முற்றுப்புள்ளி

போர்ஹெஸ்ஸின் நிலைக்கண்ணாடி

காலத்துகள்

போர்ஹெஸ் போல் நிலைக் கண்ணாடிகள் சாட்சியிருக்க என் வயது அதிகரிக்கவில்லை. பதின் பருவத்தில் ஆரம்பித்து, முப்பதுகளின் மத்தி வரை கண்ணாடி முன் எல்லோரையும் போல் நேரம் செலவழித்ததுண்டு, அவ்வளவே. செங்கல்பட்டில் வாழ்ந்த இருபது வருடங்களும் வீட்டிற்கே பொதுவாக இருந்த ஒரு கண்ணாடிதான். பின் கிழக்கு தாம்பரத்திற்கு வந்த போது என் அறைக்கு என்று தனியாக புதிய கண்ணாடி வாங்கி அதையே புதுச்சேரிக்கு குடி பெயர்ந்த பின்னும் உபயோகித்து வருகிறேன். ஆக, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களில் இரு கண்ணாடிகள்.

சவரம் செய்தபின், தலையிலும் முகத்திலும் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கும் வெண்மை குறித்து யோசிக்க ஆரம்பித்தவன், முப்பதுகளிலேயே  ஏன் கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்தேன் என்று யோசிக்க ஆரம்பித்து, பின் நாற்பதுக்கு பதில், முப்பத்தியந்திலேயே ‘ஒப்பனைகள் கலைந்து’, ‘அன்பின் பதட்டம்’ என் மேல் இறங்கி விட்டதோ என்று பயணித்து, போர்ஹெஸின் கண்ணாடிகள் குறித்து விசாரத்தில் இறங்கினேன்.    ஏன் இத்தகைய இலக்கிய/ இருத்தலியல்/ வாழ்வியல் விசாரத்தில் இறங்கினேன், என்று மற்றொரு விசாரத்தில் அடுத்து இறங்க முற்பட …..

‘ரீஸன்ட்டா போர்ஹெஸ் வாசிச்சியா’. முற்றுப்புள்ளியின்  அறைக்குள் நுழைந்த என்னிடம் அவர் கேட்டார். இரண்டு நாட்களாக இதற்கு மேல் தொடர முடியாமல், பெரியவர் முற்றுப்புள்ளியிடம் இது குறித்து பேசலாம் என்று எப்போதும் போல் முடிவு செய்து, அவருக்கு நான் எழுதியவரை அனுப்பி, சந்திக்க வருகிறேன் என்று கூறியிருந்தேன்.

‘எப்படி ஸார்..’

‘பர்ஸ்ட் வர்ட்டே அவர் பேர். ஸோ அவரை திருப்பி படிச்சிட்டிருக்கேன்னு கெஸ் பண்ண முடியாதான்ன, இதுக்கு ஷெர்லாக் வரணுமா’ என்றவர் தொடர்ந்து

‘உனக்கு இந்த பெடிஷ் ரொம்ப அதிகமா இருக்கு’ என்று கூறினார்.

‘எத ஸார் சொல்றீங்க’

‘யார படிச்சாலும், அவங்க பெயரை உன் ரைட்டிங்ல இன்க்லூட் பண்ண வேண்டியது. பொருந்துதா இல்லையானு யோசிக்கறதே கிடையாது’

‘இங்க பிட் ஆகுதே ஸார். போர்ஹெஸ் மெட்டா-பிக்க்ஷன் நிறைய எழுதினார், இந்த கதையும் அதே மாதிரி ..’

‘ஸோ, இந்த ரெண்டு பாராக்ராப்பை நீ பிக்க்ஷன்னு நம்பற’

‘ஆரம்பம் தான ஸார்.’

‘ஒண்ணுமே இல்லையேயா. ஷேவ் பண்றான், வழக்கம் போல செங்கல்பட்டு புராணம், நரைச்ச முடி, தேவதச்சன் கவிதையை வேற உள்ள கொண்டு வந்திருக்க. வாட் ஆர் யூ ட்ரையிங்?’

‘மிர்ரர்ஸ் வெச்சு கதை ஸார். டைட்டில், கண்ணாடிக்குள் இருப்பவன். மிர்ரர்லேந்து வேற முகம் கதைசொல்லியை எட்டிப் பார்க்குது, பேசுது,  அப்பறம் இந்த கதைசொல்லி, கண்ணாடிக்குள்ள  போயிடறான்,  அந்த முகம் வெளிய வருது. கதைசொல்லிக்கு கண்ணாடிக்குள் கிடைக்கும் அனுபவங்கள், இப்படி கதையை கொண்டு போகலாம்னு நினைக்கறேன் ஸார். பட் சரியா வருமான்னு தெரியல’

‘..’

‘ஸார்’

தலையசைத்தார்.

‘..’

‘நீ ஒரு டிபிகல், ‘பேசும் போது நல்லா பேசு, எழுதும் போது கோட்டை விட்டுடு’ கேஸ்யா. உன் ஐடியா ஓரளவுக்கு ஒகே, பட் உன்னால அதை எழுத்துல கொண்டு வர முடியும்னு எனக்கு தோணலை’

‘ஏன் ஸார்’

‘கண்ணாடிக்குள்ள போயிட்டான்னா, அதை வெச்சு பிலாசபி, மெட்டா-பிஸிக்ஸ் எல்லாம் கதைல வரலாம். ஸ்டோரிக்கு டெப்த், இன்டன்ஸிடி கிடைக்கும், அதே நேரம் மூளையையும், மனசையும் ஸ்டிமுலேட் பண்ணவும் முடியும். பட், போர்ஹெஸ் ஏற்கனவே எழுதியதை மாதிரியே இருக்கவும் கூடாது, உன்னுடைய தனித்துவம் தெரியணும். கேன் யூ டூ இட்’?

‘..’

மீண்டுமொருமுறை நான் எழுதியிருந்ததை படித்த முற்றுப்புள்ளி, ‘பர்ஸ்ட் டைம்மே தோணிச்சு, அதான் இப்ப திருப்பி படிச்சேன். இதே கதையை வேறெங்கேயோ நீயே எழுதியிருக்கல’ என்று கேட்டார்.

கிழத்திற்கு அசாத்திய ஞாபக சக்தி. ஆறேழே வருடங்களுக்கு முன் நான் எழுத ஆரம்பித்த போது செய்த குறுங்கதை முயற்சி தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் புனைவு.  நல்ல கரு, அதை இன்னும் விரிவாக எழுதலாம் என்ற எண்ணம். பெரியவர் அந்தச் சிறிய புனைவை ஞாபகம் வைத்திருக்க மாட்டார் என்று எண்ணியது தவறு.

‘ஆமா ஸார். நண்பர் தன் சைட்ல வெளியிட்டார்’

‘இப்ப எதுக்கு பழைய குப்பையை கிளர்ற’

கிழத்துக்கு நக்கல் அதிகம்.

‘எழுத ஆரம்பிச்ச டைம்ல வந்த ஐடியா ஸார், அப்ப ப்ளாஷ்  பிக்க்ஷன் மாதிரி தான் எழுத முடிஞ்சுது. வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது, அதான் இப்ப அதை இன்னும்  நல்லா ..’

‘ஸோ, எழுத ஆரம்பிச்சதிலேந்து இப்ப நீ இம்ப்ரூவ் ஆயிட்டேன்னு நினைக்கற’

‘..’

‘ஒகே, தப்பித் தவறி இது பப்ளிஷ் ஆகுதுன்னு வெச்சுப்போம், உன் ப்ரெண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாரா’

‘இல்ல ஸார். அவர் எப்பவுமே என்னை ஊக்கப் படுத்துவார், ப்ளஸ் இந்த முறை மாற்றி எழுதப் போறேனே. தலைப்பையும் மாத்திட்டேன்’

மீண்டும் கிழத்தின் தலையசைப்பு.

‘ஆனா லிட்ரரி எதிக்ஸ் பிரச்சனை வருமோன்னு ..’

‘நிறுத்துயா…அந்தக் கதையை இங்க கொண்டு வந்துடாத.. இம்சையா உன்னோட, நாய் எலும்புத்துண்ட கடிச்சிட்டே இருக்கற மாதிரி, ஒரே கதைய திருப்பி திருப்பி…’

‘..’

‘அந்த ப்ரெண்ட்ட சொல்லணும். அன்னிக்கு இந்த குறுங்கதைய வெளியிடாம இருந்திருந்தா நீ நாவல், தொகுப்புனு போயிருக்க மாட்ட..’

பெரியவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்ததாக நான்  காட்டிக் கொள்ளவில்லை. விமர்சனங்களை, அவை தனி மனித தாக்குதலாக இருந்தாலும், கோபப்படாமல் எதிர்கொள்வதே இலக்கியவாதியின் பண்பு என்பது என் எண்ணம். தவிர கிழத்திடம் எனக்கு இந்த புனைவின் பொருட்டு ஒரு காரியம் ஆகவேண்டும்.

‘வேற எப்படி ஸார் இதை கொண்டுட்டுப் போகலாம், அத பத்தி உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் வந்தேன்’

‘உனக்கு சிறுகதைலாம் வராத விஷயம், இனிமே உனக்கு அந்த சூட்சமம் புரிய வாய்ப்பில்லை. பேசாம எப்பவும் போல கதை எழுதிய கதை பாணில குறுங்கதையா மாத்திடலாம். அது தான் உனக்கு சரி வரும்’

‘அதை எப்படி ..’

‘ஒரு பாராக்ராப் இருந்தா கூட இந்தக் கதையை முடிச்சுடலாம்’

‘..’

‘ஏதாவது சஜெஸ்ஷென்ஸ் தர முடியுமா ஸார்’

‘…’

எத்தனை நேரம் முற்றுப்புள்ளி அமைதியாக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியாது. ‘சில நிமிடங்கள் அமைதி’ என்று புனைவுகளில் வருவது எனக்கு நம்ப இயலாத ஒன்றாக உள்ளது, இருவர் மட்டுமே உள்ள இடத்தில், சில, பல நிமிடங்கள் பேசாமல் இருப்பார்களா என்ன? ‘சில நொடிகள் மௌனம்’ என்று சொல்வது மிகவும் குறைவான காலகட்டமாக தோன்றுகிறது. ஒரு நிமிடத்திற்கு குறைவாக, முற்றுப்புள்ளி சிந்தித்திருப்பார் என்று மட்டும் என்னால் கூற முடியும். தன் கை விரல்களை பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து

‘ஓகே, இப்படி பினிஷ் பண்ணிடலாம்’ என்று கூறினார்.

சும்மா சும்மா நீ அப்பப்ப காத்து வாக்குல கேட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணாத, அப்பறம் போர்ஹெஸ்ஸோட புலியை ஏவி விட்டுடுவேன். ஒரு வேளை அது சிறுத்தையோ?- சரி ஏதோ ஒரு மிருகம், அதை விடு. உன்ன பத்தியே நினைச்சுக்கிட்டு இவ்வளவு புலம்பறியே, உன் மூஞ்சியையே இத்தன வருஷம் பாத்திட்டிருக்கற என் நிலைமையை பத்தி ஒரு செகண்ட்டாவது யோசிச்சிருக்கியா? செல்பிஷ் ஃபெல்லோ உன்னைப் பாத்துப் பாத்தே என் ரசம் எல்லாம் தீர்ந்து போய், கிழடு தட்டிடுச்சு  என்று பழிப்பு காட்டிவிட்டு நிலைக் கண்ணாடி முகத்தை திருப்பிக் கொண்டது.

குறிப்பு:

முற்றுப்புள்ளிக்கும் எனக்கும் இடையேயுள்ள உள்ள நட்பைக் குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே

குறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்

காலத்துகள் 

‘நீ பேசறது உன் எழுத்தை விட கொஞ்சம் பெட்டரா இருக்கும், மாஸ்க்கால மூடிட்டு பேசினா அதுவும் ஒண்ணும் புரியாத மாதிரி ஆயிடுது’ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. பெருந்தொற்று காலத்திலும், இலக்கியம் குறித்தும்,  நான் எழுதவதைப் பற்றியும் அவருடன் உரையாடுவதை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவர் வீட்டிற்கு வந்த காரணம் இலக்கியம் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாக நான் எதையும் புதிதாக எழுதவில்லை. ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று சொல்ல முடியாது. நான் எழுத்தாளனா என்ற தன் சந்தேகத்தை வெளிப்படையாக முற்றுப்புள்ளி கேட்பார், நான் அதை உள்ளூர என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. இன்று மீண்டும் எழுதத் தோன்றியது.

‘இப்ப சரியா இருக்கா ஸார்’

‘ஏன்யா கத்தற, போன்ல பேசும் போது தான் சில பேர்  இப்படி சத்தம்  போடுவாங்க, நீ எதுத்தாப்ல தான ஒக்காந்திருக்க’

‘சாரி ஸார். ஒரு சின்ன குழப்பம், அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்’

‘..’

‘ரொம்ப நாளைக்குப்பறம் இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன் ஸார்’

‘..’ ‘எதுக்கு’ என்று பெரியவர் வெளிப்படையாக கேட்காதது, நல்ல ஆரம்பம், அவர் மனநிலை மாறுவதற்கு சொல்லி விட வேண்டும்.

‘முதல் வரி  எழுதினேன் ஸார், நான் சொல்றது நம்ப முடியாத மாதிரி இருக்கும், அந்த நொடி போன் வந்தது ஸார். அதுக்கப்பறம் நாள் முழுக்க  கிட்டத்தட்ட மூணு நாலு மணி நேரம் போன்லையே இருந்திருக்கேன். தொடர்ச்சியா கால்ஸ். பர்ஸ்ட் லைனுக்கு பிறகு எதையுமே எழுத முடியலை’

‘என்ன அந்த வரி’

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம்.’

குட். நான் கூட நீ என்னமோ ‘இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ், இட் வாஸ் தி வர்ஸ்ட் ஆப் டைம்ஸ்’ மாதிரி ஏதோ எழுதிட்டியோன்னு நினைச்சுட்டேன். ‘

‘அந்த வரி என்னவாயிருந்த என்ன ஸார், கண்டின்யு பண்ண முடியலையே’

‘சரி, இப்ப  என் கிட்ட வந்து பேசிட்டிருக்கிறதுக்கு தொடர்ந்து எழுதியிருக்கலாமே. நானும் ஈவ்னிங்கை உருப்படியா ஸ்பெண்ட் பண்ணிருப்பேன்’ பெரியவரின் இத்தகைய பேச்சுக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

‘நாள் பூரா அடுத்து எழுத முடியாம போனது தான் எனக்கு குழப்பமா இருக்கு ஸார். இதுல ஏதாவது குறியீடா இருக்குமோ?’

‘குறியீடு எங்க திடீர்னு வருது’

‘இலக்கிய கடவுள்கள் இந்தக் கதையை நீ எழுத வேண்டாம்னு சொல்றாங்களோ’

‘சிம்பாலிக்கா சொல்றாங்களோன்னு கேக்கற? இங்க சிம்பாலிக் யூஸ் பண்ற இடத்தில், குறியீடு பொருந்துமா?’

‘..’

‘குறியீடுலாம், நல்ல மொழி வளம், சிந்தனை உள்ளவங்க உபயோகிக்கிற வார்த்தை. நீ நேரடியா எழுதறேன் பேர்வழின்னு அதையே கந்தரகோலம்  பண்ற ஆளு, உனக்கு எதுக்கு’

‘சரி, குறியீடு வேண்டாம். சகுனம்னு வெச்சுக்குங்க. கதையை ஆரம்பிக்கும் போதே தடங்கல் வருதே, இலக்கிய தெய்வங்கள் தரும் கெட்ட சகுனமா எடுத்துக்கலாமா’

‘உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா’

‘எனக்கு பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸார் , ஆனா பயமாயிருக்கே’

‘அதானே, ஓரு ரைட்டர் நேம் ட்ராப்பிங் பண்ணாம, அவரை க்வோட் பண்ணாம  பத்து நிமிஷம் கூட உன்னால பேச முடியாதே’

‘பேய், பிசாசு குறித்த தன்னுடைய நம்பிக்கை பற்றி இப்படி ஓரு ரைட்டர் சொன்னார்னோ, அவரை பெயரையோ நான்  குறிப்பிடலையே ஸார், நீங்க தான் இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்ன்னு இன்னொருத்தரை க்வோட் செஞ்சீங்க’

‘ஆனா அவர் தன் நம்பிக்கை குறித்து குறிப்பிட்டதையே தானே நீயும் சொன்ன’

‘நானும் அவர் மரபுல வந்தவன்னு….’  சொல்ல வந்ததை நிறுத்தினேன்

‘…’

பெரியவர் எதுவும் பேசவில்லையென்றாலும் , பல வருடங்களாக அவரிடம் இலக்கிய வசவு வாங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அவருடைய  மனவோட்டம்  புரிந்தது. இலக்கிய முன்னோடிகளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர் முற்றுப்புள்ளி, அதனாலேயே சாதாரணமாக ஏதாவது கூறினாலும், அவர்களை அது சிறுமைப்படுத்துவதாக  எண்ணிக்கொண்டு பொரிந்து தள்ளிவிடுவார். அதற்கு இடம் தரக் கூடாது.

‘நான் சொன்னதை நீங்க எப்பவும் போல விபரீதமாக புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஸார். அவர் மரபுல வந்தவன்னு, என் எழுத்தின் தரத்தை வெச்சோ, என்னை அவருடன் ஒப்பிட்டோ  சொல்லலை, அமானுஷ்யம் குறித்த அவர் நம்பிக்கை வழி வரேன்னு தான் சொல்றேன்.’

பெரியவரின் இறுக்கம் இளகியது.

‘குறியீடு, சகுனம் பத்திலாம் நீ கவலைப் படாத. நான் பல வருஷமா  உன்கிட்ட நேரடியாவே மூர்க்கத்தனமா  உன் எழுத்து மோசம்னு சொல்லிட்டு வரேன், அதையே நீ கண்டுக்காம எழுத்திட்டிருக்க. ஸோ நீ எழுத ஆரம்பிக்கும் போது, பூனையென்ன, புலி, பாம்பை நடுல சகுனமா விட்டால்  கூட நீ  மாறப் போறதில்லைன்னு  லிடரரி காட்ஸுக்கு  தெரியாதா என்ன. நீ வழக்கம் போல, எப்பவும் கொட்டற எழுத்துக்  குப்பையை கொட்டு’

‘ ‘ப’னாக்கு ‘ப’னான்னு நீங்க பாம்பு, புலின்னு சொல்லியிருந்தாக் கூட, எனக்கு அதுலயும் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ஸார். பாம்புகள் மேல் எனக்கிருக்கிற சரிசமான ஈர்ப்பும், பீதியும் பற்றியும், என் கனவுகளில் அவை அடிக்கடி வருவதும் உங்களுக்கு தெரியும். இன்னிக்கு எழுத ஆரம்பிச்ச கதையுடன் சர்ப்பம், எழுத்து, இரண்டையும் இணைக்கும் உளவியல் சிக்கல்னு இன்னொரு புனைவும் எழுதிடலாம்னு நினைக்கிறேன் ஸார். முடிஞ்சா இன்றைய தடங்கல்களையே கூட கதையா மாத்திடலாம். மூன்று புனைவுகள். வாட் டூ யு திங்க்?’

‘..’

‘ஸார்’

‘என்னை ஏன் கேக்கற’

‘என் ஐடியா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…’

‘நீ எப்படியும் எழுதத் தான் போற. ஒரேயடியா மூன்று கதைகளை நான் படிச்சுத் தொலைக்கணும். அதனால வரும் பாதிப்பை தடுக்க ஏதாவது தடுப்பூசியை இலக்கிய கடவுள்கள் தருவாங்களா, அவங்க கிட்டகூட உன் எழுத்திலிருந்து காப்பாற்றும் மருந்து இருக்காதே’

 

பிற முற்றுப்புள்ளி கதைகள்

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

குற்றமும் தண்டனையும் – காலத்துகள் சிறுகதை

முட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை

ஞாயிறு மதியம் ஒரு மணியளவில் நண்பனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ‘சண்டே லஞ்சுக்கு வாடா,’ என்று நேற்று அழைத்திருந்தான். நான் மட்டும் வருமாறு அவன் சொல்லவில்லையென்றாலும், என் குடும்பத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதால் குழம்பினேன். ஆனால் முன்பொருமுறை மனைவி, மகனுடன் அவன் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டிருப்பதால் தங்களை அழைக்கவில்லை என்றாலும் என் வீட்டினர் கோபப்பட மாட்டார்கள் என்பதால் நான் மட்டுமே செல்வதாக முடிவு செய்திருந்தேன். அடுத்த குழப்பம், தனியாக வரச் சொல்கிறான் என்றால் பணவுதவி கேட்கப் போகிறானோ? அவனுக்கு கணிசமான சம்பளம், சொந்த வீடு கட்டியிருக்கிறான். ஆனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. என் பெயரிலும் அபார்ட்மெண்ட் இருக்கிறது, கூடவே இன்னும் பதினொரு வருடத்திற்கு ஈ.எம்.ஐயும். எந்தப் பெயர் வைத்துச் சுட்டினாலும், அது கடன்தானே. அவனுக்கும் பணப் பிரச்சனை இருக்கக்கூடும். அப்படி அவன் கடன் கேட்டால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்திருந்தேன்.
‘பையன் எங்கடா?’ ஹாலில் அமர்ந்ததும் நான் கேட்க, ‘வெளையாட போயிருக்கான்’ என்றவனின் மனைவியும் ஹாலுக்கு வந்து பேச ஆரம்பித்தார். அலைபேசியில் நேரத்தை பார்த்தேன், வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. சமைக்கும் வேலை இல்லையா, அல்லது எல்லாம் முடித்து விட்டாரா? மகன் வேறு வீட்டில் இல்லை, கண்டிப்பாக உதவி கேட்கப் போகிறான். ‘ஒரு நிமிஷம், வாட்ஸாப் இம்சை. கடுப்பேத்தறாங்க, ரிப்ளை பண்ணிடறேன்,’ என்றுவிட்டு வாட்ஸாப்பில் வந்திருந்த மெசேஜ்களை படிக்க ஆரம்பித்தேன். நேர் உரையாடலைத் தவிர்க்க நான் கடைபிடிக்கும் உத்தி. வராத செய்திகளை படிப்பது போல் ஒன்றிரெண்டு நிமிடங்கள் கழித்தால் எதிரே பேசிக்கொண்டிருப்பவர் கவனமும் சிதறும்.

இந்த முறை உண்மையாகவே நான் படிக்கச் செய்திகள் இருந்தன. பள்ளி வாட்ஸாப் க்ரூப்பில், கூடப் படித்தவனின் அன்றைய கனவுக் கன்னியான சக மாணவி பற்றி ஒருவன் சீண்ட அதையொட்டி தொடர்ந்து பல மெசேஜ்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. என்னுடைய பங்களிப்பையும் அளித்தபடி, நண்பன் பணவுதவி கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தேன். நேற்றிலிருந்து பதில் கிடைக்காத கேள்வி, அந்த நேரத்திற்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் பதில். ‘ஸாரி, வாட்ஸாப் அன்இன்ஸ்டால் பண்ணிடப் போறேன்’ என்றபடி அலைபேசியை அருகில் வைத்து விட்டு எதிரே நோக்கினேன்.

ஹாலில் யாருமில்லை. நண்பனை பெயர் சொல்லி அழைத்ததற்கு எந்த பதிலுமில்லை. அவன் மனைவி பெயர் தெரியுமென்றாலும், அப்படிச் சொல்லி அழைத்ததில்லை. ‘சிஸ்டர்’ என்றழைப்பது என்னை வெறி கொள்ளச் செய்யும் செயல். ‘மேடம்’ பொருந்தாது. ‘ஏங்க, ஹலோ’ என்றபடி சமையலறை வாசலுக்குச் சென்றேன், யாருமில்லை. திறந்திருந்த அவன் மகனின் படுக்கையறை காலி. மூடியிருந்த மாஸ்டர் பெட்ரூம் கதவைத் தட்ட தயங்கினேன். விருந்தாளி வந்திருக்கும்போது அவனை விட்டுவிட்டு கதவை மூடி.. அதுவும் பகல் நேரத்தில்… வக்கிர புத்தி எனக்கு. தட்டியதற்கு பதிலில்லை. உள்ளே தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ? கதவைத் தள்ள, திறந்தது. இங்குமில்லை. வாசலுக்கு வந்து நடமாட்டமில்லாத தெருவை கவனித்த பின் மாடிக்குச் சென்று பார்த்தேன். எங்கே போனார்கள்?

காலை பத்து-இருபதுக்கு ‘எங்கே போனார்கள்?’ என்ற வரியை எழுதினேன். மாலை நான்கு மணியானது. என் நண்பனும் அவன் மனைவியும் எங்கு சென்றிருக்கக் கூடும் என்பதற்கான ஓரிரு சாத்தியக்கூறுகளைக்கூட என்னால் யூகிக்க முடியிவில்லை. புனைவெழுத ‘முயற்சிக்கும்’ எனக்கு ‘கற்பனை’ பிரச்சினைக்குரிய விஷயம் என்பதில் உள்ள நகைமுரணை நான் உணர்ந்தே இருக்கிறேன் என்றாலும், இந்தக் கதையை எழுத ஆரம்பித்ததற்கு காரணம் உண்டு. இதில் வரும் நண்பன் கற்பனை பாத்திரம் அல்ல, பத்து நிமிட தூரத்தில் வசிப்பவன்தான். ஏழெட்டு மாதத்திற்கு முன் வாட்ஸாப் க்ரூப்பொன்றை உருவாக்கி அதில் என்னையும் சேர்த்தான். பத்து பேர் இருந்திருப்போம். ஆரம்பத்திலிருந்தே அதில் எந்த உரையாடலும் பெரிதாக நிகழவில்லை. ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கம் சொல்லும் மெசேஜ்கள் சில நாட்கள் வந்து பின் அவையும் நின்றன. சென்ற வாரம் இந்த குழுமம் குறித்து நினைவுக்கு வந்து அதில் நுழைந்தேன். என்னையும், வேறொருவரையும் தவிர மற்ற அனைவரும் க்ரூப்பிலிருந்து வெளியேறி இருந்தார்கள். அதை ஆரம்பித்த என் நண்பனும்தான். அவனை வாரமொரு முறையேனும் பார்க்கிறேன், தினமும் வாட்ஸாபில் உரையாடுகிறோம், ஆனால் இதை அவன் என்னிடம் சொல்லவில்லை. அவனை வசை பாட அலைபேசியில் அழைப்பு விடுக்க எண்ணியவனுக்கு ஒரு விஷயம் உறைத்தது. இது ஒரு அபத்த சுவை கொண்ட சம்பவம் (அல்லது நான்அப்படி தான் அதை எடுத்துக் கொள்கிறேன்), இதை புனைவாக்கிவிடலாமே.

நண்பன் செய்ததை விவரித்து, அதனால் கடுப்புறும் கதைசொல்லியாகிய நான், புதிதாக இன்னொரு க்ரூப்பை உருவாக்கி அதில் அவனைச் சேர்த்து பின் விலகி விடுவதாக முதலில் எழுத எண்ணியதை அது புனைவு போல இல்லையென்பதாலும், சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கும் செயலாக இருப்பதாலும் அதை ஒதுக்கினேன். ஏன் நடந்ததை அப்படியே எழுத வேண்டும். அவனை பழிவாங்க வேறு வழி இல்லாமலா போய் விடும் என்று தான் இந்த புனைவின் ஆரம்பத்திலுள்ள ‘கதையை’ எழுத முயன்று, பிள்ளையாரை எப்போதும் போல் குரங்காக மாற்றினேன்.

இரண்டு நாட்கள் அந்தக் கதையை பற்றி யோசிக்காமலிருந்துவிட்டு . மீண்டும் அதை எடுத்தேன். மர்மம், திகில் என கதையின் ஆரம்பம் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக உள்ளது என்றுதான் நினைக்கிறேன், ஆனால் இதுவரை அதை கொண்டு செல்லும் வழி புலப்படாத நிலையில் இனி அது தோன்றுமென்று நம்புவது வீண். என் போதாமைகளை நன்குணர்ந்தவன் நான். தவிர இதை திகில் கதையாக எழுதி முடித்தால் இலக்கிய உலகின் அவச்சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும். அதில் எனக்கு அனுபவம் உண்டு. எனவே மீண்டும் முதலில் யோசித்தது போல் நண்பன் செய்ததை விவரித்து அதை வேறு திசையில் கொண்டு செல்லலாம்.

இந்த முறை என் முன் சில பாதைகள் தெரிந்தன.

  • க்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவருடன் கதைசொல்லி ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்து, அவர்களுக்கிடையில் ஏற்படும் உறவை விவரிக்கலாம். அந்த ஒரு கணம், யோசிக்காமல் கதைசொல்லி அனுப்பும் செய்தி இரண்டு பேரின் வாழ்வை எப்படி திசைமாற்றுகிறது என்பது பற்றிய புனைவாக அது உருபெறக்கூடும். ஆனால் ஆண்-பெண் உறவு என்ற பகற்கனவை பேசும் கதை, அதை எழுதியவன் எளிய குமாஸ்தா என்ற விமர்சனம் வரும்.

 

  • க்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவரிடம் கதைசொல்லி, ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்கிறான். அந்தப் பெண் ‘என்னை தொந்தரவு செய்யாதீர்கள்,’ என்று பதில் அனுப்ப, இவன் எரிச்சலுற்று தொடர்ந்து ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கங்களை அனுப்புகிறான். அந்தப் பெண் தொடர்ந்து கடுமையாக எதிர்வினையாற்றுகிறார். வாட்ஸாப் மோதல் முற்றி, கதைசொல்லி அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையால் பீடிக்கப்படுகிறார். அவளுடைய பேஸ்புக் விவரத்தை கண்டுபிடித்து இணையத்தில் பின்தொடர ஆரம்பிக்கும் கதைசொல்லி, பின் வீட்டின் முகவரியையும் அறிந்து கொண்டு மாலை வேளைகளில் அந்தத் தெருவிலேயே சுற்றுகிறார். தான் வெளியே செல்லும்போதெல்லாம் பின்னால் ஒருவன் வருவதை கவனிக்கும் அப்பெண் முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும் பின் பயந்து கணவனிடம் இது குறித்து சொல்கிறார். கதைசொல்லிக்கும் கணவனுக்கும் மோதல் (வாய்ச் சண்டை தான், கைகலப்பு பற்றி எனக்கு எழுத வரவில்லை), அதன் பின்பும் தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாத கதைசொல்லி, ஒரு கட்டத்தில் உளச்சிக்கல் முற்றி அப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்து விட அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்கிறார்கள். பெரிய சிக்கலில்லாத மத்திய தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் சிதைவதை பற்றிய புனைவு, காமம் – எளிய பகற்கனவு – சிறிது கூட கிடையாது, எனவே இந்தக் பாதையைப் பொறுத்தவரை நான் குமாஸ்தா இல்லை. ஆனால் ‘மிட் ஏஜ் க்ரைசிஸ்’ பற்றிய சராசரி கதை என்று இது விமர்சிக்கப்படக்கூடும். ‘என்னடா உன்னோட சொந்தக் கதையா இது,’ என்று கேட்கும் நண்பர்கள் வேறு எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.

 

  • க்ரூபில் கதைசொல்லியைத் தவிர யாருமே இல்லை. தான் அனுப்பிய செய்திகளால் தான் அனைவரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைக்கும் கதைசொல்லி வெறிகொண்டு அந்த குழுமத்தில் தொடர் மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பிக்கிறான். பின் அச் செய்திகளுக்கான எதிர்வினைகளும் அவனாலேயே அனுப்பப்படுகின்றன. ஒரு செய்திக்கு நாலைந்து விதமான – அதை ஏற்றும், மறுத்தும் – எதிர்வினைகளை அனுப்ப ஆரம்பிக்கிறான். குழுமத்தில் கடும் விவாதங்களை ஒற்றை ஆளாய் அவனே நடத்தி, வேறெதிலும் கவனம் செலுத்தாமல் பாராட்டுக்களும், வசைகளும் நிறைந்து வழியும் அந்தக் குழுமத்தில் மூழ்கி விடுகிறான். (ஒரு ஆள் மட்டும் உள்ள க்ரூபில், கேள்வியும் நானே, பதிலும் நானே பாணியில் மெசேஜ் அனுப்ப முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்). கொஞ்சம் கூட நம்பும்படி இல்லையென்ற விமர்சனம் இந்தக் கதைக்கு கண்டிப்பாக வரப்போகிற விமர்சனத்தை மெய்நிகர் இணைய உலகைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை இந்தக் கதை முன்வைக்கிறது என்று எதிர்கொள்ள முடியும். முந்தைய பேஸ்புக் போஸ்ட்டை விட சிறிது குறைவாக லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்தாலும் சோர்வடைபவர்களைப் பற்றியும், நடுநிசியில் முழித்து அன்று மாலை தாங்கள் செய்த போஸ்ட்டிற்கு எத்தனை பேர் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் பற்றியும் நாம் படிக்கிறோமே?

வார இறுதி வரை காத்திருந்தேன். மூன்றில் எதை தேர்வு செய்தாலும், ‘த ரோட் நாட் டேக்கன்’ என்று நான் வருந்த வாய்ப்பில்லை, எந்தப் பாதையில் சென்றாலும் அதன் முடிவு, புதைகுழி அல்லது முட்டுச்சந்துதான் என்று உறுதியாக தெரிந்தது. நிஜத்தை நிழலாக்குவது என்னால் இயலாது, எனவே நிஜத்தை அப்படியே எழுத வேண்டியதுதான். அதாவது, நடந்ததை நடந்தபடி விவரித்திருக்கும் இந்தக் கதை.

இதை நேற்றிரவு எழுதி முடித்து விட்டு பெரியவர் முற்றுப்புள்ளிக்கு அனுப்பினேன். இன்று பலமான காலையுணவை சாப்பிட்டு அவர் வீட்டிற்கு கிளம்பினேன். என் கதைகள் குறித்த அவருடைய விமர்சனங்களை கேட்டபின் அன்று முழுதும் உண்ணவே தோன்றாது, எனவே என் செவிகளுக்கான உணவை அவர் தரும் முன் என் வயிற்றை நிரப்பி விடுவேன். அவர் என்ன சொல்வார் என்பதும் எனக்கு இப்போதே தெரியும். (எப்போதும் அவர் சுட்டிக்காட்டும் இலக்கிய ஆளுமைகள்/ படைப்புக்கள் பற்றிய பெயர் உதிர்த்தல்கள் இந்தப் புனைவில் அதிகம் இல்லை என்பது சாதகமான அம்சம் என்று இப்போதே என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன்1). அவர் விமர்சனத்தையும் புனைவாக்கி விடலாம். இரண்டு கதைகள். இரண்டில் ஒன்றாவது பிரசுரமாகாதா?

எப்படியிருந்தாலும் சரி, முற்றுப்புள்ளியை சந்தித்து திரும்பும்போது, இந்தக் கதையை என் நண்பனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு நான் தரக்கூடிய ஆகக் கொடூரமான தண்டனை இதுவாகத்தான் இருக்க முடியும். (‘ஆகக் கொடூரம்’ என்று எழுதவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால், ‘ஆகச் சிறந்த’, ‘பேரன்பு’, ‘பெருங்கோபம்’, ‘ஆயிரம் அன்பு முத்தங்கள்’, ‘பெருங்கதையாடல்’ போன்ற மிகை சொற்றொடர்கள் இப்போது அதிகம் உபயோகப்படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுவதால் நானும் அப்படியே செய்திருக்கிறேன், மற்றபடி இது பொருத்தமாக உள்ளதா என்பது குறித்து வாசகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்)

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’
‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.
‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’
‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை சொல்லாம உன்னால ஒரு பத்து நிமிஷத்துக்கு இருக்க முடியுதான்னு பாரேன்’
‘பண்லாம் ஸார், இது குறுங் கதை தானே, நோ ப்ராப்ளம். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவு ஸார். நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட், பப்ளிக் எக்ஸாமுக்கு முதல் நாள் நைட் எதையும் படிக்காம தூங்கிட்டு காத்தால ஏழு மணிக்கு தான் எழுந்துக்கறேன்..’
‘இது நிறைய பேருக்கு வர கனவு தான், நத்திங் ந்யு ஆர் ஸ்பெஷல்’
‘நான் முடிக்கல ஸார். கனவுன்னு நான் சொன்னேன்ல, அது தப்பு. ஆக்‌ஷுவலா அது கனவுக்குள்ள கனவு, அதாவது என் கனவுல நான் ட்வல்த் ஸ்டூடன்ட்டா   இருக்கேன்ல , அந்த பையன் தான் பரீட்சைக்கு எதுவும் படிக்கமா தூங்கிடற மாதிரி கனவு காணறான், நான் இல்ல.. அவன் பயந்து போய் முழிச்சுகிட்டு எல்லாம் கனவுன்னு புரிஞ்சுக்கிறான், அதே நேரம் எனக்கும் தூக்கம் கலஞ்சிருச்சு’
‘சரி இதுக்கும் நீ மொதல்ல சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்’
‘இனிமே தான் விஷயமே இருக்கு. நான் ஒரு குறுநாவல் எழுதிட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமில்லையா’
‘அதான் ரெண்டு வருஷமா நீ முக்கி முக்கி எழுதிட்டிருக்கறத என்கிட்டே அப்பப்ப படிக்க குடுக்கறியே’
‘அதுல பத்து நாளா திருத்தங்கள் செஞ்சிட்டிருக்கேன் ஸார்’
‘அப்ப அதையும் என் கிட்ட படிக்க தரப் போற, எத்தனை தடவையா உன் செங்கல்பட்டு புராணத்தை படிக்கறது’
‘அத விடுங்க. கதைல அந்த பண்ணண்டாவது படிக்கற பையன் இருக்கான்ல..’
‘நீதான அவன், மூணாவது மனுஷனை பத்தி சொல்ற மாதிரி பேசற’
‘கதைப்படி அவன் பாத்திரம் தானே ஸார். அந்த பையன் இதே மாதிரி, அதாவது, எக்ஸாமுக்கு ப்ரேபர் பண்ணாத மாதிரி கனவு கண்டு பயந்து எழுந்துக்கற மாதிரி ஒரு பகுதி எழுதியிருக்கேன் ஸார். அதுக்கு அடுத்த நாள் நைட் எனக்கு இந்த மாதிரி கனவு வருது, லைப் இமிடேட்ஸ் ஆர்ட். நீங்க ரைட்டர்/புக் பேர்லாம் தான சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க, ஸோ ‘க்வோட்ஸ்’ யூஸ் பண்றது தப்பில்லை.’
‘நீ திருந்த மாட்ட’
‘வாழ்கையே ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டோட புனைவு மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னது கரெக்ட் தானே ஸார்’
‘ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டா, என்னய்யா ஹாரி பாட்டர கதைக்குள்ள கொண்டாற’
‘நீங்க தானே நேம் ட்ராப்பிங் கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க நீங்களே புக் பெயரை சொல்றீங்க. எல்லாரும் கவனிங்க முற்றுப்புள்ளி ஸார் தான் அவர் சொன்னதை தானே மீறியிருக்கார், நான் இல்ல’
‘ஏன்யா திடீர்னு அந்தப் பக்கம் பார்த்து பேசற’
‘வாசகாஸ் கிட்ட பேசறேன் ஸார், போர்த் வால்ல ப்ரேக் பண்லாம்னு தான்’
‘வாசகாஸா, கஷ்டம். போர்த் வால்ன்னா என்னனு தெரியுமாய்யா, விட்டா சுவத்த பார்த்து பேசுவ போல’
‘வுட்டி அல்லன்லாம் அதை உடைச்சிருக்கார்ன்னு கேள்விப் பட்டிருக்கேன் சார்’
‘அதுக்காக நீயும் கடப்பாறைய எடுத்துக்கிட்டு வந்து வீட்டு சவுத்த உடைச்சிறாத. நீ பண்ணக் கூடிய ஆளு தான். இலக்கியம்னு இல்ல பொதுவாவே ஆர்ட்ட பொறுத்த வரைக்கும் படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில் கேஸ்யா நீ’
‘அதெல்லாம் மாட்டேன் ஸார்.’
‘பார் எ சேஞ் நீ சொல்ற கனவு விஷயம் ஓரளவுக்கு சுவாரஸ்யமா இருக்கு, இதை கதையாக்க ட்ரை பண்ணு’
‘இன்னொரு ஐடியாவும் இருக்கு ஸார்’
‘இதான் ஒன்கிட்ட பிரச்சனை, நிறைய ஐடியா இருக்கு, எதையும் உருப்படியா எக்ஸிக்யூட் பண்றதில்ல’
‘கேளுங்க. காலத்துகள் குறுநாவல் எழுதிட்டிருக்கார், அதுல வர கனவு மாதிரியே நிஜத்துலயும் அவருக்கு ஒரு கனவு வருது, இப்ப நான் சொன்ன அதே விஷயம் தான். இதை வெச்சு அவருக்கு ஒரு ஐடியா கிடைக்குது, போர்ஹெஸ பாத்திரமா வெச்சு குறுங்கதை எழுதிட்டு தூங்கப் போறார். அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் அந்தக் கதையை ப்ரைஸ் பண்றாங்க. தூங்கி எழுந்த காலத்துகள், அந்தக் கனவை தன கதைல சேர்க்கிறார். அன்னிக்கு நைட்டும் அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் வராங்க. கதைல வர காலத்துகளுக்கு கனவு வருதா இல்லை கதையை எழுதற காலத்துகளுக்கா, எது நிஜ கனவு எது கனவுல வர கனவுன்னு புரியாத அளவுக்கு கதை ரிகர்ஸிவ் லூப்ல சுத்திட்டே இருக்குது’
‘ஹாரிபிள். இப்படி கன்றாவியா கனவு கண்டே உன் லிடிரரி லைப் முடியப்போகுது’
‘லைப், வாட் இஸ் இட் பட் எ ட்ரீம்’
‘உனக்கு ட்ரீம்யா,  எனக்கும் போர்ஹெஸுக்கும் நீ பண்றதெல்லாம் நைட்மேர்’