ஐ கிருத்திகா
லாரி நான்கு வழிச்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. உக்கிர வெயிலின் பிடிக்குள் சிக்கியிருந்த முற்பகலில் அந்த லாரி சென்னையிலிருந்து அரியலூர் திரும்பிக் கொண்டிருந்தது.
நவீன் டிரைவரைப் பார்த்தான். மாட்டுவண்டி ஓட்டும் தொனியில் முகத்தை வைத்திருந்தவர் ஸ்டியரிங்கை வளைக்க வேண்டிய அவசியமின்றி வெறுமனே பிடித்தபடியிருந்தார். நவீன் நோக்குவதை உணர்ந்து திரும்பியவர்,
” ஒண்ணுக்குப் போவணுமா…?” என்றார்.
” இ… இல்ல….” என்ற நவீனுக்குப் போனால் தேவலாமென்றிருந்தது. காலை ஐந்து மணிக்குப் போனது. ஒன்பது மணிவரை வயிறு எந்த அறிகுறியும் காட்டாதிருந்தது பயமாக இருந்தது. ஏறியதிலிருந்து தண்ணீர் குடிக்காதது ஞாபகத்துக்கு வர, சற்று ஆசுவாசமாகிப் போனது.
” டீக்கடையில நிறுத்துங்க. டீ குடிச்சிட்டுப் போகலாம். ”
நவீன் சொல்ல, அவர் தலையை மட்டும் ஆட்டினார். சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல பேருந்தோ, ரயிலோ கிடையாது. ஊரடங்கு வேறு அறிவிக்கப் போகிறார்கள். கொரோனா ரொம்பத்தான் ஆட்டம் போடுகிறது என்று நினைத்துக் கொண்டான்.
இரண்டு மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தவனை வேலைக்கு வரவழைத்தது நிர்வாகம். அப்போது இரண்டு ஊரடங்குகள் கடந்திருந்தன. மார்ச் மாதத்தின் மத்தியில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு ரயிலில் அடித்துப் பிடித்து ஊருக்கு வந்தவனைப் பார்த்து அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
இரண்டு மாதங்கள் அலுப்பும், சலிப்புமாக கழிந்தாலும் வேலைப்பளு இல்லாமல் செல்போனே கதியென்று கிடந்தவன் மெதுவாக சென்னைப் போய் சேர்ந்தான். பத்து தினங்கள் ஆகவில்லை. சக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் வர அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. அதோடு கொரோனாவின் தீவிரமான பிடியில் சென்னை திக்குமுக்காடியது.
” தம்பி எப்படியாவது ஊர் வந்து சேர்ந்துடுப்பா. அங்க இருந்தா உனக்கும் கொரோனா வந்துடும்,” என்று அம்மா கண்ணீர் வடித்தாள்.
நவீன் வேலை பார்க்கும் அலுவலகத்தின் தொழிற்சாலை அரியலூரிலிருந்தது. அங்கிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்னை வந்த லாரி திரும்பியபோது மேலதிகாரியின் சிபாரிசோடு நவீன் அதில் தொற்றிக்கொண்டான்.
டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்.
” ஏண்ணே…?”
அவர் எதுவும் பேசாமல் இடுப்பில் சொருகி வைத்திருந்த உள்ளங்கையளவு பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டார். நவீனுக்குத் திகிலேறியது.
” டிரைவிங்ல குடிக்கிறீங்களேண்ணே. தப்பில்ல….?”
ஏற்கனவே லாரிக்குள் உட்கார முடியவில்லை. இன்ஜின் அருகாமையிலிருந்ததில் சீட் கொதித்தது. ஏசி பேருந்திலோ, ரயிலிலோ சென்று பழக்கப்பட்டவனுக்கு அக்கொதிப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் அவர் குடித்த சரக்கின் நாற்றம் வேறு குடலைப் புரட்டியது.
” நேத்திக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கி வண்டியெடுத்தேன். சென்னைக்குப் பன்னண்டு மணிக்கி வந்தேன். லோடை எறக்கி வுட்டுட்டு படுத்தா பொட்டுத் தூக்கம் வரல. மறுபடி விடியக்காலையில கெளம்ப வேண்டியதாப் போச்சி. ஒடம்பெல்லாம் அசதியா இருக்கு. கொஞ்சம் உள்ளத் தள்ளலைன்னா ஒளுங்கா ஊர்போயி சேரமுடியாதுப்பா.”
டிரைவர் பீதியைக் கிளப்பினார். பின்னால் வந்த கார்கள் விர், விர்ரென்று முந்திக்கொண்டு விரைந்தன. எதிர்த்திசையில் வாகனப்போக்குவரத்து பெரிய அளவிலில்லை.
அன்றிலிருந்து சென்னை உள்ளே செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவித்திருந்தார்கள். பாஸ் வாங்கிக்கொண்டு சொந்த வாகனத்தில் சென்னையை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. வலுவான காரணங்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலைமை மாறி பணத்துக்காக பாஸ் வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கிளம்பிய அநேகருடன் கொரோனாவும் கிளம்பிற்று. இதனால் தாக்கம் குறைவாயிருந்த பகுதிகளில் எண்ணிக்கை கூடத் துவங்கிற்று.
” அவந்தான் ஏவிவுட்டான்னு சொல்றாங்களே தம்பி… உண்மையா…?”
டிரைவர் அப்பாவியாக கேட்டார்.
” ஏவிவிடறதுக்கு அதென்ன பில்லி, சூனியமா…’ என்று நினைத்துக்கொண்டவன்,
” தெரியலையே…” என்றான் மெதுவாக. அரியலூர் எப்போது வருமென்றிருந்தது.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊரையும் கடக்கும்பொழுது நாகர்கோயிலுக்கான தூரம் நீண்டுகொண்டே போவது போலிருந்தது. ரெக்சினால் ஆன சீட் கட்டை போலிருந்ததில் உட்காருமிடத்தில் வலி உண்டானது. நவீன் சில நிமிடங்களுக்கொரு முறை அப்படியும், இப்படியுமாக உடலை அசைத்து நெளிந்தான். டிரைவர் சிரித்தார்.
“சொகுசு பஸ்ஸுல போயி பளக்கமாயிருக்கும் ஒங்களுக்கு. இந்த கட்டவண்டி நாலுநாளு ஒங்க கட்டைய சாய்ச்சிப்புடும் பாருங்க. படுத்தா எந்திரிக்க மாட்டீங்க…..” என்ற டிரைவர் கரையேறிய பற்கள் தெரிய சிரித்தார்.
பக்கவாட்டிலிருந்து வெப்பக்காற்று வீசிற்று. காற்றில் அனல் கங்குகள் தெறித்தன. முழுக்கை சட்டை போட்டு வந்தது தவறென்று நவீனுக்கு அப்போதுதான் உறைத்தது. இரு பொத்தான்களை விடுவித்தான். போட்டிருந்த மாஸ்க் பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. ஆரம்பத்தில் மூச்சுத் திணறுவது போன்ற உணர்வு. அதற்கே மனம் பீதியடைந்துவிட்டது.
” மாஸ்க்கைப் போட்டா மூச்சுவிட முடியாம பெரிய அவஸ்தையா இருக்குடா……” என்று நண்பன் சொன்னபோதுதான் அது பொதுவான பிரச்சனை என்று புரிந்தது.
டிரைவர் மாஸ்க்கை தாடைக்குப் போட்டிருந்தார். சோதனைச்சாவடி கண்களில் தென்பட்டால் வெடுக்கென்று இழுத்துவிட்டுக் கொண்டார். அவர் அணிந்திருந்த நிறமிழந்த பனியன் வியர்வையில் நனைந்திருந்தது. இன்ஜின் சூட்டைக் கக்கி அவரை வியர்வையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
” வண்டி உங்களுதா…?”
நவீன் நேரத்தைக் கடத்த கேட்டான்.
” என்னைப் பாத்தா லாரி ஓனர் மாதிரியா தெரியிது. நான் வெறும் டிரைவர்தான் தம்பி. எங்க ஓனருக்கு ஆயிரம் லாரிகள் இருக்கு. பெரிய ஆளு அவரு. எப்பவும் வெள்ளையுஞ் சொள்ளையுமா பாக்க சினிமா நடிகராட்டம் இருப்பாரு. இந்த ஆறு வருசத்துல நானே அவர பத்து தடவதான் பாத்துருப்பேன். அவருக்கு கீள ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தனுக்கு கீளதான் நாங்க வேலப் பாக்குறோம். ”
” இதுக்கு முன்னாடி எங்க வேலைப் பார்த்தீங்க…?”
” காய்கறி லாரி ஓட்டிக்கிட்டிருந்தேன். அப்ப வடநாட்டுக்கெல்லாம் போயிருக்கேன். வெங்காயம் ஏத்துமதி பண்ண மகாராஸ்ட்ரா போவோம். இருவது வருசமா அந்த வேலப் பாத்துட்டு முடியாம வந்துட்டேன். என் சகலை இந்த வேலைய வாங்கிக் குடுத்தான். அவனும் இங்கதான் வேலப் பாக்குறான்.”
அவர் பேசியபடியே டீக்கடையருகில் லாரியை நிறுத்தினார். நவீன் அவரைக் கூப்பிட்டபோது மறுத்துவிட்டார்.
” ஏற்கனவே வயறு கலக்கியடிக்கிது தம்பி. ராத்திரி புரோட்டா சாப்புட்டேன். அது செரிக்கலையா என்னான்னு தெர்ல. வயறு கடமுடங்குது. நீங்க குடிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள நான் என் மிஸஸ் கிட்ட பேசிடுறேன்”
அவர் கைக்கு அடக்கமாயிருந்த அந்த நோக்கியா செல்போனில் எண்களைத் தட்டத் தொடங்கினார். நவீன் கீழே குதித்தான். இடுப்பில் கைவைத்து உடலை வளைத்து ஆசுவாசித்துக் கொண்டான்.
ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே டீக்கடையும் கொதித்துக் கிடந்தது. பாய்லருக்கருகில் நின்றிருந்த மனிதர் நவீனைக் கண்டதும் கழுத்தில் கிடந்த மாஸ்க்கை மூக்கில் மாட்டிக்கொண்டார்.
மாஸ்க் டீ வடிகட்டும் துணி நிறத்திலிருந்தது. நிறமே அதுதானா அல்லது துவைக்கப்படாமல் அப்படி ஆகிப்போய்விட்டதா என்று புரியவில்லை. நவீன் தயக்கத்தோடு காலடி எடுத்து வைத்தான்.
” வாங்க சார்… மசாலா டீ . ஏலக்கா டீ, இஞ்சி டீ இதுல எது குடிக்கிறீங்க…?”
அவர் சுறுசுறுப்பாய் கிளாசைக் கழுவினார். டிரேயில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கூட்டம் திடீரென்று மேலே பட்ட தண்ணீரில் அதிர்ந்து விலகின. நவீன்,
” இஞ்சி டீ…” என்றான்.
” எங்கேயிருந்து வர்றீங்க சார்…?”
” விழுப்புரத்துலேருந்து ” என்றான் சட்டென்று. சென்னை என்ற பேரைக் கேட்டாலே எல்லோருக்கும் அலர்ஜியாகிவிட்டது. சென்னை கனவுகளை வசமாக்கும் நகரமாக இருந்தது ஒரு காலம். சென்னைக்குப் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. இப்போது, சென்னையிலிருந்தால் பிழைக்க முடியாது என்று வார்த்தைகள் மாறிவிட்டன.
தப்பித்தால் போதுமென்று சனம் சொந்த ஊரைப் பார்க்க ஓடுகிறது. கடைக்காரர் டீ கிளாசை மேசை மீது வைத்தார். நவீன் பட்டும்படாமல் பெஞ்சில் அமர்ந்தான். எங்கே கிருமி அதில் ஒட்டியிருந்து தன்மீது தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம்.
மடக், மடக்கென்று டீயைக் குடித்தவன் ரூபாய் நோட்டை நுனிவிரலால் தந்துவிட்டு லாரியருகில் வந்து பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த சானிடைசர் பாட்டிலை எடுத்து கைகளை சுத்தம் செய்து கொண்டான். சுத்தம் செய்வதற்கு முன் பாட்டிலை தொட்டுவிட்டது ஞாபகத்துக்கு வர மீண்டும் திரவத்தை உள்ளங்கையில் நிரப்பி பாட்டிலை மெழுகினான்.
” தம்பி, கெளம்பலாமா…?”
டிரைவர் குரல் கொடுக்க பாய்ந்து ஏறிக்கொண்டான். ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது போல கியரை ஒரு சுற்று சுற்றி வண்டியைக் கிளப்பியவர்,
” இன்னும் ஒருமணி நேரத்துல அரியலூர் போயிடலாம்,” என்றார். லாரியின் நெற்றியில் ‘ஒண்டி கருப்பண்ணசாமி துணை’ என்று எழுதப்பட்டிருந்தது. நவீன் அதைப் படிப்பதைக் கவனித்தவர்,
” ஓனரோட கொலதெய்வம். ஆயிரம் லாரியிலயும் இதான் எளுதியிருக்கும்,” என்றார்.
” ரெண்டாவது ஊரடங்கு அமல்ல இருந்தப்ப அரசாங்கம் தளர்வுகளை அறிவிச்சுதே. அப்ப வண்டி ஓட்டினீங்களாண்ணே..?”
” ஓட்டாம… மொத ஊரடங்க சமாளிச்சிட்டேன். ரெண்டாவது அறிவிச்சப்ப பகீர்ன்னுச்சி. ஏன்னா கையில் காக்காசு கெடையாது. இருந்ததக் கொண்டுதான் மொத ஊரடங்க கொண்டாடுனோம். நல்லவேளையா கட்டட வேல நடக்கலாமுன்னு அரசாங்கம் அறிவிச்சிது. லாரி ஏறிட்டேன். ஒண்ணு பசியால சாவணும், அல்லது கொரோனாவால சாவணும். வூட்டுல எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. ரெண்டு புள்ளைங்க எனக்கு. அதுங்க பசியோட கெடந்தா என்னால தாங்கிக்க முடியிமா சொல்லுங்க…”
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு டெம்போ வேன் மிக வேகமாக கடந்து போனது.
” தூ…”
மிகவும் மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தார். ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவரது இடது கை V வடிவில் வளைந்திருந்தது. முழங்கையின் மேற்பரப்பில் பூரான் வடிவ தையல் ஓடியிருந்தது. அவர் அனிச்சையாக அந்தத் தையலை அடிக்கடி தடவி விட்டுக்கொண்டார்.
” ஒருதடவ உள் கிராமம் ஒண்ணுக்கு லோடு அடிக்க வேண்டியிருந்தது. அது சிங்கிள் ரோடு. நான் நிதானமாத்தான் போயிக்கிட்டிருந்தேன். எதுத்தாப்ல வந்த பிரைவேட் பஸ் வேகமா வந்து மோதுனதுல லாரி கவுந்து போச்சி. எனக்கு பெருசா அடிபடல. சோத்தாங்கால் பிராக்சர் ஆயிப்போச்சி. கை சதை கிளிஞ்சிடுச்சி. அப்ப போட்ட தையல்தான் இது.”
நவீன் கேட்காமல் அவரே சொன்னார். நவீன் அவரைக் கண்களால் அளந்தான்.
அவர் உதடுகள் உலர்ந்து போயிருந்தன. கண்களுக்கு கீழே இரு பைகள் கனத்து தொங்கின. அடர்த்தியில்லாத செம்பழுப்பு நிற மயிர் காற்றுக்கு மடிந்து நிமிர்ந்தது.
பிளாஸ்டிக் ஒயர் பின்னிய நாற்காலியில் ஒரு அழுக்கான தலையணை போட்டு அவர் அதில் அமர்ந்திருந்தார். ஒயர் முடிச்சுகள் சில இடங்களில் அறுந்திருந்தன. உட்காருமிடத்தில் ஒயர் பின்னல்கள் சுமை அழுத்தத்தில் கீழ் நோக்கி தொய்ந்திருந்தன. நாற்காலிக்குப் பொருத்தமாக செய்து வைத்தது போல அவர் அதில் அமர்ந்திருந்தார். அவர் கைகள் வெகு நிச்சயமாக காய்த்துப் போயிருக்கக்கூடும் என்று நவீனுக்குத் தோன்றியது.
அவர் இன்ஜினுக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தார். அதன் சூட்டுக் கொதிப்பு அவரை உருக்கிவிட்டதா அல்லது மெலிந்த தோற்றம் அவரது இயல்பான உடல்வாகா என்று அவனுக்குத் தெரியவில்லை.
” இருவத்தாறு வருசமா லாரி ஓட்டுறேன். ” அவரே திடுமென கூறினார்.
‘ பயணங்கள் மனதுக்குப் பிடித்தமானவை. ஆனால் இவரது பயணம் இவருக்கு எப்படிப்பட்டதாயிருக்கும்…’
நவீன் யோசித்தபடியே வெளியே பார்வையை பதித்தான். லாரி அரியலூர் எல்லைக்குள் நுழைந்திருந்தது. அதற்குள் முழுதாய் ஏழு மணி நேரங்கள் கரைந்திருந்தன. நவீனுக்கு இடுப்பும், முதுகும் கழன்று விடும் போலிருந்தது.
அவ்வபோது தன்னையுமறியாமல் உறங்கி கழுத்து மளுக், மளுக்கென்று சாய்ந்ததில் திரும்ப முடியாமல் வலி பின்னியெடுத்தது. இன்னொரு ஏழு மணி நேரத்தைக் கடந்தாக வேண்டுமே என்றெண்ணி அவன் மலைத்துப் போனான். டிரைவர் லாரியை தொழிற்சாலை கேட் அருகில் நிறுத்தினார்.
” தம்பி எறங்கிக்கிறீங்களா…?”நவீன் நூறு ரூபாய்த் தாளை இன்ஜின் மேல் வைத்தான்.
” வச்சிக்குங்கண்ணே…”
” இதெல்லாம் எதுக்கு தம்பி…”
அவர் நெளிந்தார். கண்கள் விரிந்தன. வெள்ளைப் பரப்பில் சிவப்பு நிறமிகள் சாயப்பூச்சு போல படர்ந்திருந்தன.
” பரவாயில்லண்ணே. பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…”
நவீன் பையை மாட்டிக்கொண்டு பக்கவாட்டுக் கைப்பிடியை பற்றி திரும்பி டயரில் கால் வைத்து பொத்தென்று குதித்தான்.
” தம்பி ஞாபகம் வச்சிக்குங்க… வரட்டுமா…?”
டிரைவர் குனிந்து சல்யூட் அடித்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.
அடுத்த அரைமணி நேரத்தில் நாகர்கோயில் செல்லும் லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் கிளம்பிற்று. இந்த டிரைவர் முன்னவர் போலில்லை. கிட்டத்தட்ட நவீனுக்கு சமவயதுக்காரன் போலத் தெரிந்தான்.
முகம் கடுகடுப்பாயிருந்தது. ஒரு வார்த்தை பேசவில்லை. நகர எல்லையைத் தாண்டியதுமே வண்டி வேகமெடுத்தது. ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே மறுகையால் அவன் சிடி பிளேயரை ஓடவிட்டான்.
டார்லிங்கு டம்பக்கு பாட்டு அதிர்ந்தது. விழுப்புரத்தில் சாப்பிட்ட வயிறு பகபகவென்றிருந்தது.
” ஹோட்டல் எதுனா வந்தா நிறுத்துங்க…”
” சரி…”
அவன் ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான். அந்த லாரி புதிதாயிருந்தது. மஞ்சள் பெயிண்டின் மினுமினுப்பு வெயிலில் பளபளக்க வேகமாய் பறந்தது. முகப்பில் ‘ செல்லாண்டியம்மன் துணை ‘ என்று எழுதப்பட்டிருந்தது.
‘ அந்த செல்லாண்டியம்மன்தான் நம்மளை பத்திரமா கொண்டுபோய் சேர்க்கணும் ‘ என்று நவீன் நினைத்துக்கொண்டான்.
டிரைவர் ஒரு கையால் செல்போனைப் பிடித்தபடி அடிக்கடி யாரிடமோ பேசிக்கொண்டே வந்தான். பாட்டு சத்தத்தில் எதிராளியின் குரல் கேட்காமல்,
” சத்தமா பேசித் தொலையேன்…” என்று கத்தினான்.
ஏறியதுமே சட்டையைக் கழற்றி சேரில் மாட்டி விட்டவனது கழுத்தில் சுண்டுவிரல் நீளத் தாயத்து தொங்கியது. கருப்புக் கரையிட்ட சிவப்பு பனியன் அணிந்திருந்தான். முகக் கவசத்தைக் காணவில்லை. வண்டி திருச்சி பைபாஸிலிருந்த அந்த சுமாரான ஹோட்டல் முன் நின்றது. கடைக்காரர் முகக்கவசம், கையுறை சகிதம் காட்சி தந்தார். நவீன் இரு பார்சல்கள் வாங்கி ஒன்றை டிரைவரிடம் தந்தான்.
” எனக்கு வேணாம் சார்…”
அவன் மறுத்ததை பொருட்படுத்தாமல் பார்சலை அவனருகில் வைத்துவிட்டு வந்து மரநிழலில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினான். பசித்த வயிற்றை நிரப்பி லாரியில் ஏறியபோது உச்சிவானில் சூரியன் மிதந்தது. அதற்குள் அம்மா இருமுறை போன் செய்து ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்.
” கொஞ்சநேரம் பாட்டு வேண்டாமே. எனக்குத் தூக்கம் வருது,” என்ற நவீனை அவன் ஒருமாதிரியாகப் பார்த்தான். பின்,
” பாட்டுப் பாடலைன்னா எனக்குத் தூக்கம் வந்துடும் ” என்றான் நிதானமாக.
நவீனுக்குத் திக்கென்றானது. இரு கைகளையும் கட்டிக்கொண்டு விறைப்பாக அமர்ந்து பக்கவாட்டில் நகரும் மரங்களைப் பார்க்கத்துவங்கினான்.
” சிங்கம், சிங்கம் ஈஸ்வர சிங்கம்…”
பாட்டு அலறத் துவங்கியது. சிங்கம் படத்தை கோயமுத்தூர் சித்தப்பா வீட்டுக்குப் போனபோது அங்கிருந்த மால் ஒன்றில் நவீன் பார்த்தான். மாலில் இளஞ்சிட்டுகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நடமாடிக் கொண்டிருந்தன.
சினிமாவின் மீதான ஈர்ப்பு பறிபோய் அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தவனை சித்தப்பா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். அது ஞாபகத்துக்கு வர தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“சார் சூர்யா ரசிகரா…?”
டிரைவர் திடீரென்று கேட்டான். அவனது கடுகடுத்த முகத்தின் இறுகினத்தன்மையில் லேசான இளக்கம். எதையோ சொல்லத் துடிக்கிற ஆர்வம் அவன் கண்களில் தெரிய,
“ரசிகர்கலாம் இல்ல. ஆனாப் பிடிக்கும் ” என்றான் நவீன். அவன் பாட்டு சத்தத்தைக் குறைத்தான்.
“நமக்கு தலதான் எல்லாம். நான் அவரோட தீவிர பேன். அவர் படம் ரிலீசான அன்னிக்கி மொத ஷோ மொத வரிசையில ஒக்காந்து பாத்துடுவன். அவரு பேரை நெஞ்சில பச்சக்குத்தி வச்சிருக்கன் பாருங்க.”
அவன் பெருமையாகக் காட்டினான். அவனுக்குத் தன்னை திறந்து காட்டிவிட்ட திருப்தி. அதற்காகத்தான் தூண்டில் போட்டதே. நவீனுக்குப் புரிய மேலும் நாலைந்து கேள்விகளைக் கேட்டான். எல்லாமே தல பற்றிய கேள்விகள்.
பேசுவதை நிறுத்திவிட்டால் பாட்டு சத்தத்தைத் கூட்டிவிடுவானே என்கிற பயம். அவன் உற்சாகமாகப் பேசினான். சாலையில் லாரியின் வேகம் குறைந்திருந்தது. சில வாகனங்கள் கடந்து போயின.
“தலய ஒருதடவ நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசை. முயற்சி பண்ணிக்கிட்டிருக்கன். வூட்ல அதுக்கு இதெல்லாம் புரியாது. ஒளுங்கா சம்பாதிய்யா, அத வுட்டுட்டு தல, கிலன்னு அலையிறியேன்னு கோச்சிக்கும். ”
“கல்யாணமாயிடுச்சா…?”
“இப்பதான் ஆறு மாசத்துக்கு முந்தி ஆச்சி. தல படத்த வச்சி அதுக்கு முன்னாடி தாலி கட்டுனன். என்னப் பொறுத்தவரைக்கிம் அவருதான் கொலதெய்வம். ”
” எத்தனை வருஷமா லாரி ஓட்டுறீங்க…?”
கேள்வி மூலம் நவீன் அவனை மடைமாற்றிவிட்டான். அவன் முகத்தில் முன்பிருந்த பளீர்த்தன்மை மறைந்திருந்தது.
” அஞ்சு வருசமா ஓட்டுறன்” என்றான் அசிரத்தையாக.
” முகக்கவசம் அணியறது பாதுகாப்பு. நீங்க ஏன் அணியல…?”
” அதப் போட்டுக்கிட்டா மூச்சடைக்கிற மாதிரி இருக்கு. எரிச்சலா வருது. லாரி ஒட்டுறதுல கவனமில்லாம போயிடுது. அதான் பாக்கெட்டுக்குள்ள வச்சிருக்கன்” என்று அவன் சட்டைப் பையைத் தொட்டுக்காட்டினான். பின்,
” சிமெண்டு கம்பெனியில வேலப் பாக்குறீங்களா சார்…?’ என்றான்.
” ஆமா… சென்னையில இருக்க ஆபீஸுல வேலை. ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. எவ்ளோ நாள்தான் சும்மாவே அங்க உட்கார்ந்திருக்கறது. அதான் கிளம்பிட்டேன்.”
” உங்கள மாதிரி உத்தியோகம் பாக்குறவங்களுக்கு பிரச்சினையில்ல.”
அவன் அதற்குப் பிறகு பேசவில்லை. மதுரை கடந்து கோவில்பட்டியும் விசுக்கென்று மறைந்து போயிருந்தது. சூரியன் மேற்கு நோக்கி இறங்கிக் கொண்டிருக்க, வானில் சோகையான நீலம் படிந்திருந்தது. வெள்ளை மேகங்கள் சில ஊர்ந்து போயின.
” ஒரு அஞ்சு நிமிசம் எறங்கிட்டு வந்துடறன் சார்…”
அவன் வண்டியை அந்த அரசமரத்தினருகில் ஓரங்கட்டிவிட்டு இறங்கினான். மரத்தையொட்டிய சந்திலிருந்து நைட்டி மேல் துப்பட்டா அணிந்த பெண்ணொருத்தி ஓடிவந்தாள். கீரைத்தண்டு போல் மெல்லிசாய் இருந்தாள். முகமும், தாலிக்கயிறும் மஞ்சள் நிறத்தில் மினுமினுத்தது. அவன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் அவள் நெருங்கி வந்திருந்தாள்.
” நைட்டு வந்துருவீல்ல…”
அவசரமாக கேட்டாள். கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் திரள் போல் நின்றிருந்தவளுடைய கண்களில் ஒருவித தவிப்பு.
” லாரிய பேக்டரியில வுட்டுட்டு பத்து மணிக்கெல்லாம் வந்துருவன்.”அவன் காது குடைந்தபடியே சொன்னான்.
” காசு வச்சிருக்கியா….நைட்டு சோறாக்கணும்…”
மடித்து கட்டியிருந்த கைலியைத் தூக்கி வலது பக்கமிருந்த டிரவுசர் பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான். வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தவள் நிமிர்ந்து உள்ளே அமர்ந்திருந்த நவீனைப் பார்த்துவிட்டு அமைதியானாள்.
கன்னங்களில் தேமல் படர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்து வெடித்திருந்தன. விலா எலும்புகள் புடைத்திருந்தன. துப்பட்டா வேலிமுள்ளில் மாட்டிய துணிபோல் படபடத்தது.
நவீன் எங்கோ பார்ப்பதுபோல் அவர்களிருவரையும் பார்த்தான். முதலில் ஏறிவந்த லாரியின் டிரைவர் ஞாபகத்துக்கு வந்தார். மூவர் முகத்திலும் ஒத்த சாயலிருந்தது.
நவீன் லாரியை விட்டு இறங்கியபோது அந்த மாத சம்பளம் அவனுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.
செய்வலர்: செமிகோலன்
Like this:
Like Loading...