அஜய். ஆர்

இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே

2016ஆம் ஆண்டில் படித்த குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள்

– ஆர். அஜய்-

  1. நிலவில் பூத்த முல்லை – உ.வே.சா.

தலைப்பு கட்டுரையில் ‘பத்துப் பாட்டை’  தேடி அலைகிறார் உ.வே.சா. ஒரு ஊரில் இரவு நேரத்தில் சுவடி கிடைக்கிறது. நிலவொளி மட்டுமே உள்ள இடம். அவசர அவசரமாக சுவடிக்கட்டை பிரிப்பவரின் கண்ணில் ‘முல்லைப் பாட்டு’ படுகிறது,  நிலவில் முல்லை பூக்கிறது.

புனைவின் சாயல் கொண்ட பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்து சொத்து அனைத்தையும் ஜப்தியில் பறி கொடுத்து, தன்னிடமுள்ள- அன்று விற்றிருந்தால் கணிசமாக தொகை கிடைத்திருக்கக்கூடிய – சுவடிகளை இலவசமாக விட்டுச் சென்ற, இறுதிவரை தன் பெயரைச் சொல்லாதவர் பற்றிய பதிவு சிறுகதையாக மாறக் கூடியது. இவை ‘உண்மை புனைவை விட புரிந்து கொள்ள கடினமானது’  என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.

திருமணமான மாணவர்கள் தங்கள் செலவுக்காக தந்தை கொடுப்பது போதாமல், மாமனாரை அதிகாரம் செய்து பணம் பெற்றுக்கொள்வது அன்றைய சமூகச் சூழலை, கடந்து போன காலத்தை  குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் வகுப்பறைகளில் மாணவர்களின் குறும்பு சில இடங்களில் காலம் அப்படியே உறைந்துள்ளதைச் சுட்டுகிறது.

இறுகிப் போகாத, இன்னும் வாசகனுக்கு அணுக்கமாக இருக்கும் புன்சிரிப்பை உருவாக்கும் நடையும்,  உள்ளன. ‘சீவக சிந்தாமணியின்’ செய்யுள்களில் ஒரு வரி குறித்து குழம்பிக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் முதியவரொருவர் அவர் இல்லத்தில் அவ்வப்போது வந்து உண்பது வழக்கம். எப்போதும் போல் அவர் புலம்பிக்கொண்டே இருக்க, உ.வே.சா வழக்கம் போல் ‘சிறிதும் சிரத்தை’ இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்ததை விவரிக்கிறார். பேச்சுவாக்கில் கிழவர் ஏதோ பழமொழி சொல்ல, அது சீவக சிந்தாமணியில்  உ.வே.சாவிற்கு சந்தேகம் உள்ள பகுதியோடு தொடர்புடையது. உடனே உற்சாகமாகும் உ.வே.சா கிழவரிடம் பேச்சு கொடுத்து தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை விலகலோடு பார்க்கும் மனநிலையும் அவருக்கு உள்ளது.  வார இறுதிகளில், மற்றும் பிற விடுமுறை நாட்களில், அவர் வீட்டில் இருந்ததாகவே தெரிவதில்லை, பெரும்பாலும் ஏதேனும் தொலைவில் உள்ள ஊருக்கு சுவடி தேடி செல்கிறார். சுவடி தேடிச் சென்ற இடத்தில் அங்கிருப்பவர் இவரை கவனிக்காமல் இருப்பது போல் பாவனை செய்ய அதை பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றிருந்ததை எந்த சுயபச்சாதாபமும் இல்லாமல் விவரிக்கிறார்.

இரு  நிகழ்வுகள். மணிமேகலையில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை தேடுகிறார். கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு செல்பவருக்கு பட்டாச்சாரியார், பல பிரசாத சிற்றுண்டிகளை தருகிறார். அவற்றின் பெயர்களை கேட்கும் உ.வே.சா, ஒன்றின் பெயர் ‘கும்மாயம்’ என்று கேள்விப்பட்டதும் உணவை மறுக்கிறார். அச்சிற்றுண்டி  நாவிற்கு தந்த சுவையை விட, அந்தப் பெயர் காதில் விழுந்தபோது உருவான சுவையே சிறந்தது என்கிறார்.  வில்லி பாரதத்தில்    ‘செண்டை’ என்ற சொல்  ஒரு  செய்யுளின் உபயோகிக்கப்பட்டுள்ள விதம்  ‘பூச்செண்டை’     குறிக்காது என்று தெரிந்தாலும் வேறெதை குறிக்கிறது என்று அதன் அர்த்தத்தை தேடுகிறார்.  கோவிலொன்றில் தரிசனத்தின்போது, பெருமாள் கையிலிருந்த ஆயுதத்தை பார்ப்பவர் அது என்னவென்று கேட்க, ‘செண்டு’ என்கிறார் அர்ச்சகர்.  உ.வே.சா அகக்கண்ணில் திரௌபதியை இழுத்து வரும் துச்சாதனன்தான் இப்போது தெரிகிறான். அவர் சந்தேகம் தீர்கிறது. அறுசுவை  உணவை விட,  இறை தரிசனத்தை விட அவற்றின் மூலம் தன் சந்தேகங்கள் தீர்ந்ததே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

அன்றாட லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், அப்போது என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மனம் உள்ளூர இலக்கியங்கள் குறித்தே யோசித்துக் கொண்டிருந்துள்ளது.

2. The Ancestor’s Tale – Richard Dawkins.

டாக்கின்ஸின் சரளமான நடையில் நமது பரிணாம வளர்ச்சியின் பாதையை அறிய உதவும் சுவாரஸ்யமான பயணம் இந்த நூல். என்னைப் போன்ற பொது வாசகர்களையும் அன்னியப்படுத்தாமல், அதே நேரத்தில் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் எளிமையாக்கி  நீர்த்துப் போகச் செய்யாமலும் கம்பி மேல் நடக்கும் வித்தை டாக்கின்ஸ்சுக்கு புதிதல்ல. அதே நேரத்தில் ஓரளவுக்கு மேல்  எளிமைப்படுத்த முடியாத துறைசார்ந்த நுணுக்கமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட சில இடங்களில், இவை பொது வாசகருக்கு கடினமாக இருக்கலாம், எனவே அடுத்த ‘சில’ பக்கங்களை நீங்கள் கடந்து செல்லலாம், அதனால் இழப்பு இருக்காது என்றும் சொல்லி விடுகிறார். இவையும் பொதுவாசகனுக்கு உதவுவதோடு அவன் குறைந்தபட்ச தயாரிப்பு செய்து கொள்ளவும் உதவுகின்றன.

முற்றிறுதியாக பல விஷயங்களை சொல்பவர்,  அனைத்திற்கும் பதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற தரப்பை எடுப்பதில்லை. அறிவியல்  இன்னும் இறுதி முடிவுக்கு வராததையும் குறிப்பிட்டு அவை குறித்த தன் யூகங்களையும் (இவை  யூகங்கள் மட்டுமே என்பதையும்  வெளிப்படையாக) கூறுகிறார்.  உதாரணமாக நம் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கிளையான, நம் பங்களிகளான, நியாண்டர்தால்கள், அவர்களுக்கும்   நமக்கும் இருந்திருக்கக்கூடிய உறவு பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துக்கள்.  இந்தப்  புத்தகம் வெளிவந்தபின் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ‘நியாண்டர்தால்களுக்கும் நமக்குமான  உறவுக்கான  சான்றுகள்  மரபணு சார்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

Backward chronology and forward chronology are each good for different purposes. Go backwards and, no matter where you start, you end up celebrating the unity of life. Go forwards and you extol diversity.’

என்று நூலின் ஆரம்பத்தில் டாக்கின்ஸ் அழகாகச்   சொல்வதில் உள்ள பரவசத்தை  நூல் முழுதும் உணர முடிகிறது.

  1. Letters to a Nation – Nehru’s letters to his chief ministers

தன் இலட்சியங்கள் மற்றும் மனசாட்சிப்படி உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிடிவாதமாக இல்லாமல் எப்போதும் மாற்று தரப்புடன் உரையாடலில் ஈடுபட தயாராக இருந்த ஜனநாயகவாதியை இந்த கடிதங்களில் காண்கிறோம். “I cannot advise you because the responsibility is yours and you have to judge finally”, “,”I would like you to give some thought in your province also to the question of the reorganization of the government machinery with a view to seeing whether it is functioning at the maximum possible level of efficiency,” போன்ற வரிகள் இந்தக் கடிதங்களில் அடிக்கடி வருவது, கூட்டாட்சி முறையில் அவருக்கிருந்த நம்பிக்கையை உணர்த்துகிறது. தரையில் கால் பதித்தபடி வானத்தை தொடும் கனவில் -இரண்டிற்கும் உள்ள முரண்பாடை எப்போதும் சமன் செய்தபடி – உள்ளவரும் இந்த கடிதங்களில் இருக்கிறார் . திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதங்களை, தடங்கல்களை எதிர்கொண்டு பல்வேறு பிரிவினைகளால் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் தேசத்தை பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயக வளர்ச்சிக்கும் இட்டுச் செல்ல முயன்ற ஒரு தலைவர் இக்கடிதங்கள் மூலம் நமக்குத் தெரிகிறார். அனைத்தையும் விட, “I have supreme faith in India, a faith which transcends even an accumulation of faults and futilities on our part” என்ற ஒரு கடிதத்தில் குறிப்பிடும், எந்தச் சூழலிலும் மேம்பட்ட இந்தியா குறித்த தன் கனவை, நம்பிக்கையை இழக்காத ஒருவர்தான் நூல் முழுதும் உள்ளார்.

  1. To the Brink and Back – Jairam Ramesh

1991ல் தாராளமயமாக்கத்தின் முதல் அடிகளை நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது தொழில்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டி மற்றும் , MoS ரங்கராஜன் குமாரமங்கலத்துடனான அது குறித்த பேச்சுவார்த்தைகளில் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். மன்மோகன் சிங் குமாரமங்கலத்தை சந்தித்து அவர் தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு நாட்டின் நலனிற்கான மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டிருப்பார் என்று விளக்குகிறார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வரும் குமாரமங்கலம் ‘Yaar, Sardar ne kamaal kar diya‘ என்று ரமேஷிடம் சொல்கிறார். உரையாடல் அடுத்து சுமூக முடிவை எட்டுகிறது என்பது நமக்கு புரிகிறது. மன்மோகன் சிங் குறித்து இப்போது பொது புத்தியில் படிந்திருக்கும் எண்ணத்திற்கு நேர்மாறான நிகழ்ச்சி இது.

80களின் ஆரம்பத்தில் தாராளமயமாக்கம் குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஆரம்பித்து, 91ம் பெரும் கொந்தளிப்பான சூழலில் அது அமலுக்கு கொண்டு வரப்பட்டதை இத்தகைய திரைக்கு பின்னால் நடந்த விஷயங்களோடு ரமேஷ் சொல்கிறார்.

நாம் காணும் நரசிம்ம ராவ், சிங் மற்றும் ரமேஷ் போல இயல்பாகவே தாராளமயமாக்கம் குறித்த நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் அல்ல, சூழ்நிலையால் அதை நோக்கி தள்ளப்பட்டவர். கட்சியிலேயே அதற்கு பலத்த எதிர்ப்பை சந்தித்தவர். இந்த பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, தாராளமயமாக்கம் அமல்படுத்துவதில் சிங் போன்றவர்களின் திட சித்தத்தை விட ராவ் உறுதியாக இருந்ததே பெரிய விஷயமாக இப்போது தோன்றுகிறது. ஆனால் ரமேஷ் அதை உணர்ந்து போல் தெரியவில்லை அல்லது அதை ஒப்புக்கொள்ளவில்லை. ராவ் சமரசம் செய்ய நேரும் போதெல்லாம் அதை அவரின் தனிப்பட்ட தோல்வியாக சித்தரிக்கிறார். ஆனால் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் நரசிம்ம ராவை தள்ள காங்கிரஸ் செய்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெற்று விட்ட நிலையில் அவருக்கான இடத்தை இந்த நூலில் ரமேஷ் அளிப்பது வரவேற்க்கத்தக்கது.

  1. The Complete Adventures of Feluda – Volume 1&2 – Satyajith Ray

சிறார், வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்ட துப்பறியும் கதைகள் என்றாலும், குற்றங்களின் முடிச்சுக்களை கட்டமைப்பதும், வாசகனை ஏமாற்றாமல் போலி துப்புக்களோடு புதிருக்கான விடையையும் அவன் முன் வைப்பதும், இறுதியில் நுட்பமாக  முடிச்சவிழும்போது அவனை – கண் முன் இருந்த விடையை கவனிக்காமல் இருந்ததற்காக – வியப்படைய செய்வதும் இவற்றை பெரியவர்களுக்கான கதைகளாகவும் ஆக்குகின்றன. டார்ஜிலீங்கின் பனிப்பொழிவும், எப்போதும் மெல்லிய மழை பெய்து கொண்டிருக்கும் திபெத்தும், காசியின் கங்கைக்கரை சித்திரங்களும், ராஜஸ்தானின் ஒளி வீசும் மணற்பரப்பும், வட இந்திய பழங்கால கோட்டைகளும் உருவாக்கும் விரிவான நிலவியலை பெரும்பாலான குற்றப்புனைவுகளில் காண இயலாது. எனினும்  இந்தக் கதைகளுக்கான உத்தேச வாசகப்பரப்பு சிறார், வளரிளம் பருவத்தினர் என்பதால், இவற்றை ‘தூய்மையாக’ – ஆண்-பெண் உறவுப் பிறழல்கள், ரத்த விரயம், அதீத வன்முறை போன்ற குற்றப்புனைவின் சம்பிரதாய அம்சங்கள்  இல்லாதிருப்பது – வைத்திருக்கிறார் ரே. குறிப்பாக முதல் தொகுதியில் பெண்களே இல்லை என்று சொல்லலாம்.

இந்த தூய்மையின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதென்றால், இரண்டாம் தொகுதியின் ஒரு கதையில் ‘அழகாக இருந்தார்’ என்று ஒரு பெண்ணை பற்றிய ஒற்றை வரி வர்ணனை வாசகனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும். இது குறித்து தன் முன்னுரையில் குறிப்பிடும் அவர், பெரியவர்கள் இவற்றைப் படிக்கும்போது இவற்றின் வாசகப் பரப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.

  1. அசோகமித்திரன் கதைகள் மறுவாசிப்பு –

மொத்தமாக இல்லாமல், குறிப்பாக இவற்றை படிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல் வாசிக்கப்பட்ட கதைகள். தனது சானட் ஒன்றில் ஷேக்ஸ்பியர் ஒரே அகத்தூண்டுதலைப் பற்றி ஏன் பாடுகிறேன் என்ற கேள்வியை எழுப்பி

“For as the sun is daily new and old,
So is my love still telling what is told”

என்று முடிக்கிறார். ஒவ்வொரு நாளும் சூரியனை புதிதாக பார்ப்பது போல், ஒவ்வொரு மறுவாசிப்பிலும் ஏதேனும் புதிதாக பெற்றுக் கொள்ள இந்தக் கதைகளில் உள்ளது.

அசோகமித்திரனின் ‘துரோகங்கள்’

ஆர்.அஜய்

18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன்     செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம்.  பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட   அ.மியின் பாத்திரங்களில்  (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன்  மாறுபட்டிருக்கிறார்.

பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி  ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு  வீட்டிற்கு வரக்கூடாது என்றும்  நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு  இந்த  தைரியம் எப்படி வந்தது என்பதற்கு  எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான  சூழலோ  கதையின் போக்கில்    இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும்  பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.

ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள்  வாசகனுக்கு ஆசுவாசமளிக்க  வேண்டும் என்று திணிக்கப்படவில்லை.  உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன்  பின்னால்  அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.

சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம்  மெட்ராஸ் வருகிறது.   அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல,  அவன் அவர்களைத்  துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்;  சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை  நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார்.   ‘அவனுடைய  பெற்றோர் முகம் கூட  மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில்  முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக  பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில்  பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.

நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த  வயதான பெண்ணொருவர்  அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு  ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு   செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை  உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும்  இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத  காலத்தின் பிணைப்பில்  இருந்து  நீலகண்டனும் தப்பவில்லை   என்று  மீண்டும் புரிகிறது.  அவர்  பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.

நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும்,  நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது  வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து  எழும்  கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும்  என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.

 ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை.  ‘எனக்கு உன்னோட  ஆன கல்யாணம்தான்டா’ என்று  ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப்  பற்றி  பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர்  அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான  இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய  அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.    அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும்    மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான  ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால்  – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும்  தேவைப்படுவதும் இல்லை என்பதால் –  ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது  எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது.  ஒரு சில மேலதிக  தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள்  மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக்   கூடும்.

நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க,  ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு  என்ற விமர்சனம்  எழலாம்  ஆனால் ,  ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன்  லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின்  நீட்சியாகவும்  ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’  என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல.  ‘இனி வேண்டியதில்லை’ கதையும்  சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.

ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு,  அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை   வைத்து அவர்  கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து  ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே.  நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை,  ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான்  இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று  சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே   முடித்து விடுகிறார்.   1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல்  இங்கும்  ரஞ்சனி  நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில்  ஏற்படுகின்றன  என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).

சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில்  ஒரு அதிர்வை அளித்து  – தான்   யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால்  அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும்  – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன்  முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது  எடுக்கும் முடிவையும்  ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன்  ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு  இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம்  மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.

The Lie – T C Boyle

ஆர். அஜய்

காலையில் விழிப்பு தட்டியதும் வேலைக்குச் செல்ல வேண்டுமே/ வேண்டுமா என்று சலிப்புறாதவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல், சொந்த வாகனத்தில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் நில்லாமல் பயணத்தை இலக்கின்றி நீட்டிக்க வேண்டும் என்று ஒரு சில முறையேனும் எண்ணாதவர்களும் குறைவாகவே இருப்பார்கள், குறிப்பாக ‘திங்கட்கிழமை மனச்சோர்வு’ (Monday Morning Blues) பீடிக்காத ஆட்கள் அரிதுதான். சில நாள் அந்த உந்துதலுக்கு தலைவணங்கி ஏதோ காரணத்தைச் சொல்லி விடுப்பெடுத்துவிட்டு அடுத்த நாள் சற்றே குற்ற உணர்வோடு அலுவலகத்திற்குச் செல்வதும் வழக்காக நடக்கும் ஒன்றுதான்.

All the wrecks I’ve crawled out of’ என்ற டி.ஸி போயலின் (T.C. Boyle) சிறுகதையின் தலைப்பை, சுமூகமாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளிக்கும் வாழ்வை, அதில் உள்ள சிறிய சிக்கலை பெரிதாக்கியோ அல்லது தேவையில்லாத புதிய இக்கட்டை உருவாக்கியோ, சிதைக்கும் போயலின் புனைவுலகின் மற்றப் பாத்திரங்களுக்கும் பொருத்தலாம். ‘The Lie‘ கதையின் கதைசொல்லி அதன் ஒரு வகைமாதிரி.

அலாரத்தின் சத்தத்தில் கதைசொல்லி துயில் கலையும்போது அவரின் சிறு குழந்தை அத்துடன் சேர்ந்து அலற ஆரம்பிக்கிறது. நண்பர்களுடனான முந்தைய இரவு விருந்தின் தாக்கத்தை உடலில் உணர்கிறார். விடுப்பு எடுக்கலாமென்றால் அனைத்து விடுப்பையும் உபயோகித்தாயிற்று. எனவே நம் கதைசொல்லி தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அன்று வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்.

அன்றாட வேலை நாள் ஒன்றில் திடீர் விடுப்பு எடுத்துக்கொண்டு, பரபரப்பாக மற்றவர்கள் வேலைக்குச் செல்ல, எந்த அவசரமும் இல்லாமல் அன்றைய பொழுதைக் கழிப்பதில் உள்ள சுகத்தை போயல் கதைசொல்லியின் அன்றைய செயல்கள் மூலம் போயல் உணர்த்துகிறார். நிதானமான காலை உணவு, மெல்லிய மழையில் தெருக்களில் சுற்றும் இலக்கற்ற பயணம், மது விடுதியில் திட்டமான பீர் அருந்துதல், ஒரு திரைப்படம், பின் மாலை வீடு திரும்பல் என மிக எளிய – பெரும்பாலும் தொலைத்து விட்ட – செயல்களின் ருசியை கதைசொல்லி மட்டுமல்ல வாசகனும் உணர்கிறான்.

தேவையில்லாத கடினமான பொய் என்றாலும் இத்துடன் அது முடிந்து, கதைசொல்லி அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் போயலின் பாத்திரங்கள்தான் தன்னழிப்பை (self destruction) பெரிதும் விரும்புகிறவர்கள் ஆயிற்றே. முந்தைய நாளின் ருசி, புலி வாலைப் பிடித்தக் கதையாக மாற, அடுத்த நாளும் விடுப்பு எடுக்க முடிவு செய்கிறார் கதைசொல்லி. அதையும் கூட அவர் சமாளித்திருக்கக் கூடும், ஆனால் அதற்காக சொல்லும் காரணத்தில்தான் தன்னழிப்பில் இறங்குகிறார். தன் குழந்தை இறந்து விட்டதாக சொல்லிவிடும் அவர் அந்த நாளையும் இலக்கற்ற சுற்றல், திரைப்படம் என்று கழிக்கிறார்.

அந்த வார இறுதிக்குப் பின் திங்களன்று அலுவலகம் செல்லும் அவர், அங்கு சக ஊழியர்களின் அனுதாபத்தை ஏற்றுக்கொள்வதோடு, அவர்கள் பரிவோடு தரும் உணவுப் பொருட்களையும், அனைவரின் பங்களிப்பில் தரும் பண முடிப்பையும் – உள்ளுக்குள் குறுகியபடி – ஏற்றுக்கொள்கிறார். போயலின் எழுத்தின் முக்கிய அம்சமான, இருண்மையான அபத்தத்தின் வெளிப்பாடு இங்கு நிகழ்கிறது. அடுத்த நாள் மீண்டும் பொய். இறந்த குழந்தையை அடக்கம் செய்யவேண்டுமல்லவா, எனவே அதற்காக மீண்டும் விடுப்பு. இந்த சேதத்திலிருந்து (wreck) அவர் மீண்டு வருவாரா, அவர் செய்துள்ளதை மனைவி அறியவரும்போது குடும்ப வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்விகள் எழ, அவற்றின் பதில்களின் தொடக்கக் புள்ளியில் கதை முடிந்து, வாசகனை மேற்கொண்டு யூகிக்க வைக்கிறது.

நம் கதைசொல்லி இருத்தலியல் சிக்கலில் இருப்பவரோ, அல்லது இசை, இலக்கியம், ஓவியம் என வேறு துறைகளில் ஆர்வம் இருந்து பிடிக்காத வேலையில் சிக்கி அதனால் தன்னிலை இழந்து நடந்து கொள்பவரோ அல்ல. அவரளவில் அத்தகைய நியாயங்கள் எதுவும் இல்லாத நிலையில் வெறும் பொறுப்பற்ற ஆசாமி என்று அவரை பற்றி முடிவுக்கு வருவது எளிது. எனில் பின் எந்த விதத்தில் இந்தக் கதையும், அதன் கதைசொல்லியியும் வாசகனுக்கு அணுக்கமானவர்களாக தெரிகிறார்கள்? கதைசொல்லி முதல் நாள் பொய் சொல்லியபின் மனஎழுச்சியும், குதூகலமும் கொண்டாலும் சிறிது நேரம் கழித்து, குற்ற உணர்வும், பயமும் அவருள் துளித்துளியாக இறங்க ஆரம்பிக்கின்றன. அன்றைய பொழுதை சாவகாசமாக கழிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவை அவருகிலேயே இருக்கின்றன. அடுத்த நாள் வியாழன் என்பதால், இன்னும் இரு நாட்களை மட்டும் ஓட்டி விட்டால், பிறகு வார இறுதி, பின் அடுத்த வார ஆரம்பத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்று தன்னையே நம்ப வைக்க, ஏமாற்றிக்கொள்ளும் விதத்தில் அவர் மீண்டும் விடுப்பு எடுப்பதில் துயரம் மட்டுமல்ல, நாம் செய்திருக்கும் இத்தகைய சுய ஏமாற்றுக்கள் குறித்த சுட்டுதலும் உள்ளது. குழந்தையை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் விடுப்பு எடுக்கும் நாளில், கொஞ்சமும் உற்சாகமும் இல்லாமல், எதுவும் செய்யத் தோன்றாமல், வெளியே செல்லாமல் நாள் முழுதையும் வீட்டிலேயே கழிப்பதில் உள்ள வெறுமையை வாசகன் எப்போதேனும் உணர்ந்திருப்பான்.

முடிவற்ற ஆழமும் பத்தி விரித்து நிற்கும் அரச நாகமும் நம்முள் உருவாக்கும் அச்சத்தையும் பார்வையை விலக்க இயலாத வசீகரத்தையும் கதைசொல்லியின் வீழ்ச்சியிலும் நாம் உணர்கிறோம். இது மனக்கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் எச்சரிக்கைக் கதை அல்ல. நம்மைக் குறித்து, நம் மனம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லைகளின் பலவீனம் குறித்து உணர்த்துவதால், கதைசொல்லியின் செயல்கள் குறித்த ஒவ்வாமை முதலில் தோன்றக் கூடுமென்றாலும் அவர் மீது அவனுக்கு ஒரு கரிசனம் இருக்கவே செய்கிறது. அவரை மனதளவில் தன் சகபயணியாக மட்டுமல்ல, அவரைப் போல் தானும் ஒரு நெகிழ்வான தருணத்தில் நடந்து கொள்ளக்கூடும் என்றும் அவருடன் தன்னை வாசகன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். மனவுணர்வின் மேல் தளத்தில் ஒழுக்கவாதியாக, சமூகத்தின் மாதிரி குடிமகனாக இருந்து, அதன் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழ்க்கையை நடத்தினாலும், அதன் அடி ஆழத்திலேனும், சிறிதளவாவது தளைகளை உடைக்க விரும்பாத, எல்லைகளை மீற விரும்பாத, தடை செய்யப்படுள்ளதின் ருசியை அறிய விரும்பாதவர் எவர் உளர்?

..

ஒளிப்பட உதவி – @tcboyle