தொடர்கதை

வண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு

மாயக்கூத்தன்

gay_neck_the_story_of_a_pigeon

இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.

இப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.

திடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.

எழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.

நான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.

”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.

மடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.

நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது?” என்று கேட்டார்.

அந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ! நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”

”ஓ! வணிகவியலின் ஆன்மாவே!” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”

“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.

“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.

”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.

அதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”

அடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.

கோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.

வண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ! பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.

இப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.

இந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,

“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.

“எல்லோருக்கும் அமைதி கிட்டட்டும்.”

(முற்றும்)

வண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டிக் கொண்டு நடக்கக் கூடிய அளவே பூமி இருந்தது.

“இப்போது என்னுடைய பயம் தோய்ந்த ஆடையை இந்த இரட்டை மரங்களுக்கு நடுவே வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய உடைக்கு அடியில் இருந்து நேற்று வரை அவர் அணிந்திருந்த பழைய உடைகளின் மூட்டையை எடுக்கலானார்.  அதைத் தரையில் வைத்துவிட்டு இரண்டில் இரு மரத்தில் ஏறினார். மேலே ஏறிய பிறகு கோண்ட் ஒரு கயிற்று ஏணியை எனக்காக கீழே வீசினார். வண்ணக்கழுத்து என் தோளில் தனது சமநிலையை இருத்த தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருக்க நான் அந்த ஏணியில் ஏறினேன். இரண்டுபேரும் கோண்ட் உட்கார்ந்து கொண்டிருந்த கிளையை பத்திரமாக அடைந்துவிட்டோம். மாலை விரைந்து வந்து கொண்டிருக்க நாங்கள் அங்கேயே சில நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.

அந்தி சாய்கையில் நான் முதலில் கவனித்த விஷயம் பறவைகளின் வாழ்க்கை. கொக்குகள், இருவாய்க் குருவிகள், க்ரவுஸ், பெஸண்டுகள், பாட்டுக் குருவிகள், கிளிகளின் மரகதக் கூட்டங்கள் காட்டை ஆக்கிரமிப்பது போல இருந்தது. தேனீயின் ரீங்காரமும் மரங்கொத்தியின் டக் டக் டக் சத்தமும், தொலைவில் கேட்ட கழுகின் கிறீச் ஒலியும், மலை ஓடையின் கீழித்துச் செல்லும் இரைச்சலோடும் ஏற்கெனவே முழித்துவிட்டிருந்த கழுதைப்புலிகளின் விட்டுவிட்டு வரும் கனைத்தலோடும் கலந்திருந்தது.

அந்த இரவு நாங்கள் இருப்பிடத்தை அமைத்திருந்த மரம் மிகவும் உயரமானது. எங்களுக்கு மேலே சிறுத்தையோ பாம்போ இல்லாதபடி நாங்கள் உயரத்திற்கு ஏறினோம். கவனமான ஆய்வுக்குப் பிறகு இரண்டு கிளைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடையே எங்களுடைய கயிற்று ஏணியை உறுதியான தொட்டிலாகக் கட்டினோம். இருப்பிடத்தில் பத்திரமாக உட்கார்ந்த உடனே கோண்ட், வானத்தைச் சுட்டிக் காட்டினார். உடனே நான் மேலே பார்த்தேன். அங்கே மிகப் பெரிய கழுகொன்று தன்னுடைய மாணிக்க நிற இறக்கைகளோடு பறந்து கொண்டிருந்தது. வெள்ளத்தைப் போன்று வேகமாக இருட்டு தரையிலிருந்து மேலெழுந்து வந்தாலும் கூட, வானுக்கு மேல் வெளிகள் ஒரு புறாவின் கழுத்தைப் போன்று ஒளிர்ந்தது. அந்த வெளியில் அந்த தனிக் கழுகு மீண்டும் மீண்டும் வட்டமடித்துக் கொண்டிருந்த்து. கோண்டைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் அந்த்க் கழுகு அஸ்தமிக்கும் சூரியனை வழிபடுகிறது.

அந்தக் கழுகின் இருப்பு ஏற்கெனவே அங்கிருந்த பறவைகளையும் பூச்சிகளையும் அசைவற்று வைத்திருந்தது. அவற்றுக்கு வெகு மேலே அந்தக் கழுகு இருந்த போதும், மெளன பக்தர்களின் கூட்டம் போல, அவர்களுடைய அரசன் பின்னும் முன்னும் பறந்து, அவர்களுடைய கடவுளான ஒளியின் பிதாவுக்கு ஒரு பூஜாரியைப் போலே மெய்மறந்து வணக்கம் செலுத்துகையில், அவை அமைதி காத்தன. மெல்ல அதன் இறக்கைகளில் இருந்து மாணிக்க ஒளி கசிந்தது. இப்போது அவை தங்கப் பொறிகளால் விளிம்புகள் செய்யப்பட்ட கருநீல பாய்மரத் துணியைப் போலே இருந்தன. அதனுடைய தொழுகை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலே, இன்னும் மேலே உயர்ந்து, தன் தெய்வத்தின் முன் தீக்குளிப்பதைப் போலே, தீயினால் எரிவது போன்று நின்ற சிகரங்களை நோக்கிப் பறந்து சென்று, அவற்றின் ஒளி வெள்ளத்தில் ஒரு அந்துப்பூச்சியைப் போலே காணாமல் போனது.

கீழே ஒரு எருமையின் முக்காரம் பூச்சிகளின் ஒலிகளை ஒவ்வொன்றாக விடுவித்து, மாலையின் நிசப்தத்தை கந்தல் கந்தலாகக் கிழித்தது. அருகில் ஒரு ஆந்தை அலற, என் துணிக்கு அடியில் இருந்த வண்ணக்கழுத்து என் நெஞ்சோடு நெருங்கி வந்தது. திடீரென்று நைட்டிங்கேலைப் போன்ற இரவுப் பறவையான ஹிமாலய குண்டுகரிச்சான் குருவி ஒன்று தன் மாயப் பாடலைத் தொடங்கியது. கடவுள் ஊதும் வெள்ளிப் புல்லாங்குழல் போல, ட்ரில்லுக்கு மேல் ட்ரில்லாக, ஏற்றத்துக்கு மேல் ஏற்றமாக, மரக்கூட்டங்களுக்கு இடையே வேகமாகப் பொழிந்து, அவற்றின் கடுமையான கிளைகளின் மீது வடிந்து காட்டுத் தரையில் இறங்கி பின் அவற்றின் வேர்களின் வழியே பூமியின் அடிநெஞ்சுக்கு இறங்கும் மழையைப் போல, அமைதி இறங்கியது.

முன்னரே வரும் கோடைக்கால இரவு உண்டாக்கும் மகிழ்ச்சி எக்காலத்திலும் விளக்க முடியாததாகவே இருக்கும். உண்மையில் இது மிகவும் இனிமையாகவும் தனிமையாகவும் இருந்ததால் எனக்கு கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. மரத்தின் தண்டோடு என்னை பத்திரமாகப் பிணைக்க கோண்ட் இன்னொரு கயிற்றைக் என்னைச் சுற்றிக் கட்டினார்.  பின், செளகரியமாகத் தூங்குவதற்காக என் தலையை அவருடைய தோளில் இருத்திக் கொண்டேன். ஆனால், நான் அப்படிச் செய்வதற்கு முன்பாக கோண்ட் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார்.

”நான் கீழே கழற்றிப் போட்ட எனது உடைகள், நான் பயத்தின் பிடியில் இருந்த போது உடுத்தியவை. அவை ஒரு விசித்திரமான வாடையைக் கொண்டவை. அந்த எருமை மச்சான் இந்த வாடையை நுகர்ந்தால், அவன் இந்தப் பக்கம் வருவான். பயத்தினால் பீடிக்கப்பட்டிருப்பவன், பயத்தின் வாசனைக்கு பதிலாற்றுவான். நான் கழற்றிப் போட்ட துணிகளை ஆராய அவன் வந்தால், நாம் அவனுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு கிடாரியைப் போலப் அடக்கி வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்…” அவர் அதற்கு மேல் சொன்னவை என் காதில் விழவில்லை. நான் தூங்கிவிட்டிருந்தேன்.

வண்ணக்கழுத்து 17ஆ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

அன்றைக்கு ஒரு பயங்கரமான செய்தி மடாலயத்தை வந்தடைந்தது. லாமா குறிப்பிட்ட அதே கிராமத்தை சில நாட்களுக்கு முன்னர் ஒரு காட்டெருமை தாக்கியிருக்கிறது. ஊருக்குப் பொதுவாக இருந்த கதிரடிக்கும் களத்திற்கு அருகில் நடந்த ஊர்ப் பெரியவர்களின் கூட்டம் முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பேரை, முன்தினம் மாலை அங்கு வந்த காட்டெருமை கொன்றிருக்கிறது. தலைமை லாமாவைச் சந்தித்து அந்த விலங்கை அழிக்கவும் அந்த முரட்டு மிருகத்தைப் பீடித்திருந்த துராத்மா நீங்குவதற்காக பிரார்த்தனை செய்யவும், தலைமை லாமாவை கேட்டுக் கொள்வதற்காக கிராமத்தவர்கள் ஒரு குழுவை அனுப்பியிருந்தார்கள். இருபத்து நான்கு மணிநேரத்தில் அந்த மிருகத்தை கொல்லக்கூடிய வழிவகையைச் செய்வதாக லாமா சொன்னார். “எல்லயற்ற கருணையின் அன்புக்கு பாத்திரமானவர்களே, அமைதியோடு வீட்டிற்குச் செல்லுங்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும். அந்தி சாய்ந்த பின் வீட்டிற்கு வெளியே வராதீர்கள். வீட்டிலேயே இருந்து, அமைதியையும் துணிவையும் தியானம் செய்யுங்கள்”. அங்கே இருந்த கோண்ட் அவர்களிடம், “இந்த மிருகம் எவ்வளவு நாட்களாக உங்கள் கிராமத்தில் தொல்லை கொண்டிருக்கிறான்?” என்று கேட்டார். அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவருமே அந்த மிருகம் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு இரவும் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். அது அவர்களுடைய வசந்தகாலப் பயிரில் கிட்டத்தட்ட ஒரு பாதியை சாப்பிட்டுவிட்டிருந்தது. மீண்டும், அந்த காட்டெருமையை அழிக்கவும் தம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை வேண்டிவிட்டு, அவர்கள் கிராமத்தை நோக்கி கீழே இறங்கினார்கள்.

அந்தக் குழு சென்ற பின்னர், அருகில் நின்று கொண்டிருந்த கோண்டை நோக்கி, “வெற்றியால் தேர்வு செய்யப்பட்டவனே, இப்போது நீ குணமடைந்துவிட்டதால், அங்கே போய் அந்தக் கொலைகாரனை அழித்துவிடு” என்றார்.

“ஆனால்… குருவே”

“இனியும் பயப்பட வேண்டியதில்லை, கோண்ட். உன்னுடைய தியானங்கள் உன்னைக் குணப்படுத்திவிட்டன. இவற்றிலிருந்து என்ன பெற்றாய் என்பதை, இந்த வாய்ப்பை வைத்துக் கொண்டு காட்டிற்குப் போய் சோதித்துப்பார். தனிமையில் மனிதர்கள் பெற்ற சக்தியையும் சமநிலையையும் ஜனத் திரளில் சோதித்துப் பார்ப்பது கட்டாயம். இப்போதிலிருந்து இரண்டு சூரிய அஸ்தமனத்திற்குள் நீ வெற்றியோடு திரும்ப வேண்டும். உன்னுடைய வெற்றியின் மீது எனக்கு இருக்கும் மாறாத நம்பிக்கைக்காக இந்தப் பையனையும் அவனுடைய புறாவையும் உன்னோடு அழைத்துப் போ. உன்னுடைய சக்தியின் மீதோ இந்தக் காரியத்தில் உன்னுடைய வெற்றியின் மீதோ எனக்கு சந்தேகம் இருந்திருந்தால் ஒரு பதினாறு வயதுப் பையனை உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல சொல்லியிருக்கமாட்டேன். அந்தக் கொலைகாரனை நீதிக்கு முன்னால் நிறுத்து” என்றார் தலைமை லாமா.

அன்று மதியம் நாங்கள் காட்டுக்குக் கிளம்பினோம். மீண்டும் ஒரு இரவை காட்டில் கழிக்கப்போவாதை நினைத்து நான் உற்சாகமடைந்தேன். முழுமையானவர்களான கோண்டுடனும் வண்ணக்கழுத்துடனும் காட்டுக்கு, மீண்டும் ஒரு காட்டெருமையைத் தேடிச் செல்வது எத்தனை இன்பம். இது மாதிரியான ஒரு வாய்ப்பை வரவேற்காத சிறுவனும் இந்த உலகத்தில் இருப்பானா?

ஆக, நிரம்பி வழியும் உற்சாகத்துடன், கயிற்று ஏணி, ஒரு சுருக்குக் கயிறு, கத்திகளை எடுத்துக் கொண்டு, வண்ணக்கழுத்தை என் தோளில் ஏற்றிக் கொண்டு நாங்கள் கிளம்பினோம். ஆங்கிலேய அரசாங்கம், சாதாரண இந்திய மக்கள் நவீன ஆயுதங்கள் தரிக்க பயன்படுத்த தடை போட்டிருப்பதால், நாங்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளவில்லை.

மதியம் மூன்று மணி சுமாருக்கு மடாலயத்திற்கு வட மேற்கே இருக்கும் அந்த கிராமத்தை அடைந்தோம். அந்த எருமையின் கால்தடத்தைக் கண்டுபிடித்தோம். அடர்ந்த காட்டுக்குள்ளும், அகன்ற பாதைகளிலும் அதைத் தொடர்ந்தோம். அங்குமிங்கும், ஓடையை கடக்கவும், கீழே விழுந்திருந்த ராட்சத மரங்களைத் தாண்டவும் வேண்டியிருந்தது. காட்டெருமையின் கால் குளம்புகளின் தடங்கள் அசாதாரணத் தெளிவுடனும் ஆழமாகவும் தரையில் பதிந்திருந்தன.

கோண்ட் சொன்னார், “இங்கே எவ்வளவு கடுமையாக இந்த மிருகம் உழன்றிருக்கிறது என்று பார். அது மரண பயத்தோடு இருந்திருக்க வேண்டும். மிருகங்கள் அச்சமில்லாத நிலையில் மிகக் குறைவான தடங்களையே விட்டுச் செல்லும். ஆனால், மிரண்டு விட்டால், சாவு பயம் ஒட்டுமொத்தமாக தங்கள் உடலை அழுத்துவதைப் போல நடந்து கொள்ளும். இவனுடைய கால் குளம்புகள், அவன் போன இடங்களில் எல்லாம் ஆழமாகவும் தெளிவாகவும் இறங்கியிருக்கின்றன. ரொம்பவே மிரண்டு போய் இருக்கிறான்.”

கடைசியில் நாங்கள் கடக்க முடியாத ஒரு ஆற்றை அடைந்தோம். கோண்டைப் பொறுத்தவரை அதனுடைய ஓட்டம், அதில் இறங்கினால் எங்கள் கால்களை உடைத்துவிடும் அளவிற்கு கூர்மையானவை. அந்த எருமையும் கூட அதைக் கடக்க முயற்சிக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அதனால், நாங்கள் அந்த மிருகத்தை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு நதிக்கரையில் அதன் கால் தடங்களைத் மேலும் தேடினோம். இருபது நிமிடங்களில் அந்தக் காலடித்தடங்கள் ஓடையின் கரையில் காணாமல் போய், கரியைப் போல இருண்ட அடர்ந்த காட்டிற்குள் சென்றது, இப்போது மணி மாலை ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. எந்த வயதுடைய காட்டெருமைக்கும் கிராமத்திலிருந்து இவ்வளவு தூரம் வர அரை மணிநேர ஓட்டமே போதும்.

“உனக்கு இந்த தண்ணீரின் பாடல் கேட்கிறதா?” என்றார் கோண்ட். பல நிமிடங்கள் கவனித்துக் கேட்ட பின்பு, தண்ணீர் கோரைப் புற்களையும் அதற்கு பக்கத்திலேயே இருக்கும் மற்ற புற்களையும் முத்தமிட்டபடி எழுப்பும் கல கல ஒலியையும் முனகல் ஒலியையும் கேட்டேன். அந்த நதி ஓடி இறங்கும் ஏரியிலிருந்து இருபது அடி தொலைவில் இருந்தோம். “அந்தக் கொலைகார எருமை இந்த இடத்திற்கும் அந்தக் காயலுக்கும் நடுவில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை தூங்கிக் கொண்டிருக்கலாம்”, என்றார் கோண்ட். ”அங்கிருக்கும் இரட்டை மரங்கள் ஒன்றில் தங்குவோம். இருட்டிக் கொண்டு வருகிறது. சீக்கிரமே அந்த மிருகம் கண்டிப்பாக இங்கே வரும். அது வரும் போது, நாம் காட்டின் தரையில் இருக்கக் கூடாது. அந்த மரங்களுக்கு இடையே நான்கு அடி கூட இடைவெளி இல்லை.”

வண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

பத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய அறையை நோக்கி ஏறிச் சென்றேன். வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் இன்றைக்கு பழுப்பு நிறத்தில், மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய பாதாம் வடிவக் கண்களில் ஒருவித புதுமையான சமநிலையும் சக்தியும் ஒளிர்ந்தது. அவர் வண்ணக்கழுத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு,

“வாடைக் காற்று உன்னை குணப்படுத்தட்டும்
தென்றல் உன்னைக் குணப்படுத்தட்டும்
கோடைக் காற்றும் கொண்டல் காற்றும் ஆரோக்கியத்தை உன் மீது பொழியட்டும்
அச்சம் உன்னைவிட்டுப் போகிறது
வெறுப்பு உன்னைவிட்டுப் போகிறது
சந்தேகமும் உன்னைவிட்டுப் போகிறது
தைரியம் பொங்கும் புதுவெள்ளமென உனக்குக்குள்ளே விரைகிறது
உன் இருப்பு மொத்தத்தையும் அமைதி ஆள்கிறது
அமைதியும் வலிமையும் உனது இரு இறக்கைகள் ஆகிவிட்டன
உன் கண்களில் துணிவு ஒளிர்கிறது;
இதயத்தில் சக்தியும் வீரமும் உறைகின்றன
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!

சூரிய அஸ்தமனத்தில், இமாலய சிகரங்களை வெவ்வேறு வண்ணச் சுவாலைகளாய் ஒளிரும் வரை நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இந்த எண்ணங்களை தியானித்தோம். எங்களைச் சுற்றி இருந்த பள்ளத்தாக்குகள், குகைகள், காடுகள் எல்லாம் ஊதாப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தன.

வண்ணக்கழுத்து மெதுவாக லாமாவின் கைகளில் இருந்து கீழே குதித்து, அந்த அறையின் வாசலுக்கு நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தான். தன்னுடைய இடது இறக்கையை விரித்து காத்திருந்தான். பிறகு மென்மையாக, அவ்வளவு மெதுவாக, ஒவ்வொரு சிறகாக, ஒவ்வொரு தசையாக, கடைசியில் பாய்மரத் துணியைப் போல விரிய, வலது இறக்கையை உயர்த்தினான். உடனடியாகப் பறப்பதைப் போல நாடகத்தனமாக எதையும் செய்யாமல், ஏதோ மதிப்புமிக்க, ஆனால் உடைந்துவிடக் கூடிய இரு காற்றாடிகளைப் போல தன்னுடைய இறக்கைகளை மூடிக் கொண்டான். அந்திச் சூரியனுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை அவனும் அறிந்திருந்தான். ஒரு பூஜாரியின் மாண்புடன் அவன் படிகளில் இறங்கினான். என் பார்வையை விட்டு அவன் மறைந்தவுடன், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சத்தததைக் கேட்டேன், கேட்ட மாதிரி கற்பனை செய்தேன். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காண விரைந்து எழுந்தேன். ஆனால், லாமா என் தோள்களில் கையைப் போட்டு என்னை தடுத்து நிறுத்தினார். அவருடைய இதழ்களில் இன்னதென்றுபுரிந்து கொள்ள முடியாத ஒரு புன்னகை தவழ்ந்திருந்தது.

அடுத்த நாள் காலையில் நடந்த விஷயங்களை கோண்டிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக பதில் சொன்னார். ”வண்ணக்கழுத்து தன் இறக்கைகளை விரித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு வணக்கம் சொன்னான் என்று நீ சொல்கிறாய். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விலங்குகள் ஆன்மீக எண்ணம் கொண்டவை. ஆனால் மனிதன் தனது அறியாமையால் அவை அப்படியில்லை என்று நினைக்கிறான். குரங்குகள், கழுகுகள், புறாக்கள், சிறுத்தைகள், ஏன் கீரிப்பிள்ளைகள் கூட சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”

“எனக்கு அவற்றைக் காண்பிக்க முடியுமா உங்களால்?”

“முடியும். ஆனால் இப்போது இல்லை. நாம் போய் வண்ணக்கழுத்துக்கு காலையுணவைக் கொடுப்போம்” என்றார் கோண்ட்.

நாங்கள் அவனுடைய கூண்டை அடைந்த போது, அது திறந்திருப்பதையும் அதற்குள் அவன் இல்லாததையும் கண்டோம்.  நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மடாலயத்திற்கு வந்த பிற்பாடு ஒவ்வொரு இரவும் அவனுடைய கூண்டை நான் திறந்து தான் வைக்கிறேன். ஆனால், அவன் எங்கு போனான்? பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான்? என்ன செய்திருப்பான்? இப்போது எங்கே இருப்பான்?

நாங்கள் ஒரு மணிநேரம் அலைந்தோம். எங்களுடைய தேடலை நிறுத்தலாம் என்று நினைத்த போது, அவன் எழுப்பும் ஒலியைக் கேட்டோம். நூலகத்தின் கூரையில், இறவாணத்தில் தங்கள் கூடுகளில் இருந்த தன்னுடைய பழைய நண்பர்களான உழவாரக் குருவிகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கு அவர்கள் பதிலளிப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. திருவாளர் உழவாரக்குருவி “சீப் சீப் சீப்” என்று கத்தினார். நான் உற்சாகத்தில் வண்ணக்கழுத்தை நோக்கிக் கூவினேன். “ஆயா ஆய்!” என்று காலைச் சாப்பாட்டிற்காக அவனை அழைத்தேன். அவன் கழுத்தை வளைத்து கவனித்தான். பிறகு, நான் மீண்டும் அவனை அழைக்க, அவன் என்னைப் பார்த்தான். உடனடியாக தன் இறக்கைகளை சப்தமாக அடித்து, கீழ் நோக்கிப் பறந்து என்னுடைய மணிக்கட்டில், சிறிதும் அலட்டிக்கொள்ளாதது போல் வந்து அமர்ந்தான்.

அன்றைய சூரிய உதயத்தின் போது, காலை தியானத்திற்காகச் செல்லும் பூசாரிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்டு, கூண்டிலிருந்து வெளி வந்து, வெளிப்புற அறைக்குச் சென்ற போது, அங்கு ஒரு அனுபவமில்லா இளம் மரநாய் அவனைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணக்கழுத்தைப் போன்ற அனுபவசாலியால், ஒன்றிரண்டு சிறகுகளை மட்டுமே உதிர்த்து அந்த மரநாய்க்கு எளிதாக போக்குகாட்டிவிட முடியும். அந்த இளம் மரநாய், குவிந்திருக்கும் இறகுகளுக்கு இடையே புறாவைத் தேடிக் கொண்டிருக்க, அவனுக்கு இரையாகி இருக்க வேண்டியதோ வானத்தை நோக்கிப் பறந்திருக்கும். வானத்தில், உதிக்கும் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பறந்து கொண்டிருந்த தனது பழைய நண்பனான உழவாரக் குருவியைப் பார்த்திருக்க வேண்டும். இருவரும் இணைந்து காலை வழிபாட்டை முடித்த பின்னர், உரையாடுவதற்காக மடாலய நூலகக் கூரையில் இறங்கியிருக்கிறார்கள்.

வண்ணக்கழுத்து 16இ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

இப்போது நான் முன்னே சென்று, அந்த மடத்தின் தலைமை லாமாவை வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதிக்க, அவருடைய இறுக்கமான முகம் புன்னகையால் மலர்ந்தது. மற்ற லாமாக்களையும் வணங்கிய பின் நானும் கோண்டும், சின்னச் சின்ன மர இருக்கைகளை வரிசையாக அடுக்கி எங்களுக்காக உருவாக்கப்பட்ட மேஜைக்கு முன் அமர்ந்தோம். தரையில் சம்மண்மிட்டு நாங்கள் உட்கார, அந்த மேஜை எங்கள் மார்பு உயரம் வரை வந்தது. வெப்பம் மிகுந்த நாளில் பயணம் செய்துவிட்டு, குளிர்ந்த தரையில் உட்கார்வது இதமாக இருந்தது. பருப்பினால் செய்யப்பட்ட கஞ்சி (soup), பொறித்த உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் கறி தான் எங்கள் சாப்பாடு. நானும் கோண்டும் சைவர்கள் ஆதலால், அங்கு பரிமாறப்பட்ட முட்டைகளை நாங்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கான பானம் சுடச்சுட க்ரீன் டீயாக அமைந்தது.

மதிய உணவிற்குப் பின், தன்னுடன் மதியத் தூக்கத்தை எடுத்துக்கொள்ள என்னையும் கோண்டையும் அழைத்தார் தலைமை லாமா. அவருடன் மலையின் உச்சி சிகரத்திற்கு ஏறினோம். அது ஒரு கழுகின் பொந்து போல இருந்தது. அதற்கு மேலே நெருக்கமாக தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே, மரச்சாமான்கள் ஏதுவும் இல்லாத வசதிகளற்ற வெற்று அறை ஒன்றைப் பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒன்றை நான் பார்த்திருக்கவில்லை. அங்கே நாங்கள் உட்கார்ந்த பிறகு அந்தத் துறவி, ”இந்த மடாலயத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்தப் பூமியின் தேசங்களைக் குணப்படுத்துவதற்காக நாங்கள் எல்லையற்ற கருணையிடம் பிரார்த்திக்கிறோம். இருந்தும் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பறவைகளையும் விலங்குகளையும் கூட, வெறுப்பும் பயமும் தொற்றிக் கொள்கிறது. உணர்வுகளால் உண்டாகும் நோய்கள், உடல் நோய்களைவிட வேகமாகப் பரவுகின்றன. மனிதகுலம் பயத்தினாலும், வெறுப்பினாலும் சந்தேகத்தினாலும் வன்மத்தினாலும் நிரம்பப் போகிறது. இவற்றிலிருந்து மொத்தமாக மனிதர்களை விடுவிக்க வேண்டுமானால், ஒரு தலைமுறையையே நாம் கடக்க வேண்டியிருக்கும்.” என்றார்.

இதுவரை சுருக்கங்களற்று இருந்த லாமாவின் நெற்றியை  எல்லையற்ற சோகம் கவலை ரேகைகளால் நிறைத்தது. பயங்கர களைப்பினால் அவருடைய இதழோரங்கள் தாழ்ந்தன. யுத்தங்களுக்கு மேலே அவற்றைத் தாண்டி, அவருடைய கழுகுக் குகையில் அவர் வாழ்ந்த போதும் கூட இந்த உலகத்தைப் போரில் ஆழ்த்தியவர்களைவிட அவர் மனிதர்களின் பாவச் சுமையை நன்கு உணர்ந்திருந்தார்.

ஆனால், அவர் மறுபடியும் புன்னகைத்தார். “நம்முடன் இருக்கும் வண்ணக்கழுத்தையும் கோண்டையும் பற்றிப் பேசுவோம். உன்னுடைய புறா மீண்டும் வானத்தின் அமைதியில் பறக்க வேண்டும் என்றால், கோண்ட் இத்தனை நாட்கள் தனக்காகச் செய்து கொள்வது போல, நீ எல்லையில்லா துணிவை தியானிக்க வேண்டும்.”

“எப்படிப் பிரபுவே?” என்று ஆர்வமாகக் கேட்டேன். அந்தத் தலைமை லாமாவின் மஞ்சள் முகம், சிவந்தது. என்னுடைய நேரடிக் கேள்வியால் அவரை சங்கடப்படுத்திவிட்டேன் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக நான் வெட்கினேன். நேரடித்தன்மை அவசரத்தைப் போலே மிகவும் இழிவானது.

என்னுடைய எண்ணங்களை உணர்ந்தவரைப் போல, என்னை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்வகையில் லாமா சொன்னார், “ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் அஸ்தனமத்தின் போதும், வண்ணக்கழுத்தை உன் தோளில் அமர்த்திக் கொண்டு, உனக்குள்ளே இதைச் சொல் ’எல்லையில்லா துணிவு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இவ்வுலகில் உயிர் பிழைத்து சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரும் எல்லையற்ற துணிவின் நீர்நிலை. நான் யாரைத் தொடுகிறேனோ அவர்களிடத்தில் எல்லயற்ற துணிவைக் கடத்தும் அளவிற்கு பரிசுத்தம் அடைவேனாக”. இதைத் தொடர்ந்து செய்து வந்தால், ஒருநாள், உன்னுடைய இருதயம், மனம் மற்றும் ஆன்மா மொத்தமாக பரிசுத்தமாகிவிடும். அந்த நொடியில், பயமில்லாத, வெறுப்பில்லாத, சந்தேகம் இல்லாத, உனது ஆன்மாவின் சக்தி, வண்ணக்கழுத்துக்குள் ஊடுறுவி அவனுக்கு விடுதலை அளிக்கும். எவன் ஒருவன் மிகப் பெரிய அளவில் தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறானோ, அவனால் இந்த உலகத்திற்குள் மிகப்பெரிய ஆன்மசக்தியை செலுத்த முடியும். நான் சொல்வதை நாளுக்கு இரண்டு முறை செய். எங்கள் லாமாக்கள் அனைவரும் உனக்கு உதவி செய்வார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

ஒரு நொடி மெளனத்திற்குப் பின் லாமா தொடர்ந்தார், “வேறு யாரையும்விட மிருகங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான கோண்ட் உனக்குச் சொல்லியிருப்பார், நம்முடைய பயம் மற்றவர்களை பயமுறுத்தி, நம்மை தாக்கச் செய்கிறது. உன்னுடைய புறா ரொம்பவே பயந்து போய் இருக்கிறான். மொத்த வானமும் தன்னைத் தாக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு இலை கூட அவனைப் பயமுறுத்தாமல் கீழே விழுவதில்லை. அவன் உள்ளத்தைக் கலங்கடிக்காமல் ஒரு நிழல் கூட விழுவதில்லை. இருந்தாலும் அவனுடைய வேதனைக்கு அவனே காரணம்.

“நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், இங்கிருந்து கீழே வடமேற்கில் இருக்கும் கிராமம், வண்ணக்கழுத்து சந்திக்கும் அதே பிரச்சனையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிருகங்கள் வடக்கே வரும் காலம். மிரட்சியில் இருக்கும் கிராமவாசிகள், காட்டு மிருகங்களைக் கொல்வதற்காக பழைய துப்பாக்கிகளோடு சுற்றித் திரிகிறார்கள். இதோ, அந்த மிருகங்கள் இப்போது அவர்களைத் தாக்குகின்றன. ஆனால், இதற்கு முன்னர் அவை அப்படிச் செய்ததே இல்லை. காட்டெருமைகள் வந்து அவர்களின் பயிர்களை சாப்பிடும். சிறுத்தைகள் அவர்களுடைய ஆடுகளை திருடிக் கொண்டு போகும். இன்றைக்கு இங்கே வந்த செய்தி, ஒரு காட்டெருமை ஒருவனைக் கொன்றுவிட்டது என்பது. பிரார்த்தனையாலும் தியானத்தாலும் அவர்கள் மனத்திலிருந்து பயத்தை ஒழித்துவிடுங்கள் என்று நான் சொன்னாலும் அவர்கள் செய்யப்போவதில்லை.”

“ஏன்?” என்று கேட்டார் கோண்ட். “நான் அங்கே சென்று அந்த விலங்குகளை அவர்களிடமிருந்து விரட்ட எனக்கு அனுமதி தரமட்டீர்களா?”

“இப்போதைக்கு இல்லை” என்றார் லாமா. “விழித்திருக்கும் கணங்களில் நீ பயத்திலிருந்து  குணமடைந்திருந்தாலும், உன்னுடைய கனவுகள் அச்சத்தின் சாபத்துக்கு இன்னும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பிரார்த்தித்து தியானம் செய்வோம், உன்னுடைய ஆன்மாவில் இருக்கும் கசடுகள் எல்லாம் வெளியே போய்விடும். நீ குணமடைந்த பின்பும் கீழே இருக்கும் கிராமத்தார்கள் விலங்குகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், நீ போய் அவர்களுக்கு உதவி செய்யலாம்.”