பாரிஸ் என்னும் கனவின் நிஜத்தை கண்டு விரும்பத் தொடங்கி நிழல் மட்டுமே வசமாகி இருக்கும் சமூக கைவல்ய நிலையை உரசி செல்லும் புதினம் “பாரிஸ்”.
பாரிஸ் என்னும் கனவினுள் நிஜம் உண்டு, பாவனை உண்டு, அற்பத்தனம் உண்டு,லௌகீகம் உண்டு, கனவின் லட்சியமும் உண்டு,அக்கனவு குறித்த அலட்சியமும் உண்டு.
கனவை நினைவாக்க எடுக்கப்படும் பிரயத்தனங்கள் ஏற்படுத்தும் பதற்றம் நாவலின் அடி நாதமாக இருக்கிறது. இந்த பிரயத்தனங்கள் குறித்து வாசிக்கையில் வாசகனுக்கு அசூயையும் கோபாவேசமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது, அசூயையும் கோபத்தையும் தூண்டும் வாசகனின் தார்மீகத்தை நம்பியே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி நாவல் காட்டும் யதார்த்தம் வாசகனின் தார்மீகம் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா என்ற கேள்வியை முன் வைக்கிறது. யதார்த்தம் என்பது லௌகீகம் முன் பல்லிளித்து நிற்கும் தார்மீகம் தான் என்றும் கூறப்பார்க்கிறது.
கனவின் நியாயம் என்று ஒருவர் வகுக்க இயலாது. அக்கனவினை அடைய ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நியாய அநியாயங்கள் , பாவனைகள், சோம்பல்கள் , முட்டாள்தனங்கள் இருக்க வாய்ப்புண்டு , கனவுகளை அடைய விடலைத்தனமான முயற்சிகள் தொடங்கி காரியார்த்தமான செயல்கள் வரை மேற்கொண்டு கனவுகளை துரத்திய படியே
யதார்த்தத்தை வந்தடையும் பல்வேறு கதைமாந்தர்கள் வழி புதுச்சேரியின் தெருக்களில் வாசகன் நடை பயில்கிறான்.
நாவலின் வடிவத் தேர்வு அருமை, குறிப்பாக நிகழ்வுகளையும் முன் நிகழ்ச்சிகளையும் கோர்த்திருக்கும் கொக்கி போன்ற அந்த கண்ணி அமைப்பு வாசிப்பை சுவாரஸ்யமானத்தாக்குகிறது.
செட்டில் ஆவது – வாழக்கையை துவங்கும் முன்னரே செட்டில் ஆகத் துடிக்கும் , பொருளாதார தன்னிறைவு அடைய முயலும், தங்கள் சூழலை முற்றும் துறந்து அந்நிய நிலத்தில் தடம் பதிக்க நினைக்கும் இளம் தலைமுறையினர் காட்டும் பதற்றம் நாவலின் ஜீவநாடி. இந்த பதற்றம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பரவலாக அமையப்பெற்றுள்ளது,
ரபி ,கிறிஸ்டோ மற்றும் அசோக் பொருளாதாரத்தின் இரு எல்லையில் இருப்பவர்கள், இம்மூவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேவ்வேறானவை.
ஆனால் மூவருமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள், ரபியின் பொருட்கனவு இன்னொருவனின் லௌகீதத்தின் முன் தோற்கிறது, அசோக் யதார்த்தத்தின் முன் தோற்கிறான், கிறிஸ்டோ அன்பை கைவிட்ட செல்வத்தின் எல்லையின்மை முன் தோற்கிறான்.
கலாச்சார ரீதியாக தன்னை அயல் குடிமகனாக காட்டிக்கொள்ள முயலும் அசோக் இன் அசல் பிரச்னை பொருளாதாரம் தொடர்பானதாக இருக்கிறது, பொருளாதார நிறைவு பெற்ற ரபி யின் ஆசை அயல் நாடு போவதேனினும் அவன் எதிர்பார விதமாக சந்தித்த சிக்கல் உறவு ரீதியானது, அன்பை அடைய முயலும் கிறிஸ்டோ வின் அசல் பிரச்சினை அவனது குடும்ப அந்தஸ்து குறித்தது. பதற்றத்தின் மூல காரணங்களாக நாம் நாவல் வழி கண்டுகொள்வது , இந்திய தேசம் குறித்த கலாச்சார தாழ்வுணர்ச்சி , அயல் நாட்டு மோகம், தனி மனிதனின் பொருளாதார சுமை, பணம் சேர்ப்பதின் எல்லையின்மை குறித்த உணர்வின்மை.
கிறிஸ்டோ விரும்பும் கலாச்சார சுதந்திரம் அசோக்கை சுற்றி அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, டைலர் என்னும் கதாப்பாத்திரம் வழி நாம் உணர்வது இதையே , உறவு தொடர்பான சிக்கல் பெரிதும் அற்ற பாரிஸ் ஒத்த கலாசார சூழல் நம் நாட்டின் பொருளாதாரத்தில் தாழ்ந்த விளிம்பு நிலை மனிதர்களிடம் உள்ளதோ ? அதே நேரத்தில் பொருள் சேர்த்தலுக்கும் உறவு சிக்கல்களுக்குமான பொருந்தாத முடிச்சு குறித்து ரபி அறிகிறானோ ? மிதமிஞ்சிய செல்வத்தின் மலட்டுத் தன்மை கிறிஸ்டோவை தவிக்க விடுகிறதோ ? ரபியின் பொருள் x காதல் என்பதான இரட்டை நிலை கிறிஸ்டோவின் அன்பிற்கும் அசோக்கின் பொருளிற்கும் இடையே வைக்கத்தக்கது.
சமகால பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடு போல் அமைந்துள்ளது நாவலின் கடைசிப் பகுதி, “பாரிஸ்” என்னும் நிழலின் தன்மையை மூவரும் அறிந்து கொள்கின்றனர். அசோக், கிறிஸ்டோ, ரபி மூவரும் கண்ட வெவ்வேறான அதே கனவினை விடுத்து எதேச்சையின் கரம் பற்றி தங்கள் பயணத்தை துவங்குகின்றனர்.
செல்வம் எனும் இந்தப் பேயுடன் நாம் வரவேற்பறையில் உரையாடி கொண்டிருக்கையில், நம் உள்ளறைகளிலிருந்து அன்பு விடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.
“பாரிஸ் “அரி சங்கர் எழுதியுள்ள முதல் நாவல். பதிலடி என்னும் சிறுகதை தொகுப்பு வெளி வந்துள்ளது