பாவண்ணன்

கண்ணுக்குத் தெரியாத உலகம் – பாவண்ணன்

பாவண்ணன்

வளவனூர் ஏரியைச் சுற்றியும் நான்கு பக்கங்களிலும்  சின்னச்சின்ன கிராமங்கள். தெற்குக்கரைக்கு அப்பால் சாலையாம்பாளையம். அர்ப்பிசம்பாளையம், ஓட்டேரிப்பாளையம். தாதம்பாளையம். கிழக்குக்கரைக்கு அப்பால் சிறுவந்தாடு, மடுகரை. மேற்குக்கரைக்கு அப்பால் ராமையன்பாளையம். பஞ்சமாதேவி. சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களிலிருந்து படிக்க வருபவர்கள் வளவனூர் உயர்நிலைப்பள்ளிக்குத்தான் வரவேண்டும். தயிர், கீரை, கிழங்கு, விறகு, வெள்ளரிப்பழம், தேங்காய், மாம்பழம், உப்பு என எதை விற்பதாக இருந்தாலும் வளவனூருக்குத்தான் வரவேண்டும். அல்லது வளவனூரைத் தாண்டிச் செல்லவேண்டும். 

அந்தக் காலத்தில் நடப்பதற்கு யாரும் அஞ்சுவதே இல்லை. ஏரியில் தண்ணீர் நிறைந்திருந்தால் கரையோரமாக கதை பேசிக்கொண்டே சென்றுவிடுவார்கள். தண்ணீர் இல்லாத காலத்தில் ஏரிக்குள் இறங்கி குறுக்கே புகுந்து நடந்து செல்வார்கள்.

கரையில் நடந்து செல்வது இனிய அனுபவம். கரைநெடுக ஒருபக்கம் பனைமரங்கள் காணப்படும். மறுபக்கம் புளியமரங்களும் புங்கமரங்களும் நின்று நிழல் பரப்பியபடி இருக்கும். நடந்து நடந்து மழமழவென்று மாறிவிட்ட தரையில் காற்று வாங்கியபடியும் கதை பேசியபடியும் நடந்து செல்லும்போது பொழுது போவதே தெரியாது. இடையிடையில் கொடுக்காப்புளி மரங்களும் நாவல் மரங்களும் இருக்கும். காற்றில் விழுந்து சிதறிக்கிடக்கும் பழங்களை எடுத்துத் தின்றுவிட்டு ஏரியில் இறங்கி கையால் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டு தெம்பாக நடந்து செல்லலாம். கரையைத் தாண்டி கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் பச்சைப்பசேலென நெல்வயல்களும் கரும்பு வயல்களும் பரவியிருக்கும்.

கரையோரம் மரத்தடியில் சாய்ந்தபடி கூடைகளோடு உட்கார்ந்திருக்கும் பாட்டிகளின் வியாபாரம் நடந்துசெல்கிறவர்களுக்கு எளியதோர் விருந்து. வேகவைத்து எடுத்துவந்து, அறுத்து கூறுபோட்டு விற்கும் மரவள்ளிக்கிழங்கைத் தேடி வந்து வாங்குவார்கள். மோர்ப்பானையிலிருந்து குவளையில் மோரை எடுக்கும்போதே வெண்ணெய்மணம் வரும். மந்தாரை இலையில் இட்லிகளையும் தோசைகளையும் எண்ணிவைத்து விற்பார்கள் சிலர். அவர்கள் ஊற்றும் சாம்பார் மணத்துக்கும் காரச்சட்டினிக்கும் மயங்கி கூடுதலாக இரண்டு இட்லி வாங்கியுண்ணாதவர்களே இல்லை. பக்கத்திலேயே பனஞ்சாறு.  அடிநாக்கில் படிந்துவிடும் அதன் இனிப்பை அசைபோடுவது நடைப்பயணத்தில் முக்கியமான அனுபவம்.

எல்லாமே அரைநூற்றாண்டுக்கு முந்தைய காட்சிகள். இப்போதும் ஏரி இருக்கிறது. ஆயினும் வறண்டு வெடித்து கைவிடப்பட்ட மைதானத்தைப்போல உள்ளது. அன்று கண்ட மரங்கள் அனைத்தும் கரையோரங்களில் இன்றும் உள்ளன. ஆளரவமற்ற நடைபாதையில் முள்ளும் செடியும் படர்ந்து அடர்ந்திருக்கிறது. எங்கும் வயல்களே இல்லை. எல்லாமே மண்மேடுகள். அங்கங்கே எழுந்து நிற்கும் வீடுகள். புதர்கள். ஷேர் ஆட்டோக்களும் சிற்றுந்துகளும் ஊராரைச் சுமந்துகொண்டு வடக்குக்கும் தெற்குக்கும் ஓடுகின்றன.

குலதெய்வக் கோவிலில் தம்பி பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு படையல் வைத்தார்கள். பிறகு, அந்த வளாகத்திலேயே துணிக்கூடாரம் எழுப்பி மேசை போட்டு வந்தவர்கள் எல்லோருக்கும் விருந்து சாப்பாடு பரிமாறினார்கள். பொங்கல் கூடைகளோடு வீட்டுக்குத் திரும்பும்போது மாலை நான்கு மணியாகிவிட்டது. வீட்டுக்குள் ஒரே புழுக்கம். மீண்டும் மீண்டும் ஒரே பேச்சை பேசிப்பேசி சலித்துவிட்டது. ஒரு தேநீர் அருந்திய பிறகு “ஏரிக்கரை வரைக்கும் போய்ட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

அரசமரத்தடியில் ஆடுகள் மேய்ந்த குளம்புத்தடங்கள். உலர்ந்து உருண்டிருக்கும் நாவல்பழங்களென அங்கங்கே குவிந்திருக்கும் ஆட்டுப்புழுக்கைகள். மண்பாதையில் பாரமேற்றிச் சென்ற மாட்டுவண்டிகளின் சக்கரத்தடங்கள். எருக்கம்புதரில் சிக்கிக்கொண்டு காற்றில் கொடிபோல அசையும் கிழிந்த மஞ்சள் துணி. எல்லாவற்றையும் கடந்து ஏரியை அடைந்து சரிவில் அடர்ந்திருந்த வேலிக்காத்தான் செடிகளை விலக்கிக்கொண்டு மேட்டில் ஏறி வெடிப்புகளுடன் வெட்டவெளி மைதானம்போல விரிந்திருந்த ஏரியைப் பார்த்தபடி நின்றேன்.

வெப்பத்துக்கு இதமான காற்று தழுவிச் சென்றது. கொடி பிடித்தபடி  ஓடிவரும் சிறுவனைப்போல வெடித்த மணற்பரப்பிலிருந்து  மென்புழுதிப்படலத்தை ஒரு துணியைப்போல சுருட்டி இழுத்துக்கொண்டு வந்தது காற்று. இறகு விரித்து உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்துவரும் பறவையென அந்தப் புழுதி கரையை நோக்கி வந்தது. வந்த வேகத்திலேயே ஒரு நாட்டியக்காரியைப் போல சட்டென ஒரு கோணத்தில் திரும்பி மற்றொரு திசைநோக்கி நகர்ந்தது. சிற்சில கணங்களிலேயே அங்கிருந்தும் வளைந்து திரும்பி ஒரு நாடகப்பாத்திரத்தைப் போல வட்டமடித்துக்கொண்டு வந்தது. காற்றே இசை. காற்றே தாளம். காற்றே பாடல். காற்றே நடனம். அக்கணம் ஒரு காவியப்பொழுது.

“யார பாக்கணும் தம்பி?” என்ற குரல் கேட்ட பிறகுதான் மரத்தடியில் ஒரு பாட்டி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். ஒல்லியான உடல். தோல் சுருங்கிய முகமும் தேகமும். கழுத்தில் குன்றிமணி அளவுக்கு சின்னஞ்சிறிய சிவப்புமணி மாலை அவர் கழுத்தில் தொங்கியது. வற்றிய உடலை மூடிக்கொண்டிருந்தது ஒரு பச்சைப்புடவை. அவர் முன்னால் துணியால் மூடப்பட்ட கிழங்குக்கூடை அருகிலேயே ஒரு சின்ன அரிவாள்மனை.

”யாரயும் தேடி வரலை ஆயா. சும்மா ஏரிய பாக்கலாம்ன்னு வந்தன்”

முதற்கணம்தான் அடையாளம் தெரியவில்லையே தவிர, மறுகணமே அவர் யாரென்ற நினைவு வந்துவிட்டது. சின்ன வயதில் பல முறை அவரிடம் கிழங்கு வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து பைசாவுக்கு வள்ளிக்கிழங்கு வாங்கித் தின்று ஐந்து பைசாவுக்கு பனஞ்சாறு குடித்துவிட்டால் நெடுநேரத்துக்கு பசியே தெரியாது. பொழுது போவது தெரியாமல் ஆடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்வேன்.

அந்த ஆயாவுக்கு அருகில் சென்று ஒரு கல் மீது அமர்ந்தேன்.  “என்ன தெரியலயா ஆயா?. நான் இந்தத் தெருதான். டைலர் வீடு” என்றேன். தலையை வெறுமனே அசைத்துக்கொண்டார்.

“ஒங்கள எனக்கு நல்லா தெரியும் ஆயா. செல்லமுத்து அம்மாதான நீங்க?” என்றேன். என் சொற்கள் அவர் நெஞ்சைத் தொடவே இல்லை. தலையில் சற்றே நடுக்கம் தெரிந்தது. தொலைவிலிருந்து பார்க்கும்போது அது தெரியவில்லை. நெருக்கத்தில் தெளிவாக அந்த நடுக்கத்தைப் பார்க்க முடிந்தது.

“செல்லமுத்து அம்மாதான நீங்க?” என் முயற்சியைக் கைவிடாதவனாக குரலை உயர்த்தி நிறுத்தி நிதானமாக இரண்டுமூன்று முறை கேட்டேன். அவர் என் உதட்டசைவிலிருந்து எதையோ புரிந்துகொண்டதுபோல    இருந்தது. ஒருகணம் அவர் கண்கள் மின்னியதைப் பார்த்தேன்.

“செல்லமுத்துவா?” என்று கேட்டபோது பல்லில்லாத அவர் வாயில் புன்னகை படர்ந்தது. நானும் அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.

“அவன் அப்பவே சாலையாம்பாளையத்து பொண்ண கல்யாணம் பண்ணிகினு மெட்ராஸ்க்கு போயிட்டான். அங்கதான் ஆட்டோ ஓட்டறான். மூணு பசங்க அவனுக்கு. ரெண்டு பொண்ணு. ஒரு பையன். மூத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டான்” அவர் முகத்தில் பெருமை தெரிந்தது.

“நீங்களும் அவுங்க கூட போய் இருக்கலாமில்ல?” என்றேன். அதில் ஒரு சொல்லைக் கூட அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவர் போக்கில் விட்டுவிடுவோம் என நானும் அமைதியாக இருந்தேன்.

”போன மாசம்தான் அவளுக்கு வளைகாப்பு செஞ்சி ஊட்டுக்கு கூட்டியாந்தான். வளகாப்புக்கு என்ன வந்து கூட்டிகினு போறன்னுதான் சொன்னான். கடைசி நேரத்துல என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை. ஆளே வரலை”

அவர் சொல்வதையெல்லாம் காது கொடுத்து கேட்கிறேன் என்பதற்கு அடையாளமாக அடிக்கடி தலையசைத்தபடி அவரைப் பார்த்து புன்னகைத்தேன். அது போதுமாக இருந்தது அவருக்கு.

“யாராச்சும் கூட்டாளிய தேடி வந்தியா?” அவர் மறுபடியும் பழைய கேள்வியிலிருந்து தொடங்கினார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மையமாக அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.

“முந்தி மாதிரி இல்ல இப்ப. எல்லாமே மாறிட்டுது” என்றார். “ஒரு காலத்துல இந்த கரை மேல ஜனங்க ஜேஜேன்னு போய்கினும் வந்துகினும் இருப்பாங்க. இப்ப ஒரு காக்கா குருவி கூட வரமாட்டுது”

நான் அவர் முகத்தை ஆர்வத்துடன் கவனிப்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார்.

”இது சாதாரண ஏரி இல்ல. கடல் மாதிரி பொங்கி நொர தள்ளும். மழ காலத்துல அவ்ளோ தண்ணி இருக்கும். தென்பெண்ணையாத்திலேருந்து ஏரி வரைக்கும் தண்ணி ஓடியாறதுக்காகவே இங்கிலீஷ்காரன் வெட்டன வாய்க்கா இருந்திச்சி.”

அப்படியா என்பதுபோல தலையை மட்டும் அசைத்தேன்.

“கார்த்தி மாசம் பொறந்திட்டுதுன்னா முப்பதுநாளும் மழ நின்னு பெய்யும். ஜனங்களுக்கு கூழு குடிக்கக் கூட  வழி இல்லாம போயிடும்”

அப்படி ஒரு மழையை நானும் சின்ன வயதில் பார்த்திருந்ததால் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“இந்த ஏரிக்கு ஆறு மதகு. அந்த காலத்துல எங்க ஊட்டுக்காருதான் எல்லாத்துக்கும் பொறுப்பு. நேரம் பாத்து தெறக்கறது, மூடறது, கழனிங்களுக்கு போவற வாய்க்கால்ங்களுக்கு தண்ணிய தெறந்துவிடறதுலாம் அவருதான். ராத்திரியெல்லாம் கரைமேல சுத்திகினே இருப்பாரு.”

“நெலம் வச்சிருக்கவங்கள்லாம் அறுவட சமயத்துல படியளப்பாங்க.  நாங்க ரெண்டு பேரும் போய் சாக்குல கட்டி எடுத்துகினு தூக்கிட்டு வருவம்.”

“சிறுவந்தாட்டுக்குப் பக்கத்துலதான் எங்கூரு. கல்யாணத்துக்கு அப்பறம் அதோ அந்த கரை வழியாதான் நடந்தே வந்தோம். அவரு நல்லா பாடுவாரு. வழியெல்லாம் பாடிகினே வந்தாரு. எனக்கு வெக்கம்னா வெக்கம். வந்து ஊட்டுக்குள்ள பூந்தவ நாலு நாளைக்கி வெளியேவே வரலை”

ஆயா சில கணங்கள் பேசாமல் தலை குனிந்தபடி இருந்தார். கூடையின் மேல்தடுப்பில் வைத்திருந்த கிழங்கை உருட்டுவதும் கவிழ்ப்பதுமாக இருந்தார். பிறகு ஒரு பெருமூச்சோடு வாயை குதப்பிக்கொண்டு மறுபடியும் தொடங்கினார்.

“மூணு பொண்ணுங்க பொறந்ததுக்கு அப்பறமாதான் செல்லமுத்து பொறந்தான். அந்த வருஷத்துல என்னமோ புதுசா சட்டம் வந்துட்டுதுனு சொன்னாங்க. யாரும் படியளக்கலை. பஞ்சாயத்துல சம்பளம் வாங்கிக்கன்னு சொல்லிட்டாங்க. எந்த காலத்துலயாவது நெல்லும் பணமும் ஒன்னாவுமா, சொல்லு தம்பி? என்னமோ ஊருகாரங்க சொல்றாங்கன்னு ஊமையா இருந்துட்டம்”

“அந்த ஆத்தா அடிமேல அடிகொடுத்துட்டா எனக்கு. அந்த வருஷமும் நல்ல மழை. ஏரியில கடல்மாதிரி தண்ணி ஏறி வந்து கரைய தொட்டு வழியுது. ஊரக் காப்பாத்தணும்ன்னா மதகுங்கள தெறக்கறத தவிர வேற வழியில்லை. மதக தெறந்தா சுத்தி இருக்கிற நெலங்களுக்கு ஆபத்து.”

“கூடி கூடி பேசறாங்களே தவிர, யாரும் ஒரு முடிவ சொல்ல மாட்டறாங்க. இதோ வரேன் சாமின்னு சொல்லிட்டு எங்கூட்டுக்காரு எழுந்து ஓலத்தடுக்க எடுத்து தலையில கவுத்துகினு மதக தெறக்க போயிட்டாரு. மொதல் மதக தெறந்துட்டு ரெண்டாவது மதகுப் பக்கமா போவும்போது காத்துல ஒரு மரத்துலேருந்து ஒரு பெரிய கெள முரிஞ்சி  அவரு தலை மேல உழுந்து ஆள அமுக்கிடுச்சி. அங்கயே உயிரு போயிட்டுது. காலையில மழ விட்டப்பறம்தான் எல்லாரும் அவர தூக்கியாந்து ஊட்டுல போட்டாங்க.”

அதற்குப் பிறகு சில கணங்கள் அவர் பேசாமல் மெளனமாகவே இருந்தார். நானும் மெளனமாகவே இருந்தேன்.

“அப்பதான் இந்த கெழங்குக் கூடய எடுத்தேன். நாலு புள்ளைங்களயும் ஆளாக்கி நிறுத்தணும்னு ஒரு வைராக்கியத்துல இங்க வந்து உக்காந்தன். ஐயோ அவரு போய்ட்டாரேனு அழுதுகினு மூலையில உக்காந்திட்டிருந்தா யாரு எங்களுக்கு சோறு போடுவாங்க?”

“பொண்ணுங்களயெல்லாம் கவுரவமா கட்டிக் குடுத்தாச்சி. இங்கதான் பேட்டைல ஒருத்தி இருக்கா. இன்னொருத்தி கோலியனூருல இருக்கா. சின்ன பொண்ணு கெங்கராம்பாளையத்துல இருக்கா. நல்ல நாள் கெட்ட நாள்னா வந்து பாத்துட்டு போவாளுங்க. இங்க எதுக்கு இருக்கற, வந்து எங்ககூட இருந்துக்கோனு ஒரொருத்தியும் கூப்புடத்தான் செய்யறாளுங்க. எனக்குத்தான் இந்த ஏரிக்கரைய உட்டுட்டு போறதுக்கு மனசில்ல. அவளுங்க கண்ணுக்கு இது வெறும் கட்டாந்தரை. என் கண்ணுக்கு மட்டும் அன்னைக்கு பாத்த சமுத்திரம் மாதிரியே இருக்குது.”

பேச்சை நிறுத்திவிட்டு நாக்கை குதப்பியபடி இடுப்பில் செருகியிருந்த  சுருக்குப்பையை எடுத்துப் பிரித்து வெற்றிலை, பாக்கு, புகையிலையை எடுத்தார் ஆயா. முதலில் கண்ணாடித் துண்டுபோன்ற வெற்றிலையின் பச்சைக்காம்பை நகத்தால் கிள்ளி எறிந்தார். பிறகு தொடையில் வைத்து இருபக்கங்களையும் தேய்த்து உதறினார். கரண்டவத்திலிருந்து ஆட்காட்டி விரலால் சுண்ணாம்பைத் தொட்டெடுத்து வெற்றிலையில் தடவி புகையிலைக்காம்பையும் பாக்குத்துண்டையும் நடுவில் வைத்து மேலும் கீழுமாக மடித்து வாய்க்குள் வைத்து அதக்கிக்கொண்டார். வாய்க்குள் நிறைந்த முதல் சாற்றினை மெல்ல மெல்ல விழுங்கியபோது அவர் முகம் தன்னிச்சையாக மலர்வதைப் பார்த்தேன்.

”ஒரு நாள்ல முப்பது நாப்பது தரம் இந்தக் கரையில குறுக்கும் நெடுக்குமா  நடையா நடக்கற ஆளு அவரு. அவரு எந்தப் பக்கம் இருந்தாலும் சரி, தோல் செருப்பு போட்டுகினு சரக் சரக்னு அவர் நடக்கற சத்தம் எனக்கு கேட்டுகினே இருக்கும். அவரு பாடற சத்தம், இருமற சத்தம், கூப்புடற சத்தம், சிரிக்கிற சத்தம் எல்லாமே எனக்கு கேக்கும். என்னமோ பக்கத்துல ஒக்காந்து மூச்சு உடறமாதிரி கேக்கும்”

வெற்றிலைச்சாறு கடைவாயில் ஒழுக ஒழுக ஒருமாதிரி கோணலாக வாயை அண்ணாந்து வைத்தபடி ஒவ்வொரு சொல்லாகச் சொன்னார். அதற்குப் பிறகு சிறிது நேரம் பேச்சில்லை. கையை ஊன்றி இடுப்பைப் பின்பக்கமாக நகர்த்திச் சென்று சிறிது தொலைவில் சக்கையைத் துப்பிவிட்டு புடவை முந்தானையில் உதடுகளைத் துடைத்தபடி திரும்பி வந்து கூடைக்கு அருகில் உட்கார்ந்தார்.

லேசாக தொண்டையை கனைத்தபடி “அவரு உயிரோட இல்லைங்கறதால, அவரு சத்தம் இல்லைன்னு ஆயிடுமா, சொல்லு தம்பி. எனக்கு அன்னைக்கும்  கேட்டுது. இன்னைக்கும் கேட்டுகினுதான் இருக்குது. இங்க வந்து உக்காந்தா போதும், காத்துல அந்த சத்தம் அப்படியே மெதந்துட்டு வரும். வா வான்னு சொல்றாளுங்களே, நான் எப்படி இந்த சத்தத்த விட்டுட்டு போவமுடியும், நீயே சொல்லு தம்பி”

முள்ளும் புதரும் மண்டிய கரையோரங்களையும் வெடித்து வாய்பிளந்து வானத்தைப் பார்த்தபடி கட்டாந்தரையாகக் கிடக்கும் ஏரியையும் திரும்பிப் பார்த்தேன். ஏதோ சுட்ட மணம் எழுந்து வருவதுபோல இருந்தது. என்னிடம் இசையைச் சேர்த்த காற்று அவரிடம் அவர் கணவனின் காலடி ஓசையையும் குரலையும் சேர்த்திருக்கக்கூடாதா என்ன என்று தோன்றியது.

நான் ஆயாவின் பக்கம் திரும்பியபோது அவர் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவரைப் பார்த்து புன்னகைத்தபடி அவர் கைகளைப் பற்றியெடுத்து என் கைகளுக்குள் வைத்துக்கொண்டேன்.

மெதுவாக அவர் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக “நீங்க உக்காந்திருக்கறதுலாம் சரி ஆயா. இந்த கெழங்க எதுக்கு கொண்டுவந்து வச்சிருக்கீங்க? இங்க வந்து யாரு வாங்குவா ஒங்ககிட்ட? விக்கலைன்னா வீணாதான போவும்?” என்று அடுக்கிவைத்திருக்கும் கிழங்குகளை கையால் இரண்டுமூன்று தரம் சுட்டிக்காட்டி சத்தமாகக் கேட்டேன். அவருக்கு என் கேள்வியின் பொருள் புரிந்துவிட்டது. அவருடைய தலையசைப்பிலிருந்தே அதை நான் புரிந்துகொண்டேன்.

“யாராச்சும் வந்து வாங்குவாங்க” என்று பொக்கைவாயைத் திறந்து சொன்னார் ஆயா. “அதோ, ரயில்வே ஸ்டேஷனுக்கு வர ஆளுங்க யாராவது தேடி வந்து வாங்கினு போவாங்க. ஆல மரத்துப் பக்கமா சாராயம் குடிக்க வரவனுங்களும் வாங்குவானுங்க.”

நான் நம்பிக்கை வராதவனாக அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“யாருமே வாங்கலைன்னா கூட எனக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை. ரெண்டு கெழங்க எடுத்து நானே பொறிச்சி சாப்ட்டுடுவன். மிச்சத்த துண்டுதுண்டா கிள்ளி காக்கா குருவிங்களுக்கு போட்டுடுவன். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்து பாரேன்.  ஊருல இருக்கற காக்காய்ங்க எல்லாம் இங்க வந்து பள்ளிக்கூடத்து பசங்களாட்டம் சுத்தி நின்னுக்கும். அப்ப நீயே புரிஞ்சிக்குவ.”

என்னிடம் பேசிக்கொண்டே ஆயா புருவங்களுக்கு மேல் கையை கிடைமட்டமாக வைத்து கண்ணுக்கெட்டிய தொலைவுவரைக்கும் எதையோ வானத்தில் தேடினாள். அவள் பார்வை செல்லும் திசையிலெல்லாம் நானும் என் பார்வையைச் செலுத்தினேன்.  சில கணங்களுக்குப் பிறகு ஒரு மூலையிலிருந்து ஒரு காக்கைப்பட்டாளம் ஆயாவை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்தபோது என் உடல் சிலிர்த்தது.

தாத்தாவும் பேரனும் – பாவண்ணன் கட்டுரை

அன்று ஞாயிறு. காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். கம்பிவேலிக்கு அப்பால் இரண்டு ஆள் உயரத்துக்கு புதரென மண்டியிருந்த செடிகொடிகளின் மீது படர்ந்து நீண்டிருக்கும் பெயர் தெரியாத கொடியில் மேலும் கீழும் பூத்திருக்கும் ஊதாநிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் ஏதோ திருவிழாவுக்குக் கட்டிய சிறுவிளக்குத் தோரணமென அந்தப் பூவரிசை நீண்டிருந்தது.

புதரையொட்டி கன்னங்கரிய எருமையொன்று அப்போது வந்து நின்றது. இவ்வளவு காலையிலேயே மேய வந்துவிட்டதே என ஆச்சரியமாக இருந்தது. அது தரையில் பச்சைப்பசேலென வளர்ந்திருந்த புல்லை தேடித்தேடி மேய்ந்தது. வளைந்த கொம்பு. பெரிய கண்கள். கழுத்தில் மணி தொங்கியது. புல்லுக்காக தலையை அசைக்கும் போதெல்லாம் மணியோசை எழுந்தது. எங்கோ உரசிக்கொண்டதாலோ அல்லது ஏதோ கூர்மையான கழியோ, கிளையோ முதுகில் விழுந்து தோல் கிழிந்து கன்றியிருந்தது.

அப்போதுதான் ஒரு காக்கை பறந்துவந்து அதன் கொம்புகளுக்கிடையில் உட்கார்ந்தது. முதலில் எருமை அதைப் பொருட்படுத்தவில்லை. மெல்ல மெல்ல கொம்பிலிருந்து கழுத்தை நோக்கி நகர்ந்த காக்கை, பிறகு முதுகுத்தண்டின் மீது நடந்துசென்று முதுகிலிருந்த கையகல புண்ணுக்கு அருகில் சென்று நின்றது. ஒருகணம் எருமையின் முதுகில் குனிந்து அலகால் கொத்துவதும், மறுகணமே தலையைச் சாய்த்து நடைபாதையை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தது காக்கை. அதுவரை அமைதி காத்த எருமை, புண்ணில் காக்கையின் அலகு பட்டதும் வாலைச் சுழற்றி அது அமர்ந்திருந்த திசையில் விசிறியது. சரேலென பறந்து தப்பித்து விலகிய காக்கை காற்றிலேயே ஒரு சுற்று வட்டமடித்துவிட்டு மறுபடியும் எருமையின் முதுகில் வந்து உட்கார்ந்தது.

அக்கணத்தில் என்னைக் கடந்து சென்ற ஒரு சிறுவன், அதே காட்சியைச் சுட்டிக்காட்டி, தனக்கு அருகில் நடந்துவந்த பெரியவரிடம் “அங்க பாருங்க தாத்தா, அந்த காக்கா எருமைய வம்புக்கு இழுக்குது” என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் பக்கமாகத் திரும்பினேன்.

“அதனாலதான் வால சுத்திசுத்தி வெரட்டியடிக்குது” என்றார் தாத்தா. அதற்குள் அவரும் வேலிக்கருகில் நடைபெறும் எருமை காக்கை சீண்டலைப் பார்த்துவிட்டார்.

“என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜென்டில்மேன் தாத்தா” என்றான் சிறுவன்.

அதைக் கேட்டதும் பெஞ்சிலிருந்து எழுந்து நின்றுவிட்டேன். ஒரு கணம் என் உடல் சிலிர்த்தது. அப்படி மதிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அவனுக்குள் தெய்வம்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் குரலும் சொற்களும் மண்ணுக்குரியவையே அல்ல என்று நினைத்தபடி அக்கணமே அச்சிறுவனைப் பின்தொடர்ந்தேன். அவன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்லும் சொற்களையெல்லாம் கேட்கவேண்டும் என்பதுபோலவும் தோன்றியது. ஏதோ நடைப்பயிற்சி செய்பவன் என்னும் தோற்றம் காட்டியபடி அவர்கள் சொற்கள் காதில் விழும் அளவுக்கு நெருக்கமாகவே நடக்கத் தொடங்கினேன்.

“இடியே இடிஞ்சி உழுந்தாலும் எருமைகிட்ட அவசரமே இருக்காது தாத்தா. ஒரு நிமிஷம் கூட நிதானத்தை கைவிடாது. அடிச்சி பிடிச்சி ஓடாது. எல்லாமே தனக்குத்தான் கெடைக்கணும்னு அலையாது. பொறுமை. எப்பவுமே பொறுமை. அதான் அதுங் குணம். அதுக்காகத்தான் அது ஜென்டில்மேன்.”

அவன் ஆர்வத்தோடு அடுக்கிக்கொண்டே சென்றான்.

”எல்லா அனிமெல்ஸ்ங்களயும் விட்டுட்டு எருமையை மட்டும் ஜெண்டில்மேன்னு ஏன் சொல்ற?” என்று தாத்தா கேட்டார்.

“எத்தன கார்ட்டூன் சேனல், போகோலாம் பாக்கறேன். எல்லாம் எனக்குத் தெரியும் தாத்தா?” என்று வேகமாகச் சொன்னான் சிறுவன்.

“அதான், என்ன தெரியும் சொல்லு”

“சிங்கம் சண்டைபோடும். புலி சண்டை போடும். யானை சண்டை போடும். நரி, கரடி, மான் கூட சண்டை போடும். மாடுகள்ல எருது கூட சண்டைபோடும். எல்லாத்தயும் நான் பாத்திருக்கேன். ஆனா எருமை சண்டை போட்டு நான் எங்கயும் பார்த்ததே இல்ல. அதனாலதான் அது நூறு பர்செண்ட் ஜென்டில்மேன்”

“சண்ட போடாததெல்லாம் ஜென்டில்மேன் ஆயிடுமா?”

“ஆமாம். அது மட்டுமில்ல. அது ரொம்ப சாது. எப்பவும் அமைதியாவே இருக்கும். ஆர்ப்பாட்டம் பண்ணாது. யாருக்கும் கெடுதல் செய்யாது. முட்டாது. மொறைக்காது. பின்னாலயே விரட்டிகினு வராது. உண்மையான ஜென்டில்மேன்.”

பெரியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்தார். “நைஸ். நல்ல நல்ல பாய்ண்ட்லாம் சொல்றியே. விட்டா ஒரு கட்டுரையே எழுதிடுவ போலிருக்கே” என்றார்.

“நெஜமாவே ஒரு கட்டுரை ஸ்கூல்ல எழுதினேன் தாத்தா. ஒருநாள் மிஸ் உங்களுக்குப் பிடிச்ச டொமஸ்டிக் அனிமல பத்தி ஒரு கட்டுரை எழுதுங்கன்னு சொன்னாங்க. நான் அப்பதான் எருமைய பத்தி எழுதனேன். ஆனா மிஸ் எனக்கு குட் போடவே இல்ல. எல்லாரும் ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, கன்னுக்குட்டின்னு எழுதியிருந்தாங்க. அவுங்களுக்கெல்லாம் குட் போட்டாங்க. எனக்கு வெறும் ரைட் மார்க். அவ்ளோதான். என்னடா இப்படி எருமைய பத்தி எழுதியிருக்கியேன்னு சிரிச்சிட்டு போய்ட்டாங்க. அப்பா கூட அன்னைக்கு நான் சொன்னத கேட்டுட்டு என்ன பாத்து ஷேம் ஷேம்னு சொன்னாரு. அப்ப நீங்க ஊருல இருந்திங்க. இங்க வரல.”

“போனா போறாங்க உடு. அவுங்களுக்கெல்லாம் எருமைய பத்தியும் ஒன்னும் தெரியல. உன்ன பத்தியும் ஒன்னும் தெரியல. உனக்குத்தான் அதனுடைய அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சிருக்குது. நீ ரொம்ப ரொம்ப வெரிகுட் பாய். நானா இருந்தா உனக்கு டபுள் குட் போட்டிருப்பேன்.”

அச்சிறுவனுக்கு அருகில் சென்று அவன் விரல்களைப் பற்றிக்கொள்ள வேண்டும்போல இருந்தது. ஆயினும் என் குறுக்கீடு அவர்களுடைய இயல்பான எண்ண ஓட்டங்களைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சினேன். அவனைப் பார்த்தால் ஏழு அல்லது எட்டு வயதுதான் மதிப்பிடத் தோன்றியது. அவன் குரலில் இன்னும் மழலை கேட்டது.

ஒரு திருப்பத்தில் நாலைந்து மழைமரங்கள் அருகருகே நின்றிருந்தன. செக்கச்செவேலன மலர்ந்த மலர்களும் பச்சை இலைகளும் கிளைமுழுக்க அடர்ந்திருந்த கோலம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவற்றின் கிளைகளில் அங்கங்கே வெண்ணிறப் பூக்கள் பூத்துத் தொங்குவதுபோல கொக்குகள் அமர்ந்திருந்தன. இன்னொரு கூட்டம் கழுத்தை முன்னோக்கி நீட்டியபடி இறக்கையை விரித்து வானத்தில் வட்டமிட்டது.

தாத்தா அவனுக்கு அந்தக் கொக்குக்கூட்டத்தைக் காட்டினார். சிறுவன் அதைப் பார்த்துவிட்டு கைதட்டிக் குதித்தான்.

“தாத்தா, ஒய்ட் அண்ட் ஒய்ட் யூனிஃபார்ம்ல ஸ்கூல் பிள்ளைங்க ஓடி விளையாடற மாதிரி இருக்குது.”

கொக்குவட்டத்தில் பதிந்த கண்களை அவனால் விலக்கவே முடியவில்லை. பரவசத்தோடு “வெள்ளைத் தாள கட்டுகட்டா கிழிச்சி விசிறினா பறந்து போவுமே, அது மாதிரி இருக்குது” என்றான். உடனே அடுத்து “பட்டம் விடற போட்டியில எல்லாப் பட்டங்களும் வெள்ளையாவே பறந்தா எப்படி இருக்கும், அப்படி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவனுக்கு அதைப்பற்றி சொல்லி மாளவில்லை. மீண்டும் “முதுவுல வெள்ளையா துணிமூட்டைய தூக்கிவச்சிகினு வெளியூருக்கு போற கூட்டம் மாதிரி இருக்குது” என்றான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டு “ஆமா ஆமா” என்று தாத்தாவும் தலையசைத்தார்.

”இவ்ளோ கொக்குங்களும் இந்த மரத்துலயே இருக்குமா தாத்தா?”

“ஆமா”

“எல்லாமே இங்க கூடு கட்டியிருக்குமா?”

“ஆமா”

“கூட்டுல முட்டை போட்டு வச்சிருக்குமா?”

“ஆமா”

“கொக்கு மீனத்தான சாப்புடும்? எல்லா கொக்குங்களுக்கும் இந்த கொளத்துல மீன் இருக்குமா?”

“மீன மட்டும்தான் சாப்புடும்னு சொல்லமுடியாது. சின்னச்சின்ன பூச்சிகளயும் புழுக்களயும் கூட புடிச்சி சாப்புடும்.”

“கொக்குகளுக்கு கால்கள் ஏன் ஸ்கேல் மாதிரி நீளமா இருக்குது?”

“அதுவா, அது கொளத்தோரமா ஏரிகரையோரமா தண்ணியில, சேத்துல எல்லாம் நடக்கணுமில்லையா, அப்ப அதனுடைய கால் குட்டையா இருந்தா மாட்டிக்கும். நீளமா இருந்தாதான் நடக்கறதுக்கும் மீனயும் பூச்சியயும் தேடி கொத்தி தின்னறதுக்கும் வசதியா இருக்கும்.”

”குட்டி கொக்கு கூட மீன கொத்தி தின்னுமா தாத்தா?”

”குட்டிகளுக்கு அம்மா கொக்கே எடுத்தும் போயி ஊட்டிவிடும்”

“குருவி மாதிரியா?”

“ஆமா”

“நீங்க குட்டி கொக்குகள பாத்திருக்கியா தாத்தா?”

“ம்.”

“எப்ப?”

“உன்ன மாதிரி சின்ன பையனா இருந்த சமயத்துல”

அவன் ஒருகணம் சந்தேகம் படிந்த பார்வையோடு அவரை நோக்கினான்.

“நீங்க அப்ப எங்க இருந்திங்க?”

“நான் எங்க கிராமத்துல மூனாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு பெரிய ஏரி உண்டு. அங்க நெறய கொக்குகள்லாம் வரும். நாங்க சின்ன பிள்ளைகள்லாம் சேர்ந்து ஏரிக்கரையிலதான் விளையாடுவம். அந்த சமயத்துல பாத்திருக்கேன்.”

“ஐ. நல்ல கதைமாதிரி இருக்குது. சொல்லுங்க தாத்தா. குட்டி கொக்குகள்லாம் அப்ப அங்க வருமா?”

கொக்குக்கூட்டத்தின் மீது பதிந்திருந்த பார்வையை விலக்கி தாத்தாவின் கையைப் பற்றி கெஞ்சினான் அவன். தாத்தா புன்னகைத்தபடி “சொல்றேன். சொல்றேன். குதிக்காம ரோட்ட பாத்து நடந்துவா” என்றார். சிறுவன் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

“நாங்க பத்து பன்னெண்டு பேரு ஒரே வயசுக்காரங்களா இருந்தோம். எல்லாரும் ஒரே செட். ஒன்னாதான் பள்ளிக்கூடம் போவோம். ஒன்னாதான் விளையாடுவோம். ஒன்னாதான் ஏரியில குளிப்போம். ஒருநாள் கரையோரமா நாங்க குளிச்சிட்டிருந்த நேரத்துலதான் கொக்குகள் கூட்டமா வந்தத பாத்தம். வெள்ளைவெளேர்னு ராக்கெட் மாதிரி சுத்தி சுத்தி வட்டம் போட்டுதுங்க. மொதல்ல பெரிய வட்டம். அப்பறமா சின்ன வட்டம். மறுபடியும் பெரிய வட்டம். நாங்க எல்லாருமே கரையில வந்து நின்னுகிட்டு கைய தட்டி ஓன்னு சத்தம் போட்டம்.”

“அம்பது கொக்கு இருக்குமா?”

“நூறு கூட இருக்கும். அப்படியே ஏரோப்ளேன் எறங்கறமாதிரி ஒன்னொன்னும் சைங்னு கீழ தாழ்ந்து வந்து பாறைகள் மேல வந்து ஒக்காந்துதுங்க.”

“அதுல குட்டி கொக்குங்க இருந்ததா?”

”ம். ரெண்டு குட்டி கொக்குங்க”

“அதுங்களும் பறக்கறத பாத்தீங்களா?”

“ம். பக்கத்துல போய் பாக்கலாம்னு நாங்க அதுங்கிட்ட சத்தம் போட்டுகிட்டே ஓடினோம். கொக்குகள் எங்கள பாத்துட்டு பயத்துல எழுந்து பறந்து போய்டுச்சிங்க.”

“ஐயையோ, அப்பறம்?”

“ரொம்ப தூரம்லாம் போவலை. பக்கத்துலதான் ஒரு வயல் இருந்தது. கம்பு, தினை, எள்ளுலாம் வெளஞ்ச வயல். எல்லா கொக்குகளும் அங்க போய் எறங்கிடுச்சிங்க. நாங்களும் விடாம அதும் பின்னாலயே ஓடினோம். திடீர்னு ஒரு கொக்கு கூட கண்ணுக்கு தெரியவே இல்ல. திடீர்னு எல்லாமே மறஞ்சிட்டுதுங்க. நாங்க திகைச்சிபோய் அங்கயே நின்னு திருதிருனு முழிச்சிட்டிருந்தம். திடீர்னு அம்புவிட்ட மாதிரி எல்லா கொக்குகளும் வயலுக்குள்ளேர்ந்து மேல பறந்துபோச்சிங்க. நாங்க உடனே ஓன்னு சத்தம் போட்டோம். ரெண்டு மூனு வட்டம் மேலயே அடிச்சிட்டு மறுபடியும் எல்லா கொக்குகளும் கீழ எறங்கிச்சிங்க. கீழ எறங்கனதுமே கண்ணுக்குத் தெரியாம மறஞ்சிடும். மறுபடியும் சத்தம் போட்டா படபடன்னு றெக்கைய அடிச்சிகிட்டு பறந்து போவும்.”

“ஐ, நல்லா இருக்குதே இந்த விளையாட்டு.”

“கிட்ட போய் பாக்கணும்ங்கற ஆசையில நாங்க எல்லாருமே சத்தமில்லாம அடிமேல அடிவச்சி வயலுக்குள்ள தலைய தாழ்த்திகிட்டு போனோம். ஒரு கட்டத்துல கொக்கு உக்காந்திருக்கறதுலாம் நல்லா தெரிஞ்சிது. ஒரு அம்மா கொக்குகிட்ட ரெண்டு குட்டி கொக்கு. ரெண்டும் அம்மா கொக்கு கால சுத்திசுத்தி வந்திச்சிங்க. பாக்கறதுக்கு கோழி குஞ்சுங்க சுத்தி வருமே, அந்த மாதிரிதான் இருந்திச்சி.”

“ரொம்ப பக்கத்துல போயிட்டிங்களா?”

“ரொம்ப பக்கத்துல போனா பயந்து பறந்துடுமில்லயா? அதனால் கொஞ்சம் மறைவா தள்ளி உக்காந்துகினு அதுங்களயே பாத்து ரசிச்சிகிட்டு உக்காந்துட்டம். அந்த நேரம் பாத்து எனக்குப் பின்னால நின்னுட்டிருந்த ஒரு பையன் சட்டுனு ஒரு கல்ல எடுத்து ஒரு குட்டி கொக்க குறி பாத்து அடிச்சிட்டான்.”

“ஐயையோ, அப்பறம்?”

“குட்டிக்கு தலையில சரியான அடி. அப்படியே கீழ சுருண்டு உழுந்துட்டுது. உடனே எல்லா கொக்குங்கள்ளாம் பட்டுனு எழுந்து சத்தம் போட்டுகினே பறந்துடுச்சிங்க. அம்மா கொக்கும் இன்னொரு குட்டி கொக்கும் கூட பறந்துட்டுதுங்க. கீழ உழுந்த குட்டி கொக்கு பறந்து வரும்ன்னு அதுங்க ரொம்ப நேரம் சுத்திசுத்தி வந்ததுங்க. ஆனா அது எழுந்திருக்கவே இல்ல. இனிமே வராதுன்னு தெரிஞ்சதும் அதுங்க ரொம்ப தூரம் பறந்து போய்ட்டுதுங்க. நாங்க எல்லாரும் குட்டி கொக்கு கிட்ட ஓடிபோய் தூக்கி நிக்க வச்சம். தலை வளைஞ்சி கீழ சாஞ்சிட்டுது. எனக்கு கைகால்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது. குட்டி கொக்க மடியில போட்டு தட்டி கொடுத்து பார்த்தேன். தடவி கொடுத்து பார்த்தேன். துணிய தண்ணியில நனச்சி எடுத்தாந்து மூஞ்சியில தெளிச்சிகூட பார்த்தேன். மூச்சுபேச்சு இல்லாமயே கெடந்தது அது. ஓன்னு அழுதுட்டேன் நான்.”

“செத்துட்டுதா? ஐயோ பாவம்.”

“அன்னைலேர்ந்து எந்த பறவையா இருந்தாலும் சரி, தள்ளி நின்னு பாக்கறதோடு நிறுத்திக்கணும்ன்னு முடிவு செஞ்சிட்டேன். அதனுடைய உலகத்துக்குள்ள நாம் போகக்கூடாது.”

“ஏன் அந்த ஃப்ரண்ட் கல்லால அடிச்சாரு?”

“வேணும்ன்னு அடிக்கல. ஏதோ வேகத்துல விளையாட்டா அடிச்சிட்டான்.”

சிறுவனின் கவனம் மறுபடியும் கொக்குகள் மீது பதிந்தது. அவை வட்டமிட்டு பறப்பதைப் பார்த்தபோது அவன் தன்னையறியாமலேயே கைகளை இறகுகள்போல விரித்தான்.

“நமக்கும் பறக்கத் தெரிந்தா ரொம்ப நல்லா இருக்கும், இல்ல தாத்தா?”

“மனிதர்களும் ஒரு காலத்துல பறவையா பறந்து திரிஞ்சவங்கதான். இப்ப மாறிட்டாங்க”

“உண்மையாவா? குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு எங்க மிஸ் சொன்னாங்க.”

“அதுக்கு முன்னால பறவையா இருந்து, குரங்கா மாறி, அப்பறமா மனிதனா மாறிட்டான்.”

“அது ஏன் அப்படி? பறவையா இருக்க மனிதனுக்கு புடிக்கலையா?”

“இந்த கைகள் இருக்குதே, அதுதான் மொதல்ல றெக்கயா இருந்தது. உழைச்சி வேலை செய்யணும்ங்கறதுக்காக றெக்கை கையா மாறிட்டுது. உழைப்பால அவன் பணம் சேத்தான். நிலம் வாங்கனான். ஊடு கட்டனான். வேலைக்கு போயி பெரிய ஆளாய்ட்டான். பறவைகள் அப்படி இல்லையே. அதுங்களுக்கு கொத்தி தின்ன என்ன கெடைக்குதோ, அதுவே போதும். அதனால அது இன்னும் பறந்துகிட்டே இருக்குது.”

”குட்டி கொக்குகள்லாம் பறக்கறதுக்கு எப்படி கத்துக்கும் தாத்தா?”

“அம்மா கொக்கு சொல்லிக்கொடுக்கும்.”

“அதான் எப்படி சொல்லிக்கொடுக்கும்ன்னு கேக்கறேன்.”

“றெக்க முளைக்கிற வரைக்கும் குட்டி கொக்குக்கு அம்மா கொக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துகிட்டே இருக்கும். அது வளரவளர கொஞ்சம்கொஞ்சமா றெக்க வந்துடும். பசியும் அதிகமாயிடும். அம்மா கொக்கு கொண்டுவந்து கொடுக்கிற சாப்பாடு பத்தாது. அதுவா தேடி சாப்படவேண்டிய நிலைமை உண்டாய்டும். அப்ப அம்மா கொக்கு குட்டி கொக்குக்கு முன்னால றெக்கய அடிச்சி அடிச்சி காட்டும். பறந்து வா பறந்து வான்னு சொல்லும். மொதல்ல குட்டிக்கு உடம்பு நடுங்கும். மெதுவா றெக்கய விரிச்சி அடிச்சி காத்துல எம்பிஎம்பித் தாவும். ரெண்டு மூனு தரம் உழும். எழுந்திருக்கும். அப்பறம் தேடி போனாதான் சாப்பாடுன்னு புரிஞ்சிடும். சட்டுனு ஒரு நிமிஷத்துல காத்து மேல அதுக்கு ஒரு புடிமானம் வந்துடும். வானத்துல பறக்கற ருசி எப்படிப்பட்டதுன்னு அதும் மூளையில பதிஞ்சிடும். அதுக்கப்புறம் அதனால றெக்கையை மடிக்கமுடியாது.”

தாத்தா சொல்லிமுடிக்கும் வரை அவனும் ஒரு குட்டி கொக்குபோல கைகளை இறக்கைபோல மடித்தும் விரித்தும் பறக்கும் கனவுடன் நடந்துவந்தான்.

”இந்த கொக்குகளுக்கெல்லாம் இங்க மரத்துல கூடு இருக்குமா தாத்தா?” என்று உடனே அவன் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டான்.

“நிச்சயமா இருக்கும்.”

“எங்க இருக்குது தாத்தா, ஒன்னு கூட எனக்குத் தெரியலயே.”

“இரு காட்டறேன்” என்றபடி தாத்தா நின்றுவிட்டு அண்ணாந்து மரங்களில் கிளைகிளையாகத் தேடினார். சிறுவனும் கண்போன போக்கில் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி இருந்தான்.

அதற்குள் தாத்தா ஒரு கூட்டின் இருப்பிடத்தைக் கண்டுவிட்டிருந்தார். உற்சாகத்தோடு சிறுவனுக்கு அருகில் குனிந்து விரலை நீட்டி கூட்டைக் காட்டினார். அவன் கண்கள் மலர்ந்தன. “ஒரு பேஸ்கெட் மாதிரி இருக்குது தாத்தா” என்று சிரித்தான். அவன் கன்னங்களில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் அவர்.

“அது சரி தாத்தா, அது கொக்கு கூடுதான்னு எப்படி உறுதியா சொல்லமுடியும்? காக்கா கூட மரத்துலதான கூடு கட்டுது?” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினான். அவர் அவன் கன்னத்தில் மீண்டும் தட்டிக்கொடுத்தார்.

“நீ சொன்ன இல்ல, கூடு பேஸ்கெட் மாதிரி இருக்குதுன்னு. காக்கா கூடு சின்ன பேஸ்கெட் மாதிரி இருக்கும். கொக்கு கூடு பெரிய பேஸ்கெட் மாதிரி இருக்கும். அதான் வித்தியாசம்.”

”சரி சரி” என்று தலையசைத்தான் சிறுவன். குனிந்து துள்ளலோடு நடக்கத் தொடங்கியதுமே ”இப்ப கொக்கு கூட்டுல முட்டை இருக்குமா தாத்தா?” என்று கேள்வியைத் தொடங்கினான். “தெரியலயே ராஜா” என்று தாத்தா புன்னகையோடு உதட்டைப் பிதுக்கினார்.

அதற்குள் நாங்கள் வட்டப்பாதையை முழுமை செய்திருந்தோம். மீண்டும் அந்த ஊதாப்பூக்கள் பூத்திருக்கும் வேலி. சிமென்ட் பெஞ்ச். அந்த எருமை பொறுமையாக இன்னும் மேய்ந்துகொண்டிருந்தது.

“தாத்தா, நம்ம ஜென்டில்மேன் இன்னும் அங்கயே நின்னுட்டிருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சுட்டிக் காட்டினான் சிறுவன். ”அட, ஆமாம். நின்ன எடத்துலயே நிதானமா புல் சாப்படறாரு” என்றார் தாத்தா.

“ஒரே ஒரு வித்தியாசம் தாத்தா. அப்ப அதும் முதுகு மேல காக்கா உக்காந்திட்டிருந்தது. இப்ப ஒரு கொக்கு வந்து உக்காந்திருக்குது”

இருவரும் அதை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டினார்கள்.

“நாம செல் எடுத்தாந்திருந்தா இப்ப ஒரு போட்டோ எடுத்திருக்கலாம். என் ஃப்ரண்ட்ஸ்ங்களுக்குலாம் வாட்ஸப்ல அனுப்ப வசதியா இருந்திருக்கும்.”

“அடுத்த சண்டே வரும்போது எடுத்தாரலாம். எருமையும் கொக்கும் இங்கதான இருக்கும். அப்ப எடுத்துக்கலாம்”

“தாத்தா, ஒரு விஷயம் கவனிச்சிங்களா? கொக்குகூட எருமை முதுவுல என்னமோ அலகால கொத்திகிட்டே இருக்குது. ஆனா காக்கா கொத்தன சமயத்துல மட்டும் வால சொழட்டி சொழட்டி வெரட்டியடிச்சிதே அந்த எருமை. இப்ப ஒன்னுமே செய்யாம அமைதியா இருக்குது பாருங்க.”

“ரெண்டு கொத்தலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்குது.” என்று சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் தாத்தா.

“அப்படியா? என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலயே, என்ன வித்தியாசம்?”

“காக்கா எருமையுடைய புண்ணுல குத்திக்குத்தி ரணமாக்குது. புண்ணுல தெரியற சதய கொத்தி கொத்தி அது சாப்புடுது. அந்த வேதனையில காக்கைய விரட்டுது எருமை. ஆனா கொக்கு அப்படி இல்ல, எருமை தோல்ல ஒட்டியிருக்கும் உண்ணிகளயும் பூச்சிகளயும் கொத்தி சாப்புடுது. அது எருமையுடைய வேதனைய குறைக்குது. சுத்தப்படுத்துது. அதனால அமைதியா இருக்குது.”

“ஓ, அப்ப எருமையும் ஜென்டில்மேன். கொக்கும் ஜென்டில்மேன்.”

“ஆமா” என்று தலையசைத்தார் தாத்தா. “ஆனா இது சாதாரண கொக்கு இல்ல, மாடுமேய்ச்சான் கொக்கு.”

ஒரு புதுமையான பெயரைக் கேட்டதுபோல விழிவிரிய பெரியவரைப் பார்த்தபடி நின்றுவிட்டான் சிறுவன். “ரொம்ப தூரத்துலேர்ந்து எருமை முதுகுல கொக்க பாக்கறவங்களுக்கு கொக்குதான் மாடு மேய்ச்சிட்டு போறமாதிரி இருக்கும். அதனால அந்தப் பேரு” என்றார் தாத்தா.

“ரொம்ப பொருத்தமான பேர் தாத்தா.”

“பேசிட்டே நடந்ததுல ஒரு ரவுண்ட் முடிஞ்சதே தெரியல. இப்ப என்ன, வீட்டுக்குப் போவலாமா, ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாமா?”

கொஞ்சம் கூட காத்திருக்காமல் “ரெண்டாவது ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்று பதில் சொன்னான் சிறுவன். ”இன்னைக்கு நாலு, அஞ்சி ரவுண்ட் நடக்கலாம் தாத்தா” என்றபடி கையிலிருந்த விரல்களையெல்லாம் ஒவ்வொன்றாக பிரித்து விடுவித்தான்.

அவர்களுடைய முடிவை அறிந்து, அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ஒரே கணத்தில் என் மனம் மாறிவிட்டது. சிறுவனுடைய ஒவ்வொரு சொல்லும் எனக்குள் புகுந்து என்னென்னமோ செய்துவிட்டது. அவன் கன்னத்தைத் தொட்டு ஒருமுறை தட்டிக் கிள்ளவேண்டும் போல இருந்தது. மெதுவாக “எக்ஸ்க்யூஸ் மி” என்று அழைத்து அவர்களை நிறுத்தினேன். அந்த அழைப்பு தமக்கானதுதானா என்பதுபோல அவர்கள் இருவரும் சந்தேகத்தோடும் ஆச்சரியத்தோடும் திரும்பி என்னைப் பார்த்தார்கள்.

டால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை

நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லிவைத்தேன். ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.

அவருடைய சுயசரிதை தமிழில் வெளிவந்திருக்கிறது என்னும் உறுதியான தகவலே என்னுடைய தேடலின் வேகத்தை இன்னும் அதிகமாக்கியது. மற்றொரு நண்பர் வழியாக அந்தச் சுயசரிதையின் பெயர் ‘அரசியல் நினைவு அலைகள்’ என்பதும் அது அறுபதுகளில் தினமணி சுடரில் தொடராக வெளிவந்தது என்பதும் தெரியவந்தது. இன்னொரு நண்பர் அந்தப் புத்தகத்தை கோவையைச் சேர்ந்த மெர்க்குரி புத்தகநிலையம் வெளியிட்டதாக தன் நினைவிலிருந்து சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் புத்தகத்தை நெருங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. கடைசியில் சர்வோதயம் பேசுகிறது இதழின் ஆசிரியரான திரு.நடராஜன் காந்திய அருங்காட்சியக நூலகத்திலிருந்து அப்புத்தகத்தை எனக்காகத் தேடி எடுத்து அனுப்பிவைத்தார்.

ஒரே அமர்வில் அந்தச் சுயசரிதையைப் படித்துமுடித்தேன். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்த பிறகே ஆக்கூர் அனந்தாச்சாரி அந்தத் தொடரை எழுதியிருக்கிறார். உயிர் பிரிவதற்கு முன்னால் தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதிமுடித்துவிட வேண்டும் என்று பதற்றமுடன் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அவர் அஞ்சியபடியே விதி அவரை மரணத்தில் தள்ளிவிட்டது. தொடரில் எழுதிய பகுதிகள் நூல்வடிவம் பெறும் முன்பேயே அவர் மறைந்துவிட்டார்.

அந்த நூலின் வழியாக ஆக்கூர் அனந்தாச்சாரியார் மேலும் சில நூல்களை எழுதியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக டால்ஸ்டாய் சரிதம். அத்தகவல் எனக்கு ஆர்வமூட்டியது. மீண்டும் திரு.நடராஜன் அவர்களைத் தொடர்புகொண்டு அப்புத்தகத்தைப் பெற்று படித்துமுடித்தேன். திரு.வி.க முன்னுரையோடு அப்புத்தகம் 1934இல் வெளிவந்தது. டால்ஸ்டாய் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் இது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் கூட அந்தப் புத்தகம் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

வழக்கமாக பிறப்பு முதல் இறப்புவரை வரிசையாக வாழ்க்கை நிகழ்ச்சிகளை அடுக்கிச் சொல்லும் விதத்தில் டால்ஸ்டாய் வாழ்க்கையை ஆக்கூரார் எழுதவில்லை. மாறாக, டால்ஸ்டாய் இந்த உலகத்துக்கு ஏன் முக்கியமானவர் என்னும் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலாக தான் தெரிந்துவைத்திருக்கும் தகவல்களைத் தொகுத்து இந்த 92 பக்க நூலை அவர் எழுதியிருக்கிறார். அதுவே இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. காந்தியடிகளை ஈர்த்த மிகமுக்கியமான உலக ஆளுமை டால்ஸ்டாய். காந்திய நினைவுகளுடன் டால்ஸ்டாயை அணுகும்போது ஆக்கூரார் சில புதிய வெளிச்சங்களைக் கண்டறிகிறார். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, தகவல்களைத் தேடித் தொகுத்துவைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஆக்கூரார்.

இரண்டு வயதில் தாயையும் ஆறு வயதில் தந்தையையும் இழந்து அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தவர் டால்ஸ்டாய். கல்லூரியில் சட்டப்படிப்பைப் படித்துவிட்டு தேர்வெழுதாமலேயே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ராணுவத்தில் சேர்ந்தாலும், யுத்தகளத்தில் நிகழும் மரணங்களை நேரில் கண்டு மனம் சோர்ந்து, வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். நெப்போலியன் உருவாக்கிய போரினால் விளைந்த அழிவுகளையும் மரணங்களையும் பற்றி நேரடி அனுபவங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். அது ஒரே சமயத்தில் அவருக்கு பாராட்டுகளையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது.

அப்போது நாட்டில் நிலவி வந்த கல்விமுறையை டால்ஸ்டாய் வெறுத்தார். விளையாட்டுக்கும் படைப்பூக்கத்துக்கும் இடமில்லாத கல்விமுறையால் பயனில்லை என்று நீண்ட விளக்கங்களுடன் பல கட்டுரைகளை எழுதினார். பிறகு அவரே ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, அவரே ஆசிரியராகவும் இருந்து நடத்திக் காட்டினார். அந்தப் பள்ளியில் குழந்தைகள் புத்தகங்களையும் நோட்டுகளையும் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு நாளும் விளையாட்டுகளுடன்தான் பள்ளி தொடங்குகிறது. அதற்குப் பிறகு ஆசிரியரே எல்லோருக்கும் தேவையான புத்தகங்களோடு வகுப்பறைக்கு வந்து ஆளுக்கொன்றை எடுத்துக் கொடுப்பார். அப்புறம் பாடங்கள் கதையைப்போல சொல்லப்படும். விளையாட்டில் காட்டிய உற்சாகத்தைப் போலவே பிள்ளைகள் பாடத்திலும் உற்சாகத்தைச் செலுத்துவார்கள். தினமும் நான்கு பாடங்கள் நடக்கும். இறுதியாக புத்தகங்களையெல்லாம் ஆசிரியரே திரும்ப வாங்கிக்கொள்வார். மீண்டும் விளையாட்டு தொடங்கிவிடும். பிள்ளைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் கதைப்புத்தகங்களையும் டால்ஸ்டாயே எழுதினார். ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் வசித்த அவருடைய மாவட்டத்தில் பல இடையூறுகளுக்கிடையில் 21 பள்ளிகளை உருவாக்கி வெற்றிகரமான முறையில் நடத்திவந்தார் டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் பிள்ளைகளும் இதே பள்ளியில் படித்து, வளர்ந்தபின்பு இதே பள்ளியில் வேலை செய்தனர்.

ஒருமுறை டால்ஸ்டாய் வீட்டில் இல்லாத சமயத்தில் காவல்துறையினர் நுழைந்து சோதனையிட்டனர். கடப்பாரையினால் தரையை இடித்துத் தகர்த்தனர். பெட்டிப்பேழைகளை உடைத்தனர். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் கைப்பற்றிக் கிழித்து வீசினர். டால்ஸ்டாய் பற்றியும் அவருடைய பள்ளி பற்றியும் தவறான எண்ணத்தை பொதுமக்கள் மனத்தில் விதைக்கவேண்டும் என நினைத்து செயல்பட்டனர். இறுதியாக வீட்டிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றது காவல்துறை. வீட்டுக்குத் திரும்பிவந்த டால்ஸ்டாய் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து அரசருக்கு விரிவாக ஒரு கடிதமெழுதி, நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கப்போவதாக தெரிவித்தார். கடிதத்தைப் படித்த அரசர் உடனடியாக டால்ஸ்டாய்க்கு வருத்தம் தெரிவித்து பதில் எழுதி கவர்னர் வழியாக அனுப்பிவைத்தார். அந்தப் பதிலால் தற்காலிகமாக தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டார் டால்ஸ்டாய்.

அவர் மீது கொண்ட சினம் தணியாத காவல்துறை அவரை எப்படியாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து சிறையில் தள்ள தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது. ஒருநாள் டால்ஸ்டாய்க்குச் சொந்தமான பண்ணையைச் சேர்ந்த காளையொன்று ஒருவரை தன் கொம்பால் குத்திக் கொன்றுவிட்டது. டால்ஸ்டாயின் பராமரிப்புமுறை சரியில்லாததாலேயே இந்த மரணம் நிகழ்ந்தது என அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுத்தது காவல்துறை. ஏராளமான குறுக்கு விசாரணைகள். அவமதிப்புகள். நல்ல வேளையாக குற்றத்தை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

ஒரு மருத்துவரின் மகளான சோபியாவை 1862இல் டால்ஸ்டாய் மணந்துகொண்டார். அப்போது அவருக்கு 34 வயது. சோபியாவின் வயது 18. இருவருக்கும் பதின்மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிறுவயதிலேயே ஐந்து குழந்தைகள் மரணமடைந்துவிட, எட்டு பேர் மட்டுமே எஞ்சினர்.

ஒரு பிரபுவுக்குரிய வசதிகள் இருந்தாலும் டால்ஸ்டாய் எளிய வாழ்க்கையையே எப்போதும் விரும்பினார். அவர் மனம் எளிய உணவையும் எளிய உடைகளையும் மட்டுமே நாடியது. குடியானவர்களுடன் நெருங்கிப் பழகினார். பயணத்தின்போது மூன்றாவது வகுப்பிலேயே பயணம் செய்வது அவர் வழக்கம். தினமும் எட்டு மைல்கள் தொலைவு நடக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. இளமைக்காலத்தில் புலால் உண்பவராகவும் புகை பிடிப்பவராகவும் வேட்டையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருந்தாலும், பிற்காலத்தில் அப்பழக்கங்களை அவர் துறந்துவிட்டார். தொடக்கத்தில் தேவாலயத்துக்கே செல்வதில்லை என எடுத்த சபதத்தை விலக்கி தினமும் மாலை வேளையில் தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். உலகில் எவருமே தமக்கு பகைவர்கள் இருக்கக்கூடாது என அவர் மனம் விரும்பியது. ஆகவே, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு சண்டையிட்டு அன்றுமுதல் பேசாமல் இருந்த துர்கனேவ் என்னும் நண்பருக்கு கடிதம் எழுதி வரவழைத்து நட்பைப் புதுப்பித்துக்கொண்டார்.

ஒருநாள் அவருடைய பண்ணையில் ஒரு வேலைக்காரன் பொய் சொல்லி அவரிடம் அகப்பட்டுக்கொள்கிறான். பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் அவன் மீது சினம் கொள்கிறார். அவனுக்கு சாட்டையடி கொடுக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார். அவன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் மனம் மாறிவிடுகிறது. அவன் மீது இரக்கம் கொள்கிறார். உடனடியாக தண்டனையை நிறுத்துமாறு வேறொரு ஆளிடம் சொல்லி அனுப்புகிறார். ஆனால் அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. அதைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்துவிடும் டால்ஸ்டாய் அவனை வரவழைத்து அவனிடம் மன்னிப்பு கேட்கிறார். அவனுக்கு அரை பவுன் பரிசாக கொடுத்தனுப்புகிறார்.

தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் உயர்தட்டைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் ஒன்றாகத் திரட்டி பாடுபடத் தூண்டினார் டால்ஸ்டாய். அது நல்ல பலனைக் கொடுத்தது. எண்ணற்றோர் தத்தம் பகுதிகளில் தொழிலாளிகளுக்காக அல்லும்பகலும் உழைத்து அரசாங்கத்தின் சீற்றத்துக்கு ஆளாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிலர் நாடு கடத்தப்பட்டனர். சிலர் தூக்குதண்டனைக்கு ஆளானார்கள். அதன் பிறகே டால்ஸ்டாய் ஊட்டிய புத்துணர்ச்சி மக்களிடையில் தீயெனப் பரவியது. சீற்றத்தில் பொங்கியெழுந்த மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்குவதை அவர் விரும்பவில்லை. அவ்வழி தவறானது என்று வற்புறுத்தினார். அகிம்சை வழியில் சமதர்மக் கொள்கையைப் பரப்பவேண்டுமென அவர் விரும்பினார். கொல்லாமை, பிறர் மனை கயவாமை, ஆணையிடாமை, தீங்கு செய்யாமை, பகைவரிடம் வெறுப்பு கொள்ளாமை என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்க்கை நடத்தி வந்தார். 1880 வாக்கில் அவர் நாடறிந்த ஞானியாக உயர்ந்துவிட்டார்.

1881இல் பீட்டர்ஸ்பர்க்கில் ஜார் மன்னரின் தந்தையான இரண்டாவது அலெக்ஸாந்தரை யாரோ கொலை செய்துவிட்டனர். அது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யபட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும் டால்ஸ்டாய் ஜார் அரசருக்குக் கடிதமெழுதினார். கொலை செய்யும் வன்முறை வழியை தான் ஆதரிக்கவில்லை என்றும் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்டு அவர்கள் எண்ணிக்கையை குறைப்பதால் மட்டும் புரட்சியை அடக்கிவிடமுடியாது என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் டால்ஸ்டாய். ஆனால் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்ட பிறகே அக்கடிதத்துக்கு ஜார் மன்னர் பதில் எழுதினார்.

அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை டால்ஸ்டாய் முன்னெடுப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று அரசரிடம் கேட்டுக்கொண்டனர். அரசரோ டால்ஸ்டாயை எக்காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக் கூடாது என்றும் தேவையின்றி அவரைக் கைது செய்து அவரை பெரிய வீரராக உருமாற்றிவிடக்கூடாது என்றும் கறாரான குரலில் தெரிவித்தார்.

திடீரென நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். பட்டினியில் உயிர்துறந்தனர். உடனே ஏழைக்குடியானவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கும் பொருட்டு 246 உணவுக்கூடங்களை உருவாக்க டால்ஸ்டாய் ஏற்பாடு செய்தார். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருமே பஞ்ச நிவாரண வேலையில் ஈடுபட்டனர்.

1900 முதல் அடிக்கடி பொதுமக்கள் கைது செய்யப்படுவதும் காரணமின்றி தண்டிக்கப்படுவதும் நடைபெறத் தொடங்கியது. ‘இன்னும் அமைதியாக இருக்கவேண்டுமா?’ என்ற தலைப்பில் 1908இல் டால்ஸ்டாய் ஒரு விரிவான கட்டுரையை எழுதினார். அரசாங்கத்தின் கட்டளையை மீறி சில பத்திரிகைகள் இக்கட்டுரையை முழு அளவிலும் சில பத்திரிகைகள் அரைகுறையாகவும் வெளியிட்டன. பல பத்திரிகையாசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டிலுள்ள எந்த அமைப்பும் சங்கமும் பள்ளியும் நகரசபையும் டால்ஸ்டாயிடம் எவ்விதமான மரியாதையையும் காட்டக் கூடாது என்று அரசு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் டால்ஸ்டாய் மனம் தளராது தொடர்ச்சியாக அரசருக்கு சர்வாதிகாரத்தினாலும் கிறித்துவ வைதிகத்தாலும் நாட்டுக்கு ஒருபயனும் விளையாது என்பதை பலமுறை தம் கடிதங்கள் வழியாக தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

பாமர மக்கள் வாழுமிடத்தில் தாமும் வாழ விரும்பி, அத்தகைய இடம் எங்காகிலும் வாடகைக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் இறுதிக்காலத்தில் அலைந்தார். அது தொடர்பாக ரோஸ்டோலோன் என்னும் இடத்துக்குச் செல்ல 6.11.1910 அன்று ரயிலில் தன் மகளுடன் புறப்பட்டார். அப்போது அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. காய்ச்சல் காரணமாக உடல் அனலாகக் கொதித்தது. அவருடைய பெட்டியில் பயணம் செய்த ஒரு மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு, அவர் பயணத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று சொல்லி அடுத்து வந்த அஸ்டாபோவா என்னும் கிராமத்து நிலையத்தில் இறக்கிவிட்டார். ஸ்டேஷன் மாஸ்டர் உதவியுடன் மருத்துவர் வரவழைக்கப்பட்டார். டால்ஸ்டாயின் மகள் தன் தமையனுக்கு தந்தி அனுப்பினாள். அடுத்த நாள் காலையில் டால்ஸ்டாயின் மனைவியும் அவர் மகனும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாமலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

டால்ஸ்டாய் இறந்ததும் அவருடைய ஏராளமான சொத்தின் பெரும்பகுதி அவர் எழுதிவைத்த உயிலின்படி குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு வீடும் சில ஏக்கர் நிலங்களும் மட்டுமே எஞ்சின. ரஷ்யாவில் பொதுவுடைமைக் கிளர்ச்சி தொடங்கிய சமயத்தில் டால்ஸ்டாயின் வேலைக்காரர்கள் அவருடைய வீட்டையும் குடும்பத்தினரையும் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றிக் கொடுத்தனர். இன்று அவருடைய வீடு பொருட்காட்சியகமாக இருந்து வருகிறது. அவருடைய படிப்பறை அவர் விட்டுச்சென்ற நிலையிலேயே பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவருடைய புத்தக அடுக்கில் புத்தரின் வாழ்க்கை வரலாறும் காந்தியடிகள் பற்றி எழுதப்பட்ட ஒரு நூலும் இருக்கின்றன.

வைதிகக் கிறித்துவமதத்தின் விளைவுகளையும் தேவாலயத்தின் நடவடிக்கைகளையும் டால்ஸ்டாய் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விமர்சித்து கட்டுரைகள் எழுதிவந்தார். அதன் பொருட்டு, அவரைக் கொல்லப் போவதாக பல அச்சுறுத்துல் கடிதங்கள் வந்தபோது கூட டால்ஸ்டாய் தம் விமர்சனங்களை நிறுத்தவில்லை. இதனால் வெறுப்படைந்த தலைமை மதகுரு 22.02.1901 அன்று அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்கும் ஆணையைப் பிறப்பித்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் அவர் உலகத்தலைவர்கள் அனைவரோடும் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். இந்தியாவில் உள்ள சில முக்கிய சங்கங்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. சென்னை தாம்ஸன் அச்சுக்கூட்த்திலிருந்து வெளிவந்த ஆர்யா பத்திரிகைக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். அவர் எழுதிய ‘இந்தியனின் கடமை’ கட்டுரை துண்டுப்பிரசுரமாக அக்காலத்தில் வெளியிடப்பட்டு அக்காலத்தில் எண்ணற்றோரால் வாசிக்கப்பட்டது.

காந்தியடிகள் அப்போது தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். அப்போதே அவர் டால்ஸ்டாயின் செயல்பாடுகளை அறிந்துவைத்திருந்தார். கடிதங்கள் வழியாக இருவரும் உரையாடி கருத்துகளைப் பரிமாற்றிக்கொண்டனர். டால்ஸ்டாயின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் 1904இல் டர்பனுக்கு அருகில் பீனிக்ஸில் உருவாக்கிய ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர் சூட்டினார். டால்ஸ்டாய் இறக்கும் வரை காந்தியடிகள் அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போரின் புதுமையால் ஈர்க்கப்பட்டிருந்தார் டால்ஸ்டாய். உலக வரலாற்றிலேயே சிறந்ததொரு போர்முறை என சத்தியாகிரக வழிமுறையை அவர் மனம்திறந்து பாராட்டினார்.

ஆக்கூரார் எழுதியிருப்பது டால்ஸ்டாயின் சுயசரிதை மட்டுமல்ல. காந்தியப்பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மதிப்பிட்டு நமக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார் என்பதைக் கண்டு நிறுவும் ஒரு முயற்சி என்றே சொல்லவேண்டும். காந்தியடிகளின் மதிப்பில் உயர்ந்த ஒருவரை நம் மக்களுக்கு உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற அவருடைய வேட்கை வணக்கத்துக்குரியது. இன்றளவும் கூட டால்ஸ்டாயின் இலக்கியமுகம் மட்டுமே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுவரும் சூழலில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் முன்னேற்றம் சார்ந்த டால்ஸ்டாயின் போர்முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்கூர் அனந்தாச்சாரியாரின் முயற்சி போறுதலுக்குரியது.

கடைசி வரை – பாவண்ணன் சிறுகதை

க்ளாரிநெட்டை உறையிலிருந்து எடுத்து கைக்குட்டையால் நான் துடைக்கத் தொடங்கியதுமே “ஒரு டீ குடிச்சிட்டு தொடங்கலாமாண்ணே?” என்று கேட்டான் ட்ரம்பட் கோவிந்தன். மெளனமாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பி “நாலு பாட்டு போவட்டும்டா, அப்பறமா பாத்துக்கலாம்” என்று விரல்களால் சைகை காட்டினேன். உடனே அவனும் ட்ரம்பட்டை எடுத்துக்கொண்டான். உறையை மடித்து பெரிய ட்ரம் தனபாலிடம் இடது கையால் கொடுத்தான். நான் மடித்து வைத்திருந்த உறையை சின்ன ட்ரம் தேசிங்கு எடுத்துக்கொண்டு போனான்.

’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். சரியான புள்ளியில் ட்ரம்பட் வந்து சேர்ந்துகொண்டது. பல்லவியை முடித்து சரணத்தைத் தொடங்கும் வரை பதற்றம் ஒரு பாரமாக என்னை அழுத்திக்கொண்டிருந்தது. அதற்குப் பிறகே உடம்பும் மனசும் லேசானது. ஒருகணம் ரயில் ஜன்னலோரமாக முஸ்லிம் குல்லாயோடு எம்.ஜி.ஆர். முகம் சாய்த்து அழும் காட்சியை நினைத்துக்கொண்டேன். முதல் சரணத்தை நல்லபடியாக முடித்து மீண்டும் நாலு பேருக்கு நன்றியில் வந்து நிறுத்திவிட்டு கோவிந்தனைப் பார்த்தேன். அவன் புருவங்களை உயர்த்தி தலையசைத்ததும் நிம்மதியாக இருந்தது.

இரண்டாவது சரணத்தைத் தொடங்கிய பிறகுதான் வாசலுக்கு எதிரில் துணிக்கூரையின் கீழே பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த தாத்தாவின் உடலைப் பார்த்தேன். எழுபத்தைந்து வயதிருக்கும். தலைமாட்டில் அம்மன் விளக்கெரிந்தது. பக்கத்தில் வத்திக்கொத்துகள். பெரியவரின் தலைமுடி அடர்த்தி ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் நீளமான திருமண் கோடு. நடுவில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம். ஒரு பெரிய ரோஜா மாலை வயிறு வரைக்கும் நீண்டிருந்தது. நாலைந்து செவ்வரளி மாலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தன. வட்டமாக உட்கார்ந்திருந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். மேல்சட்டை போடாத ஒரு சின்னப் பையன் இறந்துபோனவரின் முகத்தையே பார்த்தபடி அவருடைய காலடியில் உட்கார்ந்திருந்தான். துணிக்கூரையைத் தாண்டி வேப்பமரத்தடியிலும் புங்கமரத்தடியிலும் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் உறவுக்காரர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். சின்னப்பிள்ளைகள் பெஞ்சுகளுக்கிடையில் புகுந்து குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

முதல் பாட்டைத் தொடர்ந்து நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தொடங்கினேன். புங்கமரத்தடியிலிருந்து இரண்டு பேர் எழுந்து வந்து தனபால் பக்கமாகச் சென்று ட்ரம்மைத் தொட்டபடி “நீங்க தவளகுப்பம்தான?” என்று கேட்டான். தனபால் தலையசைத்ததுமே ”அரியாங்குப்பத்துல ஒரு சாவு வூட்டுல ஒங்க வாசிப்ப நாங்க ஏற்கனவே கேட்டிருக்கம். நல்லா இருக்கும் ஒங்க வாசிப்பு” என்று சொன்னான். அப்போது தனபால் முகம் பூரித்துப்போவதை நான் பார்த்தேன். ”அண்ணன்தான் எங்க குரு” என்று அவன் என் பக்கமாக கை காட்டினான்.

பாட்டின் கடைசி வரியை வாசித்துக்கொண்டிருந்தபோது கூரையில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வை சாலையின் பக்கம் திரும்புவதைப் பார்த்து தன்னிச்சையாக என் பார்வையும் திரும்பிவிட்டது. ”என்ன பெத்த அப்பா” என்று ஓங்கிய குரலோடு அழுது கூச்சலிட்டபடி நெஞ்சில் அறைந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய ரோஜா மாலையோடு வழுக்கைத்தலையுள்ள ஒருவர் வந்தார். அவருக்குப் பக்கத்தில் நான்கு சிறுமிகள் ஒட்டிக்கொண்டு வந்தனர். “பெரிய பொண்ணு. பண்ருட்டிலேருந்து வருது” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. மூன்று தப்பட்டைக்காரர்களும் வேகமாகச் சென்று அவர்களை எதிர்கொண்டு தப்பட்டை அடித்தபடி அழைத்துவந்தார்கள்.

வந்த வேகத்தில் அந்தப் பெண் அவர் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். “எல்லாத்தயும் தொலச்சிட்டு ஊட்டோட வந்து கெடன்னு நூறுதரம் படிச்சி படிச்சி சொன்னனே. வரம்மா வரம்மான்னு சொல்லிட்டு வராமயே போயிட்டியேப்பா” என்று கதறினாள். விரிந்திருந்த அவர் கைவிரல்களை தன் கன்னத்தோடு வைத்து அழுத்திக்கொண்டாள். வழுக்கைத்தலைக்காரர் தன்னோடு கொண்டுவந்திருந்த மாலையை போட்டுவிட்டு முடிச்சிடப்பட்டிருந்த பெருவிரல்களைப் பார்த்தபடி சில கணங்கள் நின்றார். பெருமூச்சோடு வெளியே வந்து தப்பட்டைக்காரர்களுக்கு பணம் கொடுத்தார்.

சிறுமிகள் அம்மாவுக்கு அருகில் சென்று நின்றுகொண்டனர். “தாத்தாவ கூப்டுங்கடி. நீங்க கூப்ட்டா தாத்தா வந்துருவாருங்கடி” என்று அசிறுமிகளை தலைமாட்டை நோக்கிச் செலுத்தினாள். “ஒரு பத்து நாள் ஒன்ன பக்கத்துல ஒக்கார வச்சி ஒனக்கு சோறு போடற பாக்கியமே இல்லாம பண்ணிட்டியேப்பா. நான் என்னப்பா பாவம் செஞ்சன்?” என்று தேம்பித்தேம்பி அவள் அழுத நிலை என் மனத்தை அசைத்தது.

நான் என்னையறியாமல் “நெஞ்சடச்சி நின்னேனே” என்று சட்டென்று தொடங்கிவிட்டேன். வழக்கமான பாடல் வரிசையை மீறி எப்படியோ வந்துவிட்டது. அது புதிய பாட்டு. இன்னும் சரியாகப் பாடிப் பழகாத பாட்டு. கோவிந்தன் திணறித்திணறி பின்தொடர்ந்து வந்து சரியான புள்ளியில் சேர்ந்துகொண்டான். தனபாலுக்கும் தேசிங்குக்கும் அது திகைப்பளித்திருக்கவேண்டும். சட்டென்று எழுந்து நின்றுவிட்டார்கள். இரண்டு வரி கடந்து பாட்டு நிலைகொண்ட பிறகுதான் அவர்கள் அமைதியடைந்து மறுபடியும் உட்கார்ந்தனர். தேசிங்கு செல்லமாகச் சிணுங்கியபடி தலையில் அடித்துக்கொள்வதை நான் மட்டும் பார்த்தேன்.

“ஒரு சாவு வூட்டுல ஆயிரம் சொந்தக்காரங்க கதறுவாங்க. பொரளுவாங்க. அதயெல்லாம் நாம பாக்கவே கூடாது. நம்ம வேல எதுவோ அத மட்டும்தான் செய்யணும். வந்தமா, வாசிச்சமா, கூலிய வாங்கனமான்னு போயிகினே இருக்கணும்” என்று தேசிங்கு சுட்டிக் காட்டாத நாளே இல்லை. அவன் என்னைவிட வயதில் சின்னவன். ஆனால் அவனுடைய விவேகம் எனக்கு அறவே கிடையாது. உணர்ச்சிவசப்படாதவனாக ஒருநாளும் என்னால் இருக்க முடிந்ததில்லை.

பாட்டை முடித்த பிறகுதான் மனசுக்கு நிம்மதியாக இருந்தது. நடுவில் எங்காவது சொதப்பிவிடுவேனோ என்று ஒவ்வொரு கணமும் தடுமாறிக்கொண்டே இருந்தேன். அதற்காகவே பார்வையை எந்தப் பக்கமும் திருப்பாமல் ஊமத்தம்பூ மாதிரி விரிந்திருந்த குழல்வாயை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி சரணத்தை முடித்து மீண்டும் பல்லவியைத் தொடங்கியபிறகுதான் நம்பிக்கையும் தெம்பும் வந்தது.

நாங்கள் பாட்டை நிறுத்துவதற்காகவே காத்திருந்ததுபோல இரண்டு சிறுவர்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள். ஒவ்வொருவரிடமும் பிளாஸ்டிக் தம்ளரை நீட்டினான் ஒருவன். மற்றொருவன் கூஜாவிலிருந்த டீயை ஊற்றினான். அவன் தயக்கத்தோடு என்னைப் பார்த்து “இப்ப நீங்க பாடனது விழா படத்துல வர பாட்டுதாண்ணே?” என்று ஆர்வத்துடன் கேட்டான். சூடான மிடறு வாய்க்குள் இருந்த நிலையிலேயே நான் ஆமாம் என்பதுபோல தலையசைத்துவிட்டு புன்னகைத்தேன். “நான் அந்தப் படத்த ரெண்டு தரம் பாத்திருக்கேண்ணே” என்று சிரித்துக்கொண்டே சென்றான்.

நாங்கள் நிறுத்தியதுமே தப்பட்டைக் குழு தொடங்கிவிட்டது. “அவுங்க கொஞ்ச நேரம் அடிக்கட்டும். நீங்க அப்பிடி நெழல்ல உக்காருங்க” என்று எங்களைப் பார்த்து சொன்னபடி ஒரு பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் ஒருவர். காலர் இல்லாத ஜிப்பா போட்டிருந்தார். தோளில் ஒரு துண்டு இருந்தது. ”நல்லா இருக்குது தம்பி ஒங்க வாசிப்பு. என் பெரிய பையன்தான் ஒங்கள பத்தி சொன்னான். பத்துகண்ணு பக்கத்துல ஒரு சாவுல ஒங்க வாசிப்ப கேட்டிருப்பான்போல. அத நெனப்புல வச்சிகினு அவுங்ககிட்ட பேசி நெம்பர வாங்கி என்கிட்ட குடுத்து பேசுங்கன்னான்” என்றார். “ஒங்களாட்டம் பெரியவங்க ஆதரவு எங்கள மாதிரி குழுக்களுக்கு பெரிய பலம்யா” என்று நன்றியோடு தலையசைத்தேன்.

அடுத்தடுத்த தெருக்களில் இருந்த ஆண்களும் பெண்களும் கூட்டமாக வந்து மாலை போட்டுவிட்டு நிழல் இருக்கும் பக்கமாக ஒதுங்கி உட்கார்ந்தார்கள்.

பூக்கூடைகளையும் மூங்கில்களையும் சுமந்து வந்த வண்டி சாலையிலிருந்து பக்கவாட்டில் ஒதுங்கி ஓரமாக நின்றது. எல்லாவற்றையும் இறக்கி ஓரமாக ஒதுக்கிவிட்டு துணிக்கூரையின் பக்கம் வந்து யாரையோ தேடுவதுபோல நின்று பார்த்தார்கள். ”இங்க, இங்க, இந்தப் பக்கமா வாங்க” என்றபடி ஜிப்பாக்காரர் கையைத் தூக்கினார். அவர்கள் நெருங்கி வருவதற்குள் “டேய் ரவி, இவுங்களுக்கு டீ குடு” என்று கூஜா வைத்திருந்த சிறுவனை அழைத்தார். அவன் ஓடி வந்து அவர்களுக்கு தம்ளர்களை நிறைத்துக் கொடுத்தான்.

“மசமசன்னு நிக்காம வேலய இப்பவே ஆரம்பிச்சி மெதுவா செஞ்சிகினே இருங்கடா. நாலு மணிக்கு எடுக்கணும். சரியா?”

அவர்கள் தலையை அசைத்தபடியே டீ பருகினார்கள். ஜிப்பாக்காரர் மீண்டும் அவர்களிடம் “அதுக்காக அவசர அடியில ஏனோதானோன்னு வேலய முடிச்சிடக்கூடாது. மரக்காணத்துக்காரர் ஊட்டுல செஞ்சிங்களே பூப்பல்லக்கு. அந்த மாதிரி செய்யணும். புரியுதா?” என்று சொன்னார்.

“ஒரு கொறயும் இல்லாம செஞ்சிடலாம்ய்யா. உங்க பேச்சுக்கு மறுபேச்சு உண்டா?. பூ வெல கன்னாபின்னான்னு ஏறிட்டுது. செலவு கொஞ்சம் கூட ஆவும். அத நீங்க பாத்துக்கிட்டா போதும்….”

“ஒனக்கு மட்டும் தனியா வெல ஏறிடுச்சாடா?” என்று காதைக் குடைந்துகொண்டே சிரித்தார் அவர். பிறகு அவர்களிடம் “சரிசரி. சொல்லிட்டிங்க இல்ல, பார்த்துக்கலாம், போங்கடா. போயி நடக்கற வேலய பாருங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பிரதான சாலையிலிருந்து வீட்டை நோக்கிய சாலையில் வேகமாகத் திரும்பிய ஒரு புல்லட் வண்டி மெதுவாக வந்து தப்பட்டைக்காரர்களுக்கு அருகில் நின்றது. வண்டியிலிருந்து ஒருத்தி வேகமாக இறங்கி “ஐயோ அப்பா” என்று கூச்சலிட்டபடி ஓடி வந்தாள். ‘எப்ப வந்தாலும் வா கண்ணு வா கண்ணுன்னு வாய் நெறய சொல்லுவியேப்பா. இப்படி ஒரு சொல்லும் சொல்லாம படுத்துங் கெடக்கறியேப்பா” என்று கூவி அழுதபடி கால்களிடையில் முகத்தைப் புதைத்தாள்.

ஜிப்பாக்காரர் என்னிடம் “ரெண்டாவது பொண்ணு. பால்வாடி டீச்சர். காட்டுமன்னார் கோயில்ல குடும்பம்” என்றார்.

வண்டியை ஓரமாக நிழல் பார்த்து நிறுத்திவிட்டு வந்தவர் கொண்டு வந்த மாலையை அவர் உடல்மீது வைத்துவிட்டு ஒருகணம் கைகுவித்து வணங்கியபடி நின்றார். அவரோடு வந்த இரண்டு பிள்ளைகளும் தன் அம்மா அழுவதைப் பார்த்தபடி கலவரத்தோடு நின்றார்கள். அவர் வெளியே வந்து தப்பட்டைக்காரரிடம் ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார்.

”கத்தரியும் பச்சநெறம், என் கர்ணர் மக தங்கநெறம், காத்துபட்டு மங்காம, கவலப்பட்டு மங்கறனே என்ன பெத்த அப்பா”

ஒப்பாரிக்குரல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் உருக்கியது.

ஜிப்பாக்காரரின் பையில் கைபேசி மணியொலித்தது. அவர் அதை எடுத்து ஒருகணம் எண்ணைப் பார்த்துவிட்டு பேசினார். மறுமுனையில் சொல்வதையெல்லாம் கேட்டபிறகு “இந்த நேரத்துல வெறகு வெலயயும் எருமுட்ட வெலயயும் பாத்தா முடியுமா ராஜா? இவனே இந்த வெல விக்கறான்னா, இன்னொருத்தவன் மட்டும் கொறஞ்ச வெலைக்கு விப்பானா என்ன? ஒரு தரம் கொறச்சி கேளு. குடுத்தா சரி. இல்லனா கேக்கற பணத்த குடுத்துட்டு வாங்கிட்டு வா” என்றார். சில கணங்களுக்குப் பிறகு மீண்டும் “நேரா சுடுகாட்டுலயே போய் எறக்கிடு ராஜா. நால்ர மணிக்கு வந்துடும், தயாரா இருக்கணும்ன்னு சுடறவன்கிட்ட ஒரு வார்த்த சொல்லி வை” என்றார்.

தப்பட்டைக்காரர்கள் ஓசை நின்றது. நான் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நீங்க ஆரம்பிங்க என்றபடி கையசைத்துக்கொண்டே அவர்கள் நிழலில் ஒதுங்கினார்கள்.

நான் தனபாலைப் பார்த்து தலையசைத்ததும் பையில் வைத்திருந்த தாளக்குச்சிகளை எடுத்து பெரிய ட்ரம்மின் மீது மிக மெதுவாக தொட்டு இழுத்தான். சட்டென ஒரு குடம் உருண்ட சத்தம் கேட்டது. அதற்கு பதில் சொல்வதுபோல தேசிங்கு தன் சின்ன ட்ரம்மின் மீது இழுத்து இன்னொருவிதமான சத்தத்தை எழுப்பினான். கூடியிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் ஒருகணம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய கவனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்போல ஒவ்வொரு விதமாக ஓசையெழும்படி இருவரும் மாறிமாறி இழுத்தார்கள். மரப்படிக்கட்டுகளில் தடதடவென ஏறுவதுபோன்ற வினோதமான அந்தச் சத்தம் கேள்விபதில் போல இருந்தது. உச்சப்புள்ளியில் இரு சத்தங்களும் ஒன்றிணைய இருவரும் வழக்கமான வாசிப்பைத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு கால்மணி நேரம் ஓய்வே இல்லை. கவனம் சிதறாத வாசிப்பு.

அவர்கள் முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்ததுபோல நான் க்ளாரினெட்டை எடுத்து ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று தொடங்கினேன். “அண்ணனுக்கு மூடு வந்திடுச்சிடோய்” என்றபடி கோவிந்தன் ட்ரம்பட்டை எடுத்தான். கூரையில் உட்கார்ந்திருந்த பல பெரியவர்கள் எங்களைக் கவனிப்பதைப் பார்த்து எனக்குள் உண்மையாகவே உற்சாகம் ஊற்றெடுத்தது.

மூட்டைமுடிச்சுகளோடு சடங்குக்காரர் பின்தொடர இளைஞரொருவர் ஜிப்பாக்காரர் அருகில் வந்து “மளிகை சாமான்லாம் வந்துட்டுதுப்பா. எங்க எறக்கலாம்? சமையல எங்க வச்சிக்கறது? ரெண்டு மணிக்குள்ளயாவுது செஞ்சி எறக்கணும்ல. நெறய சின்ன பசங்க இருக்குது” என்று சொன்னார். “புத்துப்பட்டாரு ஊட்டு தோட்டத்துல எறக்கிடுப்பா. நான் ஏற்கனவே அவுங்ககிட்ட சொல்லிட்டேன். சும்மா சோறு, ரசம், அப்பளம் போதும். புரிதா?” என்றார் ஜிப்பாக்காரர். அவர் நகர்ந்ததுமே சடங்குக்காரர் முன்னால் வந்து நின்றார். “கொஞ்சம் இரு சிங்காரம். அவசரப்படாத. மூணாவது பொண்ணு இன்னும் வந்து சேரலையே. வந்ததுக்கு அப்புறம் யாரு கொள்ளி வைக்கறதுன்னு பேசி முடிவு செய்யலாம்” என்றார்.

நான் முத்துக்கு முத்தாக பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து ஆறு பாடல்கள் வாசித்தேன். இறுதியாக ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே பாட்டுக்கு வந்து சேர்ந்தேன். “அண்ணன் இங்க வந்துதான் நிறுத்துவாருன்னு நெனச்சேன், அதேமாதிரி செய்றாரு பாரு” என்று தனபாலைப் பார்த்துச் சிரித்தான் தேசிங்கு. வெயில் உச்சிக்கு ஏறிவிட்டதால் துணிக்கூரையின் நிழலிருக்கும் பக்கமாக இடம்மாறினோம்.

ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்களிடம் சாப்பாட்டுச் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். பிறகு என் பக்கமாக வந்து “நீங்களும் போய் வந்துடுங்கப்பா” என்றபடி பணம் கொடுத்தார். நான் அதை வாங்கி அப்படியே தனபாலிடம் கொடுத்து “போய்ட்டு சீக்கிரமா வாங்க” என்றேன். “ஏம்பா நீ போவலையா?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர். “இந்த நேரத்துல நான் சாப்படறதில்லைங்க” என்றேன் நான். அவர் உடனே “டேய் ரவி, இங்க வாடா” என்று நிழலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து “இந்தா, கூஜாவ எடுத்தும் போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா” என்று அனுப்பிவைத்தார்.

தொலைவில் பத்து பதினைந்து பேர் சேர்ந்து வருவதைப் பார்த்ததுமே ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்கள் பக்கமாகத் திரும்பி “தம்பிங்களா, இளைஞர் சங்கத்துக்காரனுங்க வரானுங்க போல. போங்க. போய் அழச்சிகினு வாங்க” என்றார். அவர்கள் அக்கணமே எழுந்து போனார்கள். தப்பட்டைகள் மட்டும் முழங்க மெளன ஊர்வலமாக வந்தது இளைஞர்கள் கூட்டம். எல்லோருமே அந்த வட்டாரத்து இளைஞர்கள். இடுப்புயரத்துக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான்குபேர் ஆளுக்கொரு பக்கம் பிடித்திருந்தனர். மெதுவாக அதை மறைந்துபோனவரின் காலடிகளில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் செல்லும் திசையில் ஜிப்பாக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக துணிக்கூரைக்கு அருகிலேயே ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. கதவைத் திறந்துகொண்டு “என்ன பெத்த தெய்வமே” என்று அலறி அழுதபடி ஓடி வந்து அவர் காலடியில் விழுந்தாள் ஒரு பெண். அவளைத் தொடர்ந்து அவளுடைய கணவர் இறங்கி வந்து மாலை போட்டு வணங்கினார். அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருக்கு அருகில் சென்று மிரட்சியோடு பார்த்தபடி நின்றார்கள்.

“மூனாவது பொண்ணு. இங்க இருக்கிற திருக்கனூருலேந்து வரதுக்கு கார் எதுக்கு சொல்லு? அற்பனுக்கு வாழ்வு வந்த அர்த்தராத்திரில கொட பிடிப்பானாம். அந்த மாதிரி கத இது” என்று எங்கோ பார்ப்பதுபோல என்னிடம் முணுமுணுத்தார் ஜிப்பாக்காரர்.

”மொத்தம் மூணு பொண்ணுங்களா அவருக்கு?”

“ஆமாமாம். மூணும் முத்துங்க” என்று கசந்த சிரிப்பை உதிர்த்தார். தொடர்ந்து “கட்டிம் போன நாள்லேருந்து ஒருநாள் கூட அவர நிம்மதியா இருக்க உட்டதில்ல” என்று பெருமூச்சு விட்டார்.

அவரே தொடரட்டும் என நான் அமைதியாக இருந்தேன். அதற்குள் சிறுவன் டீ வாங்கி வந்தான். டீத்தம்ளரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரநிழல் பக்கமாக இருவரும் சென்றோம். ஜிப்பாக்காரரின் மகன் துணிக்கூரையடியில் விளையாடிக்கொண்டிருந்த சின்னப்பிள்ளைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு மதிலோரமாக நிழலிருக்கும் பக்கமாகவே நடத்தி அழைத்துச் சென்றான்.

”ஆடு மேய்க்கறதுதான் தாத்தாவுக்கு தொழில். பத்து பாஞ்சி ஆடுங்களோட ஒரு காலத்துல சிங்கிரிகோயில்லேருந்து வந்தவருன்னு சொல்வாரு எங்க அப்பா. ஒரு கெட்ட பழக்கமில்ல. நேரம் காலமில்லாம ஆடுங்க பின்னாலயே ஓடுவாரு. பத்து ஆடு அம்பதாச்சி. அம்பது நூறாச்சி. குட்டி நல்லா பெரிசானதும் சந்தையில காசாக்கிடுவாரு. அப்பிடி சேத்த பணத்துலதான் இப்ப இருக்கற ஊட்ட கட்டனாரு.”

“அதுதான் இந்த ஊடா?” என்று ஆவலோடு கேட்டபடி அதை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.

”இது மட்டுமா செஞ்சாரு? மூணும் பொட்டபுள்ளயா பொறந்திடுச்சே நாள பின்ன ஒதவும்ன்னு ஊருக்கு வெளியே மூணு மன வாங்கி போட்டாரு. எல்லாரயுமே பள்ளிக்கூடத்துல சேத்து செலவு செஞ்சி படிக்க வச்சாரு. யாருக்கும் எந்த கொறயும் வைக்கலை. வளந்து ஆளானதும் நல்ல எடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சாரு. ஏற்கனவே சொன்னமாரி ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மனய எழுதிக் குடுத்துட்டாரு. இதுக்கு மேல ஒரு அப்பன்காரன் ஒரு பொண்ணுக்கு என்ன செய்யமுடியும், நீயே சொல்லு தம்பி?”

”எல்லாக் கடமைங்களயும்தான் முடிச்சிட்டாரே”

ஜிப்பாக்காரர் பெருமூச்சு விட்டார். ”இந்த உலகத்துலயே நன்றி இல்லாத உயிர் எது தெரிமா தம்பி,?” என்று கேட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து “மனுஷன்தான்” என்று அழுத்திச் சொன்னார்.

“ஒவ்வொரு பொண்ணுக்கும் அவர் செஞ்ச சீர் செனத்திக்கு கொறயே இல்ல. ஒவ்வொருத்திக்கும் புள்ள பொறக்கும்போது ஓடிஓடி நின்னு செஞ்சாரு. அந்த பொண்ணுங்களுக்கு இந்த ஊருல மண்ணு வேணாம்னு வித்துட்டு அவுங்க வாழற ஊருல போய் புதுசா ஒன்னு வாங்கிகிட்டாங்க. வித்ததோ வாங்கனதோ தப்பில்ல தம்பி. ஒரு பொண்ணு அஞ்சி லட்சத்துக்கு வித்துது. இன்னொரு பொண்ணு நாலு லட்சத்துக்கு வித்துது. கடைசி பொண்ணு ஆறு லட்சத்துக்கு வித்துது. இதுல தாத்தா செய்ய என்ன இருக்குது சொல்லுங்க. ஒரு கண்ணுல வெண்ணெ ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு நீ நடந்துட்டன்னு இவரு கூட எப்ப பாத்தாலும் ஒரே சண்ட. நீ மோசக்காரன், ஓரவஞ்சன செய்யறவன்னு ஒரே பேச்சு.”

கேட்கக்கேட்க எனக்கு கசப்பாக இருந்தது. பதில் பேசாமல் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவரு பொண்டாட்டிக்கு ஒடம்பு முடியலைன்னு ஒரு தரம் பெரியாஸ்பத்திரியில சேத்தாரு. வயசான ஆம்பளை ஒரு பொம்பள வார்டுல எப்படி தொணைக்கு இருக்க முடியும், சொல்லுங்க. அம்மா, ஒரு பத்து நாள் கூட இருந்து பாத்துக்குங்கம்மான்னு பொண்ணுங்ககிட்ட கெஞ்சனாரு. அவளக் கேளுன்னு இவ, இவளக் கேளுன்னு அவ, அப்படியே ஆளாளுக்கு சாக்குபோக்கு சொல்லி அனுப்பிட்டாங்க. கடசியில ஒரு ஆளும் வரலை. பாவம், அந்த அம்மா அனாதயா ஆஸ்பத்திரியிலயே செத்து போய்டுச்சி.”

”ஐயோ” அந்தச் சம்பவம் ஒருகணம் என் கண்முன்னால் நடப்பதுபோல இருந்தது.

“இது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும். அப்பவும் அவரு யாரயும் கொற சொல்லி நான் கேட்டதில்ல. வழக்கம்போல ஆடு மேய்ச்சிட்டு காலத்த ஓட்டனாரு. ஒருத்தி கூட எதுக்குப்பா தனியா இருக்கற, என் கூட வந்து இருன்னு கூப்புடலை. தடுமாறி தடுமாறி தாத்தாவும் காலத்த ஓட்டிட்டாரு.”

ஜிப்பாக்காரர் ஒருமுறை பெஞ்ச் மீது மாலைகளிடையில் கிடந்த தாத்தாவின் வற்றிய உடலைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

“ஒருநாள் சந்தையில அனாதயா சுத்திட்டிருந்த இந்த பையன கூடவே அழச்சிட்டு வந்து ஊட்டோட வச்சிகிட்டாரு. அன்னையிலேர்ந்து அவன்தான் அவரயும் பாத்துக்கறான். ஆடுங்களயும் பாத்துக்கறான்” என்று நிறுத்தினார். பிறகு தொடர்ந்து “என்ன கேட்டா, அவன்தான் ஞாயமா அவருக்கு கொள்ளி வைக்கணும். ஆனா கர்மம் புடிச்ச ஜனங்க உடுமா என்ன?” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் சிலைபோல கால்மாட்டில் உறைந்துபோய் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனை ஒருகணம் திரும்பிப் பார்த்தேன். அடிவயிறு கலங்கியது.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதும் தப்பட்டைக்காரர்கள் இசை தொடங்கியது. அதற்கப் பிறகு நாங்கள் தொடங்கினோம். ஆளுக்கு அரைமணி நேரம் இசைத்தபடி இருக்க, பொழுது போய்க்கொண்டே இருந்தது. சடங்குக்காரர் எந்தப் பரபரப்பும் இல்லாமல் சடங்குகள் அனைத்தையும் செய்துமுடித்தார். நேரம் கழியக்கழிய ஊரே கூடிவிட்டது. நிற்பதற்கே இடமில்லை.

இறுதியாக, தாத்தாவின் உடல் பல்லக்கில் ஏற்றப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என அனைவரும் குரல்கொடுத்தபடி பல்லக்கை தூக்கினார்கள். நீளவாக்கில் இருந்த மூங்கிலை ஒரே நேரத்தில் அனைவரும் தோளில் தாங்க பல்லக்கு நகரத் தொடங்கியது.

பல்லக்குக்கு முன்னால் தப்பட்டை வரிசை சென்றது. அவர்களைத் தொடர்ந்து நாங்கள் சென்றோம். நான் வீடு வரை உறவு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு ’மக்க கலங்குதுப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா’ பாட்டை வாசித்தேன்.

சில இளைஞர்கள் கையை உயர்த்தி, இடுப்பையசைத்து ஆடத் தொடங்கினார்கள். அவர்கள் என்னை ஏக்கமாகப் பார்ப்பதுபோல இருந்தது. உடனே அத்தகையவருக்காகவே நாங்கள் பயிற்சி செய்து வைத்திருந்த ’பொறப்பு எறப்பு மனுசன் நம்ம எல்லாருக்குமே இருக்கு’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். ஆட்டக்காரர்கள் உடனே துடிப்போடு ஆடத் தொடங்கிவிட்டார்கள். நான் மீண்டும் அவர்களுக்காகவே ’ஓபாவும் இங்கதான்டா ஒசாமாவும் இங்கதான்டா’ வாசிக்க ஆரம்பித்தேன்.

இளைஞர்கள் களைத்து மனநிறைவோடு ஒதுங்கி நடக்கத் தொடங்கியதும் நான் மறுபடியும் ’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசித்தேன். அதற்கடுத்து ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாட்டு. சுடுகாடு அடையும் வரை அந்த இரு பாடல்களை மட்டுமே மாற்றி மாற்றி இசைத்தேன்.

சுடுகாட்டுக்குள் நுழைந்ததுமே நாங்கள் வாசிப்பை நிறுத்திவிட்டு ஓரமாக ஒதுங்கினோம். காட்டுவாகை மரங்களும் நாவல்மரங்களும் எங்கெங்கும் நிறைந்திருந்தன. வாசலிலிருந்து அரிச்சந்திரன் மேடைக்கும் தகன மேடைக்கும் செல்லும் சிமென்ட் சாலைகளில் நாவல் பழங்கள் விழுந்து நசுங்கிய நீலக்கறைகள் படிந்திருந்தன.

க்ளாரினெட்டை உறையிலிட்டு மூடியபோது சங்கடமா நிறைவா என பிரித்தறிய முடியாத உணர்வு கவிந்திருந்தது. ட்ரம்பெட்டையும் ட்ரம்களையும் உறைகளில் போட்டு மூடி நாடாவால் இழுத்துக் கட்டினான் தனபால்.

இலுப்பை மரத்தடி நிழலில் அனைத்தையும் வைத்த பிறகு “கைகால் கழுவிகினு வரம். பாத்துக்குங்கண்ணே” என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் அருகிலிருந்த தண்ணீர்க்குழாயின் பக்கம் சென்றார்கள்.

நான் மரத்தில் சாய்ந்துகொள்ளச் சென்றபோதுதான் மறுபக்கத்தில் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். ஒருகணம் புரியவில்லை. அவன் சுடுகாடு வரைக்கும் எப்படி வந்தான் என்பதே எனக்குப் புரியவில்லை. வழியில் ஒரு இடத்தில் கூட அவனைப் பார்த்த நினைவே இல்லை. அவன் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

அவன் மீதிருந்த பார்வையை விலக்கி சடங்குகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். சடங்குகள் மட்டும் எப்போதுமே எனக்குப் புதிராகத் தோன்றுபவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் வேறுபட்டுக்கொண்டே இருப்பவை சடங்குகள். என்னால் அவற்றை மனத்தில் வரிசைப்படுத்தி இருத்திக்கொள்ளவே முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் புதுசாகத் தோன்றுவது அதனால்தான்.

அரிச்சந்திரனுக்கு படைத்த பிறகு பல்லக்கோடு தாத்தாவின் உடலைப் பிணைத்துக் கட்டியிருந்த கயிறு அறுக்கப்பட்டது. “நெறய பேரு வேணாம். அஞ்சாறு பேரு மட்டும் நில்லுங்க. மத்தவங்க நவுந்து போங்க” என்று சடங்குக்காரர் சொன்னதும் அனைவரும் விலகினார்கள். ”அவசரமில்லாம பொறுமையா கவனமா தூக்கிட்டு வாங்க” என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

ஆறு பேரும் பக்கத்துக்கு மூன்று பேராக நின்று தலைப்பகுதியையும் இடுப்புப்பகுதியையும் கால்பகுதியையும் தாங்கியபடி தாத்தாவின் உடலைத் தூக்கிக்கொண்டு சென்று தகனமேடையில் வைத்தார்கள்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே”

திடீரென எழுந்த ஓலத்தைக் கேட்டு எல்லோருமே திகைத்து ஒருகணம் நின்றார்கள். என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் மீண்டும் ”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே” என்று ஓலமெழுந்தது. நான் நின்றிருந்த இடத்திலிருந்தே அந்த ஓலம் எழுவதை சற்று தாமதமாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுவனே கைகளை நீட்டியும் தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டும் அந்த ஓலத்தை எழுப்பினான்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே.”

அந்தக் கதறலைக் கேட்கும்போதே நெஞ்சு கனத்தது. மற்றவர்களும் அவனைக் கவனித்துவிட்டார்கள். அதற்குள் அவன் அந்த ஓலத்தை நாலைந்து முறைகளுக்கும் மேல் எழுப்பிவிட்டான். மரத்தில் முட்டிக்கொண்டான். தலையிலும் நெஞ்சிலும் மாறிமாறி அடித்துக்கொண்டான்.

“எவ்ளோ வேல கெடக்குது. யாராவது அவன நிறுத்துங்களேம்பா” என்று யாரோ ஒருவர் சொல்ல, ஜிப்பாக்காரரும் மற்றவர்களும் தயக்கத்தோடு அவனை நோக்கி “இருடா தம்பி, டேய் தம்பி இருடா, சொன்ன பேச்ச கேளுடா” என்று சொன்னபடி நெருங்கினார்கள். யாராலும் நிறுத்தமுடியாதபடி ஓங்கி ஒலித்தது அவன் ஓலம்.

“யாரும் அவன தொடாதீங்க. ஆத்தா மேல சத்தியமா சொல்றேன். யாரும் தொடாதீங்க அவன” என்று கட்டளையிடும் குரலில் சொன்னபடி திடீரென எழுந்து நின்றார் சடங்குக்காரர். அவர் முகம் அதுவரை பார்த்த முகம்போலில்லை. வேறொருவர் போல நின்றிருந்தார். அனைவரும் திகைத்து விலகினார்கள். அங்கே என்ன நடக்கிறது என எதுவும் தெரியாத நிலையிலேயே அச்சிறுவன் மீண்டும் ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே என்று ஓலமிட்டான்.

எதிர்பாராத கணத்தில் சடங்குக்காரர் அவனை நோக்கி மெமெமே ம்மே என சிறுசிறு இடைவெளியுடன் அடங்கிய குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதுவரை தரையில் உட்கார்ந்திருந்த சிறுவனின் கண்கள் அந்த ஓலத்தைக் கேட்டு ஒளிபெற்றன. சட்டென எழுந்து நின்றான். அவன் மீது விழி பதிந்திருக்க, சடங்குக்காரர் தொடர்ந்து மெமெமே ம்மே என பதிலுக்கு ஓலமிட்டபடியே இருந்தார். அவன் அடிமேல் அடிவைத்து அந்த ஓலத்தின் திசையில் நடந்து வந்தான். அவன் தன்னை நெருங்கிவிட்ட பிறகே தன் ஓலத்தை முற்றிலும் நிறுத்தினார் சடங்குக்காரர்

அவன் சடங்குக்காரர் நிற்பதையே பார்க்கவில்லை. அவர் முகத்தைக்கூட பார்க்கவில்லை. அவன் கவனம் முழுக்க தாத்தாவின் முகத்தின் மீதே இருந்தது. மெல்ல குனிந்து அவர் முகத்தைத் தொட்டான். ம்ம்மே என்றான். கன்னத்தை வருடினான். காதுகளை வருடினான். மூடப்பட்ட கண்களையும் புருவங்களையும் வருடினான். மீண்டும் மீண்டும் ம்ம்மே ம்ம்மே என்று சொல்லிக்கொண்டே இருந்தான். குனிந்து அவர் காது மடல்களையும் கன்னத்தையும் பிடித்து முத்தமிட்டான். அவன் உடல் நடுங்கியது. பெருமூச்சில் மார்புக்கூடு ஏறி இறங்கியது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. கரகத்த குரலில் ம்மெ ம்மெ என்று விசும்பினான். மெதுவாக தாத்தாவின் தலையை கீழே வைத்துவிட்டு எழுந்து மரத்தடிக்குத் திரும்பிவந்து உட்கார்ந்தான்.

கண்கள் குளமாக அந்தக் காட்சியையே பார்த்தபடி நின்றிருந்தேன். அது அப்படியே என் நெஞ்சில் உறைந்துவிட்டது. சுற்றியிருந்தவர்கள் அனைவருமே சொல்லின்றி திகைப்பில் ஆழ்ந்திருந்தார்கள்.

“வாங்கப்பா வாங்க. இப்ப வாங்க” உடைந்த குரலில் அனைவரையும் அழைத்தார் சடங்குக்காரர். துண்டால் கண்களைத் துடைத்தபடி மேடைக்குச் சென்ற ஜிப்பாக்காரர் சடங்குக்காரரின் தோளில் ஒரு கணம் கைவைத்து தட்டிக்கொடுத்துவிட்டு கீழே இறங்கி வந்து ஒரு சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டார். சுற்றியிருந்த எருக்கம்புதர்களிடையில் கோழிகள் மேய்ந்தபடி இருக்க, தாழ்வான மரக்கிளையில் காக்கைகள் அமர்ந்திருந்தன.

சேற்றுப்படலத்தால் மூடப்பட்ட தகனக்கூட்டிலிருந்து புகையெழத் தொடங்கியது. எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள். “ஐயாமாருங்களே, எல்லாரும் திரும்பிப் பாக்காம போங்க, திரும்பிப் பாக்காம போங்க” என்று அறிவித்தான் பிணம் சுடும் மேடையில் இருந்தவன். அவன் கையில் நீண்ட கழியை வைத்திருந்தான்.

குழாயில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எல்லோரும் வெளியே சென்றார்கள். ஜிப்பாக்காரர் தன் மகனை அருகில் கூப்பிட்டு “அவன நம்ம ஊட்டுக்கு கூப்டும் போ” என்று மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிறுவனைச் சுட்டிக்காட்டி மெதுவான குரலில் சொன்னார். பிறகு எல்லாத் தொழிலாளிகளுக்கும் பணம் பிரித்துக்கொடுத்தார். “ஏம்பா பேண்ட் தம்பி, இங்க வா” என்று அழைத்து எங்களுக்கு உண்டான பணத்தைக் கொடுத்தார். ”இந்தா நீயும் வாங்கிக்க” என்றபடி சடங்குக்காரருக்கும் கொடுத்தார். பிணம் சுடுபவன் பக்கம் திரும்பி ”நீ என்னடா, இன்னைக்கே வாங்கிக்கறியா, நாளைக்கி வாங்கிக்கறியா?” என்று கேட்டார். “நாளைக்கே குடுங்க” என்று அவன் மேடையிலிருந்தபடியே பதில் சொன்னான்.

நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு விடைபெறுவதற்காக ஜிப்பாக்காரரிடம் வந்தோம். அவர்கள் உரையாடல் காதில் விழுந்ததால் நின்றேன்.

”அவனும் மேமேங்கறான். நீயும் மேமேங்கற. மனுஷங்க பேசிக்கற பாஷ மாதிரியே தெரியலையே. ஏதாச்சிம் பிரச்சன ஆயிடுமோன்னு கடசிவரைக்கும் நெனச்சி நடுங்கிட்டிருந்தேன் தெரிமா?. எல்லாத்தயும் ஒரு செக்கன்ட்ல தீத்து வச்சிட்ட நீ. என்ன மந்திரம்டா இது?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர்.

சடங்குக்காரர் “மந்திரம்லாம் ஒன்னுமில்லைங்க. அது ஆடுங்க பாஷ” என்றார். “என்ன சொல்ற நீ? ஆடுங்களுக்கு பாஷயா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் ஜிப்பாக்காரர்.

“நம்ம புள்ளைங்க காணாம போயிட்டா எங்கடா போயிட்ட கொழந்தன்னு கேக்கறமாதிரி ஆடுங்ககிட்ட கேக்கறதுக்குத்தான் அந்த பாஷ. அந்த பையனுக்கு அவர் செத்துட்டாருங்கறதே ஒறைக்கலை. எங்கயோ காணாம போயிட்டாருன்னு நெனச்சிட்டிருக்கான். அதான் அந்த ஓலம். நான் இங்க இருக்கேன்னு குட்டி பதில் சொல்றமாதிரி சொன்னதுதான் நான் போட்ட ஓலம்.”

”இதெல்லாம் ஒனக்கு எப்படி தெரியும்?” ஜிப்பாக்காரர் ஆச்சரியத்தோடு சடங்குக்காரரின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.

“எப்பவோ ஒரு தரம் எங்க ஆடு காணாம போன சமயத்துல தாத்தாதான் கண்டுபிடிச்சி குடுத்தாரு. அப்பதான் அவர் இந்த மாதிரி ஓலம் போட்டத பார்த்தன். அந்த பையன் ஓலத்த கேட்டதும் கடவுள் புண்ணியத்துல அது ஞாபகத்துல வந்துது.”

இருவருக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு சுடுகாட்டிலிருந்து வெளியே வந்தோம் நாங்கள். அந்த ஓலத்தை க்ளாரிநெட் வாசிப்பாக நிகழ்த்திப் பார்க்கத் தொடங்கியது என் மனம்.

வாசனை – பாவண்ணன் சிறுகதை

சந்தனநிறச் சட்டை. தீபாவளிக்கு எடுத்தது. அலமாரியிலிருந்து எடுத்து வைக்கும்போதே பாச்சா உருண்டையின் மணம் எழுந்தது. மேல்சட்டைப் பையின் மேல்விளிம்பில் எம்ப்ராய்டர் வேலையால் உருவாக்கப்பட்ட ஆங்கில எஸ் எழுத்து மட்டும் அடர்பழுப்பு நிறத்தில் இருந்தது. அடர் பழுப்பு நிறப் பேண்ட்டுக்குப் பொருத்தமான சட்டை.

சிவபாலன் அந்தச் சட்டையையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தயக்கத்துடன் திரும்பி வெள்ளைக்கோடும் நீலக்கோடும் கட்டங்களாகக் காட்சியளிக்கும் மற்றொரு சட்டையை எடுத்து சந்தனநிறச் சட்டைக்குப் பக்கத்தில் வைத்தான். இரண்டையும் மாறிமாறிப் பார்த்தான்.

”டேய் பாலா, சீக்கிரமா கெளம்பாம இன்னும் என்னடா செய்யற இங்க? வண்டி வேற வந்துட்டுது” என்றபடியே அறைக்குள் தம்பிதுரை வந்தான். வந்த வேகத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒரு நொடியில் களைந்து ஆணியில் மாட்டிவிட்டு அலமாரிக்குப் பக்கத்தில் வைத்திருந்த பெட்டியைத் திறந்து தன் புதுச்சட்டைகளை எடுத்து அணியத் தொடங்கினான்.

“இப்ப கெளம்பனாத்தான் நாம ஒரு மணிக்குள்ளயாவது போய் சேரமுடியும் பாலா. காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்குது? நூத்தி இருவது கிலோமீட்டர் போவணுமே” என்றபடி கண்ணாடியைப் பார்த்து தலைசீவிக் கொண்டான். “என்ன இது, ஏதோ ஒரு வாசன புதுசா இருக்குது ஒன் ரூம்ல” என்று கேட்டான்.

“வாசனயா, எனக்கு ஒன்னும் தெரியலயே. பாச்சா உண்ட வாசனயா இருக்கும். இப்பதான் அலமாரிய தெறந்தேன்” என்று பதில் சொன்னான் சிவபாலன். ”அந்த வாசன எனக்குத் தெரியாதா? இது என்னமோ புதுசா ஒரு வாசன” என்று மறுபடியும் மூச்சை இழுத்து வாசனையை நுகர்ந்தான்

“சரி, வாசன இருக்கட்டும், இந்த ரெண்டுல எந்த சட்டைய போட்டுக்கலாம்? கொஞ்சம் பாத்து சொல்லு” என்று கேட்டான் சிவபாலன்.

தம்பிதுரை திரும்பி கட்டில்மேல் வைக்கப்பட்டிருந்த இரண்டு சட்டைகளையும் ஒருகணம் பார்த்தான். மறுகணமே “அந்த கட்டம் போட்ட சட்டைய போட்டுக்கடா” என்றான்.

”அப்ப இது வேணாமா?” சிவபாலன் சந்தனநிறச் சட்டையைத் தொட்டுக் காட்டினான். அவன் குரலில் சற்றே ஏமாற்றம் தெரிந்தது. “ஒனக்கு இருவத்திநாலு மணி நேரமும் ஸ்கூல் வாத்தியாருங்கற நெனப்புதானா? பொண்ணுக்கு கல்யாணப்பொடவ எடுக்கப் போறம்டா. அத ஞாபகத்துல வச்சிக்க. பாத்தாவே பளிச்சினு தெரியறமாதிரி ஒரு மாப்ள எடுப்பா இருக்கவேணாமா?” என்றபடி சிவபாலனின் தோளைத் தட்டினான் தம்பிதுரை. பெட்டியிலிருந்து மணிபர்சை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முறை கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைப் படியவைத்தபடியே வெளியே சென்றான்.

சட்டையை அணிந்து பெல்பாட்டத்துக்குள் இன் செய்துகொண்டு பெல்ட் போட்டபடி தன்னைத்தானே ஒருமுறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் சிவபாலன். தலையணைக்குப் பக்கத்தில் இஸ்திரி போட்டு மடித்துவைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து கன்னத்தில் தெரிந்த பவுடர் பூச்சைத் துடைத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

திண்ணையில் முருகேசன் மாமாவும் தேவனாதன் பெரியப்பாவும் தினத்தந்தியைப் பிரித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். சொக்கலிங்கம் சித்தப்பாவும் நல்லசிவம் மாமாவும் கரும்புவெட்டுக்கு ஆள் கிடைக்காத குறையைப் பேசித் தணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குடித்துவிட்டு வைத்த டீத்தம்ளர்களை சித்தி பெண் ரேவதி எடுத்துக்கொண்டு சென்றாள். வண்டியைத் துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

“என்ன மச்சான். பேப்பர்ல என்ன போட்டிருக்கான். ஒரு எழுத்து உடாம படிச்சிட்டிருக்கிங்க?”

“இந்த ஜனதா ஆளுங்க கெடச்ச வாய்ப்ப கோட்ட உட்டுடுவானுங்க போல. சரியான மடப்பசங்க. நான் பெரிய ஆளு நீ பெரிய ஆளுனு இவனுங்களுக்குள்ளயே ஓயாத சண்ட. போற போக்குல அந்த பொம்பளதான் மறுபடியும் ஆட்சிக்கு வரும் போல்ருக்கு.”

“நாடா இருந்தாலும் சரி, ஊடா இருந்தாலும் சரி. ஒத்துமயா இருந்தாதான் வாழமுடியும் மச்சான். இல்லைன்னா காலம் முழுக்க கண்ண கசக்கிகினே இருக்கவேண்டிதுதான்.”

அம்மாவின் முகம் தெரிந்ததும் பேச்சு நின்றது. “இங்கயே சாமி கும்புட்டுட்டு கெளம்புவமா, இல்ல போற வழியில மாரியாத்தா கோயில்ல கும்புட்டுக்கலாமா?” என்று வாசக்கால் பக்கமாக நின்று திண்ணையில் இருந்தவர்களைப் பார்த்து பொதுவாகக் கேட்டாள். “இங்கயே கும்புட்டுக்கலாம்மா வள்ளி. கோயில் வாசல்ல எல்லாரும் ஒரு தரம் மறுபடியும் எறங்கி ஏறணும்ன்னா நேரம்தான் வீணாவும்” என்றார் தேவனாதன் பெரியப்பா.

வேப்பமரத்தின் நிழலில் சாக்கு விரித்து உட்கார்ந்து அரிவாள்மனையில் புளி ஆய்ந்துகொண்டிருந்தாள் ஆயா. பத்து பன்னிரண்டு கோழிகள் அவளைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன. “ஆயா, நீயும் வா ஆயா, வண்டிலதான போறம். அங்க வந்தா நீயும் பொண்ண பாத்தமாதிரி இருக்குமில்ல” என்றான் சிவபாலன்.

“அதான் போட்டாவுலயே பாத்தனே. அப்பறம் என்ன கண்ணு? நம்ம ஊட்டுக்கு வரப்போற பொண்ணுதான? அப்ப பாத்துக்கறன்” என்று வெற்றிலைக்கறையேறிய பற்களைக் காட்டிச் சிரித்தாள் ஆயா. ஆயாவுக்கு அருகில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த தாத்தா “நாயப்படி பாத்தா கல்யாணப்பொடவ எடுக்கற வேலையில ஒனக்கு பங்கே கெடயாது தெரியுமா? என்னமோ நம்ம செல்லப்புள்ளனு ஒன்ன கூப்ட்டும் போறாங்க” என்றார்.

“போ தாத்தா, ஒனக்கு ஒன்னுமே தெரில. இப்ப காலம் எவ்ளோ மாறி போச்சி”

“ஒங்க ஆயாவ தாலி கட்டற அன்னிக்குத்தான் நான் அந்த காலத்துல பாத்தன் தெரிமா. பொண்ணு பாக்கறதுக்கு கூட எங்கப்பா என்ன கூப்ட்டும் போவல. புடிக்குதா புடிக்கலயானு கூட கேக்கலை.”

“அதெல்லாம் அந்தக் காலம். இப்பலாம் பொண்ணும் புள்ளையும் சம்மதம்னு சொன்னாதான் கல்யாணம்.”

தம்பிதுரையும் வண்டி டிரைவரும் சேர்ந்து தோட்டத்திலிருந்து கீற்றுகளைக் கொண்டுவந்து வேனுக்குள் ஒன்றின்மீது ஒன்றாகப் பரப்பிவைத்து அதன்மீது சமுக்காளங்களை விரித்தார்கள். டிரைவர் ஒரு படிக்கட்டுப் பலகையை எடுத்து கால்வைத்து ஏறுவதற்கு வசதியாக வண்டியோடு ஒட்டியபடி வைத்தார்.

”ஆம்பளயாளுங்க எல்லாம் ஒவ்வொருத்தவங்களா வந்து ஏறுங்க. பொம்பளைங்க சாமி கும்புட்டுட்டு வருவாங்க. வாங்க.”

“அப்ப நாங்க?” என்று படிக்கட்டுக்கு அருகில் வந்து சின்னப் பிள்ளைகள் அனைவரும் நின்றார்கள்.

“நீங்க இல்ல செல்லங்களா. பெரியவங்க மட்டும்தான்” என்றான் தம்பிதுரை. அவர்கள் முகம் உடனே வாடிவிட்டன. வேகமாக அவர்கள் அருகில் சென்று “ஆத்துத் திருழாக்கு அன்னிக்கு போனமே, அதுமாதிரினு நெனச்சிட்டிங்களா?” என்று கேட்டான் சிவபாலன். அவர்கள் ஆமாம் என்பதுபோல தலையசைத்தார்கள்.

“வண்டி இப்ப திருழாவுக்கு போகல. கடைக்கு போவுது. இப்ப முழு பரீச்ச லீவு வருமில்லல. அப்ப நாம எல்லாம் சேந்து மெட்ராஸ்க்கு போவலாம். சரியா? அங்க பீச்சு, ஜூ, கலங்கரைவிளக்கம்லாம் இருக்குது”

“பெரிய பீச்சா? கடலூரு பீச்சவிட ரொம்ப பெரிசா இருக்குமா?”

“ஆமாம். ரொம்ப நீளமா இருக்கும்.”

”சரி, கடயிலேந்து வரும்போது எங்களுக்கு ஏதாச்சிம் வாங்கியாறிங்களா?”

“என்ன வேணும் ஒனக்கு? காராசேவு வாங்கியாரட்டுமா?”

“லட்டும் காராசேவும்.”

“அண்ணா, எனக்கு பூந்தி.”

சித்தப்பா, பெரியப்பா, மாமாக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

“நல்லா மெத்மெத்துனு செஞ்சி வச்சிட்டான் நம்ம தொர. ஆளு தெறமசாலிப்பா.”

“ஏ மச்சான். அவனும் வளந்து நிக்கறானில்ல. அவனுக்கும் ஒரு பொண்ண பாருங்க. சீக்கிரமா கல்யாணத்த பண்ணிடுவம்…”

“நானா பண்ணமாட்டறன்? சுத்துவழி சொந்தத்திலயே மூனு பொண்ணுங்க இருக்குது. இவன் யார காட்டனாலும் சரி. அப்பவே முடிச்சிடலாம். அவுங்க குடுக்க தயாராதான் இருக்கறாங்க. கைக்கு ஒரு வேல அமையட்டும், அப்பறம் பாக்கலாம்னு இவன்தான் இழுக்கறான்…”

“அவன் சொல்றதும் ஞாயம்தான? கல்யாணத்துக்கப்பறம் பொண்டாட்டிய வச்சிகினு ஒங்கிட்ட வந்து நூற குடு எரநூற குடுன்னு கேக்க முடியுமா? ஒருநாளு ரெண்டுநாளு குடுப்ப. அப்பறம் அலுப்புசலிப்புல எதயாவது சொல்வ? அதெல்லாம் தேவையா? சொந்த சம்பாத்தியம்னு ஒன்னு இருந்தா, அவனுக்கு நல்லதுதான?”

“நான் ஒன்னும் தப்பு சொல்லலியே. சர்க்காரு வேல கெடச்ச பிறகுதான் கல்யாணம் செஞ்சிக்குவன்னு ஒத்தக் கால்ல நிக்கறான் அவன். நான் என்ன செய்யமுடியும் சொல்லு.?”

“நம்ம சிவபாலனவிட தம்பிதொர பெரியவனில்ல?”

“ஆமா. ஒரு வருசம் மூத்தவன்.”

“அந்த ரயில்வே வேல என்னாச்சி? போன மாசம் இன்டர்வ்யூ இருக்குதுனு மெட்ராஸ்க்கு போய்வந்தான?”

“அந்த முடிவு இன்னும் தெரில. எல்லாம் கூடி வந்தா அடுத்த தைக்குள்ள முடிச்சிடலாம்.”

அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை அனைவரும் கதவைப் பூட்டிக்கொண்டு தாத்தாவிடமும் ஆயாவிடமும் சொல்லிக்கொண்டு வந்து வண்டியில் ஏறினார்கள்.

பிரித்திருந்த தடுப்புப்பலகையை நிமிர்த்தி கொண்டியில் பொருத்தி சங்கிலி போட்டுக் கட்டிவிட்டு படிக்கட்டுப் பலகையை எடுத்து வண்டிக்குள் ஓரமாக வைத்தான் சிவபாலன்.

“நானும் சித்தப்பாவும் முன்னால ஒக்காந்துக்கறம். நீ பின்னால எடம் பாத்து உக்காதுக்கடா.”

சிவபாலன் வேப்பரமத்தடிக்குச் சென்றான். ஆயா, தாத்தாவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். தடுப்புப்பலகையில் விளிம்பில் கால்வைத்து மேலே தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு தாவி வண்டிக்குள் ஏறினான். சின்னப்பிள்ளைகள் அனைவரும் அவனைப் பார்த்து கையசைத்தார்கள்.

“ஏன் பாலா, மதியச் சாப்பாடு எங்க?” என்று கேட்டார் முருகேசன் மாமா. எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தார்கள்.

”இன்னம் தெருவயே தாண்டல. அதுக்குள்ள மாமனுக்கு மதிய சாப்பாட்டு ஞாபகம் வந்துட்டுது.”

மீண்டும் சிரிப்பு அதிர்ந்தது.

“நடுவுல எதாவது காரம் சாரமா உண்டானு தெரிஞ்சிக்கறதுக்காக கேட்டன்?” மறுபடியும் தொடங்கினார் முருகேசன் மாமா. அதைக் கேட்டதும் சிவகாமி அத்தைக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ”ஒரு ஈசிபேசி இல்லாம பேசுது பாரு. ஆளுதான் கெடாவாட்டம் வளந்திருக்குது. புத்தி வளரலை” என்று முணுமுணுத்தாள். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து சாலையின் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

“ம். ஏரிபட்டுல பச்சமொளகா சட்டினியும் ஒரு பாட்டிலும் குடுக்கறாங்களாம். எறங்கிக்கலாமா?”

“நாம போற வேல என்ன, நீங்க பேசற பேச்சு என்ன? வேத்து மனுசங்க முன்னால நமக்கு ஒரு மரியாத வேணாமா? நேரம் காலம் தெரியாம எல்லா நேரத்துலயும் ஒரே பேச்சுதானா?”

”நான் வந்தா மரியாதயா இருக்காதுன்னா, என்ன இங்கயே எறக்கி உட்டுடுங்க.”

“ஐயய்ய. நீங்க ரெண்டு பேரும் இப்பிடி மாறிமாறி பேசிகிட்டா என்ன அர்த்தம்? பக்கத்துல பெரியவங்க சின்னவங்க இருக்காங்கங்கற நெனப்பு வேணாமா?” அம்மா பொதுவில் சத்தம் போட்டதும் பேச்சு நின்றது. சித்தி பேச்சை மாற்றும் விதமாக சிவபாலனைப் பார்த்து “பொண்ணு ஊட்டுக்காரங்களும் இந்நேரத்துக்கு கெளம்பியிருப்பாங்க இல்ல?” என்று கேட்டாள்.

“பன்னெண்டு மணிக்குலாம் பஸ் ஸ்டேன்ட்கிட்ட வந்துடுவம்ன்னு சொன்னாங்க சித்தி.”

“அப்ப, அவுங்க வந்து மொத ஆளா நிப்பாங்கன்னு சொல்லு.”

“நாமளும் போயிருக்கலாம். ஆனா நாம சொல்லிவச்ச வண்டி இப்பதான வந்தது? அதுல நம்ம தப்பு ஒன்னும் இல்லயே.”

சித்தி நிறுத்தியதும் கல்பனா அத்தை “ஏன் பாலா, இங்க சிறுவந்தாடுதான நமக்கு பக்கம். பட்டுப்பொடவய இங்கயே எடுத்திருக்கலாமே. எதுக்கு காஞ்சீபுரம் வரைக்கும் போவணும்?” என்று தொடங்கினாள். “போவ வர ஒரு நாளு ஆயிடுமே”

“காஞ்சிபுரம் பட்டுன்னு சொன்னா ஒரு தனி கெளரவம்தான அத்த?”

“எங்களுக்குலாம் சிறுவந்தாட்டுலதான் எடுத்தாங்க.”

கூட்டுரோடைத் தாண்டும்போது வண்டியை நிறுத்தி எல்லோரும் பூ வாங்கி வைத்துக்கொண்டார்கள். “பாப்பா, ரெண்டு ரூபாய்க்கி தனியா மல்லிப்பூ கட்டிக் குடும்மா” என்று கேட்டு தனியாக வாங்கி வைத்துக்கொண்டாள் அம்மா. “அந்த ரஞ்சினி புள்ளைக்கு குடுத்தா சந்தோஷப்படும் இல்ல. ரஞ்சினிதானடா அந்த புள்ள பேரு?” என்று சிவபாலனைப் பார்த்தாள். சிவபாலன் வெட்கத்தில் முகம்சிவக்க “ம்” என்றபடி குனிந்துகொண்டான்.

தம்பிதுரை பூவுக்கான பணத்தை எடுத்துக் கொடுத்ததும் வண்டி புறப்பட்டது.

“அண்ணி, பாலா கல்யாணம் முடிஞ்ச கையோட ஐயனாருக்கு ஒரு கெடாவ வெட்டி பொங்கல் வைக்கணும்ண்ணி.”

“குடும்பத்தோட போயி வச்சிட்டு வருவம். அதுக்கு முன்னால பத்திரிக அடிச்சி முடிச்சதும் மொத பத்திரிகய எடுத்தும் போயி அய்னாரு கால்ல வச்சி படச்சிட்டு வரணும்.”

“அப்ப, அதுக்கும் ஒரு கெடா வெட்டுவமா?”

“கெடாதான? வெட்டிடுவம்.”

“நீங்க கோயிலுக்கு போற தேதி என்னன்னு மட்டும் எங்கிட்ட சொல்லுங்க. கெடா செலவ நான் ஏத்துக்கறேன். பொங்கல் வைக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலயே வீட்டுல கொண்டாந்து எறக்கிடுவன். கண்டறகோட்ட கெடா. சும்மா சிங்கம்மாதிரி இருக்கும்.”

”ஆட்டுக்காரன்கிட்ட சும்மா ஒரு வாய்வார்த்தயா சொல்லி வைங்க நீங்க. சித்திரமாசத்துலதான் தேதி குறிச்சி குடுத்திருக்காரு ஐயரு. நடுவுல நாள் நெறயா கெடயாது. பத்திரிகய அடிச்சி முடிச்சதும் போய் வந்துடலாம்.”

“எதுக்கு அவ்ளோ நெருக்கடியில சித்திரயிலயே வச்சிட்டிங்க. கொஞ்சம் நாள் கழிச்சி வைகாசி ஆனியில வச்சிருக்கலாமே.”

“மண்டபம் கெடக்கணுமே. இந்த சித்திரையிலதான் மண்டபம் கெடைச்சிது. இல்லன்னா ஆவணிக்கு தள்ளி போயிடும். சித்திரைன்னா புள்ளைங்களுக்கு லீவ் நாளில்லயா? ஊட்டோடயே இருக்கலாம். நிம்மதியா நாலு எடம் போய் வரலாம். அக்கடானு ஊட்டுல படுத்துங்கெடக்கலாம். வேணும்ன்னா கோயில் கொளத்துக்கும் போய்வரலாம். எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்.”

“மாப்பளைக்கு பொண்ணு ஊட்டுல புல்லட்டு கில்லட்டுனு பெரிய வண்டி ஏதாச்சிம் குடுக்கறாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் கெடயாது. பாலா அதெல்லாம் எதயும் கேக்க கூடாதுனு கறாரா சொல்லிட்டான்.”

“அப்படியா பாலா? என்ன பாலா இது ? உலகம் தெரியாத பச்ச புள்ளயா இருக்கியேப்பா. ஊர்ல பத்து ரூபா சொந்தமா சம்பாதிக்க தெரியாதவனெல்லாம் கூட நான் பெரிய ரியல் எஸ்டேட், நான் பெரிய பைனாசியர்னு பொய்ய சொல்லிட்டு பொண்ணு ஊட்டுக் காரங்ககிட்டேர்ந்து புடுங்கிட்டு ஓடறானுங்க. நீ ஒரு ஸ்கூல் டீச்சர். சர்க்கார் வேல. மூச்சு இருக்கற காலம் வரைக்கும் உனக்கு சம்பளம் உண்டு. பென்ஷன் உண்டு. நீ எதயும் கேக்கலைன்னா எப்பிடி?”

சிவபாலனுக்கு எரிச்சலாக இருந்தது. ”வரதட்சணை வாங்கறதும் குற்றம், குடுக்கறதும் குற்றம். அப்படித்தான் சட்டம் சொல்லுது.”

”தட்சணயின்னா என்ன நினைச்சிட்ட நீ? அது ஒரு அன்பளிப்பு. ஒரு காணிக்கை. பொண்ண காலம் முழுக்க வச்சி காப்பாத்தற பையனுக்கு பொண்ணு ஊட்டுக்காரங்க மனப்பூர்வமா குடுக்கற அன்பளிப்பு.”

“அதெல்லாம் நாமாவே நினைச்சிக்கற கற்பனை. இப்ப அது சட்டப்படி குற்றம்.”

வண்டி வேகமாகச் சென்றது. திண்டிவனத்தைத் தாண்டியதும் ஒரு இடத்தில் மட்டும் தேநீர் அருந்துவதற்காக பத்து நிமிடம் நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு இறக்கை முளைத்ததுபோல பறந்து சென்றது வண்டி.

சிவபாலன் மனமெல்லாம் காஞ்சிபுரத்திலேயே இருந்தது. ரஞ்சனி வந்த வண்டி வந்திருக்குமா, காஞ்சிபுரத்தில் இறங்கியதும் அவளால் தன்னைக் கண்டுபிடித்துவிட முடியுமா, நெருங்கி வந்து பேசுவதற்கு நேரமிருக்குமா என்றெல்லாம் நினைவுகள் அலைபாய்ந்தன.

பெரியப்பாவிடமிருந்து தினத்தந்தியை வாங்கி நாலாக மடித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு செய்தியாக சத்தம் போட்டு படித்தாள் அத்தை.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டான்டில் இறங்கும்போது மணி ஒன்றரையாகிவிட்டது. பெண்வீட்டு வண்டி கண்பார்வையில் படும்படியே நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்திலேயே சென்று வண்டியை நிறுத்தவைத்தான் தம்பிதுரை. வேகமாக இறங்கி அங்கிருந்தவர்களையெல்லாம் பார்த்து கைகுவித்து வணங்கினான். ரஞ்சினியின் முகம் சிவபாலனைத் தேடியது.

“மாப்பள பின்னால வெயில் படாம உக்காந்து வராரு” தம்பிதுரையின் சொற்களைக் கேட்டு வெட்கம் கொண்டு வேகமாக நகர்ந்து சென்று தன் வண்டியோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் ரஞ்சினி.

வண்டியிலிருந்து கடைசியாக இறங்கி உடைகளை சீர்படுத்தியபடியே வந்த சிவபாலன் அவளை நிமிர்ந்து பார்க்கும் விதமாக தொண்டையைச் செருமினான். அவள் திரும்பி அவனைப் பார்த்து திகைத்து, பிறகு மகிழ்ந்து புன்னகைத்தாள். ஆகாய நீல நிறத்தில் அவள் புடவை உடுத்தியிருந்தாள். வெட்கத்தில் அவள் முகம் சிவப்பது அழகாக இருந்தது. அவன் அவசரமாக அவளைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்குது” என்று சொன்னான். அவள் சிறுநகை தேங்கிய உதடுகளுடன் வெட்கத்தில் முகம் சிவக்க “ம்?” என்று கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். “புடவை, புடவை” என்று பதில் சொன்னான். பிறகு அவனாகவே “எட்டு மணிக்கே வரேன்னு சொன்ன வண்டிக்காரு பத்து மணிக்குதான் வந்தாரு. அதான் லேட்” என்று சொன்னான். அதற்குள் “பாலா” என்ற தம்பிதுரையின் குரல் கேட்டு முன்னால் ஓடினான்.

“பாலா, வந்த வேலய மொதல்ல முடிக்கலாம்ன்னு அம்மா சொல்றாங்க. மாமா, பெரிப்பாவுக்கெல்லாம் பசிக்குதான். நான் ஆம்பள ஆளுங்களயெல்லாம் அழச்சிகிட்டு ஓட்டலுக்கு போறன். நீ பொம்பளயாளுங்கள அழச்சிகிட்டு பொடவைக்கடைக்குப் போ. சரியா?”

”அதோ அந்த மகாலட்சுமி பட்டு சென்டருக்கு போகலாம். ரஞ்சினி அக்காவுக்கு கூட அங்கதான் எடுத்தம். ரொம்ப ராசியான கட. வெலயும் நமக்கு கட்டுப்படியாவறமாதிரி இருக்கும்” ரஞ்சனியின் அப்பா சிவபாலனின் அம்மாவிடம் சொன்னார். ”அங்கயே போவலாம்ங்க” என்றார் அம்மா.

நடந்துபோகும்போதே அம்மா தன் பையிலிருந்த பூ பொட்டலத்தை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். “வச்சிக்க கண்ணு” என்றார். ரஞ்சினி பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த மல்லிகைச்சரத்தை தன் தலையில் அப்போதே சூடியபடி அம்மாவிடம் “தேங்க்ஸ்மா” என்றாள். அவள் விழிகள் சிவபாலனைத் தேடின. சிவபாலன் எல்லோருக்கும் கடைசி ஆளாக வந்துகொண்டிருந்தான். கடைக்குள் செல்வதற்கு முன்னால் அவள் அவனைப் பார்த்துவிட்டாள். அவனைப் பார்த்தபடி பின்னலை முன்பக்கமாக எடுத்து மீண்டும் பின்பக்கமாகப் போட்டாள். அதற்குள் அவன் அந்தப் பூச்சரத்தைப் பார்த்துவிட்டான். கண்களை ஒருகணம் மூடி புன்னகையுடன் தலையை மகிழ்ச்சியுடன் அசைத்தான். அதற்குப் பிறகு அவள் வேகமாக அடிவைத்து துள்ளலோடு சென்று பெண்கள் வரிசைக்குள் சேர்ந்துகொண்டாள்.

இருவர் பக்கமிருந்தும் பத்து பெண்கள் இருந்தார்கள். கடைச்சிப்பந்தி அவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

“சொல்லுங்கம்மா, என்ன நெறத்துல பாக்கறிங்க, என்ன வெலையில பாக்கறிங்க. நம்மகிட்ட ரெண்டாயிரத்துலேருந்து ஒரு லட்சம் வரைக்கும் வகைவகையா புடவைங்க இருக்குது.”

அடுக்கிலிருந்து சில புடவைகளை எடுத்து மேசைமீது வைத்தார் சிப்பந்தி. ஒவ்வொரு புடவையின் நிறமும் சரிகைகளும் பளிச்சென்றிருந்தன.

அம்மா திரும்பி “கண்ணு, இங்க வாம்மா” என்று ரஞ்சினியை அழைத்தார். ரஞ்சினி திகைத்து நாக்கைக் கடித்தபடி அம்மாவின் அருகில் நின்றாள். “இதான் பொண்ணு. எங்க ஊட்டுக்கு வரப்போற பொண்ணு. அதுக்கு புடிச்ச நெறத்துல, புடிச்ச டிசைன்ல அவசரமில்லாம நிதானமா காட்டுங்க.”

“சரிம்மா, ரேட்டு….?”

“ஏழாயிரம் எட்டாயிரம் ஆனாலும் பரவாயில்ல. பொண்ணுக்கு புடிச்சிருக்கணும். அதான் முக்கியம்” அம்மா தொடர்ந்து ரஞ்சினியிடம் “நீ அவசரமில்லாம பாத்து சொல்லு கண்ணு” என்றபடி அவள் தோளைத் தொட்டு அழுத்தினார். பக்கவாட்டில் திரும்புவதுபோல திரும்பிய ரஞ்சினி சிவபாலனைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர்க்கோடுகள் தெரிந்தன.

அதற்குள் அத்தைகள் “அண்ணி” என்று அவசரமாக அம்மாவைத் தடுக்க முயற்சி செய்தார்கள். ”அந்தக் காலத்துல அறநூறு எழுநூறு ரூபாய்லதான் எங்களுக்கு பொடவ எடுத்துக் குடுத்தாங்க” என்று முணுமுணுத்தார்கள். சித்தியும் “என்னக்கா இப்பிடி ஒரேடியா எட்டாயிரம்னு சொல்லிட்டிங்க?” என்று காதோரமாக வந்து சொன்னாள். நாக்கைத் தட்டி “த்ச்” என்ற ஒரே சத்தத்தால் அவர்களை அமைதிப்படுத்தினார் அம்மா. அடங்கிய குரலில் “அது என்ன நம்மளாட்டம் ஊட்லயே இருக்கற பொண்ணாடி? டீச்சர் வேல பாக்கற பொண்ணு. அதுக்கேத்த மாதிரிதான துணிமணியும் இருக்கணும்” என்றாள்.

கடைக்காரர் ரஞ்சினியிடம் “எந்த மாதிரி நெறம் வேணும், சொல்லுங்க” என்று கேட்டார். ரஞ்சினி அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பட்டுப்புடவைகள் மீது பார்வையைப் படரவிட்ட பிறகு மெதுவாக “மயில்கழுத்து நிறம்” என்று பதில் சொன்னாள்.

கடைக்காரர் ஒரே நிறத்தில் வெவ்வேறு டிசைன்களில் உள்ள புடவைகளை எடுத்து மேசைமீது பிரித்துவைத்தார். அனைவரும் ஒவ்வொரு புடவையையும் தொட்டும் தடவியும் பார்த்தார்கள். ரஞ்சினியின் அம்மா ஒரு புடவையை எடுத்து ரஞ்சினியின் தோள்மீது வைத்துப் பார்த்தார்.

கடைக்கு உள்பக்கமாகவே படியேறிச் செல்லக்கூடிய ஒரு மாடிப்பகுதி இருந்தது. முதலாளி கண்ணைக் காட்டியதும் ஒரு வேலைகாரர் மாடிக்குச் சென்று மயில்கழுத்துப் புடவைகள் மட்டுமே நிறைந்த ஒரு பெட்டியை எடுத்துவந்து மேசை மீது வைத்தார். சிப்பந்தி எல்லாப் புடவைகளையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து பிரித்துவைத்தார்.

மோர் நிறைந்த தம்ளர்கள் அடுக்கப்பட்ட ஒரு பெரிய தட்டை எடுத்துவந்த ஒரு சிப்பந்தி அம்மாவின் முன்னால் நின்று “எடுத்துக்குங்க மா” என்று சொன்னார். “எதுக்குங்க இதெல்லாம்?” என்று தயங்கினார் அம்மா.

“எடுத்துக்குங்கம்மா. நல்ல வெயில் நேரம். தண்ணிக்கு பதிலா மோர். அவ்ளோதான். ஒங்க வீடுன்னு நெனச்சி எடுத்துக்குங்க.”

அம்மா ஒரு தம்ளரை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். பிறகு தானும் ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டார். ரஞ்சினி கண்களைச் சுழற்றி சிவபாலன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்தாள். ”குடி குடி” என்றபடி சைகை காட்டினான் அவன். அவள் ஒரே ஒரு மிடறு அருந்திவிட்டு நுனி நாக்கால் உதடுகளைத் தடவினாள். அத்தையின் பக்கம் அம்மா திரும்பிய ஒரு கணத்தில் மின்னல்போலத் திரும்பி மேசைமீது தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருந்த புடவைகளின் மீது விரல்வைத்து “ஓகேவா?” என்பதுபோல கண்களால் கேட்டாள். அவற்றின் நிறம் உண்மையிலேயே மயிலின் கழுத்து நிறத்தில் இருந்தது. சரிகை வேலைகளும் அற்புதமாக இருந்தன. நன்றாக இருப்பதாக சிவபாலனும் கண்களாலேயே பதில் சொன்னான்.

மோர்த்தம்ளர்களை சிப்பந்தி வாங்கிச் சென்றார். சில கணங்களுக்குப் பிறகு ரஞ்சினி அங்கிருந்த புடவைகளைக் காட்டி “இந்த அஞ்சுமே ஓகேமா. இதுல ஒன்ன பெரியவங்க நீங்க பாத்து சொல்லுங்க” என்றாள். “பாருடி என் தங்கத்த. சட்டுபுட்டுனு வேலய முடிச்சிட்டுது. அவ அவ ஊருல ஒரு பொடவய எடுக்க ஒரு நாள்பூரா பாத்துகினே இருக்கும். ஜோசிய அட்டைய கிளி எடுக்கறமாதிரி கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள வேலய முடிச்சிட்டுது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அம்மா ரஞ்சினியின் அம்மாவை நோக்கி “இங்க வாங்கம்மா. இந்த அஞ்சில ரஞ்சினிக்கு எது ரொம்ப பொருத்தமா இருக்கும்? நீங்களே பாத்து சொல்லுங்க” என்று கேட்டார். அந்த அம்மாவும் அவரோடு வந்திருந்தவர்களும் ஒருசேரக் கூடி பேசி, ஐந்தை இரண்டாகக் குறைத்தார்கள். பிறகு ரஞ்சினியிடம் திரும்பி “அதுவா, இதுவா, நீயே சொல்லும்மா ரஞ்சினி” என்று கொடுத்துவிட்டார்கள்.

ரஞ்சினியின் கண்கள் மீண்டும் சிவபாலனின் திசையில் திரும்பின. சொல் என்பதுபோல புருவத்தை உயர்த்தினாள். யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக விரலை காதோரமாக நகர்த்திச் சென்று கூந்தலை ஒதுக்கினாள். வலதுகையின் கட்டைவிரலை மட்டும் உயர்த்தி ஓகே என்பதன் அடையாளமாக தலையை மேலும் கீழும் அசைத்தான். அவள் அதை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அந்தப்புடவையை மட்டும் கையிலேந்தி “இதுவா?” என்பது போல புருவத்தை உயர்த்திக் கேட்டாள். உதடுகளில் புன்முறுவலைத் தேக்கி அவன் விழி சுருங்க அவளைப் பார்த்தான்.

“செலக்‌ஷன் முடிஞ்சிதாடா?” என்றபடி தம்பிதுரை உள்ளே நுழைந்து சிவபாலனின் பக்கத்தில் வந்து நின்றான். அவனைத் தொடர்ந்து ஆண்கள் கூட்டமும் நுழைந்தது. அம்மாவுக்கு அருகில் சென்று நின்றார் அப்பா. “இதத்தான் செலக்ட் பண்ணியிருக்கம். நீங்களும் பாருங்க” என்று அம்மா காட்டினார். “எனக்கு என்னம்மா தெரியும் புடவையைப் பத்தி. நீங்க எத முடிவு பண்றீங்களோ, அதுக்கு நான் பணத்த கட்டுவன்” என்றார் அப்பா.

பணத்தைச் செலுத்தியதும் கடைக்காரர் பட்டுப்புடவையை ஒரு பையில் போட்டு ஒரு தட்டில் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ எல்லாவற்றையும் வைத்துக் கொடுத்தார்.

“எதுக்குங்க இதெல்லாம்?”

“காலம் காலமா குடுக்கறதுதான்மா. இதெல்லாம் ஒரு ஐதீகம். திடீர்னு விட்டுடமுடியாது.”

“ஜாக்கெட் தனியா எடுக்கணுமா?”

“தேவையில்லைமா, புடவை கூடவே இருக்குது. டைலர்கிட்ட குடுத்திங்கன்னா அவுங்க பிரிச்சி தச்சி குடுத்துடுவாங்க.”

கடையை விட்டு வெளியே வந்தார்கள்.

”பாலா, வெயிலா இருக்குது. நான் எல்லாரயும் வண்டிகிட்ட கூட்டிட்டு போறன். நீங்க போய் சாப்ட்டுட்டு வாங்க. அதோ அங்க போங்க. கிரிஜா பவன். அங்க நல்லா இருக்குது.”

கிரிஜா பவனுக்குள் சென்றார்கள். அந்த நேரத்திலும் கூட்டம் வழிந்தது. ஒருபக்கம் கோவில்களுக்கு வரும் கூட்டம். இன்னொரு பக்கம் பட்டுப்புடவைகள் எடுக்க வரும் கூட்டம். சிவபாலனும் அவன் வீட்டுப் பெண்களும் ஒரு வரிசையில் இரு மேசைகளில் உட்கார்ந்தார்கள். சுவரோரம் உள்ள மற்றொரு வரிசையில் ரஞ்சினியும் அவள் வீட்டுப் பெண்களும் சென்று அமர்ந்தார்கள்.

தொலைவான வரிசையில் அமர்ந்திருந்த ரஞ்சினியைப் பார்த்தான் அவன். ஒரு துளி ஈரம் பட்டுத் தெறித்ததுபோல அவளுடைய அழகிய கண்கள் ஒருகணம் அவனைத் தொட்டுச் சென்றன. அவள் குனிந்து இலையைப் பார்த்து சிரித்துக்கொண்டபோது அவள் கன்னத்தின் கீழ்த்தசையில் ஒரு கோடு விழுந்தது. அங்கே மிளகென உருண்ட ஒரு மச்சம் இருப்பதுபோலத் தோன்றியது. அவன் பார்வையைத் திருப்பி இலையைப் பார்த்தான்.

என்ன வைத்தார்கள், என்ன சாப்பிட்டோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. ஒருகணம் இலையைப் பார்ப்பதும் அடுத்த கணம் கண்களைத் திருப்பி ரஞ்சினியின் திசையில் பார்ப்பதுமாக நேரம் கரைந்தபடி இருந்தது.

“என்னடா இது, கோழி கெளறர மாதிரி சாப்படற? ஒழுங்கா எடுத்து சாப்புடு.”

அம்மா அதட்டிய பிறகு ஒழுங்காக நாலு வாய் எடுத்துச் சாப்பிட்டான். அதற்கு மேல் முடியவில்லை. மீண்டும் விரல்களால் அளையத் தொடங்கினான். அக்கணத்தில்தான் ரஞ்சினி எழுந்து கைகழுவும் இடத்துக்குச் செல்வதைப் பார்த்தான். “போதும்மா, நீங்க சாப்புடுங்க. வயித்த பெரட்டறமாதிரி இருக்குது” என்றபடி எழுந்து வேகமாக கைகழுவும் இடத்துக்கு விரைந்தான்.

சுவரோரமாக இருந்த வாஷ் பேசினில் கைகழுவியபடியே கண்ணாடியில் முகம் பார்த்தவாறு நின்றிருந்தாள் ரஞ்சினி. கோதுமை நிறத்தில் நீண்டிருந்த அவள் விரல்களை எட்டிப் பற்றிக்கொள்ளவேண்டும் போல இருந்தது. விரல்களில் பட்டு ஓடைபோல ஓடியது நீர். சிவபாலன் இரண்டாவது பேசினில் கைகழுவியபடி அவளைப் பக்கவாட்டில் பார்த்தான். ஒரே நொடியில் அவன் உடலிலிருந்த ரத்தம் முழுவதும் முகத்தை நோக்கிப் பாய்வதுபோல இருந்தது. என்னென்னவோ பேசவேண்டும் போல ஆசை துடித்தது. ஒரு சொல்லும் கூடி வராமல் மனம் தவித்தது. தன் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான். வெட்கம் படர்ந்த புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தபடி அவள் அதைப் பெற்றுக்கொண்டாள். பிரித்து விரல்களைத் துடைத்துக்கொண்டாள்.

”நல்லா இருக்குது” அவசரமாகச் சொன்னான்.

“ம்?” அவள் விழி சுருக்கியபடி அவனைப் பார்த்தாள்.

“ஜிமிக்கி, ஜிமிக்கி நல்லா இருக்குது”

“ம்”

“ஜிமிக்குக்குள்ள ஒரு சின்ன ஜிமிக்கி ஊஞ்சலாடறமாதிரி இருக்குது.”

“ஓ”

“மகிழம்பூ மாதிரி வட்டமா இருக்குது”

“ம்”

இல்ல இல்ல. மரத்துல பன்னீர்ப்பூ தொங்குமே அந்த மாதிரி…”

“ம்”

“ஐயோ, எதுவுமே எனக்கு சொல்லத் தெரியல. நீ ரொம்ப அழகா இருக்கே.”

“என்ன புடிச்சிருக்குதா?”

“ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குது. அது என்ன கழுத்துல, காதுக்குக் கீழ,, மச்சமா?”

அவள் விரல்கள் சட்டென உயர்ந்து அதை மறைத்தன. ”ஐயையோ” என்றாள். பிறகு நாணத்துடன் ‘எப்ப பாத்திங்க?” என்றாள்.

“இப்பதான். நீ சாப்ட்ட சமயத்துல”

”ம்”

“எதாவது பேசேன். ஏன் ஒன்னும் சொல்லமாட்டற?”

“உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது”

“நான் ஒன்ன பத்தி நெறய கவிதை எழுதி வச்சிருக்கேன்.”

“உண்மையாவா?

“நூறு நூத்தியம்பது கவிதை இருக்கும். ஒரு நோட்டு போட்டு எல்லாத்தயும் எழுதி வச்சிருக்கேன்.”

“எனக்கு படிக்கணும் போல இருக்குது. இங்க கொண்டுவந்திருக்கீங்களா?”

“ம்ஹூம். வீட்ல வச்சிருக்கேன். நான் அப்பறமா படிக்க குடுக்கறேன்.”

“அப்புறம்னா?”

“அப்பறம்னா அப்பறம்தான்…”

“அதான் எப்பறம்?”

“அப்ப்ப்ப்ப்ப்பறம்.”

ச்சீ என செல்லமாகச் சிணுங்கியபடி அவள் பேசினிலிருந்து விலகி செல்வதற்கு முனைந்தாள். அவன் கொடுத்த கைக்குட்டையை மடித்து உதட்டைத் துடைத்து கைக்குள் மூடி வைத்துக்கொண்டாள். பிறகு இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை எடுத்து புன்னகைத்தவாறே அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

அவள் புன்னகை அவன் நெஞ்சை நிறைத்தது. கண்ணாடிச்சுவரைத் தழுவியிறங்கி நழுவியோடும் மழைச்சாரலென வயிற்றை நிறைத்து அதிரவைத்தது. நீண்ட நேரம் தாகத்துடன் நடந்துசெல்வதுபோல ஒரு தவிப்பை உணர்ந்தான்.

பூப்போட்ட கைக்குட்டையை மெதுவாகப் பிரித்தான். ஒரு சின்ன சதுரம் போன்ற கைக்குட்டை. இரு மூலைகளில் எஸ் என்னும் ஆங்கில எழுத்தும் மற்ற இரு மூலைகளில் ஆர் என்னும் ஆங்கில எழுத்தும் பின்னலால் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்தை உயர்த்தி முத்தமிட்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி இன்னும் அந்த இடத்தில் நிற்பதுபோல நினைத்துக்கொண்டான். அக்கணமே வெட்கம் படர பேசினை விட்டு வெளியே வந்தான்.

“என்னடா, என்ன செய்யுது? ஏன் இவ்ளோ நேரம்?” அம்மா கேட்டாள்.

“தெரியலம்மா. காலயில சாப்ட்டது ஒத்துக்கல போல. வாந்தி வரமாதிரி இருக்குது. ஆனா வரலை.”

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மணி மூன்றாகிவிட்டது.

“நாங்க கெளம்பட்டுமா சார்?”

ரஞ்சினியின் அப்பா வந்து சிவபாலனின் அப்பாவிடம் கேட்டார்.

“நல்லதுங்க. அமாவாசக்குப் பிறகு ஒரு நல்ல நாளா பாத்து வரேன். அதுக்குள்ள நீங்க பத்திரிக மேட்டர எழுதி வைங்க. வந்து வாங்கிட்டு போறன். அடிச்சி முடிச்சிட்டா ஒரு பொங்கல வச்சி படயல போட்டுட்டு ஊருக்கு குடுக்க ஆரம்பிச்சிடலாம்.”

“வரும்போது மறக்காம பொடவய எடுத்துட்டு வாங்க. அக்கம்பக்கத்து உறவுக்காரங்க பாக்கணும்ன்னு சொன்னாங்க…..” ரஞ்சினியின் அம்மா முன்னால் வந்து சிவபாலனின் அம்மாவிடம் சொன்னாள். அதற்குச் சம்மதம் என்பதுபோல அம்மா தலையசைத்தாள்.

அவர்கள் வண்டி புறப்பட்டது. ரஞ்சினி திரும்பிப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். “டேய், பொண்ணு ஒன்ன பாக்குதுடா” என்று தம்பிதுரை சுட்டிக் காட்டியபோது வெட்கத்தோடு தலையைத் திருப்பிக்கொண்டான்.

“நாமளும் கெளம்புவமா?”

“கோயில் இருக்கற ஊருக்கு வந்துட்டு, சாமிய பாக்காம போனா எப்பிடி சித்தி? நாலு மணிக்கு கோயில் தெறந்துருவாங்க. பாத்துட்டு போயிடலாம்” என்றான் தம்பிதுரை.

”என்னடா நீ என்ன சொல்ற?” என்று அம்மா சிவபாலனைக் கேட்டாள். அவன் இந்த உலகத்திலேயே இல்லாதவன் போல இருந்தான். அவனை உலுக்கி மறுபடியும் கேட்கவேண்டியதாக இருந்தது. சட்டென்று சுயநினைவுக்கு வந்து சரியென்று தலையாட்டினான்.

காமாட்சியம்மன் கோவிலையும் வரதராஜ பெருமாள் கோவிலையும் பார்த்துவிட்டு வெளியே வருவதற்குள் மணி ஆறாகிவிட்டது. சிவபாலனுக்கு கோவிலுக்குள் எந்த உருவத்தைப் பார்த்தாலும் ரஞ்சனியாகவே தெரிந்தது.

வண்டிக்குள் ஏறி அனைவரும் உட்காரும்போதுதான் முருகேசன் மாமாவைக் காணவில்லை என்பது தெரிந்தது. “நம்ம பின்னாலதான வந்துகினே இருந்தாரு? அதுக்குள்ள எங்கடா மாயமா போனாரு?” என்று ஆச்சரியப்பட்டான் தம்பிதுரை.

“ம். அதுக்குள்ள எங்கயாவது வாசம் புடிச்சி போயிருப்பாரு. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வச்சாலும் அது வால கொழச்சிகினு போவற எடத்துக்குத்தான் போவுமாம். அந்தக் கதைதான் இவரு கத. ஒன்னும் தேடவேணாம். அவுரா வருவாரு, ஏறி ஒக்காருங்க.”

சிவகாமி அத்தை எரிச்சலோடு சொன்னபடி படிக்கட்டுப்பலகையில் கால்வைத்து முதல் ஆளாக ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் ஏறி உட்கார்ந்தனர்.

அதற்குள் துண்டால் சிரிப்பை மறைத்தபடி வண்டிக்கு அருகில் வந்துவிட்டார் முருகேசன் மாமா. “எனக்காகத்தான் வெய்ட்டிங்கா? சரி சரி போலாம் ரைட்” என்ற வண்டியின் விலாப்புறத்தில் தட்டியபடி உள்ளே ஏறி அமர்ந்தார்.

அத்தை உடனே வெடித்தாள். “அந்த நாத்தம் புடிச்ச தண்ணிய ஒருநாளு கூட குடிக்காம இருக்கமுடியாதா? எங்க எங்கன்னு மோப்பம் புடிச்சிட்டு போய் வந்துட்ட?”

அம்மா அத்தையின் தோளைப் பற்றி அழுத்தி பேச்சை நிறுத்தும்படி சொன்னாள்.

முருகேசன் மாமா நமுட்டுச் சிரிப்போடு சாலையில் செல்லும் வாகனங்களின் பக்கம் திரும்பிக்கொண்டார். “கெளம்பலாம் தொர” என்று சொன்னபடி சிவபாலன் தடுப்புப்பலகையைத் தூக்கிப் பொருத்திவிட்டு கயிற்றைப் பிடித்து தாவி வண்டிக்குள் உட்கார்ந்தான்.

இருட்டு பரவத் தொடங்கியது. காற்றில் சற்றே குளுமை படர்ந்துவந்தது. வந்தவாசியைக் கடக்கும்போது முற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது. முருகேசன் மாமா திடீரென ’அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு’ என்று பாடத் தொடங்கிவிட்டார். அருமையான குரல். சரியான ஏற்ற இறக்கமுடன் எந்தப் பிசிறுமில்லாமல் அவர் குரல் ஒலித்தது. “வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமில்லாத ஆளுடி. பாட்டு பாடுது பாரு மானம் கெட்ட பாட்டு” என்று முனகியபடி தோளை ஒடித்து முகம் திருப்பிக்கொண்டாள் சிவகாமி அத்தை. அந்தப் பாட்டு முடிந்ததுமே முருகேசன் மாமா உற்சாகத்தோடு ‘ஓடும் மேகங்களே’ பாடத் தொடங்கினார். அவர் குரலில் மகிழ்ச்சி கூடிக்கொண்டே போனது. வளவனூர் வந்து சேர்கிறவரைக்கும் அவர் நாற்பது ஐம்பது பாடல்களாவது பாடியிருப்பார். கொஞ்சம் கூட களைப்பே இல்லை. அவ்வளவு பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக தெரியும் என்பதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

வீட்டுக்கு வந்ததும் வண்டிக்கு பணம் கொடுத்து அனுப்பினான் தம்பிதுரை. புடவைப்பையை நடுவீட்டுக்கு எடுத்துச் சென்ற அம்மா சாமிக்கு முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி சில கணங்கள் கண்மூடிக் கும்பிட்டாள். பிறகு வெளியே எடுத்து வந்து ஆயாவிடமும் தாத்தாவிடமும் காட்டினாள்.

“சரிசரி, பேசிட்டே ஒக்காந்துட்டிருக்காதீங்க. இட்லியோ தோசையோ எதயாவது ஊத்துங்க. காலையில கெளம்பணுமேங்கற பரபரப்புல சரியாவே தூக்கம் இல்ல. இன்னைக்காவது சீக்கிரம் தூங்கி எழுந்தாதான் நாளைய பொழுது நல்லா இருக்கும்”

அப்பா சொன்னதும் பெரியம்மா, சித்தி, அத்தைகள் எல்லோரும் அடுப்படிக்குச் சென்றார்கள். எல்லோரும் சேர்ந்து பம்பரமென வேலை செய்வதை உட்கார்ந்த இடத்திலிருந்து அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சிவபாலன். அவனுக்கு அருகில் அமர்ந்து தம்பிதுரை சொன்ன கதைகள் எதுவுமே அவன் மனத்தில் உறைக்கவில்லை.

இட்லித்தட்டு வைக்கப்பட்டதும் ஆவலோடு எல்லோரும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். பொட்டுக்கடலை சட்டினியில் மிதந்த கறிவேப்பிலையின் கரிந்த மணம் நாசியை எட்டியபோதுதான் சிவபாலனுக்கு மதியச் சாப்பாடு நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ரஞ்சினியின் நினைவு வந்துவிட்டது. தனக்கு அருகில் ரஞ்சினி இல்லை என்கிற எண்ணம் அவனுக்கு வேதனையாக இருந்தது. பேருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்தான். மேசைமீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல விரித்துவைத்துக்கொண்டு நினைவுகளில் மூழ்கினான். ரஞ்சினி இல்லாத உலகம் வெறுமை சூழ்ந்ததாக இருந்தது அவனுக்கு. அந்தப் புருவம். அவள் கண்கள். அவள் ஜிமிக்கி. அந்த மச்சம். எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர்ந்தான்.

“என்னடா போவலாமா?” என்றபடி அறைக்குள் வந்தான் தம்பிதுரை. எங்கே என்பது போல அவனைப் பார்த்தான் சிவபாலன்.

“மொட்டமாடிக்குடா. என்ன முழிக்கற? அங்கதான நாம படுத்துக்குவம். வா. இன்னைக்கு காத்து நல்லா இருக்குது.”

மூலையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாய்களையும் தலையணைகளையும் எடுத்தான்.

த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி ‘நா வரலைடா. நீ போ. நான் இங்கயே படுத்துக்கறேன்” என்றான் சிவபாலன். புதுசாகப் பார்ப்பதுபோல ஒருகணம் அவனை விசித்திரமாகப் பார்த்துவிட்டு பாய்மூட்டையோடு வெளியே போனான் தம்பிதுரை.

விளக்கை நிறுத்திவிட்டு படுக்கையில் சரிந்தான் சிவபாலன். நிலா வெளிச்சத்தில் வெள்ளித்தகடுகளென மின்னித் தொங்கும் தென்னங்கீற்றைப் பார்த்தபடியே படுத்திருந்தான். பேசின் குழாயில் தண்ணீரை வாங்கி வழியவிட்டபடி நீண்டிருந்த ரஞ்சினியின் விரல்கள் நினைவுக்கு வந்தன. அந்த விரல்கள் நீண்டு தன் கன்னத்தைத் தொடுவதுபோல நினைத்துக்கொண்டான்.

எதிர்பாராத கணத்தில் நினைவுக்கு வந்தவனாக எழுந்து ஆணியில் தொங்கிய பேண்டிலிருந்து சதுரக் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு படுத்தான். நிலவொளியில் ஆர் எழுத்துகளும் எஸ் எழுத்துகளும் மங்கலாகத் தெரிந்தன. அவற்றை தானாகவே அவன் விரல்கள் சில கணங்கள் வருடின. பிறகு அந்தக் கைக்குட்டையைப் பிரித்து முகத்தின் மீது விரித்துக்கொண்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி தனக்கு அருகிலேயே இருப்பதுபோல நினைத்துக்கொண்டான்.