விமர்சனம்

ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை

எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடு தான் காலத்தின் தேவை”

நீட்சே

சாம்ராஜின் மொழி அலங்காரங்கள் அற்றது. அதன் இயல்பே அதன் அழகு. சொற்களின் எதார்த்த கூட்டிசைவு படைப்போடு ஒன்ற வைத்துவிடுகிறது. முதல் வரிகளே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நோக்குடன் காத்திருப்பவை. மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்’ என்றோ ‘கணேசனோடு எப்போது அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது என கணேசனுக்கே தெரியாது’ என்றோ தொடங்கும் வரிகள் ஊருக்கு வழி சொல்லும் அடையாளங்கள் போல கதைக்கான திறவை முன்வைப்பன.

காட்சிகளாக விரியும் சொற்கள் திடமான வரைவுக்குள் கதையை நகர்த்துகிறது. அந்த வரைவு புகுத்தப்பட்டதாக இல்லாமல் அதன் போக்கிலேயே தீர்மானிக்கப்பட்டதாக அமைவது நம்பகத்தன்மை உடையதாக்குகிறது.

முதல் கதை குள்ளன் பினு, பினுவின் அறிமுகத்திற்கு அவன் காலை ஊன்ற வாகாக, வண்டியை நிறுத்த இடம் தேடுவது நீரோட்டம் பார்க்கிறவர்களை ஒத்து இருக்கும் என்ற ஒப்பீடு தெளிவான அறிமுகத்தை ஏற்படுத்தும். அவனுடைய உயரமான தாத்தா, உயரமான பேபி கொச்சம்மாளை கல்யாணம் செய்து உயரமான மகன்களை மகள்களை ஈன்றெடுக்கிறார். அந்த குடும்பத்திலேயே குள்ளனான பினு தாத்தாவிடமிருந்து தந்தையிடமிருந்து உறவினர்களிடமிருந்தும் எவ்வித அன்பையும் பெறவில்லை. தனியனாகவே திரியும் அவலம் அவனுக்கு.

தந்தைக்கு பிறகு அவர் நடத்திய மெஸ் பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கு வருகிறான். அவனது அக்காவின் மகளைக் கேலி செய்யும் இளைஞர்களை எதிர்க்க துணியும் போது தன்னுடைய உயரமே சண்டையில் சாதகமாகிறது. உயரத்தால் அல்லாது மனதில் தான் உயர்ந்துவிட்டதாக நம்புகிறான். அதுவரை அவனை கூட்டிச் செல்ல வரும் உமரின் ஆட்டோவில், அதன் பிறகு வராமல் நடந்தே செல்ல தொடங்குகிறான். இறுதியில் கதை இவ்வரியோடு முடிகிறது, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டென்று பின்வாங்கினான் பினு ’. உயரத்தைக் கண்டு பயம் கொள்ளுகிற புனைவு கதையை இறுதி செய்கிறது.

காட்சிகளாக விரியும் கதைகளில் காலம் இரண்டொரு வரிகளில் கடந்துவிடுகின்றன. அவையும் காற்புள்ளிக்கு பிறகு இன்னொரு பரிணாமத்தை காட்டிவிடுகின்றன.

இந்த கட்டுரை ஆரம்பித்ததில் இருந்து ஒரு சின்ன நெருடல் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ரொம்ப சீரியஸாக கட்டுரை பயணப்படுகிறதோ என்று. இதற்கு நேர் எதிரான கட்டுடைக்கப்பட்ட எளிய மொழியில் தான் இக்கதைகள். மனிதர்களின் இயல்பான குறும்பை, கேலியை, பகடியை தன்னுடைய தூண்களாக கொண்ட தொகுப்பை விமர்சிக்கும் போது மட்டும் இறுக்கமான மொழியாக இருந்தா எப்படி?

வடிவேலுவை ஏன் கொண்டாடுகிறோம் என யோசித்து பார்த்தால் அவருடைய மறுக்க முடியாத அடையாளமாக மதுரக்காரன் என்கிற தொனி இருப்பதை சொல்ல முடியும். சாம்ராஜ்க்கும் அது பொருந்தும். ஏறத்தாழ மதுரையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட யாரும் சொல்லிவிட முடியும், மதுரை எவ்வளவு கொண்டாட்டமான நகரம் என்று. அதே நேரத்தில் பிடிவாதம் கொண்ட இடமும் கூட.

சாம்ராஜின் கதைகள் ஒரு எளிய கதைசொல்லியை அறிமுகப்படுத்துகிறது. கதைசொல்லி கதைகளைச் சொல்லி சிரிக்கிறான், கூடவே அழுகிறான், கடக்க முடியாத இடத்தை ‘ச்சைஇதெல்லாம் பெருசா’ என உதாசீனப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவன் மொழிக்கு பழகிய நாம் அவனோடு சென்ற விட்ட நம்மை, வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறோம்.

சாமின் கதைகள் மனிதர்களைச் சுற்றியது. அவர்களின் உணர்வுகளை சுற்றியது. குள்ளனான பினுவிற்கு உயரமே அவனுடைய சிக்கல். முத்திருளாண்டிக்கு வாக்கப்பட்டு வரும் செவ்வாக்கியத்திற்கு கணவனுடன் எதிர்பார்த்த தாம்பத்திய உறவு இல்லாது போவது சிக்கல். பரமேஸ்வரிக்கு மாமனார், அச்சுதன் நாயருக்கு தன்னுடைய கேப்டன் கனவு, லக்ஷ்மியக்காவிற்கு விரக்தி, மல்லிகாவிற்கு ஒரே சந்தோசமான சினிமா இல்லாது போனது, மரியபுஷ்பத்தின் கணவனான சகாயத்திற்கு மனைவியின் மீதான சந்தேகம் – என உழலும் மனிதர்களை நாம் இயல்பான உலகில் எல்லா மூலைகளிலும் சந்திக்க நேரிடும். இவர்கள் தங்களுக்கான வாழ்வின் மீதான பிடித்தத்தை பழிவாங்கும், நிறைவேற்றும், முற்றிலுமாக துறந்து விடும் முடிவுகள் வழியாக உறுதி செய்கின்றனர்.

இன்னொரு பார்வையில் தோழர்கள், கலகம், புரட்சி, அரசியல் குறித்த பகடிகளைக் குறிப்பிடலாம். அதிலும் மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கை உறுதிப்பாட்டிற்கே அரசியலை அணுகுகின்றனர்.

பகடியின் உச்சபட்சத்தை தரிசிக்க ‘தொழில் புரட்சி’ ‘மருள்’ ‘ஜார் ஒழிக’ கதைகளைக் குறிப்பிடலாம்.

மிக எளிமையானது தான் படைப்பு உருவாக்கத்தில் சிக்கலானதும் கூட. பகடியை அவ்வகையில் சேர்க்கலாம்.

மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட திட்டமிடும் தோழர்கள் சின்ன வட்டம் தான் ஆறு பேர். அதிலும் ஒருவர் தன் தங்கைக்கு சொந்த சாதியில் மாப்பிள்ளை பார்க்க போவதை மறைத்து விட்டு துக்க நிகழ்விற்கு போவதாக கூறிச் செல்பவர். மூன்று குழு. கண்காணிப்பு, செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு. ஒரு நாய் இருந்ததை கவனிக்க மறந்ததால் அத்திட்டமே முடங்குகிறது. வந்தவய்ங்க கொளுத்தி விட்டுட்டு போயிருந்தவாச்சும் புது ஜீப் கிடைச்சுருக்கும் என புலம்பும் ஆபிசர், அவரிடம் சாப்பாடு பாக்கி வாங்க காத்து நிற்கும் தள்ளு வண்டி கடைக்காரர் என கதை கையாண்டிருக்கும் பாத்திரங்கள் உண்மைக்கு நெருக்கமானவை. தாங்கள் நம்பும் அரசியல் பாதையை கொண்டிருப்பவர்களின் செயல்களைப் பகடி செய்யும் கதைகளில் வெகுளித்தனமும் ஏமாற்றமும் சேர்ந்தே தொனிக்கிறது. புரட்சி வந்துக் கொண்டிருக்கிறது என கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள் அவை பொய்த்து போவதை அறியும் போது விரக்தி அடைகின்றனர். அதன் மீதான விமர்சனத்தை பகடிகள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். பின்னணியில் ஆற்றாமை இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

எழுதப்படாத தியாகங்கள் எத்தனையோ இடதுசாரிய அரசியலில் அடையாளப்படுத்தபடாது கரைந்திருக்கின்றன. செயல்பாடுகளின் நோக்கங்கள் மறைந்து நடைமுறைகள் இறுகும் போது சடங்குகள் போலவே அலுப்பு வெளிப்பட்டு விடுகிறது.

பிராச்சாரத்திற்கு பயன்படாத படைப்புகள் வெகு அரிதாகவே காணக் கிடைக்கும் இடதுசாரிய பரப்பில் சாம்ராஜ் முதல் அடிகளை முன்வைக்கிறார். பகடி என்பதுவும் விமர்சனம் தான். எதிர் கருத்தியல்களில் இருந்து வரும் விமர்சனங்களை விட இவை ஆற்றல் நிரம்பியவை.

மருள் என்கிற கதை ஒட்டுமொத்த கட்டுக்கோப்பான நிறுவனத்தை ஒரே நாளில் குலைத்து போடும் குறும்புக்கார அருளைப் பற்றி சொல்வது. கலகம் அப்படியானது தான் என நிறுவ முயல்கிற கதை. கொஞ்சம் கூட சிரிக்காது இந்த கதையைக் கடப்பவர்கள் சொற்பம். அதே போல ஜார் ஒழிக கதையும். பெயிண்டர் கணேசனுக்கு ங்கொம்மலாக்க என்ற வார்த்தை இல்லது ஒரு வரியைப் பேச தெரியாது. தோழர்களோடு இணைந்து பயணிக்கிற போது அவனை அறியாமலேயே உருவாகும் மூர்த்தியுடனான தோழமை அந்த வார்த்தையை மறக்க செய்கிறது. விநாயகர் சிலையோடு இஸ்லாமிய தெருக்களில் நுழையும் கூட்டத்தினரை எதிர்கொள்ளும் போது மூர்த்தி அதே வார்த்தையே உச்சரிக்க நேருகிறது. மூர்த்தி கணேசனிடம் நீங்க என்னை மன்னிச்சு தான் ஆகணும் என உரக்க சொல்லுவதோடு கதை நிறைவு பெறும்.

சாம்ராஜின் கதைகளில் வரும் தோழர்கள் மிக சிறு குழுக்களாக இயங்கும் எம்.எல். இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பெரிய பொருளாதார பலமோ அல்லது ஆள் பலமோ இருப்பதில்லை. இடதுசாரிய தோழர்களுக்கே இல்லாத போது, அதை விட குறைவு இவர்கள் பலம். ஆனாலும் சமூகத்தில் மாற்றங்களுக்காகவும் புரட்சி வந்துவிடும் என இன்றும் நம்புகிற தோழர்களின் வட்டத்தை நான் அறிவேன். அவற்றோடு சாம்ராஜ் முன்வைக்கும் பகடி நுண்மையான விமர்சனமே ஒழிய குற்றச்சாட்டாக இருப்பதில்லை.

அவருடைய மொழி ஆளுகை பல இடங்களில் ஒளிருவதைக் காண முடியும். செவ்வாக்கியம் தன் கணவன் தொடுப்பு வைத்திருப்பதை அறிந்தும் பொறுந்திருந்தவள், பத்து வயது சிறுமியை சீண்டும் கணவனைக் கண்ட பிறகு அவனுக்கு தான் நம்பும் தண்டனையை அளிக்க துணிகிறாள். தன் தோழி சொர்ணத்தோடு மலையாள மாந்தீரிக பெண் ஒருத்தியிடம் செல்கிறாள். அந்த காட்சி இப்படியாக விரிகிறது, நடுக்கூடத்தில் ஒரு சிறிய பீடத்தின் மேல் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். தலைமுடி ஆலமரம் விழு போலிருந்தது. படங்களும் தாமிரத் தகடுகளும் மின்ன, முன்னே ஒரு ஆறு திரி விளக்கு பதக் பதக் என துடித்துக் கொண்டிருந்தது.” என்ன செய்யணும் என அந்த பெண் கேட்கிறாள், சுடர் பதறியது’ தனக்கு பயன்படாதது யாருக்கும் பயன்படக் கூடாது என செவ்வாக்கியம் சொல்கிறாள். அதன் பிறகு கணவன் நடுங்கத் தொடங்கி விடுகிறான்.

கரண்ட் முழுநாளும் இருந்தால் சகட சகட சகட’ என நூற்பாலை இயந்திர ஒலியையும் , ‘கோரிப்பாளையம் கண்மாயில் தண்ணி கெத்து கெத்தென கிடந்தது’, என நில வர்ணிப்பையும் காட்டும் மொழி அவ்விடங்களிற்கு உயிர் கொடுக்கிறது.

மிக குறிப்பாக அவருடைய கதைகளின் பெண்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கிற இடங்கள் உண்டு. அதில் மிக உறுதியாக நிற்கிற மனப்பான்மை உறுதியுடைவர்களாக காட்டுகிறது. மூவிலேண்ட் கதையில் மல்லிகாவிற்கு சினிமா என்றால் உயிர். சினிமா ஆப்ரேட்டர் உடன் காதல் வயப்படுகிறாள். அண்ணநும் அம்மாவும் எதிர்க்க வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவன் மல்லிகாவை ஒரு குடியில் வைக்கிறான்.பகலெல்லாம் தனியாக இருக்கிறாள். சூரியன் கோழிக் குஞ்சுகள் மீதேறி அவள் மீதேறி வீட்டின் மீதேறி மாலையில் தூரத்து மலையில் போய் மறையும்’ அவளை குடும்பத்தினர் வந்து மீட்டு சென்று கல்யாணம் செய்து வைக்கின்றனர். கணவன் சினிமாவிற்கு போகக் கூடாது என்கிறான். மகள் பிறக்கிறாள். கானவன் பார்க்க வர மறுக்கிறான். பஞ்சாயத்தில் இவள் படத்திற்கு போகவே கூடாது என சத்தியம் வாங்குகிறான். அதன் பிறகு வருடக்கணக்காக சினிமாவைப் பார்க்க போகவே இல்லை அவள். இந்த பிடிவாதம் பெண்களுக்கே சாத்தியம். வைராக்கியம். தன்னை தானே அதிலிருந்து விலக்கிக் கொள்வது என்றென்றைக்குமாக.

மீஎதார்த்த முடிவுகளில் சாம்ராஜின் சில கதைகள் முடிக்கப்படுகிறது. குள்ளன் பினுவின் மேலே சொன்ன வரி. கப்பல் என்கிற கதையில் கேப்டன்களால் எப்போதும் கீழேயே பார்க்கப்பட்ட பொறியாளர் அச்சுதன் நாயர் கப்பல் போன்ற பிரம்மாண்டமான வீட்டை கடற்கரையில் நிர்மாணிக்கிறார். அந்த இடத்தில் இருந்த குடிகளை அப்புறப்படுத்துகின்றனர். அங்கு வாழ்ந்த நாயொன்று மட்டும் முன்னர் குடிசைகள் இருந்ததற்கு சாட்சியாக இருந்தது. அதன் பார்வையில், நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென ஆவேசமாய் குலைத்தது. பிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்க, கப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது’. தன்னை மதிக்காத கேப்டன் போலவே தன்னால் மதிக்கப்படாத மக்கள் இருந்தால் தான் தானும் கேப்டன் என்பது அதிகாரத்தின் படிமட்டங்களைக் காட்டுகிறது. தாழ்வு இருந்தால் தான் உயரம் தெரியும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சி போல் லக்ஷ்மியாக்கவோடு போன தன்ராஜ் படுக்கையில் இறந்து போகிறான். அதோடு லக்ஷ்மி மொட்டையடித்து அதுவரையில் இருந்த எல்லாவற்றையும் துறந்து விட்டு குழந்தைகளுக்கு ஆசிர்வதிக்க தொடங்குகிறாள். காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது.

சாம்ராஜின் கதைகளில் போலி கிடையாது எங்குமே. எதார்த்த உலகின் கோடிக்கணக்கான கதைகளில் சிலவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இழையோடும் மெல்லிய பகடியும், எளிமையும் கதைகளை வலிமை உடையனவாக்குகிறது. கதை மாந்தர்கள் வெகு அரிதாகவே உரையாடுகின்றனர். கதைசொல்லியே பேசிவிடுகிறான். தொழில் புரட்சி போன்ற கதைகள் நாவலாக மாறினால் தமிழின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

கதைகளின் அடித்தளமே அவை காலந்தோறும் புதுபுது பரிணாமங்களைக் காட்சிப்படுத்துவதே. ஒவ்வொரு நேரத்திலும் எழுகிற படைப்புகள் அதற்கு முன்பு திகழ்ந்தவற்றை விமர்சித்தே தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது. சாம்ராஜின் கதைகள் எது போலவும் இல்லாதது அதன் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிறது. மற்றும் முந்தைய படைப்புகளில் இருந்து தன்னை செம்மை செய்துக் கொள்கிறது.

வடிவேலு பிரதி செய்ய முடியாதவர். சாம்ராஜும் அது போலத் தான்.

திகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் – ஜான் மேரி கட்டுரை

ஆன்மாவை சுமந்து திரியும் வெற்று உடலே நாம். ஆன்மாவின் விழிப்புநிலை என்பது அரிதாகவே நடக்கும்; அது அவரவர் தேடலின் பொருட்டு நடப்பவை. நடந்த சம்பவத்தை வெறும் சம்பவமாக எழுதாமல் அதை புனைவுகள் மூலம் கதையாக நம் கண் முன் காட்சிப்படுத்துகையில் ஒரு மின்னல் தாக்கியது போல் இந்த வெற்று உடலில் இருக்கும் ஆன்மா விழிக்கும். அது வெறும் விழிப்புநிலை மட்டும் அல்ல அது தொடர்ந்து நமக்குள் கேள்வியாகவும், அழுகையாகவும், நேசக் குரலாகவும், நாம் நமக்கென்ன என்று கடந்து வந்த சில சம்பவங்களின் தீராத குற்றணர்வின் குரலாகவும் என பல ஒலிகளாக நம் அகமனக் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி விழிப்புநிலை தரும் எழுத்துக்களே ஒரு எழுதாளனின் வெற்றி.

 

போகன் சங்கரின் ‘திகிரி’ நான் வாசிக்கும் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பு முழுக்க சமூகத்தாலும், ஆண்களாலும் வஞ்சிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட பெண்களின் குரல்களாக எதிரோலிக்கிறது. ரத்தமும் சதையும் உணர்ச்சியும் அற்ற வெற்று உடலாகவே பார்க்கப்படுகிறார்கள் “சிறுத்தை நடை” தவிர மற்ற ஏழு கதைகளும் சமவெளியில் நடப்பவை

 

“தீட்டு” கதையில் ஒரு பெண்ணின் உடல் பண்டப்பொருட்களாக சமூகத்தில், தனிமனித வாழ்கையில் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்கிறது. வேலைக் கேட்டு போகும் இடத்தில் அவளின் மெலிந்த, போஷாக்கு குன்றிய, அழகுகுன்றிய உடலால் கொண்டமையால் நிராகரிக்கப்படுகிறாள். தன் ஆச்சி இறக்கும் தருவாயில் பணத்துக்காக உதவி கேட்டு போகும் இடத்திலும் பணத்தை கொடுத்து அவள் உடலை உடல் துஷ்பிரயோகம் செய்ய முயற்ச்சிக்கிறான் அவளது முதலாளி. அந்த தருணத்தில் அவள் “தீட்டாயிருச்சண்ணே” என்று சொல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் வலியைக் உணர்விதுச் செல்கிறார் போகன். கொன்று புசிக்காமல் உயிருடன் பிய்த்து திண்ணும் ஓநாய் கூட்டத்தின் நடுவில் தவிக்கும் உயிர் போலவே கோமதி தவிக்கிறாள். கோமதியின் அக்கா பற்றிய சிறிய குறிப்புக்குகூட அவளது உடல் ஈர்ப்பு சார்ந்த சமூகத்தின் பார்வையை தனிக்கதையாக உணர்விக்கக் கூடியது.

 

 

“சிறுத்தை நடை” கதையில் சமவெளியில் வசிப்பவர்களின் மனநிலையும் மலை பிரதேசத்தில் வசிப்பவர்களின் மனநிலையும் ஒன்று போல் இல்லை என்பதை பூடகமாக சித்தரிக்கிறது. சமவெளியில் இயல்பான கொண்டாட்ட சூழலில் வசித்த பெண் மலை பிரதேசத்துக்கு வருகிறாள். தன் ரசனைக்கு நேர் எதிராக உள்ள கணவன் அங்கு வாழும் மக்கள் அச்சூழல் அவளுக்கு மர்மமாக இருக்கிறது ஒரு நாட்டு ரோஜா செடியை அவள் அங்கு நடுகிறாள் அது மர்மமான பூஞ்சையால் தாக்கப்பட்டு காய்ந்து விடுகிறது. நாட்டு ரோஜா மலைகாட்டு பகுதியில் தாக்குப் பிடிப்பதில்லை என்று சாக்கோ சொல்லுமிடம் அக்கதையில் வரும் பெண்ணை ரோஜா செடியாகக்கூட படிமப்படுத்தி வாசிக்கும் சாத்தியத்தை தந்துவிடுகிறது. அவளையும் அறியாமல் அவள் வீட்டு வேலைகாரன் அவளை புணர்ந்து கொள்கிறான். ஒரு பெண்ணாய் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுகிறாள். சாக்கோ ஒருவன் மட்டும் தான் மனிதனாக தெரிகிறான். ஸ்காட்லெட்டுடன் நட்பு கொண்டதினால் அவன் அதிகார வர்கத்தினரால் கொல்லப்படுகிறான். இறப்புகளும், துரோகங்களும் பெண்ணை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ளது.

 

“முகம்” கதையில் ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் என்பவள் எப்படி என்று சொல்லப்படுகிறது கதையின் ஆரம்பத்தில் இறந்த பெண்ணின் ஆவி வருகிறது. அவள் இறந்து நூறு வருடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவளின் இறப்பிற்கு அவளுடைய தந்தையோ, உடன் பிறந்தானோ, பர்த்தாவோ, காமுகனோ,அரசனோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கதையின் நாயகன் அந்த பெண்ணின் ஆவியை ஒரு பாலத்தில் பார்க்கிறான். மிரண்டு போய் ஒரு வீட்டின் முன் அமர்கிறான். அப்போது தமிழ்ச்செல்வியை சந்திக்கிறான்; அவள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறாள். அவள் போலீஸ் அதிகாரியை ஒருவனை கொன்று விட்டு தலைமறைவாக வாழ்கிறாள் பின்பு அவளும் சுட்டு கொல்லப்படுகிறாள். வீட்டுக்கு வரும் கதை நாயகன் தொட்டிலில் உறங்கும் தன் பெண் குழந்தையை கையில் ஏந்தி பார்க்கிறான் இறந்த பெண்ணின் கண்களும்,தமிழ்ச்செல்வியின் கண்களும் தன் குழந்தையின் கண்களும் ஒன்றும் போல் இருப்பதாக பார்க்கிறான். வழிவழியாக பெண்களின் வலிகளும் துயரங்களும் தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவர்களின் எல்லா முகமும் ஒருபுள்ளியில் இணைவது போன்ற பொதுச் சித்திரத்தை தந்துவிடுகிறது.

 

 

“திகிரி” சாவை கை தொடும் தூரத்தில் பார்க்கும் ஒரு மனிதனின் மனநிலை பற்றின கதை. ஒருவர் சாவின் பயத்தில் உள்ளார். மருந்துகள் எடுக்கிறார். அதன் பக்க விளைவாக குடும்பம் மேல் விலகல் வருகிறது. மகள் மேல் இருந்த பிரியமும் போய் விட்டது. இப்பொழுது சமணர்களைக் காண மலைக்கு போகிறார். ஒரு பெண்ணை காண்கிறார். அவள் ஒரு தொல் கதையின் எச்சம். அவள் தன் கதையை சொல்கிறாள் இவரிடம்.அதில் வரும் படைவீரன் தான் நீ என்று. அதன் தொடர்ச்சியாத்தான் நீ இருக்கிறாய் என்று.அந்த நேரத்தில் சமணர் கோயிலில் அவருக்கு ஒரு விடுதலை கிடைக்கிறது.
“அறியாமையை வழிபடுகிறவர்கள் இருளில் ஆழ்கிறார்கள்”என்றார்.
”அறிவை வழிபடுகிறவர்கள் இன்னமும் ஆழ்ந்த இருளில்” என்றார். ”உங்கள் ஈசோபநிஷதம்”
மழைத்துளிக”

 

 

“நாகப் படம்” இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளை விடவும் இதுவே தனித்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.ஒரு கலைஞன் தன் கலைக்காக தன்னை மட்டும் அல்ல தன்னை சார்ந்தவற்றையும் இழந்து ஒரு படைப்பை தருகிறான்.நிர்வாணம் சிறந்த மருத்துவமாக கருதப்படுகிறது.மனித உடலை தவிர உலகில் அழகான விஷயம் கிடையாது. மனிதனை மட்டுமே கடவுள் அவரது சாயலில் படைத்தார். அப்படி படைக்கப்பட்ட உடலை ஒரு கலையாக பார்த்து தன்னை அதில் முழுமையாக அற்பனிப்பவர்கள் ஓவியர்களும் , சிற்பிகளும் மட்டுமே.கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்திலும் கலைஞனின் ஆத்மார்த்த அற்பனிப்பும் உழைப்பும் வெளிப்படும். கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் பெரும்பாலும் பெண் உருவச்சிலையே காணப்படுகிறது.ஆனால் கிரேக்க வீதிகளில் காணப்படும் சிலைகளின் அதிகபட்ச அழகு ஆணின் உடலில்தான் வெளிப்படுகிறது.இக்கதையில் குழந்தை பருவத்தில் ஒருவன் வீட்டின் வறுமை காரணமாக தன் அம்மாவாள் ஓவியர் ஒருவரிடம் விட்டு செல்லப்படுகிறான்.பிறகு திருமண பருவத்தை எட்டியதும் அவன் அம்மாவாள் பெண் பார்க்கப்பட்டு குருவிடம் போராடி சம்மதம் வாங்குகிறாள் பெண் பார்க்க குரு தானும் வருவதாக கூறுகிறார் அங்கு பெண்ணை பார்த்ததும் ஆசான் திகைத்து நின்றுவிட்டார்,”மகனே இவளே உனது பெண் என்கிறார்.பிறகு திருமணம் நடக்கிறது.அவன் தன் சொந்த ஊருக்கு வந்த பின் குருவின் வாழ்வு தடம் மாறுகிறது அவர் இறக்கும் தருவாயில் தன் சிஷ்யன் வீட்டின் முன்பு வந்து இருக்கிறார்.தோற்றத்தில் முற்றிலும் வேறொருவராக அவர் தன் சிஷ்யனிடம் கடைசியாக நான் ஒரே ஒருமுறை உன் மனைவியைப் படம் வரைந்து கொள்கிறேன் என்றும் அது தன்னை குணப்படுத்தும் என்றும் கூறுகிறார் அவன் முதலில் அதிர்ந்து பேச்சிழந்து போனாலும் சம்மதிக்கிறான் அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததாகவும் நிறைய வரைந்தார் எனவும் கதை முடிகிறது

 

“ஆடை” கதையில் இடதுசாரிதுவ மரபில் இருந்து வந்த ஒரு கேரளத்து பெண் புரட்சி பேசும் சித்திக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.இருவருக்கும் குழந்தை பிறக்கிறது வேலை நிமித்தமாக இஸ்லாமிய நாட்டுக்கு செல்கிறான் அங்கு போனதும் சித்திக் கலாவை படுதா போடுமாறு கட்டாயப்படுத்துகிறான் அவன் சொல்வதை இவள் கேட்க மறுக்கவே அவள் நடத்தை கெட்டவள் குழந்தை அவனுக்கு பிறக்கவில்லை என்று அவளை பழிச்சொல்கிறான்.அதன் பிறகு இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.பிறகு ஒரு பயணத்தில் கலா கிருஷ்ணனை சந்திக்கிறாள் கிருஷ்ணன் புத்தக வாசிப்பாளனாக இருக்கிறான் இருவரும் புத்தகங்களை பற்றி கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் பிறகு ஒருநாள் கலாவின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது கிருஷ்ணன் உதவி செய்ய மருத்துவமனைக்கு செல்கிறான். மருத்துவமனையில் கலாவின் அப்பா அவளை பற்றி தவறுதலாக சொல்லவும் கிருஷ்ணன் என்ன செய்வது என்று பதட்டத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு புகை பிடிக்கிறான். கள்ளுக்குடிக்கலாம் என்றும் நினைக்கிறான்.உடலை அதிகம் தாண்டாத உறவாக மட்டுமே இருக்கும் என்றும் புத்தகங்களை பற்றி மட்டுமே பேசிக் பிரிந்துவிடும் ஒரு உறவாக இருக்கும் என்று கிருஷணன் நினைக்கிறான்.கலா தன் குழந்தையை பற்றி சொல்லும் போது பண உதவி கேட்டுவிடுவாள் என்ற அச்சத்தில் கிருஷ்ணன் அதை நீயும் உன் குடும்பமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கு கலா பண உதவி உங்களிடம் கேட்கவில்லை அறிவுரை தான் கேட்டேன் என்று சொன்னதும் கிருஷ்ணனுக்கு குற்றணர்வு ஏற்படுகிறது. அவன் பேருந்தில் வரும்போது ஒரு கனவு காண்கிறான் அதில் கிருஷ்ணனின் ஆடையை அணிந்து கொள்ளுமாறு கலா தருகிறாள். இங்கு “ஆடை” என்பது எதையும் எதிர்பார்க்காமல் இந்த சமூகத்துக்கு எது தேவையோ அதை பொருட்படுத்தாமல் உதவ வந்த கிருஷ்ணன் இப்போது அதையெல்லாம் அணிந்து கொண்டு போங்கள் என்று கலா சொல்வதாக பொருள்படுகிறது.ஒரு பெண் தன் சுயத்தை இழந்து பழிச்சுமத்தப்பட்டு குடும்பத்திலும் சமூகத்திலும் வேசியாக, துரோகியாக,நக்சல்லாக,
பார்க்கப்படுகிறாள் அவள் உணர்வு நசுக்கப்படுகிறது.

 

“ஜெயமோகனின் கள்ளக்காதலி” தலைப்பே பகடையாக ஆரம்பிக்கின்றதே என்று எனக்கு தோன்றியது. மணி ஒரு கதைச்சொல்லி ஞாபக மறதி அவர் வீட்டின் முன் ஒருநாள் ஒரு பெண் வந்து நிற்கிறாள் யார் என்று மணி கேட்க ஜெயமோகன் என்று அந்த பெண் கூறுகிறாள் யாரு எழுத்தாளர் ஜெயமோகனா என்று கேட்கிறார் இல்லை உங்கள் நண்பர் ஜெயமோகன் என்று சொன்னதும் இருபது வருடங்கள் முன்பு தன் நண்பர் ஜெயமோகனை மணிக்கு நினைவு வருகிறது.அவர் ஒரு போதகராய் உள்ளார் மணி ஜெயமோகனுக்கு புத்தகங்கள் கொடுப்பது உண்டு அதனால் அவருக்கு புத்தகங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ஜெயமோகனுக்கு ஒரு பெண் துணை ஏற்படுகிறது அவருக்கு இவள் தான் அனைத்தும் செய்கிறாள் இவள் தான் அவரை புரிந்து கொண்டதாகவும் நினைக்கிறார் இது ஜெயமோகன் மனைவிக்கு தெரியவரவே கள்ள உறவு என்று அடித்து விரட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் அங்கு அவருக்கு துணையாக இருக்கும் பெண் அழுவதை பார்த்து முகம் சுழிக்கிறார் ஏனெனில் அவரை பொறுத்தமட்டில் பெண்களின் கண்ணீர் பொய்யானவை “ஏவாளின் கண்ணீர்!” என்று திரும்பிக்கொள்கிறார்.பிறகு மணி கதை ஒன்றை வாசித்து காண்பிக்கிறார் அதில் ஒரு ஆண் தன் பெண்ணை ஒவ்வொரு அங்கமாக கை வைத்து அவள் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை கூட நேசிக்கிறேன் அவற்றை புலர்மழையைப் போல பரிசுத்தமானது என்று கூறுகிறான்.இவற்றை கேட்டதும் போதகருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் அனைத்து தீமைகளையும் எல்லா பிரச்சனைகளுடனும் அவளை ஏற்றுக்கொள்கிறார்.பிறகு ஜெயமோகன் தன் கள்ளகாதலியுடன் வடமாநிலம் சென்று ஊழியம் செய்கிறார்.அங்கு சென்றதும் மணிக்கு கடிதம் எழுதுகிறார் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக

 

 

திகிரி போகன் சங்கரின் மூன்றாவது கதைத்தொகுப்பு ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள், சொல்லப்பட்டிருக்கிறது.

இவருக்குள் இருக்கும் கவிஞன் கதைகளின் இடை இடையே வெளிப்படும் சில வரிகளில் தெரிகிறது. அவை வர்ணித்து காட்சிபடுத்தும் விதம் அழகு. தன் மீது சுமத்தப்படும் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலுந்தும் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வில் இருந்து பெண்கள் விலகிவிடாமல் போராடுகின்றனர் போகனின் கதைகளில் வரும் பெண்கள்.

ஒரு சிறுகதை தொகுப்பு என்பது ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்கரு கொண்டு ஒரு கதையில் இருந்து அடுத்த கதைக்கு செல்லும் போது அது முற்றிலும் வேறொரு உலகம் வேறொரு அனுபவத்தையும், மனநிலையும் தந்தால், அது பன்முக வாசிப்பு சாதியத்தைக் கூட்டும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கருக்கள் ஒரே வகையில் இருப்பதால் என் எதிர்பார்ப்பை இத்தொகுப்பு பூரணப்படுத்தவும் இல்லை. ஆடை,முகம்,தீட்டு, சிறுத்தை நடை போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்கள் கதை சொல்லப்படும் விதம் வேறாக இருந்தாலும் பெண்களின் வலி ஒரே விதமாக சொல்லப்படுகின்றது. பெண் வலியை அனுபவிக்கிறாள் அதற்கு காரணம். ஆண் என்பதே மையக் கருத்து. இத்தொகுப்பின் தலைப்பு கதையான திகிரி கதையும் , நாகப்படம் கதையும் மட்டுமே வேறொரு உலகத்தையும் கதை கருவையும் கொண்டுள்ளது.

சிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை

வெள்ளை பணம், கருப்பு பணம் என வகைப்படுத்தப்பட்ட பணமானது சிவப்பு பணம் என்று 2016ல் இருந்து மேலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என சொல்கிறார் புத்தக ஆசிரியர் பாலகுமாரன். மத்திய தொலைதொடர்பு துறையில் பொறியியலாளராக வேலை பார்க்கும் நாவல் ஆசிரியர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த மிக முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரின் கிண்டில் புத்தகமான சிவப்பு பணம் எனும் நாவலானது 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு மத்திய அரசு எதிர்ப்பு பணக்காரர் மற்றும் மூன்று நண்பர்கள், 10 கோடி ரூபாய் பணம் இவற்றை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அபாரமான எழுத்து நடையுடன் மிக வேகமாக த்ரில்லர் வகையில் பயணிக்கும் நாவலானது எடுத்து கொண்ட கதையில், மூன்று நண்பர்கள் இணைந்து பத்து கோடி மதிப்புள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றுவது எனும் மிக சிறிய களத்தில் மிக வேகமாக பயணித்திருக்கிறது. மதுரையில் நடக்கும் கதையானது மூன்று நண்பர்களில் ஒருவர் காய்கறி மண்டியும் ஒருவர் அவருக்கு உதவியாகவும் மூன்றாம் நண்பர் கிரூபா ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்க்கிறார். இவர்களில் காய்கறி மண்டி வைத்துள்ள மணிக்கு கொடைக்கானல் முதலாளி ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவரிடமிருந்து வந்த பத்து கோடி ரூபாயை புதிய நோட்டாக மாற்றி அவரிடம் சென்று சேர்த்தால் கொடுக்கப்படும் கமிசன் தொகையில் தனது மண்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மண்டியை குத்தகைக்கு எடுத்து நண்பர்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அவர் நடத்தும் மண்டியில் அவருடன் உதவியாக இருக்கும் அவரின் நண்பர் சரவணன் மற்றும் ஒரு கடையில் பணியாளாக வேலை செய்யும் அவரின் நண்பர் கிருபா என மூன்று பள்ளி கால நண்பர்களும் இணைந்து பணத்தினை புதிய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்கின்றனர். மணி தனது ஆரம்ப கால கட்டத்தில் காய்கறி கடையில் பணியாளாக இருந்த சமயங்களில் அவருக்கு ஆதரவு அளித்த அவரின் கொடைக்கானல் முதலாளிக்கு நன்றிகடனாக இந்த பணம் மாற்றம் விவகாரத்தை கையில் எடுக்கிறார். கொடைக்கானல் முதலாளி பல ஹெக்டர் நிலப்பரப்புகளை சொந்தமாக கொண்ட மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை கொடுக்கும் பெரும் பணக்காரராக இருக்கிறார். கொடைக்கானல் மலையில் விளையும் பாதி காய்கறிகள் இவரின் மலைத்தோட்டத்தில் விளைந்ததாக இருக்கின்றன. இவரின் அசுரத்தனமான பணப்பலத்தை பற்றி கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இவரின் வீட்டிற்கு சென்று அவர்களின் கட்சியில் இணைந்து விட சொல்கிறார், அதற்கு ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் நன்கொடை கொடுக்கிறோம் ஆனால் எந்த கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை என்று முதலாளி கூறிவிடுகிறார். அதன் பின் தனது அதிகார மற்றும் பண பலத்தினால் இந்தியாவில் நடைபெற போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அவர் தனது பணத்தினை மாற்றி கொடுக்கு அவரின் நம்பிக்கையான ஏழு பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கிறார். பணத்தினை மாற்றி கொடுத்தால் வரப்போகும் ஒரு கோடி கமிசனுக்கும் முதலாளி மீதான விசுவாசத்திற்காகவும் இந்த பணியினை எடுக்கும் மணிக்கு அவரின் நண்பர்கள் துணை இருக்கிறார்கள். கொடைக்கானல் மலையில் இருந்து உருளை கிழங்கு மூடைகளுடன் மூடையாக வந்த பத்து கோடி பணத்தினை தனது மண்டியில் காய்கறிகளுடன் சேர்த்து வைத்து விட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். மத்திய அரசும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து விட அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் தான் நாவலின் உயிர்.

ஒரு அதிகார முடிவானது இந்தியாவின் கடைகோடி கிராமத்து மனிதர்கள் வரை நிகழ்த்தும் தாக்கத்தை நாவல் பதிவு செய்துள்ளது. நமது பக்கத்து வீட்டில் நடைபெறும் கதை போன்ற எழுத்து நடையினால் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடிகிறது. கொடைக்கானல் முதலாளியின் பணம் பலரிடம் சென்று விட்டதை அறிந்து கொள்ளும் மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகள் அதிலிருந்து மூன்று நண்பர்களும் தப்பிக்கும் முறைகள் மிக எளிமையாக எந்த சாகசமும் இன்றி இருப்பதால் பணத்துடன் நாமும் பயணிப்பது போல் இருக்கிறது. தைரியமாக முடிவு எடுக்கும் மணி, சாப்பாடு மட்டுமே குறியாக கொண்ட சரவணன், திறமையாக யோசிக்கும் கிருபா என மூன்று பேரின் கூட்டணி கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதையின் இடையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் நாவலை மேலும் பலப்படுத்துகின்றன.

கிரூபாவின் யோசனையால் பணத்தை பதுக்கி வைக்க குமுதாவின் உதவியை நாடும் பொழுது குமுதாவின் கணவரின் மரணம், மாமியாரின் நோய், குமுதாவின் சமையல் பொருட்கள் தயாரிப்பு தொழில் ஆகியவை நமக்கு பகிரப்படுவதுடன் இணைந்து மூன்று மணமாகதவர்களின் காமத்தின் வறட்சியை விரவி கொடுத்திருக்கிறார். குமுதா மற்றும் மூன்று நண்பர்களின் அத்தியாயம் ஒரு தனி சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. மணி மற்றும் குமுதா இருவரும் சந்தித்து கொள்வதாக அந்த நாவலில் ஒரு நிகழ்வே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வுக்குள் அவர்கள் இருவரின் கண் பரிமாற்றங்கள் இருவரும் தனியாக இருக்கும் நேரத்திற்கு பின் மணியிடமிருந்து வந்த மிளகாய்பொடி வாசனையை நம்மையும் உணர வைக்கிறார்.

மற்றொரு கதாப்பாத்திரமான வங்கி மேலாளரின் அதிகார மெத்தனம், பணத்திற்காக அதிகாரத்தின் வளைவு சுளிவுகள் என அத்தனை பண்புகளையும் தனக்குள் இயல்பாக கொண்ட அவர் பணத்தினை 2 கோடி கமிசனுடன் மாற்றி கொடுக்கிறார். பணத்தினை மாற்ற வேண்டிய கடினமான பணியானது இவரினால் எளிதாக மாறுகிறது. கதையை பொறுத்தவைரை யார் வில்லன்? யார் ஹீரோ? என்ற எந்த வகைக்குள்ளும் எந்த நபரையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மூன்று நண்பர்கள், முதலாளி, மத்திய அரசு, வங்கி மேலாளர் என அனைவரும் ஏதோ ஒரே கட்டத்தில் ஒருவருக்கு நல்லவராகவும் வேறொருவருக்கு கெட்டவர்களுமாகவே இருக்கிறார்கள், இந்த கதை இயல்பானது என சொல்வதற்கு முக்கிய காரணமே இந்த காரணத்திற்காகத்தான். அந்த வகையில், ஒரு படைப்பை மற்றொரு படைப்புடன் தொடர்புப்படுத்துவதும் கோட்பாட்டுகளுடன் சுருக்குவதும் ஒரு படைப்பை எழுத்தாளர்களை கொண்டு நேர்த்தியான படைப்பாக கட்டமைப்பதும் இந்த நாவலின் வழியாக மீண்டும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இலக்கியம் அந்த காலக்கட்டத்தின் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நெறியை பின்பற்றி ஆனால் எந்த இலக்கிற்குள்ளும் சிக்காமல் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறது நாவல். எழுத்தாளரும் தனது நாவலுக்கான களப்பணியை கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே கதையுடன் இணையவிட்டிருக்கிறார்.

மேலும் கதையில் வரும் ஒரு பொமேரியன் நாயும் இரண்டு சிப்பிப்பாறை நாய்களும் கதைக்குள் அழகானவை. வங்கி மேலாளரின் வீட்டில் இருக்கும் பொமேரியன் தனது பணக்காரத்தனத்துடனும் கொடைக்கானல் மலை ஏறும் கழுதைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக செல்லும் சிப்பிப்பாறை நாய்களும் தனக்கே உரிய பண்புகளுடன் இருக்கின்றன. கொடைக்கானல் மலைக்கு சாலை போக்குவரத்தில் பணத்தினை கொண்டு செல்ல முடியாமல் மலைக்கு ஏலக்காய் சுமை தூக்கும் கழுதைகளின் வழியாக பணத்தினை கொண்டு செல்ல மணியின் நண்பர் முன்வருகிறார். மொத்த கதையிலுமே இந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்க வேண்டும் என ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதுவும் அந்த சிப்பிப்பாறை நாய்களின் வீரமும் அன்பும் அந்த மூன்று நபர்களை தாண்டி நம் மனதில் இடம் பெறுகின்றன. சிப்பிப்பாறை நாய்கள் மற்றும் புலிக்கிடையேயான மலையில் நடக்கும் சண்டையானது நமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. பொதுவெளியில் நமக்கு புகுத்தப்படும் நாயை விட புலி வலிமையானது என்ற கருத்தாக்கம் இயற்கையானது எந்த உயிரும் மற்ற உயிருக்கு முன் வலிமையானது இல்லை என்பதை நமக்கு நாவலின் வழியாக உணர்த்துகின்றன. சிப்பிபாறையுடன் மோதி புலி அருவியுடன் அடித்து சென்று விடும் பொழுது நாமும் பெருமூச்சு விடுகிறோம்.

நாவலின் கதையானது மிக சுருக்கமானது தான் ஆனால் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வெழுச்சியானது எழுத்தால் உணர்த்த முடியாததாக இருக்கிறது. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான தனது இறுதி சடங்குக்காக சேர்த்து வைத்திருக்கும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொண்ட அந்த கிராமத்து பாட்டி நமக்கு வங்கி முன் கண்ணீரும் பதட்டத்துடன் நின்ற கோடானுகோடி மனிதர்களின் ஒற்றை சாட்சியாக நிற்கிறார். இறந்தே போன அந்த பாட்டி பண மதிப்பிழப்பினால் இறந்த ஐந்து வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை அத்தனை பேரையும் நமக்கு நியாபகமூட்டுகின்றன. ஒரு நாவலின் வெற்றி என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் வாழ்வில் மறக்க இயலாத படைப்பாக ‘சிவப்பு பணம்’ நாவலை அங்கீகரிக்கிறேன்.

மனிதர்களின் வக்கிரங்கள், பணத்தின் அகோர வளர்ச்சி, மனித உணர்வுகளின் மழுங்கடிப்பு தன்மைகள் ஆகியவை இந்த கால மனிதர்களின் வாழ்வியலின் அடையாளங்களாக மாறி போயின என்பதன் நிகழ்கால ஆவணமாக இந்த நாவல் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாவல் முழுவதும் வரும் காய்கறி மண்டி வாசனை, நாய்களின் வாசனை, குமுதாவின் வீட்டு வாசனை, என நறுமணங்களை எழுத்தின் வழியாக கடத்துவதன் மூலமாகவே நாவல் தரமானதாக உருவாகி இருக்கிறது.

மொத்தத்தில் ‘சிவப்பு பணம்’ நாவலானது தீவீரமான வாசிப்பவர்களை விட வாசிப்பை நேசிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் என்று கருதுகிறேன். தனது கதையின் பயணத்திலிருந்து வாசகர்களை திசை திருப்பாமல் பல நுணுக்கங்களை நாவல் முழுவதும் செழுத்தி இருக்கிறார் எழுத்தாளர். கொஞ்சமான கதாப்பாத்திரங்களின் வழியாக சிறந்த கதையினை தந்திருக்கிறார். இது சரி இது தவறு என்ற மனித மனங்களின் அத்தனை அடிப்படையான குண நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் கதையானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் என்னை போன்ற அதை வேடிக்கை பார்த்த நபர்களுக்கும் கதையின் வழியாக அதன் வலியை கடத்தி இருக்கிறது கதை. எப்பொழுதும் பசியுடனே இருக்கும் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் சரவணன் கதாப்பாத்திரம் இன்னும் உடல் ரீதியான மனப்பான்மையை மாற்றவில்லை. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் என்ற கற்பிதமும் அவர்கள் கேலிக்குரியவர்களாகவும் இருப்பது கதையில் நெருடுகிறது. தேடி தேடி கண்டுபிடிக்கும் குறைகளை தவிர்த்து பார்த்தால் கதையானது தனது நிலையில் எந்த தர்க்க மாறுபாடுமின்றி உண்மையாக இருந்திருக்கிறது என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலானது கொடைக்கானல் முதலாளி கொடுத்திருக்கும் அடுத்த 100 கோடி ரூபாயை அந்த மூன்று நண்பர்களும் எப்படி மாற்றி தரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் தூண்டுகிறது.

சாதனம் – சத்யானந்தன் சிறுகதை

பேனாக் கத்தியின் பயன்பாடுகள் என்ன என்று தெரியுமா?” என்றுதான் அவன் தனது உரையைத் துவங்குவான். மடக்கிய பேனாக்கத்தியைத் தனது சட்டைப் பையில் இருந்து வெளியே எடுத்து அதன் கத்திப் பகுதியை வெளியே நீட்டி மடக்கியவாறே, பதில்களை செவி மடுப்பான். ”கொல்லலாம்” அனேகமாக முதல் பதிலாக வரும். உடனே தன் ஷுவைக் கழற்றி அதன் அடிப்பகுதி மீது ஓங்கிக் குத்த கத்தி துளைக்காமல் மடங்கி விடும். அனைவரும் சிரிப்பார்கள். பின்னர்தான் எலுமிச்சம் பழம் வெட்ட, சிறிய திருகாணியை இறுக்கிச் சுழற்றிப் பொருத்த, பீர்பாட்டில் மூடி திறக்க, சிப்ஸ் பாக்கெட்டைக் கிழிக்க, குளிர்பான டின்னைத் திறக்க, அழுத்தி மடித்த காகிதத்தைச் சீரான துண்டாக்க, முதுகுப் பை ஜிப்பில் மாட்டி இருக்கும் சிறு நூல்களை வெட்டி அதைச் சீராய் இயக்க என ஒவ்வொன்றாய் பதில்கள் வரும். உண்மையில் ராஜநாயகத்துக்கே தோன்றி இருக்காத பல பயன்களும் பட்டியலாகும்.

 

    இன்று, இந்தப் பேனாக் கத்தி ஒன்று காரணமாகி இந்த முதுகுச்சுமையை செக் இன் லக்கேஜ் ஆக்க வேண்டி வரும். ‘லேப் டாப்பை அதன் சதுரப் பைக்குள் வைத்து எடுத்துப் போகலாம். விமானம் தரை இறங்கும் முன் பவர் பாயிண்ட் ஸ்லைடுகளை ஒரு முறை சரி பார்க்கலாம். நேற்று இரவு எடுத்து வந்த பெட்டிக்குள் பேனாக்கத்தி கிடையாது. அது இளைஞர்கள் பயிற்சி முகாம் அல்ல. ஆலோசக நிபுணர்களின் மாநாடு. இரவு இரண்டு மணி வீட்டுக்கு வந்தவன் வெறும் நான்கு மணி நேர இடைவெளிக்கு ஏர்போர்ட்டிலேயே தங்கி இருக்கலாம். கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தாலும் மனம் புத்துணர்ச்சி பெறுமென்று தோன்றிற்று. ஆனால், அரைமனப் போராட்டத்தை வெல்லாமல் கொஞ்சம் விஸ்கி அருந்தி இருக்க வேண்டாம். தலை பாரம் இன்னும் நீங்கவில்லை. கண் எரிச்சல் ஏறத்தாழ ஒருவாரத் தொடர் பயணங்களால். சிறிய பயணத்துக்கானவற்றை வைத்தாகி விட்டது என சிறு நிறைவு வந்து கொண்டிருந்தபோது,  முதல் முறை வாயிலில் மணி அடித்தது. ஆணுறைப் பாக்கெட் எங்கே? நேற்று எடுத்து வந்த பயணப் பைக்குள் ஒன்றே ஒன்று தனியாக இருக்க வேண்டுமே. முதுகுச் சுமைக்குள், பின் சிறிய பெட்டிக்குள் தேடினான். சிறியது. கை நழுவுகிறதோ?  எண் மேலாளும் பூட்டுள்ள வேறு ஒரு பெட்டி இருந்தது. அதனுள் கண்டிப்பாக ஒரு பேக் ஆணுறை இருக்க வேண்டும். அதைக் கையில் எடுத்தபோது அதன் எண் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. டிங்க் டாங்க் அழைப்பு மணி இரண்டாவது முறையாக ஒலித்தது. ராஜநாயகம் எண் நினைவு கூர அவகாசம் வேண்டி அறையை விட்டு வெளியே வந்தான். முதல் மணி பால் பாக்கெட் ஆள் அடிப்பது. இது செய்தித்தாள் பையன் அடித்திருப்பது. அவன் அறைக்கு எதிர் அறை செல்வராணியினுடையது சிறிய அறை அந்த ட்யூப்ளே வீட்டின் கீழ்க் கட்டில் இருந்தது. தாத்தா பாட்டியின் பெரிய அறை, சமையல் அறை மற்றும் வரவேற்பறையும். மங்கலான விளக்கொளியில் அம்மா உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா நடைப் பயிற்சிக்குப் போயிருப்பார். நான்கு பால் பாக்கெட்டுகளையும் முதலில் எடுத்து பிரிட்ஜ்ஜூக்குள் வைத்தான். செய்தித்தாளை அப்படியே உணவு மேசைமீது வைத்தான். ஹால் கடிகாரம் இன்னும் அரை மணிக்குள் அவன் கிளம்ப வேண்டும் எனக் காட்டியது. 6464 சட்டென எண் பூட்டின் திறவுகோல்மனத்துள் உதித்தது. பெட்டியைத் திறக்கும்போது, வீட்டில் அவன் அதைப் பூட்டும் பழக்கமே இல்லை என்பதும் நினைவில் மோதியது. சிறிய அரக்கு வண்ணப் பெட்டி. உள்ளே தேட அதிக இடம் இல்லை. ஆணுறை இல்லை. யாரோ எடுத்துப் பூட்டியும் இருக்க வேண்டும். யார் அது? அப்பா அவன் அறைக்குள் வருவதே இல்லை. கௌதமுக்கு 14 வயதில் இந்த அளவு தைரியம் இருக்க இயலுமா? செல்வராணி கடையில் கேட்டு வாங்கக் கூச்சப்பட்டு இதை எடுத்திருப்பாளோ? சற்றே வியர்த்தது. அது உண்மையென்றாலும் ஏன் தாக்கம் செய்கிறது என்பதும் பதட்டத்தை அதிகப்படுத்தியது. நேரம் கடந்தபடியே இருந்தது. குளியலறைக்குள் புகுந்தான். அப்படி செல்வராணியும் இல்லை என்றால்? வீட்டுக்கு வெளியே யார் என்னும் கேள்விக்கான விடையைத் தேட அவனுக்கு இந்த மாதிரியான ஒரு இக்கட்டான நேரம் போதாது. ஆனால் விடை தெரிந்தே ஆக வேண்டும். இன்னும் சில மணிகளில் நடத்த வேண்டிய பயிற்சி வகுப்பின் மீது  மனதை திசை திருப்பினான். காரை அவனிடமிருந்து வாங்கி மீண்டும் வீட்டில் விட வந்த அலுவலகத்து ஓட்டுனர், “பிரியா மேடம் இப்போதான் சார் அர்ரைவல்லே இருந்து கிளம்பினாங்க,” என்றான் பேச்சுவாக்கில். பிரியா எப்படி இவ்வளவு பிஸி? அவளுடன் கடைசியாக தனிமை எப்போது என சிந்திக்க முயன்றவன் கவனத்தை கைபேசி கலைத்தது.

 

ஜொனாதன் ஸ்மித்துக்கு ராஜநாயகம் என்னும் இந்திய வியாபார ஆலோசகனின் சின்னஞ்சிறிய மின்னஞ்சலில் தேவையற்ற ஒன்று இருப்பதும்  தேவையான ஒன்று இல்லை என்பதும் தென்பட்டன. விமான நிலையத்தில் இருந்து எழுதுகிறேன் என்றால்அது பற்றி எனக்கென்னவிரிவான பதில் கூறாமல் இந்தியப் பயணிகளின் விடுமுறை தினங்கள், ஆஸ்திரேலியாவில் அவர்கள் ருசிக்குப் பொருந்தும் தலங்கள் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் பதில். முழு வணிக சாத்தியங்களை முன் வைத்தால் என்ன குறைந்து விடும்தொலைபேசியில் அழைத்தால் என்னசெயற்கைக் கோள் தொலைபேசியை முதலில் கால்சராயில் தேடினான். இல்லை. முதுகுப் பையில்இல்லை. என்னதான் ஆகி இருக்கும். டார்ஜிலிங்கில் மீண்டும் விடுதிக்குப் போவது இந்த ஹார்லி டேவிட்சன் சக்திக்குக் கூட சவாலானதே. என்னமாய் வளைத்து நெளித்து ஓட்டுகிறான்கள் இந்த இந்திய ஓட்டுனர்கள்இடிக்கிற மாதிரி வந்து இறுதியில் நகர்த்துவதில் என்ன இத்தனை முனைப்பு?  மாட்டுக்கறியும் பாஸ்தாவும் கொஞ்சம் எஞ்சி இருக்கும் தட்டை ஒரு கையில் எடுத்து மறு கையால் முதுகுப் பையை மாட்டிக் கொண்டுஉணவகத்தின் சுற்றுப்புறம் இருக்கும் திறந்த வெளி இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தான். நான்கு மணிக்கே விடிந்து விட்டதால் சூரியன் நன்கு மேலெழும்பி இருந்தது. மலைச்சரிவில் பசுமையும் இடைப்பட்ட சாலைகள் எறும்பு வடிவத்தில் தென்படும் ஆட்களும் வாகனங்களும் மேகங்களால் மறைக்கப் பட்டுமேகம் விலகியதில் கண்ணில் பட்ட காட்சி நெஞ்சை அள்ளியது. சாட்டிலைட் கைபேசியை மறந்த சூழல் நினைவுக்கு வந்தது. க்ளைர் ஒப்புக்கு நலம் விசாரித்து விட்டுதன் மன அழுத்தத்தைத் தனிமை அதிகரிக்க வைப்பது பற்றி ஸ்மித் ஏன் கண்டு கொள்ளவே இல்லை என்று வினவி இருந்தாள். அவள் நியூசிலாந்து பயணக் குழுவுடன் போயிருக்கும்போது என்ன அழுத்தம் வேண்டிக் கிடக்கிறது என்பதை போட்டா உடைக்க முடியும்அதில் வந்திருக்கும் கருணாகரன் எனும் இந்தியன் மிகவும் கருணையுடன் தியானம் எல்லாம் சொல்லித் தந்திருக்கிறான்அவன் ஆஸ்திரேலியப் பிரஜைதான். அவனோடு நட்பாயிருக்கிறேன். உன் உடைமைகளை நீ எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம்,” என்று கணக்கை முடித்து விட்டாள். குளியலறையில் வெகுநேரம் அதைத் திரும்பத் திரும்பப் படித்தவன் கைபேசியை அங்கே உள்ள மதுபானத் தட்டின் மீது வைத்து அப்படியே மறந்து விட்டான். 

 

 தென்னிந்தியாவில் கிளை அலுவலகம் வைக்கலாமா என்னும் முடிவை டெல்லியில் பிரதிநிதி அலுவலகம் வைத்திருக்கும் சந்தீப் ஷர்மாவிடமே விட்டிருக்கலாம். இதை வேறு ஆள் ஆலோசனை செய்து தரப் போகிறான் என்றதும் அவன் நிம்மதியாகி விட்டான். தனது ஹார்லி டேவிட்சன் வண்டியை இரவல் தந்தது தவிர ஷர்மாவிடம் உற்சாகம் தரும் எதுவுமே இல்லை. தனது நிறுவனம் இந்தியருக்கான ஆஸ்திரேலிய சுற்றுலாவோடு மனம் நிறைவாகக் கூடாது என்றே ஸ்மித் நினைத்தான்அதிலும் இந்தியர்களின் வழிகாட்டுதலை வழிமொழிய நான் எதற்குஸ்டான்போர்டில்தான் பெற்ற எம்பிஏ அதற்காக அல்ல.இந்தியாவில் ஆஸ்திரேலியர் சுற்ற இடங்களைத் தேர்ந்தெடுக்க தான் முன்னெடுக்கும் திட்டமாகவே டார்ஜிலிங், பாங்காக்கை அவன் இரு சக்கரத்தில் சுற்ற முடிவெடுத்தான். உணவகத்தைச் சுற்றி வண்ண வண்ண ரோஜாச் செடிகள். ஏழெட்டு இதழ்கள் கீழே விரிய நடுவில் மகரந்தத்துடன் சிரிக்கும் மஞ்சள்ஊதா, வெள்ளை ஆர்சிட் செடிகளை அவனால் அடையாளம் காண இயன்றது. ஒரு பூங்கொத்து போலப் பெரிதாய்நெருக்கமான இதழ்களை விரிக்கும் சிவப்பு வண்ணப் பூவின் பெயர்தான் தெரியவில்லை. உணவக சிப்பந்தி அதன் இந்தியப் பெயர் லாலி குரான்என்றான். டிஷ்யூவால் கை, வாயைத் துடைத்துக் கொண்டான். சிப்பந்திக்கு டிப்ஸ்‘ கொடுத்ததும் பில்லை பத்திரப்படுத்தினான். இதன் தொலைபேசி எண் நாளை வணிகரீதியாகப் பயன்படலாம். மதியத்துக்குள் பாங்காக் சென்றுவிடலாம். ஹார்லி டேவிட்சன் வண்டி பொத்தான் அழுத்தியதும் புறப்படவில்லை. பல முறை அழுத்தினான். பின்னர் சோக்‘ பட்டனைப் பிடித்து இழுத்து அதைக் கிளப்ப முயன்றான். முடியவில்லை. இறுதியாக வலது கால் பக்கம் இருக்கும் இயக்கி ஷாப்ட்மீது பலங்கொண்ட வரை உதைத்தான். ஒருமுறை இருமுறை பலமுறைடிகிரி குளிரிலும் வியர்த்ததுதான் மிச்சம். வண்டி கிளம்பவில்லை.

 

தனக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலில் இருந்து யூனூஸ் அஹ்மது தன்னை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ராமநாதனுக்கு தெரியும். ராஜநாயகம் பங்களாதேஷில் இருந்து எப்படி ஒரு கறார் கந்தசாமியைப் பிடித்தான்நேற்று இரவெல்லாம் ஆம்வே டிஸ்டிபியூட்டரிடம்‘ வரும் மாதம் என்ன சரக்கு தேவை என்பதை மனைவியுடன் அமர்ந்து முடித்து இப்போது இண்டெண்ட் ‘ ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசும் பெண்ணை இந்த யூனூஸ் விட்டுவிடுவான். அவள் இன்று நூறு கஸ்டமரிடம் பேசினேன், பத்து தேறும் என்று சொல்லி விட்டு ஐந்து மணிக்குக் கிளம்பி விடுவாள். (கஸ்டமர் பெயரில் அவளுக்குத் தனியறைஏசி!). யூனுஸ் தங்குவதே குடொனில்தான். திடீரென ஆபீஸில் தென்படுவான். முதலில் வேவு பார்த்துவிட்டுப் பின் அருகில் வந்து பேசுவான். பங்களாதேஷில் இருந்து எடுபிடி மட்டுமே வருவார்கள் முன்னெல்லாம். கையடக்க டைரியை வைத்து இவன் என்ன வித்தை காட்டுகிறான்அதில் கிட்டத்தட்ட விற்ற சரக்குவர வேண்டிய சரக்கு எல்லாக் கணக்கும் உத்தேசமாக இருக்கும். கம்ப்யூட்டரில் தான் போடுவதோடு அது சரியாக வரவில்லை என்றால் தோண்டித் துருவி விடுவான். அவன் கணக்கு எப்படித்தான் சரியாக இருக்கிறதோ.

மைலாப்பூரில் ராயர் உணவகத்தின் ருசி தெரிந்தவர்கள் குறைவே. மெய்யப்பன் தோசையை அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கச்சேரி ரோடின் வாகன இறைச்சலோ இல்லை வாயை விஞ்சி அசை போட்ட அவரது மனமோ இல்லை இரண்டுமோ எதிரில் ஒருவர் வந்து அமர்ந்ததை அவர் கவனிக்கவே இல்லை

மெய்யப்பா.. நான் வந்து அஞ்சு நிமிஷமாச்சு,” என்றார் நீள மூக்குபுட்டிக் கண்ணாடிக்குப் பின் குழி விழுந்த கண்கள். ராமச்சந்திரனேதான்

ஹலோ சார்,”என்று இடது கையை நீட்டினார் மெய்யப்பன்நான் உனக்கு சீனியர். உன் ரிடையர்மெண்ட் பார்ட்டிக்கு வரலேனு கோவிச்சாலும் பழசையெல்லாம் மறக்காதே.”

என்ன சார் நீங்கஒரே வெகிகிள் சத்தம் அதான். என்ன சாப்பிடறீங்க?”

எனக்குப் பொண்டாட்டி சமையலிலேருந்து ஏதுப்பா விடுதலைஒரு காபி மட்டும் சொல்லு. உன் நம்பரை விட்டுட்டேன். இந்தப் பக்கம் போறப்பவெல்லாம் ராயர் ஹோட்டல்லே எட்டிப் பாப்பேன். உன் கிட்டே ஒண்ணு கேக்கணும் மெய்யப்பா.

சொல்லுங்க சார். அடியேன் என்ன செய்யணும்? ”

மின்னே ஒரு தடவை ராஜநாயகம்னு ஒரு பையன் கிட்டே அஞ்சு லட்சம் கொடுத்தேன்னியே. வட்டி தர்றானாஏதோ பர்மா முஸ்லீம் ஒத்தனை வெச்சி அவன் ஆம்வேலே சாதிக்காறான்னியே? ”

 ஒரு நிமிடம் என்று கையைக் காட்டியவர் எழுந்து சென்று கையைக் கழுவி விட்டு வந்தார். ”ராஜ நாயகம் எனக்கு ஆம்வே பிராடக்ட்ஸ் சேல்ஸ்மேனாத்தான் அறிமுகம் ஆனான்இன்ஃபாக்ட் அவனுக்கு ஆம்வே சைடு பிஸினஸ்இன்னிக்கிக் கூட அவன் பெரிய ஒரு கன்சல்டன்சில சீனியர் கன்சல்டண்ட்அப்போ அவன் இவ்ளோ பெரிய ஏஜென்சி எடுக்கிற நிலமைலே இல்லேஎன்னை ரெகுலரா மீட் பண்றதாலே என் ரிடையர்மெண்ட் பத்தி அவனுக்குத் தெரியும்ஒரு சின்னத் தொகை போடுங்கநான் 12% தரேன்னான்அவன் மேல ஏனோ ஒரு நம்பிக்கைமுதல் வருடம் 12% வட்டி தந்தவன் அடுத்தவருடம் அதனுடன் 5% டிவிடெண்ட் வேற கொடுத்தான்

முஸ்லீம் முக்கியமான ஆளான கம்பெனின்னா எப்டி சரியா வரும்னுதான் யோசிக்கிறேன். எனக்கும் இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கு.

டீடெய்லா சொல்றேன் சார். ராஜ் அவனை ஒரு ஹோம் அப்ளையன்சஸ் எக்ஸிபிஷன்லேதான் முதலிலே பாத்திருக்கான். அரைகுறைத் தமிழ்லே அவன் விற்பனைக்குக் காட்டிய ஆர்வம் இவனை இம்ப்ரெஸ் பண்ணஎன் கிட்டே வேலைக்கி வரியானு கேட்டப்போதான் பர்மாக்காரன்னும் எப்டியாவது பங்களாதேஷ்லே செட்டில் ஆகணும்னும் சொல்லி இப்போதைக்கு இங்க போலீஸ் பிடிக்காதபடி ஒரு ஐடி கிடைக்குமானு கேட்டிருக்கான். அவன் குடும்பத்திலே பாக்கி பேர் எல்லாரையும் பர்மா கலவரம் காவு வாங்கிடுச்சி. ராஜ் அவனுக்கு பங்களாதேஷ்ல ஒரு கம்பெனியில வேலை செய்ற ஐடி வாங்கித் தந்திருக்கான். அந்த உதவியிலே நெகிழ்ந்த யூனுஸ் இவங்கிட்டேயே வேல செய்றான். நா ஒரு முறை ஆம்வே பிராடக்ஸ் விக்கற அந்த ஆபீஸ்ல போய் பாத்தேன் சார். அவன்கிட்டே பொழைக்கணும் நிலைநிக்கணும்ற வைராக்கியம் தெரியுது. ராஜநாயகம் ஆளுங்களை எடை போடறதிலே கெட்டி சார்

சரி. நான் முதல்லே ஒன் லாக் இன்வெஸ்ட் பண்ணிப் பாக்கறேன், என்றார் சீனியர். 

 

சிட்னியில் தன் அலுவலகத்தில் ஸ்மித் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியாவுக்குப் போய் வந்ததும் இடுப்பில் மாட்டிக் கொள்ளும் ஒரு பெல்ட் நடுவே பை‘ அவன் பயணங்களில் துணையாகி இருந்தது. அதற்குள் தனது கைபேசிகார் சாவி மற்றும் பர்ஸ்ஸைத் திணித்து ஜிப்பை மூடினான். முதல் டேட்டிங்கில் சில்வியாவுக்கு அது மிகவும் வியப்பளித்தது. அதை அவன் மீது மாட்டிப் பார்த்துகையில் எடுத்துப் பார்த்துக் குதூகலித்தாள்.

காரில் அமர்ந்ததும் பின்புலம், வரைபடம் காட்டும் திரையில் ஷர்மாவின் மின்னஞ்சல்‘ என்று ஒளிர்ந்தது. அதன் மீது அழுத்தினான். அன்பு ஸ்மித். உங்கள் விருப்பப்படி நான் ராஜநாயகத்துடன் தொடர்பு வைக்கிறேன்நான் அவர் நிறுவனத் தலைமையிடமும் பேசி விட்டேன்அவர்கள் முதலிலேயே முழுத் திட்டத்தையும் சமர்ப்பித்து விட மாட்டார்கள்ராஜநாயகம்தான் இந்த பிராஜக்ட் லீடர்.. நல்ல வியாபார மூளை. பயன்படுவார்ஹார்லி டேவிட்சன் பற்றி நீங்கள் கவலைப்பட்டபடி எதுவுமில்லைஸ்பார்க் பிளக்கை டார்ஜிலிங் மெக்கானிக் சுத்தப்படுத்திப்போட்டான். வேறு எதுவும் செய்து விடவில்லை. அவனுக்கு வண்டி பற்றி நல்ல அறிவு இருந்திருக்கிறதுஷர்மா

 

தம்பி,ராஜநாயகம்.. கட்சி ஆபிஸ்லேருந்து பேசறேன்பா.. இன்னும்  ஒரு மணி நேரத்திலே தலைவரு இங்கே வந்துடுவாரு. நீங்க எங்கே இருக்கீங்க? ”

ஸார், கிளம்பிட்டேன். அரை மணியிலே அங்கே இருப்பேன்.

சமூக ஊடகம் பத்தி எங்க யாருக்குமே அதிகம் தெரியாது. மெய்யப்பன் அவரோட குடும்ப நண்பரு. அதான் தலைவரு ஓகே பண்ணிட்டாரு.

சார், நான் முறையா கிட்டத்தட்ட ஐநூறு பேரு கிட்டே என் ஸ்டாஃபை வெச்சிப் பேசிசம்மதிக்க வெச்சிருக்கேன்.எலெக்சன் முடியற வரைக்கும் வீக்லி பேமெண்டுக்கு அவங்க தங்களோட வாட்ஸ் அப் குரூப்புகளுக்கு அனுப்பிச்சு அதன் ப்ரூப்ஃபை என் ஸ்டாஃப் கிட்டே காட்டுவாங்க. அனேகமும் வயசிலே பெரியவங்க. அந்தஸ்து உள்ளவங்க. பேஸ்புக்ல விவாதம் மாதிரி செய்யவும் யூத் ரெடி.

ரொம்ப நல்லது தம்பி. தலைவருக்கிட்டயும் இதே மாதிரி விலாவாரியா சொல்லிடுங்க. அவரே உங்களுக்கு அட்வான்ஸை கேஷா தர விரும்புறாரு.”

அதுக்கென்ன சார்வாய்ப்புக்கு நான்தான் நன்றி சொல்லணும்.

பேசி முடித்ததும் தலைவருக்கென தான் வாங்கிய பொன்னாடையை முதுகுப் பையில் தேடினான். இல்லை. காரை ஓரங்கட்டி கார் டிக்கியில் தேடினான். முக்கியமானது. எங்கே வைத்திருப்பேன்யூசுப்பை தொலைபேசியில் அழைத்தான்.

‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்

மனித வாழ்வின் அனுபவமான பூதபௌதிகங்கள் அறிவு கொண்டு பேசப்பட முடியாத குறை நிலை இலக்கியத்தால் நிரப்படப்பட வேண்டும்- தொழில்மயமாவதற்கு முன்னிருந்தது போல் மானுடமல்லாதவை குரல் பெறவும் நிலையற்ற இவ்வுலகின் விசித்திர அச்சம் நினைவுறவும் பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தையொட்டி வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.

(The Great Derangement (2016), Gun Island –(2019), Amitav Ghosh, Penguin Books)

என் பள்ளிப்பருவத்தில் ஒரு காலகட்டத்தில் ஒரு கனவு அடிக்கடி வந்தது. டம்ளர், டபரா என்று மிகச் சிறிய பாத்திரங்களில் துவங்கி குடம், அண்டா என்று பெரிய பாத்திரங்களாக அதிகரித்துக் கொண்டே போகும் கொள்கலன்களிலிருந்து அவற்றுள் இருந்திருக்க முடியாத அளவில் தண்ணீர் வேகமாக வெளியே கொட்டும். அண்டா போன்ற ஒரு பாத்திரத்திலிருந்து நீர்வீழ்ச்சி போல் நம்ப முடியாத அளவு தண்ணீர் கொட்டும்போது ஒரு பெண் தெய்வம் கால்களைத் தூக்கி மிதிப்பது போல் வந்து வேல் கொண்டு நெஞ்சில் குத்த நிற்கும்போது விழிப்பு வந்து விடும். அதற்கப்புறம் இரண்டு மூன்று நாட்கள் கடும் சுரம் நீடிக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பது இன்னும் தெரியவில்லை. வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் காரணமாக கிரீன்லாந்தில் பனியுருகி ஒரு பாலத்தின் கீழே ஓடும் காணொளி ஒன்றை அண்மையில் பார்த்தபோது  அந்த அச்சத்தை மிக மெலிய நினைவாக உணர்ந்தேன்.

ஆங்கிலத்தில் portent என்று ஒரு சொல்லுண்டு. நிமித்தம் என்ற பொருளில் பயன்படுகிறது. ஷேக்ஸ்பியர் ஏறத்தாழ எப்போதும் அதை தீக்குறி என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஜூலியஸ் சீசர் நாடகத்தில், காஸ்கா என்பவர் தான் கண்ட தீக்குறிகளைச் சொல்லிக் கொண்டே வருகிறார். அடிமையொருவன் கரத்திலிருந்து நெருப்பு பொழிந்தது, ஆனால் அவன் கைக்கு ஒன்றும் ஆகவில்லை; வரும் வழியில் சிங்கம் ஒன்று என்னை முறைத்துப் பார்த்தது, ஆனால் என்னை ஒன்றும் செய்யவில்லை; நெருப்பு மனிதர்கள் அங்குமிங்கும் நடந்து போனதைப் பார்த்தோம் என்று பயத்தில் உறைந்திருந்த பெண்கள் சொன்னார்கள்; இரவுப் பறவையொன்று பட்டப்பகலில் கூவிக் கொண்டிருந்தது, என்று சொல்லிக் கொண்டே, வருபவர்,

When these prodigies
Do so conjointly meet, let not men say
‘These are their reasons; they are natural;’
For, I believe, they are portentous things
Unto the climate that they point upon.

அசாதாரண விஷயங்கள் ஒன்றுகூடி வரும்போது “இவற்றுக்கு இவை காரணங்கள், இதெல்லாம் இயல்பான விஷயங்கள்,” யாரும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும், இவை சுட்டும் பருவநிலைக்குரிய தீக்குறிகள் இவை, என்பது போல் இதற்கு பொருள் வருகிறது (‘they are portentous things / Unto the climate that they point upon’ என்பதிலுள்ள அழகை தமிழில் சொல்ல முடியவில்லை.). எந்த பருவநிலைக்குரியவையோ அவை இப்போதே தீக்குறி வடிவில் வந்து விட்டது. இதை வேறு மாதிரி பார்க்கலாம்.

ஷேக்ஸ்பியர் காலத்தில் இப்படியென்றால் தொழிழ்மயமாக்கப்பட்டபின் இவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. சார்லஸ் லயல் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் அமிதவ் கோஷ்: “துவக்க கால வளர்ச்சிக் கட்டத்தில் கிரகணம், பூமி அதிர்ச்சி, வெள்ளம், வால் நட்சத்திரத்தின் வருகை, என்று ஏராளமான இயற்கைத் தோற்றங்கள் புரிந்து கொள்ள முடியாதபோது அசாதாரணம் என்று கருதப்பட்டன, பிற்பாடே அவை இயல்பான வரிசையில் நிகழ்பவை என்று அறியப்பட்டன. இதே பிரமை மனதில் நிகழ்வது தொடர்பாகவும் நிலவுகிறது பேய்கள், பிசாசுகள், சூனியகாரர்கள், மற்றும் பல அபௌதீக அமானுட சக்திகளின் குறுக்கீட்டின் காரணமாக சித்த பேதலிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.” (0). எது தீக்குறியாகவும் தீவினையாகவும் அஞ்சப்படுகிறதோ, அதுவே கணிக்கப்படக்கூடிய தர்க்க ஒழுங்குக்குட்பட்டது என்றறியப்படும்போது சீரான இயல்புக்குட்பட்ட இயற்கை நிகழ்வாகிறது.

portent என்ற சொல்லின் மூலப்பொருள் தேடினால், ‘முன், முன்னோக்கி’ என்று பொருள்படும் por- மற்றும் ‘நீள்தல், விரிதல்’ என்று பொருள்படும் tendere என்ற இரு வேர்கள் கொண்ட சொல் என்று அறிகிறோம். portent என்பது முன்னோக்கி நீள்வது, எதிர்காலத்தின் மீது கவியும் நிழல். சகுனம், நிமித்தம், இத்தன்மை கொண்டது. இதற்கு எதிர்ப்பொருள் கொண்ட, ஆனால் இதற்கு இணையாக பயன்படும் இதன் இரட்டை predict. முதலிலேயே, முன்னே என்று பொருள்படும் pre- மற்றும் உரைத்தல் என்று பொருள்படும் dicere என்ற இரு வேர்களைக் கொண்டது. predict என்பது முன்னுரைப்பது. portent என்பது எதிர்காலத்தை நோக்கி நீளும் நிழல் என்றால் predict என்பதில் எதிர்காலம் இன்றே உரைக்கப்பட்டு யதார்த்த உலகின் சீரான ஓட்டத்தில் அடங்கி விடுகிறது.

அமிதவ் கோஷ், ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற அவரது நூலில், பருவநிலை மாற்றத்தை ஏன் புனைவில் பேச முடியவில்லை என்ற கேள்விக்கு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டபின் பொருளாதாரம், மருத்துவம், அறிவியல் என்று எல்லாமே முன்னேறும்போது நிகழ்தகவு கணிதம் வளர்ந்ததைச் சொல்லி (probability, probare- “to try, to test”) இயற்கை ஒழுங்கை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பூதபௌதிகங்களுக்கு அன்றாட வாழ்வின் விவரிப்பில் இடமில்லாமல் போய் விட்டது, என்கிறார். இலக்கியம் ரெகுலரான வாழ்வை விவரிப்பது. எப்போதும் கதை என்பது வழக்கத்துக்கு மாறான சம்பவத்தை விவரிப்பது, அசாதாரணத்தைச் சொல்வதுதான் காலம் காலமாக கதையென்று இருந்து வந்திருகிறது. ரெகுலரான வாழ்க்கையை மட்டும்தான் இலக்கியம் விவரிக்கும் எனும்போது கதையின் தவிர்க்க முடியாத கூறான அசாதாரணத்தைச் சொல்லுதல் பின்னுக்கு தள்ளப்படுகிறது, உணர்த்தலாக மாறுகிறது. மானுடமல்லாதவற்றுக்கு குரலளிப்பது எப்படி, என்பதுதான் பருவநிலை இலக்கியத்தை எழுத முற்படும்போது எழுதும் கேள்வி என்கிறார் அமிதவ் கோஷ்.

ஆனால் இன்றும்கூட தமிழ் வாழ்வு இலக்கியம் சொல்வது போல் பகுத்தறிவுக்கு உட்பட்ட, பூதபௌதிகங்கள் நீங்கிய நிலையில் இல்லை. சென்ற மாத துவக்கத்தில் தன் குலதெய்வமான செனப்பிரட்டி செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டத்துக்குச் சென்றிருந்தார் என் மனைவி. ஒரு குதிரை தலையசைத்து அனுமதித்தபின்தான் தேர் கிளம்பும், ஆனால் குதிரை தலையசைக்க மறுத்து விட்டது. மாலை சாயும்போது ஒருவருக்கு சாமி வந்து வேறோரிடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்தால்தான் தேர் புறப்படும் என்று சொன்னது. உடனே அங்கிருந்து சிலர் அந்தக் கோவிலுக்குச் சென்று (அது சாலையோரம் உள்ள நடுகல் போன்ற கோவில்) பூஜை செய்து முடித்த அக்கணமே இங்கு குதிரை தலையசைத்து, தேர் கிளம்பியது. இதைச் சொன்ன என் மனைவி, செல்லாண்டியம்மனின் சக்தியை வியந்தார். “யார் இந்த செல்லாண்டியம்மன்?”, என்று கூகுள் செய்தபோது, சேர சோழ பாண்டியர்களுக்கு அவரவருக்குரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுத்து தமிழகத்தில் அமைதி நிறுவிய தெய்வம் செல்லாண்டியம்மன் என்பது தெரிந்தது.

நம் அன்றாட வாழ்க்கையில் கோள்களும் அவற்றின் ஏவலாட்களான ஐம்பூதங்களும் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பேசும்போதும்கூட மழை பெய்தது, காற்று அடித்தது, கடல் சீற்றம் கொண்டது என்று அவற்றுக்கு கர்த்துருத்துவம் கொடுத்துதான் பேசுகிறோம். நாய், பூனை, காகம், யானை, பாம்பு என்று எல்லா பிராணிகளுக்கும் விருப்பு, வெறுப்பு, சூடு, சொரணை, எல்லாம் உண்டு என்பது போல்தான் அவற்றோடு பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் நடந்து கொள்கிறோம். ஆனால் இலக்கியம் என்று வரும்போது இவையெல்லாம் ஊமையாக்கப்பட்டு, இயந்திரகதிக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. இவையும் குரலெடுத்து பேசும்போதுதான், இவ்வுலகம் குறித்து விசித்திரமும் மர்மமும் கலந்த, திகைப்பச்சத்தை உருவாக்கக்கூடிய, uncanny என்று சொல்லப்படும் உணர்வு நமக்கு வரும் என்கிறார் அமிதவ் கோஷ். அப்போது, மானுட எல்லைகள் புலப்படும், ஒரு தன்னடக்கம் உருவாகும், இச் சீரான உலகின் பின் கொதிப்பும் கொந்தளிப்புமாய் பூத பௌதிகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அவை எந்நேரமும் நம் வாழ்வில் குறுக்கிடலாம் என்ற உண்மை புரியும் என்கிறார் அவர். எல்லாம் சீராக இயங்கும் என்ற நம்பிக்கை மனித வரலாற்றில் எப்போதும் இல்லாத, ஆனால் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மட்டுமே உள்ள, இயற்கையை நாம் வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் உருவான ஒரு பித்துக்குளித்தனம். உண்மையில், பூதபௌதிகங்கள் பழி வாங்கக்கூடியவை, நம்மை பலி கொள்ளக்கூடியவை என்பதுதான் பருவநிலை மாற்றத்தின் பாடம்.

அமிதவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ நாவல் படித்தபோது ஒன்றும் சுவாரசியப்படவில்லை, முதலில் கதை இன்ன வகையென்று புரிந்து கொள்வதே தடுமாற்றமாக இருந்தது, அப்புறம் படித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது. அதற்கப்புறம் நாவலை பல கோணங்களில் நினைத்துப் பார்த்தபோதும் அது ஒன்றும் அவ்வளவு நல்ல நாவலாகத் தோன்றவில்லை. ஒரு சமயம், இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெற்ற பதின்பருவத்தினருக்காக எழுதப்பட்ட நாவலோ என்று தோன்றியது- இதன் நாயகன் என்று சொல்லத்தக்க திப்புவின் கதை நாவலின் மையத்தில் இருக்கிறது, பதின்பருவத்தினர் அவனது விழைவுகள் மற்றும் இன்ப துன்பங்களுடன் தங்களை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் (கதைசொல்லி பெரும்பாலும் பார்வையாளராக இருக்கிறார், அந்த பதின்பருவ வாலிபனே செயலூக்கம் கொண்டவனாக இருக்கிறான்). டான் ப்ரௌன் சாயல் கொண்ட இந்தக் கதையில் ஏராளமான தன்னிகழ்வுகள் இருக்கின்றன, அவை பொருள் பொதிந்தவையாகவும் அமைந்திருக்கின்றன. எல்லாம் சுவிட்ச் போட்ட மாதிரி அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பவசமாய் நடக்கின்றன. அதிலும் விசேஷமாக, கதையின் முடிவில் யார் யார் யாருடன் சேர வேண்டுமோ அவர்களுடன் சேர்கிறார்கள், யார் யார் பிரிய வேண்டுமோ அவர்கள் பிரிகிறார்கள். பாம்பு என்றால் பாம்பையே இடுப்பில் கட்டிக் கொண்டு ஆடுவீர்களா, என்று புதுமைப்பித்தன் கதையில் கேட்டது மாதிரி மாயம் என்பது லிடரலாகவே கதையில் நிகழ்கிறது. கதைசொல்லியின் தோழிக்கு அவரது இறந்த மகள் உணர்த்தல்கள் அளித்து வழிகாட்டுகிறாள். பதின்பருவ வாலிபன் ஒரு பாம்பு கடித்தபின் அடிக்கடி வலிப்பு வந்து எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் பெறுகிறான். இதில் எதுவும் நம்பத்தக்கதாக இல்லை.

எல்லாவற்றுக்கும் மேல், இந்த நாவல் மேலை நாட்டவர்களுக்காக, அதிலும் குறிப்பாக காகசியர்களுக்காக எழுதப்பட்ட உணர்வு தருகிறது. பருவ நிலை மாற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்படும் வங்கதேச அகதிகள் இந்தியாவில் குடியேறி வருவது தீவிர அரசியலாகி யாருக்கு குடியுரிமை உண்டு, எப்படிப்பட்ட குடியுரிமை உண்டு என்று இந்திய அடையாளத்தைக் குறுக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தக் கதையில் வங்க தேச அகதிகள் வெனிசில் குடியேறுகிறார்கள். அதையொட்டி இனவாதம், காலனியாதிக்கம் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

மேலை நாட்டவர்களுடன் இந்த நாவல் உரையாடுகிறது என்ற எண்ணம் ஒரு புறம், இன்னொரு புறம், இந்தப் பிரச்சினை இந்தியாவைக் களமாய்க் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற வருத்தம்- என்ன இருந்தாலும் வரலாற்றைப் பார்க்க வேண்டும். போகவும், மேற்கில் குடியேறக்கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் குடிபுகக் கூடிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தவிர, அமிதவ் கோஷ் வங்காளி, இந்தியர், அண்மையில் ஞானபீட விருது பெற்றவர், தேசீய அடையாளமெனும் எருதின் கொம்பைப் பிடித்து பொருதியிருக்க வேண்டும். பிரச்சினையின் குத்திக் கிழிக்கும் கூர்முனையைத் தவிர்த்து, ஐரோப்பிய லிபரல்களிடையே ஒருமித்த கருத்தாய் உருவாகியுள்ள எளிய வாசலில் வெளியேறி விட்டார்- பருவநிலை மாற்றத்தின் பலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும், காலனியத்தாலும் உலகமயமாக்கச் சுரண்டலாலும் வளமையடைந்த மேற்கத்திய தேசங்கள் மூன்றாம் உலகின் ஏதிலியாக்கப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு ஆதரிக்கும் தார்மீக கடமை கொண்டவை என்பதில் லிபரல்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. எனவே, பருவ நிலை மாற்றத்தால் அகதிகளாக்கப்பட்டவர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியர்களுக்கும் உண்டு என்று இங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து குற்றம் சொல்வதைவிட எல்லா பழியையும் ஐரோப்பியர்கள் மீது போட்டுவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லாமல் முடிந்தது சோலி. இந்திய வரலாற்றின் பின்னணியில் இந்தியாவைச் சுற்றியுள்ள தேசங்களின் அகதிகளிடம் இந்தியா காட்டும் அணுகுமுறை என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட சூழலைக் கதைக்களமாய்க் கொண்டு பார்த்திருக்க வேண்டிய அமிதவ் கோஷ் இந்தியர்கள் நமக்கு மிக முக்கியமாய் இருக்கக்கூடிய பிரச்சினையைப் பேசாமல் தவிர்த்து விட்டார் என்று தோன்றுகிறது.

கதைக்களம் சார்ந்து இதையும், கதைகூறல் சார்ந்து அதன் deux ex machina விஷயங்களையும் ‘கன் ஐலண்ட்’ நாவலில் முக்கியமாய் விமரிசிக்கத்தக்க விஷயங்களாய்ச் சொல்லலாம். பகுத்தறிவைக் குறைத்து மதிப்பிட்டு, மூடநம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நாவல் இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் அமிதவ் கோஷ் தர்க்க ஒழுங்கை ஒரு மிஸ்டிக் ஆராவில் போர்த்து அடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் தன்னிகழ்வுகளும் மிஸ்டிக் பாவனைகளும் நமக்கு அளிக்கும் ஒவ்வாமைகள் அவரது ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற மிகச் சிறிய, ஆனால் வாசிக்கத் தவறக்கூடாத அபுனைவு நூலை வாசிக்கும்போதுதான், எல்லாம் ஒரு கருத்தாய்த்தான் சொல்லியிருக்கிறார், என்ற புரிதலை அளிக்கின்றன. ‘கன் ஐலண்ட்’ படிப்பவர்களுக்கு ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ ஒரு அவசிய உரை நூல், இரண்டும் இரட்டைப் பிரதிகள் என்று சொல்லலாம். ஒன்று மற்றதுக்கு வெளிச்சம் தருகிறது, அமிதவ் கோஷை ஒரு முழுமையான புனைவெழுத்தாளராக நினைக்கச் செய்கிறது (இதனால் ‘கன் ஐலண்டி’ன் போதாமைகள் மாயமாய் மறைவதில்லை, ‘ஏன் இப்படி எழுதியிருக்கிறார்’ என்ற புரிதல் கிடைக்கிறது. ‘கன் ஐலண்ட்’ ஒரு குறைபட்ட நாவல் என்றால் அதற்கு காரணம் அறியாமையோ தேர்ச்சியின்மையோ அல்ல).

‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அமிதவ் கோஷை ஒரு அசாதாரண, ஒரிஜினல் சிந்தனையாளராகக் காட்டுகிறது. ‘கன் ஐலண்ட்’ நாவலிலும்கூட கதை நிகழ்வுகளைவிட கருத்து நிலை உரையாடல்கள் மிக அருமையாக அமைந்திருக்கின்றன. ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’டில் இலக்கியம் மற்றும் சிந்தனை குறித்து அமிதவ் கோஷ் பேசுவதை ‘கன் ஐலண்டி’ல் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஒன்று எப்படி இருந்திருக்க வேண்டும், எங்கு தவறு நிகழ்ந்தது என்பதைச் சொல்வதும் அதற்கு தீர்வு காண்பதும் முற்றிலும் இரு வேறு விஷயங்கள். இந்த இடைவெளியே அபுனைவில் அமிதவ் கோஷ் தொட்ட உயரத்தை கன் ஐலண்டில் தொட முடியாததற்கு காரணமாகிறது. இது அவரது இயலாமையும்கூட அல்ல, அவர் சொல்ல வரும் விஷயத்தின் இயல்பு அப்படி. மிக முக்கியமாக, இலக்கியத்தின் கூறுமொழிக்கும் கார்பன் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.

அதுவரை நிலையில்லாமல், தீர்மானமான உருவமில்லாமல் இருந்த கதைகூறல், கார்பன் பொருளாதாரம் அளித்த பாதுகாப்பின் காரணமாக சீரான வடிவத்தை நோக்கி நகர்கிறது என்கிறார் கோஷ். அதுவரை கதையாடலில் இடம் பெற்ற அமானுட விஷயங்கள், இயற்கையின் இடையூறுகள், தேவர்கள் தெய்வங்கள் அசுரர்கள் என்று மானுடமல்லாத சக்திகளின் குறுக்கீடுகள், செடி கொடி விலங்குகளின் தாக்கம், அசந்தர்ப்ப நிகழ்வுகள், ஊர்ப்பட்ட விஷயங்களைப் பேசுதல் என்று எல்லாவற்றையும், காலம் சீரான வேகத்தில் மேலும் மேலும் நல்ல உயரங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது என்ற கார்பன் பொருளாதாரத்தின் பாதுகாப்பு அளித்த நம்பிக்கை அப்புறப்படுத்தி விட்டது என்கிறார் அமிதவ் கோஷ். அசாதாரண விஷயங்களைப் பேசி வந்த பழங்கதைகள் கண்டிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி அசாதாரணங்களை கூறாமல் கூறும் நவீன கதைகூறல் பூர்ஷ்வா வாழ்க்கையின் சீரான ஓட்டத்துக்கு இசைவாய் இருந்ததால் விதந்தோதப்படுகிறது. மைக்கேல் மதுசூதன் தத்தாவை இப்படி விமரிசிக்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி: “திரு. தத்தாவுக்கு… அமைதி தேவைப்படுகிறது. மிகச் சிறு சலனத்துக்கும் தேவையில்லாத இடத்தில் காற்று சீற்றம் கொண்டு தம்மால் ஆன மட்டும் உரத்து ஒலிக்கிறது. அப்படி எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லாதபோதும் மேகங்கள் கூடி பெருவெள்ளம் பொழிகிறது; அனைவருக்கும் அதன் குறுக்கீடு ஒவ்வாமையளிக்கும் போழ்தில் கடல் வெஞ்சினம் கொண்டு அச்சுறுத்தும் பேருருவம் பூண்கிறது.” (1)

நவீன நாவலின் செயற்கைத்தன்மையை இப்படி அடையாளப்படுத்துகிறார் அமிதவ் கோஷ்- “நவீன நாவல்… தன் மையத்தில் உள்ள அசாத்தியத்தை எதிர்கொள்ளச் செய்யப்படுவதேயில்லை. நிகழ்வுகளின் கட்டுமானச் சாரத்தை மறைப்பதே அதன் செயல்பாட்டுக்கு தொடர்ந்த தேவையாய் இருக்கிறது. இதுதான் குறிப்பிட்ட ஒரு வகை கதைகூறலை நவீன நாவலாக்குகிறது. ஆயின், இங்கிருக்கிறது, ‘யதார்த்த’ நாவலின் நகைமுரண்: யதார்த்தத்தை பிரசன்னப்படுத்தும் அதன் அசைவுகள் உண்மையில் நிதர்சனத்தை மறைக்கின்றன” (2)

பருவநிலை மாற்றத்தை ஏன் இலக்கியம் எதிர்கொள்ள முடியவில்லை என்பதைப் பேசும்போதுதான் இதையெல்லாம் எழுதுகிறார் அமிதவ் கோஷ். அசாதாரணங்கள், நடக்க முடியாத விஷயங்கள், நினைத்தே பார்க்க முடியாதவை, புல்லரிக்கச் செய்யும் வினோத நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்துக்கு உரியவை. கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட சாதாரண அன்றாட யதார்த்தத்தின் பின்னணியில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடப்பதை தாழ்ந்த குரலில் உணர்த்தும் நவீன நாவல்கள் இவற்றுக்கு விரோதமானவை. இந்தப் பார்வை அவரை ஆச்சரியமான முடிவுக்கு கொண்டு செல்கிறது- இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய எழுத்தாளர்கள் யாரெல்லாம் நீண்ட தாக்கம் செலுத்தினார்கள் என்று பார்த்தால் அதன் மாபெரும் எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள், ஆர்தர் சி. கிளார்க், ரேமண்ட் பிராட்பரி, பிலிப் கே. டிக்தான் எஞ்சி நிற்கிறார்கள் என்கிறார் அவர் (3). இதைத் தொடர்ந்து அவர் மிகக் கடுமையான சாடலில் நவீனத்துவ எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட அனைவரையும் நிராகரிக்கிறார். நம் சூழலில் விரைந்து நிகழும் மாற்றங்களை எழுதிய ஆங்கில இலக்கியவாதிகள் யார் என்று பார்த்தால் தேட வேண்டியிருக்கிறது, ஒரு சில பெயர்களையே குறிப்பிட முடிகிறது – ஜே. ஜி. பல்லார்ட், மார்கரெட் அட்வுட், கரட் வோனகட் ஜூனியர், பார்பரா கிங்சால்வர், டோரிஸ் லெஸ்ஸிங், கோர்மாக் மக்கார்த்தி, இயன் மக்ஈவன், டி. கோரகெஸ்ஸான் பாய்ல் (4).

மற்றவர்கள்? பழைய பட வில்லன்கள் சிலர் ஒவ்வொரு நாளும் சிறிது பாம்பு விஷமேற்றி தமக்கு பாம்புக் கடிக்கு எதிரான வீரியம் வளர்த்துக் கொள்வது போல் அச்சுறுத்தலால் பலம் பெறும் விஷயங்களை இணையத்தின் மூர்க்கச் சிந்தனையாளர் நிஸ்ஸிம் நிக்கலாஸ் தலெப் ஆன்ட்டி-ஃப்ரஜில் என்று விவரிக்கிறார்- அது போல் கடந்த இரு நூற்றாண்டுகளின் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள் ஏறத்தாழ எல்லாரும் கார்பன் பொருளாதாரத்தின் குறைகளைக் கடுமையாக விமரிசித்து அதை வலுவாக்கிய துணையாளர்கள். சீரான வாழ்க்கை, கட்டுக்கோப்பான அமைப்பு, பகுத்தறிவு, தர்க்கம், தொடர்ந்து முன்செல்லும் காலத்தின் அம்பு என்ற மாயத்தின் மோகத்தில் இவர்கள் இயற்கையின் தவிர்க்க முடியாத கூறாக இருந்த அசாத்திய நிகழ்வை மறைத்து கார்பன் பொருளாதாரத்தின் சீர்கேட்டை நிராகரிக்கத் தவறி விட்டார்கள் என்கிறார் அமிதவ் கோஷ். ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ இது மட்டுமல்ல, குறிப்பிட்ட சில வசதியான பகுதிகளை மட்டுமே இலக்கியம் சார்ந்து இங்கு கையாண்டிருக்கிறேன்.

இதற்கு மாற்றாகவே அவர் முதலில் சொன்ன விஷயங்களை ‘கன் ஐலண்டி’ல் பயன்படுத்துகிறார்- அசாத்தியங்கள், இயற்கையின் உடன்நிகழ்வுகள், உணர்த்தல்கள், மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கக்கூடிய விஷயங்கள். ஆனால் இவை எல்லாமே யதார்த்த உலகின் பின்னணியில், அறிவியலும் தர்க்கமும் பகுத்தறிவும் தொடர்ந்து விவாதிக்கப்படும் பின்னணியில், நிகழ்வதாலோ என்னவோ ஒரு செயற்கைத் தன்மை கொண்டு ஒட்டாமல் போகிறது. பருவநிலை மாற்றத்தின் சவால்களை மனதில் கொண்டு கடந்த இரு நூற்றாண்டு இலக்கியம் மற்றும் சிந்தனை மரபுகளை, நம் பகுத்தறிவு நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அளவில் சிறிதாக இருந்தாலும் ஒரு மாபெரும் படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பொருளாழமும் பார்வை விரிவும் கருத்துகளை தொகுத்துக் கொள்ளும் கற்பனையாற்றலும் நம்மை திகைக்கச் செய்கின்றன. ‘கன் ஐலண்ட்’ அந்த உயரங்களைத் தொடத் தவறுகிறதுஎன்றால் அது அமிதவ் கோஷின் குறை என்றும்கூட சொல்ல முடியாது.

எப்போதும் கதைமொழி நம் பிரக்ஞையின் வெளிப்பாடாகவே அமைகிறது. சீரான வாழ்க்கைக்கும் சாத்தியங்களின் எல்லைகளுக்குள்ளும் வாழ்ந்து, அசாதாரணங்களை அபூர்வ அனுபவமாக்கி விட்ட நவீன மனம் கதைகளிலும் அதைத்தானே மெய்யெனக் கொள்ளும்? பருவ நிலை மாற்றம் கண்களை நீக்க முடியாத நிதர்சன துலக்கம் கொள்ளும்போது இந்நிலை மாறலாம், நம் கதைமொழியும் மாறலாம். ஆனால் அதற்கு முன் கதைமொழியை மாற்றிக் கொள்வதால் வேறொரு தரிசனத்தை அளிக்க முடியும் என்று நம்புகிறார் அமிதவ் கோஷ். இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் அவர் என்பது என்னளவில் சந்தேகத்துக்குரியது. ஆனால் இதுவரை இது குறித்து வந்துள்ள புல்லரிப்பு புளகாங்கித போற்றுதல்களைப் பார்க்கும்போது என் மனம்தான் நவீன கருத்தாக்கங்களால் கெட்டித்துப் போய் விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது, அதையும் சொல்ல வேண்டும்.

(0) “So, as Gould so beautifully demonstrates, Lyell triumphed over his adversaries by accusing them of being primitive: ‘In an early stage of advancement, when a great number of natural appearances are unintelligible, an eclipse, an earthquake, a flood, or the approach of a comet, with many other occurrences afterwards found to belong to the regular course of events, are regarded as prodigies. The same delusion prevails as to moral phenomena, and many of these are ascribed to the intervention of demons, ghosts, witches, and other immaterial and supernatural agents.’”

(1) ‘Mr. Datta . . . wants repose. The winds rage their loudest when there is no necessity for the lightest puff. Clouds gather and pour down a deluge, when they need do nothing of the kind; and the sea grows terrible in its wrath, when everybody feels inclined to resent its interference.’

(2) But the modern novel, unlike geology, has never been forced to confront the centrality of the improbable: the concealment of its scaffolding of events continues to be essential to its functioning. It is this that makes a certain kind of narrative a recognizably modern novel. Here, then, is the irony of the ‘realist’ novel: the very gestures with which it conjures up reality are actually a concealment of the real.

(3) If a list were to be made of the late-twentieth-century novelists whose works remain influential today, we would find, I suspect, that many who once bestrode the literary world like colossi are entirely forgotten while writers like Arthur C. Clarke, Raymond Bradbury and Philip K. Dick are near the top of the list.

(4) It is when I try to think of writers whose imaginative work communicated a more specific sense of the accelerating changes in our environment that I find myself at a loss; of literary novelists writing in English only a handful of names come to mind: J.G. Ballard, Margaret Atwood, Kurt Vonnegut Jr., Barbara Kingsolver, Doris Lessing, Cormac McCarthy, Ian McEwan and T. Coraghessan Boyle.