பிற

எதற்காக எழுதுகிறேன் – பாஸ்டன் பாலா

– பாஸ்டன் பாலா-

“You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.”
― Jean Renoir

சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியார் ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், நான் எழுதுவது என்பதும் திருச்சபை பிரசாரகர் போல் ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.

தேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:

  1. மற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்
  2. அனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்
  3. விவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக, மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுதல்
  4. பொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்து சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக எழுதி உற்சாகம் அடைதல்
  5. தியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்
  6. தனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.

குதிரைப் பந்தயம் பார்த்திருக்கிறீர்களா? பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்குப் பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.

நான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும் (யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓடி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு). சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.

நல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.

ஒரு எழுத்தாளர் என்று நான் எவரை ஏற்றுக் கொள்கிறேன் ?

  • அ. தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது
  • ஆ. பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது
  • இ. உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது
  • ஈ. நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது
  • உ. கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழுமையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.

இப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.

சுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளராய் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?

படத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:

“மனம் தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.
மட்டு மீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்!’
– புனிதர் அகஸ்டீன்

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல், அன்பு உள்ளம் கொள்ளாமல், புறத்தே மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார் இயேசு. தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.

அந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குறைத்து கொள்வோமா?” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப் பொருந்தவில்லை. அக்கரை சேர முடியவில்லை.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).

அப்போது தான் மனம் மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; உளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும்போது எனக்குள் ஏற்படும் ரசவாதம் என் சுமைகளை என்னைச் சுமக்கும் பாலமாக மாற்றி என்னை எனக்கு அப்பால் கொண்டு செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.

எதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

“எதற்காக எழுதுகிறேன்?” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்டு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா?” “புகழ் கிடைக்குமா?” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா?” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty?” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.

இப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-

எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர்  உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).

நான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.

அப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.

இவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

எழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.

இப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. ஏன்?

இப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:

பணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு?

புகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்? அப்போ வேறு எதற்கு?

மனநிறைவு  – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.

எழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்கும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பது?எண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது? முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது? சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.

மேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை  உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.

இது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே தவிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.

என் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

என் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு? ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்!.

 

 

 

 

 

​எதற்காக எழுதுகிறேன் – ஆரூர் பாஸ்கர்

ஆரூர் பாஸ்கர்

arur basakr

 

எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.

பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.

அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.

துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.

சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.

அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

(ஆரூர் பாஸ்கரின் ‘பங்களா கொட்டா’ அகநாழிகை பிரசுரமாய் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது)

எதற்காக எழுதுகிறேன்? – கலைச்செல்வி

கலைச்செல்வி

sakkai

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

எவ்வித விருப்பமும் அற்று கடமைக்கு சென்றேன் கடமையாற்ற. என் நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடியாத நிலை எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அளித்தது போன்ற உணர்வு. விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை எடுத்து முடித்திருந்தேன். குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்ல ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல் புத்தகமும் வாங்கத் தோன்றாது. கோலப்புத்தகங்களும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.

காலம் நல்லப்படியாகவே நகர்ந்தது. ஆயினும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை… அல்லது என் மனம் தேடுவதை.. நான் புரியாமல் உணர்ந்துக் கொண்டிருந்தேன். சிறு பள்ளியொன்றை ஆரம்பித்தோம். அதில் நிறைய புதுமைகளை புகுத்த ஆர்வம் கொண்டது என் மனம். காலை வழிபாடு முதல் பள்ளி முடியும் தருணங்கள் வரை புத்தம்புதிதான செய்திகளுடன் கல்வி கற்பித்தோம். அதற்கான எண்ணங்களை எழுத்தாக்கும் போது, நான் எழுதியதை திரும்ப வாசித்த போது நன்றாக எழுதியிருப்பதாக தோன்றியது. ஆனாலும் அதைத் தாண்டி வேறேதும் செய்ய தோன்றவில்லை. அதிலும் குடும்பம், அலுவலகம் தாண்டி குறைவாகவே நேரத்தை செலவிட முடிந்தது.

தேடல்கள் ஓயவில்லை என்பது புரிந்தது. எதுவும் முழுமையடையாமலே இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், ல.சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.மாதவன், சா.கந்தசாமி என்றும்  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் பகிரவோ பேசவோ யாரும் இருக்கவில்லை.

தனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்தது.  அந்த நேரம் பார்த்து தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதை அனுப்பி பார்ப்போமே.. என்று அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசு, பாராட்டு எனக் கிடைத்தபோது எழுதும் உத்வேகம் கூடிப் போனது. அந்நேரம் சிற்றிதழ்கள் அறிமுகமாகியிருந்தன. கணையாழி, உயிரெழுத்து என் கதைகளை வெளியிட ஏதோ எழுத வருகிறது என்று எண்ணிக் கொண்டேன். செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது. அடுத்த ஆண்டு இதே தினமணி சிறுகதைப் போட்டியில் (2013) புனைப்பெயரில் (சுப்ரமணியன்.. எனது தகப்பனார் பெயர்) எழுதி அனுப்பினேன். அக்கதைக்கு முதல் பரிசு வழங்குவதாக சேதி சொன்னார்கள். மீண்டும் நெய்வேலி. மீண்டும் பரிசு. செய்தித்தாளில் வண்ணப்புகைப்படம். மிக அதிக விவேரணைகளோடு தினமணிக்கதிரில் கதை வெளியானது. நிறைய கடிதங்களும், தொலைப்பேசி அழைப்புகளும் வந்தன.  பிறகு வாசிப்பிலிருந்து அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது மனம். இப்போது நினைத்தால் சற்று கூச்சமேற்படுகிறது.

எழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்கும்போது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது எனக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.

தேடலின் நீண்ட வெளி குறைந்துக் கொண்டே வந்தது. நடந்து கிடந்து அதனை களைந்து விடும் நம்பிக்கை முனைப்பாக வெளிப்பட எனது பயணம் தொடர்ந்துக் கொண்டுள்ளது.

(திருச்சியில் வசிக்கும் கலைச்செல்வி.. கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் கொண்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரமாகி பல பரிசுகளும் பெற்றுள்ளன. வலி என்ற பெயரிலான அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று காவ்யா பதிப்பதகத்தாராலும், சக்கை என்ற பெயரிலான அவரது முதல் நாவல் என்சிபிஹெச் பதிப்பகத்தாராலும் 2015 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற சக்கை, புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரியில் பி. ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.)

ஏன் எழுதுகிறேன் – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்– 

நான் ஏன் எழுதுகிறேன்? நீண்ட காலமாக அரட்டைக் குழு நண்பர்கள் சிலர் நான் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, கேட்கிறார்களே என்று எழுத ஆரம்பித்தால் நீங்கல்லாம் ஏன் எழுதறீங்க, சொல்லுங்கன்னு பதாகைக்காரர்கள் கேட்டு விட்டார்கள். இப்ப நாம் என்ன நிறைய எழுதிட்டோம்னு இப்படிக் கேக்கறாங்கன்னும் தோணாம இல்ல. ஆனா கேள்வின்னு வந்தாச்சு, பதில் என்னவா இருக்கும்ன்னு யோசித்துப் பார்க்கிறேன்.

உண்மையில் இந்தக் கேள்வி புனைவு எழுதுபவர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதுவது என்ற இடம் நேர்ப்பேச்சில் கருத்து கூறுவதிலிருந்து ஒரு எட்டு எடுத்து, தட்டச்ச ஆரம்பித்தால் வந்து விடுகிறது.. நம் முகத்திற்கு எதிரே இருக்கும் 4 அல்லது 5 பேரிடம் சொல்வதை எவ்வளவு பேருக்கு சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பதே எழுத்து என்ற அளவுதான் இரண்டுக்கும் வித்தியாசம்.. ஏன் சொல்கிறோம் என்பதற்கு என்ன காரணமோ அதேதான் ஏன் எழுதுகிறோம் என்பதற்கும் சொல்ல முடியும். ஆனால் புனைவு அப்படியல்ல என்று தோன்றுகிறது. மிகச் சிரமப்பட்டு ஒரு நிகர் உலகை உருவாக்கி, பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து உணர்வுகளின் வண்ணம் சேர்த்து… .அப்பப்பா, நம்மால் ஆகப்பட்ட காரியம் அல்ல அது.

இன்னொரு கோணத்தில், சுற்றியிருக்கும் உலகின் நடவடிக்கைகளை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் எழுதாமல் இருப்பதுதான் கடினம் என்று தோன்றுகிறது. உலகின் போக்கு குறித்த எதிர்வினைகள் எப்போதும் கணத்துக்குக் கணம் மனதில் தோன்றிய வண்ணமே இருந்தாலும் அவற்றைத தொகுத்து, சீராக அடுக்கி, எழுத்தில் கொண்டு வருவது எல்லோர்க்கும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு தங்கள் பதின்ம வயதிலேயே இந்தக் கலை வசப்பட்டு விடுகிறது. என் போன்ற சிலருக்கு அதிக காலம் பிடிக்கிறது ஆனால் ஏதோ ஒரு சமயத்தில், ஒரு அசோகமித்திரன் கதையில் ஒரு பாத்திரத்துக்கு சட்டென்று காரில் கிளட்ச் போடுவது பிடிபடுவது போல இது நிகழ்ந்து விடுகிறது. அதற்கப்புறம் எழுதாமலிருப்பதே உண்மையில் சிரமம்.

பல சமயங்களில் எழுதுவதற்கு பிறரின் தூண்டுதலும் வழிகாட்டலும் தேவையாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில்,இவை இரண்டுக்குமான பழி இருவருக்கு உரியது, ஒருவர், சக நண்பர். அவர் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டினார். இன்றும் ஒவ்வொரு முறை பேசும்போதும், இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க, என்று கேட்கத் தவறுவதில்லை. மற்றவர் ஜெயமோகன். அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, அவர் ஒரு விஷயத்தை எப்படி தொகுத்துச் சொல்கிறார் என்பதும், அந்தத் தொகுத்தலே அவரது எழுத்துக்கு அடிப்படையாக அமைவதையும் நேரில் பார்த்து என்னையறியாமல் உள்வாங்கியிருப்பது நான் எழுத உதவுகிறது என்று சொல்லவேண்டும்.

அப்புறம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நாம் எழுதினால் உலகம் என்ன நினைக்குமோ என்ற ஒரு லஜ்ஜை தடுக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது வயதில் அது உதிர்ந்து, நான் உலகைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமாகிவிடுகிறது. அங்கே எழுத்து தொடங்கிவிடுகிறது.

தமிழில் தீவிர இலக்கியம் வாசிப்பவர்களுக்கு ஒரு பெரிய கஷ்டம், நாம் படித்த புத்தகத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பரை நம் உடனடி வட்டத்தில் கண்டுபிடிப்பது. இதனால் இரண்டு வகையில் பாதிப்பு உண்டாகிறது. பகிர்ந்து கொள்ளுதலும் இல்லை புதிதாகத் தெரிந்து கொள்ளுதலும் இல்லை., அங்குதான் நாம் படித்த நல்ல புத்தகங்கள் குறித்து நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. நான் எழுதியவற்றில் பெரும்பான்மையும் புத்தகங்கள் பற்றியே. அவை மதிப்பீடா விமர்சனமா என்று வகைப்படுத்த நான் முயல்வதில்லை. .முன்னொரு சமயம், கணையாழியில், என்.எஸ். ,ஜெகன்னாதன் அவர்கள், உலகில் மனிதனின் சிந்தனைகள், பல துறைகளில் பெருகியபடியே உள்ளன, இவற்றையெல்லாம், தமிழ் மட்டுமே அறிந்த ஒருவருக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று, கவலைப்பட்டார். உலக மொழிகளில் என்று இல்லை தமிழிலேயே வந்திருக்கும் ஏராளமான நல்ல புத்தகங்கள்கூட இன்னும் சரியான அறிமுகமோ, மதிப்புரையோ இல்லாமல் இருக்கின்றன. ஆகவே ஒரு குறைந்தபட்ச முயற்சியாக நான் படிக்க நேரும் நல்ல புத்தகங்கள் குறித்தாவது பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணமே எழுதுவதற்கு முக்கியமான காரணம். பிறகு கடந்த 6, 7 வருடங்களாக,, நாஞ்சில் நாடன், கோபாலக்ருஷ்ணன், சு. வேணுகோபால் இரா. முருகவேள் போன்ற எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும், கோவை த்யாகு நூல் நிலைய நண்பர்களுடனான கருத்துப் பரிமாற்றமும், நான் எழுதுவதற்காண காரணங்களில் முக்கியமான ஒன்று. இத்தகைய ஒரு வட்டம் நிச்சயம் எழுதுவதை ஊக்கப்படுத்துகிறது.

கடைசியாகச் சொன்னாலும், மிக முக்கியமான ஒன்று இருக்கிறது, இணையமும் இ-மெயிலும் தரும் வசதி. இப்போது இதைக்கூட, ‘ஒரு வெள்ளைத்தாள் எடுத்து, மார்ஜின் விட்டு, பக்க எண் அளித்து எழுதி, பிழை திருத்தி, உறையிலிட்டு, தபால் தலை ஒட்டி அனுப்பு’, என்றால்….சிரமம்தான், அதற்கெல்லாம் வேலை வைக்காமல், ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும், (இன்னமும் அதே வழியில் எழுதிக் கொண்டிருக்கும் சிலரையும்) நம் முன்னோடிகளையும் நினைத்தால், தலை தன்னால் வணங்குகிறது