ஆதவன்

ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம்

தொடர்ந்து பதின்மூன்று வாரங்களாக ஆதவனின் சிறுகதைகள் சில குறித்து வெ. சுரேஷ் சிறு குறிப்புகள் எழுதி வந்தார். அந்தத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆதவனின் புகழ் பெற்ற சிறுகதைகள் சில, கூடுதல் கவனத்துக்குரிய சிறுகதைகள் சில என்ற இந்த அறிமுகங்கள், நகர்ப்புற மத்திய வர்க்கத்தினர் வாழ்வு குறித்த கதைகள் என்ற எல்லைக்குள் ஆதவனைக் குறுக்குவதைக் கேள்விக்குட்படுத்துகின்றன- களம் அவ்வாறிருந்தாலும் ஆதவன் பேச எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பலவகைப்பட்டவை.

1. “லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?”- புதுமைப்பித்தனின் துரோகம் 

2. “ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? ” – அகந்தை 

3. “எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம் அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.” – சிரிப்பு 

4. “முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில் படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின் நிழல் இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது.” – அந்தி 

5. “மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.” – கார்த்திக் 

6. “தன்மை ஒருமையில் விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது.” – ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

7. “80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு… வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை” – இன்டர்வியூ

8. “அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார்.” – தில்லி அண்ணா

9. “தலைப்பு சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம்” – லேடி 

10. “கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.” – ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

11. “ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். ” – சின்ன ஜெயா 

12. “பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்க தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. அதே சமயம், மற்றொரு கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது” – கருப்பு அம்பா கதை 

13. “வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? .” – அகதிகள் 

சிறுகதைகளை கவனப்படுத்தும் வரிசையில் அடுத்த தொடர் விரைவில் துவங்குகிறது.

ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

90களின் மத்தியில் பாலகுமாரன்  ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய   படைப்புகளை வைத்து  அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.

வாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.

பகலெல்லாம் தன்  பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன்  மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.

கதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விரிகிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ்  சாக்லேட்  கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு,  நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.

சங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா? பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா? சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை  முழுமை அடைகிறது.

அவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.

Alvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு  வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு   கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.

ஆதவனின் ‘சின்ன ஜெயா’- வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

‘பிள்ளையாய் இருந்துவிட்டால், இல்லை ஒரு துன்பமடா,’ என்பது கண்ணதாசனின் மிக பிரபலமான ஒரு பாடல் வரி. இப்படி ஒரு கணமேனும் நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிக்கல்கள் மிகுந்த நடப்பு வாழ்வில், நிஷ்களங்கமான, சிந்தனையின் பளுவற்ற, நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றமற்ற குழந்தைப் பருவத்துக்கே திரும்பிச் செல்ல விரும்பாதவர்கள் யார்? நாம் அனைவருமே சமயங்களில் ஒன்றுமறியாத குழந்தைகள் போல நடிப்பதும், நம்மை நாமே ஒன்றுமறியாத குழந்தைகளாக நினைத்துக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. சில மனிதர்களிடத்தில் இது இன்னமும் ஆழமாக செயல்படும் விதம் காரணமாக காலப்போக்கில் ஆழ்மன பழக்கமாகவே மாறுவதையும் உளவியல் நிபுணர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது மாதிரியான ஒரு இடத்தையும் சூழலையுமே ஆதவன் தன் ‘சின்ன ஜெயா’ என்ற சிறுகதையின் மூலம் கவனப்படுத்துகிறார்.

திருமண வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும், திருமணம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும், ஜெயா என்ற முதிர்கன்னியின் சிந்தனையோட்டங்களைச் சொல்வதே ஆதவனின், ‘சின்ன ஜெயா’. கிட்டத்தட்ட சம்பவங்களே இல்லாத ஒரு வித்தியாசமான சிறுகதை இது. அதிகாலையில், வயதான தன் தந்தை, கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்கச் செல்லும் சத்தம் கேட்டு விழித்துக் கொள்ளும் ஜெயாவின் அச்சங்கள், குழப்பங்கள், விரக்தி ஆகியவை வெளிப்படுவதே இந்தச் சிறுகதை. முதிர்கன்னி என்ற ஒரு தன்மையை முழுக்க முழுக்க உளவியல் ரீதியாகவே அணுகியிருக்கிறார் ஆதவன்.

விழித்துக் கொள்ளும் ஜெயாவின் மனதில் தன் நிலையைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடுகின்றன. தன் பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க அவ்வளவாக, முனைந்து முயற்சிக்காமல் இருப்பதை நினைத்துக் கொள்கிறாள். உடனிருந்த வரையில், இவர்களை படாத பாடு படுத்திவிட்டு, இவளுக்கு முன்னாலேயே காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்ட தன் தம்பியை நினைத்துக் கொள்கிறாள். ஆனால், தன்னைச் சுற்றியுள்ளவர்கள், அனுதாபம் கொள்வது அவளது பெற்றோர் குறித்தே தவிர, தனக்காக இல்லை என்பதையும் நினைத்துக் கொள்கிறாள். ‘அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், வயசாகிவிட்டது. ஓடியாடி மாப்பிள்ளை பார்க்க முடியாது… ஒரே பிள்ளையும், இப்படிப் பண்ணிட்டான்’.

தன் நிலையில் எது செய்தாலும், அது விமர்சனத்துக்கே உள் ளாவதையும் நினைத்த்துக் கொள்கிறாள்.’சற்று யோசனையாக அமர்ந்து இருந்தால் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை,’ அதனால் இப்படி,. அதற்கு பயந்து ஒரு செயற்கையான சுறுசுறுப்பைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று சிடுசிடுத்தாலோ, கல்யாணம் ஆகாத ஏக்கத்தை மீண்டும் இப்படிக் காட்டுகிறாள் என்ற குத்தல். ஆனால் வயதான ஒரு காரணத்தாலேயே அவளின் பெற்றோர்கள், இயல்பாக சுதந்திரமாக இருக்கலாம். அவர்களின் வயது காரணமாக அது மன்னிக்கப்படும். தவிர அவர்களின் அறுவையையும் இவள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

அவள் தன்னிச்சையாக இருக்க முடிவது அலுவலகத்தில்தான். ஆனால் இன்று அங்கும் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இவளது தோழிகள்- இவளை புரிந்துகொண்ட இவளது தியாகத்தை மதிக்கும் தோழிகள்- இருவரும், இன்னும் ஏழு நாட்கள் லீவு. அதுவரை, தங்கள் பிரிவில் இருக்கும் கங்காதரனை , நாற்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாத கங்காதரனை சமாளிக்க வேண்டும். ஆண் பார்வை, கங்காதரனின் பார்வை, அவள் மனதில் கிலி ஏற்படுத்துகிறது. ஆண்களைப் பார்த்தாலே அவளுக்கு பயமாயிருக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் தன் ருசியுடன், தன் சிந்தனைகளுடன் வாழ்ந்து பழகிவிட்ட அவள், ஒரு ஆணுக்காக அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பே கசக்கிறது.

இந்த நினைவுகளால், உறக்கம் வராத ஜெயா ஒரு புத்தகத்தை எடுக்கிறாள், படிப்பதற்காக. அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுகிறது. அவளும் அவள் தம்பி ரமணனும் சிறு வயதில் எடுத்துக் கொண்ட படம். தம்பியை நினைத்துக் கொள்கிறாள். தன் பெற்றோரைப் போல் இல்லாத தன் தம்பியே பரவாயில்லை என்று தோன்றுகிறது அவளுக்கு. அவளைவிடச் சிறுவன் என்றாலும், தன் சுயேட்சைத் தன்மையாலும், சாகசத்தாலும், துறுதுறுப்பாலும், இவளை மிஞ்சியதன் மூலம் இவளைச் சின்னவளாக உணரச் செய்தவன். இதை நினைக்கும்போதே சட்டென்று, தன் தோழிகளில்லாத இந்த வாரத்தை பயமின்றி, குழப்பங்களின்றி கழிக்கவும் உபாயத்தை இந்தப் போட்டோ கொடுப்பதைக் காண்கிறாள். ஆம், இந்தப் போட்டோவில் இருப்பதைப் போல அவள் சிறுமியாக இருக்கப்போகிறாள். தன் தோழிகள் தனக்குத் தந்த பாதுகாப்பு உணர்வை இந்த போட்டோ தரும் என்ற உணர்வுடன், ஞாபகமாக, அலுவலகம் கிளம்பும்போது அதையும், எடுத்து தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள் ஜெயா.

ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். தன் தோழிகள் திரும்பி வரும்வரை இந்தப் புகைப்படம், தன்னை தன் அச்சங்களிலிருந்தும் அலைபாய்தல்களிலிருந்தும் காப்பாற்றும் என்று தன்னைத்தானே நம்ப வைத்துக் கொண்டு அச்சங்களை உதறி, அலுவலகத்துக்குக் கிளம்புகிறாள் “சின்ன ஜெயா”.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்பண்புகள், படித்த, பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களுக்கும் சில குறிப்பிட்ட சூழல்களில் அரணாகின்றன என்பது நவீன காலத்துக்குரிய நகைமுரண். இவற்றுக்கான தேவையை இன்னமும் பெண் உணர்கிறாள் என்பது அவளது வேதனையாக இருக்கலாம், ஆனால் அந்த வேதனை அவள் வாழும் சமூகத்தின் சிறுமையைச் சோதித்துப் பார்ப்பதாக இருக்கிறது. அவளுக்கு கல்வித்துறையிலும் பணியிட வாய்ப்புகளிலும் அளிக்கப்படும் சம உரிமைகள் அவள் மூலமாக,பொருளாதார பயன்களைப் பெருக்கிக் கொள்ளத்தானா என்றுகூடத் தோன்றுகிறது. ஒரு பெண்ணிடம் பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அத்தனை சுதந்திரங்களும் இருப்பதாகத் தோன்றினாலும்கூட அவள் என்ன செய்கிறாள், என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் வாழும் சமூகம் எவ்வளவு கறாராக வரையறை செய்கிறது என்பதை ஆதவன் மிக மென்மையாகவும், புரிந்துணர்வுடனும் ‘சின்ன ஜெயா’வில் பதிவு செய்திருக்கிறார். பொருளாதார சுதந்திரமும் பணி சார்ந்த அதிகாரமும் மட்டும் ஒரு பெண்ணுக்கு முழு விடுதலை அளிப்பதில்லை, யாரையும் சார்ந்திராத அவளது தனியிருப்புக்கான அங்கீகாரமும் தேவைப்படுகிறது என்பதுதான் ‘சின்ன ஜெயா’ க்களின் சோகம்.

இருப்புக்கும் விருப்புக்கும் இடையிலான இடைவெளி- ‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’, ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

இரு மனிதர்களுக்கிடையேயான நட்பின் அடிப்படை என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு கொள்கிறோமா? அல்லது, நீண்ட காலம் நீடிக்கும் பழக்கம் புரிதலைச் சாத்தியமாக்கி, ஆழப்படுத்தி, நட்பையும் ஆழப்படுத்துகிறதா? சில பேருடன் எளிதில் நட்பு கொள்ள முடிகிறது. சிலரிடம் காரணமே இல்லாமல் விலக்கமே உருவாகிறது. யாரை விரும்புகிறோம், யாரை வெறுக்கிறோம் என்பதற்கெல்லாம் காரணங்கள் உண்டா? அல்லது, முதலில் தோன்றும் பிடித்த/பிடிக்காத  உணர்வுக்கு தர்க்க ரீதியான காரணங்களை நாம் முனைந்து  உருவாக்கிக் கொள்கிறோமா? பலரிடமும், ஏன், எல்லாருடனுமே நட்பாய் பழகவே மனம் ஆசைப்படுகிறது. ஆனால் சிலருடன் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. விருப்புக்கும் இருப்புக்குமான இந்த இடைவெளியின் காரணங்களைத் துல்லியமாக விளக்கி விட முடியுமா?

அப்படி துல்லியமாக விடை  அளித்து விடமுடியாத கேள்விகளாகவே எனக்கு எப்போதும் தோன்றுபவை இவை. ஆனாலும் மனித மனமும் மனிதனின் காரண காரிய விளக்கத்தை எப்போதும் நாடும் பகுத்தறிவும், எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான விளக்கத்தை நாடியபடியே உள்ளன. இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிதான், இலக்கியத்தின் ஊற்றுக்கண் எனலாம். கலங்கிய நதியென ஓடும் வாழ்வின் ஆழங்கள் வெளிப்படும் தெள்ளிய, ஆனால் கணப்போதைய தருணங்களை மறு உருவாக்கம் செய்து, ஒரு வகையில் அதன் பொருளை நிரந்தரமாக்கி, இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிகளைப் புரிந்து கொள்ளவே இலக்கியம் உதவுகிறது. தத்துவத்துறையில் Is-Ought Problem என்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி இதுவே பல்வேறு பார்வைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது – அறத்தாறு எதுவென்ற கேள்வி இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இடைவெளியை நோக்கும்போது நம்முன் எழுவதைத் தவிர்க்க முடியாது. இலக்கியம் விடை தருகிறதோ, இல்லையோ, கேள்வியை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த அத்தனை கேள்விகளுக்குமான பதில்களையும், கேள்விகளையுமேகூட தர்க்கப்பூர்வமாக அலசிப் பார்க்கும் சிறுகதையே ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’

தில்லியில், ஒரு ‘சர்க்கார் காரியாலயத்தில்’ வேலை செய்யும்,  பகுதி நேர எழுத்தாளராகவும் இருக்கும் கைலாசம், எல்லோரோடும் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு வாழும் தகுதி கொண்ட திறந்த மனம் படைத்த ஒரு நவீன மனிதனாகவே தன்னை  உணர்பவர். அலுவலகத்தின் இட நெருக்கடி காரணமாக, அவர் அமர்ந்து வேலை செய்யும் அறையை  இன்னொரு  அலுவலருடன்  பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அப்படி அவரது அறைக்குள் வரும் இன்னொரு நாற்காலிக்காரர், அகர்வால்,

எத்தனை முயன்றும் அகர்வாலுடன் கைலாசத்தால் இயல்பான நட்புறவை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.  .அகர்வாலோ அவரை பலவிதங்களிலும் நெருங்கி, நட்பாக பழக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நெருங்க நெருங்க இவரது விலக்கம் அதிகரிக்கிறது.

இதை எண்ணி மனம் நொந்து, தன்னைப் பற்றிய ஒரு ஏமாற்றத்தில் உண்டாகும் குற்றவுணர்ச்சியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வரும் தன்  நண்பர் ராமுவுடன் வெளியே (அகர்வாலுடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்த மகிழ்ச்சியுடன்) சாப்பிடச் செல்கிறார் கைலாசம். இவர்கள் இருவரிடையே நடைபெறும் நட்பு குறித்த  உரையாடலுமே இந்தச் சிறுகதை.

கைலாசமும் அகர்வாலும் ஏன் நட்பு கொள்ள முடிவதில்லை என்பதை கைலாசமும் ராமுவும் பல்வேறு கோணங்களில் விவாதிப்பதை ஆதவன் தனக்கே உரித்தான கூர்மையான, ஆழமான, சமயங்களில், வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பதே இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படிக்கத்  தூண்டும் ஒன்றாக ஆக்குகிறது. ராமுக்கு இவர்கள் இடையில் நட்பு கைகூடாததில்  கைலாசத்துக்கு இருக்கும் வருத்தம், தேவையில்லாத ஒன்றாக, இருப்பதாகப்  படுகிறது,. “பழக முடியலேன்னா, வெட்டி விட்டுற வேண்டியதுதானே,” என்பதே அவரது எளிமையான தீர்வு. ஆனால் கைலாசத்துக்கு அப்படியல்ல. “எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்,  யார் மனதையும் புண்படுத்தக் கூடாது, கருத்து பரிமாற்றம், செயது கொள்ளணும்னு” நம்புகிறவர் அவர்.  ஆனால், அதை ஒரு மூட நம்பிக்கை என்று  நிரூபித்துவிடுகிறார் அகர்வால்.

இது இரு தனிமனிதர்கள் இடையேயான பிரச்னை மட்டுமல்ல, இருவேறு மொழிகள், கலாச்சாரங்களின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதிலும் பிரச்னை இருக்கிறதோ என்பதையும் அலசுகிறார் ஆதவன். தமிழரான கைலாசம், உத்தரபிரதேசவாலாவான அகர்வால் எதிர்பார்க்கும் ஒரு சராசரி “மதராஸி”யாக இருப்பதில்லை. சப்பாத்தி, சமோசா, சாப்பிடுவதிலோ இந்திப் படங்களை பார்ப்பதிலோ எந்தத் தயக்கமும் கைலாசத்துக்கு இல்லை என்பதில் அகர்வாலுக்கு இருக்கும் ஏமாற்றத்தில் மிக நுட்பமாக இந்தியாவின் வடக்கு- தெற்கு அரசியலையும் கொண்டு வந்து விடுகிறார் ஆதவன். கைலாசத்திடம் இல்லாத, வட இந்திய எதிர்ப்புணர்வுக்கு பதிலாக அகர்வால் மேற்கொள்ளும் இட்லி, தோசை, சாம்பார் விருப்பம், தமிழக அறிஞர்கள், அரசியல் ஆகியவற்றின் மீது அவர் இவருக்காக மேற்கொண்டு காட்டிக்கொள்ளும் ஆர்வம், இவையெல்லாம் கைலாசத்துக்கு ஏதோ தேசிய ஒருமைப்பாட்டுக்கான போட்டியில் நடக்கும் நாடகத்தில் பங்கு பெரும் உணர்வை ஏற்படுத்துகிறது.

அடுத்து பெண்கள், செக்ஸ் ஆகிய விஷயங்கள் குறித்து உரையாடல் திரும்புகிறது. இவற்றைப் பற்றி சகஜமாக இருவரும் பேசிக் கொள்ள முடிகிறதா என்று கேட்கிறார் ராமு. அதையும் முயற்சித்தாயிற்று, ஆனால் அதைப் பற்றி பேசினால், அவன் அதற்கு மட்டும்தான் லாயக்கானவன் என்று தான் நினைப்பதாக அவன் நினைப்பதில்தான் முடிகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார் கைலாசம். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றதுண்டா என்றால், அந்தக் கூத்தும் நடந்துவிட்டது, அகர்வால், வீட்டு தோசை சாப்பிட வேண்டும் என்றதால், கைலாசத்தின் வீட்டுக்கு ஒருமுறை வந்திருக்கிறார். ஆனால், அங்கு, அவர் கைலாசத்தில் மனைவியின் சமையலைப் புகழ்வதும், அவரை மகிழ வைப்பதற்காக அபத்தமான ஜோக்குகளை அடிப்பதும் கைலாசத்தின் மனைவிக்கு பிடிக்காமல் போகிறது- அவர்  கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார்,  அகர்வால் வீட்டுக்குத் தானும் வரமாட்டேன், கைலாசமும் போகக் கூடாது என்று. இதற்கு ராமுவின் பதில், பெண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே நல்ல முன்னெச்சரிக்கையுடைவர்கள் என்பது.

ஆங்கிலத்தில்,Two good people not made for each other, என்று சொல்வார்கள். கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.

கதையின் இறுதியில் அலுவலகக் கேர்டேக்கரிடம் தம் அறையில் அகர்வாலின் இருக்கைக்கும் தன் இருக்கைக்கும் நடுவே ஒரு தடுப்பு போட்டுத் தரச்சொல்லி கைலாசம் கேட்க, உ.பி வாலாக்களோடு சேர்ந்திருக்கவே முடியாத நிலை குறித்த கேர்டேக்கரின் பிரசங்கத்தை மறுப்பேதும் சொல்லாமல், மௌனமாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கைலாசம்.

அந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

வீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை? மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.

ஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா? மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.

லௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம்  பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன? இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா? அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா?  அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா?

இந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது  அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.

வாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.

இந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.

அவர்கள் கிளம்பிப்போனதும்,  வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன்,  பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.

அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகளை, திறமையின்மையை  மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.

தம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.