ரசனை

பா வண்ணம்…

குமரன் கிருஷ்ணன்

P7

சில படைப்பாளிகளின் புனைப்பெயர்கள், அவர்களின் ஆக்கங்களின் வழி நாம் அனுபவம் அடையும்பொழுது, ஜன்னலோர பயணங்களில் மரங்களின் இடையில் தோன்றி மறையும் சூரியனின் கதிர் போல அவ்வப்பொழுது நம்மை தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கும். “பாவண்ணன்” என்பதும் அத்தகைய ஒரு பெயரே…”(ப்)பா…” என்பது இப்போதைய தலைமுறைக்கு ஒரு சமீப கால திரைப்படத்தில் நாயகன் உச்சரித்து உச்சரித்து பிரபலமடைந்த வார்த்தை என்று மட்டுமே அறியும் அளவிலே தமிழ் தள்ளாடிக் கொண்டிருக்கையில், “பா” என்றால் பாட்டு அல்லது செய்யுள் வகை என்னும் பொருளையும் தாண்டி ருசிக்கத்தக்க அர்த்தங்களை நினைப்பில் வைக்கமாறு செய்யக்கூடியது.”பாவண்ணன்” உள்ளே இருக்கும் “பா”.

இவரது படைப்புகளை வாசித்து பழகிய பின், இப்பெயர் குறித்து பெரும்பாலும் எனக்கு இரண்டு உருவகங்கள் மனதில் தோன்றுவதுண்டு.

நெசவில் “பாவு” என்பதை “பா” என்பார்கள். பாவண்ணன் நெய்யும் மொழித்தறிகளில் ஓடும் “பாவு”,  நம் எண்ணங்களில் இழைக்கும் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் வண்ணக் கலவை மிக வசீகரமானது.

“பா” என்பதற்கு “நிழல்” என்றொரு அர்த்தம் இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். “நிழலுக்கு வண்ணம் தருபவர்” என்று யோசித்துப் பாருங்கள்… மனதின் நிழல் என்பது எண்ணம் தானே என்ற நினைப்பு நமக்குள் வந்து உட்கார்ந்து விடும். பின் அவரின் படைப்புகளை மறுவாசிப்பு செய்தால், அவரின் ஆக்கங்கள் எங்கும் நிறைந்திருப்பது நமது நிழலாகவும் அதற்கு அவர் பூசும் வண்ணங்களாகவும் நமக்குத் தெரியக் கூடும்…

“படைப்பாளி” என்பதன் பொருள் குறித்து இவர் சொல்வது [“ஒரு சிற்பம் ஓர் ஓவியம் ஒரு கவிதை“] இவரின் படைப்புகளுக்கே ஒரு அறிமுகம் தருவது போலவும், வாசிப்பு அனுபவம் நமக்கு வழங்கப் போவது என்ன என்று தெளிவு செய்வது போலவும் உள்ளது. “இந்த உலகம் ஏற்றுக் கொள்வதை சொல்ல வேண்டும் அல்லது இந்த உலகத்தை ஒரே ஒரு அங்குலமாவது முன்னகர்த்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எந்தவொரு படைப்பாளியும் இயங்குவது இல்லை. தோல்வியின் தருணங்களையும் துக்கங்களின் தருணங்களையும் முன்வைக்கின்ற படைப்புகளின் பின்னணியில் உள்ள மன எழுச்சி யாருக்கும் குற்ற உணர்ச்சியை ஊட்டுவதில்லை. இதுவும் இயற்கையே என்ற எளிய உண்மையை உணர்த்துவதாகும். எல்லாவற்றையும் கடந்து வந்த உலகில் இதுவும் கடந்து போகும் என்கிற வெளிச்சத்தை வழங்கும் தோழமை உணர்வை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது” என்ற இவரின் எண்ணம் இவர் படைப்புகள் முழுவதிலும் பிரதிபலிப்பதை நாம் காண முடியும்.

பாவண்ணனின் களங்கள் அனைத்துமே ஒரு நுட்பமான புரிதலின் வேர் நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. நாம் எத்தகைய முனைப்புடன் ஒரு தருணத்தின் மீதேறி நிற்க விழைந்தாலும் அத்தருணத்தின் பார்வையாளனாக மட்டுமே நம்மை ஆக்கி வேடிக்கை பார்க்கும் வல்லமை காலத்திற்கு உண்டு என்பதையும், நம் சிந்தனை, செயல், நினைப்பு, முதிர்ச்சி அல்லது முதிச்சியின்மை அனைத்தும் அத்தருணங்களின் தயவே என்பதையும், அவ்வாறு பெற்ற அனுபவத்தின் வாயிலாக நாம் எடை போடக்கூடிய நியாய அநியாயங்களும் தர்ம அதர்மங்களும் கூட மற்றொரு தருணத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல காலம் வகுக்கும் யுக்தியோ என்றொரு சிந்தனையும் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் நமக்குள் பதிகின்றன.

மேற்கூறிய “புரிதலின் வேர்” இரண்டு தளங்களில் இயங்கும் அற்புதமான உதாரணம் “வெள்ளம்“. மேல் தளம், சூரதத்தன் என்னும் ஒரு இளம் பிக்குவின் மனம் தன் “பாதை”யிலிருந்து விலகும் தள்ளாட்டத்தையும் அத்தள்ளாட்டத்தின் தருணங்களையும் விரிவுபடுத்துகிறது. எத்தனை நுட்பமாக என்றால், அப்படியொரு நிலை வரப்போகிறது என்பதன் தருணம், இரவெல்லாம் சேகரித்த நீர்த்துளியை காலையில் இழக்கும் இலையின் ஒரு நொடித்துளி மூலமாக பலகாலம் ஒருவன் சேகரிக்கும் அறிவையோ அனுபவத்தையோ வாழ்வியல் பாதையையோ ஒரு தருணம் இழக்கச் செய்யும் என்னும் படிமம் காட்சிப்படுத்தப்படுகிறது. தள்ளாட்டம் முடிந்த பின் அவன் தன்னையே “காணும்” தருணத்தையும் பின்னர் அவன் மனமே சொல்லும் தன்னிலை விளக்கத்தின் மூலமாக, புத்தரை கண்மூடி தியானிக்கும் பொழுதில் அவன் பிழையென்று நினைத்த நொடி சரியென்று நினைக்கும் தருணமாகவே பிக்குவின் உள்ளிறங்கி ஒளிர்வதாக முடிகிறது கதை. அதாவது கதையின் மேல்தளம்.

இம்முடிவிற்குள் நம்மை நுழைக்கும் வகையிலும், இக்கதையின் கருவிற்கு மட்டுமில்லாமல், எத்தகைய “தருணங்களின் அலைக்கழிப்பு”க்கும் பொருந்தும் வண்ணம் ஒரு பொதுத்தன்மை புகுத்தும் வகையிலும் புத்தரின் நான்கு வாக்கியங்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டமைப்பதன் வழியாக கதையின் முடிவை சாத்தியப்படுத்துவது கவனிக்கத்தக்கது. “ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை”, “சுவைகளில் சிறந்த சுவை சத்தியம்”, “மெய்யான அறத்தின் வழி அறிவதே சத்தியம்”, “சத்தியமே வாழ்வதற்கு சிறந்த வழி” என்பதன் வழியாக “அடித்தளத்தின்” அறிமுகம் நடக்கிறது. இந்த நான்கு கண்ணிகளின் இணைப்பிலோ அல்லது இணைக்க முடியாததன் இயலாமையிலோ தொங்கிக் கொண்டிருப்பவை தானே நம் வாழ்க்கையின் தருணங்கள்?

அடித்தளத்திற்கு செல்வதற்கான சாவி, கதையை வாசிக்கும் மனதுக்குள் இருக்கிறது. அதைக்கொண்டு அடித்தளத்தை திறப்பதற்கான தருணம், அதுவரை மனதுக்குள் கொட்டிக்கிடக்கும் தருணங்களின் தயவில் உருவாவதே…! எனவே இக்கதையின் அடித்தளம் அவரவர் மனதின் தளமே.

கதையின் பாத்திரங்கள், பின்புலன்கள், இச்சைகள் அனைத்தும் அடித்தளத்தில் குறியீடுகளே…

ஒரு தருணத்தை விலக்க விழையும் மனது. அத்தகைய விலக்குதல் பற்றிய விழைவை மனம் கற்பித்துக் கொண்ட தருணங்கள் வழியாகவே எதை விலக்க நினைத்ததோ அதன் வழியாகவே பயணம் போகும் அல்லது போக வைக்கப்படும் தருணங்கள் நம் அனைவரின் வாழ்விலும் உண்டு. அதன் உள்ளீடுகளே அடுத்த தருணத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இதுவே அடித்தள அனுபவம். தற்கால உலகம் நமக்குக் காட்டும் வாழ்வியல் மகிழ்ச்சிக்கான தருணங்களில் நாம் சிக்குவது இருப்பின் நியதி என்றாகி விட்டாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பிக்கு அத்தருணங்களில் தவிர்க்க விழைவதை நம்மை நாமே கூர்ந்து நோக்கினால் உணர முடியும் தானே?

கற்றல் என்பது அனுபவம் என்றால் கற்றல் நேரும் இடமும் நொடியும் நமக்குத் தருவது பேரானந்த அனுபவம் எனலாம். பாவண்ணன் அத்தகைய இடங்களையும் நொடிகளையும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கதையோ கட்டுரையோ, அது நிகழும் வரிகள் அப்படைப்புக்கும் இயல்பாய் அதை மீறிய நம் பிரத்யேக சிந்தனைக்கும் விருந்தாய் பொருந்துவது வாசிப்பவருக்கு மிகுந்த உவகை ஊட்டுவதாகும். “கடல் பார்ப்பது நல்ல விஷயம்…” என்று துவங்கி “கடல் கடவுளோட மனசு” என்று முடிக்கும் “அடைக்கலம்” ஆகட்டும், “யாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியா பொழுதுகள்” என்னும் வார்த்தை பிரயோகத்தின் வழியே நமக்குள் இறங்கும் [“பூனைக்குட்டி“] அடர்த்தியாகட்டும், “காட்டை யாராலும் முழுசா சுத்த முடியாது…அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் பார்த்துக்கலாம்” என்று சொல்லும் “குருவி மடம்” ஆகட்டும் வரிகளின் வழியே மனதில் வரிவரியாய் பதிந்து போகும் கற்றல் அனுபவங்கள்…!

பாவண்ணனின் படைப்புகள் நமக்குள் உணர்வுச் சுனையை உற்பத்தி செய்யும் ஊக்கியாக திகழ்பவை. அத்தகைய உணர்வுச் சுனையில் இருந்து வழிந்தோடும் துளிகள் போகும் வழியெங்கும் விட்டுச் செல்லும் ஈரத்தின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் மனிதத்தின் ருசி அலாதியானது. ஈரம் என்றாலே நினைப்புதானே? மண்ணின் ஈரம் மழையின் நினைப்பு; மனதின் ஈரம் நினைப்பை பற்றிய நினைப்பு. அவரின் பெரும்பான்மை கதைகளும் கட்டுரைகளும் நினைப்பை பற்றிய நினைவின் வாயிலாகவே உணர்வை ஊட்டுகின்றன. கடந்த காலத்துக்குரிய கடமையை நிகழ்கால தர்மமாக நினைக்கும் “அழைப்பு“, ஒரு தலைமுறை பெண்மைக்கு மறுக்கப்பட்ட உணர்வு சார்ந்த மறுப்பீடுகளின் நினைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் “வைராக்கியம்“, நினைப்பில் அல்லாடியே பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் “அட்டை“, கடந்ததன் நினைப்பையே தன் நிகழ்காலமாக மட்டுமின்றி நிரந்தர காலமாகவே ஆக்கிக் கொண்ட “அம்மா“, “பறத்தல்” குறித்த பேரனுபவங்களை மனதுக்குள் தூவிக் கொண்டே போகும் “ஒரு பறவையின் படம்“, ஒரு காலை நேர நடையை கூட காலத்தின் குப்பிக்குள் அடைக்க உதவும் கருவியான பறவைகள் நிரம்பிய மரம் தாங்கிய வீட்டின் நினைப்பைச் சொல்லும் “வலசை போகாத பறவை“, நமக்குள் மறைந்து போன எத்தனையோ முகங்களை மீட்டெடுக்கும் “மறக்க முடியாத முகம்“, நம் ஆசிரியர் ஒருவரையேனும் நினைக்க வைக்கும் “கோடியில் ஒருவர்“, சாலையில் பார்க்கும எந்தவொரு வியாபாரியின் முகத்திலும் அவரின் நதிமூலம் எப்படியிருக்குமோ என்று எண்ண வைக்கும் “கிஷன் மோட்வாணி” போன்ற கட்டுரைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்…

பாவண்ணனை வாசித்த பின், பேருந்து நிறுத்தங்களில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளை பார்க்க நேர்ந்தால் “குழந்தையும் தெய்வமும்” வழியே மனது குழையும்…மன வளர்ச்சி குன்றியவர்கள் என்ற கருதப்படுபவர்களை காண்கையில் எது மன வளர்ச்சி என்ற “விடை தெரியாத கேள்வி“யில் மனம் குவியும்…வசிப்பிடம் ஏதுமின்றி தெருவோரம் “வாழ்வைத் தேடி” வருபவர்களிடம் நம் பார்வை பதியும்…”கீழ் தட்டு” என்று சொல்லப்படும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சமூக தளத்திலிருந்து வரும் சிறுவர்களின் நடவடிக்கைகளில் “நான்கு எழுத்துக்கள்” பாய்ந்தால் மாற்றம் வாராதா என்ற என்ற எண்ணம் சூழும்…

பாவண்ணன் அவர்களின் எழுத்துக்கள்  நமக்குள் இறங்க மறுத்தாலோ, சற்றே அந்நியமாகத் தோன்றினாலோ, நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்த முடியாமல் இருப்பது போல் தெரிந்தாலோ, நாம் தெருவில் இறங்கி நடந்து வெகுநாட்கள் ஆகி விட்டன என்று பொருள். இன்றைய சமூகம் முன்னிறுத்தும் ஓட்டத்தில் நாம் எப்புறமும் பார்க்காமல் தங்க கூண்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பொருள். கூண்டை விட்டிறங்கி வானம் பார்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன பாவண்ணனின் ஆக்கங்கள்.

உருமாறும் அன்பும் உறவின் வன்முறையும்: பொம்மைக்காரி தொகுப்பை முன்வைத்து

சிவகுமார்

bommaikari

பாவண்ணனின் 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுதிதான்பொம்மைக்காரி”.  2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகள் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.  இந்தக் கதைகளை இதழ்களில் வெளியானபோதே வாசித்திருக்கிறேன்.  அந்த வாசிப்பு அனுபவத்துக்கும் படிக்கும் போது கிடைக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. தொகுப்பாக வாசிக்கும் போது கதைகளுக்கு இடையிலான ஒரு கதையாடல் வாசிப்பில் உருவாகின்றது.  ஒப்பீடு செய்தல் வாசக நடவடிக்கையாக மாறிவிடுகின்றது.  கதைக்கரு, கதைமாந்தர்கள், சம்பவங்கள் என இவ்வாறு பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நேரிட்டு விடுகிறது.  எனவே சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பது ஏதோ ஒரு வகையில் மதிப்பீட்டுச் செயலாகவே அமைந்து விடுகின்றது.  அதனுடன் தொகுத்துப் பார்த்தலும் நிகழ்கின்றது.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. அதிலும் ஆண்களுடனான பெண்களின் உறவில் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆழமாக முன்வைக்கப்படுகின்றன.  சாத்தியமாகக்கூடிய அனைத்து பெண்ஆண் உறவுகளும் இக்கதைகளில் பேசப்படுகின்றன.  பாலியல் சார்ந்த பெண்ஆண் உறவு குறித்த கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன.  இந்தப் பாலியல் உறவில் வன்முறையும் வஞ்சகமும் இணைந்து இருப்பது நுட்பமாக வெளிப்படுகிறது. ஓரிரண்டு கதைகளைத் தவிர பிற கதைகள் அனைத்திலும் பெண் பாத்திரமானது மையமாகவும் அப்பெண்ணின் உறவு கதையாடலின் முடிச்சாகவும் உள்ளது.

தொகுப்புக்குப் பெயராக உள்ளபொம்மைக்காரிகதையில் வள்ளிமாரி இருவரும் ஏழெட்டு வருஷமாக தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.  இருவரும் பொம்மை வியாபாரம் செய்பவர்கள்.  அவனிடம் அடிபட்டு அடிபட்டு அவள் பொம்மையாகவே மாறிவிட்டாள்.  தலைப்புக்கு இப்போது பல அர்த்தங்கள் விரிகின்றன.  பொம்மை விற்பவள், பொம்மை போன்று உருமாறி விட்டவள், விரலசைவில் ஆடும் பொம்மை என அர்த்தங்கள் அடுக்குகளாக மாறும்போது கதைக்கு வேறு பரிமாணம் கிடைக்கிறது.  வள்ளிமாரி உறவு என்பது வன்முறையானதாகவே உள்ளது.  உடலுறவு என்பது வள்ளிக்கு மற்றொரு உடல்ரீதியான தண்டனையாகும்.  சகித்துக் கொள்ளுதல்மூலம் அவள் உறவைத் தொடரச் செய்து வருகின்றாள்.  இருவரும் பொம்மை விற்க சந்தைத் தோப்புக்குப் போகின்றார்கள்.  பதினேழு பாளையத்துக்காரர்கள் சேர்ந்து நடத்தும் பெரிய சந்தை இது.  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டும் வள்ளியை வார்த்தைகளால் சிதைப்பதுதான் மாரியின் வழக்கம்.  பொம்மை வாங்குவதாக பாவனை செய்து கொண்டு நாலைந்து இளைஞர்கள் வள்ளிக்குப் பாலியல் தொந்தரவு தருகின்றனர். மாரியின் எதிர்ப்பால் கலவரம் மூள்கின்றது. மாரி தாக்கப்படுகிறான்.  வள்ளியைப் பலவந்தப்படுத்த முனைகின்றனர்.  மாரியும் வள்ளியும் தப்பித்து ஓடுகின்றனர்.  இளைஞர்கள் துரத்துகின்றனர்.  அடிப்பட்டிருந்த மாரி புதர் மறைவில் தண்ணீருக்காகத் தவிக்கின்றான்.  தண்ணீர் தேடி செல்லும் வள்ளியை இளைஞர்களில் ஒருவன் மற்றவர்களுக்குத் தெரியாமல் மிரட்டுகின்றான். செயலற்று அவள் கிடக்க அவன் வன்புணர்ச்சி கொள்கின்றான்.  மாரியும் வள்ளியும் உயிராபத்தில் இருந்து தப்பித்து இருப்பிடம் சேர்கின்றனர்.  மாரி உடல் தேறி வருகின்றான்.  நடந்த சம்பவத்தைவிட கோரமாக மாரி கேள்விகளால் வள்ளியை மேலும் சின்னாபின்னமாக்குகிறான்.

எளவட்டப்பசங்களுக்கு ஒன் மேல கண்ணுடி.  வளச்சிடலாம்னு  பார்த்தாங்க.  அதான்”.

ஏழு வருஷமா ஒன்ன எல்லா இடங்களுக்கும் இழுத்து அலஞ்சி சோறு போடறதெல்லாம் கண்டவன்கிட்ட கூட்டிக் குடுத்துட்டு வேடிக்கை பாக்கறதுக்கா?”

சொல்லுடி நாயே, என்னை உட்டுட்டு ஓடிரலாம்னு என்னைக்காவது தோணுமா?”

இந்தக் கேள்விகளே, சொற்களே மாரியின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தி விடுகின்றன.  மனைவியைத் தக்க வைத்துக் கொள்ளுதல்தான் கணவனுக்கான கம்பீரமாக/கடமையாக உள்ளது.  மனைவியைப் பிறர் கவர்தல் என்பது கணவனின் கையாலாகத்தனமாகி விடுகின்றது.  எனவே அச்சுறுத்தல் மூலமாகவே மனைவியை கணவன் தனக்குக் கீழ் அடிபணிய வைத்து உறவைத் தொடர்கின்றான்.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் கருத்தியல் இப்படியான ஆண், பெண்ணை உருவாக்கி உறவை கட்டமைத்துத் தக்கவைத்து வருகின்றது.

மாரியின் கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டு இருக்க வள்ளி குளிப்பதற்காக குளத்துக்குச் செல்கின்றாள். திடீரென்று தன்னை வல்லுறவு கொண்டவனின் முகமும் முத்தமும் அவளின் ஞாபகத்துக்கு வருகின்றது. அடிபட்டபோது வலிக்காத அடி அக்கணத்தில் வலிக்கிறது.  அவளுக்குள் குழப்பம்.  வல்லுறவின் விளைவுகளைக் குறித்து கவலை.  தற்கொலை செய்துகொள்ள குளத்தின் மையத்தை நோக்கி நகர்கிறாள்.  கழுத்தளவு சூழ்ந்த தண்ணீர் அவள் கன்னத்தில் மோத அது முத்தமாக அவளுக்குத் தோன்றுகிறது.  இந்தத் தண்ணீரின் முத்தம் அவளின் வேதனையை அழுத்தித் துடைப்பது போன்று உணர்கின்றாள்.  திரும்பி கரை ஏறி விடுகின்றாள்.  கதை முடிகிறது.

இக்கதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.  பெண்ஆண் உறவின் கபடமும் வன்முறையும் வெளிப்படுகின்றது.  அடக்குவதிலும் அன்பு இல்லை.  அடங்கிப் போவதிலும் அன்பு இல்லை.  உறவை தக்கவைத்து நீட்டுவதுதான் வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது.  கணவனான மாரியின் வன்புணர்வும் இளைஞனின் வன்புணர்வும் ஒன்றுபடும் தருணத்தை மனதில் உணரும் போது அதிர்ச்சி ஏற்படுகின்றது.  கரை ஏறும் வள்ளி மீண்டும் மாரியிடம் சொல்லடியும் உடலடியும் படுவாளா? அல்லது வேறு ஏதாவது முடிவு அவளிடம் இருக்கிறதா? யாருக்குத் தெரியும்.  வாழ்க்கை அதன் போக்கில் போகத்தான் செய்கிறது.

இந்தக் கதைக்கு எதிர்நிலையில் செயல்படும் கதைவைராக்கியம்”.  கதைசொல்லியான பெண் ஒருஅம்மாவைச் சந்தித்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள செல்கின்றாள்.  அந்த அம்மாவின் கதை தினமும் செத்துப் பிழைத்த கதைதான்.  தினமும் அவளைச் சாகடிப்பது கணவன்தான்.  அடி, உதை, திட்டு.  அதனோடு விருப்பமில்லாத வன்புணர்ச்சி!. இருபது. இருபத்தைந்து வருடம் வாழ்க்கை ஓடிவிட்டது.  ஒரு நாள் நான்கு பெண் பிள்ளைகள் விழித்திருக்க அடி உதையுடன் மறுக்க மறுக்க வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள் அம்மா.  அடுத்த நாள் இரவு மழை. மிருகமாக அவன் அவளைப் புணர்கிறான்.  பித்து பிடித்தாற் போன்று அவள் ஆகிறாள்.  கூரைமேல் கீற்றுகளை தடுத்து வைப்பதற்காக வைத்திருந்த பெரிய கல் ஏற்கனவே சரிந்து விழுந்து இருக்கிறது.  அந்தக் கல்லைத் தூக்கி அம்மா ஒரே போடாக கணவன் தலைமீது போட்டு விடுகிறாள்.  ஆவென்ற சத்தத்துடன் அவன் உயிரை விடுகிறான்.  விடிந்த பிறகு கூச்சல் போட்டு அம்மா, ”கூரை கல்லு உருண்டு விழுந்து விட்டதுஎனக் கூறுகிறாள்.  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்து விடுகிறார்கள்.  மாமியார்காரி இது கொலை என செலவு செய்து நிரூபித்து அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறாள்.  மாமனார்தான் ஒரு வருஷம் சென்று ஜாமீனில் எடுக்கிறார்.  அவர்தான் முதலிலேயே கூரைமேல் இருந்து கல்தான் விழுந்தது என ஆரம்பத்தில் இருந்தே சாட்சி சொல்லி வருபவர்.     

பெரிய மகள் தேர்வு எழுதி மேல்படிப்புக்கு சிங்கப்பூர் சென்று பிறகு வேலையில் சேர்ந்து மூன்று தங்கைகளையும் அங்கேயே அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறாள்.  கூடவே அம்மாவும் செல்ல ஏற்பாடு.  ஏழெட்டு வருடம் கேஸ் இழுத்து கொலை நிரூபிக்கப்படவில்லை என தள்ளுபடியாகி விடுகிறது.  இவ்வளவு காலமாக தான் செய்த கொலை அவளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது.  சிங்கப்பூர் கிளம்பும் நாளில் மாமனாரிடம் அம்மா தான் செய்த கொலையைச் சொல்லி விடுகின்றார்.  மாமனார்தான் சொன்னதே இந்த உலகத்துக்கு உண்மையாக இருக்கட்டும்” (கூரை கல் விழுந்து மரணம்) எனச் சொல்லிவிடுகின்றார்.

இந்தக் கதையும் பல அடுக்கு அர்த்தங்களைக் கொண்டுள்ள கதைதான்.  போகிற போக்கில் சில சொற்கள் மூலம் ஆழமான அர்த்தங்கள் வெளிப்படுகின்றன.  கணவனைக் கல்லைப் போட்டு கொன்றதைச் சொன்ன பிறகு அம்மா இவ்வாறு கூறுகிறார்: ”அந்த நேரம் என் மனசுல நிம்மதியே தவிர வேற எதுவுமே இல்லை.  கால்ல ஒட்டியிருந்தத கழுவி தொடச்ச மாதிரி”.  கொலையின் மூலம் கணவன் இருப்பை இன்மையாக்குவது மலத்தை கழுவி விடுவது போலத்தான் என்கிறார் அம்மா.  அதிர்ச்சியில் இருந்து மீண்டு வாசிப்பைத் தொடரும்போது மேலும் பல அர்த்தங்கள் விரிகின்றன.  காலில் ஒட்டும் மலத்தை உடனடியாகத் தண்ணீர் தேடி கழுவி விட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்.  ஆனால் மலமாகிய கணவனை கழுவ இருபது இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  இத்தனை ஆண்டுகள் மலம் ஒட்டிய காலைக் கழுவ வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆனால் கழுவ முடியாத இயலாமையுடன் அம்மா இருக்கிறார்.  பொம்மைக்காரி கதையின் வள்ளியும் இந்தக் கதையின்அம்மாவும் ஒன்றுதான் கொடுமைக்கும் கணவனின் வன்புணர்வுக்கும் ஆளாகின்றார்கள்.  ஆனால் இருவரும் வித்தியாசமானவர்கள்.  அம்மாவுக்கு செய்த கொலை மனதை அரிக்கின்றது; வள்ளிக்கு இளைஞனின் வன்புணர்ச்சி மனதை அலைக்கழிக்கின்றது.  முடிவுகள் வேறுபட்டவை.

இத்தக் கதையில் கதைசொல்லியான பெண் இன்றைய காலகட்டத்தின் பிரதிநிதி; அம்மா முந்தைய தலைமுறையின் பிரதிநிதி.  கதைசொல்லிப் பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவள்.  அதாவது சட்டம் மூலம் கணவனிடம் இருந்து விடுதலை பெற்றவள்.  அம்மா கணவனைக் கொலை செய்து அவனிடம் இருந்து விடுதலை பெற்றவள்.  கதையாடல் முழுவதும் இந்த இரு பெண்களும் சமமாகப் பாவிக்கப்படுகின்றார்கள். ”புருஷன் தொணதான் மனுஷத்தொணையாக இருக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லையேஎன அத்தையைக் கேட்கலாம் என எழுந்த வார்த்தைகளை எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன்,” எனக் கதை முடிகின்றது.  சொல்லின் அர்த்தங்களைவிட சொல்லாத அர்த்தங்கள் புலப்படுகின்றன.  இந்தக் கதையில்அம்மாவுக்குப் பெயரில்லை.  இவள் காளியும் யசோதையும் கலந்த பிறப்பு.

இந்தக் கதைகளைப் படிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.  இக்கேள்விகளுக்குப் பதில்கள் கதைகளில் இல்லை.  வாழ்வில் தேடிப் பார்க்கலாம்.  ஆனால் இதுதான் விடை என்று உறுதியாகச் சொல்ல முடியாத கேள்விகள் இவை.  அதனாலேயே இவை முக்கியமானதாகின்றன.  குப்புஎன்ற கதையில் குப்பு என்ற பெண் ஏழுமலை ஓட்டுநரைக் காதலிக்கிறாள்.  காதல் பழக்கத்தால் அவள் கர்ப்பமாகின்றாள்.  முதலில் இயல்பாக கர்ப்பத்தை எதிர்கொள்ளும் ஏழுமலை பிறகு அவளை பிள்ளை பெற்று தொலைத்துவிட்டு வருமாறு கூறுகிறான்.  அப்படி வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான்.  இந்தக் கொழந்த போனா என்ன, இன்னொரு கொழந்தய பெத்துக்க முடியாதா? என்கிறான்.  குப்புவும் குழந்தையை பெற்றெடுத்து பிறகு பதினைந்தாம் நாள் அக்குழந்தையை திட்டமிட்டு தொலைத்துவிட்டு ஏழுமலையிடம் வருகின்றாள்.  கன்னிப் பெண்ணாக வா, கல்யாண விஷயம் பேசலாம்னு சொன்ன, வந்திருக்கிறேன் என்கிறாள்.  ஆனால் ஏழுமலையோ மாமா பெண்ணை பதினைந்து நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு விட்டான்.  அதிர்ச்சி அடைகிறாள் குப்பு.  இத்துடன் கதை நின்றுவிடுகிறது.  குப்பு இனி என்ன செய்வாள் என்பது சிந்தனையின் அடுத்த கட்டம்.  ஆனால் கதைக்குள்ளேயே எழும் கேள்வி: ”எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குப்பு குழந்தையைத் தொலைத்துவிட்டு அவனிடம் வருகின்றாள்?” என்பதுதான்.

இதேபோன்றுஅட்டைகதையில் கோபாலு என்ற திருமணமாகாத இளைஞன் திருமணமான நீலா டீச்சர் மேல் காதல் கொள்கின்றான்.  இந்தக் காதலுக்கு அடிப்படை என்ன? ஏன் கோபாலு நீலாவைக் காதலிக்கிறான்? “அழைப்புஎன்ற கதையில் தனது மனைவி சியாமளாவை மீறிதான் சேர்த்துக் கொண்ட துணைவி ராதாவைப் போய் சொக்கலிங்கத்தால் ஏன் பார்க்க முடியாமல் போகின்றது.  ”வழிகதையில் பாலியல் தொழிலாளியான அஞ்சலையை திருமணம் செய்து கொண்ட ரங்கசாமி பிறகு அவளே அறுத்துவிடச் சொன்ன போதும் முடியாமல் ஏன் தவிக்கிறான்? “அடைக்கலம்கதையில் இடிந்த கோட்டையில் வந்து விடப்படும் முதியவர்களுக்கு அந்த இளைஞன் ஏன் தொடர்ந்து உதவி செய்கின்றான்?“ “பிரயாணம்கதையில் பிரெஞ்சு அதிகாரி பெஞ்சமின் முசே மட்டும் ஏன் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்?  இப்படியான கேள்விகள் வாசிக்கும் போது மனதில் எழுவதுதான் இக்கதைகளின் வெற்றியாகத் தோன்றுகின்றது.

துணைஎன்ற கதை மட்டும் பிரச்சனைக்குரிய கதையாக இருக்கிறது.  பிற கதைகளில் பெண் பாத்திரங்கள் மீதான கரிசனமும் கவனமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.  மீறவோ மீளவோ முடியாத பெண்களாயினும் அவர்களின் இருப்பு கதையாடலில் கவனத்துக்குள்ளானது.  ஆனால்துணைகதையில் இது முற்றிலும் எதிரானதாக உள்ளது.  கணபதி என்ற திருமணமாகாத 42 வயது ஆணுக்கு திருமண ஏற்பாடு.  முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு ஓடிப்போய் விட்டாள்.  மணப்பெண்ணின் தங்கையை அடுத்த மணப்பெண்ணாக்கி திருமணமும் முடிகின்றது.  பெண்ணின் வீட்டுக்கு அன்றே கணபதி மறுவீடு விசேஷத்துக்குச் செல்கின்றான்.  சிறிது நேரத்திலேயே தாலிகட்டிய மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிடுகிறாள்.  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கணபதிக்கு.  அவனுடைய மனவேதனையும் அவனது குடும்பத்தாரின் எதிர்வினையும் ப்ரீத்தி நாயின் செயலும்தான் கதை.  இப்படி அடிபட்ட. அவமானப்பட்ட ஒரு ஆணின் துயரத்தைப் பேசலாம்தான்.  ஆனால் சொல்லும் முறையில், கதையாடலில் இவனின் துயரத்திற்குக் காரணமான அந்த இரண்டு பெண்களும் குற்றவாளிகள் போல ஆக்கப்படுவது என்ன நியாயம்? பல பாத்திரங்களின் ஊடாக உருவாகும் இரண்டு மணப்பெண்களின் சித்திரமும் வில்லிகள் போல உருப்பெறுவது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.  குடும்பம்என்பதே வன்முறையைப் பயிலும் களமாக நிற்கின்றது.  கருணைக் கொலை, முதியவர் தனித்து விடப்படுதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை/ வன்புணர்ச்சி, குடிப்பழக்கம் முதலான சமூகக் கொடுமைகளை இக்கதைகள் பேசுகின்றன.  ஆனால் எந்தக் கதையிலும் இந்தக் கருத்துக்கள் பிரச்சாரமாக மாறவில்லை.  கதையின் போக்கில், கதையாடலில் இந்தக் கருத்துக்கள் வாசகரைச் சிந்திக்க வைக்கின்றன.  ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன.  பாத்திரங்களும் பலவகை மாதிரிகளைச் சேர்ந்தவர்கள்.  பேசுபொருள்களும் கதைக்கு கதை வித்தியாசப்படுகின்றன.  ஆனால் சொல்கின்ற முறையும் நடையும் மொழியும் எல்லாக் கதைகளுக்கும் ஒன்று போலவே தோன்றுகின்றன.  இந்தப் பதினாறு கதைகளும் ஒரு நாவலின் பதினாறு அத்தியாயங்கள் என்ற உணர்வு ஏற்படுகின்றது.

பாவண்ணன் இதுவரை எழுதியுள்ள சிறுகதைகளில் இருந்து ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தேர்ந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளவையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

பொம்மைக்காரி“, பாவண்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83, 2011 

பாவண்ணன் – ஓர் ஆச்சர்யம்

ரகுராமன்

IMG_35890127086157

ஆம்…! பாவண்ணன் ஓர் ஆச்சர்யமான மனிதர்தான். முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏதோ ஒரு வகையில் பல வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எழுத்துக்கள் வழியாக மட்டுமே பாவண்ணனை அறிந்து, நண்பராய் ஆன பிறகு அவர் ஓர் ஆச்சர்யம் என வாசக நண்பர்களால் உணர முடியும். இருபத்தைந்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்குள்ளான இலக்கிய வாழ்க்கையில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று கவிதைத் தொகுப்புகளையும், இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகளையும், இரண்டு குறுநாவல்களையும், இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளையும் இலக்கிய உலகத்திற்குத் தந்திருக்கிறார். சொந்தப்படைப்புகள் மட்டுமல்லாது, கன்னடத்திலிருந்து மிக முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?என்று பலர் எண்ணலாம். வாசகராய் இருந்து நண்பராய் ஆன என்னால், அந்த ஆச்சர்யத்திலிருந்து வெளிவரவே முடியவில்லை.

அவருடைய அலுவலக வேலைகள், அவற்றுக்கே உரித்தான கெடுபிடிகள் என அத்தனையையும் தாண்டி இவ்வளவு படைப்புகளை எப்படி அவரால் கொடுக்க முடிகிறது என்பது ஆச்சரியம்தானே? ஒரு கடிதம் எழுதுவதற்கோ, ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்கோ கூட நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு மத்தியில், தன்னுடைய அலுவலகப் பணி, குடும்ப பணிகள் எதையும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுத்துப் பணியிலும் குறைவற்றுச் செயலாற்றுபவர் ஒருவகை ஆச்சரியம்தானே?

பாவண்ணனின் படைப்புகளில் எது பிடிக்கும் என என்னை நானே கேட்டுக் கொண்டபோது கிடைத்த வரிசை கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், புராணப் பின்னணியில் புனைவு செய்யப்பட்ட சிறுகதைகள், கவிதைகள் என்பதாகும்.

தினமணிநாளிதழில் இவருடைய கட்டுரைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், ஒரு சிறிய நிகழ்வை எப்படி அவர் அழகான கட்டுரையாக்குகிறார் என்று. அயல்நாட்டில் நடந்த கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாவண்ணனின் கவனத்தைக் கவர்ந்தது அம்மைதானத்தில் இருந்த ஒரு மரம். அதை வைத்துப் பசுமை, மரம் வளர்த்தல் என அவர் எழுதிய அக்கட்டுரை மறக்கவே முடியாதது.

புத்தக விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவை. பாவண்ணன் விமர்சனம் எழுதினாலோ, அறிமுகம் செய்தாலோ அப்புத்தகத்தை நிச்சயம் படிக்கலாம் என்றே தோன்றும். அவருடைய கட்டுரைத் தொகுதிகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இலக்கியங்கள் நேரடியாகப் பயனையோ, போதனையையோ அளிப்பது அல்ல என்றும், புத்தகங்களில் வாழ்க்கைக்கான ஏதோ ஒன்று, வாசிப்பவரின் அகத்தைத் தூண்டுவதாய் ஒளிந்து கிடக்கிறது என்றும் சுட்டிக் காட்டுபவர்; வாசிப்பும், அதில் தோய்தலும் ஒரு விதத்தில் வாழ்க்கையின் தேடல் என்று சொல்பவர்; எந்த ஒரு கதையையும், நாவலையும், இலக்கியத்தின் எந்த வடிவத்தையும் வாழ்வியல் அனுபவங்களோடும், சமூக வாழ்க்கையோடும் பொருத்திப் பார்த்து விடைகாண முயற்சிப்பவர்.தான் சந்திக்கின்ற மனிதர்கள், நிகழ்வுகள் போன்றவை மனத்தில் எழுப்பும் கேள்விகளை, தன் மனத்தில் அவர்கள்/அவை ஏற்படுத்திய தாக்கத்தை எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இன்றி, தத்துவக் கோட்பாடுகளாகவோ, ஆத்ம விசாரமாகவோ பதிவு செய்யாமல், சாதாரணமாக எளிய முறையில் பதிவு செய்திருப்பார். தன்னுடையதீராத பசி கொண்ட விலங்குஎன்ற தொகுப்பில். இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை கட்டுரைகள் போலத் தோன்றினாலும், அவையனைத்துமே சிறுகதைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. ‘தரைக்கு இழுக்கும் அதிர்ச்சிஎன்ற கட்டுரை நெஞ்சை உலுக்கக் கூடியது. தன் தந்தைக்குக் கொள்ளி வைக்கத் தீச்சட்டியுடன் நிற்கும் சிறுவன், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் பிணத்தைச் சுமந்து செல்லும் தந்தை, காசநோயில் மனைவியை இழந்த கணவன், வரதட்சிணைக் கொடுமையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்ளும் அவரது மகள் என மரணத்தின் பல வடிவங்களைப் பேசும் இக்கட்டுரை நெஞ்சைக் கனக்க வைக்கும். ‘இலட்சத்தில் ஒருத்தி’, ‘ஒரு தாயின் கதைபோன்ற கட்டுரைகள் கண்ணீர் வரவழைக்கும்.

எனக்குப் பிடித்த கதைகள்என்ற கட்டுரைத் தொகுப்பில் அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை முதல் பகுதியாகவும், அவர் சொல்ல வரும் சிறுகதையைப் பற்றி இரண்டாம் பகுதியிலும் சொல்லியிருப்பார். இத்தொகுதியைப் படித்த பிறகு அக்கதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன். இதைப்போலவே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைஆழத்தை அறியும் பயணம்’, ‘வழிப்போக்கன் கண்ட வானம்’, ‘மலரும் மணமும் தேடிஆகிய புத்தகங்கள். மலரும் மணமும் தேடிதொகுப்பில் தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் எண்ணூறு பக்க நாவல்களை இரண்டு அல்லது மூன்றே பக்கங்களில் விவரித்திருப்பார். அவர் கட்டுரைகளில் தரும் சில விளக்கங்கள் அவருடைய படைப்பு மற்றும் படிப்புத் தேர்வு என்ன என்பதை உணர்த்திவிடும். என் மனம் கவர்ந்த வரிகள் சில இங்கே:

  • இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவது இலக்கணம்; அப்படி இருக்க முடியாமல் போவதன் அவஸ்தைகளைப் பேசுவது இலக்கியம்
  • மன்னிப்பைப் போதிக்கிறது சீர்திருத்தம்; மன்னிக்க இயலாத மனச்சீற்றங்களையும், மன்னிப்பைப் பெற இயலாத குற்ற உணர்ச்சிகளையும் படம் பிடிக்கிறது இலக்கியம்
  • பாவனையான பதில்களுடன் கிடைத்த ஆனந்தத்தில் திளைக்கிறது தினசரி வாழ்க்கை; அசலான பதில் உறைந்திருக்கும் புள்ளியை நோக்கி இருளடர்ந்த மனக்குகையில் பயணத்தைத் தொடங்குகிறது இலக்கியம்

ஒரு முன்னணி படைப்பாளியாக இருக்கும் அதே நேரத்தில் இத்தனை புத்தகங்களைப் படித்து, அவற்றின் அழகு, மையம், படிம அழகு, அவற்றின் பலம், பலவீனம் எல்லாவற்றையும் எவ்விதச் சாடல் தொனியும், மேதாவித்தனமுமின்றி நிதானமாய் எடுத்துச் சொல்லவும் முடிகிறது என்பது எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான்.

கன்னடத்திலிருந்து முக்கியமான படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை பாவண்ணனுக்குண்டு. பொதுவாக இவரது படைப்புகள் அன்பைப் பற்றிப் பேசுவதாகவும், வாழ்வின் விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்திருக்கும். சமூக அக்கறை கொண்ட இவர் சித்தலிங்கையாவின்ஊரும் சேரியும்’, அரவிந்த மாளகத்தியின்கவர்மெண்ட் பிராமணன்ஆகிய சுயசரிதைகளையும், ‘புதைந்த காற்றுஎன்ற தொகுப்பையும் மொழிபெயர்த்துள்ளார். கிரீஷ் கர்னாடின் சிறந்த நாடகங்களானஅக்னியும், மழையும்’, ‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளார். கன்னடத்தின் சிறந்த சிறுகதைகளைநூறுசுற்றுக் கோட்டைஎன்கிற தொகுப்பாகவும், ‘நூறு மரங்கள், நூறு பாடல்கள்என்ற கன்னட வசன கவிதைத் தொகுப்பையும், ‘வட கன்னட நாட்டுப்புறக் கதைகள்என்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்பையும் கொண்டுவந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மணிமகுடம் சூட்டியது போல எஸ்.எல்.பைரப்பாவின்பர்வாஎன்ற கன்னட நாவலைப்பருவம்என்ற பெயரில் மொழிபெயர்த்தது மிகப்பெரிய விஷயம் என்றே சொல்லலாம். இதற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தனது சொந்தப் படைப்புகளோடு இத்தனை மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டிருக்கிறார் என எண்ணும்போதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நான் செல்கிறேன்.

அவருடைய தொன்மங்களைப் புனைவுகளாக்கும்க லையைக் கண்டு எப்போதுமே ஆச்சர்யப்பட்டுப் போய்விடுகிறேன். அச்சிறுகதைகளின் நடையும், மொழியுமே அலாதி சுகம். ‘போர்க்களம்’, ’புதிர்’, ‘வாசவதத்தை’, ‘குமாரவனம்’, ‘பிரிவு’, ‘அல்லி’, ‘அன்னை’, ‘சாபம்’, ‘சுழல்’, ’இன்னும் ஒரு கணம்என அடுக்கிக்கொண்டே போகலாம்.

கவிதைகளில் இவர் காட்டும் படிமங்களும், உவமைகளும், உரைநடை இலக்கியத்தில் சிறந்தவராய் இருக்கும் இவரால் எப்படி கவிதைகளிலும் பரிமளிக்க முடிகிறது என்பது ஒரு பெரிய ஆச்சரியம்!

இத்தனை எழுத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருக்கும்போதிலும், எப்போதும் நட்பு  குறையாமல் பேசிப் பழகுவது பாவண்ணனுக்கு மட்டுமே உரியது எனும் ஆச்சரியத்தை அவருடன் நட்பு பாராட்டும் ஒவ்வொருவரும் உணர முடியும். அவருடைய உயர்வு எதுவோ நம்மால் அதை எட்ட முடியாது என்று எப்போதுமே நான் தலையுயர்த்திப் பார்க்கும் ஓர் எளிமையின் வடிவான ஆச்சர்யம் பாவண்ணன்!

பன்முக ஆளுமை – பாவண்ணன்

விட்டல் ராவ் 

விட்டல்ராவுடன் (1)

வாழ்நாள் படைப்புச் சாதனைக்கென அங்கங்கே அவ்வப்போது சிறப்பு விருதுகளும் கெளரவங்களும் அளிக்கப்பட்டு வருவதைக் கவனிக்கும்போது, வயதும், படைப்பாக்கத்தில் தேக்க நிலை தொடர்பாயும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எண்பதுகள் என்பது மிகச் சமீபத்திய காலம்அதுவும் கலையிலக்கிய சங்கதிகளுக்கு. எண்பதுகளில் தோன்றி இந்த கணம் வரை இடையறாது சிறுகதை, கவிதை, நாவல், திரைப்பட விமர்சனம், நூல் விமர்சனம், பல்வேறு உலகியல் விஷயங்களைப் பற்றிய விரிவான ஆழ்ந்த கட்டுரைகள் என்று தொய்வோ தளர்ச்சியோ இன்றி எழுதி வரும் பாவண்னனின் படைப்பாக்க இளமையின்பேரில் ஆச்சரியமும் பொறாமையும்கூட ஏற்படக்கூடும்.

ஆரம்பத்தில் எண்பதுகளில் தீபம் இதழின் பக்கங்களில் படிக்க நேரிட்டபோதே என் கவன ஈர்ப்பின் உள்ளடக்கத்தில் அன்பர் பாவண்ணனும் ஒருவராக இருந்தார். தீபம் அலுவலகத்தோடு நெருக்கமாயிருந்த சமயம். அங்கிருந்த கம்பாசிடர் கையெழுத்துப் பிரதியிலிருந்த கதையொன்றைத் தந்துப் படிக்கச் சொன்னார். மிகவும் நன்றாக வந்திருந்தது. அதுவும் பாவண்ணன் கைவண்ணமே. பிறகு விட்டு விட்டு கண்ணில் படும் போதெல்லாம் தவறாமல் அவரது குறுநாவல்களை, சிறுகதைகளை, கட்டுரைகளைப் படித்து விடுவேன். பாவண்ணன் எல்லா பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். எந்தவொரு புதிய இதழ் ஆரம்பிக்கப்படும்போதும் கவனம் விட்டுப் போகாத படைப்பாளிகளில் இவரும் இருப்பார். வெங்கட் சாமிநாதன் பாவண்ணனைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொல்லுவார், “ சமீபமா பத்துப் பத்திரிகைகள பார்த்ததில ஏழிலியாச்சும் இவர் எழுதி வெளிவந்திருக்கய்யா. நல்லா எழுதறது ஒரு பக்கம், ரொம்ப நல்லவனாயுமிருக்கிறது இன்னும் சந்தோசமாயிடறது, இல்லையா”.

எண்பதுகளில்தீபம்காலம் தொட்டு இம்மாததீராநதியில் அவர் தொடங்கியிருக்கும் கட்டுரைத் தொடர் வரை சீரான நீண்ட இலக்கிய தடத்தைப் பார்க்கையில் பிரமிப்பு கூடிய பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஒருமுறை, தீபம் அலுவலகத்தில் நானிருந்த சமயம், எஸ். சங்கரநாராயணன் வந்தார். என்னைப் பார்த்து, “ பாவண்ணன் வந்திருக்காரா?” என்று கேட்டார். இல்லையே என்றேன். இந்த நேரத்துக்கு வர்ரேனு சொல்லியிருந்தார், என்று கூறி உட்கார்ந்தார், எனக்கும் பாவண்ணனை நேரில் பார்க்கலாமே என்று. ஆனால், ஒரு மணி நேரம் கடந்தும் ஆசாமி வரவேயில்லை. சங்கரநாராயணன் எழுந்து போய்விட்டார். அதற்குப் பிறகு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவில்தான் முதல் அறிமுகம். வண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் அறிமுகம் தொடர்ந்தது, பெங்களூரில் குடிபுகுந்த பின் அது இறுகித் தொடர்கிறது. காலஞ்சென்ற என் மனைவி ஏராளமாய் வாசிப்பவள். பாவண்ணன் தான் மாதமொருமுறை வீட்டுக்கு வந்து ஏராளமான நூல்களை அவளுக்குப் படிக்கத் தருவார், மருத்துவ மனையில் இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை அவருடைய புத்தகத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள்.

தொகுக்கப்பட்டு நூல் வடிவம் கொண்ட சிறுகதைகளை தற்போது மீள்பார்வையிடும்போது அவற்றின் வடிவமைப்பு, உத்தி, கரு, உள்ளடங்கும் சிறு செய்தி என்பவை மிகச் சிறப்பாக வந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பாவண்ணன் தன்னைச் சுற்றிலுமுள்ள யதார்த்த நிகழ்வுகளையும் சலனமற்ற காட்சிகளையும் தீர்க்கமாகப் பார்த்து கிரகிக்கும் போக்கிலேயே இணையாக கனவும், கற்பனையும் கவித்துவமும் ஏற்பட்டு பிரவாகமெடுக்கிறது. இயற்கைக் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு அறுபடாது சித்தரிப்பது இவருக்கு இயல்பாகவே கைவருகிறது. இதை அவரது கவிதைப் படைப்புகளில் பளிச்சென காணமுடிகிறது. இவர் தம் கவிதைகள் பலவற்றில் இயற்கையின் எழில் தோற்றங்கள் அடுக்கடுக்காகவெற்று வார்த்தைக் குவியலாக இல்லாமல்அதே சமயம் கவிதைக்கு கவிதை மாறுபட்டும், புதியதாயும், சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லாமலும் காணக் கிடைக்கின்றன. இவரது கவிதை நடையினின்று சிறுகதை நடை வெகுவாக விலகித் தோன்றுகிறது.

பாவண்ணனின் இலக்கியப் பணியின் மற்றொரு முக்கிய அங்கம் மொழிபெயர்ப்பு. கன்னட மொழியில் உள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவரது மொழிபெயர்ப்பில் அணிவகுப்பவை, எஸ்.எல். பைரப்பாவின்பருவம்’, ராகவேந்திர பாட்டீலின்தேர்என்பவை குறிப்பிடத்தக்க நாவல் மொழிபெயர்ப்புகள். தேர்மொழிபெயர்ப்பு நாவலைப் படித்துவிட்டு என் மனைவி மிகவும் பாராட்டிய பிறகே, நான் படித்தேன். கன்னட தலித் சிறுகதைகள் என்ற இவரது பொழிபெயர்ப்பில் வெளிவந்த கதைத் தொகுப்பு மிகவும் சிலாகிக்க வல்லது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான (பருவம்) சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாவண்ணன். நாவலுக்கான இலக்கியச் சிந்தனை பரிசும், சிறுகதைக்குகதாவிருதும் பெற்று கெளரவிக்கப் பட்டவர்.

பாவண்ணனின் கட்டுரையாக்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமீபத்தில்தான்ஒட்டகம் கேட்ட இசைகட்டுரைத் தொகுப்பு நூலைப் பார்க்க நேரிட்டாலும், இதழ்கள்தான் அவருடைய கட்டுரைகளை நிறையவே படிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியவை. சிறுகதைகளில் இவருடைய கவிதை நடை அவ்வளவாக வாய்ப்புப் பெறாவிட்டாலும், கட்டுரைகளில் அவரது கவித்துவம் ஆங்காங்கே தெறிக்கின்றன. அதிகம் இல்லாவிட்டாலும் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் இவர் பங்கிற்கு இருக்கின்றன. நவீன கன்னட திரைப்படங்கள் இரண்டுக்கான விமர்சனக் கட்டுரைகள் இவரது சினிமா ரசனைக்கு எடுத்துக்காட்டு. அவையிரண்டுமே கன்னட சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர் கிரிஷ் காசரவள்ளி தயாரித்தது. அந்த இரு விமர்சனக் கட்டுரைகளிலும்த்வீபாஎனும் படத்துக்கான பாவண்ணனின் விமர்சனம் அதிசிறப்பாய் வந்திருந்தது. ஒவ்வொரு திரைப்பட விமர்சனமும் அது எழுதப்பட்ட அளவிலேயே முழுமையான கட்டுரையாக அமைந்திருந்தது என்பதும் விசேஷம். அதைப் போலவே அவர் எழுதிவரும் பிற கட்டுரைகளும் விசேஷ கவனம் கொள்ளத் தக்கவை.

புத்தக விமர்சனம் (நான் மதிப்புரை என்பதை தவிர்க்கிறேன்) திரைப்பட விமர்சனம்போல இருந்துவிடலாகாது என்பது போலவே திரைப்பட விமர்சனமும் நூல் விமர்சனம் போன்றிருக்கக் கூடாது என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. இவ்விஷயம் பாவண்ணனுக்கு வெகு இயல்பாக அமைந்து விடுகிறது. இவர் எழுதி வரும் நூல் விமர்சனம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த நோக்கில் கச்சிதமான சமநிலையோடு எழுதப்படுவது. ஒவ்வொரு நூல் விமர்சனமும், ஒரு விமர்சனத்துக்கும் அப்பால் சென்று அந்த நூலுக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்க்கவல்ல முழு கட்டுரையாக அமைந்திருக்கிறது.

ஒரு விசயத்தை மையமாய்க் கொண்டு எழுதும்போது அதைச் சுற்றி பல்வேறு விஷயங்களையும் கலை இலக்கிய நயத்தோடு சொல்லிக்கொண்டு போகும் வெங்கட் சாமிநாதனின் வழியை ஒட்டி அவரைப் பற்றின கட்டுரைத் தொடரை தீராநதியில் தொடங்கியிருக்கிறார் பாவண்ணன். ஆரம்பப் பக்கங்களே ஆர்வமூட்டுகின்றன. பாவண்ணனின் படைப்பாக்கத்துக்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.