தமிழாக்கம்

நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா

மொழிபெயர்ப்பு : மலையாளம்
மூலம் : சாரா ஜோசஃப்
ஆங்கிலம் : ஜே.தேவிகா
தமிழில் : தி. இரா. மீனா

தங்கமணி கண்முழித்து பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்தில்இல்லை. அவன் பாத்ரூமில் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தாள். ஆனால் அமைதி கனமாக இருந்தது; முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை. தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப்படியின் முகப்புக் கதவும் திறந்து கிடந்தது. கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்; மூச்சிறைத்தது அவள் திணறினாள். மரத்தாலான பழைய மாடிப்படி, சத்தம் ஏற்படுத்தியது. பெரிய தாத்தா விழித்துக் கொண்டார்.

“தங்கமணி..” மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார்.

“அவர் அறையில் இல்லை…” தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது.வீடு முழுவதும் லைட் போடப்பட்டது! சந்திரனும், சேகரனும் எழுந்தனர். முன்வாசலில் பலமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனும், மொய்துட்டியும் கூட விழித்துக்கொண்டு விட்டார்கள். எங்கும் டார்ச் லைட்டுகளும், கைவிளக்குகளும் ஒளிர்ந்தன.

“தங்கமணி…” உன்னிகிருஷ்ணனின் அம்மா பலவீனமான நடையோடு தென் பகுதி இருட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வந்தாள். கண் பார்வையை கூர்மைப்படுத்திக் கொள்ள சிறிது நின்றாள். காது சிறிதும் கேட்பதில்லை. எதையோ அறிந்தவள்போல “தங்கமணி! நீ கீழே விழுந்துவிட்டாயா?” என்று கேட்டாள். தங்கமணி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு படியிலிருந்து இறங்கி வந்தாள்.

நிலா வெளிச்சம் குளத்தைப் பிரகாசப்படுத்தியது. உன்னி கத்திக் கொண்டே நடந்தான். அந்த ஓடை எங்கே போனது? சாயந்திரம் கூட சந்தோஷமாக அதில் குளித்தானே! யார் அதை மறையச் செய்தது? சிறிதுநேரம் தூங்கி விட்டு வருவதற்குள்ளாக அது காய்ந்துவிட்டதா? முடியவில்லை.. முடியவில்லை.. தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது? சேறு ..எங்கும்.

நிலாவின் வெளிச்சத்தில் கானல் நீரைத் தேடிஓடினான். அங்கு தண்ணீர் இல்லை. நிலா வெளிச்சம் மட்டும்.. அவன் தொய்ந்து நடந்தான். இலக்கின்றி காலை இழுத்துக் கொண்டு ஆற்றின் கரையில் இங்கும் அங்குமங்குமாக ஓடினான்.பயம் கோரைப்பல்லாக சதையைத் துளைத்து மேலே மேலே இழுத்துக் கொண்டு போனது.

“உன்னி கிருஷ்ணா.. ஏய்..!” வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்

ஏய்..ஏய்.. இரவுப் பறவைகள் பதிலுக்குக் குரல் கொடுத்தன. “என்ன.. சத்தம் அது, தங்கமணி?” உன்னியின் தாய் கழுத்தை வெளியே நீட்டி கஷ்டப்பட்டுப் பார்த்தாள். தங்கமணி போர்டிகோவிலிருந்து வெளிவாசல் முற்றத்திற்குப் போனாள். டார்ச்சுகளும், விளக்குகளும் வீடு முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பின.

“கிணற்றின் அருகே பாருங்கள்” என்று சேகரன் கூப்பிட்டார். தங்கமணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிணற்றின் அருகே போயிருப்பாரோ? அதற்குக் கைப்பிடிச்சுவர் கூடக் கிடையாது. மிக ஆழமானதும் கூட.குழிபோல இருந்த ஆழத்தை நோக்கி டார்ச்சுகள் அடிக்கப்பட்டன. தங்கமணி நடுங்கினாள். கிணற்றுத் தண்ணீர் கருப்பாக இரக்கமின்றி, அசைவின்றி இருந்தது. நிலா வெளிச்சம் அதன்மீது பட்டுச் சிரித்தது.

“இல்லை, அவன் இங்கிருப்பதாகத் தெரியவில்லை”.

“எங்கே போயிருப்பான்? ஐயோ கடவுளே!” வீட்டைச் சுற்றிலும் ஒளிர்ந்த டார்ச்சுகள் ஆற்றை நோக்கி நகர்ந்தன.

“தங்கமணி, உள்ளே வா ” பெரிய மாமா கூப்பிட்டார். தங்கமணி போர்ட்டிகோ பகுதிக்கு வந்தாள்.

“தங்கமணி எங்கேயிருக்கிறாய்?” உன்னியின் அம்மா கதவருகே வந்து கேட்டாள் .தங்கமணியின் நிழல் அவள் தெளிவற்ற பார்வையை மேலும் மறைத்தது.

“வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடு இரவில் வெளியே நிற்கிறாயா?”

போர்ட்டிகோவின் தூணில் அவள் சாய்ந்துநின்ற போது டார்ச்சுகளின் ஒளி ஆற்றின் மீது பரவுவது தெரிந்தது. பின்பு அவைகளின் வெளிச்சம் வேறுவேறு பகுதிகளில் பட்டு அசைந்தது. அது அரக்கர்கள் தம்கண்களால் ஆற்றின் எல்லாப் பகுதிகளையும் பயமுறுத்துவது போல மோதிப் பரவியது. பம்பாயில் இருந்த வரை உன்னி பக்கத்தில் படுக்கையில் இல்லையென்றால் பாத்ரூமில்தான் இருப்பான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். சாத்தி வைக்கப்பட்ட சிறிய அறை, பாத்ரூம் என்ற இரண்டு அறைகளில்தான் அவள் தேட வேண்டியதிருக்கும் .பாத்ரூம் ஷவரில் உடம்பு முழுவதையும் நனைத்துக்கொண்டு உன்னி நிற்பான்; அவள் ஊகம் தவறியதில்லை. தன் கைகளை அவள் முன்னால் நீட்டிக் கொண்டு குழப்பத்தோடு “இப்போது பார், தங்கமணி உண்மையாகவே என் கைகள் மிகச் சுத்தமாக இருக்கிறதல்லவா? ”என்று கேட்பான். செத்த மீன் ஆற்றில் மிதப்பதுபோல வெளிறி ஊறியிருக்கும் அவன் கைகளை மடக்கி பாத்ரூமிலிருந்து வெளியே அழைத்து வருவாள்.

“தெரியுமா உனக்கு? இந்த இடம் இன்னும் பாட்டனார்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடம்… வா ..உள்ளே வந்துவிடு! ”உன்னியின் தாய் தன் சில்லிட்ட கையை நீட்டித் தங்கமணியைத் தொட்டாள். அவள் வயிற்றில் உன்னியின் குழந்தை அசைந்தது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு போன உன்னி, பல மைல்கள் தொலைவிலிருந்த ஓடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். “தண்ணீர்… தண்ணீர் எல்லாவற்றுக்கும்.. தேவையானது.. தண்ணீர்இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது ”. அவன் பாதங்கள் மண்ணில் புதைந்தன. ஒருவித பதட்டம் ஏற்பட்டது. உடம்பு இறுகியது. தண்ணீருக்கு அலையும் பித்துப் பிடித்த நாய் போல.. தண்ணீர் தாகம் அவனை வாட்டியது

உறவினர்கள் ஆற்றின் கிழக்கு திசையில் ஒளியைப் படரவிட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். “இது தண்ணீர்ப் பிசாசின் வேலைதான். ஒரு சந்தேகமுமில்லை. தண்ணீர்ப் பிசாசு நம் குடும்பத்தின் சாபமில்லையா?” பெரிய மாமா சோகமாகச் சொன்னார் . அவர் முகம் இறுகியது. சங்குண்ணி மாமாவின் வெண்கலப் பாத்திரத்தில் காற்று பரவியது.

“கங்கேச யமுனேச் சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலஸ்மின் சந்நிதிம் குரு…”

“நாரணி, என் பாத்திரம் எங்கே? ” சங்குண்ணி மாமா பதட்டத்தோடு வீட்டைச் சுற்றியோடினார். பாத்திரத்தில் இல்லாத தண்ணீரை இடது கையிலிருந்து வலதுகைக்கு மாற்றிக் கொண்டிருந்தார். கங்கே ச யமுனேச் சைவ.. சங்குண்ணி மாமா முணுமுணுத்துக் களைப்பானார்.

சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்றுமணல் கொதித்துக் கிடந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வெள்ளை மணல் விட்டுவிட்டுப் பிரகாசித்தது சங்குண்ணி மாமா ஆற்றை நோக்கி பித்துப் பிடித்தவர் போல ஓடிக் கொண்டிருந்தார். கங்கே ச.. காற்று வேகமாக அடித்து மண்ணைக் கிளப்பி அவரை அணைத்துக் கொண்டது. சங்குண்ணி மாமா வெறிபிடித்தவர் போல ஆடிக் கொண்டிருந்தார். காவடியாகத் தன்னை மறந்து ஆடிஆடிக் கீழே விழுந்தார். சுட்டெரிக்கும் மண்பூக்கள் அவர் தோளைத் தழுவ தகிக்கும் மணலுக்குள் மாமா புதைந்து மறைந்து போனார். அவரைத் தேடிப்போனவர்கள் மண்ணின் மேலே தெரிந்த இடது உள்ளங் கையைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.

காற்று இன்னமும் தண்ணீர் ஊற்றும் பாத்திரச் சப்தத்தின் ஒலியோடு கலந்திருந்தது. பெரிய மாமாவின் உடல் நடுங்கியது. “உன்னி கிருஷ்ணன் சங்குண்ணி மாமாவைத் தொடர்கிறான் ” அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவனுக்கு அவ்வளவு வயதாகவில்லையே.. அல்லது..?

தண்ணீர்ப் பிசாசால் இறந்தவர்கள் எல்லோரும் எண்பது, தொண்ணூறு வயதானவர்கள். ஆனால் உன்னிக்கு முப்பது வயது கூட ஆகவில்லையே? அவன் பம்பாய்க்குப் போனபோது அவனுக்கு இருபத்து நான்கு வயது. தங்கமணியை அவன் கல்யாணம் செய்து கொண்டபோது இருபத்தியெட்டு வயதுதான்.” என்று யாரோ சொன்னார்கள். பம்பாயில் என்ன ஆனதோ தெரியவில்லை? எதையாவது பார்த்து பயந்து விட்டானோ? சந்தேகமில்லை.. சந்தேகமில்லை! அவன் முகம் எப்போதும் பயந்த மாதிரியே இருந்தது. இல்லை! உன்னி பயந்தாங்கொள்ளி இல்லை. இளைஞனாக இருந்தபோது இப்படியில்லை. கல்லூரி நாட்களில் நடுராவில் தனியாக வருவான். இருட்டில் இந்த ஆற்றின் வழியாக தனியாக வந்திருக்கிறான்! தூக்கம் வராத பல இரவுகளில் எத்தனை நாட்கள் இந்த மண்ணில் படுத்திருக்கிறான்?அவன் தலைக்கருகே எத்தனை புகைத்த பீடிக்கட்டுகள் கிடந்திருக்கின்றன! ஆனால்..

உன்னிகிருஷ்ணன் பயப்படுவான்! தங்கமணிக்கு அது ஞாபகமிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவான். எங்கு பார்த்தாலும் இரத்தம். அப்படித்தான் சொல்வான் தெருவோரங்கள், சாலைகள், ரயில் நிலையங்கள் , தண்டவாளங்கள், பஸ்கள், எல்லா இடங்களிலும் இரத்தம்… காலைக் கீழே வைக்காதே! கீழே பார்க்காதே! என்று சொல்வான்அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே பாத்ரூமிற்குள் ஓடுவான். கால்கள் சுத்தமாக இல்லை என்று பாத்ரூமிலிருக்கிற துவைக்கும் கல்லில் தோல் கிழியும் அளவுக்கு மணிக்கணக்காக கால்களைத் தேய்த்து தேய்த்துக் கழுவுவான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? வெளியே வாருங்கள்” பாத்ரூமிலிருந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே கூட்டி வரும்போது அவன் முகம் பயத்தில் உறைந்திருக்கும். அந்தக்
கையாலாகாத முகபாவம். தனக்குள் அவன் பேசிக்கொண்ட விதம்…

“துர்நாற்றம்.. அப்படி ஒரு நாற்றம் தங்கமணி! ”

“அப்படி ஒரு நாற்றமும் இல்லையே. உங்கள் கற்பனை அவ்வளவுதான்”.

“இல்லை.. ஒன்றுமேயில்லை என்கிறாயா?”

அவன் அவளை அந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் கீழே இழுத்துக் கொண்டு போனான். மாடிப்படிகளில், முன்பகுதியில்,சாலையில்.. தங்கமணிக்கும் கூட இரத்தமழை உணர்வால் குமட்டல் வந்தது.

டார்ச் லைட்டுகள் அணைந்து விட்டன.“கவலைப்பட வேண்டாம்.” மின்சார விளக்குகளைப் பயன்படுத்தலாம்” என்றார் பெரிய மாமா. ஆற்றில் நடக்கும்போது யாருக்கு லைட் வேண்டும்? நிலாவின் பால் ஒளி வரண்ட ஆற்று மணலின்மீது பட்டு மின்னியது. யாரும் கண்ணில் தென்படவில்லை. இங்குமங்குமாகச் சில செடிகளும், பசுக்களும் சிலை போலக் கண்ணில் பட்டன. தேடுபவர்களில் சிலருக்குச் சந்தேகம் எழுந்தது. உன்னி இவ்வளவு தூரம் வந்திருப்பானா?அவன் தண்ணீரின் மேல் பிரேமையுள்ளவன். தண்ணீரில்லாத ஆற்றில் திரியவருவானா? வேறு இடத்திற்குப் போய்த் தேடலாமா?

பெரிய மாமா ஒப்புக் கொள்ளவில்லை. “உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது இந்த ஆறுதான் அவனுக்கு எல்லாமும். அவன் இங்குதான் இருப்பான்” என்று அவர் முன்னால் நடந்து கொண்டே சொன்னார்.

உன்னியின் தாய் கையில் விளக்கோடு முகப்பிற்கு வந்தாள். கண்ணாடியால் மூடப்பட்டிருந்த விளக்கின் சிவப்பொளி விம்மிற்று. “எல்லோரும் எங்கே போய்விட்டார்கள், தங்கமணி? யாரையும் காணவில்லையே.” பதில் எதுவுமில்லை. தங்கமணியின் நிழலசைந்தது. இன்னமும் போர்ட்டிகோ தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“தங்கமணி, நீயா?”

காலை நீட்டிஉட்கார்ந்தபடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள். உன்னி சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு போகவில்லையா?

“என்ன இது? சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?” உன்னி பயந்து விட்டான். குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக “இது எல்லாம் விஷம் தங்கமணி… அரிசி, காய்கறிகளை நம்பக் கூடாது…”

“நான்தான் சமைத்தேன். என்னையும் நம்பமாட்டீர்களா?”

“இல்லை, தங்கமணி.. விஷம் அரிசிக்குள் இருக்கிறது! உன் சாப்பாட்டையும் இங்கு எடுத்துக் கொண்டு வா.. அதைக் கழுவி விட்டுச் சாப்பிடு…”

சாதம் பாத்ரூம் தரைமுழுவதும் கொட்டிக் கிடந்தது. தங்கமணி தனக்குள் பல நாட்களாக அடக்கிவைத்திருந்த உணர்வுகள் ஓர் அலறலாக வெளியே வந்தது. துக்கம் நிறைந்தவனாகத் தெரிந்த அவனது தோற்றம் கண்களில் கண்ணீரைப் பெருக்கியது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தட்டில் விழுந்தது.

உன்னியின் தாயின் கண்கள் இருட்டைப் பார்த்து வெறுமையானது. “இப்போது மணி என்ன?” தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியாமல் அவள் இருட்டிடம் கேட்டாள். பிறகு அவள் மெதுவாக நடந்து
தென்கோடி அறைக்குள் போனாள்.

திடீரென்று மின்சாரம் பாய்ந்ததைப் போல உன்னி தன் காலில் குளிர்ச்சியை உணர்ந்தான். ஈர மண்ணிலிருந்து எழுந்த குளிர்ச்சி அவன் நெற்றிவரை பாய்ந்தது. தரையில் உட்கார்ந்து உள்ளங்கையில் மண்ணை எடுத்து முகர்ந்தான். புதிய ஆற்றுநீரின் மணம்! ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவன் மண்ணைத் தோண்டத் தொடங்கினான். ஆற்று மணலைத் தோண்டும்போது ஒரு குழந்தையைப் போல உணர்ந்தான். சந்தோஷத்தில் பெரிதாகக் குரல் கொடுத்தான். ஆற்றின் மறுகரையிலிருந்த அவன் நண்பர்கள் மகிழ்ச்சியாக எதிர்க்குரல் கொடுத்து அவனை அழைத்தனர்.

அவர்கள் டார்ச்சுகளோடும், விளக்குகளோடும் அவனை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தான். மிகுதியான சந்தோஷத்தில் ஆழமாகத் தோண்டினான். இரண்டு புறங்களில் இருந்தும் வேகவேகமாகச் சிறிய அளவில் குவியல் உருவானது. இரவுப் பறவைகள் சப்தத்தோடு தாழ்வாகப் பறந்தன. வழி தவறிய கால்நடை அவன் பின்னால் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தது. பரவியிருந்த வரண்ட கருக்காச்செடி அவன் காலைச் சுற்றிப் பின்னியது. மகிழ்ச்சியான மனதோடு உன்னி தன் கைகளால் தண்ணீரை எடுத்தான். நிலா வெளிச்சம் அவனுடைய உள்ளங்கைகளில் விழுந்து சிரித்தது.

தங்கமணி கையில் லாந்தர் விளக்கோடு தனியாக கிணற்றினருகே போனாள். நிலா வெளிச்சம் கிணற்றில் விழுந்து பொருமியது. தண்ணீர்ப் பிசாசினால் அழிந்தவர்களின் ஆத்மாக்கள் நிலா வெளிச்சத்தில் கிணற்றில் தெரிந்தன.

“அப்படியானால் நீங்கள் எங்களைச் சோதிக்கிறீர்கள்?” அவள் சோகமாகக் கேட்டாள்.

“வீட்டிற்குப் போக வேண்டும். நம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதில் குளிக்கவேண்டும். அந்தக் கிணற்றின் அடிப்பகுதி உறுதியான நெல்லி மரத்தாலானது. எங்களின் முன்னோர்கள் மரத்தை வெட்டி மதில் சுவராகக் கட்டினார்கள். அங்கு அவ்வளவு சுத்தமான தண்ணீர்— உள்ளேயும் வெளியும் குளிர்ச்சியாக இருக்கும்.. நாம் போகலாம். தங்கமணி,நாம் திரும்பிப் போய் விடலாம். “அவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால்தானே அவனை அழைத்துக் கொண்டு வந்தேன்? இப்போது? நீ என்ன செய்திருக்கிறாய்?

ஆத்மாக்கள் பேசாமல் நின்றன.தங்கமணி விம்மியழுதாள். அந்த லாந்தர் விளக்கிலிருந்து கடைசியாக ஜூவாலை வந்து அணைந்தது. உன்னியின் குழந்தை துன்பத்தில் புழுவாய் நெளிந்தது. தங்கமணி அசைந்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பகுதியைவிட்டு ஓடினாள்.அவளுக்குப் பின்னால் அவை சிரித்தன.

உன்னியின் அம்மா தென்கோடி அறையிலிருந்து முற்றத்துக்கு வந்து அமைதியாகக் கல்போல நின்றாள். “எனக்கு எதுவுமே புரியவில்லை”. முயற்சி செய்தும் அவளால் தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியவில்லை.

“தங்கமணி, இது எத்தனையாவது மாதம்?” தங்கமணி பதில் சொல்லவில்லை. அவள் தன் இடுப்பு ஆடைப் பகுதியைச் சிறிது தளர்த்தி வயிற்றைத் தடவிக் கொண்டாள். அது உன்னியின் கனவை வருடுவதாக இருந்தது. எந்த பதிலும் கிடைக்காததால் அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கோள்களைச் சோதித்த ஜோசியன் வரப்போகும் அபாயத்தை எச்சரித்திருந்தான். தண்ணீர்ப் பிசாசுகளும், பாட்டனார்களின் ஆவிகளும் தொல்லை தரலாமென்று.

“இனியும் தாமதிக்கக் கூடாது. நாளைக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”. பெரிய மாமா சொன்னார்.

“முதலில் நாம் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.” தேடப் போனவர்கள் களைப்படைந்தனர்.

“அவன் எங்கே போக முடியும்?” பெரிய மாமாவின் குரலெழுந்தது.அவருக்குக் கோபமும் ,வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன. அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும். அவர்கள் அபாயமானவர்கள்! ஆறு அல்லது கிணறு, எதுவென்று சொல்ல முடியாது. அவனை எங்கே இழுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. இது விளையாட்டில்லை. ஆடிமாதத்தின் கோபமான ஆறு, பருவமழை, ஆகியவை மாமாவின் நெஞ்சை அழுத்தின. ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு.. வாழை இலைகளில் உணவு படைக்கும் காட்சிகள்.. ஒற்றை மண்விளக்குகள்.. மெலிதான ஜுவாலையோடு.. தண்ணீரில் மிதந்தபடி துளசி மணமும், மலர்களின் மெலிதான மணமும் இருபுறமும்…முன்னோர்களே ! எங்களுக்கு உதவுங்களேன்..

பம்பாயிலிருந்து அவர்கள் வந்த நாளில் என்ன நடந்தது? உன்னி பூஜை அறையிலிருந்து ராமனின் சிலையையும் அத்யத்ம ராமாயணப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் போனான். கிணற்றினருகேயுள்ள சுவரில் ராமன் சிலையை வைத்தான். அதைத் துடைத்து வர்ணத்தைச் சுரண்டினான். ராமாயணப் புத்தகத்தைக் கழுவிச் சுத்தம் செய்ததால் கனமான அட்டை கிழிந்து பக்கங்கள் கிணற்றைச் சுற்றிச் சிதறின. அனைவரும் குழம்பிக் கிணற்றினருகே ஓடியபோது அவன் புனிதப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைச் சுறுசுறுப்பாகக் கழுவிக் கொண்டிருந்தான். அப்பாவிக் குழந்தை தவறு செய்துவிட்டு முழிப்பதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான்.

“இது மிகவும் அழுக்காக இருக்கிறது. கழுவிச் சுத்தம் செய்ய வேண்டுமல்லவா?” அப்போதே சந்திரனும், சேகரனும் உளவியல் மருத்துவரை பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். தங்கமணி பம்பாயில் ஒரு மலையாள மருத்துவரைக் கலந்து ஆலோசித்திருந்தாள். “சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்று அவர் ஆலோசனை சொன்னார். தங்கமணி குழம்பினாள். அவற்றை எப்படித் தவிர்க்க முடியும்? முக்கியம் கொடுக்காமலிருக்க முடியும்? உன்னியின் உள்ளுணர்வை, மாயையை எந்தத் தண்ணீரால் கழுவமுடியும்?

சம்பள நாளில் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அவன் கழுவிக் காய வைக்கும் போது அவன் முகத்தில் தெரிந்த பாவம் அவன் நிலைமையை அவளுக்குத் தெளிவாகப் புரியவைத்தது.அவளுக்கு முத்தம் கொடுக்கும் போதெல்லாம் பாத்ரூமிற்கு ஓடித் தன்வாயைக் கழுவிக் கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் பயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணரமுடியும். எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கின்றன; அம்மாவிற்கு ஒரு கடிதம்கூட எழுத முடியவில்லை. உன்னி பேனாவை மணிக்கணக்கில் கழுவுவான். அவனைத் தழுவும் காற்று புகையாக மண்ணைத் தூவி, அதிர்வை ஏற்படுத்தும். ஜன்னல்கள் ,கதவுகள், எல்லாவற்றையும் சாத்துவான். தங்கமணி எப்படிச் சூழ்நிலைகளுக்கு முக்கியம் கொடுக்காமல் இதையெல்லாம் தவிர்க்க முடியும்?

திடீரென்று பெரிய மாமா ’உன்னிகிருஷ்ணா.. ’என்று பெரிதாக அலறி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அது மறு கரை வரை எதிரொலித்தது. மாமா தூரத்தில் உன்னியைப் பார்த்து விட்டதைப் போலத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார். வேக வேகமாக நடந்தார். நடை ஓட்டமாக மாறியது.

உன்னியின் பாதங்களை நனைத்தபடி மண்ணூற்று வழியாக தண்ணீர் பரவியது. தண்ணீரைக் கையால் தட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக கத்திக்கொண்டே குதித்தான். மண்ணும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான தண்ணீரில் ஊறியது. காய்ந்து கிடந்த புல்லின் மீதும், நின்றிருந்த பசுக்களின் மீதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆற்றின் மார்பு நிறைந்து வழிந்தது. தெய்வத்தின் பிரசாதம் போல அமிர்த ஓடையாய் வெடித்தது. உன்னியின் முழங்கால்களைத் தண்ணீர் தொட்டது. இரண்டு பக்கங்களிலுமிருந்த துளைகளிலிருந்து மண் சரியத்தொடங்கியது. துளை பெரிதானது. ஆற்றின் கீழே அமைதியான பிரவாகம் இப்போது உன்னியின் பாதத்தில் ஒன்று திரண்டது. அவன் காலின் கீழிருந்த மண் மூழ்கியது. அவன் பாதங்கள் கீழே கீழே.. சந்தோஷமாக நெஞ்சுவரை வந்துவிட்ட தண்ணீரைத் தட்டினான்.

உன்னிகிருஷ்ணன்…. விளக்குகளும், மனிதர்களும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிலவொளியில் மங்கித்தெரிந்தனர். அவனுக்கு பயம் வந்தது. அவர்கள் ஓடையை அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.. ஈரப்பதத்தையும், மென்மையையும் வடித்து விடுவார்கள்.“இங்கே வராதீர்கள்…”அவன் கத்தினான். தன் கைகளை விரித்துத் தண்ணீரை அணைத்துக் கொண்டான். கரையின் முனையும், துளைகளும் இன்னும் சிறிது தண்ணீரைப் பரப்பின. ஆறு,எல்லையற்ற அன்புக்கு அடையாளம். அவளுடைய இரக்கமான பரிசுகள் அவனை நோக்கிப் பாய்ந்தன; அவை அவன் காலடியில் இணைந்தன. தண்ணீர் கழுத்திற்கு ஏறியது.

’உன்னிகிருஷ்ணா.. மகனே.! ’ யாரோ கூப்பிட்டார்கள். அம்மாவா அல்லது தங்கமணியா? மக்கள் பெரிதாக அழுதுகொண்டு அவனை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்களிடம் டார்ச்சுகளும், விளக்குகளும் இருந்தன. கூடாது! இந்தத் தண்ணீர் அசுத்தம் அடையக்கூடாது. உன்னி தன் இரண்டு தோள்களையும் விரித்துத் தண்ணீரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். பெருங்காற்று வீசியது. குளிர்ச்சியான இளநீரைக் குடிப்பது போல, தாய்ப்பாலைக் குடிப்பது போல அவன் வாய் நிறையக் குடித்தான். மீண்டும்.. மீண்டும்..

வெளிச்சத்தோடு மக்கள் அந்த இடத்திற்குப் போனபோது அவர்கள் எதையும் பார்க்கவில்லை. விளையாடுவதற்காக பகல்நேரத்தில் குழந்தைகள் தோண்டியிருந்த குழியில் நிலாவெளிச்சம் விழுந்து சிரித்தது.
——————————-

சாரா ஜோசஃப் சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.பெண்ணியவாதி. சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம், ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம், மனசிலே தீ மாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

கலைஞர்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் – இவையே இறுதி நாட்கள் என்பது போல் நாம் எழுத வேண்டும் – பென் ஓக்ரி

 

உலக நிலவரத்தையும் அதை ஏற்க மறுப்பதன் ஆழத்தையும் எதிர்கொள்கையில், நமக்கு தொடர்ந்து கிட்டும் தரவுகளை எதிர்கொள்கையில், உயர்தளத்தில் களிப்புக் கொண்டாட்டங்கள் மேலும் மேலும் ஓங்கி ஒலிக்கையில் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கப்பலில் இருக்கும் உணர்வை எதிர்கொள்கையில், ‘இருத்தல் சார்ந்த படைப்பூக்கம்’ என்று நான் அழைக்கும் வகைப்பட்ட எழுத்து முறைமையையும் பார்வையையும் வளர்த்துக் கொள்ளும் தேவையை உணர்கிறேன். காலத்தின் முடிவுக்குத் தக்க படைப்பூக்கம் இது.

காலத்தின் முடிவு நெருங்குவதை உணரும் ஆற்றல் ஒரு சிலருக்கே அளிக்கப்படுகிறது. அட்லாண்டிஸ்சில் வாழ்ந்தவர்களில் சிலர் அதை உணர்ந்திருக்கலாம். பொம்பெய்யின் சாதுக்கள், அத்தகையவர் அங்கிருந்திருந்தால், அதை முன்கூட்டியே அறிந்திருக்கலாம். கடல் வழி படையெடுத்து வந்தவர்களால் சிதைக்கப்படவிருந்த சமூகங்களுக்கு உரிய நாகரீகங்கள் ஒரு வேளை இந்த உணர்வுக்கு ஆளாகி இருந்திருக்கலாம். ஆனால் அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற தரவுகள் அறியப்பெற்றவர்கள், ஒவ்வொரு நாளும் அது குறித்த விபரங்கள் அருவியாய் வீழக் கண்டும் எல்லாம் எப்போதும் போல் இருப்பது போல் வாழ்ந்தவர்கள் யாரும் இருந்ததாய் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஆல்பெர் காமு, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது, தன் காலத்துக்குரிய அதிதீவிர உண்மைகளை அளிக்கக்கூடிய புதிய தத்துவத்தின் தேவையை உணர்ந்தார். அங்குதான் அபத்த இலக்கியம் பிறந்தது. அதிதீவிர இடர்ப்பாடுகளின் பிடியில் தத்தளித்த உலகில்தான் இருத்தலியலும் பிறந்தது. ஆனால் நாம் இதுவரை எதிர்கொண்ட இடர்ப்பாடுகளில் மிகப் பெரியதன் விளிம்பில் இதோ நாம் நிற்கிறோம். இக்காலத்துக்குரிய, மானுட வரலாற்றின் இறுதிக்கு அருகாமையில் நிற்கும் இக்கணத்துக்குரிய, புதிய தத்துவம் நமக்குத் தேவைப்படுகிறது,

இந்த உணர்விலிருந்தே நான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். அதை எவ்வாறு வரையறுத்துக் கொள்கிறேன்? எதையும் வீணாக்காத படைப்பூக்கம் அது. ஓர் எழுத்தாளனாய் நான் எழுதும் ஒவ்வொன்றும் மானுட இனமென நாம் வந்து நிற்கும் பேராபத்து நிலை குறித்து நம் கவனத்தை ஈர்க்கும் உடனடி நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று இது பொருள்படுகிறது. அலங்காரங்கள் இல்லாத எழுத்து என்பது இதன் அர்த்தம். இது உண்மை மட்டுமே பேச வேண்டும். இந்த உண்மை அழகாகவும் இருக்க வேண்டும். இது மிகவும் சிக்கனமான எழுத்தைக் கோருகிறது. நான் செய்வதெல்லாம் ஒற்றை நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்றாகிறது.

இவையே நான் எழுதும் கடைசி விஷயங்கள் என்பது போல் நான் எழுத வேண்டும் என்றும் பொருள்படுகிறது, நம்மில் யார் எழுதக்கூடியவற்றிலும் இறுதிச் சொற்கள் இவை. மானுடக் காதையின் இறுதி நாட்களில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்? எப்படி எழுதுவீர்கள்? உங்கள் அழகியல் எதுவாக இருக்கும்? தேவைக்கு மேல் சொற்களைப் பயன்படுத்துவீர்களா? கவிதையின் உண்மை வடிவம் எதுவாக இருக்கும்? நகைச்சுவையின் கதி என்ன? நம்மால் சிரிக்க முடியுமா, இறுதி நாட்கள் வந்துவிட்டன என்ற உணர்வுடன்?

எல்லாம் முடிந்து விட்டது என்று கற்பனை செய்து பார்க்கக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்று சில சமயம் நினைத்துப் பார்க்கிறேன். நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ, அதைக் கடந்து செல்வதையும் நாம் கற்பனை செய்ய முடியும். மானுடம் தன் முடிவை நினைத்துப் பார்க்க இயலாததாய் இருப்பதே என் கவலைகளில் மிகப் பெரியது. சாதாரண, நல்லெண்ணம் கொண்ட குடிமக்கள் பருவ மாற்றத்தின் நிதர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதை வேறு எப்படி விளக்க முடியும்? நாம் எதிர்கொள்ள மாட்டோமென்றால், மாற்ற மாட்டோம். நாம் மாற்ற மாட்டோமென்றால், தடுத்து நிறுத்தக்கூடிய விஷயங்களை செய்யத் துவங்க மாட்டோம். ஆக, நாம் எதிர்கொள்ள மறுக்கும் விஷயங்களே நாம் என்ன நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடப்பதை உறுதி செய்யும்.

நாம் ஒரு புதிய கலை கண்டாக வேண்டும், நாம் வாழும் உலகம் பிழைக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையான மாற்றங்கள் செய்வதைத் தடுக்கும் அக்கறையின்மை மற்றும் மறுதலிப்பை துளைத்துச் செல்லக்கூடிய புதிய உளவியல் காண வேண்டும். நம் மீது கவியும் பேராபத்து குறித்தும் அது விஷயமாக நாம் இப்போதும் ஏதாவது செய்ய முடியும் என்பதையும் உணர்த்தும் புதிய கலை நமக்கு தேவைப்படுகிறது.

நாம் எதை மிகவும் அஞ்சுகிறோமோ அதைக் கற்பனை செய்து பார்க்கும் ஆற்றல் ஒரு திறன். அச்சங்களைக் கடந்து செல்ல இயற்கை நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சிக் கருவி அது. மிக மோசமான உலகங்களைக் கற்பனை செய்து பார்ப்பது அவற்றை உண்மையாக்கி விடும் என்ற நினைப்பு எனக்கில்லை. மிக மோசமான நிலையை நினைத்துப் பார்ப்பது அப்படியொன்று நிகழாது தடுக்கும் கூறுகளில் ஒன்றாக இருக்கக்கூடும். பிறழ் உலகங்கள் மற்றும் பொன்னுலகங்களின் பயன் அதுவே: ஒன்று நாம் போகக்கூடாத இடத்தின் மெய்த் தோற்றம் அளிக்கிறது, மற்றது சாத்தியமாகக் ஒரு எதிர்காலத்தை நமக்காக கற்பனை செய்து பார்க்கிறது. ஏழ்மை குறித்த அச்சத்தால் பலர் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். மரணம் குறித்த அச்சம் பலரின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றியிருக்கிறது, தாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்து அறிவோடு நடந்து கொள்ளச் செய்திருக்கிறது.

நம்பிக்கைக்கு ஒரு காலமுண்டு, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு. ஆனால் நம்பிக்கைக்கும் இயல்புவாதத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றே இப்போது வேண்டியது. மானுட பிரக்ஞையிலும் நம் வாழ்வு முறையிலும் மிகப் பெரிய நகர்வை சாத்தியப்படுத்துவதற்கு நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய காலம் இது. பரிணாம வளர்ச்சியில் பிரக்ஞைப்பூர்வமாய் ஒரு தாவலை நிகழ்த்த நாம் சங்கல்பம் செய்து கொண்டாக வேண்டும். நாம் இதுவரை இருந்த மனிதர்களாய் இனி இருக்க முடியாது: வீண் செய்பவர்கள், முன்யோசனை இல்லாதவர்கள், சுயநலமிகள், அழிப்பவர்கள். நாம் இதுவரை இல்லாத அளவு படைப்பூக்கம் கொண்டவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது, மிகவும் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களாய், மிகவும் யதார்த்தமானவர்களாய், மிகவும் விழிப்பு நிலையில், தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது. இதுவரை இவ்வளவு பெரிய இழப்பை எதிர்கொண்டதில்லை, இனி இது போன்ற ஒரு இழப்பை எதிர்கொள்ளப் போவதில்லை.

இவ்வுலகு சார்ந்து ஒரு தனி வகை நேசம் தேவைப்படுகிறது. இதோ இழக்கப் போகிறோம் என்பதை அறிந்த காரணத்தால் உயிரின் நுண்மதிப்பை அறிய வந்தவர்களின் நேசம் அது. உலகங்களில் மிக அழகானதும் அபூர்வமானதுமான இவ்வுலகு, அண்டம் எங்கிலும் ஓர் அதிசயம், ஆன்மாக்களின் வளர்ச்சிக்குரிய அகம், அண்ட வெளியின் வளமைகளில் ஒரு சிறு சுவர்க்கம், இங்குதான் நாம் வாழ்ந்து வளர்ந்து மகிழ்ச்சி காண வேண்டும் என்று அளிக்கப்பட்ட இவ்வுலகை இழக்கும் நிலையின் விளிம்புக்கு வந்து விட்டோம், இந்த உலகை நாம் ஒவ்வொரு நாளும் ஆகாயத்தில் சுழலும் வறண்ட கல்லாக்கிக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஒரு புதிய இருத்தலியல் தேவைப்படுகிறது. எதிர்மறைத்தன்மை கொண்டதும் துவளாது தாளும் தன்மை கொண்டதுமான காமு மற்றும் இழான் பவுல் சார்த்தரின் இருத்தலியல் அல்ல, தீரமும் தரிசனத்தன்மையும் நிறைந்த இருத்தலியல் இது. இங்கு களைஞர்களாய் நம் நாம் வாழ்வை வேறொரு சமூகத்தை உருவாக்கும் கனவுக்கு அர்ப்பணித்துக் கொள்கிறோம். நாம் வலுவான கனவுகள் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். சிந்திக்க முடியாத கேள்விகள் எழுப்ப வேண்டும். நாம் ஏன் இப்படி எல்லாம் தின்று அழிக்கும் உயிரினமாய் இருக்கிறோம், மிகையான அளவு போட்டி போடுகிறோம், பிறவற்றை வெற்றி காணும் உந்துதலால் செலுத்தப்படுகிறோம், படிநிலைகளை அமைத்துக் கொள்கிறோம், என்ற கேள்விகளின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.

பணம், அதிகாரம், பசி, இவற்றைக் குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும். அடிப்படையில் எல்லாருக்கும் தேவையான எல்லாம் போதுமான அளவு இருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இப்புவி நாம் வாழ்வதற்கான எல்லாம் வைத்திருக்கிறது. இனியும் ஆழமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நாம் யார் என்பதன் மையத்துக்கு நாம் ஏன்கள் செல்ல வேண்டும். அதன்பின் நம்மை மாற்றிக் கொள்ளும் பயணம் துவங்க வேண்டும். நாம் நம்மை மீளுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏனோ நாகரீகம் தவறான திசையில் திரும்பி விட்டது, நாம் கூட்டாக நம் இலக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும், நம் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மானுட அழிவின் விளிம்பு வரை சென்று நிற்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்காது. இந்த விளிம்பைப் பிழைத்து விட்டால், நமக்காக காத்திருக்கும் யுகச்சந்தியை நெருங்காது பின்வாங்க முடியுமென்றால், புவி முழுமைக்கு, புவியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஜீவிதமும் நீதியும் அழகும் அளிக்கும் உலகளாவிய திசை கண்டாக வேண்டும்.

நமக்கு இருக்கக்கூடிய மிகச் சிறந்த, மிக இயல்பான வீடு இதுவாகவே இருக்க முடியும். அதற்குரிய தகுதி கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டுமென்றால் புதிய மனிதர்களாய் மாற வேண்டும். அதை மீள்கனவு காண நாம் புதுக்கலைஞர்களாய் மாறியிருக்க வேண்டும். எனவேதான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்கிறேன், நாம் காலத்தின் தவிர்க்க இயலாத உண்மைக்கு ஊழியம் செய்வதற்கு என்று. எனவேதான் தரிசன இருத்தலியல் வேண்டுமென்கிறேன், சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பிலிருந்து நாம் மீட்டெடுக்கக் கூடிய எதிர்காலத்துக்கு ஊழியம் செய்வதற்கு என்று.

இன்று நாம் எதிர்கொள்ளும் உண்மையின் ஆழத்திலிருந்து மட்டுமே எதிர்காலத்தை வளர்த்தெடுக்க முடியும்.

நன்றி – The Guardian 

பரிசு சிறுகதை : டோக்ரி மொழி [Dogri] மூலம் : பி.பி.சாத்தே [B.P.Sathe] ஆங்கிலம் : சிவ்நாத் [Shivnath] தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா 

ரஹிம் அண்ணி புதுப் பெண்ணாக கிராமத்திற்கு வந்தபோது எங்கள் வீட்டுப் பெண்கள் அவளைப் பார்க்கப் போனார்கள். புதுப் பெண்ணின் முகத்தைப் பார்க்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பரிசாக எடுத்துப் போக வேண்டும். என் அம்மா அவளுக்கு ஒரு ஜோடி வளையல்களைத் தந்தாள்.என் அத்தை காலுக்குக் கொலுசு கொடுத்தார். என் மூத்த அண்ணி அவளுக்கு சிறிய மெட்டி தந்தார். அவர்கள் வீடு திரும்பிய பிறகு ரஹிம் அண்ணியின் அழகைப் புகழ்ந்து தள்ளினார்கள். சிறியவர்களான எங்களுக்குக் கூட அவளைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எழுமளவிற்கு.

“என்ன அழகான பெண்! செதுக்கப்பட்ட பளிங்குச் சிலை போல இருக்கிறாள்.” அம்மா சொன்னாள்.

“என்ன கண்கள் ! மின்னிப் பளபளக்கும் கருமையான கண்கள் ! பெண் மிகவும் உயரமும் கூட.” அத்தை சேர்ந்து கொண்டாள்.

“அவள் நிறமாக இருக்கிறாள்; முகம் முழுவதும் புள்ளிகள். அப்படியிருக்கும் போது, ஒரு பெண் உட்கார்ந்திருக்கும் போது அவள் நொண்டியா அல்லது வேறு எதுவும் குறை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும?” என் அண்ணி சிறிது கடுப்பாகச் சொன்னார்.

“அவள் ஊனம் என்று யார் சொன்னது ?வீட்டின் உள்ளேயிருந்து வரும்போது அவள் மிக இயல்பாகத்தான் நடந்து வந்தாள்” அம்மா பதில் சொன்னாள்.

“முகத்திலுள்ள கரும் சிவப்புப்புள்ளிகள் அவளுடைய சிவந்த முகத்திற்கு இன்னும் அழகு தருகிறது.” அத்தை சேர்த்துச் சொன்னாள்.

“அது கிரேக்க அழகு .ஓர் அரண்மனையின் அலங்காரம். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று எங்கிருந்தோ அந்த இடத்திற்கு வந்த என் மூத்த அண்ணன் அந்த வாக்கியத்தை முடித்தான்.

“அந்த சலவைத் தொழிலாளி தன் புது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். நாங்கள் இலாம்தீனின் மனைவியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். பரிசுகளைக் கொடுக்க நாங்கள் அவர் வீட்டிற்குப் போயிருந்தோம்.விளக்கைப் போல அந்தப் பெண் மிக அழகாக இருக்கிறாள்.” அம்மா விளக்கினாள்.

என் மூத்த அண்ணிக்குக் கண்கள் மிக அழகானவை. ஆனால் அவளுடைய நிறம் சிறிது கருமை கலந்தது. உயரம் குறைவு. தன் வெறுப்பை அடக்கிக் கொண்டு “அவள் ஓர் அந்தணப் பெண்ணோ அல்லது ராஜ்புத் பெண்ணோ இல்லை, ஒரு சாதாரணமான சலவைத் தொழிலாளியின் மனைவி.” என்றாள்.

“ஆமாம்,அவள் சலவைத் தொழிலாளியின் மனைவிதான், ஆனால் சாதாரண குலத்தில் அழகிருக்க முடியாதா ?” என் அத்தை உடனடியாக வெடித்தாள்.

“உங்கள் மகனுக்கு அவள் தங்கையைத் திருமணம் செய்து வையுங்கள்,” உள்ளே போனபடி அண்ணி பதிலடி கொடுத்தாள்.அது என்அண்ணனுக்குக் குறிப்பாகச் சொல்லப்பட்ட வார்த்தைதான். என்றாலும் அவளுக்கு ’ கிரேக்க அழகு” என்பதன் அர்த்தம் புரியவில்லை.

ஹம்தீனின் அம்மாவும் எங்கள் அத்தைதான் ,ஆனால் எங்கள் சொந்த அத்தையிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாங்கள் அவளை ’துணி வெளுக்கும் அத்தை’ என்போம்.சில சமயங்களில் இரண்டு அத்தைகளும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும் போது, நாங்கள் ’அத்தை ’ என்று கூப்பிட இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும் . அதைப் பார்த்து நாங்கள் குதித்துக் கும்மாளமிடுவோம்.

ஜம்முவிலிருந்து திரும்பும் வழியில் என் அப்பா சரினாசாரிலிருந்துமெதப்தீனை அழைத்து வந்தார். அவருக்குத் தங்குமிடம் கிடைப்பதில் சில தொல்லைகள் இருந்ததால் அப்பா அவரை ராம் நகருக்கு வர வைத்தார். அவருக்குக் கொஞ்சம் நிலமும், இருக்க வீடும் கொடுத்தார். துறை முகத்தில் அவருக்கு வேலையும் கிடைத்தது. அவருடைய மகன்களும் சலவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவர் மூத்த மகன் குலாப்தீனுக்கு அந்த வேலை தரப்பட்டது.இளைய மகன் இலாம்தீன் சலவை செய்யும் வேலையையே செய்தார். குலாப்தீனின் மகன் சாம்சுவுக்கும் ,எனக்கும் ஒரே வயதுதான். இலாம்தீன் சலவை செய்த துணிகளைக் கொண்டு வரும் போது சாம்சு என் துணிகளைத் தூக்கி வருவான். சாம்சுவின் தாத்தா ஓரிடத்தில் சும்மாஉட்கார மாட்டார்; அரிசி,கோதுமை ஆகியவறை விவசாயம் செய்து வந்தார். நானும் , சாம்சுவும் மெதாப்தீன் வயலுக்குள் போய், பட்டாணிபறித்துத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டு மகிழ்வோம்.

இரண்டு,மூன்று நாட்கள் புதுப்பெண்ணிற்கு மவுசு இருந்தது.பிறகு அவள் வீட்டு வேலைகளில் சேர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. சலவை செய்யும் பெண்மணியும்,அத்தையும் தங்கள்மருமகளை நீரிறைக்க ஊர்க் கிணற்றுக்கு அழைத்துப் போனார்கள். மருமகள் தன் கழுத்து வரை முகத்திரையணிந்திருந்தாள். தலையில்ஒரு குடமும், இடுப்பில் ஒன்றும். பச்சை நிறத்தில் வெள்ளி எம்பிராய்டரி நூலால் பின்னப்பட்ட காலணியும் அணிந்திருந்தாள். மாமியாருக்குப் பின்னால் அவள் நடந்த போது மாமியாரை விட ஒன்றரை இன்ச் அதிக உயரமாக இருந்தாள்.

கிணறு எங்கள் வீட்டருகிலிருந்தது. தொலைவிலிருந்தும்,பக்கத்திலிருந்தும் ஜனங்கள் அங்கு வந்து பாத்திரங்களில் நீர் நிரப்பிக்கொண்டு போவார்கள். நீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மாமியார் மருமகளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.என் தாயையும்,அத்தையையும், அண்ணியையும் நமஸ்கரிக்கச் சொன்னார்.எங்கள் வீட்டுப் பெண்கள் அவளை, “உன் கணவரும் நீயும் நீண்ட காலம் வாழ வேண்டும் “ என்று ஆசீர்வதித்தனர். பிறகு அவர்கள் நீர் நிரப்பிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போனார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் எங்கள் வீட்டில் இன்னொரு சலசலப்பு ஏற்படக்காரணமானார்கள்.

“அந்தப் பெண்ணின் நடை மயில் நடனமாடுவது போல இருக்கிறது.”

வயதான அம்மாவும் ,அத்தையும் பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும், கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்கவும் செய்கிற மனப்பான்மை உடையவர்கள். ஆனால் என் அண்ணி இளமையானவர்,யாரையும் பாராட்டுவதைப் பொறுக்க மாட்டார். “மயில் கருப்பாக இருக்கும்.இவள் வெள்ளையாக இருக்கிறாள். அதனால் வெள்ளைவாத்து நடனமாடியது போல என்று சொல்வது சரியாக இருக்கும்” என்றாள்.

“மயில் வெள்ளையாக இருக்கிறது என்று சொல்வதால் நாம் எதை இழக்கப் போகிறோம்?” என்றாள் அத்தை வெடுக்கென்று.

அண்ணி அமைதியானாள் — உடனடியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது அந்த விவாதத்தை அவள் மேலே வளர்க்க விரும்பவில்லை.

அடுத்த நாள் தண்ணீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மீண்டும் அவர்களிருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து, சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்கள். மருமகளின் வீடு சரினாசாரில் எங்கேயிருக்கிறதென்று எங்கள் வீட்டினர் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“இவர்கள்தான் சின்ன அத்தை சாச்சி, இவர் பெரிய அத்தை,தாய், என் மகன்கள் அவர்களை அப்படித்தான் கூப்பிடுவார்கள்; நீயும் அப்படிக் கூப்பிடு. இவர்கள் அண்ணி [பாபி], மூத்த மகனின் மனைவி. அவர்களின் கணவரும், குலாபுதீனும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனவர்கள். நான் பெயர் சொல்லிதான் அவர்களைக் கூப்பிடுவேன் ஆனால் நீ அண்ணி என்றே கூப்பிட வேண்டும் “ என்று மாமியார் சொன்னாள்.

“நாங்கள் சரினாசாரில் கடைகள் இருக்கும் பகுதிக்குத் தெற்கில் வசிக்கிறோம்” மருமகள் சரினாசாரில் தன் வீடு இருக்குமிடத்தை விளக்கிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அவர்கள் போய்விட்டனர். மீண்டும் எங்கள் வீட்டில் விவாதம்.

“எவ்வளவு அழகாகப் பேசுகிறாள், குயில் கூவுவதைப் போல.”

“என்னைப் பற்றியும் இது போலத்தான் முன்பு சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.” அண்ணி சொன்னாள்.

“நீ யாருக்கும் குறைந்தவளில்லை. உன் குரலும் இனிமையானது தான்.”

சரயு அண்ணி மகிழ்ச்சியடைந்தாள், பழைய நாட்களின் வெறுப்பை அவள் மறந்து விட்டாள்.

பிறகு சில நாட்களில் மருமகளோடு வருவதை மாமியார் நிறுத்திக் கொண்டாள். வீட்டின் பிற வேலைகளில் மூழ்கிப் போயிருக்கவேண்டும். ரஹிம் அண்ணி காலையில் இரண்டு தடவையும் ,மாலையில் ஒரு தடவையும் தண்ணீர் எடுக்க வருவாள். பள்ளிக்குப் போகும் வழியில் நாங்கள் அவளைப் பார்ப்போம். ஒரு நாள் மற்ற பையன்கள் சிறிது தூரம் போய் விட நான் நின்றேன். ரஹிம் அண்ணி வரும் வழிக்கு எதிர் பக்கத்தில். வழக்கம் போல அவள் முகம் கழுத்து வரை மூடியிருந்தது.

“ரஹிம் அண்ணி ,உங்கள் முகத்தை எனக்குக் காட்ட வேண்டும், நான் மிகச் சின்ன பையன்தானே ?” சிறிது தயக்கமாக நான் சொன்னேன்.

“பாவ்ஜி, நீங்கள் என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், எனக்குப் பரிசு தரவேண்டும்.” அவள் நடந்து கொண்டே பேசினாள்.

நாங்கள் எதிரெதிர் திசைகளில் சிறிது இடைவெளியில் நடந்து கொண்டிருந்ததால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அடுத்த நாளும் அது போலவே நான் மற்றவர்களிடமிருந்து பின்தங்கி நின்றேன்; அவள் வந்த போது “ரஹிம் அண்ணி, உங்களுக்குப் பரிசு தானே வேண்டும், நான் அம்மாவிடமிருந்து வாங்கி வருகிறேன்.”என்றேன்.

“இல்லை, இல்லை, அம்மாவிடமிருந்து வேண்டாம். உங்கள்சொந்த சம்பாத்தியத்திலிருந்து எனக்குப் பரிசு கொடுத்தால்தான் என்முகத்தைக் காட்டுவேன். அதுவரை, நான் திரையை விலக்க மாட்டேன்.” என்று பதில் சொன்னாள்.

ரஹிம் அண்ணி அவள் சொன்னதில் உறுதியாக இருந்தாள். பல ஆண்டுகளாக திரை அணிந்திருந்தாள். எட்டாவது வகுப்பு முடித்த பிறகு,மேலே படிக்க நான் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் போய் விட்டேன். அதன் பிறகு ஒன்றரை வருடத்திற்கு நான் கிராமத்திற்குப் போக முடியவில்லை. எனக்கு இப்போது பதினைந்து வயது, நான் ஒன்பதாம்வகுப்பில் பெயிலாகி விட்டேன். விடுமுறையில் நான் கிராமத்திற்குப் போன போது ரஹிம் அண்ணியைப் பார்த்தேன். “பாவ்ஜி, என்ன வகுப்பில் படிக்கிறீர்கள் ?” என்று கேட்டாள்.

“ஒன்பதாம் வகுப்பு.”

“போன வருஷமும் ஒன்பதாவதில் தானே இருந்தீர்கள்?”

எனக்குப் பேச்சே வரவில்லை. அவள் முன்னால் நிற்க முடியாமல் “ஆமாம்,ஆமாம்.” என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.

இரண்டாவது முறையும் ஒன்பதாவதில் பெயிலானதால் அந்த வருடமும் நான் ஊருக்குப் போகவில்லை. பத்தாம் வகுப்பு போன பிறகுதான் வீட்டிற்குப் போனேன். ரஹிம் அண்ணியை அப்போது பார்க்க நேர்ந்த போது “நீங்கள் இப்போது கல்லூரியில் படிக்கிறீர்கள் அல்லவா ?” என்று கேட்டாள்.

“இல்லை, அண்ணி, நான் இப்போது பத்தாவதிலிருக்கிறேன். இந்த தடவை நான் பாஸான பிறகு எனக்கு வேலை கிடைக்கும். என் முதல் சம்பளத்தில் நான் உங்கள் பரிசுக்கு ஏற்பாடு செய்வேன்.”

“இல்லை, பாவ்ஜி, உங்கள் முதல் மாதச் சம்பளத்தை அம்மாவிற்குக் கொடுத்து நமஸ்கரியுங்கள். அவர்கள் தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்வதால், பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்க வேண்டியிருக்கும். நான் என் பரிசிற்காக ஒரு வருடம் காத்திருப்பேன்.”

“ரஹிம் அண்ணி, என் சொந்த அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஇவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவேயில்லை.”

“பாவ்ஜி, காத்திருந்து ஒன்றைப் பெற நினைக்கும் போது, அந்த விருப்பம் ஆழமாக வளரும். இளமையின் ஆரம்ப நாட்களில் இருக்கும் உங்களுக்கு ஒரு முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு விட்டால் அது மறையாது. விருப்பம் நிறைவேற வேண்டுமெனில், தேடிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் மிகச் சிறிய பையன்தான்.இந்த வயதில் பல திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம், பல விருப்பங்கள் நம்மை விட்டும் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒருவிருப்பம், என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏன் அதை முடித்து விட நினைக்கிறீர்கள்?அது பக்குவப்படட்டும், உறுதியாகட்டும், அப்போது அது உடையாது.”

இந்த நிமிடம் வரை ரஹிம் அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஒரு சின்ன வேடிக்கை, ஒரு வெறும் பொழுதுபோக்கு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அவள் முகத்தைப் பார்ப்பது என்பது வேறு ஒரு வடிவம் எடுத்திருக்கிறது. என் சொந்த சம்பாத்தியத்திலிருந்து பரிசு வாங்கி அவளுக்குக் கொடுப்பதென முடிவு செய்தேன்.

விதியின் தீர்மானம் வேறாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேறியபிறகு கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாண்டுகளில் சம்பாதிக்க என்று எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. படிப்பை முடித்தவுடன் குடும்ப நிலங்களை பார்த்துக் கொள்ள வேறு யாருமில்லாததால் கிராமத்திற்குத்திரும்ப வேண்டியதாகி விட்டது. என் அப்பா இறந்து போனார். என்படிப்புச் செலவுகளை மற்றவர்கள் கவனித்துக் கொண்டனர். சிறிது காலத்தில் எனக்குத் திருமணமுமாகி விட்டது. ஆனால் ரஹிம் அண்ணி திரையை விலக்கவேயில்லை. என்னால் அவளுக்கு பரிசு கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் “பாவ்ஜி, பரிசு கிடைக்காமல் நான் என் முகத்திரையை விலக்க மாட்டேன்.” என்று சொன்னாள்.

ரஹிம் அண்ணியின் பேரழகை எல்லோரும் பாராட்டினார்கள்.வெள்ளைக்காரப் பெண் போல நிறம் ,தோற்றமும், வடிவமும் கவர்ச்சி ஆனவை. என் மனைவிக்கு ரஹிம் அண்ணியின் மேல் பொறாமை. அவளுடைய காலணிகள் இன்னமும் வெள்ளி நூல் எம்பிராய்டரி அழகோடு, இருக்கின்றன, ரஹிம் அண்ணியின் காலணியில் அந்த வெள்ளி எம்பிராய்டரி நூல் கிழிந்து போய் விட்டது.அதற்குப் பிறகு அவள் அணிந்தது சிவப்புக்காலணி, இப்போது தோல் காலணி என்று சில வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் அவளது நிறம், முக அழகு ஆகியவை அழகான எம்பிராய்டரி காலணியாய்த் தங்கி விட்டன.

“உங்களிடம் ரஹிமு தன் நீண்ட முகத்திரையை மறைத்துக் கொண்டே பேசுவது ஏன் ? “ என்று என் மனைவி ஒருநாள் கேட்டாள்.

“என்னிடமிருந்து பரிசு கிடைத்த பின்புதான், ரஹிமு அண்ணி தன் திரையை விலக்குவாள். சரயு அண்ணி என்னிடம் எப்படிப் பேசுவாளோ அப்படித்தான் அவளும் என்னிடம் பேசுகிறாள்.”

“சரயு அண்ணி, உங்கள் சொந்த அண்ணி, ஆனால் ரஹிமு இஸ்லாமிய இனத்தவள். அவளுக்கு உங்களோடு என்ன உறவு ?”

“கடவுளர் பெயர் வேறு என்பதாலே சகோதரர்கள் உறவு முறிந்து விடாது. இலாம்தீன் என் சொந்த மூத்த அண்ணனைப் போலத்தான்.”

“நீங்கள் அப்படிச் சொல்லலாம், ஆனால் ஜனங்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.”

“போகட்டும், மற்றவர்கள் சொல்வதை நான் பின்பற்ற மாட்டேன். நான் சொல்வதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவேன்.”

“ஜனங்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் உலகம்பின்பற்றும்.”

“ஆனால் ஜனங்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா?” அவளிடம் இதற்கு பதிலில்லை.

ரம்ஜான் மாதம் வந்துவிட்டது. இசுலாமியர் தங்கள் நோன்பைத் தொடங்கி விட்டனர். “ ரஹிம் அண்ணி, நீங்கள் விரதம் இருப்பதில்லையா?” நான் கேட்டேன்.

“என்னால் நீண்ட நாட்கள் விரதமிருக்க முடியாது. நான் ஒரு நாள்தான் விரதமிருப்பேன். எனக்குப் பசி வந்துவிடும். வெறும் ரொட்டி சாப்பிட்டால் கூட எனக்குப் போதும், ஆனால் சாப்பிடாமலிருக்க முடியாது.”

“எந்த நாளில் விரதமிருப்பீர்கள்?”

“நான் என்று நீர் இறைக்க வரவில்லையோ, அன்று விரதம்
இருப்பேன்.”

“விரதத்தை முடிக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்கு இனிப்பு வாங்கி வருகிறேன்.”

“இல்லை,இல்லை, என் விரதத்தை முடிக்க நீங்கள் இனிப்பு வாங்கித் தருவது சரியல்ல. யார் வாங்கி வரவேண்டுமோ அவர்தான் இனிப்பு வாங்கித் தர வேண்டும்.”

“பிறகு நான் என்ன வாங்கித் தந்தால் பொருத்தமாக இருக்கும் ?”

“பரிசு வாங்கித் தருவது தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். எனக்கு அது கிடைக்கும் போது, நான் பெருவிழா நிலாவைப்பார்ப்பேன்.”

“சரி. நீங்கள் பெருவிழா நிலவைப் பாருங்கள். என்னைப் பொறுத்த வரை ,உங்களின் கிரகணத் திரையால் பௌர்ணமி நிலவு பல ஆண்டுகளாக உறையிடப்பட்டிருக்கிறது. “

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரஹிம் அண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். சாம்சுதான் நீர் இறைக்க வருவான், நான் அவனிடம் அண்ணியின் உடல்நிலை பற்றி விசாரிப்பேன். அவள் உடல்நலம் சீர்கேடு அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். காய்ச்சல் டைபாய்டாகி,பின் நிமோனியா ஆனது. நிலைமை மோசமாகவைத்தியர் கைவிரித்து விட்டார். ஆங்கில மருத்துவரும் நம்பிக்கை இல்லையென்று சொல்லி விட்டார்.

ஒருநாள் காலை சாம்சு எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தான்,”நேற்று இரவிலிருந்து அத்தை நிலை மிக மோசமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் பாவ்ஜியைக் கூப்பிடுமாறு சொல்கிறார். நான் அழைத்து வருகிறேன் என்று புறப்பட்ட போது “ நான் போகிறேன். கடைசித் தடவையாக அவர் வந்து என்னிடம் தன் முகத்தைக் காண்பிக்க வேண்டும்
என்று பாவ்ஜியிடம் சொல்” என்றாள்.

உடனடியாக நான் சாம்சுவுடன் கிளம்பினேன். ரஹிம் அண்ணி கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தாள். முகம் திரையின்றி இருந்தது. அழகான பிரேமில், மிக அழகானமுகம், கருப்பு விழிகள், கன்னங்களில் பரவியிருந்த கரும் சிவப்புப் புள்ளிகள் கிரேக்க சிலைகளில் ஒன்றை நினைவூட்டியது. மெதுவாக அவள் பார்வையை என் மீது திருப்பினாள்.

பிறகு மெல்லிய குரலில் ,”பாவ்ஜி, பரிசு பெறுவதற்காக என் திரையை இன்று விலக்கியிருக்கிறேன். நீங்கள் என் முகத்தைப் பார்க்கலாம், உங்கள் முகத்தைப் பார்ப்பதற்காக மட்டும் என் வாழ்க்கை என் கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மயானத்திற்கு வர வேண்டும்.உங்கள் பரிசாக ஒரு கைப்பிடியளவு மண்ணை என்முகத்திலிட வேண்டும். இல்லையெனில் ,உங்கள் பரிசை யாசித்து கொண்டே என் புதைகுழிக்குச் செல்வேன்…”
—————————–

நன்றி : Contemporary Indian Short Stories Series III, Sahitya Akademi
Short Story Heading Masahni – B. P .Sathe

 

 

 

 

 

 

 

செர்பிய கவிதைகள்: டஸ்கோ ரடோவிக் (1922-1984) – எஸ். பாபு தமிழாக்கம்

எஸ். பாபு

முடிவுகளும் துவக்கங்களும்

புதன்கிழமை எங்கு முடிகிறதோ,
வியாழக்கிழமை அங்கு துவங்குகிறது.
வியாழக்கிழமையின் குழந்தைபோல
வெள்ளிக்கிழமை வந்து சேர்கிறது.
முடிவுகள் முடிந்துவிடும்போது
துவக்கங்கள் வருகின்றன.
முடிவு முதல் துவக்கம் வரை என்பதே போக்கு.
மேலும்,
முடிவில் துவக்கம்தான் வருகிறது.

***

3X3 என்ன?

அது 7 என்று நினைத்தேன்.
அது 6 என்று சொன்னேன்.
அது 9 ஆக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன்.

***

அநீதி

எனக்குத் தெரியுமா? என்று
என்னிடம் கேட்டாள்.
எனக்குத் தெரியாது என்று
சொன்னேன்.
பதில் சரியானது தான்.
ஆனாலும் எனக்கு
கெட்ட பெயர் கிடைத்தது.

***

பன்றி

பன்றிக்குத் தெரியுமா, தானொரு பன்றி என்று?
அதற்குத் தெரியுமா, மற்ற பன்றிகளைப் போலத்தான்
அது தோற்றமளிக்கிறது என்று?
பன்றி தன்னை வேறு எதுவாகவோ
நினைத்துக் கொண்டிருக்கலாம்.

***

துளை வழியாகப் பார்த்தல்

ஒரு துளை வழியாகப் பார்ப்பது
சிறந்தது.

உங்களுக்கான துளையை உருவாக்கி
அதன் வழியே பாருங்கள்.
நீங்கள் பார்ப்பதை
வேறு யாராலும் பார்க்க முடியாது.

நீங்கள் சோர்வடையும்போது
துளையை மூடிவிடலாம்.
அல்லது
அதனை நிராகரித்து விடலாம்.

***

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

கவிதையோடு வாசிப்பு மனம் முழுவதுமாக ஒன்று கலந்து உறவாடி விடாமல், அதில் ஒரு சிறு இடைவெளி மிஞ்சினால் தான் அந்தக் கவிதையுடனான உறவு நிலைக்கிறது. அவ்விடைவெளியை நிரப்ப முயலும் பிரயத்தனத்தை அக்கவிதை நம் வாழ் நாள் முழுவதும் கோரியபடி இருக்கிறது. அம்மாதிரியான கவிதை வரிகள் தான் வரலாற்றில் நிற்கின்றன போலும். ‘யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது எல்லாம்’ என்னும் நகுலனின் வரிகள் போல. கவிஞன் நின்றுரைக்கும் தளத்திற்கு ஏற்றிவிட இல்லாமல் போகும் அந்தக் கடைசிப் படிக்கட்டு, நம் மனதை அந்தர ஏகாந்தத்தில் நிறுத்துகிறது. அப்படியான வரிகளை உலகின் பல்வேறு மொழிக் கவிதைகளிலும் காண முடிகிறது. செர்பியக் கவிதை வரிகளில் அவ்வாறு சஞ்சரித்த அனுபவத்தின் விளைவுதான்  இம்மொழிபெயர்ப்பு. யாருடைய வரிகளோ உள்ளங்கையில் வந்து விழ, தெரிந்தோருக்கெல்லாம் உடனே பகிர்ந்துவிடத் தூண்டும் அந்தக் கண நேர உ ந்துதல் போன்ற ஒரு சிறு பதற்றம் தானே தவிர, இம்மொழிபெயர்ப்புக்கு  சீரிய நோக்கம் என்று எதுவுமில்லை.

யூவின் அழகிய யுவதி – சீனக் கவிதையின் மொழிபெயர்ப்பு – ந.சந்திரக்குமார்

மூலம்: சியாங் செ (1245- c1310) எழுதிய “யூவின் அழகிய யுவதி” என்ற சீனக் கவிதை

பெய்திறங்கும் மழையின் தாளத்தை
என் இளமையில்
விபச்சார விடுதியொன்றின் கூரைமீது
ஒருமுறை கேட்டிருந்தேன்,
நான் படுத்திருக்க அருகில்
மெழுகுத்திரியின் ஒளிவெள்ளத்தில்
மேலாடையும், பெண்மேனியும்
பட்டுபோல் பிரகாசித்திட!

பெய்திறங்கும் மழையின் தாளத்தை
சிறுபடகின் ஓய்வறையின் கூரைமீது
பின்பொருமுறை கேட்டிருந்தேன்,
கீழிறங்கிய கருமேகங்களுக்கு
அஞ்சிய நீர்ப்பறவைகள் ஓலமிட்ட
ஓர் இலையுதிர்காலப் புயலினூடே
பெரியநதி வழி சென்ற என் பயணத்தில்!

பெய்திறங்கும் மழையின் தாளத்தை
இந்த ஆசிரமத்தின் கூரைமீது
இப்போது மீண்டும் கேட்கிறேன்,
முழுதும் வெள்ளையான என் தலைமுடி.
இன்பம், துன்பம், பிரிவு, மீள்சந்திப்பு
என்பன எல்லாம்
எதுவுமே நிகழாதது போல் இருக்க
இரவெல்லாம் பிரவாகமாய்
ஓடுகளின் மேல் பெய்யும்
மழை மட்டும்தான் அப்படியே இருக்கிறது!

 

ஆங்கில மூலம்:

The Fair Maid of Yu
By Chiang Chieh ( 1245- c. 1310)
Translated from Chinese by Kenneth Rexroth

Once when young I lay and listened
To the rain falling on the roof
Of a brothel. The candle light
Gleamed on silk and silky flesh.

Later I heard it on the
Cabin roof of a small boat
On the Great River, under
Low clouds, where wild geese cried out
On the Autumn storm.

Now I
Hear it again on the monastery
Roof. My hair has turned white.
Joy — sorrow — parting –meeting —
Are all as though they had
Never been. Only the rain
Is the same, falling in streams
On the tiles, all through the night