக்கும் குடிகாரனிடம் அவள் காட்டும் கரிசனமும் அதன் மூலமாக தனது துயரை மீறிச் சென்று இளைப்பாற விழையும் தன்முனைப்பு தான். கனிந்து கொண்டிருக்கும் தீ!

சரி தவறுகளுக்குள் புகாது வாழ்வை விலகி நின்று அவதானிக்கும் சு வேணுகோபால் ‘உடலின் நாற்றமா? நாற்றமே உடலா?’ என தனது கருத்துகளை அவ்வப்போது கதாபாத்திரங்கள் மீது திணிப்பதை தவிர்த்திருக்கலாம். மறு வாசிப்பில் இயல்பாகத் துலங்கும் வெளிச்சப் புள்ளிகள் மீது அவை கருந்திட்டுகளாக துருத்திக் கொண்டு படர்ந்திருக்கின்றன.

தொகுப்பு : களவு போகும் புரவிகள்
வெளியீடு : தமிழினி