விஜயகுமார்

பெருங்கவிதை

விஜயகுமார் 

பேருண்மை தான் வேண்டுமா
வெறும் உண்மை வேலைக்காகாதோ

பெரும் தவிப்போ
அதுதான் செல்லுபடியாகுமோ

எப்படி பார்த்தாலும் அழகி தானே பக்கத்தில் இருப்பவள்
பேரழகி எல்லாம் புனைவுதானே

சரி விசயத்திற்கு வருகிறேன்

பெரும் புரட்சி என்றும் நடவாது
வேண்டுமென்றால் சின்ன புரட்சி
முயற்சித்துப் பார்க்கலாமே

ஏனென்றால்
பேரழிவும் அழிவும் அளவில் ஒன்றுதான்.

பேராண்மை பற்றி கேட்காதீர்கள்
எனக்கு பெரும் சிரிப்பு வந்துவிடும்

பெருங்கருணை பெரும்படை கொண்டதுதானே
நாங்கள் வேண்டுவதெல்லாம் வெறுங்கருணை மட்டுமே

உயிர் இருக்கிறது
பேருயிர் கண்டதில்லை

தாய்க்கு மட்டும்தான் இழப்பு
பிறருக்கு என்னவோ பேரிழப்பு

பெருங்காதல் பெருந்தாபம்
பேராற்றல் பெருங்கொடை பெருவீரம்
எல்லாம் வெறும் காகிதத்தில் எழுதியவையோ

சரி சரி போனால் போகட்டும்
வைத்துக் கொள்வோம்,
அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று எழுத்துதானே
ஒன்றும் குறையில்லை.

 

 

நாயிற்கடையேன்

விஜயகுமார்

1

இதோ இப்போது நான் ஒரு கொலை செய்தாக வேண்டும். கொலை என்றவுடன் மனிதக் கொலை என்று எண்ணிவிட வேண்டாம். இது நாய்க் கொலை. ஒரு நாயை போட்டுத்தள்ள வேண்டும்.

இந்த எண்ணம் முதலில் எழும் போது வெறும் சாத்தியமாக மட்டுமே இருந்தது. இப்போது அது உருண்டு திரண்டு ஒரு முடிவாக மாறியுள்ளது. எப்படி கொல்லலாம்? அதிக வன்முறை எனக்கு ஆகாது. அளவான வன்முறை ஆனால் காரியம் ஆகியிருக்க வேண்டும். அதனால் கல், கத்தி, கடப்பாரை லிஸ்டில் இல்லை. விஷம் வைக்கலாம் அல்லது சுருக்கு விடலாம். அந்த நாய்க்கு இருக்கும் வெறியை கணக்கில் கொண்டால் அதுவாக வந்து சுருக்கு மாட்டிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்லை. நாயை மட்டை செய்ய எவ்வளவு கேட்பார்கள்? முதலில் என்னிடம் எவ்வளவு இருக்கிறது? பேசாமல் ஒரு வளர்ந்து வரும் ரவுடியை அணுகலாமா? ஹ்ம்ம்.. எல்லை மீறி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்படியே கொலை செய்துவிட்டால் என்றாலும்கூட சடலத்தை எப்படி மறைப்பது. கார்ப்பரேஷன்க்காரன் கணக்கு வைத்து இருப்பானோ? சடலத்தைப் பல துண்டுகளாக்கி திசைக்கு ஒன்றாக கொண்டு வீசி விட்டால்? அல்லது கொன்றார் பாவம் தின்றால் போச்சு என்பார்கள், நாய்க்கறி எப்படி இருக்கும்? ஒருமுறை சிறுமுகை காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த மான் கறியை சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மொறு மொறுவென்று இருக்கும். ஆட்டுக்கறி அத்துப்படி. அதன் மார்க்கண்டன் சாப்பிட்டால் மார்க்கண்டேயன்.

நாய் க் கொலையை பற்றி மட்டுமே சுற்றி சுற்றி யோசித்துக்கொண்டு இருந்தால் ஏதாவது வழி பிறக்கும். இக்கொலைக்கான காரணங்களே இனி தேவையில்லை. இதைப் பற்றி சிந்திப்பதில் இவ்வளவு சக்தியை வீனடித்துள்ளேன் இனி காரணம் ஒரு கேடா?

தெளிவாய் பார்த்தால் ஒன்று புலப்படும். அதிகம் சிந்திப்பவன் செயல் புரிவதில்லை. செயல்படும்போதே சிந்திப்பவன் மட்டும்தான் செயலைக் கடக்கிறான். சும்மா சிந்திப்பவன் கற்பனையின் மூலமாகவே அந்நிகழ்வை ஆயிரம் முறை நடத்தி பார்த்திருப்பான். அந்தக் கற்பனையே அச்செயலுக்கு நிகரான அகநிறைவு தந்துவிடுகிறது.

இனி சிந்திப்பது வீன். ஆகவே அர்ஜுனா கொலை புரிவாயாக.

2

சமீபமாகத் தான் இந்த வீட்டை சம்பாதித்தேன். சொந்த வீடு. ஓன் ஹவுஸ். வாழ்வில் முதல் முறையாக எனக்கே எனக்கான இடம். எனக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. நான் ஆட்சி செய்யும் ஸ்தலம். அனைத்து பிரத்தியங்கமும் உணர்ந்த பிரத்தியட்ச உண்மை. இந்த வீட்டுக்காக காதல், உத்தியோகம் என்று பலவற்றை இழந்து உள்ளேன்; பல நாட்கள் பசியில் திரிந்துள்ளேன் என்றாலும் அதன் துயர் இப்போது இல்லை. மொத்தமும் மூன்று அறைகள் மட்டுமே உள்ள இந்த வீடு ஒண்டிக் குடித்தனம் வகைமையில் வரும். என்றாலும் எனக்கு இது மாளிகை. இது வந்த பின்பு தான் நடையில் மிடுக்கு உடலில் நிமிர்வு பேச்சில் தீர்க்கம் வந்து சேர்ந்தது. தீர்க்கம் என்றால் நான் இங்கே இருக்கிறேன் என்னை பொருட்படுத்துங்கள் என்பதுபோல. குத்துவிளக்கு வாங்கியதிலிருந்து சாமி கும்பிடுகிறேன். சாமி கும்பிடுவதால் என்னவோ வீட்டுக்கு வெளியே திருஷ்டி பொம்மை வைத்துள்ளேன். புதிதாக பல வெள்ளை நிற சட்டை வாங்கியுள்ளேன். வெள்ளை நிறத்தில் இவ்வளவு வகைகள் உள்ளது என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். என்னை அடையாளப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் வம்பாடு பட்டாவது வாங்கிவிடவெண்டும். ஒரே விலாசத்தில். இந்த விலாசத்தில். ஏனென்றால் நான் இப்போது ஒரு புள்ளி. சமூகத்தின் ஆள். இங்கே பெரும்புள்ளிகள் பல இருந்தாலும் நானும் ஒரு புள்ளி. இப்போது நான் ஏதாவது ஒரு அசோசியேஷனில் சேரலாம். சேர்ந்த இடத்தில் கருத்து தெரிவிக்கலாம். யாரிடமாவது தைரியமாக கடன் வாங்கலாம். முக்கியமாக எவ்விடத்திலும் அமர்ந்து பேசலாம். இது அனைத்தையும் நான் வீட்டோடு சேர்த்து சம்பாதித்தது. இவ்வுணர்வு எனக்கு பிடித்துள்ளது ஆகையால் இது எதையும் நான் இழந்துவிடக்கூடாது. இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் வந்ததிலிருந்து பயம் ஒட்டிக்கொண்டது. யாராவது பிடுங்கிக் கொண்டால்; ஆக்கிரமித்துக் கொண்டால்; உனது கிடையாது போடா என்று விட்டால்? விடப்போவதில்லை விடவே போவதில்லை. எனது அனைத்து சக்தியையும் திரட்டி போராடுவேன் அந்த கொடூரனை அந்த அரக்கனை எதிர்த்து போராடுவேன். இது நான் உருவாக்கியது என்னுடையது. அவனை சும்மா விட மாட்டேன். அவனை முற்றொழித்து என் வீட்டை மீட்டெடுப்பேன். கோர்ட்டுக்கு செல்வேன்; அரசியல் தலைவர்களை நாடுவேன்; ஊடகத்திற்கு செல்வேன்; வீதிக்கு வருவேன்; மக்களைத் திரட்டுவேன். அறம் உள்ளோர் அனைவரும் எனக்காக போராடுவார்கள்.

அன்று அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது தான் கவனித்தேன் அந்த நாயை முன் வாசலில் கட்டிப் போட்டு வைத்திருந்தான் அந்த முதல் வீட்டுக்காரன். அதை பார்த்த மாத்திரத்திலேயே திடுக்கிட்டு நின்றேன். எனக்கு மூச்சடைத்து. ஆங்காங்கே வெண்புள்ளிகளுடன் கன்னங்கரேல் என்ற நாய். அந்த வெண்புள்ளிகள் ஏதோ ஒரு தேமல் போல் இருந்தது. எனக்கு பயத்தால் நெஞ்சம் படபடக்க உடல் அதை ஏற்று லேசாக கிடுகிடுவென்று ஆடியது. காம்பவுண்ட் சுவரை ஒட்டியவாறு மெல்லிய நடை எடுத்து வைத்தேன். என் பயத்தை மோப்பம் பிடித்த நாய் சட்டென்று எழும்பி வல்வல் என்று ஆரவாரத்துடன் என் மேல் பாய முற்பட்டது. அதை கட்டி வைத்த சங்கிலி என்னை காப்பாற்றியது. நான் விழுந்தடித்து எகிறி என் வாசல் அருகே வந்து நின்றேன். அது என்னை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. மடமடவென்று கதவைத்திறந்து உள்ளே பாய்ந்து ஓடினேன். உள்ளே வந்து நெஞ்சு படபடப்பு நின்றபாடில்லை. வெகுநேரம் அன்று அது குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் ஒருவாராக அமுங்கிய போது என் நெஞ்சு சத்தமும் நின்றது. தைரியலட்சுமி வேண்டிக் கொண்டு கதவை ஓசையில்லாமல் திறந்து லேசாக எட்டிப் பார்த்தேன். அது முழு விறைப்புடன் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றது. என் தலை தட்டுப்பட்டதும் மீண்டும் குரைக்க ஆரம்பித்தது. நான் மீண்டும் பொந்து பதுங்கினேன்.

சற்றும் எதிர்பார்க்காத எதிரி. இதற்கான உருப்படியான மறுமொழி என்று என்னிடம் ஏதுமில்லை. என் உள்ளத்தில் அனைத்து விதமான எதிரிகளுக்கும் அவர்களுக்கு உண்டான மறுமொழியையும் செயல் திட்டத்தையும் நான் ஏற்கனவே வகுத்து வைத்திருந்தேன். இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு அப்படிப்பட்டவர்களுக்கு அவ்வாறு என்று. ஆனால் இதுவோ நான் சற்றும் எதிர்பார்க்காதது. நான் வாயடைத்து மனமடைத்துப் போயிருந்தேன். உள்ளத்தில் இறுதியில் குழப்பமே மிஞ்சியது. சரி அதன் எஜமானனை கூப்பிட்டு பேசியே ஆகவேண்டும். அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அவனை முன்பின் நான் பார்த்ததே இல்லை.

நினைக்கையில் பதற்றமாகவும் மலைப்பாகவும் உள்ளது. கொஞ்சம் நெளிவு சுளிவுடன் நடந்துகொண்டால் இவையனைத்தையும் தவிர்க்கலாம். இழப்பதற்கு ஒன்றுமில்லாத போது கருத்து பேசினேன் கை ஓங்கின்னேன். இப்போது வீடு உள்ளது. பையில் கணம் உள்ளது. சூதானமாகத்தான் இருக்கவேண்டும். நான் வரித்துவைத்திருந்த எதிரி வெளுத்த உடல்க்காரன். பணம் படை அதிகாரம் உள்ளவன். அதாவது நான் எதிர்த்து புரட்சி செய்யும் லட்சிய எதிரி.

இரண்டே வீடுள்ள அந்த குறுகிய காம்பவுண்டில் இரண்டாவது வீடு என்னுடையது. முதல் வீட்டு வாசற்படியில் என்னை மறிக்கும் இந்த நாயைக் கட்டிப்பொட்டுள்ளான் உள்ளே உள்ள அந்த நாய். நான் இந்த வீட்டை வாங்கி குடி புகுந்து ஒரு மாதமாகிறது. ஆனால் இந்த ஒரு வாரமாகத்தான் இந்த பிரச்சனை. இதற்கு முன் அந்த நாய் கொல்லைப்புறமாக கட்டியிருந்தது என்பதை நான் அறிவேன். ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ள காம்பவுண்டை முழுதும் மறித்து நிற்கும். சைக்கிளை கேடயம் போல் தடுத்து உள்ளே சென்று விடுவேன் என்றாலும் பெடல் மற்றும் ஹேண்டில் பாரை மென்று சக்கை செய்துவிடும். அன்று என் நல்ல கால் சட்டையை அரை நிஜாராக்கியது. இதற்கு பயந்தே சைக்கிளை வெளியே நிறுத்தி பூட்டிவிட்டு அடுத்த தெருவை சுற்றி வந்து காம்பவுண்டை ஏறி குதித்து உள்ளே வரவேண்டும். சைக்கிளையும் கால் சட்டயையும் இந்த நாய்க்கு காவு கொடுக்க என்னால் முடியாது.

அடுத்து வந்த அநேக நாட்களில் அந்த நாய் முன் வாசலிலேயே நின்றது. அதனால் நான் காம்பவுண்ட் சுவரை குதிப்பது லாவக தேர்ச்சி அடைந்திருந்தேன். ஒரு அதிசய அதிகாலையில் அந்த நாய் முன் வாசலில் காணவில்லை. உடனே சென்று அந்த முதல் வீட்டின் கதவை தட்டினேன். அந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து நாயின் சத்தம் கேட்டது. யாரும் கதவை திறக்காதது மேலும் எரிச்சலூட்டியது. கதவை ஓங்கி ஓங்கி உடைப்பது போல் தட்டினேன். எங்கிருந்தோ என் எண்ணத்திரையில் எனது லட்சிய எதிரியின் உருவம் நிழலாடியது. என் நெஞ்சம் சட்டென்று துணுக்குற்ற போது அந்த கதவு மெலிதாக திறந்தது. உள்ளிருந்து ஒரு நோஞ்சான் ஆசாமி வந்து எட்டிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு வீர லட்சுமியின் அருள் இருப்பது தெரிந்தது.

அவன் தூக்கம் தடைபட்டு மயக்கத்தில் இருப்பது போல் இருந்தான். நான் எடுத்த எடுப்பிலேயே, “ஏன்பா உனக்கு அறிவு மயிரே இல்லையா?” என்றேன்.

அவன் இன்னும் குழப்பமாக வெளியே வந்து நின்று கண்களை இடுக்கிக்கொண்டு கதவின் விளிம்பை தாங்கலாக பிடித்து “யாரு” என்று கேட்டான். பல நாட்களாக சவரம் செய்யாத முகத்தில் மூக்கு மட்டுமே இருப்பதுபோல் இருந்தது.

“இப்படி வாசலிலேயே நாய கட்டிப் போட்டா நாங்க எல்லாம் எப்படி அத தாண்டி போறதுங்குற அறிவு இல்லையா?”

“ஓ! நீங்கதான் அந்த பக்கத்து வீட்டுக்கு வந்தவரா”

நான் மல்லுக்கு நிற்பதையே அவன் இன்னும் உள்வாங்கவில்லை, “இங்க பாருடா அடுத்த தடவ உன் நாய இங்க வெளியே பாத்தன்னா அப்புறம் நடக்குறதே வேற”

“கொஞ்சம் மரியாதையா பேசு” அவனும் தயாராகிவிட்டான்.

“முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா”

“அடா புடான்னா, நான் நாய அவுத்து விட்டுருவேன் பாத்துக்கோ”

“அடிச்சேன்னா மீசை பிச்சிக்கிட்டு போயிடும் ஆமா” அவன் நோஞ்சான் என்பதால் நான் வீரனாய் இருந்தேன்.

“இங்க பாரு எனக்கு யாரோடும் சண்டை போடுற சக்தி இல்லை. நீ பெரிய பலசாலின்னா அதோடவே சண்டை போட்டுக்கோ.” என்றுவிட்டு என் மறுமொழியை கேட்காமலேயே உள்ளே செல்ல எத்தனித்தான்.

நான்,”உன்னையும் அதையும் கார்ப்பரேஷன்க்காரன் அள்ளிட்டு போற மாதிரி செய்யறேன்னா இல்லையான்னு பாருடா”

அவன் கதவை சாத்தியம் சாத்தாமலும் இடுப்பை பிடித்தவாறு கூன் முதுகுடன் உள்ளே சென்றான்.

நான் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியவாறு வெளியே நடையைக் கட்டினேன்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்திரிக்காரன். “சார், அவன்கிட்ட வெச்சுக்காதீங்க. அவன் மெண்டலு. நாள்பூரா வருசம்பூரா வஞ்சிக்கிட்டே கிடப்பான். நிம்மதியாவே விடமாட்டான். நாங்க யாரும் அவன்கிட்ட வச்சிக்கிறது இல்ல. நிம்மதியாவே விடமாட்டான். இவனமாரி ஆள கம்ளைண்டும் பண்ண முடியாது. எடுத்துக்க மாட்டானுங்க.” என்றான்.

“ஏன்?”

“அதான் சொன்னேனே மெண்டலு”

3
“என்ன பண்ணட்டும்ன்னு நீயே சொல்லு.” சுரேஷிடம் கேட்டேன். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறான். நானும் அவனும் சோற்றுக்கு கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே நண்பர்கள். பசியுடன் சாலையில் ஒன்றாக அலைந்திருக்கிறோம். என் பசி அறிந்தவன். எனக்கும் அவனுக்கும் பொதுவில் இருப்பது பசி ஒன்றுதான். எந்தக் கருத்தும் ஒத்துப் போகாது. என்றாலும் நண்பர்கள். சந்தித்தால் சாப்பிடுவோம். பசித்தால் சந்திப்போம். பசி பொதுக்காரணம், சாப்பாடு பொதுக்காரியம். இப்போதெல்லாம் காரணமே இல்லையென்றாலும் காரியம் நிகழ்த்த செல்வோம்.

அவன்,”இதுவரைக்கும் என்ன ஒரு நாய் தொறத்துன நியாபகமே இல்லை” என்றான்.

“அந்த நாய்க்கு அப்படி ஒரு ஆக்ரோஷம். நான் அதுகிட்ட புடிங்கிக்கவோ அது என்கிட்டே இருந்து காப்பாத்திக்கவோ அதுகிட்ட அப்படி என்ன இருக்கு.”

“பக்கத்து தெருவுல நெறய பணக்காரனுங்க நாயா வெளிக்கு கூட்டி வருவானுங்க. அதுவெல்லாம் நல்ல கொளுக்குமுள்ளுக்குன்னு அமைதியா இருக்கும்” என்றான்.
நான், “அத சும்மா விட்டு வைக்கக்கூடாது. என் சொந்த வீட்டுக்கு பயந்து பயந்து போக முடியாது. அந்த நாயா கொல்றனோ இல்லையோ அந்த வீட்டுக்காரன போட்டுத்தள்ளனும்.”

நான் சொல்வதை அவன் உள்வாங்கினானா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. அவன் வேறெங்கோ பார்த்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருந்தான்.

“டேய், நான் சொல்றத கேக்குறியா இல்லையா?” என்று கேட்டேன்.

“சொல்லப்போனா ஆர்டிபிசியல் செலெக்ஷன்ல நாய் மனுசனோட சேர்ந்துதான் பரிணாமம் அடைஞ்சது. மனுஷனும் கொஞ்சம் மாறித்தான் இருக்கான்.”

“என்ன!!!, நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற”

“அது இல்லடா. நான் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்”

“நான், இன்னும் ஒரு வாரம் பாப்பேன். அப்புறம் சத்தமில்லாம சோலிய முடிக்கவேண்டியதுதான்.” நான் எனக்கே சொல்லி தீர்மானித்துக்கொண்டேன்.

“சினவுக் கொள் ஞமலி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

நான் “என்ன!!” என்று எரிச்சலுடன் கேட்டேன்

“அது இல்லடா, சும்மா யோசிச்சேன். சங்க இலக்கியத்துல நாய ஞமலி, ஞாளி அப்படின்னு சொல்றாங்க. பக்தி இலக்கியத்துல ஆஊன்னா ‘நான் ஒரு நாயிற்கடையன்’ அப்படின்னு சொல்லிக்கிறானுங்க. உண்மைதான் போல” என்றான்.

நான் கோபமாக எழுந்து கிளம்பினேன்.

“டேய் சாரிடா. நில்லு… நில்லுகிறேன்னுல்ல..”

“பின்ன என்னடா. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.”

“சரி அத கொல்றதுதான் ஒரே வழிய?”

“பின்ன என்ன செய்ய சொல்ற?”

நான் உணர்ச்சி வேகத்தில் கத்தும் போதெல்லாம் சுரேஷ் அமைதிக்கு செல்வான். நானும் அடங்கினேன். இருவருமே கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை.

“அதுக்கு இல்லடா.. எதையுமே முதல்ல பகையா பார்க்கக் கூடாது” என்றான்.

“அதுக்காக கடிக்க வர்ற நாய புடிசிச்சு முத்தங்கொஞ்ச முடியாது” மீண்டும் கத்தினேன்.

“சரி நாளைக்கு நான் வர்றேன். வந்து பாக்குறேன்”

“இரு, அந்த நாய்ட்ட உன்ன புடிச்சு தர்றேன். நீ அப்ப பேசு.”

அவன் சிரிக்க நானும் சிரித்தேன். என்னை ஆறுதல் படுத்த கலப்புக்கடைக்கு கூட்டி சென்றான். முதலில் ஆளுக்கு ஆறு இட்டிலி அடுக்கினோம். அப்புறம் இன்னுமொரு ஆறு. அடுத்த ஆறு அவன் தனியாக சென்றான். அவனே காசு கொடுத்தான். சந்தோசமாக இருந்தது. சந்தோஷமோ துக்கமோ சாப்பிடுவோம்.

4

அடுத்தநாள் சுரேஷை வீட்டிற்கு கூட்டிப் போனேன். தூரத்திலிருந்து பார்த்தான். அது அமைதியாக படுத்திருந்தது.

“போட்டாட்ட படுத்து கெடக்கு..”

“என்ன?”

“பசு மாதிரி படுத்து கெடக்குதுன்னு சொன்னேன்”

“பூரா.. நடிப்புடா.. எங்க பக்கத்துல போ பாப்போம்”

“டேய், நான் புஸ்தகம் படிக்கிறவன் கருத்து மட்டும்தான் சொல்வேன். நீ தான் மீதி எல்லாம் பண்ணிக்கோணும்”

நான் ஒரு சிறிய கல்லை எடுத்து அதன் மீது போட்டேன். அது அசைவேதும் இல்லாமல் இருந்தது. “உஸ்… உஸ்…” சோகையாக நிமிர்ந்து பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டது. சுரேஷ் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்லுவான் என்று எனக்கு தெரியும்.

அவன்,”இங்க பாரு.. யாரு கிட்டயும்னாலும் எதுனாலும் ஒரு நட்பு வேணும். அதுக்கு ரெண்டு பேர்கிட்ட இருக்க பொது விஷயத்திலிருந்து ஆரம்பிக்கணும். உன் எதிரிக்கும் உனக்கும் ஒரு பொது காரணம் பொது ஆர்வம் இருக்கும். அந்த பொது ஆர்வத்திலிருந்து ஆரம்பிக்கணும். எடுத்த எடுப்பிலேயே சண்டைக்கு நிக்கக் கூடாது.”

“உன்கிட்ட இருக்குற ஒரே ஃபிலாசபி இது தான்.”

“வேலை செய்யுதான்னு பாருடா” என்றான்.

ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். “

“சரி வா பீஃப் பிரியாணி சாப்பிடலாம். பக்கத்துல இருக்குற ரோட்டு கடை நல்லா இருக்கும்” அவனே கூட்டி சென்றான். பிளேட்டு முப்பது ரூபாய். தொன்னூறு ரூபாய்க்கு ஆர்டர் செய்தோம். இருவரும் சேர்ந்து எழுவது ரூபாய்க்கு போஜனம் செய்தோம். மீதமான இருவது ரூபாயை பார்சல் கட்டி வாங்கிக்கொண்டான் சுரேஷ்.

போகும் வழியில். “இந்தா இத அந்த நாய்க்கு போட்டிரு” என்றான்.

நான் முறைத்துவிட்டு சொன்னேன், “நீ எப்படி என்னை ஃபிரெண்டு புடிச்சியோ அதே மாதிரி நான் அந்த நாய ஃபிரெண்டு புடிக்கணும். அதுதான? ஏன்டா இந்த ரேஞ்சுக்கு என்ன கொண்டு வந்துட்ட.”

“சொல்றதைக் கேளு..இத நாய்க்கு போட்டிரு..”

அதை வாங்கிக்கொண்டு,”சரி இதுல கலக்குறதுக்கு விஷம்?” என்றேன்.

நான் சிரிக்க அவனும் சிரித்தான்.

“பொதுவான விசயத்துல இருந்து ஆரம்பி டா. உனக்கும் பிரியாணி புடிக்கும். எந்த நாயா இருந்தாலும் அதுக்கும் பிரியாணி புடிக்கும்.” என்றான்.

“ஃபிலாசபி ஓகே தான். ஆனா அந்த நாயோட ஓனர் கிட்ட சண்டை போட்டுட்டேன். அவன் பாத்துட்டான்னா?”

“சேம் ஃபிலாசபி தான்.”

“எது இந்த பொதுவா- ன்னு ஆரம்பிக்குமுங்களே அதுவா? நீ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் டா.. பிலாசபர் இல்ல.. ” என்றேன். இருவரும் சிரித்துக் கொண்டோம்.

அவனை விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். தயங்கித் தயங்கி காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன். வாசம் பிடித்து டக்கென்று எழுந்து நின்றது. அதன் கண்கள் எனக்கு வந்து படையல் இடு என்பது போல் அதிகாரம் இருந்தது. பொட்டலத்தை பிரித்தேன். அதனிடமிருந்து ஏதோ வினோதமான கரகரப்பான உறுமல். என்னை இறைஞ்சுகிறதா அல்லது அதட்டுகிறதா என்று தெரியவில்லை. நாய் பாஷை தெரியாது. பிரித்த பொட்டலத்தை தரையில் வைத்து தள்ளி விட்டேன். அது பாதி சிதறி நாயிடம் போய் நின்றது. நாய் உடனேயே முழுதாக ஈடுபட்டது. நாய்க்காரனது வீடு சாத்தியே தான் இருந்தது. நான் அதை தாண்டி செல்ல வேண்டும். இந்த ஒருமுறை காம்பவுண்டை சுற்றி வந்து பல்டி அடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுதான் சுங்கம் கட்டியாகிவிட்டதே. மெல்ல சுவர் ஓராமகா அடி எடுத்து வைத்தேன். நாய் லக்லக் என்று விழுங்கிக்கொண்டிருந்தது. அதன் சங்கிலி வளையத்திற்குள் சென்றபொது விழுங்குவதை நிறுத்திவிட்டு தலையை எடுக்காமலே பற்கள் அத்தனையு காண்பித்து உர்ர்ர் என்றது. நான் அசையாமல் நின்றேன். ஏதோ சுமூகம் கண்டவுடன் மீண்டும் போஜனம் செய்ய எத்தனித்தது. நான் மடக்கென்று ஒரே தாவலில் என் கதவை அடைந்தேன். உடல் முழுவதும் நீர் வழிந்திருந்தது. மூச்சு இறுகி மேலும் கீழும் நடனமாடியது. ஆனாலும் ஒரு திருப்தி. நறுவிசாக முடித்துவிட்டு பக்கத்திலிருந்த சிறிய தொட்டியில் சளக் சளக் என்று நீர் குடித்தது. பேய்ப்பசியில் இருந்திருக்கும் போல. முடித்துவிட்டு அங்குமிங்கும் பார்த்தது. திரும்பி என்னை பார்த்தது. அதன் உடல் மொழியில் ஒரு மாற்றம் இருந்தது. ஆனால் என்னவென்று புடிபடவில்லை. அதன் கண்களை சந்திக்காமல் உள்ளே சென்றேன்.

காலையில் தயிர் சாதம் சுங்கம் கட்டிவிட்டு அலுவலகம் சென்றேன். வரும்போது புரோட்டா. மெண்டல் வெளியே நின்றிருந்தான். “இது வெஜிடேரியன். இதுக்கு நான்வெஜ் நீங்கதான் போடறதா” என்றான். “நீ மொதல்ல அதுக்கு எதாச்சியும் வெய்யு. போறவன் வாறவனா வெச்சிக்கிட்டு இருப்பான். இந்த நாபீய எடுத்து வீசு. குடலைப் புரட்டுது.” என்றுவிட்டு மறுமொழிக்கு நிக்காமல் உள்ளே சென்றேன்.

நாய் பாஷை புரிய ஆரம்பித்தது. நாய் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டது. பிஸ்கட், காபிபைட், வடை, பண் என்று என் சம்பளத்தில் ஒரு பங்கை கரைத்துக் கொண்டிருந்தேன். என்றாலும் சந்தோஷம்தான். தினமும் காலையில் அதுக்கு ஒரு குட் மார்னிங். நான் இரவு வரும் வரை அது காத்து நிற்கும். இத்தனை தூரம் வந்த பின்னரும் அதை தொடவோ தடவிக்கொடுக்கவோ நான் முனைந்தது இல்லை. என்ன இருந்தாலும் இது மெண்டலுடைய நாய். நான் சோறு வைப்பதால் மெண்டலும் கண்டுகொள்வதில்லை போலும். எப்போதாவது வெளியே வருவான். நான் உள்ளே சென்று விடுவேன்.

உலகத்தார் அனைவரும் நண்பர்கள் ஆகியதுபோல் இருந்தது. எல்லோரையும் புதுசாகப் பார்த்தேன். நேற்றைய என்னை நேற்றோடு விட்டுவிட்டேன். நேற்றைய யாரையும் இன்று இழுத்து வருவதில்லை. ஓரிருமுறை மெண்டலைக் கூட பார்த்து சிரித்தேன். இதெல்லாம் நாயிடம் இருந்து வந்த பழக்கம். அதற்கு பெயர் வைக்க விரும்பினேன். சுவீகாரம் செய்ய வேண்டும். என்னுடைய நாயாக்க வேண்டும். நினைத்துப் பார்த்தேன். நானும் நாயைக் கூட்டிக்கொண்டு நடை செல்வேன். சமூகத்தில் பெரிய ஆள்தான். நாய் கண்காட்சி என்று யோசித்தவுடன் சிரிப்பு வந்தது.

அன்று ஃபீப் பிரியாணி வாங்கிக்கொண்டு சுரேஷயும் அழைத்துக்கொண்டு உற்சாகமாக வந்தேன். வெறும் காம்பவுண்டு எங்களை வரவேற்றது. சங்கிலியையும் காணவில்லை. நெஞ்சு கனத்தது. உலகம் மீண்டும் தன் சுயரூபம் காண்பிக்கிறது. எனக்கு பாத்தியப்பட்டதை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது. அவன் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. விடாமல் தட்டினேன். இஸ்த்திரிக்காரன் வழக்கம் போல் எட்டிப் பார்த்தான். கொஞ்ச நேரம் விட்டு “என்னடா வேணும் உனக்கு?” என்று கதவைத் திறந்தான். சொல்லின்றி நாக்கு தடுமாறியது. “நாய்…” என்று சுரேஷ் இழுத்தான். “நாயா? எந்த நாய்? அதுவா? அத அவுத்து விட்டுட்டேன். இல்ல வித்துட்டேன். இல்ல அதுவே ஓடிடுச்சு.” என்று சொல்லிவிட்டு மெண்டல் திரும்பினான். நான் “டேய்…” என்று கத்தினேன். அவன் திரும்பியவாறு முதுகை காண்பித்து அப்படியே நின்றான். எனக்கு பேச்சு தடுமாறியது. கொஞ்சம் இறைஞ்சுவது போல “உண்மைய சொல்லு… நான் அதுக்கு மட்டுமா சோறு வாங்கியாந்தேன். உனக்கும் செத்துத் தாண்டா. சத்தியம் பண்ணி சொல்லு. நான் வெச்சுட்டு போன பார்சலை நீ எடுக்கலேன்னு. அந்த நாய் எங்க?” அவன் அப்படியே நின்றான்; பிறகு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டான். நான் சுரேஷைப் பாத்தேன். எனக்கு அழுகை வந்தது. சுரேஷ் கூடவே இருந்தான்.

புது வீடு வாங்கிய சந்தோசமோ அந்தஸ்து சம்பாதித்த பெருமையோ இல்லாமல் போனது. நான் பழையபடி பதட்டமான ஜீவன் என ஆனேன். “வீட்ல வளர்ந்த நாய் ரோட்டுக்கு போச்சுன்னா பொழைக்காதுடா.” சுரேஷிடம் சொன்னேன். “ரோட்ல இருந்து வந்தவன் நான் சொல்றேன். நாய விட கேவலமான பொழப்பு பொழச்சவன்டா. நாய்க்கும் அது வேண்டாம். நான் கொஞ்சம் முந்தி இருக்கணும். அத நான் வாங்கியிருப்பேன். கைல கால்ல விழுந்தாவது வாங்கி இருப்பேன்.” புலம்பிக் கொண்டே இருந்தேன். அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுத்து ஊரையே அலசினேன். மீண்டும் மெண்டலிடம் கேட்க வந்தேன். எவ்வளவு தட்டியும் அவன் திறக்கவில்லை.

மனம் புதுப்புது எதிரிகளை மீண்டும் உருவாக்கியது. வேலை போய்விடுமோ? வீடு கைவிட்டு போகுமோ? மீண்டும் தெருவுக்கு வருவேனா? என்ன வந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது. மீண்டும் முடியாது. ச்சே… என்ன நினைப்பு இது. என் ராசியே இது தான். அப்படி அந்த நாயின் மீது பாசம் வைக்க இன்னும் அதன் நிபந்தனை அற்ற அன்பைக் கூட நான் அனுபவிக்கவில்லை. இல்லாத, கைவிட்டுப் போன அனைத்தும் என்னை எப்போதும் ஆட்டிப் படைக்கும். பதட்டம் என் இயல்பு. இயல்புக்கு மீண்டதால் எப்போதும் போல் முரடனாக இருந்தேன். வெள்ளை சட்டை போடுவதில்லை. சாமி அறவே கும்பிடுவதில்லை.

5

நாட்கள் செல்ல செல்ல நாய் இல்லாத வாழ்க்கையும் பழகி இருந்தது. சுரேஷ் அன்று வேறொரு சின்ன நாய் வாங்கி வந்தான். மொசு மொசுவென்று இருந்தது.

“எதுக்குடா இதெல்லாம். இதுவும் ஓடிப் போகும்”

“நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவா இதை வச்சுக்கலாம். நீ ஒரு வாரம் நான் ஒரு வாரம்”

என்னால் சிரிக்க முடியவில்லை.

சுரேஷ், “இந்த வாரம் நான் வச்சுக்கிறேன். அடுத்த வாரம் உனக்கு. சும்மா காமிக்கலாமுன்னு வந்தேன்” என்றுவிட்டு எடுத்து சென்று விட்டான்.

அந்த ஒரு வாரத்தில் இல்லாத புது நாய் என்னை பீடித்துக் கொண்டது. நானே சென்று அதை தூக்கிக் கொண்டு வந்தேன். பால் பிஸ்கட் தயிர் சாதம். நானும் அதுவே சாப்பிட்டேன். வீடு முழுதும் சென்று அலசியது. சமயல் அறையை நாசம் செய்தது. கால் கையை நக்கும் போது நான் அனுமதித்தேன். என் மூக்கை வாயை நக்க அது உரிமை எடுத்துக்கொண்டது. புது வாழ்க்கை ஆரம்பித்தேன்.மீண்டும் சமுதாயத்தில் ஒரு புள்ளி ஆனேன்.

அன்று ஞாயிற்று கிழமை. தூங்கிக்கொண்டு இருந்தேன். சுரேஷ் போனில் அழைத்தான். “எங்க இருக்க? வெளில என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டியா? வெளியே வாடா”. ராக்கி கதவைப் பிராண்டிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தேன். சுரேஷ் ஆம்புலன்சுடன் நின்றிருந்தான். சொற்பமானவர்கள் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெண்டலின் உடலை தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

இஸ்திரிக் காரன் வந்தான்.”யார் துப்புக் கொடுத்தாங்கன்னு தெரில. நீங்களா?” என்றான்.

“இல்லை. நான் இப்போதான் எந்திரிச்சேன். என்னாச்சு.”

“கேசு தாங்காதுன்னு சொல்றாங்க. மெண்டலு அடிக்கடி இப்படி ஆகும். யாரோ ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போவாங்க. என்ன ஆச்சுன்னு தெரில. இந்த ஏரியால மெண்டல் இல்லேன்னா சந்தோசப் படறதுக்கு நிறைய ஆள் இருக்காங்க.”

இஸ்த்திரிக்காரன் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விட்டுவிட்டு சுரேஷிடம் சென்றேன். அவன் ஆம்புலன்ஸ் எடுக்கும் அவசரத்தில். “என்ன நியூஸ்ன்னு கேட்டு சொல்றேன்” என்றுவிட்டு விறுவிறுவென்று பணியில் இறங்கினான். ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.

நான் அந்த பழைய நாயை நினைத்துக் கொண்டேன். மெண்டல் மீண்டும் வருவதற்குள். அலுவலக நண்பர்கள் அனைவரையுமே அல்லது ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். தரகரையும் வரச் சொல்ல வேண்டும்.

வந்தவர்கள் அனைவருக்கும் என் ராக்கியை பிடித்து போய்விட்டது. அவர்கள் வளர்த்திருந்த வளர்த்துக் கொண்டிருக்கிற நாயைப் பற்றி சொன்னார்கள். நாய் ஆஸ்பத்திரி, விளையாட்டு ஜாமானம், கொடுக்க வேண்டியது கொடுக்கக்கூடாதது என்று பல யோசனைகள். ரோட்டில் போனால் குழந்தைகள் பயம் இல்லாமல் என்னுடன் பேசினார்கள். கல்லூரிப் பெண்கள் திரும்பிப் பார்த்தார்கள். பணக்கார புள்ளிகள் கை காண்பித்து விட்டு சென்றனர். பழைய பதட்டம் இப்போது சுத்தமாக இல்லை.

பத்து நாட்கள் கழிந்திருக்கும். சுரேஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. போனும் எடுக்கவில்லை. நான் அவனைத் தேடி வீட்டுக்கு சென்றேன். அவன் கைலியுடன் வெளியே நின்றிருந்தான்.

“என்னடா போன் பண்ணா எடுக்க மாட்டியா?”

“புது போன் வாங்கணும்டா.. உள்ள வாடா.. ராக்கி எப்படி இருக்கு?”

“டேய், அத விடு. மெண்டலுக்கு என்ன ஆச்சு. அத பத்தி வாயே தொறக்க மாடீங்கற..”

என் பார்வையை தவிர்த்தான். “அத விடு டா. அது யாருக்கு தெரியும். நாம நம்மோட பொழப்ப பாக்கவே நேரம் சிக்க மாட்டேங்குது.”

என்னவோ அந்நியத்தனமாக பேசினான். நான் உணர்ந்து கொண்டேன். “என்னடா ஆள் செத்துட்டானா?”

“ஆமா..”

“அதுதான் நீ என்கிட்டே சொல்ல முடியாம இருக்கியா?”

“ஆமா…”

“எப்படி செத்தான். போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் பாத்தியா? என்ன காரணமாக்கும்?”

…….

“என்னடா… என்ன காரணம்?”

“எல்லாம் பொதுவான காரணம்தான் …” என்றுவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

6

நாங்கள் அதற்கு பிறகு ஒன்று சேர்ந்து சாப்பிடுவதே இல்லை.

ஒன் மொமெண்ட் ப்ளீஸ் – விஜயகுமார்

விஜயகுமார்

எங்கள் வாசற்படியில் அனாமத்தாக ஒரு ஆணுறை கிடந்தது. புதிய பிரிக்கப்படாத ஆணுறை. இந்த நாளின் அந்தி இப்படியாக கழியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல் தான். படிக்கட்டு ஏறி வலம் திரும்பினால் நான் இருக்கும் வீடு. இடம் திரும்பினால் இன்னொரு வீடு. ஊரிலிருந்து அமெரிக்கா கிளம்பும் போது கவனமாக இரு கவனமாக இரு என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள். நான் துளைக்கும் துப்பாக்கி, குத்திக் கிழிக்கும் கத்தி, உடைந்து விழும் விமானம், அந்தரத்தில் தூக்கும் சூறாவளி என்று எதிர்பார்த்தால். இப்படி ஒரு சோதனை. நான் எப்படி இதற்கு எதிர்வினை செய்வது. யாராவது என்னை பார்க்கிறார்களா? இங்கு எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். என்னை யாரோ பார்க்கிறார்கள் என்றே எடுத்துக்கொண்டு குனிந்து கைக்குட்டையால் அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் எரிக்கா என்று பேனாவால் எழுதி இருந்தது. அதை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தேன். எங்கள் இரட்டை வீடு போலவே அந்த தெரு முழுதும் உள்ள இரட்டை வீடுகளில் யாரும் வெளியே காணவில்லை. திரும்பி எங்கள் வீட்டைப் பார்த்தேன். அதில் மற்றொரு வீட்டின் பெரிய ஜன்னலின் திரைக்கு பின்னால் ஒரு அசைவு. எனக்கு தெரியும் என்னை யாரோ பார்க்கிறார்கள் என்று. நல்ல வேலை அதற்கு தக்கவாறு நடந்து கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ப்ரெசென்ட்டேஷன் தயார் செய்து கொண்டிருந்தேன். திங்களன்று அலுவலகத்தில் நான் ஒரு பெரிய பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்கள். என்னுடைய மேலாளர் வேலையிலிருந்து நின்று விட்டார். ஆகையால் அவருடைய மேலாளர் என்னை நியமித்திருந்தார். எனக்கு இது நல்வாய்ப்பு. களைப்பாக உள்ளது என்று ஒரு சிகரெட் பற்ற வைக்க வெளியே வந்தேன். அங்கு ஒரு பெண் அறக்கப் பறக்க எதையோ வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் சடசடவென்று அள்ளியதை அனைத்தும் ஒரு பையில் போட்டுக்கொண்டு குனிந்தவாறே என்னைக் கடந்து வாசற்படிகளில் ஏறி இடப்பக்கம் திரும்பி உள்ளே சென்று விட்டாள். என் எதிர் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். உணர்ந்த உடனேயே இன்னொன்றையும் சேர்த்து உணர்ந்தேன். அதை உறுதி செய்துகொள்ள வாசல் முழுவதும் கண்களை அலைய விட்டேன். தடயம் ஏதும் கிடைக்கவில்லை. திரும்பி அந்த ஜன்னலைப் பார்த்தேன். அதன் திரை அசைந்து கொண்டிருந்தது.

நான் எடுக்க வேண்டிய பயிற்சி வகுப்பு அன்று பெரிய சொதப்பல் இல்லாமல் சென்றது. எழுதிவைத்து மனனம் செய்ததை ஒரு ராகம் போல் பாடிவிட்டு வந்தேன். அன்றைய வகுப்பிற்கு சொற்பமானவர்களே வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வயோதிக வாடிக்கையாளர்கள். எல்லோரும் தூங்கி வழிந்தனர். எனக்கு இது வசதியாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் லட்டினோ அரேபியர் ஆசியர் கிழக்காசியர் என்று வண்ணக் கோலப்பொடி போல இருந்தார்கள். வீடு வரும் வழி நெடுகிலும் மனம் எதிலும் லயிக்காமல் இருந்தது. ஏதேதோ சிந்தனை. தூரத்திலிருந்து வரும்போதே அவளை கண்டுகொண்டேன். மீண்டும் வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அவசர அவசரமாக சென்று அவள் அருகில் கிடந்ததை எடுத்துப் பார்த்தேன். அதில் ‘எரிக்கா, யு ஆர் ஏ ஃபைன் ஃபக்’ என்று எழுதி இருந்தது. அதை வெடுக்கென்று அவள் பிடுங்கினாள். அரைக்கணம் என் கண்களை சந்தித்தாள். சஞ்சலம் ஏதும் இல்லாத முகம் என்றாலும் அதன் கண்கள் நீர்மை கோர்த்திருந்தது. பிடுங்கியதை பையில் போட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் உள்ளே விறுவிறுவென்று சென்றாள்.

அன்று முன்னிரவு மனம் அலைக்கழிப்பாகவே இருந்தது. அலுவலகத்தில் என்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும். அதன் படபடப்புடன் இவளின் உரசல் வேறு. அவளது வட்ட முகம். வெண்ணிற தோல், மூக்கின் கீழ் உள்ள மென்மயிர், பரட்டைக் கூந்தல். முதல்தர அழகி இல்லை. என்றபோதும் என் மனம் அலுவலக சோர்வைத்தாண்டி அவளை ஏந்திக் கொண்டிருந்தது. அன்றிரவு என் அந்தரங்க ஆசுவாசத்திற்கு அவள் பிம்பம் உதவியது. இதுநாள் வரையில் லட்சிய அழகிகளே என் கற்பனையில் அரங்கேறி இருக்கிறார்கள். அன்றிரவு அவள் விதிவிலக்கு. முடிந்தபின் ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். உண்மையை சொன்னால் எனக்கு ஒரே எதிர்வீடு; அதில் ஒரே ஆள்; அது ஒரு பெண். அவ்வளவே. மேலும் காரணம் கேட்டால் அவளது கண்களில் தேங்கி நின்ற நீர். அந்த மெல்லிய படலம். அந்த நீர் பரப்பு. அதில் தென்படுவது ஒரு பலகீனம். என்னை கட்டுக்குள் கொண்டுவர முடியும்; ஆக்கிரமிக்க முடியும் என்ற பதாகை. மிரட்டினால் மிரண்டுவிடுவேன்; அடித்தால் அழுதுவிடுவேன் என்ற கூற்று. வன்முறையின் சாத்தியத்தை அஞ்சும் கண்கள். அதுவே என்னை வீறுகொள்ளச் செய்தது. அவளது பெயர் எரிக்கா வாக இருக்கக்கூடும்.

அலுவலக நண்பரிடம் ஆணுறையை ஒருவருடைய பெயர் எழுதி அவரது வீட்டின் முன் போடும் சடங்கின் காரணம் பற்றி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, “இந்த நாடு ஒரு கலவையான நாடு. அதுல பல கூறுகள் வந்து சேரும். அப்படி எங்கிருந்தோ புதுசா வந்து சேர்ந்த ஒரு கீழ்மையான பழக்கம் இது. ஒரு பெண்ணை அவமானம் செய்யுற நோக்கத்தோடு செய்யறது. உன்ன எப்போ வேணும்னாலும் கெடுத்துப்போடலாம். நீ என்னோட லிஸ்டில் இருக்க. என்னிக்கு இருந்தாலும் நீ மாட்டுவ. அப்படீன்னு சொல்றது.” என்றார்.

“என்ன கிறுக்குத்தனம்….”

“நம்ம ஊரிலேயே கிறுக்கனுங்க இருக்கானுங்க. இந்த ஊருக்கு என்ன வந்தது. இங்கயும் நிறைய இருக்கானுங்க. இன்னும் சொன்னா ஒருவர் வீட்டுக்கு முன்னாடி வந்து மலம் அள்ளி வெச்சுட்டு போவானுங்க. நாம காசு வெட்டிப் போடுறோம் இல்ல. அந்த மாதிரின்னு வெச்சுக்கோ.”

அடுத்தநாள் அவள் வீட்டை விட்டு வெளியே வரும்வரை நோட்டம் பார்த்து தற்செயல் போல் நானும் வெளியே வந்தேன். அவள் வீட்டை பூட்டிக் கொண்டிருக்கும் போது நானும் பூட்டுவது போல் திரும்பிக்கொண்டு மெலிதாக, “ஐ நோ வாட் யு ஆர் கோயிங் த்ரூ” என்றேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். நானும் திரும்பினேன். “ஒஹ் ரியலி?” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு உடையை நேர் செய்தவாறு வெளியே சென்றாள். அவள் சென்ற பின் “எஸ் ரியலி….” என்றுகொண்டேன். கனவில் வந்து கட்டளைக்கு காத்துக்கிடக்க எவ்வளவோ அழகிகள். இவள் வந்தாள் இப்போது சென்றுவிட்டாள். அடுத்த வேலையைப் பார்ப்போம்.

அன்று பயிற்சிக்கு புதிய வாடிக்கையாளர்கள் அரங்கு நிரப்பிக் கொண்டனர். எனது மாமூல் மனப்பாட வித்தை அன்று என்னை கைவிட்டது. குரல் நடுங்க உடல் வியர்க்க கால்கள் உதற அன்றைய கப்பலை கரை ஏற்றினேன். என் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்னிடம் வந்து ஆறுதலாக அடுத்தமுறை நன்றாக செய் என்று சொல்லி இருக்காவிட்டால் நானும் அவள் போல அழுதிருக்க தேவையில்லை. நல்லவேளை அவர் மட்டும் தான் என் கண்களின் நீர் படலத்தை பார்த்தார். அடிபட்ட சோகத்துடன் வீடு திரும்பும்போது எரிக்கா வாசலில் நின்றாள். அவளை சட்டை செய்யும் அளவிற்கு அன்றைய நாள் உற்சாகமாக இருக்கவில்லை. நான் ஒதுங்கிப் போக எத்தனிக்கும் போது, “நான் நம்புகிறேன், நான் உங்களிடம் ஒரு மன்னிப்பை சமர்ப்பிக்க கடன்பட்டிருக்கிறேன் என்று.” என்றாள். மூளையின் கட்டளையின்றி நான், “ஒஹ் உண்மையாகவா….” என்றுவிட்டு உள்ளே சென்றேன்.

என் கண்கள் நீர் படலம் கோர்த்த அந்த தருணத்தையே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். கும்பலின் முன்னால் ஒடுங்கி இருக்கும் நான். எரிக்கா என்னவாக இருந்திருப்பாள் அப்போது. அப்போது தோன்றும் எண்ணமெல்லாம் செயலெல்லாம் தப்பி ஓடுவது, பொந்துக்குள் புகுந்து கொள்வது. நான் அதைத்தான் யோசித்தேன். எரிக்கா அதைத்தான் செய்தாள். உரசலுக்கு பின்பும் அவள் இன்று அணுக்கமாக தோன்றினாள்.

அடுத்து வந்த நாட்களில் நாங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டோம் முகமன் சொல்லிக்கொண்டோம். அதற்கிடையில் எனக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் வேறு ஒரு லட்சிய அழகி என் கனவை அக்கிரமித்திருந்தாள். எரிக்கா எதிர் வீட்டுப் பெண்ணாக மட்டுமே ஆகிப்போனாள். அந்த அங்காடிக்கு அடிக்கடி செல்வேன். அந்த லட்சிய அழகி அங்கே விற்பனை பிரிவில் நின்றிருப்பாள். சிகாகோவில் கணிசமானோர் லட்டினோ இன மக்கள். அவர்களுக்கு இந்திய உடற்கட்டும் ஜப்பானிய தோல் நிறமும் இருக்கும். அவர்களுக்கு என்று பிரத்தியேக சந்தை உருவாகி வந்திருந்தது. அவர்களுள் சிலருக்கு ஆங்கிலம் தெரியாது ஸ்பானிய மொழி மட்டும்தான். என்னுடைய லட்சிய அழகிக்கு ஸ்பானிய மொழி மட்டும் தான் தெரியும் போல. அவளிடம் ஆங்கிலத்தில் எது கேட்டாலும் “ஒன் மொமெண்ட் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து விடுவாள்.அவளை நோட்டம் விடுவேன். அவளும் என்னை நோட்டம் வீட்டுக் கொண்டிருந்தாள். நான் எது கேட்டாலும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான். அவள் என்னை பார்க்கிறாள் என்பதற்காகவே தினமும் செல்வேன். தினமும் எனக்கு ஒரு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ கிடைக்கும். அவள் அன்று என்ன ஒப்பனை செய்திருக்கிறாள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள் என்ன சடைப் பின்னல் இட்டிருக்கிறாள் என்பதை பார்க்க விருப்பம். அவள் எனக்கு தோதான உயரம், என் உள்ளங்கையிற்குள் அவள் உள்ளங்கை அடங்கிவிடும், அவள் அங்கங்கள் அனைத்தும் எனக்கான பிடிமானம். அலுவலக திறன் இயலாமைக்கும் அதன் விளைவாக உள்ள ஆற்றாமைக்கும் அவளைப் பார்க்க செல்வது ஒரு நல்ல வடிகால். அவளது ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ என் உள்ளத்தில் எப்போதுமே இசைந்து கொண்டிருக்கும். நான் தினமும் அந்த அங்காடி செல்வதை எரிக்கா கவனித்திருக்க வேண்டும். நான் எப்போதும் நடந்துதான் செல்வேன். என்னிடம் கார் கிடையாது.

அன்று அவள் வெளியே வந்து “நீங்கள் அங்காடிக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டாள். நான் ஆமாம் உங்களுக்கு ஏதேனும் வாங்கி வர வேண்டுமா? என்று பவ்யமாக கேட்டேன்.

“நானும் அங்கேதான் செல்கிறேன். நானும் உங்களுடன் வரலாமா?”

“நான் நடந்து செல்வேன். தாமதமாகி விடும்”

“இல்லை, உங்களுடன் வந்தால் சிறிது பாதுகாப்பாக உணர்வேன்”

எனக்கு அந்த சொற்கள் கிரீடம் வைத்தது போல் இருந்தது. பண்பானவன் என்ற அங்கீகாரம் போல். இன்னும் பணிவு கூடி வந்தது. “வாருங்கள் நான் துணைக்கு வருகிறேன்” என்றேன்.

ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நடந்தேன். கண்டிப்பாக அவள் கண்களை மட்டும்தான் பார்த்துப் பேசவேண்டும் என்ற அவசரகால சங்கற்பம் எடுத்துக் கொண்டேன்.

செல்லும் வழியில் அமைதியாகவே சென்றோம். கண்டிப்பாக நான் எந்த பேச்சும் ஆரம்பிக்க கூடாது. அவளுக்கு வாய் கொஞ்சம் கோணல். சிரித்தால் ஒருபக்கம் இழுக்கும். லட்டினோக்களைப் போல் நீவிய கேசம் இல்லை. நெளிந்து நெளிந்து போகும் கொண்டை இடப்படும் சிதறல் முடி. இறுகிய புஜங்கள். அவள் நடை கொஞ்சம் ஆண் தன்மை கொண்டிருக்கும். நன்றாக கவனித்தால் அன்றைய நடப்ப வழக்கிலிருந்து அவள் விலகியே இருப்பது தெரியும். அவளுடன் நடந்து வருகிறேன் என்ற முழுப் பிரக்ஞையுடன் இருந்தேன். அதனால் என்னவோ எனக்கே அந்நியமான ஒரு உடல் மொழி என்னிடம் தென்பட்டது. அந்த உடல் மொழி வசதியாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. அதையே ஏற்று நடித்துக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர் பார்க்காமல் எனது நிறுவன இயக்குநர் எங்கள் எதிரில் நடை பயிற்சி வந்தார். என்னைப் பார்த்து நிற்காமல் ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி சமிக்ஞை செய்தார். நான் என் பாவனையை சடுதியில் கைவிட்டு அவரை நோக்கி மேல் உடலை மட்டும் கொஞ்சமாக வளைத்து அரை வணக்கம் போல் என் வலது கையை நெஞ்சுவரை ஏற்றி இறக்கினேன். அவர் கடந்துவிட, நான் மீண்டும் தன்னிலை மீண்டு மீண்டும் புதிய உடல் மொழிக்கு திரும்பினேன். அவள் அதை கவனித்தாள்.

“நீங்கள் இந்தியர் தானே?”

“என்னுடைய வணக்கம் உங்களுக்கு காட்டிக்கொடுத்து விட்டதா?”

“நீங்கள் தென் அமெரிக்கர் என்றுதான் முதலில் நினைத்தேன்.”

“நீங்கள்?”

“ஆஃப்கன்..” என்று விட்டு அவள் மேல் உடலை வளைத்து அரை சலாம் செய்து காண்பித்தாள்.

நான் சிரிக்க அவளும் சேர்ந்து சிரித்தாள். “இங்கே நம்மை போன்றோர் அரை மக்கள்தான். அரை ஜீவனம்தான். அரை உரிமைதான். அரை வணக்கம் தான்.” என்றாள்.

அவள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே சென்றாள். ஆஃப்கன் மக்கள் இங்கே இன்னும் இறுகிய சமூகமாகவே இருப்பதை; லட்டினோ மக்கள் தங்களுக்கான ஒரு கலாச்சாரத்தை சமைப்பதை; அரசியல், கலை, மக்கள், பிரதேசம் என்று என்னென்னவோ. நான் ஈடு கொடுத்துக்கொண்டு வந்தேன். பெரும்பாலும் கேட்டுக்கொண்டு. அவளை ஆச்சரியத்தில் உள்ளாக்க; நின்று கவனிக்க வைக்க; என்னிடம் பகிர்ந்துகொள்ள எந்த சரக்கும் அப்போதைக்கு இல்லை. நாங்கள் அங்காடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் இருக்கும் அங்காடிக்கு.

ஒன்றாகவே சென்று சிறிய சிறிய பொருட்களை வாங்கினோம். அவள் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் அரபியும் அச்சிடப்பட்டிருந்தது. நான் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் சில இந்திய மொழிகளும். “அதை சுட்டிக்காட்டி நாம் நம் சென்ற காலத்தை இன்னும் பொறுக்கித் திரிகிறோம்” என்றாள். அவள் பட்டியலில் மீண்டும் ஒரு புள்ளி. நான் பின்தங்கி அதலபாதாளத்தில்.

எரிக்காவிற்கு தெரியாமல் நான் என் லட்சிய அழகியை பார்த்து பார்த்து மீண்டேன். எரிக்கா என்னிடம் வந்து “அந்த பெண் உன்னை பார்க்கிறாள்” என்றாள்.

என் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் “தெரியும்” என்றேன்.

“தெரியுமா?. அப்படியானால் அவள்…”

“இல்லை… அவளுக்கு ஆங்கிலம் தெரியாது…”

“இதற்கு எதற்கு ஆங்கிலம். போய் பேசிப் பார்.”

“நான் பல முறை பேசி இருக்கிறேன். அவளுடைய ஒரே பதில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான்.”

எதற்கு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’? என்றாள்.

“நீயே கேட்டுப்பார்.” என்றவுடன் எரிக்கா சிறிதும் தயங்காமல் அவளிடம் சென்றாள். நான் தூர நின்று பார்த்தும் பார்க்காமலும் கவனித்தேன்.

எரிக்கா அவளிடம் என்னை நோக்கி ஏதோ காண்பித்து பேசினாள். என் அடிவயிறு சப்தமிட்டது. வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். எரிக்கா கிண்டலாக சிரித்துக் கொண்டு திரும்பி வந்தாள்.

“பைத்தியம், அவளிடம் என்ன சொன்னாய்?”

“கண்டிப்பாக சொல்லவேண்டுமா?”

“சொல். என்னை காண்பித்து என்ன சொன்னாய். உனக்கு ஸ்பானிய மொழி தெரியுமா? அவள் என்ன சொன்னாள். என்னை காக்க வைக்காதே”

எரிக்கா சிரிப்பை அடக்க முடியாமல், “எனக்கும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான் சொன்னாள்”.

எனக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரிக்க அவளை பார்த்து நான் சிரிக்க அவள் மேலும் என்னை பார்த்து சிரித்தாள். நாங்கள் வெளியே ஓடிவந்து சிரித்தோம். விலா எலும்பு வலிக்கும் வரை சேர்ந்து சிரித்தோம். கண்களில் வழிந்த நீரை துடைத்தாள். அவளது சிரிப்பு புன்னகையாக மாறியிருந்தது.

“ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சிரித்து.” என்றாள்.

நாங்கள் வீடு திரும்பினோம். வரும் வழியில் என் உடல் மொழியை பாவனையை கைவிட்டு இயல்பாக இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக நடந்தோம். அவள் எங்கிருந்தோ ஆரம்பித்தாள். “யோசித்துப் பார்த்தால் நம்மால் சில இடங்களில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல முடிவதில்லை. சொன்னாலும் நமக்கு அந்த ஒன் மொமெண்ட் கிடைப்பதில்லை.” என்றாள்.

“ம்ம்ம்….”

“நான் சொல்வது உனக்கு புரிகிறதா. நான் ஆஃகானில் சொன்ன ஒன் மொமெண்ட் ப்ளீஸ் -ன் விளைவுதான் இப்படி இங்கே இருக்கிறேன். இப்போது இங்கேயும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பார்த்தாயா என் வீட்டின் எதிரில் ஆணுறையில் என் பெயர் எழுதி வீசுகிறார்கள். நான் அவர்களுக்கு அரை சலாம் போடுகிறேன். அவர்களிடம் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல விழைகிறேன்.

“யார் அப்படி எழுதி வீசுவது?”

“என் மாணவர்கள்.”

“எதற்காக அப்படி செய்கிறார்கள்?”

“என்னை மிரட்டுவதற்கு. நான் பலகீனமானவள் என்பதை மோப்பம் பிடித்து விட்டார்கள். அது கும்பல் மனநிலை. ஒரு சிலர் அதை ஆரம்பித்து வைப்பார்கள். அதற்கு தயங்கியவர்கள் சேர்ந்து கொள்வார்கள். மீதி சிலர் தனித்துப் போகக்கூடாது என்று சேர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் ஒரே நோக்கம் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் என்னை காதலிக்கவும் கூடும். நான் ஆஃப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக இருக்கும்போது என்னை இரண்டாவதாக கபளீகரம் செய்தது என் சொந்தக்காரன் தான். பின்பு அவன் தான் என்னை காப்பாற்றி இங்கு கொண்டுவந்து சேர்த்தான். இப்போது யாரும் கபளீகரம் செய்யவும் வேண்டாம் காப்பாற்றவும் வேண்டாம். நான் வேலையை விட்டு விட்டேன். அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு நீங்குகிறேன். வேறு இடம் செல்கிறேன். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் சொல்லப்போகிறேன்.”

நான் எங்கு செல்கிறாய் என்று கேட்கவில்லை.

அவள் அதை உணர்ந்தாற்போல் சிரித்தாள்.

வீடு வந்தது. அவள் கையை நீட்டி “நான் எரிக்கா..”என்றாள். அவள் கையை குலுக்கி “நான் மோகன்..” என்றேன்.

“மன்னிக்கவும் ஒரு உணர்ச்சி வேகத்தில் என் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்லி உங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டேன்.”

“அதை கருத்தில் கொள்ளாதே..”

அவரவர் வீடு புகுந்தோம்.

அந்த நாள் முழுவதும் வானில் பறப்பது போல் இருந்தது. அவள் என்னை நம்புகிறாள். ஓர் பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவன் நான். நம்பி அவள் அந்தரங்கத்தை பட்டியலிடுகிறாள். பந்தி விரிக்கிறாள். மீதம் உள்ள நாட்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவள் கவுருவத்தை காபந்து செய்து அவளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நினைப்பிலேயே தூங்கிப் போனேன்.

அடுத்தநாள் நேற்றைய சமாதானம் கலைந்திருந்தது. அலுவலகத்தில் அன்று புலி போல இருந்தேன். பயிற்சி வகுப்பு என் கட்டுக்குள் இருந்தது. அனைவரையும் அவர்களின் உச்ச விசையில் வைத்திருந்தேன். அரங்கத்தை முழு நிர்மாணம் செய்திருந்தேன். எனக்கு அன்றைய நாள் மிகப்பெரிய வெற்றி.

அவள் என்னை என்ன செய்கிறாள் என்று இப்போது புரிந்தது. ஆபத்தை கண்கொண்டு நேர்நோக்கினால், அது மட்டுப்படும். பிறகு அந்த ஆபத்தை சவாரி செய்யலாம். அவள் என்னை ஆபத்தாகத்தான் உணர்கிறாள். ஆபத்தாகிய என்னிடம் ஒரு பிரத்யேக உறவு வைத்திருந்தால் நான் அவளை ஒன்றும் செய்ய முடியாது அல்லவா. அவளை பாதுகாப்பேன் அல்லவா. எனது பொறுப்பு வலயத்திற்குள் வந்துவிட்டால் அப்புறம் என்ன கவலை. பாதுகாப்பற்ற சிறுமி ஒரு தட்டான் ஆணிடம் அடைக்கலம் சேர்வது போல. தட்டான் ஆண் பிற சில்லறை ஆண்களிடம் இருந்து அவளை காபந்து செய்வான். ஜார்ஜ் வாஸிஷிங்டன் தன் எதிரியிடம் நல்லுறவு வைத்திருந்தார். எதிரியின் வீட்டிற்கு சென்று வருவார். புத்தகம் கடன் வாங்குவார். சட்ட ஆலோசனை கேட்ப்பார். எதிரியை தன்னுடைய செயலில் வெற்றியில் பங்குதாரர் ஆக்குவார் . ஜார்ஜ் வாஸிஷிங்டன் இறுதியில் வெற்றி பெறுவார். அவ்வளவே. நானே அவளுக்கு ஆபத்து அதனால் நானே இப்போது பாதுகாப்பு. ச்சே…

இத்தனைக்கு பின்பும் அடுத்தநாள் அவளுடன் அங்காடிக்கு சென்று வந்தேன். இம்முறை அவளிடம் எந்த பாவனையையும் நான் கைக்கொள்ளவில்லை. விலக்கமும் அணுக்கமும் ஒரு சேர்ந்தாற்போல் உணர்ந்தேன்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அங்காடி சென்றோம். அங்கே தவறாமல் என் லட்சிய அழகியை இருவரும் பார்ப்போம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிறு சிறு குட்டி பொருட்களை எடுப்பாள். ஏதாவது ஒரு பொருளைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ப்பாள். கூஜா, டீ போத்தல், வாசனை திரவியம் என்று ஏதேதோ. நானும் ஏதாவது சொல்லி வைப்பேன். நான் சொல்வதை உன்னிப்பாய் கவனிப்பாள். வீட்டிற்கு திரும்பும்போது ஒவ்வொரு முறையும் எரிக்கா ஒரு கதை சொல்வாள். நான் அதை உன்னிப்பாக கவனிப்பது போல் பாவலா செய்வேன். ஒரு சில அஹமதிய பெண்கள் சந்தையில் விலை போவதைத் தான் விரும்புவாள் என்பாள். சக்கரி மினாரெட் ஸ்தூபியை இடித்ததும் பாமியான் புத்தரை இடித்ததும் வேறுவேறு சித்தாந்தம் என்பாள். வீடு வந்து அவள் சொன்னதை அலசிப் பார்ப்பேன். அதில் கண்டிப்பாக கள்ளத்தனமான ஒரு உறவும் ஒரு தூரமும் இருக்கும். தன்னை கபளீகரம் செய்தவனையே ஆயுதமாக வைத்து தப்பித்தவள் அல்லவா. அதுகூட உண்மை என்று யாருக்கு தெரியும். நான் ஒருபோதும் எல்லை மீறாமல் எனக்கு இடப்பட்ட பாதையில் நடந்தேன். அது ஒரு பொருட்டே இல்லாததுபோல். இந்த விளையாட்டில் என் வெற்றி என்பது கம்பீரமான விலக்கம்தான். அதை அவள் உணர்ந்தே ஆகவேண்டும். அவள் என்னை என்ன செய்கிறாள் என்பதை நான் உணர்ந்தேன் என்று அவள் உணர வேண்டும். இருந்தும்கூட நான் கனிவாக பண்பாக இருக்கிறேன் என்று காண்பிக்க வேண்டும். அதுவே என் வெற்றி.

இன்னும் இரு தினங்கள்தான் இருக்கிறது. என் கதவை அவள் தட்டினாள். இது நடக்கும் என்று எனக்கு தெரியும். வழமைக்கு மாறாக வீட்டை சுத்தமாக வைத்திருந்தேன். கதவை திறந்த நான் மெல்லிய ஆச்சரிய உணர்வை நடித்துக் காண்பித்தேன்.

“உள்ளே வரலாமா?”

“நிச்சயமாக… வாருங்கள். அமருங்கள்.. காஃபி அருந்துகிறீர்களா?”

“இல்லை வேண்டாம்.. நான் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். என்னிடம் சில வீட்டு பொருட்கள் இருக்கின்றன. அதை எனக்கு விற்க எண்ணமில்லை. கொண்டு செல்லவும் முடியாது. நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு அவைகளை பரிசாக தர விருப்பப்படுகிறேன்.”

“உண்மையாகவா? நான் அதற்கான பணம் தந்து விடுகிறேன்.”

“இல்லை இல்லை.. வேண்டாம். ஆனால் நீங்கள் என்னிடம் அவைகளை வாங்கிக்கொள்ளவேண்டும். வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அப்போது தான் எனக்கு மகிழ்ச்சி” என்று இறைஞ்சுவது போல் கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே சரி என்றேன்.

தொலைக்காட்சி, சில நாற்காலிகள், பெரிய மேசை, கடிகாரம், வீட்டு மளிகை பொருட்கள், சில புத்தகங்கள், அலங்கார ஆஃப்கன் தரை விரிப்பு, இன்னும் சில சுவாரஸ்யமான பொருட்கள் வீடு மாறின. ஒரே நாளில் என் வீடு ஆஃப்கானிய வீடுபோல் ஆகிவிட்டது. இதை அனைத்தும் அவள் மாறாத புன்னகையுடன் செய்தாள். இன்னும் எனக்கு குழப்பம். இது அவள் ஏற்றிருக்கும் பாவனையா அல்லது இதுதான் அவளின் இயல்பா என்று. இந்த ஆட்டத்தில் அவளுக்குத்தான் இறுதி வெற்றி போல.

மறுநாள் அதிகாலையிலேயே அவள் சென்றிருந்தாள். நான் வெளியே வரவில்லை. அவள் சொல்லிக்கொள்ளாமலேயே போகட்டும். ஒருவேளை என்னுடைய கடைசி ஆட்டம் அதுவாகத்தான் இருக்கும். அவள் சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்தேன். இருப்பினும் போதுமான அவகாசம் விட்டு வெளியே வந்து பார்த்தேன். அவள் வீடு பூட்டியிருந்தது. என் கதவின் ஓரமாக ஒரு அலங்காரத் தட்டு. அதில் அவள் சமீபமாக வாங்கிய மற்றும் உபயோகித்து மிச்சம் வைத்த சில பொதுவான பொருட்கள். அவற்றுள் சில எனக்கு அடையாளம் தெரிந்தது. அவற்றை உள்ளே எடுத்து வந்தேன். வேலைப்பாடு உள்ள கூஜா, உயர் ரக டீ போத்தல், வித்தியாசமான குடுவையில் வாசனை திரவியம், கரும் நிறத்தில் உள்ள பேரீச்சை, வாசனையான புது சோப்புக் கட்டி, பேனா, சிறிய கடிகாரம் என்று இன்னும் என்னென்னவோ. கடைசியாக எல்லா பொருட்களுக்கும் அடியில் மறைத்து வைத்தாற்போல் ஒரு ஆணுறை. அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் மோகன் என்று எழுதியிருந்தது.

அப்பால் இருப்பவள்

விஜயகுமார் 

1

தாய் தந்தையரே இப்படி செய்வார்களா? தேவியை இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி வீட்டிலேயே வைத்திருப்பதாக அவர்களுக்கு உத்தேசம். அவளுடைய சம்பளமே அவளுக்கு தடையாக வரும் என்று யார் நினைத்தார்கள். இரண்டில் ஒன்று இன்று தெரிந்தாக வேண்டும். சாரதா வெதும்பிக்கொண்டே தன் சித்தி வீட்டுக் கதவைத் தட்டினாள்.

சாரதா அன்று அதீத சினம் ஏறியவளாகத்தான் இருந்தாள். மறுமுறை தட்டுவதற்குள் சித்தி கதவைத் திறந்தாள். “வா கண்ணு..” என்று மலர்ந்தாள் சித்தி. சண்டைக்காரி போல் வந்திருந்த சாரதாவை பேச்சில்லாமல் ஆக்கியது. அவளும் லேசாக சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள். “நீ மட்டும் வந்திருக்க? பாப்பா, மாப்பிள்ளை யாரும் வரல?” என்ற விசாரிப்புக்கு “வரல” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டாள்.

“தேவி உள்ளயா இருக்கா?”

“ஆமா, லேப்டாப்பில வேல செஞ்சுகிட்டு இருக்கா.”

உள்ளே சென்றதும் அந்த சிறிய ஹாலையே நிரப்பிககிடப்பதுபோல சித்தப்பா டிவி பார்த்துக்கொண்டு தரையில் படுத்திருந்தார். “வா சாரதா..” என்றார். மறுமொழி ஏதும் சொல்லாமல் அரைக்கணம் மட்டும் அவர் கண்களை வெறுமனே பார்த்துவிட்டு தேவி இருக்கும் உள் அறைக்கு சென்றாள்.

“தேவி…. அக்கா வந்துருக்கா பாரு…..” என்று சித்தி குரல் பின்னால் கேட்டது.

நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும்போது காட்டவேண்டிய முகபாவனையை தயார் செய்துகொண்டே சாரதா உள்ளே சென்றாள். சாரதாவின் வருகையை கேட்டு தன் மடிக்கணினியை விட்டு எழுந்து நின்றிருந்தாள் தேவி. பெருங்கூட்டு உடம்புக்காரி மெலிந்து நைந்துபோய் இருந்தாள். தேவியின் வற்றிய உடல் சில வருடங்களுக்கு முன் அவள் வனப்பாய் இருந்த இளமையை சாரதாவிற்கு ஞாபகப்படுத்தியது.

“இது தேவியே அல்ல. தேவியின் சாயலில் உள்ள வேறு யாரோ. வேறு எதுவோ” சாரதாவின் கண் சட்டென்று கலங்கியது. சுதாரித்துக்கொண்டு தயார் செய்து வைத்திருந்த பாவனைக்கு மீண்டாள்.

“எப்படிடீ இருக்க. எளச்சுட்ட..” என்று அவள் தொளைப் பிடித்தாள். அது சதைப்பிடிப்பு ஏதுமில்லாமல் பொசுக்கென்று இருந்தது.

“நல்லா இருக்கேன்க்கா.. பாப்பா மாமாவெல்லாம் வரலையா? கூட்டி வந்திருக்கலாமில்ல.”

“நான் உன்ன பாக்கத்தான் வந்தேன்” என்றதும் புரிந்துகொண்டவள் போல் தலையசைத்தாள். முகம் சிறுத்துக்கொண்டு வந்தது.

எடுத்தயெடுப்பிலேயே தேவி அமைதியானாள். சங்கடமான சில வினாடிகளுக்குப் பின் சாரதா “நேத்து நல்ல மழை போல. இந்த வருஷமே ஏகதேசமா எல்லா பக்கமும் நல்ல மழை” என்றாள். தேவி, “அப்படியாக்கா…” என்று மட்டும் சொன்னாள். இருவரும் கட்டிலில் அமர்ந்துகொண்டனர். சில பல பொது விசாரிப்புகளின் வழியாக தேவியிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்பதுதான் சாரதாவின் முனைப்பு. முனைப்பு எல்லாம் ஏதோ சுவற்றில் மோதுவதுபோல் நின்றது.

சித்தி சில பலகாரங்கள் கொண்டுவந்தாள். “மாமனார் மாமியார் எல்லாம் நல்ல இருக்காங்களா?” என்று ஆரம்பித்து சித்தி பிடித்துக்கொண்டாள். உடல் நலம், விவசாய முட்டுவிலி, போக்குவரத்து, வான் நிலவரம் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சித்தி வட்டமடித்து நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள். சாரதாவின் சங்கடம் கூடிவரவே தேவி, “அம்மா, அக்காவை கொஞ்சம் சும்மா விடு” என்றாள்.

“என்னடி இது. நீ உன் வேலையப் பாரு. பெரியவங்க என்ன பேசுனா உனக்கு என்ன?”

சாரதா சலிப்பு தட்டி, “ஜாதகமெல்லாம் வருதா?” என்று மையப் பேச்சை எடுத்தாள்.

“அது வந்துகிட்டேதான் இருக்கு. எங்க! உங்க சித்தப்பாவே பாதி ஜாதகத்த சரி இல்லேன்னு கழிச்சு போடுறாரு. அதுக்குமேல கேட்டா சண்டைதான் வருது.”

“இப்படி சொன்னா எப்படி சித்தி. நம்ம பொண்ணு இன்னும் சின்ன பொண்ணா? இன்னும் வருஷம் இருக்குன்னு நினைக்க.”

“இந்த அஞ்சு வருசமா நாங்களும் பாத்துகிட்டே இருக்கோம். யாரு கண்ணு பட்டதோ! நாம இப்போ ஊருக்குள்ள வசதி வாய்ப்பா இருக்கோமில்ல, அதான் எல்லாருக்கும் பல்லெரிச்சல். வர்ற ஒன்னு ரெண்டு இடத்தையும் அது இதுன்னு சொல்லி கலைச்சு போடுறானுங்க.”

சித்தி முடிக்கும் முன்னே சாரதா மறித்து தொடர்ந்தாள், “சித்தி, இன்னும் ஆறேழு மாசத்துல நாங்க வெளிநாடு போயிடுவோம். அவர் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்குள்ள பாத்தாதானே நான் வந்து கல்யாணத்துக்கு வேலை செய்ய முடியும். அவளுக்கு இருக்குற ஒரே அக்கா நான்தான். நான் பாத்து செய்யுற மாறி வருமா?” கொஞ்சம் மூச்சுவிட்டு; தயங்குவதுபோல் ஆரம்பித்தாள். “இவ சம்பாரிக்கறதுதான எல்லாம். அது இதுன்னு காரணம் சொல்லாம நாலு தரகர நாமதான் போய் பாக்கணும். வர்ற ஜாதகத்த மட்டும் பாத்தா போதுமா? நான் எத்தன ஜாதகம் சொல்லி இருப்பேன். ஆச்சு இல்லேன்னு எனக்காவது ஒரு பதில் சொன்னீங்களா? உங்க ஆர்வம் அவ்வளவுதானா?” என்று கடிந்தாள். சித்தி பேச்சு தடைபட்டு நின்றாள்.

இல்லா பதில்களை கண்ணீர் நிறைக்கிறது. பார்ப்பதற்க்கு உண்மை போலவே இருந்தது. உண்மையேதான். முனைப்பின்றி சித்தியின் கண்கள் வழிந்தோடின. “உன்கிட்ட சொல்றதுக்கு என்ன. நாங்களும் போகாத கோயில் இல்ல பாக்காத இடமில்ல. ஏதும் அமைய மாட்டீங்குது. உங்க சித்தப்பாவும் எதுவும் என்கிட்டே பெருசா கலந்துக்க மாட்டிங்கறாரு. நான்தான் கெடந்து தவிக்கிறேன். யார் வீட்டுக்கு வந்தாலும் நாம எங்க போனாலும் யாராவது இவளப்பத்தி கேட்டுடுவாங்களோன்னு பயந்து பயந்து வருது.” என்று முந்தானையில் மூக்கு சிந்தினாள்.

“நான் அதுக்கு சொல்ல வரல சித்தி. நீங்க ரொம்ப கழிக்கிறீங்கன்னு..” என்று சொல்லி முடிப்பதற்குள் “நாங்க எங்க கழிக்கிறோம். தோதா வந்தா போதும்னுதான் பாக்குறோம். நான் சொல்லவும் முடியாம இருக்கவும் முடியாம கெடக்கேன் தெரியுமா. ஒரு பல்வலி வந்தாலும் சரி, மூட்டுவழி வந்தாலும் சரி கம்முன்னுதான் இருக்கேன். என்னால தடங்கல் வரக்கூடாதுன்னு. நான் அவ்ளோதான் செய்யமுடியும். என் பேச்ச இங்க யாரு கேக்குறா.”

தேவி தரையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு ஏதோ உலகத்தில். இவர்கள் யாரும் இல்லாத உலகத்தில்.

தேவிக்காக நியாயம் கேட்க வந்த சாரதா தன் சித்தியின் நியாயங்களை கேட்கும்படி ஆகிவிட்டது. சித்தி தனக்குத்தானே பேசுவதுபோல் இடைவிடாது பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். சாரதாவும் எப்படி எப்படியோ தன் சித்தியின் வார்த்தை ஓட்டத்தை பிடித்து தேவியின் கல்யாண விஷயத்துக்கு கொண்டு வர முயற்சித்தாள். சித்தியின் மன ஓட்டம் பல திசைகளிலும் சிதறி வடிகால் கண்டு கொண்டிருந்தது.

சாரதா அமைதியானாள். தேவி மெலிதாக சிரித்தாள்.

சித்தி, “உங்க அம்மாயி செத்துப் போனாக்கூட நாலு பேர் மத்தியில மனசார அழுது தொலைக்கலாம். அதுக்கும் வழி இல்லாம உங்க அம்மாயியும் கிண்ணுனு இருக்கு. போன வாரம்தான் போய் பார்த்துட்டு வந்தேன்.” என்றதோடு நிறுத்தினாள். சாரதா ஏற்கனவே நிறுத்தி இருந்தாள். தேவி வெகுகாலம் முன்பே நின்றிருந்தாள்.

மூவரும் பேச்சின்றி ஆனார்கள். சொல்லி முடித்த சித்தி, சொல்ல முடியாத சாரதா, சொல்ல ஏதுமில்லாத தேவி, பேச்சின்றி அமர்ந்திருந்தனர். எழுந்து செல்லவோ பேசவோ மனமின்றி அமர்ந்திருந்தனர். மூச்சு சப்தம் மட்டும் சிறிது நேரம் கேட்டு அடங்கியது.

இந்த அசௌகரியமான நிசப்தத்தை குலைக்க சாரதா மட்டும் ஏதோ சொல்ல எத்தனித்தாள். தொண்டைவரை இயம்பிய சொற்கள் தோற்று பின்வாங்கி மீண்டும் அடிவயிற்றுக்கே சென்று அடங்கியது.

சித்தி சுவற்றைப் பார்த்தும் தேவி தரையைப் பார்த்தும் நிலை கொண்டிருந்தனர். அணிகள் ஏதும் இல்லாத அமைதி அருகில் வந்து அமர்ந்து கொண்டது. அமர்ந்த அமைதி அனைவரையும் கிடுக்கிப் பிடியாக பிடித்துக் கொண்டது.

நிசப்தம் புறமாக அமைதி அகமாக மௌனம் ஆழமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

தனி மனம் அடங்கியதால் கூட்டு மனம் மேல் எழும்பியது. அங்கே சொற்கள் கரைந்திருந்தன ஆகையால் எண்ணங்கள் கரைந்திருந்தன ஆகையால் முரண்கள் கரைந்திருந்தன. ஆகையால் அவள் இவள் அது இது அங்கே இங்கே அன்று இன்று என்ற பேதம் இல்லாமலிருந்தது. அங்கே சித்தியின் நியாயத்தை சாரதாவும் சாரதாவின் ஆதங்கத்தை சித்தியும் கண்டனர். கூட்டு மனதிற்கு அப்பால் தேவி இருந்தாள். பிரிந்து சிதற அங்கு இச்சை இல்லாததால் அவர்கள் ஒற்றை மூச்சு இயக்கமாக அமர்ந்தே இருந்தனர். வழக்கமாக கேட்கும் காக்கையின் கரைச்சலோ பசுவின் மெய்ச்சலோ கோழியின் கொத்தலோ வேப்பமரத்தின் அசைவோ இல்லாமல் அவர்களுக்கு இயற்கைச் சூழல் சமைத்து தந்திருந்தது. அரிதினும் அரிதாக நிகழும் அது நிகழ்ந்தது. கூட்டு மனம் ஆழ்மனத்தில் தடுக்கி விழுந்தது. க்ஷணத்திலும் சிறிய க்ஷணமான அணுவிலும் சிறிய அணுவான அந்த அகால வெளிக்குள் பிரவேசித்தனர்.

அங்கு தேவி முற்றாய் இருந்தாள்.

அவர்கள் அங்கே வந்த மாத்திரத்திலேயே தத்தம் இச்சைகள் வந்து அவர்களை கலைத்து பின்னிழுத்து சென்றது. மீண்ட சாரதா பெருவெடிப்பாய் உடைந்து அழுதாள். வாய் பிளந்து வாய் விட்டு வாய் இழுத்து. மீண்ட சித்தி வெறுமனே அவர்களை பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினாள்.

தர்க்கத்திற்கு சிக்காத அந்த உணர்வெழுச்சியால் சாரதா தரையை அறைந்து அறைந்து அழுதாள். அறையும் கரங்களை தேவி பற்றிக்கொண்டாள். சாரதாவை தன் நெஞ்சோடு அணைத்து சமாதானப்படுத்துபவள் போல் தலையை வருடிக்கொடுத்தாள். “அக்கா இப்ப என்ன ஆச்சு… வேணாம் வேணாம் விடு விடு… நான் நல்லாத்தான் இருக்கேன் எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும். நீ கவலைப்படாத அக்கா. எல்லாம் சீக்கிரம் சரியாப் போயிடும். எல்லாம் சீக்கிரம் சரியாப் போயிடும்,” தேவி சாரதாவின் தலையை தடவி சொல்லிக் கொண்டிருந்தாள். சாரதா மெல்ல மெல்ல தன்னிலை மீண்டாள். மெல்ல மெல்ல விம்மலும் நின்றுவிட்டிருந்தது.

“ச்சே.. நான் ஏன் அழறேன்னே தெரியல”

“பரவால்லக்கா”

மீண்டும் அமைதியானார்கள். அவ்வமைதிக்குள் மீண்டும் பிரவேசிக்க பயந்த சாரதா அசட்டையாக சிரித்துவிட்டு, “உன்கிட்ட என்னமோ இருக்குடி. சித்தி சித்தப்பாக்குதான் அது தெரியல. ஏன் தெரியாம? எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. உன் சம்பளத்தை பார்த்து பழகினவங்க அவ்வளவு சீக்கிரமா உன்னை கட்டி கொடுத்துடுவாங்களா? வீடு நிறைய இத்தன புது ஜாமணங்க. எல்லாம் உன் சம்பளம் தானே? இந்த வீட்டிலே என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுதா இல்லையா?

“அக்கா….” என்று சிறிது இடைவெளி விட்டு “உன்ன விட எனக்கு நல்லா தெரியும்கா”

சாரதா தேவியை பரிதாபமாக பார்த்தாள். இந்த பொண்ணு எவ்வளவு பெரிய வார்த்தைய சொல்லிடுச்சு. தெருஞ்சுமா இங்க இப்படி பூதம் மாதிரி உட்கார்ந்து இருக்கு. இப்படி தன்னுடைய வாழ்க்கைய சுரண்டரதுக்கு அனுமதிக்குதே. இவங்க எல்லாம் நல்லா இருப்பாங்களா?

அவள் எண்ணங்களை உணர்ந்தது போல் தேவி, “அக்கா நீ ஒன்னும் நினைக்காதே. என் சம்மதம் இல்லாமயா இதெல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறே? எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் அப்புறம் எல்லாம் சரியாயிடும். நீ வேணா பாரு”

சாரதாவுக்கு தன் தலையை யாரோ இன்னும் வருடிக்கொடுப்பது போலவே இருந்தது. ஏதோ நூற்றாண்டு சங்கடத்திற்கு ஆறுதல் சொல்வது போல. தீர்வு சொல்வது போல.

சாரதா முழுமையாக தன்னிலை மீண்டிருந்தாள். அவர்கள் சம்பாஷணையை வேறு எங்கேயாவது எடுத்துச் செல்ல சாரதா பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். தேவி அதை புரிந்து முழுமையாக ஒத்துழைத்தாள். இருவரும் சேர்ந்து பழைய ஆல்பம் பார்த்தார்கள். சிறுவயது சேஷ்டைகளை நினைவு கூர்ந்தார்கள். நேரம் செல்ல செல்ல சாரதா சேயாகவும் தேவி தாயாகவும் அங்கு பாவனையில் இருந்தார்கள். சாரதாவும் அந்தப் பாவனையிலேயே லயித்திருந்தாள். சாரதாவின் அன்ன உடலையும் மனோ உடலையும் ஆனந்த உடலையும் ஏதோ அரூப கரங்கள் வருடிக் கொண்டேயிருந்தன.

அன்று சாயங்காலம் சாரதா சொல்லிக்கொண்டு கிளம்பும்போது தான் வந்து தீர்வுகாண இங்கே ஏதுமில்லை என்பதையும் தேவியின் வாழ்வு பற்றிய ஒரு குழப்பமான சமாதானத்தையும் அவள் மனம் ஏற்றிருந்தது. ஏதோ ஒரு வகையில் அவள் வாய் விட்டு அழுதது ஒரு சௌக்கியமான விடுதலையாக இருந்தது. அந்த விடுதலையே அந்நேரம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

2

சில மாதங்கள் கடந்திருந்தது. சித்தி வீட்டாரை தொடர்பு கொண்டு வரன் பற்றிய விஷயங்களைக் கேட்க சாரதாவால் ஏனோ முடியவில்லை. கேட்காமலேயே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவளால் ஊகிக்க முடிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தின் தேவியின் சம்பளத்தை தோராயமாக கணக்கு போட்டுப் பார்த்தாள். யாருக்குத்தான் ஆசை வராது. சாரதாவின் கைப்பேசி சிணுங்கவே அதை எடுத்துப் பார்த்தவளுக்கு கருக்கென்று இருந்தது. சித்தி அழைத்துக் கொண்டிருந்தாள். சாரதாவின் நெஞ்சின் மேல் திடீரென்று பாறாங்கல்லை வைத்தது போல் ஒரு அழுத்தம்.

“ஹலோ சித்தி..” என்றவுடனே சித்தி அழுதுகொண்டே சாரதா என்றாள்.

“சித்தி.. என்ன ஆச்சு?.. சித்தி அழாதீங்க.. தேவிக்கு என்ன…?”

“அவ பிதுறு கெட்ட மாறி இருக்கா சாரதா. என்ன செய்யறதுன்னே தெரில.”

“சித்தி! என்ன. பிதுறு கெட்ட மாதிரின்னா?”

“பிரம்ம புடிச்ச மாறி இருக்கா. உக்காந்தா கெடைய விட்டு எழுந்திரிக்க மாட்டேங்குறா. கண்ண மூடுன்னா தொறக்க மாட்டேங்குறா. தொறந்தா மூட மாட்டேங்குறா. உங்க சித்தப்பா சொல்றத பாத்தா பயமா இருக்கு.” என்று அழுதுகொண்டே சொன்ன சித்தியின் சொற்கள் தோராயமாகத்தான் கேட்டது என்றாலும் சாரதா புரிந்துகொண்டாள்.

“பேசுறாளா?”

“ஒன்னு ரெண்டுன்னு எப்பவாச்சியும். நீ வந்துட்டு போ கண்ணு..”

“வர்றேன் சித்தி. இன்னிக்கே வர்றேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். நான் வந்து பேசிப்பாக்குறேன்”

“வீட்டுல யாருகிட்டேயும்….”

“அதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டாம்”

ஒரு நாள் தயங்கினாள். அடுத்த நாள் சித்தியே போனில் அழைத்து இப்போ வர வேண்டாம் என்றாள். இப்போது ஒரு அளவேனும் நல்ல முறையில் இருப்பதாகவும். மனநல மருத்துவரை பார்க்க ஒப்புவதாகவும் சொன்னாள். சாரதா அதிகப்படியான தன் விசாரிப்பின் வழியாக தான் தயங்கிய அந்த ஒரு நாளை சரிகட்டிக் கொண்டாள்.

சிறிது நாட்கள் கழித்து சித்தியே மறுபடியும் அழைத்து இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றும் மருத்துவர் நல்ல கைராசிக்காரர் என்றும் சொன்னாள். எல்லாம் பழைய நிலைமைக்கே வந்துவிட்டது என்றும் தனக்கு இப்போதுதான் உயிர் வந்தது என்றும் பல சொற்களில் பொழிந்துகொண்டே சென்றாள். “கைராசின்னா அப்படி ஒரு கைராசி. மருந்து மாத்திரை ஒன்னும் இல்ல சும்மா பேசியே சரி செஞ்சிட்டாரு. இவளும் கிளிப்பிள்ளை மாதிரி நடந்தா பாரு. சும்மா சொல்றேன்னு நினைக்காத உனக்கும் மனசு சரி இல்லேன்னா ஒரு எட்டு போய் பாத்துட்டு வா. சரியா”

“தேவிகிட்ட பேசட்டா?

“அவ போனுக்கே போடு. ஆமா மைக்ரோ ஓவென் வச்சுருக்கியா நீ.”

“ஹ்ம் என்ன?…… தேவி மறுபடியும் வேலைக்கு கீலைக்கு…..”

“அதெல்லாம் கெட்டிக்கார பொண்ணு வேற கம்பெனில இன்னும் அதிக சம்பளமாமே. உங்க சித்தப்பா சொன்னாரு. அது சரி நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்ன்னு இருந்தேன், மைக்ரோ ஓவேன்ல அரிசி வேகுமா?”

“ஏன் சித்தி! இத்தனைக்கு அப்புறமும் தேவிய வேலைக்கு அனுப்பனுமா?”

“அட அதுதான் அவளுக்கு சந்தோஷம். ஆமா அப்பளம்கூட சுடலாமாமே உண்மையா?”

சித்திக்கு தேவையான பதிலை சொல்லிவிட்டு தனக்கான கேள்வியை தேக்கி வைத்துக்கொண்டாள்.

ஒரு மாதம் இந்த உறுத்தலை சாரதா ஆறப்போட்டிருந்தாள். அங்கிருந்து சாதகமாகவோ பாதகமாகவோ எதுவும் செய்தி வரவில்லை. சித்தப்பா பணம் சேர்த்துக் கொண்டிருப்பார் என்றுமட்டும் தோன்றியது. சித்தி மைக்ரோ ஓவன் வாங்கியிருப்பாள். உருவாகி வந்திருந்த ஒவ்வாமை கால இடைவெளியினால் மட்டுப்பட்டிருந்தது. ஒவ்வாமையை புதுப்பிக்கும் வண்ணம் மீண்டும் சித்தியிடமிருந்து அழைப்பு வந்தது. சாரதாவிற்கு உள்ளுக்குள் அடித்துக்கொண்டது.

“ஹலோ சித்தி…”

……..

“ஹலோ சித்தி கேக்குதா? தேவிக்கு ஏதாவது.. என்ன ஆச்சு..”

சித்தி விசும்பியவாறு, “உங்க அம்மாயி தவரீருச்சு”

சாரதா ஆசுவாசமானாள்.

“தேவிதான் பக்கத்துல இருந்தா. அவதான் போன் பண்ணினா.”

“என்ன! தேவி பக்கத்துல இருந்தாளா? அம்மாயி உயிர் போறப்பவா? யாரு அவள அங்க போகச் சொன்னது? தேவி இப்போ எப்படி இருக்கா?” சாரதா பதட்டமாகக் கேட்டாள்.

“டாக்டர் தான் ஒரு சேஞ்சு வேணும்ன்னு சொன்னாரு. அவதான் அம்மாயி வீட்டுக்குப் போறேன்னா. ஏண்டி கண்ணு என்ன ஆச்சு” தன் சோக பாவனையை கைவிட்டு குழப்பமாகக் கேட்டாள்.

“சித்தி உங்களுக்கு புரியுதா இல்லையா. அவ இருக்கற நிலைமையில அவளை தனியா அங்க. சரி விடுங்க இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”

“அம்மாயி வீட்லதான். உங்க சித்தப்பாதான் பந்தல், ஆளுக்காரங்க, சாப்பாடு எல்லாம் ரெடி பண்றாரு. எல்லா செலவும் அவர்தான் பாக்குறாரு.”

“சரி நாங்க இப்பவே கெளம்புறோம்.”

குடும்பம் சகிதமாக சாரதா அம்மாயி வீட்டுக்கு வரும்போது புதியதாய் வேய்ந்திருந்த பந்தல் அவர்களை வரவேற்றது. அதற்கு நடுவில் நின்று சித்தப்பா ஆள்காரர்களிடம் உரக்க பேசிக்கொண்டிருந்தார். இந்நிகழ்வின் முக்கியஸ்தர்போல தன் புது பணக்கார அந்தஸ்த்தை பயிற்சி செய்துகொண்டிருந்தார். தேவியின் பணத்தை யார் யாரிடமோ எடுத்து நீட்டிக் கொண்டிருந்தார். ஜனங்கள் வரத் தொடங்கியிருந்தார்கள்.

சாரதா உள்ளே நடையும் ஓட்டமுமாக சென்று தேவியை தேடினாள். சித்தி அம்மாயியின் தயார் செய்த உடலருகே அமர்ந்திருந்தாள். சாரதாவைப் பார்த்ததும் தேவி உள் அறையில் இருப்பதாக சமிக்ஞை செய்தாள். சாரதா உள்ளே செல்லும்போது அவ்வறை சந்தன வாசத்தால் நிரம்பியிருந்தது. தேவியைப் போல் இருந்த ஏதோ ஒன்று “அக்கா…” என்றது. சாரதா சிறுகுழந்தையென அதன் மடிமீது விழுந்தாள். அது சாரதாவை ஏந்திக்கொண்டது. விழுந்தவள் கதறி அழுதாள். நேரம் செல்லச் செல்ல அவள் அழுகை தீவிரம் அடைந்தது. கடைசியாக அழுகை ஓய்ந்து மெல்லிய கண்ணீராக வழிந்தது. சாரதா அனைத்திற்கும் சேர்த்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். அது சாரதாவை வருடிக் கொடுத்தது. சாரதா அதனருகில் அமர்ந்திருந்தாள். சாரதா என்னவாகவோ ஆகிப் போயிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அது தேவியாக காட்சி செய்தது.

தேவியைப் பார்த்த சாரதா தன்னை திரட்டிக்கொண்டாள். மெதுவாகவும் தயக்கமாகவும் கேட்டாள், “என்னடி இதெல்லாம்?”

தேவி, ” என்னக்கா? அம்மாயி போயிடுச்சு. அம்மா இதுக்குத்தான ஆசைப்பட்டுச்சு. ஆசைப்பட்டா நடக்க வேண்டியதுதான.”

“என்னடி என்னென்னவோ பேசுற. எனக்கு பயமா வருது”

“என்னக்கா பயம். சும்மா இரு. அதுதான் நான் இருக்கேன்ல்ல”

என்னடி முகத்துல எந்த சோகமும் இல்லாத மாதிரி இருக்க.. அம்மாயி செத்துப் போச்சுன்னு உனக்கு தெரியுதா?”

“தெரியாம என்னக்கா…. நான்தான அனுப்பி வெச்சதே….”

பேயறைந்தார் போல் சாரதா தேவியைப் பார்த்தாள். அதே அரூபக் கரங்கள் சாரதாவின் தலையை வருடிக்கொடுத்தன. சாரதாவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்ள மூச்சுத்திணறல் நெஞ்சையடைக்க அந்தக் கரங்களை தட்டிவிட்டு கூட்டத்தை பிளந்து காற்றிற்காக வெளியே ஓடினாள். உலகம் சுற்றியது. உடல் ஒருபுறம் மனம் ஒருபுறம் உயிர் ஒருபுறம் பிரிந்து நின்று கூத்தடித்தது. பந்தலை விட்டு வெளியேறி ஒரு செக்கின் மீது அமர்ந்து சிதறித் தெறித்த மூச்சுக் காற்றை சீர் செய்தாள். மூச்சு இழுத்து இழுத்து விட்டாள். சீரடைந்ததும் உடைந்து அழுதாள்.

சித்தி ஆசைதீர அழுது திளைத்தாள். சித்தப்பா அந்தஸ்தில் திளைத்தார். சாரதா அச்சத்தோடு இது அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்தாள். இனி தான் செய்ய சுத்தமாக ஏதுமில்லை என்பதை உணர்ந்தாள். அம்மாயி காடு சேரும்வரை பிணம் போல் இருந்துவிட்டு குழந்தை கணவனை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு ஓடியே போனாள்.

3

சாரதாவின் குடும்பம் வெளிநாடு சென்றுவிட்டதாக சித்தி அறிந்தாள். சொல்லிக் கொள்ளமால் சென்றுவிட்டாள் என்று சித்தி வருந்தவில்லை.சித்தப்பா கார் வாங்கியதிலிருந்து அவளுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிந்திருந்தது. இதை இப்படியே விட்டு வைக்கலாகாது. சிறிது நாட்களாக ஜாதகம் வருவதும் நின்றிருந்தது. தரகர் வருவதே இல்லை. அவரிடம் நியாயம் கேட்டதற்கு முதல் நாள் அடி வாங்கினாள் இரண்டாம் நாள் உதை வாங்கினாள் மூன்றாம் நாள் இவளும் கை ஓங்கினாள் நான்காம் நாள் சண்டையை வீதிக்கு இழுத்து வந்தாள் ஐந்தாம் நாள் தேவியை வேலை செய்ய விடவில்லை ஆறாம் நாள் புதிய ஜோதிடரைப் பார்க்க கணவனும் மனைவியும் சென்று வந்தார்கள். தேவி அக்காட்சிகளுக்கு எல்லாம் வெறும் சாட்சியாக இருந்தாள்.

புதிய ஜோதிடரிடம் சென்று வந்த நம்பிக்கையை சித்தி மந்திரம்போல் ஜபித்துக் கொண்டிருந்தாள். “ஆசைப்பட்டது நடக்கும்; எல்லாம் சரியா போகும்…..; ஆசைப்பட்டது நடக்கும்; எல்லாம் சரியா போகும்….”

“நான் ஆசைப்படறதெல்லாம் இப்போ ஒண்ணே ஒண்ணுதான்…. தாயே தெய்வமே எல்லாம் சரியா போகணும்”

குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்று சொல்லியிருந்தது ஜோதிடம். சித்தப்பா புதிய கார் ஓட்டும் ஆர்வத்திலும் சித்தி வரப்போகும் எல்லாம் சரியாகிப்போன காலத்தை எதிர்நோக்கியும் தேவி அவர்கள் கேட்டதை கொடுத்துவிடும் தீர்மானத்துடனும் எட்டுக்கையம்மன் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

சித்தி வழிநெடுகிலும் புலம்பிக்கொண்டும் வேண்டிக்கொண்டும் வந்தாள். “நீ வேணா பாரேன் இந்தக் கோவிலுக்கு போயிட்டு வந்தோமுன்னா எல்லாம் சட்டுபுட்டுன்னு நடக்கும். நாம நெனச்சமாறி” தேவி அமைதியாக இருந்தாள். “எத்தன நாளைக்கு இப்படியே இருக்குறது.. அது அது கரெக்ட்டா நடக்க வேண்டாமா… அந்த ஜோசியக்காரன் சொன்னா சொன்னதுதான். நம்மக்கு விடிவுகாலம் வந்திருச்சு. எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிடும்” தேவி அமைதியாக இருந்தாள். “ஆனாலும் பாரு எல்லாம் காலம் வர்ற வரைக்கும்தான் இப்படி. அதுக்குண்டான காலம் வந்துருச்சுனா எல்லாம் சரியா போய்டும்.” தேவி அமைதியாக இருந்தாள். இன்னாரிடம் சொல்கிறோம் என்றில்லாமல் அவளுக்கு அவளே சொல்லி சொல்லி எதையோ கட்டிக் கொண்டிருந்தாள். தேவி எல்லாவற்றையும் வெறுமனே பார்த்தவாறு இருந்தாள்.

கோயில் முற்றத்தில் இவர்களை இறக்கி விட்டுவிட்டு நல்ல நிழலான பாதுகாப்பான இடம் தேடி காரை நிறுத்த சென்றுவிட்டார். பொங்கப் பானை சாமான்களை சித்தி அவளாகவே எடுத்துக்கொண்டு ஒரு தோதான இடம் தேடி வைத்துவிட்டு, மாலை பூஜை பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்க புலம்பிக்கொண்டே சென்றாள். “வந்தாச்சு… வந்தாச்சு … பொங்க வெக்கிறோம் விளக்கு ஏத்துறோம் ஆத்துல குளிக்கிறோம் சாமி கும்பிடுறோம் அப்புறம் நம்மள புடிச்ச கருமத்தை இங்கேயே தொலைச்சுட்டு போறோம். கருமத்தை இங்கேயே தொலைச்சுட்டு போறோம். இங்கேயே தொலைச்சுட்டு போறோம்.” சொல்லி சொல்லி புலம்பி புலம்பி சித்தி தீர்க்கப்படுத்திக் கொண்டாள்.

காருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாத ஒரு சௌகரியமான இடத்தில் நிறுத்திவிட்டு தேவியின் அப்பா சாவகாசமாக வந்தார்.

பொங்கல் வைப்பதற்கு அடுப்பு கற்களை உருட்டிக் கொண்டிருந்தவள், “தேவி எங்கே?” என்று கேட்டாள்.

“ஏய் என்ன என்கிட்டே கேக்குற? தேவி எங்க?”

“ஏங்க! நீங்கதான கார் நிறுத்த கூட்டிட்டு போனீங்க..”

“இல்ல அவ உன்கூடவே இறங்கீட்டா…”

சுற்றும் முற்றும் பார்த்தனர். மனித முகங்களினூடே தேவி தென்படவில்லை. “சும்மா நிக்காதீங்க போய் தேடுங்க.” என்று சொல்லிவிட்டு எழுந்து ஆற்றுப் படித்துறைக்கு தேவியை தேடி சென்றாள். சித்தப்பா கோயிலுக்குள் தேட சென்றார். ஆற்றுப் படிக்கட்டு, குளிக்குமிடம், தல விருட்சத் திண்ணை, முடி காணிக்கை மண்டபம், தேர் மண்டபம், கடை வீதி என்று தேடிக் களைத்தாள். தேவி கோயிலுக்குள்ளும் இல்லை காருக்குள்ளும் இல்லை என்று வந்து நின்றார். சித்தி அழ ஆரம்பித்தாள். சித்தப்பா நின்ற இடத்திலேயே இன்ன எண்ணம் என்று தெரியாமல் சுற்றிமுற்றி பார்த்தார். எங்கும் மனிதர்கள். வெவ்வேறு முகங்கள். வெவ்வேறு பாவனைகள் வெவ்வேறு மனிதர்கள். அம்மனிதர்களுக்கு இடையே தேவி இருக்கவில்லை.

4

ஏழு பகல் ஏழு இரவு தேடினார்கள். சாமியார் மடத்தில் புதிய பெண் சாமி வந்திருப்பதாக சொன்னபோது சென்று தேடினார்கள். கருவறையில் ஒருத்தி நுழைந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு சென்று தேடினார்கள். படித்துறையில் அடிதடியின்போது. தலவிருட்ச திண்ணையில் ஒற்றை ஆடை பெண் ஒருத்தி குறி சொல்வதாய் சொன்னபோது. முதல் பெண் திகம்பர அடிகள் வந்துள்ளார் என்று சொன்னபோது. ஓடி ஓடி களைத்தார்கள். எல்லாம் சரியாகிப் போகும் என்றிருந்த நிலைமை போய் இதெல்லாம் முடிந்தால் போதும் என்றாகிவிட்டது.

எல்லோரையும் கேட்டார்கள். போலீசிடம் பூசாரியிடம் கடைக்காரர்களிடம் வந்து செல்வோரிடம். கேட்டவர்களிடமே திரும்ப கேட்டார்கள். யார் யாரோ எங்கெங்கோ எப்படியெப்படியோ பார்த்ததாக துப்பு சொன்னார்கள். சொன்ன இடம் சென்று ஏமாந்தார்கள். சமீபமாக கிணற்றில் விழுந்ததையும் இரயிலில் அடிபட்டதையும்கூட பார்த்து கழித்தார்கள்.

சித்தப்பா அழ ஆரம்பித்திருந்தார். சித்தி நிறுத்தியிருந்தாள். சித்தப்பா ஆகாரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தார். சித்தி மீண்டும் ஏற்க ஆரம்பித்திருந்தாள். இருவரும் ஒன்றன் பின் ஒன்றான வேறுவேறு உலகத்தில் இருந்தார்கள்.

கொந்தளிப்பும் இல்லாத சமாதானமும் இல்லாத ஒரு மனம் வந்தமைந்தது. எல்லா செயலும் முறிந்து நின்றது. சேர்ந்து தேடியோர் அகன்று கொண்டனர். தகவல் கிடைத்தால் சொல்லி அனுப்புவதாக போலீஸ் சொல்லிவிட்டது. கொஞ்சம் அக்கறை செலுத்தியோர் வீடு சென்று வர அறிவுறுத்தனர். இவர்கள் உலகம் இங்கேயே நின்றுவிட. இவர்கள் விட்டுவந்த உலகம் முன் சென்றுகொண்டிருந்தது.

“வீட்டுக்கு போய் மேல என்ன செய்றதுன்னு யோசிப்போம்” என்று சித்தப்பா சொல்லும்போது எதுவும் சொல்லாமல் இருந்தாள். “வந்த வேலை முடிந்தது. எல்லாம் சரியாக போய்விட்டது. கருமம் தொலைந்து விட்டது. அதற்குத்தானே வந்தோம்” என்று மனம் அங்கதமாக நினைக்காமல் இல்லை. நினைத்தவுடனேயே கடிந்துகொண்டது. கடிந்துகொண்டவுடன் அதுவும் செய்ய வேண்டிய செயல்தான் என்று தர்க்கம் பேசியது. வெகுநேரம் அமைதியாய் இருந்துவிட்டு போகலாம் என்றாள். அவள் அதை சொல்வாள் என்று சித்தப்பா அறிந்திருந்தார்.

அவ்விடம் விட்டு சென்றவர்களை அங்குள்ளோர் மீண்டும் இதுநாள் வரை பார்க்கவில்லை

5

ஆண்டியர் மடத்தில் அன்று எல்லோரும் குதூகலமாக இருந்தார்கள்.

“தெய்வம் வருகுதுடோய் ஒரு தெய்வம் வருகுதுடோய்
அட ஆண்டி புதிய தெய்வம் வருகுதுடோய்

கூடு ஏது வீடு ஏது டோய் – அட ஆண்டி
உனக்கு காடுகூட தான் ஏது டோய்

விதி உண்டா கதி உண்டா டோய் – இல்லை
வெறும் செயல் மட்டும் தான் உண்டா டோய்

செயல் ஒடுங்கும் மந்திரம் தெரியுமோ டோய்
மந்திர உட்பொருள் சூத்திரம் தெரியுமா டோய்
சூத்திரம் துலக்கும் மறைபொருள் அறியுமா டோய்

உடல் கரையுமோ உளம் கரையுமோ டோய்
உயிர் கூட சேர்ந்து கரையுமோ டோய்

வந்த வேலை முடிந்ததோ டோய்

தந்தாநே டோய் தாநாநே டோய்
தெய்வம் வருகுதுடோய் புதிய தெய்வம் வருகுதுடோய்.”

6

சாரதா மூன்றாவது குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆற்றில் அகலப்பரப்பில் தட்டையாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. விசுவிசுவென்று ஈரக் காற்று அவளை முழுதும் நனைத்து சென்றது. ஆற்றுப் படுகை பகலின் வெம்மையை மேல் அனுப்பிக்கொண்டிருந்தது. கீழ்வானம் மஞ்சளாகவும் மேல்வானம் நீலமாகவும் அந்தி நிரப்பிக் கொண்டிருந்தது. அவள் இப்போது தனிமையையோ அமைதியையோ விரும்புவது இல்லை. தடுக்கி விழுந்துவிட்டால்? மேல் மனம் தேவியை நினைப்பதே இல்லை அடி மனம் மறப்பதே இல்லை. தேவியின் மென்மயிர் தேகம், அகலமான தோள்கள், நீள்வட்ட முகம், நேர்நின்ற மார்பு, வற்றிய வயிறு, அவளின் முக ஓட்டங்கள் அக பாவனைகள் என்று எதையும்.

அடி மனம் அவளைக் காண விரும்பியதோ என்னவோ தேவியின் முகம் மின்னல்போல் ஒரு கீற்றாக எங்கோ தோன்றி மறைந்தது. சாரதாவிற்கு நெஞ்சு அடைத்தது. பரவச படபடப்பு அவளை நிரப்பியது. அங்குமிங்கும் பார்த்தாள். தென்படவில்லை. இல்லை, அது இங்கேதான் இருக்கிறது. தேவியாய் காட்சி கொள்கிறது. அருகில் பார்க்காதே தொலைவில் பார். தொலைவில் பார்க்காதே அருகில் பார். அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் அக்கரைப் பரப்பில் ஒற்றை ஆடையுடன் தேவியாகிய அது சாரதாவைப் பார்த்து நின்றுகொண்டிருந்தது.

ஜடாமுடியுடன், சாதாரணமாக, மிக சாதாரணமாக. காலநிலையால் அடிபட்டு தேகமே உயிராக. புதிராகவோ புனிதமாகவோ புராணமாகவோ இல்லாமல் வெறுமனே நேரடியாக.

தன்னைப்போலவே.

அவள் அருகில் சில பிச்சைக்கார ஆண்டிகள்.

இரு வேறு கரைகளில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செய்வலர்: செமிகோலன் 

வானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் அப்பா பட்டாம்பூச்சியாக மாறிப்போனார். மாறிய கையோடு காற்றில் கலந்து மறைந்தும் போனார். எனக்கும் அவருக்குமான இடைவேளை பல ஒளி ஆண்டுகளாக ஆகிப்போனது. மறைந்து போனவர் சிலவற்றை விட்டும் சென்றிருந்தார். சில கடன்களை, பல சொத்துக்களை. அதனால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. அவர் விட்டுச்சென்ற வேறொன்று இத்தனை நாள் மறைந்திருந்தது. இப்போது தான் வெளிவந்தது. அது ஒரு தவிப்பு. அணையாத தீச்சுடர் போலான பரிதவிப்பு. இதோ இந்த டாக்டர் முன் அமர்ந்திருக்கும்போது கூட நான் அறிந்திருக்கவில்லை. இனி வரும் நாட்கள் இப்படி மாறிப்போகும் என்று.

இடது கை மேற்புறம் வீங்கிய கொப்பளங்களுடன் இந்த கிளினிக்குக்கு வந்தேன். கண்களால் அளந்து பார்த்த டாக்டர் கையுரையை மாட்டிக்கொண்டார். கோபளங்களை நீவிப்பார்த்து பிதிக்கினார். நான் அவர் முக உணர்ச்சிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய கணநேர கீற்றென ஒரு அருவருப்பான சுளிப்பு அவர் கண்களில் தோன்றி மூக்கு வழியாக இறங்கி உதட்டுக் கோணலாக முடிந்தது. ஏனென்று தெரியாமலேயே என் அகம் அதை படம்பிடிக்க புறம் அதை பிரதி செய்தது. அவர் பழக்கப்பட்ட சகஜ பாவனைக்கு மீண்டார், நான் அந்த பிரதியிலேயே நின்றேன்.

ம்ம்ம்….” என்று உறுமி ஒரு முடிவுக்கு வந்தார். பெட்ரோலியம் ஜெல்லி என்ற களிம்பை எடுத்து கொப்பளங்கள் மீது தடவினார். காற்று புகாத வன்னம் அதை இறுக கட்டினார்.

என்ன ஆச்சுங்க?” என்று கம்மலாக கேட்டேன்.

அவர் ஒன்றும் பேசாமல் ஃபோர்செப்ஸை ஸ்டரிலைஸ் செய்தார்.

சார்…..”

சமீபமாக எங்கயாவது போனீங்களா?”

நான் பெருசா எங்கேயும் இல்லீங்களேஎன்று சொல்லிவிட்டு யோசித்தேன். “வீடு கடை அவ்வளவுதான்.”

என் கையின் மேற்புறம் இட்ட கட்டு இறுகி வந்தது.

வீடு எங்கே இருக்கு? ஏதாவது தோட்டங்காட்டுக்கு உள்ளேயா? அங்க ஏதாவது பட்டாம்பூச்சி தேனீ ஈ அந்த மாதிரி தொந்தரவு ஏதாவது இருக்கா?”

புரியாதது போலவும் இல்லை என்பது போலவும் தலையசைத்தேன்.

அந்த கட்டை தொட்டு இந்த இடத்தில ஏற்கனவே புண்ணு இருந்துச்சா?” என்று கேட்டார்.

ஆமாங்க டாக்டர். அது சும்மா கீறல் தான். ஆனா கொஞ்சம் ஆழமா.”

கொப்புளங்களுக்கு உள் ஏதோ குடைந்தது. ஊரியது.

இருங்க காமிக்கிறேன்என்றவாறு கட்டை அவிழ்த்தார்.

அதற்குள்ளாகவா என்று யோசித்தேன்.

கொப்பளங்கள் வீங்கி சிவந்திருந்தது. அதன் நுனி வெடித்திருந்தது. ஏதோவொன்று கொப்பளங்களுக்குள் இருந்து அதன் தோற்றுவாய் வழியாக உமிழ் நீர்போல வெளித்தளியது.

இம்முறை நான் முகம் சுளித்தேன்.

டாக்டர், “பொறுங்க இதுக்கே இப்படின்னா?”

ஒரு கையில் கொப்பளங்களை லேசாக பிதுக்கி மறுகையில் அந்த இடுக்கி போலுள்ள ஃபோர்செப்ஸைக் கொண்டு கொப்பளங்களின் தோற்றுவாய்க்குள் விட்டு அதை இழுத்தார். அது ஜவ்வு போல வெளியே வந்தது. அதை மேஜை மேல் உள்ள ட்ரேயில் போட்டார். அது கீழே கிடந்து நெளிந்தது. என் வயிற்றிலிருந்து அமில நீர் கிடுகிடுவென மேலே வந்ததை கட்டாயப்படுத்தி உள் அழுத்தினேன்.

புழு

சார்! என்ன சார் இது!!”

இது லார்வா. ஏற்கனவே இருந்த காயத்தின் மேல ஏதோ ஒரு பூச்சி முட்டை வச்சிருக்கு. அது உங்களுக்குள்ள வளர்ந்துட்டு இருந்திருக்கு. காயம் ஆச்சுன்னா டிரீட்மெண்ட் எடுக்கணும். கண்டுக்காம விட்டா இப்படித்தான். இருங்க இன்னும் முடியல

அவர் மீண்டும் என்னுள் நுழைந்து மேலும் இரண்டு புழுக்களை பிரசவித்தார்.

மீண்டும் மேலெழுந்து வந்த அமில நீரை வெளியே ஓடி சென்று கக்கினேன். அப்பாவின் ஞாபகம் வந்தது.

சுத்தம் செய்துகொண்டு உள்ளே வந்தேன். உபகரணங்கள் எடுத்துக்கொடுக்கும் பெண்மணி தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விட்டு அருந்தினேன்.

அந்த டிரேவில் உள்ள புழுக்களை ஒரு முறை பார்த்தேன். அது உயிரற்ற கிடப்பது போலிருந்தது. டாக்டர் ஏதேதோ சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என் பார்வையை அவற்றின் மீது இருந்த விளக்குவதுமாக பதிப்பதுமாக இருந்தேன்.

பொறுண்மயாக வெளியே வந்தவை சூட்சுமமாக என் உள்ளே சென்று கொண்டிருந்தது.

பார்வையைத் திருப்பி டாக்டரை பார்த்தேன். டாக்டர் என்னை பார்த்துவிட்டு அந்த அம்மாவை பார்த்து கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தார். அவள் அந்த டிரேயை எடுத்துக்கொண்டு வெளியே உள்ள பூந்தோட்டத்திற்கு சென்றாள். டாக்டர் என் கொப்பளங்களை சுத்தம் செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டேன். வெளியே அந்த அம்மாள் சிறிய குழி ஒன்றைத் தோண்டி அந்த புழுக்களை உள்ளே போட்டு மூடிக்கொண்டிருந்தாள்.

புதைக்கிறாளா நட்டுவைக்கிராளா?

கொப்பளங்களை பிளந்து புண்ணாக்கி சுத்தம் செய்து மருந்திட்டு கட்டுப் போட்டார். எனக்கு அப்பாவின் புழுக்கள் ஞாபகம் வந்தது. அவை என்னுடைய புழுக்களை விட சிரியவைகள். ஆனால் உயிர்ப்புடயவைகள். இப்படி செத்தது போல் கிடைக்காது.

அதை நினைக்கும் போது மூச்சு கனத்து வந்தது. சட்டென்று போனை எடுத்து அதன் பக்கங்களை திருப்பி அப்பாவுடைய புழுக்களின் படங்களை எடுத்து டாக்டரின் முகம் முன் நீட்டினேன்.

டாக்டர்! அப்பாவுக்கும் இந்த பிரச்சனை இருந்திருக்கு. இங்க பாருங்க..”

அவர் கையை சுத்தம் செய்து கொண்டு வந்து போனை வாங்கி உற்றுப் பார்த்தார். “இது லார்வா மாதிரி தெரியலையே.”

நான் போனை வாங்கி மீண்டும் பல பக்கங்களை திருப்பி அப்பாவுடைய பழைய ரிப்போர்ட்டை அவருக்கு காண்பித்தேன்.

அவரும் கொஞ்சம் ஆர்வமாக சற்றுநேரம் போனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “இது ஒருவகை கிருமி. உங்க பிரச்சனை வேற. ஏன் இவ்வளவு சீரியஸ் ஆகற வரைக்கும் விட்டீங்க? அவரோட கிருமிகள் முத்தி புழுக்களை உண்டாகிடுசே.”

அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினார். அதில் கடைசி பக்கத்தில் அப்பாவின் புண்ணுகள் அழுகிய நிலையிலும் அதிலிருந்து ஒரு புழு வெளிவரும் நிலையிலும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு போனை என்னிடம் நீட்டியவாறு, “ஏன் இந்த கண்டிஷனுக்கு விட்டீங்க? என்ன ஆச்சு?” என்றார்.

சார் அவர் ஒரு சாமியார் மாதிரி சார்.”

…” என்றவாறு லேசாக சிரித்துவிட்டு, “அவரது வேற உங்களுக்கு வேற. உங்களுக்கு லார்வா; அவருக்கு இன்பெக்சன்.”

ஆமா சார் அவர் கடைசி வரைக்கும் என் பேச்சைக் கேட்கவே இல்லை. கடைசி நேரத்தில் எப்படியோ அட்மிட் பண்ணினோம். ஆன்டிபயாடிக்ஸ் கூட வேலை செய்யல. குணப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தத்துல கலந்திடுச்சு.”

ஒன்னும் பயப்பட வேண்டாம். யூ ஆர் ஆல்ரைட்என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். வீடு வரும் வரை எல்லாம் புழுக்களே. என் புஜங்களில் இருந்து வெளியே வந்த புழுக்கள் மீண்டும் என் எண்ண அடுக்குகளில் போய் அமர்ந்து இருந்தன. என் தலையில் நீந்தின; மூக்கில் ஊரின; கண்களில் மிதந்தன; தொண்டையில் சுருண்டன; வயிற்றில் இறங்கின. ஐயோ என்னென்னமோ செய்தன. வழி நெடுகிலும் எச்சில் துப்பிக் கொண்டே வந்தேன்.

வீடு வந்து கதவை அடைத்துக்கொண்டேன். ஒரு சின்ன விடுதலை. வீடு அலங்கோலமாக இருந்தது. அம்மா இருக்கும் வரை வீடு அழகாய் இருந்தது. அப்பா இருக்கும் வரை ஏனோ இருந்தது. இப்போது பீடை பிடித்திருக்கிறது.

அவசர அவசரமாக சுத்தம் செய்தேன். பழைய சாமான்களை வெளியே வீசினேன். ஏறக்குறைய அனைத்தையுமே தான். சமையலறையை மூன்று முறை சுத்தம் செய்தேன். கழிவறையை நான்கு முறை. எல்லா அறைகளும் சுத்தம். நக்கி எடுக்காத குறை மட்டும்தான். இனி கிருமிகளும் இல்லை புழுக்களும் இல்லை.

முருகா….”

இரண்டொரு நாட்களில் எச்சில் துப்புவது நின்றிருந்தது. யோசித்துப் பார்க்கையில் அப்பாவும் இப்படித்தான் துப்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு பீங்கான் இருந்தது. அவர் துப்புவதை நிறுத்தி விழுங்க ஆரம்பிக்கும்போது முற்றிலுமே புழுவாக மாறியிருந்தார். அவர் புழுவாக மாறியிருந்தது எங்களுக்கோ ஏன் அவருக்கோ வெகுகாலம் தெரிந்திருக்கவில்லை. ஒரு நாள் அவருக்கு தெரிந்திருக்கக் கூடும் அதனால்தான் என்னவோ பட்டாம்பூச்சியாக மாறி எங்களை விட்டுப் பிரிந்து சென்றார்.

அப்பாவுக்கு வலி சகிப்புத்தன்மை அதிகம். அவரது வலிகளுடன் அவர் சமரசம் செய்து கொண்டவர். அம்மா இருக்கும்போது அவரை மகரிஷி என்று கிண்டல் செய்த ஞாபகம். ஒருமுறை வெளியே சென்றவர் பாதங்கள் அனைத்தும் இரத்தக் கறையுடன் வந்து நின்றார். “எதுத்தாப்புல வந்த வண்டி இடிச்சிருச்சு. சுண்டுவிரல் பிஞ்சு தனியா வந்துருச்சு.” என்று கையில் வைத்திருந்து சுண்டுவிரலை காண்பித்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் எனது மன்றாட்டலை சிரித்தவாறே புறந்தள்ளினார். அந்த சுண்டுவிரலை தோட்டத்துத் தென்னை மரத்தடியில் புதைத்து வைத்தார். அவரை அவரே கிள்ளி எடுத்து புதைத்து வைத்தது போல. அப்படித்தான் அவரது முதல் புண் உருவானது. முதல் புழுவும் அப்படித்தான் இருக்கும். இப்போது அந்த தென்னை மரத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அப்பாவாக கற்பனை செய்து கொண்டிருந்தேன். இப்போது அப்பாவின் புழுக்களாக.

அப்பா!! காயம் பெருசாகிகிட்டே இருக்குது. ஒழுங்கா ஆஸ்பத்திரி வந்து பாருங்க


இந்த காயம், என் காயத்தை திங்கும்

நான் எரிச்சலுடன்,”சும்மா லூசு மாதிரி உளறிட்டு இருக்காதீங்க. அம்மா போனதிலிருந்து இப்படி கொஞ்சம் கொஞ்சமா உங்களையும் அழிசிகிட்டு என் நிம்மதியும் கெடுக்காதீங்க. சாகரதா இருந்தா ஒரேடியாக செத்திடுங்கஎன்று சொல்லி முடித்து விட்டுத்தான் அதன் நியாயத்தை உணர்ந்தேன்.

அவர்,”ப்ராப்த கர்மா…..”

கருமம்பாஅங்க பாருங்கப்பா அந்த காயம் அழுகி புழு புடிச்சு கிடக்குது. அப்புறமா காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. இந்த அவஸ்தை வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.”

எனக்கு என் புழு, உனக்கு உன்னுது, அவனவனுக்கு அவனதுஎன்று சொன்னவரை பார்க்க பைத்தியம் போல் இருந்தார்.

நான் சலிப்புடன், “அப்பா! உங்களுக்காக இல்லைனாலும் எனக்காக. உங்க பிரெண்ட்ஸ்காக, வாங்க ஆஸ்பத்திரிக்கு போவோம். இவ்வளவு ஆஸ்தி இருக்கு, அனுபவிக்கனும்னு ஆசை இல்லையா.”

நான் வானின் பிரஜை. மண்ணவர்கள் மீது எனக்கு பிடிப்பு இல்லை.”

அரக்கிருக்கு..” என்று அவர் காதில் படும்படி சொல்லிவிட்டு வெறுப்பாய் வெளியேறினேன்.

அவரது வாக்கு முகூர்த்தம்! இப்போது என் புழுவை நான் கண்டுகொண்டேன்.

சித்ராவின் அழைப்பை துண்டித்து விட்டு வீடு புகுந்தேன். மீண்டும் அவைகள். செய்த சுத்தம் அரை நாட்களுக்குள்ளாகவா காலாவதியாகும். என்னையும் வீட்டையும் மீண்டும் சுத்தம் செய்தேன். களைத்திருந்தேன். டிவியில் தோணி விளாசி கொண்டிருந்தார். படுத்துக் கொண்டிருந்த நான் சோறு உண்ணாமலேயே தூங்கிப்போனேன்.

பின்விடியலில் எழும்போது புழு என்னை முந்தியிருந்தது. ஓடிச் சென்று குளித்து புழு நீக்கம் செய்தேன். ம்ஹீம்ம்!!! முடியவில்லை!!!. புந்தியில் புழு படம் எடுத்து ஆடியது. அப்பாவின் கிறுக்கு எனக்கும் பிடித்துக்கொண்டது.

வீடு முழுதும் துப்பினேன். சமையலறையில் முற்றத்தில் கழிவரையில் ஒரு இடம் விடாமல். தோட்டம் முழுதும் துப்பி அலைந்தேன். அப்பா விரல் நட்ட இடத்தில் துப்பிக் கொண்டே இருந்தேன். என்மேல் துப்பினேன். கால்களில் துப்பினேன் கைகளில் துப்பினேன். கட்டை அவிழ்த்து கொப்புளங்கள் மீது துப்பினேன். கத்தி எடுத்து கொப்பளங்களை கீறினேன். பெரிய விரிசலாக்கி உள்ளே தேடிப்பார்த்தேன். அங்கே புழுக்கள் இல்லை. எப்படி இருக்கும்? அவைகளைத்தான் அந்த ஆஸ்பத்திரியில் நட்டு வைத்துள்ளார்களே. அவைகள் துளிர்விட்டு முளைப்பதர்க்குள் களையெடுத்தாக வேண்டும்.

சித்ரா பலமுறை அழைத்திருந்தாள். அவளிடம் பேச பிடிக்கவில்லை.

விரைந்து சென்று ஆஸ்பத்திரி பூந்தோட்டத்தில் அவைகளை புதைத்த இடத்தில் தேடினேன். காணவில்லை. ஐயோ காணவில்லை. எங்கோ தப்பித்து விட்டது. தப்பித்து மறைந்திருக்கின்றன. மறைந்து உற்பத்தி ஆகின்றன. உற்பத்தியானது என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இனி விடுதலை என்பதே இல்லையா?

வீடு வந்து சேர்ந்தேன். சோர்ந்திருந்தேன். கொஞ்சமேனும் கவன மாற்றம் தேவை. கணினியை கிழப்பி ஆபாச படம் பார்த்தேன். அமெரிக்க வகை ஜப்பானிய வகை கருப்பினம் அடிமைத்தனம். என்னை நானே உசுப்பிவிட்டு அயர்ந்தேன். கொஞ்சம் விடுதலை. எப்படியோ, ஏதோ ஒரு புழு நாசினி.

சித்ராவுடன் அவ்வப்போது பேசினேன். ஆனாலும் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். அவள் என்ன யூகித்திருந்தாள் என்று சொல்ல முடியவில்லை.

ஆபாசம் என்னும் நாசினியும் சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டது. திக்கற்று இருந்தேன். சித்ரா வீடு வந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடைந்து அழுதேன். விழப் போனேன். ஓடிவந்து என்னை தாங்கினாள்.

பிதற்றி அழுதேன்.

வேண்டாம்டாவேண்டாம்டா…‌ எல்லாம் சரியாகி போய்விடும்என்று என்னவென்று தெரியாமலேயே சமாதானம் சொன்னாள். என்னை ஏந்திக் கொண்டாள். கைத்தாங்கலாக என்னை உள்ளே அழைத்து சென்று அமரவைத்தாள். என்னை எதுவும் கேட்காமலேயே சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

நான் இருக்கேன் உனக்கு. அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு பீல் பண்ணாத. உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காத. நான் இருக்கும் போது நீ அப்படி நினைக்கலாமா? ”

தன் இருப்பை தேவைக்கு அதிகமாகவே பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தாள். அருகில் இன்னும் ஒரு ஜீவன் இருப்பது ஒரு வகையில் சமரசம் தான். அவள் என்னை கவனித்துக் கொண்டாள். நான் அவளை கவனித்தேன். சமைத்தாள்; பரிவோடு பரிமாறினாள்; அருகிலேயே இருந்தாள்; இருந்து புழுக்களின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.

என்னாச்சு?” என்று கேள்விக்கு நான் அமைதியாக இருந்தேன். “மனசுல இருக்கறத சொல்லு. ஷேர் பண்ணாத்தான ஆகும்.”

என்னன்னு கேட்டா என்னன்னு சொல்றது? கொஞ்ச நாளாவே…”

கொஞ்ச நாளாவே?”

அது இதுன்னு யோசிக்க தோணுது. தலைக்குள்ள ஏதோ ஒன்னு கெடந்து கொடையுதுஎன்று தலையைக் கீழே போட்டவாறு சொன்னேன்.

கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன்என்று என் முகவாயை தூக்கிக் கேட்டாள்.

அவளது அக்கறை வழக்கமான காதல் பாசாங்கு காட்டியது. அந்த பாசாங்கின் உந்துவிசையால் நான் அடி ஆழத்திற்கு சென்று அமைதியாக இருந்தேன். அங்கிருந்து தொடங்கினேன்.

நாம என்ன செய்றோம் எதுக்கு இங்க வந்திருக்கிறோம். இதெல்லாம் என்ன. நம்மளோட இச்சை…. இந்த இச்சை இருக்கே அது தான் அடிப்படை. அது தான் இவ்ளோ இம்சை. புழு மாதிரி பிறக்கிறோம். சாப்பிடுறோம் தூங்குறோம் பெருசாறோம். ஆனா வளர்றோமா? மறுபடியும் ஏன் புழு மாதிரியான வாழ்க்கை. நாம பொழைக்கிறதுக்கு இந்த இச்சை தேவை. ஆனா அதிலேயே தான் சுத்திகிட்டு இருக்கனுமா. இச்சையின் விளைவு இச்சை தானா. விடுதலையே இல்லையா. புழுக்களாக பிறந்தா புழுக்களாக தான் சாகணுமா. அந்த சட்டகத்துக்குள் நம்மை யார் அடைச்சது. அந்த இறுக்கத்தில் இருந்து எப்படி வெளியே வர்றது.” என்று பிதற்றி முடிக்கும்போது சோர்வுற்று இருந்தேன்.

டேய் என்னடா இதெல்லாம்ஏன் இப்படி உளர்ர …வேண்டாம்டா… பயமா இருக்கு…

இல்ல சித்ரா எதைப் பார்த்தாலும் எனக்கு ஒரு வெறுப்பா இருக்கு. உன்ன பார்த்தாலும் என்ன பார்த்தாலும் நமக்குள்ள இருக்கிற உறவு பார்த்தாலும். உண்மையிலேயே நமக்குள் இருக்கிறது என்ன. இது என்ன உறவு.”

அவள் காதல்என்று பரிதாபமாகச் சொன்னாள்.

அவள் பதிலைத் தாண்டி நான் பேசிக்கொண்டு சென்றேன் நமக்குள் எவ்வளவு சாத்தியம் இருக்கு. ஆனா நாம ஒரு புழு மாதிரி வாழ்ந்திட்டு இருக்கோம்.” அவளிடம் சொல்ல சொல்ல எனக்கு திரண்டு வந்தது. இந்த பாசாங்கு இப்போது எனக்கு ஒரு புழு நாசினி. என் குரல் லேசாக தழுதழுத்தது.

அவள் “அழாதே” என்றாள். என்றவுடன் நான் அழ ஆரம்பித்தேன்.

அவள் என்னை அணைத்தாள். அணைத்துக்கொண்டதால் ஆக்கிரமித்தேன். ஆக்கிரமித்ததால் நெகிழ்ந்தாள். நெகிழ்ந்ததால் எல்லை மீரினேன்.

அவள் கீழ்படிந்தாள் நான் வன்முறை செய்தேன்.

அவளது அங்க திரட்சி எனக்கான இடைக்கால விடுதலை. உறவாடி முடித்தோம். சக்தி விரயம் ஏதோ ஒருவகையில் சமரசம். உறவுக்குப் பின்னான வெறுமை ஒரு ஆசுவாசம். நோக்கங்கள் இல்லை அதனால் தத்தளிப்பு இல்லை. அவஸ்தைக்கு சற்றுநேரம் விடுமுறை. சுற்றி யாரும் இல்லை. நானும் என் புழுக்களும் மட்டுமே. எங்கள் ஆதார விசையின் மேல் அமர்ந்திருந்தோம்.

செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகையால் என் புழுக்களை நேர்கொண்டு சந்தித்தேன். அதன் வடிவம்; இயங்குவிசை; ஆற்றல். அதன் சார்பு; காரணகாரிய சுழற்சி என்று விஸ்வரூப தரிசனமாக என்மேல் கவிழ்ந்தது.

என் புழுக்களை வெளித்தள்ளாது, அதனோடு உள்ளடங்கிய நான்.

சமரசம்

அவைகளும் நானும் மட்டும். ஏதோ நீண்ட நாள் பழகியவர்கள் போல. ஒருவரையொருவர் அறிந்தவர்கள் போல. உண்மைதான் அவைகள் என்னோடு பிறந்து என்னோடு வளர்ந்தவைகள். ஒருவிதத்தில் என்னை கட்டுமானித்தவைகள். கட்டுமான கச்சாப் பொருட்கள். என்னுடைய சிறிய வடிவங்கள். அவைகளுடைய சிற்சில சுழற்சிகள் எனது மொத்தமான சுழற்சி. எப்போதும் இருப்பவைகளை சமீபமாகத்தான் கண்டுகொண்டேன். பல நூறு பல ஆயிரம் புழுக்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயக்கம். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது வளர்கிறது முழுப் பரிமாணம் கொள்கிறது. பின்பு தேய்ந்து சுருங்கி ஒன்றுமில்லாமல் ஆகி மற்றொன்றை உருவாக்குகிறது.

நான் கண்கள் மூடி படுத்திருந்தேன். அவைகள் மேலும் அணுக்கமாக தெரிந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் அடிப்படை விசை என்னவோ ஒன்றுதான்.

காமப் புழு உயிர் பெருக்கம். ஆசைப் புழு அனைத்தின் உள்ளடக்கம். வீரப் புழு வீண்வேலை. கருணைப் புழு அரவணைப்பின் பெருஞ்செயல். பயப் புழு உருவப் பாதுகாப்பு. பக்திப் புழு அருவப் பாதுகாப்பு. மேல் அடுக்கின் புழு. அடி ஆழத்தின் புழு. இன்னும் எவ்வளவோ.

நான் அமைதியாக இருப்பதயே உரையாடலின் சமிஞ்ஞையாக எடுத்துக்கொண்டு என்னாச்சு? ஏன் அமைதியா இருக்க? ஹாப்பியா தான இருக்க?” என்றாள்.

நான் உதடுகளை அழுத்தி சின்னதாக சிரித்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டேன்.

சில வினாடிகள் அமைதியாக கடந்தன.

அவள் என்னை நோக்கி திரும்பி, இடது கையை தலையணையில் ஊன்றி பாதி உடலை மேலெழுப்பி என்னை கண்களால் அளந்தாள். இப்போது கேள்விகளே இல்லையென்றாலும் நான் பதில் சொல்லும் இடத்தில் வந்த நின்றேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஓரிரு வினாடிகள் உக்கிரமாக கடந்தன.

சும்மா ஏதோ டிப்ரஷன்…

என்ன டிப்ரஷன்?”

சரியா சொல்ல தெரியல…

ட்ரை பண்ணேன்…என்றாள்.

……..

நீ ஹேப்பியா தான இருக்க? உன் சந்தோஷம் எனக்கு முக்கியம். உன் கஷ்டத்தை என் கூட ஷேர் பண்ணிக்கோ.” என்று வளவளத்தாள்.

மெல்லிய கோபப் புழு என் முன் வந்து நின்றது. அவள் பேச்சை துண்டிக்கும் பொருட்டு நான் ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். “நான் சொல்றது உனக்கு புரியுமான்னு தெரியல. கொஞ்ச நாளாகவே எனக்கு இப்படி தோணிட்டு இருக்கு. இதோ இந்த காயம் ஆனதுல இருந்து.”

அவள் ஆர்வமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

நான் சொற்களால் என்னை நானே கிளறிக் கொண்டேன். “நாம நினைக்கிற மாதிரி இல்லை இந்த டிசைன். இங்க வேற ஒன்னு இருக்கு. நம்மளுக்கு உள்ளேயே வேற சில விஷயங்கள் வாழ்ந்துகிட்டு இருக்கு. நம்ம உடம்புக்கு உள்ள பாக்டீரியாக்கள் இருக்கில்ல; அத மாதிரி. அதுங்களுக்குன்னு லைப் சைக்கிள் இருக்கு. அது சொல்ற மாதிரி தான் நாம நடந்திக்கிறோம். நம்ம வாழ்க்கையும் அமையுது. நாம தப்பிக்கவே முடியாது.” என்று ஆரம்பித்து சுழற்றி சுழற்றி வெவ்வேறு சொற்களில் தொடர்பற்று நீட்டிக்கொண்டிருந்தேன். என்னை நானே தோண்டிக் கொண்டிருந்தேன்.

மெல்லிய விசும்பல் ஒலி கேட்டுத்தான் நிறுத்தினேன். அவளை நோக்கி திரும்பினேன். அவள் கண்களை சந்தித்தேன். அதில் துக்கமும் தண்ணிறக்கமும் கருணையும் ஒன்று சேர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தது. அது வெறும் பாசாங்கு தான் என பளிச்சென்று தெரிந்தது. குற்றமற்ற பாசாங்கு. அவளிடமும் என்னிடமும் அனைவரிடமும் இருக்கும் பாசாங்கு. தூய்மையானதும் கூட. இப்பிரம்மாண்டமான உலகில் நம் இருப்பின் தனிமையை மறைக்கும் திரை இவ்வாறான பாசாங்குகள்.

அப்படியான ஒரு கனமான திரையை அக்கணமே எடுத்து என் மேல் கவிழ்த்துக் கொண்டேன்.

அவளையும் அவளது புழுக்களையும் அணைத்துக் கொண்டேன்.

அவள் விசும்பியவாரே, “ஏன் இப்படி எல்லாம் பேசுற எனக்கு பயமா இருக்கு. நீ ஹாப்பியா இல்லையா? ஏதாவது சைகார்டிஸ்ட்ட பாக்கலாமா? ப்ளீஸ் சொல்லு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”

நான் அவளை அணைத்தவாறே வேண்டாம் என்பது போல் தலை ஆட்டினேன்.

அவள், “ப்ளீஸ் எனக்காக!!!”

நான் வேண்டாம் என்றேன்.

வேண்டாம்னா? என்ன பண்ணலாம்; நீயே சொல்லு; எதுவா இருந்தாலும் பரவால்ல சொல்லு.”


நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

அதை கேட்ட மாத்திரத்திலேயே அவள் அழுகையும் சிரிப்புமாக ஏதோ பாவித்தாள். “நெஜமாவா?”

ஆமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்; நான் அதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்; அதுதான் என்னோட மருந்து. நீதான் என்னோட மருந்து. கல்யாணம் பண்ணிக்கலாம். குழந்தை பெத்துக்கலாம். நல்ல முறையா சம்பாதிக்கலாம். சந்தோசமா வாழலாம்.”

அவள் என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவளை அன்பாக விலக்கி அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி அவளை நோக்கினேன். அவளுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது. வழிந்த தடத்தில் வழிந்தது. புதிய தடத்தில் வழிந்தது. என்மேல் ஒரு கரிசனை புழு. எனக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. உச்சம் தொட்டு தரை தொட்டு உச்சம் தொட்டது.

அவள்,”ஆமாண்டா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நீ இப்படி டிப்ரஸ்டா இருக்கக்கூடாது. உனக்கே தெரியும் எனக்கு வீட்ல எவ்ளோ பிரச்சனைன்னு. அப்பா ஒருமாதிரி, சித்தி வேறமாதிரி, தம்பி என்கூட பேசவே மாட்டான். ஆபீஸ்லயும் பாலிடிக்ஸ். நீ மட்டும் தான் எனக்கு நார்மல். நாம சந்தோசமா வாழனும்; புது வாழ்க்கை; சந்தோஷமாக கவலையே இல்லாம; நீயும் நானும் மட்டும். எனக்கு வேற எதுவும் தேவையில்லை. நீ பக்கத்துல இருந்தா எல்லாம் ஆட்டோமேட்டிக்கா சால்வ் ஆயிடும்.” என்று தழுதழுத்த குரலில் ஆரம்பித்து தெளிவாக முடித்தாள்.

ஆமா, எல்லாமே மறந்து ஒரு நார்மல் லைஃப் வாழனும். நல்ல சம்பாதிக்கணும். புது வீடு வாங்கணும். ஒரு கார் வாங்கணும். பூர்வீக சொத்து ரெடி பண்ணனும். பேங்க் பேலன்ஸ் ஏத்தணும். பெருமையா வாழனும். ஆமா! ஆமா! ஆமா! ஆமா சித்ரா.” என்று நான் சொல்லி முடிக்கும்போதே தெரிந்தது நான் மெல்ல மெல்ல சமரசமாகிக் கொண்டிருக்கிறேன் என்று.

ஆனால் சித்ரா அவளது ஞாபக அடுக்குகளில் இருந்த துயரங்களை பட்டியலிட ஆரம்பித்தாள். முதலில் அவள் அப்பாவிலிருந்து ஆரம்பித்து அம்மா வழியாகவும் சித்தி வழியாகவும் வந்து தம்பியில் ஒரு வட்டம் சுற்றி அலுவலகத்தில் நீட்டி நிறுத்தினாள். நான் ம்கொட்டியவாறு அவைகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தேன்.

இரவு முழுவதும் நான் எனது புழுக்களுக்கும் அவள் அவளது புழுக்களுக்கும் தீனி சமைத்தோம். நாங்கள் உறவில் திளைத்தோம். பந்தத்தில் கட்டுண்டோம்.

எல்லாம் முடிவானது; நானும் முடிவு செய்திருந்தேன்.

சில நாட்கள் கழித்து பெண் பார்த்தல் என்ற சாங்கிய நிகழ்வு ஒரு சுபதினத்தில் நடந்தது. அப்பா ஸ்தானத்தில் சில மிடுக்குகளையும் அம்மா ஸ்தானத்தில் சில மோஸ்தர்களையும் சித்ரா வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். என் அப்பாவின் சொத்து சித்ரா வீட்டாரை ஏற்கனவே சம்மதமும் சாந்தமும் அடைய வைத்திருந்தது. சிலர் குதூகலிக்க கூட செய்தார்கள். என் வீட்டார்கள் யார் அவள் வீட்டார்கள் யார் என்று பிரித்து அறியமுடியவில்லை. எல்லாம் ஒரே போல் மினுக்கினார்கள். இப்போது நானும் அவர்களில் ஒருவன். அதுவே என் மருந்து. அவர்களுள் ஒருவனாகத்தான் இருந்தேன். கொஞ்ச நாட்களாகத்தான் இந்த நோவு. இனி மீண்டும் அவர்களாகவே ஆகிவிடுவேன். சிறந்த ஏற்பாடு சிறந்த தீர்வு சிறந்த மருந்து.

நான் சுற்றிலும் கவனித்தேன். வசதியானவர்கள் தான் போலும். அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தது. அங்கே மென்மைகள் அலங்காரமாகவும்; அலங்காரங்கள் பகட்டாகவும் இருந்தது. அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் கடந்தகால மேன்மைகளையும் நிகழ்கால வசதிகளையும் வருங்கால வாய்ப்புகளையும் முகத்தில் பூசினார் போல் காணப்பட்டார்கள். இனி நானும் இவர்களில் ஒருவன். நினைக்கும் போதே குமட்டியது அடிவயிற்றிலிருந்து அமில நீர் மேல் எழும்பி தொண்டையைத் தொட்டு கீழ் இறங்கியது.

என்னை சுற்றி எங்கும் அவர்களே நிறைந்திருந்தார்கள். கொசகொசவென்று. எனக்கு ஏதோ இருப்பு கொள்ளவில்லை. ஒரு கடும் நெடி அடித்தது. ஏதோ அழுகிய சீழ் பிடித்த காயத்தின் நெடி. இல்லை இல்லை, அதில் மொய்க்கும் புழுக்களின் நெடி. நான் முகம் அகம் சுளித்தேன்.

என்னருகில் பட்டாடை உடுத்திய ரோலக்ஸ் வாட்ச் கட்டிய தங்க காப்பு பூட்டிய ஒரு புழு ஏங்க!! நல்ல நேரம் முடிய போகுது. சம்பிரதாயத்தை எல்லாம் முதல்ல முடிச்சுடுவோம்.” என்றது.

அதற்கு பச்சை பட்டு சேலை உடுத்திய நகைகளால் போர்த்திய பொருந்தா உதட்டுச் சாயம் பூசிய மற்றொரு புழு ஒரு ரெண்டு நிமிஷம்; பொண்ணு வந்துவிடும்என்றது.


என் காதருகே வந்து இன்னொரு புழு, “நல்ல பெரிய இடமாத்தான் புடிச்சிட்டஎன்று சிரித்தவாறு சொன்னது.

சில கிழட்டுப் புழுக்கள் வந்து அமர்ந்தன. சில இளைய புழுக்கள் பேசி மகிழ்ந்தன.

அப்போது வெண் மஞ்சள் சேலை உடுத்திய அலங்காரம் செய்த அழகிய புழு ஒன்று சபையில் வந்து நின்று அனைவருக்கும் நமஸ்கரித்து அமர்ந்தது.

அருகில் ஒரு புழு, “பொண்ணு லட்சணமா இருக்குல்லஎன்று பொதுவாக சொன்னது. சபையிலுள்ள மூத்த புழு ஒன்று அனைவருக்கும் கேட்கும்படியாக கல்யாண நிச்சய வாசகங்களை உரக்கப் படித்துக் காண்பித்தது.

எனக்கு எல்லாம் மங்களாகவே தெரிந்தது மங்களாகவே ஒலித்தது. சபை முழுக்க புழுக்கள். புழுக்களால் ஆன புழுக்கள். ஒவ்வொரு புழுக்களுக்கு ஒவ்வொரு சுழற்சி ஒவ்வொரு விசை.

அப்போது ஒரு புழு, “என்ன மாப்பிள்ளை சந்தோஷமா?” என்றது.

அதற்கு மற்றொரு புழு,”சந்தோசம் இல்லாம என்ன இப்போ..”

அப்புறம் என்ன கம்முனு இருக்காரு. வாழ்க்கையை நினைத்து கவலைபடுறாரோ…”

அட கல்யாணம் ஆகப் போவதில்லை! கவலையும் வரும் சந்தோஷமும் வரும்; அதெல்லாம் போகப் போக சமாளிச்சுக்குவாங்க. இல்ல நம்மல பார்த்து தெரிஞ்சு கிட்டும்; என்ன இப்போ.”

எனக்கு இருப்பு கொள்ளாமல் தன்னிலை தாண்டவமாடியது. கடும் நெடி என்னைச் சுற்றி வீசியது. எனக்கு அப்பாவின் நினைவு ஒரு மின்னல் போல் வந்தது.

இனி எனக்கு கல்யாணம் நடக்கும். சந்தோஷங்கள் நிகழும். பொறுப்பு கூடிவரும். வாரிசுகள் பிறக்கும் அல்லது பிறக்காமலும் போகும். ஆனால் கவலை பிறந்தே தீரும். பொருள் ஈட்டுவேன். ஈட்டிய பொருளுக்குத் தக்கவாறு ஆளுமை முடைவேன். ஆணவம் சமைப்பேன். அதிகாரம் செய்வேன். தின்று கொழுப்பேன். இளைத்துச் சாவேன். புழுவாய் வாழ்வேன். ஆனால் பெரிய புழுவாய். எங்கும் ஊர்ந்தே செல்வேன் நெளிந்தே கிடப்பேன்.

என்னைச் சுற்றிலும் பார்த்தேன். நூறுஆயிரம் புழுக்கள். ஆனால் ஒரு பட்டாம்பூச்சி கூட இல்லை. நூறுஆயிரம் வாய்ப்புகள்; நூறுஆயிரம் சாத்தியங்கள். ஆனால் ஒரு பட்டாம்பூச்சி கூட இல்லை. ஆனால் அத்தனையும் சாத்தியங்கள். புழுக்கள் மண்ணில் உழல்பவை. பட்டான் வானிற்க்கு செல்பவை. அப்பாவைப் போல.

அத்தனையும் வாய்ப்புகள் அத்தனையும் வாய்ப்புகள். பட்டான் வாய்ப்புகள்.

அட சொல்லுங்க மாப்பிள்ள! கம்முனு இருக்கீங்க!”

எனக்கு உரக்க கத்த தோன்றியது. “நான் வானத்தின் பிரஜைஎன்று.