அ முத்துலிங்கம்

அ முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைமுறை சிக்கல்கள் – பாஸ்கர் லக்ஷ்மன்

பாஸ்கர் லக்ஷ்மன்

நான் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த புதிதில், கென் என்ற ஒரு மிக நல்ல மனிதருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடமிருந்து அமெரிக்க வாழ்க்கை முறைகள் குறித்து பல விஷயங்கள் கற்றறிந்தேன். அவருடைய தந்தை வழிவந்தவர்கள் இத்தாலியையும், தாய் வழிவந்தவர்கள்  போலந்தையும் சேர்ந்தவர்கள். அவருடைய பெற்றோர்களுக்கு ஓரளவு இத்தாலி மற்றும் போலந்துடன் தொடர்பு இருந்தது எனவும், தானும் தன் மகளும் முழுமையான அமெரிக்கர்கள் எனவும் சொன்னார். அதிகபட்சம் புலம்பெயர்ந்த மூன்றாம் தலைமுறையினர்கள் அமெரிக்க கலாசாரத்துடன் ஒன்றி வாழப் பழகிக்கொள்கிறார்கள்  இன வேற்றுமை உணர்வுச் சிக்கல்களைப் பற்றி விவாதித்தபோது “இன்று கடுமையானச் சட்டஙகள் உள்ளன. எல்லா இனத்தவரும் வெளித் தோற்றத்தில் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மனதளவில் வித்தியாசப்படுத்துதல், பாரபட்சம் பாராட்டுதல், உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை மறைந்ததாகக் கூற முடியாது. விரைவில் மறையும் வாய்ப்பு குறைவுதான்” என்று கென் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது.

. அ.முத்துலிங்கத்தின் “அமெரிக்கக்காரி” படித்தவுடன் நினைவில் வந்தது கென்னுடன் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த உரையாடல்தான். புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர்கள் கடந்து செல்லும் அனைத்தையும் மதியின் வாழ்க்கையில் காண முடிகிறது. பிரச்சினைகளின் தொடக்கம் ஆங்கில மொழி உச்சரிப்பு மற்றும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பயன்பாடு. புலம்பெயரும் ஊரைப் பொறுத்து எதிரெதிர் துருவத்தில் அமையும் சீதோஷ்ண நிலைக்கு சரிசெய்து கொள்வதும் கடினமானது. சிறு வயதில் அறிந்தும் அறியாமலும் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சில எண்ணங்களை விடவும் முடியாமல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் ஒருவித குழப்பமான சூழலுடன்தான் முதல் சில துவக்க ஆண்டுகள் செல்லும். மேலும் புதிய கலாச்சாரத்தின் சில நல்ல கூறுகளைக் கடைபிடிப்பதிலும் மனச் சிக்கல்கள் தோன்றுவதைக் காண முடியும். இந்தியாவில் எப்படி கிரிக்கெட் குறித்து  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் விவாதிப்போமே அதே போன்று பேஸ்பால், பேஸ்கட்பால், அமெரிக்க ஃபுட்பால் பற்றிய விவாதங்கள் நடக்கும். முழுவதும் பங்கு பெற முடியாவிட்டாலும், விவாதத்தைப் புரிந்து கொள்ளவாவது  நாம் அந்த விளையாட்டுகளைக் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. என் மகன் பள்ளியில் படிக்கும்போது, காலை அவசரத்திலும் இணையத்தில் விளையாட்டு முடிவுகள், அது சம்பந்தமான கட்டுரைகள் படித்து விட்டுத் தான் கிளம்புவான். அவன் வயதொத்த மாணவர்களிடையேயான அழுத்தமே இதற்கு காரணம். இந்த விஷயத்தில் மதியின் அறியாமையை அ. முத்துலிங்கம் அழகாக சித்தரித்திருக்கிறார்.

அமெரிக்கக்காரியின் கதைக்களம் 90-களின் இறுதியில் அமெரிக்காவில் நடந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் இன வேற்றுமைச் சிக்கல்கள் அதிகமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. என்னுடன் பணிபுரியும் சக அமெரிக்கர் பதினைந்து வயதான தன் பெண்ணிற்கு இன்னும் ஒர் ஆண் நண்பர் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டார். ஆனால் இலங்கையில் வளர்ந்த மதி பதினெழு ஆண்டுகள் தரை பார்த்து நடந்திருக்கிறாள். இந்த கலாச்சார வேறுபாட்டின் விளைவே, மதியால் தன் காதலர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலோ அல்லது காதலர்களைத் தேர்வு செய்வதிலோ வெற்றி காணாமல் இருந்ததற்கான காரணம் எனலாம். தன்னைத் தேடி வந்த மூன்று ஆண்களுக்கும் உறவின் ஆரம்பமாக இருந்தது, மதிக்கு உறவின் முடிவானது. இந்த நாட்டில் குழந்தைகளுடன் கூட தொடர்ந்து உரையாடவும், அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தனி மனித சுதந்திரத்துக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே இங்கு மதிப்பளிக்கப்படுவதால், அவர்கள் சுதந்திரமாய் முடிவெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், எதையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மதி பெரியவர்களின் சொல்படியும், கட்டளைகளுக்கு அடிபணிந்தும் வாழ வேண்டும் என வளர்க்கப்பட்டவள். புலம் பெயர்ந்தவுடன் சொந்தமாக முடிவுகளை எடுத்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவதில் சங்கடங்களை எதிர் கொள்கிறாள். முதல் காதலன் தன் அறைக்கு அழைத்தவுடன், அவனுடன் உரையாடி அவனைப் புரிந்து கொள்ளவோ அல்லது தன் தரப்பை விளக்கவோ மதி முயலவில்லை. தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்திய மூன்றாவது காதலனுடனாவது இரண்டு மணி நேர கார் பயணத்தில் தன் மனநிலையை விளக்கியிருக்கலாம். இந்த உரையாடல்கள் மூலம் அமெரிக்க வாழ்வின் யதார்த்தாங்களை ஓரளவுக்காவது புரிந்து கொண்டிருக்கலாம்.

மதி புலம் பெயர இலங்கையின் உள் நாட்டுப் போரும் ஒரு காரணி. தன் தாயைத் தவிர வேறு உறவும் இல்லை. இலங்கையிலிருந்து அமெரிக்கா வந்து அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே நபர். இத்தனைச் சிக்கல்களிருந்தும் விடுபட்டு தெளிவு பெற மூன்று ஆண்டுகள் மதிக்குத் தேவைப்படுகிறது. மதிக்கு வியட்நாமைச்  சேர்ந்த லாங்ஹன் பிடித்ததற்கு காரணம், அவன் தன்னை படுக்கை அறைக்கு அழைக்காததா அல்லது தனிமையும், சிறிது முதிர்ச்சியும் கொடுத்த புரிதலா? வேறு காரணங்களும் இருக்கலாம். திருமணத்திற்கு பின்பான லாங்ஹன்னின் அன்பும், அரவணைப்பும் மதிக்குத் தன் இலட்சியத்தை அடைய உதவுகிறது.  நான்கு ஆண்டுகளாக குழந்தை பிறக்காததற்கு தான் மட்டுமே காரணம் என்பதால், தன்னைப் பிரிந்து செல்லலாம் என லாங்ஹன் சொல்வதை மதி நிராகரிப்பது கதையில் ஓர் அருமையான தருணம். பொதுவாக அமெரிக்கர்களிடையே திருமண பந்த்ததின் பிணைப்பு மிகவும் மெலிதானது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் என் எண்ணமும் இதையொட்டித் தான் இருந்தது. ஆனால் இருபந்தைத்து வருடத்திற்கு மேல் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக தொடரும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

தன்னால் முடியவில்லை என்றாலும் வியட்நாமியுடன் சேர்ந்து வாழும் இலங்கைக்காரியான தனக்கு ஆப்பிரிக்க இனத்தவரின் விந்தீடு மூலம் பிறக்கும் பெண் குழந்தை கலாச்சார சிக்கல்கள் எதிர்கொள்ளாமல் சுதந்திரமாக வாழும் என்பதே மதிக்கு பெரியளவில் நிம்மதியைக் கொடுக்கிறது.

இலக்கியம் பற்றிப் பேசும்போது நாம் பொதுமைப்படுத்திப் பேசுவது இயல்பு. ஆனால், மதி புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை வெளிப்படுத்தினாலும் அவள் அவர்களின் பிரதிநிதியல்ல. இனத்தேசீயவாதம் காரணமாக போர் நிகழ்ந்த இலங்கைச் சூழலில் மதியின் தேர்வுகள் கவனிக்கத்தக்கவை. அவள் வியட்நாமியனைக் காதலித்து மணம் புரிந்து, ஆப்பிரிக்கரின் விந்தணுவை ஏற்று பிள்ளை பெற்றுக் கொள்கிறாள். எத்தனை தமிழர்கள் இப்படிச் செய்வார்கள்? தன் பின்னணியையும் தன் தாயகத்தையும் பார்த்து தன் பெண்ணைப் பார்க்கும்போது மதியின் மனநிலை என்னவாக இருக்கும்?

மதி அமெரிக்கக்காரியோ இல்லையோ, அவளை ஒரு தனித்துவம் கொண்ட மனுஷியாகப் படைத்திருப்பதில் அ. முத்துலிங்கம் வெற்றி பெறுகிறார். அதுவே இதை ஒரு உயர்ந்த படைப்பாகவும் ஆக்குகிறது.

oOo

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – உடன்பிறந்த அடையாளங்கள்- மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘, அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணின் கதை.

புலம்பெயர்தலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். முதல் வகை பணி நிமித்தமாக அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு. இரண்டாம் வகை உயிர் பிழைக்க வழி தேடி எந்த சுகங்களையும் கண்டிராது, உயிர் வாழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு. இந்தக் கதையை என்னால் அந்த இரண்டு கோணங்களிலும் பார்க்க முடிகிறது.

முதல் வகையின் புரிதல் முதலிலும் இரண்டாம் வகையின் புரிதல் இரண்டாவதுமாக.

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

முதல் காதலன் ஒரு நாள் இரவு தன்னுடன் வந்து தங்கும்படி சொல்ல, அவள் மறுக்கிறாள். விலகிச் செல்கிறான். இரண்டாம் காதலனுக்கும் அதே காரணம் தேவைப்படுகிறது அவளைப் பிரிய. மூன்றாமானவனுக்கும் அதே நிலைதான். அதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்

ஆனால் அவளுக்கோ தான் எப்படியாவது ஒரு அமெரிக்கக்காரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆழ் மனதில் பதிந்து கிடக்கிறது. சிறுவயது முதல். தன் தாய் எத்தனை விளக்கம் கூறியும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றம் அடைகிறாள்.

இடையே தான் ஒரு அமெரிக்கக்காரி இல்லை இலங்கைக்காரி என்று விரக்தியோடு சொன்னாலும் (நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான்), இறுதியில் உண்மையான அமெரிக்கக்காரி யார் என்பதை தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மூலம் அறிகிறாள், அது வியட்நாமிய ஆணும், இலங்கைப் பெண்ணும், ஆப்ரிக்க உயிரணுவுமாக இருந்தாலும்கூட. அந்த மகிழ்ச்சியில் தன் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். “எனக்கு ஒரு அமெரிக்க குழந்தை பிறந்திருக்கிறது” என்று ஒற்றை வரியில், அது ஆணா பெண்ணா என்பதைக்கூடச் சொல்லாமல். அவளைப் பொறுத்தமட்டில் அது ஒரு அமெரிக்கக்காரி. அவ்வளவுதான். அதுதான் அவள் விரும்பியதும்.

பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

கதை இறுதியில் ஆசிரியர் சொல்வது போலவே அந்தக் குழந்தை இருக்கும். ஏனென்றால் அது “அமெரிக்கக்காரி“. அதுதானே அவளுக்கும் வேண்டும்.

கலாச்சாரம் என்பது “jet lag” ஐ போல் சில நாட்களில் சரியாவதும், கைகடிகாரத்திலுள்ள முள்ளை மாற்றி வைப்பது போலவும், செல்லும் இடத்திலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடையை மாற்றிக் கொள்வது போலவும் அல்ல. அது நம் உடன் பிறந்தது. சாகும்வரை நம் அடையாளமாய் நம் உடன் வந்து கொண்டேதான் இருக்கும், sweetcandy என்றாலும், liftelevator ஆக்கினாலும். அவள் பிறப்பால் ஒரு இலங்கைக்காரி. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் அவள் அவ்வாறே அறியப் படுவாள். அதை அவளால் அழிக்க முடியாது. அதுதான் சரியும் கூட.

ஊரில் நான் வெள்ளைக்காரத் துரையாக இருக்கலாம். ஆனால் இந்த பெல்ஜிய நாட்டில் நான் ஒரு இந்தியன். தமிழன். அது போலத்தான் அமெரிக்காவில் இருந்தாலும் அவள் இலங்கைக்காரிதான். நான் இங்கு வந்து ஜலதோசத்தின்போது மூக்கை உறிஞ்சுவதற்குப் பதில் சிந்தினாலும், தோழிகளைப் பார்க்கையில் கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்து வரவேற்றாலும், நண்பன் தோளில் கை போட்டு நடப்பதைத் தவிர்த்தாலும், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையைத் தனி அறையில் படுக்க வைத்துவிட்டு மனைவியுடன் மற்றொரு அறையில் படுத்துறங்கினாலும், பள்ளி செல்லும் சிறுமி தன் உடன் பயிலும் சிறுவனிடம் நடு விரலை உயர்த்திக் காண்பிப்பதைக் கண்டும் காணாமல் சென்றாலும் நான் இந்தியன்தான். ஒருபோதும் பெல்ஜியன் ஆக முடியாது. அதுதானே எதார்த்தமும் கூட?

மதி மேற்கத்திய கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மாற்றிக்கொள்ள முடிந்தும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அது அவள் வளர்ந்த விதம், வளர்ந்த சூழல் ஆக இருக்கலாம். ஆனால் தன்னுள் கனலாக எரிந்து கொண்டிருக்கும் “அமெரிக்கக்காரி” ஆசை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறச் செய்கிறது. என்னதான் மாறினாலும் அவளால் “அந்த” மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலாச்சார மாற்றத்தை முதல் முறையாகக் கடந்து செல்லும் பெண் (தலைமுறை) என்பதால்.

அதற்காக அவளுக்குக் கிடைக்கும் பரிசு, முதல் மூன்று காதலர்களை இழக்கிறாள். இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது ஒரு “வியட்நாமிய” ஆண். ஏன்? அவளே சொல்கிறாள். “ஏய் இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணம் முடித்தாய்?” என்று அவன் கேட்பதற்கு அவள் அளிக்கும் பதில் “பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.” ‘துரத்தப்பட்டவள் துரத்தப்பட்டவனை முடிப்பாள்’ என்றும் முடித்திருக்கலாம். அவளின் எண்ணம் சரியாகத்தான் இருக்கிறது. லான் ஹாங்குக்கும் அதே எண்ணம் இருந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

மூன்று வயது சிறுவனை கட்டி வைத்தாலே சிசுவதை என்று கைது செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் எப்போதும் போர், உயிருக்கு உத்திரவாதமில்லை, உடன் பிறந்த சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள், மிஞ்சி இருக்கும் அம்மாவின் உயிரும் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும் “செத்து விடாதே” என்று சொல்லும் அளவுக்குத்தான். இப்பேற்பட்ட சூழலில் அவள் மனமுடைந்து போகாமல் அமைதியான சூழலில் வாழ நினைக்கிறாள். தன் அம்மாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். அமெரிக்கக்காரியாக முயற்சி செய்கிறாள்.

இந்த “அமெரிக்கக்காரி” மோகம் மதிக்குத் தானாக வந்ததாகத் தோன்றவில்லை. அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தோன்றியதாக இருக்க வேண்டும், அம்மாவின் எண்ணமாக. தான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் தன் மகளும் அவள் சந்ததியினரும் எங்காவது நல்ல சூழலில் அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மூலமாக.

இறுதியாக மதி பெண் குழந்தை பிறந்ததும் மிகுந்த சந்தோசத்தில் அம்மாவிடம் இவ்வாறு சொல்கிறாள், இவள் முழு அமெரிக்கக்காரி. உன்னையும் என்னையும் போல் குறுகிய வட்டத்திற்குள் போர் சூழலில் சிக்கித் தவிக்காமல், அமைதியான வாழ்க்கையை, உலக அறிவுடன், எதை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவோடு சுதந்திரமாக வாழ்வாள், என்று. இந்த “அமெரிக்கக்காரி” ஆசை என்பது மதியின் அம்மாவிடம் தோன்ற, மதி பாதி அமெரிக்கக்காரி ஆகிறாள். பின் இறுதியாக தன் மகளை முழு அமெரிக்கக்காரி ஆக்கி மகிழ்ச்சி கொள்கிறாள்.

oOO

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்- ஸ்ரீதர் நாராயணன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் –
statue_of_liberty

பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரப் பணி இழுபட்டு ஒன்றரை மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா நகரத்திற்கான அத்தனை இயல்புகளையும் கொண்ட, பலதரப்பட்ட மக்கள் சங்கமிக்கும் ஊரில், எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு நானொரு அந்நியன் என்பதுதான். அயலகத்தனான எனக்கிருந்த ஒரே அனுகூலம் ஆங்கில மொழி. ஆனால் அங்கே பெரும்பான்மையோரின் மொழி வழக்காக ஸ்பானிஷ்தான் இருந்தது. முகமன் உரைக்கும் முறையிலிருந்து, உணவுப் பழக்கங்கள், மொழிவழக்கு, கலாச்சார மாற்றங்கள் எனப் பலவகையான அலைக்கழிப்புகளைப் பற்றி அலுவலக சகா மெக்ஸிகர் ஒருவரிடம் புலம்பியபோது அவரும் அதைப் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இஸ்பானியர்களைக் கொண்ட நிலப்பகுதியில், மெக்ஸிகர்களின் கலாச்சார வேறுபாடுகள் பற்றி சிறிது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தூரதேசத்தைப் பற்றிய நமது கணிப்புகளும், புரிதல்களும் பெரும்பாலும் தகவல்கள் அடிப்படையில் நிகழ்கின்றன. அத்தூரத்தை நாம் கடந்து செல்லும்போது நமக்குக் கிடைக்கும் காட்சிப் புலன்களும், அனுபவங்களும் முற்றிலும் வேறாக அமைகின்றன. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ஓர் அமெரிக்க நகரில் சந்திக்க நேர்ந்தது. தன்னுடைய சில நாட்கள் வாசம், தனக்கு அமெரிக்க நிலப்பரப்பையும் அரசியலையும் பற்றிய புதிய புரிதல்களை, தான் உருவகித்து வைத்திருந்த கருத்துகளுக்கு மாறானதொரு பிம்பத்தை காட்டுகிறது எனச் சொன்னார். புத்தகங்களும், ஊடகங்களும் வழியே நமக்கு வந்து சேரும் தகவல்களுக்கும், நாம் நேரிடையாக சென்றடையும் அனுபவங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ முத்துலிங்கம், தன்னுடைய வாழ்வில் பெரும்பாலான காலத்தை பயணங்களிலும், புதிய நிலங்களிலும் கழித்திருப்பதால் ஒரு நிலத்தின் வேர்கள் பிறிதொரு நிலத்திற்கு பழக்கப்படுவதன் நுட்பங்களைப் பற்றி தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்கிறார். க்றிஸ் ஆர்னேட் போன்றோர் தம்முடைய புகைப்பட பயணத்தினூடே காட்டும் நிலம் சார்ந்த கலாச்சார மானுடவியல் போன்றதொரு பார்வை அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் நமக்கு கிடைக்கிறது.

முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலை மூன்று காலக்கட்டங்களில் காட்டுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்க பல்கலையில் கல்வி கற்க வரும் மதி, தன்னுடைய கல்லூரிப் பருவத்தின் முதல் மூன்றாண்டுகளை அலைமோதும் அனுபவங்களோடு கடந்து செல்கிறாள். நட்புகள் தேடி வருவதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்கள். நட்புக்காக அவளுக்கு அதிக பரிச்சயமில்லாத கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்கிறாள். பென்சீன் அணு அமைப்பு பற்றி விளக்கிச் சொல்கிறாள். நன்றி நவில்தல் தினத்தன்று நண்பனின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அவன் பெற்றோருடன் பழகுகிறாள். உண்மையில் இச்சம்பவங்கள், இத்தகைய கிரமப்படி நடந்து வந்தால், அவர்களிடையேயான உறவு இறுகி அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் மதி விஷயத்தில் இச்சம்பவங்கள் எல்லாம் வெவ்வேறு ஆண்களுடன் நடக்கிறது

இலங்கையைப் போன்ற போர்ச்சூழலிலிருந்து மீண்ட வியட்நாமைச் சேர்ந்த லான்ஹங் நண்பனாக வாய்த்ததும், மதியின் புலம்பெயர்ந்த வாழ்க்கை இரண்டாம் கட்டத்திற்கு செல்கிறது. கூடு அமைத்து நிலை கொள்ளும் பருவம். வேர்கள் நிலைகொள்ளும் இளம் பருவ விருட்சம் போல், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல் அது. தங்களுடைய இளமையின் பெரும்பகுதியை, நேரத்தை, உழைப்பை செலுத்தி அவர்கள் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.

மூன்றாவது பருவமாக கிளை பரப்பி மேலெழுவதில்தான் லான்ஹங்கின் வீர்ய குறைபாடு தெரிய வருகிறது. கூடு என்பது வெறும் வீடு மட்டுமல்ல. குடும்ப அமைப்பாக விரிந்து பெருகுதலும் கூடு கட்டுவது போலத்தான். தங்கள் எதிர்காலத்திற்கான உத்திரவாதமாக வீடு வாங்குவதை விட, செயற்கை கருத்தரிப்பின் வழியே குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். செயற்கை முறையில் கருத்தரிப்பது முழுவதும் உத்திரவாதமான சிகிச்சை முறை இல்லை. ஆனால் மதியின் விஷயத்தில் அது அவளுக்கு சித்திக்கிறது. இலங்கைக்காரருக்கும், வியட்நாமியருக்கும் ஆப்பிரிக்கர் உதவியுடன் குழந்தை வரம் வாய்க்கிறது.

அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.

இக்கதை நிலவும் காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஓரளவுக்கு இலங்கைப் போர் பற்றிய பிரக்ஞை இருந்தது. அப்போதைய சில அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், இலங்கைப் பின்னணி கொண்ட பாத்திரமாக யாரையாவது காட்டுவார்கள். பெயரளவுக்குத்தான் என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அதை சிறிதளவேனும் செய்து வந்தன.

மதி தன்னுடைய தாயாருக்கு எழுதும் கடிதத்தில் தவறாமல், ‘செத்துப் போய்விடாதே’ என்று எழுதுவது, அம்மாவுடனான நெருக்கத்தைக் காட்டும் செய்தி என்பதை விட, இலங்கைப் போரில் அவள் இழந்த சகோதரர்களைப் பற்றிய வலி எனப் புரிகிறது.

மெக்சிகோக்காரியோ, கனேடியக்காரியோ இல்லாமல் அது ஏன் அமெரிக்கக்காரி? அமெரிக்க பெருநிலத்தில் அமெரிக்கர் எனும் இன அடையாளம் என்பது எப்போதும் கலவையானதாகவே இருந்து வருகிறது. பூர்வகுடிகள்கூட தங்களை அமெரிக்கர் எனும் நீரோட்டத்திலிருந்து தனித்துக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் தமிழ்ப்பெண், வியட்நாமியன், ஆப்பிரிக்கன் என்ற கலவையில் பிறக்கும் பெண் – asian, african, mongoloid என்ற மூன்று ethnic groupகளுக்குப் பிறந்து, caucasians பெரும்பான்மை வாழும் மண்ணில் தானும் ஒருவராய் ஆகிறாள். இது இங்கிலாந்தில், இந்தியாவில், ஸ்வீடனில், எங்கும் சாத்தியம். ஆனால் அவள் அந்த மண்ணின் வரலாற்றுக்கு உரியவளாய் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? வேறெங்கும் இல்லாத அந்த வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுயநலத்துக்காக, பணத்துக்காக, லாபத்துக்காக என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பெரும்பொய் என்றும், பிரச்சாரம் என்றும்கூட வைத்துக் கொள்ளலாம். உலக வரலாற்றில் எத்தனை தேசங்கள் இனம், மொழி, நிறம், பிறப்பு, சமயம் அடிப்படையில் இல்லாத குடியுரிமையை அளித்து பிறரை அழைத்தன? அந்த ஒரு அழைப்பு – சுதந்திர தேவி சிலைக்கு பணம் திரட்ட எம்மா லாசரஸ் எழுதிய கவிதை இது – இப்போது அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது

“வைத்துக் கொள்ளுங்கள், தொல்நிலங்களை, உங்கள் புரட்டுப் பெருமைகளை!” கூவுகிறாள் அவள்

மௌன இதழ்களில், “என்னிடம் கொடுங்கள், உங்கள் சோர்வுற்றவர்களை , உங்கள் ஏழைகளை,

சுதந்திர மூச்சு விடக்காத்திருக்கும் நெருக்கிய கூட்டத்தை,

உங்கள் நிரம்பிய நிலங்களில் கைவிடப்பட்ட அபலைகளை,

வீடில்லாதவர்களை, புயலால் சூறையாடப்பட்டவர்களை என்னிடம் அனுப்புங்கள்,

அப்பொற்கதவிற்கு அருகே என்னுடைய விளக்கை நான் உயர்த்துகிறேன்!”

சிரியா, ஈராக் போன்ற அரபு தேசங்களில் இருப்பவர்களுக்கு தம் நாட்டை அழித்தது அமெரிக்காதான் என்று தெரியாதா, தம்மை வெறுப்பவர்கள்தான் அமெரிக்காவை ஆள்கிறார்கள் என்று தெரியாதா? இருந்தாலும் அங்கே குடியேற நினைக்கிறார்கள்.  கனவின் வலிமை அது.

மதி தன்னுடைய அமெரிக்கக்காரியாகும் முறைமையில் கடைசியாக தன்னுடைய அம்மா, தான் மற்றும் தன்னுடைய மகளின் சரிவிகிதமான கலவையை கண்டறிகிறாள். ஒருவேளை அவளுடைய பெண் இலங்கைக்கு மீண்டும் சென்று தனது வேர்களை அங்கே நடைபயிலவும் செய்யலாம்.

oOo

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

ரா. கிரிதரன்

ஹனீஃப் குரேஷி எழுதிய The Buddha of Suburbia நாவலின் தொடக்கம் இது:

“My name is Karim Amir, and I am an Englishman born and bred, almost. I am often considered to be a funny kind of Englishman, a new breed as it were, having emerged from two old histories”

இரு கலாச்சார அடையாளங்கள் இணையும்போது ஒன்றை மற்றொன்று ஆதிக்கம் செய்யத் தொடங்கும் என்றாலும் முற்றிலும் புதுவிதமான அடையாளம் உருவாவதே அதன் இயல்பாக அமையும். மிகக் கச்சிதமாக அக்கருவைத் தொட்டுத் தொடங்கும் ஹனீஃப் குரேஷியின் நாவல் பிறந்த ஊரைக் கைவிட்டு புது நிலத்தில் வேரூன்ற நினைப்பவர்களைப் பற்றிய நல்லதொரு நாவலாக அமைந்திருந்தது.

அ.முத்துலிங்கம் எழுதிய ‘அமெரிக்கக்காரி‘ எனும் சிறுகதை இதே போன்ற – ஒரு ‘கிட்டத்தட்ட’ தனமையைப் பற்றிய கச்சிதமானத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”

ஆம், முழுக்க முழுக்க இந்த அமெரிக்கக்காரியின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் இலங்கைப் பெண்ணும் ‘கிட்டத்தட்ட’ அமெரிக்கக்காரிதான் என்றாலும் அவள் தன்னை ஒரு புது இனம் என்பதைக் கண்டுகொள்ள நெடுகாலம் ஆகிறது. ஆங்கில புத்தகங்கள் படிக்கத் தொடங்கியதால், அதில் வரும் அமெரிக்க சாகச கதைகளை பள்ளியில் சொல்லிக் கொண்டிருப்பதால், பிறந்த நாடான இலங்கையில் சிறுவயது முதலே அமெரிக்கக்காரி என அழைக்கப்பட்டவள் அமெரிக்கா எனும் நாட்டைப் பற்றிய யதார்த்தத்தை சற்று வயதான பின்னரே தெரிந்துகொள்கிறாள். அவளைப் பொருத்தவரை நினைவு தெரியாத நாள் முதலே அமெரிக்கக்காரி எனும் அடையாளத்தை அவள் பெற்றுவிட்டாள். அது ஒரு அழியா மச்சமாக அவளோடே வளர்ந்தது. தான் ஒரு அமெரிக்கக்காரி என நம்பத் தொடங்கும் பத்து வயதில் அவளது தாய் அமெரிக்காவே போனாலும் அவள் இலங்கைக்காரி தான் எனப்போட்டு உடைத்ததில் மனம் நொந்துப்போகிறாள்.

அமெரிக்கக்காரி ஆவதற்கான அவளது முயற்சிகள் அவள் அமேரிக்கா வந்தபின்னும் தொடரத்தான் செய்கின்றன. வலிய வந்து பழகும் நண்பர்களிடமிருந்து அவள் இலங்கைக்காரி போல தலைகுனிந்து விலகுவதில்லை. பேசுகிறாள். காப்பி குடிக்கிறாள். வெளியே செல்கிறாள். அவர்கள் அவளை அடைய எடுக்கும் பிரயத்தனங்களுக்கு ஓர் எல்லை வரை வளைந்துகொடுக்கிறாள். இரவு வீட்டுக்கு அழைக்கும்போது அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. அமெரிக்கக்காரி என்பதை மானசீகமான எல்லையாக்கி சோதித்துப்பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. பயமிருப்பதாகவும் தெரியவதில்லை. ஹனீஷ் குரேஷி எழுதுவது போல அவள் கிட்டத்தட்ட அமெரிக்கக்காரி மட்டுமல்ல, கிட்டத்தட்ட இலங்கைக்காரியும்தான்.

கல்லூரி நிகழ்ச்சியில் நாட்டியம் ஆடிக்காட்டும்போது கூடவே தந்திக்கருவி வாசித்த வியட்நாமிய மாணவன் நண்பனாகிறான். என்னை ஆச்சர்யப்படுத்து, எனும் கேள்வி மூலம் ஒரு இதமான நண்பனாகும் அவன் மதிக்கும் எல்லைக்கோடுகள் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் கண்ணியமாகக் கைபிடிக்கும் வேளையில் அவள் எல்லை மீறி முத்தமிடுகிறாள். செளஜன்யமான உறவு மலர்கிறது.

மாணவர் விடுதியை விடுத்து தனியறை எடுத்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். அவன் வேலைக்குப் போகத் தொடங்கியபோதும் அவள் முனைவர் பட்டத்துக்குத் தயார் செய்கிறாள். கடுமையான வேலை. வேலைக்கு இடையே ஒரு குழந்தை வேண்டுமென இருவரும் முயல்கின்றனர். மிக இயல்பாக ஆசிய நாட்டு மக்களின் மன இயல்பை கதாசிரியர் தொடர்கிறார். இனம் புரியாத இடத்தை நோக்கி அவர்களது உறவு செல்லவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தொடங்கிய சில காலத்தில் அவர்களிடையே ஏற்படும் இடைவெளி குறைந்து அவர்கள் மேலும் நெருங்க ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழிமுறையைக் கைக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஆசியர்கள் குடும்ப வாழ்வின் அடுத்தகட்டத்தை தங்கள் பிள்ளைகள் மூலம் தொடங்குகின்றனர். தனிமனித வெளி என்பது பல்கிப் பெருகும் குடும்பச்சங்கிலி எனும் அமைப்பின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை உணர்கின்றனர். மேற்கத்திய சமூகம் குடும்ப அமைப்பை தனிமனித வெளியினுள் ஊடுருவலாகவும் இடையூறாகவும் பார்க்கிறது. சேர்ந்து வாழும் இருவருக்கு குறுக்கே வரும் ஒரு இடைவெட்டாக மதிப்பதினால் தனிமனித வெளிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீறியது எதுவும் இல்லை என்றாகிறது. கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

வியட்நாமிய காதலனின் விந்து குறைபாடு பெரு வெடிப்பாக அவர்களது உறவைப் பிரிக்கவில்லை. அவர்களை மேலும் நெருங்கச் செய்கிறது. குழந்தைத் தரமுடியாதத் தன்னைவிட்டு விலகும் அவன் அளிக்கும் உரிமையை அன்பால் மறுக்கிறாள். வீடு கட்டச் சேர்த்திருக்கும் பணத்தைக்கொண்டு மகப்பேறு சிகிச்சை செய்யச் செல்கிறாள். இதைச் சொல்லும்போது அமெரிக்காவில் கிளிண்டன் – மோனிகா விவகாரத்தை அ. முத்துலிங்கம் சொல்கிறார். காலக்குறிப்பு போலத் தெரிந்தாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தை இலங்கைக்காரி-வியட்நாமிய காதலனின் தியாகத்தை ஒப்பிடும் தராசாகவே வாசகருக்குத் தோன்றும்படி எழுதியிருக்கிறார். சம்பந்தமில்லாத தகவல்களை எழுதி கதையை ரொப்புகிறார் எனும் குற்றச்சாட்டு பொய்க்கும் கணம் இது. ஒரு சிறுகதையாசிரியர் சகலவிதமான தகவல்களையும் விட்டுவிட்டு இந்த குறிப்பிட்ட நிகழ்வை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார் என்பதை சேர்த்துப் பார்த்தால் கதை அடிநாதமாகப் பேசும் விஷயத்தை நாம் சென்றடையலாம்.

கருவைச் சுமக்கும் காலம் முழுவதும் அவளது அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறாள். குழந்தை வளருகிறது, நீ செத்துப்போய்விடாதே என்பதுதான் ஒவ்வொரு கடிதத்தின் சாரமும். அதுவும் சாதாரணக் குழந்தையல்ல. அமெரிக்கக் குழந்தை என்பது கடிதத்தின் அடிநாதம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான்.

ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம், சிறுகதை

ராஜவீதி

அ முத்துலிங்கம்

amuthulingam (2)
ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் இல்லை. பயணிகள் தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு நிரையாக வெளியே வந்தனர். ’இவராயிருக்குமோ இவராயிருக்குமோ’ என்று எங்கள் கண்கள் பரபரத்தன. வெள்ளைக்கார முகங்களையும், கறுப்பு முகங்களையும் கழித்துவிட்டு இந்திய முகங்களில் கவனத்தை செலுத்தினோம். அவரை வரவேற்க வாங்கிய பூமாலை வேகமாக வாடிக்கொண்டு வந்தது. அவரைக் காணவில்லை.

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடனை நான் காலம் கழித்துத்தான் கண்டுகொண்டேன். 20 வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அமெரிக்காவில் திரு சுந்தர ராமசாமியை கண்டு பேசியபோது அவர் நாஞ்சில் நாடன் முக்கியமாக படிக்கவேண்டிய ஏழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். அதன் பின்னர் கையில் கிடைத்த நாஞ்சில் நாடனின் புத்தகங்களை எல்லாம் படித்தேன். சிறுகதைகள் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிறையவே எழுதிக்கொண்டிருந்தார். வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே இத்தனை பெரிய ஆளுமை தமிழ் இலக்கியத்தில் இருக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டது.  நான் அத்தனை காலமும் படித்தது எல்லாமே வேறு வகையான எழுத்துக்கள். அவரோ நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் எழுதினார். அது புதுமையாக இருந்தது. நகைச்சுவையும் சமூக அக்கறையும் கொண்ட படைப்புகள். முக்கியமாக என்னைக் கவர்ந்தது மரபிலக்கியத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி.

எப்படியோ தொலைபேசி எண் பெற்று அவருடன் ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். கடிதம் எழுதியதும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு பித்துப் பிடித்ததுபோல அலைந்தது நினைவுக்கு வந்தது. இப்படியும் தமிழில் எழுதமுடியுமா என்ற வியப்பு. இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து தவித்தது. முழு மனித வாழ்க்கையும் ஒரு சிறுகதையில் அடங்கிவிட்டது. சாதாரண கதை போலத்தான் அது ஆரம்பித்தது ஆனால் முடிவுக்கு வந்தபோது மனதின் தவிப்பு அடங்கவில்லை.

’கொங்குதேர் வாழ்க்கை’ என்பது கதையின் தலைப்பு. 2000 வருடங்கள் பழமையான சங்கப் பாடல்களில் இருந்து ஒரு வரி. 473 புலவர்கள் பாடிய 2381 சங்கப்பாடல்கள் உள்ளன. அதிக பாடல்கள் பாடியவர் கபிலர். ஒரேயொரு பாடல் பாடியவர் இறையனார். அதுதான் ’கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடல். தமிழ் இலக்கியத்தில் அதிக மேற்கோள்கள் காட்டப்பட்ட பாடல் இது ஒன்றுதான். தும்பி மலர் மலராகச் சென்று தேனைத் தேர்ந்து சேகரிப்பது போலத்தான் மனிதன் தன் வாழ்க்கையை தேர்ந்து தேர்ந்து அமைக்கிறான். அவன் சேர்த்த மூட்டையையே அவன் இறுதிவரை சுமக்கிறான்..

சிறுகதை நாலு வரிகளில் சொல்லக்கூடியதுதான். லைன் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டு வரிசையாக நிற்கின்றன. கதைசொல்லி ஒரு வீட்டில் வாழ்கிறார். சண்டைகள் சச்சரவுகள் என்று குடித்தனக்கார்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கை. அதே சமயம் அங்கே கொண்டாட்டங்களும் இல்லாமல் இல்லை. ஒருநாள் முன்னிரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது திடீரென்று நாதஸ்வரத்தில் சங்கதி சுத்தமான தெய்வீக இசை எழுகிறது. தியாகய்யரின் ’சக்கனி ராஜா’ கீர்த்தனையின் இரண்டு வரிகள். ஏதோ பெரும் இழப்பை சொல்ல வந்ததுபோல அத்தனை சோகமாக அந்த இசை கிளம்புகிறது. ‘ஓ, மனமே! ராமனின் பக்தி எனும் ராஜவீதியை விட்டு வேறு சந்துகளில் ஏன் நுழைகிறாய்.’

நாதஸ்வரத்தை வாசித்த கிழவர் சமீபத்தில் மனைவியை இழந்தவர். பிரிவு என்ற கொடிய காற்று அவரை அலைக் கழித்திருக்கலாம். முறையிடுவது போல நாதஸ்வரத்தை மேலே உயர்த்திப்பிடித்து மனதை வருடும் இசையை பொழிகிறார். அவருடைய மகள் எங்கிருந்தோ ஓடிவந்து நாதஸ்வரத்தை பிடுங்கிவிடுகிறாள். கிழவர் மன்றாடுகிறார். அவருடைய ஆற்றாமையை வெளிப்படுத்த அவருக்குள் இருந்த ஒரே கலை அதுதான். மகள் அவரை வீட்டினுள்ளே கூட்டிப்போகிறாள். அந்த வாத்தியத்தில் இருந்து புறப்பட்ட கடைசி இசை அதுதான். நாதஸ்வரம் தொலைந்ததோ, கடைக்கு வைத்துவிட்டார்களோ அல்லது விறகானதோ என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.

அமெரிக்காவின் ஹார்ப்பர் லீ, மார்கிரெட் மிச்செல் போன்றவர்கள் ஒரே ஒரு நாவல் எழுதி புகழ் பெற்றவர்கள். இந்தியாவின் அருந்ததி ராயும் அப்படித்தான். நாஞ்சில் நாடன் 25 க்கு மேற்பட்ட கட்டுரை, சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் என்று எழுதியிருந்தாலும் அவருடைய ’கொங்குதேர் வாழ்க்கை’ சிறுகதை ஒன்றே அவருக்கு தமிழ் இலக்கியத்தில் நிரந்திரமான ஓர் இடத்தை தருவதற்கு போதுமானது. பல மொழிகளில் எழுதிய பல சிறுகதைகளைப் படித்து ஒப்புநோக்கியபோது ’கொங்குதேர் வாழ்க்கை’ உலக இலக்கியத்தில்  தனி இடம் பெறக்கூடிய கதையாகவே எனக்கு தோன்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்ற சொற்றொடர் எங்கே, எப்போது  பிரயோகிக்கப்பட்டாலும் அது உடனே நாஞ்சில் நாடனை என் நினைவுக்கு கொண்டுவரும்.

நண்பர் முழங்கையால் இடித்தார். நாஞ்சில் நாடன் இரண்டு பயணப் பெட்டிகள் நிறைந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். பள்ளிக்கூடம் விட்டு வெளியே ஓடிவரும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி. 20 மணி நேர பயணக் களைப்பு அவர் முகத்தில் தெரியவே இல்லை. அவர் வெளியே வந்த பின்னர் அவர் செய்த காரியம்தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  அப்படியே என்னை ஆலிங்கனம் செய்தார். கண்கள் கலங்கியிருந்தன. இவருக்கு நான் என்ன செய்தேன்? இத்தனை அன்புக்கு நான் அருகதையானவன்தானா? இருபது வருடங்கள் பிரிந்திருந்த அண்ணரைச் சந்திப்பதுபோல உணர்ச்சிகளால் நிறைந்து அவர் முகம் இருந்தது. அத்தனை நாட்களும் பேச்சிலும் எழுத்திலும் நடந்த சந்திப்பு அன்று நேரிலே நிகழ்ந்தது.

அவருடைய நூல்களைப் படிக்கும்போது அவர் பற்றிய ஒரு கற்பனை உருவாகி மனதிலே படிந்திருக்கும். அப்படி ஒன்று என்னிடம் இருந்தது. ஆனால் நேரிலே பார்த்த ஆளுமை மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. என் கற்பனை உருவத்தை பலமடங்கு வியாபிக்க வேண்டியிருந்தது. காலம் கழித்து இவரைச் சந்திக்கிறோமே, எத்தனை வருடங்கள் வீணாகிவிட்டன என்ற நினைப்பே எனக்குள் எழுந்தது. கர்வம் செருக்கு என்ற வார்த்தைகள் நாஞ்சில் நாடன் அறியாதவை. ரொறொன்ரோவில் தங்கிய காலத்தில் அவர் இளம் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்தித்தார். ஆர்வமாக பார்க்க வந்த எழுத்தாளர்களுடனும், வாசகர்களுடனும் நிறைய நேரம் உரையாடினார். அவருடைய பெருந்தன்மை வேறு பிரபல எழுத்தாளர்களில் நான் காணாத ஒன்று.

அவர் ரொறொன்ரோவில் தங்கிய நாட்களில் நடந்த முக்கியமான விசயம் தொடராக ஐந்து நாட்கள் அவர் செய்த கம்பராமாயண விரிவுரைகள்தான். இந்த வாய்ப்பு ரொறொன்ரோ வாழ் மக்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடியது அல்ல. நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் அதே சமயம் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர்கள் எத்தனை அரிது என்பது தெரிந்த விசயம். நாஞ்சில் நாடன் கம்பராமாயணம் முழுவதையும் முறையாகப் பாடம் கேட்டவர். கம்பரின் முக்கியமான பாடல்களை எடுத்து அவர் விளக்கிய காட்சி மறக்கக்கூடியது அல்ல.

ராமாயணம் பாடிய கம்பரைப் பற்றி ஒரு கதையுள்ளது. சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். ஒருமுறை சடையப்ப வள்ளல் கம்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது அங்கே ஏற்கனவே கூட்டம் சேர்ந்துவிட்டது. சடையப்பருக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. கம்பருக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. கம்பர் சொன்னார், ’இங்கே இடம் கிடைக்காவிட்டால் என்ன? நான் அவரை வைக்கும் இடத்தில் வைப்பேன்.’ 10,000 பாடல்கள் கொண்ட கம்பருடைய ராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேறியது. நூறு பாடல்களுக்கு ஒரு பாடலில் கம்பர் சடையப்ப வள்ளலை வைத்து பாடியிருப்பார். ’நூற்றுக்கு ஒன்று கொஞ்சம் அதிகமில்லையா?’ என்று ஒருவர் கேட்டபோது கம்பர் சாதுர்யமாகப் பதில் சொன்னார். ’ உண்மைதான். சடையப்பர் நூற்றில் ஒருவர் இல்லை. ஆயிரத்தில் ஒருவர்.’ அப்படியே 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பர் பெயர் வரும்படி கம்பர் பாடல்களை அமைத்தார்.

நாஞ்சில் நாடனுடைய இடம் தமிழ் இலக்கியத்தில் எங்கே நிற்கும்? அவர் நூற்றில் ஒருவரா, ஆயிரத்தில் ஒருவரா? நிச்சயமாக லட்சத்தில் ஒருவர்தான். இன்னும் பல சிறப்பிதழ்களுக்கு அவர் தகுதியானவர். நாஞ்சில் நாடனுக்கும் பதாகைக்கும் என் வாழ்த்துக்கள்.

நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியம் எனும் ராஜவீதியில் பயணிக்கிறார். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும். அவர் முன்னே. மற்றவர்கள் பின்னே