அஜய். ஆர்

நடை பிணங்களும் நாகரீகக் கோமாளியும் – அஜய் ஆர்

அஜய் ஆர்

svejk_01

எங்கு, எப்போது போர் நடந்தாலும், யுத்தம் சில வருடங்கள் நீடிக்கும் நிலையில், ஒரு  கட்டத்தில் இராணுவத்தில் பணியாற்றுபவர்களோடு கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்தவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் (ஒரு 40 வயது வரை) என பலதரப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.  யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு பயிற்சியும் அதிகம் அளிக்கப்பபடுவதில்லை, குறிப்பாக மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வதில்லை. போரின் பயங்கரத்திற்கு ஒருவரை பயிற்சியால் மன ரீதியாக முற்றிலும் தயார் செய்து விட முடியாது என்பது உண்மை. இருந்தும் அப்போதைய அவசரத்தில் அத்தியாவசிய பயிற்சியைத் தாண்டி எந்த புரிதலையும் அளிக்காமல் மந்தை மந்தையாக அவர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர். இவர்கள் எந்தத் தரப்பாக இருந்தாலும், தங்கள் தரப்பில்  போர் உயர்ந்த விழுமியங்களுக்காக நடத்தப்படுகிறது, அதற்காக பலியாவது பெரும் பேறு என்ற எளிய மனநிலைக்கு தள்ளப்பட்ட சூழலில் போரை எதிர்கொள்கிறார்கள்.  அங்கு அவர்கள் மயக்கங்கள் கலைகின்றன.

இப்படி  தேசியம், அறம் போன்ற விழுமியங்களினால் ஈர்க்கப்பட்டு இராணுவத்தில் சேர்ந்து/ சேர்க்கப்பட்டு, போரின் உண்மை முகத்தை, மனிதத்தின் மரணத்தைப்  பார்த்து சிறிது சிறிதாக உள்ளம் சிதையும்,   ‘All Quiet on the Western Front’  நாவலின்   மைய பாத்திரமான பால் (Paul Bäumer) முதல் போருக்குப் பின்னான வாழ்க்கையைப் பேசும் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘Redeployment’ வரை இத்தகைய பல பாத்திரங்கள் (பெரும்பாலும் 20களில், 30களின் ஆரம்பத்தில் உள்ள இளைஞர்கள்)   உள்ளன.  இவற்றின் இறுக்கமான தொனிக்கு நேர்மாறாக, தங்களை பிறழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளும் நிகழ்வுகளை அவல நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் பாத்திரங்கள் (யோஸாரியன்/ Yossarian), மூலம் ர் குறித்த விமர்சனங்களை முன்வைக்கும்   Catch-22 போன்ற நாவல்களும் உள்ளன.

நாவலின் கட்டமைப்பிலும், பாத்திரங்கள் போருக்கு எதிர்வினை புரியும் விதத்திலும்  பெரும் வேறுபாடு இருந்தாலும், பாலும் சரி, யோஸாரியனும் சரி தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் நடைபிணமாக மாறி  தங்கள் நாட்களை கடத்தும் இடத்தில் ஒன்றிணைகிறார்கள்.  Czech மொழியின் நவீன இலக்கியத்தின் மைல்கல் என்று போற்றப்படும், முதல் உலகப் போரின் பின்னணியில், போர் விமர்சன புனைவுகளின் மிக ஆரம்ப கட்டத்தில் ஹசேகால்  (Jaroslav Hašek)  எழுதப்பட்டதுமான  ,-  நான்கு தொகுதிகள் கொண்ட, முற்று பெறாத – ‘The Good Soldier Švejk’ நாவலின் மைய பாத்திரம்   சிப்பாய்  ஷ்வேக் (Švejk) இவர்களிடமிருந்து மாறுபடுகிறான்.

போர் குறித்த அறம் சார்ந்த கற்பிதங்கள்  எதுவும் அவனுக்கு கிடையாது. அதே போல், தன்னிலை குறித்து வருந்தி சித்தம் குலைபவனும் இல்லை அவன்.  போரில் ஈடுபடுவதை/ஈடுபடுத்தப்படுவதைத்    தவிர்க்க வேண்டும் அவன்  லட்சியம். 700 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்நாவல் முழுதும் அவன் செய்வதும் அதையே.  ஆனால் அதற்காக, நடைபிணமாக மாறாமல், தன் மேல் திணிக்கப்பட்ட போரில் உயிரையும்/ சித்தத்தையும் இழக்காமல் இருக்க, போர்க்களத்தையே  நாடக அரங்காக மாற்றி அதில் நாகரீகக் கோமாளியைப் போல் தன் கூத்தை நிகழ்த்துகிறான். ஆனால்  அவன்  மகிழ்விக்க நினைப்பது தன் மேலதிகாரிகளை அல்ல என்பதை  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நாவலின் ஒரு  சம்பவம் மூலம் உணரலாம்.  ஷ்வேக்  ஒரு இடைவெளிக்குப் பிறகு தனது மேலதிகாரியைப் சந்திக்கிறான். மேலதிகாரி அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்து விழிகளை மூடி,  செயலற்றுப் போகிறார். முன்பு ஷ்வேக் போர்க்களத்தில் அவர் உயிரைக் காப்பாற்றியதை எண்ணுகிறாரா, இருவருக்குமிடையில் நெருங்கிய நட்புள்ளதா என்றெல்லாம் யோசிக்க  ஒன்றுமில்லை. காசிக்கு சென்றும் பாவம் தொலையாத கதையாக, ஒரு வழியாகத் தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த தன் பணியாளன் மீண்டும் வந்ததைக் கண்டு ஏற்பட்ட  பீதியும், அதிர்ச்சியும்  மட்டுமே அவருடைய அத்தகைய எதிர்வினைக்கான காரணம்.

அப்பாவியாகத் தோற்றமளிக்கும் முகத்தில், கனிவு ததும்பும் விழிகளுடன் இருப்பது  அவன் அணிந்திருக்கும் முகமூடியா அல்லது அவனது குணாதிசயமே முட்டாள்தனமாக நடந்து கொள்வதா என உறுதியாக சொல்லமுடியாத அவன் மேலதிகாரிகள் அவனை பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதென்று தாண்டிச் செல்லவும் முடியாமல், இறுதியில் அவனிடமிருந்து அவர்களே தப்பிச் செல்ல முயல்கிறார்கள்.  கீழே உள்ள இரு சித்திரங்கள் அதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

svejk

svejk

சிப்பாய் என்றில்லை, எந்தவொரு  பணியாளனும் தன் மேலதிகாரி இப்படித்தான் தன்னிடம்  எதிர்வினை புரிய வேண்டும் என விரும்பக் கூடியதை நிகழ்த்திக் காட்டும் பாத்திரமாக  ஷ்வேக் இருப்பது மற்ற ‘போர் விமர்சன’ நாவல்களின்  முக்கியப் பாத்திரங்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.  இன்னொரு வேறுபாடும் முக்கியமானது.   பாலும் சரி, யோஸாரியனும் சரி போரினால் தான் இத்தகைய  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், அமைதி நிலவும் ஒரு குடிமைச் சமூகத்தில் அவர்கள், தங்கள் சூழலுடன் பொருந்தியுள்ள பொறுப்பான  குடிமகன்களாக இருந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும், அது நிகழவில்லையே என்ற ஏக்கமும் வாசகனுக்குள் தோன்றுகிறது. ஆனால்  ஷ்வேக் குறித்து அப்படி எந்த கற்பிதங்களும் நமக்கு ஏற்படுவதில்லை. எந்த சூழலிலும் அவன் எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாத, அச்சூழலின் சமநிலையைக் குலைக்கும்  அராஜகவாதியாகவே (anarchist)  இருந்திருப்பான் என்றே நாவலின் போக்கிலிருந்து உணர முடிகிறது. கட்டற்ற வாழ்கை வாழ்ந்த நாவலின் ஆசிரியர்  ஹசேகின் ஆளுமை இப்பாத்திரத்தில் தெரிகிறது.

1921ல் எழுத ஆரம்பிக்கப்பட்டு 1923ல் ஹசேகின் மரணத்தால் முற்று பெறாத இந்நாவலின் தாக்கத்தை Catch-22ல் காண முடிகிறது. ஹெல்லரும் இந்நாவலே தன்னை Catch-22 எழுத தூண்டியதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது.   போர்க்கால இராணுவ  தந்திரங்கள் குறித்து அதிகம் தெரிந்திருக்காமல், தன் கீழ் பணியாற்றும் வீரர்கள் குறித்து எந்த கவலையும் கொள்ளாமல், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவ்வீரர்களை களப்பலியாக கொடுக்கும் தளபதிகள்/ மேலதிகாரிகள், இராணுவ முகாம்களில் உள்ள  உணவகத்தில்/ உணவுப் பொருட்கள் காப்பகத்தில் நடக்கும் ஊழல்கள், அதீத ஆர்வத்தில் உள்ள சில இளம் சிப்பாய்கள், எங்கும் பரவியுள்ள அபத்தச் சூழல் என இரண்டு நாவல்களுக்கும் பொது அம்சங்கள் நிறைய உண்டென்றாலும் அவை வேறுபடும் இடங்களிலேயே முக்கியத்துவமும், தனித்துவமும் பெறுகின்றன.

 ‘All Quiet on the Western Front’ம், ‘Catch-22’ம் அதன் முக்கியப் பாத்திரங்களின் இருத்தலியல் சிக்கல்களை முன்வைத்தே போர் குறித்த எதிர்மறை  கருத்துக்கள் சுட்டப்படுகின்றன. போரின் புவி அரசியல் (geopolitics) சூழல் போன்றவை சுட்டப்படுவதில்லை.

எந்த இருத்தலியல் சிக்கல்களும் இல்லாத  ஷ்வேக்கின் விமர்சனத்தில் இருந்து  யாரும் தப்புவதில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய  எந்தத் தகுதியும் இல்லாத, வாய் ஜாலத்தை மட்டுமே நம்பும் இராணுவ உயரதிகாரிகள் குறித்த மிக மோசமான சித்தரிப்பே நாவல் முழுதும் உள்ளது. போதையின் பிடியில் உள்ள அதிகாரி ஒருவரின் சித்திரத்தில் சீருடையில் குத்தப்பட்டுள்ள பல பதக்கங்களுக்குக்ம் , முறுக்கிய மீசைக்கும் முற்றிலும் முரண்பாடாக உள்ள அவரது நிலை, இராணுவத்தின் ஆடை/உடல் பாராமரிப்பு சார்ந்த கட்டுப்பாடுகளை பகடி செய்வதாகவும் உள்ளது.

svejk

ஜெர்மானியர்கள், செர்பியர்கள், ஆஸ்திரியர்கள், ஹங்கேரியர்கள், இவர்களோடு  தன் சொந்த நாட்டு மக்களும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சச்சரவுகளை, ஒரு இனத்தவர் மேட்டிமைத்தன்மையோடு மற்ற நாட்டினர்  குறித்து கொண்டுள்ள (தவறான) இழிவான அபிப்ராயங்களை   நுட்பமான பகடிகளாக நாவலில் சுட்டிச் செல்கிறார் . பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து, புதிய அரசுகள் உருவான முதல் உலகப்  போரின் பின்னணியில் பார்க்கும் போது,  இப்பகடிகள் முக்கியத்துவம் – ஒரு நாடு ஏன் ஒரு குறிப்பிட்ட தரப்பை எடுத்தது என்பதை புரிந்து கொள்ள – பெறுகின்றன.  போரை தீரச்செயலாக பார்க்கும், வீரர்களுக்கு உணவு முதலிய உதவிகளை வழங்கும் முதிய சீமாட்டிகளும் – முதிய சீமாட்டி ஒருவரை விலை மகள் என்று எண்ணி சிப்பாய் ஒருவன் அதிருப்தி கொள்கிறான் -, ஆஸ்திரிய அரசரும் கூட    பகடி செய்யப்படுகிறார்கள்.  20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட, அரசர் கடவுளின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டு, அவரது அதிகாரம் தெய்வத்தின் மூலம் அளிக்கப்பட்டதாக (Divine Right) கருதப்பட்ட/ ஏற்றுக்கொள்ளப்பட்ட  -மக்களாட்சி என்ற கருத்தாக்கம்  இன்னும் பலமாக வேரூன்றாத – காலத்தில், இது ஒரு முக்கியமான கலகக் குரல்.

கிருத்துவ மதமும் இவரிடம் சிக்குகிறது. வீரர்களின் மரணம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களை (மரணத்திற்காக) வாழ்த்தி,வழியனுப்பும் போதகர்கள், சொகுசான வாழ்வை  அனுபவிக்கும்,  நடைமுறை யதார்த்தம் குறித்து கொஞ்சமும் அறிந்திராதவர்களாக, சூதாடிகளாக, குடிகாரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

கட்டற்ற பித்து நிலையில் இயங்கும் நாவலென்றாலும்,  அப்பித்து நிலையின் உருவாக்கத்தின் பின்னால்  ஒரு முறைமை Catch-22ல் உள்ளது. சித்தம் பேதலித்த நிலை என்ற ஒரே விஷயத்தை நாவல் முழுதும் நுட்பமான வேறுபாடுகளுடன் முன்வைக்கும் ஹெல்லர்

நாவலின் விரவியுள்ள அபத்தத்தின் கீழுள்ள துயரத்தை/ கூர்மையான விமர்சனத்தை வாசகன் உணரச்செய்கிறார் .  “Frankly, I’d like to see the government get out of war altogether and leave the whole field to private industry.” என்று  அந்நாவலின்  மிலோ (Milo Minderbinder)   கூறுவது அபத்தமாக தோன்றினாலும், போர் வர்த்தகமாக மாறுவதை சுட்டுகிறது. இன்று Blackwater போன்ற நிறுவனங்கள் சட்டத்தை நீங்கள் சரி செய்து கொடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போர்த்தொழிலில் இறங்கிவிட்டன . “You’re inches away from death every time you go on a mission. How much older can you be at your age?” என்று கூறப்படும் தர்க்கத்தில் உண்மையும், அபத்தமும், துயரும்  ஒரு சேர தெரிகின்றன அல்லவா.

‘The Good Soldier Švejk’ நாவலில் மிகப் பெரிய பலமான, ‘ஷ்வேக்கின்’ யாரையும்/ எதையும் துச்சமென கருதும் போக்கே  (irreverent anarchy),  அதே அலட்சியம் நாவலின் கட்டமைப்பிலும் தெரியும் போது அதன் பலவீனமாகவும் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.     தன் மேலதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் ஷ்வேக், அதிலிருந்து தப்பிக்க கடந்த காலத்தில் நடந்ததாக சொல்லி ஒரு நிகழ்வை/ கதையை விவரிக்கிறான். அக்கதையில் குழம்பி மேலதிகாரிகள், விட்டால் போதும் என்று  ஷ்வேக்கை தண்டிப்பதில்லை. ஷ்வேக்கின் தந்திரத்தை உணர்த்தும் இவ்வுத்தி ஓரிருமுறை  சுவாரஸ்யமாக இருந்தாலும், தொடர்ந்து பல முறை எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாணியில் விவரிக்கப்படுவது, சலிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எல்லாவற்றையும் கலைத்துப்  போடும் ஹசேக், அவற்றினுள் பொதிந்திருக்கும் இன்னொரு அடுக்கை வாசகனுக்கு சுட்டுவதில் கவனம் கொள்வதில்லை. ஒன்றைக் கலைத்துப் போட்டபின், அடுத்த கலகத்திற்கு தயாராகி விடுகிறார். யுத்த களத்திற்கு ரயிலில் செல்லும் ஒரு சிப்பாய் தவறி, ரயில் நிலையத்தில் உள்ள  கூர்முனைகள் கொண்ட கம்பிகளில் விழுந்து இறக்கிறான். கோர மரணம்.  அவன் சடலத்தை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்க, ஒரு சிப்பாய் மிகுந்த கடமை உணர்ச்சியோடு அதைக் காவல் காக்கிறான்.  நாவலின் போக்கில், இச்சம்பவத்தில் உள்ள அபத்தத்தை உணரும் வாசகன், அதில் பொதிந்துள்ள    துயரை – இத்தகைய பல நிகழ்வுகள்  நாவலில் உள்ளன –  உள்வாங்குவதற்குள், அடுத்த அபத்த நிகழ்வு அவனுக்காக காத்திருக்கிறது.

Catch-22வைப் போலவே இந்நாவலிலும்  கேலிச் சித்திரமாக  (caricature) தோற்றமளிக்கும் -எப்போதும் தீராப் பசியில் இருக்கும், மேலதிகாரிகளின் உணவைக் கூட உண்டு விடும்  சிப்பாய், அமானுஷ்யத்தில்  ஈடுபாடுள்ள சமையல்காரர்  (occultist), அவரின் தத்துவங்கள்  (Form is non-being and non-being is form) – பாத்திரங்கள் இருந்தாலும், இவர்கள், அந்நாவலின் பாத்திரங்கள் போல் உயிர் கொள்வதில்லை.

நாவலின் விரவி இருக்கும் அலட்சிய பாவம் மற்றும் இத்தகைய பாத்திர வார்ப்புக்கள் நாவலுக்கு சித்திரக்கதையின் (comics) தோற்றத்தைத்   தருவதால்,  ஒரு கட்டத்தில் ‘Catch-22’ஐ விட   ‘Sad Sack’ சித்திரத் தொடர், இந்நாவலுக்கு  நெருக்கமாக உள்ளதோ என  வாசகன் எண்ண  ஆரம்பிக்கிறான்.

இது இரு நாவல்களுக்குமிடையே தரம் குறித்த ஒப்பீடு அல்ல, அதை இப்படி எளிமைப்படுத்தவும் இயலாது.  ஒரு பிரதியின் தாக்கத்தால் எழுதப்பட்ட மற்றொன்று தன் தனித்தன்மையை  எப்படி தகவமைத்துக் கொண்டு , சில இடங்களின் தன் மூல உந்துதலையே தாண்டிச் செல்கிறது, அதே நேரம் மூலப் பிரதி எப்படி/ எதனால் தன் முக்கியத்துவத்தை/ தனித்தன்மையை இழக்காமல் உள்ளது  என்பதற்கான உதாரணமாக ‘The Good Soldier Švejk’/ ‘Catch-22’ நாவல்களைப் பார்க்கலாம்.

‘All Quiet on the Western Front’  நாவலின் இறுதியில் பால் இறக்கிறான். ‘Catch-22’ நாவலின் இறுதியில் யோஸாரியன் தப்பிச் சென்றாலும், அவனுடைய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வு குறித்த அச்சம் வாசகனுக்கு ஏற்படுகிறது. அதற்கேற்றார் போல் இந்நாவலின் தொடர்ச்சியான ‘Closing Time’லும் அவன் போர்க்கால பாதிப்பிலிருந்து முற்றிலும் மீளவில்லை என்று தெரிந்து கொள்கிறோம். ‘The Good Soldier Švejk’ நாவல் முற்று பெறாவிட்டாலும்,  போரின் இறுதியில்  ஷ்வேக் எந்த பாதிப்பும் இல்லாமல் மீள்வான் என்பது குறித்து வாசகனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்ல, அவன் வயது காரணமாக இரண்டாம் உலகப் போரில் அவன் ஈடுபட இயலாது என்று தெரிந்தாலும், ஒரு சூழலில் அதிலும் அவன் ஈடுபட நேர்ந்தால், மீண்டும் அப்போர்க்களத்தை நாடக மேடையாக்கி அதில் தன் கூத்தை அவன் அரங்கேற்றி வெற்றி பெறுவான் என்றே வாசகன் நம்புவான். ஒரு சாதாரணன், அரசு எந்திரத்திற்கு எதிராக – வளைவது போல் நடித்து –  வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும்  ஷ்வேக் Czech இலக்கியத்தின் மிகப் பிரபலமான, அம்மக்களுக்கு நெருக்கமான பாத்திரமாக, அவர்களை பிரதிபலிக்கும் ஒருவனாக இன்றும் கருதப்படுவதில்  எந்த வியப்புமில்லை. இப்புனைவுப் பாத்திரங்கள் ஒரு புறமிருக்க, இன்றும் உலகின் பலப்  போர்க்களங்களின் இப்படி நடைபிணங்களாகவோ , நாகரீகக் கோமாளிகளாகவோ எதிர்வினை புரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் நம்  பரிவுக்குரியவர்களே.     

பின்குறிப்பு:

‘The Good Soldier Švejk’ நாவலுக்கு, பல மொழிபெயர்ப்புக்கள் உள்ள நிலையில் ‘Cecil Parrot’ன் மொழிபெயர்ப்பு, எந்த சுருக்குதலும் இல்லாத  மூலப் பிரதிக்கு நெருங்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்நாவலை மொழிபெயர்ப்பதில் அவர் சந்தித்த சவால்கள், அதை அவர் எதிர்கொண்ட விதம், தவிர்க்க இயலாத சமரசங்கள், இவற்றைக்  குறித்து அவர் தன் அறிமுகத்தில் குறிப்பிடுவது மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோர் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நான்கு தொகுதிகளுக்கும் ‘Jospeh Lada’ வரைந்துள்ள சித்திரங்கள், நாவலின் அடிநாதத்தோடு இயைந்து அதற்கு வலுசேர்க்கின்றன.

ஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்

அஜய் ஆர்

பவன்னன்1

வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி,   அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள் கழிந்தபின் பார்த்தால் சோகம் எதுவும் இன்றி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். 

தீ‘ கதையில்,  – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத/ கொள்ள விரும்பாத அலுவலக மேலதிகாரிகளின் போக்கினால்மணமான மூன்று ஆண்டுகளில்  30 நாட்களுக்கும் குறைவாகவே மனைவியுடன் நேரம் செலவிட்டிருக்கும் கதைசொல்லி கொதி நிலையில்  உயரதிகாரியை அடித்து விடுகிறார்.

தன் சோகத்தை சில நிமிடங்களில் மறந்து தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக்கொள்ளும் மீனுவின் குழந்தைமை என்ற  புள்ளியில் இருந்துஅந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு,   ‘முதிர்ந்தவர்கள்‘ என்ற அடையாளம் பெற்றாலும் தன்னிலை இழத்தல் என்ற புள்ளியை அடையும் வரையிலான  காலத்தினூடான பயண அனுபவத்தை  இந்தத் தொகுப்பில் உள்ள – சிறார்கள்/ முதிரா இளைஞர்கள்/ ஆண்கள்  பாத்திரங்கள் வாயிலாக நாமும் அடைகிறோம்.  

கீழ் மத்திய தர/ ஏழை என்ற பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் இந்தக் கதைகளின்  பாத்திரங்கள். பல ஆண்டுகளாக அதே ஊரில் நடைபாதையில் துணி விற்கும் ராமசாமியின் மகன் (முத்து‘ சிறுகதை) முத்து தந்தையின் பாணியிலிருந்து விலகிவேறு இடத்தில்/ வேறு விதமாக  வியாபாரம் செய்ய முயல்கிறான். ராமசாமி அதை முதலில் எதிர்த்தாலும் (மகனை அதற்காக அடிக்கவும் செய்கிறான்),  முத்து தான் கற்பனை செய்திராத அளவிற்கு விற்பனை செய்ததை அறிந்து நெகிழ்ந்துதனக்கு உணவளிக்க வரும் மனைவியிடம் புள்ள சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு?… சம்பாரிச்ச புள்ளக்கி போடாம கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட என்று (செல்லக்)  கோபம் கொஞ்சும் இடத்தில் தகப்பனின் பெருமிதத்தையும்குடும்ப அதிகார அடுக்கில் ஏற்பட்டுள்ள நுட்பமான இடமாற்றத்தையும் உணரலாம்.  முரடனாக முதலில் தோற்றமளிக்கும் ராமசாமி தன் மகன் தன்னைத் தாண்டிச் செல்வதைக் எதிர்கொள்ளும் விதத்தையும் , ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ கதையில் பேரன் தன்னை முந்தி விடுவானோ என்று மனம் கனிந்திருக்கும் வயதில்பேரனின் வெற்றி  தன் சுயத்தை இழக்கச் செய்வதாக உணர்ந்து பதற்றமடையும்  மாணிக்கம் தாத்தாவோடு ஒப்பிட்டு  அவற்றின் இடையே உள்ள வித்தியாசத்திற்கான  காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் ஆராயலாம்.

மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்து பெருமிதம் கொள்ளும் கதைசொல்லி (மையம்‘ ) பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர்மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவுகள் கொண்டவர்.  அவர் வகுப்பில்தினமும் வில்வண்டியில் வந்துநடந்து செல்லும் சிறுவர்/ சிறுமிகளைப் பார்த்து கையசைத்துச் செல்லும்,  

 மாலினியும்  படிக்கிறாள். புத்திசாலி ஏழை மாணவன்பணக்காரப் பெண் என்றவுடன்நட்பு/ காதல் உருவாவது  என்பதெல்லாம் பாவண்ணனின் உலகில் நடப்பது இல்லைஅத்தகைய வழமையான ஆசுவாசங்களை அவர் வாசகனுக்கு அளிப்பதில்லை. உண்மையில்ஒரு சம்பவம் மூலம் கதைசொல்லிக்கு அவள் மீது வெறுப்பே ஏற்படுகிறது. மாலினியின் குறும்பு இதற்கு அடிததளமிட்டாலும்அவர்களுக்கிடையே உள்ள சமூக/ பொருளாதார இடைவெளியும்அதற்கேற்றப்படி ஆசிரியர் அந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதுமே (பெரும் பணக்காரரின்கிராமத்தில் செல்வாக்கானவரின் பெண்என ஆசிரியருக்கும் அதற்கான காரணங்கள் யதார்த்தத்தில் உள்ளன) முக்கிய காரணமாகின்றன.  அவர் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால்இருவரும் ஓரிரு நாட்களில் நடந்ததை மறந்திருப்பார்கள்துளிர் விடுவதற்கு முன்பே ஒரு நட்பு , மாலினியின் 

வண்டிப் பயணத்தில் அவள் கையசைப்புக்கள் பொருட்படுத்தாத பூக்களாய்..” உதிர்ந்திருக்காது.

இந்தப்  பகை  விலகாமல்உச்சகட்டமாகபள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழ் வாங்கச் செல்லும்போதுஅங்கு வரும் மாலினியின் தந்தை பேசும் பொறாமை ததும்பும் சொற்கள் அவர் மனதில் நீங்கா  வடுவாக  தங்கி விடுகின்றன.   

மேலே படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில்கதைசொல்லியின் ஆட்சியர் கனவுகள் கலைகின்றனபெரிய போராட்டத்திற்குப் பின்சிறிய வேலை கிடைத்து தங்கைக்குத் திருமணம்பிறகு தன்னுடைய திருமணம் /குழந்தை என ஒருவாறு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். பெரிய பள்ளியில் சேர்த்த பெருமை நீடித்ததா என்றால்அதுவும் இல்லை. மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது காரில் செல்லும் சக மாணவி மைதிலியை நோக்கி மகன் கையசைப்பதைப் பார்த்தவுடன் , மாலினியின் நினைவு வந்து மனதைக் கீற  கதை முடிகிறது.

முதற் பார்வையில் இது நெகிழ்ச்சியைத் தூண்ட  வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகத் தெரியலாம்ஆனால் யதார்த்தம் இது தான். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கதைசொல்லி தன் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் அடைந்தாலும்மாலினி/ மைதிலி வசிக்கும் சூழலின்வில்வண்டியில்/ காரில் வரும்மையத்தின் விளிம்பில் தான் இருக்கிறார். சக மாணவியைப் பார்த்து  இப்போது உற்சாகமாக கையசைக்கும் கதைசொல்லியின்   மகனும்தந்தையைப் போலவே ஒரு நாள் இருவருக்குமிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை  உணரலாம்உணரலாமலும் போகலாம். கதைசொல்லியின் பேரன் தலைமுறையில் அவர்களும் மையத்திற்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்தாலும்அன்றும் அவரின் வலி முற்றிலும் நீங்காது என்ற உணர்வும் நெருடிக்கொண்டே இருக்கிறது.

பால்யத்தின் நட்பை ‘பட்டம்‘/’சிலுவை‘ கதைகளில் பார்க்கிறோம். ‘பட்டம்’ கதையில் பள்ளியில் பலரால் கேலிக்குள்ளாக்கப்படும் கதைசொல்லியின் ரட்சகனாக வரும் தியாகராஜன் கதைசொல்லியை ஊக்கப்படுத்திதன்னம்பிக்கை கொள்ள வைக்கிறான்.  சராசரி மதிப்பெண் பெற்றே ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டிச் செல்லும்கேலி செய்யப்படும் நேரம் தவிர்த்து பிற சமயங்களில் பிறர் கண்களுக்குத் தென்படாதவனாக உலவும்   கதைசொல்லிக்கும்விளையாட்டில் தன்னையே கரைத்துக் கொள்ளும்அனைவரின் கவனத்தையும் இயல்பாக தன்பக்கம் ஈர்க்கும்  தியாகராஜனுக்கும் நட்பு உண்டாக பெரிய முகாந்திரம் ஒன்றும் இல்லை.  சரி/ தவறு என்று பார்க்காததாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாத பால்யத்தின் நட்பிற்கு அது தேவையும் இல்லை. எனவேதான்தேர்வில் தியாகராஜனுக்கு உதவ முயன்று சிக்கிபிரம்பு முறியுமளவிற்கு கதைசொல்லி அடி வாங்கினாலும்தியாகராஜன் தானே இதற்கு காரணம் என்று கதைசொல்லிக்கு கோபம் வருவதில்லை மாறாக  தன்னால் தான் இருவரும் மாட்டிக்கொண்டோம்  என்று வருந்துகிறான்.  அவர்கள் நட்பில் எந்த விரிசலும் ஏற்படாமல்தேர்வில் கதைசொல்லிதியாகராஜனுக்கு உதவுவதில் வெற்றி பெற்றால்  

பரீட்சை முடிந்தபின் தியாகராஜன் செலவில் திரைப்படம் பார்ப்பதுமற்றும்  உணவு விடுதியில் ‘பிரியாணி‘ உண்பது என்ற தங்களின் முந்தைய முடிவைஇருவரும் மாட்டிக்கொண்டு அடிவாங்கினாலும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நட்பு தொடராமல்தியாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறான். விளையாட்டு மைதானத்தில் கம்பீரமாக வலம் வந்த தியாகராஜனுக்கு தற்கொலை புரிய  தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்குமா அல்லது ஆப்த நண்பனிடம் கூட சொல்ல முடியாத என்ன சிக்கல் இருந்திருக்கும்?

சிலுவை‘ கதையில்சிலுவையின் தொடர்  காதல் தோல்விகள் பற்றிய விவரணைகள் மெல்லிய நகைச்சுவையோடு இருந்தாலும்நிலையற்ற அலைகழிப்பாக உள்ள அவன் வாழ்வில் மாறாத அம்சம் கதைசொல்லிக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தான்.  நல்ல  உத்தியோகம் என்ற புருஷ லட்சணம்  இல்லாததால் இரண்டு வருடங்களுக்குப்  பிறகு மனைவியைத் தயங்கித் தயங்கி  நெருங்கி அவமானப்படுத்தப்பட்டுதற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலுவையை இரவில் பார்த்துக்கொள்ள அனைவரும் தயங்கும் நிலையில் கதைசொல்லி மட்டுமே  முன்வருகிறார். இயலாமையின் குற்றவுணர்வை சொல்லும் ‘கரையும் உருவங்கள்‘ கதையில் … அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு. ஏதாவது ஒன்னு கொறச்சிருக்கேனா?. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா என்று பாசத்தோடு அக்கா சொல்லும்போது உடன் உடைந்து விடும் சங்கரன் மட்டுமல்லமனைவியின் வெறுப்பின் சூடு பட்டுஅவள் தரப்பிலும் நியாயம் இருப்பதை உணர்ந்ததால் அவள் மீது கோபம் கொள்ளாமல்,   காறித் துப்பற மாதிரி கட்டன பொண்டாட்டியே பேசிட்டப்றம்  நா எதுக்கு வாழனும் சொல்லுடா.” என்று கேவும் சிலுவையின் அகம் கூட இயலாமையின் குற்ற உணர்வில் கரைந்து கொண்டே தான் இருக்கிறது. 

தன்னையோ , தன் நண்பனையோ இந்தக் கதைகளில் வாசகன் காணக்கூடுமென்றாலும் சுய அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் கதைகளாக மட்டும் இவற்றை குறுக்கிக் கொள்ள முடியாது.  இந்த நிகழ்வுகள் எதையும் வாசகன் எதிர்கொள்ளவில்லை என்றாலும்இவற்றினூடாக தொக்கி இருக்கும் , ஒரு கட்டத்தில் வாழ்வை   எதிர்கொள்வதில் உருவாகும் இயலாமையின் கணங்களை  அனைவரும் எப்போதேனும் எதிர்கொண்டிருப்போம். 

அந்த வகையில் கதைகளை ஒவ்வொன்றாக உள்வாங்குவதுஅவற்றின் நிகழ்வுகளை/ பாத்திரங்களை விமர்சிப்பது இவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய அம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. ஒரு பொதுப் பார்வையாய்இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில்   வாழ்வின் போக்கில் இந்தப் பாத்திரங்கள் – அவரவர் சூழல் உருவாக்கும் தடைகளின்தொடக்கூடிய எல்லைகளின்,  தோல்விகளின் துயர் – குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வும்/ சகிப்புத்தன்மையும்அந்நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பு உண்டாக்கும் மன நெகிழ்வும் வெளிப்படுகின்றன என்று சொல்லலாம்.

வாசகனை  நெகிழச் செய்யும் விதமாக  திணிக்கப்பட்டவை ( emotional manipulation) என  எதுவும்   இக்கதைகளில் இல்லை.   வாசகனைப் போலவே ஒரு பார்வையாளனாக  இந்தப் பாத்திரங்களோடு பயணிக்கும்  பாவண்ணன் , ஒரு கட்டத்தில் 

முத்து பெரிய வியாபாரியாக உயர்வான்கதைசொல்லியின் மகன் ‘மையத்தை‘ அடைவான்  அல்லது சிலுவையின் வாழ்வு முழுதும் இனி துயரம் தான்போன்றெல்லாம் பாத்திரங்களின் வாழ்வின் அடுத்த கட்ட  பாதையைக்  காட்டாமல்   ‘முடிவு‘ என்று பொதுவாக  வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் கதைகள் முடிக்காமல்பாத்திரங்களுடனான தன்னுடைய  (வாசகனுடைய) பயணத்தை நிறுத்தி விடுகிறார். ஆனால் அப்படிச் செய்வது சடுதியில் முடிந்த உணர்வைத் தராமல்முடிந்து போன ஒரு சிறிய பயணத்தின்  நினைவுகளை அசைபோடச் செய்வதைப் போல்எந்த வலியுறுத்தல்களும் இல்லாமலேயே வாசகனின் உணர்வுகளை தன்னியல்பாகத் திரண்டெழச் செய்கின்றன.  தொடர் மன வாதையில் இந்தப் பாத்திரங்கள்  

இருந்தாலும்முற்றிலும் தோல்வியை/ அவநம்பிக்கையை வலியுறுத்தும் கதைகள் அல்ல இவை. கடற்கரையில் பொங்கி அழும் சிலுவையை பேச விட்டுவிழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தபடி மௌனமாக சிகரெட் பற்றவைக்கும் நண்பனும் , மைதிலியைப் பார்த்து கையசைக்கும் மகனை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும் தந்தையும்நம் பாரங்களைச் சுமக்க உதவும் இன்னொரு தோள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். 

பன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் – Brooklyn novel / Colm Toibin

– அஜய் ஆர். –

Brooklyn-Cover

ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உறவாகும்போது மீண்டும் தாய் நாடு செல்ல வேண்டிய சூழல் அப்பெண்ணிற்கு. அங்கு இன்னொரு (உயர்குடியைச் சேர்ந்த) இளைஞன் அவள்பால் ஈர்க்கப்படுகிறான். அப்பெண் மனத் தடுமாற்றம் கொள்கிறாளா, தன் வாழ்க்கை குறித்து என்ன முடிவெடுக்கிறாள் என்பது கலம் டுபீனின் (Colm Toibin) ‘Brooklyn’ நாவலின் இறுதிப் பகுதி. நாவலின் உள்ளடக்கத்திற்கு கிஞ்சித்தும் நியாயம் செய்யாத இந்தக் கதைச் சுருக்கம், வழக்கமான முக்கோணக் காதல் கதையைச் சுட்டுவதாகத் தோன்றினால், அது ‘கதைச்சுருக்கம்’ என்பதன் போதாமையே தவிர நாவலின் தரம் குறித்த சரியான மதிப்பீடாகாது. இந்தக் கட்டுரைக்கு ஒரு பின்புலமாக மட்டுமே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாவலைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, அது குறித்து வெளிவந்துள்ள/ வருகிற எதிர்மறை விமர்சனங்களில் இரண்டு கருத்துகள் முக்கியமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஒன்று, அதன் முக்கிய பாத்திரமான எல்லிஸின் (Ellis) ‘செயலின்மை’. தன்னிச்சையான முடிவெடுக்கத் தெரியாதவராக, அலைபாயும் மனமுடையவராக உருவகித்து இறுதியில் நம்பிக்கை துரோகியாக, ஏமாற்றுக்காரியாக அவரை வாசகன் பார்க்கும் முடிவிற்கும் அது இட்டுச் செல்கிறது. நாவலில் ‘கதை’ என்பதே இல்லை (‘கதை’ என்பதன் வரையறை என்ன என்பதை தனிக் கட்டுரையாக பார்க்க வேண்டும்), இதன் மூன்று பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளும் அவற்றின் சம்பவங்களும் எந்தத் தொடர்பும் இன்றி சிதறிக் கிடந்து வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை, அதன் இறுதிப் பகுதியில் வரும் நிகழ்வுகள் மட்டுமே நினைவில் தங்குகின்றன. நாவலே இறுதிப் பகுதியின் பலத்தில்தான் நிற்கிறது என்பது இரண்டாவது விமர்சனம். நேரடியான வாசிப்பில் நாவல் குறித்து இத்தகைய ஒரு பார்வை சாத்தியம்தான் என்றாலும், நாவலை மீள் பார்வை செய்து இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத் தாண்டிய இன்னொரு கோணத்தையும் வாசகன் காணக் கூடுமா என்பதை இக்கட்டுரையில் ஆராய்வதின் மூலம், எந்தத் தரப்பையும் முற்றிலுமாக மறுதலிக்காமல், அதே நேரம் இலக்கியத்தின் பன்முகப்பட்ட வாசிப்பின் சாத்தியத்தை நாம் அறியவரக்கூடும்.

சம்பவம் 1:

குடும்பத்தை விட்டு பிரிந்து அயர்லாந்திலிருந்து அமெரிக்கா வந்து ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணான எல்லிஸ் (Ellis), தன் விடுமுறை நாளை காதலனுடன் கடற்கரையில் செலவிட முடிவு செய்கிறார். அதற்குத் தகுந்த உடையை (bathing suit) தேர்வு செய்ய அவருடைய பெண் மேலதிகாரி உதவுகிறார். எல்லிஸின் உடலை அவர் தொடுவது, ஆடை அணிவிப்பது என அவருடைய சுவாதீனமான நடவடிக்கை எல்லிஸை அசௌகர்யப்படுத்துகிறது. (மேலதிகாரிக்கும் ஒரு காதலன் இருக்கிறான் என்பதால், அவர் நடத்தையில் பாலியல் விழைவு உள்ளது என்பது போன்ற வாசிப்பிற்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்) எனினும் எல்லிஸ் தன் கூச்சத்தை வெளியே சொல்வதில்லை

சம்பவம் 2:

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருக்கும் எல்லிஸ், தன் மனத்துயர் குறித்து யாருடனும் பகிர முடியாத மனநிலையில் உள்ளார் என்பதை டூபின்

None of them could help her. She had lost all of them. They would not find out about this; she would not put it into a letter. And because of this she understood that they would never know her now. Maybe, she thought, they had never known her, any of them, because if they had, then they would have had to realize what this would be like for her.” 

என்று சுட்டுகிறார்.

இரண்டு சம்பவங்களும் நேரடியான தொடர்பு கொண்டவையல்ல என்றாலும், இரண்டாம் சம்பவம், மற்றவர்களிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மிகவும் தயங்கும் எல்லிஸின் குணத்தை வெளிப்படுத்தி முதல் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் அதே நேரத்தில், மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. அவரின் ‘செயலின்மையாக’ சுட்டப்படுவது உண்மையில் தன்னுள்ளேயே சுருங்கிக் கொள்ளச் செய்யும் அவர் அகத்தின் தயக்கம்தான்.

அயர்லாந்தில் விதவைத் தாய் மற்றும் மூத்த சகோதரி ரோஸுடன்  வசிக்கும் எல்லிஸிற்கு, ஒரு பாதிரியின் உதவியால் அமெரிக்காவில் வேலை கிடைக்க, அவர் அங்கு அனுப்பப்படுகிறார். அயர்லாந்தைவிட அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பதால்  அங்கு இங்குள்ளதைவிட மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று கருதி ரோஸ் இந்த முடிவெடுக்கிறார்.   மூத்த பெண் என்பதால்   குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை – முப்பது வயதான, யாரையும் திருமணம் செய்யாத, தங்கையின் படிப்புச் செலவை ஏற்கும், வேலையில் நேர்த்தியாக இருக்கும்,  இவை அனைத்தையும்   தனக்குள்ள சிக்கல்களை வெளிக்காட்டாமல்  திறம்பட செய்யும் – அழகி ரோஸின் பார்வையில் அவர் எடுக்கும் முடிவு மிகச் சரி என்றாலும் எல்லிஸிற்கு  நன்மை செய்வதாக எண்ணி அவர் இதைச் செய்யும்போது, சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து   அங்குச் செல்வது குறித்து   எல்லிஸிற்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும் என்பதை அவர் கருத்தில் கொள்வதில்லை.

எல்லிஸிற்கு முற்றிலும் நேர்மாறான  ரோஸின்  பாத்திரம், எல்லிஸை புரிந்து கொள்ள உதவக் கூடும். ஒருவேளை சிறு வயதிலியே எல்லிஸும்  ரோஸ் போல் மன ரீதியாக முதிர்ந்திருந்தால் பல அசந்தர்ப்பமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் ரோஸ் ஏன் அவரிடம் அமெரிக்கா செல்வது குறித்த அபிப்பிராயம் கேட்கவில்லை? எல்லிஸிற்கு கூட இது குறித்து நேர்மையாகவோ/ எதிர்மறையாகவோ அதிகம் சொல்ல எதுவும் இல்லை என்றோ அல்லது அதைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்றோ தோன்றுகிறது. இங்கும் அவர் அகத்தில் உறைந்திருக்கும் தயக்கத்தையே உணர முடிகிறது. இவற்றிக்கான  காரணங்களை அவர் அமெரிக்கா சென்றபின் நடக்கும் நிகழ்வுகளில் தேடிப்  பார்க்கலாம்.

நாவல் குறித்த இரண்டாவது முக்கிய எதிர்மறை விமர்சனமான  – சம்பவங்கள் தொடர்பற்று இருக்கின்றன என்பதை  கலம் டுபீனின் இன்னொரு நாவலான  ‘The Blackwater Lightship‘ நாவலுடனேயே ஒப்பிடலாம்.  அதிலும்  சம்பவங்கள் நேரடி தொடர்புள்ளவையாக டுபீனால் சொல்லப்படாவிட்டாலும்  அவை தன்னியல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி விடுகின்றன. இந்த அம்சம் ‘Brooklyn’ நாவலில் இல்லை என்பதால், இவற்றைத் தொகுப்பதில் வாசகனின் பங்கு அதிகம் உள்ளது. இது பலரை நாவலிலிருந்து அந்நியப்படுத்தும் என்றாலும், வாசகனின் அதிக உழைப்பைக் கோரும் இத்தகைய வாசிப்பும் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அல்லவா?  இங்கு நாவலின் இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் டோனி (Tony) எனும் இத்தாலிய இளைஞனை எல்லிஸ் சந்திக்கிறாள்.  டோனி அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளும் தடை சொல்வதில்லை (இவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்). ஒரு முறை  தாய்/ தந்தை, மூன்று சகோதரர்களுடன் வசிக்கும் (கூட்டுக் குடும்ப)  வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது/ சீண்டிக் கொள்வது இவற்றை சற்றே அன்னியத்தன்மையோடு எல்லிஸ் கவனிக்கிறாள். இந்தச் சம்பவம்  குறித்து ஒரு பேட்டியில் டூபின் “They’re all just so good with each other. And one watches this in life with fascination and envy. I would love to have been brought up like that. But Ireland’s not like that.” என்று குறிப்பிடுகிறார். இதில் எல்லிஸின் செயல்/ செயலின்மைக்கான ஒரு விளக்கம் உட்போதிந்துள்ளது.  பாசமும் நேசமும் குடும்பத்தில் இருந்தாலும், அதைத் தளர்வான (informal) முறையில் வெளிப்படுத்தும்  சூழலில் எல்லிஸ் வளராததால்,அவளால் தன் உணர்வுகளைத் தெளிவாக சொல்ல முடிவதில்லை என்று   புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்வும் கதையின் மையத்திற்கு நேரடியான தொடர்பு கொண்டதல்ல என்பதால், இதை வாசகன் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடும். ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால்

இப்படி தொடர்பற்றவையாகத் தோன்றும் பல நிகழ்வுகள் எல்லிஸின் மனச் சங்கிலியின் கண்ணிகள் தான் என்று வாசகன் அவதானிக்கலாம். அது எல்லிஸ் குறித்த அவன் பார்வையை விரிவடையச் செய்யக் கூடும்.

எல்லிஸின் மனவுலகை நுட்பமாக உருவாக்கும் அதே நேரத்தில் டூபின்  50களின்  Brooklyn நகரில், கனவுலகைப் போல் தோற்றமளிக்கும் அமைதியான – “… quietness of these few leafy, streets that had shops only on the corners, streets where people lived”  -காட்சிகளோடு, நிஜ உலகில் தள்ளும் பரந்த வீதிகளையும், அவற்றை முற்றிலும் நிரப்பும் மனிதர்களையும்/  வாகனங்களையும் பார்க்கும்போது நாளுக்கு நாள் உருமாறிக்கொன்டிருக்கும், பல நாடுகளிருந்தும் எண்ணற்றோர்  புலம்பெயர்ந்து கொண்டிருக்கும்  ஒரு நகரின்  சித்திரத்தையும் உருவாக்குகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவருக்கு துணிகள் விற்பதற்கு எல்லிஸ் வேலை செய்யும் கடை முடிவு செய்வது நாவலில் வரும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல.

அம்முடிவு குறித்த எல்லிஸின் எதிர்வினைக்கும் , மற்ற பெண்  விற்பனையாளர்களின்   எதிர்வினைக்கும் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அயர்லாந்தில் தன் சொந்த ஊரில் கறுப்பினத்தவரை கண்டிராத/ அறிந்திராத எல்லிஸிற்கு கடையில் அவர்களை அனுமதிப்பது என்ற  முடிவு எந்த பெரிய சலனத்தையும்  ஏற்படுத்துவதில்லை, ஆனால் கடையின் மற்ற பெண் விற்பனையாளர்கள் இதை எதிர்கொள்ளும் விதம் – ஆப்பிரிக்க அமெரிக்க இனப் பெண்கள் கடைக்குள் வந்தால் இடமே அமைதியாவது,  ஓரக்கண்ணால் வந்தவர்களைக் கவனிப்பது, தங்கள் வீட்டில் இது குறித்து தெரியவந்தால் அவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்று தங்களுக்குள்ளேயே   கேள்வி எழுப்புவது – ஆகியவை ஒரு காலகட்ட சமூகச் சூழலின் பிரதிபலிப்பும் கூட. இது குறித்து அதிகம் கவலைப்படாத எல்லிஸ், மற்றொரு பெண் முன் உடைமாற்றுவது குறித்து வெட்குவதை கலாசார வேறுபாடு என்று சொல்லலாமா? உடை தேர்வு செய்யும்போது, இத்தாலிய ஆண் தன் இணை கடற்கரையில் எப்படி தோற்றமளிக்கிறாள் என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவன் என எல்லிஸின் மேலதிகாரி கூற,

‘In Ireland no one looks, Ellis said. It would be bad manners.’

‘In Italy it would be bad manners not to look’.

என்று நடக்கும் உரையாடலில் கலாசார வேறுபாடு மட்டும் தெரிவதில்லை. எல்லிஸும் சரி அவள் மேலதிகாரியும் சரி அமெரிக்கா என்று குறிப்பிடாமல்  Ireland/ Italy என்று சொல்வது, தங்களை அவர்கள் இன்னும்  முழுதாக அமெரிக்காவினுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுடன் புலம்பெயர்ந்தவர்களின் ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது. (இவர்கள் இருவரின் பிள்ளைகள்/ பேரப்பிள்ளைகள் தங்களை அமெரிக்கர்களாக மட்டுமே கருதக்கூடும் என்பதையும் நினைவில் கொள்வோம்)

எந்த ஆப்பிரிக்க- அமெரிக்க  பெண்ணும் தனியாக கடைக்கு வராமல் இரண்டு-மூன்று பேராக வருவது, நேர்த்தியாக உடையணிந்திருக்கும் அப்பெண்கள்,  விற்பனையாளர்களுடன் அதிகம் பேசாதது (கர்வத்தால் அல்ல, இனம் சார்ந்து இருக்கும் இடைவெளி என்று வாசகன் புரிந்து கொள்ள முடியும்)  என அவர்கள் நடந்து கொள்வதையும்  ஒரு விதத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கலாசார வேறுபாட்டால் புரிந்து கொள்ளலாம். எல்லிஸ் நாடு விட்டு நாடு வந்திருந்தால், இப்பெண்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே வெளியாட்களாக இருந்து,  இப்போது தான் தங்கள் தேசத்தின் சில காட்சிகளை காண்கிறார்கள்.

இப்படி தொடர்பற்றவையாக தோன்றும்  நிகழ்வுகளும் எல்லிஸின் மனவுலகோடு அவரின் புற உலகையும் நாவலினுள் உருவாக்குகின்றன எனபதால் அவை நாவலின் கட்டமைப்பிற்கு தேவையானவைதான் என்று சொல்லலாம்.

டோனியின் துணையும், பகுதி நேரப் படிப்பும் எல்லிஸின் மனதை ஆற்ற ஆரம்பிக்கும் வேளையில் அவர் குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத துயர நிகழ்வால், தாயை கவனித்துக்கொள்ள  எல்லிஸ் மீண்டும் அயர்லாந்து திரும்ப வேண்டியுள்ளது. தன்னைப் பிரிய மனமே இல்லாமல் டோனி துயருற, மீண்டும் சொந்த ஊர் வரும் எல்லிஸ் வீட்டை கவனித்துக் கொள்கிறாள். ஜிம் (Jim) என்ற சற்றே மேட்டுக்குடி இளைஞனுடன்  அவளுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. ஜிம் அவள்பால் ஈர்க்கப்படுகிறான்,  அவளை மணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவன் வந்து விட்டது போல்   தெரிகிறது. எல்லிஸ்   என்ன செய்கிறாள்? தன் தோழியின்  கணவனின் நண்பனான அவனுடன், குழு சுற்றுலா செல்கிறாள், அவனுடன் கனிவாக நடந்து கொள்கிறாள் ஆனால் டோனி பற்றி ஒன்றும் சொல்வதில்லை, அதே நேரம் ஜிம்மை அதிகம் ஊக்குவிப்பதும் இல்லை, அவன் தன் மீது செலுத்தும் கவனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள் அவ்வளவே. டோனி அனுப்பும் கடிதங்களை படிப்பதையும் அவள் நிறுத்தி விடுகிறாள். இங்கு எல்லிஸின் நடவடிக்கை/ நடவடிக்கையின்மையை   நம்பிக்கை துரோகமாக பார்க்கும் சாத்தியம் உள்ளதுதான்.

இங்கு இடைவெட்டாக நாவலின் முதல் பகுதியிலிருந்து  ஓர் சம்பவம். அமெரிக்கா வந்த முதல் சில நாட்களில், மிகவும் மனச் சோர்வுற்றிருக்கும் எல்லிஸ், காலையில் வேலைக்குச் செல்லும் வழியில் உணவருந்த ஓர் விடுதிக்கு செல்கிறாள். அவள் முகத்தைப் பார்த்து அவளின் சோகத்தை யூகிக்கும் விடுதி பணியாள் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று கேட்கிறான். இல்லை என்று அவள் சொன்ன பிறகும், மீண்டும் அதையே கேட்கும் அவன் உரத்தக் குரலில் “Cheer up…..Give us a smile,” என்று சொல்ல அந்தக் கரிசனத்தைக் தாங்க முடியாமல் அழுது விடுவோம் என்று அஞ்சி அங்கிருந்து ஓடி விடுகிறாள். பணியாளனின் செய்கை வெளிப்படையாகப் பேசும் அமெரிக்க குணம் அது, அவன் கரிசனம் தவறில்லை என்றாலும் அதைத் தாங்கும் வலு அவளுக்கு இல்லை. கரிசனத்தை அல்ல அவள் எதிர்பார்ப்பது,  தன்னுடன் கை கோர்த்து நடக்கும் ஒரு சக ஜீவியை. டோனி அத்தகையவனாக உள்ளான்.  அவனின் வேகத்திற்கு தன்னால் செல்ல முடியாது என்ற உணர்வும்   எல்லிஸிற்கு இருந்தாலும், சக பயணியை அவள் இழக்க விரும்பவில்லை. டோனி எல்லிஸை காதலியாகப் பார்க்கிறான் என்றால் எல்லிஸ் அவனை தோழனாக மட்டுமே அதிகம் பார்க்கிறாள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த பேரவலச் சம்பவத்தின் தாக்கத்தில் அவள்  வாழ்வில்  முதல் முறையாக  அவனுடன் உடலுறவு கொண்டாலும் அதைக் காதல் என்றோ காமம் என்றோ அறிதியிட்டு கூற முடியாது. அப்போது அவள் அவனை உபயோகிக்கிறாள் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் டோனியும் தன் மனதின் விழைவுக்காகவே அவளுடன் பழகுகிறான் என்றும் சொல்லலாம், இதை இன்னும் விரிவாக்கி அனைத்து உறவுகளையுமே கொடுக்கல் வாங்கல் என்ற இரட்டை நிலைக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அப்படி எளிமையாக வகைபடுத்தக் கூடிய  ஒன்றா மனித உறவுகள்? இவர்கள் உறவின் dynamic தெளிவான இடத்தை அடையும் முன், எல்லிஸ் மீண்டும் தன் தாய் நாடு திரும்ப வேண்டியுள்ளது. குடும்பத் துயரம் வேறு அவளை வாட்ட, அவள் திக்கு தெரியாதவள் போல் நடந்து கொள்வதில்  – அது மூன்று பேரின் வாழ்வை குலைத்துப் போடக்கூடும் என்றாலும் –  ஆச்சரியம்  ஒன்றுமில்லை.

இறுதியில் எல்லிஸ் எடுக்க வேண்டிய முடிவிற்கும் கெல்லி (Kelly) என்ற பாத்திரமே   காரணமாக உள்ளார்.  இந்தப் பாத்திரத்தை நாவலோடு பொருந்தாத ஒன்றாக பார்க்க முடியும். மேட்டிமைத்தன்மை கொண்ட, அனைவரையும் எள்ளல்   செய்யும் இந்தப் பாத்திரம் நம்ப முடியாத ஒன்றோ / ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அல்ல. ஆனால் டூபின் முதலிலிருந்தே நாவலின் போக்கில் உருவாக்கும் சலனமின்மையை இந்தப் பாத்திரம், அமைதியான இடத்தில்  ஒருவர் உரத்தக் குரலெழுப்பி அந்தச் சூழலைக்   குலைப்பது போல் கலைத்து விடுகிறது. அந்த விதத்தில் இப்பாத்திரம் நாவலின் உலகோடு பொருந்தாமல், அதன்  பலவீனமாக உள்ளது.   மேலும் எல்லிஸை முடிவெடுக்கத் தூண்டும் நிகழ்வும் நாவலை அதன் இறுதி நிகழ்விற்கு திருப்ப வலிந்து செய்யப்பட்ட உத்தியாக உள்ளது.

இப்போது எல்லிஸ் காதலா அல்லது கடமையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எல்லிஸின் முடிவு தெரிந்தவுடன் அவர் இதைத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்று  பெரும்பாலான வாசகர்கள்  புரிந்து கொள்வது எதுவாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தப்  புரிதல் நியாயமானதும்  கூட. இருப்பினும் எல்லிஸின் தேர்வு இது தான்  என்று வாசகன் எதை முடிவு செய்தாலும் அதற்கு  நேர்மாறாக வாதிட  சாத்தியம் நாவலின் பக்கங்களின் உள்ளது.  அதாவது ஒரு வாசகன் அவர் காதலை தேர்வு செய்தார் என்று சொன்னால், இல்லை அவர் தேர்வு செய்தது கடமையை என்றும், எல்லிஸின் தேர்வு ‘கடமை’ என்று சொன்னால், இல்லை அது ‘காதல்’ என்றும்  இன்னொரு வாசகன்  வாதிடலாம். எனவே வாசகன் எந்தப் புரிதலுக்கு வந்தாலும் அதைச்  சற்றே மறுபரிசீலனை செய்தால், எந்த முடிவிலும்  அவர் பெறப்போவதற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாகவே இழப்பையும் துயரையும்  அடையக்  கூடும் ‘Catch-22’ சூழலில் அவர் இருக்கிறார் என்பதையும்  உணர முடியும்.  இந்த இரண்டு தேர்வையும் தவிர, சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவர் அந்த முடிவு எடுத்தார் என்றும் வேறொரு வாசகன் சொல்லலாம். அப்படி எண்ணும் வாசகன்

Eilis imagined the years ahead, when these words would come to mean less and less to the man who heard them and would come to mean more and more to herself. She almost smiled at the thought of it, then closed her eyes and tried to imagine nothing more.

என்ற இறுதி பகுதியை மீண்டும் வாசிக்க வேண்டும். அசோகமித்திரன் கதை ஒன்றில் கதைசொல்லி இரவு நடையின்போது ஒரு ஆணும்- பெண்ணும் (தம்பதியர் என்று புரிந்து கொள்ளலாம்) சண்டையிடுவதைப் பார்ப்பான். அப்பெண்ணின் துயர் அவனை பாதித்தாலும், தலையிடாமல் வந்து விடுவான். இரவு முழுதும் அவனை அது வாட்டும். அடுத்த நாள் அனைத்தும் சரியாகி விட்டது என்பதாக கதை முடிந்தாலும்,  அதில் அ.மி சொல்லாமல் எழுப்பும் கேள்வி  அவ்வளவு சீக்கிரம் அந்நிகழ்வை அவன் மறந்து விட முடியுமா என்பதுதான். அக்கேள்வியை இங்கும் மேலே உள்ள பத்தியோடு பொருத்திப் பார்க்கலாம். பல வருடங்கள் சென்றேனும் அவள் அமைதியடையக்கூடுமா, அப்படி அடைந்தாலும் அதுவரை அவள் அனுபவித்த  வாதை?

நாவலில் எல்லிஸின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘பெதும்பை’  பருவத்தில் அவள் இருப்பதாக யூகிக்கலாம். பேதைக்கும் மங்கைக்கும் இடையே உள்ள, தன்னைக் குறித்தும் வாழ்வு குறித்தும் தெளிவின்மையும் சலனங்களும் தோன்றும் இந்தப் பருவத்தில், குடும்பத்தைப் பிரிதல், குடும்பத்தில் இழப்பு போன்ற தொடர்  பாரத்தை சுமக்கும் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாத அப்பருவப் பெண், அது சார்ந்து தன் வாழ்வு குறித்த  மிக முக்கிய முடிவுகளை  எடுக்க வேண்டிய நிலையிலும்  இருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்   பிறகும்,   அவளை .ஏமாற்றுக்காரியாகவோ, கோழையாகவோ, குறைந்தபட்சம் செயலின்மை கொண்டவளாகவோ சுட்ட முடியும் என்றாலும், இறுதிப் பத்தியின் மீள்வாசிப்பு தன் துயரை வெளிக்காட்டாமல், எந்தச்  சூழலிலும்   முடிந்தளவு அனைவருடனும்  நேர்மையுடன் இருக்க முயன்று, அதில் தன்னை மீறி தோல்வியுற்று அதன் காரணமாக மனதில் பல ஆண்டுகள் ஒலிக்கப் போகும், மற்ற யாருக்கும் கேட்காத, வலியின் ஓலத்தை  தான் மட்டும் தனித்து கேட்டுக்கொண்டிருக்கப்  போகும்  ஒரு பெதும்பைப் பெண்ணின் உயிர்ப்புள்ள நெகிழ்வான சித்திரம் மனதில் தோன்றி மற்ற அனைத்தையும் விலக்குகிறது.

நினைவின் பாழ்நிலம்- இஸ்மாயில் கதாரேவின் நாவலை முன்வைத்து

அஜய் ஆர்

thegeneralofthedeadarmy-title

இலியட்டின் இறுதிப் பகுதியில், ட்ராயின் மன்னர் ப்ரயம் (Priam), தன் மகன் ஹெக்டரின் உடலை மீட்க அவனைப் போரில் கொன்ற அக்கிலீஸிடமே யாசகம் கேட்க வருகிறார். பெரும் மீட்புப் பொருளைக் கொடுத்து ஹெக்டரின் உடலை மீட்டு 9 நாட்கள் துக்கம் அனுசரித்தபின் 10வது நாள்,

At last,
when young Dawn with her rose-red fingers shone once more,
the people massed around illustrious Hector’s pyre…
And once they’d gathered, crowding the meeting grounds,
they first put out the fires with glistening wine,
wherever the flames still burned in all their fury.
Then they collected the white bones of Hector –
all his brothers, his friends-in-arms, mourning,
and warm tears came streaming down their cheeks.
They placed the bones they found in a golden chest,
shrouding them round and round in soft purple cloths.
They quickly lowered the chest in a deep, hollow grave
and over it piled a cope of huge stones closely set,
then hastily heaped a barrow, posted lookouts all around
for fear the Achaean combat troops would launch their attack
before the time agreed. And once they’d heaped the mound
they turned back home to Troy, and gathering once again
they shared a splendid funeral in Hector’s honor,
held in the house of Priam, kind by will of Zeus.

And so the Trojans buried Hector, breaker of horses.

என்ற உணர்ச்சிகர நிகழ்வோடு இலியட் முடிகிறது.

ஹெக்டர் இளவரசன் என்பதால் இத்தகைய பிரமாண்டமான இறுதிச் சடங்கு நடந்தது என்றோ ஹோமர் ஒரு உச்ச நிகழ்வோடு தன் காவியத்தை முடிக்க இப்படி விவரித்தார் என்றோ சொல்ல முடியுமா? (more…)

குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை – ஸ்டூவர்ட் மெக்ப்ரைட் நாவல்கள்

அஜய்

ஸ்டூவர்ட் மெக்ப்ரைட்டின் ‘Flesh House’ நாவலில், மாமிசம் பதனிடும் ஆலையில் யாரோ மனித மாமிசத்தைக் கலந்து விட, ‘Aberdeen’ நகர மக்கள் தங்களை அறியாமல் நரமாமிசம் உண்பவர்களாக மாறி விடுகிறார்கள். இதைச் செய்தது யார் என்று விசாரிக்கும் காவல்துறையினருக்கு தாங்களும் நர மாமிசம் உண்டிருப்போமோ என்ற சந்தேகம் வருகிறது. அப்போது அவர்களில் ஒருவர் “Must’ve been OK though: I’m no’ feeling all Hannibal Lectery “. என்கிறார். மிக மோசமான ஒரு நிகழ்வை, அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்காமல், அதை கேளிக்கையாக மாற்றி வாசகனை அதிர்ச்சியடைய வைக்க ஸ்டூவர்ட் முயல்கிறாரா?

தினம் தினம், பல்வேறு வடிவங்களில் மரணத்தை/ காயங்களைச் சந்திக்கும் காவல்துறையினர் தங்களின் மனநிலை பேதலிக்காமல் இருக்க உபயோகிக்கும் பாதுகாப்பு அரண்தான் இத்தகைய அவல நகைச்சுவை. இப்படி வாழ்வில் நிகழும்/ சந்திக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளை/ பேரிடர்களை நகைச்சுவையோடு எதிர்கொள்வது ‘gallows humor’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இதை குற்றப்புனைவுகளில் அதிகம் காண்பதை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இத்தகைய நகைச்சுவையை (இதை நகைச்சுவை என்று முதலில் ஏற்றுக்கொண்டால்) வாசகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே, இத்தகைய படைப்புக்கள், குறிப்பாக ஸ்டூவர்ட்டின் நாவல்கள் அவனுக்கு உவப்பானவையாக இருக்கும், அல்லது இருக்காது.

ரான்கினின் ‘Edinburgh’ போல, இந்த நாவல்களின் களமான ‘Aberdeen’க்கும் ஒரு தனித்துவ (தொடரின் அங்கமாக ஆகக்கூடிய அளவிற்கு) அடையாளம் கிடைக்காவிட்டாலும், எப்போதும் பெய்து கொண்டே இருக்கும் மழை, அதனால் எங்கும் உருவாகும் ஈரப்பதம், பாழடைந்த குடியிருப்புக்கள், மூதாட்டியால் (சிறுதொழிலாக) வழிநடத்தப்படும் போதை மருந்து வியாபாரம் ஒரு புறம் என்றால், பாலியல் தொழிலில் தள்ளப்படும் 13 வயது சிறுமிகள் இன்னொரு புறம், குற்றக் கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், லஞ்சத்தில் திளைக்கும் அரசியல்வாதிகள், இனவெறித் தாக்குதல்கள் என அந்நகரத்தின் சித்திரத்தை உருவாக்குவதில் ஸ்டூவர்ட் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார்.

மிக கவனத்துடன் பின்னப்பட்ட கதை முடிச்சுகள், போலி துப்புக்கள் இவையெல்லாம் இந்தத் தொடரின் வலுவான அம்சங்கள் கிடையாது. 400-500 பக்கங்களுக்கு குறையாமல் நீளும் இந்த நாவல்களில் ஒரே ஒரு குற்றத்தைப் பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரே நேரத்தில் 3-4 வழக்குகளை ஸ்டூவர்ட் பின்தொடர்வதை வாசகன் உன்னிப்பாக கவனிக்காவிட்டால், பாத்திரங்களின் பெயர்/ சம்பவக் குறிப்புக்கள் இவற்றில் குழப்பமடைவான்.

இணைகோடுகளாக நடக்கும் இந்த விசாரணைகளை, இறுதிப் பகுதியில் ஸ்டூவர்ட் சடுதியில் முடித்து விடுகிறார். மூளையில் சட்டென்று ஒரு விளக்கெரிய லோகன் (இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம்), குற்றத்தின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளும் “deus ex machina” பாணி இடங்கள் இந்தத் தொடரில் நிறைய உண்டு. மூளையில் இத்தகைய மின்னல்கள் மின்னுவது, இன்ஸ்பெக்டர் மோர்ஸிடம் நிகழ்வதுண்டு- அவரின் மேதமை குறித்த நிறைய குறிப்புகள் நாவலில் உள்ளதால் – வாசகனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் லோகன் ஒன்றும் மேதை அல்ல (இவரை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்) என்பதால், இந்த தொடர் நாவல்களின் முடிவுகள் சற்று அதிருப்தியை அளிக்கின்றன.

இப்படி இந்தத் தொடரில் பல இல்லைகள் இருந்தாலும், தலை தெறிக்கும் வேகத்தில் செல்லும் கதைசொல்லல், பட்டாசாக வெடிக்கும் உரையாடல்கள், தனித்துவம் கொண்ட பாத்திரங்கள், தொடர் முழுதும் விரவிக் கிடக்கும் இருண்மை நகைச்சுவை ஆகியவை இந்த ‘இல்லைகளை’ சமன் செய்கின்றன.

23 முறை கத்தியால் குத்தப்பட்டு பிழைத்ததால் Lazarus/Laz என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ‘லோகன்’ இந்தத் தொடரின் நாயகன். உலக பாரத்தைச் சுமக்கும், உறவுகளில் நாட்டமில்லாத, தன் மேலதிகாரிகளை மதிக்காத காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இவர் வேறுபட்டவர். விடுமுறை நாட்களிலும் மேலதிகாரிகளால் வேலைக்கு வர வற்பறுத்தப்படுபவராக, அவர்களின் வேலையும் தன் மீது திணிக்கப்பட்டு அதைச் செய்து முடிக்க வேண்டியவராக இருந்தாலும் (ஒரு இடத்தை உளவு பார்க்கும் வேலையின்போது மேலதிகாரிகள் குறட்டை விட, இவர்தான் முழித்திருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது), அதற்காக இன்னொரு புறம் தன் காதலிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியவராக உள்ள லோகன், கொஞ்சம் பிசகினாலும் ‘wimp’ என்ற முத்திரை குத்தப்படக்கூடியவர். அதே நேரம், தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் வேலைகளைத் திணிக்கவும் (“perks of rank” என்ற அவர் உயரதிகாரிகள் சொல்லும் தாரக மந்திரத்தை உபயோகித்து ) செய்கிறார். இவருடைய ஒரே இருத்தலியல் சிக்கல், தூங்குவதற்கும், தன் காதலியுடன் செலவிடுவதற்கும் நேரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

எப்போதும் இனிப்பை உண்ணும், பருமனான, மிகக் கோபக்காரரான ‘Insch’, எப்போதும் கலைந்த முடியோடு இருக்கும், அனைவரின் முன்பும் அக்குளைச் சொரிந்து கொள்ளும், பாலியல் இச்சை மிகுந்த, தன் மேலதிகாரியின் மனைவியைக் கவரும் தற்பால் விழைவு கொண்ட ‘ஸ்டீல்’ என மற்றப் பாத்திரங்களும் சுவாரஸ்யமானவர்கள்தான் (40 வயதில் ‘பாலியல் வேட்கையின்’ உச்சத்தில் இருக்கும் தன்னை, தன் துணை திருமணம் என்ற கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார் என்று வழக்கை விட அதைக் குறித்து அதிகம் கவலை கொள்கிறார் ஸ்டீல்).

இதைப் படிக்கும் போது “Police Academy” போன்ற காவல்துறை வேலைக்கு லாயக்கு இல்லாத கோமாளிகளின் கூடாரம் என்று இந்தக் குழுவைப் பற்றி நினைக்கத் தோன்றும் (“Fuck up squad” என்று இவர்கள் தொடர் முழுதும் மற்றவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்). ஆம், இவர்கள் வழக்கமான காவல்துறை அதிகாரிகள் அல்லதான், ஆனால் எப்படியோ தாங்கள் செய்ய வேண்டியதை செய்து முடித்து விடுகிறார்கள். பல கவன சிதறல்கள் இருந்தாலும், ஸ்டீல் ஒரு திறமையான குழுத் தலைவர், அவரே களத்தில் இறங்கவும் செய்வார். மற்றவர்கள் மீது (அதாவது பெரும்பாலும் லோகன் மீது) தன் வேலையைத் திணித்தாலும், அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தரவும் செய்வார். கொஞ்சம் மென்மை, அதைவிட கொஞ்சம் அதிக சோம்பல், வேலைப் பளு பற்றிய முணுமுணுப்பு என்று இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டால், பல்லைக் கடித்துக் கொண்டு அதன் இறுதி வரை செல்லும் பிடிவாதம் என தன் கலவையான குணத்தால் நம்மை வசீகரிக்கிறார் லோகன். இந்த இரு பாத்திரங்களுக்காக மட்டுமேகூடஇந்தத் தொடரை வாசிக்கலாம்.

எது வாசகனை எளிதில் வசப்படுத்த/ தக்கவைக்க வசதியாக இருக்குமோ, அவன் எதை எதிர்பார்ப்பானோ அதையே எப்போதும் ஸ்டூவர்ட் செய்வதில்லை. இந்தத் தொடரின் போக்கை மாற்றி, அதன் சமநிலையைக் குலைத்து, அதனால் வாசகனை விலகச் செய்யக்கூடிய பல ரிஸ்க்கான முடிவுகளை எடுப்பதற்கு அவர் அஞ்சுவதில்லை. எனவே, இவர் இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம் அல்லது இவர் இந்த குறிப்பிட்ட நாவலில் முக்கிய பாத்திரம், எனவே இவர்களுக்கு இறுதியில் ஒன்றும் ஆகாது என்று வாசகன் நிம்மதியாக இருக்க முடியாது. யாரை எப்போது எந்த பேரிடர் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவன் கற்பனை செய்திராத கொடூர நிகழ்வுகளை வாசகன்/ பாத்திரங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்டூவர்ட்டின் உரைநடையில்/ உரையாடல்களில் உள்ள அவல நகைச்சுவையில் மற்றொரு குற்றப்புனைவு எழுத்தாளர் ‘R. D. Wingfield’ன் பாதிப்பைக் காண முடிகிறது. ஆனால் இந்த நகைச்சுவை, அதற்கு காரணமான வன்முறை எதுவும் ‘gratuitous’ஆக இல்லை என்பதோடு குற்றத்தின் மூர்க்கத்தையோ/ பாதிக்கப்பட்டவர்களின் துயரையோ மலினப்படுதுவதில்லை. ‘Broken Skin’, என்ற நாவலில் லோகன் ஒரு சிறுவனிடம் தர்ம அடி வாங்குகிறார். (ரீபஸ் இப்படி ஒரு சிறுவனிடம் அடி வாங்குவதை கற்பனை செய்ய முடிகிறதா?). ஒரு ஆண் சிறுவனிடம் எதிர்பாராமல் தோற்பது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும், அவ்வளவு மூர்க்கம் அந்தச் சிறுவனிடம் எப்படி உருவானது என்ற கேள்வி சிரிப்பை மட்டுப்படுத்தும். சில மாதங்கள் முன்பு வரை, மற்றவர்களைப் போல இருந்த அந்த சிறுவன் ஏன் இப்படி வன்முறையாளனாக மாறினான்
என்று தெரிய வரும்போது, அந்தச் சிரிப்பு முற்றிலும் உறைந்து விடும்.

ரான்கின் போன்ற மற்ற ஸ்காட்லாந்து நாட்டு குற்றப்புனைவு முன்னோடிகள் வளர்த்தெடுத்த “Tartan Noir”ஐ அப்படியே பின் தொடராமல், அதன் சில கூறுகளை மட்டும் எடுத்து – ஆக்ரோஷம் X இருண்மை X அவற்றின் களிப்பு – என்ற விசித்திர நடனமாடும் தனித்துவ பாணியை உருவாக்கியுள்ள ஸ்டூவர்ட் அதன் காரணமாக, அவரது குற்றப் புனைவுகளின் போதாமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகிறார்.

இதுவரை 12 நாவல்கள் உள்ள இந்தத் தொடரின் சமீபத்திய நாவல்களில் கொஞ்சம் “contemplative”ஆக உள்ள ஸ்டூவர்ட்டை/ லோகனை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது. அதே நேரம், அவருடைய பிரத்யேகப் பாணி சற்று நீர்த்துப் போக ஆரம்பித்துள்ளது என்ற உணர்வு தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை. எனவே, இவரைப் புதிதாக படிக்க நினைப்பவர்கள் இந்தத் தொடரின் முதல் 6-7 நாவல்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அவர் உங்களுக்கான எழுத்தாளரா எனபதை கட்டுரையின் முதல் பத்திக்கான உங்கள் எதிர்வினைதான் முடிவு செய்ய வேண்டும்