பிற

பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம்

அ முத்துலிங்கம்

அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் Gone with the Wind புத்தகம். அதை எழுதியவரின் பெயர் மார்கிரட் மிச்செல். இந்தப் புத்தகத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. இதைப் படமாக்கியபோது பல ஒஸ்கார் விருதுகளையும் அள்ளியது. கேள்வி என்ன வென்றால் அவருடைய கணவர் அன்று வெறுத்துப்போய் சொல்லியிருக்காவிட்டால் இந்தப் புத்தகம் எங்களுக்கு படிக்கக் கிடைத்திருக்குமா? அது அதற்கு ஒரு நேரம் இருக்கிறது.

நான் பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஏன் எழுதினேன் என்று இப்பொழுது நினைத்தால் தெளிவான பதில் கிடையாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்படி ஒருவரும் என்னிடம் கேட்டதில்லை. கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. கேள்வி இதுதான். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ எங்கள் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப் புத்தகங்கள். நான் எங்கள் வீட்டில் ஐந்தாவது பிள்ளை. நாலு பேர் படித்து முடித்த பின்னர் என் முறை வரும்போது பாடப்புத்தகம் எனக்கு வந்து சேரும். அநேகமாக முன் அட்டையோ கடைசி பக்கமோ இருக்காது. நான் படித்து முடிந்த பின்னர் அது என் தம்பியிடம் போகும். நான் படித்த பத்திரிகைகள், நாவல்கள் எல்லாமே இரவல் வாங்கியவைதான். 1964ம் ஆண்டு அருமை நண்பர் செ.கணேசலிங்கன் என் சிறுகதைகளை புத்தகமாகப் பதிப்பித்தார். அதன் தலைப்பு ’அக்கா’. அதுதான் நான் முதல் சொந்தம் கொண்டாடிய புத்தகம். மார்கிரெட் மிச்செல் போல நான் சொந்தமாக்குவதற்கு நானே ஒரு புத்தகம் எழுதவேண்டி நேர்ந்தது.

அந்தப் புத்தகத்துக்கு நான் வெளியீட்டு விழா வைக்கவில்லை. அதற்குப் பின்னர் எழுதிய 21 புத்தகங்களுக்கும் கூட ஒருவித விழாவும் நான் ஏற்பாடு செய்தது கிடையாது. சில நண்பர்கள் கேட்பார்கள் ’உன்னுடைய புத்தகம் ஒன்று வெளிவந்துவிட்டதாமே. எனக்கு ஒரு புத்தகமும் நீ தரவில்லையே’ என்று. அந்த நண்பர் நல்ல வசதியானவராகத்தான் இருப்பார். ஆனால் நான் இலவசமாக ஒரு புத்தகம் அவருக்குத் தரவேண்டும் என எதிர்பார்ப்பார்.

தமிழில் எழுதுபவர்களில் முழு நேர எழுத்தாளர்கள் வெகு குறைவு. அநேகமானோர் வசதி இல்லாதவர்கள். அப்படியிருந்தும் வருமானத்துக்காகத் தமிழில் எழுதுபவர்கள் கைவிரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. தமிழில் எழுதினால் காசு காணமுடியாது என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும். அதுதான் சிறுவயதில் இருந்தே நான் என்ன படிக்கிறேன் என்பதை என் பெற்றோர் கண்காணித்தார்கள். எதிர்காலத்தில் நான் எழுத்தாளனாக வந்து சிரமப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரவல் நாவல்களை ஒளித்து வைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ரொறொன்ரோவில் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரை எனக்குத்தெரியும். பெற்றோரின் புத்திமதியை ஏற்காமல் எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர். அவர் சொல்லுவார் தன்னுடைய வருடாந்த வருமானம் 24,000 டொலர்கள் என்று. அதாவது கடைநிலையில் உள்ள தினக்கூலிக்கு கனடாவில் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இது குறைவுதான்.

எழுத்தாளரின் ஏழ்மை நிலையைச் சொல்ல ரொறொன்ரோவில் ஒரு கதை உண்டு. ஓர் எழுத்தாளரின் மகன் உதவாக்கரை. எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கடைசிப் படியில் நின்றார். ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்துச் சொன்னார். ’நீ இப்படியே இருந்தால் நான் உனக்கு ஒரு சதமும் விட்டுப் போகமாட்டேன்.’ அப்போது மகன் கேட்டான், ’அப்பா, அந்த ஒரு சதத்தை நீங்கள் யாரிடம் கடன் வாங்குவீர்கள்?’

எழுத்தாளர் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. படைப்பின்பம். ஒரு படைப்பின் எல்லையை அடைந்து அது பூரணமாகும்போது கிடைக்கும் இன்பம் பற்றி படைப்பாளிகளுக்குத் தெரியும். அதற்கு ஈடு இணையில்லை. ஓர் ஓவியர் ஓவியம் வரைந்து முடிந்ததும் இந்த ஓவியம் எனக்குள் இருந்தா வெளியே வந்தது என்று வியப்படைகிறார். ஒரு சிற்பியின் மனநிலையும் அதுதான். சிற்பம் பூர்த்தியடையும்போது அவரடையும் பரவசம் சொல்லிமுடியாது. உலகத்தில் முன்பு இல்லாத ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சி அதியுன்னதமான ஒரு நிலையில் பிறக்கிறது.

ஒன்பதாவது இசைக்கோவையை படைத்தபோது பீதோவனுக்கு செவிப்புலன் போய்விட்டது. அவர் இசைக் குறிப்புகளை எழுதியபோது இசை அவருக்குள் கற்பனையில் உருவானது. இறுதியில் இசைக் கோவையை எழுதி முடித்ததும் வியன்னா இசையரங்கத்தில் வாத்தியக் குழுவினால் இசைக்கப்பட்டது. இசை முடிந்ததும் சபையோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். பீதோவனால் தன்னுடைய இசைய மட்டுமல்ல அதை அனுபவித்த மக்களின் கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் கூடக் கேட்கமுடியவில்லை. பீதோவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் இவர் தோளைத் தொட்டு சபையோரை சுட்டிக்காண்பித்தார். அப்போதுதான் பீதோவனால் மக்களின் வரவேற்பை உணரமுடிந்தது. அந்தக் கணம் அந்த இசையைச் சிருட்டித்த பெருந்தகையின் மனம் எத்தனைக் குதூகலத்தை அனுபவித்திருக்கும்.

400 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ தானாகவே இரவு பகலாக தேய்த்துத் தேய்த்து உண்டாக்கிய தூரக் கண்ணாடியை வானை நோக்கித் திருப்பினார். வியாழன் கிரகத்தை முதன்முதலாக தூரக் கண்ணாடியால் நோக்கியபோது ஓர் அதிசயத்தைக் கண்டார். வியாழன் கிரகத்தைச் சுற்றி நாலு சந்திரன்கள் சுழன்றன. அவருக்கு கைகள் நடுங்கின. கண்களில் நீர் கோர்த்தது. இந்தப் பூமியில் இதற்கு முன்னர் ஒருவருமே காணாத காட்சி அது. அவர் முதன்முதலாக அந்த அதிசயத்தைக் காண்கிறார். அவரால் அந்தப் பரவசத்தை தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளர் ஒன்றைப் புதிதாக படைப்பதும், ஒரு விஞ்ஞானி புதிதாக ஒன்றைக் கண்டு பிடிப்பதும் ஒன்றுதான். பரவசம் ஒன்றேதான்.

பாராட்டுகள் எழுத்தாளருக்கு உந்து சக்தி. சேக்ஸ்பியரை விமர்சித்தவர்கள் பலர் ஆனால் அவர் கவலைப்படவே இல்லை. பாராட்டுகள் அவரை முன்னே செலுத்தின. அழியாத கவிதைகளையும் நாடகங்களையும் உலகுக்குத் தந்தார். விமர்சகர்களின் தாக்குதல்களை தாங்க முடியாத எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ’எந்த ஊரிலாவது விமர்சகருக்குச் சிலை வைத்திருக்கிறார்களா?’ உலகம் கொண்டாடுவது எழுத்தாளரைத்தான். விமர்சகரை அல்ல.

சமீபத்தில் எனக்குக் கிடைத்த இரண்டு பாராட்டுகள் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாதவை. எழுதும்போது ஓர் எழுத்தாளர் சந்திக்கும் இடர்களும் முட்டுக்கட்டைகளும் பாராட்டுக் கிடைக்கும்போது மறைந்துபோய் அடுத்த எழுத்துக்கு உற்சாகம் கூட்டுகிறது.

84 வயதைத் தாண்டிவிட்ட ஒரு முதிய எழுத்தாளரைச் சமீபத்தில் தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தார். அவருடன் எனக்கு முந்திபிந்தி எழுத்து தொடர்பு இருந்தது கிடையாது. நேரில் சந்தித்ததும் இல்லை. பேசியதும் இல்லை. கவிதைகள் எழுதியிருக்கிறார். பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மதிப்புமிக்க விருதுகள் பல பெற்றவர். அவர் நான் என்ன விசயமாக அவரை அழைத்தேன் என்று கேட்கவே இல்லை. மூச்சு விடாமல் பேசினார். ’நீங்கள் எழுதி பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் எல்லாவற்றையும் அவற்றின் படங்களுடன் சேர்த்துக் கத்தரித்து வைத்திருக்கிறேன். பைண்ட் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இப்படி ஒரு பாராட்டா? அது ஓர் எழுத்தாளருக்கு எத்தனை ஊக்கத்தைக் கொடுக்கும்.

அடுத்த சம்பவம் ஓர் அதிகாலையில் நடந்தது. அதுவும் சமீபத்தில்தான். யாழ்ப்பாணத்திலிருந்து முன்பின் தெரியாத ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். யார் என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனக்கு அவரிடம் ஒரு வித பழக்கமும் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டேன். ’ஐயா, நான் உங்கள் வாசகன். இப்பொழுதுதான் பூசா சிறையில் நாலு வருடம் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறேன். பூசா சிறையிலேதான் உங்கள் புத்தகத்தை முதலில் படித்தேன். படித்துவிட்டு என் நண்பனுடன் தினமும் கதைகளைப் பற்றி விவாதிப்பேன் என்றார். புத்தகத்தின் தலைப்பு தெரியுமா என்றபோது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் இருந்த அத்தனை சிறுகதைகளையும் வரிசையாகச் சொன்னார். சில வசனங்களை அப்படியே ஒப்பித்தார். ’சிறையிலே கிடைத்த இந்தப் புத்தகத்தை நான் திருடி வைத்திருந்தேன். ஆனால் அதை என்னிடமிருந்து யாரோ களவாடிவிட்டார்கள். சிறைக்குள்ளே இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆனால் வெளியே ஒரு புத்தகக் கடையிலும் இல்லை. எங்கே வாங்கலாம்?” இதுதான் கேள்வி. இவர் சொன்னதைக் கேட்டு நான் மகிழ்வதா அல்லது துக்கப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவருடைய பாராட்டு என் மனதுக்குள் இன்றும் பொங்கியபடி இருக்கிறது.

பாராட்டுகள் முக்கியம்தான் ஆனால் அவை மட்டும் ஓர் எழுத்தாளரைத் தொடர்ந்து எழுத வைக்கிறதா? நீ இனி எழுதத் தேவை இல்லை என்று சொன்னால் எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிடுவாரா? அவர் எதற்காக முதலில் எழுதத் தொடங்கினாரோ அந்தக் காரணம் இறுதிவரை அவர் பின்னாலேயே இருக்கும். ஏதோ ஓர் உந்துதல் அவரை முதலில் எழுதத் தூண்டியது. அது இறுதிவரை மறைவதே இல்லை. அதுவே அவரை எழுதவைக்கிறது.

ஐஸாக் அசிமோவ் என்ற அறிவியல் எழுத்தாளர் 500 புத்தகங்களுக்கு மேல் எழுதி, உலகப் புகழ்பெற்றவர். தன்னுடைய கடைசி கதையைத் தட்டச்சு மெசினில் தட்டச்சு செய்துகொண்டிருந்த போதே அதன் மீது தலை கவிழ்ந்து இறந்து போனார். நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, ’கிழவனும் கடலும்’ நாவலை எழுதியவர், ஒரு வசனத்துக்காகக் காத்திருந்தார். அது வரவே இல்லை. விரக்தியில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு இறந்துபோனார். எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸை யாரோ கேட்டார்கள் ’ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் இடக்காகப் பதில் சொன்னார். ‘அடுத்த 300 வருடங்கள் விமர்சகர்களுக்கு வேலை கொடுக்கத்தான்.’

நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோவின் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன். அவர் பிரதம பேச்சாளர். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் அவர் திடீரென்று ‘நான் இனிமேல் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்தார். சபையோர் திகைத்துவிட்டனர். எதற்காக இந்த அறிவிப்பு. ஓர் எழுத்தாளரால் எழுதாமல் இருக்க முடியுமா? அதைச் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவருடைய புத்தகம் ஒன்று வெளிவந்தது. பின்னர் ஒருநாள் அவருடைய சிறுகதை நியூ யோர்க்கர் பத்திரிகையில் வந்து படித்தேன். இரண்டு வருடங்கள் கழிந்தன. அவருடைய இன்னொரு புத்தகம் வெளிவந்தது. அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது. ஆகவே நான் ஏன் எழுதுகிறேன் என்று கேட்டால் , ‘எழுதுவதை நிறுத்த முடியாது, அதுதான் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்று பதில் சொல்லத் தோன்றுகிறது.

எழுத்தாளர் வேலை எழுதுவதுதான். தச்சு வேலைக்காரருக்குச் சம்பளம் கிடைக்கும். வர்ணம் பூசுகிறவருக்கு கூலி கிடைக்கும். ஆனால் எழுத்தாளர் எழுதுவார். சம்பளம் எதிர்பார்க்கமாட்டார். அவரால் எழுதுவதைச் செய்யாமல் இருக்கவும் முடியாது. எழுதும்பொழுதுதான் அவர் பிறந்ததன் அர்த்தம் அவருக்கு நிறைவேறுகிறது.

அவர் தன் புத்தகங்களை வெளியிடத் தேவையில்லை. வீடு வீடாகப் போய் விற்க வேண்டியதில்லை. நாடு நாடாகப் புத்தங்களை அனுப்பத் தேவையில்லை. வண்ணத்துப்பூச்சி தேடித்தேடி பூக்களைக் கண்டு பிடிப்பதுபோல வாசகர் தேடித்தேடி எழுத்தாளரை எப்படியோ அடையாளம் கண்டுவிடுவார். பூக்கள் பறப்பதில்லை.

oOo

(இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன்.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.  அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.)

எதற்காக எழுதுகிறேன் ? – சோழகக்கொண்டல்

சோழகக்கொண்டல்

எதற்காக எழுதுகிறேன் ? – காலத்தைக் கருவுறும் விதைகளை கனவின் உலகங்களிலிருந்து சேகரித்தல்.

காலடி மண்ணில் கவனிக்கபடாமல் கிடக்கும் மகரந்தச் செறிவை, மண்துகளின் நுண்ணிடைவெளியில் தன் உடலால் அளந்து உமிழால் செரித்து உலகுக்குக் காட்டும் மண்புழுவைப் போலவே நான் எழுதுவதென்பதும். பூமிப்பரப்புக்கு மேலே கொஞ்சம் புடைத்துத் தெரியும் அந்தப் புழுவின் எருக்குமிழ் போல, உணர்வின், மொழியின் தரைத்தளத்திலிருந்து துருத்தித் தெரியும் குரல்.

அட்ச தீர்க்க ரேகைகளோடு வரைந்தளிக்கபட்ட வாழ்வும் அதன்மீது நாமே வலிந்து சுமந்துகொண்ட இலக்குகளுக்கும் பின்னே அலைகையில், தனக்கேயான உலகத்தை மனம் ஒரு கூட்டுப்புழுவென பின்னிக்கொள்கிறது. பணமாகும் பட்டுப்புழு எப்படி ஒருபோதும் தன் கூட்டை உடைப்பதே இல்லையோ அப்படியே சில்லறை வெற்றிகளுக்குப் பின்னால் அலையும் மனங்களுக்கும் சிறகு முளைப்பதேயில்லை.

திசைகளைத் திமிறிச்செல்லும் சிறகுள்ள மனங்கள் மட்டும், அழகும் வலியும் நிரம்பி வழியும் புதிய உலகங்களைக் கண்டுகொள்கின்றன. அந்தக் கனவு உலகங்கள், எப்போதுமே நிச்சயிக்கப்பட்ட மாறிலிகளால் இயங்கும் புழுவின் கூடுபோல இருப்பதில்லை. இந்தத் தரிசனம் தரும் திடுக்கிடல் கிளர்த்திவிடும் நிலைக்கொள்ளாமையையே எழுதி எழுதிப் பார்த்து மொழியில் தன் உலகத்தை வரையறை செய்யமுயல்கிறது மனம். உலகம் பிதுங்கி வழியும் மனித நெரிசலிலும் இந்த உணர்வின் உலகங்கள் மட்டும் எண்ணற்ற பரிமாணங்களில் பிரிந்தே கிடக்கையில், புனைவின்மொழி எனும் ஒற்றைச் சாத்தியமே இவற்றை ஒன்று கோர்க்க எஞ்சியிருக்கிறது.

நுண்மை, பிரம்மாண்டம் எனும் துருவமுடிவிலிகளுக்கு இடையில் நிகழும் முடிவற்ற தாவல்களே என் மனவெளி. அதீத்தால் மட்டுமேயான அந்த பெருவெளிக்குள் நிகழும் பயணங்களின் குறிப்புகளையே கவிதைகளாக எழுதுகிறேன். அவை நான் கண்டடைந்த கனவு உலகங்கள் பற்றிய அனுபவக் குறிப்புகள் மட்டுமல்ல. யாரும் எப்போது விரும்பினாலும் அங்கே திரும்பிச்செல்வதர்க்கான வரைபடமும் கடவுச்சொற்களும் அடங்கிய ரகசியமும் கூட. அந்தக் கனவுகள் சூல் கொள்ளும் காலத்தையும் உணர்வையும் கருவில் கொண்ட விதைகளே நான் எழுதிச்சேர்ப்பவை. நித்தியமும் அகாலத்தில் உறைந்திருக்கும் அந்த உலகங்களை அடையும் ஆயிரம் வழிகளையும் சொல்லிவிடவே முயல்கிறேன். அதை உணர்ந்து நெருங்கும் வாசிப்பு, வாசிப்பவர்க்கு ஒற்றைச் சாளரத்தையேனும் திறக்குமென்பதே என் நம்பிக்கை. அப்படியோர் சிறகு என் அந்தகாரத்தின் தனிமைக்குள் ஒலிக்குமென்றே காத்திருக்கிறேன்.

மேலும், தனிமையைப் பற்றியே நான் அதிகம் எழுதுவதாக சொல்லப்படுவதை அறிகிறேன். தனிமை மட்டுமல்ல இரவும் என் எழுத்தில் எப்போதுமிருக்கும் பாத்திரம்தான். ஏனெனில், இரவும் தனிமையும்போல நான் அணுகியறிந்தவை ஏதுமில்லை. பகலென்பதும் வாழ்வென்பதும் எனக்கென்றும் தெளிவற்ற கனவுகளே. தனிமைக்குள் உறையும் இரவென்பதும் கனவென்பதுமே எனது நித்திய சஞ்சாரம். அந்தக் கருவறையின் வாசனை என் மொழியில், குரலில், ஒலிப்பதை தவிர்ப்பது கடினம். மேலும் இந்தத் தனிமையின் நிறத்தை, மணத்தைப் பாடும் ஆயிரம் பாடல்களே என்னில் கிடந்து அலைக்கழிக்கும் விசைகள். அவற்றைப் பாடித்தீர்ப்பதொன்றே இந்தப் பறக்கத்துடிக்கும் புழுவிற்கு இறக்கை முளைத்து பட்டாம்பூச்சியாகும் வழி. அதுவே என்னை எழுதவும் செய்கிறது.

oOo

(கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இருக்கும் கோவிந்தபுத்தூர் சொந்தஊர். இளங்கலை முசிறியிலும் முதுகலை திருச்சி பாரதிதாசன் பல்கலையிலும். அதன்பிறகு சில ஆண்டுகள் இந்திய அறிவியல் கழகத்தில் பணி, தற்போது ஃபின்லான்ட் தாம்பரே தொழில்நுட்ப பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு. சொல்வனம், பதாகை, திண்ணை, இன்மை மற்றும் சில இணைய இதழ்களில் கவிதைகள் வெளியாகி வருகின்றன. புனைவு மற்றும் அபுனைவு எழுத்தில் தீவிர வாசிப்பு அறிவியலுக்கு நிகரான இணை வாழ்க்கையை எனக்கு அளிக்கிறது, என்று கூறும் சோழகக்கொண்டல் காந்திய சிந்தனை, ஆன்மீக, அரசியல் மற்றும் இயற்கை தத்துவங்களில் ஈடுபாடும் தொடர்ந்த பயிற்சியும் கொண்டவர். தற்போது, மக்களாட்சி எனும் தத்துவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்).

நான் ஏன் எழுதுகிறேன் – வை. உஷா

வை. உஷா

இந்தத் தலைப்பில் கட்டுரை எழுத ஆரம்பிக்கையில் முதலில் சிரிப்பு வந்தது.  எழுத்து எனச் சொல்லிக் கொள்ளவே தயக்கமாக இருக்கும் ஆரம்ப நிலையில் இருக்கும் என் போன்றோர் இதைப் பற்றி என்ன எழுதுவது, இது முதிர்ந்த படைப்பாளிகளிடம் கேட்டு அறிய வேண்டியதல்லவா என்று தோன்றியது. ஆனால் சில பத்திகளை அடித்துத் திருத்தி எழுதிய பின்பே ஞானோதயம் வந்தது. சிறந்த எழுத்தாளர்களுக்கு எழுத்து ஒரு கலை. அவர்கள் ஏன் எழுதுகிறார்கள் எனக் கேட்கத் தேவையில்லை. அவர்களுக்கு எழுத்து என்பது பேச்சைப் போல இயல்பாக வருவது. அவர்களால் தம் எழுத்தின் மூலம் நம்மை சந்தோஷப்படுத்த அழவைக்க, நம் ஆன்மாவை உலுக்க முடியும். ஆனால் எழுதுவதற்கான முனைப்பும் மொழி ஆர்வமும் மட்டுமே உள்ள மற்றவர்கள் எழுதும்பொழுது கட்டாயம் தம்மைக் கேட்டுக் கொள்ளவேண்டிய முக்கியமான கேள்வி இது. நல்ல எழுத்துக்கு மொழித்தேர்ச்சி மட்டுமே போதாது. எதற்காக எழுதுகிறோம் என்ற தெளிவும் தேவை.

‘நான்’ ஏன் எழுதுகிறேன்’ (Why I write) என்ற தலைப்பில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய கட்டுரையில் தான் மட்டுமன்றி பொதுவில் எழுத்தாளர்கள் எழுதுவதற்கு நான்கு காரணங்களை அவர் முன்வைக்கிறார்:

  1. உலகில் தன் அடையாளமாக எதையோ விட்டுச் செல்லும் அகந்தை உணர்வு (sheer egoism),
  2. மொழியின் வடிவிலும் சப்தங்களின் மேலும் அவற்றை உபயோகிக்கும் திறனிலும் உள்ள அழகுணர்ச்சி சார்ந்த ஆர்வம் (aesthetic enthusiasm),
  3. உலகை அப்படியே பார்த்துப் புரிந்துகொள்ள முனைந்து அதை எழுத்தில் ஒரு வரலாற்று ஆவணமாய் வருங்காலத்துக்கு விட்டுச் செல்லும் வேட்கை (Historical impulse),
  4. மக்களின் எண்ணங்களை பாதிக்குமளவினால எழுத்தின் மூலம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் (Political purpose).

ஒவ்வொரு எழுத்தாளரிடமும் இவற்றில் ஒன்றாவது காணப்படும். இவற்றில் அகந்தையுணர்வு பொதுவான மனித இயல்பு – நாம் குழந்தைகளை உருவாக்குவதற்கும் அதுதானே காரணம்? ஆனால் மற்ற மூன்றில் ஒன்றின் வலிமையாவது இருந்தாலன்றி சிறப்பான எழுத்தைப் படைக்க இயலாதென்றே தோன்றுகிறது.

ஒரு உணர்வோ, எண்ணமோ, கருத்தோ அதை எழுதிப் பார்க்கையில் அதைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. முதலில் பிரம்மாண்டமாய் தோன்றிய பிரச்சினைகளின் ஆகிருதிக்கு முக்கிய காரணம் நம் அகங்காரம்தான் எனப் புரிகிறது. எழுத்தில் கோர்வையாய் சொல்லமுடியாது போகிற போது நம் எண்ணங்களின் அபத்தம் புலனாகிறது. இதே காரணத்தாலேயே எழுத்துக்கு நம்மையே யார் என்று நமக்குப் புலப்படுத்தும் வலிமை இருப்பதாகத் தோன்றுகிறது. நம் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு உணர்வையோ, எண்ணத்தையோ எழுத்தில் வெளிப்படுத்திப் பார்க்கையில் அதன் பல பரிமாணங்களில் பகுத்தறிய முடிகிறது. இத்தகைய பயிற்சி ஒருவிதத்தில் நம்மை சாந்தப்படுத்த, நல்லறிவு நிலையில்(with sanity) வைக்க  உதவுவதாகவும் தோன்றுகிறது. ஜோன் டிடியன் என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார்: ‘”நான் எழுதுவதற்கு முற்றுமான காரணம் நான் என்ன நினைக்கிறேன், நான் எதைப் பார்க்கிறேன், என்ன காண்கிறேன், அதன் பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே.'”

சில வருடங்களுக்கு வலைப்பக்கங்களில் இதே கேள்வியைக் கேட்ட போது பலரும் சொன்ன பதில் ”பகிர்தலுக்காக”. மனிதர்களிடையே தம் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கான தாபம் இயற்கையாகவே இருக்கிறது. அதே சமயம் அவற்றைப் பகிர்வதில் கூச்சமும் உள்ளது. அவசரகதியில் இயங்கும் இன்றைய உலகில் குடும்பத்தினரிடையே கூட பகிர்தல் குறைந்து வருகிறது. இதனால் மன அழுத்தமும் புரியாமையும் அதிகரித்து வருகின்றன. எனக்குத் தெரிந்த பல பெண்கள் கடிதத்திலோ டயரியிலோ எழுதுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறதாகச் சொல்கிறார்கள். மருத்துவரான என் நண்பர் வார்த்தைகளுடன் பழகிக் கொண்டிருப்பது மறதி அல்ஜைமர் போன்றவை வராமலிருக்க உதவும் என்கிறார். எல்லோரும் எழுதுவது நல்லது எனினும் எழுதியதைப் பிறரிடம் தடையின்றி பகிர்வதில் உள்ள கூச்சம், மொழியில் தேர்ச்சி, அதை கையாளும் லாகவம், முனைப்பு இவை அனைவருக்கும் அமைவதில்லை. அதனால்தான் பலரும் எழுதுவதில்லை.

இணையத்துக்குப் பின் தம்மை யார் என வெளிப்படுத்தாமல் அன்னியர்களுடன்கூட எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தடையின்றி பகிர்வதற்கு எழுத்து உதவுகிறது. இதே காரணத்தினாலேயே நானும் சில வருடங்கள் ஒரு வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். அன்னியர்கள் நம்மை நாம் எழுதுவதை வைத்து மதிப்பிடமாட்டார்கள் என்ற நிச்சயம் தடையின்றி எழுத உதவியது. அந்த வலைப்பக்கத்தில் கிடைத்த பயிற்சிதான் பின்வந்த வருடங்களில் என் பெயரிலேயே சில கதை/ கட்டுரைகளை எழுதும் துணிச்சலையும் கொடுத்தது.அந்த  அனுபவம் பிறர் படிக்க, பாராட்டத்தான் எழுத வேண்டுமென்பதில்லை, எழுதுவதே திருப்தியை அளிக்கும் திறன்கொண்டது என்றும் புரிந்தது.

எழுத்தாளர்கள் பலருக்கும் ஆரம்ப காலத்தில் எழுதுவதற்கான உத்வேகம் அவர்களுக்கு முன்னோடியான படைப்பாளிகளிடமிருந்து கிடைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு மகத்தான படைப்புகளைப் படிக்கையில்  ‘”எழுதினால் இப்படி எழுத வேண்டும். இல்லையெனில் எழுதக்கூடாது'” என்றே தோன்றும். இளமையிலேயே எழுத ஆரம்பிக்காததால்தானோ என்னவோ சிறந்த படைப்புகளைப் படிக்கும்போது அவற்றை மொழிபெயர்த்து இன்னும் பலருக்கும் அந்த வாசக அனுபவம் கிடைக்க வேண்டும் என்னும் உத்வேகமே தோன்றுகிறது. சிறப்பான எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தினால் பிற எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது எனக்குப் பிடிக்கிறது. இதில் எனக்கு ஒரு படைப்பு அனுபவமும் கிடைக்கிறது; ஒரு விதத்தில் மொழிபெயர்ப்பும் ஒரு மீள்படைப்பு எனவே எண்ணுகிறேன். மூல எழுத்தின் சிந்தனையும் மொழி லாகவமும் சிதைபடாமல் இன்னொரு மொழியில் மாற்றம் செய்வது சிரமமானதாய் இருந்தாலும் முடிவில் அது ஓரளவேனும் (அதுதான் சாத்தியம்) மூலஎழுத்துக்கு நெருக்கமாக அமையுமெனில் கிடைக்கும் நிறைவு அந்த சிரமத்தை நியாயப்படுத்துவதாய் இருக்கிறது.

மொழிமாற்றம் செய்ய வெறும் மொழிஞானம் மட்டும் போதாது. ரசிப்பும் ஆழ்ந்த புரிதலும் தேவைப்படுகின்றன. என்னைக் கவர்ந்த படைப்பை மொழிபெயர்க்க இன்னும் ஆழமாகப் படிக்கையில் என் வாசிப்பனுபவம் முழுமையடைகிறது. மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளை மட்டும் மொழிமாற்றம் செய்வது அல்ல – கதையின் அந்நியமான களத்தின் மனிதர்கள் சமூகம், மொழிவழக்குகள் போன்றவையும் வாசகர் உணருமளவிற்கு சரியான இணைப்பதங்கள், வார்த்தை பிரயோகங்கள் என பலவித சவால்களை ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் மூல எழுத்தாளரின் மொழியை விட்டு வெகுவாய்  விலகிச் செல்லும் உரிமையையும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டியிருக்கிறது. இதனால்தான் இதை ஒரு மீள்படைப்பு என நினைக்கிறேன். அப்படி நினைப்பது எனக்கு மொழிபெயர்க்கும் ஆர்வத்தை நீடிப்பதாலும் கூட இருக்கலாம்.

ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கு மொழிபெயர்ப்பில் நான் ஈடுபட உந்தும் மேற்சொன்ன காரணங்களையே, அவை என்னுடைய கற்பனையே ஆயினும், சொல்லலாம். ஒரு சிறந்த படைப்பாளியின் எழுத்தை அவருடைய மொழியிலேயே படிக்கையில் கிடைத்த அனுபவத்தை மொழிபெயர்ப்பின் வாசகர் உணரும் அளவில் மொழிமாற்றம் செய்வது ஒரு பெரும்பணி. என்றாவது கூடுமானவரை அதை அடையும் முயற்சிதான் என் எழுத்துக்கான தூண்டுதல்.

oOo

(“எழுத்ததே அறிமுகம் அதன் பின்னுள்ள எழுத்தாளரை அறிவது அநாவசியம்  என்னும் எண்ணத்தில் பொதுவாய் அறிமுகத்தைத் தவிர்க்க விரும்புபவள். சொல்லிக்கொள்ளுமளவில் எதுவும் படைத்ததில்லை என்பதினாலும். நல்ல எழுத்தின் மேலுள்ள ஆர்வம் சொல்வனம் பதிப்புக் குழுவில் இணைந்து செயல்படுவதற்கான ஊக்கம். நான்கு மொழிகள் ஓரளவுக்கு நன்றாகத் தெரியும் என்பது மொழிபெயர்ப்புக்கு துணை செய்கிறது. பெங்களுர்வாசி.”)

 

நான் ஏன் எழுதுகிறேன்? – செந்தில்நாதன்

செந்தில் நாதன்

நான் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளாக இணையத்தில் அங்குமிங்குமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னர் எதுவும் எழுதியதில்லை, நாட்குறிப்பில் கவிதை எழுதியதைத் தவிர. இணையத்திலும் மொழிபெயர்ப்பு (நான்கு சிறுகதைகள், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு இருபது கவிதைகள், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு நூற்றைம்பது பழந்தமிழ்க் கவிதைகள்) எழுத்துக்களே அதிகம்.

ஏதேனும் ஒரு படைப்புக்காகவாவது சன்மானம் வாங்கியவர் தான் எழுத்தாளர் என்றால் நான் எழுத்தாளனில்லை. மிஞ்சிப் போனால் ஒரு இருநூறு பேர் நான் எழுதியவற்றைப் படிப்பார்கள். நாலைந்து பேர் பின்னூட்டமிடுவார்கள். நான் இதுவரை எழுதியவற்றைப் புத்தகமாகப் போட்டால் ஒரு பத்து இருபது பேர் வாங்கலாம். ஆனாலும் விடாமல் எழுதத் தூண்டுவது எது?

நான் அறிந்தவற்றை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தான். இதில் உலகத்துக்கு எந்தப் பயனும் இருக்கிறதா என்ற கவலை எனக்கில்லை. எனக்கு சந்தோஷமாக இருப்பதால் எழுதுகிறேன். இதில் சற்று கர்வம் ஒளிந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் மதிக்கும் நபர்களிடம் இருந்து பாராட்டுகள் வரும் போது சற்றே மிதப்பாகத் தான் இருக்கிறது.

எழுதுவது எனக்குத் தொழில் அல்ல. தொழிலுக்கு நடுவே எழுதுகிறேன். அது போல எழுதுவதற்கு ஏற்ற இடம் என்றெல்லாம் எதுவுமில்லை. எனது பல படைப்புகள் நான் வாரா வாரம் இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது மனதில் எழுதப் படுபவையே. மனதளவில் ஒரு வடிவம் வந்த பிறகு தட்டச்சிடுவதே எனது எழுதுமுறை. காகிதத்தில் எழுதியது மிகமிகக் குறைவு. கணிணியிலும் கைபேசியிலும் தட்டச்சிட்டதே அதிகம்.

எழுதாமல் என்னால் இருக்க முடியுமா என்றால் முடியும் தான். ஆனால் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டேயிருக்கும். எழுதுவது என்னை முழுமையடைய வைப்பதாய் நான் நினைக்கிறேன். அதனால் எழுதுகிறேன். எனக்காகத் தான் எழுதுகிறேன். என் பார்வையை உலகமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பேராசையினாலும் தான் எழுதுகிறேன்.

oOo

(13 வருடங்களாக வலைப்பதிவுகளில் எழுதி வரும் செந்தில்நாதன், மொழிபெயர்ப்புகள் மூலம் இணையவெளியில் அறியப்பட்டவர். சங்ககாலக் கவிதைகள் முதல் நவீனக் கவிதைகள் வரை 150 கவிதைகள் மற்றும் சதத் ஹசன் மண்டோவின் 4 சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளார். தற்போது ஈடுபட்டிருப்பது பழந்தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பு – https://oldtamilpoetry.wordpress.com . சென்னையிலும் தூத்துக்குடியிலும் வசிக்கும் இவர், கனரக வாகன நிறுவனம் ஒன்றில் பங்குதாரராய் இருக்கிறார்)

எதற்காக எழுதுகிறேன்? – மோனிகா மாறன்

 

மோனிகா மாறன்

எதற்காக எழுதுகிறேன்? இதற்கு தனிப்பட்ட முறையில் என் பதில்- சிறந்த எழுத்து வாசிப்பவரைத் தொடர்ந்து சிந்திக்கவும் எழுதவும் வைக்கும் என்பதே. ஆக என் வாசிப்புகளின் தொடர்ச்சியே என் எழுத்து. எழுதி எழுதியே நம் தரவுகளை உருவாக்கிக் கொள்ள இயலும். அந்த வகையில் எழுத்து எனக்கு ஆக்கப்பூர்வமான தரவுகளையும் வாழ்வியல் வரைமுறைகளையும் உருவாக்குகிறது.

வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களை இச்சமூகம் எளிதில் ஏற்பதில்லை. என்னைப் பொருத்தவரையில் மிகச் சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகிற்கு வந்துவிட்டேன். எனவே நான் வாசித்த மிகப்பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றியே என் செயல்கள், பேச்சுகள் இருக்கும். ஆனால் நம் சமூகத்தின் பொதுவெளியில் அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக அவர்களின் காலங்காலமான நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிவிட இயலாது. அது மதமோ சினிமாவோ இலக்கியமோ அரசியலோ எதுவாக இருந்தாலும் நம் எண்ணங்களை வெளிப்படையாக இயம்புதல் எளிதானதன்று. இவ்விடத்தில் ஒரு பெண்ணாக இதனை நான் தீவிரமாக கூற இயலும்.

பொதுவாக, இதைப் பற்றியெல்லாம் நீ ஏன் பேசுகிறாய் என்ற பாவனையே எனக்கான எதிர்வினையாக இருக்கும். இத்தகைய சூழலில் எழுத்துலகம் எனக்கு முழுமையான வெளியாகவே உள்ளது. என் நினைவுகளை, சிந்தனைகளை மிக உண்மையாய் கட்டுப்பாடுகளற்று வெளிப்படுத்தும் தளம் எழுத்துதான். அத்தகைய விடுதலையை வேண்டியே நான் எழுதுகிறேன்.

தீவிர வாசிப்பும் நுண்மையும் கொண்ட எனக்கு எழுத்து என்பது என் இருத்தலின் ஆகச்சிறந்த உளவியல்  வெளிப்பாடு. எழுதுவதால் என் கருத்துகள், கொள்கைகள் மேலும் மேலும் வலுப்பெற்று என்னை உருவாக்குகின்றன. சில வேளைகளில் நான் எழுதும் படைப்புகளை எந்த இதழுக்கும் அனுப்பாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் அவை எனக்காக எழுதப்பபட்டவை. உண்மையில் பிரசுரமானவற்றைவிட பிரசுரமாகாத படைப்புகள் என்னிடம் நிறைய உள்ளன.

எந்த இதழுக்கு அனுப்பினாலும் இல்லையென்றாலும் தினமும் எதையாவது எழுதுவது என் இயல்பு.. எப்படி வாசிப்பின்றி என் நாள் நிறைவுறாதோ அதே போன்று ஒரு பக்கமாவது எழுதாமல் முடிவுறுவதில்லை. எத்தனை பணிகள் இருப்பினும் எந்தச் சூழலிலும் என்னால் எழுத இயலும் என்பதை தன்னம்பிக்கையுடன் கூற இயலும்.ம ஏனெனில் இன்று அதிகம் பேர் நேரமில்லை, சூழல் சரியாக இல்லை என்றெல்லாம் காரணங்கள் கூறுகிறார்கள்.

எனில் எப்படி என்னால் எழுத இயலுகிறது? தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், இணையம்  என்று பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில் இலக்கியம், தீவிர வாசிப்பு என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலோட்டமாக அதிகபட்ச கவன ஈர்ப்பாக பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் கூர்ந்து நோக்குவதற்கு நிறைய பேருக்கு விருப்பமில்லை. இவையெல்லாம் தெரிந்தும் எதற்காக எழுதுகிறேன்? எழுத்து என் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வழி மட்டுமன்று. அது என் வாழ்வின் அனைத்து செயல்களிலும் உள்ளது என்றே கூறுவேன். நான் எழுதுவதாலேயே பிறருடன் என் உறவுகள் மிகச்சீராக உள்ளன. அந்த புரிதலை உண்டாக்குவது என் எழுத்தே. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உண்மையான இயல்பு பிறர் நடத்தும் பாவனைகள், மெலோடிராமாக்கள்   எல்லாவற்றையும் புரிந்து கொள்ள அடிப்படை நான் எழுதுவதே.

பொதுவாக நான் மிக இயல்பாக, எளிதாக அனைவரிடமும் பழகும் இயல்புடையவள். என் நட்பு வட்டம் மிகப்பெரியது. என் கருத்துகளுடன் முரண்பட்டாலும் என்னுடன் பழக மிக விருப்பத்துடன் உள்ள நண்பர்களே அதிகம். நிறைய பேர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் விருப்பத்துடன் கேட்கும் வகையில் உண்மையுடன், கூரிய தரவுகளுடன், நண்பர்களிடமும் உறவுகளிடமும் சுவாரசியமாக பேசும் உற்சாக மனநிலை என் எழுத்தின் வாயிலாக நான் அடைந்ததே. எவரிடமும் பொய் முகம் காண்பிக்காமல் உண்மையாய் இருப்பது எத்தனை கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும்.

இத்தகைய சூழலில் பூச்சுகளற்று உண்மையுடன் வாழ எனக்கு அடிப்படையாக உள்ளது என் எழுத்தே. அந்த உண்மைத்தன்மையை, நட்புணர்வை, எவரையும் நேசிக்கும் பண்பட்ட மனதை எனக்களித்தது என் எழுத்தே என்று நான் உணர்ந்திருக்கிறேன். சமூகம், உறவுகள் சார்ந்த என்  உள எழுச்சிகளை, கோபங்களை நான் எவரிடமாவது நேரடியாகக் கூறியிருந்தால் இன்று நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்திருப்பேன். மனச்சீற்றங்களை என் எழுத்தில் கொட்டித் தீர்ப்பது என்னளவில் மிக இயல்பான மன நிறைவு என்பேன்.

எழுத்தின் வாயிலாக நான் உணரும் மனித மனங்களின் நுண்ணுணர்வுகள் வாழ்வில் அவர்களுடன் பழக எளிதாக உள்ளது. சோர்வுகளற்று, புலம்பல்களற்று, முணுமுணுப்புகளற்று, பேராசைகளின்றி வாழ்வின் எளிய மகிழ்வுகளையும் உன்னத அனுபவங்களையும் உற்சாகமாய் எதிர்கொண்டு பிறருக்கும் அந்த மனநிலையைக் கடத்தும் அளவிற்கு என்னை வைத்திருப்பது என் எழுத்தே. பிறரிடம் எனக்கான இடத்தை அளித்ததும் எழுத்துதான் என மகிழ்வுடன் பகிர்கிறேன்..

oOo

(மோனிகா மாறனின் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதைகள் மற்றும் சில கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இவரது நாவல் ஒன்று எழுதி முடிக்கப்பட்டு வெளியாக உள்ளது. செவ்வியல் மற்றும் தீவிர இலக்கிய வாசிப்பில் அதிக நாட்டம் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் பல முக்கிய புத்தகங்களுக்கு விமர்சனங்கள் எழுதியுள்ளார். வேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்).