ராம்பிரசாத்

பச்சிலை

ராம்பிரசாத் 

 

“டொக் டொக் டொக்”

மரக்கதவில் இரைச்சல் உண்டாக்கும் சத்தம் கேட்டு ஞானன் குடிலின் கதவைத் திறந்து வெளியே வந்தார். வெளியே வானதி நின்றிருந்தாள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.

“ஜோஸ்.. ஜோஸ்.. ஜோஸை காணவில்லை,” என்றாள் மூச்சு வாங்கியபடி.

நிதானம் கொள்ளக் கேட்கும் தோரணையில் கைகளை அசைத்தபடி ஞானன், வானதியை குடிலின் வாசலில் இருந்த மர நாற்காலியில் அமர வைத்தார். அவளின் மூச்சு சீராகும் வரை பொறுத்திருந்தார்.

“நீங்கள் என் குடிலில் நான் தயாரித்துத் தந்த உற்சாக பானம் அருந்தினீர்களே. அதுவரை பாதுகாப்பாகத்தானே இருந்தீர்கள். அதன் பின் புறப்பட்டு எங்கே சென்றீர்கள்?” என்றார்.

“காட்டுக்குள் நடைப்பயணம் சென்றோம். ஒரு கட்டத்தில் நதி ஒன்று வந்தது. ஜோஸ் முதலில் நதியைக் கடந்தான். நான் கடக்க எத்தனிப்பதற்குள் நதியில் வெள்ளம் வந்துவிட்டது. சற்று தொலைவில் இருந்த பாலம் வழியாக நான் ஜோஸ் இருந்த கரைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து அதை நோக்கி நடந்தேன். ஆனால், நான் பாலம் கடந்தபோது ஜோஸ் அந்தப்புறம் இல்லை. அங்குமிங்கும் தேடினேன். ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் காட்டு வழிப்பாதையைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை,” என்றாள் வானதி.

“சரி, இருங்கள். நாம் இருவரும் செல்லலாம். நிச்சயம் ஜோஸைக் கண்டுபிடித்துவிடலாம்,” என்று சொல்லிவிட்டு, ஒரு சிம்னியும், தண்ணீர் போத்தலையும் எடுத்துக்கொண்டார். வானதியை முன்னால் நடக்க விட்டு அவளைப் பின் தொடர்ந்து நடந்தார். வானதி, தானும் ஜோஸும் சென்ற பாதையை, தன் நினைவடுக்கிலிருந்து தெரிவு செய்து கவனமாக நடந்தாள். அவளது கண்கள், காட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஜோஸின் உருவத்தை தேடி அலைந்தன.

வழி நெடுகிலும், அவனது கால் தடங்களையோ அல்லது அவன் பயன்படுத்திக் கைவிட்ட பொருட்களையோ தேடிச்செல்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். நேரம் மதிய வேளை தாண்டி மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சற்றைக்கெல்லாம் வெளிச்சம் குன்றி இருள் கவியத் துவங்கிவிட்டால், தேடிச்செல்வது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஆதலால் தேடலில் சற்று துரிதம் காட்டினார்கள். லேசான பரபரப்பு தொற்றிக்கொண்டது.

காடு அவ்வப்போது குழப்பியது. தோற்றப் போலிகளைக் காட்டி அங்குமிங்கும் அலைக்கழித்தது. இருந்தும் வானதி பழக்கப்பட்ட பாதையை மிகக் கவனமாக நினைவு கூர்ந்து ஞானனை வழி நடத்தினாள். ஞானன் தன் கையிலிருந்த அறிவாளால் பாதையில் இடையூறுகளாக இருந்த செடிகள், கொடிகளை வெட்டி விலக்கி வழி ஏற்படுத்தியபடி நடந்தார். அவ்வப்போது கடந்து செல்ல நேர்ந்த மரங்களில் அறிவாளைப் பாய்ச்சி, பாதையை குறிக்க அடையாளங்களை ஆழப் பதித்தார்.

முழுமையாக ஒரு மணி நேரம் கடந்த பின் ஒரு வழியாக, அவர்கள் இருவரும் நதிக்கரையை அடைந்தார்கள். மரப்பாலத்தில் ஏறி நதியைக் கடந்தார்கள். அங்குமிங்கும் ஆராய்ந்ததில், ஈர சதுப்பு நிலத்தில் மனிதக் காலணித் தடமும், சிறுத்தை ஒன்றின் காலடித்தடமும் ஒருங்கே தென்பட்டன. அதைப் பார்த்துவிட்டு, வானதி அழத்துவங்கினாள்.

“அய்யோ கடவுளே.. ஜோஸ்.. உன்னை காலனுக்கு பறி கொடுத்துவிட்டேனா?” என்று அரற்றினாள்.

“பொறு. பதறாதே,” என்ற ஞானன், தடங்களைக் கூர்மையாக அவதானித்துவிட்டு, “காடு தடயங்களை ஒன்றன் மீது ஒன்றாகப் பதிக்க வல்லது,” என்றார்.

வானதி, கண்ணீருடன் ஞானனைப் பார்க்க, “சிறுத்தையின் கால் தடம் மூன்று நாட்களாகியிருக்கும். ஆனால், காலணியின் கால் தடம் வெகு சமீபத்தில் தான் உருவாகியிருக்கிறது. ஜோஸ் காட்டின் அழகில் மயங்கி, சிறுத்தையின் கால்தடங்கள் மீது நடப்பதை உணராமல் கடந்திருப்பான்,” என்றார்.

வானதிக்கு தன்னை சமாதானம் செய்துகொள்ள அந்த விளக்கம், அதிலிருந்த தர்க்கம் போதுமானதாக இருந்தது. அதன் பிறகு ஞானனும், வானதியும் காட்டினூடே விரைந்து நடக்கலானார்கள். மாலை மெல்ல மெல்ல கவிந்து கொண்டிருந்தது.

பசுங்காட்டின் மணம் நாசியைத் துளைத்தது. தூரத்தில் கொட்டும் அருவியின் சீரான ஓசை ஒரு மெல்லிசையாய் நீண்டது. அருவிக்கு அருகே இருந்த காளி கோவிலிலும் ஜோஸின் கால் தடங்கள் தென்பட்டன. மிளாக்கள் நீர் அருந்த வந்திருந்தன. முகில்கள் இறங்கிய வானத்தில் தேக்கி வைத்த மழையைக் கொட்டிக் கவிழ்க்கும் திட்டத்தின் சாயல். இரு பக்கமும் பசுமரச்செறிவு. துடுப்பு வால் கரிச்சான் மற்றும் வெண்வயிற்று வால் காக்கை ஆகியன தென்பட்டன. செந்தலை பஞ்சுருட்டானை மிளிரும் சிவப்பு நிறத்திலான தலையையும் மஞ்சள் நிறத்திலான தொண்டையையும் கொண்டு அங்குமிங்கும் கீச்சிட்டு தாவியபடி ஈர்த்தது. சீகார்ப் பூங்குருவி , அடர் ஆரஞ்சு நிற உடலும் நீண்ட வாலும் கொண்ட குங்குமப் பூச்சிட்டு, சுடர் தொண்டைச்சின்னான் குருவிகள் ஜோஸைத் தேடும் வானதி, ஞானன் கவனங்களை ஈர்க்க முயன்று தோற்றன. இவற்றுடன் மிக அழகிய காட்டுப் பறவைகளும், கூட்டம் கூட்டமாக வெண்கொக்குகளும், நாரைகளும் மற்றும் பல வித நீர்ப்பறவைகளும் அருவியை ஒட்டிய தடாகத்தில் நீர் அருந்த இறங்கியிருந்தன.

எதிரில் மலைகளின் உச்சிப்பாறைகள் உருண்டு திரண்டு ஒரு போர் வீரன் போல் நின்றிருந்தன. அதற்கும் மேலாக விண்ணைத் தொட்டுவிடும்படி நின்றிருந்தன சிறு மரங்கள். கீழிருந்து பார்க்கையில் ஒரு பஞ்சுக் கூரை போல் மேகக் கூட்டங்கள் விரவிக் கிடந்தன. மேகங்கள் திரண்டு, தங்களிடமிருந்த நீர்ச்சத்தை சட்டென்று மழைத்துளிகளாக அள்ளி வீசி காற்றடிக்க தொடங்கின. சிறிது நேரத்தில் நல்ல மழை. வீசிய காற்றில் மழைத்துளிகள் வானில் நீண்ட பெரும் கோடுகள் கிழித்தன. தூரத்தில் தெரிந்த மலைச்சரிவில் மழை நீர் வழிந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

காடுகளில் மாலையின் அறிமுக சமிக்ஞையாக விதவிதமான பறவைகள் பூச்சிகளின் ரீங்காரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தூரத்தில் புதர்களுக்குப் பின்னால் ஏதேதோ கொடிய வன விலங்கின் சாயல் மிரட்சி கூட்டியது. சமிக்ஞையைச் சரியாகப் புரிந்துகொண்ட ஞானன் நடையில் வேகம் கூட்டினார்.

சற்று தள்ளி, ஒரு புகைப்படம், செடி ஒன்றின் சிக்கலான கிளைகளுக்கு மத்தியில் அகப்பட்டு விடுபட இயலாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது. ஞானன் அதை கையிலெடுத்தார். வானதி அருகாமையில் வந்து பார்த்தாள். ஜோஸ் ஒரு மரத்தின் அருகே நின்று தன்னைத் தானே புகைப்படம் எடுத்தது போலிருந்தது. அந்த மரத்தின் மேனியெங்கும் ஆங்காங்கே வெடித்து, ஒரு விதமான காளான் முளைத்தது போன்ற தோற்றத்தில் மிக வினோதமாக இருந்தது. பச்சிலைகளுக்கு நடுவே ஆங்காங்கே வெளிர் ரோஜா நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன. மரத்தின் கிளைப்பட்டைகளில் ஆங்காங்கே சாம்பல் அல்லது சந்தன நிறம் கண்டிருந்தது. கூழ் போல் மரத்தின் கிளைகளிலிருந்து எதுவோ ஒழுகிக் கொண்டிருந்தது.

ஞானனும், வானதியும் சுற்றிலும் பார்த்தார்கள். எங்குமே அந்த மரம் தென்படவில்லை.

“பல அறிபுனைக் கதைகளில் இதுபோன்ற வினோதமான மரங்கள் குறித்துப் நாங்கள் படித்திருக்கிறோம். மனிதன் மரமாகிவிட்ட கதைகள். அந்தக் கதைகளை நினைவூட்டியிருப்பதால் இந்தப் புகைப்படத்தை எடுத்திருப்பான். மேலும், இந்தக் காடு குறித்தும், இந்த மரங்கள் குறித்தும் இங்கு வந்து சென்ற சிலர் சொன்ன செவிவழிச் செய்திகளைக் கேட்டு ஆர்வம் உந்தியே இங்கு வர விரும்பினான் ஜோஸ். அதுமட்டுமல்லாமல் , அவனுக்கு அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளைப் பார்க்கவே விருப்பம். ஆனால், அதற்கு அதிகம் செல்வாகும். நம் ஊர் காடுகளும் அமேசான் காடுகளும் ஒப்பீட்டளவில் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். அதனாலும், இந்தக் காட்டிற்கு வர விரும்பினான்,” என்றாள் வானதி.

“அதற்கு உங்களுக்கு வேறு காடே கிடைக்கவில்லையா?” என்றார் ஞானன்.

“இந்த உலகில் பெண் இனம் தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். பிறகு தான் ஆண் இனம் உருவாகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில், பெண்ணான எனக்கே முன்னுரிமை அளிக்க விரும்புவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆகையால், இந்தக் காட்டிற்குத்தான் வரவேண்டும் என்று தேர்வு செய்தது நான் தான். இப்படி ஆகுமென்று யார் தான் யூகித்திருக்க முடியும்?” என்றாள் வானதி.

புகைப்படத்தில், அந்த மரம் நன்கு செழித்து வளர்ந்திருந்தது. மிக அதிக உயரமில்லை. குட்டையும் இல்லை. சீராக வளர்ந்திருந்தது. ஒவ்வொரு நேரம் பார்வைக்கு வெவ்வேறு விதமாகத் தோன்றுவதாகப் பட்டது. சில நேரங்களில் சர்ப்பமும், சில சமயங்களில் முதலையும், இன்ன பிற ஊர்வன விலங்குகளுமாய் அது பார்வைக்குத் தோன்றுவதாகத் தோற்றமளித்தது வினோதமாக இருந்தது.

“இந்தக் காட்டில் சுற்றுலா வந்த மனிதர்களில் சிலர் காணாமல் போன கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். முடிந்தவரை கவனமாக இருப்பது என்று முடிவு செய்துதான் வந்தோம். எங்குமே எவ்விதப் பிரச்சனையும் எழுவதற்கான சாத்தியங்கள் முழுவதுமாக இல்லை என்று சொல்லிவிடமுடியாதல்லவா?” என்றாள் வானதி தொடர்ந்து.

“இந்த அடர்ந்த வனத்தில், காற்று ஒரு காகிதப் புகைப்படத்தை அதிகம் தூரம் கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை. இந்த மரம் இங்கு எங்காவது அருகில் தான் இருக்க வேண்டும்,” என்ற ஞானன் அந்த மரத்தைத் தேடத்துவங்கினார். வானதியும் இணைந்துகொண்டாள்.

இருவருமாக அங்குமிங்கும் தேடியதில் அந்த மரம் சற்று தொலைவில் தென்பட்டது. ஞானனும், வானதியும் அந்த மரத்தை நெருங்கி கிட்டத்தில் பார்த்தார்கள். சுற்றி வந்தார்கள். ஓரிடத்தில், ஜோஸின் சட்டையின் ஒரு பகுதி மரத்தின் பட்டைக்குள் சிக்கியிருப்பதான தோற்றம் தந்தது. வானதி அதைப் பிடித்து இழுக்க, யாரோ அந்த சட்டையை மரத்துடன் இறுகப் பிணைத்து இணைப்பான் ஒன்றினால் இணைத்தது போலிருந்தது. வானதி தன் பலம் முழுமைக்கு பிரயோகித்து அந்த மரத்தின் இடுக்குகளில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜோஸை வெளியே இழுக்க முயல, சட்டை கையோடு கிழிந்து வந்தது. ஜோஸின் உடல் மரத்தினுள் முழுமையாக மறைந்தது.

அதிர்ச்சியடைந்த வானதி, தன்னிடம் ஒட்டிக்கொண்ட பதட்டமோ, அதிர்ச்சியோ ஞானனிடம் ஒட்டாததையும், அவர் மரத்தையே ஆழமாகப் பார்த்துக்கொண்டே இருப்பதையும் உணர்ந்து மேலும் பீதியடைந்தாள்.

“இந்த மரத்தைப் பாரேன். புகைப்படத்தில் இருந்ததைக் காட்டிலும் இப்போது சற்று மேலாக இருக்கிறது அல்லவா?” என்றார் ஞானன் மரத்தின் எழிலை உள்வாங்கியபடி.

“என்ன இது? நான் ஜோஸ் குறித்து பதட்டமாக இருக்கிறேன். நீங்கள் மரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஜோஸ் எங்கே? அவன் சட்டை மரத்தின் இடுக்கில் எப்படி வந்தது? ஜோஸ் மரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டுவிட்டானா? அல்லது ஜோஸ் வாசிக்கும் அறிபுனைக் கதைகளில் வருவதைப்போல் ஒருவேளை ஜோஸ் மரமாகிவிட்டானா?” என்றாள் வானதி பதட்டம் தனியாமல்.

“அவன் மரமாகியிருக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாகத் தெரியும்,” என்றார் ஞானன்.

“பின்னே? அவன் எங்கே? அவன் சட்டை இங்கே எப்படி வந்தது? அவனை யார் என்ன செய்தார்கள்?”

ஞானன் எதுவும் பேசாமல் அந்த மரத்தையே ஆழமாக ஊடுறுவிக் கொண்டிருந்தார்.

“ஞானன், என்ன செய்கிறீர்கள்? அவன் மரத்தினுள் எப்படி அகப்பட்டான்? இங்கே என்ன நடக்கிறது?” என்றாள் பதட்டத்துடன்.

“ஏன் பதட்டப்படுகிறாய், வானதி? நிதானம் கொள். நேற்று உற்சாக பானம் அருந்தினாயே? அது ஒரு மூலிகைச் செடி தானே. அந்த மூலிகைச்செடியை நீ கபளீகரம் செய்கிறாய் என்று இங்கே உள்ள ஆயிரம் கோடி தாவரங்கள் உன் போல் பதட்டப்பட்டனவா?” என்றார் ஞானன்.

“என்ன அபத்தமாகக் கேட்கிறீர்கள்? அதுவும், ஜோஸைத் தேடிக் கொண்டிருக்கையில்,” என்றாள் வானதி லேசான முகச்சுளிப்புடன்.

“கேள்விக்கு என்ன பதில்?”

“இல்லை தான். ஆனால், இது ஒரு கேள்வியா? காலங்காலமாக நாம் பச்சிலைகளும், மூலிகைகளும் எடுத்துக்கொள்வதுதானே. இதில் கேள்வி கேட்க என்ன இருக்கிறது?”

“ஏன் இல்லை? அதே போல், ஆயிரம் கோடி மனிதர்களில் ஓரிருவரை ஒரு தாவரம் தன் நோய்களுக்கு மருந்தாக எடுத்துக்கொண்டால் தான் என்ன?” என்றார் ஞானன், மரத்தின் எழிலை அங்குலம் அங்குலமாக அவதானித்தபடி.

“என்ன? என்ன சொல்கிறீர்கள்?”

“இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விண்ணிலிருந்து ஒரு கல் வந்து விழுந்தது. அது முதல் தான் இப்படி நடக்கிறது. என் பாட்டனார் கவனித்தார். தலைமுறை தலைமுறையாக இந்த மரங்களுக்கு நாங்கள் சேவகம் செய்கிறோம். இந்த ரகசியத்தை ரகசியமாகவே கட்டிக் காக்கிறோம். காட்டின் இந்தப் பகுதியில் இதுகாறும் அந்த மர- நோய்மை அண்டாதிருந்தது. அந்தக் கல் விழுந்ததிலிருந்து, இந்தக் காட்டிலுள்ள சில மரங்கள் வினோதமாக வளர்கின்றன. நோய்வாய்ப்படுகின்றன. அவை நோய்வாய்ப்படுகையில் அவற்றுக்கு பிரத்தியேக மருத்து தேவைப்படுகிறது. மனிதர்கள் நோய்வாய்ப்படுகையில் பிரத்தியேக குணாதிசயங்கள் கொண்ட பச்சிலைகள் உண்பது போலத்தான் இதுவும். இலைகளில் பிரத்தியேகமானவை மூலிகையாவது போல், விலங்குகளில் பிரத்தியேகமான மனிதர்கள் தான் இம்மரங்களின் நோய்களுக்கான மூலிகை, பச்சிலை ஆகிறார்கள் என்று என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டபோது நானும் சற்று அதிர்ந்து தான் போனேன். பிறகு அதுவே பழகிவிட்டது. இந்தக் காட்டில் இறக்க நேர்ந்தவர்கள், காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், காணாமல் போனவர்களில் கணிசமானவர்கள் உண்மையிலேயே காணாமல் போகவில்லை. அவர்கள் இங்குள்ள மரங்களுக்கு மருந்தாகியிருக்கிறார்கள். அந்த வகையில், அவர்கள் சராசரி மனிதர்களின் ஆயுளைத் தாண்டி நூற்றுக்கணக்கான வருடங்கள் கூட வாழ இயலும். நீங்கள் வெற்றிலையை நாவிலேயே இருத்தி, சாற்றை மட்டும் விழுங்குவது போலத்தான்”

வானதி இமைகள் இமைக்க மறுத்த ஸ்திதியில் ஞானனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்படியானால், ஜோஸ் மரமாகிவிட்டானா?”

“வெற்றிலையை நீ வாயில் இட்டு குதப்பினால், வெற்றிலை குட்டி மனிதனாகிவிடுகிறதா? இல்லை அல்லவா? வெற்றிலை வெற்றிலையாகவே தான் நீடிக்கிறது. இதோ பார்.. நீ பலவற்றைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறாய். மனிதன் விழுங்குவதாலேயே செடிகள் மரணிப்பதில்லை. செடிகளின் உள் இயக்கம் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான அனைத்து புறச்சூழலும் சரியாக அமையும் பட்சத்தில் மனிதனின் உடலுக்குள்ளிருந்தபடி கூட செடிகள் ஜீவித்தே தான் இருக்கும். அந்தப்படி, மனிதனின் உடல் என்பது அந்தச் செடிகளைப் பொறுத்த வரை வெறும் வெளி தான்”

“அது போலத்தான் ஜோஸும் என்கிறீர்களா?”

“நிச்சயமாக. ஒன்று சொல்லட்டுமா? பெண் இனம் தான் முதலில் தோன்றியது என்று ஜோஸ் சொன்னதாகச் சொன்னாய் அல்லவா?. ஆதலால் பெண் இனத்திற்கே முன்னுரிமை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பூமியில் மனிதப் பெண் இனம் தோன்றுவதற்கு முன்பே தாவரங்கள் தோன்றியிருக்க வேண்டும். பெண் இனம் தான் மூத்தது என்பதை ஒப்புக்கொள்ளும் நீ இதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்படி யோசித்துப் பார். பூமி என்ற இந்த கிரகமே தாவரங்களுக்கானதென்றால்? மனிதர்கள் முதலான விலங்குகள் அனைத்தும், தாவரங்கள் தங்கள் பிழைத்தலுக்கென உருவாக்கிய இந்திரிய சாத்தியங்களின் பக்க விளைவுகள்தான் என்றால்? அப்படியென்றால், தாவரமான இந்த மரம், தன் பிழைப்புக்கென, தான் உருவாக்கிய மனிதர்களில் ஒன்றே ஒன்றை தன் நோய்க்கு மருந்தாக எடுத்துக்கொண்டால் தான் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்றார் ஞானன்.

“ஒரு பெரிய மரத்தின் கிளையில் இலையாக ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, இலையானது மரத்தையும், மரம் வீற்றிருக்கும் இந்த வெளியையும், இவை அமையப்பெற்றிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தையுமே தன் வெளியாகக் கொள்கிறது. நோயின் நிமித்தம் அதே இலையை மூலிகையாக, பச்சிலையாக நீங்கள் உட்கொள்கையில் அது உங்கள் உடலையே பிரபஞ்ச வெளியாகக் கொள்வதில்லையா? அந்தப் பிரபஞ்சவெளியில், அது ஒப்பீட்டளவில் எத்தனை சிறியதாய் இருப்பினும், அதற்குள்ளும் தன் இயல்பை வெளிப்படுத்துவதில்லையா? அந்த இலையைப் பொருத்த மட்டில், பிரபஞ்ச வெளிக்கும், உங்கள் உடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. இரண்டையுமே அதனதன் இடத்தில் சமமான அளவில் சிக்கலான ஒழுங்கைக் கொண்டுள்ளதாகத்தான் கொள்கிறது. அல்லவா? மனிதர்கள் இருக்கும் ஒரே வெளியை, வெவ்வேறாய்க் காண்கிறார்கள்.இத்தனைக்கும் ஒவ்வொன்றிற்கும் மிகச் சன்னமான வித்தியாசமே. பார்க்கப்போனால், இந்த சன்னமான வித்தியாசங்களே மனிதர்களை வேறுபடுத்துகிறது. ஆனால், வெளியாக, அவ்வெளியில் இயக்கமாக மனிதர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். படுக்கையில், வைக்கோலுக்கும், பஞ்சுமெத்தைக்கும் தான் வித்தியாசமே ஒழிய உறக்கங்களுக்கும், கனவுகளுக்கும் அல்ல ”

“பிரபஞ்ச வெளியை தங்கள் வெளியாகக் கொள்ளும் மனிதர்கள், ஒரு மரத்தின் நோய்க்கான பச்சிலையாகையில் பிரபஞ்ச வெளியையே தன் வெளியாகக் கொள்ளும் மரத்தை ஏன் தங்கள் வெளியாகக் கொள்ளக்கூடாது? வெளியில் வாழ்வதற்கும், அந்த வெளிக்கு சமமான, அளவில் சிறிய ஒரு வெளிக்குள் இயங்கிக்கொள்வதற்கும், இயக்க ரீதியில், என்ன வித்தியாசம் இருக்க முடியும்? உயிர்களில் மூத்த உயிரான, தாவரங்களே அப்படி ஒரு வித்தியாசத்தை தங்கள் இருப்புக்குக் கற்பித்துக்கொள்ளாதபோது, அப்படி ஒரு வித்தியாசம் தங்களுக்கு இருப்பதாக மனிதன் தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளும் மதிப்பு என்பது எத்தனை மடத்தனமானது என்பதை நீ உணர்கிறாயா?” என்றார் ஞானன் தொடர்ந்து.

“நீங்கள் சொல்வது மிக வினோதமாக இருக்கிறது. இப்படி நான் இதுகாறும் கேள்விப்பட்டது கூட இல்லை. எனக்கு விளங்கவில்லை. ஒரு கொலைக்கு நிகராக இங்கே எதுவோ நடக்கிறது. அதன் விளிம்பையே நான் தொட்டிருப்பதாக உணர்கிறேன். நீங்கள் ஒரு கொலையை, எதை எதையோ சொல்லிக் குழப்புகிறீர்கள்,” என்றாள் வானதி.

“இந்த பூமியில் உயிர்கள் சார்ந்த உன் பார்வையை நீ மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் வானதி. இல்லையேல், அனர்த்தங்களையே உண்டு, அனர்த்தங்களையே செரித்து வாழும் ஒரு அற்ப பிறவியாக மட்டுமே நீ வாழ்ந்து மரிப்பாய். உனக்கும் ஒரு கிணற்றுத்தவளைக்கும் பெரிதாக பேதங்கள் இல்லாமல் போகும். ஜோஸுக்கு என்ன நடந்ததோ, அது, இப்பூமியில் உயிர்களின் பார்வையில், நன்றாகவே நடந்தது. இனியும் நடக்கும். அந்த நிகழ்வுகளை, ‘காட்டிற்குள் தொலைந்தவர்கள்’ என்று மனிதர்கள் கடந்து போவது இனியும் தொடரும். ஜோஸ் தன் கைக்கு எட்டாத அமேசான் காடுகளில் தொலையும் அனுபவத்தை, இந்தக் காட்டில் தொலைவதில் பெற முயற்சித்தே இங்கு வந்திருக்கிறான். ஒருவேளை அதனால் தான் இந்த மரங்கள் அவனைத் தெரிவு செய்தனவோ என்னவோ? அவனிடத்தில் வெளிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பெரிதாக இல்லை என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். ஜோஸை நீ காப்பாற்ற முனைய வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ,அவன் எப்போதும் போல தனக்கான வெளியில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறான். அந்த வெளி ஒரு மரத்திற்குள் இருக்கிறது என்பது மட்டுமே உன் போன்ற சராசரி மனிதர்களை சலனம் கொள்ள வைக்கும் ஒரே வித்தியாசம்,” என்ற ஞானன், மரத்தை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, திரும்பி வந்த வழியே நடக்கலானார்.

செய்வதறியாது திகைத்த வானதி மரத்தையே கையாலாகாமல் பார்த்து நின்றாள். மரம் முன்பு தோன்றியதைவிடவும் தெளிவாகவும், ஒளி பொருந்தியதாகவும் தோற்றமளித்தது.

 

தெளி தேவதை

“நாம் எங்கே செல்கிறோம்?”

வசி கேட்டாள். அகவை பதிமூன்றை அப்போதுதான் தொட்டிருந்தாள். சிறுமியாக இருந்தவள், உடலின் மாற்றங்களால் பருவப்பெண் ஆகியிருந்தாள். பாவாடை சட்டையில் தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றிப்பொட்டுமாக அவளே ஒரு குட்டி அழகியாக அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவள் அமர்ந்திருந்த மாட்டு வண்டி, ஜல் ஜல் என்று ஒலி எழுப்பியவாறு மலைகளுக்கிடையேயான பாதையில் சென்று கொண்டிருந்தது. கரடு முரடான பாதையின் கடுமை தெரியாமல் இருக்க மாட்டு வண்டிக்குள் வைக்கோல் அடர்த்தியாக அடுக்கப்பட்டு அதன் மீது பஞ்சுத்துணி அடுக்குகளாக அடுக்கப்பட்டிருந்தது. அதன் மீது தான் வசியும், அவளது தாய் உமாவும் அமர்ந்திருந்தார்கள். போகும் வழியில் தாகத்தைத் தணிக்க வண்டிக் கூண்டின் ஓரம் மண் பானையில், நீர் இருந்தது. ஒரு பாண்டத்தில் பழைய சோறும், மிளகாய் ஊறுகாயும் அவர்களின் பசிக்காய் சேமிக்கப்பட்டிருந்தன. அந்தப் பாண்டம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. மாடுகள் வயிறார உண்டிருந்தன. ஆதலால் தோய்வின்றி நடந்து கொண்டிருந்தன. எதிர்பார்த்த நேரத்துக்குள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்துவிடுகிற நம்பிக்கையை அளிக்கும் வண்ணம் நடந்தன.

“ஏன் பாதை வெறிச்சோடியிருக்கிறது? வழமையாக வியாபாரிகளும், நாடோடிகளும், காசிக்குச் செல்வோரும் பயன்படுத்தும் பாதை தானே இது?” என்றாள் தாய் உமா புருவச்சுருக்கங்களுடன்.

“அதுவா… வடக்கே இப்ராஹிம் லோடி சர்க்கார் வீழ்ந்ததையடுத்து புதிய அரசு உதித்திருக்கிறதாம். வழிப்போக்கர்கள் பாபர் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள். புதிய அரசின் தேவைக்கென வியாபாரிகள் அங்கே சென்றிருக்கலாம்” என்றார் விகார்.

“சொல் அம்மா, நாம் எங்கே செல்கிறோம்?” என்றாள் வசி மீண்டும்.

“தெளி தேவதையைப் பார்க்க” என்றாள் தாய், உமா.

“தேவதை என்றால்?” என்றாள் வசி.

“நம்மைப் போல் இருப்பவர்கள். நம்மை ரட்சிப்பவர்கள். ஆனால், நம்பவே முடியாத சக்தி படைத்தவர்கள் என்று அர்த்தம்?”

“தெளியிடம் என்ன சக்தி இருந்தது?”

தான் ஒரு குடும்பமாக, பிள்ளை பெற்றெடுத்து வாழ்ந்து செழிப்பது போல் தன் மகளும் வாழ்ந்து செழிக்க வேண்டும் என்று உளமாற விரும்பினாள் உமா. தன் பெற்றோர்கள் தனக்குச் செய்ததை தானும் தன் மகளுக்குச் செய்வதில் குறை ஏதும் வைக்கக்கூடாதென்று விரும்பினாள். அதன் ஒரு பகுதியாகவே அந்தப் பயணமாக இருந்தது. செல்ல இருக்கும் இடத்தின் முக்கியத்துவம் அறிந்தால், வசி, அதன் தூய்மைக்கேற்ப நடந்துகொள்வாள் என்று தோன்றியது.

“உனக்கு அரசன் பார்த்தனாஜன் கதை தெரியுமா?”

“தெரியாதே”

“சொல்கிறேன் கேள். முன்பொரு காலத்தில் பார்த்தனாகென் என்றொரு அரசர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மேரி என்றொரு மனைவியும் இருந்தாள். இந்தப் பிரதேசத்தை அவர்கள் இருவரும் சிறப்பாக ஆட்சி செய்துவந்தனர். அவரது ஆட்சியில் முப்போகம் விளைந்தது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால், பார்த்தனாகென் தம்பதிக்கு வெகு காலமாகக் குழந்தையே இல்லாமல் இருந்தது”

கால்களை மடித்து அமர்ந்து, முட்டியின் மேல் கைகளை ஊன்றியபடி,

“ம்ம்ம்” என்று சொல்லி ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் வசி. அப்போது மாட்டுவண்டியின் உட்புற விகாரத்திலிருந்து ஒரு பள்ளி தொப்பென்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில், துணி மீது விழுந்தது.

“வீல்ல்ல்ல்ல்” என்று பயத்தில் அலறினாள் வசி. தொடர்ந்து இன்னொரு ஆண் பல்லியும் அதனருகே விழுந்தது.

மாட்டு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த வசியின் தந்தை விகார் சட்டென வண்டியை நிறுத்திவிட்டு

“என்ன? என்னானது?” என்றார் பதட்டத்துடன்.

வசி கால்களைச் சுருக்கியபடி, பின் பக்கமாய் நகர்ந்து, மாட்டு வண்டிக் கூண்டின் சுவற்றோடு ஒண்டிக்கொண்டிருந்தாள். உமா தன் ஆள்காட்டி விரல்களால் பல்லியைச் சுட்டிக்காட்டினால். அவள் முகத்தில் அசூயை உணர்வு வியாபித்திருந்தது. தன் கைகளால் அந்த பல்லிகளை ஒரு சேரத் தட்டிவிட்டார் விகார். அந்தப் பல்லிகள் வண்டியின் வெளிப்புறம் புல்லில் விழுந்து ஓடி மறைந்தன.

“நல்ல வேளை நசுக்கவில்லை…. கர்ப்பமாக இருந்தது அந்தப் பெண் பல்லி” என்றாள் உமா

“அதனால தான் தள்ளி விட்டேன்” என்ற விகார், தொடர்ந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அமர்ந்தான்.

“ஒரு கவலம் தண்ணீர் கொடு” என்று கேட்க, மண் பானையின் மூடியைத் திறந்து கோப்பை ஒன்றில் தண்ணீர் மொண்டு எடுத்து உமா நீட்ட, அதை வாங்கி அண்ணாந்து பார்த்தபடி வாய்க்குள் கவிழ்த்து குடித்துவிட்டு கோப்பைத் திருப்பித்தந்தார் விகார். புறங்கையால் இதழோரம் வழிந்த நீரை வழித்துத் துடைத்துவிட்டு மாட்டின் பின்புறம் உதைக்க, வண்டியின் முன் கட்டப்பட்டிருந்த மாடுகள் வண்டியை இழுக்கத்துவங்கின.

உமா, வசி அமர்ந்திருந்த வைக்கோல் மீது படர வைக்கப்பட்டிருந்த இளவம் பஞ்சுத்துணியைத் தட்டி சீராக்கினாள். வண்டியின் கூண்டோடு ஒண்டிக்கொண்டிருந்த வசி, பயத்திலிருந்து மீண்டவளாய் வைக்கோல் தட்டியின் மீது மீண்டும் சரியாக அமர்ந்துகொண்டாள்.

“ஆங்க்..கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்” என்றாள்.

உமா விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதைச் சொல்லத்துவங்கினாள்.

“அரசனுக்கும் அரசிக்கும் குழந்தையே இல்லாமல் இருந்தது. ஆதலால் அவர்கள் தங்கள் மந்திரியை ஆலோசித்தார்கள். மந்திரி, அவர்களை இந்த கிராமத்துக்கு ஒரு முறை சென்று வரப்பணித்தார். இந்த கிராமத்தில் தங்கி அரசனும் அரசியும் உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த கிராமத்தில் தான் தெளி இருந்தாள். தெளி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள். அந்தக் காலத்தில் கடவுளுக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். யாருடனும் உறவு கொள்ளக்கூடாது என்பது விதியாக இருந்தது. அவளின் கண்ணித்தன்மை கடவுளுக்குக் காணிக்கையாக்கப்பட்டது. தெளி, குழந்தை வரம் தேடி வரும் அரசனுக்கும் அரசிக்கும் ஒரு மாத காலத்திற்கு எல்லாமுமாய் இருப்பதாய் ஒப்பந்தமாயிற்று.”

“அரசனும், அரசியும் வந்தார்கள் ஒரு வாரம் தங்கினார்கள். தெளி அவர்களுக்கு வேண்டிய உணவு, மற்றும் இதர பணிவிடைகள் செய்துகொடுத்தாள். ஒரு மாதத்தின் இறுதியில், அரசியை சோதித்த மருத்துவர்கள் அரசி கர்ப்பமடையவில்லை என்றார்கள். ஆனால், அந்த நேரம் தெளி மயங்கி விழுந்தாள். தெளியை சோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள். இது அரசருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏனெனில், அந்த ஒரு மாத காலமும் தெளி அரசர் மற்றும் அரசிக்கு அருகாமையில், அவர்களின் கண் பார்வையில் தான் இருந்தாள். அவளை அரசர் உள்பட யாரும் தீண்டவில்லை. ஆகையால், அரசிக்குள் உருவான கரு தெய்வ வசத்தால் தெளியை வந்தடைந்தது என்று எல்லோராலும் பேசப்பட்டது. கடவுள் தெளியையே தேர்வு செய்ததாக கொள்ளப்பட்டது.” என்று சொல்லி நிறுத்தினாள் உமா.

“பிறக்கென்ன ஆயிற்று?” என்றாள் வசி கதை கேட்கும் ஆர்வத்தில்.

“தெளிக்கு அது ஒரு நற்செய்தியாய் விளங்கியது. ஏனெனில், தெளி அப்போதிருந்த கிராம மக்களால் இறைப்பணிக்கென நேர்ந்துவிடப்பட்டவள். தன் வயதொத்த பெண் பிள்ளைகள் திருமணம் முடித்து பிள்ளை பெற்றுக்கொண்டிருக்க, ஆலயப்பணிகளுக்காய் தான் மட்டும் நேர்ந்துவிடப்பட்டதன் காரணம் தெரியாமல், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள். எப்படி தாய் தந்தையரை ஒருவர் தேர்வு செய்ய முடியாதோ அதே போலத்தான் இறைப்பணியும் என்பதாக அவளுக்குச் சொல்லப்பட்டிருந்ததை அவள் ஒரு சாபமாகவே பார்த்தாள். அப்படிப்பட்டவளுக்கு, பார்த்தனோஜன் அரசனின் வாரிசை சுமப்பது, அவள் தேடிய விடுதலையை அவளுக்கு அளிப்பதாகவே இருந்தது. அதை அவள் முழுமனதுடன் வரவேற்றாள், சுவீகரித்தாள், அதன் ஒவ்வொரு நொடியிலும் தன் பூரணத்தை உணர்ந்தாள்.”

“தெளி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் என்பதால் அவள் பிள்ளை பெறும் முன் அரசாட்சிக்குத் திரும்புவது சரியாகப் பார்க்கப்படவில்லை. ஆதலால் அரசரும் கிராமத்திலேயே பிள்ளை பிறக்கும் வரை தங்குவது என்று முடிவாயிற்று. தெளி அரசரின் வாரிசை சுமப்பதால், அவளுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. எடுபிடி வேலைகளுக்கு வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசியும் தெளியைத் தன் சகோதரி போல் பார்த்துக்கொண்டாள். அவளது கருவின் வளர்ச்சியை ஒரு மருத்துவர் தொடர்ந்து பரிசோதித்தார். ஆனால், துவக்கத்தில் மிகவும் திடமாகக் காணப்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல சற்றே குழப்பமாகவே காணப்பட்டார். ஒரு கட்டத்தில் தெளிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்ட அவள் இறந்து போனாள். அரசரின் வாரிசுடன் தெளி இறந்தது கண்டு அரசர் மிகவும் துயரத்துக்கு ஆளானார். மருத்துவர்கள் குழந்தையையாவது காப்பாற்றிவிடலாம் என்றெண்ணி அவளது வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர். உள்ளே ஒரு சதைப்பிண்டம் மட்டுமே காணப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த சதைப்பிண்டத்தில் உயிர் இல்லாதது கண்டு உறைந்தனர். அதே நேரம் அரசி கருவுற்றிருப்பதாக அறியப்பட்டது. எந்த ஆணுடைய உதவியும் இன்றி தெளி தானாகக் கருவுற்றது பின்னாளில் எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்டது. தெளி, அரசியை அடைய இருந்த உயிரற்ற சதைப்பிண்டத்தைத் தான் ஏற்று, பதிலாக அரசிக்கு உயிருள்ள கருவைத் தந்திருக்கிறாள் என்று எல்லோராலும் ஒருமனதாக நம்பப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

கேட்டுக்கொண்டிருந்த வசி அதிர்ச்சியடைந்தாள். அவளது புருவங்கள் சுருங்கின.

“பிறகு?” என்றாள் ஆர்வமுடன்.

“அவளுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது, அரசருக்கு வாரிசே கிடைக்கக்கூடாது என்று எண்ணி யாரோ தெளிக்கு விஷம் தந்திருக்க வேண்டும் என்று அனைவராலும் ஒருமனதாக ஊகிக்கப்பட்டது. அரசருடன் வந்திருந்த மருத்துவர்கள், மந்திரிகள், பாதுகாவலர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். தெளி இந்தக் கிராமத்திலேயே புதைக்கப்பட்டாள். அப்படியே தெளி கடவுளாகிவிட்டாள். அதனாலேயே கன்னிப்பெண்கள் ஒரு முறையாவது இந்த கிராமத்துக்கு வந்து தெளியின் காலில் விழுந்து அவளைத் தேவதையாக வரித்து வேண்டிக் கேட்டிக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. அப்படி வேண்டிக்கொள்பவர்களுக்கு, எந்த ஆணுடைய உதவியுமின்றி தானாகவே பிண்டத்தை கருவுறும் தன்மையை அடைவதிலிருந்து தெளி விலக்கி வைக்கிறாள் என்றும் தன்னை அண்டி வந்தவர்களின் தாய்மையைத் தெளி பாதுகாக்கிறாள் என்றும் இன்றளவும் சொல்லப்படுகிறது” என்று தெளி கதையைச் சொல்லி முடித்தாள் வசி.

கேட்டுக்கொண்டிருந்த விகார்,

“பலே பலே.. இத்தனை நடந்திருக்கிறதா இந்த கிராமத்தில்? தெளி குறித்து நான் அறிந்திருந்தேன். ஆனால் இத்தனை விளக்கமாக இன்று தான் அறிய நேர்ந்தது” என்றார்.

“ஆமாம்.. எனக்கும் இதுவெல்லாம் என் பாட்டி, முப்பாட்டி சொல்லி தான் தெரியும். தலைமுறை தலைமுறை இந்த கிராமத்து மக்கள் வாய் வழிச் செய்திகளாகக் கடத்தி வரப்பட்ட கதை தான் இது. நானும் திருமணத்துக்கு முன் ஒரு முறை இங்கே வந்திருக்கிறேன்” என்றாள் உமா.

இதற்கு அந்த மாட்டு வண்டி கிராமத்தை அண்டியிருந்தது. மூவரும் மாட்டு வண்டியை விட்டிறங்கினார்கள். விகார், மாடுகளை வண்டியிலிருந்து விடுவித்து அருகாமையில் இருந்த மரத்தோடு பிணைத்துக் கயிற்றால் கட்டினார். பின், கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்த ஒரு பெரிய ஒற்றைக் கல்லை அண்டினார்கள்.

“இங்கே தான் தெளி புதைக்கப்பட்டாளாம். அதன் நினைவாகவே இந்தக் கல் இங்கே ஊன்றப்பட்டிருக்கிறது” என்றாள் உமா.

மூவரும் அந்தக் கல் முன் நின்று விளக்கேற்றி வணங்கினார்கள். சற்று தள்ளி ஒரு மரத்தில் பல்லியொன்று தெரிந்தது.

அதன் உருவம் சற்று பரிச்சயமாக இருக்கவும் வசி அதனைக் கூர்ந்து பார்த்தாள். அது, விகார் தட்டிவிட்ட பல்லியைப் போலவே இருந்தது. விகார் பல்லியைத் தட்டிவிட்டு வெகு நேரம் இருக்கும். இத்தனை தூரம் ஒரு சிறு பல்லி தங்களை பின் தொடர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றி சற்று அதிர்ந்தாள் வசி. அந்தப் பல்லி அந்த மரத்தின் அருகாமையில் இருந்த ஒரு ஒற்றையடிப்பாதையில் இறங்கி சரசரவென ஓடியது

உமா பரிச்சயப்பட்ட பாதையில் நடப்பது போல அந்த ஒற்றையடிப்பாதையில் நடக்க, வசியும் விகாரும் அவளைப் பின் தொடர்ந்தனர். அந்த ஒற்றையடிப்பாதை ஒரு தடாகத்தை அடைந்தது. தடாகத்தின் ஓரம் ஏகத்துக்கும் தென்னை மரங்கள் காணப்பட்டன. தடாகத்தின் நீர் தெள்ளத்தெளிவாக இருந்தது.

“தெளி தேவதை இங்கே சமீபத்தில் வந்தது போல் தெரியவில்லை” என்றாள் உமா.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்றார் விகார்.

“வந்திருந்தால், கொட்டாங்கச்சிகளில் பெண் பல்லிகள் ஆண் துணையின்றி முட்டையிட்டிருக்கும் காட்சியை நாம் கண்டிருப்போம்.”

“ஓ.. அப்படியானால் வந்தது வீணா?”

“இல்லை.. நான் சொல்வது போல் செய்யுங்கள்” என்று சொல்லி உமா, தன் கணவன் விகாரின் செவியில் ஏதோ கிசுகிசுக்க, விகார் ஒரு தென்னை மரத்தில் ஏறி, ஒரு இள நீரைப் பறித்து கீழே வீசினார். அந்த இள நீர் வந்து விழுந்து உருண்டு மோதிய இடத்தில் கரையில் கிடந்த கொட்டாங்கச்சி உடைந்து சிதறியது.

அங்கே தடாகத்தின் முனையில் கூரான முனை கொண்ட பாறை ஒன்று தென்பட்டது. விகார், அந்தக் கூர்மையைப் பயன்படுத்தி, அந்த இள நீரிக்காயின் நார்களை உரித்து கொட்டங்கச்சியை வெளியே எடுத்தார். அதன் இரண்டு எதிரெதிர் முனைகளைத் துளையிட்டார். அங்கே உலவிக்கொண்டிருந்த பெண் பல்லி ஒன்றை எடுத்து அதனுள் இட்டு ஒரு முனையை மரக்குச்சியால் திணித்து மூடினார். அந்த இரண்டாவது துளையின் வாயிலாக, ஜீவித்திருக்கத் தேவையாக பிராண வாயுவை மட்டுமே அந்த பல்லி பெற முடியக் கூடிய அளவிற்கு மிகச் சிறியதாக இருந்தது அந்தத் துளை. பின் அதை வசியின் கைகளில் திணித்தார்.

“வசி, இதனை அந்தத் தடாகத்தில் விடம்மா” என்றாள் உமா.

வசி அது போலவே செய்தாள்.

“இனி கைக்கூப்பி தெளியை வேண்டிக்கொள். உனக்கு அழகழகான அறிவான பிள்ளைகள் உன் கணவனுடன் கூடிப் பிறக்கவேண்டுமென்று” என்றாள் உமா. வசி கீழே உடைந்த கொட்டங்கச்சியை ஒரு கணம் பார்த்தாள். அதனுள் ஒரு காய்ந்த பல்லியின் எலும்புகள் தென்பட்டன. அதனருகே, சிறிது சிறிதாய், பல்லி முட்டையிட்டதற்கான அடையாளங்கள் தோன்றின.

வசி கைகளைக் கூப்பினாள்.

“அவள் சின்னப்பெண். அவளுக்கென்ன தெரியும்?” என்று கடிந்தார் விகார். உடனே உமா, வசியை அண்டி ,அவள் பின்னே மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். பின் வசியைத் தன் மடியில் அமர்த்தினாள். பின் அவளின் பின் பக்கமிருந்து, தன் கைகளைச் செலுத்து, அவளது கைகளைக் கூப்பச்செய்து,

“தேவியே, உன்னைச் சரணடைகிறேன். முழுமை என்பது, இரண்டு சமமான பகுதிகளாகிறது. இரண்டும் ஒருங்கே தொடர்ந்திருத்தலே முழுமைக்கு இட்டுச்செல்வதாகிறது. பகுதிகளை உன்னிடத்திலே தேக்கிவிட்டு, முழுமையை எங்களுக்கு அருள்வதற்கு நன்றிகள் கோடி தாயே. உன்னை தொழுகிறேன். பகுதிகளை நீ எடுத்துக்கொள். எங்களுக்கு முழுமையை நல்கு. நீயே முழுமையின் திறவுகோல்” என்றாள் உமா.

வசி, கண்களை மூடிக்கொண்டு உமாவின் வார்த்தைகளை ஒரு மந்திரம் போல் ஆழ் மனதில் ஜெபித்தாள்.

“இனி சற்று காத்திருக்க வேண்டும். தெளி தேவதை இங்கே நடமாடுகிறாள் எனில், ஒரு வாரத்தில் இந்தப் பெண் பல்லி முட்டையிடும். அதை வைத்து நாம் மேற்கொண்டு முடிவு செய்யலாம். இப்போதைக்கு நாம் இங்கே தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்களும் வசியும் சுள்ளிகள் பொறுக்கி வாருங்கள். இரவுக்கு உணவு தயாரிக்கலாம். நாங்கள் பெண்கள் வண்டியிலேயே படுத்துக்கொள்கிறோம்.” என்றாள் உமா.

உமா கேட்டுக்கொண்டது போலவே அவர்கள் ஒருவாரம் அங்கே தங்கினார்கள். விகாரும், வசியும் சுள்ளிகளைப் பொறுக்க, அவ்வப்போது கிராமத்திற்கு வெளியே சென்று வந்தார்கள். உமா, கிராமத்தில் இருந்தபடி அவர்களுக்கு உணவு தயாரித்தாள். ஒரு வார காலத்தில், வசி தடாகத்தில் விட்ட கொட்டங்கச்சியில் இருந்த பல்லி முட்டையிட்டிருந்தது.

அதே நேரம், வசி உடல் நலக்குறைவாள் பாதிக்கப்பட்டாள். யாருமற்ற கிராமத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மருத்துவம் செய்ய இயலவில்லை. ஜுரமும் தலைவலியும் வயிற்றுப்போக்கும் அவளை சோர்வடையச்செய்தது. அவள் உணவு எடுத்துக்கொள்வதும் தடைபட்டது. அவளின் உடல் நலத்துக்கு என்ன குறை, என்ன தீர்வு என்று எதுவும் தெரியாமல் விகாரும், வசியும் குழம்பினார்கள். யாரை அண்டுவது, எதை அண்டுவது என தீர்மானமில்லாமல் திண்டாடினார்கள். என்ன செய்வதென திகைத்தார்கள். வசி சற்றைக்கெல்லாம் மூச்சு விடவே சிரமப்பட்டாள். இறுதியில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தாள்.

உமாவும் விகாரும் அழுது புரண்டார்கள்.

‘வசி என்னைப்போன்றே திருமணம் முடித்து, பிள்ளைப் பேறு பெற்று, வாழ்வில் சிறக்க வேண்டுமென்று தானே அவளை இங்கு அழைத்து வர எண்ணினேன். அது இப்படியா முடிய வேண்டும்? என் பிள்ளையை ஆசீர்வதிக்கத்தானே உன்னிடம் அழைத்து வந்தேன், அவளையே எடுத்துக்கொண்டு விட்டாயே’ என்று அழுது புரண்டாள் உமா.

மிகுந்த மன வருத்தத்துடன் வசியின் உடலை அங்கே குழி தோண்டி விகாரும் உமாவும் கனத்த மனதுடன் புதைத்தார்கள். அழுது அழுது வீங்கிய கன்னங்களுடன் அவர்கள் நிதானம் அடைந்தபோது, தெளியின் இறப்பைப் போன்றே வசியினுடையதும் இருந்ததை உணர்ந்துகொண்டார்கள். அது, வசியை தெளி தன்னுடன் அழைத்துக்கொண்டாள் என்று புரிந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.

சற்றைக்கெல்லாம் உமா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். விகார், தடாகத்திலிருந்து நீரள்ளி வந்து அவள் முகத்தில் தெளித்து அவளை சுய நினைவுக்கு மீட்டார். மீண்டெழுந்த உமாவின் நாடியை விகார் சோதித்துவிட்டு,

“நீ கர்ப்பமாக இருக்கிறாய். வசி தான் மீண்டும் பிறக்கிறாள்” என்றார் விகார்.

“இல்லை… வசி, இன்னொரு தெளியாகிவிட்டாள். இனி நமக்கும், நம் ரத்த பந்தத்தில் எல்லோருக்கும் வசி தான் தெளி” என்றாள் உமா, வசியின் கல்லரையை வெறித்துப் பார்த்தபடியே.

 

பொறி – ராம்பிரசாத் சிறுகதை

வார இறுதிகளில் மலையேற்றம் செல்வது வழக்கம். இந்த முறை சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் கார் எடுத்துக்கொண்டு தொலைவிலிருந்த ஒரு மலைப்பகுதிக்கு வந்திருந்தேன். இந்த மலைப்பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் இருந்தது. இந்த மலைப்பகுதியில் வாழ் நாளை நீட்டிக்கும் மூலிகைகள் கிடைப்பதாக பேச்சு வெகு நாட்களாக நிலவிக்கொண்டிருக்கிறது. எனக்கு அந்த ஐடியா பிடித்திருக்கிறது. சாவே இல்லை. வாழ்ந்துகொண்டே இருக்கலாம். எத்தனை வசீகரமான ஐடியா?அப்படி ஒன்று கிடைத்தால் வரம் தான். பூமி போல் ஒரு கிரகத்தை, எல்லையில்லா பிரபஞ்சத்தை ரசிக்க அனுபவிக்க ஒரு மனித ஆயுள் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இந்த மலைப்பகுதிக்கு நான் வருவது இதுவே முதல் முறை. காரை நிறுத்திவிட்டு என் தோள்ப்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக மலையை ஒட்டிய வனத்துள் நுழைந்தேன். சற்று நேரம் வனத்துள் ஊடுறுவினேன். சீரான நடை.

சற்று தொலைவில் ஒரு சிறு கூட்டம். நடுவே ஆறடி நீளம், இரண்டடி அகலத்தில் ஒரு குழி. ஒரு பிணத்தைப் புதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் அருகே செல்லவில்லை. என் கேமராவின் கண்களால் கொஞ்சம் அருகே சென்று அந்தப் பிணத்தின் முகத்தைப் பார்த்தேன். பெண் பிணம். தூங்குவது போலவே தோற்றம் தந்து மனதைப் பிசைந்தது. அந்தப் பெண் அழகாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

குழி பிறகு மூடப்பட்டது. மலர்கள் தூவப்பட்டன. சிறு கூட்டம் கலைந்தது.

ஒரு உயிரின் மதிப்பு உண்மையில் என்ன? நடந்து செல்கையில் ஆயிரம் கோடி நுண்ணுயிர்களைக் கொல்கிறேன். அவைகள் உயிர்கள் என்றால் உயிரின் மதிப்பு உண்மையில் என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டுமா? நுண்ணுயிர்கள் என்பதால் அவைகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? ஏன் இல்லை? அவைகளுக்கு மனிதர்கள் போல் நீளமான வாழ்க்கையும், மனமும் இல்லை என்பதாலா? நமக்கு ஒரு நுண்ணுயிரின் வாழ்க்கை குறித்து என்ன தெரியும்? புழுவின் உயிரை விட, நத்தையின் உயிர் மதிப்பு மிக்கதா? கேள்விகள் என்னைச் சூழ்ந்தன.

மலைப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது ஒரு அழகான நீர்வீழ்ச்சியை காண நேர்ந்து, கண நேர உற்சாகத்தில், நீரில் குதித்து, கரையேறி சுற்றும்முற்றும் பார்த்தேன். பார்த்தபடியே நடந்தேன். எங்கும் மரங்கள், செடிகள், கொடிகள். தங்களுக்குள் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் ஒன்றையொன்று மிஞ்சிவிடும் முனைப்பில் தாறுமாறாக குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து கிடந்தது. சிலவற்றின் அதீத வளர்ச்சியில், சில சிறிய தாவரங்கள் வளர வழியின்றி துவண்டு விழுந்துகிடந்தன. அவைகளை நசுக்கித்தான் அவற்றைவிடப் பெரிய தாவரங்கள் வளர்ந்து கிடந்தன.

வெறும் காடு மட்டும்தானா இங்கேஎன்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் உச்சந்தலையிலிருந்து புகை மேலெழும்பியது. அது பரந்த ஆகாயத்தின் எல்லையற்ற பரப்பில் மெல்ல தேய்வுற்று ஒன்றுமில்லாமல் போனது.

நான் மெல்ல முன்னகர்ந்தேன். ஒரு மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். அவள் திமிர அவன் அவளை இறுகக் கட்டி அணைத்தான். அவள் கைகளை, இறுகப்பற்றிக்கொண்டான். அவள் தன் உடலை உதறினாள். ஆயினும் அவனின் பிடியிலிருந்து அவளால் தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதை நான் கவனித்தேன். அந்தப் பெண்ணை உற்று கவனித்ததில், அவள் அந்த பிணத்தின் முக ஜாடையை நூறு சதம் கொண்டிருப்பதை உணர்ந்து சற்றே அதிர்ந்தேன்.

எனக்கு அந்த இருவரின் செயல்களில் விபரீதத்தைவிடவும், விகல்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதாகப்பட, ஒரு பெண்ணின் இளஞ்சூட்டு உடல் ஒரு ஆணை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து நான் அறிந்திருந்ததன் விளைவாக, ஒரு அணிச்சை செயலாக, நான் அவனிடமிருந்து அவளை மீட்கும் பொருட்டு அவர்களை நோக்கி ஓடினேன். அவன் முகத்தில் ஒரு குத்து விட நான் முயல, அவன் அதை முன்பே கணித்திருக்க வேண்டும். அவன் போக்கு காட்டியதில் என் முஷ்டி நிலத்திலிருந்த பாறையொன்றில் மோதி வலித்தது. அவனின் முக அமைப்பே தடிமனாக இருந்தது. அவன் என் இடுப்பின் கீழ் தன் காலால் வைத்து எத்த, நான் நிலைதடுமாறி விழுந்தேன். கண்கள் இருளடைந்தன. ஆபத்திலிருக்கும் ஒரு அழகான பெண்ணைக் காப்பாற்றக்கூட திராணியற்ற நானெல்லாம் என்ன விதமான………………………………………………………………………

நான் எழுந்தபோது, அவனும் அவளும் அங்கே இல்லை. சற்று நேரத்துக்குப் பிறகு அவள் அந்த குடிசைக்குள்ளிருந்து அழுதபடி வெளியே ஓடினாள். அவள் பின்னால் மிக மெதுவாக அவளையே பார்த்தபடி அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அவன் முகத்தில் லேசான களைப்பு தெரிந்தது. இடையை மறைக்கும் ஒரு அங்கி மட்டுமே அணிந்திருந்தான். அந்த அங்கியைப் பற்றிச் சொல்ல வேண்டும். வானவில்லின் அத்தனை நிறங்களும் அந்த அங்கியில் இருந்தது. அவன் உடலெங்கும் அவளின் நகக்கீரல்கள். உள்ளே என்ன நடந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. நான் மயங்கியிருக்கக் கூடாது.

அவன் என்னைப் பார்த்தான். எனக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. அவனின் எத்தலை என் உடலென்னும் மாபெரும் நினைவடுக்கு இன்னும் மறக்கவில்லை போலும். அவன் என்னை அண்டினான்.

உன் பெயர் என்ன?” என்றான்.

நீலன்என்றேன்.

மணிக்கட்டைப் பார்த்துவிட்டு, என் பெயர் எழுதி, பக்கத்தில் 5:02 என்று குறித்துக்கொண்டான்.

சாத்தியமே இல்லைஎன்றேன் தீர்மானமில்லாமல்.

அவன் என்னைக் கேள்வியாய் ஏறிட்டான்.

அவள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நான் என் கண்களால் பார்த்தேன். பிறகெப்படி இங்கே?” என்றேன்.

அவன் என்னை ஏறிட்டான். அவனின் கண்கள் இமைக்கவில்லை. கூர்மையான பார்வையால் என் கண்களை ஊடுறுவிப் பார்த்தான்.

எனக்கு ஒரு உதவியாளன் தேவைப்படவில்லை என்றால் இந்நேரம் நீ……………” அவன் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே கடந்து போனான். அவன் திரும்பத்திரும்ப என் அகங்காரத்தை சீண்டுவதாய்த் தோன்றியது. மயங்கக் கூடாத நேரத்தில் மயங்கிவிட்டபிறகு கோபம் எதற்காகும்?

எனக்கு பசித்தது. அவன் உதைத்ததில் இன்னமும் வலித்தது. வயிற்றின் அமிலம் உடலை இன்னும் இன்னும் பலவீனப்படுத்தியது. அவன் குறிப்பறிந்தது போல், ஒரு களிமண்ணாலான தட்டில் பொறித்த முட்டைகளுடனும், வதக்கப்பட்ட கீரையுடனும் வந்தான்.

விருந்தோம்பல். அதுவும், ஒரு பெண்ணிடம் தன் பலத்தை காட்டியவனிடம்.

இந்த இயற்கையின் வினோதத்திற்கு அளவே இல்லையா என்று தோன்றியது. அவனது விருந்தோம்பலை மறுப்பதா ஏற்பதா என்பது ஊர்ஜிதமாக இல்லாமல் இருந்தது.

நீ புதியவன். ஆனால் அவள் புதியவள் இல்லை.” என்று துவங்கினான்.

என்ன சொல்ல வருகிறாய் நீஎன்பதாக நான் அவனை ஏறிட்டேன்.

இதுகாறும் நான் தனியாக இந்தப் பிரதேசத்தைக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால், உன் வருகை, என்னால் அதிகபட்சமாகக் கையாளக்கூடிய எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. எனக்கு ஒரு உதவியாளன் வேண்டும். அது நீயாக இருக்கலாம் ஆனால், நீ விரும்பினால் மட்டும் தான்என்றான் தொடர்ந்து.

நான் ஏதும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தேன்.

நீ என்னுடன் சேர விரும்பவில்லை எனில், உன்னை அவளாக்கி அவளை நீயாக்கிவிடுவது தான் எனக்கிருக்கும் ஒரே வழிஎன்றான்.

எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்என்றேன் கெஞ்சும் குரலில்.

கேள். இந்தப்பிரதேசத்தில் காலம் ஒரு பொறியாக இருக்கிறது. துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துவிடும். நீ பார்த்தது உண்மை தான். அவள் சில மணி நேரம் முன்பு மரணித்தாள். ஆனால், காலம் அவள் இந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த கணத்திற்கே மீண்டதில், அவள் மீண்டுவிட்டாள். இனி மறுபடி மரணிப்பாளா தெரியாது

அவன் ஏதோ உளறுகிறான் என்றே தோன்றியது எனக்கு. ஒரு சைக்கோவை சந்தித்துவிட்டேன் என்று என் உள்ளுணர்வு சொன்னது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என் அட்ரினலின் விழித்துக்கொண்டது. இரண்டு முறை விக்கினேன். அவன் தண்ணீர் எடுத்து வர குடிசைக்குள் சென்றான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நான் காட்டுக்குள் ஓடினேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை. ஏன்?

நான் ஒடிக்கொண்டே இருந்தேன். எப்படியாவது மலையின் விளிம்பை நெருங்கி என் காரை அடைந்துவிட்டால் திரும்பிக் கூட பாராமல் வீட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். ஆனால் எவ்வளவோ ஓடியும் மலையின் விளிம்பே தெரியவில்லை. சில சிறு குன்றுகளைக் கடந்தேன். ஒரு குளத்தை அடைந்தேன். உண்மையிலேயே தாகம் எடுத்தது. குளத்தில் தெளிவான நீர் இருந்த பகுதியில் உள்ளங்கையால் நீரள்ளி அருந்தினேன். அவ்வளவு தான் நினைவிருந்தது. சற்றைக்கெல்லாம் என் கண்கள் இருளடைந்தன.

நான் கண்விழித்தபோது எவ்வித சேதாரமும் இல்லாமல் அதே இடத்தில் முழுமையாகக் கிடந்தேன். ஆறொன்று என் பாதையில் வந்தது. உடலெங்கும் அதுகாறும் இருந்த களைப்பும் வியர்வையும் அப்பிக்கிடக்க, உடலைச் சுத்தம் செய்யும் எண்ணத்தில் ஆற்றில் இறங்கினேன். கால் வழுக்கி இடறி விழுந்து நீருக்குள் சில நொடிகள் தொலைந்து, என்னை நானே மீட்டெடுத்து ஆற்றின் மறுபக்கம் கரை ஏறியபோது அந்தக் கரையை அதற்கு முன்பும் எங்கோ பார்த்த நினைவிருந்தது.

தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் தலையிலிருந்து புகை!

அருகிலிருந்த மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். நான் முன்பு கண்ட காட்சிகளையே திரும்பவும் காண நேர்வது என்ன வினோதம்?

நான் இம்முறை அவளை மீட்கும் பொருட்டு அவனிடம் மல்லுக்கு நிற்கவில்லை. திமிறும் அவளை தன் இருகைகளாலும் தூக்கித் தோளில் ஏந்திக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு அவள் கண்ணீருடன் அந்த குடிசையை விட்டு வெளியேறி ஓடினாள். பின்னாலேயே அவன் வெளியே வந்தான். என்னைப் பார்த்தான்.

மாலை மணி ஐந்தாகிவிட்டதுஎன்றான்.

எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. முதலில் அவள் யார்? அவளின் பிணத்தை மண்ணில் இட்டு மூடினார்கள். அவள் உயிருடன் எப்படி எழுந்து வந்தாள்? அவளுக்கு அந்த குடிசையில் அந்த பலவந்தம் முதல் முறை நடந்துவிட்ட பிறகும், மீண்டும் அதே இடத்திற்கு அவள் ஏன் வந்தாள்? மீண்டும் அவன் அவளை ஆக்ரமிக்க அவளே ஏன் வழி செய்தாள்? தான் பலவந்தப்படும் ஒரு வாய்ப்பை அவளே ஏன் அவனுக்கு வழங்குகிறாள்?

உன்னை உடல் வலுவால் வெல்ல எனக்குத் திராணி இல்லை. ஆனால் இது பாவம். ஒரு பெண்ணை நீ இப்படியெல்லாம்….. ” என்னால் அதற்கு மேல் அதை விவரிக்க முடிந்திருக்கவில்லை..

கேள். என்னாலும் இதைத் தனி ஆளாக இனியும் தொடர்ந்து செய்ய இயலாது. உதவிக்கு ஒரு ஆள் தேவை. நீ வருகிறாய் எனில், உன்னை அவளாக்க வேண்டியதில்லை

அவள் யார்? பேயா? அவள் இறக்கவில்லை என்றால் அவள் பிணம் மண்ணுக்குள் புதைந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அது எப்படி?”

அவள் இறந்தது உண்மை

இறந்தவள் மீண்டு வந்தாளா? பிணங்களை உயிர்ப்பிக்கிறாயா? அல்லது அவள் இரட்டையர்களில் ஒருத்தியா?”

இரண்டுமே இல்லை. நீ இங்கு வந்தது இரண்டாவது முறை. அதை கவனித்தாயா?”

நான் ஆமோதிப்பாய் தலையசைத்தேன்.

நீ இன்னும் பல ஆயிரம் முறை இங்கே வரப்போகிறாய். அது தெரியுமா?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி சாத்தியம்? அப்படியானால் நான் என் வீடு திரும்பப்போவதில்லையா?

என்ன உளறுகிறாய்?”

ஆம். காலம் இங்கே ஒரு பொறியாக இருக்கிறது. அதாவது டைம் ட்ராப். யார் இதை இங்கு இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இங்கே பலர் சிக்குண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அப்படிச் சிக்கியவள் தான். இதிலிருந்து மீண்டு வெளியே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சிலர் துவக்கத்தில் நம்பினார்கள். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் விளிம்புகளில் எங்கேனும் வெளியேறும் நுழைவாயில் இருக்கிறதா என்று சோதிக்கவும் செய்தார்கள். ஆனால் இதைச்சொல்லும் இக்கணம் வரை ஒருவர் கூட வெளியேறியதில்லை. வெளிச்செல்ல வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு தான் நான் இதைச் செய்கிறேன்.”

எதை?”

அவர்களின் நினைவுகளை அழிப்பது

என்ன?”

ஆம். நீ பலவற்றை கவனிக்கவில்லை என்று ஊகிக்கிறேன். வெளியே செல்ல வழியில்லை. திரும்பத்திரும்ப நடக்கும் ஒரே விதமான நிகழ்வுகள். நீ சற்று யோசித்துப்பார். ஏற்கனவே நடந்த ஒன்று திரும்பத்திரும்ப கோடி முறை உனக்கு நடந்தால், உன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நாளின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவது எது? சுவாரஸ்யம். அது இல்லையெனில் என்னாகும்? அவளுக்கு இறப்பே இல்லை. இங்கிருக்கும் யாரும் முதுமையடையப்போவதுமில்லை. “

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனால் தான் மண்ணுள் புதையுண்டவள் உயிருடன் மீண்டாளா? அவனிடம் மீண்டும் மீண்டும் சிக்குகிறாளா?

ஆனால், ஏன் நினைவுகளை அழிக்க வேண்டும்?”

நீ ஒரு கண்காட்சிக்கு செல்கிறாய். கண்காட்சியின் முடிவில், மீண்டும் கண்காட்சியை முதலிலிருந்து பார்க்கச்சொன்னால், உன்னால் அந்த கண்காட்சியை எத்தனை முறை ரசிக்க முடியும்?”

இரண்டு மூன்று முறைக்கு மேல் சலித்துவிடும்

அதுதான் இங்கும். காலப்பொறியானது இந்தப் பிரதேசத்தில் சிக்குண்டவர்களை மீண்டும் மீண்டும் பார்த்ததையே பார்க்கவும், கடந்ததையே கடக்கவும் நிர்பந்தப்படுத்துகிறது. இதிலிருந்து மீள இரண்டே வழி தான்

என்ன அது?”

ஒவ்வொரு முறை காலப்பொறி மீள்கையிலும், அதை அப்போதுதான் முதன்முதலில் எதிர்கொள்வதாக பாசாங்கு செய்வது. அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, இந்த பிரதேசத்தில் சிக்குண்ட அனைவருக்கும் நான் தருவது இதைத்தான். ஒவ்வொரு முறை கண்காட்சி முடிந்து மீண்டும் துவங்குகையிலும், அதுகாறும் பார்த்ததையெல்லாம் மறக்கச்செய்துவிட்டால், அந்தக் கண்காட்சி புதியதாக சுவாரஸ்யம் கூட்டுவதாகத்தானே அமையும்?”

நான் ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன்.

அப்படிச் செய்வதால், அவளுக்கு இந்தப் பிரதேசத்தின் மீட்சியற்ற செக்குமாட்டுத்தனம் செக்குமாட்டுத்தனமாகவே தெரியாது. அவளைப்பொருத்தவரை, இந்தக் கண்காட்சியை அவள் பார்ப்பது ஒரு முறை தான். தான், முதல் முறையாகத்தான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கிறோம் என்கிற எண்ணத்தில் அவள் ஒவ்வொருமுறையும் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு விதமாய்ப் பார்க்க நான் வழி செய்கிறேன். “

சரி. புரிகிறது. அது என்ன இரண்டாவது வழி?”

இந்தக் கண்காட்சியின் அழகில் தொலைந்து விடுவது. அதைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவள் போன்ற எண்ணற்றவர்களை இவ்விதம் கண்காட்சியில் தொலைய வைப்பதே எனது கண்காட்சி ஆகிவிடுகிறது. இவர்களை மேலாண்மை செய்வதிலேயே என் காலம் சுவாரஸ்யமாய்க் கழிகிறது. ஒவ்வொருமுறை அவர்கள் அவர்களுக்கான கண்காட்சிகளை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில், எனக்கு சுவாரஸ்யம் கூடுகிறது. அவள் போல் இப்பிரதேசத்தில் சிக்குண்டவர்கள் ஒவ்வொருவரும் எப்போது இந்த பிரதேசத்தில் நுழைந்தார்கள் என்பதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அந்த நேரம் வருகையில், அவர்களின் நினைவுகளை நான் அழித்துவிடுகிறேன். இதன் மூலம் காலப்பொறியின் அந்த இழையில் இந்தக் காடு அவர்களுக்கு புதியதாகிவிடும். ஆனால், காட்டுக்கு அவர்கள் புதியவர்களல்ல

அவன் சொன்னதைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. காலப்பொறி அதாவது டைம் ட்ராப் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவெல்லாம் அறிபுனை கிறுக்கர்களின் அதீத கற்பனை என்றே நினைத்திருந்தேன். நிஜமாகவே அப்படி ஒன்றில் நானே சிக்கிக்கொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

எல்லாம் சரி. ஆனால், நீ இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற ஏன் முயற்சிக்கவில்லை? இப்படி இந்தக் காட்டில் காலப்பொறியில் சிக்குண்டு உன் அசலான வாழ்வை வாழமுடியாமல் இருப்பது குறித்து உனக்கு வருத்தமில்லையா?” என்றேன் நான்.

அசலான வாழ்க்கை என்றால் என்ன? பூமியில் மானுட வாழ்வைச் சொல்கிறாயா?” என்றான் அவன்.

நான் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி அவனையே உற்றுப்பார்த்திருந்தேன்.

உண்மையில் நீ குறிக்கும் அந்த அசலான வாழ்வும் கூட ஒரு வகைக் காலப்பொறிதான் என்பதை உணர உனக்கு இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும்? என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய்? பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். அதன் மூலம், வாழ்வனுபவத்தை சுவாரஸ்யமாக்க முயல்கிறாய். அல்லது அடுத்தவர்களை மேலாண்மை செய்வதிலேயே உன் காலத்தை இட்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். இவையெல்லாவற்றின் நோக்கம் தான் என்ன? காலம் கடத்துவது. அதுமட்டும் தான் நோக்கம். அதையே இந்தக் காட்டுக்குள் மேற்கொள்வதில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? ” என்றான் அவன்.

அவன் சொன்ன எதையும் மறுக்க என்னிடம் எவ்வித வலுவான வாதமும் இல்லை என்பதே என்னை பலவீனப்படுத்துவதாக இருந்தது.

வாழ்க்கை என்று எதை நாம் குறிக்கிறோம்? சில மணி நேரங்களே உயிர் வாழும் உருவத்தில் மிகச்சிறியதான பூச்சிகளுக்கு வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது? அவ்வாழ்வனுபவத்தில் ஏன் மனித இனம் தேடும் அர்த்தங்கள் இருப்பதில்லை? மேற்கொள்ளும் பயணங்கள் இருப்பதில்லை? ஆனால் அது குறித்தெல்லாம் அந்தப் பூச்சிகள் அலட்டிக்கொள்வதும் இல்லை. இந்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட ஒரு தேனீ, தான் பல்லாயிரம் தேனீக்களின் வாழ்வுகளைவாழ்ந்து முடித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்திருக்குமா?

அதன் பார்வையில், தான் சற்று முன் பூவிலிருந்து எடுத்த மகரந்தத்தை ஏற்கனவே பல்லாயிரம் முறை எடுத்தாகிவிட்டது என்பதை அறியுமா? இவை எதையும் அறியாமல்தான், இவை எதையும் பொருட்படுத்தாமல்தான் தேனியானது இந்தப் பிரதேசத்தில் தன் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறது. முடிக்கும் தருவாயில் மீண்டும் பிறக்கிறது. அதன் நினைவுகளை அவன் அழிப்பதில்லை. ஏன்? அதன் நினைவுகள் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த நினைவுகள், அதன் வாழ்வின் மையமாக இருப்பதில்லை.

நினைவுகள்! ஞாபகங்கள்!

மனிதர்களின் நினைவடுக்கு என்பது தொடர்ச்சியாக, படிப்படியாக, ஒவ்வொரு புள்ளியாகச் சேர்த்து இணைக்கப்பட்ட ஒரு நேர்கோடு. மொழியின் மூலமாக, ஓலைச்சுவடிகளின் வாயிலாக, காகிதங்களின் வாயிலாக, கல்வெட்டுக்களின் வாயிலாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு வெறும் கருவி. அந்தக் கருவியுடன் மனித இனம் தோன்றிடவில்லை. துவக்கத்தில், தேனீயைப்போலத்தான் மனிதனும் தோன்றியிருக்கிறான் என்னும்போது மிகவும் தற்செயலாக, ஒரு வெறும் பக்கவிளைவாகத் தோன்றிவிட்ட, பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு கருவிக்கு சரியான விலை என்னவாக இருக்க முடியும்? ஒரு விரலின் வீக்கத்திற்காய், ஒரு முழு உடலையும் வீங்க வைப்பதென்பது என்ன விதமான விளைவுகளை உருவாக்கவல்லது?

இப்போது இந்தப் பிரதேசத்தில் நுழைந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யாரேனும் இந்தப் பிரதேசத்தில் நுழைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களை நான் தனியனாகக் கையாள்வது சிரமமாக இருக்கிறது. என்னதான் இது, காலப்பொறியானாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், என்னால் எத்தனை பேரைக் கையாள முடியுமென்று ஒரு வரையறை இருக்கிறதல்லவா? அதை நான் எப்படி மீற முடியும்? அதனால் இப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறது. நீ எந்த வழி செல்ல இருக்கிறாய்? மேலாண்மை செய்து காலம் கடத்த விரும்புகிறாயா? அல்லது, ஒவ்வொருமுறையும் இந்த பிரதேசத்தை புதிதாகப் பார்த்தே காலத்தை கடத்த விரும்புகிறாயா?” என்றான் அவன்.

ஐயோ கடவுளே! இப்படி ஒரு இக்கட்டில் வந்து சிக்குவேன் என்று கனவிலும் நினைத்திடவில்லைஎன்றேன் நான் சோர்வு தழுவிய குரலில்.

யார் கண்டது? அந்தக் கடவுளே கூட இப்படியொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டவன் தானோ என்னவோஎன்றான் அவன்.

நான் மேலாண்மையின் மூலம் காலம் கடத்துகிறேன்என்றேன்.

சபாஷ்.. இன்றிலிருந்து நீ என் உதவியாளன். வா ..என்னுடன்என்றுவிட்டு அவன் என்னை குடிசைக்குள் அழைத்துப்போனான். அணிவதற்கு சில மேலாடைகள் தந்தான். அவைகளிலும் வானவில்லின் அத்தனை நிறங்களும் இருந்தன.

அங்கு வைத்து எப்படி பின் மண்டையின் ஓரிடத்தில் தாக்கி சமீபத்திய நினைவுகளை அழிப்பது என்று கற்றுக்கொடுத்தான். அதையும் மீறி எவரேனும் எதையேனும் நினைவு வைத்திருப்பின் அதை கனவென்றோ‘, ‘அதீதக் கற்பனையென்றோசொல்லி மூளைச்சலவை செய்யவும் அவனிடம் பயிற்சி பெற்றேன். பிறகு அவன் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினான். அதில் அந்த பிரதேசத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்ட இடமும், நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிது சிறிதாக அந்தப் பிரதேசத்தின் ஒழுங்கு எனக்குப் பழக்கமாகிப்போன ஒரு நாளில் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது பின் மண்டையில் ஓங்கி அடித்தேன். அவன் மயங்கி விழுந்தான். நினைவு திரும்பும் போது அவனும் இந்த பிரதேசத்திற்கு புதியவனாகிவிடுவான். அவன் மீது அவன் எனக்களித்த வானவில்லின் அத்தனை நிறங்களும் கூடிய ஆடையை வீசினேன். ஓரினச்சேர்க்கையாளர்களின் குறியீடு எனக்கெதற்கு. நான் தேடியது வாழ் நாளை நீட்டித்துக்கொள்ள ஒரு தீர்வை.

நான் அருகாமையிலிருந்த அந்த மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அவள் வரக் காத்திருந்தேன்.

என் மூளையில் திட்டம் தெளிவாக இருந்தது. காலப்பொறிக்குள் இனி நோயும் இல்லை, முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. உடன் ஒரு பெண் இருப்பின் எத்தனை அழகாய் இருக்கும்? இந்தப் பிரதேசம் காலத்தைத் திகட்டத்திகட்ட வழங்க இருக்கிறது. தர்க்க ரீதியாய்ப் பார்க்கின் இத்தனை நீளமான காலத்தைக் கடத்தத் தேவையான அனுபவத்தை, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரைக் காட்டிலும், வெவ்வேறு பாலினத்தைப் சேர்ந்த இருவரால் பெறவே அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது உண்மையில்லை என்று எப்படிக்கருத இயலும்? பூமியில் முதன் முதலாய் உதித்தது பெண் இனம். பின் அதுதான் ஆண் இனமென்று ஒன்று உருவாகக் காரணமாகவும் இருந்தது. முற்றிலும் ஒரே பாலினம் நீண்ட நெடுங்காலத்திற்கு சாத்தியமெனில், ஆண் இனம் என்ற ஒன்றே உருவாகியிருக்க வேண்டியதில்லையே.

அவள் வருவாள். அவள் மீது நான் தாவி ஆட்கொள்வேன். அவள் நினைவுகளை நான் அழிக்கப்போவதில்லை. அவள் நினைவுகளை மட்டும் நான் அழிக்கவே போவதில்லை.

நாடோடி – ராம்பிரசாத் சிறுகதை

அதிகாலை ஐந்து மணிக்கு தெருமுனைக்கு வந்திருந்தேன். அங்கே ஒரு கடை இருக்கிறது. நாளிதழ் கடை. அன்றைய தினத்துக்கான அத்தனை பத்திரிக்கைகளும் அங்குதான் வரும். அங்கிருந்து வெவ்வேறு கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.

“திலகா வந்துடுச்சா?” என்றேன்.

“ஒங்க கதை வந்திருக்கா?” என்றார் கடைக்காரர். ஆம் என்பதாய் தலையாட்டினேன். திலகா வாராந்திரியை எடுத்து நீட்டினார். ஏழு ரூபாய் தந்துவிட்டு வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்தேன். முப்பத்தியிரண்டாவது பக்கத்தில் என் சிறுகதை வெளியாகியிருந்தது. நான் எழுதிய கதையை யாரோ வாசிக்கிறார்போல் ஒரு முறை வாசித்துப்பார்த்தேன். எனக்கு திருப்தியாக இல்லை. சரியான பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. நாம் எழுதியது நமக்கே திருப்தியாக இருந்துவிடவே கூடாது. அப்போதுதான் அந்த திருப்தியை எட்டிவிடும் முயற்சியாக இன்னுமொரு கதை எழுதத் தோன்றும். அதையும் சற்றே குறையாகத்தான் எழுதவேண்டும். அதுதான் நம்மைத் தொடர்ந்து எழுதவைக்கும். இது ஒரு தந்திரம் தான்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நான் பத்திரிக்கையில் எழுதுவதற்கான அசலான காரணம் வேறு.

என் வீடு ஒரு மத்தியவர்க்க அபார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாவது மாடியில் இருந்தது. குடும்பம், மாதா மாதம் சம்பளம், அந்த சம்பளத்துக்குள் சந்தோஷம், துக்கம் இப்படியானவர்களுக்கு மத்தியில் வாழ ஒரு தகுதி இருக்கிறது. அது இருப்பதாகக் காட்டிக்கொள்ளத்தான் இந்த ‘எழுத்தாளன்’ பிம்பம்.

நான் திருடன் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்வரை ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். அங்கே நான் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் போகாமல் விட்டுவிட்டார்கள். அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் கல்லூரி ஒரு அங்கீகாரம் பெறாத கல்லூரி. என் விஷயத்தைப் பெரிதுபடுத்தினால், அவர்களின் முகத்திரையை நான் கிழிக்க வேண்டி வரும். ஜென்டில்மேன்கள் போல் அவரவர் பாதையில் விலகிக்கொண்டோம்.

இந்தத் தந்திரம், அதிலிருக்கும் புத்திசாலித்தனம் என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தது. என் தகப்பனார் (அப்படித்தான் எனக்கு அவர் அறிமுகப்பட்டிருந்தார்) ஒரு அக்மார்க் நாடோடி. அப்போது இந்திய பிராந்தியத்தில் முகலாயர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அது சுமார் எழுநூறு ஆண்டுகள் இருக்கலாம். அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. காட்டு வாழ்க்கை எந்த ஆட்சியையும் சாராதது. அத்திப்பூ பூத்தாற்போல் அவ்வப்போது எந்த அரசனாவது, படை பரிவாரங்களுடன் காட்டுக்குள் வேட்டைக்கு வந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

என் தந்தை எனக்கு முன்பே சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியின் வாழ்ந்துகொண்டிருப்பதால், காடுகள் தாம் தமக்கேற்ற இடம் என்று அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன். காடுகளில் தான் அவர் மூப்படையாததை யாரும் பார்க்க முடியாது. காடுகள் மூப்படைவதில்லை. அதே நேரம் காடுகள் வெளி உலகு குறித்த தகவல்களைப் பூடகமாகச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவர் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். அதன் படி அவர் நாகரீகங்களை பகுத்தார். அதன்படி முதலில் காடுகள் ஆதிக்கம் செலுத்தும் நாகரீகங்களே உருவாகும் என்றார். அதுதான் கற்காலமாக இருந்திருக்கிறது என்று நான் புரிந்துகொள்ள அது உதவியது. எகிப்தின் கீசா பிரமிட் கட்டுமானத்தின் போது நைல் நதிக்கரையில் இருந்தபடி கூலி ஆளாக அவர் வேலை பார்த்த கதைகளை அவர் சொல்ல நான் பல முறை கேட்டிருக்கிறேன்.

பின், நாகரீகங்கள் காடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என்று கணித்தார். அதைத்தான் முகலாயர்கள், பின் அவர்களைத்தொடர்ந்து கிருத்துவ மதத்தினர் ஆதிக்கம் செலுத்திய காலகட்டமாக நான் புரிந்துகொள்ள அந்த கணிப்பு உதவியது. இந்தக் காலகட்டங்களில், அவ்வப்போது போர்களின் நிமித்தம் இரவுகளிலும் இரண்டு பிரதேசங்களின் போர் வீரர்கள் காடுகளுக்குள் பதுங்கித் திரிய நானும் என் தந்தையும் அவதானித்திருக்கிறோம். அப்போதெல்லாம் காட்டு விலங்குகள் தங்களை அண்டாமல் இருக்க, மிகச் சத்தமாக தண்டோரா போட்டபடியே காடுகளுக்குள் செல்வார்கள். அப்படித்தான் இசை எனக்குப் பரிச்சயமானது. தொடர்ந்து, மூங்கிலைக் கொண்டு புல்லாங்குழல் மூலமும், மூங்கிலை கொடியால் வளைத்துக் கட்டி அந்தக் கொடி நரம்பை மீட்டுவதன் மூலமும் இசையை என் தந்தை என் பொருட்டு விரித்துக் காட்டினார். பொழுது போகாத தருணங்களில் நாங்கள் அவைகளைக் கொண்டு இசையை உருவாக்கி மகிழ்வோம்.

பின் ஒரு கட்டத்தில், பூட்சு அணிந்த வெள்ளை மனிதர்கள் காட்டுக்குள் வந்து வன விலங்குகளை வேட்டையாடிவிட்டுச் செல்வதை அவர்கள் வீசி எறிந்த மது போத்தல்களை வைத்து கண்டுகொண்டிருக்கிறோம். அந்த மது பொத்தல்களில் எழுதியிருக்கும் வாசகங்களை அவர் படித்துக் காட்டுவார். அவ்விதம் ஆங்கிலத்தை எனக்கு அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் எனக்கு அந்த மொழியை கற்றுக்கொடுக்கவும் செய்தார். நான் பிறக்கும் முன்பே அவர் பல கண்டங்கள் நாடோடியாகச் சென்று வந்திருக்கிறார் என்பதை எனக்கு புரிய வைத்த கணமும் அதுவே. அப்போதெல்லாம் நாங்கள் காட்டை விட்டு வெளியே செல்ல நான் ஆலோசனை சொன்னபோதெல்லாம், காடுதான் பாதுகாப்பு என்று என் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி நான் பார்த்திருக்கிறேன். காடுகளை வைத்து நகர மாற்றங்களை பகுத்ததை வைத்து, பின், நாகரீகங்கள் காடுகளை ஆதிக்கம் செலுத்தும் என்று கணித்தார்.

என் தகப்பனார் என்னைக் காட்டிலேயே வளர்த்தார். குடகு மலையில் சில பொந்துகள் இருந்தன. ஒரு காலத்தில் போர்களின் போது மறைந்திருந்து தாக்கப் பயன்பட்டிருக்கலாம். புதர்களால் மறைக்கப்பட்ட அந்த பொந்துகளில் ஒன்றில் தான் எங்கள் வசிப்பிடம். காட்டில் என்ன கிடைக்கிறதோ, அதை அவர் எடுத்து வந்து தருவார். தானும் உண்பார். சில நேரங்களில் அணிலோ, முயலோ எது கிடைத்தாலும் வேட்டையாடி நெருப்பில் சுட்டுத் தின்போம். அவர் எனக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்தார். தமிழில் என்ன எழுதியிருந்தாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு மட்டுமே இருந்தது என் கல்வி ஞானம். அதை அடிப்படையாக வைத்து, கிரகங்கள், சூரியன், சந்திரன், கிரகணம் என்று என் தந்தை தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எனக்குக் கற்றுத்தந்தார். அவருக்கு அதெல்லாம் எப்படி தெரிந்தது என்று நான் சமயத்தில் வியந்திருக்கிறேன். தான் சுமார் மூவாயிரம் வருடங்களாக இப்பூமியில் உலவிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். தான் ஒரு தீவொன்றில் பிறந்ததாகவும் அது தற்போது கடலுக்கடியில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு தமிழ்ப்பெண் மீது முதலும் கடைசியுமாக வந்த காதலில் நான் பிறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

அமாவாசை பவுர்ணமி தினங்களில் திடீரென காணாமல் போய்விடுவார். நான் அவரைக் காடு முழுக்கத் தேடித்தேடி அலைவேன். அலைந்து அலைந்து சோர்ந்து கிடைத்த இடத்தில் தூங்கிவிடுவேன். முதல் முறை அப்படி ஆனபோது கிட்டத்தட்ட அவரைத் தேடி நான் சோர்ந்திருந்த சமயம் அவராகவே என்னை வந்தடைந்தார். அன்று நான் அவர் முகத்தில் ஒரு வித்தியாசமான ஒளியை முதன் முதலாகப் பார்த்தேன்.

அதை எப்படி விளக்குவது என்று எனக்கு இப்போதும் தீர்மானமில்லாமல் இருக்கிறது. ஆனால், ஏதோ ஞானமடைந்தவன் போல, ஏதோ பிரபஞ்ச ரகசியங்களை உணர்ந்துகொண்டவன் போல இருந்தது அவர் முகம். அதன் பிறகு பல முறை காணாமல் போயிருக்கிறார். நானும் கண்டுகொண்டதில்லை. எப்படியேனும் திரும்பிவிடுவார் என்று நான் அறிந்தே இருந்தேன். என்னை அவர் ஏமாற்றியதே இல்லை.

ஒரு முறை ஓர் இரவில் என்னை என் தந்தை எங்கோ அழைத்துப்போனார். அது ஒரு பள்ளத்தாக்காக இருந்தது. நாங்கள் மெல்ல இறங்கினோம். பாறைகளுக்கிடையே முளைத்திருக்கும் செடியொன்றில் வேரைப் பற்றி, கற்களின் மேடு பள்ளங்களில் இருந்த இறுக்கங்களையும், தளர்வுகளையும் லாவகமாகப் பயன்படுத்தி நான் இறங்கிக்கொண்டிருக்க, எனக்கு வழிகாட்டும் முகமாய் அவர் எனக்குக் கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என் கால்களை எதுவோ பற்றி இழுக்க நான் குனிந்து கீழே பார்த்தேன். விக்கித்துப்போனேன். என் கால்களைப் பற்றி இழுத்தது என் தந்தை தான்.

இருவரும் கீழே விழுந்தோம். கும்மிருட்டாக இருந்தது. அது எங்களுக்கு வழமை தான் குகைக்குள் இரவுகளில் அப்படித்தான் இருக்கும். என் தந்தைக்கு அந்த இடம் பரிச்சயமாகியிருந்தது. பசிக்கு அங்கிருந்த சில இலைகளைப் பிடுங்கி சாறு பிழிந்து தந்தார். அதை உட்கொண்டதும் நான் சுய நினைவை இழந்துவிட்டேன். நான் திரும்ப எழுந்தபோது வாய் கசந்தது. மற்றபடி வேறெந்த பக்கவிளைவுகளும் இல்லை. இனிமேல் எனக்கு வயதே ஏறாது என்றார். ஒரு நாள் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டு பின் திரும்பி வராமலேயே போய்விட்டார்.

அவரின்றி காட்டில் இருக்கப்பிடிக்காமல், தான் நான் நாடடைந்தேன். என் தந்தை கணித்தது போல், நகரங்களை காடுகளைச் சிறிது சிறிதாக விழுங்கி ஜீரணித்தே வளர்ந்தன. என் போன்ற சக மனிதர்களைப் பார்த்தேன். பழகினேன். அவர்கள் தங்களைப் போல் உள்ள ஒருவனையே தங்களுக்கிடையே அனுமதிக்கிறார்கள் என்று அறிந்து அவர்களைப் போல் நடிக்கத்துவங்கினேன். அதில் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்தது. எனக்கு என் தந்தை அந்த பச்சிலைச்சாற்றைப் புகட்டியபிறகு எனக்குப் பசிப்பதே இல்லை. ஆனால், மற்றவர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் போனால் நானும் உணவகம் போகிறேன் என்று எழுந்து கொள்ளத்துவங்கினேன். எங்கேனும் ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு திரும்பிவிடுவேன். மற்றவர்கள் போல் ஏதேனும் ஓர் வேலையில் ஒண்டியிருக்க முனைந்தேன். இப்போது வரை பலவிதமான வேலைகள் பார்த்திருக்கிறேன்.

பிரியாணி மாஸ்டராக, லாரி டிரைவராக, கணக்கு வாத்தியாராக, சாமியாராக, மருத்துவராக, செவிலியராக, போர் வீரனாக, துப்புறவுத் தொழிலாளியாக, கொலைகாரனாக, இரவுத்திருடனாக, அலைபேசிகள் மற்றும் கணிணி முதலான சாதனங்கள் விற்பவனாக, இப்படி எத்தனையோ வேலைகள். ஒரே இடத்தில் வெகு நாட்கள் இருப்பதில்லை. இருந்தால் நான் மூப்படையாததை யாரேனும் கண்டுபிடித்துவிடக்கூடுமென்று இடம்மாறிக்கொண்டே இருப்பேன். இந்த காரணத்துக்காகவே நான் திருமணமும் செய்துகொண்டதில்லை, அந்தந்த காலகட்டத்தில் சரித்திர நிகழ்வுகளில் பங்கேற்றதில்லை. ஏனெனில் என் போன்றவர்கள் மூப்படையாதது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது. நிரந்தரமாக வீடு இல்லை. வாடகை வீடு தான். வாடகை தர, மின்சார கட்டணம் செலுத்தப் பணம் தேவைப்பட்டது.

என் தந்தை எனக்குப் பரிச்சயப்படுத்திய மூங்கில் இசை, வெகுவாக பரிணமித்து இசையை ஒரு சிறிய டேப்பில் சேகரித்து, தேவைப்படும் போது கேட்டுக்கொள்ளும் வகைக்கு வேறொரு கட்டத்தை அடைந்திருந்தது. எனக்குப் பிடித்த இசையைக் கேட்க வானோலி, டேப் ரிக்கார்டர், சி.டி, பென் டிரைவ், கணிணி போன்ற மிண்ணனு சாதனங்கள் வாங்க வேண்டி இருந்தது. இதற்கெல்லாம் பணம் தேவைப்பட்டது. எத்தனையோ விதமான இசையை பல நூற்றாண்டுகளாக அவற்றின் பரிணாம வளர்ச்சியோடு அவதானித்தது, இசை என்பது முறையாகச் சேர்க்கும் பிழைகளோ என்றே எனக்கு தோன்றியிருக்கிறது.

வேலை நேரம் போக, குடும்பம் என்று ஏதும் இல்லாததால், வீட்டில் பெரும்பாலும் ஓய்வு நேரங்களாகவே இருக்கும். அதில் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். இசை கேட்பேன். அதன் மூலம் நிறைய கற்றிருந்தேன். அதை வைத்துத்தான் அந்தப் பச்சிலைச்சாறு என்னை என்ன செய்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. நம் உடல் செல்களால் ஆனது. அது தினம் தினம் பிறக்கும், தினம் தினம் இறக்கும். சாதாரண மனிதர்களுக்கு அந்தச் செல்கள் இறக்கும் வேகத்தில் மறுபடி பிறப்பதில்லை. மறு பிறப்பு விகிதம் குறையக் குறைய உடல் மூப்படைகிறது. ஆக, மூப்பு என்பது நம் உடலில் உள்ள செல்களின் மறுபிறப்பு விகிதத்தைப் பற்றிக்கூறுவது. அந்தச் சாறு என் உடல் செல்களின் இறப்பு விகிதத்தையும், மறுபிறப்பு விகிதத்தையும் ஒன்றாக்கிவிட்டது. அந்த மூலிகை எது என்று எனக்கு என் தந்தை சொல்லித்தரவே இல்லை. ஆனால் அந்த மூலிகை என் உடலில் ரத்தத்தில் கலந்திருக்கிறது என்பதால் நான் யாருக்கும் ரத்த தானமோ, உடல் உறுப்பு தானமோ செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.

ஆனால், இப்பொது என் பிரச்சனையே வேறு.

தேனீக்களை எடுத்துக்கொண்டால், அவைகள் சதா பூக்களை அண்டி அவற்றிலிருந்து மகரந்தங்களை சேகரித்துக்கொண்டே இருக்கும். ஏன் சேகரிக்கிறோம், எதற்கு சேகரிக்கிறோம் என்ற எந்த கேள்வியும் இல்லை. இறுதியில், அவைகள் பாடுபட்டுச் சேர்த்த அத்தனை தேனையும் மனிதர்கள் வந்து அள்ளிக்கொண்டு போவார்கள். இந்த தேனீக்கள் மீண்டும் வேறொரு கிளையில் மகரந்தங்கள் சேகரிக்கப் போய்விடும். இதை ஒரு குறியீடாகப்பார்க்கிறேன். இப்படி சில மனிதர்கள் இருக்கிறார்கள். சம்பாதிப்பார்கள். வேலை, வீடு, குடும்பம் தவிர வேறொன்றும் தெரியாது. இறுதியில் சேர்த்த பணத்தையெல்லாம் நகையாக்கி பெண்ணின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டு ஓட்டாண்டியாய் நிற்பார்கள்.

யானைகளை எடுத்துக்கொண்டால், அவைகள் அச்சமூட்டும் உருவத்தைக் கொண்டிருந்தும், இரண்டு கால் மனிதனுக்கு கட்டுப்பட்டு கோயில் வாசலில் கடந்து செல்லும் மனிதர்களைக் கும்பிட்டு நிற்கும். இதையும் ஒரு குறியீடாகப் பார்க்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன் அசலான பலமே தெரியாமல் அடுத்தவனுக்கு சலாம் போட்டு நிற்பார்கள்.

சிலர் கடினமாக உழைத்து மிகப்பெரும் செல்வம் சேர்த்து உயர்ந்த இடத்துக்குச் செல்வார்கள். சட்டென அத்தனை செல்வத்தையும் இழந்து திருவோடு ஏந்தும் நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களைக் குறிப்பால் சுட்டுவதாகவே நான் சர்ப்பங்களைப் பார்க்கிறேன்.

மற்றவர்கள் ஏங்கும் ஒன்று கிடைத்துவிடுவதாலேயே, வாழ்வின் அத்தனை பேறுகளையும் பெற்றுவிட்டதாக வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டே எந்த பேறுமற்ற ஒரு சாப வாழ்வை, அது சாப வாழ்வென்றே தெரியாமல் வாழ்ந்து தீர்த்துவிடுவார்கள் சிலர். இவர்களை பொந்துக்குள் தலைவிட்டுக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே நான் பார்க்கிறேன்.

இப்படி நிறைய சொல்லலாம். இப்பூலகில் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டேன். நான் அவதானித்த வரையில், மனித வாழ்வின் மையம் என்பது ஒரு உயிரினத்தின் இயங்குமுறையோடு ஒப்பிட இயலுவதாகத்தான் எக்காலமும் இருந்திருக்கிறது. வேறு விதமாகச் சொல்வதானால், ஒரு உயிரினத்திடம் ஒரு குறிப்பிட்ட இயங்குமுறை காணப்பட்டால், அது ஏதாவதொரு மனிதனின் வாழ்க்கையின் மையமாக இருக்க மிக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.

என் அவதானங்களை மூன்றாகப் பகுத்துவிட முடியும். இந்த மூன்று விஷயங்களே என்னை, இப்பூவுலகில் என் இருப்பை அச்சுறுத்துவதாக இருக்கிறது.

முதலாவது, எனக்கு இந்த பூவுலகில் ‘விழிப்பு’ ஏற்பட்ட போது எனக்கு தந்தை என்று ஒருவர் இருந்தார். அப்போது முகலாயர்கள் இங்கே ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். அப்போதே பண்டமாற்று ஒழிந்து பணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மக்கள் விவசாயம் செய்தார்கள். நிலச்சுவாந்தார்கள் கூலிகளை உருவாக்கினார்கள். நிலச்சுவாந்தார்களை சிற்றரசர்களும், சிற்றரசர்களை பேரரசர்களும், பேரரசுகளை சூழ்ச்சியால் வியாபாரிகளும் கட்டுப்படுத்தினார்கள். எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அமைப்பில் பெரிய மாற்றங்கள் உருவாகவில்லை. இது, பெரிய மாற்றங்கள் உருவாக மீக நீண்ட காலம் ஆகும் என்ற எண்ணத்தை எனக்குள் வலுவாக விதைத்துவிட்டது.

இரண்டாவது, இந்த உலகில் ஒவ்வொரு மனிதனின் குணாதிசயத்திற்கும் ஒரு உயிரினத்தை என்னால் சுட்டிவிட முடியும். நான் இந்த எழுநூறு வருடங்களில் எண்ணற்ற உயிரினங்களையும், மனிதர்களையும் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். இந்த அவதானத்தைக் கொண்டு, என்னால், ஒரு மனிதனை, அவனை முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் அவனது பூவுலக வாழ்வின் மைய இயக்கத்தை எட்டிவிடமுடியும். அதை எட்டிவிட்டபிறகு எனக்கு அந்த மனிதன் சலித்து விடுகிறான். அதற்கு மேல் அவனிடம் புதிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை என்றாகிவிடுகிறது. இந்த என் அவதானத்தை பொய்பிக்கும் ஒரு மனிதனை நான் இதுகாறும் பார்த்ததே இல்லை. அவன் தனக்கு முன் வாழ்ந்த தன்னைப் போன்ற ஒருவனிடமிருந்து அதிகம் வேறுபடுவதில்லை. இதுவே என்னை சலிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கு திரும்பினாலும் இப்படி சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்களே என் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

இது பரவாயில்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். அங்குதான் மூன்றாவதுக்கான காரணங்கள் உருவாகிறது.

மூன்றாவது என்னவெனில், இப்படி சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்களையெல்லாம் தாண்டி பிரத்தியேகமான, ஊகிக்கவே முடியாத சில மனிதர்களும் இந்தப் பூமியில் பிறக்கிறார்கள் தான். ஆனால், இரண்டாவதாக வரும் சல்லிசாக ஊகித்துவிடக்கூடிய மனிதர்கள் இந்த மூன்றாமவர்களை வாழவே விடுவதில்லை. இதுவும் ஒரு கட்டத்துக்கு மேல், எளிதில் ஊகித்துவிடக்கூடிய ஒரு இயக்கமாக ஆகிவிடுகிறது.

இவர்களுக்கு மத்தியில் என் வாழ்க்கை சுவாரஸ்யப்படுவதில்லை. யாரைப் பார்த்தாலும் சலிக்கிறது.

சரி, ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்துவிடலாமென்றால், என் தந்தை எனக்களித்த மூலிகைச்சாறு இறப்பையே நெருங்க அனுமதிப்பதில்லை. இரண்டு மூன்று முறை விஷமருந்தியும் பார்த்தாகிவிட்டது. என் உடலில் செல்கள் மறுபிறப்பு விகிதம் நூறு சதம் என்பதால் விஷம்தான் தோல்வி அடைகிறதே ஒழிய என்னுடல் அப்படியே தானிருக்கிறது. விபத்துக்களில் சிக்கி வலியெடுத்துச் சாக எனக்கும் விருப்பமில்லை.

எத்தனையோ யோசித்துவிட்ட பிறகு ஒரு திவ்விய தருணத்தில் அது எனக்குத் தோன்றியது. உடல் இயங்க பிராணவாயு முக்கியம். அதை மட்டுப்படுத்திவிட்டால்? மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் மூளை இறக்க நேரிடும். மூளை இறந்தபிறகு உடல் உயிருடன் இருந்து என்ன பயன்?

ஆம்.

அதைத்தான் செய்ய இருக்கிறேன். என் மூளையைக் கொல்ல இருக்கிறேன். அதற்கென ஒரு பெட்டி செய்யத்துவங்கியிருந்தேன். அது இந்த நாளின், திலகாவில் என் சிறுகதை வெளியான தினத்தில் தான் பூரணமாகவேண்டுமென்று இருந்திருக்கிறது. இதைக்கூட நான் ஒரு வாரம் முன்பே கணித்துவிட்டிருந்தேன். பார்த்தீர்களா? இந்தச் சின்ன விஷயத்தில் கூட எனக்கு எவ்வித ஆச்சர்யமோ, எதிர்பாராத தன்மையோ இருக்கவில்லை.

நான் இரவு வரும் வரை காத்திருந்தேன். இரவாகி நகரம் அடங்கிவிட்டபிறகு சற்று தொலைவிலிருந்த மயானத்திற்கு அந்தப் பெட்டியுடன் சென்றேன். இறந்த ஒருவரைப் புதைக்கும் போது அவர் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துப் புதைப்பது தானே தமிழர் மரபு. அதன்படி, நான் பயன்படுத்திய மடிக்கணிணி, நூல்கள் ஆகியவைகளையும் எடுத்துச்சென்றிருந்தேன். மயானத்தில் ஆறடி ஆழத்தில், இரண்டடி அகலத்தில் குழி தோண்டினேன். அதில் அந்தப் பெட்டியைக் கிடத்தினேன். அதனுள் நான் பயன்படுத்திய அனைத்தையும் கிடத்தினேன். பிறகு நானும் என்னை அதில் நிறைத்துக்கொண்டு பெட்டியை இறுக மூடி உட்புறமிருந்து ஆணியால் காற்று கூட புக முடியாத அளவிற்கு அந்தப் பெட்டியை அறைந்து மூடினேன்.

என்னிடம் திட்டம் தெளிவாக இருந்தது. அது ஒரு பழைய மயானம். அருகாமையிலிருந்த மலையொன்றிலிருந்து உருவாகி கடலை நோக்கிச்செல்லும் ஒரு ஆற்றின் ஓரமாய் அமைந்திருந்தது அந்த மயானம். நாளை அந்த மலை மீது அமைந்திருந்த நீர்த்தேக்கத்தைத் திறக்க இருக்கிறார்கள். மதகைத் திறந்தவுடன் பெருகி வரும் நீர் நான் வெட்டிய குழியின் மீது மண்ணையும், குப்பைகளையும் கொண்டு மூடிவிடும். பிராணவாயு இன்றி என் மூளைக்கு மரணம் சாத்தியமாகிவிடும். வேறெப்படியும் என்னால் இந்த வாழ்வை முடித்துக்கொள்ள முடியாது.

பெட்டியை இறுக மூடிய கொஞ்ச நேரத்தில் எனக்கு மயக்கம் வந்தது. கண்களை மூடிக்கொண்டேன். எழுநூறு ஆண்டுகள்!! தேவைக்கும் அதிகமாய். இந்த பூவுலக வாழ்வை தரிசிக்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், என் தந்தைக்கும் என் நெஞ்சார்ந்த நன்…………………………………………………………………………………………………………………………..

உடலில் வெய்யிலின் வெக்கை படிவதைப் போல் உணர, மங்கலாய் எதுவோ தோன்றி அதனிலிருந்து உயிர்ப்பெறுவது போல் நான் திடுக்கிட்டு எழுந்தபோது அது ஒரு பாரிய நிலப்பிரதேசமாகத்தான் இருந்தது. எங்கும் வெறும் பாறைகள். மலைகள். என் நரம்புகள் புடைத்து, விரைத்தன. முயங்க வேண்டுமென்று ஒரு உத்வேகம் உடலில் எந்தப் பகுதியிலிருந்தோ முளைத்து உடல் முழுவதும் வியாபித்துக்கொண்டிருந்தது. வானில் சூரியன் பிரகாசமாய்த் தோன்றியது.

என்னைச்சுற்றி என் மடிக்கணிணி சிதைவுண்ட நிலையில் கிடந்தது. ‘சுவர்க்கம் இப்படியா இருக்கும்?’ என்றெண்ணியபடி நடந்தேன்.

அதுகாறும் உறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ, புதிதாக நடை பயிலும் குழந்தை போல, நான் நடந்து கொண்டே இருந்தேன். நிற்கவேண்டும் என்றோ, அமர வேண்டும் என்றோ தோன்றவே இல்லை. நடக்க நடக்க எங்குமே ஒரு சின்னச் செடி கூட இல்லை. பூமி முற்றிலுமாக மலடாகிப்போனது போலிருந்தது. நீரின் சுவடு கூடத் தெரியவில்லை. காகம், ஈக்கள், பூச்சிகள் என எந்த சிற்றுயிரும் கண்ணில் தென்படவில்லை. ஏதோ வரண்ட பாலைவன மலைப்பகுதியில் நடப்பது போலிருந்தது. நடந்து நடந்து ஒரு மலையை அடைந்தேன். அது ஏதோ பரிச்சயமான மலை போல் தோன்ற கூர்ந்து கவனித்ததில் அது என் தந்தை என்னை அழைத்துச்சென்று ஒரு பள்ளத்தாக்கில் கால் பிடித்து இழுத்தாறே அதே மலை தான் என்பது புரிந்தது.

‘அப்படியானால் இன்னமும் பூமியில் தான் இருக்கிறோமா? எங்கே எல்லோரும்?’

கேள்விகளுடன் எதுவும் புரியாமல், மலையை நோக்கி நடந்தேன். இது தான் நான் முன்பு வாழ்ந்த பூமியின் தற்போதைய நிலை எனில், நான் குறைந்தபட்சம் பத்தாயிரம் வருடத்திற்காவது புதையுண்டே இருந்திருக்கவேண்டும். அந்த மலையைத் தொடர்ந்து சுற்றிவர, நான் என் தந்தையால் இடறப்பட்டு விழுந்த பள்ளம் தென்பட்டது. என் தந்தையின் நினைவு உந்த நான் அந்தக் பள்ளைத்தை எக்கி முழுமையாகப் பார்த்தேன். பின் பள்ளத்திற்க்குள் இறங்கினேன். சிறிதாய், மிகம்மிகச் சிறிதாய் ஒரு செடி முளைத்திருந்தது. அந்தச் செடியின் இலைகளைக் கண்ணுற்றேன். அருகே நெருங்கிப் பார்க்கையில் அந்த இலையிலிருந்து வந்த வாசம் எனக்கு முன்பே பரிச்சயமாகியிருப்பதை உணர முடிந்தது. என் வாய் கசந்தது.

அதில் நான் பார்த்தது என்னை மலைக்க வைத்தது. அவைகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அவைகள் விட்டத்தில் ஒன்றரை மில்லிமீட்டர் அளவே உள்ள எட்டு கால்களைக் கொண்ட சின்னஞ்சிறு ஜந்துக்கள். பெயர் டார்டிகிரேட்.

டார்டிகிரேட்கள் மைனஸ்272 டிகிரி குளிரிலும் உயிர்வாழக்கூடியவை. பிராணவாயுவே இல்லாத வெற்றிடத்தில் விட்டால், க்ரிப்டோபையோசிஸ் எனப்படும் நீள் உறக்கம் கொள்ளக்கூடியவை. சாதகமான சூழல் வரும்போது மீண்டும் உயிர்பெற்று வாழக்கூடியவை. இத்தகுதிகளுடன் அவைகள் கிரகம் விட்டு கிரகம் கூட பயணிக்க வல்லவை.

நான் இத்தனை காலமும் சாகவே இல்லை என்பதும், இதுகாறும் வெறும் ஒரு நீள் உறக்கத்தில் தான் இருந்திருக்கிறேன் என்பதும் இப்படித்தான் எனக்குப் புரிய வேண்டுமென்றிருந்திருக்கிறது. என் தந்தை இந்த இலைகளைக் கசக்கி சாறு பிழிந்து எனக்குத் தந்திருக்க வேண்டும். இந்த இலைகள் மீதுள்ள டார்டிகிரேட்களின் மரபணுக்களை இந்த இலைச்சாறு என் மரபணுவில் கலந்து விதைத்திருக்க வேண்டும். இந்த இயக்கங்களின் கூட்டு பலனாய் நான் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு நீள் உறக்கத்தில் மூழ்கியிருந்திருக்க வேண்டும். என்ன நடந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சாவு என்ற ஒன்றே இல்லாமல் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக நான் வாழ்ந்திருந்தபோதான வாழ்க்கை என்பது ஒரு இசைக்குறிப்பை, அதன் முழுமைத்தன்மையை வெளியிலிருந்து அவதானிப்பது போலாகிவிட்டிருந்தது. அந்த இசை எனக்குப் புரியாதவரை, அந்த இசை என்னை ஈர்த்தது. அந்த இசையை நான் கேட்கத்தலைபட்டேன். அதில் திளைத்தேன். அதில் பிரபஞ்சத்தை உணர்ந்தேன். அதில் கடவுளை உணர்ந்தேன்.

ஆனால், அந்த இசைக் கோர்வையின் ரிஷிமூலம், நதிமூலம் தெரிந்தவிட்டபிறகு, அந்த இசை, அதன் முழுமைத்தன்மை, அதன் ஏற்ற இறக்கங்கள் என எல்லாமும் தெரிந்துவிட்டபிறகு, அந்த இசைக்கோர்வை ஒரு இசைக்கோர்வையாக உருவாக எதையெல்லாம் உள்ளடக்க வேண்டும், அப்படி உள்ளடக்க வேண்டியதன் நிமித்தம் எதையெல்லாம் தவர விட வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்பது என் கண்களுக்கு தென்படலாயிற்று. எந்த இசைக்கோர்வையும் எல்லாவற்றையும் உள்ளடக்கி உருவாகலாகாது, அது சாத்தியமல்ல என்கிற பேருண்மை எனக்கு உரைத்தபோது நான் அதிர்ந்துபோனேன். ஏமாற்றமாய் உணர்ந்தேன். இந்த அதிர்ச்சி, ஏமாற்றம் இறைவன் என்பவன் அப்படி ஒன்றும் எட்டிவிடமுடியாத கலை ஞானம் கொண்டவனல்ல என்பதைப் புரியவைத்தபோது அது என் ஏமாற்றத்தை பன்மடங்கு கூட்ட மட்டுமே உதவியது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இசையை ரசிக்க வேண்டுமானால், அதன் முழுமைத்தன்மையைத் தெரிந்துகொள்ளக்கூடாதோ என்கிற தோற்றம் வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால், ஒரு ரசனை என்பது அறிவின் மூலமாக பெறுகவேண்டுவது தான் எனும்போது, அறிவின் பெறுக்கம் ஒரு கட்டத்தில் ரசனையைக் கொன்றுவிடும் எனும்போது, இசைக்கோர்வையின் நோக்கம் தான் என்ன?

இப்போது என் முன் பூமி என்கிற இந்தக் கிரகமும், கொஞ்சம் டார்டிகிரேட்களும், ஒரு செடியும் இருக்கின்றன. இந்த பிரபஞ்சம் இனி தன் கையிலிருப்பவற்றை வைத்து உருவாக்க இருக்கும் எந்த இசைக்கோர்வையின் எந்த அசைகள் நானும், பூமிக்கிரமும், அந்தச் செடியும், டார்டிகிரேட்களும் என்கிற கேள்வி ஒரு கரையான் போல என் சிந்தையை அரிக்கத்துவங்கியிருக்கிறது.

அதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை

என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. ஆதலால் அலுவலகத்தில் அன்றாட வேலைகள் முடிந்துவிட்டால் செய்வதற்கு பெரியதாக ஏதுமில்லாத காலகட்டம் அது.

அப்போதுதான் அந்த ஜெர்மன் காரை வாங்கியிருந்தேன். பெயர் வொல்க்ஸ்வேகன்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த காரில் சொகுசாக அமர்ந்தபடி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த விதமான கார்களில் அதிர்வுகளை உள்வாங்கி ஜீரணிக்கும் உதிரி பாகத்தைக் கண்டுபிடித்த பொறியாளனின் கைவண்ணம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. எத்தனை பெரிய அதிர்வானாலும் அதை ஒரு அடர் மெளனத்தோடு கடந்து போய்விடும் வகையான இந்த கார்களில் பயணம் என்பது எத்தனை சொகுசாகிவிடுகிறது? வாழ்க்கையில் தொந்திரவுகளையும் ,சங்கடங்களையும், நிர்பந்தங்களையும் நாம் இப்படியே அணுகிவிட்டால் எத்தனை இலகுவாக இருக்குமென்று வண்டி ஓட்டிக்கொண்டிருக்கையிலேயே யோசனை வந்தது.

வண்டியின் உள்ளுக்குள் சில காதல் பாடல்கள் இதழ்களை வருடிக்கொண்டிருந்தன.

அன்று விடுமுறை நாள். நான் சென்று கொண்டிருந்த சாலை ஒரு தொழிற்சாலையை உரசியபடி அமைந்திருந்தது. அதனூடே செல்கையில் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ரசாயன வாசம் மூக்கைத் துளைக்கும். ஆதலால் அந்த வழியே அதிகம் நடமாட்டம் இராது.

நான் கவனமாக எனது காரைச் சாலையில் செலுத்திக் கொண்டிருக்கையில் தொலைவில் இரு சக்கர வாகனம் ஒன்று சாலையின் நடுவே விழுந்து கிடந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு நான் எனது காரை நிறுத்தினேன். காரை விட்டு வெளியே வந்த பிறகு தான் இரு சக்கர வாகனத்தின் அருகில் ஒரு மனிதன் கால்கள் அகல விரிந்த நிலையில் விழுந்து கிடந்திருப்பதைப் பார்த்தேன். ஜீன்ஸும், டிசர்டும் அணிந்திருந்தான். அவனுடைய இரு சக்கர வாகனம் மிக மோசமாக சேதமடைந்திருந்ததை வைத்துப் பார்க்கையில் அவன் சந்தித்திருக்கக்கூடிய விபத்து மிக மோசமானதாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

என்னைச் சுற்றிலும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாருமில்லை. ஆங்கிலத்தில் ‘கோல்டன் ஹவர்’ என்பார்கள். விபத்தில் சிக்கிக்கொண்ட பிறகான முதல் ஒரு மணி நேரம் தான் அது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒரு மணி நேரத்தில் சாகக்கிடக்கும் ஒருவனைக் கூட பிழைக்க வைத்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். அந்த முக்கியமான ஒரு மணி நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட நான் அவசரமாக அவனை நெருங்கினேன்.

நான் ஒரு மருத்துவன் அல்ல. ஆயினும் என்.சி.சி.யில் இருந்திருக்கிறேன். ஓரளவுக்கு முதலுதவிகள் செய்யக் கற்றிருக்கிறேன். எத்தனைக்கு என்றால், நீரில் மூழ்க நேர்ந்துவிட்ட ஒருவனை கரையில் இழுத்துப்போட்டு, உயிர் இருக்கிறதா என்று பார்த்து, மூச்சு நின்றிருந்தால், அவன் மார்பில் கை வைத்து அழுத்தி மூச்சை வர வைத்துவிடுமளவிற்குக் கற்றிருந்தேன். ஆனால், அவன் இதற்கெல்லாம் வேலையே வைக்காமல் ஏற்கனவே போய்ச் சேர்ந்துவிட்டிருந்தான்.

அவன் மண்டையில் பலமாக அடிபட்டிருந்தது. தலைமுடியெல்லாம் ஒரே ரத்தம். ரத்தப்போக்கு அதிகம் இருந்ததினாலேயே அவன் இறந்திருந்தான். ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் அந்த ஒரு மணி நேரத்தை நான் எப்போதோ கடந்திருக்க வேண்டும்.

முதல் பார்வைக்கு அவன் அழகாய்த்தான் தெரிந்தான். கல்யாணம், பிள்ளைகள், குறைந்தபட்சம் காதலியாவது இருந்திருக்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக்கொண்டது. அத்தனைக்கு முகத்தில் ஒரு சிறுபிள்ளைத்தனம். என் கணிப்பில் அவன் வயது இருபதுகளின் மத்தியில் இருக்கலாம்.

அவனுக்கு அருகில் அவனது ஓட்டுனர் உரிமமும், ஒரு வங்கியின் பண இருப்பை சொல்லும் ஒரு சீட்டும் , ஒரு காசோலைப் படிவமும் அதில் அவனுடைய கையெழுத்தும் இருந்தது. அந்த சீட்டைப் பார்த்திருக்கவில்லை என்றால் நான் நூறுக்கு அழைத்திருப்பேன். அந்தச் சீட்டு வெறும் காகிதம் தான். ஆனால் அத்தனை கனமாக இருந்தது. ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகை.

சுமார் ஒரு கோடி ரூபாய்!!

ஒரு கோடி என்கிற இலக்கத்தைப் பார்த்தபிறகு நூறுக்கு போன் செய்வது ஒரு புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை. நீங்கள் கேட்கலாம். ‘நீதான் கணிணி மென்பொருள் துறையில் சம்பளம் வாங்குகிறாயே. உனக்கேன் ஒரு கோடி?’ என்று. நல்ல கேள்வி தான்.

ஆனால், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கோடீஸ்வரராகவே இருக்கலாம். உங்கள் பெயரில் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனம் கூட இருக்கலாம். ஆனால் அகஸ்மாத்தாக, நடுச்சாலையில், எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்! ஒரு கோடி ரூபாய் பெரிய பணம் இல்லை தான்.

ஆனால், எங்கெங்கோ போகிறீர்கள். நீங்கள் மட்டுமா போகிறீர்கள்? பல்லாயிரம் கோடி ஜனம் போகிறது. அவர்களில் யாருக்கோ கிடைக்காமல் உங்களைத் தேடி வந்து ஒரு கோடி பணம் அடைகிறது என்றால் அதற்கென்ன பொருள்?

அதிர்ஷ்டம்!!

அதுவல்லவா முக்கியம்? ஒரு கோடி பணம் என்பது வெறும் ஒரு அடையாளம் தானே. வெறும் ஒரு அடையாளம். அந்த அதிர்ஷ்டத்துக்கான ஒரு அடையாளம். ஒரு கோடி என்பது அந்த அதிர்ஷ்டத்தின் அளவைச் சொல்வது. அது அல்லவா முக்கியம். கேட்கும் போதே கிளர்ச்சி தரும் அளவு அல்லவா? யாரிடமெனும் அண்டி ‘எனக்கு கீழே பத்து ரூபாய் கிடைத்தது’ என்று சொல்லிப்பாருங்கள். நான் சொல்ல வருவது புரியலாம்.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருத்தரும் இல்லை. இன்னொருவருக்குச் சொந்தமானதை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்வது திருட்டு என்றாகிறது. அவனது ஓட்டுனர் உரிம அட்டையில் அவனது பெயரைக் குறித்துக்கொண்டேன்.

சடகோபன்!!

அவன் முகத்தருகே குனிந்து,

“சடகோபன், நான் இவற்றை எடுத்துக்கொள்வதில் உனக்கு ஒப்புதல் இல்லையெனில் நீ தாராளமாக மறுப்புத் தெரிவிக்கலாம்” என்றேன்.

அவனிடமிருந்து எவ்வித சலனமும் இல்லை. எந்தச் சலனுமும் இல்லாதது எப்படி மறுப்பாக இருக்க முடியும்? அந்தக் காகிதங்களை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டு திரும்பி வந்து என் காரில் அமர்ந்தேன். அதை உருமி எழச்செய்தேன். பின் சாலையில் அரைவட்டமடித்து என் வீடு நோக்கி விரட்டினேன்.

வீட்டுக்கு வந்தவுடனேயே அந்த ஒரு கோடி ரூபாயை… இல்லையில்லை… என்னைத் தேடி அடைந்த அதிர்ஷ்டத்தை என்ன செய்வது என்கிற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தேன். நான் அவன் அளவிற்கு அழகன் இல்லை. ஆனால், எங்கள் இருவருக்கும் ஒரே உயரமும், உடல் வாகும். என் கையில் அவனின் வங்கிக் காசோலையில் அவனது கையோப்பம் இருந்தது. ஆகையால் அவனின் கையோப்பத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்குப் பெரிதாக ஏதும் சிக்கலிருக்கப்போவதில்லை. ஒரே ஒரு சவாலாக நான் பார்த்தது என்னவெனில், தோற்றம் தான். நான் அவன் போன்றே தெரியவேண்டும். அது எப்படி?

இந்தச் சிந்தனை மருத்துவரும், எனது நண்பருமான அஜீஸை எனக்கு நினைவூட்டியது. அவர் ஒரு மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாவார். அவருடைய ஆராய்ச்சி என்னவென்றால், ஒரு மனித முகத்தை எவ்விதம் அழகாகத் தோன்ற வைப்பது என்பதுதான். அவரைப் பொறுத்தமட்டில், ஒரு முகத்தில், அது எத்தனை ஒளித்துணுக்குகளை எவ்விதத்தில் வெளியிடுகிறது என்பதைப் பொருத்தே அதன் அழகு அமைகிறது. இந்த அவரின் ஆராய்ச்சியின் ஆச்சர்யமூட்டக்கூடிய அம்சம் என்னவெனில், ஒரு முகத்தை , மிகச்சரியான இடங்களில், மிகத்துல்லியமான அளவுகளில் ஒளித்துணுக்குகளை வெளியிட வைத்து வேறொரு முகமாகவும் காட்டிட இயலும் என்பதுதான்.

இதை நீங்கள் பள்ளிக்கூடங்களில் படித்திருக்கலாம். இது பொருட்கள் எவ்விதம் கண்ணுக்குப் புலப்படுகின்றன என்பதைப் பற்றியது. ஒரு பொருள் எவ்விதம் கண்ணுக்குப் புலப்படுகிறதெனில், அதனில் ஒளித்துணுக்குகள் பட்டு பிரதிபலிப்பதால் தான்.

ஒரு அழகான முகம் பிரதிபலிக்கும் ஒளித்துணுக்குகளுக்கும், ஒரு சுமாரான முகம் பிரதிபலிக்கும் ஓளித்துணுக்குகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்வதன் மூலம் ஒரு சுமாரான முகத்தைக் கூட அழகான முகமாகவே தோன்றச் செய்துவிடமுடியும். ஒளித்துணுக்குகளை வெளியிடும் நுண் துகள்கள் கொண்ட முகமூடி ஒன்று இதற்கு உதவும். சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் புதைக்கப்படும் ஒரு மைக்ரோ சிப்பின் மூலம் இந்த முகமூடியை கட்டுப்படுத்தமுடியும்.

அஜீஸ் எனது நண்பருமாவார் என்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வரும் பட்சத்தில் அவரைத் தனிப்பட்ட முறையில் எனக்குச் சாதகமாக இயங்க வைக்க என்னால் முடியும் என்பதே தைரியம் தருவதாய் இருந்தது. அதுமட்டுமல்லாமல், அஜீஸ் வேறு சிலருக்கும் அந்த முகமூடியை செய்து தந்திருந்ததும், அவர்கள் எல்லோருமே அந்த முகமூடிகளைப் பயன்படுத்திய பிறகு எந்தப் பக்க விளைவையும் சந்தித்ததாக புகார் தரவில்லை என்பதையும் நான் கவனித்திருந்தேன். ஆதலால், நான் உடனேயே அந்த பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன். அது எப்படி இருந்ததெனில் ஒரு மருந்தகத்தில் நுழைந்து தலைவலிக்கு ஒரு மாத்திரை வாங்குவது போலத்தான் இருந்தது.

அஜீஸ் என்னிடம் ஒரு குடுவை நிறைய திரவ நிலையிலான ஒரு மருந்தைத்தந்தார். அந்த திரவம், ஒரு சிக்கலான தீர்வை மிக மிக எளிதாக்கியிருந்தது. பொதுவாக முகமூடிகள் செய்ய அதிக நேரமாகும். வாரக்கணக்கில் கூட ஆகும். டாம் க்ரூஸ் படங்களில் வருவது போல, ஒரு த்ரீ-டி தொழில் நுட்பத்திலான அச்சு வார்க்கும் இயந்திரம் கொண்டு உருவாக்கப்படும் முகமூடி அல்ல இது. வெறும் திரவம். அதை முகத்தில் முகப்பூச்சு தடவுவது போல் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது அந்த முகப்பூச்சில் இருக்கும் நுண்ணிய செல்கள் ஒளித்துணுக்குகளை வெளியிடவல்லது. ஒரு முகத்தை வேறொரு முகமாகத் தோன்றவைக்க இரண்டு முகங்களுக்குமுள்ள ஒளித்துணுக்கு வித்தியாசத்தை அதிகப்படியாக அந்த முகமூடி வெளியிட்டால் போதும். அதை ஒரு மைக்ரோ சிப் பார்த்துக்கொள்கிறது.

என் சருமத்தின் டெர்மிஸ் அடுக்கில் ஒரு மைக்ரொ சிப் புதைக்கப்பட்டது. அந்த மைக்ரோ சிப், ஒளித்துணுக்குகள் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்தியது. நான் யார் போல் தோன்ற வேண்டும் என்பதை நான் அந்த மைக்ரோ சிப்பில் கணிணி மூலம் பதிவு செய்துகொள்ள முடியும். அந்தச் சிப்பிற்கு ஒரு மின்சாரம் தேவைப்பட்டது. அதற்கென அந்த திரவத்தில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகிக்கும் நுண் சூரியத்தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன. அது, நான்கு சுவற்றுக்குள் நான் இல்லாதபோது சூரிய சக்தியால் இயங்கும் ஆற்றலைத் தந்தது. நான்கு சுவற்றுக்குள் இருக்கையில், அதற்கு ஒரு பேட்டரியின் தேவை இருந்தது.

அஜீஸ் அதற்குத் தேவையான மென்பொருளை என் கணிணியில் நிறுவித்தந்தார். அதன் மூலம் நான் சடகோபனின் ஓட்டுனர் உரிமத்திலிருந்து அவன் முகத்தை எடுத்து அஜீஸ் தந்த மைக்ரோ சிப்பில் தரவேற்றினேன். பின் வீட்டில் அமர்ந்தபடி ஒரு நூறு முறைக்கெனும் அவனது கையெழுத்தை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தேன். அவனுடையது அத்தனை கடினமானதாக இருக்கவில்லை.

இப்போது நான் சடகோபனாகியிருந்தேன். ஒரு கருப்புப் பையுடன் நேராக வங்கிக்குச் சென்றேன். வங்கியில் நான் காசாளரை எதிர்கொண்டேன். அவள் தன் சிற்றறையில் அமர்ந்திருந்தாள். என்னை அவள் முன் அமரவைத்தாள். அவள் பெயர் பிரிஸில்லா என்பதை அவளது மேஜையிலிருந்த பெயரட்டையிலிருந்து தெரிந்துகொண்டேன்.

அவளிடம் இப்போது என் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்ட சடகோபனின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு கோடி பணம் எடுக்க விண்ணப்பித்தேன். அடையாளச் சோதனைக்கு சடகோபனின் ஓட்டுனர் உரிமத்தையும் அளித்தேன்.

“பெரும்தொகை இது. சில நடைமுறைகள் இருக்கின்றன, மிஸ்டர் சடகோபன். முடித்துவிட்டு உங்கள் பணத்துடன் வருகிறேன்.” என்றுவிட்டு அவள் அகன்றாள்.

நான் இப்போது காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தேன். உள்ளூர சற்று பயமாக இருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தேன்.

“நான் ராபர்ட், என்னைத் தொடர்ந்து வா?” என்று என் செவியருகே சொல்லிவிட்டு ஒருவன் சென்றான். கருப்பு நிறத்தில் முழுக்கால் சட்டையும், வெள்ளையில் முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கருப்பு நிறத்தில் தோலால் ஆன பாதணி அணிந்திருந்தான். வெள்ளைச் சட்டை கருப்பு முழுக்கால் சட்டைக்குள் திணிக்கப்பட்டிருந்தது. பார்க்க வங்கி ஊழியன் போலிருந்தான். நான் எழுந்து அவனுடன் நடந்தேன். இருவரும் அந்த வங்கியின் சிற்றுண்டி உணவகத்தில் அமர்ந்தோம்.

“நீ இறந்துவிட்டாய். அது உனக்கு தெரியுமா?” என்றான் அவன் எடுத்த எடுப்பிலேயே.

எனக்கு சட்டென வியர்த்துவிட்டது. நான் அதிர்ச்சி விலகாதவனாய் ராபர்ட்டையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“நீ அந்த நெடுஞ்சாலையில் செய்ததை நான் பார்த்துவிட்டேன். சடகோபன் வங்கியில் நிறைய பணம். அது தெரிந்து தான் அவன் மீது என் லாரியை ஏற்றினேன். நான் என் வண்டியை மறைவாக நிறுத்திவிட்டு வருவதற்குள் நீ சடகோபனின் உடைமைகளை எடுத்துக்கொண்டு போய் விட்டாய். நான் உன்னைக் கொன்றிருக்க முடியும். சடகோபனை நான் கொலை செய்துவிட்டாலும், அவனது வங்கிக்கணக்கிலிருந்து எப்படி பணமெடுப்பது என்ற குழப்பத்திலிருந்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நீ என் வேலையை சுலபமாக்கிவிட்டாய். எனக்கு இதுவரை இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள, எனக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை. நான் சடகோபன் பணத்தைக் கையாடல் செய்ய ஒரு நியாயமிருக்கிறது. உனக்கு என்ன? இளைஞன். கணிணி பொறியாளன். உனக்கு மருத்துவ காப்பீடு கூட இருக்கலாம். உனக்கெல்லாம் இது தேவையா? நம் இருவரில் அதிக பரிதாபத்தைக் கோருவது நீயா, நானா என்பதை முடிவு செய்துகொள்.”

“இதோ பார். அவனை கொலை செய்தது நான். சடகோபன் இறந்த செய்தி வங்கிக்குத் தெரிந்தால் நீ மட்டுமல்ல, நானும் கூட இந்தப் பணத்தை வெளியில் எடுப்பது முடியாத காரியமாகிவிடும். அவன் உடலை மறைவாக அப்புறப்படுத்தி புதைத்தது நான். ஆதலால், அவனது பணம் முழுக்க என்னையே சேர வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நீ ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறாய். ஆக உனக்கும் இதில் பங்கிருக்கிறது என்றாகிறது. அதை நான் மறுக்கவில்லை. நான் ஒரு கொள்ளையன். எனக்கு இதெல்லாம் புதிதில்லை. ஆனால், நீ அப்படி இல்லை. உனக்கொரு சமூக இடம் இருக்கிறது. உனக்கு இன்னும் மணமாகவில்லை. இந்தப் பணம் இல்லாவிட்டாலும் உன்னால் சம்பாதித்துவிட முடியும். இந்தப் பணத்தை நீயே எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், உன்னைப் பற்றிய உண்மையை நான் போலீஸில் சொல்ல வேண்டி வரும். உன் மீது கொலைக் குற்றம் கூட பாயலாம். ஆதலால், இந்தப் பணத்தை நீ எனக்கு முழுமையாகத் தந்துவிட்டால், நீ செய்த வேலைக்காக உனக்கு ஒரு பத்து லட்சம் ரூபாய் தருகிறேன். எப்படிப் பார்த்தாலும் உனக்கு லாபம் தான்.” என்றான் ராபர்ட்.

நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

“யோசிக்க நேரமில்லை நண்பா. நம்மிடம் அதிக நேரமில்லை.” என்றான் ராபர்ட்.

நான் வேறு வழியின்றி எழுந்து மீண்டும் பிரிஸில்லாவிடம் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது பிரிஸில்லாவும் வந்தாள்.

“ஓரு கோடி பணம். எப்படி வேண்டும் உங்களுக்கு? பணமாகவா? காசோலையாகவா?” என்றாள் அவள்.

“நான் யோசிக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்தில் சொல்லட்டுமா?” என்றேன் நான். சரி என்றவள் எழுந்து வெளியே சென்றாள். நான் மீண்டும் தனியே விடப்பட்டேன்.

இந்தப் பிரச்சனையிலிருந்து மீள எனக்கு அதிக வாய்ப்புகளிருக்கவில்லை. வெகு சில வாய்ப்புகளே எஞ்சியிருந்தன.

அதில் முதலாவது, நானே போலீஸுக்குப் போவது. உண்மையை ஒப்புக்கொள்வது. போலீஸ் எனக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு தரலாம். அதன் பிறகு என்னை ராபர்டிடமிருந்து யார் காப்பாற்றுவது? அவன் என்னை அதற்கு முன்பே பார்த்திருக்கிறான். தவிரவும் நான் ஆள் மாறாட்டம் செய்ய முனைந்தது போலீஸில் எனக்கே எதிராகவும் முடியலாம்.

இரண்டாவது, நான் ராபர்டுடன் ஒத்துழைப்பது. அதற்கு பிரதிபலனாக, லாபத்தில் ஒரு பங்கைக் கோரலாம். ஆனால், பணம் தன் கைக்கு வந்தபிறகு அவன் தான் வாக்குறுதி அளித்ததன் படிக்கு நிற்பான் என்று எந்த நம்பிக்கையும் இல்லை.

மூன்றாவதாக, ஒரு கோடியையும் எடுத்து இல்லாதவர்களுக்கு தானம் செய்துவிடலாம். அப்படிச் செய்தால் ராபர்டுக்கோ எனக்கோ எவ்வித லாபமும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஒரு வேளை, என்றேனும் ஒரு நாள், ஒரு நெடுஞ்சாலையில், என் புத்தம் புதிய கார் மீது ராபர்டின் லாரி ஏறி இறங்கலாம்.

நான்காவதாக, நான் ஒரு நாள் கால அவகாசம் கேட்கலாம். அந்த அவகாசத்தில் கள்ளப்பணம் தயார் செய்து ராபர்டிடம் தந்துவிட்டு, போலீஸில் ராபர்ட் குறித்து தகவல் தந்துவிடலாம். ராபர்டை போலீஸ் கள்ளப்பணம் வைத்திருந்ததற்காய் கம்பி எண்ண வைத்துவிடலாம். இப்படிச் செய்வதால் நான் சில வருடங்கள் ராபர்டின் தொல்லையின்றி இருக்கலாம். ஆனால் இது போன்ற குற்றங்களில், குற்றவாளிக்கு அதிக காலம் தண்டனையாகக் கிடைக்க வாய்ப்பில்லை. என்றேனும் அவன் என்னைத் தேடி வரலாம்.

ஐந்தாவதாக ,என் முகத்திலிருக்கும் முகமூடியை நான் களைந்து விடலாம். ஆள் மாறாட்டம் என்ற ஒன்றே நடக்கவில்லை என்றாக்கிவிடலாம். ஆனால் அப்படிச் செய்தால் ராபர்ட் என்னை விடப்போவதில்லை. ஏனெனில் அவன் நான் முகமூடி அணியும் முன்பே என்னைப் பார்த்திருக்கிறான். அதுமட்டுமல்லாமல், அப்படிச் செய்வதால் ராபர்டின் கொலைக் குற்றம் குறித்து தெரிந்துகொண்டவன் என்கிற முறையில் நானும் ராபர்ட்டுக்கு உடந்தை என்றாகிவிடவும் கூடும். இது, பின்னாளில் ராபர்ட் வேறு ஏதேனும் சிக்கலில் சிக்கிக்கொண்டாலும் கூட எந்தத் தவறும் செய்யாமலேயே நானும் அவன் பக்கம் நிற்க வைத்துவிடலாம்.

ஆறாவதாக, நான் போலீஸிடம் உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால் ஏற்கனவே முகமூடியுடன் பிரிஸில்லா மூலமாக சடகோபனின் அடையாளச்சோதனையை மேற்கொண்டிருக்கிறேன். ஆக, நான் ஏற்கனவே ஆள்மாற்றம் செய்துவிட்டவனாகிவிட்டதால் நான் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

ஏழாவதாக, ராபர்ட்டுக்கு இதய நோய் இருக்கிறது. ராபர்ட்டை இதய நோய் மரணத்தில் ஆழ்த்தும்வரை நான் எதையும் செய்யாமல் காலம் கடத்தலாம். ஆனால், அவனின் இதயம் எப்போது நிற்பது? நான் எப்போது இந்தத் தலைவலியிலிருந்து விடுபடுவது?

இப்படியாக நான் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது பிரிஸில்லா என்னருகே வந்தாள்.

“பணத்தை எப்படி பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள், சடகோபன்?” என்றாள் பிரிஸில்லா.

எல்லாவற்றையும் சீர்தூக்கி யோசித்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். சடகோபன் இறந்துவிட்டான். அதுவும் மிகச்சிறிய வயதில். அத்தனை சிறிய வயதில் அவனுக்கு எப்படி இத்தனை பணம் கிடைத்திருக்கும்? ராபர்ட் சடகோபன் மீது தன் லாரியை ஏற்றிக் கொன்றுவிட்டான் என்பதனாலேயே ராபர்ட் கெட்டவனாகவும், சடகோபன் நல்லவனாகவும் இருந்திருக்க வேண்டியதில்லை. இருவருமே கெட்டவர்களாகவும் இருந்திருக்கலாம். அல்லது ஒப்பீட்டளவில், ராபர்ட்டையும் விட சடகோபன் தீயவனாகவும் இருந்திருக்கலாம். தீய வழியில் கூட இத்தனை பெரிய பணத்தை அவன் அத்தனை சிறிய வயதில் ஈட்டியிருக்கலாம். இப்படி யோசிப்பதிலும் அனுகூலமிருக்கிறது. சந்தேகத்தின் பலனை நான் ராபர்ட்டுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

“பணமாகக் கொடுத்துவிடுங்கள்” என்றேன் நான்.

பிரிஸில்லா ஒரு கோடி ரூபாய்ப் பணத்தை என்னிடம் பணக்கட்டுகளாகத் தந்தாள். நான் உடன் வைத்திருந்த கருப்பு நிற தோல் பையில் அவற்றை அடைத்துக்கொண்டேன். வங்கியிலிருந்து வெளியே வந்ததும் அந்தப் பையை ராபர்டிடம் தந்தேன்.

ராபர்ட் பையை வாங்கி அதனுள்ளிருந்த பணத்தைக் கண்களாலேயே எடை போட்டான். பின் அவன் அருகே இருந்த இன்னொரு வங்கிக்குள் பையுடன் நுழைந்தான். அவன் திரும்பி வந்தபோது அவனிடமிருந்த பை காலியாக இருந்தது.

“ஓரு கோடியையும் எனது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். இருந்தும் உனக்கு வாக்களித்திருக்கிறேன். அதன்படி உனக்கு பத்து லட்சம் தர சம்மதம். எப்போது வேண்டும் உனக்கு?” என்றான் அவன்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.” என்றேன் நான்.

“நீ உறுதியாகத்தான் சொல்கிறாயா?”

“ஆமாம். எனக்கு பங்கேதும் வேண்டாம்.”

“சரி. நீ நல்ல மனிதன். வந்தனம்.” என்ற ராபர்ட் சிரித்தபடி தன் பாதையில் நடந்தான்.

நான் அருகாமையிலிருந்த தேனீர் அருந்தகம் சென்று ஒரு தேனீர் வாங்கிப் பருகலானேன்.

விதியின் மீதான எனது பிரஞை மிக எளிமையானது.

‘எது உன்னுடையது இல்லையோ, அது நீ எத்தனை முயற்சித்தாலும் உன்னுடையதாகப் போவதில்லை.’ என்பதுதான் அது.

ஒரு கோடி ரூபாய் என்னை, என் வாழ்க்கையை என்னவெல்லாம் செய்திருக்கக் கூடும் என்பது குறித்து ஒரு அவதானம் எனக்கிருந்தது. ஒரு கோடி பணத்தால் ஓரு பத்தாண்டுகளுக்கு நான் உழைக்கவே வேண்டி இருந்திருக்காது. அது என்னை சோம்பேறி ஆக்கவும் செய்திருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் என் மனம், எந்த வேலையும், இலக்கும் இன்றி செக்குமாடாகி இருக்கலாம். அது என் தன்னம்பிக்கையை தகர்த்திருக்கலாம். எந்த உடல் உழைப்புமின்றி கண்டதையும் தின்று வயிற்றை ரொப்பி தாறுமாறாக எடை கூடிப்போகவும் செய்திருக்கலாம்.

சிலருக்கு பார்க்கும் வேலையைத் தவிரவும் வேறு சில திறமைகள் இருக்கும். இருந்தும் அவற்றிலெல்லாம் கவனம் செலுத்த இயலாமல், வயிற்றுப்பிழைப்புக்காக ஒரு வேலையில் ஒண்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். அவ்வாறில்லாமல்

எனக்கு கணிணிக்களுக்கு அறிவூட்டுவதன்றி வேறு எதுவும் தெரியாது. ஆக, பத்து வருடங்கள் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில், என் கவனத்தை திருப்பிக்கொள்ள எனக்கு வேறு எந்த தளமும் இல்லை. இப்படி எதுவுமில்லாமல், நான் இந்த சமூகத்திற்கு திருப்பித் தர ஏதுமற்றவனாக, வெறும் பெற்றுக்கொள்பவனாக மட்டுமே இருந்துவிடக்கூடும். அதுமட்டுமல்லாமல், ஒரு கோடிப் பணம் என் மீது ராபர்ட் மாதிரியான அனாவசியமான கேடிகளின் கவனங்களை பெற்றுத்தந்திருக்கக் கூடும். இது என் பிரச்சனைகளை பல மடங்கு பெருக்கிவிடலாம்.. நான் ஒரு சில முதலீடுகளை மேற்கொண்டிருக்கலாம். அவற்றில் ஒரு சில முதலீடுகள் நல்ல பலனளித்திருக்க, ஏனைய முதலீடுகளில் நஷ்டத்தை கண்டிருக்கலாம். இறுதியில் லாபங்களை, நஷ்டங்கள் சமன்பட்டு எனக்கு இறுதியில் எந்த லாபமுமே இல்லாமல் போயிருக்கவும் கூடும்.

என்னிடம் அப்போதிருக்கும் வேலையில் ஒண்டிக்கொண்டிருப்பதே உசிதம் என்று தான் எனக்குத் தோன்றியது. எனக்கு இது குறித்து ஒரு பிரஞை இருக்கிறது. என் பணியானது சவால்கள் நிறைந்தது. சவால்களை தொடர்ச்சியாக சந்திக்கச் சந்திக்கத்தான், தீர்வுகளை உருவாக்க மூளை பழக்கப்படுகிறது. அதிகம் சிந்திக்க சிந்திக்க, மூளையின் நரம்புகள் புதிய புதிய பாதைகளை திறந்தபடியே இருக்கின்றன. இந்த முறையில் தான் பிரபஞ்சத்தன்மைகளுக்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக இருக்கின்றன என்பது என் வாதம்.

அதுமட்டுமின்றி, ஒரு கோடிப் பணம், ராபர்ட் போன்ற மூன்றாம் தர கேடியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்ற வல்லது. அவன் அத்தனை பெரிய பணத்திற்குத் தகுதியானவன் தானா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவனின் விதியை மாற்ற எனக்கு அதிகாரம் இல்லை. விதி, அந்த ஒரு கோடியின் மேல் ராபர்டின் பெயரை எழுதியிருக்காவிட்டால், என் இடத்தில் ராபர்டை விட பலசாலியான ஒருவனை விதி, அன்று அந்த நெடுஞ்சாலையில் அனுப்பியிருக்கலாமே? என் போன்ற, மென்பொருள் மென்னுடலை ஏன் அனுப்ப வேண்டும்?

சூடான தேனீரை பருகி முடித்தவுடன் நான் வீடு வந்து சேர்ந்தேன். மனதில் ஏதோவோர் இனம் புரியாத நிம்மதி பரவியிருந்தது. ஏனென்று சொல்லத்தெரியவில்லை. ஒரு கோடிப் பணத்தை யாரோ ஒருத்தனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். மனம் நிம்மதியாக இருந்தது. வினோதமான பிறவி தானே நான்? அப்படித்தான் இருக்க வேண்டும். தோல்வியை கடந்து போகிறேனா? குப்புற விழுந்தாலும் மீசை மண் ஒட்டவில்லை என்கிற ஸ்திதியா? தெரியவில்லை. ஏதோவொன்று. யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் எதுவும் தெரியாது. என் மானத்துக்கு எந்த சேகாரமும் இல்லை. என் நாட்கள் இதுகாறும் எப்படி இருந்ததோ அப்படியே இனிமேலும் இருக்கும். அது போதாதா?

சில நாட்களில் இந்த நிகழ்வுகளையெல்லாம் நான் மறந்தேவிட்டேன்.

பின்பொரு நாளில் வங்கி வேலையாக அதே இடத்துக்கு மீண்டும் செல்ல நேர்ந்தது. நான் மொக்கை வாங்கிய அதே இடத்தைக் கடக்க நேர்ந்தபோது, ஏதோ தோன்றி, அதே தெருமுனைக்கு வந்தேன். அங்கே லேசான கூட்டம். என்னவாக இருக்குமென்று பார்க்க கூட்டத்தை நெருங்கி எட்டிப்பார்த்தேன். அங்கே ஒருவன் எசகுபிசகாக விழுந்து கிடந்தான். அவனருகே நான் அவனுக்குத் தந்த கருப்புப் பை இருந்தது. அவனைச் சுற்றிலும் கூட்டம் கூடியிருந்தது. யாரும் அவனை நெருங்கவில்லை. அவனிடம் நான் ராபர்டுக்குக் கொடுத்த பை எப்படி என்று குழப்பமாக இருந்தது

நான் அவனை நெருங்கினேன்.

“பார்த்து நண்பா… அந்தப் பையில் வெடிகுண்டு கூட இருக்கலாம்.” என்றான் கூட்டத்திலிருந்து ஒருவன். அப்போது தான் அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் கூட ஏன் அவனை நெருங்கவில்லை என்பது புரிந்தது எனக்கு.

“இருக்கட்டும். என்றோ ஒரு நாள் போகப்போகிற உயிர் தானே.” என்றேன் நான். ஏதோ துணிச்சலில் சக்ரவர்த்தி போல. சுற்றி இருந்தவர்கள் என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு மெல்ல கலைந்தார்கள்.

நான் அவன் உடல் நிலையை சோதித்தேன். மார்பு துடிக்கவில்லை. நாடி அடங்கியிருந்தது. கண்கள் லேசாக திறந்திருந்தபடிக்கு நிலைகுத்தியிருந்தது. அவன் அப்போதுதான் இறந்திருக்க வேண்டும். அவனின் சட்டைப்பையிலிருந்து சில காகிதங்கள் உருண்டு விழுந்தன.

அந்தக் காகிதங்களில், அவனது ஓட்டுனர் உரிமமும், வங்கிப் புத்தகமும் இருந்தது. வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் சீட்டு ஒன்றில் அவனது கையோப்பமும் இருந்தது. ஓட்டுனர் உரிமத்தில் அவன் பெயர் ‘மதன்’ என்றிருந்தது.

அவற்றையெல்லாம் சேகரித்து என் சட்டைப்பையில் பத்திரப்படுத்திவிட்டு, போலீஸை அழைத்தேன். எஞ்சியதை போலீஸ் பார்த்துக்கொண்டது.

‘ராபர்டுக்கு நான் தந்த கருப்புப்பை மதனிடம் எப்படி?’ என்று யோசித்த எனக்கு எங்கோ பொறி தட்ட விரைந்து அஜீஸை சந்தித்தேன். அவரிடம் விசாரித்ததில் சில உண்மைகள் புரிந்தது. உண்மையில் கூட்டத்தின் மத்தியில் விழுந்து கிடந்தது, எனக்கு ராபர்டாக பரிச்சயமானவன் தான். அவன் நிஜமான ராபர்ட் இல்லை. அஜீஸ் என்னிடம் சொல்லாமல் அவனுக்கும் முகமூடியை அளித்திருந்திருக்கிறார்.

பின்னாளில் தன் திட்டம் பாழானால் போலீஸிடம் சிக்கிக்கொள்ளக்கூடாதென்று தன் அசலான முகத்தை முகமூடி கொண்டு மறைக்க முயற்சித்திருக்கிறான் மதன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். ஆனால், அவனுக்கிருந்த இதயக்கோளாறு அவனை வீழ்த்திவிட்டது.

இப்போது மதனின் அசலான ஓட்டுனர் உரிமம், அதில் அவனது புகைப்படம், வங்கிக்கணக்கு எண் என எல்லாமும் என் கையில் இருந்தது. அஜீஸின் முகமூடியுடன்.

பிரபஞ்சம் நம் ஒவ்வொருவரின் மீதும் ஒரு தலைவிதியை சுமத்தியிருக்கிறது. ஆயினும், ஒருவரின் முகத்தை வேறொருவர் எடுத்துக்கொள்வதாலேயே, அவரது தலைவிதியையும் எடுத்துக்கொண்டுவிட முடியுமா? தலைவிதி என்பது அத்தனை சல்லிசானதா? ஆனால், பாரிய பிரபஞ்சம் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு உயிர்களின் நிமித்தம் கொண்டிருக்கும் அர்த்தங்களை முகம் என்ற ஒரு பெளதிக சட்டகத்திற்குள் வைத்து அடைத்துவிடமுடியுமா? அப்படி அடைத்துவிட்டால் ஒருவரின் தலையெழுத்தை மாற்றிவிட முடியுமா? அது சாத்தியமா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

விதியின் மீதான எனது பிரஞை முன்னிருந்ததைவிடவும் இப்போது மிக எளிமையானதாகியிருந்தது.

‘எது உன்னுடையதோ அது யார் எத்தனை தடுத்தாலும், உன்னை வந்தடையும்.’ என்பதுதான் அது.