“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்
அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது
பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது
நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது
கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.
ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்