விமரிசனம்

கண்மணி குணசேகரனின் வாடாமல்லியில் சில நித்திய மலர்கள்

செமிகோலன் 

தெருக்கூத்து குழுவில் ஒப்பனை மற்றும் பிற சின்ன வேலைகளை செய்து வரும் காசிலிங்கத்தின் (அம்போகம்) மனைவி அவனை விட்டுச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவளுடைய உறவினர்கள் காசிலங்கத்தை சந்திக்க வருவதாக கூத்துப் பட்டறையின் வாத்தியாரிடம் சொல்லியிருக்கிறார்கள். காசிலிங்கத்திற்கு எதற்காக வருகிறார்கள் என்ற பதைபதைப்பும், எதிர்பார்ப்பும்.

வாழ்வில் சின்ன மகிழ்வான தருணங்களையே கூட அதிகம் அனுபவித்திராத வாழ்க்கை காசிலிங்கத்தினுடையது. மகன் ராஜா தான் என்று அவன் தாய் கூறினாலும், அவனுடைய குரலிலும், நடையில் உள்ள சிறிய குறை அவனை சிறுவயதிலிருந்தே பின்தொடர்கிறது. முப்பது வயதிற்கு மேல், கணவன் இறந்து விட்ட சூரியகாந்தியை மணம் செய்கிறான். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்று அவளை பார்க்கச் சென்ற அன்றே அவனுக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் காலப்போக்கில் மனம் மாறுவாள் என்று நம்புகிறான். ஆனால் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பவள்,ஒரு கட்டத்தில் மீண்டும் தாய் வீட்டிற்கே சென்று விடுகிறாள். அதன் பின்? எப்போதும் போல் செல்கிறது காசிலிங்கத்தின் வாழ்க்கை. ஒப்பனை செய்யும் போது, பெண் வேடமிடும் நடிகனுக்கு பெரிய முலைகளை பொருத்தும் போது, தன்னிச்சையாக அவற்றை அழுத்துகிறான், அதை பார்த்துவிடும் மற்றொரு நடிகனால் அதன் பின் ஜாடை மாடையாக கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறான். ஆனால்காசிலிங்கம் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை, அது அவனுடைய குணம் அல்ல, தன் வாழ்விலுள்ள மற்றனைத்தையும் போல் இதையும் சகித்துக் கொள்கிறான்.

அவனுடைய தாய் இருந்து விட்டாள். சூரியகாந்தியின் தாய் சமீபத்தில் தான் இறந்தாள் என்பதால், இப்போது அவளுக்கும் யாருமில்லை. ஒரு வேளை அதனால், மீண்டும் தன்னிடம் வருவதற்காகத் தான் ஆட்களை அனுப்புகிறாளோ என்ற ஆசை அவனுக்கு உள்ளது. வாத்தியாரிடம் அதை அவன் கூற, அவரோ, அவள் சீராக கொண்டு வந்த பொருட்கள், காசிலிங்கத்திடம் தான் இருப்பதால், அதை கேட்க கூட ஆள் அனுப்பலாம் என்கிறார்.

உறவினர்கள் வருகிறார்கள். சூரியகாந்தி அரசாங்க உதவி தொகையை பெற வேண்டுமென்றால், அவளுக்கு துணையென்று யாரும் இருக்கக் கூடாது, எனவே விவாகரத்து பத்திரத்தை காசிலிங்கம் கையொப்பமிட கேட்கிறார்கள். சீர் பொருட்களை கேட்க வரக் கூடும் என்ற யூகத்தின் நீட்சியாக இதை பார்க்கலாம் என்றாலும், அதுவரை வாசகனுக்கு அது குறித்து தோன்றாமல் இருப்பதே எழுத்தின் வலிமை. எதற்காக வருகிறார்கள் என்ற பதைபதைப்பில் அவனும் இந்தக் கோணத்தை தவற விடுகிறான்.

காசிலிங்கம் கையொப்பம் இடுவதுடன் கதை முடிகிறது. ஆனால் அப்போது அவனுடைய கலங்கிய கண்களிடமிருந்து நம்மால் பார்வையை விலக்க முடிவதில்லை. சீர் பொருட்கள் திரும்பித் தர வேண்டாம் என்று உறவினர்கள் கூறினாலும் அதையும் அவன் தந்து விடுகிறான். இத்தனை வருடங்களாக அவள் இல்லை, ஆனால் அவன் இதுவரை இடாத கையொப்பமும், அவன் வீட்டிலுள்ள அவளுடைய சீரும், அவளை இன்னும் தன் மனைவியாகவே எண்ணச் செய்கிறது, நாளை நல்லது நடக்கக் கூடும், என்று இத்தனை ஆண்டுகளை கடக்க உதவியிருக்கிறது. அப்படியே அவள் மீண்டும் வந்தாலும், அவர்களுக்கிடையேயான உறவு எப்படி இருந்திருக்கக் கூடும். ஆனால் பரஸ்பர பலனுக்கான உறவு என்றாலும் உறவு என்று ஒன்று இருந்திருக்குமே? இப்போது? எப்போதேனும் அந்த உறவு மீண்டும் துளிர்க்கலாம் என்ற நம்பிக்கையில், தனக்கு யாருமில்லை என்று உணர்வதை தவிர்த்துக் கொண்டிருந்த காசிலிங்கம் இடும் கையொப்பம், அவனை முழுதும் தனியனாக்குகிறது.

பழைய இரும்புப் பொருட்களை வாங்கி அவற்றுக்குப் பதில் வெங்காயத்தை கொடுக்கும் வியாபாரம் கதிர்வேலுக்கு (இரும்புராசி). ஒரு வீட்டில், இரும்பு பொருளொன்றை அதன் மதிப்பு தெரியாமல், மனைவி கொடுக்க வர, அதற்கு ஈடாக தன்னிடம் கொடுக்க எதுவுமில்லை என்று வேண்டாமென்கிறான். அப்போது அங்கு வரும் பெண்ணின் கணவன், அவனுக்கு நன்றி கூறி, மற்றொரு பொருளைத் தருகிறான். அதன் பின் இன்னும் சில வீடுகளில் பொருட்கள் கிடைக்க,இன்று நல்ல வியாபாரம் என்ற சந்தோசம் கதிர்வேலுக்கு.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலைசெய்ததாக கையொப்பமிட்டு பணம் வாங்கிக் கொள்ளுமாறு அவன் மனைவி அன்று கூறியிருக்கிறாள். அது குறித்த இரட்டை மனநிலையில் தான் கதிர்வேல் இருக்கிறான். தவறென்று தெரிகிறது, ஆனால் பொருளியல் யதார்த்தம் அதை பின் தள்ளுகிறது. உழைத்து வரும் பணமே ஒட்டுவதில்லை, இப்படி ஏமாற்றி பணம் வாங்கினால் அது எப்படி ஓட்டும், என்று அப்படிச் செய்வதை தவிர்த்து விடுகிறான்.

தன்னிடம் பழைய இரும்பு சாமான்கள் இருப்பதாகவும், வந்தால் தருவதாகவும் அவனிடம் ஒருவன் கூறுகிறான். இன்று ஏற்கனவே நிறைய பொருட்கள் கிடைத்திருப்பதால், தான் வண்டியை தள்ள முடியாதென்று கதிர்வேலன் கூறினாலும், அவனை வற்புறுத்துகிறான். தானே வண்டியை ஓட்டிச் செல்வதாகவும் கூட சொல்கிறான். மனைவியிடமிருந்து அப்போது அலைபேசி அழைப்பு வர, சில நிமிடங்கள் அவளுடன் உரையாடுகிறான், அவன் கவனம் வண்டியின் மீது இல்லை.

இப்போது என்ன நடக்கப் போகிறது என்று வாசகனுக்குப் புரிந்து விடுகிறது, இருந்தாலும் அவ்வாறு நேரக் கூடாது என்றே, வண்டியை ஒட்டிக் கொண்டு எங்கோ சென்று விட்ட அந்த ஆளைத் தேடும் கதிர்வேலுவுடன் நாமும் இணைகிறான். அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தூரத்தில் எங்கேனும் புதருகில் அந்த ஆள் நின்றிருக்கக் கூடுமோ, ஏதேனும் கடை கூரையின் அடியில் கதிர்வேலுக்காக காத்துக் கொண்டிருக்கிறானோ, அவனே கூட திரும்பி வரலாம். நடக்காது என்று தெரிந்து இப்படி சாத்தியமில்லாதவைகளை எண்ணிக் கொள்கிறோம். இறுதியில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாளை கதிர்வேலு நூறு நாளை வேலை செய்ததாக கையோப்பமிடுவானோ?

ஆலிஸ் மன்றோவின் ‘The bear over the mountain’ சிறுகதையில் தன் நினைவுகளை இழக்கத் துவங்கும் பயோனாவை அவள் கணவன் க்ரான்ட் காப்பகத்தில் சேர்க்கிறான். பின் தினமும் சென்று அவளுடன் அங்கு நேரம் செலவிடுகிறான். காப்பகத்தில் பயோனாவிற்கு ஆப்ரி என்பவுடன் நட்பு உருவாகிறது. அங்குள்ள செவிலி இத்தகைய நட்பு, உறவு, இயல்பான ஒன்று தான் என்று கூறினாலும், தன் பல்லாண்டு கால மனைவி, தன்னை மறந்து, மற்றொருவனுடன் இன்னும் நெருக்கமாவதை க்ரான்ட்டால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை.

தன்னிலை அழிந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் தன் மனைவி பச்சைக்கிளியின் அருகே அமர்ந்திருக்கிறார் இளையபெருமாள் (பச்சைக்கிளி). கடந்த சில நாட்களாக, ‘வண்டிக்காரன் கூப்டுறான், நா போவுட்டுமா..’ என்று மட்டும் அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சொல்வது அவருக்கு மட்டுமே புரிகிறது. இளம் வயதில் பச்சைக்கிளியை அவள் ஊரிலுள்ள வண்டிக்காரன், பொங்கநாதன், திருமணம் செய்ய விரும்புகிறான், அவளிடம் அதை கூறவும் செய்கிறான். அவனிடம் பேசி, பழகியிருந்தாலும், அது போன்ற எண்ணம் அவளிடமில்லை என்று நாம் யூகிக்கலாம், அவள் தன் உறவினன் இளையபெருமாளை மணக்கிறாள். சில காலம் கழித்து, விபத்தில் வண்டிக்காரன் இறந்து விடுகிறான். நிறைவான நீண்டமணவாழ்க்கை முடியும் தருணத்தில், இப்போது மீண்டும் வண்டிக்காரன் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்திருக்கிறான். பச்சைக்கிளி என்ன செய்யப் போகிறாள்? இளையபெருமாள் அனுமதி குடுப்பாரா?

மேற்கு எப்போது மூளை, அறிவை (enlightment) முன்னிறுத்தும், லோகாயாதம், யதார்த்தம் பேசும், கிழக்கு, புலன்களை தாண்டிய உணர்வுகளை, அனுபவங்களை ஏற்கும், உலகியலிலிருந்து விலகி இருக்கும், என்று மேற்கு, கிழக்கு பற்றிய ஒரு பொது புரிதல் உண்டு. இது ஒரு எளிய புரிதலே, இவ்வளவு எளிதாக இரண்டையும் பகுப்பு செய்ய முடியாது என்றாலும்,‘The bear over the mountain’, ‘பச்சைக்கிளி’ இரண்டு கதைகளின் முடிவையும் இந்த பகுப்பில் பொருத்திப் பார்க்கலாம். முதலாவதில் அறிவு, யதார்த்தம் சார்ந்த முடிவு, இரண்டாவதில் அதை மீறிய ஒரு உணர்வு, ஒரு கணம்.

மல்லிகாவின் ஊரில், அவள் தாய் வீட்டிற்கு அருகில் இருந்த ‘குடிகார’ ஆள் இறந்து விட்டான் என்ற தகவல் அவளுக்கு வருகிறது (வாடாமல்லி). கணவன் பன்னீர்செல்வம் முன் அந்த செய்தியை அவள் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போல் நடந்து கொண்டாலும், அவள் உணர்சிவசப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. ஏன்? பன்னீர்செல்வத்திற்கு இந்த விஷயம் முந்தைய இரவே தெரிந்திருந்தும், அவள் வருந்துவாள் என்று சொல்லாமல் இருந்திருக்கிறான் என்று நமக்குத் தெரிய வரும் போது யூகிக்க முடிகிறது.

பன்னீர்செல்வம் தான் அவளை ஊருக்கு அனுப்பி வைக்கிறான், வண்டியில் கொண்டு விடட்டுமா என்று கூட கேட்கிறான். வேறு வழியில்லை என்பது போல் மல்லிகாவும் கிளம்புகிறாள். பயணத்தின் போது ‘குடிகாரனின்’ நினைவுகள். அவளுக்கும், அவனுக்கும் காதல், இவள் குடும்பம் ஏற்கவில்லை. ஓடிப் போனவர்களை பிடித்து, பன்னீர்செல்வத்திற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ‘குடிகாரனும்’ பாப்பாத்தியை திருமணம் செய்கிறான். ஆனால் மல்லிகாவை அவன் மறக்கவில்லை, குடி இன்னும் மோசமாகி, மனைவி, குழந்தைகளை மோசமாக நடத்துகிறான். ஆனாலும் பாப்பாத்தி மீது மல்லிகாவிற்கு கோபம் தான் உள்ளது. அல்லது அது பொறாமையா?

திருமணத்திற்குப் பின் இந்த விஷயம் தெரிய வந்தாலும், அது பற்றி மல்லிகாவிடம் பன்னீர்செல்வம் எதுவும் கேட்டதில்லை. இப்போதும் கூட அவள் மனம் எவ்வளவு துன்புறும் என்று தான் எண்ணுகிறான். பெரிய மாலையுடன் ‘குடிகாரன்’ வீட்டிற்கு வருபவளை, பாப்பாத்தி, ‘அக்கா’ என்று அழைத்தபடி கட்டிக் கொள்வதுடன் கதை முடிகிறது.

மல்லிகா, ‘குடிகாரன்’, இருவரின் காதல், இவற்றை விட பன்னீர்செல்வம், பாப்பாத்தி தான் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறார்கள். பாப்பாத்திக்கும் தன் கணவனின் காதல் குறித்து தெரிந்திருக்கும், இருந்தும் வாழ்ந்திருக்கிறாள், ‘அக்கா’ என்று மல்லிகாவை அழைக்கிறாள். இழப்பின் முதற்கட்ட சோகத்தை கடந்தவுடன் இதே உறவு நிலை நீடிக்க வாய்ப்பில்லை, ‘குடிகாரன்’ குறித்து இருவரும் பேசிக் கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், அந்தக் கணத்தில், இருவருக்குமிடையே ஒரு தற்காலிக இணைப்பு உருவாகிறது. இனிமேலும் பன்னீர்செல்வம் ‘குடிகாரன்’ பற்றி ஏதுவும் பேசப்போவதில்லை. மூவருக்குமிடையே, எப்போதுமே அவர்களருகில்இருக்கும், ஆனால் பேசாப்பொருளாக,‘குடிகாரன்’ நிலைபெற்றுவிட்டான்.

கரமுண்டார் வூடு – தஞ்சை ப்ரகாஷ்

செமிகோலன்

முதல் ஐம்பது, அறுபது பக்கங்கள் அரையிருளில் தோன்றும் கரமுண்டார் வூடை, அதில் வசிக்கும் பல குடும்பங்களை (நூறு பேராவது வசிப்பார்கள் என்று யூகிக்கலாம்), அதன் முக்கிய மனிதர்களை, காட்டுகிறது. (கூட One Hundred Years Of Solitudeன் Buendia வீடும் மனக்கண்ணில் தோன்றுகிறது). பிரயாணம் செய்ய கொஞ்சம் கடினமான இந்தப் பகுதியை கடந்து விட்டால், வூடும், மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக துல்லியமாக தென்பட ஆரம்பிக்கிறார்கள். அதுவரை பொறுமை காப்பது வாசகனுக்கு பயனளிக்கும். அது தொடர்பான இரு விஷயங்கள்:

முழு நாவலைப் பற்றியில்லாமல், ப்ரகாஷின் புனைவுலகிலும், அவற்றைப் பற்றிய வாசக கருத்துக்களிலும் அதிகம் தென்படும் ‘மனுஷன் தானே’, ‘எல்லாமே அசிங்கம்’, போன்ற சொற்றொடர்களை அவற்றை முன்வைத்து சில எண்ணங்கள். அருவருப்பானது, அசிங்கமானது என்று பொது சமூகம் ஒதுக்கும் விஷயங்களை அவர் பதிவு செய்கிறார் என்பதை சுட்டும் சொற்றொடர்களாக அவற்றை புரிந்து கொள்ளலாம். அவை நியாயமானவையும் கூட. நாம் அருவருப்படையும், நம்ப மறுக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றன, அவற்றின் சதவீதம் குறைவாக இருப்பதாலேயோ, ‘கழிப்பறை வீட்டில் உண்டு, அதற்காக அதை ஹாலில் வைக்க முடியுமா’ போன்ற வாதங்களாலோ, அத்தகையவற்றை பதிவு செய்வதை ஒதுக்குவது சரியாக இருக்காது, எழுத்தாளன் செல்லும் மனப் பாதை அவனுடையதே, அதில் மலமிருந்தாலும், அதில் செல்ல அவனுக்கு உரிமையுண்டு. இந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாவலில் இரு நிகழ்வுகள். முக்கிய பாத்திரமான தெகல்ராஜு சித்தப்பனுடன் பள்ளக் குடிக்கு செல்கிறான். ஒரு பெண்ணுடன் பாதி கலவியில் இருக்கும் போது, சித்தப்பா அவளை உறவுக்கு அழைக்க அவள் சென்று விடுகிறாள். இப்போது அவள் மகள் வந்து, அவனுடன் கலவி கொள்கிறாள், சித்தப்பனுடன் இருந்த பின், தாய் மீண்டும் வந்து, threesome நடக்கிறது. இரு முறை. இந்தப் பாலியல் சுரண்டல் குறித்து என்ற விமர்சனம் வரும், அதை எப்படி ப்ரகாஷ் எதிர்கொள்கிறார் என்று நாவலை படித்து அறிந்து கொள்ளலாம். Threesome, தொடர்ச்சியாக இரு ஆண்களுடன் உறவு என்பதெல்லாம் நடக்காது என்றில்லை, அவற்றைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. இந்த நிகழ்வுக்கான Logistics பற்றி கொஞ்சம் யோசிக்கலாம், ‘மீறல்’, ‘இதெல்லாம் நடக்குமா’ என்று நாம் எண்ணுபவற்றை உடைத்தெறிய ப்ரகாஷ், ஒரு எல்லையிலிருந்து, மற்றொன்றுக்கு போகிறாரோ, அங்கு செல்ல அவர் உபயோகிக்கும் ex deus machina தான் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மற்றொரு நிகழ்வு. காத்தாயம்பா, கரமுண்டார் வீட்டின் குல தெய்வம் போல, தெகல்ராஜுகாகவே காத்திருப்பவள். ஆனால் அவனை தன்னை தொடக் கூட விடாதவள், அதே நேரம் உடல் தாபத்தை செல்வி என்ற பெண்ணின் மூலமாக, – தற்காலிகமாக – அடக்கிக் கொள்கிறாள் கலியன் பள்ளன். கரமுண்டார் ஒருவர் தங்கள் குடிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்து விட, கலியன் காத்தாயம்பாவை கடத்திச் செல்கிறான். அதன் பின்னான, அடுத்த மூன்று நாளின் நிகழ்வுகள், வாசகனுக்கு பூடகமாக சொல்வது, காத்தாயம்பா அவனுடைய வன்புணர்ச்சியை ஒரு கட்டத்தில் விரும்புகிறாள், அது இருவரும் இணையும் கலவியாக மாறுகிறது. மனித இச்சைகள் செல்லும் திசைகள் யாரும் அறியக் முடியாதவை என்று ப்ரகாஷ் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம், Stockholm syndrome, பற்றியெல்லாம் நாம் கேள்விபட்டது தானே. சரி, அடுத்து என்ன நடக்கிறது. ‘நீ சிறு வயதிலிருந்தே’ என் மீது ஈர்ப்பு கொண்டாய் என்று எனக்குத் தெரியும்’ என்பது போல் சொல்லும் காத்தாயம்பா, இனி அவனுடன் தான் இருப்பேன் என்று சொல்கிறாள். அவர்களை தேடி வருபவர்களிடமிருந்து தப்பி, பேருந்தில் ஏறி செல்கிறார்கள். கரமுண்டார் வீட்டை விட்டு காத்தாயம்பா ஏன் செல்ல நினைக்கிறாள் என்பது அதுவரை நாவலை கூர்ந்து வசிப்பவனுக்கு புரியும். கடத்தல், வன்புணர்ச்சி, விருப்பத்துடன் கலவி எல்லாம் அதற்கான வழியா என்று தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.யுவன் சந்திரசேகரனின் கதையொன்றில், வீட்டினுள் திருட வந்தவன், கணவன் மனைவியை கட்டிப் போட்டு விட்டு, மனைவியை வன்புணர்வு செய்து விடுவான். அதன் பின் மனைவி பிரிந்து சென்று விடுவாள். அதற்கு அப்பெண் சொல்லும் காரணத்தில் உள்ள உளவியல் நுட்பத்தை காத்தாயம்பா, கலியனுடன் செல்வதற்காக சொல்லும் காரணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வித்தியாசம் புரியும். எழுத்தாளனின் பாதை அவனுடையதே, அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூறவில்லை, எளிதான பாதையோ -இன்னொரு ex deus machina-என்று தான் தோன்றுகிறது, குறிப்பாக மாயி – தெகல்ராஜு உறவையும் கவனத்தில் கொள்ளும் போது.

மாயி என்ற பள்ளப் பெண் கலியனை காண வருகிறாள், – காத்தாயம்பா கடத்தலுக்கு முன்பு இது நிகழ்கிறது-. ஊரில் தெகல்ராஜுவை சந்திக்கிறாள், உடன் கலவி. கலியனை மறந்து விடுகிறாள், தெகல்ராஜுவை நீங்க மறுக்கிறாள். காத்தாயம்பா , கலியன் ஓடிச்சென்ற பிறகு, மாயி தெகல்ராஜுவின் வீட்டிலேயே வசிக்க ஆரம்பிக்கிறாள்.

கள்ளன்-பள்ளச்சி, பள்ளன்-கள்ளச்சி, என ப்ரகாஷ் கலைத்து போட விரும்புகிறார் என்று புரிகிறது, நிஜத்தில் இப்படி நடப்பது இயல்பான ஒன்று தான். மனித மனம் எப்போது வேண்டுமானாலும் மாறவும் கூடும் தான். அதற்காக அவர் உபயோகிக்கும் உத்திகள், அவர் உருவாக்கும் ஒரு உச்ச கணத்தின் முந்தைய கணங்களில் அதற்கான சுட்டுதல் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி தான் வாசகனை சிந்திக்க வைக்கிறது. கருப்பு-வெள்ளை என்று பொது புத்தியில் இருப்பதை, வெள்ளை-கருப்பு என்று மாற்றிப் போடுவதும், எல்லாவற்றையும் கலைத்துப் போடுவதும் சாதாரண ஒன்றல்ல, துணிவும், தன் எழுத்தின் மீது நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ப்ரகாஷிற்கு இரண்டும் உள்ளது, அதை வெளிப்படுத்தும், தனித்துவமான மொழி நடையும் உள்ளது. ஆனால் அதைக் கொண்டு அவர் தன் புனைவுலகை கட்டமைக்கும் விதம்? அவ்வப்போது இச்சை, மனுஷ ஜன்மம், அசிங்கம், போன்றவை உரையாடல்களாக, எழுத்தாளர் கூற்றாக வருவதை அவர் கட்டமைப்பதை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்துகிறதே தவிர, அந்த கட்டமைப்பில் உள்ள சில விரிசல்களை மறைப்பதில்லை. மாயி- தெகல்ராஜு உறவை கூட, ‘ஆமாம் மனிதர்கள் இப்படித்தான், வாய்ப்பு கிடைத்தால் எல்லாம் செய்வார்கள்’ என்று நியாயப்படுத்த முடியும், அது சரியும் கூட. ஆனால் அதை ஏற்றுக் கொண்டே, அந்த விஷயத்தை நிறுவ, மீண்டும் மீண்டும் அதையே வேறு வேறு வடிவங்களில், -பெரிதாக காரண காரியங்கள் இன்றி – சம்மட்டியால் அடிப்பதை போல், சொல்வதையும் விமர்சிப்பது சரியாகத் தான் இருக்கும். காரண காரியங்கள் இன்றி, என்று குறிப்பிடும் போது, ஒன்றுக்குப் பின் இரண்டு, என்ற ஒழுங்கு வரிசையில் நடைபோடும் சம்பவத் தொகுப்பை சுட்டவில்லை, யதார்த்தத்தில், எந்த தர்க்கத்திற்கும் அடங்காத நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. எது வரை எதார்த்தம் மீறப்படலாம் என்பதையும் யாரும் அறுதியிட்டு கூற முடியாது, எந்தளவிற்கு அந்த எதார்த்த மீறல், புனைவில் பொருந்தி வருகிறது என்று மட்டும் பார்க்கலாம்.

ஒரு தரப்பால் ‘எளிய பகற்கனவுகளை பேசுகிறது’, ‘வெறும் காமம்’ மட்டுமே என்று ப்ரகாஷின் படைப்புக்கள் பார்க்கபடுகிறது. இன்னொரு புறம் ‘குமாஸ்தா எழுத்துக்கு எதிரானது’, ‘அம்மாஞ்சிகளுக்கு, மரபார்ந்த எழுத்தை வசிப்பவர்களுக்கு இது பிடிபடாது’ என்றும் கொண்டாடப்படுகிறது. முதல் தரப்பினர், ‘தரிசனம்’, ‘முழுமையடையவில்லை’, போன்ற சொற்றொடர்களை ப்ரகாஷின் புனைவின் மீது போட்டுப் பார்த்து, அவருடைய மொழி நடையை, அவருடைய பல ex deus machinaகளுக்கு இடையே உள்ள நுட்பமான மன விகாசங்களை, அவர் காட்டும் சமூக சித்திரங்களை தவற விடுகின்றார்கள்,. இரண்டாம் தரப்பை புரிந்து கொள்வது எளிது, பெரும்பாலோனோர் பேசாத கட்டற்ற காமம், ஒரு பால் இச்சை, போன்றவற்றை பேசுபவர் என்பதாலேயே ப்ரகாஷ் முக்கியமானவராகி விடுகிறார், ஆனால் ஒட்டு மொத்தமாக அவருடைய புனைவுகளை இரு தரப்பினரும் பார்க்கிறார்களா? இரண்டும் சேர்ந்த வாசிப்பு அவருடைய புனைவுலகைப் பற்றிய இன்னும் ஆழமான புரிதலைத் தரும். இது இரு பக்கமும் நியாயம் உள்ளது எனும் ‘நடுநிலை’ அல்ல, இரு வேறு வாசிப்பு பாணிகளை அடையாளம் கண்டு, ஒரு புனைவில், அவை ஒன்றிணையும் போது உருவாகும் சித்திரத்தைப் பற்றியதே.

குர்தயால் சிங்: ஒரு எளிய அறிமுகம்

எஸ். சுரேஷ் 

நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. நண்பர் ராஜ்மோகனை தொலைபபேசியில் அழைத்து “இந்த எழுத்தாளரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். இந்திய எழுத்தாளர்களைப்  பற்றி விக்கிபீடியாவுக்கு தெரிந்ததை விட ராஜ்மோகனுக்கு அதிகம் தெரியும். “அவர் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். பஞ்சாபின் முக்கிய எழுத்தாளர். தச்சர் குலத்தை சேர்ந்தவர். தலித் சர்தார்ஜிகளை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.”

என்னை இரண்டு விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின. ஒன்று, எனக்கு இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளரை பற்றி தெரியாமல் இருந்தது. இரண்டாவது, சீக் சமூகத்திலும் ஜாதி பேதங்கள் இருப்பது. அந்த சமூகத்திலும் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்த்தேன்.

‘பர்ஸா’ என்ற அந்த நாவலை படித்துக்கொண்டிருக்கும்பொழுதே குர்தயால் சிங்கின் ஆளுமையை அறிய முடிந்தது. அந்த நாவலில் ஒரு சமூகத்தின் மொத்த உருவத்தையும் நம் கண் முன் நிறுத்துகிறார். அவர் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராணா நய்யர் என்பவர் குர்தயால் சிங்கின் பர்ஸாவை ஆக சிறந்த பூஞ்சாபி நாவலாக ஒரு கருத்தரங்கில் சொன்னார். அதற்கு பின் என்னுடன் பேசிய அவர், “பர்ஸா பஞ்சாபின் கலாசாரத்தை அற்புதமாக முன்னெடுத்து வைக்கிறது. இந்த நாவலை படித்தால் எப்படி சீக் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரமும் இணைந்து இருந்தன என்று நமக்கு தெரிய வருகிறது. ஒரு கலாசாரம் என்பது எப்படி மற்ற கலாசாரங்களுடன் உரையாடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.” குர்தயால் சிங் தலித்களை பற்றி அதிகம் எழுதியிருப்பதை பற்றி நான் சொன்னபொழுது, “ஆனால் அவர் எல்லோரை பற்றியும் எழுதியிருக்கிறார்.  பர்ஸா என்பவர் ஒரு ஜாட் பிராமின். மற்ற நாவல்களில் அவருடைய தச்சர் ஜாதி மக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்”.

பர்ஸாவுக்கு அடுத்ததாக நான் குர்தயால் சிங்கின் முதல் நாவலான ‘மர்ஹி தே தீவா’ என்னும் நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன். (ஆங்கிலத்தில் இதற்கு ‘லாஸ்ட் ஃப்ளிக்கர்’ (Last Flicker) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது). ஒரு தலித் சர்தார்ஜி இளைஞன் தன் நண்பனின் புதிய மனைவி மேல் மோகம் கொள்கிறான். அதன் விளைவுகளை இந்த நூல் விவரிக்கிறது. இது மனதை நெகிழவைக்கும் காதல் கதையாக இருக்கும்பொழுதும், அந்த காதல் கதை நடக்கும் களத்தை நம் கண்முன் குர்தயால் சிங்அற்புதமாக கொண்டுவருகிறார். நமக்கு அந்த காதல் மட்டுமல்ல, அந்த சமூகத்தை பற்றியும் நல்ல ஒரு புரிதல் கிடைக்கிறது.

குர்தயால் சிங்கின் எல்லா நாவல்களிலும் தனி மனிதர்கள் சமூகத்தின் ஒரு சிறிய அங்கமாகதான் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் தொடர்ந்து மோதுகிறார்கள். அப்படி மோதும் ஒரு தச்சன் கதைதான் ‘அன்ஹோயீ’. சாலை விரிவுப்படுத்தவேண்டி அரசு அவனுடைய வீட்டை பலிகொள்ள முடிவெடுக்கிறது. தன் வீட்டை எக்காரணத்தினாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்து, அரசுடன் மோதி, போலீசுடன் மோதி, தன் தம்பியுடன் மோதி, எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடும் எளிய மனிதனின் கதை இது.

அரசு, போலீஸ், சமூகத்தின் பெரிய புள்ளிகள் என்று எல்லோரும் சுரண்டும் எளியவரின் வாழ்கையை தான் குர்தயால் சிங் தன் நாவல்களில் எழுதினார். ‘அந்தே கொடே த தான்’ என்னும் நாவலில் மாறும் காலம் எப்படி ஏழைகளை தாக்குகிறது என்பதை மிகவும் கரிசனத்துடன் சித்தரித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தங்கள் எப்படி பணபலத்துடன் மீறப்படுகின்றன என்பதையும், அவைகள் மீறப்படும்பொழுது அரசு எளியவர்களுக்கு எதிராகவே நிற்பதையும் குர்தயால் சிங் தெளிவுப்படுத்துகிறார்.

குர்தயால் சிங் குடும்ப காரணங்களால் பன்னிரெண்டு வயதிலேயே தச்சு வேலை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அவர் மனது முழுவதும் படிப்பதில் இருந்தது. பல வேலைகளை செய்து கொண்டே அவர் படிப்பை தொடர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அவருடைய நாவல் சாகித்ய அகாடெமி விருது  பெற்றிருக்கிறது. அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கியது. ஞானபீடம் விருதும் அளிக்கப்பட்டது. 1933 இல் பிறந்த அவர் 2016 வருடம் மறைந்தார்.

அவருடைய ‘பர்ஸா’,‘Last Flicker’ மற்றும் ‘Handful of Sand’ என்று மூன்று புத்தகங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட்டில் கிடைக்கின்றன. ‘அந்தே கோடே த தான்’ ‘In the name of blind horse’ என்ற பெயரில் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டு அமேஜானில் கிடைக்கிறது. ‘அன்ஹோயி’ மற்றும் ‘அத் சாந்த்நி ராத்’ என்னும் நாவல்கள் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இப்பொழுது கிடைப்பதில்லை. யாரும் அவற்றை மறுபிரசுரம் செய்யவில்லை.

ஏழை எளியவர்களை பற்றியும், அவர்களுக்கும் அரசுக்குமான உறவை பற்றியும் அதே சமயம் தனி மனித உணர்வுகளை பற்றியும், குடும்ப சிக்கல்களை பற்றியும் எழுதி ஒட்டுமொத்த பார்வையை அளித்த குர்தயால் சிங் நம் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று எனக்கு எந்த  சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு நிகழ்வதுதான் அவருக்கும் நிகழ்கிறது- அவரைப் பற்றி பஞ்சாபுக்கு வெளியே அதிகம் நபர்களுக்கு தெரிவதில்லை. நல்ல இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குர்தயால் சிங்கை படித்திருக்காமல் இருக்கக் கூடாது.

 

 

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) ‘சேஸிங் த பூகிமேன்’ (Chasing the Boogeyman) – செமிகோலன்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) Chasing the Boogeyman நூலில் நான்கு கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இது ‘தொடர் கொலைகாரனை’ (serial killer) பற்றிய நூல் அல்ல. எண்பதுகளின் இறுதியில் தான் பிறந்து, வளர்ந்த சிறு நகரில் நடந்த இந்தக் கொலைகளைப் பற்றிய ஆவணப் பாணியில் ரிச்சர்ட் சொல்லப் போவதாக அவர் கூறுவதால், நேர்காணல்கள், குற்றம் நடந்த இடங்களின், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்ற வடிவ யுத்திகள் நூலில் உள்ளதால்  இது ‘I’ll Be Gone in the Dark’ போல் உண்மை குற்ற (True Crime) நூலும் அல்ல. மெட்டா-பிக்க்ஷனும் அல்ல. சிறு நகரப் பின்னணியில் நிகழும் எண்ணற்ற திகில்/குற்றப் புனைவு நாவல்களின் ஒன்றோ, அந்த நிலவியல், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் விவரிக்கப் படுவதால் இது ‘பொது’ நாவலோ அல்ல. ரிச்சர்டின் பால்ய/இளமைக் காலத்தை பற்றி பேசுகிறது என்பதாலேயே இது ‘வெறும்’ நினைவுக் குறிப்பும் கூட அல்ல.

1988ஆம் ஆண்டின் கோடையில், இதழியல் பட்டப் படப்பை முடித்து சொந்த ஊரான எட்ஜ்வுட்டிற்கு ரிச்சர்ட் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன், அவருடைய வீட்டிற்கு ஓரிரு தெருக்கள் தள்ளி ஒரு பதின் பருவப் பெண் கொல்லப்படுகிறாள். நெருங்கிய தொடர்பில்லையென்றாலும்,  கடையில், தெருவில் பார்த்தால் சிரித்து, ஓரிரு வார்த்தை பேசுவது மட்டுமின்றி, சிறு நகரத்தில் இருபது வருடங்கள் அருகருகே வசித்தால் உருவாகும் பரிச்சயம் அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ரிச்சர்ட் மற்றும் அவர் பெற்றோருக்கு உள்ளது. அப்பெண்ணின் சகோதரன், ரிச்சர்டுடன் படித்தவன். துயர நிகழ்வுகள் எப்போதுமே அலைகழிப்பவை என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவருடன் கொஞ்சமேனும் பரிச்சயம் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

இதழியல் படித்தவர் என்பதால் மட்டுமே இந்தக் கொடுங்கொலை ரிச்சர்ட்டை கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ரிச்சர்ட்டின் லட்சியம், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

That’s right, I’m talking about the bane of every real journalist’s existence—the hippy-dippy, Peter Pan world of Make Believe: fiction.

But wait, it’s even worse than that. I’m talking about genre fiction. Crime, mystery, suspense, and that black sheep of them all: horror.

சரி, திகில் புனைவுகள் வாசிப்பதில்/எழுதுவதில் அதி ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே இந்தக் குற்றத்தை பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று சொல்ல முடியுமா? பரிச்சயமான குடும்பத்தில் நேரும் துயரம், இதழியில் பயிற்சி, திகில் ஆர்வம், இத்தகைய நிகழ்வுகளால் ஈர்க்கப்படும் மனித இயல்பு இவை எல்லாமும் சேர்ந்து தான் அவருடைய – அடுத்த சில மாதங்களுக்கான – செயல்களை வடிவமைத்தன என ஆரம்பித்திலேயே புரிய வருகிறது.

இத்தகையை புனைவுகளின் இரு போது அம்சங்களை உணரலாம். ஒன்று, தொடர் கொலைகளைப் புரிபவன், தான் எண்ணியதை துல்லியமாக நிறைவேற்றுபவனாக, காவல்துறையினரை முட்டாள்கள் போல் எண்ண வைப்பவனாக, மற்றவர்கள் நெருங்க முடியாத அதி மானுடனாக, அவனைக் குறித்த சித்திரம் உருவாவது. இறுதியில் அவன் பிடிபட்டாலும், இத்தகைய கோணம் உருவாவது -ஆசிரியர் அப்படி யோசித்திருக்காவிட்டாலும் – தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அடுத்தது, அவனுக்கு பலியானவர்கள், பிறசேர்க்கையாக, அவனுடைய தீய மேதமையை வாசகன் உணர மட்டுமே உதவுபவர்களாக மட்டுமே தங்கி விடும் அபாயமும் உள்ளது.

இந்த இரு அம்சங்களையும் முற்றிலும் தவிர்த்து விடும் ரிச்சர்ட், பலியாகும் நான்கு பெண்களை தன் கதையாடலின் மையத்தில் வைக்கிறார். அந்தப் பெண்களின் இயல்புகளை, கனவுகளை விரிவாக பதிவு செய்கிறார். தன் நெருங்கிய தோழியுடன் ஒரே கல்லூரியில் கால்நடை மருத்தவப் படிப்பு படித்து, ஐந்து வருடங்கள் வேலை செய்த பின், சொந்த க்ளினிக் தொடங்கும் கனவுடன் ஒருத்தி, சிறு வருடங்களுக்கு முன் போதை பழக்கம், வீட்டை விட்டு ஓடுதல் என்றிருந்த தன் வாழ்க்கையை முயற்சி செய்து சரிபடுத்தி, கல்லூரியில் சேர்வதை எதிர்நோக்கியிருந்த மற்றொருத்தி. பலியானவர்கள் மட்டுமா? கணவனை இழந்தப் பின் தனியாக இரு பெண்களை வளர்க்கும் தாய், தன் மூத்த மகளை இழக்கும் போது அனுபவிக்கும் வலி. இவர்களனைவரின் கனவுகளை சிதைத்தவனை தன்னிச்சையாக கூட வியக்க முடியாது இல்லையா.

ஆம், இதிலும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைக்கும், பதற்றப்படச் செய்யும் நிகழ்வுகள், கணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிறு நகரின், அதில் வசிப்பவர்களின், ரிச்சர்ட்டின் உணர்வுகளாக உள்ளனவேயன்றி வாசகன் கொலைகாரனை கண்டுபிடிக்க தன் மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆடுபுலியாட்டமாக இல்லை.  

ஒரு நிகழ்வு. ஓரிரவு ரிச்சர்ட் வீட்டு கழிவுகளை, தெருவின் குப்பைக் கூளத்தில் போட வெளியே வருகிறார். அங்கு வைத்த பின் திரும்ப எத்தினிப்பவருக்கு தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. எந்த வாகனமும் செல்லாத, சன்னமான தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே உள்ள இருள், அதனூடே உற்றுப் பார்க்கப் படுவது. ரிச்சர்டால் திரும்ப முடியவில்லை, இப்போது இருளில் ஒளிந்து கொண்டிருப்பவன் நினைத்தால் அருகில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்படி எவ்வளவு நேரம் அசைவற்று இருந்தார் ரிச்சர்ட்? சில நொடிகளாக இருக்கலாம் அல்லது பல நிமிடங்களாக இருக்கக் கூடும். தெருவை கடக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கொளி அவரை மீட்கிறது. வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். எந்த உயர் திகில், குற்றப் புனைவிலும் காணக் கூடிய ‘இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்’ கணம் இது. ஆனால் இதனூடே நான் உணர்வது ரிச்சர்டின் பயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த எட்ஜ்வுட்டின் மனநிலையையும் தான்.

‘இது உங்க சொந்த அனுபவமா’, ‘இது நிஜமாக நடந்ததா’ போன்ற கேள்விகளை க்ரிஸ்டியோ அல்லது வேறு எந்த குற்றப் புனைவு/திகில் எழுத்தாளரோ எதிர்கொண்டிருக்க வாய்ப்பு குறைப்பு. ஆனால் இவை ரிச்சர்டை நோக்கி கேட்கப் படும் வாய்ப்புள்ளது. இதற்கு நூலின் வடிவம் சார்ந்த கட்டமைப்பு -நேர்காணல்கள், புகைப்படங்கள் – மட்டும் காரணமல்ல. அவருடைய நினைவோடை பாணியும் இந்த சந்தேகத்தை எழுப்பக் கூடும். ஒருவர் தன் கடந்த காலத்தை பற்றி, தான் வளர்ந்த நிலவியல், வசித்த மக்கள் பற்றி எழுதினால், ‘என்ன நடந்ததோ’ அதை எப்போது அப்படியே அவர் பிரதி எடுக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதோ, ‘நடந்ததை எழுதுதல்’ என்ற, நாம் உருவாக்கியிருக்கும்  அரக்கனை/Boogeymanஐ தேட வேண்டுமென்றோ கட்டாயமில்லை.  உண்மையில் புனைவில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை, எந்தளவிற்கு வாசகனை உள்நுழைய அனுமதித்துள்ளார் என்பதை எழுத்தாளர் மட்டுமே அறிவார். இந்த நூலிலும், ரிச்சர்டின் பால்யத்தின் சில பகுதிகளை – பகுதிகளாக அவர் முன்வைப்பதை – நான் அறிகிறோம், நூலின் காலகட்டமான 1988ன் பதிவுகளும் – அவருடைய சிறுவயது நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்- உள்ளன. இவை ‘நிஜத்தில்’ நடந்தவையா என்பது இங்கு அலசப்பட வேண்டியது அல்ல,   அந்த சில மாதங்களின் கொடுநிகழ்வுகளுக்கு, மனித முகத்தை அளிக்கின்றன என்பது தான் முக்கியம். கடந்த கால நிஜம், கடந்த கால புனைவு இரண்டிற்கும் இடையிலான இலக்கிய ஊசலாட்டமாக, அது இயங்கக் கூடிய, வெளிப்படக் கூடிய விதங்களைப் பற்றிய சிந்தனைகளாக இந்த நினைவுக் குறிப்பு யுத்தியை பார்க்கலாம்.

பலியாகும் பெண்கள், அவர்களின் குடும்பம் தவிர நாம் சந்திக்கும் முக்கியமான மனித முகங்கள்,நிருபராக வேலை பார்க்கும் ரிச்சர்டின் தோழி கார்லி, தொடர் கொலைகளை விசாரிக்க அனுப்பப்படும் காவல்துறை அதிகாரி ஹார்ப்பர், ரிச்சர்டின் பெற்றோர் ஆகியோர்.

கொலைகளை தடுக்க முடியாத இயலாமை, அது உருவாக்ககூடிய உளைச்சல், அதன் நீட்சியான மனச்சோர்வை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விசாரணை செய்து வந்த, இந்த நிகழ்வுகள் நின்று பல்லாண்டுகள் ஆன பின்பும், ஓய்வு பெரும் வரை அதை மனதிலிருந்து நீக்க முடியாத ஹார்ப்பர் ஒரு புறமென்றால், ‘கறுப்பின அதிகாரி தலைமையில் விசாரணை, மூன்று வெள்ளையினப் பெண்கள் கொலை, வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்று ஹார்ப்பரின் நிறத்தை வைத்து அவருடைய திறமையை, நேர்மையை முடிவு செய்யும் வெள்ளையின நகரவாசியொருவன் மற்றொரு புறம். எட்ஜ்வுட்டின் மற்றொரு முகத்தை காட்டும் நிகழ்வு.

கார்லி, ரிச்சர்ட் இருவரும்  கொலைகள் குறித்து தகவல்கள் திரட்டி, அதன் வழியாக ஏதேனும் கண்டறிய முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கோட்டை விட, தொழில்முறையில்லாத துப்பறியும் ஆசாமிகள் உண்மையை பிடிப்பது போல் எதுவும் நடப்பதில்லை. காவல்துறை அறியாத ஏதேனும் தடயம் இவர்களிடம் கிடைத்ததா என்று கூட உறுதியாக கூற முடியாது. ரிச்சர்ட் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு விடுத்து, எதுவும் பேசாமல், பலமாக மூச்சை மட்டும் விட்டு வைத்து விடுபவன் தான் கொலைகாரனா அல்லது ரிச்சர்டின் ஆர்வத்தை அறிந்து அவனை பயமுறுத்த, கிண்டல் செய்ய விரும்பும் ஏதேனும் ஆசாமியா. கார்லி வீட்டின் வாசலில் சாத்தானின் குறியீடான 666ஐ எழுதி வைத்தவன் யார்? இவர்களுடைய இணை விசாரணையின் பலன்/பலனின்மை, ரிச்சர்டின் அதீத ஆர்வம் வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகள் – துயர நிகழ்வை தனதாக்கிக் கொள்ளும் சுயநல விழைவோ? – நூலின் கதைசொல்லலுக்கு இன்னும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இதழியல் படித்த மகனின் ‘எழுத்தாளர்’ லட்சியத்தை சிறுமைப்படுத்தாத, அவன் இந்தக் கொலைகள் மீது அதீத ஆர்வம் கட்டுவது அச்சுறித்தனாலும், அதை தடை செய்ய முயற்சிக்காத ரிச்சர்டின் பெற்றோர்

குற்றவாளி பல்லாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால் அது, மகளை இழந்தவர்களின் குடும்பத்திற்கும், ரிச்சர்டிற்கும், ஏதேனும் வகையில் 1988-89ஆம் ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் (closure) என்று கூற முடியாது. அவர்களுக்கும், வாசகனுக்கும் தெரிய வருவது ‘தீமையின் அற்பத்தன்மையை’ (banality of evil) தான் நினைவுறுத்துகிறது. கூடவே இந்த அற்பத்தன்மை, அழியாதது, வேறு வேறு உருவத்தில்  எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அயற்சியையும்.

பல ழானர் எழுத்தின் கூறுகளை கொண்டிருந்தாலும், Chasing the Boogeyman முற்றிலும் தனித்தன்மையுடைய ஆக்கம். நல்லெழுத்து, ழானர் எல்லைகளை கடந்து தனக்கான இருப்பை உருவாக்கி, தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ளும் என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் உறுதி செய்கிறார் ரிச்சர்ட்.

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ – செமிகோலன்

செமிகோலன் 

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ தொகுப்பிலுள்ள ‘மண் புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்’ கதையை வாசித்துக் கொண்டிருக்கும் போதும், வாசித்து முடித்த பின்பும், மனதில் ‘Nature vs nurture’ விவாதம் குறித்த சிந்தனைகள் இருந்தன. கதைசொல்லி தன் மகனுடன் விளையாடச் செல்லும் இடத்தில் சந்திக்கும் சிறுவனைப் பற்றிய இந்தக் கதை, முடிந்த பின்பும் வாசகனை அதன் நீட்சியை, அதன் சாத்தியக் கூறுகளை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. மகனுடனான கதைசொல்லியின் கிரிக்கெட் ஆட்டத்தில் இறைஞ்சி சேர்ந்து கொள்ளும் சிறுவன் ஒழுங்காகவே விளையாடுகிறான். சராசரியானவன் போல் வாசகனுக்கு தோற்றமளிக்கும் அவன், விளையாட்டு முடிந்தவுடன் , நாயொன்றை வதைக்கிறான், பின் அந்துபூச்சியோன்றின் காலை பிய்த்து எறிகிறான். அந்த வயதில் நிறைய சிறுவர்கள் ஈடுபடும் எந்த காரணமற்ற -வயதாக வயதாக நின்றுவிடும் – வன்முறை என்று இதை பார்க்க முடியாது. சிறுவனுக்கு மாறிக் கொண்டேயிருக்கும் மனநிலை. பூச்சியை பிய்தெறிந்த பின் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பவன், கிளம்ப எத்தனிக்கும் கதை சொல்லியுடன் அவர் வீட்டிற்கு வந்து விளையாடுவதாக கூறுகிறான். பின் அவர்கள் விளையாட உபயோகித்த பந்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். சிறுவனின் தாத்தா, தன் மருமகன் -அவனுடைய தந்தை- குறித்து, நிரம்ப வன்முறை மனநிலை கொண்டவன் என்று கூறுவதை சிறுவனின் செயலுடன், -அவனுடைய இயல்பான மனநிலையே அது தான்/nature -பொருத்திக் பார்க்கலாம். சிறுவனை எந்த நல்ல குணமும் இல்லாத மோசமானவனாகவே தாத்தா சித்தரிப்பது, இறுதியில் அவனுடைய தாய் அவனை அடிப்பது, வளர்ப்புடன்/nurture பொருத்தலாம். சிறுவன் கதைசொல்லியை இறைஞ்சும் கண்களோடு பார்ப்பதோடு கதை முடிந்தாலும், கதை சொல்லி அதன் பின் அவனை எப்போதும் சந்திக்காமல் இருக்கக் கூடும், அதன் பின்னான அவன் முழு வாழ்க்கையையும் வாசகன் எண்ணிப் பார்க்கிறான்.

கதை முடிந்த பின்னான கதையை குறித்து யோசிக்கத் தூண்டும் மற்றொரு புனைவு ‘கணக்கு’. கணக்கு ட்யூஷனுக்கு செல்ல நிர்பந்திக்கப்படும் கல்லூரி படிக்கும் விஜி. ட்யுஷன் ஆசிரியர் ஆர்கே, மிகவும் புகழ் பெற்றவர், சிறப்பாக சொல்லிப் கொடுப்பவர் என்றாலும், அவருக்கு இரு மனைவிகள் என்பது விஜிக்கு ஒவ்வாமையாக உள்ளது, அதை ஆர்கே உணர்கிறார் என்று சுட்டப்படுகிறது. முதல் முறையாக ட்யூஷனுக்கு செல்லும் அன்று அவருக்கும், விஜிக்கு நடக்கும் உரையாடலுடன் கதை முடிகிறது. ஆர்கே உளவியல் ரீதியாக விஜியை சீண்டுகிறாரோ என்று எண்ண வைக்கும் இந்த உரையாடல், தொடர்ந்தும் அவ்வாறே அவர் நடந்து கொள்வாரா, அதை விஜி எப்படி எதிர் கொள்வாள் போன்ற கேள்விகளை எழுப்புகிறது.

அலர்’, கதைசொல்லியின் தெருவில் வசிக்கும் தம்பதி இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தேற்பட்டு மனைவி இறந்து விட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பிக்கிறது . வண்டியை ஓட்டிய கணவரின் அஜாக்கிரதையால் தான் இது நேர்ந்தது என்று தெருவில் பேச்சு, அத்துடன் அந்தக் கணவன் எப்போதுமே மனைவியிடன் கடுமையாகத் தான் நடந்து கொண்டான் என்பது போன்ற பழங்காலக் கதைகள் தூசி தட்டப் படுகின்றன. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கும் கதைசொல்லி, மரணம் நடந்த வீட்டிற்கு செல்ல நினைக்கிறான். இதுவரை வாசகன் நேரடியாக சந்திக்காத அந்தக் கணவன், மொத்தத் தெருவின் தீர்ப்பால் , எத்தகையை குற்றவுணர்ச்சியில் மூழ்கியிருப்பான், எப்படி மறுகிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது. அது கதையின் தலைப்பிற்கு பொருத்தமாக, பொது மனநிலையை சுட்டுவதாக இருந்தாலும், அதுவரையிருந்த கதையின் போக்கை, அதன் மையம் என்று வாசகன் எண்ணியிருந்ததை விட்டு விலகி, சிறிது நீர்க்கச் செய்கிறதோ என தோன்றுகிறது.

பெரு வணிக காய்கறி/கனி கூடங்களில், அதிகபட்சம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டு பொருட்கள் வாங்கி வரும் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும் வழக்கொழிந்து விட்ட, தினசரி வீட்டிற்கு வரும் சிறு காய்கறி/பழ/பூ வியாபாரிகளையும், அவர்களுடனான, வீட்டிலுள்ளவர்களின் உறவு – வியாபாரத்தோடு குடும்பம் பற்றிய பேச்சு, அதிக உரிமை எடுத்துக் கொண்டு பொருட்களை திணிப்பது ஏற்படுத்தும் எரிச்சல் -, அதனூடே வீட்டிலிருக்கும் பெண்ணின் ஒரு பகல் பொழுதை துல்லியமாக சித்தரிக்கிறது ‘புரியாதவர்கள்’ கதை. இறுதி வரி, அதுவரை இருந்த சமநிலையை சிறிது குலைக்கிறதோ என்ற கேள்வி எழுதிகிறது.

ஒரு புனைவு அல்லது கவிதை எங்கு முடிகிறது, எப்படி முடிய வேண்டும் அதன் பின்னரும் அதை இழுத்துச் செல்ல வேண்டுமா என்று வாசகனுக்கு இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான். எழுத்தாளர் அவர் எண்ணிய கதையை – நாம் நினைப்பதை அல்ல – தான் எழுதியிருக்கிறார் என்றாலும் இத்தகைய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை – நாம் விரும்பும், நம்மை ஈர்க்கும் படைப்புக்களிலும் – என்று தோன்றுகிறது.

தொழிலின் நசிவு, அதனூடே ஒரு வாழ்க்கை முறையின் முடிவு, சுயத்தின் அழிவு போன்ற இழைகள் ‘குதிரை மரம்’ நெடுங்கதை/குறுநாவலில் இருந்தாலும், இயலாமையின் துயரத்தை வாசகன் உணர முடிகிறது. மகனை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருக்கும் பிரபுவிடம், அவன் மனைவி வத்சலா கோபமாக பேசிச் செல்ல,. வத்சலாவின் உறவினருடன் வேலைக்கு செல்ல நேர்கிறது. அங்கு ஒரு சூழலில், பிரபுவிற்கு தெரிந்தவர் முன், உறவினர் கடுமையாக பேசி விடுகிறார். அவமானப்படுதல் என்பது எப்போதுமே குறுகச் செய்வது தான் என்றாலும், தெரிந்தவர் முன், தெரிந்தவர்களால் முன் சிறிய இழிவுகள் கூட அதீத அளவிற்கு ஒருவனை சிறுமைப்படுத்தக் கூடியது. இந்தச் சூழலில், தன்னை விட்டு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் காலத்தை பிடிக்க முயற்சிக்கும் பிரபு, மீண்டும் தன் தொழிலை, வாழ்க்கை முறையை, சுயத்தை மீட்டெடுப்பானா ஒரு புறமிருந்தாலும், தோல்வியடைந்தாலும் கூட அவனை இந்த முயற்சி மட்டுமே சிறிதளவேனும் ஆற்றுப்படுத்தும், தன்னிருப்பை அவனுக்கே நியாயப்படுத்தும்.

எஞ்சும் இருள்’ கதையில், ஒரு சாதாரண பால்ய நிகழ்வு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதால் கதைசொல்லிக்கு ஏற்படும் சலிப்பு, ‘தற்கொலை முகம்’ கதையில், டாக்டரின் வாழ்க்கை வெளிப்படும் விதம் இவற்றை இந்தத் தொகுப்பின் கதைகளின் ஒரு பொது இழையாக கொள்ளலாம். வெவ்வேறு களங்களில் நிகழ்ந்தாலும், வேறுபட்ட பேசுபொருளை கொண்டிருந்தாலும், ஒன்றுமில்லாதது போல் முதலில் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் வேறு உருக்கொள்ளும் கணங்களின், இயல்பாக இருக்கும் மனநிலையில் விழும் கீறல்களின் நெசவு இந்தத் தொகுப்பு.