சங்கர்

காந்தி சொன்ன கதை – சங்கர் சிறுகதை

1.

“எங்க மரகதம்.. பேருக்குத்தான் இது வீடு.. ஒத்த ரூமுதான் இருக்கு.. இதுல எங்க..?”

“இதென்ன பேச்சு இது… நீங்க என்ன நடு ராத்திரல எந்திரிச்சு எட்டியாப் பாக்கப் போறீங்க… -இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் இந்த வீட்டுக்கு இன்னைக்குத்தானா வந்தீங்க.. இப்பத்தான் புதுசா பாக்குறாப்ல ஒத்த ரூம்தான் இருக்குனு கவலப்படுறீங்க…ஒத்த ரூம்ன்னாலும் நல்லா நீட்டமாத்தான இருக்கு.. குறுக்கால ஒரு குச்சியப் போட்டு ஒரு சேலையத் தொங்கவிடுங்க.. நம்ம தலைல இம்புட்டுதான் எழுதிருக்கு.. எல்லாம் இருக்குறதுக்குள்ளத்தான் குடும்பம் நடத்தனும்.. எதயாவது மனசுல வச்சுக்கிட்டு இனிமேலும் தள்ளிப்போடாதீங்க.. நடந்தது நடந்துபோச்சு..நல்லக் காரியம் நடந்துருச்சுன்னா எல்லாம் மறந்து போயிடும்”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது செந்தில் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் அவன் அம்மாவும், அத்தையும் பேச்சை நிறுத்தினர். அவர்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் சட்டை, வேட்டியைக் கழட்டிப்போட்டுவிட்டு லுங்கி ஒன்றைக் கட்டிக்கொண்டான். வெளியே விட உள்ளே புழுக்கம் அதிகமாய் இருந்தது. முகம் கழுவ வாசலுக்கு வந்தான். காலிப் பாத்திரங்கள்தான் கிடந்தன. திரும்ப வீட்டிற்குள் வந்து தண்ணீர் குடிக்கலாம் என்று மூடியிருந்தக் குடத்தைத் திறந்தான். அதுவும் காலியாகக் கிடந்தது.

“வீட்ல ஒரு பொட்டுத் தண்ணி இல்ல..” குடங்களை உருட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து அம்மா சொன்னாள். கடந்த ஒரு மாதத்தில் அவள் அவனிடம் பேசுவது குறைந்துபோயிருந்தது. என்ன சொல்லி அவனைச் சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் தவித்து வந்தாள். ஓடிப்போனவள் திரும்பி வந்தது ஒரு வகையில் அவளுக்குச் சந்தோசம்தானென்றாலும் அதைப் பற்றித் தன் மகனிடம் பேசுவதற்கு அவளுக்குத் தைரியம் வரவில்லை.

“எங்க அவ?”

“அவள எதுக்கு இப்ப கேக்குற…?”

“எங்கன்னு கேட்டேன்?” பொறுமை இழந்தவனாய் கத்தத்தொடங்கினான் செந்தில்.

“டேய்.. இப்போ எதுக்கு கத்துற.. அவ கடைக்குப் போயிருக்கா.. அம்மாசிக் கோனார் கிணத்துல தண்ணி கொடுக்குறாங்களாம். சைக்கிள எடுத்துட்டு ஒரு நட போய்ட்டு வா போ…” அவளாலேயே அவள் குரலைச் சகிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று மரகதம் சொல்லும்போது ஏன் இப்படி ஒரு மருமகளை இன்னமும் விட்டுவிடக் கூடாதென்று தவிக்கிறோம் என்று கேட்டுக்கொள்வாள்.

சிறிது நேரம் அமைதியாக குடத்தையும், அவன் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான். பின் விறுவிறுவென்று சட்டையைப் போட்டுக்கொண்டு, இரண்டு குடங்களோடு வெளியே வந்தான்.

செந்திலுக்கு திருமணம் ஆகி போன ஞாயிற்றுக்கிழமையோடு ஒரு மாதம் ஆகிறது. திருமணம் ஆன மறுநாளே அவன் மனைவி ஓடிப்போய்விட்டாள். ஆறு வருட பெண் பார்க்கும் படலத்திற்குப் பின் நடந்த திருமணம் அது. “ஹோட்டல்ல சப்ளையரா வேல செய்றாங்களா” என்ற கேள்வியோடு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நின்றுபோகும். ஒருக்கட்டத்தில் திருமணமே வேண்டாமென்று அவன் முடிவெடுத்த நிலையில்தான் அந்த சம்பந்தம் நடந்தது. பெண் வீட்டுக்காரர்களும் பெரிதாக இருக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால் அவர்கள் பக்கமிருந்து கேள்விகள் அதிகம் வரவில்லை.

செந்திலை பொறுத்தவரை முதன் முதலாகப் பெண் பார்க்கப் போனபோதே அவளைப் பிடித்துவிட்டது. அதீத ஒப்பனைகளின்றி பார்க்க நல்ல லட்சணமாக இருந்தாள். “நல்லக் களையான முகம்” என்று பார்த்தவுடன் அவன் மனதில் தோன்றியது. எல்லோருக்கும் காப்பி குடுத்துவிட்டு அவள் அவனை ஒரே ஒரு முறைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவனுக்கு எவ்வித உணர்ச்சியும் தெரியவில்லை. யாரும் எதுவும் அதிகம் பேசவில்லை. மரகதம்தான் அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள். “பொண்ணுக்கிட்ட தனியா பேசனும்ன்னா பேசுங்க” என்றார் பெண்ணின் தந்தை. இருவரையும் வீட்டு மாடியில் இருந்த ஒரு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன பேசுவதென்று தெரியாமல் செந்தில் அமைதியாகவே இருந்தான். அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்க்க விரும்பினான். ஆனால் தைரியம் வரவில்லை. அவள் அவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலெல்லாம் “போலாம்” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான்.

முதலிரவின் போது அவனையும், அவளையும் விட்டுவிட்டு அவன் அம்மா மரகதம் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். வீட்டிற்குள்ளே அவன் நுழைந்தபோது விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. செந்திலின் மனைவி கை கால்களை குறுக்கித் தூங்கிக்கொண்டிருந்தாள். களைப்பாய் இருக்குமென்று அவனும் படுத்துவிட்டான். மறுநாள் அவன் எழுந்திருந்தபோது அவளின் படுக்கை விரிப்புகள் அப்படியே கிடந்தன. வீடு திறந்துகிடந்தது.

அவள் ஒரே வாரத்தில் திரும்பி வந்தாள்.

ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைந்தார்கள் அம்மாவும், மகனும். ஒரு நாள் காலை விறு விறுவென உள்ளே வந்தவள் கையில் வைத்திருந்த பெட்டியை சுவரோரமாக போட்டுவிட்டு பாத்ரூமிற்குள் போய் கதவடைத்துக்கொண்டாள். அவள் வந்தபோது செந்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் அம்மாதான் வந்து எழுப்பி விசயத்தைச் சொன்னாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. பொங்கி வந்த அழுகையையும், ஆத்திரத்தையும் அவர்கள் கட்டுப்படுத்திக்கொண்டனர். அவளை ஒரு வார்த்தைக் கேட்க்கவில்லை. இன்றுவரை. செந்திலுக்கு அதை நினைத்துதான் அவ்வபோது ஆத்திரமாக இருக்கும். நியாயப்படி வர வேண்டியக் கோபம் கூட வராவிட்டாலும் பராவயில்லை திரும்பி வந்ததை நினைத்து சந்தோசப்படும் தன் மனதை நினைத்து ஆச்சர்யப்பட்டான். “நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று கண்ணாடியைப் பார்த்துத் திட்டினான். எவ்வளவு முயற்சித்தும் அவளைக் கோபமாகக் கூட பார்க்கக் முடியவில்லை அவனால்.

3.

“பக்கத்து வீட்டுக்கு ஒரு பெரியவர் வந்துருக்கார்டா.. அவரையும் கூட்டிட்டுப் போ” வீட்டுக்குள்ளிலிருந்து அம்மா கத்தினாள்.. “ஆன்.. போறேன்.. போறேன்” வேண்டா வெறுப்பாய் இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு படி இறங்கினேன். சில மாதங்களாகவே ஊரில் தண்ணீர்ப் பிரச்சனை. வாரம் ஒரு முறை வந்துகொண்டிருந்த கார்ப்பரேசன் தண்ணீர், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்றாகி, பின் மாதம் ஒரு முறை என்றாகி அதுவும் போன மாதத்தோடு நின்றுவிட்டது. லாரி வாங்கி கட்டுப்படி ஆகவில்லை என எல்லோரும் புலம்பிக்கொண்டிருந்தபோது அம்மாசிக் கோனார் தன் கிணற்று நீரை “பத்து ரூபாய்க்கு மூன்று குடம்” என தருவதாக அறிவித்தார். அப்பா இருந்திருந்தால் அவர்தான் போயிருப்பார். எரிச்சலை அடக்கிக்கொண்டு சைக்கிளை எடுத்தேன். “இதுல பக்கத்து வீட்டுக்காரங்கள கூட்டிட்டுப்போ.. எதிர்த்த வீட்டுக்காரங்கள கூட்டிட்டுப் போன்னு தொல்ல..”

“சார்.. சார்”

காலையிலேயே வெயில் தலைக்கேறிக்கொண்டிருந்தது. பெரியவரென்றால் எத்தனை வயதோ தெரியவில்லை.. தனியாகப் போனால் சீக்கிரம் வந்துவிடலாம்.. மற்றவர்களோடு போனால் அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டும்… புலம்பி என்னாகப் போகிறது..” யாரும் பதில் கொடுக்காததால் சைக்கிள் பெல்லை விடாமல் அடித்தேன். இரண்டு நிமிடங்களுக்குப் பின் வழுக்கைத் தலையோடு சற்றே கூன் போட்ட, அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க தாத்தா ஒருவர் “வரேன் வரேன்”. என்பதுபோல் தலையாட்டிக்கொண்டே வந்தார். “இவரால் ஒரு சொம்பைக் கூடத் தூக்க முடியாதே இவர் எங்கிருந்து குடத்தைத் தூக்குவது” என்று யோசித்துக்கொண்டு நின்றவனைப் பார்த்து புன்னகைத்தார். மெலிந்த தேகம். சட்டைப் போடவில்லை. இடுப்பில் ஒரு வேட்டியும் தோளில் ஒரு துண்டும் மட்டுமிருந்தது. கையில் தடியும், கண்ணாடியும் கொடுத்தால் காந்தி மாதிரி இருப்பாரென்று தோன்றியது.செருப்பு போடுகிறாரா என்று பார்த்தேன்.

“தண்ணி புடிக்கப் போறேன்.. அம்மா நீங்க வந்தா உங்களயும் கூட்டிட்டுப் போ சொன்னாங்க” காதில் வாங்குகிறேனென்று தலையாட்டிகொண்டே வீட்டின் வெளிக்கேட்டைப் பூட்டினார். கையில் ஒரு குடம் இருந்தது. எப்படியும் நம்மைத்தான் சைக்கிளில் வைத்துக்கொண்டு வரச்சொல்லுவார் என்று நினைத்துக்கொண்டேன்.

“உங்க பேரு?” என்னால் அந்தக் கேள்வியைக் கேட்க்காமல் இருக்க முடியவில்லை.

“காந்தி”

உண்மையானப் பெயரே காந்தியாய் இருக்குமா என்று குழம்பிப் போய் நின்றவனைப் பார்த்து “போலாம்” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினார்.

“காந்தியிடம்” என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். காந்தி தாத்தாவே பேச்சை ஆரம்பித்தார்.

“பேரு என்னப்பா.. அம்மா சொன்னாங்க.. மூ.. மூர்த்தில்ல?” என் பெயரைக் கேட்டார்.

“இல்ல தா.. சார்… சேகர்” சார் என்று கூப்பிடுவதா தாத்தா என்று கூப்பிடுவதாவெனக் குழப்பம்.

“சேகர்.. சேகர்” இரு முறைச் சொல்லிப் பார்த்துக்கொண்டார். “இனி மறக்க மாட்டேன். என்ன படிக்கிற?”

“பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி.. பாரதிதாசன் யுனிவர்சிட்டி”

“வெரி குட்..”

தாத்தா நிச்சயம் காந்தியின் ஆவியாய் இருக்கவேண்டும் அல்லது அவரின் மறுபிறப்பாய் இருக்கவேண்டும் என்று நினைக்கும்வகையில் அவரின் நடை இருந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடுவது சிரமம் என்பதை அவருக்கு எப்படி எடுத்துச் சொல்வதென்று தெரியவில்லை.

“இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க..?” குஜராத் என்று சொன்னால் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடலாம் என நினைத்தேன்.

“பெங்களூர்” என்றார். அப்போது கூட என் சந்தேகம் முழுதாய்ப் போகவில்லை. வேறெதுவும் கேட்க்காமல் சைக்கிளை உருட்டினேன்.

அம்மாசிக் கோனாரின் கிணறு எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. ஊரே அங்குதான் போய்க்கொண்டிருந்ததால் சாலையின் இரு புறங்களும் மக்களால் நிறைந்து வழிந்தது. அவரவருக்கு வசதிப்பட்ட வண்டிகளில் குடங்களை வைத்து எடுத்துப்போய்க்கொண்டிருந்தனர். “ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கரண்ட்ட கட் பண்ராய்ங்க.. இப்போ தண்ணியயும் நிறுத்தியாச்சு மனுசங்க வாழ்றதா இல்லயா” எனத் திட்டிக்கொண்ட பெண்கள் தலையில் ஒன்றும் இடுப்பில் இரண்டுமாய் மூன்று குடங்களை சுமந்துகொண்டு சென்றனர். எனக்கு சைக்கிளில் வைத்துச் சிந்தாமல் கொள்ளாமல் எடுத்துச் வர முடியுமாவென்று சந்தேகமாகவே இருந்தது. பெரியவர் துணைக்கு இருப்பது ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

காந்தியும் நானும் தொடர்ந்து நடந்தோம். இல்லை..காந்தி நடந்தார். நான் பின்னால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடினேன் என்றுதான் சொல்லவேண்டும். பேசாமல் அவரை முன்னால் போகவிட்டுவிடலாம் என்றெண்ணி மெதுவாக நடந்தால் பின்னால் திரும்பி திரும்பி பார்த்து மனிதர் விடாமல் இழுத்துச் சென்றார்.

சம்பந்தமேயில்லாமல் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது காதலன் பட பாடல். இப்படித்தான் அன்றொரு நாள் பேங்கில் கேஷியர் முன்னால் நின்றுகொண்டிருக்கும்போது எதையோ பாடிவிட்டேன். வீடு வந்து சேரும்வரை அவர் திட்டியதுதான் காதில் ஓடியது. “என்னவளே அடி என்னவளே” என்று பல்லவியை ஆரம்பித்தபோதே காந்தி திரும்பிப் பார்த்தார். முறைக்கிறாரா.. சிரிக்கிறாரா என்று தெரியவில்லை. பாடலைக் கேட்டிருப்பாரா என்பதே சந்தேகம்தான். ஏற்கனவே எந்தப் பாடலிலும் முதல் நான்கு வரிகளுக்குமேல் தெரியாது, இந்த லட்சணத்தில் இவரைப் பற்றிய யோசனையில் மூன்றாவது அடியிலேயே பாடல் தொலைந்துபோனது.

“ரகுமான் பாட்டுதான”

“ம்ம்” ஆச்சர்யம்தான் என்று முணுமுணுத்தேன்.

ஒரு நொடி இடைவெளிவிட்டு “ரகுமான் பிடிக்குமா” எனக் கேட்டார்.

“ரொம்ப புடிக்கும்”

“இப்ப பாடுனியே அந்தப் பாட்டு என்ன ராகம்ன்னு தெரியுமா” இம்முறை அவர் முகத்தில் லேசான சிரிப்பு இருந்தது நிச்சயம்.

“ராகமா… ராகமெல்லாம் கர்நாடக சங்கீதத்துலதான வரும்.. இவர் என்ன சினிமா பாட்டுல கேக்குறாரு” சைக்கிளின் கேரியரில் இருபுறமும் மாட்டியிருந்த குடங்கள் போடும் சப்தம் அவை சிரிப்பதைப்போல் இருந்தது. எனக்கு சத்தியமாய் சினிமாப் பாடல்களையும் ராகங்களில்தான் பாடுகிறார்கள் என்பது அதற்கு முன் தெரியாது.

“கேதாரம்” எங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. மரகதம் ஆன்ட்டி. சாதரணமாக என்னப் பேசினாலும் காதில் விழாதவளுக்கு இது மட்டும் எப்படி விழுந்தது என்று எரிச்சலாக வந்தது. பேசாமல் சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டாலென்ன என ஒருகணம் யோசித்தேன்.

“வாங்கய்யா… நீங்கதான் புதுசா நம்ம ஏரியாவுக்கு வந்துருக்க டீச்சரா?” மரகதம் ஆன்ட்டி பெரியவரிடம், பார்த்த முதல் நொடியே நெடு நாள் பேசிப்பழகியவரிடம் பேசுவதுபோல் பேச ஆரம்பித்தாள். இந்தப் பெரியவர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படித்தான் உடனுக்குடன் பேச ஆரம்பித்துவிடுகிறார்களோ.. எங்கிருந்தாவது தொடங்கி எங்கெங்கோ போகிறார்கள்..

“ரிட்டயர்ட் டீச்சர்மா” காந்தி பதிலளித்தார்.

“என்ன..கொஞ்சம் சத்தமா சொல்லுங்கய்யா.. காது கொஞ்சம் கேக்காது”

“அதான பாத்தேன்” எனக்கு அவர் அப்படிச் சொன்னதும் சந்தோசமாகிவிட்டது. என்னையறியாமல் சிரித்துவிட்டேன். அதை மரகதம் கவனிக்கவில்லையென்றாலும் காந்தி தாத்தா கவனித்துவிட்டார்.

மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டே உடன் வந்த மரகதம், “சரிங்கய்யா.. நான் முன்னாடிப் போறேன் வாங்க..“ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிச் சென்றாள். நான் அவள் போவதை வெறுப்போடு பார்ப்பதையும் காந்தி கவனித்துவிட்டார். மரகதத்தை எனக்கு மட்டுமல்ல ஏரியாவில் யாருக்கும் பிடிக்காது. பெரியக் காரணங்கள் ஒன்றுமில்லை. வேக வேகமாக சைக்கிள் ஓட்டுவார். லாட்டரிச் சீட்டு வாங்குவார். டீக்கடைகளில் அடிக்கடித் தென்படுவார். சுருட்டுப் பிடிப்பார். கேட்டால் அப்போதுதான் “இரண்டுக்கு” ஒழுங்காகப் போகிறது என்பார். சுருட்டுப் பிடிக்கும் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்கும்.

“அவங்கள உனக்குப் பிடிக்கதா?” எதிர்பார்த்ததுபோலவே பெரியவர் கேட்டார்.

“அப்படி சொல்ல முடியாது…”

“பரவால்ல.. சொல்லு.. ஏன் அவங்களப் பிடிக்காது உனக்கு?” சொல்லாமல் விடமாட்டார் என்பதால் நான் காரணங்களை அடுக்கினேன். ராகத்தின் பெயரைச் சொன்னதுபோல் எப்போதும் எப்படி பதில்களை முந்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பதையும் சேர்த்துக்கொண்டேன்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட வந்தவர் கடைசியாகச் சொன்னதைக் கேட்டவுடன் சிரித்துவிட்டார். என் கோபத்தை அவர் சிரிப்பு அதிகப்படுத்தியது. இப்படித்தான் மரகதம் ஆன்ட்டியும் எதற்கெடுத்தாலும் சிரிப்பாள். “இந்தப் பெருசுங்களுக்கு பெரிய இதுங்கன்னு நெனப்பு.. எதுக்கெடுத்தாலும் சிரிக்க வேண்டியது” சீக்கிரம் திருப்பிப் திட்டும் வயதை அடைய வேண்டும் என்று மனதில் பொருமினேன்.

சொன்னதையெல்லாம் கேட்டவர் ஏதேனும் பதில் சொல்லுவாரென்று பார்த்தால் வாயே திறக்காமல் நடந்துவந்துகொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது. சிறிது தூரம் அவரையே பார்த்துக்கொண்டே வந்தவனைப் பார்த்து “என்ன?” என்றார்.

“நீங்க ஒன்னுமே சொல்லலையே?”

“எதப் பத்தி?”

“மரகதம் ஆன்ட்டியப் பத்தி சொன்னதுக்கு”

“ஓ.. அதுவா.. அவங்கதான் போய்ட்டாங்களே.. அவங்களப் பத்தி ஏன் இன்னும் நெனச்சுட்ருக்க” “அவ்வளவுதானா”.. நான் எதிர்பார்த்த பதிலாக இல்லாததால் மேற்கொண்டு என்ன கேட்பதென்று தெரியாமல் நடந்தேன்.

அம்மாசிக் கோனாரின் கிணறு வருவதாய் இல்லை. “செந்தில் அண்ணே..” அப்போது எங்களைக் கடந்து போனவரைக் கூப்பிட்டேன். மரகதம் ஆன்ட்டியின் சொந்தக்காரர்தான் செந்தில் அண்ணன். எங்கள் கிரிக்கெட் அணியின் ஸ்டார் ப்ளேயர். சிறப்பான ஆல்ரவுண்டர். கல்யாணம் ஆனதிலிருந்து விளையாட வருவதில்லை. கடைசியாக அவரின் கல்யாணத்தில் பார்த்தது.

செந்தில் அண்ணன் திரும்பிப் பார்த்தார். என்னையும், காந்தியையும் ஒரு முறைப் பார்த்தவர் பின் சைக்கிளில் இருந்து இறங்கினார்.

பெரியவருக்கு செந்தில் அண்ணனை அறிமுகம் செய்துவைத்தேன். “சூப்பர் கிரிக்கெட் ப்ளயேர்” என்று சொன்னபோது ஒரு சிரிப்போடு “அதெல்லாம் ஒன்னுமில்லைங்க” என்றார் காந்தியிடம்.

செந்தில் அண்ணன் வீட்டில் ஏதோ பிரச்சனை என்று தெரியும். என்னவென்று சரியாகத் தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டபோது “அதெல்லாம் உனக்கெதுக்கு” என்று திட்டினாள். அவர் சிரித்தது சந்தோசமாக இருந்தது.

முத்தாளம்மன் கோவில் வந்தது. சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலமான கோவில். சக்தி வாய்ந்த தெய்வம். அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து பலபேர் வந்து வழிபட்டுச் செல்வார்கள். திருவிழா அன்றைக்கு கோவிலுக்கு வருபவர்கள் ஆயிரங்களில் ஆரம்பித்து போன வருடம் லட்சத்தைத் தொட்டுவிட்டது. காப்பு கட்டியதிலிருந்து முடியும்வரை எப்போதும் ஜேஜே என்று இருக்கும் ஊர் இந்த வருடம் தண்ணீர்ப் பிரச்சனையால் களையிழந்திருந்தது. மைக் செட் கட்டி மண்டகப்படி நிகழ்ச்சிகளுக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்கள். பேசியது எனது முன்னாள் நண்பன் குமரேசன். சில வாரங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் பேசிக்கொள்வதில்லை.

“அன்பான பக்த கோடிகளுக்கு ஒரு அன்பான அறிவிப்பு.. இரண்டாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு இன்றிரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும். எனவே அன்பான பக்த கோடிகள் அனைவரும் தாங்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்து விழாவைச் சிறப்பிக்குமாறு விழாக் கமிட்டியினரின் சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்” என்று அறிவித்தான்.

“வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறோமா…ஹி ஹி கேட்டுக்கொள்கிறோம்ன்னுதான சொல்லனும்”

“ஆமாம்” என்று காந்தி சொன்னபோதுதான் என்னையறியாமல் சத்தமாகச் சொல்லிவிட்டேன் என்பது உரைத்தது.

உடனே பேச்சை மாற்ற வேண்டுமென்று விரும்பினேன்.

“நீங்க என்னப் பாடம் எடுத்தீங்க..?”

“ம்..?”

“டீச்சர்ன்னு சொன்னீங்களே..என்ன சப்ஜெக்ட்?”

பதில் சொல்லப்போனவரை இடித்துக்கொண்டு ஒருவன் முன்னால் போனான். விழப்போனவரை இடது கையால் தாங்கிப் பிடித்துக்கொண்டேன்.…” செந்தில் அண்ணனும் சட்டென்று அவரைப் பிடித்துக்கொண்டார். “யோவ்.. பாத்துப் போ மாட்ட?” இடித்தவர் கண்டுகொள்ளவில்லை. “இப்படித்தான் தம்பி இருக்காங்க.. காதுல போன வச்சா உலகத்தையே மறந்தர்றாங்க” என்று சொல்லிக்கொண்டே பின்னால் ஒரு பெரியவரும் வந்து காந்திக்கு கை கொடுத்தார்.

“ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல..” சற்றே பதட்டப்பட்டாலும் காந்தி சமாளித்துவிட்டார். உடனேயே இயல்பு நிலைக்குத் திரும்பினார். முகத்தில் அந்தச் சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது

காந்தி அமைதியாய் இருந்தாலும் பின்னால் வந்து தாங்கிப் பிடித்தவர் விடுவதாய் இல்லை. “இந்த செல்போன எதுக்கு கண்டுபிடிச்சிருக்கானுங்கன்னு நெனக்கிறீங்க.. குடும்பத்த அழிக்கத்தான்.. பொய்யா பேசுறானுங்க சார்.. வீட்ல இருந்துக்கிட்டே வெளிய இருக்கன்றான்.. வெளிய இருந்துக்கிட்ட வீட்ல இருக்கன்றான்… அந்தக் காலத்துல நாங்கள்ளாம் பொய் சொல்லனும்ன்னா அம்புட்டு பயப்படுவோம்.. இப்போலாம் சர்வ சாதாரணமா போச்சு..”

“ஒவ்வொரு காலத்துலயும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்…. அதான் உலகம்”

“பாருங்க. நீங்க எவ்ளோ தன்மையா பேசுறீங்க.. ஆனா இந்தக் காலத்துப் பசங்களுக்கு சுத்தமா மரியாதையே தெரியறதில்ல..” சொல்லி முடிக்கும்போது அவர் என்னைப் பார்த்தார்.

மரகதம் ஆன்ட்டியின் இடத்தை இப்போது இன்னொரு பெரியவர் எடுத்துக்கொண்டார். காந்தியோடு சிறிது தூரம் பேசிக்கொண்டு வந்தார். பேச்சில் பலரைப் பற்றிக் குறை ஓடிக்கொண்டிருந்தது. தன் பிள்ளைகளைப் பற்றி, எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளைப் பற்றி, தனது சொந்தக்காரர்களின் பிள்ளைகளைப் பற்றி என அவருக்குத் தெரிந்த எல்லா இளைஞர்களைப் பற்றியும் புகார் வாசித்தார். எனக்கு அவர் என் நண்பன் ஒருவனின் தாத்தாவை நினைவுபடுத்தினார். நண்பனின் தாத்தா தீவிரக் கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக சச்சின் ரசிகர். அவரோடு சேர்ந்து உட்கார்ந்து மேட்ச் பார்ப்பது மிக சுவாரசியமாய் இருக்கும். எதிரணியினரின் ஒவ்வொரு பந்தையும் சச்சின் சிக்ஸர் அடிக்க வேண்டும், போர் அடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார். நூறு அடித்து அவுட்டானாலும் “காசு வாங்கிட்டான்” என்பார். ஒருவழியாய் தன் புகார்கள் அனைத்தையும் தபால் பெட்டியில் போட்டுவிட்ட திருப்த்தியோடு ஒரு வீட்டைக் காட்டி.. என் வீடு வந்துருச்சு.. அப்போ நான் வாரேன்ங்க.. வேணா ஒரு வாய் தண்ணிக் குடிச்சுட்டுப் போறீங்களா..பட படன்னு வரப்போவுது” என்றழைத்தார். அவர் பேச்சில் நிஜமான அக்கறைத் தெரிந்தது.

காந்தி “இல்லங்க. பரவால்ல.. இன்னொரு நாள் வர்றேன்” என்றவரை அனுப்பி வைத்தார். எப்படி எல்லோரிடமும் பேசுகிறீர்கள் என்று கேட்க்கவேண்டுமென்று விரும்பினேன்.

எனக்கு வெயிலில் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடப்பது மிகுந்த சோர்வைத் தந்தது. அதோடு இடையிடையே அந்தப் பெரியவரைப் போல, மரகதம்போல யாரேனும் வந்து இன்னமும் கோபத்தைக் கிளறிக்கொண்டே வந்தனர். எப்படா தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குப் போவோம் என்றிருந்தது.

எதுவும் பேசாமல் வருவதைப் பாத்த காந்தி, “என்ன அவர் மேலயும் கோவமா” எனக் கேட்டார்.

“இல்ல.. அதெல்லாம் ஒன்னுமில்ல” எப்படித்தான் மனதில் ஓடுவதைக் கண்டுபிடிக்கிறார்களோ….

“ம்ம்” காந்தி ஒரு நிமிடம் நின்று மூச்சு வாங்கிக்கொண்டு பின் மீண்டும் நடந்தார்.

பரமேஸ் அண்ணன் எதிர்த்தாற்போல் டிவிஎஸ் 50-யில் குடங்களோடு வந்தார். பின்னால் மூன்று குடங்கள், மடியில் ஒன்று என நான்கு குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றார். அவர் வீட்டில் அவருக்கு இன்று ராஜ மரியாதை கிடைக்குமென்று நினைத்துக்கொண்டேன்.

“என் பேரச் சொன்ன உடன உங்க முகத்துல ஏற்பட்ட மாற்றத்தப் பாத்தேன்.. வழக்கமா நடக்குற ஒன்னுதான்” பாதி தூரம் வந்திருப்போம். அதுவரை அதிகம் பேசாமல் ஒரு சில வார்த்தைகளோடு முடித்துக்கொண்ட காந்தி செந்தில் அண்ணனைப் பார்த்து முதன் முறையாகப் பேச ஆரம்பித்தார்.

“இல்ல… அப்படிலாம் எதுவும் இல்லைங்க ஐயா” செந்தில் அண்ணன் சற்று அதிர்ச்சி அடைந்தவராய்ச் சொன்னார்.

“பரவால்ல…”

“எங்கப்பா சுதந்திரப் போராட்ட தியாகி… தீவிர காந்தி பக்தர்.. அதுனாலதான் எனக்கு காந்தின்னு பேர் வச்சார்.. இப்போ கமல், ரஜினின்னு பேரு வைக்கிறாங்களல்ல.. அது மாதிரி.. காந்தி, காமராஜ், போஸ்ன்னு பேரு வைப்பாங்க” அவர் நடையில் சற்று வேகம் குறைந்தது.

“இந்தியா, பாக்கிஸ்தான் பிரிவினைய ஒட்டி நாடு முழுக்க கலவரம் நடந்துச்சுத் தெரியுமா”

தெரியாதென்றேன். பள்ளியிலோ, கல்லூரியிலோ அப்படி யாரும் சொல்லிக் கேள்விப்படவில்லை. செந்தில் அண்ணனைப் பார்த்தேன். அவரும் உதட்டைப் பிதுக்கினார்.

“ம்ம்… ரெண்டு பக்கமும் நிறைய மக்கள் இறந்துபோனாங்க.. அப்போ எங்கப்பாவும் அம்மாவும் கல்கத்தால இருந்தாங்க…. நான் எங்கம்மா வயித்துல மூனு மாசம்”

எனக்குப் பள்ளியிலிருந்தே கதைக் கேட்பதென்றால் மிகவும் பிடிக்கும், அதிலும் நிஜமான கதையென்றால் சொல்லவே வேண்டாம். முதல் ஆளாக அங்கிருப்பேன். காந்தியிடம் கதைக் கேட்க்கத் தயாரானேன்.

“அவங்க இருந்த கிராமத்துலயும் பெரிய அளவுல கலவரம் நடந்திருக்கு.. அப்பாவும், அம்மாவும் எப்படியோ உயிரக் கையிலப் பிடிச்சுக்கிட்டு ஒவ்வொரு இடமா ஓடி ஒளிஞ்சு தப்பிச்சிருக்காங்க.. அப்போ அந்த ஊருக்கு காந்தி வந்தாராம்.. அவர் வர்றான்னு செய்தி கேட்டதும்தான் எங்கப்பாவுக்கு பொழச்சுட்டோம்ன்னு தைரியம் வந்துச்சாம்.. அன்னைக்கு அவர் அடஞ்ச சந்தோசத்தப் பல நாள் எங்கம்மா சொல்லிட்டே இருந்தாங்க.. பித்துப் புடிச்ச மாதிரி அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சார்… சிரிச்சுக்கிட்டே இருந்தார்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்ன்னு இப்ப நினச்சுப் பாத்தாக் கூட உடம்பெல்லம் என்னவோ பண்ணுதுன்னு ஒவ்வொருவாட்டியும் சொல்லுவாங்க” அதைச் சொன்னபோது அவர் குரலைச் சரி செய்துகொண்டதை நான் கவனிக்கத் தவறவில்லை.

“சந்தோசமான அடுத்த நிமிசமே எங்கப்பாவுக்குள்ள அதுவர அடக்கி வச்சுருந்த கோவம் வெறியா மாறிருக்கு.. வீட்ல இருந்த ஒரு அருவாளத் தூக்கிக்கிட்டு வெளியே கிளம்பிருக்கார்.. எங்கம்மா போகாதீங்கன்னு அழுது கெஞ்சிருக்காங்க..அவர் கேக்கல”

“காந்தி இருந்த இடத்துக்கு அருவாளோட போயிருக்கார்.. அவர சுத்தி ஆட்கள்… கிட்டயே போக முடியலயாம்.. தூரத்துல இருந்தேதான் பாத்துருக்கார்.. இந்தக் கதையக் கேக்குறப்பல்லாம் எங்கப்பா அருவாள எடுத்துக்கிட்டு காந்திய ஏன் பாக்கப் போனார்ன்னு எனக்குப் புரியாது.. அவர்ட்டயே ஒரு நாள் கேட்டேன்…”

“தெரியல.. அவரு ஊருக்கு வர்றார்ன்னு கேள்விபட்டதும் அழுகையும், ஆத்திரமும், சந்தோசமுமா வந்துச்சு.. அதுவர ஒவ்வொரு ராத்திரியும் உயிரோட இருப்போமா இல்லையான்னு பயந்து ஓடுனதுக்கு எதுனா திருப்பி செய்யனும்ன்னு தோணுச்சு… காந்திட்ட உத்தரவு வாங்கப் போனேன்னு நினைக்குறேன் என்றார்”

“காந்தி என்ன சொன்னாராம்” எனக்கு ஆர்வம் தாங்கவில்லை.

“அவர் காந்தியப் பாத்ததோட சரி.. பேசல” சப்பென்று போய்விட்டது. “அப்றம் என்னாச்சு?” செந்தில் அண்ணன் ஆர்வமாய் கேட்டார்.

“அவர் கூட்டத்தப் பாத்து கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டே போனாரம். எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவரால காந்திக்கிட போக முடியல..”

“நல்ல வேளப் போகல” என்றேன். அதைச் சொன்னவுடன் சட்டென்று என்னைப் பார்த்தார் காந்தி.

“இல்ல.. கைல.. அருவாளோட காந்திக்கிட்ட போயிருந்தா அவர தப்பா நினச்சுருப்பாங்க எல்லாரும்” என்றேன்.

“சரிதான்” சிரித்துக்கொண்டே முதுகில் தட்டிக்கொடுத்தார் காந்தி. எனக்குப் பெருமையாக இருந்தது.

“எங்கப்பா அப்றம் என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டுக்கே திரும்ப்பிப் போயிருக்கார்.. அப்பாவ பாத்ததும் அம்மவால சந்தோசத்தக் கட்டுப்படுத்தவே முடியலயாம்.. அவர் வீட்டுக்குள்ள கால எடுத்து வைக்கும்போதே ஓடிப்போய் கட்டிபிட்டிச்சுக்கிட்டு அழு அழுன்னு அழுதாங்களாம்.. நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட அன்னைக்கு கூட நான் அவ்ளோ சந்தோசமா இல்லடா.. உயிரோட இந்த மனுசன் திரும்பி வந்த நாள என்னால என்னைக்கும் மறக்க முடியாதும்பாங்க.. உங்கம்மா எங்க மொத ராத்திரல கூட எனக்கு அவ்ளோ முத்தம் கொடுக்கல.. அன்னைக்கு என் முகத்த உண்டு இல்லன்னு பண்ணிட்டா”

“ச்சீ.. என்ன இது.. புள்ளைக்கிட்ட என்ன சொல்றதுன்னு இல்லாம.. அதச் சொல்லும்போது அம்மாவோட முகத்துல வெக்கம் நிறஞ்சு வழியும்.. அம்மா அப்போவோட காதலப் பாத்து வளர்ந்த பிள்ளைங்களுக்கு வாழ்க்கைல கொண்டாடுறதுக்கு நிறைய விசயங்கள் கிடைக்கும்..”

காந்தி மீண்டுமொரு முறை தன் தொண்டையைச் சரிசெய்துகொண்டார். அதன் பிறகு எதுவும் பேசவில்லை. எனக்கு “கதை அவ்ளோதானா?” என்றிருந்தது. அவரிடம் என்ன கேட்பதென்று தெரியாமல் சங்கடமாய் உணர்ந்தேன்.

“என்னாச்சு.. சார்?”

“என்ன.. ஓ.. ஒன்னுமில்ல.. பழைய நினைவுகள்.. கதை நல்லாருந்துச்சா?” சிரித்துக்கொண்டே கேட்டார். “உனக்கு ஏன் இதச் சொன்னேன்னு புரிஞ்சதா?” என்றார். எனக்குப் புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது. எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. செந்தில் அண்ணனும் தீவிரமாக யோசிப்பவர்போல் முகத்தை வைத்திருந்தார். “அண்ணே” என்றேன். “ம்ம்..?” ஏதோ சொல்ல அவர் வாயெடுத்தார். அதற்குள் அம்மாசிக் கோனாரின் கிணற்றை அடைந்திருந்தோம்.

காந்தி குடத்தோடு லைனில் போய் நின்றார். நான் அவரின் சொன்னக் கதையைப் பற்றியே யோசித்துக்கொண்டு நின்றேன்.

காந்தி திரும்பிப் பார்த்து “வாங்க.. வந்து நில்லுங்க” என்று என்னையும் செந்தில் அண்ணனையும் அழைத்தார்.

*

4.

செந்திலுக்கும் காந்தி ஏன் அந்தக் கதையைச் சொன்னாரென்று புரியவில்லை. காந்தி, சுதந்திரப்போராட்டம், வன்முறை என அவர் சொன்ன எதுவுமே அவன் மனதில் தங்கவில்லை. ஒரே ஒரு வரியைத் தவிர… “அம்மா அப்போவோட காதலப் பாத்து வளர்ந்த பிள்ளைங்களுக்கு வாழ்க்கைல கொண்டாடுறதுக்கு நிறைய விசயங்கள் கிடைக்கும்..”

செந்தில் பிறந்ததிலிருந்து அவன் வீட்டிற்குள் முழு வெளிச்சம் வந்ததேயில்லை. அவன் தன் அப்பாவையோ, மரகதம் அத்தையின் மாமாவையோ பார்த்ததில்லை. அவன் வாழ்க்கையில் எப்போதும் நிறைவின்மைதான் நிறைந்து வழிந்தது. ஓட்டைக் குடத்திலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல்தான் ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் ஓழுகியோடியது.

“காதல்” என்கிற வார்த்தையைக் கேட்டபோது அவன் மனம் லேசானதை உணர்ந்தான். திருமணம் நிச்சயம் ஆகும் வரை யார் எப்போது காதலைப் பற்றிப் பேசினாலும் “அது ரொம்ப காஸ்ட்லியான விசயம்.. நம் வாழ்க்கையில் அதற்கு இடமில்லை” என்று நினைப்பான். இப்போதும் உறுதியாக எதையும் சொல்ல முடியாத நிலைதான். அவளைப் பார்த்த நாளில் இருந்து இது நாள் வரை ஒரு வார்த்தைக்கூட அவளிடம் பேசியதில்லை என்பது அவன் நினைவுக்கு வந்தது.

நிறைந்தக் குடங்களோடும், ஒரு முடிவோடும் வீட்டிற்குத் திரும்பினான்.

*

2.

மேகலை கடையில் ஓல்ட் சிந்தால் சோப்பு இரண்டு வாங்கினாள். வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து அடிக்கடி முகம் கழுவகிறாள் அல்லது குளிக்கிறாள். இப்போதெல்லாம் அவள் எதையும் அதிகம் யோசிப்பதில்லை. எவ்வளவு யோசித்து செய்தாலும் நடப்பவை எல்லாம் நினைப்பதற்கு நேர் எதிராய் முடியும்போது அவளும்தான் என்ன செய்வாள். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கும் என்று தெரிந்தும் தன் மனம் விரும்பிய விசயத்தை அடைய முயன்றாள். அது நடக்கவில்லை. இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்று சாவை எதிர்பார்த்து வீட்டிற்குள் நுழைந்தாள். அப்படியும் எதுவும் நடக்கவில்லை. முன்னதைக் கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது, செந்திலும் அவன் அம்மாவும் அமைதியாக இருந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டுகின்றனர் என நினைத்தாள்.

செந்தில்.. செந்திலை பார்க்கும்போதெல்லாம் அவனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வீடு திரும்பிய நாளை அவளால் நினைக்காமல் இருக்க முடியாது… கேத்ரீனையும்…

*

ஒரே சீரான வேகத்தில் போகும் பேருந்தின் சத்தம் சகிக்க முடியாததாய் இருந்தது மேகலைக்கு. இரவின் ஒழுங்கினால் உருவாகும் அமைதி அவளை எதற்கோ தயார் செய்வதைப் போலிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து இரண்டு இருக்கைகள் பின்னால் உட்கார்ந்திருந்தாள். வண்டியில் கூட்டம் அதிகம் இல்லை. இருந்தவர்களும் தூங்கிக்கொண்டு வந்தார்கள். “இன்னும் மூன்று மணி நேரத்தில் மற்ற எல்லோர்க்கும் விடிந்துவிடும்.”

எப்போதுமே தவறு நடந்து முடிந்தபின்னர்தான் அறிவுரைகள் கேட்க்கும். அவளுக்கு அவளின் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் மனதில் ஓடின. “ஓடுற ஆறுக்கு பாக்குற பக்கமெல்லாம் வழிதான். ஆனா அப்படி நெனச்சு தெச மாறுனா அது கடல போய் சேராது” மேகலையை பொறுத்தவரை அவளின் திசையை மாற்றியது அவள் குடும்பம்தான். சிறு வயதிலிருந்தே திரைப்படங்களைப் பார்த்துவிட்டு கதாநாயகர்களை புகழந்து தள்ளும் தோழிகளைப் பார்க்கும்போதெல்லம் தனக்கு மட்டும் ஏன் கதாநாயகிகளைப் பிடிக்கிறது என்ற அவளின் குழப்பம் கேத்ரீனை முதன் முதலாகக் கல்லூரியில் பார்த்தபோது தீர்ந்தது.

ஏதேச்சையான முதல் சந்திப்பில் இருவருக்குமே ஒருவரை ஒருவர் எப்படி பிடித்தது என்று அதன்பின் நடந்த பல சந்திப்புகளில் பேசித் தீர்த்தார்கள். இருவரின் கல்லூரி நேரங்களும் வேறு வேறு என்றாலும் ஒருவருக்காக மற்றவர் காத்திருந்தார்கள். சந்திக்க முடியாத நாட்களில் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள். இருவருமே தங்களின் உறவைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. கேத்ரீனை விட மேகலைதான் மயக்கத்தில் இருந்தாள். “கண்ணா அது.. ஆம்பளைங்க தோத்தாங்க..பாத்து பாத்தே மயக்கிட்டா பாவி” கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் மேகலையின் முகம் சிவக்கும்.

இளங்கலை முடித்தப் பின் படிப்பைத் தொடர முடியாத மேகலையிடம், “முதுகலை இரண்டு ஆண்டுகள் மட்டும்தான், அதன் பிறகு ஒரு வருடத்தில் வேலை, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேனென்றாள்.” மேகலை கண்ணீர் வழிய சிரித்தாள். உடனேயே அழுதாள். கேத்ரீன் அவளை அள்ளி மார்போடு போட்டுக்கொண்டாள். பிரிவு உபச்சாரவிழா இனிதே நிறைவேறியது.

கேத்ரீனை அன்று வீட்டில் சந்தித்தப் பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறைக் கூட சந்திக்கவில்லை மேகலை. அவளிடமிருந்து கடிதங்கள் மட்டும் வந்துகொண்டிருந்தன. எல்லாக் கடிதங்களிலும் “எப்போதும் எது நடந்தாலும் சந்தோஷமாக இரு” என்ற வரி தவறாமல் இருக்கும். மேகலையின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கடிதங்கள் வருவது நின்றுபோனது.

மேகலையின் எந்தப் போராட்டமும் அவளுக்கு உதவவில்லை. கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். முதலிரவு அறைக்குள் நுழைந்த உடனேயே விளக்கை அணைத்துப் படுத்திவிட்டாள். “இந்த ஒரு இரவைத் தாண்டிவிட்டால்போதும் தன் வாழ்க்கையில் அதன் பிறகு எப்போதுமே மகிழ்ச்சிதான்”. அவளைப் பெண் பார்க்க வந்த செந்தில் வந்த அன்று தனியாக இருவரையும் பேசிவிட்டு வருமாறு சொன்னபோது அவளின் விருப்பமின்மையைச் சொல்லத் துடித்தாள். வீட்டில் செத்துவிடுவோம் என்று மிரட்டி சம்மதிக்க வைத்தார்கள்.

கேத்ரீனின் வீட்டுக் கதவைத் தட்டியபோது அவள் மனதில் வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. தன்னைத் தேடி கணவன் வீட்டார்கள் வருவார்களா, கேத்ரீனின் வீட்டில் என்ன சொல்வது, வேறு என்னப் பிரச்சனைகள் வரும் என எதையும் அவள் யோசிக்கவில்லை. அவளைப் பார்த்துவிட்டால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று நம்பினாள்.

மேகலையை பார்த்த கேத்ரீன் சந்தோஷமாகவே வரவேற்றாள். மேகலைக்குத்தான் அதிர்ச்சி காத்திருந்தது. கேத்ரீனுக்கும் திருமணம் ஆகியிருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை. தனக்கு வந்த கடைசி கடிதத்தில் கூட “நான் இருக்கிறேன் மறந்துவிடாதே” என்றுதான் எழுதியிருந்தாள். ஒருவேளை அவளுக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்திருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் தனியறையில் தூங்கியபோது, கேத்ரீன் ஒரு முறைக் கூட அறையில் தனியாய் வந்து பார்க்காதபோது மேகலைக்கு புரியத் தொடங்கியது.

கேத்ரீன் அந்த ஒருவாரத்தில் பகல் முழுவதும் மேகலையோடுதான் இருந்தாள். மூன்றுவருடக் கதைகள் ஒன்றுவிடாமல் சொன்னாள். அவளையும் சொல்ல வைத்தாள். எதற்கு வந்திருக்கிறாய், எப்படி கல்யாணம் ஆனது, உன் நிலமை என்ன என எதைப்பற்றியும் ஒருவார்த்தை பேசாமல் மற்ற எல்லாக் கதைகளையும் ஒரு அடி தள்ளி நின்று கண்களைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் கேத்ரீனை பார்க்க பார்க்க பயமாய் இருந்தது மேகலைக்கு. அவர்கள் பிரிந்திருந்த நாட்களைவிட அவளின் வீட்டில் தனி அறையில் இருந்த நாட்கள் தாங்க முடியாத வேதனையை அளித்தன.

தூக்கம் வராத ஒரு இரவில் தன் அறையை விட்டு வெளியே வந்தவளை கேத்ரீனின் அறையில் இருந்து வந்த சத்தங்கள் முற்றிலுமாக உடைத்துப் போட்டது. மறுநாள் காலை சரி நான் கிளம்புகிறேனென்றவளிடம் அடுத்த முறை வரும்போது குறைந்தபட்சம் பத்து நாட்களாவது தங்கவேண்டும் என்றாள் கேத்ரீன்.

*

பேருந்திலிருந்து இறங்குவதற்கு முன்னரே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் மேகலை. நடப்பது நடக்கட்டும் என்று வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

மாமியார் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்காமால் வீட்டிற்குள் நுழைந்தாள். செந்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் வெளியேறிய அன்று எப்படி இருந்ததோ அப்படியேதான் அன்றும் இருந்தது வீடு. தன் பெட்டியை ஒரு மூலையில் வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். யார் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தைத் திரும்ப பேசக்கூடாதென்று சொல்லிக்கொண்டே குளித்தாள்.

ஆனால் அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாய் அவளை யாரும் எதுவும் பேசவுமில்லை கேட்க்கவுமில்லை…

ஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை

அவன் ஏறுவதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஏறும் வழக்கமே குமாருக்கு கிடையாது. அதுவும் அன்றைக்கு ஒட்டுமொத்த மகிந்திரா வேர்ல்ட் சிட்டியும் பரனூர் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அறிவித்துவிடுவார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சிலர் அறிவித்துவிட்டார்களென்றார்கள். இரண்டு ரயில்களை விட்டுவிட்டு மூன்றாவது வரும்வரை அப்படி ஒன்றும் பிரச்சனை வராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

குமாருக்கு காலையிலிருந்தே மனது சரியில்லை. ஒற்றைத் தலைவலி உயிரை வாங்கியது. கூட்டம் குறைந்தது மாதிரியே தெரியவில்லை. அடுத்து வந்த ரயிலையும் விட்டால் வீட்டிற்குப்போக நேரம் ஆகிவிடும் என்பதால் எப்படியோ சிரமப்பட்டு ஏறினான். அவன் இருந்தப் பெட்டியில் குறைந்தது நூறு பேராவது ஏறியிருப்பார்கள். ஒருவர்மேல் ஒருவர் உரசிக்கொண்டும், இடித்துக்கொண்டும் வரும் மக்களைப் பார்க்கும்போது குமாருக்கு வளைக்குள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் எலிகளைப் பார்ப்பதுபோலிருந்தது. பரனூரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வருவதற்குள் பல முறை அவன் பின்னால் நின்றிருந்த மனிதர் அவன் மேல் விழுந்தார். சாதாரன நாட்களில் எல்லோரும் எல்லோரிடமிருந்தும் ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். தெரியாமல் கை கால் பட்டால் கூட விஷத்தைக் கொட்டுவதுபோல் இருக்கும் பேச்சு. இன்று வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தான். அசாதாரண சூழ்நிலைகளில் மனிதர்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக இருக்க முயல்கிறார்கள். மற்றவர்களின் கைகளை இறுக்கப் பற்றிக்கொள்கிறார்கள். தனக்குத்தானே சமாதானாம் சொல்லிக்கொண்டான்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்நாளில் வரும் கனவு இந்த வருடமும் வந்தது என்பதுதான் அவன் தலைவலிக்குக் காரணம். ஊரே பதட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலும் அவன் மனம் முழுவதும் அதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

முதன் முதலில் கனவு வந்தபோது அம்மாவிடம் சொன்னான். விபூதி போட்டு கையில் ஒரு கயறு கட்டிவிட்டாள். “பயப்படாத, சித்திக்கிட்ட வேண்டிக்க” என்று அவன் சித்தியின் படத்தின் முன் நிறுத்தி வணங்க வைத்தாள். அடுத்தடுத்த வருடங்களில் அவளிடம் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. சொன்னால் பயந்துபோவாள். வேறு யாரிடம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

காலையில் எழுந்ததும் மொபைலில் தேதியைப் பார்த்தான். நினைத்ததுபோலவே ஆகஸ்ட் ஏழு. குமாரின் நினைவடுக்குகளில் மிக ஆழமாக ஊடுருவியிருக்கும் நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு அவன் சித்தி மண்ணென்னையை ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொண்ட நாள்.

*

காயத்ரி சித்தி சாகும்போது அவளுக்கு வயது முப்பத்தி எட்டுதான். வீட்டில் எல்லோருமே நன்றாக தூங்கி எழுந்திருந்த ஒரு அதிகாலையில் குமாரின் சித்தப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது.அவன் அம்மாதான் போனை எடுத்தாள். ஒரு நிமிடம் பேசியிருப்பாள். “ம்ம்.. ம்ம்ம்” என்பதைத் தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டே போனை வைத்துவிட்டு குமாரிடமும், அவன் தந்தையிடமும்,”கிளம்புங்க.. காயத்ரி அக்னி ஸ்னானம் பண்ணிட்டா” என்றாள்.

காயத்ரி குமாரின் அம்மாவின் தங்கை. கூடப் பிறந்த ஏழு பேர்களில் கடைக் குட்டி. அவள் பிறந்தபோது இனி குழந்தை வேண்டாம் அதனால் சாவித்ரி என்று பெயர் வைக்கலாம் என்று குமாரின் தாத்தா சொன்னாராம். அந்தக் காயத்ரியைத்தான் இவள் வயிற்றில் இருந்த நாள் முழுவதும் ஜபித்துக்கொண்டிருந்தேன் எனவே காயத்ரிதான் என்று பாட்டி பெயர் இட்டிருக்கிறார். காயத்ரி, பி.எஸ்.சி அக்ரி முடித்தக் கையோடு அரசாங்கத்தில் வேலைக் கிடைத்து; தஞ்சாவூர் போய்விட்டாள். பதிமூன்று வருட அரசாங்க வேலை. கடைசியாக கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தையில் அதிகாரியாக வேலைப் பார்த்தாள். வருடத்திற்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவாள். இடையில் திருமணத்திற்கு கேட்டு வந்த பல இடங்களைச் சொந்த சாதியில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி நிராகரித்துவிட்டாள். “எல்லாம் கோழப் பசங்க” என்ற ஒரு வரிதான் எப்போதுமே அவளின் பதிலாக இருக்கும் என்று குமாரின் அம்மா அடிக்கடிச் சொல்லிச் சிரிப்பதைக் கேட்டிருக்கிறான்.

கோழப் பசங்க…முதன் முதலில் கேட்டபோது கோபமாக வந்தது அவனுக்கு. சித்தி எப்படி அப்படிச் சொல்லலாம் என்று முறுக்கிக்கொண்டிருந்தவனை வீட்டில் யாரும் சமாதானப்படுத்த முயலவில்லை. மாறாக “அவகிட்ட கேட்டு வச்சுராதடா.. அதுக்கப்றம் நீதான் ரொம்ப பீல் பண்ணுவ” என்று பயமுறுத்தினார்கள். “அது எப்படிமா அப்படி சொல்லலாம்..ஏன் அப்படி சொன்னா…” “விடுடா.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி… உன் சித்தி ஒரு மாதிரி.. அவ மனசுல எப்படியோ ஒரு எண்ணம் அப்படி வந்துருச்சு… ஒரு காலத்துல எங்கப்பா வெளிய போனா இடுப்புல கத்தி இல்லாம இருக்காது..ஊர்ல ஒரு பெரியவர் கூப்ட்டு.. பொம்பளப் புள்ளைங்கள பெத்து இருக்க.. இதெல்லாம் வேண்டாம்ன்னு” சொல்லிருக்காரு.. அன்னைக்கு மாறுனவரு அதுக்கப்றம் ஒரு சொல் தேவைக்கு அதிகமா வெளியவிட மாட்டாரு.. எல்லாத்துக்குப் பின்னாடியும் காரணங்கள் இருக்கும்.. அதல்லாம் எல்லாருக்கும் புரியவைக்க முடியாது..அவசியமும் இல்ல” அம்மாவின் பேச்சிலிருந்து தாத்தாவிற்கும் சித்திக்கும்தான் ஏதோ பிரச்சனை ஆகியிருக்கிறது என்று நினைத்தான். எப்போதும் பூஜை அறையில் பார்த்த தாத்தாவை கத்தியோடு குமாரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவனுக்குத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்றிருந்தது.

“என்னைக்காவது ஒரு நாள் கேட்க்காம விட மாட்டேன்மா” என்றான். கடைசி வரை அவளிடம் அதைப் பற்றிக்கேட்க்கவில்லை.

*

ரயில் கிளம்பிய பத்தாவது நிமிடத்தில் குமாரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீண்டும் சிரித்தார். பரனூரில் ஏறியதிலிருந்தே அவரைக் கவனித்துக்கொண்டு வந்தான். திடீர் திடீரென சிரித்தார். யாரைப் பார்த்து எதற்கு சிரிக்கிறார் எனத் தெரியாததால் அவரைக் குழப்பத்துடனேயே கவனித்து வந்தான் குமார். “இருக்கும் கூட்டத்தில் எள்ளைப் போட்டால் எண்ணையைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது, இந்தாளுக்கு மட்டும் எங்கிருந்துதான் சிரிப்பு வருமோ” என முனகிக்கொண்டே பின் தாங்க முடியாமல். “என்னாச்சு சார்?” எனக் கேட்டான்.

“திரும்பிப் பாருங்க.. அங்க ஒருத்தர் நிக்குறார்ல…” ஒரு ஊரே நின்றுகொண்டிருக்கும் இடத்தில் யாரைச் சொல்கிறாரென பார்த்தவனிடம் “கருப்பு கலர் சட்ட..சொட்ட மண்ட.. போனத் திருடப் பாத்தார்.. ஏறுறப்ப கூட்டமா இருக்கேன்னு போன பாக்கெட்ல போட்ருந்தேன்.. போன் வரவும் எடுப்போம்ன்னு பாக்கெட்ல கையவிடுறேன் இவர் கை உள்ள இருக்கு.. கையப் பிடிச்சுட்டு திரும்புனா விருட்டுன்னு உருவிட்டு படிக்கட்டுப் பக்கம் போய் நிக்குறார்”. என்றார்.

குமார் பயந்துபோய் தன் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். போன் இருந்தது. அவருக்கு ஒரு ஐம்பது வயதேனும் இருக்கும் போலிருந்தது.

“இவங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடயாதா சார்.. பத்திரமா வீடு போனா தேவலன்னு அவன் அவன் ஓடிட்டு இருக்கான்.. இப்பக் கூட…”

அவர் அதற்கும் சிரித்தார். பின் தன் கைப்பேசியில் மூழ்கிப்போனார்.

மறைமலை நகர் தாண்டி ரயில் ஓடத்தொடங்கியது.

*

குமாரும் அவன் பெற்றோரும் தஞ்சாவூர் போய் சேர்ந்தபோது காயத்ரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார் அவன் சித்தப்பா. சமைத்துக்கொண்டிருக்கும்போது சேலையில் தீப்பற்றிவிட்டது என்று போனில் சொன்னவர் நேரில் பார்த்தபோது ஒரு வார்த்தைப் பேசவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் காயத்ரி சித்தி. குமாரின் குடும்பம் போனபின்பு அவன் அம்மாதான் உடன் இருந்தாள்.ஐசியூவிற்கு வெளியேயே நின்றான் குமார். கதவுகள் திறக்கும்போதெல்லாம் சித்தி தெரிகிறாளா என்று பார்க்க முயன்றான். நான்காவது நாள் அம்மாவே அவனை அழைத்துக்கொண்டுபோனாள். உள்ளே யாரையோ காட்டி “இதுதான் உன் சித்தி பார்த்துக்கோ” என்றாள்.

பிறந்த மேனியாய்க் கிடந்தாள் காயத்ரி சித்தி. இல்லை… இப்படியா பிறந்திருப்பாள்… கருகிப்போய்.. சதைக் குவியலாய்க் கிடக்கும் இவளா காயத்ரி சித்தி.. எரியாத பாகம் ஏதேனும் இருக்கிறதா.. அதில் சித்தியைக் கண்டுபிடித்துவிட மாட்டோமா என அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தோளில் தட்டி மீண்டும் வெளியே அழைத்து வந்தாள் அவன் அம்மா.

*

பொத்தேரியில் கூட்டம் சற்று குறைந்தது. இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அதைவிடக் குறைவான வயதிருக்கும் பெண்ணும் ஏறினார்கள். அவர்கள் ஏறியதிலிருந்தே பெட்டியிலிருந்த பலரின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதுதான் இருந்தன. துக்க வீட்டில் வாய் நிறையப் புன்னகையோடு வரும் குழந்தையைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் சிறு அமைதியை குமார் அவளைப் பார்க்கையில் உணர்ந்தான். தமிழ்ப் பெண்போல் இல்லை முகம். பால் நிறம். சுருட்டை முடி. கண்களில் லேசான பயம். கூட வந்தனவனின் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டாள். ஏதோ முணுமுணுத்தாள். அவன் தலையில் தட்டிக்கொடுத்தான். “நான் இருக்கும்போது ஏன் பயப்படுகிறாய்” என்று அவன் சொல்வது குமாருக்கு கேட்டது.

குமாருக்கு அவன் சித்தப்பாவின் முகம் கண் முன்னே வந்துபோனது. ஏறக்குறைய இதையேதான் காயத்ரியை அழைத்துக்கொண்டு முதன் முதலாக வீட்டிற்கு வந்தபோது மகாலிங்கமும் சொன்னார். திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை என்றிருந்த காயத்ரியை இரண்டு வருடங்கள் துரத்தி, சம்மதிக்க வைத்தது மகாலிங்கத்தின் சாதனைதான். குமாரின் அம்மாவிற்கு தன் தங்கையின் மீது அலாதிப் பிரியமும், மரியாதையும் உண்டு. வீட்டில் அதிகம் படித்தவள் என்பதோடு இத்தனை வருடங்கள் தனியாக எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொண்ட அவளின் மன தைரியத்தைப் பாராட்டாமல் இருந்த நாளே இல்லை. நிச்சயம் நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாள் என்று நம்பினாள். ஆனாலும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. வீட்டுப் பெரியவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன்னிடம் வந்து நிற்கும் தங்கைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு அவள் நம்பிக்கை பெரியதாய் இல்லை.

மகாலிங்கமும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். “உங்கள் தங்கையைப் போன்ற தைரியசாலிப் பெண்ணிற்குத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்” என்றார். உண்மைதான். அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள் காயத்ரி சித்தி. இல்லையென்றால் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டப் பின் சிலையைப்போல் இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்றிருப்பாளா…

*

காயத்ரி ஏழு நாட்கள் மரணத்தோடு போராடிவிட்டு இறந்துபோனாள். முதல் நாளே “சிக்ஸ்டி பெர்சன்ட் பர்ன், பிழைக்க வாய்ப்பில்லை” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “உன் கூட வந்தர்றேன்க்கா.. என்னக் கூட்டிட்டுப் போயிடு.. இனி நீ தான் என்னப் பாத்துக்கனும்..இப்படி ஆகிருச்சு.. என்னால எதுவும் செய்ய முடியாது இனிமே” என்று உயிர் பிரியும் கடைசி நொடி வரை சொல்லிக்கொண்டே இருந்தாள் என அம்மா சொன்னபோது குமார் உடைந்து அழுதான். யாரின் துணையும் தேவையில்லை என்று இருபது வயதிலிருந்தே வாழ்ந்து வந்தவள் முடிவில் இப்படியா பேசவேண்டும் என்று புலம்பியவனைத் தேற்ற முடியாமல் அவன் குடும்பம் தவித்தது. குமாருக்கு காயத்ரி சித்தி என்றால் தனிப் பிரியம். “எப்போ ஊருக்கு வந்தாலும் அவ மடி மீது ஏறிக்கிட்டு இறங்கவே மாட்ட.. திரும்பக் கிளம்பும்போது பஸ்ல ஏறி உக்காந்துட்டு உன்ன ஜன்னல் வழியா தூக்கிப் போடுவா” எத்தனை முறை அம்மா சொன்னாலும் ஒவ்வொருமுறையும் புதிதாய்க் கேட்பதுபோலவே கேட்பான். சிறிது காலம் அவள் சொல்லாமல் இருந்தால் இவனே, “அப்போ சித்தி அடிக்கடி என்னப் பாக்க வருவாளாமா” என எடுத்துக்கொடுப்பான். ஆறேழு வயதில் “மயில் மாதிரி இருக்காமா சித்தி” என அவளைக் கொஞ்சுவான். ஒரு நாள் அவள் குரல் மயிலின் குரல் போலவே மாறிப்போகுமென்பது தெரியாமல்…

“கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உன்ட்ட சொல்லிட்டுத்தானமா பண்ணிக்கிட்டா.. ஒரு வார்த்த நம்மள்ட்ட சொல்லிருந்தா நாம விட்ருப்போமா” “சுடு சொல்க்காரிடா.. அவ வாக்குதான் அவள வாழவும் வச்சது.. இப்போ சாகவும் அடிச்சிருச்சு.. யாருமே வரலனாலும் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்னு சொல்லிட்டுப்போனா..எப்படி நம்ம கிட்ட வருவா… கொள்ளி கூட அவளே வச்சுக்கிட்டா.. பாவி” குமாரின் அம்மாவிற்கு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. சிறுவயதிலிருந்தே அவளின் துடுக்குத்தனத்தையும், முன் கோபத்தையும் அவர்கள் வீட்டிலிருந்த எல்லாரையும் விட அவள் நன்றாக புரிந்துவைத்திருந்தாள். காயத்ரியும் அதனலாதான் “யாரும் வரலன்னாலும் பரவால்ல நீ என்ன சொல்ற” என்று மகாலிங்கத்தைக் கூட்டிக்கொண்டு அவளிடம் வந்து நின்றாள். மரண வாக்கு மூலம் வாங்க வந்த பெண் நீதிபதியிடம் சமையல் செய்யும்போதுதான் சேலையில் நெருப்பு பிடித்தது என்று அவள் சொன்னபோது “நானே உன்ன கழுத்த நெறிச்சுக் கொன்றுவேண்டி” என்று ஆத்திரப்பட்டுக் கத்தினாள். காயத்ரியின் உதடுகள் பிரிந்து மூடின. அவள் எதையோ சொல்ல முயன்றாள். பின் முடியாமல் அமைதியாகிவிட்டாள்.

சாகப்போகும்போது கூட கணவனைப் பற்றி ஒரு வாய்த் திறக்காத அவளை நினைத்து அவளின் குடும்பம் நொந்துபோனது.

*

குமாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துக்கொண்டே இருந்தது. காயத்ரி எரிந்தபோது அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த ஒரு வேளையோடு போயிருக்கும். இப்படிக் கனவில் ஏன் வந்து தீயாய் நிற்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சாவை வலியத் தேடிப்போகும் பெண்கள் ஏன் தங்களின் உடலை தாங்களே அழித்துவிட்டுப் போகிறார்கள். தீக்குளிப்பவர்களின் கணக்கெடுத்தால் பெண்கள்தான் அதில் அதிகம் இருப்பர்..

*

ரயில் தாம்பரத்தை நெருங்கியது. “பயந்து சாவுறானுங்க.. இப்போ என்னா ஆச்சு.. எல்லாரும் அமைதியாத்தான் நடக்குது.. இந்த மீடியாக்காரனுங்க சும்மாவே மக்கள பயமுறுத்துறாங்க..” குமாரின் நினைவலைகளை அறுத்தது ஒரு குரல். தலைமுடிகள் நரைக்கத் தொடங்கியிருந்த மனிதர் ஒருவர் போனில் திட்டிக்கொண்டிருந்தார். போனை வைத்தப்பின்பும் திட்டுவதை நிறுத்தவில்லை.

“முன்ன மாதிரிலாம் இல்லங்க.. எல்லாருமே மாறிருக்காங்க..எதுக்குப் பயப்படனும்.. நாம பயந்தாதான் அத வச்சுக்கிட்டு எவனாவது எதாவது பண்ணுவான்..” அவர் பேசிக்கொண்டே போனார். “பயம்.. பயந்தாகொள்ளிங்க…” குமாருக்குத் தன் கனவின் அர்த்தம் விளங்கத் தொடங்கியது.

இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் காயத்ரி குமாரின் அம்மாவிடம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுப் போய்விடும்படி சொன்னாளாம். “இத மட்டும் எனக்காக செஞ்சுருக்கா.. உன்ட்ட வேற இனிமே எதுவும் கேக்கல… இனி எங்க கேக்குறது…”

“அதச் சொன்னப்ப அவ கண்ணோரம் கண்ணீர் வழிஞ்சதுடா… கடைசியா ஒருவாட்டி அழுதா.. நாம் சாகுற வர இனி அழனும்”

காயத்ரி மரணப் படுக்கையில் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவள் இல்லாதுபோன இத்தனை வருடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி அவளை நினைவில் நிறுத்திக்கொண்டது குமாரின் குடும்பம். குழந்தைகள்தான் பாவம் என்று இரண்டு வருடங்கள் முன் வரைக்கும் கூட வருத்தப்பட்டனர். ஒருவகையில் கையாலாகாதத்தனத்தை, குற்றவுணர்ச்சியை மறைக்க மீள மீள அவளைப் பற்றி பேசுகிறோமா என்று அவ்வபோது குமாருக்கும் தோன்றும். அப்படி எண்ணம் வரும்போதெல்லாம் தனக்காக கடுமையாக வாதாடிக்கொள்வான். அப்போது இருந்த குடும்ப சூழ்நிலையில் எப்படிச் சாத்தியம்.. மகாலிங்கம் பிரச்சனை வரலாம் என்று எதிர்பார்த்து ஆட்களை வரச் சொல்லியிருந்தான். அவர்களையெல்லாம் மீறி என்ன செய்திருக்க முடியும்.. அவன் என்ன சமாதானம் சொல்லிக்கொண்டாலும் “எங்கள விட்டுட்டுப் போகாத பெரிம்மா” என்று அழுத அந்தக் குழந்தைகளின் முகங்கள் அவன் நிம்மதியை அவ்வபோது வந்து கலைத்துப்போட்டுக்கொண்டே இருந்தன. “என் பிள்ளைய விட்டுட்டீங்கள்ல” என்று தீப்பிழம்பாக காயத்ரி கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

*

தாம்பரம் சானடோரியமில் இறங்கினான் குமார். உடலளவிலும் மனதலளவிலும் சோர்ந்துபோயிருந்தான். நடைமேடை முழுவதும் ஓட்டமும், நடையுமாக மக்கள் போய்க்கொண்டிருந்தனர். சட்டென்று அவனுக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது. அடுத்த நொடியே ரயிலில் அந்த மனிதர் சொன்னதுபோதுபோல் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ என்றும் நினைத்தான். இருந்தும் அவனால் தைரியத்தை வரவைத்துக்கொள்ள இயலவில்லை.பைக்கை மறுநாள் வந்து எடுத்துக்கொள்ளலாமா, ஆட்டோ எடுப்போமோ என யோசித்துக்கொண்டே வெளியே வந்தவனுக்கு பத்தடியில் ஒரு கூட்டம் கைகளில் கொடியுடன் வருவதைப் பார்த்தாபோது வியர்க்கத் தொடங்கியது. அவர்கள் கடந்துபோகும் வரை அமைதியாக நின்றான். கூட்டம் அமைதியாகத்தான் போனது. இருந்தும் குமாருக்கு அவர்கள் தலைகள் மறைந்தபின்தான் மூச்சே வந்தது.

பைக்கைக் கிளப்பியதிலிருந்து எதிரில் போவோர் வருவோர்களைப் பார்த்துக்கொண்டே ஓட்டினான். இரண்டு வண்டிகளுக்கு மேல் சேர்ந்தார்போல் எதிரில் வந்தால் ஓரமாக நிறுத்தி அவர்கள்போனபின் கிளம்பினான். எப்போதும் எஞ்சின் மேல் வைக்கும் ஹெல்மெட்டை ஸ்டாண்டிலியே போட்டுக்கொண்டான். ஐந்து நிமிடத்தில் வரும் வீடு ஏன் இன்னும் வரவில்லை என வாய்விட்டுப் புலம்பினான். அவனை யாரேனும் பார்த்தால் எங்கேயாவது திருடிவிட்டு வருகிறாயா என்று கேட்ப்பார்கள். ஒருவழியாய் வீட்டை அடைந்தவுடன் ஹெல்மெட்டைக் கழட்டி வண்டியிலேயே வைத்துவிட்டு கதைவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினான். தன் அறைக்குள் நுழந்தவுடன் பையைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்துவிட்டு பெட்டில் விழுந்தான். சிறிது நேரம் அப்படியே கிடந்தான். தலைவலிவிட்டதுபோல் இருந்தது. காலையிலிருந்து உணர்ந்த அழுத்தம்போய் அவன் மனம் சற்று ஆசுவாசமாய் உணர்ந்தது.

அப்போது அவனுக்கொரு குரல் கேட்டது. சரியாகக் காதில் விழவில்லை. சட்டென்று எழுந்துகொண்டான். அசையாமல் அப்படியே நின்றான். நிச்சயம் பரிச்சியமான குரல்தான். அவன் காதில் விழுந்தது கூட ஏற்கனவே கேட்ட விசயம் மாதிரிதான் இருந்தது. இரண்டாம் முறை அந்தக் குரல் கேட்டது. இம்முறைத் தெளிவாகக் கேட்டது.

“எல்லாம் கோழப் பசங்க…..”

சுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை

இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்தேன். மணி எட்டரைதான் ஆகியிருந்தது. ஆனால் ஊரே அடங்கிக் கிடந்தது. கேட்ட ஒரே சத்தம் பக்கத்து வீட்டு தென்னமரக் கிளைகளில் காகங்கள் உட்கார்ந்து கரைந்த சத்தம் மட்டுமே. குடித்துவிட்டுச் சாலையோரம் விழுந்துக் கிடக்கும் குடிமகன்களைப் போல் சுய நினைவற்றுக் கிடந்தது வானம். சுற்றிலும் யார் வீட்டு மாடியிலும் யாரும் இல்லை என்பதைக் கவனித்தேன். இந்த ஊர் இதற்கு முன் இப்படி இல்லை. எப்போதும் எல்லார் வீட்டிலும் அடுத்தவீட்டுக் கதைதான் ஓடிக்கொண்டிருக்கும். தங்கள் வீட்டில் சாப்பிட்ட தட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாதவர்கள்கூட பக்கத்துவீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருப்பார்கள். சில நேரங்களில் அது தொந்திரவாக இருந்தாலும் பல நேரங்களில் பெரிதும் உதவியிருக்கிறது. ‘அது’ வந்த பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து இப்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிறது.

பல நினைவுகள் வந்து அலைக்கழித்தன. பின் எப்போதோ தூக்கிப்போனேன்.

மறுநாள் காலை சீக்கிரமே குளித்து முடித்துவிட்டுக் கிளம்பினேன். ‘அங்கு’தான்.

“என்னம்மா சொல்ற… வெளிய வந்து சொல்லு… சமையக்கட்டுல இருந்து கத்தாதன்னு எத்தனவாட்டி சொல்றது”

அம்மா சரியாக வெளியே கிளம்பும்போதுதான் எதேனும் சொல்லுவாள். பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க்கவில்லை. அப்படியென்றால் கோபமாக இல்லை. ஆனாலும் ஆளைக் காணோம். நானே சமையக்கட்டிற்குச் சென்றேன்.

“சொல்லுமா.. என்ன சொன்ன”

அடுப்பில் இருந்தப் பாத்திரத்தைக் கீழே எடுத்து வைத்துக்கொண்டே “பக்கத்து வீட்டு ரேவதிய ரெண்டு நாளா காணமாடா… கணேசன் அண்ணன் வந்து காலைலயே விடிஞ்சதும் விடியாததுமா விசாரிச்சிட்டுப் போனாரு.. நீ எந்திரிச்சதும் உன்ன வந்துப் பாக்க சொன்னாரு” என்றாள்.

ரேவதி அக்காவை காணவில்லை என்று அம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எனக்கு ஏன் அதிர்ச்சியாகவில்லை என்பதை நினைத்துதான் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை இப்படி ஏதேனும் நடக்கும் என்று முன்னரே எதிர்பாத்தேனா. ச்ச.. நான் ஏன் அப்படி நினைக்கப்போகிறேன். எனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை. தெருவில் அதிகம் அவள் யாரிடமும் பேசிக் கூடப் பார்த்ததில்லை. நான் மட்டும் இல்லை, யாருமே அவளுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். ஆனால் பிறகு ஏன் அந்தச் செய்தியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். என்னை நினைத்து எனக்கே பயமாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குப் போவதா வேண்டாமா என்று குழப்பத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றேன். பின் ஒரு முடிவெடுத்தவனாய், “போய்ப் பார்க்கிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

கணேசன் அண்ணனின் மனைவிதான் ரேவதி. ஓராண்டுக்கு முன் அவர்கள் திருமணம் நடந்தது. கணேசன் அண்ணனின் தூரத்து சொந்தம் என்று அம்மா சொன்னாள். ஊருக்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான பெண்ணாய் ஒருவருடனும் பேசாமல் எப்போதும் கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பாள். எப்போதும் “ஊர் வம்புக்கு நான் போக மாட்டேன்பா..” என்று பெருமைப் பேசும் அம்மாவே ஒரு நாள் “என்னடா இந்தப் பொண்ணு வீட்ட விட்டு வெளியவே வர மாட்டேங்குது..” எனக் கேட்டாள்.

“புதுசா வந்துருக்காங்கள்லம்மா.. அதுனால அப்படித்தான் இருப்பாங்க..போக போக சரி ஆகிடுவாங்க” இதைச் சொன்னபோது எனக்கே நம்பிக்கை இல்லை.

கணேசன் அண்ணன் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே துபாய் சென்றுவிட்டார். வீட்டில் ரேவதி அக்கா, கணேசன் அண்ணனின் அண்ணன், அவரின் மனைவி மூன்றுபேர் மட்டுமே இருந்தனர்.

அண்ணன் துபாய் போவதற்கு முன் சில தடவைகள் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது கூட ஒரு தடவைதான் ரேவதி அக்காவை பார்க்க முடிந்தது. அதுவும் அந்த அண்ணன் காப்பி கொண்டு வரச் சொன்னதால்.

ஒரு வேளை பிடிக்காமல் நடந்த திருமணமோ என்றெல்லாம் சில சமயம் தோன்றும்.

நான் முதன் முதலாக ரேவதி அக்காவிடம் இங்குதான் பேசினேன். நண்பர் ஒருவர் ஒரு சுவரில் பதியப்பட்டிருந்தக் கவிதைகளைக் காண்பித்து இந்தக் கவிதைகள் யார் எழுதியது என்று கேட்டார். ‘நகுலன்’ என்றேன்.

“இல்ல இவங்கள நான் கொஞ்ச நாளா தொடர்ந்து பாலோ பண்ணிட்ருக்கேன்.. பேரு ரேவதி. கவிதைகள் நல்லா எழுதுறாங்க.. ஒரு வேள இவங்களே வேற பேர்ல எழுதுறாங்களோன்னு டவுட்டாகிருச்சு” அவர் பேசியதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என் கவனம் முழுவதும் அந்தக் கவிதைகளின் மேல்தான் இருந்தன.

“எனக்கு

யாருமில்லை

நான்

கூட..”

“இருப்பதற்கென்று

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்”

இதற்கு முன் பல தடவைகள் இந்தக் கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுபோல் எப்போதும் இவை இவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்ததில்லை.

ரேவதி அக்கா!!

அந்தக் கவிதைகளின் கீழே பெயர் போடவில்லை என்பதால் நான் “நகுலன்!” என்று எழுதினேன்.

உடனேயே “ஆம்” என்று பதில் வந்தது. எங்கள் நட்பு நகுலனிடமிருந்து தொடங்கிற்று.

சில நாட்களிலேயே மிக நன்றாக பேசத்தொடங்கிவிட்டோம். எப்போது இங்கு வந்தாலும் அவரிடம் “ஒரு குட் மார்னிங்” அல்லது “குட் ஆப்டர்நூன்” அல்லது ஒரு “குட் ஈவ்னிங்” சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களைப் பார்க்கவே போவேன். ரேவதி அக்காவும் அப்படித்தான். எங்கள் பேச்சு முழுக்க முழுக்க தீவிர இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கும். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எதைப் பற்றியும் விவாதிக்க கூடியவராக ரேவதி அக்கா இருந்தாள். ஒவ்வொருமுறையும் அவள் மீது எனக்கு மரியாதை கூடிக்கொண்டே போனது. என்னையும் “எழுது. எழுத எழுத தன்னால் எழுத்து பிடிபடும்” என ஊக்கப்படுத்தினாள்.

ஒன்றை நான் கவனிக்கத் தவறவில்லை. என்னதான் இங்கு நன்றாகப் பேசினாலும் அக்கா வீட்டிற்குப்போனால் முற்றிலுமாக மாறி, சரியாகச் சொன்னால் அதே பழையப் பெண்ணாகத்தான் இருந்தாள். எப்போதும் அவள் அறைக்குள்தான். ஒன்றிரண்டு தடவை வெளியே வந்தாலும் ஒரு ஹாய் ஹல்லோ மட்டும்தான்.

எனக்கு இந்த விசயம் ஆச்சர்யமாய் இருந்தது. ஒரே ஆள் இங்கு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் ஏன் இருக்கவேண்டும். இத்தனைக்கும் கணேசன் அண்ணனின் குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்கள். கலகலப்பானவர்கள். கணேசன் அண்ணனின் அண்ணனுக்கும் அவருக்கும் பத்து பதினைந்து வயது வித்யாசம் இருக்கும். தம்பியைத் தன் பிள்ளையைப்போல் பார்த்துக்கொள்பவர் அவர். ரேவதி அக்காவை ஒரு சொல் கடுமையாகப் பேசிப் பார்த்ததில்லை. இருந்தும் அக்கா தன் கூண்டிற்குள்தான் எப்போதும் இருந்தாள்.

இங்கு எதிர்பார்த்த மாதிரியே எல்லா இடங்களிலும் ஒரே அமைதி. இன்றைக்கு முழுவதும் இதைப் பத்திதான் பேசுவார்கள். எல்லா சுவர்களிலும் #சேவ்ரேவதி என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தன. பெரிய பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

எனக்குப் புரிந்தது… நான் ஏன் அவள் காணாமல் போனது பற்றி அதிகம் கவலைக்கொள்ளவில்லை என.

நாங்கள் பேச ஆரம்பித்த புதிதில் ரேவதி அக்காவிற்கு அதிக நண்பர்கள் இங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எண்ணிக்கைக் கூடத் தொடங்கியது.

ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் தன் படத்தை சுவரில் பகிர்ந்திருந்தாள். அன்று மட்டும் அவளுக்கு முன்னூறுக்கும்மேல் நட்பு அழைப்புகள் வந்தன. அனேகமாக ஊரில் இருந்த எல்லோருமே அந்த லிஸ்ட்டில் இருந்தனர். அதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு முறையும் யாராவது புதிதாக நட்பாக வேண்டினால் என்னிடம்தான் முதலில் சொல்வாள். நான் அவரின் சுவர் பக்கம்போய் ஆராய்ச்சி செய்து அவரின் நட்பை ஏற்கலாமா வேண்டாமா என்று சொல்வேன். ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. அம்முறை நட்பு அழைப்பு கொடுத்தவர் பக்கத்து தெருவில் இருக்கும் கீர்த்தி. பெண் என்பதாலும் அதுவும் பக்கத்து தெருவில் இருப்பவள்தானே என்பதாலும் ரேவதி அக்கா என்னைக் கேட்க்காமலேயே அவளின் நட்பை ஏற்றுக்கொண்டுவிட்டாள். எனக்குத் தெரிந்தபோது நான் அவளை நன்றாகத் திட்டினேன். ஏனென்றால் அந்த கீர்த்தியை பற்றி ஊரில் ஒருவர் கூட நல்லவிதமாக பேசவில்லை. வாராவாரம் அவள் வீட்டிற்கு புதிது புதிதாக பொருட்கள் எப்படி வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். அவள் அதை பெறுவதற்கு எந்த தப்பான விசயங்களையும் செய்வதில்லைதான். “எனக்கு இதெல்லாம் வேண்டும்.. ஏழையாய் பிறந்துவிட்டதால் இதற்கெல்லாம் ஆசைப்பட முடியுமா” என்பது மாதிரி ஏதாவதுதான் சொல்லுவாள் யாரேனும் ஒரு தர்மவான் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவான். வேடிக்கை என்னவென்றால் அதைப் பார்த்து கீர்த்தியையும், வாங்கிக்கொடுத்தவனையும் திட்டித் தீர்க்கும் புண்ணியவான் அடுத்த முறை முதலில் ஓடிப்போய் சீர்வரிசை செய்வான். கீர்த்திக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் யார் திட்டுவதைப் பற்றியும் கவலைப்படமாட்டாள். இப்படி வாங்கிக்கொடுப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றோ, வாங்கிக்கொள்வதில் கீர்த்திக்கு என்ன ஆசை என்றோ புரியவில்லை.

ரேவதி அக்காவிடம் இதைச் சொன்னபோது என்னை ஆணாதிக்கவாதி எனத் திட்டினாள். நானும் மற்ற ஆண்களைப்போல்தான்.. ஒரு பெண் பொது வெளியில் சகஜமாகப் பழகினாலே சந்தேகப்படும் மோசமான வக்கிர புத்திக்காரன் அது இது என என்னவெல்லாமோ சொல்லித் திட்டினாள். ஒரு கட்டத்திற்கு மேல் எப்படியோ போங்கள் என்று விட்டுவிட்டேன். ஒரே வாரத்தில் நீ சொன்னது சரிதான் என்று என்னிடம் வந்து சொன்னாள்.

புகைப்படத்தை ஏன் பகிரவேண்டும்.. உடனே அதை நீக்குங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகுதான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. நான் பொறாமையால் பேசுகிறேன் என்றும் என் எல்லையை மீறாமல் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்தாள்.

இது ஒரு வினோத உலகம். வந்த சில நாட்களிலேயே உணர்ந்தாலும் விட்டு வெளியேறும் வழிதான் தெரியவில்லை. இது வந்த பின்னர் எல்லோருக்கும் மூன்று முகங்கள் ஆகி விட்டன. இங்கு காண்பிப்பது ஒரு முகம், வெளி உலகில் ஒரு முகம் மற்றும் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த மூன்றாவது முகம்.

மேலும் சில சுவர்களில் சில போராட்ட அழைப்புகள் இருந்தன. உலகில் பல நாடுகளின் அரசியலை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாய் இவ்விடம் இருப்பதால் எல்லோரும் முடிந்தவரை இவ்விடத்தை பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். வாரத்திற்கு ஒரு போராட்ட அறிவிப்பையேனும் பார்க்கலாம். நம்மில் சிலருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இவ்விடம் சொர்கபுரி.

இப்போது யோசித்தால் எனக்கு ரேவதி அக்காவைப் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னை யாரும் கண்காணிக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ஒரு மனிதன் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்வான் என்று சொல்வார்கள். கட்டுப்பாடுகள் அற்ற, அதே சமயம் சிறிதளவு பாதுகாப்பாய் உணரும் இடத்தில் கூட ஒரு பெண் தன்னை முழுமையாய் வெளிப்படுத்திக்கொள்கிறாள். எனக்குப் புரிந்தது ஆனால் என்னைப்போல் பலரும் நட்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரேவதி அக்காவின் சுவரை அடைந்தபோது கணேசன் அண்ணனின் அண்ணன் அங்கிருந்தார். “காணாமல்போனவளைத் தேடாமல் இங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்” இருந்தும் அவரைப் பார்த்தவுடன் எழுந்த குற்றவுணர்ச்சியை மறைக்க முடியவில்லை.

கடைசியாய் அவளுடன் சண்டைப் போட்டபின் இரண்டு நாட்கள் மனதில் வேறெதுவும் ஓடவில்லை. அவள் கேட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அநியாயமானவை. அவளின் நல்லதிற்கு சொன்னதை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்திவிட்டாள். பதிலுக்கு திருப்பி திட்டியிருந்தால் ஒருவேளை மனம் சமாதானம் ஆகியிருக்கும். அதற்கு அவள் வாய்ப்பே குடுக்காததால் அவள் வீட்டிற்குப் போனேன். கணேசன் அண்ணனின் அண்ணந்தான் இருந்தார். சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.

“அண்ணா.. ரேவதி அக்கா இருக்காங்களா” அவள் அங்கு இல்லையென்பது தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்டேன்.

“இல்ல சிவா.. அவ அங்கதான் போயிருக்கா” என்றார்

ஒன்றும் பதில் சொல்லாமல் தலையை குனிந்து நின்றேன்.

“என்னாச்சுப்பா…? அவகிட்ட எதுனா கேக்கனுமா”

“வந்து..உங்ககிட்டதான் ஒன்னும் சொல்லனும்…” என்று இழுத்தேன்.

“சொல்லு.. என்ன சொல்லனும்” அதுவரை அசிரித்தையாக இருந்தவர் என் முகத்தைக் கவனமாகப் பார்த்தார்.

“நான் சொல்றத எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரில.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க.. ரேவதி அக்கா பத்தி ஒன்னு சொல்லனும்ன்னுதான் வந்தேன்.. தப்பா எதுவும் இல்ல..அக்கா நல்லவங்கதான்.. அதுனால அவங்க மேல் இருக்குற அக்கறைலதான் சொல்றேன். அக்காவ ‘அங்க’ அனுப்பாதீங்க அண்ணா அது கல் மனசுக்காரங்களுக்கான இடம்.. சரியாத்தான் சுவர்களால அந்த உலகத்த உருவாக்கிருக்காங்க.. அங்க பாதிபேரு மோசமானவங்களா இருக்காங்க.. இது அக்காவுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது.. அவங்க எல்லாரையும் நம்புறாங்க.. யாரு எப்படின்னு பாத்து பழக மாட்றாங்க.. நான் சொன்னாலும் என்னயத்தான் திட்றாங்க.. இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்.. நேத்து பொறந்த கொழந்தல இருந்து நாளைக்கு சாகப்போறவங்க வரைக்கும் எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருப்போம்.. ‘அது’ வந்ததுக்கு அப்றம் எல்லாரையும் புதுசா பாக்குற மாதிரி இருக்கு.. எது உண்மை எது பொய்ன்னு கண்டுபிடிக்க முடியல..எதுக்கு வம்பு பாருங்க.. அதான் உங்ககிட்ட ஒருவார்த்த சொல்லிரலாம்ன்னு வந்தேன்.. நான் சொன்னேன்னு எதுவும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க.. அதுக்கும் என்னதான் திட்டுவாங்க..நான் வர்றேன்” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன். கணேசன் அண்ணனின் அண்ணன் என்னைக் கூப்பிடவில்லை. அதிலிருந்து நான் சொன்னதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டார் என்பது புரிந்தது. உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோசம்.

அடுத்த ஒரு வாரத்திற்குளெல்லாம்….

கணேசன் அண்ணனின் அண்ணனிடம், “சாரி அண்ணா.. என்றேன்” என்னைப் பார்த்தவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். “பாவி மக.. இந்தப் பாழாப்போன சொவத்துங்கப் பக்கம் வராத வராதன்னு சொன்னேன்.. என் பேச்சக் கேக்கலயே.. இவ்ளோ வீம்பா ஒரு பொம்பளைக்கு இருக்குறது.. எம் தம்பி வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்.. எங்க போனாளோ.. என்னாச்சோ தெரியலயே” அழுது தீர்த்தார்.

ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

“தம்பி பொண்டாட்டின்னு கூட பாக்காம புருசன் இல்லாதப்பா ஊர் மேயிரியான்னு கேட்ருக்கான் பாவி.. சொல்லு பொறுக்க மாட்டாம வீட்ட விட்டுப் போயிட்டா” வரும் வழியில் ஏதோ ஒரு சுவரோரம் இருவர் பேசிக்கொண்டார்கள்.

இங்கு காணாமல் போன எத்தனையோ பேர் திரும்பி வந்திருக்கின்றனர். திரும்பி வரவே மாட்டார்கள் என்று ஊர் உலகமே சொன்னவர்கள் எல்லோரும் மறுபிறவி கிடைத்து மீண்டிருக்கின்றனர். “உலகமே இங்கிருக்கிறது, இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாதவர்களே இனி இருக்க மாட்டார்கள்” என்று என்னை இங்கு முதன் முதலில் அழைத்து வந்தபோது ஒருவர் சொன்னார். ரேவதி அக்காவும் திரும்பி வருவாள். அவள் வரவேண்டும். “#சேவ்_ரேவதி_அக்கா” என்று என் சுவரில் எழுதிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

“சுவர்களின் உலகத்திற்கு வந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக” என்ற செய்தி கண் முன் தோன்றி மறைந்தது.

ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை

இன்று ஓப்பன் பண்ணியே ஆகவேண்டும்” என்று அஜய் முணுமுணுத்துக்கொண்டே வண்டியை முறுக்கினான்.

*

அஜய் பேட்ஸ்மன் இல்லை. பவுலர். புரொபசனல் கிரிக்கெட்டரும் அல்ல. வாரம் முழுவதும் நைட் ஸிப்ட் பார்த்துவிட்டு சனிக்கிழமை காலையில் கிரவுண்டிற்கு முதல் ஆளாக வரும் ஐடி ஊழியர்களுள் ஒருவன். சென்னைக்கு வந்த முதல் வருடம் அவனது கம்பெனியில் கிரிக்கெட் போட்டி அறிவித்தார்கள். போட்டி பற்றிய அறிவிப்பு வந்த உடன் அவனது அணியில் எல்லோரும் எப்படி பரபரப்பானார்கள் என்று அடிக்கடி அஜய் நினைத்துப்பார்ப்பான். யாரெல்லாம் புதிதாக சேர்ந்திருந்தார்களோ அவர்கள் எல்லோரிடமும் கிரிக்கெட் விளையாடுவாயா என்று மேனேஜர் கேட்டார். அஜய் “விளையாடுவேன்” என்று சொன்னவுடன் “பேட்ஸ்மனா?” என்றார். “இல்லை பவுலர்” என்றவனை ஒரு நொடி ஆச்சர்யமாய்ப் பார்த்துவிட்டு “சரி, சனிக்கிழமைக் காலை எம்சிசி கிரவுண்டிற்கு வந்துவிடு. ‘நெட்ஸ்’ இருக்கு.. ஈஸ்ட் தாம்பரம் ஆப்போஸிட்டில் இருக்கிறது” ஒரு சிரிப்போடு அவர் சொல்லிவிட்டுப் போனார். அவர் ஏன் சிரித்தார் என்று அஜய்க்கு புரிந்தது.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அஜய்க்கு இது பழகிப்போன விசயம். முதலாம் ஆண்டின் முதல் வகுப்பில் எல்லோரின் பெயரையும் ஊரையும் கேட்டு வந்த பேராசிரியரிடம், “பேரு அஜய், ஊரு எம்.காட்டாம்பட்டி” என்றான். “என்னடா.. பேருக்கும், ஊருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே” என்று சொல்லி சிரிக்க மொத்த வகுப்பும் சிரித்தது. “பேரு அஜய்.. ஊரு காட்டுப்பட்டி.. ஹாஹாஹா..அது என்ன எம்.காட்டாம்பட்டி..ஹாஹ.. ஊருக்கு இனிசியல்லாம்” பேராசிரியர் விடுவதாக இல்லை. அஜய்க்கு கோபம் வந்தது. சட்டென்று,”அது ஒரு சுதந்திரப் போராட்ட வீரரோட நினைவா வச்சுருக்காங்க சார்.. அவரு பேரு மணவாளன் தியாகி.. எங்க ஊர்ல இருந்து சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு உயிர் நீத்தவர்.. அவரோட பிள்ளைகளா எங்க ஊர்ல இருக்கவங்க நினைக்குறோம்.. அதான் எம். இனிசியல்..” என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தான். பேராசிரியர் முகம் சுருங்கியது. வகுப்பில் அமைதி. அஜய்க்கு ஒரே சந்தோசம். தனக்குத் தோன்றிய அந்த திடீர் கதையை நினைத்து சிரிப்பை அடக்கமாட்டாமல் தலையைக் குனிந்து நின்றான். “சரி உட்க்கார்” என்றவர் அதன் பிறகு அவனிடம், கல்லூரி முடியும் வரை, ஒரு சிறு மரியாதையோடு நடந்துகொண்டதாக பலரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்வான் அஜய்.

சனிக்கிழமை கிரவுண்டிற்குப் போனபோது அனேகமாக எல்லோருமே வந்துவிட்டிருந்தனர். எப்படியும் டீமில் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்து அவசரமில்லாமல் பொறுமையாக கிளம்பிப் போனவனிடம் “என்னய்யா இதான் டைம்மா. ஆபிஸுக்குத்தான் டைம்க்கு வர மாட்றீங்க விளையாடக்கூடவா.. இந்தா பவுலிங் போடு“ எனப் பந்தைக் கொடுத்தார் மேனேஜர்.

அஜய் சற்று குழம்பித்தான் போனான். “எப்போதும் தன்னைப் பார்த்துதானே குழம்புவார்கள் இது என்ன புதுக்கதை” என்று நினைத்துக்கொண்டே சுற்றி மற்றவர்களைப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய கிண்டல் மறைந்திருந்தது. இந்த தொப்பையை வைத்துக்கொண்டு ‘என்னத்த போடப்போறான்’ என்பதைப்போல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேனேஜர் பவுலிங் போடச் சொன்னது கேப்டனுக்கு. ஒருவேளை நன்றாகப் போட்டால் டீமில் எடுத்தாலும் எடுப்பார்களோ என்று யோசித்துக்கொண்டே ‘ரன்அப்பை’ சரி பார்த்தான்.

பாஸ்ட் பவுலரா” என்று மேனேஜர் கேட்டார். “

ஆமா சாஜி, ரைட் ஆர்ம் மீடியம் பார்ஸ்ட்”, “ம்க்கும்” என்று யாரோ சொன்னதுபோல் அவனுக்கு கேட்டது.

முதல் பால் புல்டாஸானது. ஆனால வேகம் நன்றாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையாய்ப் பார்த்தார் மேனேஜர். அடுத்த பாலைப் போடத் திரும்பியவனிடம். “ஸ்பீட் ஓகே.. பட் குட் லெந்த்ல போடு” என்றார்.

அடுத்தப் பந்து ‘யார்கராய்’ விழுந்தது. சரியாக கேப்டனின் டோவில் அடிக்க அவர் வலியில் காலை உதறிக் கீழே விழுந்தார். “சூப்பர்.. சூப்பர் அஜய்” என நெட்ஸுக்கு வெளியே இருந்து மேனேஜர் கத்துவது கேட்டு அஜய் உற்சாகமானான். “செம யார்க்கர்டா” என டீமில் மற்றவர்களும் பாராட்டினர்.

அடுத்த இரண்டு பந்துகளும் யார்க்கர்ஸ். கேப்டனால் ‘ப்ளாக்’ மட்டுமே செய்ய முடிந்தது. சாஜி இம்ப்ரஸ் ஆகிவிட்டார். ஒரு ஓவர் போட்டுவிட்டு அடுத்தவரிடம் பந்தைக்கொடுத்தவனைப் பார்த்து “வெல் டன் டா.. ஆறு பாலும் கன்டினியஸா எப்படி யார்க்கர் போட்ட.. ஐ எம் இப்ரஸ்ட்.. இந்த வருசம் மேட்ச்சல நீ இருக்க.. ரெடியாயிக்க” என்று சொல்லிவிட்டு கேப்டனிடம் பேசப் போனார்.

அஜய் வாயெல்லாம் பல்லாக சிரித்தாலும் உள்ளூர ஒரு சின்ன உறுத்தல் இருப்பதை வெளியே காட்டமல் இருக்க சற்று சிரமப்பட்டான்.

ஆறு பாலும் எப்படிடா யார்க்கர் போட்ட..?” அவனுக்கே தெரியாது என்பதுதான் உறுத்தலுக்குக் காரணம். பந்தைப் போட ஓடிவரும்போது குட் லெந்தில் போடவேண்டும் என்று குட் லெந்த் இடத்தையே பார்த்துக்கொண்டு ஓடிவந்தாலும் பந்து கையை விட்டு வெளியே போய் யார்க்கராகத்தான் விழுந்தது. அடுத்த பால் நினைத்த மாதிரி போடுவோம் அதற்கு அடுத்தபால் போடுவோம் என்று ஒரு ஓவர் முழுவதும் யார்க்கர்தான்.

எது எப்படியோ மேனேஜர் ஹேப்பி. டீமில் இடம் கிடைத்ததால் அவனும் ஹேப்பி.

அதன் பிறகு அணியில் முக்கிய நபராகிப் போனான் அஜய். டீமில் சேர்ந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. நிறையத் தோல்விகள், சில வெற்றிகள், சின்ன சின்ன சண்டைகள், பல விலகல்கள், புதியவர்கள் வருதல் என பல விசயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அஜயின் பவுலிங் பற்றின சந்தேகங்களும் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருந்தன என்பதில் அவனுக்குத் வருத்தம். அது நன்றாக விளையாடாதபோது அதிகமாகும், நன்றாக விளையாடும்போது அதைவிட அதிகமாகும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு எப்போதும் ஒரே மாதிரியான சந்தோசத்தையும் துக்கத்தையும்தான் விளையாடும் எல்லோருக்கும் தரும். ஒரு சர்வதேச வீரருக்கும் அஜய் போன்று ஜாலியாக விளையாடுபவருக்கும் ஒரே வித்யாசம் அவர்களின் விளையாட்டில் இருக்கும் தரம் மட்டும்தான். மற்றபடி சந்தோசம், துக்கம், ஏமாற்றம், சோர்வு எல்லாமே விளையாட்டை நேசித்து விளையாடும் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அஜய் விசயத்தில் இது அப்படியே நேர்மாறாக நடப்பதாக நினைத்தான்.

ஒரு மேட்ச்சில், ஒரு இடைவெளிக்குப் பிறகு,பவுலிங்கை ஓப்பன் செய்தான். முதல் பந்தை எதிர்கொள்ள நின்றவர் நல்ல உடற்கட்டுடன் இருந்தார். அடிக்க வசதியாக போட்டால் எல்லா பந்துகளையும் சிக்ஸர்தான் அடிப்பார் என்பதுபோல் இருந்தது தோற்றம். அஜய் அவருக்கு “மிடில் அண்ட் ஆப்பில்” போட வேண்டும் என்று முடிவு செய்து ஓவரின் முதல் பந்தைப்போட்டான். ஆனால் கையிலிருந்து பந்து வெளியேறும்போதே தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டது. உள்ளங்கையில் இருந்து போகையில் அது லெக் ஸ்டம்பை நோக்கி போகப்போகிறது என்று தெரிந்தததால் முழுவதுமாக போவதற்குள் நான்கு விரல்களாலும் ஒரு சிறு அழுத்தம் கொடுத்தான். பவுன்ஸ் ஆகும் என்று நினைத்து அப்படிச் செய்தான். பந்து அவன் முதலில் நினைத்தது போலவே லெக் ஸ்டெம்ப் லைனில் விழுந்தது. ஆனால் அவன் எதிர்பாராதவிதமாக ஸிவிங் ஆகி உள்ளே வந்து ஆப் ஸ்டம்பைத் தட்டியது. அஜையை போலவே பேட்ஸ்மனும் அதை எதிர்பார்க்கவில்லை முதல் பந்திலேயே போல்ட். போல்ட் எடுத்ததை நம்பமுடியாமல் வாய்விட்டுச் சிரித்தான் அஜய். அவன் மட்டுமல்ல டீமில் இருந்த எல்லோருமே சிரித்தார்கள். எல்லோருக்குமே அது மோசமான பந்தாக, பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ போகவேண்டியது, தப்பித்தது என்று தெரிந்திருந்தது.

அஜய் அந்த மேட்ச் முழுவதும் நன்றாகப் பந்து வீசினான். இன்ஸிவிங், அவுட்ஸிவிங் என பந்து இரண்டு பக்கமும் திரும்பியது. “மேட்” புதிதாக இருந்ததும் ஒரு காரணம். அவனின் பந்துவீசும் முறையும் ஒரு காரணம். பந்து வீச ஓடத் தொடங்கும் முன் ஒரு குதி குதித்துவிட்டு ஸ்டம்ப் அருகில் வரும்போது கழுத்தை இடப்பக்கம் திருப்பி கையை வலதுபக்கமாய் சாய்த்து வீசுவான். பந்து தரையில் குத்தியவுடம் பேட்ஸமனை நோக்கித்தான் வரும். வெளியே போகாது. ஆனால் அன்று இரண்டு பக்கமும் எப்படி திரும்பியது என்று வழக்கம்போல் அவனுக்கே தெரியவில்லை. யூடியூப்பில் எப்படி ஸிவிங் செய்வது என்று பார்த்துவிட்டு வந்துபோட்ட போதெல்லாம் கோட்டைக் கிழித்து அதன் மேலேயே போவதுபோல் நேராக போகும், இன்றைக்கு என்ன ஆனது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அதை அருகில் இருந்து கேட்டதுபோல் கேப்டன் “உன் கன்ட்ரோல்லதான் இருக்கா இல்லா அதுவா ஸிவிங் ஆகுதா” என்று கேட்டார். சிரித்துச் சமாளித்தாலும் உள்ளூர எரிச்சல் அடைந்தான். “அது என்ன.. தன்னிடம் மட்டும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி சந்தேகமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி போட்டால் என்ன.. நன்றாக போடுகிறேனா இல்லையா… இவர்கள் பவுலிங் போடும்போதோ பேட்டிங் ஆடும்போதோ நான் இப்படிக் கேட்டால் ஒத்துக்கொள்வார்களா” மனதிற்குள் குமைந்தான். அவரிடம் எதுவும் கேட்க்கவில்லை.

அப்போட்டிக்குப் பிறகு அவன் நன்றாக விளையாடினால் மற்றவர்களின் குறைகளைக் குத்திக்காட்ட ஆரம்பித்தான். டீமில் எப்போதுமே நன்றாக விளையாடியவர்கள் பேசும்போது திரும்ப பேசமாட்டார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையும் விடாமல் பழித் தீர்த்துக்கொண்டான் அஜய். அவர்களும் பதிலுக்கு அவன் ‘பார்ம்அவுட்’ ஆன சமயங்களில் பவுலிங்கை ஓப்பன் செய்யவிடாமல் பந்து நன்றாக தேய்ந்து பழையதானவுடன் கொடுப்பார்கள். எப்படிப் போட்டாலும் பேட்ஸ்மனின் முன் போய் நின்று “ம்ம்.. அடி” என்கும்.

*

அஜய் கிரவுண்டிற்கு போனபோது யாரும் இல்லை. ‘கிட் பேக்கை’ வைத்துவிட்டு ‘ஸ்ட்ரெச்’ செய்தான். கிரவுண்டை சுற்றி ஒரு முறை ஓடி வந்தான்.

நன்றாக வார்ம் அப் ஆகவேண்டும். இத்தனை நாள் போடாத வேகத்தோடு போடவேண்டும்” போன மேட்ச்சில் நான்கு ஓவரில் முப்பத்தி ஏழு ரன்கள் கொடுத்ததிற்கு டீமில் சீனியர்கள் கிண்டல் செய்ததுதான் அவனின் இந்த ஆவேச பயிற்சிக்கு காரணம்.

டாஸில் வென்று அஜய் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கேப்டன் உள்ளே போவதற்கு முன் பேசும்போது இன்னைக்கு “மேட் புதுசு போட்ருக்காங்க பந்து நல்லா வரும். ஒழுங்கா போடலன்னா அடியும் செமயா வாங்குவோம்.. அதுனால சேசிங் எடுத்தேன்.பவுலர்ஸ் ஒழுங்கா போடுங்க” என பவுலர்களைப் பார்த்து பேசினார்.

அஜய் ஆர்வத்தோடு சரி என்று தலையாட்டிவிட்டு எல்லோருக்கும் முன் உள்ளே ஓடினான்.

கீப்பரும், கேப்ட்டனும் பீல்டிங்கை செட் செய்தார்கள். எல்லோரையும் நிற்க வைத்துவிட்டு அஜையை பார்த்து, நீ தேர்ட் மேன் போ என்றார்கள்.

ஏமாற்றமாக இருந்தாலும் தேர்ட் மேன்னாய் நிற்பதால் அடுத்த ஓவர் போடச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் போய் நின்றான்.

ஆனால் அஜய்க்கு மேட்ச் முடியும்வரை ஓவரே தரவில்லை. அவனே இரண்டு முறைப் போய் கேட்ட பிறகும் “இரு வெய்ட் பண்ணு” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் இதுதான் முதல் தடவை அவனுக்கு பந்து வீச வாய்ப்பே கிடைக்காமல் போனது. முதல் பாதி முடியும்போது கிளம்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தான். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.

எதிரணியினர் இருபது ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு நூற்றி நாற்பத்தி ஏழு ரன்கள் எடுத்தனர்.

அஜய் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக ஆரம்பித்தனர். முதல் விக்கெட் ஆறாவது ஓவரில் விழுந்தது. ஸ்கோர் 36/1.

பின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன.

பவுலிங் தராததால் பேட்டிங் கிடைக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தான். யாரிடமும் எதுவும் கேட்க்கவில்லை. தந்தால் அவர்களாகவே தரட்டும் என்று காத்திருந்தான்.

பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் முடிவில் எழுபது ரன்கள் எடுத்தனர். இன்னும் அறுபது பந்துகளில் எழுபத்தி ஏழு ரன்கள் தேவை.

அஜய்க்கு ஓவர்கள் போக போக கோபமும் எரிச்சலும் அதிகமாகிக்கொண்டே வந்தன. ஒரு மேட்ச் முழுவதும் எதுவுமே செய்யாமல் வீட்டிற்குப் போவற்குப் பதில் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற கடுப்புடன் விக்கெட்டுகள் சீக்கிரம் விழ வேண்டத் தொடங்கினான்.

பதினைந்தாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. அதுவரை நன்றாக ஆடி வந்த கேப்ட்டன் அவுட்டானார். எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை மாறி அணி தடுமாறத் தொடங்கியது.

ஒரு வழியாக அஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. இருபதாவது ஓவர். அவனுக்குப் பின் ஒரு விக்கெட் இருந்தது. வெற்றி பெற பதினைந்து ரன்கள் தேவை. அனேகமாக மேட்ச் கையைவிட்டு போய்விட்டதுபோலத்தான்.

அஜய்க்கும் பெரிய நம்பிக்கை இல்லை. இப்படி வாய்ப்பு கிடைத்ததிற்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே நான் ஸ்ட்ரைக்கரில் போய் நின்றான். எதிர் முனையில் நின்றிருந்த சீனியர் எதுவும் இவனிடம் சொல்லவில்லை. ரிசல்ட் தெரிந்துவிட்டது என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். அஜய் க்ரீசிற்குள் நன்றாக பேட்டை தள்ளி வைத்து நின்றுகொண்டான். போன மாதம் ஒரு முறை ‘மேன்கேட்’ முறையில் அவுட்டானதை அவன் மறக்கவில்லை. முதல் பந்தில் ஒரு ரன் ஓடினார்கள். ஓவரின் இரண்டாவது பந்தை அஜய் எதிர்கொண்டான். ‘ஷாட் பிட்ச்’ பால்தான். ஆனால் பேட்டை தூக்கி பந்திற்கு வருவதற்குள் பந்து எழும்பாமல் வந்து காலில் அடித்து ‘ஷார்ட் பைன் லெக்கிற்குப்’ போனது. ஒரு ரன் ஓடினார்கள். நல்லவேளை ‘எல்பிடபில்யூ’ ஆகவில்லை என்று நினைத்துக்கொண்டான். அடுத்த ஒரு ரன் எடுத்தார்கள். மூன்று பந்துகள் மீதமிருந்தன. முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள். வெற்றிக்கு இன்னும் பன்னிரெண்டு ரன்கள் வேண்டும்.

அஜய்க்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்றிருந்தது. ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொள்வதற்கு முன்னால் வெளியே நிற்கும் தன் அணியினரைப் பார்த்தான். எல்லோரும் இவனையே பார்த்துகொண்டிருந்தார்கள்.

பவுலர் ஓடிவரத்தொடங்கினார்.

அஜய் ஒரு முடிவெடுத்தவனாய் இறங்கி வரத் தொடங்கினான். பந்து வரும்போது ஏறக்குறைய பிட்ச்சின் நடுவில் இருந்தான். ஹெல்மட் போடாமல் அவ்வளவு தூரம் இறங்கி ஆடுவது ஆபத்தான விசயம். வெறி வந்தவன்போல் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்டை லாங் ஆன் திசையை நோக்கிச் சுத்தினான். பந்து அவன் பேட்டில் பட்டவுடன் ரன் எடுக்க ஓடியவன் இரண்டாவது ரன் ஓடி முடித்தபோதுதான் பந்து பவுண்டரிக்கு போனதைப் பார்த்தான்.

வெளியே நின்றுகொண்டிருந்த அணியினர் உற்சாகமானார்கள். “கமான் அஜய்.. யு கேன் டூ யிட்“ என்று கத்தினர்.

அடுத்தப் பந்தையும் அதே மாதிரி இறங்கி வந்து எதிர்கொண்டான் அஜய். இந்த முறை ‘லாங் ஆப்’ திசையில் நான்கு ரன்கள். திடீரென்று பரபரப்பானது ஆட்டம். வெளியே இருந்து “கமான் அஜய் கமான் அஜய்” என்று கத்தத்தொடங்கினர். எதிரணியினர் பவுலரிடம் சென்று பேசினர்.

அவனுக்கு நெஞ்சு பட பட என்று அடித்தது. அவன் காதெல்லாம் அடைத்தது சுத்தி என்ன நடக்கிறது என்று புரியாததுபோல் ஒரு மெல்லிய நடுக்கத்தோடு அடுத்தப் பந்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கத்தொடங்கினான். இந்தப் பந்தையும் இறங்கி ஆட வேண்டாம், எப்படியும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியேதான் போடுவார்கள் நின்ற இடத்தில் இருந்தே அடிப்போம் என்று முடிவு செய்தான். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த “சீனியர், என்னடா பண்ற.. ட்ரை பண்ணு” என சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.

கடைசி பந்தைப் போட பவுலர் ஓடி வந்தார். ஒரு பால். நான்கு ரன்கள். அதுவரை எவ்வளவு நன்றாக விளையாடினாலும் கிண்டலாகவும், சந்தேகத்தோடும் பார்த்து வந்த அணியின் முன் நிரூபிக்க, தனக்கு பவுலிங் மட்டுமல்ல. பேட்டிங்கும் வரும் என்று சொல்ல ஒரு வாய்ப்பு.

பவுலர் பந்தை வீசினார். கடைசி நொடியில், இதையும் இறங்கி வந்தே ஆடலாம் என்று முடிவு செய்து ஒரு அடி எடுத்து வைத்தான். அதற்குள் பந்து வந்துவிடவே முன்னேயும் போக முடியாமல் பின்னாலும் வர முடியாமல் இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு எந்த திசையில் அடிப்பது என்பதையும் முடிவு செய்ய நேரம் கிடைக்காமல் அப்படியே நின்றுவிட்டான். நான்காவது, ஐந்தாவது பந்துகளை இறங்கி வந்து ஆடியதால் பவுலர் பிட்ச்சின் நடுவிலேயே பந்தைக் குத்தி பவுன்சர் போட்டார். பேட்டை விட்டிருந்தால் எட்ஜ் வாங்கிக் கூட தேர்ட் மேன் திசையில் பவுண்டரி கிடைத்திருக்கும்.

பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது.

நான்கு ரன்கள் வித்யாசத்தில் தோல்வி. அஜயின் கண்கள் கலங்கின. எல்லோரும் வந்து கை கொடுத்தார்கள். நன்றாக முயற்சி செய்தான் என்றார்கள். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சீனியர், அம்பயர்கள், எதிரணியினர், அவனின் அணியினர் என எல்லோருமே பாராட்டினார்கள். அவனுக்குத்தான் மனம் ஆறவேயில்லை. “நல்லா ஷார்ட்டாதான வந்தது .. டீப் ஸ்கொயர் லெக்ல ஒரு புல் ஆடுவீங்கன்னு நினச்சேன்.. ஏன் மிஸ் பண்ணீங்க” எதிரணி விக்கெட் கீப்பர் தோளில் தட்டி கேட்டுவிட்டுப் போனார்.

எப்படி அந்தப் பந்தை விட்டேன்னு தெரியல..” என்று தன் அணியில் ஒவ்வொருத்தரிடமும் புலம்பினான். “எல்லோரும் பரவால்ல விடு…. நல்ல ‘ட்ரை’தான்” என்றனர். ஒருவர் கூட வழக்கமான கிண்டலைச் செய்யவில்லை. அதில் ஒரு சிறு சந்தோசமடைந்தாலும் அவனுக்கே முதன் முறையாக அவன் மேல் சந்தேகம் வந்தது.

தான் நினைத்தபடி ஒரு நாளும் தன்னை விளையாட அனுமதிக்காதா இந்த விளையாட்டு”. என்றிருந்தது அவனுக்கு.

கிளம்பும்போது என்றுமில்லாத அளவு சோர்வாய் உணர்ந்தான் அஜய்.