வைரவன் லெ ரா

அழிவு

வைரவன் லெ ரா 

‘வானம் பிளந்து கடலாய் கொட்டும்
பூமி பிளந்து தாகம் தீர்க்கும்’

‘சதைகளால் பிணைக்கப்பட்ட பெரும்தொகுப்பு மேலும் கீழுமாய் ஒரே நேரவரிசையில் உடலை இறக்கி ஏற்றியது. ஆத்துமாக்கள் அவர்களின் நிழலாய் காலடியில் கிடந்தது. எவரின் விழித் திரைகளும் அதற்குரிய இடத்தில் இல்லை. அவர்கள் தீர்க்கமாக நம்பினார்கள். ஆண்குறிகள், பெண்களின் மார்புகள் அறுக்கப்பட்டும், யோனிகள் சிதைக்கப்பட்டும் இரத்தம் இறுகி காய்ந்த உயிருள்ள சவங்கள் அவர்கள். குழந்தைகளே இல்லை, முன்னரே அறியப்பட்டு பலியிடப்பட்டு இருப்பார்கள். ஒளியில்லா மாமிசப் பந்தின் அகம் போலவே, இருளடைந்த உலகம் அவர்களுக்காகவே வாய்க்கப்பட்டு இருந்தது, சாம்பலே உயர சூழ்ந்து இருந்தது. அகரமும் உகரமும் மட்டுமே உக்கிரமாக காற்றுவெளியில் நிறைந்து இருந்தது, இவ்வொலி அவர்களின் தொண்டையில் இருந்தும், கால் கீழ் இருந்த நிலத்தில் இருந்தும் பிறந்தது. தூரவெளியில் கொலை மிருகங்கள் நான்கு கால் சாதுக்களால் வேட்டையாடப்பட்டது. எல்லாமுமே நடந்தாக வேண்டும், அதுதான் இந்நிகழ்வின் தீர்ப்பு எனத் தீர்க்கமாக அவர்கள் நம்பினார்கள். இளையவன் ஒருவன் தூரமாய் இருந்தப்படி இதையெல்லாம் கூர்க்கல் கொண்டு பாரையிடுக்கில் வரைந்தப்படி இருந்தான்’

“புதிய ஏற்பாட்டுலயும் புதிய உலகம் இருக்கு, எழுதினது யோவான். அவரும் இயேசுவோட சீடர்னு சொல்றாங்க. விவிலியத்துல நிறைய இடத்துல யோவான் வராரு. ஆனா எல்லாரும் ஒரே ஆளுன்னு எங்கயும் தெளிவுகள் இல்ல. அது ஒரு சாது மாதிரி பொதுவான பேரா இருக்கலாம். விஷ்ணுவோட அவதாரத்துலயும் கல்கி இதுக்காகத்தான், கலியுகத்துல நடக்கும்னு அவங்களும் நம்புறாங்க. ஐரோப்பிய, கிரேக்க தொன்மங்கள் எல்லாமுமே புதிய உலகம் பற்றி பேசுது. இந்த குகை சிற்பங்கள் பாருங்க, சின்ன சின்ன கிறுக்கல்கள் மனிதர்களா இருப்பாங்க. எல்லாருமே மேல பார்க்கிறாங்க. வானம் கிழியிற மாதிரி கிறுக்கிருக்காங்க. அதோ அந்த பக்கம் மொத்தமா கிறுக்கல்கள் அழிவோட குறியீடு மாதிரி இருக்கு. மொத்தத்துல உலகம் முழுக்க அழிவு எல்லா மதத்துலயும் பேசப்பட்டு இருக்கு, குறிப்புகள் அவங்க புனித நூலுல தொகுத்து இருக்காங்க” ஜெயனின் பேச்சுக்களை ஆடம் வெறுமனே கேட்பது போன்ற முகப்பாவனையில் இருந்தாலும், வார்த்தைகள் உள்ளுக்குள் என்றோ கண்ட ஆவணப்படத்தின் காட்சிகளை நினைவுப்படுத்தியது.

“ஜெயன், நீங்க சொல்றத நா ஏத்துக்கிறேன். இயல்பாவே ஏதோ ஒரு கணத்துல பிறந்த எல்லா ஜீவராசியுமே அதுக்கான கர்மபலன் செய்யுது. மாத்தி செய்றது ஆறறிவு கர்வத்துல நாமதானே. இயற்கையின் கட்டுமானத்த சிதைக்கிறோம். இதுக்கு கடவுள் மேல பழி போடுறோம். இந்தியா வந்ததுமே இங்குள்ள தொன்மங்கள், பழங்குடி கதைகள் மேலதான் என்னோட ஈர்ப்பு எல்லாமுமே. உங்க கூட நிக்கிறதுக்கான காரணம் அதுதான். உலகம் முழுக்க இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்துல அழிவுக்கான நாளுன்னு அவங்களோட மூதாதையர் குறிப்பிட்ட நாட்களுல எவ்வளோ குழு தற்கொலைகள் நடந்ததன. தவறுகளுக்கு நாம இன்னும் பயப்படுறோம். அதோட வெளிப்பாடு குறிப்புகளா எழுதப்பட்டு ஒரு வித புனித நிலையை அடையும். கூடவே பல கிளைக் கதைகள் இயல்பாவே இணையும். பல நதிகள் கலக்கிற கடல் மாதிரி, கடல் எல்லாத்தையும் உள்வாங்கி சலனமில்லால் கரையில் இருந்து பார்க்கிறப்ப தோணும். உள்ள போனாத்தான் கடலோட தன்மை புரியும்”

“இயற்கையோட எல்லா உணர்ச்சிகளும் கடவுளா மாறுது. மழை, நெருப்பு, இடி, காற்று, வானம் பஞ்சபூதங்களும், கூடவே மனித உணர்ச்சிகளும் அன்பு, பேராசை, பொறாமை, இரக்கம், காமம் கடவுள்களா உருமாற்றம் அடையுது. புனித நூல்கள் உணர்ச்சிக்குவியலின் கூட்டு உருவம் தான். இறுதியாய் அறம், மனிதம் பேசப்படும். எல்லா இசமும் இதைத்தான் வேற வேற கருத்துகளா பதிவு செய்யுது” ஜெயன் சொல்லிக்கொண்டே பாறை ஒன்றில் ஏறி அமர்ந்தார். வயதுக்கான முதிர்ச்சியை விட அவரின் அணுகுமுறை இருந்தாலும், உடலளவில் மிகவும் வலுவானவராக இருக்கிறார் என ஆடம் யோசித்தான். அவனும் பாறைகளில் ஏறினான். “எத்தனையோ ஆதிக்குடிகளோட நேரடி உரையாடல் செஞ்சுருக்கேன். அவர்கள் தங்களுக்கான தவறுகளின் பிராயச்சித்தமா கடவுளுக்கு பலி குடுக்கிறாங்க. உணவுக்கான விலங்கை வேட்டையாடுறது, கூரை வேய மரத்தோட இலைகளை அறுக்கிறது. இலைகள் மரத்தோட கண்களுன்னு சொல்றவங்கல சந்திச்சு இருக்கேன். முக்கியமா பூமில இருக்கிற எல்லா உயிருக்கும் ஆன்மா இருக்குன்னு நம்புறாங்க. மாற்றம்ங்கிற பேர்ல நாம என்ன செய்யுறோம்.” ஆடம் பேசிக்கொண்டே ஜெயனை நோக்கினான். வெறுமனே கைகளை பிசைந்தப் படி, நுனிவானின் எல்லைகளை பார்த்தப் படி அமர்ந்திருந்தான்.

ஆடமின் கண்கள் தன்னிடம் மையம் கொண்டிருப்பதை உணர்ந்த ஜெயன் “இந்த குகை சிற்பங்கள் வரைஞ்சவங்க மனநிலை என்னவா இருக்கும். அவங்க என்ன பாத்திருப்பாங்க, நடந்தத வரைஞ்சாங்களா இல்ல நடக்க போறத வரைஞ்சாங்களா”. “சரி, இறங்குவோம். இருட்ட ஆரம்பிக்குது” ஆடம் எழுந்து நின்றான். செந்நிற கதிர்கள் விளையாட்டை முடித்து அதன் கூடு திரும்ப ஆரம்பித்தது. பாறைச் சறுக்கம் அவர்களின் பாதங்களைப் பற்றி நடக்கும்படி நிர்பந்தித்தது.

ஹவாயின் எரிமலை வெடிப்பை நேரில் காண அவர்கள் வந்திருந்தார்கள். வந்தவிடத்தில் இக்குகை சிற்பங்களை காண அவர்கள் தங்கியிருந்த அறையின் மேலாளர் கேட்டுக்கொண்ட படி சென்று வந்தார்கள். அவர் தன்னை லோனே என்று அறிமுகப்படுத்தி கொண்டார். வந்தவர்கள் எழுத்தாளர்கள் என்பதாலும், ஒருவர் இந்தியர் இன்னொருவர் ஜெர்மானியர் என்பதாலும் அவர்களோடு உரையாடலை விரும்பி அன்றைய இரவே விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஜெயனும் ஆடமும் அறையில் அதிக நேரம் இருந்ததால் நேரமாகவே விருந்துக்கு சென்றார்கள். விடுதியில் அவருடைய அறையில் எல்லாமுமே தயாராகவே இருந்தது. விரும்பி வரவேற்றார்.

“உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். வந்ததற்கு நன்றி.” சிரித்த முகத்துடன் லோனே கூறினார். “எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்றனர் இருவரும். “கிலாயூயா எரிமலை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கோம். எங்க நிலத்தில எரிமலைகள் பற்றிய புரிதல் குறைவு. உங்களோட வாழ்வியல் எல்லாமுமே வியப்பா இருக்கு” தனக்கும் சேர்த்து ஆடம் பேசுவதை ஜெயன் கேட்டுக்கொண்டு இருந்தான். லோனே சிறுக் குழந்தை போல் தலையை ஆட்டியப் படி கேட்டப்படி இருந்தார். “இத்தீவு எரிமலைகளால் ஆனதே, எங்களுடைய கடவுள் பீலே இதை படைத்தாள். அவள் நெருப்பின் கடவுள். அவளின் ஆணைக்கு இணங்க நெருப்புக் குழம்புகள் கடலின் தணுப்பில் இறுகி நிலமாய் மாறி இத்தீவு கூட்டங்கள் உருவானதாய் நாங்கள் நம்புகிறோம். அவள் பூமி அன்னைக்கும், வானத்தின் அதிபதி தந்தைக்கும் பிறந்தவள். பலப்பாடல்கள் அவளின் கதைகளை பேசுகிறது. நாங்கள் அவளின் வாயிற்காப்பாளன் என நம்பப்படும் லோனா மாக்குவாவின் வழியினர், அவர்தான் எரிமலை குழம்பை வெளியே திறக்கிறார். அவளின் நெருப்பின் சூட்டால் உலகம் நிலைகுழைந்தது. இதனால் கடலின் கடவுள் நாமகவொகாகயின் பீலே உடன் சண்டையிட்டாள், இறுதியில் பீலே கொல்லப்பட்டாள். அவளின் ஆன்மா இறக்கவில்லை. அதுவே கிலாயூயா எரிமலையில் புதைந்துள்ளது. அவள் உக்கிரமாய் புகையிராள், அவளை நாங்கள் தணிக்கிறோம்.” லோனே சொல்லிமுடித்ததும். ஜெயனும் ஆடமும் மௌனமாய் அமர்ந்திருந்தனர். லோனே அவர்களுக்கு உணவைப் பரிமாற ஆரம்பித்தார்.

முதலில் அவர்களின் சாராயம், ஜெயன் வேண்டாம் என மறுத்துவிட்டான். ஆடம் ஒரு குவளையை எடுத்துக்கொண்டான். “ரொம்ப ராவா இருக்கு. ஒருவித புளிப்பு ருசி, எனக்கு பிடிச்சிருக்கு.”, “இது வேரில் இருந்து உருவாக்கப்படுகிறது” என்றார் லோனே. ஒரு அமெரிக்கன் மூக்கு அவருக்கு அல்ல, பெரிய மூக்கு, சிறிய கண்கள். தெற்க்காசியா நெற்றிவாக்கு. ஒட்டிய வயிறு, உயரமும் அவ்வளவு இல்லை. ஜெயன் அவரையே பார்த்தப்படி இருந்தான். “கிலாயூயா, நாளை நெருப்புக் குழம்பை கக்கலாம் என செய்தி வருகிறதே.” ஜெயன் உரையாடலை விரும்பினான். “ஆம், நாளை இருக்கலாம். எங்களுக்கு பழகி விட்டது. வியப்பெல்லாம் உங்களுக்குத்தான்” என்றார் லோனே. “நீங்கள் எழுதுகிறவர்கள், ஆகவே கேட்கிறேன். அமெரிக்காவை எப்படி பார்க்கிறீர்” பார்வையை குவித்தபடி கேட்டார் லோனே. “பிழைக்க தெரிந்த வியாபாரி” என்றான் ஆடம். ஜெயன் பற்கள் வெளித் தெரியாமல் உதட்டை இழுத்தபடி சிரித்தான்.

“எதிர்பார்த்தேன், நாங்கள் இங்கே நடிக்கிறோம். சம்பளம் நடிப்புக்கான கூலி” லோனேவும் சிரித்தார். ஆடமும் லோனேவும் மாற்றி மாற்றி குவளைகளை நிரப்பினர். “நீங்கள் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி விட்டீர்கள் அல்லவா” லோனேவின் கேள்விக்கு, ஆடம் “ஆமா, எனக்கு கூட்டமா ஓரமா பாக்க விருப்பம் இல்லை. தனியா காட்டுல இருந்து பாக்கணும்”. லோனே தலையை அசைத்தார். ஆடம் மீண்டும் “உங்கள் கதைகளில் வருவதின் சாராம்சம் அனைத்து பழங்குடிகளின் கதைகளின் மையம் தான். ஒரு தெய்வம் அழிக்கும், ஒன்று காக்கும். இடையே நாம, இதனாலே இந்த பூமி உருவாக்கப்பட்டது” என்றான். ஜெயன் இருவரும் பேசுவதை கவனித்தப்படி மேஜையில் இருந்த அன்னாச்சி பழங்களை ருசித்தான். “உலகம் உருவானது, நாமும் உருவானோம். கூடவே மனிதனின் உணர்ச்சிகளும் பிறந்தது. இங்கே எது தெரியுமா காக்கும் கடவுள், அன்பு, அறம், கருணை இன்னும் இன்னும். அழிக்கும் கடவுள் முக்கியமாய் பேராசை. அதுவே போரை தோற்றுவிக்கிறது. நிலங்களை, நீரை, காற்றை சொந்தமாக்குகிறது. பீலே பேராசைப்பட்டாள், கடல் முழுக்க தன் குழம்பால் நிரப்பி, அவளுக்கென தனி உலகம் படைத்தாள். யோசியுங்கள் கடல் மறைந்து நிலமே இருந்தால் என்னவாகும், தோற்றுவிட்டாள். இருப்பினும் அவள் எங்கள் கடவுள். அவளின் இருப்பிடம் கிலாயூயா. அங்கே பூமிக்கு அடியில் இன்னும் தகிக்கிறாள்” லோனே பேசிக்கொண்டே அடுத்த குவளைக்கு சென்றார். ஆடம் நிறுத்திக் கொண்டான். பின் அவர் அளித்த உணவை உண்டனர். பின் விடைபெற்று அவர்கள் கிளம்பும் வேளையில் லோனே “நாளை மாலை தயாராய் இருங்கள்” என்றார்.

இரண்டாயிரத்து பதினெட்டு மே மாதம் மூன்றாம் தேதி கிலாயூயா நெருப்பு குழம்பை கக்கியது. வெகுதொலைவில் ஜெயனும், ஆடமும் நின்றுகொண்டிருந்தார்கள். வானுக்கும் பூமிக்கும் செம்பிழம்பு பாதையை அது உருவாக்கியது. வானம் இருண்டு அழிவின் நாளாக புனிதநூல்களில் எழுதிய வாக்கியத்தை உண்மையாக்குவது போலவிருந்தது. ஆடம் கூறினான் “இதெல்லாம் அறிவியல் தானே, ஹவாய் பசுபிக் பெருங்கடலுல ஆழ்கடல் தட்டுக்களுக்கும், டெக்டோனிக் அடுக்குகளும் நெருங்கி இருக்கிற இடங்களில் எரிமலை இருக்குது . இங்கேயெல்லாம் பாறைகள் பூமியின் உள்ளடுக்கில் சூட்டில் உருகி பாறைக்குழம்பாகி, பூமியின் மெல்லிய அடுக்கு ஓட்டு வெடிப்பில் ஏற்படும் துளை வழியே வெளியே வருது. உள்ளேயிருந்து பச்சை மண்டல வாயுக்களும் கூடவே வருது.”, ஜெயன் “பூமியின் உள்ளடுக்கு எவ்வளவு சூடாக இருக்கிறது இங்கே. இதன் மேலே ஒரு தட்டு, அதன் மேலே பல அடுக்கு. அதுக்கு மேலே மண், தாவரங்கள், விலங்குகள், கூடவே நாம. இயற்கை அத சமச்சீராய் வச்சுருக்கு.”,”என்னைக்காவது உலகம் அழிவை சந்திச்சு தானே ஆகணும். அழிவின் மத்தியில் நின்னு அதோட விளையாட்ட பாக்கணும் “ ஆடம் சொல்லிவிட்டு அமைதியானான். பெரும்சத்ததோடு பூமி அதிர, நின்றிருந்த இடம் மெலிதாய் குலுங்கியது. இன்னும் சாம்பல் சூழ, இருவரும் விடுதிக்கு திரும்பினர்.

ஏற்கனவே இருட்டிய இடத்தில் இன்னும் இருள் சூழ்ந்து கொண்டிருக்க, அறையின் கதவை யாரோ தட்ட ஆடம் கதவைத் திறந்தான். லோனே நின்றுக் கொண்டிருந்தார். “செல்லலாமா”, எனக்கேட்க, இருவரும் தயாராய் அங்கிருந்து அவரோடு சிறிய சிற்றுந்து ஒன்றில் கிளம்பினர். எங்குமே ஒளியில்லை, தூரத்தில் பிரகாசமாய் ஒளிர்ந்தப்படி அனல்கங்கு புகைந்தப்படி தெரிந்தது. மூவருமே பேசிக்கொள்ளாமல் இருந்தது, மேலும் அவ்விடத்தை மௌனமாக்கியது. மலைக்குன்றில் ஏறி, வானமே இறங்குவது போலவிருந்த பாதையில் வண்டி இறங்கியது. ஓரிடத்தில் மூவரும் இறங்கி சிறிது தூரம் நடந்தனர், “இது இன்னும் எத்தனை நாள் தொடரும்” கேட்டான் ஆடம். “ஆகலாம், சில வாரங்கள் கூட. நான் அறிந்து நான்கு வாரங்கள் மேலே கூட ஆனதுண்டு.” என்றார் லோனே. “நாம எங்கே போகிறோம்”, “எங்கள் வழிப்பாட்டை காண விருப்பமா?”, “நிச்சயமாக” என்றனர் இருவரும்.

ஏற்கனவே சிலர் குழுமியிருந்தனர். ஆடம், ஜெயன் போலவே சிலர் அக்குழுவில் இருந்து விலகி நின்றனர். லோனேவின் முகச் சாடையில் ஆண்களும், பெண்களும் முகம் முழுக்க வெண்மையும், சிவப்பும் கலந்த மையால் பூசி, ஆடைகள் இன்றி மார்பிலும், ஆண்குறியிலும், யோனியிலும் சிவப்பு மையால் பூசியிருந்தனர். தூரமாய் பூமியில் துளைப் போலவிருந்த இடத்தில் நெருப்பு புகைந்தப்படி இருந்தது. லோனே இருவரின் அருகில் வந்தார் “இது பீலேவிற்கான காணிக்கை. எங்கள் மூத்தோர் அழிவின் நேரங்களில் இதுப் போன்ற சமயங்களில் பிறப்பை தடுக்கும் உயிர் உறுப்புகளை அறுத்து காணிக்கை கொடுத்தனர். ஒரு வித நம்பிக்கை. எங்கே மனிதர்களின் எண்ணிக்கை பெருகி, எடை தாங்காமல் பீலே வெளி வருகிறாளா என்று பயந்து உயிர்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என அவளுக்கு அறிவித்தனர். இப்போதெல்லாம் அதன் தொடக்கமாக மிருகத்தின் குருதியை பூசி சடங்கு செய்கின்றனர், உறுப்பு சிதைவெல்லாம் கிடையாது” என்றார். “நீங்கள்” என ஜெயன் கேட்க “எனக்கு நம்பிக்கையில்லை” என முடித்தார்.

தோலால் முடையப்பட்ட மத்தளம் ஒலிக்க, பால் வேறுபாட்டின்றி வட்டமாய் நெருப்பை சுற்றி அவர்கள் அமர்ந்தனர். வார்த்தைகள் இயைந்து ஒலி பிறழ்ந்தது அவர்களின் குரலின் வழி. இருவரும் உடல் சிலிர்த்து, காணும் காட்சிகளை மனதில் பதியவைத்தனர். இளம் பன்றியை அக்குழியில் இட்டனர். நேரம் ஆக ஆக ஒலி இன்னும் பிறழ்ந்தது. அவர்கள் மேலும் கீழுமாய் உடலை அசைத்தனர். நெருப்பு இன்னும் உக்கிரமாய் எரிவதை போல உணர்ந்தார்கள். மனிதர்கள் ஒருவரோடு இணைந்து நெருக்கமாய் ஒரே உருவம் போல் ஆனார்கள். நெருப்பின் நிழலில் பெரும் உருவம் போல கரும்புகை புகைந்தது. அக்கூட்டத்தின் மேலே வாரி அவர்களை உண்ண வரும் மாமிசப் பட்சி போல் அது நிழலாடியது. இசைக்கும் ஒலிக்கேர்ப்ப அசைவு அவர்களின் உடலால் நெய்யப்பட்டது. லோனே அருகிலே அமர்ந்திருந்தார் “இவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான், மரபின் நீட்சியாய் சடங்கை கழிக்கின்றனர். அழிவை தடுக்கும் பொருட்டு ஒரு சடங்கு. ஆனால் இதெல்லாம் இயற்கையின் நியதி தானே. இவர்களுக்கு ஒரு ஆசுவாசம் அவ்வளவே” என்றார்.

ஆடம் அவர்களை நோக்கி “எதுதான் பிரளயம் , புதிய உலகம் தான் எது” என்றான். “எதை கேட்கறீர்கள். அழிவு எனத் தனியாக ஏதும் இருக்கிறதா? புதிய உலகம் பாம்பு சட்டையை உரித்து விட்டு வருவது போல பிறக்குமா என்ன?” சிரித்துக்கொண்டே சொன்னார் லோனே. அவர்கள் சடங்கை முடித்து இருந்தார்கள். லோனே குழுவின் அருகில் சென்றார். “ஜெயன், புனித நூல்கள் சொல்ற அழிவு. சுனாமி, எரிமலை வெடிப்பு, பூகம்பம், புயல் மாதிரி இல்லையா?” கேள்வி மட்டுமே ஆடமிடம் இருந்தது. “அதெல்லாம் இயற்கை, தன்னை தானே மீள்ளுருவாக்கம் செய்ற உத்தியா இருக்கலாம் இல்லையா “. “அப்போ கலியுகம், விவிலியத்துல சொல்ற அப்போகலிப்ஸ் எல்லாமுமே”, “இயற்கையா உருவாகுமான்னு தெரியல. ஒருவேளை நீங்களும் நானும் அதற்கான முயற்சில இருக்கலாம் இல்லையா”.

பேசிக்கொண்டிருந்த இருவரையும் உணவருந்த லோனே அழைத்தார்.

மறுமுகம்

வைரவன் லெ ரா

வாட்சப் டிபியில் வழக்கத்திற்கு மாறான அழகில் ஜொலித்தாள். இரண்டாம் ஆண்டு முதல் நாள் வகுப்பில் நுழையும் போது, அவள் தலைமுடியை ஒதுக்கியப் படியே சில நொடிகள் பார்வையை என் பக்கமாய் குவித்ததும், கால்கள் தடுமாறி போனது, நெஞ்சு விடைத்தது இன்று நடந்தது போலவிருக்கிறது. கேப்பிடீரியாவில் வெகு நேரம் இருந்தது போல உணர்வு, வாங்கிய காபி ஆறிப் போய் இருந்தது. விரல்கள் மாறி மாறி அலைபேசியின் ஒளிப்பானை மாற்றி ஏதாவது மாறப் போகிறதா என்ன? முதுகில் யாரோ மென்மையாய் தட்ட திரும்பினேன். “ஹலோ ஒன் ஹௌரா என்ன பண்ற. ரிலீஸ் வாக் த்ரோ இருக்கு மறந்துட்டியா. ஸ்க்ரம் மாஸ்டர் நீதான் பா. வா போலாம்” கைகளை இழுத்து கூட்டிச் சென்றாள். இவளை பார்க்கும் போதெல்லாம் வாட்சப்பில் மட்டுமே பார்ப்பவள் தூரமாய் போய் விடுகிறாள்.

விரித்த தலைமுடியில் ஹேர் கண்டிஷனரின் வாசனை அவள் அழைக்காமலே பின்னால் நகர வைத்தது. சட்டென்று நின்று விட அவள் எத்தனிக்கும் போதெல்லாம், என் நடையின் வேகம் அனிச்சை செயலில் தானாகக் குறைந்தது. சுருட்டை முடி என்ன அழகு. கல்லூரிப் பேருந்தில் ஒலிக்கும் பாடலில் சில முன்னவளுக்கென இடையிடையே இணைத்திருப்பேன். பின் இருக்கையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தால், அவள் முடியை காற்றில் அலைய விட்டு உறக்கத்தில் இருப்பாள். அவளோடு இணைந்து கேட்க விருப்பப்பட்ட பாடல் என்னுள் மட்டுமே கரைந்து அமிழ்ந்து கொண்டிருக்கும். இருந்தாலும் உறங்கி விழித்தப்படி அவளுடைய நிறுத்தத்தில் இறங்கும் போது பார்வையை வீசாமல் தவறவிட்டது இல்லை, சற்றே வீங்கிய விழிகளும், சிறிதாய் விரியும் புன்னகைக்கும் என்னை காத்திருக்க விட்டதில்லை.

“என்ன மறுபடியும் பீலிங்கா, போப்பா. அவளுக்கு கல்யாணமே ஆயிடுச்சு. இன்னும் வாட்சப் டிபி பாத்துட்டு சுத்துற. லேப்டாப் எடுத்துட்டு ப்ளூ பெரிக்கு போலாம். மீட்டிங் ரூம் ஸ்செடுல் அங்கதான் பண்ணிருக்கு. இன்னும் எத்தன நாள் டிபிய வெறிச்சுட்டு இருப்ப. ஷி இஸ் நாட் யூர்ஸ்”. கூறிவிட்டு என்னையும் இழுத்துக்கொண்டு நடந்தாள். ஒரு சாதாரண டெவெலப்பர், பின் சீனியர் ஆகி, இப்போது டெக் லீட். நான் விரும்பிய பணியும் அல்ல, அதற்காக இதனை வெறுப்பதுமில்லை,நிகழ்ந்தது. இதுவே தொடரும் என்பதையும் அறிவேன். எதையும் முயற்சிக்காத குணம், இங்கே இருத்தத்தில் எவ்வித கேடுகளும் இல்லை. பிறகென்ன கால்கள் இங்கேயே அழுத்தமாய் பதிந்துவிட்ட உணர்வு. ஒருவித சுய ஆசுவாசம். நீடித்த வேலையின் ஆண்டிறுதிகளில் பணி ரீதியான மதிப்பீட்டு நேரங்களில் என் கேள்விகளை நான் அவிழ்த்துவிட்டதுமில்லை. உண்மையாக கல்லூரியில் கட்டிய பணத்திற்கு, அவர்கள் பெரும்தொகையை முதலீடாக எங்களின் வேலைக்கென செய்தார்கள், இப்பெரும் முதலீடு அப்பா அளித்தத்தில் நூற்றில் ஒரு சதவிகிதம் எனலாம், பணம் மாத்திரமா? எவ்வளவு நேரம் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு இயந்திரத்தைப் போல எனக்கு ஒப்பிக்கப்பட்டவை சரியான நேரத்தில் வெளிவர பணி நியமனம் கிடைத்தது. பின் புகைப்படத்துடன் நாளிதழ்களில் அரைப்பக்க விளம்பரம். நானே முதலீட்டில் ஒரு பங்குதாரராய் உணர்ந்த தருணம்.

மீட்டிங் வழக்கம் போல, இரைச்சலுடன் சுயசிந்தனையில், இயல்பாக ஒருவரின் இடத்தை மற்றொருவர் நிரப்பும் முகாந்திரத்துடன் நடந்தது. என் இடத்திற்கு மட்டுமே போட்டியில்லை, பதினான்கு மணி நேரம் உழைக்க யார்தான் தயார். “நெஸ்ட் வீக் ரிலீஸ், சப்போர்ட் டீம், டெஸ்டிங் டீம், ரிலீஸ் டீம் எல்லாருக்கும் மெயில் அனுப்பியாச்சு, சைன் ஆப் ரெடி. இதுவர ஸ்மூத்தா போகுது, லெட்ஸ் சீ. சோ ஹாப்பி வீக்எண்ட்” எனக்கும் சேர்த்து அவளே பேசினாள். அனைவரும் அறையை காலி செய்ததை அவள் என்னை அழைத்த தருணம் தான் உணர்ந்தேன். எழுந்து நிற்கவும் “உக்காருப்பா, என்ன அவசரம். நாளைக்கு என்ன பிளான்”. இதற்கு முன்னும் இதே கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன், பதிலை எதிர்பார்க்காமல் அவளின் திட்டங்களை கூறுவாள், கடைசிவரை என்னுடைய பதில் எனக்குள்ளே கொலை செய்யப்படும். அவள் பேசட்டும் என அமைதியாய் இருந்தேன். “சரி, நாளைக்கு ஈசிஆர் போலாமா? ஒரு லாங் டிரைவ், ஈவினிங் சின்ன பார்ட்டி. எப்படி உனக்கு ஓகே வா”, நாளை எனக்கான திட்டங்கள் வழக்கம் போல எதுவுமில்லை. வாரஇறுதியை மிச்சம் இருக்கும் வேலையிலும், மீதி நேரம் வெறுமையாய் போர்ன்னில் கழிப்பது மாத்திரமே பொழுதுபோக்கு. “ரொம்ப யோசிக்கிற, என்ன போலாமா. வேணாமா. கொஞ்சம் பிரீயா இருக்கலாம். உனக்கே தெரியும், ஒரு மாசமா ரொம்ப இறுக்கமான மனநிலைல இருந்துட்டோம். நீயும் கொஞ்சம் இலகுவா ஆக வேண்டாமா. என்ன நம்மள பத்தி டீம்ல ரொம்ப பேசுறாங்கன்னு யோசிக்கிறியா. அது இருக்கட்டும். பரவாயில்ல”. சரி என்பது போல தலையசைத்தேன். “காலைல பத்து மணிக்கு உங்க பிஜில பிக்கப் பண்ணிக்கிறேன்”. இருவருக்கும் இடையே மெல்லிய இடைவெளி இருக்கிறது. இவளை நான் அல்லவா நேர்காணல் செய்தேன், எவ்வளவு நேர்த்தியான பதில்கள், எளிதாய் எதிர்கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் தள்ள, என் டீமில் இப்படிப்பட்ட ஆள் வேண்டுமென அடம்பிடித்தேன். அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட அதிகமாகவே அவளுக்கு ஆண்டு சம்பளம் கொடுக்கப்பட்டது. அவளின் காரிலே இதோ என்னை விடுதிக்கு அழைத்துச் செல்கிறாள். ஆக, சுற்றி இருப்பவர்கள் வெளிப்படையாகவே குசுக்குசுக்க வாய்ப்புகள் வசதியாகவே எங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

சராசரி உயரம், ஒல்லியான உடல்வாக்கு, சவரம் செய்யாத முகம் கண்ணாடியில் ஒருமுறை முடியை ஒதுக்கி என்னை அவளுடன் ஒப்பீடு செய்தேன். அப்படியொன்றும் என்னைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. கச்சிதமான உடையில், எப்போதும் மலர்ச்சியான முகத்துடனும், விரித்து விட்ட முடியுமாய் இருக்கும் இடமெல்லாம் ஒருவித சௌகர்யம் அவளால் உருவாக்கப்படும். பணி சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அவளின் தலையீடு இருப்பதில்லை, என்னுடைய திட்டமிடல்களில் அபரீதமான ஈடுபாட்டை அளிப்பாள். அவளின் ஊர், பெற்றோர், சொந்தங்கள் எனப் பேச்சு சென்றாலும் குறைவான நேரத்தில் அதையும் இழுக்காமல் நிறுத்திவிடுவாள். மாறாக நானோ, பலவற்றை எதற்கெனவென்றே அறியாமலே சொல்லிவிடுவேன். அவளிடம் பேச ஏதாவது உபயோகப் படுமென்றால் அதனை மறைக்க உத்தேசிப்பதில்லை.

சரியான நேரத்தில் அவள் வர, இருவரும் கிளம்பினோம். சனிக்கிழமை என்பதால் இருசக்கர வாகனங்கள் சாலையில் அதிகமாய் தென்பட்டன. “நீ பைக் ஓட்டுனா நாமளும் போயிருக்கலாம். எனக்கும் பிடிக்கும், நீதான் ஓட்டமாட்டியே” போலியான முகப்பாவனையோடு சொன்னாள். ஏற்கனவே அதன் காரணம் அறிந்தவள், நண்பனை சாலை விபத்தில் இழந்து, இறுதிசடங்கில் அவரின் பெற்றோர் கதறியதும் இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் காரணமாய் கால்கள் பைக்கில் ஏறினாலே நடுங்கும், இதுவும் ஒருவித போபியா. பாடல்களை ஒலிக்க விட்டாள். இளையராஜாவும், ரஹ்மானும் இசைத்த பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒலித்தன. அவளும் முணுமுணுத்தாவாறே பாடினாள், குறையில்லா குரல்தான், ‘எங்க போன ராசா’ மரியான் பாடல் ஒலிக்க, “உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா” என்றேன். எனக்கு “சக்தி ஸ்ரீகோபாலன் குரல் ரொம்ப பிடிக்கும்” என்றாள். “ஏன்” என்றேன். “வழக்கமான குரல் கிடையாது. பெண் குரல்னா கொஞ்சம் கொஞ்சி, கொளஞ்சி பாடுற விதம் இல்லாம. பாட்டுக்கு பெண்ணோட குரல் இப்படி இருக்கணும்னு எதையோ மீறி வர ஒரு குரல், யோசிச்சு பாரு, ஜானகி, சுசிலா, சித்ரா குரலை எல்லாம். அதுக்குன்னு அவங்க பாட்டு பிடிக்காதுன்னு இல்ல” நிறுத்திக் கொண்டாள். பின் சிரிப்புடன் ஒரு கையால் முடியை ஒதுக்கி பார்வையை சில நொடிகள் குவித்து மீண்டும் பாட ஆரம்பித்தாள்.

இந்த சாலையிலே கடற்கரைக்கா பஞ்சம். காரை ஒரு வளைவில் திருப்பி, கடலோரம் நிறுத்தினாள். அருகிலே ஒரு மீனவ கிராமமும், கோயில் ஒன்றும் இருந்தது. இருவரும் செருப்புகளை காரிலே விட்டு, கடலை நோக்கி நடந்தோம். “எங்க அப்பா கடலுக்கு கூட்டிட்டே போக மாட்டார். அப்படியே போனாலும் ‘சடங்கு ஆனப் பிள்ளைக்கு இந்த மயிறு எதுக்கு’ன்னு சொல்லிட்டே, தம்பிய மட்டும் கூட்டிட்டு குளிக்கப் போவாரு. அம்மாவும் நானும் கரையிலே நிப்போம். இத்தனைக்கும் எங்க ஊர் கன்னியாகுமாரி” என்றாள். “எதுனாலே” என்றேன். “அது எங்க ஆச்சியோட குணம். அப்பா பாவம் தான். ஒன்னு தெரியுமா? சாயந்திரம் வீட்டு விட்டு வெளிய போனா கைல ஒரு இரும்பு ஆணி, இல்ல சாவியை கொடுப்பார். கருக்கள் நேரம் கண்டதும் அலையும் நாமதான் பாத்து போனும்னு சொல்லுவாரு” சிரித்துக்கொண்டே கால்களை நனைத்துக் கொண்டாள். முதல்முறையாக அவளின் அப்பாவை பற்றி பேசுகிறாள். காற்று வீச, ஒரு துளி நீர் அவளின் புருவத்தில் வைரம் போல மின்ன, ஒரு கையால் அதனை துடைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். எதையோ மறைக்க முயற்சிப்பது போல வேகமாய் “நானும் பாட்டிய ஆச்சின்னு கூப்புடுவேன். திருனவேலில அப்படிதான் கூப்புடுவோம். நீங்களாவது பரவாயில்ல. எங்க அப்பா என்னையவே இருட்டுற சமயம் வெளிய அனுப்ப மாட்டாரு. எனக்கும் பயம் தான். நா ஊர தாண்டுனதே இஞ்சினயரிங் படிக்கதான்” என்றப்படி கடலை பார்த்தேன். அவள் கரையிலே அலைவரும் தூரம் நின்றாள். அவளின் ஒட்டிய சுடிதாரின் மேடான வளைவுகளில் பார்வை சென்றது. முடியை முன்பக்கமாய் இழுத்து விட்டு இருந்தாள். முதுகின் நடுவே மெல்லிய மயிர்கோடு செல்வது என்னுள்ளே ஒரு பயம் கலந்த சுகத்தை கொடுத்தது, அவளின் காதுமடல் செவ்வொளியில் சிவந்தப்படி தெரிந்தது. அவளுக்கான இடம் மரியாதைக்குரிய வகையில் இருந்தாலும், சில சமயங்களில் அவளின் நினைவுகள் சுயமைதுனம் செய்வதில் வருவது தவிர்ப்பதுக்குரிய இடமாகவும் இல்லை. என்னை உயர்ந்தவனாய் காட்ட எத்தனிக்கும் போதெல்லாம், கண்களை கட்டுப்படுத்த, சிந்தனைகளை வேறுவழியில் திசைதிருப்ப முயற்சிக்கும் நான் பெரும்பாலும் தோற்றுவிடுகிறேன். அவள் கவனத்திருப்பாளா, கண்டிப்பாக அறியாமல் இருக்கமாட்டாள்.

“கல்யாணம் எப்போ பண்ணிக்க போற. வயசு முப்பது ஆயிடுச்சுல” குறுகுறுப்பான பார்வை வெளிப்பட கேட்டாள். எதிர்பாராமல் வார்த்தைகள் என்னைக் குலைத்தது, என்றாவது கேட்கப்படும் எனத் தெரிந்தும், விடையை நோக்கி மனதை குவிக்காமல், முடிவு செய்த விடையாக இல்லாமல், அத்தருணத்தில் வெளிவரட்டும் என்றே விட்டு விட்டிருந்தேன் . ஒரே மகன், அப்பா கடந்த ஆண்டு கொரோனாவில் தவறி விட, அம்மை மட்டுமே ஊரில் இருக்கிறாள். சுற்றிலும் உறவுகள் இருக்க பயப்பட எதுவுமில்லை. இருப்பினும் திருமணம் ஏனோ கைக்கூடவில்லை. வரன்கள் புது புது காரணங்களால் தள்ளிப் போனது. இவளின் வருகைக்கு பின் தான் நடந்தவை நல்லதற்கே என்று எண்ணினேன். பதில் இருக்கிறதா என்ன? நீதானே பதில் என்பது போல, அவளையே வெறித்து பார்த்தப்படி மௌனமாய் நின்றேன். “நீங்க எப்போ பண்ற பிளான்” பதிலுக்கு கேட்டேன். “நான் ஏன் இன்னொன்னு பண்ணனும்” என்றவள், என்னுடைய எதிர்வினைக்கு காத்திருப்பது போல, இமை மூடாது நோக்கினாள். ஏதோ புரிந்தவன் போல, சில அடிகள் அருகே சென்று கைகளை பிசைந்தப் படி “என்னங்க விளையாடுறீங்க” என்றேன். “ஏன் விளையாடணும், ஏன் பொய் சொல்லணும். ஏன் மறைக்கணும். இல்லையா” என்றவள். கடலுக்குள் கொஞ்சம் நடந்து, அலைவரவும் ஓடி என்னருகே வந்தாள். அதேவிடத்திலே நின்று கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று முறை இதையே செய்தாள். ஓடும் போது சிறுமியைப் போல பாவனை செய்கிறாளா? இல்லை அதுதான் நிஜமா?, அவள் கூறியது வாஸ்தவமாக இருந்தாள். “கல்யாணம் ஆயிடுச்சா” குரலில் வழுவில்லை. “ஆமா” என்றப்படி அருகே வந்தாள். நான் வேகமாய் காருக்கு அருகிலே சென்றேன். அம்மையிடம் இவளைப் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன், அம்மைக்கும் சம்மதம் தான். ‘எந்த சாதியா இருந்தா என்ன, சம்பாதிக்கா, உனக்கு பிடிச்சு இருக்கு. அப்பா இருந்தா காரியம் நடக்காது. இருக்கப்ப நீ பிடிச்ச எதையாவது பண்ண விட்டாரா! இதுல அம்மைக்க முழு சம்மதம்’ அம்மையின் வார்த்தைகள் எவ்வளவு சுகமாய் இருந்தன. ஆனால் கடைசியில் வாழ்க்கை கூட அப்பாவைப் போல பிடித்ததை பிடுங்கி கொள்கிறது.

அவள் கரையிலே நெடுநேரம் நின்றாள். நவம்பர் மாத மழை சென்னையில் எப்போது வேண்டுமானாலும் பொழியலாம், இன்று அதை எனக்குறியதாய் நினைத்துக் கொண்டே, காரில் ஏறி பாடல்களை மீண்டும் ஒலிக்க விட்டேன். ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா’ மனோவின் குரல் மனதை இன்னும் கனக்க வைத்தது. மழையின் வேகம் அதிகரிக்க ஓடி காருக்குள் வந்தவள், ஒலிக்கும் பாடலை கேட்டு என்னையே சில நொடிகள் பார்த்துக்கொண்டே சட்டென்று சிரித்தாள். “மழைல இந்த பாட்டு. செம பீலிங் இல்ல” என்றவள், என் அமைதியை குலைக்கும் படி “ஐ லவ் யூ” என்றப் படியே நெற்றியில் முத்தமிட்டாள். நான் தடுமாறிப் போனேன். முதல் முறை பெண்ணின் உதடுகள் அம்மையை தவிர்த்து உடலின் ஒரு பாகத்தில் பட, மொத்த உடலும் குலுங்கி அதிர்ந்து இன்னும் என்னென்ன உண்டோ? எல்லாமும் ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் ஆட்கொள்ள அவளை இழுத்து உதடுகளை கவ்வினேன். ஆரம்பித்தது நானாக இருந்தாலும், அவளின் ஆக்கிரமிப்பே அதிகம் தெரிந்தது. பிறகு இருவரும் சுயமாய் ஒருவரின் பிடியில் இருந்து வெளிவர, நான் சிரித்துக் கொண்டே “ஏன் கல்யாணம்னு பொய் சொன்னீங்க” என்றேன். “அட, அது பொய் இல்ல. அதுலாம் பழையக் கதை” என்றவள். வெளிறிய முகத்தை பார்த்து பரிதாபப்பட்டோ! என்னவோ! பேச ஆரம்பித்தாள்.

“அப்பா பழைய ஆள். ஆச்சி உடம்புக்கு முடியாம போக, அவங்க கடைசி ஆசைனு இஞ்சினயரிங் படிக்கப்பவே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவனுக்கு என்ன விட பன்னிரண்டு வயசு அதிகம். ஜெர்மனில வேலை பார்த்தான். இது போதாதா? பெருசா எதுவும் விசாரிக்கல. அப்போ நான் தேர்ட் இயர். பரீட்சை லீவ்ல டூரிஸ்ட் வீசா போட்டு கூட்டிட்டு போனான். நல்லவன் தான். பட் ராத்திரி மிருகம். செக்ஸ்வுலா ரொம்ப கொடுமைனே சொல்லலாம். நான் சின்னப் பொண்ணு. மொழி தெரியாத நாடு. அவன பகைக்கவே இல்ல. அதிகமான வலி, சிலசமயம் பிளட் வரும். யாருகிட்ட சொல்ல. இங்க வந்ததும் யாருகிட்டயும் சொல்லல. அடுத்த மாசம் நாள் தள்ளிப் போச்சு. பத்து மாசம், அவன் மேலே உள்ள வெறுப்பு. வயிறும் வீங்கி காலேஜ்ல ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் வந்தான். கூட ரெண்டு வாரம் இருந்துட்டு போய்ட்டான். குழந்தையை வளர்த்தது எல்லாமுமே அம்மா தான். இப்போவும் அம்மாவதான் தன்னோட அம்மாவ நினைச்சுட்டு இருக்கு” என்றவள் அமைதியானாள். “மழை விட்டுடுச்சு வெளிய நடக்கலாமா?”, நானும் சரியென்றேன்.

அவள் முன்னாலே நடந்தாள். ஏனோ அவளின் பாதச் சுவட்டை மண்ணிலே காணும் போது, முகம் அறியாத ஒருவனின் சுவடும் தெரிந்தது. நின்றவள் சில அடி பின்னால் வந்தாள், தயக்கமான பார்வை. விழிகளில் நீரின் திரை தெரிந்தது. அவளின் நாடியை பிடித்து, முகத்தை என் உதட்டின் அருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டேன். கைகள் அதுவாய் கோர்க்கப்பட்டது. “அம்மாட்ட எல்லாத்தையும் சொன்னேன். எல்லாம் கேட்ட அம்மா, அப்பாட்ட என்ன சொல்லிச்சோ தெரியல. அப்பா ஒரு பேப்பர்ல சைன் போட சொன்னாங்க. படிச்சு பாத்தேன், அது விவாகரத்து பேப்பர்”. பெருமூச்சு விட்டவள் “அப்புறம் ஆளே வரல. நானும் படிச்சுட்டு வேலைன்னு சென்னை வந்துட்டேன். வீட்டுல கல்யாணத்துக்கு கேட்டுட்டே இருக்காங்க. வீட்டுல உன்ன பத்தி பேசலாம்ல” என்றாள். நான் தலையசைத்துக் கொண்டே அவளை அணைத்தேன். அவளின் மார்பு காம்புகள் நெஞ்சில் படவும், கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

பெற்றோர், நெருங்கியோர் இருக்க சென்னையிலே வடபழனியில் திருமணம் நடந்தது. பிறகு அருகிலே ஒரு சின்ன வரவேற்பு, சோழிங்கநல்லூரில் நல்ல அபார்ட்மெண்ட் வீடும் எடுத்தாச்சு. பிறகு முதல் இரவு எனக்கு மட்டும். பழகியவள் என்பதால் தயக்கமின்றி விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டன. அவளின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்தேன். முத்தங்கள் சரியாய் கொடுக்கப்பட்டது, கைகள் மெதுவாய் தழுவப்பட்டது. உணர்ச்சிகள் சிறுக சிறுக பெருக்கி இருவரும் முயங்க, நான் இயல்பை மீறி வேகம் ஆனேன். உடலில் வலு மொத்தமாய் ஏறுவது போல உணர்வு, அவளின் மொத்த சதையும் குலுங்கியது, எதிர்பார்ப்பை மீறி, வலது கையால் அவளின் புட்டத்தில் ஓங்கி அடித்தேன். அதுவே இரண்டு முறை நடக்க, அவள் கண்களை நோக்கினேன், நீர் நிரம்பி, அருவருப்போடு என்னை பார்த்தாள். என் ஆண்மை வெளியேற நான் தலை குனிந்தேன்.

கரையும் நிழல்

வைரவன் லெ ரா

‘கன்னியாரில என்ன கூட்டம், சவத்து பயக்களுக்கு பொறுமையே கிடையாது, குண்டிய ஆட்டிட்டு திரியானுவ. செத்தவனுக்கு காரியம் பண்ணவந்தா, கடைசி அவனுகளுக்கு தான் காரியம் பண்ணனும். வரிசையா நூறு இருநூறு பூசாரி சப்பணங்கால் போட்டு உக்காந்து, என்ன எழவு மந்திரத்தையோ சொல்லி.. கையிலே நாலு அரிசி. தாயோளி எண்ணித்தான் கொடுப்பான் போல, எண்ணிப்பாத்தா நாலு அரிசி. நாம உறக்க சிக்குல போய், உள்ளத செஞ்சு. சவத்துமூதி சின்ன குளிரா அடிக்கி, கடல்ல அல அன்னைக்குனு பாத்து நான்தான் ஆளுன்னு எழும்பி வரும். இதுல எங்க! அப்பன, அம்மையை நினைச்சி முங்கி எழும்ப. ஒரு கை தர்பணத்துலயும் இன்னொன்னு அவ அவன் செயினு, வெள்ளி அருணாகைருல இருக்கும். கூதிமவனுகள நினச்சா, சிரிச்சிட்டே இருக்கலாம். நமக்கு பஸ்ஸுக்கு கைல கொஞ்சம், அப்புறம் ஒரு டீ வட, நாலு செய்து பீடி அவ்வளவுதான் கணக்கு. முருகா, எட்டி பூஜை முடிஞ்சா. இவ பூஜைய முடிச்சாதான் நான் பூஜைய ஆரம்பிக்க முடியும். ஒரு குட்டிப்பையன இடுப்புல சொருவி வச்சுருக்கேன். பய குய்யா முய்யானு கத்துகான். எட்டி சீமைராணி அடுப்பங்கரைலியே கிட. என்னாச்சிட்டி, நா போகாண்டாம’.

‘அவியலு அடுப்புல கிடக்கு, ஒரு அடுப்புதானே இருக்கு, பொட்டச்சி என்ன பண்ணுவா. ஒருநாள் லேட்டாய் குடிச்சா. மண்னென்ன மணக்காதோ. கிடையும் பொடைய மூடிட்டு’.

‘இதுகாத்தாண்டி சொன்னனான் எம் பயக்க அப்பவே, நாரோயில் காரி வேண்டாம்னு. நான் கேக்கல.’

அப்பாவின், அம்மாவின் குரல் இரயிலின் சத்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டில் அம்மைவழி, அப்பாவழி அவர்களின் அய்யா , பாட்டா என வீட்டின் மங்களா முழுக்க சுவரையொட்டி நீட்டமாக வாழையிலை போட்டு, பின் பூஜை கழியும், அம்மையின் கையில் முதலில் சாம்பிராணித்தட்டு, அடுத்து சூடத்தட்டு என வரிசையாக இலைகளின் மேலே காட்டி, கடைசியில் தண்ணீர் தெளித்துவிடுவாள். நாங்கள் விருப்பப்பட்ட ஆச்சி தாத்தா இலையில் அமர்ந்துண்போம். நாட்களை நினைத்துக்கொண்டே, மணியைப்பார்த்தேன், ஐந்தரை ஆகிவிட்டது. திருநெல்வேலி தாண்டி கன்னியாகுமரி விரைவுவண்டி சென்றுகொண்டிருக்கிறது. நாளை ஆடி அமாவாசை, இந்த வருடம் அப்பாவுக்கு முதல் வருடம். கண்டிப்பாக வரவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை, ஆனால் கிளம்பிவிட்டேன். இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.

‘எட்டி லெட்சுமி, ஒ வீட்டுக்காரரு குமார் தியேட்டர் முன்னாடி கிடந்து அவயம் போடுகாரு. உம்பயல எங்க. மக்கா அப்பாவ போய் கூட்டிட்டு வா ல.’,

‘நல்ல நாளு அன்னைக்குமா நிம்மதியா திங்க முடியா, யம்மா குடிகாரனுக்கு கட்டி வச்சு வாழ்க்கைய நாசமா ஆக்கிட்டியே. நீ கட்டி வச்சுட்டு செத்துட்ட, லேய் விஷத்த குடிச்சு செத்துருவோம். நாம யாம்ல சாவணும், அவனை நடைல ஏத்த மாட்டேன் ‘.

‘மக்கா ராத்திரி நேரமாச்சு, அப்பா எங்கயாச்சும் இருக்கானு பாத்துட்டு வால, ரூவாய மட்டும் முருகன்ட்ட கொடுத்து அமிச்சிருக்காரு. மீன் குழம்பு அவருக்கு ரொம்ப பிடித்தம். இங்கன எங்கயாச்சும் குமார் தியேட்டர் கிட்டயோ, சாத்தாங்கோயில் முன்னாடியே நிப்பாரு. டிவிய அணைச்சுட்டு போய்ட்டு வா என் ராசா’.

‘தெருவுல ஆம்பள இருந்தா வெளிய வால. நெஞ்சுல கை வையுங்களா தாயோளிகளா. அம்மைக்க அண்டைல கிடங்க. கோயில் நடைல கண்ட பயக்க ஒக்காந்தா உனக்கு ஏம்ல மூலம் கடுக்கு. உங்க கோயில் நடைல ஒக்காந்தா, திண்டுல வெண்ணிய ஊத்துவீளோ, இப்போ நா இந்த நடைல ஒண்ணுக்கு அடிக்கேன், இன்னா ஓடத்தண்ணிய நடைல தெளிக்கேன். பன்னீர் அபிஷேகம். எந்த மாடன் வாரான் பாப்போம்.’.

சாராய வாசனை எங்கிருந்தாலும் சட்டென அங்கே நின்றுவிடுவது பழக்கமாகிவிட்டது. அது அப்பாவின் வாசனை. சபரிமலைக்கு மாலை அணியும் மாதம் தவிர மற்றநாள் அப்பா குடிக்காமல் இருந்ததில்லை. உண்மையிலே அப்போதெல்லாம் அப்பாவை அவ்வளவாக பிடிக்காது. நெற்றியில் திருநீர் சாத்தி, கையில் செய்யது பீடியுடன், சட்டை அணியாமல் வெள்ளியில் கோர்த்த சந்தனமாலையை அணிந்த அப்பா வேறொருவராக தெரிவார். தெருவின் முனையில் அவர் நுழையும் போதே வீட்டிற்குள் குரல் கேட்கும். சட்டையில் ரூபாயை சுருட்டி வைத்துக்கொள்வார். போதை தெளியவும், மடக்கில் ருபாய் இருக்காது. அம்மையோ பாலை உண்டு எதுவும் அறியாத பூனைபோல அங்குமிங்கும் நடப்பாள். முறைத்தபடி வெளியே சென்றுவிடுவார்.

கல்லூரி நாட்களில் அப்பாவின் சட்டைப்பாக்கெட்டில் கைவிட்டு பணம் திருடியதெல்லாம் இல்லை. மாறாக பழைய புத்தகப்பையை எதற்காகவோ தேடியதில் கையில் கிடைத்தது ஓல்ட் மங்க் கால்குப்பி. அதற்கு முன்பாகவே ரம் பழக்கப்பட்டாலும் இது அப்பாவின் குப்பி, இருந்ததையோ எடுக்க மனமில்லை. ஒரு வாரம் விட்டு வைத்தேன். வைத்தது அவருக்கு நியாபகமில்லை போலும், பின் வீணாகாமல் நானே குடிக்க வேண்டியதாயிச்சு.

ரயிலில் காற்றின் வேகம் அதிகரிக்க ஆரல்வாய்மொழி வந்ததை அறிந்துகொண்டேன். வெள்ளிக்கோடாய் வேளிமலை வரைந்து வைத்த ஓவியத்தின் சாயலில் இருந்தது. ரயிலிறங்கி வீடு செல்லும் போது வாசற்படி தெளிக்கும் பெண்கள் தெருவில் ஆங்காங்கே நின்றனர். அம்மை கதவை திறந்துபோட்டபடி அடுக்காளையில் நின்றாள். உள்ளே போனதும், வந்தது தெரிய தோளில் இருந்த பையை பட்டென வெளிக்கட்டிலில் போட்டேன். “வந்துட்டியா மக்கா. நைட் தூங்கினியா, கண்ணுலாம் கிடங்குல கிடக்கு, கண்ணம்லாம் ஒட்டி, நேரத்துக்கு திம்பியா” என்றாள் வந்தவள். “எல்லாம் நேரத்துக்கு திங்கேன், வந்ததும் ஏதாச்சும் சொல்லணும், டீய கொண்டா முத” சலிப்புடன் அமர்ந்தேன். அப்பா சிரித்தபடி புகைப்படத்தின் உள்ளிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்.

அடுத்தநாள் அதிகாலை, கன்னியாகுமரிக்கு அம்மையும் உடன்வந்தாள். நண்பனின் இருசக்கர வாகனத்தை முந்திய இரவே வாங்கிக்கொண்டேன். கோட்டார் கடைவீதியை நெருங்கவும் வண்டிகளின் எண்ணிக்கையும் கூடியது. கன்னியாகுமரியில் வண்டி நிறுத்த ஐம்பது ருபாய் கொடுத்து, சங்கிலித்துறையை நெருங்கவே இருபது நிமிடம் ஆகிவிட்டது. அவ்வளவு கூட்டம், அம்மை வழக்கம் போல கையை இழுத்து, கூட்டத்தில் நுழைந்து எனக்கேற்றார் போல ஒல்லியான பூசாரி முன் நிறுத்த, அவரும் முன்னால் உள்ளவர்களின் எண்ணிக்கையை பார்த்து, “எல்லாரும் சப்பணக்கால் போட்டு உக்காருங்கோ, இன்னா பிடி, இத இதுல போடுங்கோ, யாருக்கு கொடுக்கீலோ அவாளை நினச்சுண்டு, நா சொல்ல சொல்ல போடுங்கோ” அவர் பேசிக்கொண்டே போக, எனக்கு உட்காரவே இடமில்லை, ஒருவழியாய் அமர, கையில் அவர் கொடுத்த அரிசியை எண்ணினேன். அப்பா சொன்னது போல நான்கு அரிசி. எதையெல்லாம் சொல்லி, கையில் கொடுத்து, தும்பு இலையில் போட்டு முடிக்கவும், “கடல்ல போய், திருப்பி போட்டுட்டு ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ” என்றார். நானும் கடலை நெருங்க, கூட்டம் என்னை தள்ள, கடலலை காலில் பட “சவம் சின்ன குளிரா குளிருது” என்றபடி முங்கி எழுந்தேன். உடல் முழுக்க பனிக்கட்டியால் தேய்த்துவிட்டது போல குளிர, கூடவே வாடைக்காற்றும் அதன்பங்கிற்கு வீசியது. வெளியே வரவும் அம்மை “அப்பாவை நினைச்சியா மக்கா, தெய்வமா நின்னு உனக்கு எல்லாம் கொடுப்பாரு” கண்களை துடைத்தாள். நானோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தேன். “எழவு என்னா குளிரு, முத ஒரு டீய குடிப்போம்” என்று எண்ணியபடியே ஒல்லி பூசாரியை நோக்கி போனேன். அவர் கையில் நூறை கொடுக்க, அவரும் திருநீறை கையில் கொஞ்சமாய் கொடுத்தார், சரியாய் ஒரு ஆள் பூசிக்கொள்ளும் அளவுக்கு.

வீட்டை அடைந்து ஈர உள்ளாடையை மாற்றியதும் தான் நிம்மதி வந்தது. அம்மையோ வழக்கம் போல அடுக்காளைக்குள் போனாள். காலை உணவை உண்டு, வெளியே செல்லவும், அம்மை கூறினாள் “மத்தியானம் வேண்டாம் மக்கா, சாயந்தரமா போல. இன்னைக்கு அவருக்கு முத அம்மாசி. அடிச்சாலும் பிடிச்சாலும் கூட கிடந்தாரு. துணைக்கு இருந்தாரு.” என்றபடியே மறுபடியும் கண்களை துடைத்தாள். ஊருக்கு வந்தாலே மது ஒரு வழக்காமாகிவிட்டது. அதைத்தான் ஜாடையாக சொல்கிறாள் “சரி, இப்போ எதுக்கு. இருக்க வர, அந்த மனுசன ஏசிட்டு, எதுக்கு அழுக”, “அவரத்தான நான் ஏச முடியும். உன்னைய முடியுமா. ராத்திரி ஆச்சுன்னா பட்டி போல வீட்டுக்கு வந்திருவாரு” என்றபடியே அமைதியானாள். மாட்டிய புகைப்படத்தில் இருந்தபடி அப்பா இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே செல்ல மனமில்லாமல் அமர்ந்தேன்.

அப்பாவை எனக்கு பிடிக்குமா? உண்மையிலே அம்மையை விட, அவரைத்தான் அதிகம் பிடிக்கும். இருக்கும் காலம் வரை, ஊரில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பேசிய ஒருவர். இன்னார் இவர் என்றெல்லாம் கணக்கில் கொள்வதில்லை, எல்லாருக்கும் ஒரே அளவு மரியாதை. ஆனால் இவரைத்தான் அதிகம் வெறுத்தேன். மதுவின் சுவை அறிந்த நாள் முதல், அவ்வாசனையை நுகரும் பொழுதெல்லாம் மனதில் தோன்றும் இது அப்பாவின் வாசனை. அவருக்கும் ஆடி அமாவாசை மீதெல்லாம் நம்பிக்கை உண்டா? அப்படியெல்லாம் தெரியாது, பின் ஏன் சென்றிருப்பார். ஒருவேளை என்னுடைய இன்றைய மனநிலையில் அவரும் இருந்திருப்பார்.

ஒருவழியாய் பூஜை முடிந்து, அம்மை கையில் இலையோடு வெளியே கா கா என கத்திக்கொண்டிருந்தாள். “இப்போ காக்காவ வந்துதான் அவர் திங்க போறாரு, வாம்மா உள்ள, பசிக்கு”, “அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க டே” திட்டியபடியே வந்தாள். அப்பாவுக்கு படைத்த இலையில் அமர்ந்து உண்டேன். பின் நேரமாய் எழுந்த காரணம் மதியம் தூங்கவேண்டியதாகிவிட்டது. மாலை எழுந்து, நண்பர்களோடு மதுவிருந்து. எல்லை இல்லாமல் போக, அப்பாவின் நினைவில் “அப்பாக்கு என்ன பிடிக்கும், ஓல்ட் மங்க். அப்பா, இன்னா வாரேன். ” தள்ளாடியபடியே நடந்தேன். கையில் ஒரு கோப்பையும், கொஞ்சம் தண்ணீருமாய் நடந்தேன். அப்பா இறந்தது ஒருவகையில் விபத்து. ரயில் பாலத்தின் தடுப்புசுவரில் முழுபோதையில் அமர்ந்திருப்பது, சிலநேரம் தூங்குவது அவரது பழக்கம். விதி, அன்றைக்கு பத்தடி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டார். நேரம் எல்லாம் தெரியாது. அடுத்தநாள் யாரோ பார்க்க விஷயம் தெரியும். அது வேறுகதை.

நடக்க, நடக்க பாதைகள் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. முன்னாலே ஒரு நிழல், சுற்றியும் பார்த்தேன். யாருமில்லை, “அய்யோ, அப்பா காக்கவா வந்துலா குடிக்கணும். நைட் காக்கா வருமா” என்றெல்லாம் யோசிக்க, நிழல் மட்டும் என் முன்னாலே சென்றது. “அப்பா, நீதானா அது. வாரேன், அம்மைக்கு மண்டைக்கு வழியில்லை. உமக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தானே தெரியும். அங்கேயே வாரேன்”, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் தான். அதேவிடத்திற்கு வரவும் நிழலும் நின்றது. அவர் விழுந்ததாய் சொன்ன இடத்திலே அமர்ந்தேன், நிழலும் அருகில் வந்தது. குப்பியை திறந்து, கோப்பையில் பாதி ஊற்றி, மீதி தண்ணீரால் நிரப்பினேன். சுற்றியும் யாருமில்லை “அப்பா, செய் இல்ல இல்ல, கா கா கா கா” ஆம் கத்தினேன். எங்கிருந்தோ காகத்தின் கரையும் குரல் கேட்டது, “அப்பா, சீக்கிரம் வா. இல்ல நா குடிச்ருவேன். பாக்கியா. வாப்பா”, ‘வாப்பா, நீ என்ன சாய்ப்பால. அப்பான்னு கூப்டு’ அப்பாவின் குரல் கேட்டது. சட்டென படபடக்கும் ஓசையோடு காகம் ஒன்று முன்னால் அமர்ந்தது. நிழலை தேடினேன். எங்குமேயில்லை. “கா கா கா” என்றபடி, கோப்பையை அதன் முன்னே நகர்த்தினேன்.

காகம் எங்குமே பறக்கவில்லை, “நைட் காக்கா வருமா. அப்பா நீதானா. எப்பப்பா நீ விழுந்த, உனக்கு ஓர்மை இருக்கா. இல்ல எவனோ தள்ளிட்டானா. உனக்கு வலிச்சா. சீக்கிரம் போய்ட்டியேப்பா. அப்பா” நானா அழுவது, நானேதான். காகம் இப்போதும் அங்கேயே நின்றது. இருட்டில் அதன் கண்கள் மின்னியது, ஈரத்தோடு இருப்பது போல தெரிந்தது. என் முன்னே தலையை ஆட்டியபடி வந்தது. கரைய ஆரம்பித்தது. அப்பாவின் வாசனை வீசியது. நான் கோப்பையை இன்னும் அதன் பக்கம் நகர்த்தினேன், என்னை உற்றுநோக்கியபடியே நின்றது, சிலநிமிடம் கோப்பையை வெறித்த காகம், பறந்தபடி கால்களால் கோப்பையை தட்டியபடி அங்கிருந்து பறந்தது. என்ன நடக்கிறது என் முன்னே, பின் மீண்டும் அதே நிழல் வந்தது. அது மெதுவாக நகர்ந்தது. காகத்தை தேடினேன், தென்படவே இல்லை. நிழல் நகரும் திசையிலே சென்றேன். அது என் வீட்டிற்கு சென்றது.

கனம் கூடிய தலை, உடலெல்லாம் வலிக்க, தாகம் வேறு உயிரை எடுத்தது. எழுந்து ஒரு லோட்டா தண்ணீரை குடித்தேன். “நைட் ஆகாரம் வேண்டாமால. வெறும் வயித்துல, சரி நீ எப்போ மெட்ராஸ் போற. உனக்கு இங்க சரிப்படாது. ” அர்ச்சனை கூடிக்கொண்டே இருந்தது. நேற்று நடந்தது நினைவில் வர, இல்லை கனவாக இருக்கும். ஒருவேளை நிஜமாக இருந்தால், அம்மை கொடுத்த டீயை குடித்து வெளியே சென்றேன். அதேவிடம், இப்போதும் யாருமில்லை, கவிழ்ந்தபடி கோப்பையும், ஓல்ட் மங்க் மீதி குப்பியும் அங்கேயே கிடந்தது. அங்கும் இங்கும் பார்த்தேன், எல்லாம் கனவாய் இருக்காதா என யோசிக்க. கரைந்தபடி காகம் ஒன்று பறந்து வந்தது. நான் அமர்ந்தேன், என்னருகில் வந்தது. நேற்று வந்த அதே காகமோ, அதன் கண்களை கண்டேன், அது ஈரமாய் இருந்தது.

முகம் – லெ ரா வைரவன்

வைரவன் லெ ரா

ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம், அழகேசன் கடையில் வெளியே கயிரில் தூக்கில் தொங்கியப்படி திணறும் தினசரிகளை கடக்காமல் காலை எட்டறை நகர்ந்து சென்றதில்லை. வாய் சவடால்கள் நிறைக்கும் அரசியல் வசைகள், நடிகையின் தொப்புளை வருடும் வயதான விரல்கள் எல்லாமுமே நிறைந்த குப்பை மேடு. அன்றைக்கும் நாள் அப்படியே கடந்திருக்க வேண்டும்.

கடுக்கரை நுழைய வேண்டுமானால் குறத்தியறை மலைக்குன்றை கடக்க வேண்டும். வாழைத் தோப்பும், சாலையோரம் கூடவே பக்கவாட்டில் ஓடையாறு ஒன்றும் உண்டு. பகலில் யாரோ குளித்தவாறே, பேசியப் படியும், சிரித்தப் படியும் இருப்பாராம். கடுக்கரையை ஒழுகினசேரி கலைவாணர் தெரு இளவட்டம் ராஜுவின் கதைகளை கேட்டே அதன் முடுக்குகளையும், ஓடு வேய்ந்த சுத்துக் கட்டு வீடுகளையும் கண்டுவிட்டனர். அப்படித்தான் தட்டு வீட்டு அய்யப்பன் அவனின் அத்தை மகள் சடங்குக்கு செல்லும் போது ஒவ்வொரு முடுக்கிலும் எந்த இசக்கி இருக்கிறாள் என அம்மையிடம் சரியாய் சொன்னானாம்.

விஜி பவனம், தட்டு வீட்டில் மேலே விஜயாவின் குடும்பம் இருக்க, மொத்தம் இரண்டு மாடி வீட்டில் கீழே தரைத் தளத்தில் இரண்டு வீடு உண்டு. முதல் மாடியில் அவளின் அக்கா, அத்தானுடன் சண்டைப் பிடித்து பிள்ளைகளுடன் தனியாய் இருக்கிறாள். கீழே ஒரு வீட்டில் பத்மினி மிஸ் டியூஷன் எடுத்தாள். நானும் அங்கேதான் படித்தேன். நெடுனாள் பூட்டிக் கிடந்த பக்கத்து வீட்டில் ராஜு குடியேறினான். நான் ஒன்பது படிக்கும் போது, அவன் எட்டாவது படித்தான். என் வயது தான், அவன் அப்பா மனம் குழம்பி கோம்பையாய் ஆகிவிட்டார். அதே வருடம் அம்மா அவளை விட பத்து வயது இளையவன் உடன் எங்கோ செல்ல, அந்த வருடம் படிப்பை நிறுத்திவிட்டான். தெரியுமா! ராஜுவை தவிர்த்து அவளுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகள். ஓடி போகும் போது இரண்டையும் கூட கூட்டிப் போனாள். ராஜு அப்பா வீட்டில் இருக்க நேர்ந்தது. வீட்டை விட முடுக்குகளும், குன்றில் இருக்கும் சாஸ்தாவும் தான் எல்லாமுமே. பேச பேசக் கதைகள் அங்கிருந்து தான் வரும்.

பின்னர் ஒரு வருடம் கழித்து, அம்மா திரும்பி வந்தாள். சொந்த ஊரை விட்டு, ராஜுவையும் உடன் அழைத்து விஜி பவனத்தில் இடப்பாகம் இருக்கும் வீட்டில் குடியேறினார்கள். விட்ட படிப்பை தொடர, மீண்டும் எட்டில் ஆரம்பித்தான். நிஜத்தில் கூட இருக்கும் அவரையே நாங்கள் அவர்கள் அப்பா என நம்பினோம். அந்த சனிக் கிழமை கிரிக்கெட் ஆட மணி வராமல் அவன் சித்தி வீடு திருநந்திக்கரைக்கு செல்ல, பதினோன்றில் ஒருவர் குறைய கார்த்தி ராஜுவை அழைத்து வந்தான். சுமாரான ஒரு ஆட்டம் தான், ஆனால் அவனின் நளியும், இயல்பும் பிடித்துப் போக, விடுமாடன் கோவில் திண்டில் அவனும் ராத்திரி இருப்பான். ரெட்டைத் தண்டவாளம் வேப்பமூட்டில் அவனுக்கும் சிகரெட்டில் இரண்டு இழுப்பு உண்டு. அன்றைக்கு ரெண்டு ருபாய் கூடக் கிடைக்கவே இந்த கதையெல்லாம் சொன்னான். அம்மா பாவம் தான், இரண்டாவது கட்டியவனை அவனுக்கு பிடிப்பதில்லை. தம்பிகள் அவனை அப்பா என்றே அழைத்தனர். பின்புலம் தெரிய, கலைவாணர் தெருவில் பசங்க அனைவரின் வீட்டிலும் ராஜு மேல் தனிப் பிரியமுண்டு. சாப்பாடு, ஒரே வீட்டில் உறக்கம்,ஒருப் படி மேலேறி தீபாவளிக்கு பழனி அண்ணன் அவனுக்கு எடுத்த அதே நிறத்தில் சட்டை, பேண்ட் வாங்கி கொடுத்தான்.

காட்டுபுதூர் மலையில் தேன் எடுத்த கதை, காளிகேசம் அருவியில் மலைபாம்பு தலையில் விழுந்த கதை, சாஸ்தா கோயில் ஊட்டுப் படைப்பு எல்லாமும் சேர்த்து ராஜு பெயரே மாறி, அவனை கடுக்கரை என்றே அழைக்க ஆரம்பித்தோம். சரி, சனிக் கிழமை பள்ளி நடத்தலாம் வாய்ப்புண்டு. ஆனால் எல்லா சனியும் இருக்குமா? சந்தேகம் வரவே காதல் கதையையும் சொன்னான். கௌரி, சினேகா மாதிரி இருப்பாளாம். அவன் குறத்தியறை அரசு மேல்நிலை பள்ளியில் படித்தான். அவள் எட்டு வரை அவனோடு படித்திருக்கிறாள், ஒன்பது முதல் வடசேரி எஸ்.எம்.ஆர். வி யில் படிக்கிறாளாம். ஆக, சனிக்கிழமை அவளைப் பார்க்க போகிறான், கள்ளப்பயல். கௌரி, பள்ளியில் பார்க்காத கண் உண்டா. மதியம் உணவு முடித்து பெண்பிள்ளைகள் , கலையரங்கத்தில் இருப்பார்கள். பசங்க அப்பக்கமாய் போவது சத்தியமாய் அவளையும் பார்க்கத்தான். கடுக்கரையின் கதையில் பொய்யுமுண்டு. ஆனால் கௌரி அத்தனையும் நிஜம். சினேகா தான், அதே சிரிப்பு. கடுக்கரையும் அழகுதான், இமைவொட்டும் மெல்லிய புருவம். கூர் மூக்கு, அழகாய் இருப்பான்.

ஒரு வருடம் கழிந்ததே தெரியவில்லை. இடையிடையே அவன் வீட்டில் சண்டை நடக்கும். அவன் கண்டுகொள்வதில்லை. தம்பிமார்கள் இவனிடம் பெரிதாய் பேசுவதில்லை. அப்பா என்று இவன் அவனை அழைத்ததே இல்லை. எங்களிடம் அவனை ஒருநாள் அடிப்பேன் என்று சத்தியமே செய்தான். கடுக்கரை அடிக்கடி கோம்பையாய் மாறிய அப்பாவை பார்ப்பதுண்டு. அம்மா தான் காரணம் என்பான். இந்த பழக்கத்தில் தான் அப்பா இப்படி ஆகிவிட்டார் என்பான். சிலசமயம் அப்பாக்கு எதுவுமில்லை. ஊர் உண்மையை அறிந்தால் என்ன பேச்சு பேசும் எனப் பயந்தே அப்பா நடிக்கிறார் என்பான். பின் அவர் கடுக்கரையை விட்டு மீனாட்சிபுரத்தில் நகைக் கடைகளில் இரவு காவலாளி வேலைப் பார்த்தார். கடுக்கரை பைசா தேவைப்படும் போது அப்பாவை பார்ப்பான். அவனைப் பார்த்தால் நடிப்பை மறந்து விடுவாராம்.

அதுவும் ஒரு சனிக்கிழமை, கௌரியை பார்க்க கடுக்கரை செல்லவில்லை. காரணம் கிரிக்கெட் என்றே நினைத்தோம். உண்மையில் அன்றைக்கு வீட்டில் பயங்கர சண்டை. அம்மாவை இரண்டாவது கட்டியவன் அடித்து விட்டான். சண்டையோ பெரிதாக, ஆவணி மாதம் என்பதால் பெருமாள் மண்டபத்தில் பொருட்காட்சி நடக்கும், அங்கு தம்பிகளை பைசா கொடுத்து அனுப்பிவைத்தான். வீட்டில் அம்மாவும், அவனும் மாத்திரமே. வெளியே செல்லவும் இவனுக்கு தோணவில்லை. எங்களுடன் கிரிக்கெட் ஆட வந்துவிட்டான். ஆடிமாத மிச்ச காற்று பயங்கரமாக வீசியது. நான் பௌண்டரி லைனுக்கு அருகில் நின்றேன். கடுக்கரை கீப்பிங் செய்தான். தூரத்தில் பகவதி வேகமாய் ஓடி வந்தான். என்னிடம் அவசர அவசரமாய் ஏதோ கூறினான். கடுக்கரையின் அம்மா தூக்கில் தொங்கி விட்டாள் என்பது மாத்திரமே புரிந்தது.

எல்லோரும் சென்றோம். கடுக்கரை இரண்டாவது கட்டியவனை அடித்தான். அவனோ பித்து பிடித்தவன் போல உளறினான். தெருவில் புரண்டு அழுதான். தம்பிமார்களை யாரோ அழைத்து வர, ஊர்ப் பெரியவர் மாறாசா மாமா, போலீஸ் கேஸ் வேண்டாம் என்றார். நடந்தவை பல, எதுவுமே சொல்லிவைத்தார் போலவே நடந்தது. தூக்கில் தொங்கியது மதியம் இரண்டு மணி, நாலு மணிக்கு பாடை தூக்கியாச்சு. கடுக்கரை கூடவே பசங்க இருந்தோம். சொந்தமென சொல்லி வந்த நான்கு பேரும் அன்று இரவே மூவரையும் அழைத்து கூடவே சென்று விட்டனர். அதன் பிறகு கடுக்கரை எப்போதாவது தெருவிற்கு வருவான். அன்றைக்கு ஏதோ வீட்டில் உறங்குவான்.

ஒன்பதை முடிக்கவில்லை, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். கடுக்கரை ஷேர் ஆட்டோவில் கண்டக்டர் வேலை பார்த்தான், அது ராமன்புதூர் ரூட். மூன்று வருடம் கழித்து நான் பழவிளை பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். செல்லும் வழியில் அடிக்கடி சந்திப்போம். பசங்க வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் கடுக்கரையும் ராத்திரி சரக்கடிக்க வருவான். வளர வளர சிகரெட் பீருக்கு முன்னேறி விட்டது. கௌரி பேசுவது இல்லையாம் வருத்தப்படுவான். அப்பா அம்மா இறந்ததும் நிஜத்தில் மனம் பிசகி ஒருமாதிரி ஆகிவிட்டராம். இப்போது அவனும், அப்பாவும் சேர்ந்து இருக்கிறார்கள். தம்பிகள் ஊரில் இருக்கிறார்கள். முன்னர் போல பேச்சில் நளி அடிப்பதும் இல்லை, புரிவது போல அவன் பேசுவதுமில்லை. பின்னர் அவனைப் பார்க்கவேயில்லை.

காலை எட்டறை மணி, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தில் அழகேசன் கடை பேப்பரை நான் படித்திருக்க கூடாது. ‘அடையாளம் தெரியாத வாலிபர் நாகர்கோவில் பூங்காவில் விஷம் அருந்தி தற்கொலை’ கூடவே இருந்த புகைப்படம் எங்கள் கடுக்கரையின், ராஜுவின் முகம். வெறும் முகமல்ல நியாபகங்கள்.

பகவதியம்மை

“அண்ணே, இரவிபுதூர் போற பஸ் எது?” இக்கேள்வியை கடந்து சென்ற பலரிடம் கேட்டும் “ம்ம்ம்க்க்கும்” எனும் பதில்தான் கிடைத்தது. சொந்த ஊர் பேருந்து நிலையத்தில் ஒரு ஊருக்கு செல்லும் வழித்தடம் அறியாமல் நின்றேன். இறையூர் என கூகுலில் தேடினால் பதில் இல்லை. இரவிபுதூர் என்பதே பெயர் எனப் பதிலாய் வந்தது. இப்பேருந்து நிறுத்தமே பள்ளத்தில் இருந்தது, எதிரே எழும்பி கம்பீரமாய் நின்ற தேவாலயத்தில் ஆறு முறை மணியடித்து விவிலிய வசனம் பேசியது ‘கர்த்தராலே கூடாத காரியம் எதுவுமில்லை’. மாடனை வேண்டிக்கொண்ட மனதில் நல்மேய்ப்பரையும் வேண்டிக்கொண்டேன்.

நெற்றியில் திருநீரால் முக்கோடு போட்டு, காதில் சிவப்புக்கல் கடுக்கனோடு, வெற்றிலை குதப்பியவாறே, முன்மண்டை வெற்றிடமான, குலுங்கும் தொப்பையோடு, மங்கிய வெள்ளைச் சட்டையும், மடித்து கட்டிய வேஷ்டியும், லூனார் செருப்புமாய் அருகில் வந்தவர், மாடனாகவோ, மேய்ப்பவராகவோ இருப்பார் எனத் தோணவே அவரிடம் வழி கேட்டேன். ‘இரவிபுதூர் போற பஸ் எதுனே”, கூடவே இவ்வூரிலே வழக்கமான மரியாதை குறிச்சொல் ‘அண்ணாச்சி’யையும் இணைத்துக் கொண்டேன்.

வெற்றிலை சாறு உதட்டில் வடிய மேலும் கீழுமாய் பார்த்தவர் “ஆளு வெளியூரோ, இங்கன இறையூர்னு சொன்னாதான் நம்ம ஆளுக்காருக்கு பிடிப்படும். நானும் அங்கதான் போறேன். ராஜாவூர் பஸ் வரும், மருங்கூர் இப்போதான் போயிருக்கும். யாருக்கு தெரியும், இன்னும் வராம கூட இருக்கும். அவனுக இஷ்ட மயிருக்கு தானே வரான். நிப்போம். தம்பி சாப்டிலா. இல்ல வாங்க காப்பி குடிப்போம்”

வலுக்கட்டாயமாய் கூட்டிக் கொண்டு போனார். “பஸ் வந்தாலும் அவனுக டீ, காப்பி குடிச்சுட்டு தான் எடுப்பான். இறையூருல எங்க. இன்னிக்கு முகூர்த்தம் ஒன்னும் இல்லையே, என்ன சோலி” என்றார்.

சென்னையில் இருந்தாலும் தாத்தா நாகர்கோயில் பழப்பம் மலையாளக் கடையில் இருந்து மாதமிருமுறை வாங்கித் தருவார். கண்முன்னே செந்நிறமாய் குவிந்து கிடந்த பலகாரங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். “தம்பிக்கி பசிக்கோ, மக்கா இதுல ஒன்னு எடு” கடைக்காரரிடம் கேட்டு வாங்கித் தந்தார். அசௌகாரியமாய் உணர்ந்தேன், வாங்கத் தயங்கவே, “பழப்பம் என்ன கோடி ரூவாய்யா, தின்னுப்போ. எம்பயனுக்கா வயசுதான உனக்கு. தின்னு”. முதல் கடியிலே வெல்லமும், ஏலக்காயும், அவலையும் நாக்கு ருசித்தது. “சக்கர பாகு, அவலு உள்ள இருக்கும். வயித்துக்கு நல்லது. இனி மத்தியானம் தான் பசிக்கும்” என்றார் சிரித்தவாறு.

நாங்கள் கடையில் காப்பிக்கும் பழப்பத்திற்கும் காசு கொடுத்து திரும்ப பேருந்தும் சரியாய் வந்தது. ஏறி அவர் அருகிலே அமர்ந்தேன். “இறையூருல யார பாக்கணும், வெளியூரு ஆளு. சொல்லுங்க தெரிஞ்சா நா கூட வாரேன்.”

“தெரிஞ்சவங்க ஒருத்தர பாக்கணும். இறையூர் சுடலமாடன் கோயில் பக்கம் வீடு”

“சரியா போச்சு. நானும் அவன பாக்கத்தான் போறேன். குடும்ப சாமி. பாத்து நாளாச்சு. போய் கும்பிடனும். ரெண்டு மாசமா வீட்டுல ஒருத்தருக்கா கழியாம போகு. போய் மஞ்சன சாத்தி, ஆரம் போட்டு, சாமிக்கு பண்ணனும். யாரும் கண்டுக்காம இருந்திருப்பான். அதான் நம்மள படுத்துகு. எங்க அய்யா வழி சுடல. நல்லா குடுப்பான், சமயத்துல பாடா படுத்துவான். நான்தான் மதியில்லாம ரொம்ப நாள் வராம இருந்திட்டுட்டேன்” கவலையோடு சொன்னார். “சரி, நம்ம கதைய சினிமா எடுக்கலாம், ஒரு பய பாக்க மாட்டான்” சொல்லிவிட்டு அவரே சிரித்தார். வெகுளியாய் தெரிந்தார், நானும் சகஜமாய் பேச ஆரம்பித்தேன்.

“அங்க ஒரு ஆச்சி இருக்கு, சுடலை கோயில் பக்கம் வீடு. அவங்க வீட்டுக்கு போறேன், பேரு பகவதியம்மை”.

கொஞ்சம் அமைதியானவர், “கூனிக் கிழவி வீட்டுக்கா. உங்க சொந்தமா அவ?”

“தெரிஞ்சவங்க, எங்க தாத்தா இங்கையிருந்து மெட்ராஸ் போய் செட்டில் ஆனவரு. அவருக்கு தெரிஞ்சவங்க”

“ஓ அப்டியா. உங்க தாத்தா பேரு:?”

“கிருஷ்ணப் பிள்ளை” என்றதும். முதுகை குலுக்கி கொஞ்சம் இன்னும் இணக்கமாய் “பிள்ளைமாறா, முக சாடை தெரிஞ்சுது. இப்போ உள்ள பிள்ளைகளுக்கு தான் இன்னாருன்னு சொன்னா கொஞ்சம் சங்கடம், அதான் கேக்கல. சுத்தி முத்தி சொந்தமாதான் இருப்போம். பின்ன கடுக்கரை, ஆரம்பலி, காக்கமூரு எல்லாம் அங்கதானே கட்டிக் கொடுப்போம்” என்றார்.

இவ்வூர் சுசீந்தரமாக இருக்க வேண்டும். சாலையின் இணையாக ஆறு ஓடியது. வலப்பக்கம் பெரிய கோபுரம் தெரிந்தது. தாத்தா சொல்லிய கதைகளில் பலமுறை தாணுமாலயன் வருவதுண்டு. படித்துறையில் துணி அலசும் ஒலி கேட்டது. பழைய பாலம் இன்னும் கம்பீரமாக நிற்க, புதிதாய் வழி தவறி சாய்ந்து சாலையில் இணைந்த புதிய பாலம் தெரிந்தது. வண்டி பழைய பாலம் வழியே அக்கரை எனும் ஊருக்குள் நுழைந்தது. வழியெங்கும் இருக்கரையிலும் தெங்கு, அடுத்து பசுமையான போர்வை போலவிருந்த வயலில் நெல் நாற்று காற்றில் மேலும் கீழுமாய் தலையசைத்து வரவேற்பது போலவிருந்தது. அருகே பேச்சு சத்தம் குறையவே அவரைக் கண்டால் உறங்கிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் எழுந்து, “ஊரு வந்துட்டு வாங்க இறங்குவோம்” என்றார். வயல்வெளி நடுவே சாலை உணவைத் தேடி ஊரும் கருநாகம் போல நீண்டு போனது.

பழைய ஓட்டு வீடுகள், ஓடு வேய்ந்த பள்ளிக்கூடம், இடையிடையே கான்கிரீட் வீடுகள். சட்டை அணியாத சாரம் அணிந்த திடமான நெஞ்சைக் கொண்ட தாத்தாக்கள்- தாத்தா சாரம் என்று சொல்லியே நானும் கைலியை சாரம் என்றே அழைக்கிறேன்.

“என்ன எங்கோடியா அத்தான் கண்டு நாளாச்சு” பெண்குரல், கேட்டு திரும்பினேன். பசுமாட்டை இழுத்தபடி ஐம்பது வயது பெண்ணொருத்தி.

“மைனி சுகமா, சுப்பிரமணிக்கு ஒரு சம்பந்தம் இருக்கு. ஊருக்கு போகும் முன்னாடி வீட்டுக்கு வாரேன்.”

“சம்பந்தம் வருகு, வழிச் சுத்தம் வேணுலா. தேரூர்ல ஒன்னு வருகு”

“அதான் நானும் சொல்ல வந்தேன். நம்ம சகலப்பாடி முருகன் இருக்கான்லா, அவனுக்க பெரியக்கா பொண்ணு. யோசிக்காத வாரேன் பேசுவோம்.”

“கூட யாரு, ஆளு பிடிப்படலையே”

“மெட்ராஸ்ல இருந்து வராரு, நம்ம ஆளுதான். கூனிக் கிழவிய பாக்கணுமா”

“அது ரெண்டு நாளா இழுத்துட்டுலா கிடக்கு. சீக்கிரம் போவும். அதுக்கு நாளாயிட்டு, சலம்பிட்டு, ஏசிட்டு திரியும். என்ன ஆளோ, நம்ம ஆளு இல்ல. ஊருக்காரன் பேசிட்டு இருக்கான். என்னதான் இருந்தாலும் சுடலை கோயில தூத்து வாறிட்டு கிடந்தா. அதுக்கு சொந்தம் கிந்தம் உண்டான்னு தெரில. முதவாட்டி ஒரு ஆளு அத தேடி வருகு. ஊரு செலவுல பாடை எடுக்கணும்” நடந்துக் கொண்டே வார்த்தைகளை உதிர்த்தபடி சென்றாள்.

“தப்பா நினைக்காதப்போ. பொம்பள அப்படியாப்பட்ட ஆளுதான். வாயில சனி. என்கூட கொஞ்சம் பிடித்தம் உண்டு. நானும் அது சாவ முன்னாடி பாக்கணும். முண்டு கட்டிட்டு இருப்பா. மலையாளத்துக்காரியா இருப்பா போல. எங்க அய்யாக்கு அவள தெரியும். அவருதான் இங்க தங்க இடம் கொடுத்தாரு. சுடல கோயிலு சுத்தி நம்ம இடம்தான். பாவம் ஆளுத் துணையில்லை. தனிக்கட்டை. நம்ம நாளு வந்தா போயிதானே ஆகணும். அது பொறக்கப்பயே முடிவாயிடும். என்ன நா சொல்லது” என்றார் விரக்தியாய்.

மௌனம் மாத்திரமே என்னுள் நிறைந்திருந்தது. நடந்து கொண்டே தாத்தாவின் நினைவுகளை அசைப் போட்டேன். ஆச்சி எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும் போதே இறந்துவிட்டாள். அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் அவர் இறக்கும் வரை மனக்குறையில்லை. அவராய் படுக்கையில் இருக்கும் போது “என் தங்கம், கண்ணு, சாமி தாத்தா செத்தா. தகவலை இறையூர்ல பகவதியம்மை ஆச்சிட்டு சொல்லணும். தாத்தாக்க ஆச மக்ளே. அப்பனுக்கு தெரியாண்டாம்.” பேசிக்கொண்டே கைகளில் முத்தமிட்டார். யார் பகவதியம்மை, தாத்தாக்கு என்ன பழக்கமோ என்றெல்லாம் யோசிக்க நேரமின்றி அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட்டார். அப்பா ஊருக்கு தகவல் எல்லாம் சொல்லாமல் கண்ணம்மாபேட்டையில் காரியம் செய்தார். ஆச்சி இறந்ததுக்கும் இதேதான் நடந்தது. தாத்தாவும் ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் செய்ய ஆசைப்படவில்லை. தாத்தாவின் கதைகள் வீட்டின் எல்லா அறையிலும் நிறைந்து இருந்தன. இரண்டு மூன்று வாரங்களில் வீடு சகஜமாக, எனக்கோ தாத்தா கடைசியாய் முத்தமிட்ட கைகள் அரிக்க ஆரம்பித்தது. கனவிலும் தாத்தா பகவதியம்மை பேரை சொல்லிக்கொண்டே வந்து நின்றார். பெங்களூர் செல்வதாய் சொல்லி நாகர்கோயில் கிளம்பிவிட்டேன்.

“சரி, உங்க தாத்தாக்க ஊரு எது?” நடந்தபடி கேட்டார்.

“அழகியபாண்டியபுரம்”

“அலையான்றமா, பேசி பேசி பக்கத்துல வந்திட்டியே. அங்க எங்க?”

“அதுலாம் தெரியாது”

“அப்பா பேரு என்ன?”

“மணியன்”.

நின்று வித்தியாசமாய் பார்த்தார். “உங்க தாத்தாவ கிட்டுனு கூப்பிடுவாங்களா?”

“ஆமா, ஊருல கிருஷ்ணப் பிள்ளைனா யாருக்கும் தெரியாது, கிட்டுனு சொன்னாதான் தெரியும். சக்கோட்டை கிட்டுனு சொல்வாரு சிலநேரம் சிரிச்சிட்டே”

“லேய், நா உனக்கு மாமா முறைலா. உங்க தாத்தாவும், எங்க அய்யாவும் நல்ல கூட்டுக்காரன்லா. அய்யா சொல்லிருக்காரு கதைலாம். இப்போ புரியுது. நீ சின்னப்பையன். தாத்தா எப்புடி இருக்காரு, அப்பா சுகமா. உங்கூட பொறந்தவங்க எத்தனை பேரு?”

“தாத்தா தவறிட்டாரு, அத அந்த ஆச்சிட்ட சொல்லணும்னு தாத்தா சாவ முன்னாடி ஆசைப்பட்டுச்சு, அதான் வந்தேன்”

“செய், சங்கடம். காலத்தை பாத்தியா மக்கா. எல்லாம் அந்தந்த சமயத்துல நடக்கணும். நீ வரணும்னு தான் அது இழுத்துட்டு கிடக்கு.”

ஆறடியில் நெடுநெடுவென மண்பீடம், சுற்றிலும் பீடம் பின் நின்ற வேம்பின் சருகுகள். முன்னே என்றோ வைத்த வாழையிலை மட்டும் இருந்தது. கொஞ்சம் தொலைவில் வயதான ஓலை வீடு, முன்னே தாழ்ந்திருந்த கூரை பிய்ந்து கிடந்தது. அவரும் கூடவே வந்தார். வீட்டில் உள்ளே எந்த சத்தமும் இல்லை.

“அம்மை வீட்டுல உண்டா, நா எங்கோடியா வந்திருக்கேன்”

“உள்ள வாடே, பிள்ளையை கண்டு நாளாச்சு” எனும் உடைந்த பெண் குரல் உள்ளிருந்து வந்தது.

உள்ளே வா, என்பது போல் என்னைப் பார்த்தபடி அவரும் நுழைந்தார். ஒரே அரை, மண் அடுப்பில் சப்பிய பாத்திரம் ஒன்றில் அரிசி கொதித்தது. அருகே ஆங்கில சி போல வளைந்து, உடலெங்கும் தோல் தளர்ந்து தொங்கியபடி, இருந்த கொஞ்ச நார்ப் போலவிருந்த முடியை முடிந்து வைத்த தலையும், இடுப்பில் சாரமும், மேலே வெள்ளை துவர்த்தும் மட்டுமே கட்டிய ஆச்சி இருந்தாள். இவளா ஊரில் எல்லோரும் ஏசும் ஆச்சி, அப்படியா இருக்கிறாள். இந்நிலையிலும் முகம் மலர்ச்சியாய் இருந்தது. தெரிந்த எங்கோடியா வந்ததில் மலர்ந்திருக்கலாம்.

“பிள்ளைக்கு ஒன்னும் இல்லையெடே. கஞ்சிதான் வைக்கேன். ரெண்டு நாளா மேலு வலி, கையும், காலும் பிடிச்சு நிக்கி. வயசாயிட்டா. வயித்துக்கு பாக்கியம் சமயத்துல கஞ்சி கொண்டாருவ. இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. அதான் எந்திச்சிட்டேன். நீ இரு, நா போய் கலரு வாங்கிட்டு வரேன். கூட யாரு, நா கவனிக்கல. கண்ணு தெரிலியா. யாரு ஒம்பிள்ளையா பிள்ளே?”

“இல்ல ஆச்சி, கோயிலுக்கு வந்தோம். என் பெரிய மைனிக்க மவன். நீ இரு, நா வாங்கிட்டு வாரேன்”

“போல ஆகாதவன் மவனே, இன்னைக்குதான் திடமா இருக்கேன். நா போறேன். நீ இரு,” குனிந்து நடந்தபடியே பொசுக்கென்று நடந்தாள், ஆட்டின் மடிபோல துண்டு விலகி மார்பு அங்குமிங்கும் ஆடியது அவளுக்கு. நான் புரியாமல் விழித்தேன்.

“இரு இப்போமே எல்லாம் சொல்லணுமா, கழியாத பொம்பள. வரட்டும்”

“எவென் வீட்டு மாடுல, பிச்சைக்கார பய இங்க அவத்து விட்ருக்கான். மேய இடம் இல்லையால, இழுத்துக்கட்டுல புலையாடி மவனே” ஆச்சி யாரையோ ஏசியபடி செல்வது காதில் கேட்டது.

“மணியன் ஏதாச்சும் சொல்லுவானா இவள பத்தி, வளத்தவ பாசம், பெத்தவளு மேல இல்ல. அவன ஒன்னும் சொல்லதுக்கு இல்ல மக்கா. எல்லாம் இப்புடித்தா நடக்கணும்னு மேல ஒருத்தன் எழுதிருக்கான்”, எதுவுமே புரியவில்லை. அவளும் வருவது போலில்லை.

“உங்க தாத்தாவ நா கண்டுருக்கேன் சின்னதுல. எம் ஜி ஆர் கலரு, சுருண்ட முடியுமா ஆளு சினிமா நடிகர் கணக்கா இருப்பாரு. இந்த அம்மா எப்புடி பழக்கமோ. உங்க தாத்தாவுக்கு தான் தெரியும். அவங்க அய்யா பழைய ஆளு, நிலமும் தோப்புமா ஜம்முன்னு இருப்பாரு. எங்க அய்யா சொல்லுவாரு” கொஞ்சம் உரிமை எப்படியோ பேச்சில் வந்தது.

“இந்த ஆச்சி யாரு. எங்க தாத்தாவுக்கு என்ன பழக்கம்?”

“இவ ஊரு, குடும்பம்லா தெரியாது. உங்க தாத்தா மேக்க போவாரு அடிக்கடி. இவளுக்கு அங்க பூவாரு பக்கம்னு மட்டும் தெரியும். இவரு அங்க கள்ளு குடிக்கப் போவாருன்னு அய்யா சொல்லுவாரு. அங்க என்ன பழக்கமோ. உங்க ஆச்சிய கட்டுனதுக்கு, அப்புறமா இல்லையானு தெரியல. நிறைய மறந்துட்டு” நிறுத்தி பாக்கெட்டில் இருந்த திருநீரை நெற்றியில் பட்டையிட்டார்.

வெளியே ஆச்சி வருவது போலத் தெரியவில்லை. நான் விடாமல் “அப்புறம்” என்றேன்,

“உங்க ஆச்சிக்கு பிள்ளையில்லை, போகாத கோயில் இல்லையாம். மடில கனம் இல்லை போல. ஒருநாள் நல்லா செவந்த குட்டியை தூக்கிட்டு வந்தாராம். அவன்தான் உங்க அப்பன். வீட்டுல கொண்டாந்த அவரு அப்பா உள்ள விடல. பெரிய சண்டை. கொஞ்ச நாளுல இவ வந்தா, எம்பிள்ளைனு சொல்லி ஒரு நாள் அலையான்றம் முழுக்க ஒரே பெகலம்தான். உங்க தாத்தாக்க அப்பா அவர தலை முழுகி வீட்ட விட்டு விரட்டிட்டார். நல்ல மனுஷன், கேவலத்துல அப்புறம் இங்க வரவேயில்ல. எங்க அய்யா நாரோயில்ல வீடு பாத்து வச்சாரு. உங்க அப்பன் வந்த வீட்டுல ஒட்டிக்கிட்டான். உங்க ஆச்சியும் பிள்ளையில்லையா, செவத்த பய, பாக்க அவ்வளவு லச்சணமா இருப்பான். விட மனசில்லை. கூடவே வச்சுக்கிட்டா. எவன் பாத்தனோ, வத்தி வச்சுட்டான். அதுலாம் பண்டு.” நிறுத்திவிட்டு, ஆச்சி வருகிறாளா என்று நோட்டமிட்டு தொடர்ந்தார் “அங்கேயும் உங்க தாத்தாவ அசிங்கப்படுத்தி, இவளயும் பூவாருல இருந்து கூட்டிட்டு வந்து, ரோட்டுல போட்டு அடிச்சி, சங்கடம். மணியனயும் சம்சாரத்தையும் கூட்டிட்டு ஊர விட்டே போய்ட்டாரு. போறப்ப எங்க அய்யாட்ட இவளுக்கு ஒரு இடம் கொடுத்து பாருன்னு கேட்டாரு. அந்தக்கால பழக்கம்லா. இந்தா இங்க இடம் கொடுத்து அய்யா பாத்துக்கிட்டாரு. அய்யா இருக்க வர உங்க தாத்தாட்ட இருந்து லெட்டர் வரும். அய்யா இங்க வந்து பேசுவாரு. எல்லாம் நாளாச்சு”.

அமைதி மட்டுமே எங்குமே, அவள் வீட்டுக்கு வந்து இரண்டு கலரையும் கையில் கொடுத்தாள்.

“அம்மே, ஆளு பிடிப்படுகா” என்றார் எங்கோடியா,

சிறிது நேரம் பார்த்தவள், “இல்லடே, கண்ணு மங்கி நாளாச்சு. குரல வச்சுதான் இப்போ ஆள பிடிக்கது. புகையா உருவம் தெரியும்”

“உம்பேரன் தான்.”

எதையோ மறந்துவிட்டவள் போல நின்றாள். என்னவெல்லாம் நினைத்திருப்பாளோ, கண்கள் காட்டிக் கொடுத்தது கண்ணீரின் வழியே. எதுவும் பேசவில்லை.

“பிள்ளைக்கு பேரு என்னது?”

குரல் வரவில்லை. “கிருஷ்ணா” என்றேன்.

என் கைகளை பிடித்து முத்தமிட்டாள். எதுவுமே பேசவில்லை,

பின் நான், “தாத்தா தவறிட்டாரு. உங்கள்ட்ட சொல்லணும்னு என்கிட்டே கேட்டாரு முன்னாடியே”.
“நல்ல மனுஷன், என்னா ஐஸ்வர்யம் நிரஞ்ச ஆளு. நன்னி எப்போவும் உண்டு. நீயும் நல்லா வருவா. மணியன் நல்லாருக்கானா,” பேசியபபடியே ஓரமாய் இருந்த தகரப் பெட்டியில் சேலை ஒன்று மூடி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தாள். பின் மூடி விட்டு வந்தாள். “சாப்பிட்டுட்டு போ, இங்க எங்க தங்க சொல்ல. சாப்பிடாம போகக்கூடாது.” என்றாள்.

என்னால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை “நா போறேன். வேற வேலையிருக்கு. மன்னிச்சிருங்க” என்றபடி எழுந்தேன். எதையோ எண்ணியபடி வந்தவள் மீண்டும் கைகளை பிடித்து முத்தமிட்டாள். மனம் இருண்டு, உணர்வுகள் கூடியது, என்னையறியாமல் குனிந்து அவள் கால்களை தொட்டேன். அவள் கண்ணீர் என் முதுகில் குளிர்ச்சியாய் பட்டது. ஆச்சி வீட்டின் வெளியே வந்து நான் தெரு திரும்பும் வரை நின்று கொண்டிருந்தாள் அவளின் கலங்கிய கண்கள் அதுவரை எனக்கு தெரிந்தது.

எங்கோடியா மாமா பேருந்து ஏற்றிவிடும் வரை கூடவே வந்தார், கைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். நாகர்கோயில் வந்ததும் சென்னை உடனே திரும்ப மனமில்லை, கன்னியாகுமரி சென்று அறையெடுத்து தங்கினேன். இரவு கடற்கரைக்கு சென்றேன். அலையெல்லாம் ஏதோ சோகத்தை தாங்கி வருவதும் போவதுமாய் தெரிந்தது. சுற்றிலும் சூன்யமாய் உணர்ந்தேன். இரவு தூங்கியதும் நினைவில்லை.

காலை எழுந்து சூரிய உதயம் காண முடிவு செய்தேன். என் அறையில் இருந்தே கடல் தெளிவாய் தெரிந்தது. கைபேசி ஒலிக்கவே எழுந்தேன், எங்கோடியா மாமாதான். ஊருக்கு போய் விட்டேனா என அழைப்பதாய் தோன்றியது. ஜன்னல்களை திறந்தவாறே அழைப்பை எடுத்தேன்.

“மக்கா ஊருக்கு போய்ட்டியா. பயணம்லா வசதியா இருந்துச்சா. அப்புறம் ஆச்சி இறந்துட்டா. எனக்கு இப்போதான் தகவல் வந்திச்சு. உன்ன பாத்த சந்தோசமா இருக்கும். நல்ல சாவு. சொல்லத்தான் கூப்பிட்டேன்” மறுபதில் எதுவுமே எதிர்பார்க்கவில்லை, அழைப்பை துண்டித்துவிட்டார். சூரியன் மெதுவாய் கடலில் இருந்து எட்டிப் பார்ப்பது போலவிருந்தது, மஞ்சள் பந்து, கடல் தங்கம் போல மின்னியது.

அறையில் இருந்து கிளம்பி இறையூர் சென்றேன். ஊர் இயல்பாக இயங்கியது. கொஞ்சம் ஆண்கள் கூரையில் வெளியே நின்றார், கூடவே எங்கோடியாவும் இருந்தார். “மக்கா போலையா, நீ போய்ட்டேன்னு நினச்சேன்”

கூடவே வீட்டுக்குள் வந்தார். எல்லாரிடமும் சொல்லியிருக்கிறார் போல, என்னை அனைத்து கண்களும் வினோதமாய் பார்ப்பது போல தெரிந்தது. உள்ளே சென்றோம் ஆச்சியைப் படுக்க வைத்திருந்தனர். யார் போட்ட மாலையோ பூவின்றி நார் அதிகமாய் தெரிந்தது. வரும் அவசரத்தில் எதையும் நான் யோசிக்கவில்லை. வெளியே பாடை தயாராய் இருந்தது. தனிக்கட்டையாய் இருந்திருக்கிறாள்

எல்லாம் வேகமாய் நடந்தது. காரியங்களில் நானும் இருந்தேன், வாய்க்கரிசி போட்டேன், எரிக் கங்கு எங்கோடியா மாமா இட்டார். அருகில் இருந்த ஆற்றில் குளித்து மீண்டும் அவள் வீட்டுக்கே வந்தேன். தகரப்பெட்டியை திறந்து புடவையை எடுத்தேன் உள்ளே மங்கிய புகைப்படம் ஒன்று தெரிந்தது. அதில் சுருள் முடியும் எம் ஜி ஆர் போல தாத்தாவும், அருகே செம்மீன் ஷீலா போல ஆச்சியும் இருந்தாள். புகைப்படம் சுற்றிய அதே பழைய புடவையை ஆச்சி அதில் கட்டிக்கொண்டு இருந்தாள். அதை நானே எடுத்துக்கொண்டேன். வெளியே எங்கோடியா மாமா நின்றார்.

“வச்சுக்கோ. உங்க ஆச்சி தாத்தா தானே. பிள்ளைக்கு கல்யாண வயசு ஆச்சே. வரன் ஏதாச்சும் வருகா. நம்ம ஊருல பாப்போம், மெட்ராஸ் போய் அப்பாட்ட சொல்லு. மாமாவ பாத்தேன்னு.” பேசிக்கொண்டே இருவரும் நடந்தோம்.