ஆதவன் சிறுகதைகள்

ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள்

வெ. சுரேஷ்

orr-10085_interview_0000

கடந்த ஆறு ஆண்டுகளாக, அநேகமாக நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவையே எழுதி வந்திருந்த நிலையில் (சில பொது கட்டுரைகளும் உண்டு), திடீரென்று ஒருநாள், ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டு, பதிமூன்று வாரங்கள் அவர் எழுதிய ஒரு சிறுகதை குறித்து ஒவ்வொரு வாரமும் எழுத முடியுமா என்று கேட்டார் நண்பர் நட்பாஸ். அப்படி எழுதி பழக்கமில்லை என்பதால் முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, எழுதி விடலாம் என்று முடிவு செய்தபின் எந்த எழுத்தாளருடைய கதைகள் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. உடனடியாக எனக்கு ஆதவனின் சிறுகதைகள்தான் என்று தோன்றிவிட்டது.

வேறு எந்த எழுத்தாளருடைய எழுத்துக்களைவிடவும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தவை ஆதவனின் எழுத்துக்கள்தான். என் சஞ்சலங்கள், சந்தேகங்கள், ஊகங்கள், கேள்விகள், முடிவுகள் அனைத்தையும் ஆதவனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு அளவில் கொண்டிருந்தார்கள். தன்னைப் பற்றி ஆதவன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார்- “ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்று விட்டால் என்றால், யாரைத் திட்டுவது என்பதில் பலருக்கு சந்தேகமேயில்லை. ஆனால், எனக்கு அப்படியில்லை” .இந்த மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதே போல, அறிவுப்பூர்வமான விவாதங்களும் தர்க்கப்பூர்வமான பார்வைகளும் எந்த அளவுக்கு தன்னைக் கவர்கிறதோ அதே அளவுக்கு உணர்வுச் சுழிப்புகளும், எளிதில் வரையறுத்துவிட முடியாத நியாயங்கள் பற்றிய தடுமாற்றங்களும் தனக்கு உண்டு என்கிறார் ஆதவன். அது எனக்கும் அப்படித்தான்.

அடுத்த கவலை எந்தெந்தக் கதைகள் என்பது பற்றி. என்னிடமே ஆதவனின் 5 சிறுகதைத் தொகுப்புகள் இருந்தாலும், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், ஆர்.வெங்கடேஷ் அவர்கள் தொகுத்த ‘ஆதவன் சிறுகதைகள்,’ புத்தகத்திலிருந்தே கதைகளை தெரிவு செய்தேன், ஒரே புரட்டலில் அத்தனையையும் பார்க்கும் ஒரு சௌகரியத்துக்காக. மேலும், அதில் உள்ள ஆர். வெங்கடேஷ் அவர்களின் முன்னுரையும் முக்கியமான ஒன்று.

கதைகளைப் பொறுத்தவரை ஒரு பாதகமான விஷயம், ஆதவனின் கதைகளில் மிகச் சிலவற்றைத் தவிர பிற கதைகள் வலையேற்றப்படவில்லை என்பதுவே. அதனால் நான் தேர்ந்தெடுத்த கதைகளைப் புத்தகங்களன்றி வேறு எங்கும் படிக்க முடியாது என்பது ஒரு இழப்புதான். இருந்தாலும், இவற்றைப் படிப்பவர்கள், புத்தகங்களை வாங்க இது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கட்டுமே என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. ஆனால், கிழக்கு வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 60 கதைகள் இருந்தாலும், “இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பில் உள்ள கதைகள், விடுபட்டுள்ளன என்பதையும் இப்போதுதான் கண்டுபிடித்தேன் இதில் ஒரு முக்கியமான விடுபடல் , “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் ” கதை. ஆதவனின் சிறந்த கதைகளில் ஒன்று அது..

அவரது சிறுகதைகளில் மிகப் பிரபலமானவை என்றால் நானறிந்து, ‘முதலில் இரவு வரும்’, மற்றும் ‘ஓர் பழைய கிழவரும் புதிய உலகமும்’ தான். ஆகவே இந்த இரண்டு கதைகளை சேர்க்கவில்லை. எழுத்தாளர்களை பற்றியது என்பதால் முதல் கதையாக, புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதையை தேர்ந்தெடுத்தேன். அதற்குப்பின் தானாகவே ஓரு வரிசை உருவாகி வந்துவிட்டது.

பொதுவாக ஆதவனின் எழுத்துக்களை நகர்ப்புற எழுத்து என்று வகைப்படுத்தல் தமிழக விமர்சகர்களிடம். உண்டு. இந்த ஒரு சொற்றொடர், அவரது விரிந்த படைப்புலகத்துக்கு நியாயம் செய்வதது அல்ல. அதிகமும் நகரத்து, பெருநகரத்து மனிதர்கள் குறித்தே எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அதில் அவர் எடுத்துக் கொண்ட பிரச்னைகள் பலதரப்பட்டவை. 70களின் மிக முக்கிய பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், அடையாளச் சிக்கல்,தனி யார் நிறுவனங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாத சோஷலிச யுகத்தின் உச்ச காலகட்டத்தின் அரசு வேலைகள் தரும் அலுப்பு, பெண்கள் குறித்த குறுகுறுப்பு, காதலின் ஆர்வம், காதல் திருமணத்தில் முடிவதின் நிறைவின்மை, மணவாழ்க்கையின் விரிசல்கள், பொதுவாகவே வாழ்வின் மீதான அதிருப்தி, நண்பர்களிடையேயான பரஸ்பர போட்டி பொறாமை, இன்னொருவரிடம் அனுசரித்துப் போக முடியாத குணங்கள், தனி மனிதன் தன் மிக நெருங்கிய மனிதர்களிடையேகூட வேடங்கள் புனைய வேண்டிய அவசியம் ஏற்படுத்தும் தருணங்கள், பெண்களின் பிரத்தியேகப் பிரச்சைனைகளை பரிவுடன் அணுகும் கதைகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அம்சத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு கதைகளாவது தேர்ந்தெடுக்கலாம்.

இந்த தொடரில் நான் சேர்க்காத காதல், திருமணம், அதன் நிறைவு அல்லது நிறைவின்மை ஆகியவற்றைப்பற்றி பேசும் ஒரு சிறுகதை வரிசையினைக்கூட தனியே தர முடியும். அவை இப்படி அமையக் கூடும், “ சிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல், நிழல்கள், கால் வலி, காதலொருவனைக் கைப்பிடித்தே, புகைச்சல்கள், நூறாவது இரவு, சினிமா முடிந்தபோது” என்று தொடங்கி தனியே எழுதலாம்., தவிர, ‘புறா, இந்த மரம் சாட்சியாக, நானும் இவர்களும்,அப்பர் பர்த், போன்ற இன்னும் சில கதைகள் குறித்தும்,எழுத ஆவலாகத்தான் இருந்தது.பிறிதொரு சமயம் பார்ப்போம்.

இந்தியா சோஷலிச சாம்ராஜ்யமாக இருந்த காலத்தின் உச்சத்தில் அன்றைய காலகட்டத்து இளைஞர்களின் அபிலாஷைகளை, தடுமாற்றங்களை, உளக் கொந்தளிப்புகளை உள்ளவாறே சித்தரித்த ஆதவன், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தின் மிக துவக்கத்திலேயே மறைந்துவிட்டார். திறந்த அமைப்பின் பொருளாதார தாராளமயமாக்கலும், உலகமயமாக்கமும், அது தந்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளும் சவால்களும், வித்தியாசங்கள் மழுங்கடிக்கப்பட்டு ஒற்றை தரப்படியாக்குதலும் கொண்ட இந்தக் காலகட்டத்து இளைஞர்களை ஆதவன், எந்த வகையில் தன் கலையில் கொண்டு வந்திருப்பார் என்ற ஆர்வமூட்டும் வினாவுக்கு நாம் விடை காணவே முடியாத வகையில், காலம் அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது.

இத்தொடரில் பேசப்பட்ட சிறுகதைகள்:

புதுமைப்பித்தனின் துரோகம் 

அகந்தை 

சிரிப்பு 

அந்தி 

கார்த்திக் 

‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

இன்டர்வியூ

தில்லி அண்ணா

லேடி 

ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

சின்ன ஜெயா 

கருப்பு அம்பா கதை 

அகதிகள் 

oOo

ஒளிப்பட உதவி – Archive.org

ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம்

தொடர்ந்து பதின்மூன்று வாரங்களாக ஆதவனின் சிறுகதைகள் சில குறித்து வெ. சுரேஷ் சிறு குறிப்புகள் எழுதி வந்தார். அந்தத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆதவனின் புகழ் பெற்ற சிறுகதைகள் சில, கூடுதல் கவனத்துக்குரிய சிறுகதைகள் சில என்ற இந்த அறிமுகங்கள், நகர்ப்புற மத்திய வர்க்கத்தினர் வாழ்வு குறித்த கதைகள் என்ற எல்லைக்குள் ஆதவனைக் குறுக்குவதைக் கேள்விக்குட்படுத்துகின்றன- களம் அவ்வாறிருந்தாலும் ஆதவன் பேச எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பலவகைப்பட்டவை.

1. “லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?”- புதுமைப்பித்தனின் துரோகம் 

2. “ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? ” – அகந்தை 

3. “எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம் அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.” – சிரிப்பு 

4. “முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில் படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின் நிழல் இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது.” – அந்தி 

5. “மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.” – கார்த்திக் 

6. “தன்மை ஒருமையில் விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது.” – ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

7. “80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு… வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை” – இன்டர்வியூ

8. “அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார்.” – தில்லி அண்ணா

9. “தலைப்பு சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம்” – லேடி 

10. “கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.” – ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

11. “ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். ” – சின்ன ஜெயா 

12. “பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்க தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. அதே சமயம், மற்றொரு கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது” – கருப்பு அம்பா கதை 

13. “வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? .” – அகதிகள் 

சிறுகதைகளை கவனப்படுத்தும் வரிசையில் அடுத்த தொடர் விரைவில் துவங்குகிறது.

ஆதவனின் ‘அகதிகள்’

வெ. சுரேஷ்

அண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். அவளது கணவர், வேறு ஊரில். மகள்களுக்கு வியப்போடு வருத்தமும், “இவங்க ஏம்ப்பா இங்க இந்த வீட்ல வந்து இருக்காங்க? எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும்? எங்களுக்கு அவங்களப் பாத்தா பாவமா இருக்குப்பா,” என்று புலம்பித் தீர்த்து விட்டார்கள். “உங்க அம்மாலேர்ந்து அநேக பெண்களுக்கும் இதுதாண்டா நம்ம நாட்டுல வாழ்க்கை,” என்று சொல்வதற்குள், “நானும் அப்படித்தான் இருந்தேன். நாளைக்கு உங்களுக்கும் அப்படித்தான்,” என்று மனைவி பளிச்சென்று கூறினார். உண்மைதானே?

ஆனால், மனைவி நம் வீட்டுக்கு வந்து வாழத்  துவங்கும்போது, இதை அவ்வளவாக நினைக்காத மனம், நாளை என் மகள்களுக்கும் அப்படித்தானே என்று எண்ணும்போது துணுக்குறத்தான் செய்கிறது. இதை அசை போட்டபடி இருந்தபோது, ஆதவனின் ‘அகதிகள்’ எனும் சிறுகதைக்குத் தாவியது மனது.

அதுவும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் உருவாக்கும்  மனநிலை பற்றிய கதைதான். இருவேறு பாரம்பரியங்கள், மரபுகள்   பின்னணிகள் கொண்டவர்களிடையேயான உறவுகள் பற்றிய கதை. இரு நண்பர்களுக்கிடையே அகதிகள் குறித்தான உரையாடலில் துவங்குகிறது, பிறகு வன்முறை, மனிதர்கள் திடீரென்று தம் சக மனிதர்களை பகைமையும் குரோதமும் கொண்டு பார்ப்பதையும், வெட்டிக் கொன்று விடுவதையும் குறித்துப் பேச்சு தொடர்கிறது. இந்த வேறுபாடுகள், இதனால் கிளர்ந்தெழும் துவேஷ உணர்வுகள் பற்றியும் பேச்சு வரும்போது, கதை சொல்லியின் நண்பர், தமிழரின் தொன்மையான நாகரிகம், மொழி முதலானவற்றின் மீதான, சிங்களரின் தாழ்வுணர்ச்சியும் பொறாமையுமே அவர்களின் துவேஷ உணர்வுக்கும் இலங்கைப்   பிரச்னைக்கும் மூல காரணமென்கிறார்.

விவாதத்தின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி, வேண்டிய அளவுக்கு குரோதமும் பகைமை உணர்வுகளும் நம் வீடுகளிலேயே உள்ளது என்று சொல்லி, அன்பல்ல, வெறுப்புதான் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. பொறாமை, துவேஷம் இதெல்லாம்தான் மனிதர்களுக்கு இயல்பாக வருகிறது, இதற்கு நீர் பெரிய விளக்கங்கள் தரத் தேவையில்லை, என்று சொல்லி  விவாதத்தை முடிக்கிறார். பின் வீடு திரும்பும் கதைசொல்லியின் மனதில் தொடரும் எண்ணவோட்டங்களே மீதி கதையாக விரிகிறது.

வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள, அதிகம் பேசாத மனிதர்களை, அச்சு மரபுக்கு உரியவர்கள் என்றும், வாசிப்பில்  அதிகம் நாட்டமில்லாத, ஆனால் பேசுவதிலும், சிந்தனையைவிட செயல் புரிவதில் அதிக நாட்டம் உள்ளவர்களை பேச்சு மரபைச் சார்ந்தவர்களென்றும், மக்கள் மரபு ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இக்கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஆண்கள் இருவரும் அச்சு மரபுக்காரர்களாக இருக்கிறார்கள், பெண்களில் கதைசொல்லியின் தாயார், நிச்சயமாக பேச்சு மரபுக்காரர்- பஜனை, கதாகாலட்சேபம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்ட அவருக்கு பேசப் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் தன் வீட்டு ஆண்கள், இரு அச்சு மரபுக்காரர்களுக்கிடையில், எப்போதும் அந்நியமாய் உணர்பவர்.

இந்த நிலையில், கதைசொல்லியின் மனைவியாக வருபவர், எந்த மரபென்று எளிதாகப் பிரிக்க முடியாத இயல்புடையவர்- படிக்கப் பிடிக்கும், அதைவிட பேசப் பிடிக்கும். இந்த அச்சு மரபுக்காரர்களின் இறுக்கமும் முசுட்டுத்தனமும் நிறைந்த வீட்டில் மருமகளின் வருகை நிச்சயம் இன்னொரு பேச்சுமரபுக்காரரான அந்தத் தாய்க்கு பலம் சேர்த்திருக்க வேண்டும், அவரை மகிழ்ச்சியடைய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அது அப்படி நிகழ்வதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டு இருப்பவரைக் கண்டு மட்டுமா வெறுப்பு முளை  விடுகிறது? தன் மருமகளின் கலகலப்பும் தன் இயல்பில் அவர்  உறுதியாக இருக்கும் நிலையும் இவரிடத்தில் அன்பை அல்ல, ஒரூ பாதுகாப்பின்மையையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

வாய் திறவாமல் ‘பதவிசாக’ இருக்கும் பக்கத்து வீட்டு மருமகள்களே இப்போது அவரைக் கவர்கிறார்கள். இப்போது அவர் முன்பைவிட அதிகமாக கோவிலுக்குப் போகிறார். தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, தனக்கு என்று ஒரு கௌரவம் தேடிக் கொள்ள, வாழ்நாளெல்லாம் அச்சு மரபைத் துரத்திக் கொண்டிருந்த அந்தத் தாய் அதற்கு பதில் தன்  மருமகளைப் போல்,  தன் இயல்பிலேயே ஸ்திரமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். தன்னிடம் உள்ள திறனில் நம்பிக்கையுடன் இருக்கும் மருமகளின் குணத்தைக்  காணும்போது எரிச்சலடைகிறாள். வேறெதையும் துரத்தாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும் ஒரு கோபம், எரிச்சல் வரத்தானே செய்கிறது? பல சமயங்களில் சாத்வீகமும் பொறுமையும்கூட பகைமை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள வேறுபாடுகள் அத்தனைக்கும் மனமே காரணமாகிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் தனி எனப் பிரிந்திருக்கும், தனக்குரிய வீட்டுக்கு வெளியே ஆதரவு தேடும், இந்த உலகமே ஒரு பெரும் அகதி முகாம் என்றும் சில சமயம் தோன்றாமலில்லை.

ஆதவன், பேச்சு மரபு, அச்சு மரபு என்று பேசுவது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்வதற்கு அல்ல. தளம் இலக்கியச் சிற்றிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கி. ராஜநாராயணன், எல்லா மொழிகளையும் ஒலிப்பான்கள் (phonetic script) கொண்டு எழுதும்போது அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது, என்கிறார். ஒலிகளுக்கு இடையே பிரிவினையில்லை என்பதால் ஒலிப்பான்களை பொது எழுத்துருக்களாக பரிந்துரைக்கவும் செய்கிறார். மொழியைச் செவிப்பதற்கும் கண் கொண்டு காண்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கி.ரா. மிக நுட்பமாக உணர்ந்திருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். பேச்சு மரபு, நேரடியானது, ஊடகமற்றது- unmediated என்று சொல்லப்படுகிறது. அச்சு மரபில் ஒலியின் தூல வடிவம் ஒரு ஊடகமாய் குறுக்கிடுகிறது. பேச்சு மரபைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத வகையில் அச்சு மரபில் உள்ளவர்களுக்கு மொழி ஒரு கருவியாகிறது. மனம் மொழியடுக்குகளின் வழி தன்னைத் தொகுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் அச்சு மரபினரின் மனம் மொழியால் அமையும் கருத்துகளின் கருவி நிலையில் இயங்கவும் செய்கிறது. ‘அகதி’ கதையின் துயரம், பேச்சு மரபுக்கு உரியவளாக இருந்தாலும் கதைசொல்லியின் தாய், தன் மருமகள் அச்சு மரபுக்கு உரியவராய் இருப்பதாலேயே அவரிடமிருந்து விலகிப் போகிறார்.

சிறு வயதில் தான் கண்ட பாகிஸ்தானிய அகதிகளைப் பற்றிய நினைவுகளில் துவங்கும் சிறுகதை, பின்னர் ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த எண்ணங்கள் என்று சென்று இன்னும் நெருக்கமாக கதைசொல்லி தன் வீட்டில் உள்ள நிலையை அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுவதில் முடிகிறது. தனி மனித சக்திகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு துயரத்தின் முன் நாம் என்னதான் செய்ய முடியும்? புறச் சூழல் பற்றி கோபப்படலாம், கவலைப்படலாம், தீர்வுகளைத் தேடலாம். ஆனால் நாம் செய்யக்கூடியது என்னவோ, முதலில் நம்முடன் இருப்பவர்களின் துயரை உணர்வதுதான்.

I saw the first refugees…. But even then I did not suspect when I looked at these fugitives that I ought to perceive in their pale faces, as in a mirror, my own life and that we all,  we all would become victims of the lust for power of this one man“, என்று எழுதுகிறார் Stephen Zweig, நாஜிக்காலத்தின் துவக்க அகதிகளைத் தான் எதிர்கொண்டது குறித்து, பல ஆண்டுகள் கழித்து. ஆதவன் பேரழிவு என்று சொல்லத்தக்க துயரங்கள் இல்லாத சாதாரண மத்திய வர்க்க வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவராலும், தில்லி அகதிகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும்போது, அவர்களின் வெளிறிய முகங்களில் ஒரு கண்ணாடி போல் நம் வாழ்வைப் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தையும் கடந்த இந்தப் புரிந்துணர்வுதான் ஆதவனைத் தனித்து காட்டுகிறது.

ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

90களின் மத்தியில் பாலகுமாரன்  ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய   படைப்புகளை வைத்து  அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.

வாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.

பகலெல்லாம் தன்  பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன்  மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.

கதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விரிகிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ்  சாக்லேட்  கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு,  நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.

சங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா? பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா? சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை  முழுமை அடைகிறது.

அவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.

Alvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு  வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு   கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.

ஆதவனின் ‘சின்ன ஜெயா’- வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

‘பிள்ளையாய் இருந்துவிட்டால், இல்லை ஒரு துன்பமடா,’ என்பது கண்ணதாசனின் மிக பிரபலமான ஒரு பாடல் வரி. இப்படி ஒரு கணமேனும் நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிக்கல்கள் மிகுந்த நடப்பு வாழ்வில், நிஷ்களங்கமான, சிந்தனையின் பளுவற்ற, நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றமற்ற குழந்தைப் பருவத்துக்கே திரும்பிச் செல்ல விரும்பாதவர்கள் யார்? நாம் அனைவருமே சமயங்களில் ஒன்றுமறியாத குழந்தைகள் போல நடிப்பதும், நம்மை நாமே ஒன்றுமறியாத குழந்தைகளாக நினைத்துக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. சில மனிதர்களிடத்தில் இது இன்னமும் ஆழமாக செயல்படும் விதம் காரணமாக காலப்போக்கில் ஆழ்மன பழக்கமாகவே மாறுவதையும் உளவியல் நிபுணர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது மாதிரியான ஒரு இடத்தையும் சூழலையுமே ஆதவன் தன் ‘சின்ன ஜெயா’ என்ற சிறுகதையின் மூலம் கவனப்படுத்துகிறார்.

திருமண வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும், திருமணம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும், ஜெயா என்ற முதிர்கன்னியின் சிந்தனையோட்டங்களைச் சொல்வதே ஆதவனின், ‘சின்ன ஜெயா’. கிட்டத்தட்ட சம்பவங்களே இல்லாத ஒரு வித்தியாசமான சிறுகதை இது. அதிகாலையில், வயதான தன் தந்தை, கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்கச் செல்லும் சத்தம் கேட்டு விழித்துக் கொள்ளும் ஜெயாவின் அச்சங்கள், குழப்பங்கள், விரக்தி ஆகியவை வெளிப்படுவதே இந்தச் சிறுகதை. முதிர்கன்னி என்ற ஒரு தன்மையை முழுக்க முழுக்க உளவியல் ரீதியாகவே அணுகியிருக்கிறார் ஆதவன்.

விழித்துக் கொள்ளும் ஜெயாவின் மனதில் தன் நிலையைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடுகின்றன. தன் பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க அவ்வளவாக, முனைந்து முயற்சிக்காமல் இருப்பதை நினைத்துக் கொள்கிறாள். உடனிருந்த வரையில், இவர்களை படாத பாடு படுத்திவிட்டு, இவளுக்கு முன்னாலேயே காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்ட தன் தம்பியை நினைத்துக் கொள்கிறாள். ஆனால், தன்னைச் சுற்றியுள்ளவர்கள், அனுதாபம் கொள்வது அவளது பெற்றோர் குறித்தே தவிர, தனக்காக இல்லை என்பதையும் நினைத்துக் கொள்கிறாள். ‘அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், வயசாகிவிட்டது. ஓடியாடி மாப்பிள்ளை பார்க்க முடியாது… ஒரே பிள்ளையும், இப்படிப் பண்ணிட்டான்’.

தன் நிலையில் எது செய்தாலும், அது விமர்சனத்துக்கே உள் ளாவதையும் நினைத்த்துக் கொள்கிறாள்.’சற்று யோசனையாக அமர்ந்து இருந்தால் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை,’ அதனால் இப்படி,. அதற்கு பயந்து ஒரு செயற்கையான சுறுசுறுப்பைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று சிடுசிடுத்தாலோ, கல்யாணம் ஆகாத ஏக்கத்தை மீண்டும் இப்படிக் காட்டுகிறாள் என்ற குத்தல். ஆனால் வயதான ஒரு காரணத்தாலேயே அவளின் பெற்றோர்கள், இயல்பாக சுதந்திரமாக இருக்கலாம். அவர்களின் வயது காரணமாக அது மன்னிக்கப்படும். தவிர அவர்களின் அறுவையையும் இவள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

அவள் தன்னிச்சையாக இருக்க முடிவது அலுவலகத்தில்தான். ஆனால் இன்று அங்கும் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இவளது தோழிகள்- இவளை புரிந்துகொண்ட இவளது தியாகத்தை மதிக்கும் தோழிகள்- இருவரும், இன்னும் ஏழு நாட்கள் லீவு. அதுவரை, தங்கள் பிரிவில் இருக்கும் கங்காதரனை , நாற்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாத கங்காதரனை சமாளிக்க வேண்டும். ஆண் பார்வை, கங்காதரனின் பார்வை, அவள் மனதில் கிலி ஏற்படுத்துகிறது. ஆண்களைப் பார்த்தாலே அவளுக்கு பயமாயிருக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் தன் ருசியுடன், தன் சிந்தனைகளுடன் வாழ்ந்து பழகிவிட்ட அவள், ஒரு ஆணுக்காக அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பே கசக்கிறது.

இந்த நினைவுகளால், உறக்கம் வராத ஜெயா ஒரு புத்தகத்தை எடுக்கிறாள், படிப்பதற்காக. அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுகிறது. அவளும் அவள் தம்பி ரமணனும் சிறு வயதில் எடுத்துக் கொண்ட படம். தம்பியை நினைத்துக் கொள்கிறாள். தன் பெற்றோரைப் போல் இல்லாத தன் தம்பியே பரவாயில்லை என்று தோன்றுகிறது அவளுக்கு. அவளைவிடச் சிறுவன் என்றாலும், தன் சுயேட்சைத் தன்மையாலும், சாகசத்தாலும், துறுதுறுப்பாலும், இவளை மிஞ்சியதன் மூலம் இவளைச் சின்னவளாக உணரச் செய்தவன். இதை நினைக்கும்போதே சட்டென்று, தன் தோழிகளில்லாத இந்த வாரத்தை பயமின்றி, குழப்பங்களின்றி கழிக்கவும் உபாயத்தை இந்தப் போட்டோ கொடுப்பதைக் காண்கிறாள். ஆம், இந்தப் போட்டோவில் இருப்பதைப் போல அவள் சிறுமியாக இருக்கப்போகிறாள். தன் தோழிகள் தனக்குத் தந்த பாதுகாப்பு உணர்வை இந்த போட்டோ தரும் என்ற உணர்வுடன், ஞாபகமாக, அலுவலகம் கிளம்பும்போது அதையும், எடுத்து தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள் ஜெயா.

ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். தன் தோழிகள் திரும்பி வரும்வரை இந்தப் புகைப்படம், தன்னை தன் அச்சங்களிலிருந்தும் அலைபாய்தல்களிலிருந்தும் காப்பாற்றும் என்று தன்னைத்தானே நம்ப வைத்துக் கொண்டு அச்சங்களை உதறி, அலுவலகத்துக்குக் கிளம்புகிறாள் “சின்ன ஜெயா”.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்பண்புகள், படித்த, பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களுக்கும் சில குறிப்பிட்ட சூழல்களில் அரணாகின்றன என்பது நவீன காலத்துக்குரிய நகைமுரண். இவற்றுக்கான தேவையை இன்னமும் பெண் உணர்கிறாள் என்பது அவளது வேதனையாக இருக்கலாம், ஆனால் அந்த வேதனை அவள் வாழும் சமூகத்தின் சிறுமையைச் சோதித்துப் பார்ப்பதாக இருக்கிறது. அவளுக்கு கல்வித்துறையிலும் பணியிட வாய்ப்புகளிலும் அளிக்கப்படும் சம உரிமைகள் அவள் மூலமாக,பொருளாதார பயன்களைப் பெருக்கிக் கொள்ளத்தானா என்றுகூடத் தோன்றுகிறது. ஒரு பெண்ணிடம் பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அத்தனை சுதந்திரங்களும் இருப்பதாகத் தோன்றினாலும்கூட அவள் என்ன செய்கிறாள், என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் வாழும் சமூகம் எவ்வளவு கறாராக வரையறை செய்கிறது என்பதை ஆதவன் மிக மென்மையாகவும், புரிந்துணர்வுடனும் ‘சின்ன ஜெயா’வில் பதிவு செய்திருக்கிறார். பொருளாதார சுதந்திரமும் பணி சார்ந்த அதிகாரமும் மட்டும் ஒரு பெண்ணுக்கு முழு விடுதலை அளிப்பதில்லை, யாரையும் சார்ந்திராத அவளது தனியிருப்புக்கான அங்கீகாரமும் தேவைப்படுகிறது என்பதுதான் ‘சின்ன ஜெயா’ க்களின் சோகம்.