வளவ.துரையன்

’எம்மை’ என்றனென் யானே’

வளவ. துரையன்

 

ஐங்குறுநூற்றில் ஓர் அழகான காட்சியைப் பார்க்க முடிகிறது. தலைவனும் தலைவியும் சந்திக்கின்றனர். ஒருவரை ஒருவர் விரும்பி மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் சந்தித்துப் பழகுகின்றனர். இது ஊர் முற்றும் பரவுகிறது. அவனையும் அவளையும் இணைத்துப் பேசுகின்றனர். இதைச் சங்க இலக்கியம் அலர் தூற்றுதல் என்று கூறுகிறது. இன்றோ அவள் ஓடிப்போய்விட்டாள் எனக் கொச்சையாகக் கூறுவர். சூழலைப் பொருத்து ஆணவக் கொலையும் கூட விழும். தலைவியின் செவிகளிலும் அலர் தூற்றல் விழுகிறது. அவளின் அன்னையும் இச்செய்தியைக் கேள்விப்படுகிறாள்.

தலைவி தன் தோழியிடம் இது பற்றி, “தோழியே! உனக்குத் தெரியுமா? நேற்று ஊரார் கடற்கரைத் துறைவர்க்கு என்னை மனைவி என்று கூறினார்களாம். அது கேட்ட என் அன்னை சினந்தாள். நேராக என்னிடம் வந்தாள். என்னிடம், “நீ என்ன அவனுக்கு மனைவியா? அத்தன்மையானவளா? என்று கேட்டாள். நான் மெல்லிய குரலில் ”ஆமாம்! ஊரார் சொல்வதெல்லாம் என்னைத்தான்” என்று மொழிந்தேன்” என்று கூறினாள்.

ஊராருக்கும் ஏதோ அச்சம்; இவர்கள் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால்தான் இன்னும் மணமாகலே இருப்பவளை அவன் மனைவி எனக் கூறுகிறார்கள். அத்துடன் அவனைப் பற்றிச் சொல்லும்போது, “வெண்மணலைச் சிதைக்கும் கடற்கரைத் துறைவன் என அவன் குணம் பற்றி உரைக்கிறார்கள். ”அவன் இவளை மறந்து போய்விடப் போகிறானே” என்று அவர்கள் அஞ்சுவது இதன் மூலம் தெரிகிறது.

தலைவியும் தன் காதலைத் தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறாள். அதனால்தான் துணிவாக அதே நேரத்தில் பைய, அதாவது பெண்களுக்கே உரிய நாணம் வர மெல்லிய குரலில் ஊரார் என்னைத்தான் சொல்வதாகத் தாயிடம் கூறுகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்மையின் அணிகலன்களாக அக்காலத்தில் கருதப்பட்டன. தோழிக்குரைத்த பத்து எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களுமே தலைவி கூற்றாகத்தான் இருக்கின்றன. அதில் மூன்றாம் பாடல் இதுவாகும்.

”அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், பெண்டுஎன மொழிய, என்னை,
அதுகேட்டு ‘அன்னாய்’ என்றனள், அன்னை;
பைய ‘எம்மை’ என்றனென் யானே”

[நென்னல்=நேற்று; உடைக்கும்=சிதைக்கும்; பெண்டு=மனைவி; அன்னாய்=அத்தன்மையவள்; பைய=மெதுவாக]

மற்றுமொரு நாடகக் காட்சியையும் ஐந்தாம் பாடலில் பார்க்கலாம்.

”அம்ம வாழி, தோழி! பல்மாண்
நுண்மணல் அடைகரை நாமோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்து நின்றோனே”

[மரைகி=மறைந்து; அருங்கடி=அரிய காவல்; மாண்=சிறப்பு]

முன்பு அவன் வந்தான். அவளுடன் கலந்தான். இருவரும் கடலில் ஆடினார்கள். அன்னைக்கு இது தெரிந்தது. அவள் அச்சப்பட்டாள். அன்னையர் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரிதான் போலும். பெண்ணைக் காத்துக் கடிமணம் செய்து வைத்தல் அரிய செயல்தானே? எனவே அன்னை தன் மகளை வீட்டிலேயே சிறை வைத்தாள். அவன் விடுவானா? இப்பொழுதும் பார்க்கவேண்டி மனைப்புறத்தில் வந்து நிற்கிறான். இதைக்கண்ட தலைவி தன் தோழியிடம் கூறுவதுதான் இப்பாடல். அவன் வந்து நிற்பது அவளுக்கு மகிழ்ச்சியாகவும் அச்சமாகவும் இருப்பதைப் பாடல் மறைமுகமாக விளக்குகிறது.

எக்காலத்திலும் ஆடவர் பெண்களை விரும்புவார்கள். ஆனால் உடன் மணம் புரிய எண்ணாமல் காலம் தாழ்த்துவார்கள் போலும். ”அவன் இன்னும் மணம் புரிய ஆர்வமில்லாமல் இருக்கிறான் தோழி! திருமணத்திற்கு வேண்டிய செயல்களையும் செய்யவில்லை. புறம்பானவற்றைச் செய்கிறான். அதனால் அவன் என் மீது அன்பு இல்லாதவன் போலத் தோன்றுகிறான்” என்கிறாள் தலைவி இப்பத்தின் இறுதிப்பாடலில்.

”அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி,
அன்புஇலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே.”

[எய்யாமை=அறியாமை; ஏதில=தொடர்பற்ற]

தலைவன் இப்படி அறியாமையில் இருக்கிறானே எனத் தலைவி வருந்துவதும், ஏதிலவற்றைச் செய்பவனாகவும் இருக்கிறானே எனத் தலைவி கவலைப்படுவதும் பாடலில் தெளிவாகிறது. அதே நேரத்தில் அவன் புறம்பாக என்ன செய்தான் எனக் கூறவில்லை. அவனை இந்த நிலையிலும் தலைவி அதிகமாகக் குறை கூறாததுதான் அவள் செம்மையைக் காட்டி அவளை மேலும் மேலும் உயர்த்துகிறது எனலாம்.

 

நோய்க்கு மருந்து கொண்கண் தேரே

வளவ துரையன்

அம்மூவனார் பாடியுள்ள ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களில் முதல் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதி ”தாய்க்குரைத்த பத்து” எனும் பெயரைப் பெற்றுள்ளது. இப்பாடல்கள் அனைத்துமே “அன்னை வாழி!” என்றுதான் தொடங்குகின்றன. மேலும் எல்லாப் பாடல்களும் தோழி கூற்றாக அமைந்துள்ளன. அவை செவிலித் தாய்க்குத் தோழி உரைப்பவனாக அமைந்துள்ளன.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் கலந்து பழகுகின்றனர். பின்னர் அவன் அவளை மணம்புரிய வேண்டிப் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்கிறான். சங்க காலத்தில் ஆடவர் பொருள் கொடுத்துத்தான் மகளிரை மணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் நிலை இருந்ததை அறிய முடிகிறது. பொருள் ஈட்டிய அத்தலைவன் தேடிச் சேர்த்த பொருளுடன் தேரில் வருகிறான்.

தலைவன் சென்றபின் அவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவள் கண்களில் பசலை நோய் படர்கிறது. அவளின் நிலை கண்டு செவிலித் தாய் மனம் வருந்துகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி செவிலியிடம் கூறுகிறாள். “அன்னையே வாழ்வாயாக! உன் மகளின் கண்கள் நெய்தல் மலருக்கு நிகரானவை. தலைவன் பிரிவால் அக்கண்களில் இப்பொழுது பசலை நோய் படர்ந்துள்ளது. அந்நோய்க்கு மருந்து தலைவனின் வருகைதான். அதோ பார்! பசலை நோய்க்கு மருந்தாக நெய்தல் நிலத் தலைவனாகிய கொண்கணின் தேர் நீண்டு வளரும் அடும்பங்கொடியை அறுத்துக் கொண்டு வருகிறது.” கொண்கண் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். கொடியை அறுத்துக் கொண்டு வருவது தேரின் விரைவைக் காட்டுவதாகும். தாய்க்குரைத்த பத்தின் முதல் பாடல் இது:

    ”அன்னை, வாழி! வேண்டு அன்னை! உதுக்காண்
      ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
    நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
    பூப்போல் உண்கண் மரீஇய 
    நோய்க்கு மருந்துஆகிய கொண்கண் தேரே”

தலைவன் பொருள் தேடிக் கொண்டுவந்து விட்டான். திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் மிகவும் பொருத்தமாக இருப்பதைப் பார்த்து செவிலித் தாய்க்குக் காட்டி உரைப்பதாக இப்பத்தின் மூன்றாம் பாடல் இருக்கிறது.

"அன்னை வாழி! வேண்டுஅன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்குஅமைந்த தனனால் தானே;
தனக்குஅமைந் தன்றுஇவள் மாமைக் கவினே”"


”அன்னையே! புன்னையும், ஞாழலும் மலர்கின்ற குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறைகளை உடைய நெய்தல் நிலத்தலைவன் அவன். அவன் இவளுக்காகவே அமைந்துள்ளான். அதேபோல இவளது அழகும் மாந்தளிர் மேனியும் அவனுக்காகவே அமைந்துள்ளது” என்பது பாடலின் பொருளாகும். புன்னை, ஞாழல் போன்ற நெய்தல் நிலத்தாவரங்கள் இப்பாடலில் காணப்படுகின்றன.

இப்பொழுது தலைவன் வந்துவிட்டான். தலைவி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். அவள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழகு கூடுகிறது. தலைவியின் நெற்றி பொன்னை விட மிளிர்கிறது அதைக் காட்டிச் செவிலித்தாய் தோழியிடம் கேட்டதற்கு அவள் விடை கூறுவது போல ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது.

    ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! முழங்குகடல்
    திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
    தண்ணம் துறைவன் வந்தெனப்
    பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே”

இப்பத்தின் ஏழாம் பாடலும் தலைவனின் பிரிவால் தலைவி வாடுவதைக் காட்டுகிறது. அவள் மெலிந்து விட்டாள். நெற்றி பசந்து விட்டது. அதனால் அழகு குறைந்து விட்டது. அவள் நெய்தலில் இருப்பதால் குளிர்ச்சி பொருந்தியக் கடலலையின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த ஓசை காதில் விழும் போதெல்லாம் அது தன் தலைவன் வரும் தேரின் ஒலியோ என்றெண்ணி அவள் தூங்காதிருக்கிறாள். இதைச் சொல்லும் தோழி, “நோகோ யானே” என்கிறாள். அதாவது நானும் வருந்துகிறேன் என்றுரைக்கிறாள்.

    ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! என்தோழி
    சுடர்நுதல் பசப்பச் சாஅய், படர்மெலிந்து,
    தண்கடல் படுதிரை கேட்டொறும்,
    துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே’

ஒன்பதாம் பாடல் ஒரு புதுவகையானக் காட்சியைக் காட்டுகிறது. தலைவியை மணம் புரிய வேண்டி பொருள் தேடி வரச்செல்கிறான் தலைவன். சென்றவன் இன்னும் திரும்பவில்லை. நெடுநாள்களாகின்றன. வருவானா, மாட்டானா எனச் செவிலித்தாய் ஐயுறுகிறாள். அவன் பிரிந்து செல்லும் காலத்து என்ன சொல்லிச் சென்றான் என செவிலித் தோழியிடம் கேட்கிறாள். அதற்குத் தோழி தலைவியின் நிலையில் நின்றே விடை கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்:

    ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! நெய்தல்
    நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
    எம்தோள் துறந்த காலை எவன்கொல்
    பல்நாள் வரும் அவன்அளித்த பொழுதே?”

”அன்னையே, நான் சொல்வதைக் கேட்பாயாக; நீரில் வாழும் உள் துளைகள் உடைய நெய்தல் மலர்கள் நெருங்கி வளர்ந்துள்ள நீர்த்துறைகளைக் கொண்டவன் எம் தலைவன்; அவனுடன் நாங்கள் மகிழ்ந்திருந்தபொழுது, அவன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான். அந்த வாக்குறுதிகள் இப்பொழுதும் எம் நினைவில் வந்துவந்து நிற்கின்றன” என்பது பாடலின் பொருளாகும்.

நெய்தல் நெருங்கி மலர்ந்துள்ளது அவன் தலைவிபால் கொண்டுள்ள அன்பின் நெருக்கத்தைக் காட்டுவதாகும். நீரிலேயே அவை தங்கி வளர்வதால் அவனும் இவள் நினைவிலேயே இருப்பான்; எனவே விரைவில் வந்துவிடுவான் எனக் கூறுவது போல அமைந்திருப்பதாகும்.

தோழன், தோழி போன்றோர் அகத்துறைப் பாடல்களில் முக்கியமான பங்கை வகிக்கின்றனர். தலைவனையும் தலைவியையும் சேர்த்து வைப்பதிலும் அவர்கள் ஊடல்கள் கொண்ட காலத்து அந்த ஊடலைத் தீர்ப்பதிலும் அவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்தப் பத்துப் பாடல்களிலும் தலைவியின் திருமணத்தின் பொருட்டுத் தோழி ஆற்றும் செயல்பாட்டை அவள் கூற்றின் வழி ஐங்குறுநூறு தெரியப்படுத்துகிறது எனலாம்.

அன்னது ஆகலும் அறியாள்

வளவ. துரையன்

வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதம் என வகைப் படுத்தப்பட்டது. சங்கப் பாடல்களில் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள் அழகாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு வயலில் தானியங்கள் விளைந்து முற்றி இருக்கின்றன. அவற்றைத் தின்ன வரும் பறவைகளைப் பறைகொட்டி விரட்டுகின்றனர். அவர்களை “அரிப்பரை வினைஞர்” எனப் பாடல் காட்டுகிறது. அந்த வயலில் குருகுகள் நிறைய மேய்கின்றன. அக்குருகுகள் அவ்வயலில் இருக்கும் ஆமைகளைப் பிடித்துத் தின்கின்றன. அந்த ஆமைகளின் வெண்மையான தசையை முழுதும் உண்ணாமல் மிச்சம் வைத்துவிட்டுப் போகின்றன. பறை கொட்டுபவர்கள் அந்த மிச்சத்தைத் தங்கள் உணவாக உண்கின்றனர்.

இக்காட்சியைச் சொல்லிப் பரத்தை தலைவனின் பாங்காயினர் கேட்கக் கூறுகிறாள். “மிகுதியான அழகான மலர்களால் பொய்கை அழகு பெறும் வளங்கொண்ட நாடன் ஊரனே! நீ என்னை விரும்புகிறேன் என்று உரைக்கிறாய்; இதைக் கேட்டால் உன் மனைவி மிகவும் வருந்துவாள்”

குருகு உண்ட மிச்சத்தை உண்ணும் பறை கொட்டுபவர் போல தலைவன் தன் மனைவியை விட்டுவிட்டுப் பரத்தையிடம் வந்து இன்பம் துய்க்கிறான் என்பது உள்ளுறைப் பொருளாகும். ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணையில் புலவி விராய பத்தின் முதல் பாடலில் இதைக் காணமுடிகிறது. புலவி என்பது ஊடலைக் குறிக்கும். இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ஊடலின் பொருட்டு எழுந்தவையாகும். தலைவி, தோழி, மற்றும் பரத்தை ஆகியோரின் கூற்றுகளாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் தாங்களே கண்டவற்றை உரைப்பனவாகவும், தூது வருபவர்களிடம் மறுப்புரை கூறுவதாகவும் அமைந்துள்ளதால் இப்பகுதி ”புலவி விராய பத்து” என்று பெயர் பெற்றுள்ளது. பாடல் இதோ:

”குருகுஉடைத்து உண்ட வெள்அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர்அணி வாயில் பொய்கை, ஊரநீ
என்னை ‘நயந்தனென்’ என்றிநின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே”.

தலைவி கூற்றாக வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடல் தலைவி தலைவனிடம் சினம் கொண்டு ஊடி உரைப்பது போல் உள்ளது. அவள் தலைவனிடம் அனைப்பற்றி நேரடியாகவே குற்றம் கூறுகிறாள். “நீ என்னை மணந்துகொண்ட கணவன்; ஆனால் நீ என்மீது அன்பு செலுத்தவில்லை” என்கிறாள். பாடலில், “மணந்தனை அருளாய் ஆயினும்” எனும் சொற்கள் இதைக் காட்டுகின்றன. மேலும் அவள் பொய்க்கோபமாக, “நீ குளிர்ச்சியாக நீர்த்துறைகள் உள்ள உன்னுடைய ஊருக்குச் செல்வாயாக. அங்கே வாழும் பரத்தையர்களிடம் சேர்ந்து அவர்களும் உன் பெண்டிரே என ஊரார் மொழியும் அளவிற்கு என்னை விட்டுப் பிரிந்து செல்வாயாக” எனக் கூறுகிறாள்.

பரத்தையர் பற்றிப் பொறாமையுடன் சினந்து கூறும்போது கூடத் தலைவி, அவர்களை, “ஒண்தொடி” என்ற சொல்லால் ஒளி பொருந்திய வளையல்களைப் பூண்டவர்கள் என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ”நீ அவர்களைச் சேர்ந்தால் மணந்த தலைவியை விட்டுவிட்டு இவர்களிடம் சேர்ந்திருக்கிறானே” என்று ஊரார் பழிப்பர் என்பதை மறைபொருளாக அவனுக்குத் தெரிவிக்கிறாள். புலவி விராய பத்தின் மூன்றாம் பாடல் இது.

”மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும்ஊர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டுஎனப் படற்கே”

இப்பத்தின் நான்காம் பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. அக்காலப் பெண்டிர் தம் கூந்தலை ஐந்தாக வகுத்துப் பின்னி இருந்தனர் என இப்பாடலில் உள்ள ஐம்பால் மகளிர்” எனும் சொல் காட்டுகிறது.

”செவியின் கேட்பினும் சொல்இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என்ஆ குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போல,
பலர்படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே?”

பெண்கள் தைத் திங்களில் குளிர்ச்சி பொருந்திய குளங்களில் நீராடும் வழக்கம் இருந்ததையும் இப்பாடல் காட்டுகிறது. மேலும் அக்குளமானது தலைவனின் மார்புக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது. “பலர் வந்து நீராடும் குளம் போல உன் மார்பு பரத்தையர் வந்து படியும் தன்மை உடையது என ஊரார் பேசுகின்றனர். அதைக் காதால் கேட்டாலே உன் தலைவி சினம் அடைகிறாள். நீ இப்பொழுது பரத்தை இல்லில் தங்கிய குறிகளுடன் வந்திருக்கிறாய்; தலைவி இப்பொழுது உன்னைக் கண்ணால் கண்டால் என்ன ஆவளோ?” எனத் தலைவி கூறுகிறாள்.

அடுத்த பாடலில் தலைவி, தலைவனைப் பார்த்து, “ஊரனே! உன் செயல் சிறுபிள்ளைகள் செய்வதைப் போல இருக்கிறது. இதைக் கண்டு ஊர்ப்பெரியவர்கள் எள்ளி நகையாட மாட்டார்களா?” எனக் கேட்கிறாள். மேலும் உன் ஊரில் சம்பங்கோழி அதன் பெடையோடு இணைந்து வாழ்கிறது என்று கூறி பறவையே அப்படி வாழ்கையில் அது போல நீ இருக்க வேண்டாமா எனக் குறிப்பாகக் கூறுகிறாள். கம்புள் என்பது சம்பங்கோழியைக் குறிக்கும். சம்பங்கோழியைக் கூட வெண்மையான நெற்றி உடையது எனும் பொருளில், “வெண்நுதல்” என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

இதோ ஐந்தாம் பாடல்:

”வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுஇல் யாணர் மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி;
அகாரோ பெருமநின் கண்டிசி னோரே”

பரத்தை கூற்றாக புலவி விராய பத்தின் எட்டாம் பாடல் விளங்குகிறது.

”வண்துறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை ஊரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.”

”பரத்தையானவள் தன்னிடம் தலைவன் வந்து சேர்வதை விருப்பம் இல்லாதது போலக் காட்டுவாள்; ஆனால் அவள் விரும்பிக் கொண்டிருக்கிறாள்: அதுபோலிருக்கத் தன்னல் இயலாது” எனத் தலைவி கூறுகிறாள். அதைக் கேட்ட பரத்தை ‘ஆமாம்; நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டோம். அதற்கு உடன்படாத்து போலக் காட்டி மனத்துள் உடன்படுகின்றோம்” எனக் கூறுகிறாள்.

வண்டானது மலர்விட்டு மலர் சென்று தேன் உண்ணுதலை தலைவன் பரத்தையரிடம் சென்று இன்பம் துய்த்தலுக்கு உவமையாகப் பல பாடல்களும் இது போல் சொல்லி இருக்கின்றன. தலைவன் ஊரில் வண்டுகள் தங்கும் வளமான மலர்கள் உள்ளன என்று இங்கு குறிப்பாக மறைபொருளாகச் சொல்லப்படுகிறது. தலைவியை உறவு முறையாகப் பரத்தை தமக்கை என்றழைக்கிறாள். ’எவ்வை’ எனும் சொல் அதைக் காட்டுகிறது.

இது பத்தாம் பாடல்:

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே”

இப்பாடலில் பரத்தை ’புதல்வனின் தாய்’ எனத் தலைவியைக் காட்டுவதிலிருந்து மணமாகி சில ஆண்டுகள் தலைவியுடன் வாழ்ந்த பின் புதல்வனும் பிறந்தபின்னர் தலைவன் பரத்தை இல் சென்றுள்ளான் எனபது புலனாகிறது. இப்பாடலிலும் பல மலர்களுக்குச் சென்று வரும் வண்டு தலைவனுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது. தன்னிடமிருந்து தலைவனைப் பரத்தைதான் விலக்குகின்றாள் எனத் தலைவி கூறுவதைக் கேட்ட பரத்தை கூறுவது போல் அமைந்த பாடல் இதுவாகும்.

”வண்டு பல மலர்களிடம் சென்று தேனை உண்ணல் மரபு. தலைவனும் அதே போன்று பல பரத்தையரிடம் சென்று இன்பம் துய்க்கிறான். தலைவன் குணத்தை வண்டுகள் பெற்றனவா? இல்லை வண்டின் குணத்தைத் தலைவன் பெற்றானா என்பது தெரியவில்லை; அப்படி இருக்கத் தலைவனுடன் கலந்து புதல்வனைப் பெற்ற தலைவி எம்மைக் குறை கூறுகிறாளே” என்பது பரத்தை கூற்றாகும்.

சில ஆண்டுகள் பழகியபின்னரும் தலைவனின் குணத்தைத் தலைவி அறியவில்லையே என்பதை மறைமுகமாகக் காட்டவே இந்த இடத்தில் புதல்வனைக் குறிப்பிடுகின்றாள். “அன்னது ஆகலும் அறியாள்” என்ற சொறோடர் இதைத் தெரியப்படுத்துகிறது.

இவ்வாறு இயற்கைக் காட்சிகளைக் காட்டி அவற்றின் வழி தலைவன் மற்றும் பரத்தை போன்றோரின் வாழ்முறைகளையும் ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.

புனலாடல்

வளவ. துரையன்

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் நீர்நிலைகளில் குளித்து ஆடுவது என்பது மிகவும் விருப்பமான ஒன்றாகும். இதற்குப் பால்வேறுபாடும் கிடையாது. குளம், ஆறு, கடல் போன்றவற்றில் நீராடுவது அவர்களுக்கு ஒரு விளையாட்டாகும். அதனால் இதை நீர் விளையாட்டு என்றும் அழைப்பர். இலக்கியங்கள் இதைப் புனலாடல் என்றழைக்கின்றன. சுனையாடல் என்றும் இதைக் கூறுவார்கள்.

ஆண்டாள் தம் திருப்பாவையில், “நீராடப் போதுவீர்” “மார்கழி நீராட” “குள்ளக் குளிர்ந்து நீராடாதே” :மார்கழி நீராடுவான்” என்றெல்லாம் நீராடுதலைக் காட்டுவார். சிலப்பதிகாரம் கடலில் சென்று நீராடுவதைக் கடலாடு காதை எனும் பகுதியில் காட்டும்.

ஐங்குறு நூறு நூலில் தலைவனும் தலைவியும் நீராடும் செய்திகளைக் காட்டும் புனலாட்டுப் பத்து என்னும் பகுதியே உள்ளது. இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் புனலாட்டையே கூறுகின்றன.

ஒரு தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் சென்று ஒழுகி வந்தான். அப்பரத்தையுடன் அவன் புனலாடுகிறான். அதைத் தலைவி கேள்விப்படுகிறாள். அவளுக்கு மட்டுமன்று; அச்செய்தி ஊருக்கே தெரிந்து போகிறது. அதனால் எல்லாருமே அது குறித்துப் பேசுகின்றனர்.

சிலநாள்கள் கழித்து அவன் தலைவியிடம் மீண்டு வருகிறான். அப்பொழுது அவனிடம் அவன் பரத்தையரோடு சேர்ந்து புனலாடியது பற்றிக் கேட்கிறாள். “தலைவ! நீர் அழகிய தொடியும், வளையும் அணிந்த பரத்தையரோடு நீராடினீரே” என்கிறாள். அவனோ இல்லவே இல்லயென மறுக்கிறான். அதற்குத் தலைவி, “நேற்று கூட நீர் நீராடியது ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரும் அதுபற்றிப் பேசுகின்றனர். சூரியனின் ஒளியை எவற்றாலும் மறைக்க இயலுமோ? அது போல நீ கூறும் பொய்மொழிகளால் நீர் நீராடியதை மறைக்க முடியாது” என்று மறுமொழி கூறுகிறாள்.

ஊராரின் அலர் தூற்றலுக்கு ஞாயிற்றின் ஒளியை உவமையாக காட்டலும் பரத்தையைக் கூடத் தலைவி அழகாக வருணிப்பதும் இப்பாடலில் குறிப்பிடத்தக்கவையாகும். இது ஐங்குறுநூறு புனலாட்டுப்பத்தின் முதல் பாடலாகும்

”சூதுஆர் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்றது ஒளியே”

புனலாட்டுப் பத்தின் நான்காம் பாடல் தலைவி புனலாடியதைப் பற்றிப் பெருமையாகத் தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. பெண்களும் ஆண்களைப் போல நீர்நிலைகளின் கரைகளில் வளர்ந்துள்ள மரங்களில் ஏறி அங்கிருந்து நீர்நிலையில் குதித்து நீராடினர் என இப்பாடல் காட்டுகிறது.

அழகான தலைவி அவள்; பொன்னாலான நகைகள் அணிந்திருக்கிறாள். அந்த நகைகளுடனேயே நீராடுகிறாள். அந்த நீர்நிலையின் கரையில் உயரமான மருதமரம் இருக்கிறது. தலைவி அந்த மருத மரத்தில் ஏறி அதன் உச்சியிலிருந்து நீரில் பாய்ந்து நீராடினாள். அவள் அணிந்துள்ள நகைகள் ஒளி வீசுகின்றன.அப்படி அவள் பாயும்போது அவள் கூந்தல் பறக்கிறது. அது வானத்திலிருந்து கீழே இறங்கும் மயிலின் தோகை போன்று அழகாக இருந்தது எனத் தலைவன் வருணித்துக் கூறுகிறான்.

மகளிர் கூந்தலை, “மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்ன இவள், ஒலிமென் கூந்தல்” என்று மயிலின் தோகைக்கு உவமையாகக் குறுந்தொகை [225]யும் காட்டுகிறது. இது புனலாட்டுப்பத்தின் நான்காம் பாடலாகும்.

”விசும்புஇழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறுங் கதுப்பே”

தலைவியுடன் அவன் புனலாடினான் எனக் கேள்விப்பட்ட அவனுடைய காதற்பரத்தை அவனிடம் ஊடல் கொண்டாள். பிற்பாடு புதுப்புனல் வந்தது. இப்பொழுது அவனுடன் அதில் ஆட ஆசை எழுந்தது. அவள் அவனை அழைக்கிறாள். “தலைவனே! நீ என்னுடன் புனலாட வருக; என் தோளைத் தெப்பமாகக் கருதி ஆடுவதற்கு உடன் வருக; இதோ இந்தப் புதுப்புனல் எப்படி வருகிறது தெரியுமா? விரைந்து செல்லக்கூடைய குதிரைகளை உடைய சோழ மன்னன் கிள்ளியின் யானைப் படை எப்படிப் பகைவரின் மதிலை அழிக்க விரைந்து செல்லுமோ அது போல இது வருகிறது. நீ ஆட வருக” என்றழைக்கிறாள்.

அகத்துறையில் நீராடும்போது கூட மன்னனது குதிரை மற்றும் யானையின் வீரத்தை உவமையாகக் காட்டும் புறச்செய்தியைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது புனலாட்டுப்பத்தின் எட்டாவது பாடலாகும்.

”கதிர்இலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறைஅழி புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புணையே.

இவ்வாறு அகத்துறையில் நீர்விளையாட்டான புனலாடல் பெரும்பங்கு வகித்துள்ளது என்பதை இலக்கியம் வழி நாம் உணர முடிகிறது.

புரிதல்

வளவ. துரையன்

குமாருக்கு எப்பொழுதும் மருத்துவமனையின் வாடையே பிடிக்காது. அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். காலை மணி எட்டு இருக்கும். நோயாளிகளுக்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு வருபவர்களும் வாங்கச் செல்பவர்களும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர். குமாரின் அண்ணன் கோபுவும் அதற்குத்தான் போயிருந்தார். குமார் சன்னல் வழியே பார்த்தான். உள்ளே அம்மா கட்டிலில் படுத்திருந்தார். அப்பா பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

நேற்று காலை கோபுதான் தஞ்சாவூரிலிருந்து அலைபேசியில் பேசினார். “அம்மா முதுகு ரொம்ப வலிக்குதுன்னு சொல்றா. டாக்டர்கிட்டப் போய்க் கட்டினேன். எக்ஸ்ரே எடுத்துப் பாத்ததில முதுகுத் தண்டுவடத்துல ஏதோ பாதிப்போம். படுத்துக்கிட்டே இருந்தா கொஞ்சநாள்ல சரியாப் போயிடுமாம், இங்கியே தஞ்சாவூர்லக் கோபால் மருத்துவமனையிலதான் சேத்து இருக்கேன்”

கேட்டவுடன் குமார் புறப்பட்டு வந்தான். கும்பகோணத்திலிருந்து வர இரண்டு மணி நேரமாகிவிட்டது. வந்ததுமே மருத்துவமனை என்று கூடப் பார்க்காமல் அண்ணி பொரிந்து தள்ளிவிட்டாள். “இதுக்குதான் நான் இங்கக் கூப்பிட்டுக்கிட்டே வர்றதில்ல. இப்ப பாருங்க; இங்க வந்தாதான் அவங்களுக்கு ஏதாவது ஆயிடுது. அடுத்த வாரம் என் பொண்ணு பிரசவத்துக்கு வரா. நான் என்ன செய்யறது? சொல்லுங்க” இனி நான் இங்கே வைத்துக் கொள்ள முடியாது என்பதை மறைமுகமாகச் சொல்வது குமாருக்குப் புரிந்து விட்டது. அண்ணாவும் கேட்டுக்கொண்டு சும்மாதான் இருந்தார்.

குமாரால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை. “நான்தான வச்சுக்கிட்டு இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் முக்கியமான கல்யாணம்னு குடும்பத்தோடப் பாண்டிக்குப் போறோம்னுதான் இங்கப் போன வாரம் அனுப்பி வச்சோம். முந்தா நேத்திக்குதான் வந்தோம். இப்பப் பாருங்க நேத்திக்குக் காலைலயிலதான் உமா தோட்டத்துக்குப் போகும்போது கீழே உழுந்து தசை பிசகிப் போய்க் கட்டு போட்டுக்கிட்டு இருக்கா. இன்னும் முப்பது நாளாகும் கட்டுப் பிரிக்க; எங்களயும் புரிஞ்சிக்குங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அண்ணி “அதெல்லாம் எனக்குத் தெரியாது; ஒங்க அண்ணா வெளியில போயிடுவாரு நான்தான் லோல்படணும் புரிஞ்சிக்குங்க’ இங்க இனிமே நான் வச்சுக்க முடியாது” என்று கூறினாள். “என்னை ஆரம்பகாலத்துல எப்படியெல்லாம் படுத்தி வச்சாங்க”ன்னு அவள் நினைத்தாள்

அவர்கள் மொத்தம் மூன்று பேர். பெரியவர் கோபு; அடுத்தவன் கோயம்புத்தூரில் வக்கீலாக இருக்கும் நடராஜன். கடைசியில் குமார். நடராஜன் இப்பொழுது கோவையிலிருந்து வந்துகொண்டிருந்தான். நேற்று இரவு கோபுவும் அண்ணியும் வீட்டுக்குப் போய் விட அப்பாவும் குமாரும் மட்டும் மருத்துவமனையில் இருந்தனர். காலையில் அண்ணா வந்தவர் இப்பொழுது கடைக்குப் போயிருக்கிறார்.

கோபு வரும்போதே, ”நடராஜன் வந்துட்டானா” என்று கேட்டுக்கொண்டே வந்தார். “இல்லண்ணே; பஸ் ஸ்டாண்டுல எறங்கிட்டானாம். டவுன் பஸ்ல வந்துக்கிட்டிருக்கான்” என்றான் குமார். கோபு உள்ளே சென்று சிற்றுண்டிப் பொட்டங்களைக் கொடுத்து அம்மாவையும் அப்பாவையும் சாப்பிடச் சொல்லிவிட்டு வந்தார். உட்கார்ந்தவர், “என்னா செய்யறதுன்னே புரியல. எனக்கோ வருஷக் கடைசி; லீவே தரமாட்டேன்றான். ஒனக்குப் பள்ளிக்கூடம் இல்லாதது இப்ப நல்லதாப் போச்சு” “பள்ளிக்கூடம் இல்லாட்டாலும் நாங்க யாராவது ரெண்டு பேரு மாத்தி மாத்திப் போயிட்டுதான் வரணும்ணா” என்ற குமாருக்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.

நடராஜன் வந்ததுமே ”இப்ப எப்படி இருக்கா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான். இருவரும் எழுந்து உள்ளே சென்றார்கள். அப்பாவும் அம்மாவும் இட்லிகளைத் தின்றுகொண்டிருந்தனர். ”எப்படிம்மா இருக்க?” என்று கேட்டான் நடராஜன். “வலிதாண்டா இருக்கு; ஒக்காறவே முடியல. டாக்டரு படுத்துக்கிட்டே இருக்கணும்னு சொல்லிட்டாரு” என்று சொன்னவர் குமாரைப் பார்த்து, இதோ ரெண்டு பொட்டலம் இருக்கு; நீயும் இவனும் சாப்பிடுங்க” என்றார்.

”நான் சாப்பிட்டுட்டே வந்துட்டேன்; நீ சாப்பிடுடா” என்றான் நடராஜன். குமார் பொட்டலத்தைப் பிரித்தான். “அதுக்குள்ள நான் போயி டாக்டரைப் பாத்துட்டு வரேன்” எனக் கூறி நடராஜன் கிளம்பினான். ”நானும் வரேண்டா” என்ற கோபுவைத் தடுத்து, “வேணாம்ணா; நான் வக்கீலுன்னு சொல்லிப் பாக்கறேன்” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் சென்றான்.

நடராஜன் சற்றுத்தள்ளி வெளியே வந்தவன், அலைபேசியில் மனைவி விமலாவிடம் பேசினான். அவள் தெளிவாகச் சொல்லிவிட்டாள். “நான் சொல்றதைக் கேளுங்க; நம்ம நெலமையைப் புரிஞ்சுக்குங்க; படுக்கையிலியே வச்சு இங்க என்னால செய்ய முடியாது. நான் வேற சி.ஏக்குப் படிக்கறேன். அத்தோட அவங்க ரெண்டு பேரும் புள்ளயப் படிக்கவிடாம டி.வி பாத்துக்கிட்டே இருப்பாங்க, இன்னும் இருபது நாள்ல எங்கப்பாவுக்கு அறுபதாம் கலியாணம் நடக்க இருக்கிறது தெரியும்ல, நான் அடிக்கடி அங்கப் போக வேண்டி இருக்கும்; ஒங்கத் தலையிலக் கட்டிடப்போறாங்க; எதாவது சாக்கு சொல்லிட்டு வாங்க”

”அன்னிக்கு என் கல்யாணத்துல வெள்ளி வெளக்கு ரெண்டு இன்ச் கொறைவா இருக்குன்னு என்னா ஆட்டம் ஆடினாங்க; இவங்கள வச்சு நான் செய்யணுமா?” என்று விமலா சொல்லவில்லையே தவிர மனத்துள் நினைத்துக் கொண்டாள். தலைமை மருத்துவரையே போய்ப் பார்த்தான். “படுக்கையிலியே இருக்கணும்றது இல்ல; அதெல்லாம் நடக்கலாம் சார். ஆனா அவங்க கோஆப்பரேட் செய்ய மாட்டறாங்க; இன்னும் மூணு நாள்ள அனுப்பிடுவோம்; மத்தபடி நல்லாதான் இருக்காங்க” என்றார் அவர்.

நடராஜன் அறையில் நுழையும்போது அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தியது என்னவோ போல இருந்தது. ”என்னாடா சொன்னாரு” அப்பா கேட்டார். “டாக்டரு கொஞ்சம் நடக்கலாம்னு சொன்னார்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அம்மா “எனக்குதான் நடந்தா வலிக்குதே” என்று கோபமாகச் சொன்னாள். “அப்பறம் இன்னும் மூணு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம்னு சொன்னாரு” என்றான் நடராஜன். அம்மா ”எந்த வீட்டுக்கு” என்று கேலியாகக் கேட்டாள்.

உடனேயே நடராஜன், “கோயம்புத்தூருக்குப் போக முடியாது. என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்குங்க; விமலாவுக்கே இடுப்பு வலின்னு அடிக்கடி படுத்துக்கறா. அவ சி.ஏக்குப் படிக்கறா. எனக்குக் கோர்ட்ல வேல சரியா இருக்கு” என்றான். “வேற என்னாடா செய்யலாம்” என்றார் கோபு. அதற்குள் அப்பா, “மூணு பேரும் சொல்றக் காரணங்கள் நல்லாவே புரியுது. கடைசிலவன் பொண்டாட்டிக்குக் கால்ல கட்டு. நடுலவன் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி. பெரியவன் பொண்டாட்டி நேராவே முடியாதுன்னுட்டா” என்றார்.

“நாங்க என்னா சும்மாவா சொல்றோம்; கொஞ்சம் புரிஞ்சுக்குங்கப்பா” என்றான் குமார்.சற்று நேரம் யாரும் பேசவே இல்லை. மின்விசிறி சுழலும் சத்தம் மட்டும் கேட்டது. “நீங்கதாண்ணா முடிவெடுக்கணும்” என்றான் நடராஜன். கோபு சன்னல் வழியாய் வெளியே பார்த்தான். ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து யாரையோ தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். பூனை ஒன்று வேகமாய் ஓடியது. ”அதான் எனக்கும் புரியல” என்றார் கோபு.

பட்டென்று அம்மா சொன்னார். ”எனக்கு ஒண்ணு புரியுது. அப்படிச்செய்யலாம் ஆனா கொஞ்சம் காசு செலவாகும் பரவாயில்லியா”

”காசைப்பத்தி என்னம்மா? நீ சொல்லம்மா” என்றார் கோபு. “ஆமாம்மா, பணமா முக்கியம்; எதானாலும் நீ சொல்லும்மா” என்றான் நடராஜனும். அப்பா அம்மாவைப் பார்த்தார். இருவரும் கண்களால் பேசிக்கொள்வதைப் போல இருந்தது.

அம்மா சொன்னார். “இப்ப எல்லாருக்கும் இருக்கற நெலமை எனக்கு நல்லாவே புரியுது. ஒங்களுக்கும் புரியுது. இத்தனை வருஷம் ஆகியும் நான் புரிஞ்சுக்கலன்னா நான் மனுஷியே இல்ல. அதால நான் ஒண்ணு சொல்றேன். இங்கியே ஒரு வீடு பாருங்க; நானும் அப்பாவும் இருந்திடறோம். என்னைப் பாத்துக்க நர்ஸ் மாதிரி ஒரு ஆளப் போட்டுடுங்க; பக்கத்துல இருக்கற ஓட்டல்ல இருந்து நர்ஸுக்கும் சேத்து மூணு வேளைக்கும் காப்பி சாப்பாடு எல்லாம் சொல்லிடுங்க. செலவ மூணு பேரும் பிரிச்சுக்குங்க.”

மூன்று மகன்களின் முகங்களும் இறுக்கமாக இருந்தன.”நாம சொல்ல வேண்டியத அம்மாவே புரிஞ்சுக்கட்டு சொல்லிட்டாங்களே” என்ற திருப்தியும் இருந்தது.