ரா. பாலசுந்தர்

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி, இந்த ஆண்டு நான் வாசித்த முதல் கவிதை தொகுப்பு, பரிந்துரைத்த பாவாவிற்கு மிக்க நன்றி. பெயரே மிக வித்தியாசமாக, சிந்திக்கவும், தேடவும் தூண்டக்கூடியத் தலைப்பு, யாதனம் என்றால் மரக்கலம், தெப்பம், வேதனை, துயரம் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி, ஆக அம்புயாதனம் என்றால், அம்புத்துளைக்கும் வேதனையைத் தரக்கூடியவள் காளி என்றோ அம்புகளால் செய்யப்பட்ட தெப்பத்தைக் கொண்டு காமத்தைக் கடந்து, காமத்தால் முக்தித் தரக்கூடியவள் காளி என்றோ பொருள் கொள்ளும் வகையில் வாசகத் தேர்விற்கு ஆசிரியர் சுதந்திரம் தருகிறார். இத்தொகுப்பு எங்ஙனமும் தலைப்புச் சார்ந்தோ, தலைப்பிற்கு பொருள் என்ன என்பது பற்றியோ கவிதையொ, குறிப்போ, பொருளோ இல்லை. இது ஒரு எழுத்தாளனால், கவிஞனால் வாசகனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திரம் எனலாம்.

கொண்டாட்டத்திற்குரிய மகிழ்ச்சியான கவிதைகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? மகிழ்ச்சியை எழுதுவது அவ்வளவு சிரமமா? என்று புகழ்பெற்ற படிம எழுத்தாளர் ரமேஷ்பிரேதனிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில்,

மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்றால் என்ன? நுணுகிப் பார்த்தால் ஆணுக்குப் பெண்ணின் உடம்பும், பெண்ணுக்கு ஆணின் உடம்பும்தான் மகிழ்ச்சி. என் அறிவுக்கு எட்டியவரை, காம நிகழ்த்துகலைதான் மானிடத்தின் முக்கியமான கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதினால்தான் எல்லோரும் பதற்றமாகி விடுகிறார்களே அய்யோ இவன் உடம்பைப் பற்றி எழுதுகிறான் என்று ஒதுக்கிவைத்து விடுகிறார்களே? ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றால், மாணவிகள் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்களேஇந்தச் சமூகம் காமத்தைக் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. அப்படி நினைக்க அச்சப்படும் சமூகம், அதன்மீதான கவனத்தை ஈர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே சினிமா, கலைநிகழ்ச்சிகள், குடி, கூத்து, அரட்டை என மனிதரின் முன் கொண்டாட்டம் இதுதான் எனப் பாசாங்கு செய்கிறது. இப்படியான சமூகத்தில் மகிழ்ச்சியான படைப்புகள் எப்படி உருவாகும்?” என்று விவரித்தார். இவர் அளித்த பதிலின் உண்மை நிலையை உணர நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை நூல் அம்புயாதனத்துக்காளி. தமிழில் வெளிவந்து இருக்கும் முதல் தாந்த்ரீக பாலியல் கவிதைத்தொகுப்பு அம்புயாதனத்துக்காளி ஆகும்.

நமது இந்திய மரபில் காமத்திற்கு நீங்கா இடம் உள்ளது, இந்திய மரபு மட்டுமல்ல உலகின் தொன்மையான அனைத்து மதங்களின் அடித்தளமும், காமம் மற்றும் காமத்தை வென்றடைதல் என்பதன் கீழ் மேல்கட்டுமானம் கொள்ளும். இன்றளவில் ஆலயங்களில் காணப்படும் தாந்திரிக பாலியல் குறியீடுகள், பாலியல் சிற்பங்கள் அனைத்தும், காமம் என்பது வெறும் உடலின்பம் மட்டுமே, இவ்உடலின்பத்தைக் கடந்து உள்ளின்பத்தை அடைந்த முதல்வன், இறைவன் உள்ளே வீற்றிருப்பவன், இங்கிருந்து கடந்து செல்கையில் இத்தகைய காமகளியாட்டங்களை கடந்து உள்செல்கிறாய், எனும் குறியீட்டு பொருள் கொள்ளவே பாலியல் சார் சிற்பங்கள் வடித்துள்ளனர். அதுவும் நமது மரபில் கோபுரங்கள் விண்ணெழும் தீயின் குறியீடாக உவமப்படுத்தியுள்ளனர். அத்தகைய கோபுரங்களில் காமச்சிற்பங்களை அமைத்ததன் காரணம், காமத்தை எரித்து, தூய உள்ளத்தினனாக உள்ளே செல்லவேண்டும் என்பதற்காகவே, அந்த வகையில், பிரபு கங்காதரன் தன் காம உணர்வெழுத்தை காளி எனும் இந்திய மரபு ஒற்றைத்தளத்தில் ஏற்றி தன் காம உணர்ச்சிகளை எரிக்கிறார். இத்தொகுப்பை முடித்து வெளிவருகையில் ஒருவித வெம்மை நம்மை ஆட்கொள்ளும். அந்த வெம்மை காமத்தின் மீதான காதலின் வெம்மை, காமத்தை முற்றழிப்பதற்கான வெம்மை.

இக்கவிதை தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவராத ஒற்றைப் பிம்பம் நோக்கி, ஒற்றைச்சாளரத்தின் வழியே தன்னை கண்டடையும் உள்முறை. ”நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம், கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது, தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது, சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது, அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது, உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது, தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது, பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது, இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்கிறது. ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே ப்றறிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டுச் சிக்கெனப் பிடித்தால் பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?” அந்தப் பற்றும் பற்றற்ற பிடியாக காமத்தைக் காளியுடன் கையாண்டு, பற்றற்றான் பற்றினை பெற வள்ளுவரின் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வழி  கையாள்கிறார். கவிஞர். ஆக பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று, ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க  என்பார் கரு. ஆறுமுகத்தமிழன். கவிஞரின் இப்பற்றினை ஒவ்வொரு கவிதையிலும் காணலாம்.

இக்கவிதைக்கு கவிஞர் கையாண்டிருக்கும், குறியீடுகள், உவமை அனைத்தும் தமிழுக்கு புதுமை. இதில் எந்தக் கவிதை முக்கியம், எது முக்கியமில்லை என்று பிரித்தரியா நிலையில் அனைத்தையும் பற்றும் விதத்தில் உள்ளது. நறை, ராஜபாட்டை, யோனி, நுசும்பு, கணுக்கால் என சில தொடர் பிரயோகங்கள் பயன்படுத்தினாலும், வெவ்வேறு சொல்லமைப்பில், புதிய பொருளில் அர்த்தப்படுத்தும் விதம் புதுமை.

நமது கவிதை மரபில் கவிஞர்கள் முதல் தலைமுறையில் இருந்து தங்களது அக தேடலை படிமத்தின் துனணக்கொண்டு படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் ஆன்மிக உள்அகத்தேடலின் ஆதர்ச நாயகனாக பாரதியார், பிரமிள், நம்மாழ்வார், தேவதேவன் முதலிய கவிஞர்களை குறிப்பிடலாம். அவ்வரிசையில் பிரபுகங்காதரனை பின்பற்றி சமீப காலத்தில் அம்புயாதனத்துக் காளி போன்ற படைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மற்றொரு படைப்பு ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் எனும் கவிதைத் தொகுப்பு.

இத்தகைய கவிதைகளின் அடிப்படை அலகாக இருப்பது கற்பனாவாதக் காமம் ஆகும். காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகத்தில் கற்பனாவாதக் காமம் பற்றிய நிறை குறைகளை எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது இத்தகைய கவிதைகளை அணுகுவதற்கு மிகவும் உதவிபுரிபவன,

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம்.

காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் எல்லையை கடந்தவையே. இயற்கை இல்லாத சங்கப்பாடல்கள், பெருமாள் இல்லாத ஆழ்வார்களின் நாயகிபாவப் பாடல்கள் எப்படி கவிதையாகியிருக்கமுடியும்?

நவீனத்துவக் கவிதை காமத்தை மட்டுமே காண்கிறது. ஒவ்வொன்றையும் அது எதுவோ அதிலேயே நிறுத்துகிறது அதன் யதார்த்த நோக்கு. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் உச்சத்தை, முடிவிலியை நோக்கி எழுகிறது கற்பனாவாதக் கவிதை. அனைத்தையும் அங்குசெல்வதற்கான வழியாக ஆகிறது. கற்பனாவாதக் கவிஞனுக்கு வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளும் பறவைக்குக் கிளைநுனி போல எம்பி எழுவதற்கான தளங்கள் மட்டுமே.

நவீனத்துவத்தின் பார்வைக்குள் கற்பனாவாத அழகியலுடன் எழுதப்படும் கவிதைகளில் பல வெறுங்காமத்தையே வெளிப்படுத்துகின்றன. அவை அந்தக் கவிஞன் என்னும் தனிமனிதனின் அக அவசங்களை நோக்கி மட்டுமே நம்மைக் கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நம்மை அடையாளம்கண்டுகொள்கையில் நம்மை பாதிக்கின்றன. நம் உணர்வுகளை அலைக்கழிக்கின்றன.ஆனால் அலைக்கழிக்கும் எந்த உணர்ச்சியிலிருந்தும் நாம் எளிதில் விடுபட்டுவிடுகிறோம். அதைப்போலவே நவீனத்துவக் கவிதை அளிக்கும் அந்த உணர்வூசலை மிக எளிதில் நிறுத்திக்கொள்கிறோம். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இக்கவிதைத் தொகுப்பில் இருந்து ஓரிரு கவிதைகள் இங்கு தரப்படுகின்றன. இவ்விரண்டு கவிதைத் தொகுப்பில் உள்ள ஒற்றுமைகள் இக்கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

உதாணத்திற்கு,

நாள் முழுக்க

நாடி நரம்புகளெங்கும்

ஒரு புதிர்குறித்த புரிதல்வேண்டி

முத்தங்களின் கருத்தரங்கங்கள்

நடந்துகொண்டிருக்க

பகலோரமாய் நிழலில் அமர்ந்து

மணற்கிண்ணத்தில் நிரம்பியிருந்த மதுவை

நிதானமாய் அருந்திக்கொண்டிருந்தது இரவு

அப்போது அவ்வழியாய்

நொண்டியடித்தபடி கண்டும் காணாமலும்

சென்றுகொண்டிருந்தது ஒரு கனவு”

எனும் கவிதை பிரபு கங்காதரனின் நீண்ட முத்தத்திற்கு என வரும் கவிதையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.

காளியின் இதழ்கள் களிமண் நிலத்தின் வெடிப்புகளாயிருக்கிறது வயல் நண்டாய் ஊடுருவிப் போகிறேன்எனும் கவிதையில் உதடு வெடிப்புகளை களிமண் நிலத்தின் வெடிப்புகளுக்கு உவமைப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் காளியின் உடலை வருணிக்க ஆம்பல், களிமண் வாசனை, வைகாசியில் பழுத்த புளியின் வாசனை என தொடங்கி, காமத்தின் முதன்மை தளமான ஆதிவாசியாகிறேன் உன்னை நுகர்கையில் எனும் முடிவில் காமத்தின் அடியை தொட்டுச்செல்கிறான் கவிஞன்.

அடர்வனம் நாணும். காளியின் கெண்டைக்கால் உரோமம் காண்கையில்.

மரவட்டை போல் ஊருமென் மீசை காளி, வியர்வையாய் வழிந்தோடுகிறேன்,

அளவிற் பெரிய சதுப்பு நிலத்தை பௌர்ணமியிரவில் கடப்பது போலானது காளியுடனான முயக்கம், போன்ற பல புதிய உவமைகளை பயன்படுத்தி, சொற்களுக்கான புது அர்த்தத்தை காமத்தில் தன்னைத் தேடுவது போன்று தேடுகிறார் கவிஞர். அரைஞான் கயிற்றை வெள்ளிநதிக்கு ஒப்பிடும் உவமை என நீண்ட பட்டியல் போடலாம் கவிஞனின் உவமப்புதுமையை வெளிக்கொணர

எடுத்துக்காட்டாக,

ஒரு மலைச்சரிவின்

கருத்த பாறையின் மேல்

படர்ந்திருக்கிறாள் காளி

நீ..ண்……ண்..ண்……

முத்தத்தின் முடிவில்

மலைப்பாம்பாய்

எனை விழுங்குகிறாள்

கதகதப்பான

அவள் கருப்பைத்

தேடியமர்ந்து கொள்கிறேன்

 

என்ற கவிதையில் நீண்ட முத்தத்தின் கால அளவை காட்ட, சுஜாதா பயண்படுத்தும், அவன் மாடியிலிருந்து மெதுவாக

                                                                                                           

                                                                                                                       

ங்

                                                                                                                                   

கி

போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் விதம், அந்த முத்தத்தை நாமும் நீண்ட நேரம் அனுபவிக்கும் ரசனையை ஏற்படுத்துகிறது. வாசக விருந்து என்றும் கொள்ளலாம்.

 

நீர் கொண்டு போகும் நத்தைப் போலலெனை முதுகில் சுமத்தியிருக்கிறாள் எனும் வரியில், நீர் போன்று தான் மிகவும் இயல்பானவன் என்று குறிக்கிறார். இக்கவிதைகள், ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த ஒருக்கவிதைப் போதும்,

 

முன்னும் பின்னும்.

பின்னும் முன்னும்.

யென நாவால் தவழ்ந்துன்

திருமேனியளந்து பிறவாப்

பேறடைவேன் மாகாளி

 

எனும் கவிதையை சுட்டலாம்பக்தி இலக்கியத்தில், இறைவனை துதிக்கும் பாடல்களின் ஒருவகை, கேசாதி பாதம், பாதாதி கேசம் என்பது. அதாவது இறைவனை பாதத்தில் இருந்து தலைவரை பாடுவது பாதாதி கேசம், தலையிலிருந்து பாதம் வரை பாடுவது கேசாதி பாதம் என்பதாகும். அதுபோன்று முன்னும் பின்னும். பின்னும் முன்னும் நாவால் தவழ்ந்து துதிப்பதாக இக்கவிதையைக் கொள்ளலாம் நாம். இதுபோன்று பலக் கவிதைகளை கூறப்போனால் மொத்தக் கவிதையையும் கூறிவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் இனி கவிதைகளைப் படித்து இன்பம் நுகர இத்தொடு நிறுத்துகிறேன்.

 

காளியெனும் பிம்பம் நம் மரபில், கோவத்தின், தீயசக்தியின், பயத்தின் குறியீடாகத்தான் கொள்வோம். அத்தகைய பிம்பத்தை, அன்பின், காமத்தின், காதலின் குறியீடாக் கொண்ட கவிஞனின் துணிச்சல் எதிலும் அன்பைக் காணும் நோக்கை அறிவுறுத்துகிறது.

 

காமம் வழியும் முக்தியை அடையலாம் என்று நவீனத்துவ வழியில் நிரூபிக்கும் தமிழின் முக்கிய ஆவனம் அம்புயாதனத்துக் காளி.