சுஷில் குமார்

வாக்கரிசி – சுஷில் குமார்

                                                    சுஷில் குமார்                             

வழக்கம் போல அன்றும் வகுப்பறையின் சன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய்ப்பன்றியும் கிட்டத்தட்ட பத்து குட்டிப் பன்றிகளும் என்னை நோக்கி வந்தன. வழக்கமாக இடைவேளை மணி அடிக்கும்போது பன்றிக் குட்டிகளுக்கு இலந்த வடையும் கல்கோனா மிட்டாயும் கொடுத்து அவை அவற்றை சப்பிக் கொண்டிருக்கும்போது குட்டிப் பன்றிகளின் வாலைப் பிடித்து விளையாடுவேன். அன்றும் கூட தாத்தா கொடுத்திருந்த இரண்டு ரூபாய்க்கு கல்கோனா வாங்கி வைத்திருந்தேன். அந்தப் பன்றிக் கூட்டம் என் சன்னல் அருகே வந்ததும் ஒரு மிட்டாயை எடுத்து சன்னல் வழி நீட்டினேன். திடீரென என் தலையின் பக்கவாட்டில் ஏதோ வந்து தாக்க, அதிர்ந்து திரும்பிப் பார்த்தேன். முகம், தலையெங்கும் சாக்பீஸ் பொடி. என் ஆங்கில ஆசிரியர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். கண்களால் அவர் சைகை செய்ய அந்தக கரும்பலகைத் துடைப்பானை எடுத்துக் கொண்டு போய் அவரருகே நின்றேன்.

“என்ன டே வாய்பொளந்தான்! தாத்தாவுக்கு போன் பண்ணட்டா? எப்பிடி?”

நான் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றேன்.

“என்ன டே? கல்லுளிமங்கன் மாதி நிக்க? எதாம் கேட்டா ஒண்ணுந் தெரியாத்த அப்பாவி மாதி மொகத்த வச்சிருவான். செரியான சிமிளனாக்கும்.” என்று சொல்லியவாறு என் வலது காதை பிடித்துத் திருகினார். நான் அப்போதும் அசையாமல் நிற்க, என் தலையில் படிந்திருந்த சாக்பீஸ் பொடியை தட்டி விட்டவர், “போ, போ. ஒன் தாத்தாக்காக வுடுகேன், என்னா? ஒழுங்கா கிளாஸ கவனிக்கணும், கேட்டியா?” என்றார்.

“செரி சார்.” என்று நான் எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு என் இடத்திற்கு வந்து உட்கார்ந்தேன். பன்றிக் குட்டிகள் என் சன்னல் சுவரருகே படுத்துக் கிடந்தன. அவை பசியாகவிருக்கும். இந்த ஆங்கிலப் பாடவேளை ஏன் நீண்டு கொண்டே செல்கிறது? பள்ளிக் கூடத்தின் பெயர் ‘மலையாளப் பள்ளிக்கூடம்’, ஆனால் மலையாளப் பாடம் கிடையாது. பின் ஏன் அந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்? ஒரு பன்றிக் குட்டியாக பிறந்திருந்தால் ஆங்கிலம் என்ன, மலையாளம் என்ன, எதுவும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்திருக்கலாம், என்ன, அந்த பீக்குண்டில் கிடந்து புரள வேண்டும். அதெப்படி அதைப் போய் சாப்பிட முடியும்?

“டேய் சரவணா. எந்திரி, இங்க வா.” என்று ஆசிரியரின் குரல் என் காதுகளுக்குள் இரைச்சலாய் வந்து விழுந்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்க்க, ஆசிரியரின் அருகே என் அப்பா நின்றுகொண்டிருந்தார். பயம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க எழுந்து நின்று ஆசிரியரின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன்.

“என்ன டே, பேந்தப் பேந்த முழிக்க? பைய எடுத்துட்டு வா.” என்று சொல்லிய ஆசிரியர் அப்பாவிடம் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆசிரியரின் முன் சென்று நிற்க, அவர் என் தோளில் தட்டி, “செரி அண்ணாச்சி. கூட்டிட்டுப் போங்கோ. என்னத்தச் சொல்ல? ஒங்கப்பா எனக்கு ஆசானாக்கும். என்ன செய்ய? நல்ல வயசாயாச்சுல்லா? கெடைல கெடக்காமப் போறதுக்கும் குடுத்துதான் வைக்கணும். பொறவு தகவல் சொல்லி அனுப்புங்கோ.” என்றார். ஆசிரியரின் முகம் சிறிது சோகமாகியிருந்தது.

தாத்தாவிற்கு என்ன ஆயிருக்கும்? காலையில் காசு கொடுத்து அனுப்பும் போது நன்றாக இருமிக் கொண்டிருந்தாரே! சாயங்காலம் குமரிசாலைக் குளத்திற்குச் சென்று மீன் பிடிக்கலாமென்று சொல்லியிருந்தாரே!

“எப்பா, தாத்தாக்கு என்னாச்சிப்பா?”

“தாத்தா கீழ விழுந்துட்டா மக்கா.”

“எங்கப்பா விழுந்தா? ஆஸ்பத்திரிக்கி போகலியாப்பா?”

அப்பா பதில் சொல்லாமல் என்னை பின்னால் ஏற்றிவைத்து மிதிவண்டியை வேகமாக மிதிக்க ஆரம்பித்தார். என்னையறியாமல் அழுகை வந்தது. ஆச்சியும் இப்படித்தான். திடீரென்று ஒருநாள் காலையில் எவ்வளவு  எழுப்பியும் எழுந்திருக்கவேயில்லை. தாத்தா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தார். சில நாட்கள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு அத்தைமார், மாமாமாரெல்லாம் நின்று சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் சிலர் என்னைப் பற்றி ஏதோ சொல்லி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டனர். அம்மாவும் அக்காவும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தனர்.

நான் மெதுவாக தாத்தாவின் அறைக்குச் சென்றேன். தாத்தா தன் நார்க்கட்டிலில் படுத்திருந்தார். வாய் நன்றாகத் திறந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததைப் போலிருந்தது. மார்பிற்குக் குறுக்காக கைகளை வைத்து வீட்டு உத்திரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து, “தாத்தா, தாத்தா, எந்திரி.” என்றேன்.

தாத்தா மெல்ல மூச்சு விட்டார். அவரால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

“தாத்தா, ஒடம்பு நல்ல வலிக்கோ? நா கால அமுக்கி விடட்டா? நீ என்னத்துக்குப் போயி வழுக்கி விழுந்த? ஒரு எடத்துல சும்மா இருக்க மாட்டியா?”

தாத்தாவின் விரல்கள் மட்டும் மெதுவாக அசைந்தன. நான் அவரது கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்து விரல்களை மெல்ல நீவி விட்டேன். ஒவ்வொன்றாக சொடக்கு விட மடக்கினேன். தாத்தாவின் கைகள் சிறிது குளிர்ச்சியாக இருந்தன.

அம்மா என்னருகே வந்து நின்றாள். ஒரு சிறிய தம்ளரை நீட்டி, “மக்ளே, தாத்தாக்கு கொஞ்சம் பால் குடு.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள்.

“தாத்தாக்குப் பால் புடிக்காதுல்லாம்மா?” என்று அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.

“இப்ப பால் தான் குடுக்கணும் மக்ளே. டாக்டர் சொல்லிருக்காரு.”

திறந்திருந்த தாத்தாவின் வாயில் ஒரு மடக்கு பாலை விட்டேன். அது உள்ளிறங்காமல் வாயின் பக்கவாட்டில் வடிந்தது. முறுக்கிய வெள்ளை மீசையின் ஓரத்தில் பால் கசிந்து பனித்துளி போலத் தெரிந்தது. அம்மா தன் சேலைநுனியால் அதைத் துடைத்துவிட்டு வெளியே சென்றாள். நான் தாத்தாவின் கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டேன். வெளியே அப்பாவும் வேறு சிலரும் பேசுவது கேட்டது.

“சே, அருமாந்த மனுசன்லா? எப்பிடி ராஜா மாதி சுத்திட்டுக் கெடந்தாரு? ஒரு சொக்கேடும் கெடயாத?”

தாத்தா ராஜா மாதிரிதான் வாழ்ந்தார். ஊரில் என்ன நல்லது கெட்டது என்றாலும் தாத்தாவிடம்தான் வந்து நிற்பார்கள். அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. தாத்தா பேசும்போது என் அப்பா அசைவற்று நிற்பதைப் பார்த்து நான் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அம்மாவோ அக்காவோ தாத்தா இருக்கும்போது தலையைக் குனிந்துகொண்டுதான் போவார்கள்.

“ஆமாண்ணே, அதுதான் ஒண்ணும் புரியமாட்டுக்கு. வழுக்கி விழுந்தா, அப்பிடியே மலச்சிப் பாத்தா. தூக்கிக் கொண்டு கட்டில்ல படுக்க வச்சப் பொறவும் கண்ணு ஒரு துளி அசையல. டாக்டர் ஒண்ணும் பண்ணாண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. மூச்சு மட்டுந்தான் இருக்கு.” என்ற அப்பாவின் குரலும் தழுதழுத்தது.

“செரி, பாப்பம், கொஞ்சம் கொஞ்சமா பால் விட்டுப் பாப்பம். மனசு நெறஞ்சி போகட்டும். என்ன, பேரன்ட்ட ஒரு வார்த்த பேசிட்டுப் போயிருந்தா நெறவா இருந்திருக்கும். எங்க பாத்தாலும் ரெண்டுவேரும் சோடியால்லா சுத்துவா! பின்ன, ஆச்சி போன பொறவு பொடியந்தான கூடவே கெடக்கான்.”

“பய தாத்தா நெஞ்சுலயேதான கெடப்பான். அவரு கத சொல்லி தட்டிக் குடுத்தாதான் அவனுக்கு ஒறக்கம்.”

எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க நான் தாத்தாவின் மார்பில் சாய்ந்து உறங்கிவிட்டேன். அம்மா வந்து எழுப்பி, “மக்ளே, வா, சாப்டு, பசிக்கும்லா.” என்றாள்.

நான் வேண்டாமென தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சாய்ந்துகொண்டேன். அதற்குள் மதியம் ஆகிவிட்டிருந்தது. மெல்ல தலையைத் தூக்கி தாத்தாவின் முகத்தைப் பார்த்தேன். வாய் அதே போல திறந்திருந்தது. கண்கள் அசையாமல் நின்றன. மூச்சு மெல்ல மெல்ல என் முகத்தின் அடியில் ஊர்ந்துகொண்டிருந்தது. சென்ற வாரம் வாய்க்காலில் பிடித்த அட்டையைப் போல. அதெப்படி தொட்டவுடன் சுருண்டு விடுகிறது? தாத்தாவின் மூச்சும் கூட சுருண்டு போயிருக்குமோ? மணிக்கு ஒருமுறை யாராவது வந்து தாத்தாவிற்குப் பால் விட்டுச் சென்றனர். தாத்தாவும் தொடர்ந்து வடித்துக்கொண்டிருந்தார்.

“எண்ணே, இப்ப என்ன செய்ய? சாயங்காலம் வர இழுத்துட்டுன்னா பொறவு இன்னிக்கி காரியம் பண்ண முடியாதுல்லா?” என்று யாரோ கேட்க, இன்னொருவர், “ஒம்ம வாய மூடும் ஓய். அதுக்குள்ள ஒமக்கு காரியச் சாப்பாடு கேக்காக்கும்? ஒம்ம வாய்ல மொதல்ல வாக்கரிசியப் போடணும்.” என்றார்.

சித்தப்பா அப்பாவை தனியாக அழைத்துச் சென்று ஏதோ மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் ஒரே சலசலப்பு.

“என்னத்த யோசிச்சிட்டுக் கெடக்கியோ? சட்டுன்னு ஆக வேண்டியதப் பாருங்கோ. மத்தவன் வந்தாதான் செரி ஆகும். எமகாதம்லா, சும்மாவா பேரு வந்து, வாக்கரிசிப் பிள்ளைன்னு.” என்று இருமினார் பக்கத்து வீட்டுத் தாத்தா.

“அது செரி. ஒமக்கு வரும்போ தெரியும் பாட்டா! ஆனாலும் ஒரு அதிசயந்தான், என்ன ஓய்? மனுசன் வந்து பக்கத்துல நின்னு ரெண்டு வார்த்த சொன்னாப் போறும். அர மணிக்குள்ள சோலி முடிஞ்சிரும். நம்ம கொமரிக் கெழவி எத்தன மாசமா இழுத்துட்டுக் கெடந்தா? பின்ன, செஞ்ச பாவம் அப்பிடி. நம்மாளு வந்துதான தீந்து போச்சி. அவ மவன் துடியாத் துடிச்சான. என்னா படமுங்கியோ? பின்ன, கொஞ்ச நஞ்ச சொத்தா என்ன? அவனே எளனிய கொடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்பான்.”

“கெழவிய விடும் ஓய். அந்த வடக்குத் தெரு பிள்ள தூக்கு போட்டால்லா? எத்தன நாளா இழுத்துட்டுக் கெடந்தா? ஒரு டாக்டரும் ஒண்ணும் பண்ண முடியலல்லா? வாக்கரிசிப் பிள்ள வந்து அந்தப் பிள்ள தலைல கைய வெச்சதுதான் உண்டும், பிள்ள மொகத்துல என்ன ஒரு திருப்தி, ஆத்மா அப்பதான சாந்தி அடஞ்சி. அந்த மனுசனுக்கு ஒரு தெய்வாம்சம் உண்டும், பாத்துக்கோரும்.”

“உள்ளது, உள்ளது. ஆமா, வாக்கரிசிப் பிள்ள ஊர்ல உண்டுமா ஓய்?”

“அவரு எங்க போகப் போறாரு? மனுசன் என்னா பவுசு காட்டிட்டுத் திரிஞ்சாரு? பெரிய பண்ணையாரு மாதி. பின்ன, எல்லாம் கவர்ன்மெண்டு சோலி உள்ள வரைக்கும் தான. ரிட்டயர்டு ஆன பொறவு கொளத்தாங்கர அரச மரந்தான் கெட. ஊர்ப்பாடு பேசதுக்கும் நல்லா ஆப்பமும் ரச வடையும் முழுங்கதுக்கும் கேக்கணுமா, என்ன?”

“அதச் சொல்லும். வக்கணையான ஆளாக்கும். அடியேந்திரத்துக்கு அவரு வந்து மொத எலைல சாப்ட்டாதான் நமக்கு சாப்பாடு. பின்ன, மேல இருக்கப்பட்டவாளுக்கு அப்பதான ஒரு நெறவு கெடைக்கும்?”

வாக்கரிசிப் பிள்ளை மாமா என் அம்மாவின் பெரியப்பா மகன். பெரும்பாலும் வெள்ளை வேட்டி மட்டும்தான். மேலுடம்பும் பெரிய தொப்பையுமாக தள்ளித் தள்ளி நடந்து செல்வார். கையில் எப்போதும் ஒரு வெற்றிலைப் பெட்டி. வெற்றிலையைக் குதப்பிக் குதப்பி அவர் பேசுவது பல சமயங்களில் எனக்குப் புரிவதேயில்லை. ஆனால், அவர் இருக்கும் கூட்டத்தில் எப்போதும் கேலியும், உற்சாகமும் நிரம்பி வழியும். ஊரில் எல்லா பெண்களும் அவருக்கு மைனியோ கொளுந்தியோ தான். ஆண்கள் எல்லோரும் சவத்துப்பயலோ, கிறுக்குப்பயலுக்குப் பொறந்த பயலோ தான்!

எப்போது என்னைப் பார்த்தாலும் “மருமவன, எப்ப வந்து எம்பொண்ணத் தூக்கிட்டுப் போகப் போறீரு?” என்று கேட்டுச் சிரிப்பார். நான் வெட்கப்பட்டு நிற்க, “என்ன ஓய் வெக்கம் ஒமக்கு? பொண்ணு எப்ப வேண்ணா ரெடி, கேட்டீரா? மீச வரட்டும், என்னா?” என்பார். மாமா பெண் என்னை விட பத்து வயதாவது பெரியவள்.

மாமா என்னிடம் மட்டுமல்ல, ஊரில் எல்லாச் சிறுவர்களிடமும் இதேபோலத்தான் கேட்பார். தன் வேட்டி மடிப்பில் எப்போதும் வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை எங்கள் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போடுவார். அப்படியே கட்டிப்பிடித்து ஆளுக்கொரு முத்தம். நாங்கள் மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்க் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போது மிக வேடிக்கையாக இருக்கும். மாமா வருவதைப் பார்த்ததும் எதிரில் வரும் தாத்தாக்களும் ஆச்சிகளும் அப்படியே திரும்பி தங்கள் வீடுகளுக்கு விறுவிறுவென்று செல்வார்கள். முதலில் இது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், ஊர்த் தலைவர் தன் கடைசிப் படுக்கையில் இருந்தபோது மாமா வந்து அவரருகே நின்று ஏதோ பேசிவிட்டுப் போனதும் தலைவர் வீட்டில் ஒப்பாரிச் சத்தம் எழுந்ததைப் பார்த்ததும் எங்களுக்கும் மாமாவின் மீது சிறிய பயம்தான்.

மாமா நல்ல வேலையில் இருந்தார். ஊரில் எல்லோருக்கும் உதவி செய்வதில் முதல் ஆளாக வந்து நிற்பார். அடுத்த ஊர்த் தலைவர் அவர்தான் என்று கூட பேச்சு அடிபட்டது. இப்போது ஓய்வு கிடைத்ததும் எங்களைக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போவதுதான் மாமாவின் பொழுதுபோக்கு. ஒவ்வொரு வீட்டிலும் மாமாவை விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் மதிய உணவு என்று எழுதப்படாத முறைமையையே உருவாக்கிவிட்டார் வாக்கரிசிப் பிள்ளை மாமா.

“எம்மா, அதெப்படிம்மா, வாக்கரிசி மாமாக்கு மட்டும் எல்லா வீட்லயும் செம சாப்பாடு போடுகா?” என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன்.

“அடிச்சுப் பல்ல ஒடச்சிருவேன் ராஸ்கல். பெரியாளுக்கு மரியாத குடுக்காமப் பேசுக. எங்க செல்ல அண்ணனாக்கும், பாத்துக்கோ.” என்று முறைத்தாள் அம்மா.

“சாரி, சாரி. சொல்லும்மா.”

எதையோ நினைத்து சிரித்த அம்மா, “பின்ன, ஒவ்வொருத்தரும் செஞ்ச பாவம் கொஞ்சமா? பயம், உயிரு போயிருமோன்னு பயம், பின்ன என்னத்துக்குப் பயந்து ஓடப் போறா?” என்றாள்.

“மாமா வந்து பாத்தா தாத்தா ஆச்சில்லாம் செத்துப் போயிருவாளாம்மா?”

“அப்பிடி பேசப்படாது பாத்துக்கோ. அது தெய்வ காரியமாக்கும்.”

அதில் என்ன தெய்வகாரியம் இருக்கும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

அப்பாவும் சித்தப்பாவும் வேகவேகமாக எங்கோ சென்றனர்.

“அதாக்கும் செரி. பெரியவரு ராசிக்கு இன்னிக்கி சொர்க்கம்லா!” என்று ஒரு மாமா சொல்ல, “உள்ளதாக்கும். பின்ன, வாக்கரிசிப் பிள்ள சரக்கடிக்கப் போயிருக்கப் படாது.” என்று இன்னொரு மாமா சொன்னார்.

மாமா சாயங்காலங்களில் வேறு ஒரு மனிதராகி விடுவார். அரச மரத்தடியில் உட்கார்ந்து வாய்விட்டுச் சத்தமாகப் பாடுவார். பெரும்பாலும் மலேசியா வாசுதேவன் பாடல்கள்தான். பக்கத்தில் சென்றால் இழுத்துப் பிடித்து கட்டியணைத்து முத்தமிடுவார். குமட்டிக் கொண்டு வரும் வாடை.

அப்படியொரு சாயங்காலம் நான் அந்த வழியாக வந்தபோது மாமா தனியாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

“என்ன ஓய் மருமவனே, பாத்தும் பாக்காத மாதி போறீரே ஓய்? இங்க வாரும்.” என்று சிரித்தார்.

நான் அவரது அருகே சென்று நின்றேன்.

“என்ன மருமவனே, மாமாவப் பாத்து எதுக்கு பயப்படுகீரு? நமக்குள்ள ஆயிரம் மேட்டரு உண்டும்லா, ஊருல ஒரு பய கேக்க முடியாது, என்னா? எம் பொண்ண ஒமக்குத் தான் கெட்டி வப்பேன், கேட்டீரா ஓய்? பின்ன, எவளாம் வெள்ளத்தோலுக்காரிய லவ்வு பண்ணிட்டீருன்னா செரியா வராது, பாத்துக்கோரும். மாமாக்க சத்தியமாக்கும்.”

நான் வெட்கத்தில் சிரித்து நின்றேன்.

“இங்கண வந்து இரியும் மருமவன.” என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் மெல்லச் சென்று அவரருகே உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு ஆரஞ்சு மிட்டாயை என் வாயைத் திறந்து உள்ளே போட்டவர், என்னைக் கழுத்தோடு கட்டிப்பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அந்த எச்சிலைத் துடைப்பதைப் பார்த்துச் சிரித்தார்.

“என்ன மருமவன, எச்சியத் தொடைக்கீரு, என்னா?” என்று கேட்டவர் அமைதியாகத் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரது மார்பு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. நீளமாக மூச்சிழுத்து விட்டது போலிருந்தது. என் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அப்போ ஒம்ம வயசுதான் இருக்கும் எனக்கு! எங்க அப்பாக்க மொகம் கூட இப்போ செரியா கண்ணுல வர மாட்டுக்கு. வயல் வேலக்கிப் போன மனுசன நாலு வேரு ஒரு கயித்துக் கட்டில்ல தூக்கிட்டு வந்தானுகோ. ஆளு சும்மா சொடல மாடன் கணக்கா இருப்பாரு, கேட்டீரா? ஒத்தக்கி ஒரு பய எதுத்து நிக்க முடியாது. ஊருல எல்லாச் சட்டம்பிப் பயக்களுக்கும் எங்க அப்பாவக் கண்டா பயமாக்கும். புடிச்சி செவுட்டப் பேத்து விட்டுருவாருல்லா! பின்ன, எவனாம் செய்வின வச்சிட்டானோ என்னவோ? வச்சாலும் வச்சிருப்பானுகோ. ஒரு பயலயும் நம்பதுக்கில்ல. கட்டில்ல கெடயாக் கெடந்த மனுசன் ஒரு பொட்டு அசயல்ல. பத்து நாளு. எங்கம்ம அழுது அழுது மயங்கி விழுந்துருவா. நானும் எங்க அக்காவும் என்னத்தச் செய்ய முடியும்? அந்தக் காலத்துல இப்ப மாதி இல்லல்லா? என்ன நோயி, என்ன மருந்துன்னு யாருக்குத் தெரியும்? டாக்டரப் பாக்கணும்னா சும்மா இல்ல, கேட்டீரா? என்னல்லாமோ மருந்தக் குடுத்துப் பாத்தா. அப்பா அலங்குவனா பாருன்னு நீட்டிட்டுக் கெடக்காரு. பின்ன, எத்தன நாளக்கி எல்லாரும் அழுவா? அவரு பாட்டுக்குக் கெடக்கட்டும்னு அம்மா வயலுக்கு நடவும், கள பறிக்கவும் போயிருவா. பின்ன, வயித்துக்குக் கஞ்சி வேணும்லா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ.”

மாமா அழுகிறாரா, சலுவை வடிக்கிறாரா என்று புரியாமல் அவர் முகத்தைப் பார்த்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.

“ஒரு நாளு அம்மயும் அக்காவும் வயலுக்குப் போய்ட்டா. நான் அப்பா பக்கத்துல இருந்து அவ்வோ வாயத் தொறந்து கொஞ்சம் கொஞ்சமா கஞ்சி ஊத்துகேன். எப்பவும் அவ்வோ நெஞ்சு அசையான்னு மட்டும் பாத்துட்டே இருப்பேன். அன்னிக்கி கொஞ்சம் தூக்கித் தூக்கிப் போட்ட மாதி இருந்து. நெஞ்ச இறுக்கித் தேச்சி விட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி அவ்வோ ஒடம்பு படபடன்னு ஆடிட்டு, வெட்டு வந்த மாதி. நா ‘எப்பா, எப்பா, என்னப்பா செய்யி’ன்னு அழுகேன். வெட்டு நின்ன பாடில்ல. வீட்டுத் தாக்கோல எடுத்து அவ்வோ கைலக் குடுத்தேன். இறுக்கிப் பிடிச்சிட்டு துடிச்சிட்டே கெடந்தா. சட்டுன்னு ஒரு அசைவு இல்லாம நின்னு. நா ஒத்தக்கி ஒருத்தனா என்ன செய்வேன்? அப்பா செத்துட்டாருன்னு நெனச்சி அம்மக்கிட்ட சொல்ல ஓடுனேன்.”

நான் மெளனமாக கேட்க, மாமா என் கைகளை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தார்.

“நா ஓடுகேன். ’மக்ளே’ன்னு ஒரு சத்தம். அப்பா கொரல்தான். எனக்கு நடுங்கிட்டு. திரும்பிப் பாக்கேன், அப்பா எந்திச்சி ஜம்முன்னு உக்காந்திருக்கா. கட்டில்ல இருந்து என்னப் பாத்து கையசச்சிக் கூப்புடுகா. என்னால நம்பவே முடில. ஓடிப் போயி அவ்வோ கையப் புடிச்சேன். அப்பா மெல்ல எந்திச்சி என்னக் கூட்டிட்டு வீடு முழுக்க ஒரு சுத்து நடந்தா. அப்பிடியே வெளக்கு முன்னால கூட்டிட்டுப் போயி நின்னா. அவ்வோ மொகத்துல அப்போ அப்பிடி ஒரு ஐசுரியம். சும்மா தகதகன்னு ஜொலிக்கா அப்பா. அப்பிடியே கண்ண மூடி நின்னா. பொறவு கைய நீட்டி தாம்பாளத்துலருந்து திருநீற எடுத்துக் கேட்டா. நா எடுத்துக் கொடுத்தேன். ஏதோ மனசுக்குள்ள சொன்னா அப்பா. என்னன்னு எனக்குப் புரியல்ல. பெரிய சாமிகொண்டாடில்லா? திருநீற எடுத்து என் நெத்தில பூசி விட்டுட்டு அவ்வோ நெத்திலயும் பூசினா. அப்பிடியே கூட்டிட்டுப் போயி கட்டில்ல இருந்தா. கொஞ்ச நேரம் எம்மூஞ்சிய பாத்துட்டே இருந்தா. சிரிச்சிட்டே மெதுவா கட்டில்ல படுத்தா. நா அப்பா கைய தடவி விட்டுட்டு இருந்தேன். அப்பா என்னயே பாத்துட்ருந்தா. என் கைய எடுத்து அவ்வோ நெஞ்சுல வச்சா. நெஞ்சு மெல்ல மெல்ல அசஞ்சிட்டு இருந்து. அப்பாக்க மூச்சுச் சத்தமும் என்னோட மூச்சுச் சத்தமும் மாறி மாறிக் கேட்டு. எல்லாம் கொஞ்ச நேரந்தான். இந்தா, இந்தக் கை வழியாத்தான் எங்கப்பா போனா பாத்துக்கோ.” என்று சொல்லி என் கையோடு சேர்த்து அவரது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தினார்.

சிறிது நேரம் மாமா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

“பொறவு நமக்கு இந்தப் பேரு ஒட்டிக்கிட்டு. அது சும்மால்ல, ஒரு தோணக்கமாக்கும். செல மூஞ்சியப் பாத்த ஒடனே தோணிரும், இது தேறாதுன்னு. என்னைக்கு எத்தன மணிக்குப் போகும்னு கூட தெரிஞ்சிரும். பின்ன, நானாட்டு ஒண்ணும் சொல்லதில்ல. அப்பிடி ஒண்ணு ரெண்டு எடத்துல சொல்லப் போயி சொன்ன மாதியே நடந்துட்டு. பின்ன, அதுவே பேராயிட்டு. செரி, நம்மளும் பாவம் ஒண்ணும் பண்ணலல்லா? இழுத்துட்டுக் கெடக்கது கொடூரம்லா மருமவன? போயி பக்கத்துல நின்னாப் போறும். என்ன பேசுகேன்னும் தெரியாது, அங்க என்ன நடக்கும்னும் தெரியாது. சீவம் சொகமாப் போயிரும். அதான மருமவன வேணும். என்னத்த வாழ்ந்து என்னத்துக்கு?”

*

சற்று நேரத்தில் வாக்கரிசிப் பிள்ளை மாமா வந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் பயங்கரமாகக் கோபம் வந்தது. என் தாத்தாவின் மரணத்தைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அப்பாவும் சித்தப்பாவும் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டு மாமாவை உள்ளே போகச் சொன்னார்கள். நான் அவருக்கு முன்னாக ஓடிச் சென்று தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். எனக்குத் தெரிந்த சாமி மந்திரங்களையெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தேன். மாமாவின் மந்திரம் இன்று பலிக்கக் கூடாது என்று எல்லா சாமிகளையும் வேண்டினேன்.

மாமா வந்து நின்று என் தலையில் கைவைத்து வருடினார். நான் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவரைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து என் முன் நீட்டினார். நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

“மக்ளே, வெளிய வா கொஞ்சம்” என்று அம்மா அழைத்தாள்.

“ஒண்ணுல்ல மக்ளே. மருமவன் இங்கயே இருக்கட்டும்.” என்று பதில் சொன்னார் மாமா.

அம்மா வந்து மாமாவின் கையில் ஒரு தம்ளர் பால் கொடுத்துச் சென்றாள். ஒரு மடக்கை தன் வாயில் விட்டவர், “மக்ளே, கொஞ்சம் சீனி போட்டுக் கொண்டா.” என்றார்.

அம்மா சீனி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். மாமா ஏதோ வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார். எனக்குள் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால், எதுவும் நடக்காததைப் போல, அல்லது வேறு யாருக்கோ நடப்பதைப் போல தாத்தா சுகமாகப் படுத்துக் கிடந்தார். அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாகியது. என்ன ஒரு கம்பீரம், அழகு! தாத்தா என்னைப் பார்த்து சிரித்ததைப் போல இருந்தது. மாமா மூன்று முறை தாத்தாவின் வாயில் பாலை விட்டார். தாத்தா நல்ல பிள்ளையாக வடிக்காமல் பாலை விழுங்கினார். மாமா சற்று நேரம் அமைதியாகக் கண்களை மூடி நின்றார். பின், தாத்தாவின் காலைத் தொட்டு வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். வெளியே ஒரே சலசலப்பு!

நான் தாத்தாவின் அருகே உட்கார்ந்து எனது கையை அவரது கையோடு சேர்த்து அவரது நெஞ்சில் வைத்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். எங்கள் கைகள் மேலும் கீழும் மெல்ல ஏறி இறங்கின. எனது மூச்சும் தாத்தாவின் மூச்சும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தது. வாக்கரிசி மாமா வைத்துவிட்டுப் போன ஆரஞ்சு மிட்டாய் தாத்தாவின் தலைமாட்டில் இருந்தது.

 

 

புத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை

மெல்லிய தூறலாக ஆரம்பித்த மழை இன்னும் வலுத்துப் பெய்யத் தொடங்கியது. பக்கத்தில் எங்கோ இடி விழுந்த மாதிரி இருந்தது. அந்த அலுவலகக் கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்த தென்னை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு தென்னம்பாளை காற்றில் ஆடிக் கீழே விழுந்தது. முற்றம் முழுதும் பன்னீர்ப்பூக்களும் பூவரசம்பூக்களும் இரைந்து கிடந்தன. முகப்பில் இருந்த மின்விளக்கைச் சுற்றிலும் ஈசல்கள் மொய்த்தன. வரவேற்பறையின் சன்னல் வழியே நீண்ட இழுப்புகளாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் கெவின். அவனது சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. அடுத்த அறைக்குச் செல்லும் வழியில் தொங்கிய திரைச்சீலையைப் பிடித்துக் கை விரலில் சுற்றிக்கொண்டு அவனைப் பின்புறத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மேக்டலீன்.

ஊளைக்காற்றுடன் தாண்டவமாடி ஓர் உச்சத்தை அடைந்த மழை மெதுவாக அமைதியடைந்தது. அதற்குள் மூன்று நான்கு சிகரெட்டுகள் முடிந்துவிட்டன. இருவரிடையே வேண்டா விருந்தாளியாக ஒரு நீண்ட மௌனம். கலைந்திருந்த கூந்தலைப் பின்னிக்கொண்டே, “என்னக் கொண்டு வடசேரி பஸ் ஸ்டாண்ட்டுல விடுவியா கெவின்?” என்று கேட்டாள் மேக்டலீன். எப்போதும் மாறாப் புன்னகை அப்போதும் அவளது முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.

திரும்பிப் பார்க்காமல், “ம்ம்..ஃபைவ் மினிட்ஸ்.” என்றான் கெவின். உள்ளே சென்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வந்தான். போனை எடுத்துப் பார்த்தபோது பதினைந்து மிஸ்டு கால்கள்..லிசாவும் அம்மாவும் அழைத்திருந்தார்கள்.

மழையீரத்தில் பைக் கிளம்ப மறுக்க சலித்துக்கொண்டு பலமாக மிதித்தான் கெவின். அலுவலக வாசலில் நின்று முகத்தில் விழும் கற்றைமுடியை ஊதியவாறு அவனை ஒரு கிண்டல் தொனியில் பார்த்தாள் மேக்டலீன்.

வண்டி ஒருவாறாகக் கிளம்ப, துள்ளிச்சென்று பின்னால் ஏறிக்கொண்டாள். ஏதும் பேசாமல் வழக்கத்தை விட மிக வேகமாக ஓட்டினான் கெவின்.

“கெவின், மழநேரம்லா, மெதுவாப் போ…ஸ்கிட் ஆகிறாம…”

“ம்…”

வண்டி வேகம் குறையாமல் தொடர்ந்து செல்ல, மீண்டும் மழை தூற ஆரம்பித்தது.

“கெவின், மழ பலத்துப் பெய்யப் போகு…எங்கயாம் நிறுத்து..மழ நல்லா விட்டப்பொறவு போவம்..”

கெவின் அடுத்திருந்த கல்லடி சர்ச் வாசலில் வண்டியை நிறுத்த, துள்ளியிறங்கி ஓடினாள் மேக்டலீன். அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் எதையோ யோசித்தவனாக வந்து நின்றான். அங்கு வேறு யாரும் இல்லை. சர்ச் முகப்பிலிருந்த மின்விளக்கு விட்டு விட்டு எரிந்தது. கெவின் மழை பெய்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மேக்டலீன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் ஏதும் பேசமாட்ற?” என்று அவனது கையைப் பிடித்தாள்.

“நா ப்ரே பண்ணனும்…நீ?” என்றவாறு அவளது கையைத் தவிர்த்தான்.

“இல்ல..நீ போய்ட்டு வா…நா இங்க நிக்கேன்…” என்றவாறு மழையில் கைநீட்டி நின்றாள்.

பதற்றமாக முழங்காலிட்டு நின்று கண்களை மூடினான் கெவின்.

“சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே…” என்று ஆரம்பித்ததும் மேக்டலீனுடனான சந்திப்புகள் மனதில் வந்து நிற்க, ஜெபம் நின்றது. மனதைத் தடை செய்யாமல் அதன்வழி விட்டான்.

‘மேக்டி அவ மாமனாருக்கு ப்ளட் கொடுக்க என்ன கூப்புட்ட சமயமே எனக்கு ஒரு மாதி தோணிச்சி. ப்ளட் பேங்க்ல அவளுக்குத் தெரியாத ஆளே கெடையாது. பொறவு எதுக்கு மெனெக்கெட்டு என்னக் கால் பண்ணிக் கூப்புடணும்? அவ மாப்ளயும், அத்தயும் என்ன கால்ல விழாத கொறயா தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க… நா நெனச்சிருந்தா வேறெதாம் எடத்துல ப்ளட் அரேஞ்ஜ் பண்ணி குடுத்துருக்கலாம்..ஆனா, நா அப்டி செய்யலல்லா..அப்ப எனக்கும் அந்த சந்தர்ப்பம் தேவைன்னதாலத்தான நா போயிருக்கேன்.’

“தப்பிப்போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம்…”

‘அவ கவர்ன்மென்ட் வேலக்கிப் போனதுக்கு நாந்தான் காரணம்னு அவ ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னா..எனக்கு ஷாக்காயிட்டு…எதுக்கு இவ இப்பிடிப் பொய் சொல்லுகான்னு நா கொழம்பிட்டேன்..’

“எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம்..”

‘மொத தடவ எனக்க ஆஃபீசுக்கு வந்தப்பயே ஏதோ ரொம்ப நாள் பழகுன ஃபிரெண்ட் மாதி பேசுனா..என்னதான் நா கமிட்டெடா இருந்தாலும் அப்பிடி ஒரு பொண்ணு, அவ்ளோ அழகான பொண்ணு வலிஞ்சு வந்து பேசும்போ நா பெரிய உத்தமன் மாதி நடிக்க முடியாதுல்லா..நா அப்பிடி படம் வைக்க ஆளும் இல்ல..அவ பாக்கதுக்கு காலேஜ் முடிச்ச பொண்ணு மாதிதா இருந்தா..பொறவு பேசும்போ என்ன விட ஏழு வயசு பெரியவ, கல்யாணம் கழிஞ்சி ஒரு பிள்ள இருக்குன்னு சொன்னா..என்ன கொமைக்கான்னுதான் நெனச்சேன்..ஆனா ஃபேமிலி ஃபோட்டோவ காணிச்சா…என்னால அப்பவும் நம்ப முடியல..அன்னிக்கி ஆரம்பிச்ச ஃபோன்தான்…டெய்லி கால் பண்ண ஆரம்பிச்சா..மொதல்ல ஃபார்மலா பேச ஆரம்பிச்சா…பொறவு கொஞ்ச கொஞ்சமா என்ட்ட ஃப்ளர்ட் பண்ற மாதிரி பேசுனா..எனக்கும் அவ பேசுறது, அவ நடக்கிறது, அவ அழகு எல்லாமே புடிச்சனால நானும் கம்பெனி கொடுத்தேன்..’

“உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்துவந்தோம்..”

‘அப்ப கம்பெனி குடுத்தவனுக்கு இப்ப என்ன மயித்துக்கு கில்ட்டி ஃபீலிங்ன்னு கேக்கேன்..தாயளி நீ யோக்கியன்னா அப்பவே அவட்ட, எனக்கு லவ்வர் இருக்கா, எனக்க அத்த மவதான்..எங்கிட்ட இப்படிப் பேசாதன்னு சொல்லி கட் பண்ணிருக்கணும்லா…செரி, அத விடு…அவ மாப்ள வீக்கெண்ட்ல மட்டுந்தா ஊருல இருப்பாருன்னுத் தெரிஞ்சும் அவ அன்னிக்கிக் கூப்புட்ட ஒடனே ஓடித்தானல போன?..இத்தனைக்கும் அவ யாரும் இல்லன்னு சொல்லி வேற கூப்புடுகா..அப்பிடி என்ன டே அவசரம் அவளுக்கு? மெடிசின் வேணும்னா வாங்கிக் கொடுக்க வேற ஆளே கெடைக்காதா? நீ எப்படான்னுதானல இருந்த? அதான் கூப்புட்ட ஒடன ஓடிட்ட..ஆனா அவளும் செரியான ஆளுதாம் பாத்துக்க..ஒடம்பு செரியில்லன்னு சொன்னா..வீட்டுக்குப் போயிப் பாத்தா அப்பத்தான் குளிச்சி முடிச்சி பட்டுப்பொடவ கெட்டி ஒக்காந்துருக்கா..நீயும் நல்ல சான்ஸ்னு நெனச்சிருப்ப ராஸ்கல்..செரி, போனது தான் போன, சட்டுன்னு மெடிசின குடுத்துட்டுப் பொறப்பட வேண்டியதான? பெரிய மயிரு மாதி ‘ஒரு காபி கூட தர மாட்டீங்களா’ன்னு நீ தான கேட்ட? நீ காபி மட்டுமா கேட்ட?..அஃபிசியல் ட்ரெஸ்லயே பாத்துட்டு இப்ப சாரீல பாக்கும்போ அநியாயத்துக்கு அழகா இருக்கீங்கன்னு நீ தான ஆரம்பிச்ச? ஒனக்கு நல்லாவே தெரியும்ல, அன்னிக்கி என்ன நடக்கும்னு..அவளுக்கும் அப்ப அப்டிதான தோணிருக்கும்..அதான், நீ பொறப்படும்போ வந்து கெட்டிப்புடிச்சா..நல்ல வேள, அப்ப லிசா கால் பண்ணா….இல்லன்னா நீ துணிஞ்சிருப்ப டே..பெரிய யோக்கியன் மாதி வேஷம் போடாத..’

“எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும், ஆண்டவரே, தேவரீர், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச்செய்த வாக்குதத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும்..”

‘அவளுக்கு ஒரு பொம்பளப் பிள்ள இருக்குல்லா ல, அதக்கூடவா நீ யோசிக்கல? நாளக்கி ஒம் பொண்டாட்டி வேறொருத்தங் கூடப் போனா ஒனக்கு எப்பிடி இருக்கும்? அவ ஹஸ்பண்ட் எவ்ளோ டீசன்டான மனுசன்? உன்ட்ட எவ்ளோ மரியாதயா பேசுனாரு? நீ ஒரு நிமிஷம் அந்தாள நெனச்சுப் பாத்தியால? செரி, அதயும் வுடு..அவ லவ் மேரேஜ் தான பண்ணிருக்கா? பொறவு என்ன மயித்துக்கு ஒனட்ட வந்தா? நீ நெனச்சது செரிதாம்ல..இவ பிட்ச் தான்…அவளுக்க நடையும் ஆட்டலும்…இன்னிக்கி எப்பிடி ஒன்ன மயக்குனா பாத்தியா? பிட்ச்..பிட்ச்..அவ ஒவ்வொரு ஸ்டெப்பும் பிட்ச் மாதிதான ல இருந்து…ஆனா இன்னிக்கி எல்லாஞ் செஞ்சிட்டு கடைசில எதுக்கு கண்ணீர் வுட்டான்னு தெரிலய? பெரிய பத்தினி மாதி…சப்புன்னு அறஞ்சிருக்கணும் நீ, என்ன மயித்துக்கு அழுகன்னு…அந்த சென்டிமென்ட்ல நீ வுழுந்துருவன்னு நெனச்சிருப்பா…அப்பிடியே தேவப்படும்போ ஒன்ன யூஸ் பண்ணலாம்னு ப்ளான் போட்ருப்பா..’

“தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும்.”

‘செரி, அவதான் அப்பிடி..நீயாவது ஒழுங்கு மயிரா அவாய்ட் பண்ணிருக்கலாம்லா? ஃபோன்ல அவ கேக்கும்போதே, இல்ல, வேற வேல இருக்குன்னு சொல்லிருக்க வேண்டியதான? ஆறு மணிக்கு மேல ஆபீஸ்ல ஒனக்கு என்ன வேல? மழ வரமாறி இருக்குன்னு சொல்லி அவாய்ட் பண்ணிருக்க வேண்டியதான?’

“பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்படுத்தும்.”

‘எடைல என்னமோ சொன்னாள, ம்ம் … கெவின், நீ ஒரு கொழந்த மாதின்னு…மயிரு…அவ ரொம்ப நாளா இதுக்கு ப்ளான் பண்ணிருப்பா மக்கா…இல்லன்னா இப்பிடி ஒன்ன மடக்க முடியுமா?…ஆனா, அவளவிட நீதாம்ல பெரிய கள்ளன்..அவ பிட்ச்னா நீ யாருல? அவ ஹஸ்பண்ட்க்கு பண்ணது துரோகம்னா நீ லிசாவுக்குப் பண்ணதுக்குப் பேரென்னல ராஸ்கல்? அந்தப் பிள்ள ஒன்னதான் கெட்டுவேன்னு மருந்தடிச்சால்லா, அதெப்பிடி ல மறந்த நீ? அப்பிடி ஒனக்கு எடுப்பெடுக்குமா ல, தொட்டி?’

“மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும்….”

‘ஒண்ணுமே தெரியாத மாதி மூஞ்சிய வச்சிட்டு எப்பிடித்தான் நிக்காளோ? நீ மட்டும் அவட்ட இப்ப பேச்சுக் கொடுத்தன்னு வையி, தொலஞ்ச கேட்டியா..இன்னியோட போட்டும்…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….ஒரு பாடம்னு நெனச்சுக்க பாத்துக்க… இல்ல, யாருக்கும் தெரியாம மேனேஜ் பண்ண முடியும்னுல்லாம் நெனைக்காத..பேப்பர்ல எவ்ளோ கத வருகு டெய்லி..இது அத மாதிதான் போயி முடியும்..சொன்னா கேளு..ஒனக்கு வயசிருக்கு..லைஃப்ல பாக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு பாத்துக்க..ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் ஒங்க அம்மாவ நெனச்சுப் பாத்தியால நீ….தொட்டி…நாளக்கி விசயம் வெளிய தெரிஞ்சா ஒங்கம்மா தாங்குவாளா சொல்லு..தொங்கிர மாட்டாளா?..நீ செஞ்ச காரியத்துக்கு நீ தாம்ல தொங்கணும் ராஸ்கல்.. கடைசியா சொல்லுகேன், நடந்தது நடந்தாச்சு, ஒழுங்கு மரியாதயா இவள இன்னயோட விட்டேன்னா பொழச்ச…இல்லன்னா, ஒந் தலையெழுத்து..தெருவுந் திண்ணையுமா நிக்கப்போற, எழுதி வச்சுக்கோ..’

“நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.”

….

வெளியே வந்தவன், மேக்டலீனின் அருகே சென்று அமைதியாக நின்றான்.

“என்ன கெவின்? கன்ஃபெஷன் குடுத்தியோ?” என்று புன்னகைத்தாள்.

அவன் முகத்தில் எரிச்சலோடு ஏதும் சொல்லாமல் நின்றான்.

“கெவின்..என்னத் தேவிடியான்னு தான நெனச்ச?”

“என்ன…என்ன பேசுக மேக்டி…இல்ல…இல்ல” என்று வேகமாகத் தலையை ஆட்டினான். ஏதாவது பேசிவிடக் கூடாதென தன்னைக் கட்டுப்படுத்தி நின்றான்.

“கெவின், நா ஒண்ணும் தேவிடியா இல்ல கெவின்…..” தீர்க்கமாக அவனைப் பார்த்துச் சொன்னாள் மேக்டலீன். அவளது பாதிமுகம் மட்டும் வெளிச்சத்தில் தெரிந்தது.

அவளது போன் அடிக்க, எடுத்து, “ம்ம்..கிருஷ்ணா…நா இப்ப வந்துருவேன்…” என்று சொன்னாள். பின், சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் ஃபோனில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.

“கெவின், கெளம்பலாம்.” என்றாள்.

“மழ அடிச்சு பெய்யில்லா மேக்டி…கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..” என்று அவள் முகத்தைப் பார்த்தான் கெவின்.

“இல்ல, வா.. போலாம்” என்றவள் பைக் அருகே சென்றாள். கெவின் வண்டியை எடுத்தான், அவள் மெதுவாக ஏறி உட்கார்ந்தாள். மழையில் நனைந்த அவளது முகத்தில் ஒரு புன்னகை தோன்றி நீடித்தது. மழை இருவரையும் பாரபட்சமின்றி முழுக்க நனைத்தது.

மேக்டலீன் மேல் விழுந்து வழிந்த மழைத்துளிகளோடு அவளது எண்ணங்களும் சேர்ந்துகொண்டன.

‘கெவின் எங்க மாமனாருக்கு ப்ளட் கொடுக்க கண்டிப்பா வருவான்னு எனக்குத் தெரிஞ்சிச்சி. நா கூப்புட்டா அவனால நோ சொல்ல முடியாது..அவனுக்கு எம்மேல ஒரு ஈர்ப்பு..அது அவன் என்ன மீட் பண்ண மொத நாள்லயே எனக்குத் தெரிஞ்சு போச்சு.. ஆனா, நா அவன அதுக்கு முன்னாடி ரொம்ப தடவ பாத்துருக்கேன்..கேஸ் விசயமா ஜி.ஹெச்சுக்கு அப்பப்போ வருவான்..அவன் பேஷண்ட்ஸ்ட்ட நடந்துக்கிட்ட விதம், அவங்க மேல காட்டுன அக்கற, எப்பவுமே அவனச் சுத்தி இருந்த ஒரு கலகலப்பு எல்லாஞ் சேந்து எனக்குள்ள என்னெல்லாமோ செஞ்சிட்டு..அப்ப நா இருந்த நெலம அப்பிடி..

அவன வீட்டுக்கு வர வச்சி கெட்டிப் புடிச்சப்பக்கூட எனக்கு சொகமால்லாம் இல்ல..அப்ப நா முழு மனசா அதச் செய்யல..சொல்லப் போனா ஒடம்பு கூசிச்சு..கிருஷ்ணா மேல இருந்த கோவந்தான் மனசுல வந்துட்டே இருந்து..என்ன லவ் பண்ணித்தான கல்யாணம் பண்ணுனான், அதுக்காக வீட்டுல எவ்ளோ சண்ட போட்டான்? அத்த, மாமாக்கு என்ன ஏத்துக்க மனசேயில்ல..கிருஷ்ணா ஒத்தக்கால்ல நின்னதாலதான் சம்மதிச்சாங்க….நா நெனச்சிருந்தா கிருஷ்ணாவ கூட்டிட்டுத் தனியா போயிருக்கலாம்லா? ஆனா, அவனுக்கு அப்பா அம்மான்னா உயிருங்கறதாலத்தான எல்லாத்தயும் தாங்கிக்கிட்டு இருந்தேன்..அவன் முன்னாடி ‘மக்களே, மக்களே’ன்னு பேசிட்டு, அவன் இல்லாதப்ப என்னப் படுத்துன பாடு…ஒரு நாளாவது நான் செஞ்ச எதயாம் நல்லாருக்குன்னு சொல்லிருக்காங்களா? எதுக்கெடுத்தாலும் கொற. குத்திக் குத்திப் பேசுனா?…தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொன்னாக்கூட நான் பொறுமையா இருந்தேன்லா? நா நெனச்சா சொகமா வீட்ல இருந்து கால் மேல கால் போட்டு சாப்பிட்டுட்டு இருந்துருக்கலாம், ஆனா, அவங்களுக்காகத்தான கஷ்டப்பட்டு கவர்ன்மென்ட் வேலக்கி ஏறுனேன்..அவங்க ட்ரீட்மென்ட்க்கு கிருஷ்ணா எஞ் சம்பளத்த வச்சித்தான சமாளிக்கான்..ஒரு மூச்சு வீட்டு வேல, பொறவு ஆஃபீஸ், பின்ன சாய்ங்காலம் மறுபடியும் வீட்டு வேல, எல்லாத்தயும் அவனுக்க அந்த உண்மையான அரவணைப்புக்காகத்தான செஞ்சேன்..பொண்டாட்டியா அவனுக்கு என்ன கொற வச்சேன்? ஒடம்புக்கு முடியலன்னா கூட மறுத்தது கெடையாத..ஆனா, அவனால எப்பிடி எனக்குத் துரோகஞ் செய்ய முடிஞ்சு?

அந்த ஃபோன் கால் மட்டும் வரலன்னா என் லைஃப் எப்பிடி சந்தோசமா இருந்துருக்கும்! மொதல்ல நா நம்பல..சே, சே.. எவனோ வேண்டாதவன் பண்ணுக வேலன்னுதான் நெனச்சேன்..ஆனா, நானே என் கண்ணால அந்த மெஸேஜ், வீடியோல்லாம் பாத்தப் பொறவு எப்பிடித் தாங்க முடியும்?

எங்கம்மாவும் அப்பாவும் என்ன எப்பிடில்லாம் வளத்தாங்க? கால தரைல பட விட மாட்டாங்களே..எல்லாமே நா நெனச்ச மாறிதா நடக்கும்..பெரிய பிள்ளையா ஆனப்பொறவுதான் என்ன அவங்க தத்தெடுத்து வளக்க விசயமே எனக்குத் தெரிஞ்சிச்சி..ஆனாலும், எப்பவுமே நாந்தான அவங்க செல்லப் பிள்ள? மாத்தாம்பிள்ளைன்னு ஒரு நாள் கூட பாத்துருப்பாங்களா? எங்கக்காவ விட என்ன எப்பவும் ஒரு படி மேல வச்சித்தான பாத்தாங்க.

நான் கேரளால வேல பாத்துப் போயிருக்கக் கூடாதோ? அப்பதான் அப்பா செத்தது.. என்னால இப்பவும் அந்த நாள மறக்க முடில. எம் ஃபோட்டோவ நெஞ்சுல கெட்டிப்புடிச்சிட்டே தூங்குனவரு அப்பிடியே போய்ட்டாரு..நா வந்து பாக்கேன், அவருக்க மேல எம் ஃபோட்டோ அப்பிடியே இருக்கு..எங்கக்கா சொல்லிச் சொல்லி அழுதா ‘ஒன்னப் பாக்காமப் போய்ட்டாரே அப்பா’ன்னு.

அப்பா போன எடத்த நெரப்ப வந்தவந்தான் கிருஷ்ணான்னு எனக்கு அடிக்கடி தோணும்.. எங்க ஆஃபீஸ்ல வந்து வேலக்கிச் சேந்தான். நா சோகமா இருக்கதப் பாத்து வலிய வலிய வந்து அவனே பேச ட்ரை பண்ணான்.. நா மொதல்ல அவாய்ட் பண்ணேன்..போகப்போக அவனப் புடிச்சிட்டு..ரொம்ப நல்ல மனுசனாத் தெரிஞ்சான்..இப்ப நெனச்சா கொமட்டிட்டு வருகு..அப்பிடி லவ் பண்ணவன் இப்ப எப்பிடி இப்பிடி ஆயிட்டான்? அந்த மலையாளத்தா கிட்ட கொஞ்சும்போ எம் மூஞ்சி அவன் கண்ணு முன்னாடி வந்துருக்கும்லா? எப்பிடில்லாம் போட்டோ எடுத்துருக்கான்..புடிக்காமலா எடுத்துருப்பான்? நான் தூங்குன பொறவு அவளுக்கு என்ன வீடியோ கால் வேண்டிக் கெடக்கு? ஒருநாள் எம் மூஞ்சிக்கிட்ட வந்து நான் தூங்கிட்டனான்னு பாத்துட்டு ஃபோன எடுத்துட்டு வெளிய போனான்..அன்னிக்கே நான் செத்துருக்கணும்.

அவன எப்பிடியெல்லாம் லவ் பண்ணேன்..எவ்ளோ பியூரா இருந்தேன்?

ஆனா, கெவின் இன்னிக்கி எல்லாம் முடிஞ்சப் பொறவு கடசீல ஒரு பார்வ பாத்தான்லா? அது தான் கொஞ்சம் கஷ்டமாய்ட்டு..அதுக்கு என்ன அர்த்தம்னு நல்லாவே தெரிஞ்சி..அவங்கூட இருந்த பத்து நிமிஷமும் வேணும்னே கிருஷ்ணாவ திரும்பத் திரும்ப நெனச்சேன்..என்ன அறியாமலே கண்ணீர் வந்துட்டு…அதோட எல்லாம் முடிஞ்சி..

செரி..எல்லாத்தயும் விடுட்டி, ஒம் பிள்ளைக்க மொகம் கூடவா ஒம் மூஞ்சிக்க முன்ன வரல்ல? அவ நாளக்கி வளந்து ஒனட்ட வந்து கேட்டா நீ நாக்கப் புடுங்கிட்டு சாவணும்லாட்டி? அவளுக்கு ஒலகம் தெரிஞ்சப்பொறவு எல்லாம் அவளுக்குப் புரியும்..அவ எம்பிள்ளல்லா, என் வீம்பு அவளுக்கும் இருக்கும்லா?

கெவின கெட்டிக்கப்போறவள நெனச்சா கொஞ்சம் சங்கடமாருக்கு…அவளுக்குத் தெரிஞ்சா இப்ப நா இருக்க மாதிதான அவளும் இருப்பா? ஆனா, நா என்னதா பண்ணுவேன்? நா ஒண்ணும் கடவுள் இல்லல்லா? செரி, நாளக்கி கிருஷ்ணா நாலு பொம்பளய கூடப் போவான்..நீயும் அப்பிடி ஊர் மேயப் போயிருவியாட்டி? அப்ப நீ தேவிடியாதானட்டி?

நா எதுக்கு அதச் செய்யணும்? நா கிருஷ்ணா கூடத்தா இருப்பேன்..ஆனா, ஒவ்வொரு நாளும் மனசுல சொல்லுவேன்..நீ எனக்க பாசத்த மிஸ் பண்ணிட்டடான்னு.

கெவின் பாவம்…’

…..

மேக்டலீனுக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. அவளிடம் ஃபோனில் பேசிவிட்டு, சாரலின் இதத்தில் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்தான். காட்சிகளின் ஊடாக எண்ணங்கள் மிதந்து வந்தன.

‘இன்னிக்கி மேகி கிட்ட மனசு விட்டு எல்லாத்தயும் பேசிரணும்…கொஞ்ச நாளா அவ சரியில்ல…நல்லா வாடிப் போய்ட்டா….இப்ப ஃபோன்ல கூட செரியா பேசலயே! நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ்க்கு போய்ட்டு டின்னர் போலான்னு சொல்லுகேன்…ஒண்ணும் பதில் சொல்லல…ஒரு வேள நா செய்றதெல்லாம் தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்…பரவால்ல…அவளுக்குத் தெரியணும்…தெரியாட்டாலும் இன்னிக்கி தெரிஞ்சிரும்…எனக்கே நெறைய கொழப்பமாத்தான் இருக்கு…சில விசயங்கள் ஏன் நடக்கு, நாம ஏன் அப்படிச் செய்யோம்ன்னுலாம் யோசிக்க முடியல…நம்மயும் மீறி நடந்திருகு…

மேகிய மொத தடவ பாத்தப்ப நா எப்பிடி ஃபீல் பண்ணனோ அதே ஃபீல் எப்ப கண்ண மூடுனாலும் எனக்கு வந்துருகு..யாரு வந்தாலும் போனாலும் அவ எம் மனசுல அதே எடத்துல அப்டியே தான இருக்கா…நா என்ன தப்பு செஞ்சாலும் அவள விட்ற மாட்டேன்..இந்த லைஃப்ல கடைசி வர அவதான்.

இன்னிக்கி என்னெல்லாமோ தோணுகு…எதோ தப்பான ரூட்ல ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி…எல்லாத்தயும் விட்டுட்டு அவ கிட்ட ஓடிப் போணும்… என் தப்பெல்லாம் அவகிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கணும்…அவ மட்டும் என்ன மன்னிச்சிட்டான்னா போதும்…இனி என்ன பண்ணப் போறேன், இதுலருந்து எப்பிடி வெளிய வருவேன்னுல்லாம் புரியல…ஆனா, அவ நெருப்பு மாதிரில்லா? அவ பக்கத்துல நின்னா, அவ கையப் பிடிச்சிக்கிட்டா, நா செரி ஆயிருவம்லா?

இதெல்லாம் வெளிய சொல்ல முடியாம அவ எவ்ளோ புழுங்கிருப்பா? அவளுக்கு எப்பிடி ஆறுதல் சொல்லன்னு எனக்குத் தெரில, அதுக்கு அருகதையும் இப்ப எனக்கு இல்ல…ஆனா, புதுசா தொடங்கணும்னு தோணுகு..இந்த ஆனிவெர்ஸரி எங்களுக்குப் புதுசா இருக்கட்டும்…’

….

வடசேரி பேருந்து நிலையம் அருகில் வந்ததும், “கெவின், கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.” என்றாள் மேக்டலீன். இறங்கிப் போய் சாலையோரம் இருந்த பூக்கடையில் இரண்டு பந்து மல்லிகைச் சரம் வாங்கினாள். ஒன்றை அவளது தோள்பையில் வைத்துவிட்டு ஒன்றைக் கெவினிடம் நீட்டினாள்.

“இந்தா கெவின், இது லிசாவுக்கு…”

கிருஷ்ணா அவர்களைப் பார்த்துக் கையசைத்து நடந்து வந்துகொண்டிருந்தான்.

ஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை

“ஆட்டோ அர மணி நேரமா நிக்கி..சொன்னா சொன்ன டைம்க்கு கெளம்ப மாட்டியோ..அவன் இன்னா போயிருவான்..வேற சவாரி இருக்குன்னு சொன்னவன மெனக்கெட்டு வரச் சொன்னா, நீ வெளாடிட்டுக் கெடக்கியா?” ஃபோனில் எரிந்து விழுந்தார் என் கணவர்.

பெரியவளுக்கு சாப்பாடு கொடுத்து அம்மாவுக்கும் எனக்கும் இட்லியும் மிளகாய்ப் பொடியும் எடுத்து சம்படத்தில் வைத்துக் கொண்டிருந்தபோது சிறியவள் தொட்டிலை ஈரமாக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.

“நீங்க வாய் பேசாதீங்க..பொண்டாட்டிய வந்து கூட்டிட்டுப் போகக் கழியல்ல…ரெண்டு பிள்ளேலயும் கூட்டிட்டு எப்பிடி வருவான்னு ஒரு அக்கற இருந்தா வந்திருப்பீங்க…ஒங்களுக்கு நாங்களா முக்கியம்?”

“திரும்பத் திரும்ப அதயேச் சொல்லாத பாத்துக்கோ..வர முடிஞ்சா நா வந்துருப்பேன்லா? வேலைக்கு ஏத்த மாதிதான எல்லாத்தயும் ப்ளான் பண்ண முடியும்?”

“ஆமா…பெரிய வேல..பிள்ளேல பாக்க ரெண்டு மாசமா வர முடியாத்த வேல..”

“நிறுத்து..மறுபடியும் ஆரம்பிச்சிராத தாயே..சட்டுன்னு கெளம்பு மொதல்ல..ட்ரெய்ன விட்றாத…” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார். அதென்ன, ஒவ்வொரு முறையும் ஃபோனை வைக்கும்போது எதுவும் சொல்லாமல் சட்டென வைப்பது? சரி, வைக்கிறேன் என்று கூடவா சொல்ல முடியாது? அலுவலக அழைப்புகளிலும் ஸ்கைப் இலக்கியக் கூட்டங்களிலும் அவ்வளவு இனிமையாகப் பேச முடிகிறதே!

அவசர அவசரமாகக் கிளம்பி இரயில் நிலையத்தை அடைந்து இரயிலில் ஏறி உட்காரவும் இரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. இரண்டு பெரிய ட்ராலிகளையும் கொச்சங்கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப் பெட்டியையும் தூக்கி வைத்து பிள்ளைகளையும் அம்மாவையும் பத்திரமாக ஏற்றி உட்கார வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த ஏத்தங்காய் வத்தலும், உப்பேறியும், கைச்சுத்து முறுக்கும் என்ன கனம்! ஆனாலும் என்ன? காலையில் தேநீர் குடிக்கும்போது, “எட்டி, எதாங் கொண்டாந்தியா?” என்று கேட்பாரே!

வேண்டுமென்றால் தாய்மாமாவையோ பெரியம்மா மகனையோ கூட அழைத்து வந்திருக்க முடியும். ஒரு வீம்பில், “நா எங்கம்மா கூடயே வந்துருவேன்..நீங்க ஒங்க வேலயப் பாருங்க” என்று சொல்லி விட்டேன். அதிகமாக யோசித்தாலோ கடின வேலை செய்தாலோ இந்தக் கழுத்து நரம்பு வேறு ஒருபுறமாக இழுத்துக்கொள்கிறது. ஏறி உட்கார்ந்ததும் வெப்ராளமாக வந்தது.

இரயில் கிளம்பி அரை மணி நேரம் ஆகி விட்டது. ‘கெளம்பியாச்சா?’ என்று ஒரு ஃபோன் பண்ணிக் கேட்கக் கூடவா முடியாது? இதற்குத்தான் பன்னிரண்டு வருடம் காத்திருந்து திருமணம் செய்தேனா? வெளியிலிருந்து பார்ப்பவர்கள் சொல்வது, ‘ஒனக்கென்ன? லவ் மேரேஜ்..அவன் எவ்ளோ பெரிய ஆளு? எவ்ளோ பெரிய பொறுப்புல இருக்கான்? ராணி மாதில்லா வச்சிருக்கான்!’. ராணியாக இருப்பது அவ்வளவு சுகமான விசயமொன்றுமில்லை. எரிச்சலும் வெறுப்பும் ஏறிக்கொண்டே போக ஒருபுறம் அழுகை அழுகையாக வந்தது.

ஃபோனை எடுத்து வாட்ஸப்பைத் திறந்தேன். எதிர்பார்த்த மாதிரியே அவரது எண் உபயோகத்தில்தான் இருந்தது. வந்த கோபத்தில் மனதில் வந்ததையெல்லாம் டைப் செய்து அனுப்பினேன்.

‘ஒங்களுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி, புள்ள? இப்பிடி என்ன பரிதவிக்க விடதுக்கு நீங்க கல்யாணம் பண்ணாமயே இருந்துருக்க வேண்டியதான? ஒங்களுக்குப் புடிச்ச மாதி, ஒங்க வேலக்கி ஏத்த மாதி எவளயாம் கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதான? புள்ளத்தாச்சின்னு கூட ஒரு எரக்கம் இல்லல்லா? ஒங்களுக்குப் புடிச்சதத்தான் பண்ணுவீங்கன்னா நீங்க கல்யாணம் பண்ணிப் பிள்ள பெத்துருக்கக்கூடாது. வேல, புக்ஸ், ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்னா என்ன எதுக்கு இப்டி ஒரு வாழ்க்கைல தள்ளி ஏமாத்தணும்? நீங்க ஃப்ரீயா இருக்கும்போ மட்டுந்தா நா பொண்டாட்டியா இருக்கணுமா? எப்பவும் இப்டிதா இருப்பீங்கன்னா நா ரெண்டாவது இவளயும் பெத்துருக்க மாட்டம்லா? பெரியவ ‘அப்பா, அப்பா’ன்னு அழுகா, இப்பதான அவ பக்கத்துல இருக்கணும்? கேட்டா, வேலய எவம் பாப்பான்னு சொல்லுவீங்க..ஊர்ல அவவன் வேலயயும் பாத்துட்டு குடும்பத்தையும் கவனிக்காமலா இருக்கான்? எம் மூஞ்சில முழிச்சிராதிங்க பாத்துக்கோங்க..எம் பிள்ளைளுக்காகத்தா நா வாறேன்..நீங்க ஒண்ணும் ஸ்டேசனுக்கு வராண்டாம்..நானே பஸ் புடிச்சி வந்துருவேன்..’

இன்னும் கேட்பதற்கு எவ்வளவோ இருந்தது. வாட்ஸப்பில் இரண்டு நீல நிற டிக்குகள் வந்தன. பதில் வராது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்த விசயம்தான்.

ஒரு மணி நேரம் கழித்து அழைப்பு வந்தது. துண்டித்து விட்டேன். ஐந்தாறு முறை அழைத்தார். நானும் துண்டித்து விட்டேன். ஒரு மெசேஜ் வந்தது.

‘ஓவரா பண்ணாத..கடுப்பு மயிரக் கெளப்பிட்டுக் கெடக்காத பாத்துக்கோ..ஃபோன் பண்ணா அட்டெண்ட் பண்ண முடியாதோ?..எல்லாத்தயும் தூக்கிப் போட்டு ஒடச்சிருவேன்..திமிரு..மயிரு..’

அவருக்குச் சின்ன எரிச்சல் வந்தாலும் இந்த ‘மயிரு’ வார்த்தை வந்துவிடும். நானும் பேசலாம் இல்லையா? என் அப்பாவிடம் கேட்காத கெட்ட வார்த்தையா என்ன? சரியான பதில் பேச முடியவில்லை என்பதால்தானே கெட்ட வார்த்தைகள் வருகின்றன?

மீண்டும் அழைத்தார். ஃபோனை எடுத்து அமைதியாக இருந்தேன். கோவமும் வெப்ராளமும் அடங்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றையும் செய்ய மாட்டாராம், நான் மட்டும் இயந்திரமா என்ன?

“நாந்தா ட்ரெய்னிங் இருக்குன்னு சொன்னம்லா? இப்பதா கேம்ப் ஃபயர் முடிஞ்சி சாப்பிடப் போறேன்..பிள்ளேல் தூங்கியாச்சா?” என்று கேட்டார்.

“நீங்க ஒங்க வேலயப் பாருங்கப்பா…எங்களப்பத்தி எதுக்கு கவலப்படுகீங்க? நல்லா சிரிச்சி சிரிச்சி ஆட்டம் போட்டாச்சுல்லா? போயி எவ கூடயாம் சாட் பண்ண வேண்டியதான?” என்று லேசாகக் கத்த அம்மா என்னைப் பார்த்து கண்ணைக் காட்டினார். இப்படிக் கேட்டால் என் கணவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

“ஆமாட்டி..அப்டித்தாம்ட்டி ஆடுவேன்…ஒஞ் சோலியப் பாருட்டி மயிரே..பெரிய மத்தவ..என் வேலயப் பத்திப் பேசுன, பல்லு கழந்துரும் பாத்துக்கோ..” என்று எனக்கும் மேலாகக் கத்திவிட்டுத் துண்டித்து விட்டார்.

எனக்கும் கோபம் தலைக்கேறியது. என்ன செய்ய முடியும்? சிறியவளை நெஞ்சோடு அணைத்துக் கண்ணை மூடி உட்கார்ந்தேன்.

அவரது வேலையைப் பற்றிப் பேசக் கூடாது. அவரது நண்பர்களைப் பற்றிப் பேசக் கூடாது. அவரது குடும்பத்தைப் பற்றிப் பேசக் கூடாது. சரி, அதையெல்லாம் கூட பொறுத்துக்கொள்ளலாம். அவரது நேரத்தையும் உடனிருப்பையும் கூட கேட்கக் கூடாதா?

ஒரு ஞாயிற்றுக் கிழமை. இறகுப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு காலை எட்டு மணிக்குச் சென்றவர் மதியம் இரண்டு மணிக்கு திரும்பி வந்தார். வியர்வையில் நனைந்து வீட்டில் நுழைந்தவர், “எட்டி, கறி வெச்சிட்டியா? பெப்பர் ஜாஸ்தியா போட்டியா? செம பசி பாத்துக்கோ..” என்றார்.

நான் பதில் ஏதும் பேசாமல் சமையலறையில் நின்றேன். பெரியவள் சென்று, “அப்பா, வாங்க வெளயாடுவோம்…நாந்தா ரோஸி மிஸ்…நீங்க ஸ்டூடண்ட்…” என்று அவரைக் கட்டிப்பிடித்தாள். சட்டென்று அவளைத் தள்ளிவிட்டவர், “தள்ளிப் போட்டி அங்க…எத்தன வாட்டிச் சொல்லது..வெளாடிட்டு வரும்போ வந்து மேலச் சாடாதன்னு…” என்று கத்தினார்.

பெரியவள் பயந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அவ கட்டிப்புடிச்சா ஒங்களுக்கு என்ன கொறஞ்சிரும்? பிள்ளய தள்ளிவிடதப் பாரு..மனசாட்சியே கெடயாது..” என்று நான் கத்தினேன்.

“தேவயில்லாமப் பேசாத பாத்துக்கோ..”

“ஆமா, நா பேசுனா ஒங்களுக்குத் தேவயில்லாமத்தா தெரியும்…ஞாயிற்றுக் கெழமையும் பொண்டாட்டி, பிள்ள கூட நேரம் செலவழிக்க முடியாது…பேட்மிண்டன் ரொம்ப முக்கியம்லா? சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுந்தா வீட்டுக்கு வறீங்க..பொறவு நீங்க தூங்குவீங்க, நாங்க தொந்தரவு பண்ணக் கூடாது..சாய்ங்காலம் மாடில போயி போன வச்சிட்டு லாந்துவீங்க…அதயும் கேக்கக் கூடாது…அப்போ, நானும் பிள்ளயும் எதுக்கு இங்க இருக்கோம்? பேட்மிண்டன் இப்ப ரொம்ப அவசியம்லா…” என்று பெரியவளைக் கட்டிக்கொண்டேன்.

“நீ அழாதம்மா…ஒங்கப்பாக்கு நம்மல்லாம் முக்கியமில்ல..” என்று சொல்ல அவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.

முறைத்துக்கொண்டே நின்றவர் சட்டென தனது இறகுப் பந்து மட்டையை எடுத்து கால் முட்டியில் வைத்து இரண்டாக உடைத்துப் போட்டார்.

“இந்தா…எடுத்துக் குப்பைல போடு…சந்தோசமா இரி…” என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

….

எதிர் படுக்கையில் அம்மா பெரியவளை தட்டிக் கொடுத்து ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி சந்திப்பு. வழக்கமாக இரயில் அங்கே நிறைந்து விடும். அன்றும் நல்ல கூட்டம். எங்களுக்கு கீழ்ப்புறப் படுக்கை ஒன்றுதான் கிடைத்திருந்தது. வருபவர்களிடம் பேசி இன்னொரு கீழ்ப்புறப் படுக்கை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் படுக்கை என்றால் இன்னும் வசதி. ஆனால், கூட்டமிகுதியால் அன்று அதுவும் RAC-யாகத்தான் இருக்கும்.

ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அந்தத் தாத்தா என்னைப் பார்த்ததுமே, “நீ கீழயே படுத்துக்கம்மா..ஒனக்கு மிடிலா? அப்பரா?” என்று கேட்டார்.

“ரொம்ப தேங்க்ஸ் தாத்தா..எனக்கு அப்பர்..ஒங்களுக்கு கஷ்டமா இருக்கும்லா?”

“பரவால்லம்மா..ஏறிட்டாப் போரும்..தூங்கிருவேன்..அவ மிடில் ல ஏறிருவா..பிரச்சன இல்ல..” என்று தன் மனைவியைப் பார்த்து சிரித்தார்.

அந்த ஆச்சி வந்து சிறியவளைப் பார்த்து, “ரெண்டும் பொண்ணாம்மா? அதிர்ஷ்டக்காரில்லா நீ…நல்லா இரி..” என்று என் தலையைத் தொட்டு விட்டு அவரது படுக்கையில் ஏறினார்.

அம்மா ஒரு புடவையை படுக்கைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் தொட்டிலாகக் கட்டினாள். சிறியவளுக்கு ஸ்வெட்டர் போட்டுவிட்டு அவளைத் தொட்டிலில் போட்டு ஆட்டினேன்.

குடும்பவீட்டுப் பாரம்பரிய ஊஞ்சலில் நான் படுத்திருக்க எதாவது கதை சொல்லிக்கொண்டே ஆட்டி விடுவார் தாத்தா. தாத்தா இல்லாவிட்டால் ஆச்சி. நல்ல தேக்கு மர ஊஞ்சல். கீழே தொங்கும் சின்னஞ்சிறு மணிச் சத்தமும் கதையுமாக ஆடிக்கொண்டே தூங்கிவிடுவேன்.

“எட்டி…பொம்பளப் பிள்ள..நாளக்கி ஒருத்தன் வீட்டுக்குப் போகும்போ ஊஞ்சலுக்கு என்ன செய்வ?” என்று ஆச்சி அடிக்கடி கேட்பார்.

“ஆங்…ஊஞ்சல் வாங்கித் தந்தாதான் தாலியே கெட்ட விடுவேன்…” என்று சொல்வேன். அப்படியொரு ஊஞ்சல் எனக்கே எனக்கென என் வீட்டில் இருக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை.

திருமணமான புதிதில் ஒருநாள் அவரிடம், “ஏம்ப்பா, எனக்கு ஊஞ்சல் எப்போ வாங்கித் தருவீங்க?” என்று கேட்டேன்.

“ஊஞ்சலா? எதுக்கும்மோ? சின்னப் பப்பாவா நீ?” என்று சொல்லிச் சிரித்தார்.

“நீங்க தான சொன்னீங்க, கல்யாணம் முடிஞ்சி வாங்கித் தாறேன்னு…”

“வெளயாடாத பாத்துக்கோ…வர சம்பளத்துல பத்து ரூவா சேத்து வைக்க முடியல..இதுல, ஊஞ்சல் தான் கொற இப்போ…”

எத்தனை முறை கேட்டாலும், எவ்வளவு வசதி வந்தாலும் எனக்கொரு ஊஞ்சல் அமையவில்லை. அவரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு ஆடம்பரம். ஆனால், ஊஞ்சல் என்னுடன் பேசும், அது என்னைத் தடவிக் கொடுக்கும், எனக்கான பாடல்களைப் பாடும், தாலாட்டும், என் வலிகளை உறிஞ்சிக்கொள்ளும் என்பதை நான் எப்படி அவருக்குப் புரிய வைப்பது? பெரியவளுக்குக் கட்டிய தொட்டிலில் உட்கார்ந்து ஆடி அதையே என் ஊஞ்சலாக நினைத்துக் கொள்வேன்.

..

கைப்பையின் மேல் அம்மாவின் புடவையை மடித்து வைத்துத் தலையணையாக்கிச் சாய்ந்தேன். இரயிலில் பொதுவாக நான் தூங்குவதேயில்லை. வேலை செய்த நாட்களில் உருவான ஒரு பயம். ஏனோ இன்னும் தொடர்கிறது. நவ நாகரிகம், சமத்துவம், உரிமைக்குரல் எல்லாம் சரிதான், ஆனால் இந்த பயம் மட்டும் ஏனோ கூடவே இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் சென்ற பயணங்களில் அவர் தூங்குவதையே பார்த்துக்கொண்டு கிடப்பேன். பெரியவள் பிறந்த பிறகான பயணங்களில் அவளைத் தூங்க வைத்து எதையாவது யோசித்துக் கிடப்பேன். யோசிப்பதற்குத்தான் எப்போதும் நிறைய இருக்குமே!

சென்னை ஸ்பென்சர் பிளாசாவின் முன் அவருக்காகக் காத்திருந்தது ஞாபகம் வந்தது. அவர் எப்படி வருகிறார் என எதுவும் சொல்லியிருக்கவில்லை. திடீரென எனக்கு மிக அருகில் வந்து ஒரு அப்பாச்சி பைக் நிற்க தலைக்கவசம் போட்ட அந்த நபர் எனைப் பார்த்து தலையசைத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளுக்குள் நடுங்க, “ஏய் லூசு, வந்து ஏறு” என்றார்.

பைக்கில் ஏறிய நொடி முதல் திருவல்லிக்கேணி ஆண்டாள் சந்நிதி முன் சென்று நிற்கும் வரை நான் மனதிற்குள் பல மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆண்டாள் சந்நிதியில் வைத்து எனக்கு ஒரு பரிசு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். நான் கண்மூடி வேண்டியிருக்க, “மகளே, உன் தவத்தைக் கண்டு யாம் மெச்சினோம்..என்ன வரம் வேண்டும், கேள்” என்று என் தலையில் தட்டினார். எப்போதும் போல நான் சிணுங்க ஆரம்பிக்க, அழகான ஒரு வெள்ளி மோதிரத்தை நீட்டினார். அந்த நாள் ஆண்டாள் நிச்சயித்த எங்கள் திருமண நாள் என நினைத்துக்கொண்டேன்.

என் மனத்தில் ஊற்று பெருக்கெடுத்தது போல சட்டென மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவருடனான என் அத்தனை மகிழ்ச்சிக் கணங்களும் எனைச் சுற்றிப் பெருகி நின்றன. அவரது முதல் சம்பளத்தில் எனக்காக எங்கள் பெயரைக் கவிதையாக்கி நெய்து அவர் அனுப்பிய பட்டுப் புடவை என் அப்பா கையில் மாட்டிக் கொள்ள நான் ஏதோ சொல்லிச் சமாளித்தது, தூங்கிக் கொண்டிருந்தபோது என் கண்களை மட்டும் புகைப்படம் எடுத்து அதை சட்டமிட்டுக் கொண்டு வந்து என் அறையில் எனக்குத் தெரியாமல் மாட்டியது, என் பிறந்த நாளன்று எனக்குப் பிடித்த தந்தூரிச் சிக்கன் வாங்கி அதை எனக்குத் தராமல் அவர் சீண்டியது, எனக்கு எந்தக் கவலையும் கொடுக்காமல் என் அத்தனை சொந்தங்களையும் சமாளித்து அவர் என்னைக் கட்டிக்கொண்டது, பிறக்கப் போவது மகள்தான் என அவர் உறுதியாக நம்பியிருந்தது, அதைப் போலவே பெரியவள் பிறக்க, அவர் செய்து வைத்திருந்த அழகான குட்டி மோதிரத்தை நாங்கள் அவளுக்குப் போட்டு விட்டது….இன்னும் எத்தனையோ கணங்கள்..

மீண்டும் வாட்ஸப்பைப் பார்த்தேன். அவர் இன்னும் தூங்கியிருக்கவில்லை.

சிறியவள் பிறந்திருந்த சமயம். ஒருநாள், வேலையெல்லாம் முடித்து அவளைத் தொட்டிலில் போட்டு நீண்ட நேரம் ஆட்டிக்கொண்டிருந்தேன். கைவிரல் முதல் தோள்பட்டை வரை பயங்கரமாக வலித்தது. அவர் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார்.

“ஏம்ப்பா, கொஞ்சம் வந்து ஆட்டுங்க…” என்று நான் அழைத்தேன். திரும்பிப் பார்த்தவர் தலையை ஒருமுறை ஆட்டிவிட்டுத் தொடர்ந்து வாசித்தார். உடல் வலியும் மன வலியும் சேர்ந்து நான் கண்கலங்கி கைமாற்றிக் கைமாற்றி ஆட்டிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடம் கழித்து வந்தவர் தொட்டில் கயிற்றைப் பிடிக்க, “நீங்க போய் ஒங்க வேலயப் பாருங்க…” என்று வெட்டி இழுத்தேன்.

“செவுட்டடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க..தள்ளிப் போட்டி அங்க…பெரிய வீம்பு காட்டுகா வீம்பு..” என்று கத்தினார்.

“ஆமா, முடியாம எல்லா வேலையுஞ் செஞ்சு கை வலிக்குன்னுதான ஒங்கள ஆட்டக் கூப்புட்டேன்…என் வலி எனக்கு..நீங்க ஒங்க புக்லயே இரிங்க…” என்று சொல்லி அழுதேன்.

“இப்பிடிக் காராடிக் காராடித்தான நா பேட்மிண்டன் வெளயாடுறத கெடுத்த..இப்ப நா புக்கும் படிக்கக் கூடாதா? இன்னா, எல்லாத்தயும் தூக்கிப் போட்டுக் கொளுத்து..” என்று கத்தி மேசையில் அடுக்கி வைத்திருந்த அத்தனைப் புத்தகங்களையும் விசிறியடித்தார்.

நான் புத்தகம் வாசிக்க வேண்டாமென்றா சொன்னேன்? வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளுடன் கொஞ்சம் விளையாட வேண்டும், எனக்கு முடியாத போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ‘செய்யட்டுமா?’ என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா என்ன?

கோபத்தில், “எத்தன புக் படிச்சி என்னத்துக்கு? ஒங்க புக்லெல்லாம் பாசம்னா என்னன்னு சொல்லித் தரல்லயா? எல்லாருக்கும் வேண்ணா நீங்க பெரிய அறிவாளியா இருக்கலாம்..எனக்கு நீங்க ஒரு வேஸ்ட்டு தான் பாத்துக்கோங்க…சுயநலம்…சுயநலம்…” என்று கத்திவிட்டேன்.

“மண்ணாங்கட்டி…நீ ஒரு முட்டாளா இருக்கேன்னா அதுக்கு நானும் அப்பிடி இருக்க முடியாதுல்லா?..நா புக்க எடுக்கும்போதான் அவளுக்கு வேல மயிரு வரும்..பகல் ஃபுல்லா வேல..ராத்திரி ஒறங்கக்கூட நேரம் கெடயாது. பொறவு ஒருத்தன் எப்பதா தனக்குப் புடிச்சத செய்யது?”

“ஓ…அப்ப நானும் எனக்குப் புடிச்சத மட்டுஞ் செய்யவா? குடும்பத்த அப்போ யாரு பாப்பா? நீங்க ஊர் ஊரா சுத்தும்போ புக்க கெட்டிட்டு அழுங்க..இங்க இருக்கதே மாசத்துல பாதி நாளு…தனியா இருக்கும்போ ஒவ்வொரு நாள் ராத்திரியயும் கடக்கதுக்கு கெதம் கெதம்னு வரது எனக்குதான தெரியும்.” என்று அழ ஆரம்பித்தேன்.

மனது கனமாக ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் நுழைந்தேன்.

‘ஹேப்பி ஆஃபிஸ் வர்க் ஷாப்’ என்று தலைப்பிட்டு பல புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இவர் நடுவில் நிற்க ஒரு பத்து பெண்கள் ‘யோ யோ’ சைகை வைத்துக் கொண்டும், வாய்விட்டுச் சிரித்துக்கொண்டும் நின்றனர். அதில் ஒரு பெண் இவரது தலைக்கு மேல் கொம்பு வைத்துச் சிரித்து நின்றாள். கீழே அவரது குறிப்பு ‘வித் த பெஸ்ட் கேர்ள்ஸ் ஆன் எர்த்’ என்று. வயிறு எரிந்துகொண்டு வந்தது.

திருமணமான புதிதில் அவரது சித்தி வீட்டிற்கு மறுவீடு சென்றிருந்தபோது அவரது தங்கை ஓடி வந்து அவரது மடியில் சாய்ந்து படுத்தாள். அதற்கே சண்டை போட்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தேன் நான். நான் சொல்வது முட்டாள்த்தனமாகத் தோன்றலாம். ஆனால், காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் இந்த நொடி வரை நான் அப்படித்தான் இருக்கிறேன். சும்மா குறுகிய மனப்பான்மை என்று தள்ளிவிட முடியாது.

சண்டை போட்டு நான் அழுதுகொண்டிருக்கும்போதும் எப்படி அவரால் ஃபேஸ்புக்கில் இருக்க முடிகிறது. சமாதானப் படுத்துவதற்கு ஒரு சிறிய மெசேஜ் கூட போட முடியாதா?

கோவை சந்திப்பு. நான் பிள்ளைகளை எழுப்பி ட்ராலிகளையும் அட்டைப் பெட்டியையும் எடுத்து வைத்தேன். அம்மா பெரியவளைப் பிடித்துக் கொள்ள, நான் சிறியவளைத் தோளில் போட்டுக்கொண்டு ஒரு ட்ராலியை இழுத்தேன். திருநெல்வேலித் தாத்தா எழுந்து எனது இன்னொரு ட்ராலியையும் அட்டைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டார்.

“பரவால்ல தாத்தா..அவரு வந்துருப்பாரு..” என்றேன்.

“ஒண்ணுல்லம்மா…நீ பாத்து எறங்கு..” என்றார்.

நடைமேடையில் இறங்கி நிற்க, தாத்தா என் மகள்களின் கன்னங்களைத் தொட்டு விரல்களால் முத்தமிட்டுவிட்டு ஆச்சியின் கையைப் பிடித்து நடந்தார்.

வழக்கம்போல என் கணவர் தாமதமாக வந்தார். நான் அவர் முகத்தை ஏறிட்டுக்கூட பார்க்காமல் நிற்க, வந்து சிறியவளைத் தூக்கி முத்தமிட்டார்.

பெரியவள் அவர் காலைக் கட்டிக்கொண்டு, “அப்பா, பால்கோவா வாங்குப்பா…பால்கோவா…” என்று கொஞ்ச ஆரம்பித்தாள்.

வாகன நிறுத்துமிடத்தில் எங்கள் கார் அழுக்குப் படிந்து நிற்க, நான் அம்மாவைப் பார்த்து சைகை செய்தேன். அம்மா தனக்குள்ளாகச் சிரிக்க, அவர் முறைத்துக்கொண்டு நடந்தார்.

வீடு சென்று சேரும் வரை அப்பாவும் மகளும் ஒரே கும்மாளம்தான். வீட்டைப் பார்த்ததும் எனக்குத் தலைவலியே வந்துவிட்டது. வீட்டு முற்றம் முழுதும் மாவிலைச் சருகுகள் குவிந்து கிடந்தன. ரோஜாச் செடிகள் எல்லாம் தண்ணீரின்றி வாடிக் கிடந்தன.

“இந்தத் தொளசிக்குக் கூட தண்ணிவிடக் கழியாதா?” என்று எனக்குள்ளாகப் புலம்பினேன். அவர் வீட்டுச்சாவியை பெரியவளிடம் கொடுத்து, “அம்மாட்டக் குடு மக்ளே” என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றார்.

எரிச்சலுடன் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தேன். வரவேற்பறையில் ஒரு புத்தம்புதிய தேக்கு மர ஊஞ்சல் என்னை வரவேற்றது. அதன் மீது பல புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.

தன்மீட்சி – சுஷில் குமார் சிறுகதை

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஸ்கைப் அழைப்பு இருக்கும். நான்கு அல்லது ஐந்து முக்கியமான நபர்களுடன். பெரும்பாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதைச் சார்ந்த கலந்துரையாடல்களாக இருக்கும். சில அழைப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாண்டியும் போகும். அன்றைய அழைப்பும் நீண்டு கொண்டேதான் சென்றது. ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஏதும் கேட்கவில்லை, ஆனால், வீடியோவில் மற்றவர்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். தன்னுடையை ஹெட்செட் வேலை செய்கிறதா என்று ஒன்றிரண்டு முறை சோதித்துப் பார்த்தும் சரியாகவில்லை. ஹெட்செட்டைக் கழற்றி ஃபோனை நேரடியாக வைத்துக் கேட்டுப் பார்த்தும் பலனில்லை. சரவணனுக்கு வியர்த்துக் கொண்டு வந்தது. கண்கள் லேசாக இருட்டிக்கொண்டு வந்தன. கை விரல்கள் அவனையறியாமல் நடுங்குவதுபோல் தோன்றியது. இருள் படர்ந்து அவனைச் சூழ்ந்து, அவனுக்குள் ஏறி நிரம்பி வழிந்தது போல இருந்தது. அப்படியே கண்மூடி உட்கார்ந்து விட்டான். பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. விரல்கள் தொடர்ந்து நடுங்குவது மட்டுமே தெரிந்தது. சுய நினைவிற்குத் திரும்பி ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்தான். ஒரே யோசனையாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக ஒரு வித சோர்வு. எப்போதும் அப்படி இருப்பவனில்லை அவன். அவன் இருக்கும் இடமே கலகலப்பாகத் தான் இருக்கும். ஒரு வழியாக, மிச்சமிருந்த வேலைகளைக் குழப்பத்துடன் முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

கதவைத் திறந்த பத்மா, “பிள்ள தூங்குகால்லா, எதுக்கு இப்டி கதவ தட்டுகியோ? வரச்சம மிஸ்டு கால் குடுக்கச் சொன்னேம்லா?” அமுதாவிற்கு மூன்று வயது. தினமும் அப்பா வரும்போது கதவின்பின் ஒளிந்து நின்று ‘அப்பா’ என்று தாவிக் குதிப்பாள்.

பதில் பேசாமல் நேராக குளியலறைக்குச் சென்று ஷவரில் நின்றான். தலை லேசாகச் சுற்றுவது போல இருந்தது. ஏதேதோ எண்ணங்கள், கட்டற்ற வேகத்துடன் எங்கேயோ விரைந்து செல்கின்றன. ஒன்றின் குறுக்காக ஒன்றாக, திடீரென்று மேல்நோக்கி, பின், உள்ளுக்குள் சுற்றிச் சுற்றி, அலை அலையாக. விரல் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை. பத்மா கதவைத் தட்டுவது எங்கேயோ தூரத்தில் கேட்டது. மெதுவாகச் சென்று கதவைத் திறந்தவன் அவள் தோள் மீது அப்படியே சாய்ந்தான்.

“பிள்ளயாரப்பா..எத்தான், பாத்து பாத்து..என்னத்தான், என்ன செய்யி? எத்தான், தண்ணி குடிக்கேளா” ஓவென அழ ஆரம்பித்து விட்டாள் பத்மா. சரவணனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அப்படியே சென்று கட்டிலில் உட்கார்ந்து தலையணையில் சாய்ந்து விழுந்தான். ஒன்றுமில்லை என்பது போல பத்மாவைப் பார்த்து கை காட்டினான். அவள் நேராகச் சென்று திருநீறு எடுத்து வந்து பூசிவிட்டாள், வாய் ‘அம்மே நாராயணா, தேவி நாராயணா’ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரியாகி விட்ட மாதிரி இருந்தது. “பத்மா, வா டாக்டர்ட்ட போலாம்” என்றான். பத்மா அழுகையும் குழப்பமுமாக அவனைப் பார்த்து நின்றாள். ‘காச்சல் வந்தாக் கூட மாத்திர சாப்பிட மாட்டா, நமக்கு ஒண்ணுஞ் செய்யாது கேட்டியா? உள்ள ஓடது மீனு ரத்தம்லான்னு சொல்லுவா, பிள்ளயாரப்பா, இப்ப ஆஸ்பத்திரிக்கு போவோம்னு சொல்லுகாளே, நா என்ன செய்வேன்’

“எத்தான், என்னத்தான் செய்யி, சொல்லுங்கத்தான்”

“ஒண்ணுல்ல, நீ பொறப்படுட்டி மொதல்ல. ஆட்டோக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு, பைக் வேண்டாம்.” ஆட்டோ வந்தது. ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பத்மா ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். எதையும் கவனிக்காமல் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். அமுதா எதுவும் தெரியாமல் அம்மா தோளில் தூங்கிக்கொண்டிருந்தாள். காய்ச்சல் பரிசோதனை செய்து, இரத்த அழுத்தம், எடை, உயரம் குறித்துக் கொண்டு காத்திருக்கச் சொன்னார்கள். சரவணன் எதுவுமே பேசவில்லை. பத்மா அவளுடைய அம்மாவிற்குப் ஃபோன் செய்து அழுது கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவர்களது முறை வந்தது.

டாக்டர் கேட்டார், “சொல்லுப்போ, என்னாச்சி? நீ இந்தப் பக்கமே வர மாட்டியே?”

“இல்ல டாக்டர், ஒரு மாரி தளச்சயா இருக்கு, சாய்ங்காலமானா ஒரே தல சுத்து, கண்ணு ஒரு மாரி இருட்டிட்டே போகு..இன்னிக்கி ஃபோன் பேசும்போ கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே கேக்காம ஆய்ட்டு..” பத்மாவால் உட்கார முடியவில்லை, கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

“ஓ, ஒனக்கென்ன டே தளச்ச இந்த வயசுல, சின்ன ப்ராயத்துல கெதியா இருக்காண்டாமா டே? ஒங்கப்பன் அம்பது வயசுல ரெண்டு மூட அரிசிய அசால்ட்டா தூக்கிப் போட்ருவானே டே! செரி விடு” என்றவர் பத்மாவைப் பார்த்து, “எம்மோ, நீ எதுக்கு அழுக? சும்மா இரிம்மோ. வேறென்ன செய்யி சொல்லுடே?”

“சாப்பிடவும் பிடிக்க மாட்டுக்கு டாக்டர்..கொஞ்சம் சாப்ட்ட ஒடனே வயிறு நெறஞ்சி போன மாதி தோணுது..”

“ம்ம், வேற? ஒழுங்கா தூங்குகியா?”

பத்மா குறுக்கிட்டாள், “இல்ல சார், ஒரு வாரமா இவ்வோ சரியில்ல, ராத்திரி முழிச்சே கெடக்கா, தூக்கத்துல ஒரே பொலம்பக்கம்..”

“செரி, டெம்பரேச்சர் நார்மல், BP இல்ல, சுகரும் இல்லல்லா ஒனக்கு?” டாக்டர் சிறிது யோசித்து குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் குடுத்தார். “ப்ளட் டெஸ்ட் எழுதிருக்கேன், சுகரும் செக் பண்ணிருவோம், பாத்துட்டு வாப்போ..ஒண்ணும் பயப்படாண்டாம்.”

இரத்த மாதிரி குடுத்து, சர்க்கரை பரிசோதனையும் செய்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தனர்.

“எத்தான், ஆபீஸ்ல என்னவாம் பிரச்சனையா, என்ட்ட எதும் மறைக்கேலா? எனக்கு படபடப்பா வருகு..எல்லாவளுக்க கண்ணும் சேந்து எனக்க உயிரல்லா எடுக்கு.”

“ஏட்டி, நீ சும்மா இருக்கியா? ஒண்ணுல்ல, பாப்போம், இரி”

“குடும்பக் கோயிலுக்கு போவோம்னு சொன்னா கேக்கேளா நீங்க? ஓரே வேல வேலன்னு அலஞ்சா! ஒரு நாளு கூட லீவு போட மாட்டியோ, வீட்டுக்கு வந்தாலும் ஒரே ஃபோனு…”

பரிசோதனை முடிவுகள் வந்தன. சர்க்கரை அளவு சரியாகத்தான் இருந்தது. இரத்தப் பரிசோதனை அறிக்கையில் ஹீமோக்ளோபின் அளவு 19 என்று இருந்தது. அடிக்கோடு இடப்பட்டிருந்தது. சரவணன் ஃபோனை எடுத்து அதைப்பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தான். பத்மா என்ன என்ன என்று கேட்டு ‘அம்மே நாராயணா’ சொல்ல ஆரம்பித்தாள்.

முடிவுகளைப் பார்த்து டாக்டர் சொன்னார், “தம்பி, ஹீமோக்ளோபின் அளவு பொதுவாட்டு 13லருந்து 15 வர இருக்கணும். ஒனக்கு இப்போ 19 இருக்கு. நெறய காரணம் இருக்கலாம். ஆனா, இப்போ ஒண்ணும் முடிவா சொல்ல முடியாது. ஒரு, ஒரு வாரம் பாப்போம், நெறைய தண்ணி குடி, ஜூஸ், எளனி குடி.”

“செரி டாக்டர், தூக்கமே இல்லயே டாக்டர்” என்று கேட்டான் சரவணன்.

“எதயும் யோசிக்காம ஒறங்குப்போ. அடுத்த வாரம் மறுபடியும் ப்ளட் டெஸ்ட் எடுப்போம், ஒருவேள ஹீமோக்ளோபின் கொறயலன்னா கொஞ்சம் சிக்கல் தான். அத நம்ம அப்ப பாப்போம், என்ன?”

பத்மா அதற்குள் மறுபடியும் அழ ஆரம்பித்திருந்தாள். டாக்டர் அவளைப் பார்த்து, “எம்மோ, நீ அழாம இரி மொதல்ல, ஆபீஸ் போறவனுக்கு நெறைய கொடச்சல் இருக்கும்லா, நீ தைரியமாட்டு இருந்தாத்தான அவனும் கெதியா இருப்பான்.”

பத்மா குனிந்துகொண்டே தலையை ஆட்டினாள்.

“தம்பி, இது ஒரு வேள ‘பாலிசித்தீமியா வெரா’வா இருக்கலாம். அது ஒரு ப்ளட் கண்டிசன் தா, அத நம்ம இப்ப கொழப்பாண்டாம். ஒரு வாரம் கழிச்சு வாப்போ… செரி பாப்போம்.”

….

அன்று இரவு ஒரு நொடி கூட சரவணனால் தூங்க முடியவில்லை. கண்களை மூடியதும் தலை சுற்றுவது போலவும் எல்லாமே இருண்டு வருவது போலவும் ஒரு மயக்க நிலை தொடர்ந்து இருந்தது. வித விதமான எண்ணங்கள் வேறு. ‘பாலிசித்தீமியா பத்தி கூகுள்ல பாக்கும்போ என்னாலாமோ போட்ருந்தானே, கேன்சர்னு கூட ஒரு வார்த்த இருந்துச்சே, ஒரு வேள அப்டி ஆயிட்டா பத்மா என்ன செய்வா? எம் பிள்ளய எப்டி வளப்பா? இன்னும் எத்தன மாசம் இப்டி இருக்கப் போறனோ!’

“எத்தான், எத்தான், என்ன செய்யித்தான்? ஏன் தூங்காம இருக்கியோ?” பத்மாவிற்கு படபடப்பு இன்னும் குறையவில்லை. அவளும் தூங்காமலேயே கிடந்தாள்.

“பத்மா, எனக்கு ஒருவேள கேன்சரா இருக்குமோ? நெட்-ல அப்டிதா போட்ருக்கான். நா போய்ட்டா நீ என்ன செய்வ?”

“எத்தான், இப்டி பேசாதியோ, நா செத்துருவேன்..ஒண்ணுல்லத்தான் உங்களுக்கு..ஒறங்குங்கோ…” என்னதான் மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவள் சமாளித்தாலும் சரவணன் தூங்கவுமில்லை, அவன் புலம்பல் நிற்கவுமில்லை.

“பாலிசித்தீமியாவா இருந்தா டெய்லி மாத்திர சாப்பிடணும், வாழ்க்க பூரா…செலசமம் அதுவே கேன்சரா மாறுமாம். எலும்புக்குள்ள மஜ்ஜை இருக்குல்லா, அத மாத்துவாங்கலாம்..ரொம்ப பெயின்ஃபுல் ட்ரீட்மென்ட்..பயங்கர செலவாகும்..நமக்கு எங்க அதுக்கு கழியும்! அவ்ளோதான் போல, பிள்ள என்ன பண்ணுவா? அவளுக்கு யாருமே இல்லாம போய்ருமே..’

“எத்தான், நம்ம வேற ஆஸ்பத்திரிக்கு போவோம், நாகராஜ் அண்ணன நாளக்கி வரச் சொல்லுங்கோ, ஒண்ணுல்லத்தான், என்ன பயமுறுத்தாதியோ..”

திருவனந்தபுரத்தின் புகழ் பெற்ற மருத்துவமனையில் எல்லா விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டன; அடி வயிற்று ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, இரத்தத்தின் நுண்ணிய பகுதிகளை ஆய்வு செய்யும் ஒரு இரத்தப் பரிசோதனை, நரம்பு மண்டலத்திற்கான ஸ்கேன். பாலிசித்தீமியா போன்ற சில நோய்களுக்கு, அவ்வப்போது உடலிலிருந்து ஒரு யூனிட் இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இல்லாவிடில், இரத்தத்தின் திடத்தன்மை அதிகரித்து உடலின் உள்பகுதிகளில் அடைப்புகள் ஏற்படலாம். உயிரிழப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த இரத்தம் அப்படியே அழிக்கப்படும்.

பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர் ஹீமோக்ளோபின் அளவு 17.5 இருப்பதாகச் சொன்னார். இருந்தாலும், அந்த முறைப்படி ஒரு யூனிட் இரத்தத்தை வெளியேற்றி சில மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். அதன்படியே, ஒரு யூனிட் இரத்தம் எடுக்கப்பட்டது.

“எத்தான், அந்த ஆஸ்பத்திரில 19-னு சொன்னான். கிறுக்குப்பயக்க..ஓட்ட மெசின எதயாம் வச்சி செய்வாம் போல..”

சரவணனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் வித வித எண்ணங்கள் வந்து பயமுறுத்துவது நிற்கவில்லை, அன்றைக்கும் சரியாக சாப்பிட முடியவில்லை. இரத்தத்தின் திடத்தன்மையை கட்டுக்குள் வைக்க தினசரி இரண்டு மாத்திரைகள், பிறகு, நிறைய தண்ணீர், ஜூஸ், இளநீர்..எல்லாம் அதே அறிவுரை தான்…

“மாப்ள, என்னடே, கிளி பறந்துருச்சோ? எதயாம் பாத்து பயந்தியால? நீ லேசுல இப்டி ஆக மாட்டியே டே?” நாகராஜ் சரவணனுக்கு நீண்ட கால நண்பன்.

“இல்ல மக்ளே, நாந்தா சொன்னேம்லா..எனக்கே தெரில மக்கா, ஒரே பயம், கேட்டியா? செத்துருவமோ, பிள்ளக்கி என்ன ஆகுமோன்னு..”

“போல லே, எல்லாவனும் சாவ வேண்டியதா, நால்லாம் ஒரு நாளக்கி எத்தன பிரச்சினய தோள்ல போட்டுட்டு சுத்துகேன், உனக்கென்ன ல, பைத்தியாரா…போல, போய் வேலயப் பாரு ல..”

“மக்கா, நா எல்லாருக்கும் ட்ரெய்னிங் குடுக்க ஆளு..நானே சொல்லுகேன் இப்டிலாம் தோணுகுன்னு…”

“செரி, விடு..ஒண்ணு செய்வோம்…நம்ம வடசேரி பள்ளில போய் மொதல்ல ஓதி கயிறு கட்டுவோம், நீ வா..”

லெப்பையிடம் வரிசையில் காத்திருந்து ஒரு பாக்கெட் ஊதுபத்தி, ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டான். அவர் ஓதி விட்டு அடிக்கடி எச்சில் துப்பி அவன் முகத்தில் ஊதினார். “பயந்தான்..போ..செரி ஆவும்..இன்ஷா அல்லா..”

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் பூசாரித் தாத்தாவிடம் தண்ணீர் தெளித்து கயிறு கட்டினால் எல்லாம் சரி ஆகும் என்று யாரோ சொல்ல, பத்மாவும் சரவணனும் அங்கு சென்றார்கள். பூஜை முடித்து தண்ணீர் சொம்புடன் வெளியே வந்த பூசாரி சரவணனைப் பார்த்த உடனேயே, “இவன் யாம் இப்டி பயப்படுகான்? கயித்தப் பாத்து பாம்புன்னுலா பயப்படுகான்” என்றார். பத்மாவின் முகத்தில் இன்னும் பயம் கூடியது.

கயிறு கட்டுதல் அதோடு முடியவில்லை. சுடுகாட்டு சுடலை மாடன், தாழாக்குடி அம்மன் கோவில், வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் என்று பல கயிறுகள் சரவணனின் மணிக்கட்டில் ஏறி அவனுக்கு தைரியம் கொடுத்தன. குமரி பகவதி அம்மன் அபிஷேக சந்தனத்தை மூன்று இரவுகள் முகத்தில் பூசிப் படுத்தான்.

அடுத்த வாரம் மீண்டும் திருவனந்தபுரத்தில். இரத்தப் பரிசோதனை செய்தபோது ஹீமோக்ளோபின் 14.5 என்று வந்தது. அவனுக்கு பாலிசித்தீமியா இல்லை எனவும், இது ஒரு வேளை வேலைப் பளுவாலோ, இல்லை ஏதேனும் உளவியல் சிக்கலாகவோ இருக்கலாம் என்றும் மருத்துவர் சொல்ல, சரவணனின் குழப்பம் இன்னும் அதிகமானது.

“பத்மா, டாக்டர் என்ன சொன்னாரு மனசுலாச்சா? எனக்கு ஸ்ட்ரெஸ்ஸாம்..ஆன்க்சைட்டி டிஸ்ஆர்டராம்…நம்ப முடியுதா? செரிதான்…ரைட்டு, பாப்போம்…”

மருத்துவர் சரவணனிடம் நன்றாகத் தூங்க வேண்டும் எனவும், சில நாட்களுக்கு வேலையிலிருந்து விடுப்பு எடுத்து ஓய்வெடுக்கலாம் எனவும் கூறினார். முக்கியமாக, மொபைல் ஃபோன் உபயோகப் படுத்துவதைக் குறைக்க வேண்டும். தேவைப்படும் நேரங்களில் முடிந்த வரை முகத்திற்கு நேராக வைத்து ஃபோனைப் பார்க்க வேண்டும். தலை குனிந்து ஃபோனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

எல்லாம் முயற்சி செய்தும் சரியான பாடில்லை. இரண்டு வாரங்கள் ஓடின. தினமும் காலை சரியாக 6.17-க்கு முழிப்பு வந்தது. அடுத்த இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு மூளை அதிவேகத்தில் ஓடும்; எண்ணங்களின் பந்தயம்; சில கடந்த நாட்களைப் பற்றி, சில எதிர்காலம் பற்றி, வேலை போய்விடுமோ, படுத்த படுக்கையாகி விட்டால் என்ன செய்வது?, சேமிப்பு பெரிதாக இல்லை, மனநிலை பாதிப்பு என்றால் ஒரு வேளை பைத்தியம் பிடித்து விடுமோ? ஒரு பன்றி தன் குட்டிகளுடன் பரபரத்து ஓடுவது போல அடிக்கடி கனவில் தோன்றியது. சில நேரங்களில் பகலிலும்.

சாப்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனது. காலை உணவிற்குப் பின் வீட்டு வராந்தாவில் நடக்க ஆரம்பிப்பான், இங்கும் அங்குமாக, ஏதும் பேசாமல், அவ்வப்போது பெருமூச்சுகளாக விடுவான். குழந்தையிடம் விளையாடுவது அறவே நின்று போனது, அவள் அருகே வந்தாலே எரிச்சலில் கத்தினான். பத்மாவையும் முகம் கொடுத்து பார்ப்பதைத் தவிர்த்தான். மாலை நான்கு மணிக்கு மேல் எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாகப் பேச ஆரம்பிப்பான். இரவு மீண்டும் குழப்ப எண்ணங்கள், பயம், தூக்கமின்மை.

நாகராஜனுடன் ஒரு மனநல மருத்துவமனைக்குப் போனான் சரவணன். அது ஒரு நாலுக்கெட்டு வீடுதான். கட்டுப்படுத்த முடியாத ஓர் இளைஞனை கொண்டுவந்த காரிலேயே வைத்து ஊசி போட்டு அமைதிப் படுத்தினார் மருத்துவர். படபடப்பாக அமர்ந்திருந்த சரவணனை உள்ளே வருமாறு அழைக்க, இருவரும் சென்றனர்.

“வாங்க, இரிங்க, யாருக்கு பிரச்சன?” மருத்துவர் ஒரு சோபாவில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே கேட்டார். அவர் தலைக்கு மேல் ஒரு வெள்ளை நிற பல்பு, கண் கூசும் விதமாக ஒளிர்ந்தது. சரவணன் தன் பிரச்சினையைப் பற்றி விளக்கமாகச் சொன்னான். அடிக்கடி அந்த பல்பு அவனைத் தொந்தரவு செய்வது போல எரிச்சலூட்டியது. மருத்துவர் சரவணனைப் பார்க்காமல் நாகராஜனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“தம்பி, ஆன்க்சைட்டி அண்ட் ஃபியர், அவ்ளோதா..ரெண்டு வருசம் இருக்கும்னு நெனக்கேன், எனக்கு அட்டாக் வந்து ICU-ல இருந்தேன்..செத்துருவேன்னு ஒரே பயம்..மருந்து என்ன மருந்து…நம்ம தான் மருந்து…அந்த பத்து நாள்ல தான் புரிஞ்சு..நம்மலாம் ஒரு மயிரும் இல்லன்னு…இன்னா பாரு, ஜம்முன்னு இருக்கேம்லா…மனசுதா மருந்துப்போ…”

சரவணன் கூர்ந்து கவனிக்க நாகராஜன் மருத்துவரைப் பார்த்து ம்ம், ம்ம் என்று தலையாட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி, ஒனக்கு எந்த ஹீரோயின் புடிக்கும் சொல்லு” என்று நாகராஜனைப் பார்த்து சிரித்தார் மருத்துவர்.

“சார்..அது…” கொஞ்சம் வெட்கப்பட்டு, “நயன்தாரா சார்..” என்றான்.

“ஆமா தம்பி, ஜம்முன்னு இருக்கால்லா..அவ பொண்டாட்டியா வந்தா சூப்பரா இருக்கும்லா..”

நாகராஜன் தலையைச் சொரிந்து கொண்டே, “அது நடக்காதுல்லா சார்.” என்றான்.

“அப்பிடிச் சொல்லு…எல்லாவனுக்கும் அவவன் பொண்டாட்டிதான்டே நயன்தாரா, திரிஷா எல்லாம்..வேறென்ன செய்ய முடியும்? அப்டி நெனச்சுட்டே ஓட்ட வேண்டியதான். என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்காம் பாத்துக்கோ, 45 வயசு..பெரிய லாயரு…இன்னும் கல்யாணம் பண்ணல்ல..யாம்லன்னு கேட்டா, ‘ஒரே கருவாட்டு வாட, சீ…சீ..அப்டிங்கான்..சொல்லது மனசுலாச்சா..”

சரவணன் தலையாட்டி சிரிக்க ஆரம்பித்தான். மருத்துவர் இப்போது அவனைப் பார்த்து, “தம்பி ஒரு பலூன்ல ஃபுல்லா தண்ணி புடிச்சி ஒரு நூல்ல கெட்டி வச்சிருக்கேன்னு வய்யி, அத ஒரு சுண்டு சுண்டுனா என்ன ஆவும்?”

சரவணன் யோசித்து, “அது குலுங்கும் சார்” என்றான்.

“ம்ம்..அதுக்க அதிர்வு இருக்குல்லா, எவ்ளோ நேரம் இருக்கும்னு நெனைக்க, சொல்லு பாப்போம்.”

“ஒரு…ஒரு முப்பது செகண்ட் இருக்கும் சார்.” என்றான்.

“தம்பி, நீ சொல்லு..” என்று மருத்துவர் நாகராஜனைப் பார்த்துக் கேட்டார்.

“சார்..ஒரு ரெண்டு நிமிசம் இருக்கும்லா.” என்றான்.

“ம்ம்..சொன்னா நம்ப மாட்டியோ, கொறஞ்சது முப்பது நிமிசம் இருக்குமாம்..நீங்க வேண்ணா கூகிள் பண்ணிப் பாருங்கோ..” இருவரும் மருத்துவரைக் கூர்ந்து கவனித்தனர்.

“அதே மாதி தான நம்ம மனசும்..நயன்தாரா, வேல, சம்பாத்தியம், குடும்பம், சப்பு, சவறு..என்ன மயித்தயெல்லாம்தா மனுசன் சமாளிப்பான்..அதுலயும், கல்யாணம் ஆயிட்டுன்னு வய்யி, பய தொலஞ்சான்..நாந்தா பாக்கேம்லா..வரவன்ல பாதி பேரு குடும்பத்தால சீரழிஞ்சவந்தான்..பொண்டாட்டி…மண்ணாங்கட்டின்னு…வேற வேலயில்லாமத் திரியானுவோ…”

இருவரும் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தனர்.

மருத்துவர் கேட்டார் “எதாம் நடந்திருக்கும்…எப்பயும் மாதி இல்லாம வேறெதாம் செஞ்சுருப்ப..யோசிச்சுப் பாத்து சொல்லு..வீட்ல எதாம் சண்ட கிண்ட போட்டியா?”

சரவணன் கொஞ்ச நேரம் யோசித்து சொல்ல ஆரம்பித்தான், “ம்ம்ம்..ஆமா, சார்…ஒரு மாசம் இருக்கும்னு நெனைக்கேன்..எம் பொண்டாட்டி பாத்ரூம்ல பிள்ளய குளிப்பாட்டிட்டு இருந்தா..பிள்ளன்னா தண்ணில ஜாலியா வெளயாடத்தான செய்யும் ..திடீர்னு ஓ..ஓன்னு பிள்ள அழுகா..இவதான் அடிச்சிருப்பா..எனக்குப் பொதுவா பிள்ளேல யாரும் அடிக்கத பாத்தா மண்ட காஞ்சிரும்..எத்தன தடவ சொன்னாலும் இவ கேக்கதில்ல..பிள்ளயப் போட்டு அடிக்கது..அன்னிக்கி கடுப்புல போயி பாத்ரூம் கதவுல ஓங்கி ஒரு இடி இடிச்சேன்..பயங்கரமா கத்திட்டேன்..கதவு ரெண்டு துண்டாப் போய்ட்டு…எனக்கே ஒரு மாதி ஆய்ட்டு…மூணு நாளா ஒண்ணும் பேசாம இருந்தேன்…

“ம்ம்ம்..பொறவு…”

“பொறவு, அடுத்த வாரம் வேறெதோ சண்டைல அவ ஃபோனப் போட்டு ஒடச்சா..நா கண்டுக்காம அமைதியா வெளில போய்ட்டேன்..பொறவு, சமாதானம் ஆனப்போ..எத்தான், .ஃபோன ஒடச்சதுக்கு நீங்க ஏன் கோவப்படலத்தான்னு கேட்டா..எனக்கே மனசுலாவல…எப்டி நா அமைதியா இருந்தேன்னு..”

“ம்ம்..அதான கேட்டேன்..ஒண்ணும் நடக்காமலா மனசு ஷேக் ஆவும்…பலூன் கததான் கேட்டியா..”

சரவணன் ஏதோ புரிந்தது போல அவரைப் பார்த்தான். முகத்தில் ஒரு தெளிவு தெரிந்த மாதிரி இருந்தது.

“பலூன சுண்டுனா குலுங்கும்லா..நா சொல்லுகது செரி தானப்போ…சொல்லு பாப்பம்…”

“நம்ம சொல்லத தான் நம்ம மனசு கேக்கணும் இல்லயா?..அது என்ன பெரிய மயிரா நமக்கு ஆர்டர் மயிரு போட…நம்ம மனசுக்கு நாமதான் மொதலாளி..இல்லா? ‘Your mind is your instrument. Learn to be its master, not its slave’-ன்னு ஒரு கோட் இருக்கு தெரியுமா?”

சரவணன் தலையை ஆட்டி ஆமோதித்துப் பின் கேட்டான், “டாக்டர்…நீங்க சொல்லது எல்லாம் மனசுலாகு..ஆனா, ஒறங்க முடில, சாப்பாடு எறங்கல…அதான் பயந்துட்டேன்..ஒரே கெட்ட எண்ணம்..எவனாம் செய்வின வச்சிருப்பானோன்னு கூட நெனச்சேன்..”

“அப்டிதா தோணும்ப்போ…சயின்ஸ் படி பாத்தா, நம்ம நெனச்சாலே நமக்கு கேன்சர் வரும்ங்கான்..எல்லா சோக்கேடும் நம்ம கைலதான்..நம்ம தாத்தமாரெல்லாம் எப்டி இருந்தானுகோ…நாலு பொண்டாட்டி வச்சு ராசா மாதி இருந்தானுகல்லா…இன்னொரு மேட்டரும் உண்டு..இது பரம்பரயா கூட வரும்னும் சொல்லுகா..ஒங்க குடும்பத்துல யாருக்காம் இப்டி இருந்திருக்கலாம்..யாரு கண்டா!”

“டாக்டர்..இப்ப என்ன செய்யச் சொல்லுகியோ?”

“தம்பி…நீ சரக்கடிக்கவன் மாதி தெரில…அடிப்பேன்னா நல்லா நாலு நாளு ஒரு டூரப் போடு..இந்தா இருக்காம்லா, இவன் மொடக்குடிகாரந்தான..முழியப் பாத்தா தெரிதே ..இவனக் கூட்டிட்டுப் போ..இந்தா இருக்கு கேரளா..ஒரு ரெசார்ட்ட போட்டு நல்லா குடி..ஒரு மஸாஜப் போடு…நல்லோரு ஓமனக்குட்டி கிட்டுமெங்கில் கொள்ளாமாயிருக்கும்..எல்லா பயம் மயிரும் ஓடிரும்…”

சரவணனும் நாகராஜனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

“என்னடா, டாக்டரே இப்டி சொல்லுகாரேன்னு பாக்கியா? இல்லன்னா சொல்லு..ஒனக்கு ஒரு ஆறு, ஏழு மாத்திர தாரேன்..ரெண்டு மாசம் சாப்பிடு…அதுக்கப் பொறவு செரி ஆவும், இல்லன்னா பழகிரும்…ஹிஹிஹி…”

இருவரும் குழப்பத்தோடு மருத்துவரைப் பார்க்க, அவர் தொடர்ந்தார், “செரி, அத விடு..இப்ப என்ன, ரெண்டு வாரம் சோலிக்குப் போலேல்லா..எத்தன நாளக்கி அப்டி இருப்ப? மொதல்ல நீ ஆபீஸ்க்கு போ..ஒனக்குப் பிடிச்ச வேலதான…நூறு பேருக்கு ட்ரெய்னிங் கொடுக்கவம்லா டே நீ? போய் வேலயப் பாரு…வேறென்ன இன்ட்ரெஸ்ட் ஒனக்கு? மியூசிக், டிராயிங், ஏதும் உண்டா?”

“அது..சார்..புக்ஸ்னா உயிரு சார்..நெறைய எழுதணும்னு ஒரு ஆசயும் இருக்கு…”

“பொறவு என்ன டே..போய் நெறைய படி…எழுத ஆரம்பி…வீட்ல மகாலட்சுமி மாதி பொம்பளப் புள்ள இருக்கால்லா..அவ கூட டெய்லி வெளையாடு…ஒண்ணுல்ல கேட்டியா…நம்ம தா மனசுக்கு மாஸ்டர்..என்ன?”

“செரி சார்..”

மருத்துவர் இரண்டு நாட்களுக்கு மட்டும் மாத்திரை எழுதிக் கொடுத்தார். தூக்கம் வருவதற்காகவும், எண்ண ஓட்டத்தைக் குறைப்பதற்காகவும். தினமும் இரண்டு மாத்திரைகளில் கால் அளவு தான். முதல் நாள் இரவு மாத்திரை போட்டதும் அடித்துப் போட்டது போல தூங்கினான் சரவணன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திடீரென முழிப்பு வந்தது. கண் திறந்து பார்க்க, ஓரடி தூரத்தில் பெரிதாக ஒரு முகம், அவ்வளவு தத்ரூபமாக அவனைக் கூர்ந்து பார்த்தது. பயந்து போய் முகத்தைத் திருப்பிப் பார்க்க, மேசையின் அருகே இருந்த நாற்காலி தலைமுடியை விரித்துப் போட்டு அவனை நோக்கி நகர்ந்து வந்தது. கண்களை இறுக்க மூடி அப்படியே உறங்கி விட்டான்.

அடுத்த நாள் காலை அதே அறிகுறிகள் இருந்தாலும் மனது தைரியமானது போல இருந்தது. இரவில் தோன்றியது KFC லோகோவில் உள்ள முகம் போல இருந்ததாக நினைத்து சிரிப்பு வந்தது. மீதமிருந்த மாத்திரைகளை பரணில் தூக்கிப் போட்டான். நாகராஜனுக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னான்.

“மாப்ள, இன்னிக்கு லீவு போட முடியுமா?”

“என்ன மக்கா? எதுக்கு ல?”

“நீ லீவு போடு…வண்டிய எடு..”

நாகராஜன் விடுப்பிற்குச் சொல்லிவிட்டு பைக்கில் அவனை ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

“நண்பா, வண்டிய நேர திருச்செந்தூருக்கு வுடு…”

“லே, என்ன மக்கா? டக்குன்னு திருச்செந்தூருன்னு சொல்லுக..”

“நண்பா, நீ போ சொல்லுகேன். தலைவர பாத்து ரொம்ப நாள் ஆச்சில்லா..”

“செரி மக்கா..நானும் போணும்னு நெனச்சேன்..செரி போவோம்..

நீண்ட பயணத்தின்போது மனது லேசானது..நீண்ட உரையாடல்கள்..மனதிற்கு நெருக்கமான நண்பனுடன் அங்கங்கே நிறுத்தி சாயா, உளுந்த வடை என…

கோவிலுக்குச் சென்று முருகர் தரிசனம் முடித்து பிரபல மணி ஐயர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, கோவில் மண்டபத்தில் சென்று இருவரும் படுத்து உரையாடலைத் தொடர்ந்தனர். கடல் காற்று உச்சி வெயிலில் சுகமாக இருந்தது. எங்கும் மயிலிறகுகள், நேர்த்திக் கடன்கள்.

“மணி ஐயர் சாப்பாடுன்னா ஒரு சொகந்தாம் மொக்கா..ஆமா, பிள்ளேள் எப்டிருக்கா மொக்கா? பையன் எப்டி படிக்கான்?” என்று கேட்டான் சரவணன்.

“பரவால்ல டே….செம வாயி கேட்டியா? எங்கப்பாவ பாத்து ‘லே, எவம்ல அது? இங்க வால லே’ன்னு சொல்லுகான்..அவனுக்கு ஓரே காரு ஆசதான்..நூறு கார் பொம்ம வச்சிருக்கான் தெரியும்லா…இன்னொரு நாளு சொல்லுகான், ‘அப்பா, நீங்க பிராண்டி குடிக்காதியோ, அடிச்சு தொவச்சிருவேன்’னு..”

“சூப்பர் மக்கா..சின்னவா என்ன சொல்லுகா?”

“நீ தான டே அதுக்கு காரணமே…சண்ட வந்தா போயி கெட்டிப் புடி..எல்லாஞ் செரி ஆவும்னு நீதான சொல்லுவ..அததா ஃபாலோ பண்ணேன்..இந்தா ஒரு வயசு ஆவப் போது..”

“அது செரி, நீ சும்மாவே தொட்டு வெளயாடுவ..”

“மாப்ள, உன்ட்ட சொல்லணும்னு நெனச்சேன் பாத்துக்க..நீ யாம்ல ரெண்டாவது வேண்டாம்னு சொல்லுக?”

“இல்ல மக்கா..வேண்டாம்னு ஒரு தோணக்கம்…ஏன்னு தெரில…”

“இல்ல நண்பா, நாஞ் சொல்லத கேளுல…நீ கமிட் ஆக வேண்டாம்னு நெனைக்க…பெரியவங்க சொல்லது சும்மால்ல மக்கா..ரெண்டு பிள்ளங்க இருந்தா லைஃப் வேற ஒரு டைரக்சன்ல போவும் பாத்துக்க..எம் பொண்டாட்டி என்ன போலீஸ் ஸ்டேசன் வர கொண்டு போனவதான..இப்ப பாரு..சுத்திச் சுத்தி வாரால்லா…நீ நல்லா யோசி மக்கா..இன்னொரு பிள்ள வந்தா நீ இன்னும் ஒழைக்கணும்லா..அதுக்காவே ஓடுவ..லைப் அவ்ளோதான…பத்மாக்கும் மனசுக்குள்ள ஒரு ஆச இருக்கும் பாத்துக்கோ…நீ எதாம் நெனப்பேன்னு சொல்லாம இருப்பா…”

“ஆமா மக்கா..அவா ரெண்டு மூணு தடவ சொன்னா கேட்டியா..”

“அதாம்ல சொல்லுகேன்…அடிச்சு கெளப்பு டே..நம்ம ஃபரூக்குக்கு இப்ப நாலு பயக்க தெரியும்லா…சவத்துப்பய இன்னும் ஒண்ணு வேணுன்னு நிக்கான்…”

“அது செரி..நமக்கு முதுகெலும்பு அத்துரும்டே…பாப்பம்..”

அடுத்த ஒரு வாரத்திற்கு சரவணன் தினசரி செயல்களைக் கொஞ்சம் மாற்றிப் பார்த்தான். காலையில் கொஞ்சம் பேட்மிண்டன், பின் ஜெயமோகன் வலைத்தளம்…அலுவலகத்திற்கும் செல்ல ஆரம்பித்தான்..முழுதாக கவனம் செலுத்தி வேலை செய்ய முடியாவிட்டாலும் முடிந்த அளவு சமாளித்தான். மாலையில் தீவிர வாசிப்பு…முக்கியமாக, அதுவரை குறிப்பெடுத்து வைத்திருந்த யோசனைகளை எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்தான். ஒரு வாரத்தில் அவனது முதல் சிறுகதை ‘தனிமையிருள்’ தயார் ஆனது. நண்பர்களின் வாசிப்புக் குழுமத்தில் அதைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் நடந்தது. வாழ்க்கையில் ஓரளவிற்குப் பிடி கிடைத்து விட்டதாக உணர்ந்தான்.

“பத்மா, உன்ட்ட ஒண்ணு சொல்லணும்…”

“என்னத்தான்…சொல்லுங்கோ..”

“இல்ல..அது…”

“அட…இதெல்லாம் ஓவருத்தான்..உங்களுக்கு வெக்கம்லாம் செட் ஆகல..”

“ம்ம்ம்..அது…அமுதா இப்பல்லாம் ரொம்ப நேரம் தனியா வெளயாடுகால்லா…”

பத்மா சில நொடிகள் எதுவும் பேசவில்லை. அப்படியே சென்று சுவரில் இருந்த பிள்ளையார் போட்டோவின் முன்னால் நின்று கண்களை மூடிக் கொண்டாள்.