சிறப்பிதழ்

மைசூரில் கும்பமுனி

சோழகக்கொண்டல்

nanjil_nadan_spl_issueபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை சேர்ந்தது. என்னோடு பசியைப் பகிர்ந்து கொள்வதற்கு ராகவன் சில மாதங்கள் தங்கி இருந்தான்.

அவனும் சென்ற பிறகு பசியின் சுயராஜ்யம்தான், ஒன்றும் பிரச்சினையில்லை. சில்க் இன்ஸ்டிடூடில் சம்பளமில்லாத கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை. கூடிய சீக்கிரத்தில் அதே வேலையை ஐயாயிரம் சம்பளத்துக்கு தருவதாக உறுதி சொன்னார்கள்.  ஜூனில் தீசிஸ் சமிட், வைவா எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்குப் போய் நான்கே நாட்கள். எங்கிருந்தோ அம்மா அறுநூறு ருபாய் பணம் புரட்டி கொடுத்தார்கள். இப்போது ஆகஸ்ட் இறுதி,  சாப்பாட்டிலிருந்து சப்பாத்திக்கு இறங்கி, ராகி களி உருண்டையும் கீரை சாம்பாரும் என்றானது இரண்டு மாதம் வரை நீடித்தது. பொருளாதாரம் அதற்கும் இடம் கொடுக்காததால் மாற்று வழி கண்டுபிக்க வேண்டியதாயிற்று. வழியும் இருந்தது.

ஸ்ரிராம்புரா சில்க் இன்ஸ்டிடுட் ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி குதித்தால் குடகு ரோட்டில் இருநூறடி தூரத்தில் மங்களூர் பேக்கரி. ஒரு பெரிய பாக்கெட் பிரெட்டும் கால் லிட்டர் தயிரும் பதினைந்து ரூபாய். இரண்டு நாட்களுக்கான உணவு அதுதான். வாரச்செலவு நாப்பத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை பேக்கரி திறப்பதில்லை என்பதால் மனம் பசியை நினைவுகூர்வதில்லை. சில வாரங்களில் இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள்கூட வருவதுண்டு. சும்மா சொல்லக்கூடாது ஃப்ளுரைடு தண்ணீர்தான் ஆனாலும் அற்புதமான சுவை.

எந்த சூழ்நிலையிலும் செலவு செய்துவிடக் கூடாது என்று பாஸ்போர்ட் வாங்குவதற்காக தபால் ஆபீசில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயோடு திருச்சிக்கு சென்ற கனவுப்பயணம் அடுத்தது. திருச்சி மரக்கடையில் போய் இறங்கும்போதே மணி காலை ஒன்பதரையைத்  தாண்டி இருந்தது. சாலையின் எதிர்புறத்தில்தான் பாஸ்போர்ட் ஆபீஸ். கையில் ஃபயிலோடும் இன் பண்ணிய சட்டையோடும் என்னப் பார்த்த ஒரு நீல கட்டம்போட்ட லுங்கி கட்டிய நடு வயதுக்காரர் கேட்டார்.

“என்ன தம்பீ பாஸ்போர்ட் அப்ளிகேசனா?”

“ஆமாண்ணே”  நான்.

“ஆபீஸ் பத்து மணிக்கிதான் தெறக்கும். எல்லா டாகுமெண்டும் இருக்கா?”

“இருக்குண்ணே”.

“மூணு ஐடி ப்ரூப் ரெண்டு செட்டு அட்டெஸ்ட்டு காப்பியும் வேணுமே”

எனக்கு குப்பென்று வேர்த்தது. கையில் காசும் இல்லாத வேலையும் இல்லாத ஒரு ஜனநாயக இந்தியாவின் குடிமகன் மூன்று ஐடி ப்ரூஃப்களுக்கு எங்கே போவான்? எனக்கு வேர்க்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவர்  போலச் சொன்னார்.

“கவலைப்படாதே தம்பீ! இங்கதான் நம்ம வக்கீல் ஒருத்தர் இருக்கார். டாகுமெண்ட் ஒன்னு கம்மியா இருந்தாலும் பிரச்சினையில்லை, அவரே சப்போர்டிங் டாகுமெண்ட் ரெடிபண்ணி, பேப்பர்லாம் சரிபார்த்து அட்டேஸ்டேசன் போட்டு குடுத்திடுவார்” என்றார்.

எனக்கு நம்பிக்கையில்லை. உள்ளே எதுவுமே சொல்லாமல் வாங்கிக் கொள்வார்கள் என்று அவர் சொன்னதை கேட்டதும் இந்தியக்  குடியரசின் உள்குத்து நிர்வாகங்களை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.  ஆனால் அவர் அடுத்த பாணத்தையும் தயாராக வைத்திருந்தார்.

“அம்பது ரூபாதான் தம்பி பீசு”.

சுதந்திரத்தை அனுபவிக்கும் சுயநல தலைமுறையின் சொட்டு ரத்தமாவது எனக்குள்ளும் இருக்குமல்லவா? சரி போய்த்தான் பார்போமே. இன்னொரு ஐடியோடு வருவது இன்றைக்கு சாத்தியமில்லை. ஐம்பது ருபாய் தானே.

சேர்ந்தார்போல் இருக்கும் இரண்டு மூன்று மரக்கடைகளுக்கு பின்புறத்தில் ஒரு நுண்சந்து, இருப்பதே தெரியவில்லை. நடை வண்டிகள் நான்கைந்து தரையில் சக்கரம் ஊன்றியபடியும் தலைகுப்புற கவிழ்த்தும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. கிழக்கிலிருந்து நுழைந்தால் வலதுபக்கம் மூன்றாவது கடை. பச்சைநிற நைலான் பேப்பர் விரித்த இரும்பு மேசைக்கு பின்னால் வெள்ளை சட்டைபோட்ட கருப்பான ஆள். உடம்பு தடிமன் இல்லாவிட்டாலும் தொப்பை இருந்தது. நான்கைந்து மர ஸ்டூல்கள், எல்லாம் நிரம்பி இருந்தன. சனிமூலையில் ஒரு வெள்ளை மானிட்டர் கொண்ட கம்ப்யூட்டர். உடம்பின் எல்லா பக்கங்களிலும் ஊக்கு சொருகி சேலைகட்டிய இளம்பெண் ஒருத்தி மூங்கில் பிளாச்சு மாதிரி தட்டையான உடம்போடு உட்கார்ந்து அவசரமாக எதையோ ‘தட் தட்’ என்று டைப் அடித்துக்கொண்டிருந்தாள்.

நீலகட்டம் லுங்கி வணக்கம் வைத்ததிலேயே தெரிந்தது வெள்ளை சட்டைதான் வக்கீல் என்று. இல்லையென்றாலும் கண்டுபிடிப்பதொன்றும் அத்தனை கடினமாயிருந்திருக்காது.

“டாகுமென்ட்ஸ் குடுங்க” என்ற வெள்ளை சட்டை அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை. நீல லுங்கி எப்போது போனார் என்றே தெரியவில்லை. மளமளவென்று வேலை மும்முரமாக நடந்தேறியது.

கிரீன் டிம்மி தாளில் ஒரு பக்கத்திற்கு பத்திர எழுத்தில் எதையோ எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட்டார்.  இரண்டுபக்க பிரிண்ட் அவுட் பேப்பரை கொண்டுவந்து நீட்டினாள் அந்த கம்பியூட்டர் ஒல்லிப்பெண். எனக்காகத்தான் இவ்வளவு நேரமாக டைப் அடித்துக்கொண்டிருந்தாளா? நான் வந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காதே. ரெடிமேட் டாகுமென்ட் தானே பெயரை மட்டும் மாற்ற எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது.

எல்லாம் முடிந்து பின் பன்னி கொடுத்தாள். ஐம்பது ரூபாயை நீட்டினேன்.

“இன்னும் இருநூறு ரூபாய் குடுங்க” என்றாள்.

“அம்பது ரூபா தானே பீஸ்னு சொன்னாங்க? ”  கோபம் கண்களை மறைத்தது எனக்கு. யார் கேட்டது இந்த சேவையை?

“அவர் பீஸ் அம்பதுதான் சார், கிரீன் டிம்மி, ஸ்டாம்ப், டைப்பிங் சார்ஜ் எல்லாம் இருக்குல்ல?” என்றாள். முறைத்தபடியே நின்றிருந்தேன்.

“அவர்கிட்ட பேசிக்கிங்க சார்” என்று சொல்லிவிட்டு பணத்தை டேபிளில் வைத்துவிட்டு மறுபடியும் அவள் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏம்ப்பா காலையிலேயே பிரச்சினை பண்ற?” வெள்ளை சட்டை.

“வேலை முடிஞ்சா பத்தாதா தம்பி? ரொம்ப கணக்கு பாக்குற” எனக்கு பின்னால் ஒரு சிவப்பு ஜரிகை கரை வெள்ளை வேட்டி.

சிலீரென்று கூசியது உடல். கொள்ளையடிப்பது நீங்கள் குற்ற உணர்ச்சி எனக்கு. பேசிப் பயனில்லை. பணத்தை வைத்து விட்டு வெளியே வந்து எதிர்புறம் இருந்த பாஸ்போர்ட் ஆபீஸ் வளாகதிற்குள் நுழைந்தேன். யாருமே இல்லை   வெறிச்சோடிக்  கிடந்தது.

“இப்போ ஆபீஸ் இங்கே இல்லை தம்பி உறையூருக்கு மாத்திட்டாங்க”  என்றபடி ஒரு ஆட்டோகாரர் நின்றிருந்தார்.

இதை இவ்வளவு நேரமா யாருமே சொல்லலையே. உறையூர் பாஸ்போர்ட் ஆபீஸ் வந்து சேர்ந்தபோது மணி பத்தேகால் ஆகிவிட்டிருந்தது.  அந்த வக்கீல் சர்டிபிகேட்டுக்கு எந்த பொருளும் இல்லை.

எண்ணூறு ரூபாய்தான் மிச்சமிருந்தது, இதைக்கொண்டு மீண்டும் அப்ளிகேசன் போடுவது இப்போதைக்கு சாத்தியமல்ல. சத்திரம் போய் பஸ் பிடித்தால் எப்படியும் மூன்று மணிக்குள் வீட்டிற்கு போய்விடலாம். மனம் ஏனோ சம்மதிக்கவில்லை. அம்மா மறுபடியும் யாரிடமாவது கடன் வாங்குவார்கள். திரும்பி மைசூர் போய்ச்சேரவே எப்படியும் இருநூறு காலியாகிவிடும். கொஞ்சநாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்தான். சாப்பிட்டு பழகிவிட்டால் பிறகு பிரட்டுக்கு திரும்புவது எப்படி? யோசனையிலேயே நடந்ததில் தில்லைநகர் வந்துவிட்டது. தில்லைநகர் என்றதும்  மக்கள் மன்றம் ஞாபகம் வந்தது. புத்தகக் கண்காட்சி இருக்குமே என்று ஒரு சபலம். ஒவ்வொருமுறை அங்கே போகும்போதும் வேடிக்கை பார்ப்பதற்கான பொருளாதாரம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

முப்பதடி நடந்ததும் மஞ்சள் போர்டுகள் கண்ணில் பட்டன. புத்தகக் கண்காட்சிதான். பொருளியல் கணக்குகள் எல்லாம் மூளையில் இருந்து ஒரு புகைமூட்டம் போல கலைந்துவிட்டது. எந்த யோசனையும் இல்லை. ஆடிப் பஞ்சத்து நாய் அடுக்களையில் நுழைந்தமாதிரி பட்டென்று பாய்ந்து விட்டேன். ‘இந்தியா காந்திக்குப் பிறகு’ இரண்டு பாகங்கள், ஒரு ஜே கிருஷ்ணமூர்த்தி. எத்தனையோ புத்தகக் கண்காட்சிகளில் எடுத்து எடுத்து தடவி புரட்டிப் பார்த்து வைத்துவிட்டுப்போன நாஞ்சில்நாடன் கதைகள் தன்னிச்சையாக ஏறி அமர்ந்திருந்தது கைகளில். இருளடைந்த கண்களோடு புத்தக அடுக்கை நெஞ்சில் தாங்கியபடி நான் நடந்துவந்த காட்சி எத்தனை பரிதாபகரமாக இருந்திருக்க வேண்டும் என்பது, அந்தக் கடையின் விற்பனையாளர் என்னைப் பார்த்த பார்வை நினைவுக்கு வரும்போதெல்லாம் தோன்றுகிறது. வெளியே வந்ததும் எதிரிலேயே புரோட்டாக்கடை. இனி எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் பரவாயில்லையென்று புகுந்துவிட்டேன்.

*****

கொள்ளிடம் பாலத்தைத் தாண்டும் வரையிலும் பதைபதைப்பாகவே இருந்தது, திருச்சிவரை வந்துவிட்டு வீட்டிற்கு போகவில்லையே என்று.  பஸ்ஸில் வரும்போதே புத்தகத்தை புரட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் பஸ் பயணத்தில் படிப்பதில்லை என்பதால் எடுத்து எடுத்து பார்த்தபடியே இருந்தேன். பயணக்களைப்பு, தூக்கம் எனக்கு முன்னாலேயே அறைக்கு வந்து காத்திருந்திருந்தது. எங்கிருந்தோ விழுவதுபோல கனவு, திடுக்கிட்டு எழுகையில் நன்றாக விடிந்துவிட்டது. ஏழு மணி இருக்கும். இன்ஸ்டிடூட் வாசலிலேயே இருக்கும் கண்ணன் நாயர் கடையில் மூன்று சப்பாத்திகள் ஒரு சாயா. ஆபீஸ்க்கு போனால் பார்வை எதிலுமே ஒட்டவில்லை. வெளியே லேசாக மழை தூற ஆரம்பித்தது. நாஞ்சில்நாட்டு சாரல் மனதில் வட்டமடித்துக்கொண்டே இருந்தது. நேற்று பெய்த மழையில் ட்ரான்ஸ்பார்மர் புகைந்து கரண்ட் கட். கம்ப்யூட்டர் இயங்க வழியில்லை. கிளம்பி வந்துவிட்டேன். படுக்கை மேலேயே இருந்தது நாஞ்சில்நாடன் கதைகள்.

அவரைப் பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் படித்திருந்தாலும், அவர் எழுத்து இது வரையிலும் ஒரு தூரத்து கனவு மட்டுமே. முசிறி நூலகத்தில் ஏதோ பருவ இதழில் ஒரு கதை படித்ததாய் ஞாபகம், எதுவும் உறுதியாய் நினைவில்லை. புத்தகத்தைத் திறந்தேன் ‘விரதம்’ முதல் கதை. சிரித்துக்கொண்டேன். கிளம்பும்போது ஆபீசில் யாரோ கேட்டார்கள்,

“என்ன ஸ்பெசல் ஃபூட் இன்னைக்கு?”

“நத்திங் ஸ்பெசல்”. எதுவுமே இல்லாததன் சிறப்பை எப்படித்தான்  சொல்வது? சில வைராக்கியங்களையும் எச்சமும் படிக்கையில் சிரித்துக்கொண்டேதான் இருந்தேன்.  ஆனால் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது. ‘உப்பு’ கதைக்குள் வருவதற்குள்ளாகவே நாஞ்சில் மொழி இயல்பாக கரைந்துவிட்டது எனக்குள். பழையாற்றங்கரையிலிருந்து பொன்னாற்றங்கரைக்கு அரூபமாக எழும் ஒரு வரப்பில் தெற்கு நோக்கித் தனியே நடக்கிறேன். எங்கோ நீர் சுருண்டு விழும் ஓசை கேட்கிறது. ஜன்னலுக்கு வெளியே கவனிப்பாரின்றி பெய்யும் மழையிலிருந்து எழுந்துவந்து அறையை நிறைக்கிறது சொக்கன் கொறிக்கும் வருகடலையின் வாசனை.

மைசூருக்குத் திரும்பி வந்து ஒருவாரம் வரை கையில் பணம் தாக்குபிடித்தது. பிரட்டும் தயிரும் இப்போது சிரமமாயிருக்கவில்லை. முகம் சுளிக்காமல் பசியைப் பகிர்ந்துகொள்ள புத்தகங்களை விடவும் வேறு துணை அமையாது. பசியின் கொடுக்குகள் பக்கங்கள் தோறும் வந்து கொட்டியபடியே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் புறக்கணிப்பு, உணவைத் தொடர்ந்தபடியே இருக்கும் அவமானங்கள்.  நாஞ்சிலார் உணவையோ பந்தியையோ பற்றி விவரிக்க ஆரம்பித்தாலே மனம் கிடந்து துடிக்கிறது, என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு. பசியை பகிர்ந்து தருவதில் அப்படி என்னதான் ஆனந்தமோ இவருக்கு என்று சமயத்தில் கோபமாகக்கூட வரும்.

“அவசரகால நிவாரணமாக செப்பனிடப்பட வேண்டிய ஒட்டிய வயிறுகள்” என்கிறார் ‘இருள்கள் நிழல்களல்ல’ கதையில். பண்டாரத்தோடு நானும் பந்தியையே வெறித்தபடிதான் உட்கார்ந்திருந்தேன். பிசைந்து கொடுக்கும் பிண்டம் கூட வந்து சேரவில்லை எனக்கு. படிக்கும்தோறும் பசியும் துக்கமும்  ஏறியபடியே இருக்கிறது, ஆனாலும் நிறுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு இரண்டேனும். கன்னடமும் தெரியாது வெளியில் எங்கே போவதென்ற இலக்கும் தோன்றவில்லை. இன்றைக்கு நாளைக்கென வேலை உறுதியாவதும் இழுத்தபடியே இருக்கிறது. இந்த வாரம் விடுமுறையும் காரணமாக சேர்ந்து ஞாயிறு வியாழன் அன்றே தொடங்கிவிட்டது. தொடர்ந்து ஐந்தாவது ஞாயிறு இன்று.

நூற்றைம்பது ஏக்கர் அளவுக்கு பெரிய எஸ்டேட் கேம்பஸ்தான். ஆனாலும் பட்டுப்பூச்சிக்கு உணவாகப் போடும் மல்பரி தவிர வேறு எதுவும் இல்லை.  சில இடங்களில் இருந்த கொய்யா சப்போட்டா மரங்களிலும் பிஞ்சும் இல்லாமல் பழமும்  இல்லாமல் நடு காய்கள். கடிக்கவும் முடியவில்லை ஒரே துவர்ப்பு. முதிர்ந்த மல்பரி மரங்களில் கருஞ்சிவப்பு நிறத்தில் சடை சடையாய் பழங்கள். இதை சாப்பிடலாமா என்று யோசனை, நிச்சயம் விஷமாக இருக்காது. ஒரு நம்பிக்கையில் பறித்து சப்பி இழுத்தேன். புளிப்பும் இனிப்பும் கலந்த ருசி, மயிர் கூசியது. நாஞ்சில்நாடன் கதைகளை மட்டும் இன்றைக்கு படிக்கச்கூடாது என்று உறுதியாக இருந்தேன். எச்சில் விழுங்கும்போது தொண்டையில் ஒரே வலி. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சும்மா இருக்க முடியவில்லை. விலாவில் சுண்டி இழுப்பது போன்ற வலி பசியின் சத்தம் வெளியே கேட்டது. கல்பெஞ்சில் பக்கத்திலிருந்த புத்தகம் காற்றில் படபடத்தது. கும்பமுனி சிரிப்பது போல இருந்தது. நான் இடலாக்குடி ராசாவும் இல்லை எனக்காக கண்ணீர் வடிக்கிற சித்தியும் யாரும் இங்கில்லை என்று சீறினேன். முகம் வாடிப்போயிற்று அவருக்கு.

“சரி பாட்டா, கோச்சுக்காத” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை பிரித்தேன். மனம் ஆயிரம் வழிகளில் உணவுக்கான திட்டங்களில் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. அரைமயக்கத்திலும் இரவு நெடுநேரம் தூக்கத்துகாக போராடிகொண்டிருந்தேன். சட்டென்று சாமுண்டீஸ்வரி கோயில் ஞாபகம் வந்தது. மைசூருக்கு வந்த புதிதில் அங்கே போயிருந்தபோது அன்னதான மண்டபம்  பார்த்திருக்கிறேன். உடம்பில் ஒரு புது பலம் வந்தது வயிறு நிறைந்தது போன்ற உணர்வு.

காலை ஏழுமணிக்கெல்லாம் குளித்து கிளம்பியாயிற்று. சாமுண்டீஸ்வரி கோயில் இருக்கும் சாமுண்டிமலை மைசூருக்கு வெளியே கிழக்கில், நான் இருக்கும் ஸ்ரிராம்புரா புறநகர் மேற்கு. எப்படியும் பத்துபன்னிரண்டு கிலோமீட்டர்கள் இருக்கும். ட்ராவல் பேக்கை கொட்டி உலுக்கியதில் தேறியது மூன்றுரூபாய் சில்லறை மட்டுமே. இரண்டு பஸ் ஏறவேண்டும் எப்படியும் பதினாறுரூபாய் தேவை. தோராயமாக கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மைசூரில் எங்கிருந்து பார்த்தாலும் மலை தெரியும், வழிதவறிட வாய்ப்பில்லை. நடக்க முடியாமல் கால்கள் பின்ன ஆரம்பித்தது, வழியெங்கும் கடைகளில் வாழைத்தார்கள் தொங்கின. மூன்று ரூபாய்க்கு கிடைக்குமா என்பதுதான் சந்தேகமாக இருந்தது. காசு போதவில்லை என்று அதிகம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற தயக்கம். தொடர்ந்து அவமானத்திற்கான அத்தனை வாக்கியங்களையும் மனம் நாஞ்சில் கதைகளில் இருந்து அசைபோட்டு, இது நடக்குமோ அது நடக்குமோ என்று எல்லா திசைகளும் பார்த்தப்படியே இருந்தது. மனமெங்கும் ஒருவித குறுகுறுப்பும் குற்ற உணர்ச்சியும் இருந்துக்கொண்டே இருந்ததால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

படியேறும் வழியில் நந்திப்பாறையில் கரும்புசாறு விற்றுக்கொண்டிருந்தார்கள். ‘விடுவிடு’வென நிற்காமல் படிகளில் தாவிக்கொண்டிருந்தேன். மலை உச்சிக்குப் போய் சேர்கையில் பத்துமணி இருக்கும். சுமாரான கூட்டம். அன்னதான மண்டபத்தை கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. ஆனாலும் அன்னதானம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.  தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நான்கைந்து சன்யாசிகள் மண்டப வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. ஓரளவுக்கு நிம்மதி. ஒருவேளை அது அவர்கள் வாடிக்கையாக தங்கும்  இடமோ என்று மீண்டும் ஒரு சந்தேகம். மண்டபத்தூணில் சிவப்பு எழுத்துக்களில் அறிவிப்பு, தினமும் பன்னிரண்டு மணிக்கு அன்னதானம் என்று. சமையல் வாசனையும் காற்றில் வந்தது. நிம்மதி. சன்யாசிகளும் மற்றவரும் உட்கார்ந்திருப்பதில் ஒரு வரிசை இருப்பதை தாமதமாகத்தான் கவனித்தேன். அதற்குள் ஒரு முப்பதுபேர் பேர் எனக்குமுன் வரிசையில் கூடிவிட்டார்கள்.

பன்னிரண்டுமணிக்கு மண்டப வாசல் திறக்கும்போது இருநூறுபேக்கு மேல் சேர்ந்துவிட்டிருந்தார்கள். மலைப்பாதை நந்திபாறைக்கு இறங்கும் இடம் வரையிலும் வரிசை நீண்டு நின்றது. எண்பதுபேர் வரை உட்காரும் ஹால். நான்கு வரிசைகளில் மடக்கி உட்காரவைத்து அகலமான எவர்சில்வர் தட்டு போடப்பட்டது. ஒரே நேரத்தில் நான்குபேர் சமயலறையிலிருந்து மூக்கன்களோடு சரேலென்று வெளியே வந்தார்கள். வந்தது கண்டேன் இட்டது கேட்டேன், அத்தனை வேகம். அச்சுவெல்லமும் தேங்காய்த் துருவலும் போட்ட பருப்பு பாயசம். சூடு பொறுக்க முடியவில்லை தொட்டுத் தொட்டு சப்பிப்பார்த்தேன். மீண்டும் மூக்கன்கள் வெளியே வருவது தெரிந்ததும்  தட்டோடு எடுத்து குடித்துவிட்டேன். குடல்வரை கொதித்தது. அவர்கள் சாப்பாட்டை வெட்டி வீசிய வேகத்தைப் பார்க்கையில் என்தட்டில் ஏதாவது விழுமா என்பது சந்தேகமாக இருந்தது. கொஞ்சம் விழுந்தது, பின்னாலேயே வந்தது இனிக்கும் சாம்பார். வயிறு கிழிபடுவதுபோல வலித்தது சாப்பிட முடியவில்லை. கண்கள் துரு உதிர்ந்து பிதுங்கித் திறப்பதுபோல இருந்தது.

வெளியே வந்ததும் நடக்க முடியவில்லை. பொங்கி வழியும் வேர்வை, கால்கள் சில்லிட்டன. மலைப்பாதையின் பக்கவாட்டு சுவற்றில் நல்ல நிழல். நீட்டிபடுத்ததும் ஒரு ஐந்து நிமிடத்தில் எல்லாம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. இன்னும் ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும், வயிறு காலியாயிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு. மண்டப வாசலைப் பார்த்தேன் ஒரு பத்துபேர் இருக்கும், அடுத்த பந்திக்காக நின்று கொண்டிருந்தார்கள்.  கடைசி ஆளாகப் போய் நின்றேன்.

“சவத்துக்கு இன்னும் பசி அடங்கலையோ?” என்ற குரல் கேட்டது முதுகுக்குப் பின்னால்.

வல் விருந்து

வாசு பாலாஜி

 nanjil_nadan_spl_issue           நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை’ பற்றி நீந்தி ‘சதுரங்கக் குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன.

            புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய புத்தகங்கள் கி.ராவுடையதும் நாஞ்சில் நாடனுடையதும். எழுத்துக்களால் கை குலுக்கிய நட்பு அது. நம்மை, நம் சுமைகளை, நம் சின்னச் சந்தோஷங்களை, வருத்தங்களை, இழப்புக்களை பகிர்ந்து கொள்ளும் எழுத்து அது.

            ’எழுத்து என்பது தன் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி, தன் சுயத்தைத் தேடும் முயற்சி’ என்று நாஞ்சில் நாடன் சொன்னாலும் அவரின் படைப்புகள் வாசகர்களையும் அந்த முயற்சிக்காழ்த்துவது மறுக்க முடியாதது. கதைகள், கட்டுரைகள், இலக்கியம், கவிதை என்று பல தளத்தில் நாஞ்சில் நாடனின் வீச்சு பரவியிருந்தாலும் எனக்கு கும்பமுனியும் கண்ணுவிள்ளையும் போதும். எனக்கென்றில்லை. ஒரு முறை கும்பமுனி கதைகளில் ஒன்றைப் படித்தாலே மனதிற்கு நெருக்கமாகி விடுவார்கள் இருவரும். கதை மொழி தரும் உவகை, கீரியும் பாம்புமாய் சீறியபடி அந்நியோன்னியமாய் கிண்டலும் வசவும், இவற்றோடு சிரிக்கச் சிரிக்க, மனம் கனக்க, சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் கேடுகளைச் சாடவென்று நாஞ்சில் நாடனின் முழுமையான படைப்புக்களாக நான் நினைப்பது கும்பமுனிக் கதைகள். மனம் சலித்த நேரங்களில் என்னை மீட்டெடுக்க நான் தஞ்சமடைவோர் கும்பமுனியும் கண்ணுவிள்ளையும்.

            பார்வதி சன்மான் கும்பமுனி கதைகளில் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காத ஒன்று.

      ”என்னவே, செத்த பொறவு அவிச்சு வச்சு கும்பிட்டு திங்கச்சிலே நான் இருக்கமாட்டம்ணுட்டு இப்பமே அவிச்சிட்டேரா?” என்றார் கும்பமுனி.

      ”ரெண்டும் ஒண்ணுதாலா!” என்றார் தவசிப்பிள்ளை.

இப்படித் தொடங்கி விருது படுத்தும் பாடு கும்பமுனியின் நாச்சவுக்கு சொடுக்கில் உச்சமாகும்.

”இலக்கியச் சுடர்னு ஒருத்தன் ஒண்ணரை மணிக்கூர் பேசுவான், அவன் முப்பது வருசத்துக்கு முந்தி படிச்சதை. சொளவால் புள்ளிப்புலியை அவனுக்க அம்மையாக்கும் அடிச்சு வெரட்டுனாண்ணு…எல்லாத்தையும் அவுத்து வீசிட்டு அப்படியே அம்மணமா ஓடிரலாம்னு இருக்கும்.”

           இதை நாம் எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்.

      குருடனுக்கு பார்வை வந்து போனாற்போல் கும்பமுனி பார்லிமெண்ட் மெம்பராகி குருட்டாம் போக்கில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகி மூன்றே மாதத்தில் அரசு கவிழும் அபாயத்தில் பதைக்கிற பதைப்பு ‘கவிழ்ந்தென்ன   மலர்ந்தென்ன காண்கதையில் அட்டகாசமாயிருக்கும்.

      ’நீ என்ன எழவைக் கண்ட? அரசாங்கம் கவுந்தா பார்லிமெண்டைக் கலச்சு மறு தேர்தல் வந்திரும்லடா? நான் வந்து மூணு மாசம்தானே ஆகீருக்கு. பென்சன் பத்தணும்ணா குறஞ்சது அஞ்சு வருசம் மெம்பரா இருக்கணும். இன்னும் ஒரு வீடு வேங்கல்லே, சொந்தமா காரு வாங்கல்லே, வடக்கு மலையிலே ஒரு தோட்டம் வாங்கல்லே, பேங்கிலேஎந்த டெபாசிட்டும் கெடையாது. பொறந்த நாளு கொண்டாடி பத்து அறுநூறு குதிரைப் பவும் சேக்கல்லே, நாக்கா மடத்திலே அஞ்சு ஸ்டார் ஓட்டல் கட்டல்லே….’

      வெறும் சிரிப்பும் சீண்டலுமல்ல கும்பனியும் தவசிப் பிள்ளையும். சாலாச்சி மீதான காதல் கை கூடாத கும்பமுனியைச் சீண்டிவிட்டு பரிதவிக்கும் கண்ணுவிள்ளையின் தவிப்பு சொல்லக் கூடாது. சீடனாக வந்த குரு காட்டும் அந்நியோன்னியம் அது. கண்ணுவிள்ளையை எழுத்தாளராக்கப் போய் மடைமாறி கும்பமுனியின் காதல் தோல்வியில் கலங்கடித்து கும்பமுனியின் சதாபிஷேகக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் நம்மைப் பைத்தியமாக்கும் எழுத்து நாஞ்சில் நாடனுடையது.

      ”ஒரு காரியம் மறந்திராதே! பொறந்த நாள் அண்ணைக்கு நம்ம வீட்டு முற்றத்திலே இருந்து நாம ஆன மேல அம்பாரியாட்டுதான் விழா மேடைக்குப் போவோம்”

      ”அதுக்கு உமக்கு குண்டி உறப்பிருக்கா?”

      ”என்னது?”

      ”இந்த சூம்பின குண்டியோட ஆனைக்கு முதுகிலே உக்காந்து மூணு மைல் போனேருண்ணா இடுப்பு எலும்பு அச்சப்பம் மாரி நொறுங்கீராதா?”

      எழுதுவது ஏறக்குறைய மறந்து போன கும்பமுனி தீபாவளி மலருக்காக இரண்டு கதை எழுதினால் வரக்கூடிய இரண்டாயிரம் ரூபாய்க்காக கண்ணுவிள்ளையிடம் கதைக்கரு வேண்டி அடிக்கும் கூத்து ‘கதை எழுதுவதன் கதை’.

     ”இல்லாட்டா பிச்சைக் கோனாருக்க பசுமாடு எருமைக் கன்னுக்குட்டி போட்டுல்லா..அதை எழுதும்..”

      ”அதெல்லாம் சயின்ஸ் ஃபிக்‌ஷன்லா? அதெல்லாம் சுஜாதாதான் எழுத முடியும்…”

      ”போன பூவுலே, நெல்லுக்கு வெலயே இல்லேண்ணு, சாமிக்கண்ணு புலைமாடன் கோவில் உண்டியல்லே பேண்டு வச்சாம்லா, அதை எழுதும்”.

            வல்விருந்து தொகுப்பின் மணிமகுடம் ‘வெள்ளித் தாம்பாளம் சொன்ன கதை’. சிரித்து மாளாது.

            ”பேப்பூர் சுல்தான்னு பட்டப் பேரு. ஒரு பேட்டியிலே சொல்லிருக்காரு. வாசல்லே கெடந்த நாயைக் காணிச்சு – இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கீருக்குன்னு”

            ”நீரு அப்ப பீக்குண்டி சுல்த்தானாக்கும்”

            தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி வாயைத் தற்காலிகமாக அடைத்தது..

            இப்படி 19 சிறுகதைகளின் தொகுப்பு வல்விருந்து. இந்தக் கதைகள் வெறும் சிரிப்புக்காக மட்டும் எழுதப்பட்டவை அல்ல. முகவுரையில் நாஞ்சில் நாடன் சொன்னபடி ”கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பிச் செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு.”

            மேலோட்டமான வாசிப்போ, பின், முன் இடை நவீனத்துவம் தேடி, படிமம் கண்டு புல்லரிப்பு பெறும் வாசிப்போ நாஞ்சில் நாடனின் எழுத்து எப்போதும் அவரவர் கை மணல்.

ராஜவீதி

அ முத்துலிங்கம்

amuthulingam (2)
ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் இல்லை. பயணிகள் தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு நிரையாக வெளியே வந்தனர். ’இவராயிருக்குமோ இவராயிருக்குமோ’ என்று எங்கள் கண்கள் பரபரத்தன. வெள்ளைக்கார முகங்களையும், கறுப்பு முகங்களையும் கழித்துவிட்டு இந்திய முகங்களில் கவனத்தை செலுத்தினோம். அவரை வரவேற்க வாங்கிய பூமாலை வேகமாக வாடிக்கொண்டு வந்தது. அவரைக் காணவில்லை.

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடனை நான் காலம் கழித்துத்தான் கண்டுகொண்டேன். 20 வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அமெரிக்காவில் திரு சுந்தர ராமசாமியை கண்டு பேசியபோது அவர் நாஞ்சில் நாடன் முக்கியமாக படிக்கவேண்டிய ஏழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். அதன் பின்னர் கையில் கிடைத்த நாஞ்சில் நாடனின் புத்தகங்களை எல்லாம் படித்தேன். சிறுகதைகள் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிறையவே எழுதிக்கொண்டிருந்தார். வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே இத்தனை பெரிய ஆளுமை தமிழ் இலக்கியத்தில் இருக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டது.  நான் அத்தனை காலமும் படித்தது எல்லாமே வேறு வகையான எழுத்துக்கள். அவரோ நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் எழுதினார். அது புதுமையாக இருந்தது. நகைச்சுவையும் சமூக அக்கறையும் கொண்ட படைப்புகள். முக்கியமாக என்னைக் கவர்ந்தது மரபிலக்கியத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி.

எப்படியோ தொலைபேசி எண் பெற்று அவருடன் ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். கடிதம் எழுதியதும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு பித்துப் பிடித்ததுபோல அலைந்தது நினைவுக்கு வந்தது. இப்படியும் தமிழில் எழுதமுடியுமா என்ற வியப்பு. இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து தவித்தது. முழு மனித வாழ்க்கையும் ஒரு சிறுகதையில் அடங்கிவிட்டது. சாதாரண கதை போலத்தான் அது ஆரம்பித்தது ஆனால் முடிவுக்கு வந்தபோது மனதின் தவிப்பு அடங்கவில்லை.

’கொங்குதேர் வாழ்க்கை’ என்பது கதையின் தலைப்பு. 2000 வருடங்கள் பழமையான சங்கப் பாடல்களில் இருந்து ஒரு வரி. 473 புலவர்கள் பாடிய 2381 சங்கப்பாடல்கள் உள்ளன. அதிக பாடல்கள் பாடியவர் கபிலர். ஒரேயொரு பாடல் பாடியவர் இறையனார். அதுதான் ’கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடல். தமிழ் இலக்கியத்தில் அதிக மேற்கோள்கள் காட்டப்பட்ட பாடல் இது ஒன்றுதான். தும்பி மலர் மலராகச் சென்று தேனைத் தேர்ந்து சேகரிப்பது போலத்தான் மனிதன் தன் வாழ்க்கையை தேர்ந்து தேர்ந்து அமைக்கிறான். அவன் சேர்த்த மூட்டையையே அவன் இறுதிவரை சுமக்கிறான்..

சிறுகதை நாலு வரிகளில் சொல்லக்கூடியதுதான். லைன் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டு வரிசையாக நிற்கின்றன. கதைசொல்லி ஒரு வீட்டில் வாழ்கிறார். சண்டைகள் சச்சரவுகள் என்று குடித்தனக்கார்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கை. அதே சமயம் அங்கே கொண்டாட்டங்களும் இல்லாமல் இல்லை. ஒருநாள் முன்னிரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது திடீரென்று நாதஸ்வரத்தில் சங்கதி சுத்தமான தெய்வீக இசை எழுகிறது. தியாகய்யரின் ’சக்கனி ராஜா’ கீர்த்தனையின் இரண்டு வரிகள். ஏதோ பெரும் இழப்பை சொல்ல வந்ததுபோல அத்தனை சோகமாக அந்த இசை கிளம்புகிறது. ‘ஓ, மனமே! ராமனின் பக்தி எனும் ராஜவீதியை விட்டு வேறு சந்துகளில் ஏன் நுழைகிறாய்.’

நாதஸ்வரத்தை வாசித்த கிழவர் சமீபத்தில் மனைவியை இழந்தவர். பிரிவு என்ற கொடிய காற்று அவரை அலைக் கழித்திருக்கலாம். முறையிடுவது போல நாதஸ்வரத்தை மேலே உயர்த்திப்பிடித்து மனதை வருடும் இசையை பொழிகிறார். அவருடைய மகள் எங்கிருந்தோ ஓடிவந்து நாதஸ்வரத்தை பிடுங்கிவிடுகிறாள். கிழவர் மன்றாடுகிறார். அவருடைய ஆற்றாமையை வெளிப்படுத்த அவருக்குள் இருந்த ஒரே கலை அதுதான். மகள் அவரை வீட்டினுள்ளே கூட்டிப்போகிறாள். அந்த வாத்தியத்தில் இருந்து புறப்பட்ட கடைசி இசை அதுதான். நாதஸ்வரம் தொலைந்ததோ, கடைக்கு வைத்துவிட்டார்களோ அல்லது விறகானதோ என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.

அமெரிக்காவின் ஹார்ப்பர் லீ, மார்கிரெட் மிச்செல் போன்றவர்கள் ஒரே ஒரு நாவல் எழுதி புகழ் பெற்றவர்கள். இந்தியாவின் அருந்ததி ராயும் அப்படித்தான். நாஞ்சில் நாடன் 25 க்கு மேற்பட்ட கட்டுரை, சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் என்று எழுதியிருந்தாலும் அவருடைய ’கொங்குதேர் வாழ்க்கை’ சிறுகதை ஒன்றே அவருக்கு தமிழ் இலக்கியத்தில் நிரந்திரமான ஓர் இடத்தை தருவதற்கு போதுமானது. பல மொழிகளில் எழுதிய பல சிறுகதைகளைப் படித்து ஒப்புநோக்கியபோது ’கொங்குதேர் வாழ்க்கை’ உலக இலக்கியத்தில்  தனி இடம் பெறக்கூடிய கதையாகவே எனக்கு தோன்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்ற சொற்றொடர் எங்கே, எப்போது  பிரயோகிக்கப்பட்டாலும் அது உடனே நாஞ்சில் நாடனை என் நினைவுக்கு கொண்டுவரும்.

நண்பர் முழங்கையால் இடித்தார். நாஞ்சில் நாடன் இரண்டு பயணப் பெட்டிகள் நிறைந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். பள்ளிக்கூடம் விட்டு வெளியே ஓடிவரும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி. 20 மணி நேர பயணக் களைப்பு அவர் முகத்தில் தெரியவே இல்லை. அவர் வெளியே வந்த பின்னர் அவர் செய்த காரியம்தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  அப்படியே என்னை ஆலிங்கனம் செய்தார். கண்கள் கலங்கியிருந்தன. இவருக்கு நான் என்ன செய்தேன்? இத்தனை அன்புக்கு நான் அருகதையானவன்தானா? இருபது வருடங்கள் பிரிந்திருந்த அண்ணரைச் சந்திப்பதுபோல உணர்ச்சிகளால் நிறைந்து அவர் முகம் இருந்தது. அத்தனை நாட்களும் பேச்சிலும் எழுத்திலும் நடந்த சந்திப்பு அன்று நேரிலே நிகழ்ந்தது.

அவருடைய நூல்களைப் படிக்கும்போது அவர் பற்றிய ஒரு கற்பனை உருவாகி மனதிலே படிந்திருக்கும். அப்படி ஒன்று என்னிடம் இருந்தது. ஆனால் நேரிலே பார்த்த ஆளுமை மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. என் கற்பனை உருவத்தை பலமடங்கு வியாபிக்க வேண்டியிருந்தது. காலம் கழித்து இவரைச் சந்திக்கிறோமே, எத்தனை வருடங்கள் வீணாகிவிட்டன என்ற நினைப்பே எனக்குள் எழுந்தது. கர்வம் செருக்கு என்ற வார்த்தைகள் நாஞ்சில் நாடன் அறியாதவை. ரொறொன்ரோவில் தங்கிய காலத்தில் அவர் இளம் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்தித்தார். ஆர்வமாக பார்க்க வந்த எழுத்தாளர்களுடனும், வாசகர்களுடனும் நிறைய நேரம் உரையாடினார். அவருடைய பெருந்தன்மை வேறு பிரபல எழுத்தாளர்களில் நான் காணாத ஒன்று.

அவர் ரொறொன்ரோவில் தங்கிய நாட்களில் நடந்த முக்கியமான விசயம் தொடராக ஐந்து நாட்கள் அவர் செய்த கம்பராமாயண விரிவுரைகள்தான். இந்த வாய்ப்பு ரொறொன்ரோ வாழ் மக்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடியது அல்ல. நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் அதே சமயம் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர்கள் எத்தனை அரிது என்பது தெரிந்த விசயம். நாஞ்சில் நாடன் கம்பராமாயணம் முழுவதையும் முறையாகப் பாடம் கேட்டவர். கம்பரின் முக்கியமான பாடல்களை எடுத்து அவர் விளக்கிய காட்சி மறக்கக்கூடியது அல்ல.

ராமாயணம் பாடிய கம்பரைப் பற்றி ஒரு கதையுள்ளது. சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். ஒருமுறை சடையப்ப வள்ளல் கம்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது அங்கே ஏற்கனவே கூட்டம் சேர்ந்துவிட்டது. சடையப்பருக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. கம்பருக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. கம்பர் சொன்னார், ’இங்கே இடம் கிடைக்காவிட்டால் என்ன? நான் அவரை வைக்கும் இடத்தில் வைப்பேன்.’ 10,000 பாடல்கள் கொண்ட கம்பருடைய ராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேறியது. நூறு பாடல்களுக்கு ஒரு பாடலில் கம்பர் சடையப்ப வள்ளலை வைத்து பாடியிருப்பார். ’நூற்றுக்கு ஒன்று கொஞ்சம் அதிகமில்லையா?’ என்று ஒருவர் கேட்டபோது கம்பர் சாதுர்யமாகப் பதில் சொன்னார். ’ உண்மைதான். சடையப்பர் நூற்றில் ஒருவர் இல்லை. ஆயிரத்தில் ஒருவர்.’ அப்படியே 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பர் பெயர் வரும்படி கம்பர் பாடல்களை அமைத்தார்.

நாஞ்சில் நாடனுடைய இடம் தமிழ் இலக்கியத்தில் எங்கே நிற்கும்? அவர் நூற்றில் ஒருவரா, ஆயிரத்தில் ஒருவரா? நிச்சயமாக லட்சத்தில் ஒருவர்தான். இன்னும் பல சிறப்பிதழ்களுக்கு அவர் தகுதியானவர். நாஞ்சில் நாடனுக்கும் பதாகைக்கும் என் வாழ்த்துக்கள்.

நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியம் எனும் ராஜவீதியில் பயணிக்கிறார். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும். அவர் முன்னே. மற்றவர்கள் பின்னே

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

குமரன் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueநீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ மினரல் வாட்டர் பாட்டில் உங்கள் மனசாட்சியை இம்சித்தால், நீங்கள் நாஞ்சில் நாடனின் வாசகராக இருக்கக்கூடும் இல்லையேல் அவரின் வாசகராகக் கூடிய மனப்பொருத்தம் உங்களுக்கு(ம்) உண்டு. ஆதங்கம்…நம்மைப் போன்ற ஒரு சாமானியனிடம் பிரதிபலிக்கக்கூடிய அதிகபட்ச ஏமாற்றமும் எதிர்ப்பும் கலந்த உணர்வு ஆதங்கம் தானே! அதை ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து முலாம் பூசிய கண்ணாடியாய் நம் முன் வைத்து நம்மை பார்க்கச் சொல்லும் பொழுது, அதை நம்முடைய பிம்பமாய் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தை பீடித்த துன்பமாய் உணர வைக்கும் உக்கிரமும், அதிக காரத்தை மட்டுப்படுத்த உப்பு சேர்ப்பதைப் போல, அந்த உக்கிரத்தின் மீது ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல் நடையழகும்  அவரின் எழுத்துப் பாணி…”உண்மை உணர்வுகள் மறந்தால் அவர் மண்ணுக்குத் தேவையில்லை” என்பது நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” நாவலின் திரை வடிவமான “சொல்ல மறந்த கதை” படத்தில் வரும் ஒரு பாடல் வரி. அவரது எழுத்தின் வேரை உரித்துக் காட்ட போதுமான வரி!

மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து முகங்களிலும் இரட்டைத் தன்மை கொண்டுள்ள நம் சமூகம் அதன் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றும் விவேகமற்ற தன்மையை விளாசும் கட்டுரைகள் மூலமாகவே நாஞ்சில் நாடனை தேடித் தேடி வாசிக்கும் வழக்கம் எனக்குள் பீடித்தது…கருத்தாக்கத்தின் விசால பரப்பும் ஒழுங்கமைவும் அவரது கட்டுரைகளின் தலையாய பண்புகள் எனலாம். ஒழுங்கமைவு என்பதே ஒரு அருமையான சொல் இல்லையா? இயல்பான அமைப்பில் இருக்கும் ஒழுங்கே ஒழுங்கமைவாக இருக்க இயலும். அப்படியானால், நேர்த்தியின் இழைகளால் கோர்த்த கருத்தாக்கத்தின் ஆழ அகல நீளம் கூடக் கூட ஒழுங்கமைவு என்பது உண்டாக்கவும் பராமரிக்கவும் மிகவும் கடினமான ஒன்றாக மாறும் தன்மையுடையதாகிறது. ஆனால், நாஞ்சில் நாடன் இத்தகைய விசாலமான ஒழுங்கமைவை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழ்மனப் பார்வைக்கும் சிந்தனை கோர்வைக்கும் நம் முன் வைக்கிறார். உதாரணமாக, “சங்க இலக்கியத் தாவரங்கள்” கட்டுரையை எடுத்துக் கொள்வோம். புத்தகங்கள் வாங்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் செல்கிறார் நாஞ்சில் நாடன். செப்டம்பரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு 50% சதவீதம் கிடைக்கும் மற்ற எந்த சிறப்பு நாள் கழிவும் 25% கழிவுதான் என்கிறார் புத்தகம் விற்பவர். செம்டம்பர் மாதம்  வரலாம் என்று நினைத்ததை எழுதும் ஆசிரியர், அதன் உவமையாக சட்டென்று “அப்பம் தின்னவோ அலால் குழி உண்ணவோ” என்று எழுதுகிறார். நம் மனம் மணோன்மணீயம் காலத்திற்கு பிந்திப் பாய்கிறது. அங்கிருந்து பதிப்புத்துறை செல்லும் நாஞ்சில் நாடனுக்கு ஒரு திருக்குறள் நினைப்புக்கு வருகிறது. அக்குறளை எழுதி, செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்திலேயே “சங்க இலக்கியத் தாவரங்கள்” கிடைக்காத கதையைச் சொல்லி, அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் பலவற்றை தன் பல்வேறு வயதுகளில் கண்டு ஏற்பட்ட சிலிர்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன், “இந்நூல் கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் ஊழ்வினை” என்று கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரை படித்து முடித்த பின்பு, சாலையில் மிஞ்சியிருக்கும் சொற்ப மரங்களை நாம் கடக்கும் ஏதோ ஒரு பொழுதிலோ, பெயர் தெரியாத மரங்களின் இலையோ பூவோ நம்மீது இறங்கி வரும் நொடியிலோ “சங்க கால நிழல்” நம் மீது படிந்து நகர்வதை நமக்கு நாமே உள்நோக்க இயலும்.

“சிறுமீன் சினையிலும் நுண்ணிது” கட்டுரை மற்றுமொரு உதாரணம். ஆலமர விழுதுகளாய் மனதில் அசையும் அது சார்ந்த நினைவின் பொழுதுகளை சொல்ல வரும் நாஞ்சில் நாடன் கட்டமைக்கும் கட்டுரையின் போக்கு அலாதியானது. ஆலிலையில் துயின்ற கண்ணனில் தொடங்கும் அவர், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் பாடிய ஆலின் நிழலில் நம்மை சற்று நேரம் அமர்த்தி பின், புறநானூறு வழியே ‘ஆல் அமர் கடவுள்” அறிமுகப்படுத்தி, பெரு மற்றும் சிறு காப்பியங்களில் கண்ட ஆல் பற்றியனவற்றை மேற்கோள் காட்டி ஒரு அற்புதமான பாடலின் வழியே பெருமிதமும் ஆதங்கமும் சேர்ந்து கட்டிய உணர்வின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ‘தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை…” என்னும் அப்பாடலை படிக்கையில் எப்பேர்பட்ட இலக்கிய வேரில் கிளர்ந்தெழுந்த சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம் என்ற பெருமிதமும் அப்படிப்பட்ட புதையல் சீண்டுவாரின்றி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கமும் ஒரு சேர நமக்குள் எழும். அந்த ஆதங்கத்தின் மீது தனது ஊர் ஆலமரத்துடன் தான் வளர்ந்த அனுபவத்தை அமர்த்தி, அந்த மரம் வீழ்ந்த பின் முதியவராய் அதன் மிச்சமான அடிமரத்து வெட்டுப்பரப்பில் உட்கார்கையில் சிறுவயதில் சித்தியின் மடியில் அமர்ந்த ஞாபகம் வருவதாய் சொல்லி “கடவுள் ஆலம்” என்று முடிக்கையில் நம் தொண்டையில் ஏதோ உருள்வது போல் உணரக்கூடும். நினைப்பும் இழப்பும் சேர்த்து பிசைந்த உணர்வுருண்டையோ அது?

ஒரு யதார்த்த நிகழ்வின் வழியே நாம் “தொலைத்தவற்றை”ச் சொல்லி, அதன் பக்க விளைவாக, சிந்தனையை செம்மைப்படுத்தத் தக்க‌ வினையாக, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கை பரபரப்பில், அவசியமில்லை என்ற அறிவின்மையால் அற்ப‌ம் என்றாகிப் போன அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே அவரின் பெரும்பாலான கட்டுரைகள்.

ஒரு படைப்புக்கு, அதன் தலைப்பே கவிதையின் எழிலுடன் பொருட்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது நாஞ்சில் நாடனின் அவா. அதனை ஆழமாகச் சொல்ல “எனக்கும் என் தெய்வத்துக்குமான வழக்கு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதியுள்ளார் அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தான் கண்ட அட்டகாசமான தலைப்புகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டு விளக்குகிறார். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள ஒருவரின் படைப்புகள் எத்தகைய தலைப்புகள் கொண்டதாக இருக்கும்? “நதியின் பிழையன்று நறுப்புனல் இன்மை” என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு.

“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” இராமயண வரிதான். ஆனால் தனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பாக அதை வைத்த‌ நாஞ்சில் நாடன், அந்த வரியின் இராமாயணப் பொருளை முற்றிலுமாக மாற்றி நெறியாள்கிறார்.  இன்று வறண்டு கிடப்பது நதிகளின் நீராதாரம் மட்டுமா? மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது? இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவகைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த ச‌மூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும்? வறண்டு தான் கிடக்கும். அந்த வறண்டு போன சமூக நதியில் நம் அக மலத்தை அள்ளி அள்ளிக் கொட்டி சாக்கடையாக்கிய நம் பொறுப்பின்மையின் நாற்றத்தை நாமே நுகர்ந்து கொள்ள வைக்கும் பேசுபொருளே “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை”… நம் அன்றாட வாழ்வின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் உரித்து ஊற வைத்து உப்புகண்டம் போட்டு தொங்க விடும் அதன் ஒவ்வொரு கட்டுரையிலும் சமூக பிரக்ஞையை  நம்முள் ஏற்றுகையில், ஊவா முள்ளெடுத்து உடல் முழுக்க குத்தியது போல் நாளாக நாளாக நமக்குள் வலியெடுக்கும்…நம் சமூக, வாழ்க்கை நதி நறும்புனலாய் இல்லாமல் மாறக் காரணம் நாம் தானே?

அடுத்த தலைமுறையின் அடிவேர் என்று நாம் கருதும் பள்ளி கல்லூரி படிப்புகளில் தமிழ் மெல்ல தலைகுனிந்து நடந்து பின் தலைமறைவாகிப் போய் கொண்டிருக்கும் அவலத்திலிருந்து தப்பிய எண்பதுகளில் பயின்ற என்னைப் போன்றோருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் “தகுதி வழக்கு” என்னும் இலக்கணப் பகுதி நினைவில் இருக்கக்கூடும். யதார்த்த பயன்பாட்டிற்கு வெகு அருகில் அமைந்ததாலோ என்னவோ, நாஞ்சில் நாடன் பாஷையில் சொன்னால், “மூலத்தில் குருதி கொப்பளிக்க வைக்கும்” இலக்கண விதிகள் போல் அல்லாது எளிமையாக மனதில் பதியக் கூடியது…மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல் என்பவை தகுதி வழக்கின் கூறுகள். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு தலைப்பாக்கி நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் கட்டுரை நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தகுதியற்ற மாந்தர்கள் பெருத்து கொழுத்து பெரும்பானமை ஆகிப்போன சமூகத்தின் மீது தன் வழக்கை பதிவு செய்யத் தான் தகுதி வழக்கின் பகுதிகளையே தலைப்பாய் வைத்தாரோ நாஞ்சில் நாடன்? பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு  “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும்  சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”,  மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும்?] கும்பலாய் அடிமையான “குழூஉக்குறியை” சொல்லாமல் சொல்வது தான் நாஞ்சில் நாடன் அந்தக் கட்டுரையின் அடியில் வைத்த “தகுதி வழக்கு”.

எழுதும் பொருளில் நேர்மையும் எழுதுபவரின் அக நேர்மையும் சரிவிகிதத்தில் சமன்பாடு கொள்ளும் போது அந்தப் படைப்பின் இயல்புத்தன்மையும் உண்மையும் நமக்குள் ஊடுருவத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடனின் அகநேர்மைக்கு ஒரு சான்றாக, “காப்பிய இமயம்” கட்டுரையில் தன் பம்பாய் வாழ்க்கையில் “நேர் வாசல்” வழியாக‌ கம்ப இராமயணம் கற்ற அனுபவம் பற்றி விவரிக்கையில், “…அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததால் வால்மீகியை பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதிகவி ஒருவரையும் ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது” என்று எழுதுகிறார். இதைப் போன்று ,அவரின் எழுத்து நேர்மைக்கான அத்தாட்சியங்கள் பல கட்டுரைகளிலும் பரவலாக காணக் கிடைக்கிறது…

இலக்கை இயம்புவது இலக்கியம் என்பார்கள் சான்றோர்கள். ஒரு சமூகம் இலக்கின்றி திரியும் அவலத்தை இயம்புவதும் இலக்கியமே!

ஐம்புலன் அவிக்கச் சொல்லிய குறள் தந்த சமூகம் இன்று ஐம்புலனை அழிக்கச் செய்யும் ரசனைகளுடன், வாழ்க்கையே சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட தந்திரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற, அனுபவமற்ற இயந்திரமாய், பல்லுயிர்க்கும் இப்பூமியில் வாழ சம பங்குண்டு என்பதை மறந்து இவ்வுலகம் தன்னுயிர்க்கு மட்டுமானது என்ற சுயநல அறிவீனத்தில் திளைக்கும் மானுட மந்தையின் அவலத்தை ஆற்றாமையுடன் எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும் இலக்கியமே! இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது?” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே! புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ?) என்று எழுதும் நாஞ்சில் நாடனை வாசித்தல், நம் மனதில் இன்னும் எங்கேனும் ஒரு ஓரத்தில் மீதமிருக்கும் மனிதத்தின் வேரிலும் சமுக அக்கறையின் மீதிலும் நீரூற்ற நல்லதொரு வாய்ப்பு!

நகுமிளகாய்

ராஜசுந்தரராஜன்

nanjil_nadan_spl_issue

“எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா?”

இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக “பதாகை” என்னிடம் கட்டுரை கேட்டபோது இது ஞாபகம் வந்தது! மெய்யாலுமே என்னிலும் சிறந்த எழுத்தாள இளைஞர்கள் இருக்கிறார்கள்.

கட்டுரை எழுதுவதற்குத் தகவலறிவு வேண்டும். அனுபவங்களைத் தாண்டி, தகவலறிவின் கருத்துக் கடலுக்குள் விழுந்து துழாவுவதில் எனக்கானால் மூச்சுமுட்டும். அதனால், பொதுவாக, அவ்வகை எழுத்துகளை நான் ஏற்றெடுப்பது இல்லை. ஆனால் நாஞ்சில் நாடன் குறித்தல்லவா எழுதச் சொல்கிறார்ள்?

தலைக்கனம் இல்லாதவர் நாஞ்சில் நாடன்; தன்னிலும் இளைய எழுத்தாளர்களைத் தன் சகோரம் அல்லது பிள்ளைகளைப் போல மதிப்பவர்; தமிழின் சங்க இலக்கியங்கள், பின்னர் வந்த சமய, சிற்றிலக்கியங்கள், கம்பராமாயணம் என மிக்கவாறும் வாசித்துப் புலமை கண்டவராயினும், ஒன்றுமே வாசித்தறியாது இன்றைக்கு வந்த எழுத்தாளர், வாசகர்களையும் கூட செவிமடுப்பவர்; ஊக்குவிப்பவர்.

நாஞ்சில் நாடன் நமக்கு குரு என்று கொண்டால் அப்படித்தான்; அண்ணாச்சி என்று கொண்டால் அப்படியும்தான். படைப்பாளியாய் வரம்பெற்று வந்த ஒரு மாமனிதர் அவர். அடிப்படையில் நல்ல மனிதர்களாய் இருந்தும் எழுத்து, கலை என்னும் மேல்கட்டுமானங்களால் வேலிகட்டிக் காவல்கோபுரத் துப்பாக்கிச் சிப்பாய்களாய் விரைத்து நிற்பவர்களை எடுத்துக்காட்டி இதைத் தெளிவுபடுத்தலாம்…, ஆனால் என்னத்துக்கு நமக்கு எதிர்மறை அணுகல்?

ராஜமந்திரித் தொடர்வண்டி நிலைய வாசலில் நான் ஏறிய வண்டியில்தான், என்னை ஒட்டி, ஏறி அமர்ந்தார் நாஞ்சில். அவர் இருக்கத் தாராளமாக இடமிருக்குமாறு நான் எதிர்வரிசைக்கு மாறி அங்கே இடித்துக்கொண்டு உட்கார்ந்தேன். படகுத்துறைக்குப் போகிற வழிநெடுக அவர், தமிழ்ச்சொற்களை அர்த்தமில்லாமல் பிரிக்கிற அச்சகத்தார் மீது எரிச்சல் பட்டும், பெண் எழுத்தாளர்களுக்கு முன்னுரை எழுதுகையில் காட்டவேண்டிய கவனம் பற்றியும் விளக்கிக்கொண்டு வந்தார். தமிழ் வார்த்தை ஒன்றின் ஒரு பாதியை மேல்வரியின் முடிவிலும் மறுபாதியைக் கீழ்வரியின் முதலிலும் அவர் இட்டுக் காட்டியபோது எனக்குச் சிரிப்புத் தாளவில்லை. “சரோஜாதேவி புத்தகங்களில் கூட அப்படி வராதே!” என்றேன். “அச்சுக் கோர்த்துகிட்டு இருந்த காலத்துல அப்படி இல்லைங்க; கம்ப்யூட்டர் வந்த பின்னாலதான் இந்தக் கண்ராவி எல்லாம்,” என்றார்.

கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்கள் உள்ளவரை யதார்த்தவாதம் மடியாது என்றார் நாஞ்சில். ஆனால், ‘யதார்த்தவாதம்’ என்பது நம் வசதிக்கு வைத்துக்கொண்ட ஒரு பெயர்தானே? கொண்டுகூட்டி அல்லது முன்பின் கற்பித்துப் பொருள் கொள்வது (interpretation) அல்லவோ யார்க்கும் நடைமுறை?

நீர் தொடர்பான கும்பகர்ண மொழிதல் ஒன்றை நினைவிலிருந்து எடுத்து விளக்கினார், கம்பனை ஓரளவுக்குக் கரைகண்டவர் அல்லவா நாஞ்சில்? “நீர்க்கோல வாழ்வை நச்சி” என்பதே அந்த செஞ்சோற்றுக் கடன்கழித்தான் செப்பிய மொழி. அந்தச் சொற்றொடரின் தாக்கத்தில் சற்று முன்பின் கற்பித்து இட்டதுதான் இந்தக் கட்டுரையின் தலைப்பு.|| (இது நாஞ்சில் நாடனொடுகூட நான் போகியதோர் உலா பற்றியதொரு கட்டுரையின் ஒரு பகுதி. அந்தக் கட்டுரைத் தலைப்பு: “நீர்மேல் உலாவை நச்சி”)

இதை ஏன் இங்கே நினைவிலெடுக்கிறேன் என்றால், அவரளவுக்கு உள்ளபடி எழுதுகிற திறமையில்லாதவன் நான். சுந்தரராமசாமி என்னை ஒரு மாணாக்கனாக ஒரு பயிற்சி பண்ணிப்பார்க்கச் சொல்வார்: ஒரு மரத்தை அல்லது படிக்கட்டைப் பார்த்து அதை வாக்கியங்களில் உருவாக்கி எடுக்க வேண்டுமாம். எனக்கு அது வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது. ஏனென்றால் சிறுவயதிலிருந்து அதைத்தானே செய்துவருகிறேன். என்றால் வாக்கியங்களில் அல்ல, கோடுகளில். அது ஓவியர்களுக்கான ஒரு பயிற்சி. முப்பரிமாணப் பொருள்களை அவதானித்து அதை இருபரிமாணத் தாள் மீது உருவப்படுத்துதல் அத்துணை எளிதில்லை. யதார்த்த எழுத்தும் அப்படித்தான். எடுத்துக்காட்டாக, வட்டார வழக்குப் பேச்சுமொழித் தமிழை எழுத்தில் கொண்டுவருவதென்பது யதார்த்தம் சார்ந்தது. நாஞ்சில் நாடன் அதில் விற்பன்னர்.

நாஞ்சில் நாடனின் “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” கட்டுரைப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசி இருக்கிறேன். தமிழின் “சிற்றிலக்கியங்கள்” பற்றி அவர் எழுதிய புத்தகத்துக்கும் மதிப்புரை எழுதி இருக்கிறேன். அவரது நாவல்கள், சிறுகதைகள் அன்றி கம்பராமாயணம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தையும் வாசித்து இருக்கிறேன். அடடா, எத்துணைப் பெரிய தமிழறிஞர் இவர் என்று வியக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதற்கு நாமும் கொஞ்சம் தமிழறிந்திருக்க வேண்டும்.

கொப்பூழ் அருகில் மச்சமிருக்கிற ஒருத்தியைத் தேடி அவளைக் கண்டுபிடிக்கிற அக் கட்டத்தில் நாயகன், தமிழ்த் திரைப்படத்தில்தான், தான் இசையறிந்தவன் என்று அவளிடம் காட்டுவதற்காக, “மரிமரி நின்னே..” என்று யேசுதாஸ் குரலில் இரண்டுவரி எடுத்து விடுவான்; அங்கிருந்த குழந்தைகள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். தமிழ்ப்புலமை உண்டென்று காட்டினாலும் அதே கதிதான். ஆகவே, தமிழ்பற்றி இங்கொன்றும் சொல்லப்போவதில்லை.

புதுமைப்பித்தனுக்கு ‘அவலத்துப் பகடி’; மௌனிக்கு ‘தத்துவ மொழியிருண்மை’ என்றால், நாஞ்சிலுக்கு ‘ஒவ்வாச்சுருதி’ (absurdity). இதை, முக்கியமாக, தனது கும்பமுனிக் கதைகள் வழியாக மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார். கும்பமுனி என்னும் கிழட்டு எழுத்தாளர், அவருக்குத் தவசிப்பிள்ளையான (சமையற்காரர்) கண்ணுபிள்ளை ஆகிய இரண்டே இரண்டு குணவார்ப்புகளைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற உரையாடல்களினால் ஆனவை இந்தக் கதைகள். இவற்றை கட்டுரைத்த கதைகள் அல்லது கதைவடிவிலான கட்டுரைகள் எனவும் கொள்ளலாம். விமர்சனத் தொனியுடன் கூடிய எழுத்துகள்.

“’மோகமுள்’ தெரியுமாடே?” என்று கும்பமுனி, தவசிப்பிள்ளையைக் கேட்கிறார். அவர் மீன்முள் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்; மோகமுள் இன்னதென்று அறிந்தாரில்லை.

இராவணன் நெஞ்சில் தைத்தது
உயிர் ஒடுங்கும் நாளில்
சீதையோடு சேர்ந்து எரிவது
ஒருக்கால்
அஸ்தி பொறுக்கப் போனால்
ஆணிபோல் எரியாமல்
கனன்றும் கிடப்பது.

“கவிதை மாரி இருக்கு பாட்டா! அப்பமே புதுக்கவிதை வந்தாச்சா?”

“கவிதை என்னவே? வாக்கியத்தை நாலா மடக்கி எழுதினாப் போச்சு. பல பேருக்க கவிதைப் பொஸ்தகத்தை நீட்டி அடிச்சா பதினாறு பக்கம் தேறாது தெரியுமா?”

இப்படி நக்கலோடு கூடிய விமர்சனங்களே எல்லாக் கதைகளும். சமூகச் சடங்குகள், அரசியல், அரசாங்க நடபடிகள், கலாச்சாரங்கள், முற்போக்குகள், சாவுபற்றிய சிந்தனைகள் என எல்லாவற்றின் மீதும் விமர்சனங்கள். தான் வாழும் சூழ்நிலை அபத்தங்கள் மீது துணிந்து கருத்துச்சொல்ல ஓர் எழுத்தாளர் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே போற்றுதற்குரியது.

மாமன்மகள் மீதுகொண்ட காதலால் எழுத்தாளர் இளகி, சமையற்காரரை குரு நிலைக்கு உயர்த்துவது. அண்ணன் தம்பி பாகப்பிரிவினையில் தெய்வங்கள் இடையிற்புகுந்து வசனம் பேசுவது, எமதர்மனிடம் மாப்புவாங்க புத்தகங்கள் காரணமாவது என நான் வியந்த பல உத்திகள் பற்றியும் பேசலாம். ஆனால் எனக்கு முன்னவரான நாஞ்சில் நாடனை வியப்பதற்கு வேண்டிய தகுதி எனக்குண்டா?