அறிவியல் நூல்கள் மூன்று எழுதியுள்ள திரு அருண் நரசிம்மன் அவர்களின் அமெரிக்க தேசி என்ற சமூக நாவல் தமிழினி வெளியீடாக இவ்வாண்டு பதிப்பிக்கப்படுகிறது. இவருடைய புனைவுகதைகளில் காணப்படும் தனித்தன்மையுடனான வடிவத்தை நாவலுக்கு எவ்வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார் என்று எதிர்பார்க்க வைக்கும் படைப்பு. தன் நாவல் குறித்தும் இலக்கியம் தொடர்பான பிற விஷயங்கள் குறித்தும் அவர் மின் அஞ்சல் உரையாடலில் பதாகையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு
பதாகை- ‘அமெரிக்க தேசி‘ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே– சுதேசி விதேசி தெரியும், அது என்ன அமெரிக்க தேசி?
அருண்- தலைப்பில் இரண்டு சிலேடைகளை யோசித்திருந்தேன்.
அமெரிக்காவில் இந்தியர்களை பொதுவாக ‘தேசி’க்கள் (desis) என்றழைப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் என் நாவல் கதாநாயகன் பெயர் தேசிகன். சிலேடைச் சுருக்கமாய் தேசி (அவனுக்கு தன் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது).
நாவலில் எந்நாட்டினருக்கும் சளைக்காத ஒரு தமிழ் தன்னம்பிக்கையாளனை படைக்க விழைந்தேன். வீட்டில் ‘அமரிக்கை’ எனும் சொல்லை அமெரிக்கை என்றே உச்சரித்துப் பழக்கம். அதனால் தலைப்பின் முதல் பகுதியையும் சிலேடையாய் ‘அமரிக்க’ தேசி என்று வைத்திருந்தேன். அமைந்து வரவில்லை என்பதால் இறுதியில் அமெரிக்க என்றே மாற்றிவிட்டேன். (more…)