அஜய். ஆர்

சபத், ஸ்வீட் – பிலிப் ராத் நாவல்களின் இரு ஆண் பாத்திரங்கள்

அஜய் ஆர்

       

பிலிப் ராத் நாவல்களில் நாம் சந்திக்கும் ஆண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்? பெண்பித்து கொண்டு அலையும் முதியவர்கள் (Mickey Sabbath/ மிகி சபத்), வெடித்துச் சிதறும் மனநிலைக்கு மிக அருகில் இருப்பவர்கள் (Ira Ringold), தங்கள் குழந்தைகளின் (அந்தக் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்பும்) நலம் குறித்த பதட்டத்திலேயே எப்போதும் இருப்பவர்கள், தெளிவற்ற அறம் சார்ந்த கொள்கை உடையவர்கள் (morally ambivalent), சுயநலக்காரர்கள், மற்றவர்களின் உணர்வுகளை மிதித்துத் தள்ளுபவர்கள், ஒரு அபத்த நிகழ்வால் வேலையை ராஜினாமா செய்ய வேண்டிவர, தனக்கு மட்டுமே தெரிந்த உண்மை தன்னைக் காப்பாற்றும் என்ற நிலையில், தான் வாழ்வு முழுக்க சொல்லி வந்த பொய்யை வெளிப்படுத்த விரும்பாத, அந்த உண்மை தரக்கூடிய கசப்புணர்வைவிட ராஜினாமாவே மேல் என்று முடிவெடுக்கும் Coleman Silk (The Human Stain) போன்ற பிடிவாதக்காரர்கள்- எத்தனை பலவீனங்கள் இருந்தாலும், எத்தனை இடர்ப்பாடுகளை சந்தித்தாலும், உறுதியான மனநிலை உடையவர்கள் இவர்கள். ஆனால் ஒருபோதும் கழிவிரக்கத்துக்கு இடம் கொடுப்பவர்கள் அல்லர் (வெளிப்படையாகவேணும்). எவரும் இவர்களை விரும்பலாம், வெறுக்கலாம் ஆனால் ஒதுக்க முடியாது.

roth

Testosteroneஆல் உந்தப்படும் இத்தகைய ஆண் பாத்திரங்களின் மிகச் சிறந்த உதாரணம் Sabbath’s Theatre நாவலின் Mickey Sabbath/ மிகி சபத் என்றால், இதற்கு நேர் எதிரான பாத்திரம் ‘American Pastoral’ நாவலின் ‘Seymour “Swede” Levov/ஸ்வீட்.

ஆபாசமாக நடந்து கொண்டதாக போடப்பட்ட வழக்குகள், தன் மகளின் அறையில் நண்பன் தங்க அனுமதிக்க, நண்பனின் 20 வயது மகளின் உள்ளாடைகளைக் கொண்டு கைப்புணர்ச்சி செய்யும், நண்பனின் மனைவியிடம் நூல் விடும், 64 வயதான சபத்தின் வாழ்வே சமூகத்தின் எந்த விதிக்கும் கட்டுப்படாத (விதிகள் என்பதே இல்லை என்பதே இவரின் விதியாக இருக்கக்கூடும்,) களியாட்டம் (orgy) எனலாம்.

மறுபுறம் ஸ்வீட். கல்லூரி காலத்தில் விளையாட்டு வீரரான, இவரின் மஞ்சள் நிற தலைமுடி/நீல நிறக் கண்கள் Nordic தேசத்தைச் சேர்ந்தவரை நினைவூட்டுவதால் ஸ்வீட் (Swede), என்ற பட்டப் பெயர் உடையவர். மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட, இளமையில் தந்தை சொல் மீறாத, தந்தையின் வியாபாரத்தை ஏற்று திறம்பட நடத்தும், தான் தந்தையானவுடன் தன் பதின்பருவப் பெண்ணைப் பற்றிய அதீத கவலை கொண்ட, மனைவி மீது அன்பு கொண்ட ஆசாமி இவர். அழகு, பணம், அன்பான மனைவி/ குழந்தை என ‘American Dream’ஐ அடைந்தவர் போல் இவர் வாழ்வு வெளியிலிருந்து பார்க்கத் தெரிகிறது. குடும்பத்தின் மீது அதீத அக்கறை/ கவலை கொண்ட ராத்தின் ‘யூத தந்தை’ பாத்திரங்களின் அச்சு அசல் உருவம் இவர். மற்றவர்கள் அதிகமும் ‘உப-பாத்திரங்களாக’ இருக்க, இவர் நாவலின் மைய பாத்திரமாக இருப்பதே முக்கிய வித்தியாசம்.

சபத் தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்த மெல்லிய பிணைப்பையும் உடைக்க நினைத்தால், ஸ்வீட் அத்தகைய பிணைப்புக்களை வரவேற்பது போல் தோன்றுகிறது.

சபத்துக்கு கொஞ்சம் கூட ஒவ்வாத சமூக கட்டுப்பாடுகள், ஸ்வீடுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கக்கூடும். இருவரும் பல விதங்களில் வேறுபட்டு இருந்தாலும், வாழ்வு அவர்களுக்கு அளிக்கும் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கின்றன என்பது ஒரு நகைமுரண்தான்.

சபத்தின் வாழ்வு, , விபத்தை நோக்கி மிக விரைவாகச் செல்லும் தறிகெட்ட வாகனம் போன்றது என்பதால், அவர் வாழ்வின் சம்பவங்கள் வாசகனுக்கு ஆச்சர்யமளிப்பதில்லை. மாறாக, தானே உருவாக்கும் ஒவ்வொரு சிக்கலிலிருந்தும், இந்த மனிதர் எப்படி மீண்டு, மீண்ட அடுத்த கணமே அடுத்த சிக்கலுக்கு அடிபோடுகிறார் என்பதே வியப்பளிக்கிறது. கட்டுப்பாடான வாழ்வை நாடும் ஸ்வீடுக்கோ, தன் பதின்வயது மகள், ஸ்வீட் அவருக்காக எண்ணியிருந்த வாழ்விலிருந்து திசை திரும்புதல், தன் மனைவி துரோகமிழைத்தல் என்று தான் மேய்ப்பராக உருவாக்கிய ‘pastoral’ கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதைப் பார்க்கவேண்டிய அவலம் நேர்கிறது. சபத் pastoral என்பதையே வெறுப்பவராக, scorched earth policy உடையவராக இருப்பார். மனைவி தனக்கு துரோகமிழைத்தால் சபத் அதற்கு வருந்தவோ, கடிந்து கொள்வார் என்றோ எண்ண முடியாது, இதுதான் சாக்கு என்று அவர் அடுத்த பெண்ணைத் தேட ஆரம்பித்துவிடுவார் (அந்த நேரத்தில் அவர் இன்னொரு பெண்ணிடம் உறவில் இல்லாமலிருந்தால்)

ஆயிரம் பிழைகள் இருந்தாலும், “Beloved Whoremonger, Seducer, Sodomist, Abuser of Women, Destroyer of Morals, Ensnarer of Youth, Uxoricide, Suicide” என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொல்லும், தன்னைக் குறித்த எந்த மேலான கற்பனையும் இல்லாத, தன்னை நன்கறிந்துள்ள சபத்தை, நாம் முற்றிலும் வெறுக்க முடியுமா என்ன? 64 வயதில் ஒருத்தியுடன் மட்டும் வாழ வேண்டும் என்றவுடன் கொதிப்படையும் முதியவரை அந்த நேர்மைக்காகவாவது நாம் மதிக்க வேண்டும். சிறு வயதில் சகோதரனை இழந்து, அந்த இழப்பைத் தாங்காமல் தாயும் இறக்க, இந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டு வராத, இன்னும் சிறுவனாகவே இருக்கும் ஒருவனின் பாவனைகளோ இவை அனைத்தும் என்றும் தோன்றுகிறது.

ராத் பெண் வெறுப்பு கொண்டவர் (misogynist) என்று விமர்சிக்கப்படுபவர். அதை அவர் ஏற்பதில்லை என்றாலும், இந்த இரு பாத்திரங்களை முன்வைத்தும் அத்தகைய விமர்சனங்களை வரக்கூடும், அவற்றுக்கான நியாயமும் இந்த நாவல்களில்/பாத்திரங்களில் உள்ளன. சபத் பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிறார் என்ற தொனி நாவல் முழுக்க உள்ளது. ஸ்வீடைப் பொருத்தவரை, அவரின் பாசத்தை அவர் மகளும்/மனைவியும் புரிந்து கொள்ளாமல் , தங்களின் செயல்பாடுகளால் ஸ்வீடுக்கு துன்பமளிக்கிறார்கள். ஆக பெண்கள் எதிர்மறையாகாவே வார்க்கப்பட்டுள்ளார்கள் என்ற விமர்சனம் எழுவது இயல்பே.

இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். சபத்தின் அனைத்து செயல்களும் சிறுவயது இழப்பிற்கான எதிர்வினையே (அதற்காக மற்றவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா என்ற எதிர் கேள்வியும் எழுப்பலாம்). ஸ்வீடின் மகளைப் பொருத்தவரை அவர் ஒரு அரசியல் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, சில செயல்கள் செய்கிறார், அவ்வளவே. ஸ்வீடை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கில்லை என்றும் நாம் சொல்லலாம். எனில், இங்கு பெண் மறுப்பு என்பது இல்லையா என்று கேட்டால், ஆம்/இல்லை என்று இரண்டு பக்கமும் ‘Devils Advocate’ போல் வாதிட முடியும் என்று தான் சொல்ல முடியும்.

Sabbath’s Theaterம் American Pastoralம் அடுத்தடுத்து வெளியானவை (முறையே 1995 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில்). தன் ஆண் பாத்திரங்களின் உச்சகட்ட வகைமாதிரியை படைத்த கையோடு அடுத்த நாவலிலேயே அதற்கு நேர் எதிரான பாத்திரத்தை ராத் படைத்தது சுவாரஸ்யமான ஒன்று தான் (“…wanted to write about a conventionally virtuous man. I was sick of Mickey Sabbath and I wanted to go to the other end of the spectrum….” என்று ராத் சொல்கிறார்). இந்த இரு பாத்திரங்களையும் வெளியிலிருந்து பார்க்கலாம், விமர்சிக்கலாம், சிலாகிக்கலாம், ஆனால் அந்த வாழ்வை நடைமுறையில் வாழ விழைவது என்பது இயலாத ஒன்று.

சபத்தின் வாழ்கைமுறையா அல்லது ஸ்வீடின் வாழ்க்கை முறையா என்று அந்தரங்கமாக ஒரு கேள்வி எழுப்பினால், பெரும்பாலான ஆண்கள் சபத்தின் பக்கம்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அத்தகைய கட்டுப்பாடற்ற, யாருக்கும் அடங்காத வாழ்வை வாழ்வது என்பது மிகவும் சிலருக்கு மட்டுமே சாத்தியம். சமூக விதிகளுக்கு அடங்கி, அது நமக்கு ஏற்புடையது இல்லை என்றாலும், வெளிப்பார்வைக்கேனும் அனைவருடனும் ஒத்துப் போகும் வாழ்வையே பெரும்பாலானோர் விரும்புவர். அதே நேரம், அனைவருக்கும் நன்மை செய்ய எண்ணி, பொறுப்பானவராக இருந்து, இறுதியில் , தான் மிகவும் நேசித்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டு, ” And what is wrong with their life? What on earth is less reprehensible than the life of the Levovs?” என்ற நாவலின் இறுதியில் வரும் ஸ்வீடின் வாழ்வு குறித்த கேள்வியோடு நாவல் முடியும்போது, தன் வாழ்வின் துன்பங்களுக்கு இணையாக இன்பங்களையும் நுகர்ந்த/ நுகரும் சபத்தின் வாழ்வோடு ஒப்பிடுகையில், அனைவரிடமும் சரியான முறையில் நடக்க வேண்டும் என்ற ஸ்வீட் வாழ்வில் மோசமான துன்பங்களைச் சந்திக்க அவர் செய்த குற்றம் என்ன (அனைவரிடமும் அவர் கொண்ட அதீத அக்கறையா?) என்று யாரும் எளிதில் பதில் சொல்ல முடியாது.

இன்னொரு புறம், தற்கொலை குறித்து சிந்தித்து “And he couldn’t do it. He could not fucking die. How could he leave? How could he go? Everything he hated was here.” என்று ‘Sabbath’s Theatre’ முடியும்போது சபத்தின் நிலையும் ஒன்றும் சிலாக்கியமானதாக இல்லைதான் என்று தோன்றுகிறது.

தங்கள் வாழ்வின் வறட்சியின் கொதிநிலையை இருவரும் அடைவதோடு நாவல்கள் முடிவது எதை உணர்த்துகிறது? ஒருவர் கொஞ்சம் கூட புலனடக்கம் இல்லாமல், தன் இச்சைகளைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலை இல்லாமல் வாழ்ந்தாலும் சரி, அல்லது எப்போதும் சமூகத்தை அனுசரித்துப் போகும், நியாமான வாழ்வை முயற்சித்தாலும் சரி, இறுதியில் வாழ்கை எப்படியும் அவர் மீது காரி உமிழத்தான் போகிறது என்று ராத் சொல்வதாக கொள்ளலாமா? இங்கு இன்னொரு கோணத்தைப் பார்ப்போம். ஸ்வீட் நாவலின் இறுதியில் தெரிந்து கொள்ளும் உண்மையில் இருந்து மீண்டு வருவாரா என்பது நமக்குத் தெரியாது, மீள வேண்டும் என்று வாசகன் விரும்பினாலும், அது குறித்த நம்பிக்கை அவனுக்கு அதிகம் இல்லை. ஆனால் சபத்துடைய இந்த பித்து நிலை, கண நேரத்திற்கானது, இதிலிருந்து அவர் மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்று வாசகன் உறுதியாக நம்ப முடியும். எனில் எப்போதும் அனுசரித்துப் போவதை விட, எப்போதும் வெளியாளாக (outsider), தன்னியல்போடு இருப்பதே மேல் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பின்குறிப்பு:

தன் படைப்புக்களில் தனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்கள் என சபத் மற்றும் ஸ்வீடை ராத் குறிப்பிடுகிறார். இருவருக்குள்ள வித்தியாசம் மட்டுமின்றி, அவர்களின் தனித்தன்மையும் கூட இவர்களை ராத்தின் புனைவுலகின் மிக முக்கிய பாத்திரங்களாக்குகிறது.

லூயிஸ் ஏட்ரிக்கின் The Round House

அஜய் ஆர்

(லூயிஸ் ஏட்ரிக்கின் இலக்கியச் செயல்பாடுகளை அங்கீகரித்து அவருக்கு  இவ்வாண்டு Library of Congress Prize for American Fiction வழங்கப்பட்டுள்ளது- Library of Congress Prize for American Fiction Awarded to Louise Erdrich )

ஒரு சிறு நகரம்/ டவுன், அதில் இரு இனக்குழுக்களுக்கிடையே நிலவும் அதிகார சமத்துவமின்மை, பிறரால் ஒதுக்கப்படும்/ கேலியாகப் பார்க்கப்படும் ஒருவர், ஒரு கொடூர குற்றம், அதிகார சமமின்மையினால் அந்த குற்றத்திற்கான நீதி கிடைப்பதில் உள்ள (சட்ட ரீதியான/ அல்லாத) தடைகள், அவற்றை மீறி நீதிக்குப் போராடும் ஒருவர், இவை அனைத்தையும் விரிந்த விழிகளால் பார்த்தபடி புரிந்து கொள்ள முயலும் பதின்பருவ வாயிலில் இருக்கும் கதைசொல்லி என ஒரு நாவலைப் பற்றி விவரிக்கும்போது ‘To Kill a Mockingbird’ முதலில் நினைவுக்கு வருவது இயல்பே. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போவது லூயிஸ் ஏட்ரிக்கின் (Louise Edrich) ‘The Round House’ நாவலைப் பற்றி.

‘To Kill a Mockingbird’ நாவலின் நினைவு வந்தாலும், ‘The Round House’ஐ அதன் தழுவலாகவோ, அதன் தாக்கம் மிகவும் அதிகம் உள்ளதாகவோ சொல்ல முடியாது. இரு நாவல்கள் இணையும் புள்ளிகளுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவேகூட விலகும் புள்ளிகள் உள்ளன. இணையும் புள்ளிகளும்கூட இரு நாவல்களிலும் உள்ள, எல்லா காலத்திற்கும்/ நாட்டிற்கும் பொருந்தக்கூடிய மைய அம்சத்தினால் தன்னிச்சையாக ஏற்பட்டிருக்கக்கூடும். எப்படி இருப்பினும், வாசகருக்கு இத்தகைய ஊடுபாவுகள், சுவாரஸ்யமானவையாக தோன்றுகின்றன.

நாவலின் சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத/ (இறுதிப் பகுதி வரைக்குமாவது) பாதிக்கப்படாத கதைசொல்லியின் பார்வைக்கு மாறாக, அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர் கதைசொல்லியாக இருப்பது ‘To Kill a Mockingbird’ நாவலில் இல்லாத முகத்திலறையும் குரூரத்தை வாசகனுக்கு முதலிலேயே கடத்துகிறது.

அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள (அவர்களை ஒதுக்கி வைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள) நிலத்தில் (reservation) வசிக்கும் தன் தாய் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை கதைசொல்லி நினைவு கூர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.

அந்த துர்ச்சம்பவத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படும் கதைசொல்லியின் தாய் பேசவே மறுக்கிறார். இதனால் குற்றமிழைத்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல். அடுத்த சிக்கல் குற்றம் நடந்த இடம் பூர்வகுடிகளின் ஆளுமைக்குட்பட்டது அல்ல என்பதால், அவர்களின் சட்டம் அங்கு செல்லாது என்பதால், வெள்ளையர்களின் விசாரணை (அதாவது விசாரணையில் அவர்கள் காட்டும் சுணக்கம்), இந்த சம்பவத்திற்கான நீதி கிடைப்பதில் தாமதத்தையும், எப்போதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. பூர்வகுடிகள் வசிக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு நியாயம் வழங்கும் நீதிபதியாக உள்ள கதைசொல்லியின் தந்தையின் கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து கதைசொல்லியே விசாரணை செய்யத் துவங்குகிறார்.

‘இனிட் ப்ளைடனின்’ சிறார் துப்பறியும் நாவல் போல் சென்றிருக்கக்கூடிய ஜோ செய்யும் விசாரணைகளை பரபரக்க வைக்கும் சம்பவங்களாக ஆக்காமல், ஒரு சிறுவன் செய்யக்கூடிய இயல்பான ஒன்றாகவே காட்டுவதன் மூலம் வாசகன் துப்பறிதலின் பரவசத்தில் அந்த துர்ச்சம்பவத்தை மறந்து நாவலின் மையத்திலிருந்து விலகிச்செல்ல முடியாதபடி செய்கிறார். ஜோ என்ன செய்தாலும், எங்கு திரும்பினாலும், திறக்கப்பட முடியாத கதவுகளே உள்ளன, குற்றவாளி யார் என்று தெரிந்தும், அவன் மேலும் திமிருடன் மீண்டும் இவர்களை சீண்டுகிறான் என்பது தெரிந்தும், அவனை ஏன் யாரும் தண்டிக்கவில்லை என்பதை கதைசொல்லியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சட்டம் குறித்த கருப்பு/ வெள்ளை பார்வை கொண்ட சிறுவனாக இருந்தாலும் ஜோ ஏதுறியாதவன் அல்ல. பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அவனுக்கு அந்த பருவத்திற்குரிய குறும்புகள், பாலியல் கிளர்ச்சிகள் அனைத்தும் உள்ளன. (ஒரு கட்டத்தில் தன் சித்தியுடன் சேர்ந்து, முறைதவறிய விதத்தில் கணிசமான தொகையைப் பதுக்கி வைக்கிறான். இதற்கு பணத்தின் மீதுள்ள ஆசையைவிட, சித்தி மீதுள்ள கிளர்ச்சியே அவர் சொல்வதைப் போல் செய்யத் தூண்டுகிறது) அவை தவறு என்று அவனுக்கு தோன்றினாலும், அவற்றை மீண்டும் மீண்டும் ருசிக்கவே விரும்புகிறான். (அவ்வப்போது சித்தியின் கடைக்குச் சென்று அவருடன் பேசுவது போல் அவர் உடலை நோட்டம் விடுகிறான்)

சட்டத்தின் வரம்புகளால் கட்டிப்போடப்பட்டுள்ளதை வெறுத்தாலும், அதை வெளிக்காட்டாமல், அந்தத் தளைகளை உடைக்காமல் தன் பதவிக்கேற்ப சட்டத்தின்படியே செல்ல முயலும் நீதிபதியாக – சட்டத்தின் நுட்பங்களை, அது பல நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே எதிராக உள்ளதை அறிந்திருந்தாலும், அதை மீறக் கூடாது என்பதைத் தன் மகனுக்கு புரியவைக்க முயலும் தந்தையாக – எதிலும் விருப்பமில்லாமல், விலகியே இருக்கும் மனைவியின் (catatonic) மனநிலை கண்டு மருகும் தகப்பன் பேஸில் (Bazil) பாத்திரம், ஆட்டிகிஸ் பின்ச் (Atticus Finch) பாத்திரத்தை சற்று நினைவூட்டினாலும், தனக்கான தனித்துவம் கொண்டது.

எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பது, கொஞ்சம் சத்தம் கேட்டாலும் பயப்படுவது என ஒரு சில கட்டங்கள் தவிர்த்து, ஜோவின் தாய் பற்றி வாசகன் யூகிக்கக் கூடியதே அதிகம். இந்தப் பாத்திரத்தை ஏட்ரிக் இன்னும் விரிவாக ஆக்கி இருக்கலாம் என்று விமர்சிக்கலாம் என்றாலும், நாவல் முழுதும் ஜோவின் பார்வையிலே நகர்வதால், அவன் கோணத்திலிருந்து இதை விட அதிகம் கூறி இருக்கவும் முடியாது. உதாரணமாக இந்த நிகழ்வால் தம்பதியரின் உறவில் ஏற்படும் மாற்றம்- பேஸில் தங்களின் படுக்கையறையில் படுக்காமல், வெளியே படுக்கிறார், அதை ஜோ பார்ப்பதாக ஒரு இடம் வருகிறது, அது மேலும் விவரிக்கப்படவில்லை. இந்த காட்சியில், அதன் பின்னால் உள்ள உளவியலை ஜோ அதிகம் அறிந்திருக்க முடியாது.. எனவே ஜோவின் தாய் இந்த நிகழ்வால் பாதிக்கப்படுவதை/ ஆவர் இந்தக் குற்றத்தை எதிர்கொள்வது குறித்த பல விஷயங்களை வாசகனின் யூகத்திற்கு விடுவது, நாவலின் கதைசொல்லல் முறைக்கு ஒத்துப்போவதாகவே உள்ளது.

ஏட்ரிக்கின் மற்ற படைப்புக்களைப் போல, முக்கிய பாத்திரங்கள், அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களோடு, அமெரிக்க பூர்வ குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் (reservation) உள்ள நிகழ்கால வாழ்க்கை முறை, அவர்களின் தொன்மங்கள், என இந்த நாவலிலும் சில விஷயங்கள் உள்ளன. முதியவர்கள் தங்கள் பேச்சினுடே பாலியலை அனாயசமாக கலந்து பேச , அதை இளைஞர்கள் /மத்திய வயதுடையவர்கள் கூச்சத்துடன் எதிர்கொள்வதை காண்கிறோம்.

“I had a fat Indian for a husband at one time…..His pecker was long and big but only the head reached past his gut.
And of course I didn’t like to get underneath him anyway for fear of getting smashed..
His belly grew big as a hill and I couldn’t see over it. I’d call out, Are you still back there? Holler to me!”,

என்று ஒரு மூதாட்டி சொல்லும் போது, தன் வயது கொடுக்கும் பாதுகாப்பால், நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தளைகளை உடைத்தெறியும், எந்த நாட்டிலும் காணக்கூடிய முதியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இவை வெறும் தகவல் துணுக்குக்களாக நாவலில் துருத்திக்கொண்டிருப்பதாக இல்லாமல், ஒரு முழு உலகை உருவாக்குகின்றன. உதாரணமாக “sweat lodge/round house”அவர்களால் அழைக்கப்படும் இடத்தில் நடைபெறும் பழங்குடி சடங்குகளை விவரிக்கும், மாயத்தன்மை உடைய ஒரு பகுதி நாவலில் உள்ளது.

இன்னொரு புறம், “Youth Encounter Christ” என்ற கிறிஸ்துவ முகாம் பற்றிய வர்ணனையும், தேவாலயத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதை பாதிரியாரிடம் ஒப்புதல் வாக்குமுலம் (confession) கொடுக்கும் சம்பவமும், வாக்குமுலம் கொடுத்தவனை வெறித்தனமானாக துரத்திச் செல்லும் பாதிரியாரின் எதிர்வினையும் நாவலில் உண்டு. இவை இரண்டும் தனித்தனி சம்பவங்களாக, நாவலின் மையத்திற்கு தொடர்பில்லாதவையாக தோன்றக்கூடும். (பாதிரியார் சம்பந்தப்பட்ட நிகழ்வு நகைச்சுவைக்காக திணிக்கப்பட்ட சம்பவமாக வாசகன் எடுத்துக்கொள்ளலாம்). ஆனால், கிறிஸ்துவம் அவர்களிடையே செலுத்தும் தாக்கம், அதன் பரவலாக்கம் ஒரு பக்கமிருக்க, தங்கள் பழங்கால சடங்குகளை அவர்கள் விட்டுக் கொடாதிருத்தல், இரண்டையும் ஒரே நேரத்தில் பேணுவதை இயல்பான ஒன்றாகக் கருதுதல் என அவர்கள் இன்றைய வாழ்க்கை முறையை நுட்பமாக இந்த இரண்டு சம்பவங்களும் சுட்டுகின்றன. இந்த மனநிலையும் நாம் காணக்கூடியதே.

தொன்மங்களைப் பற்றி வரும் சிறு பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளில் ‘அட’ போட வைக்கும், நினைவில் தங்கும் விவரணைகளோ, உரையாடல்களோ இல்லாத, இறுக்கமில்லாத, தெளிவான, வாசகனை அவனையறியாமல் நாவலுக்குள் இழுத்து, அதன் நிகழ்வுகளில் தனக்கும் பங்கு உள்ளதாக, அதன் நன்மை தீமைகள் தன்னையும் பாதிக்கும் என்பதாக உணரச் செய்யும் உரைநடை இந்த நாவலில் உள்ளது. (தான் சொல்ல வரும் செய்திக்கேற்ப தன் நடையை நுட்பமாக ஏட்ரிக மாற்றுவதை அவரின் மற்றப் படைப்புக்களிலும் பார்க்க முடிகிறது. ‘The Plague of Doves’ சிறுகதையில் உள்ள கனவுத்தன்மை ஒரு உதாரணம்)

தன் தாய்க்கு நீதி கிடைக்க தாமதமாவதை பார்க்கும் ஜோ, அது கிடைக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பிக்கிறான். மனதளவில் கொதி நிலையை அடையும் அவன் செய்யும் சில செயல்கள், அதன் விளைவுகளோடு நாவல் முடிகிறது. நீதி முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், வாசகனுக்கு கொஞ்சமேனும் ஆசுவாசமளிக்கக் கூடியதாக ‘To Kill a Mockingbird’ முடிகிறது. இதிலும் ஏட்ரிக், ஹார்பர் லீயுடன் இணைந்தும் விலகியும் இருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் நாவல் நகர்வதால் ஆசுவாசம் என்பது நிஜத்தில் கிடைக்கக் கூடியது அல்ல என அவர் முடிவு செய்திருக்கலாம், எல்லா செயல்களுக்கும் ஒரு விளைவு உள்ளது என்பதை நாவலின் இறுதியில் நடக்கும் சம்பவம் நமக்குச்\ சுட்டுகிறது.

எனினும், முழு அவநம்பிக்கையை அளிக்கும் நாவல் அல்ல இது. பிறந்தவுடன் பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட லிண்டா (Linda) ஒரு காட்சிப் பொருளாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறார் (Boo Radley /பூ ராட்லியைப் போல). ஜோ அவரை ஏமாற்ற முயல்கிறான், அதில் வெற்றி பெற்றதாகவும் நினைக்கிறான். ஆனால் ஜோ செய்த செயலால் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிந்ததும், இறுதியில் அவர் எடுக்கும் முடிவு, உறவுமுறை பாசத்தைத் தாண்டி அறம் சார்ந்து ஒருவர் இருக்க முடியும், தனக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னிக்க முடியும், நீதியும் கருணையும் எப்போதும் முற்றிலும் வழக்கொழிந்து போகாது என்ற நம்பிக்கையை எந்த விதமான அதீத உணர்சிக் கொந்தளிப்பும் இல்லாமல் வாசகனிடம் விதைப்பதோடு அவனை நெகிழவும் செய்கிறது. இந்த விதத்தில் ஹார்பர் லீயுடன் ஏட்ரிக் ஒத்துப்போகிறார்.

“Tenth Of December” சிறுகதை தொகுப்பின் தலைப்புக் கதையில் ஜ்யொர்ஜ் ஸாண்டர்ஸ் “…now saw that there could still be many—many drops of goodness, is how it came to him—many drops of happy—of good fellowship—ahead, and those drops of fellowship were not—had never been—his to withheld.” என்று சொல்வதையும் இங்கு நினைவு கூரும்போது, வேறு வேறு எழுத்தாளர்கள், வேறு வேறு களங்கள்/ பாத்திரங்கள்/ நிகழ்வுகள் இருந்தும் அடிப்படை கருவாக ஒரே விஷயம் இயல்பாகவே உருவாகி வருவதை காண முடிவதோடு, சிறந்த படைப்பு என்பது, மற்ற படைப்புக்களுடன் உள்ள ஒற்றுமை/ வேற்றுமைகளைத் தாண்டி, தனித்தன்மையோடு இருப்பதுடன், வாழ்வின் ஆதார விசைகளில் ஒன்றைப் பற்றிப் பேசுகின்றன என்பதை உணர முடிகிறது.

பின்குறிப்பு

1. இந்த நாவலின் கதைசொல்லி ஜோ, நாவலின் சம்பவங்களால் எதிர்மறையாக பாதிக்கப்படாமல், தன் வாழ்வை அமைத்துக் கொண்டான் என்று அவனின் நிகழ்காலத்திலிருந்து நாம் அறிகிறோம். அதே போல் ஸ்கௌட் பின்ச் (Scout Finch), வாழ்வு எப்படி மாறியது என்பதை அறிந்து கொள்வதற்கான ஐம்பத்து இரண்டு ஆண்டுகால காத்திருப்பு “Go Set a Watchman” நாவல் அடுத்த மாதம் வெளிவருகையில் முடிவுக்கு வரவிருக்கிறது.
2. ஏட்ரிக்கின் நாவல்கள்/ சிறுகதைகளில் பாத்திரங்கள்/ சம்பவங்கள்/ நிலவியல் சார்ந்து ஒரு தொடர்ச்சி உள்ளதை கவனிக்க முடியும், அதே நேரம் அவை தனி படைப்புகளாக வாசிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.

ஒளிப்பட உதவி – The Bookforum

நவீன தேவதை கதைகள் சில

அஜய் ஆர்

robertcoover

அரக்கர்களை/ சூனியக்காரிகளை அழித்த பின்னர், நாயகன் இளவரசியை மணம் முடித்து இருவரும் “happily lived ever after” என்பது தேவதைக் கதைகளில் (பெரும்பாலான கதைகளில்கூட) முடிவாக உள்ளது. ஆனால் திரை விழுந்தபின், முப்பது நாள் மோகம் கடந்த பின் அவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து அப்படியே மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? (more…)

அரவிந்தனின் பயணம் நாவல்

அஜய் ஆர்

payanam

“உனக்கு நெஜமாவே ஒரு விஷயம் வேணும்னா, அதுல நீ சீரியஸா இருந்தா அது உனக்குக் கிடைக்கும்” என்று ஸ்வாமிஜி ராமநாதனிடம் சொல்வது, அவனுக்கு அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது பற்று கொண்டிருந்தால், எந்த இடர்பாடுகளையும் சந்திக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பையே/ புறக்கணிப்பையே சந்திக்கும் ஒருவனின் பயணம் எப்படி இருக்கும் என்பதை ‘பயணம்’ நாவல் விவரிக்கிறது.

வீட்டிலிருந்து வெளியேறி ஸ்வாமிஜியின் ஆசிரமத்தில் ராமநாதன் சேர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. நாவலின் களம் ஆசிரமமாக இருந்தாலும், ஆன்மிகம் என்றால் தவம்/ இறையை அடைய முயலுதல் என்ற தனி நபர் ஈடேற்றத்தை குறிக்கோளாக கொண்டது, என்ற பொதுவான புரிதலில் இருந்து சற்று விலகுகிறது. மக்களுக்கு சேவை செய்தல், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை உருவாக்குதல் இவற்றையே ராமநாதன் தன் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறான். (more…)

Standing in Another Man’s Grave- ரீபஸின் மீள்வருகை

அஜய் ஆர்

ரான்கின் பற்றிய சொல்வனம் கட்டுரையிலிருந்து சில பத்திகள்

1987-இல் முதல் ரீபஸ் நாவல் வெளிவந்தபோது, ரீபஸின் வயது நாற்பது. இதனால் 2007-இல் வெளி வந்த எக்ஸிட் ம்யூஸிக் (Exit Music) நாவலின்போது அவருக்கு அறுபது வயதாகி விட, பணி ஒய்வு பெறுகிறார். இந்தத் தொடரும் (இப்போதைக்கு?) முடிவடைகிறது……

ஷுவான் இன்னும் பணியில் இருப்பதால் அவருக்கு வெளியில் இருந்து ரீபஸ் உதவுவதாக நாவல்கள் வெளிவரும் என்னும் நம்பிக்கை உள்ளது. “ரீபஸ் வெளியேயிருந்து ஷுவானுக்கு உதவுவதன் மூலம் இத்தொடரை நகர்த்தப் பல வழிகள் இருக்கின்றன,” என்று ரான்கின் முன்பு ஒரு நேர்காணலில் கூறியது அதற்கு வலு சேர்க்கின்றது.

ஒரு தொடரை முடித்தபின் அதன் முக்கியப் பாத்திரத்தை உயிர்த்தெழச் செய்வதென்பது, இலக்கியத்தில் அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். ஹோல்ம்ஸ் (வாசகரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில்) துவங்கி வாலண்டர் வரை இதற்கு உதாரணங்கள் உள்ளன. அந்த வழியில் இப்போது ரீபஸ் (more…)