அமித் சௌத்ரி

கொலாட்கரின் ஜெஜூரி- 2, பராக்கு பார்த்தலின் புண்ணியங்கள் – அமித் சௌத்ரி தமிழாக்கம்

முந்தைய பகுதி

ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது என்பது, சுதந்திர தேசம் எனும் அதனினும் பெரிய வளர்கதையில், அற்ப, அவ்வப்போது சர்ச்சைக்குரியதாய் இருந்த, விளிம்புநிலைச் செயல்பாடு என்று எழுதியிருந்தேன். இந்த முனைப்புக்கு தீவிரத்தன்மை அளிக்கவும், ஆங்கிலத்தை நேசிக்கும் வாசகர்கள் மற்றும் இந்திய மொழி எழுத்தாளர்களில் கவிதையைக் காட்டிலும் மிக முக்கிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பரபரப்பாயிருந்தவர்களை  இயங்கச் செய்யவும், நிஸ்ஸிம் எஸகீல் முயற்சித்தார் எனினும் அது நல்ல நாளிலேயே கௌரவமான, ஆபத்தற்ற பேரார்வமாக மட்டுமே இருந்தது; மோசமான நிலையில், வெட்டி வேலையாக, ஏன், ஒரு துரோகச் செயலாகவும் இருந்தது. அலட்சியப்படுத்துவதாகவும், அற நிலைப்பாடு கொண்டதாகவும் தேசவெறி சார்ந்ததாகவும் இருந்த, கவிதைக்கு எதிரான கலவை நிலையை நிஸ்ஸிம் எஸகீல் விமரிசன ஆசாரத்தால் எதிர்கொண்டார், அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார். ஆனால் விளிம்புநிலை முயற்சிகளுக்கும்கூட தமக்கேயுரிய உற்சாகங்களும், ஏமாற்றங்களும் ஆபத்துகளும் உண்டு.

இந்த உற்சாகங்களில் ஒன்று ஜஸ்ஸாவாலா, மெஹ்ரோத்ரா, கொலாட்கர், ஜீவ் படேல் முதலானவர்கள், புத்தகங்களைப் பதிப்பிக்கும் நோக்கத்தில்- அதிலும் குறிப்பாக, முதலில் தங்கள் கவிதைகளைப் பதிப்பிக்கும் நோக்கத்தில்-, கிளியரிங் ஹவுஸ் என்ற பதிப்பகத்தை 1976ஆம் ஆண்டு துவக்கியதுதான். கவிதை எழுதுவது போலவே, உபகலாசாரங்களில் பிற எதுவும் எப்படி முன்னெடுத்துச் செல்லப்படுகிறதோ, அப்படியே பதிப்புத்தொழிலும் அணுகப்பட்டது: நேசத்துடன், ஓரளவு தங்களுக்கான விஷயமாகவும் மீதம் பிற கவிஞர்கள் மற்றும் சக பயணியர்களின் பார்வைக்காகவும் இவர்கள் செயல்பட்டனர். குறிப்பிட்ட சில புத்தகக் கடைகளில் விற்பனை செய்ய நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன, நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்று சந்தாதாரர்களுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டன. அந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நான்கு புத்தகங்கள் இவை- படேலின் How Do you Withstand, Body; ஜஸ்ஸாவாலாவின் Missing Person; மெஹ்ரோத்ராவின் Nine Enclosures; ஜெஜூரி. இந்தப் புத்தகங்களின் முன் அட்டையையும் அச்சுருவையும் கொலாட்கர் வடிவமைத்திருந்தார்,- பெருவாரிச் சந்தையோடு அல்லாமல் உபகலாசாரங்களுக்கு மட்டும் உரியதாய் நாம் கருதும் இன்னொரு விஷயம் இது-, அவர் புத்தகங்களைக் கலைப்பொருட்களாகவே மாற்றியிருந்தார். (more…)

கொலாட்கரின் ஜெஜூரி, ஓர் அறிமுகம் – அமித் சௌத்ரி

(நியூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் கிளாசிக் பதிப்புக்கு அமித் சௌத்ரி எழுதியுள்ள ஓர் அறிமுகம்)

1976ஆம் ஆண்டில் ஜெஜூரி பதிப்பிக்கப்பட்டபோது என் வயது பதினான்கு. அதைப் பற்றி அடுத்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். அப்போது அந்த நூல் காமன்வெல்த் கவிதைப் பரிசு வென்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்திருந்தது, அதனுடன் அருண் கொலாட்கர் பற்றிய ஒரு கட்டுரையையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியாக இருந்தால், அதன்பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கவிஞர், புத்தகம், மற்றும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாத்திரைத் தலமான ஜெஜூரி பற்றிய கட்டுரைகள் அந்தச் செய்தித்தாளில், வந்திருந்தன. அப்போது அதில் பார்த்த ஒரு புகைப்படத்தால்தான் கொலாட்கரின் தொங்கு மீசையும் நீண்ட தலைமுடியும் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்.

இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்பதுபோல் இப்போது கடந்த பத்தாண்டுகளாக பாவனை செய்து கொண்டிருக்கும் அந்தச் செய்தித்தாள், ஒரு கவிஞருக்காக அத்தனை நியூஸ்பிரிண்ட்டை அப்போது செலவு செய்தது என்பது இன்று அசாதாரண விஷயமாகத் தெரிகிறது; ஆனால், பம்பாயின் பண்பாட்டுச் சூழல், ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய கவிதைகளின்பால் அன்றெல்லாம், ஏறத்தாழ எதுவுமே யோசிக்காமல், வரையறைத்துக் கொள்ளாமல், நட்பு பாராட்டுவதாகத்தான் இருந்தது, தான் பொழுதுபோக்கு கேளிக்கைகளாகக் கொண்ட பலவற்றுக்கும் காட்டிய அதே இணக்க உணர்வுதான் இங்கும் அதற்கிருந்தது. (more…)