தினப்பதிவுகள்

வாழ்ந்ததன் பொருள்: பறவையும் தாழ்ந்தாடும் மரக்கிளையும் – நித்ய சைதன்யா

வாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன? எத்தனை துய்த்த பின்னும் மனம் மீண்டும் நுகரும் வேட்கையால் அலையாடிக் கொண்டே இருக்கிறது. எல்லா ஆசைகளும் முதலில் ஒரு துளியென இம்மண்ணில் விழுகின்றது. வேரோடி வாழும் நிலத்தை ஆரத்தழுவியபோது இது நிரந்தரம் என்றும் இன்னும் அதிகக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நம்புகிறோம். அதனால் ஓயாமல் லௌகீக காரியங்களில் நம்மை இழக்கிறோம். செய்கின்ற அனைத்தும் நம் விருப்பம் ஒன்றினால் மட்டுமே நிகழ்கிறதா?

எக்கணமும் நம் வாய்ப்பு காலாவதியாகலாம். காலடி மண் இல்லாமலாகி பறத்தலின் சாமான்யம் விதிக்கப்பட்டு மீண்டும் இங்கு நிகழ்வனவற்றை கண்ணாடியின் அப்புறம் நின்று வெறிக்கும்போது நம்மால் என்ன செய்துவிட முடியும்? விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது? எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது? இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா? பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ? தொகுப்பதும் பகுப்பதும் எவரின் கரம்?

ஒரு மரணம் நிகழும்போது ஒரு பறவை பறந்து செல்கிறது, தொடுவானம் தாண்டிய தொலைவிற்கு. இனி ஒருபோதும் அது மீண்டு வருவதில்லை. தாழ்ந்தும் உயர்ந்தும் தவித்தாடும் மரக்கிளையே அப்பறவை இருந்ததற்கான பருப்பொருள் சாட்சி. வந்தமரும் பறவையை ஆடி ஓயும் மரக்கிளை எவ்வாறு எதிர்கொள்கிறது? அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும்? மரணத்தை எதிர்கொள்ள தர்க்கத்தைவிட சிறந்த கேடயம் வேறு உண்டா?

மக்கள் கூடுமிடம் – மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு குறிப்பு

நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டேன்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன.

அந்த தேவதச்சன் கவிதை-

இம்
மேஜை டிராயரில்
கடல்,
கட்டிலுக்கடியில் விண்பருந்து
விளக்கு ஒயரில்
உலவும் புலி,
கண்ணாடி டம்ளரில் ஓடாது
வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் ஜலம்
கம்பிகளில்லா
சிறைச்சாலை உலகம்
சிறைகளற்ற சுவர்கள்
இவ்வறை

‘வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை’ – – ஜிஃப்ரி ஹாசன்

நிஜத்தின் சாயலில் மனித வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஏராளம் கற்பனைத் தடைகளோடுதான் இன்றைய மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை. சிலவேளைகளில் நாம் அர்த்தங்களற்ற சொற்களைக் கொண்டு அர்த்தங்களற்ற ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த வாழ்வு நிஜத்தின் எந்தவிதப் பிரக்ஞையுமற்ற ஒரு கனவுலகைப் போன்று சாஸ்வதமானதாக தொடரும்போது வானளாவிய கனவுகளோடு நாம் வலம் வருகிறோம். ஒரு சிறு கணத்தில், கனவுகள் அர்த்தமற்று நீர்த்துப் போகும் ஒரு தருணத்தில் நாம் கட்டியெழுப்பிய கற்பனை உலகம் எந்தக் கரிசனையுமற்று நம்மைக் கைவிட்டு விடுகிறது.

அந்தக் கட்டத்தில் சூழ்நிலையின் நெருக்கடிகளால் ஒவ்வொரு தனிமனிதனும் காயப்படுத்தப்பட்டு விடுகிறான். கடைசியில் அந்த வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு மனிதனும் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறான்.

பசியும் தாகமும் – வீராணம் நீர் குறித்து

DSC_0721

ஆண்டாள் கதையின் தொடர்ச்சி இது, அதில் வரும் வீராணம் ஏரியையும் அதன் பரந்து விரிந்த பாசனப் பரப்பின் இன்றைய நிலையையும் விவசாயியின் கோணத்தில் யோசித்ததில் இயல்பாக எழுத்தில் வந்து விட்டது.

காலம் காலமாக வீராணம் ஏரி நீரை நம்பி  பயிர் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் எதிர்காலத்தையும் மறந்து விட்டோம்.

இந்த ஆண்டின் பெரும் மழைப் பொழிவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியது. சென்னைக்கு இவ்வருடம் குடிநீர் பஞ்சமில்லை என்ற செய்தியை பத்திரிக்கைகளும் தொலைகாட்சி சேனல்களும் தமிழகம் முழுவதும் பரப்புகின்றன. ஆனால், கடைமடைக்கு தண்ணீர் தராமல் பயிர்கள் காய்வதையும் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் போராடியே தண்ணீர் பெறுகின்றனர் என்பதைம் யாரும் பேசுவதில்லை.

2004க்குப் பிறகு வீராணம் ஏரியின் பாசனப்பரப்பு குறைந்து விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு கூலிகளாக இடம் பெயர்கிறார்கள். இதன் தாக்கம் எப்போதோ ஆரம்பித்து விட்டது, அடுத்த பத்தாண்டுகளில் மிக மோசமான விளைவுகள் தெரியும்.

பரங்கிப்பேட்டை வீராணம் ஏரியின் கடைமடை. பாசனப் பகுதி, வடிகால், வாய்க்கால் எல்லாம் இறால் குட்டைகள் ஆக்கிரமிப்பால் மழைநாட்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் தேங்கி நின்று அவர்களுக்கு மேலும் துயரத்தை தருகின்றன.

வீராணம் பாசனப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயியின் வயலும் அது தரும் வாழ்வும்தான் இந்தக் கதை.

மாரி மயினி – நித்ய சைதன்யா

என்னைப் பார்த்துச் சிரிக்காத மாரி மயினியை அன்றுதான் பார்த்தேன். நம்ப முடியவில்லை. தயக்கத்தோடு அவர்களின் அருகில் நின்று மயினியின் முகத்தை ஏறிட்டேன். வழக்கமாக அவர்கள் என்னைப் பார்த்ததும், கொழுந்தனாரே ஏன் மெலிஞ்சிட்டே போறிக, என்று கைநீட்டி இழுத்து அணைத்துக் கொள்வார்கள். எனக்கென்று தனியான ஒரு துள்ளல் அவரிகளிடம் வெளிப்படும். பான்ட்ஸ் வாசனையோடு உடல் அதீத கூச்சத்தில் குறுகும், வெட்கம் கொண்டு விலகி ஓடுவேன். ஒவ்வொரு முறையும் இது நடக்கும். கேள்விகள் மாறுமே தவற அன்பு மிகுந்த அணைப்பு மாறியதே இல்லை. மயினிமார்களின் பிரியத்தை வேறு எந்த பெண்ணும் தந்துவிட முடியாதல்லவா?

அன்று அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. உண்மையில் அவர்கள் அங்கு எங்களோடு இருக்கவேயில்லை. அசையாத விழிகளில் இந்த மண்ணில் வந்து சென்ற அத்தனைப் பெண்களின் இல்லறத் துக்கத்தைச் சுமந்து நின்றார்கள்.

மாரி மயினி அந்தத் திருமணம் நிச்சயித்தபோது எல்லாப் பெண்களையும் போல மௌனமாகத்தான் இருந்தார்கள். நெருங்கிய அண்ணா ஒருத்தர், மாப்பிள பிடிச்சிருக்கா, என்று கேட்டபோது, பெரியவங்க பாத்துச் செஞ்சா சரிதான், என்றார்கள். மாப்பிள்ளை குட்டையாக இருப்பதோ, கருப்பாக இருப்பதோ, அதைவிட, பள்ளிப் படிப்பை தாண்டாததோ, இதெல்லாம் அவர்களைச் சங்கடப்படுத்தவில்லை.

மாரி மயினியின் ஆண் யாரென்று எனக்குத் தெரியும். நடுநிசி வரை அவர்கள் என்னிடம் சொல்லும் கதைகளில் வரும் அவரின் ஆணை நான் நன்கறிவேன். ஆனால் இந்திய பெண்களின் யதார்த்தம் என்ன என்பது பெண் மரபின் மறைபொருளாக அவர்களுக்குத் தெரிய வந்திருந்தது போலும். எங்கேயும் போல எல்லாம் சுபமாகத்தான் நடந்தது. அவர்களை மறுவீடு அனுப்பிய அன்று நான் அடைந்த இழப்பினை அதன்பின் எப்போதுமே அனுபவித்ததில்லை.

ஆனால் ஆறாவது மாதம் கழித்து அவர்கள் தனியாக திரும்பி வந்ததைக் கேள்விப்பட்டு அம்மாவுடன் சென்றேன். இரண்டு நாட்களாக யார் யாரோ வந்து உபதேசித்துச் சென்றார்கள். அத்தை, மாரி மயினியை கொலை பாதகம் செய்தவரை நடத்துவதைப்போல நடத்தினார்கள். மயினியும் அதை எதிர்க்கவில்லை. கடைசிவரை கட்டிக் கொடுத்த ஊருக்குத் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்கள். கன்னிகாத்த மாரி மயினி திருமணத்தோடு இந்த மண்ணில் இருந்து மாயமாகிவிட்டார்கள். தேவதைத் தருணங்கள் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் அளந்து வழங்கப்பட்ட ஒன்றுதானோ?

அதன்பின் மாரி மயினியை பார்க்கும்போதெல்லாம் வெயில் காலத்தின் வேம்பு நினைவுக்கு வரும். மீண்டும் வசந்தம் வந்தாலும் தளிர்க்கும் முடிவை தள்ளிப் போடும் வைராக்கியத்தை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஆணின் தீமையை அஞ்சியா? அல்லது மீண்டும் ஆறுதல் தேடிவந்த அவர்களை அந்நியப் பார்வையோடு எதிர்கொண்ட அம்மாவை வெல்லவா? எந்தக் காற்றுக்கும் அசையாமல் நின்றெரியும் சுடராகிப் போனார்கள்.